என் இனிய மானிட்டரே..

30-08-2008

என் இனிய மானிட்டரே..

நாம் இருவரும் சந்தித்துக் கொண்ட முதல் நிகழ்வை இப்போது நினைத்தாலும் மனம் பூரிக்கிறது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதில் வீதியெங்கும் சேறும், சகதியுமாக முந்தின நாள் அடித்த மழையில் பொங்கி வழிந்து கொண்டிருக்க.. உனது பொருத்துனன் உன்னைப் பத்திரமாக பார்சல் கட்டித் தூக்கி வந்தான்.. உனக்கு நினைவிருக்கிறதா..?

வாழ்க்கையில் என் சம்பாத்தியத்தில் நான் வாங்கிய இரண்டாவது அன்புப் பரிசு நீதான் என்ற வகையில் உன் மீது எனக்கு அதிகப் பாசம் உண்டு.

நல்லதொரு துணையுடன்தான் வந்தாய். அருமையான மெளஸ் தம்பி.. மிக நளினமான டிஸைனில் இருந்த உனது சிபியூ அண்ணன்.. தொட்டாலே விரல்கள் பதிவதுகூடத் தெரியாதது போல் பஞ்சு போன்ற கீபோர்டு மச்சான் என்று உன் குடும்பமே அன்று முதல் எனக்குச் சொந்தக்காரர்களாக ஆனீர்கள்.

அன்று முதல் நீயும் நானும் ஓருடல், ஈருடலாக உடன் பிறவா சகோதரர்களாக பவனி வந்த கதையை இன்றைக்கும் நினைத்துப் பார்த்தால் என் கண்ணில் நீர், சொட்டு சொட்டாக கொட்டுகிறது..

என் வயிற்றுச் சாப்பாட்டுக்குப் பிரச்சினை வந்தபோது உங்களை வைத்துத்தான் எத்தனை நாட்கள், எத்தனை வருடங்கள் சாப்பிட்டிருக்கிறேன். அனைத்தையும் இப்போது நினைத்தால் என் குடலே இப்போது எனக்குச் சொந்தமில்லாதது போல் தோன்றுகிறது.

அனாயசமாக ஒரு திரைப்படத்தின் முழு வசனப் பகுதியையும் ஒரே நாளில் தட்டச்சு செய்து கொடுத்து 2000 ரூபாய் சம்பாதித்தது கொடுத்தது நீங்கள்தான் என்பதை நான் மறுப்பதற்கில்லை..

உங்களுடன் பழகிய நாட்கள் இன்றைக்கும் எனக்கு பசுமையான நினைவுகளாக இருக்கிறது.

காலை எழுந்தவுடன் பாத்ரூம் செல்லும் முன்பு, உனக்கு ஒரு குட்மார்னிங் சொல்லி உன்னைத் தடவிக் கொடுத்துவிட்டுத்தான் சென்றிருக்கிறேன். ஒரு நாளும் நான் இதனைத் தவறவிட்டதில்லை. உனக்கே தெரியும்.

எனக்கு சோறு இல்லையென்றாலும்கூட ஒரு நாள்கூட உங்களைச் சுத்தம் செய்யாமல் இருந்ததில்லை.. உங்கள் கண்ணில் தூசி என்றால் என் இதயத்திலேயே ஓட்டை விழுந்ததைப் போல் துடித்துப் போயிருக்கிறேன்.

வெறும் எழுத்துக்களையே பார்த்துப் பார்த்து காஞ்சி போயிருந்த உன்னை குதூகலிக்க வைக்க அவ்வப்போது பல ‘சத்துணவு’களையும் சேர்த்தே கொடுத்திருக்கிறேன். யோசித்துப் பார்த்தாயா..? இதையெல்லாம் வெளியில் சொன்னால், எனக்கு என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பது உனக்குத் தெரியுமா? இருந்தாலும் ‘வரவிருக்கும் புகழை’ நான் சமாளித்துக் கொள்கிறேன். எனக்கு வேறு வழியில்லை. என்னை மன்னித்துவிடு நண்பனே..

‘சத்துணவு’ ஒன்றா, இரண்டா? எதைச் சொல்வது..? இதோ பார் அந்த லிஸ்ட்டை..

ஸ்ரீதேவி, ராதா, அம்பிகா, ராதிகா, அமலா, பானுப்பிரியா, குஷ்பூ, கவுதமி, ரூபிணி என்று எனது பால்ய கால தேவதைகளை உனக்காகவே நான் சிடிக்களாகவும், டிவிடிக்களாகவும் வாங்கி, வாங்கிப் போட்டுக் காட்டவில்லை..?

‘அக்னி நட்சத்திரம்’ சிடி தேய்ந்து போகும்வரையிலும் விடாமல் அந்த “நின்னுக்கோரி வரணும்” பாடலின்போது அமலாவை நீ ‘ரசி’, ‘ரசி’ என்று ரசித்தாயே தம்பீ.. மறந்துவிட்டாயா..?

‘சிப்பிக்குள் முத்து’ படத்தின் ‘மனசு மயங்கும்; மெளன கீதம்’ பாட்டில் ராதிகாவை நீ ரசிப்பதற்காக 18 முறை தொடர்ந்து ஓடவிட, கீழ் வீட்டு ஓனரம்மா 20 படியேறி வந்து நம்மைத் திட்டிவிட்டுச் சென்றார்களே.. ஞாபகமில்லை..?

‘சத்ரியன்’ படத்தில் வரும் பானுப்பிரியாவின் அந்தமான் தேசத்து பாட்டிற்காக ஜன்னல், கதவு முழுவதையும் சாத்திவிட்டு லைட்டையும் ஆ·ப் செய்து இருட்டு போகஸில் முழுவதையும் ரசித்தாயே.. தம்பீ.. அந்தக் காலமெல்லாம் எங்கே போனது..?

‘மூன்றாம்பிறை’ படத்தில் சில்க் ஸ்மிதாவும், கமலஹாசனும் ஆடும் நடனம் தமிழ்ச் சினிமாவின் முதல் பின்நவீனத்துவ நடனம் என்று பார்ப்போரிடத்தில் எல்லாம் சொல்லி உன்னிடம் உருகி, உருகி காட்டினேனே.. நீயும் வைத்த கண் எடுக்காமல் பார்த்துத் தொலைத்தாயே?

ராதாவின் ‘காதல் ஓவிய’த்திற்காக இதுவரையிலும் 4 சிடிக்களும், 2 டிவிடிக்களும் வாங்கியிருக்கிறேன்.. தெரியும்தானே உனக்கு..?

விக்ரமில் கமல், அம்பிகாவின் காதைக் கடிக்கும் காட்சியின் தரிசனம் பெற வேண்டி வீட்டில் இருந்த தம்பிமார்கள்.. அந்தக் காட்சியைத் திருப்பித் திருப்பி மீடியே பிளேயரில் ஓடவிட.. சிடி வெளியில் வரும்போது வெப்பம் தாங்காமல் வெம்பிபோய் வந்ததே.. நினைவிருக்கிறதா..? அதே விக்ரமில் டிம்பிள் கபாடியாவின் அழகுக்காகவே அதனை save செய்து உனக்காக screen-ல் பதிவு செய்திருந்தனே.. மறந்துவிட்டாயா..?

இவர்கள் மட்டுமா..? ரோஜா, ரம்யா கிருஷ்ணன், ஆம்னி, மந்த்ரா, ரம்பா, மீனா, கவுசல்யா, சங்கவி, சங்கீதா, ஹீரா, மதுபாலா, அபிராமி, சினேகா, சிம்ரன், செளந்தர்யா, ஜோதிகா, லைலா, புவனேஸ்வரி, விந்தியா, மும்தாஜ், மாளவிகா என்று எண்ணிலடங்காத ‘சத்துணவு’களை திகட்டத் திகட்ட ஊட்டினேனே..? இவர்களையெல்லாம் வரிசையாக screensaver-ஆக செய்து கொடுத்து, உனக்கு 10 நிமிடத்திற்கொருமுறை குளுகோஸ் ஏற்றினேனே.. இந்தச் ‘சத்துணவெல்லாம்’ எங்கே போனது நண்பனே..?

விஜய்காந்த்தும், ஆம்னியும் ஏதோ ஒரு படத்தில் வீட்டின் சந்துபொந்திலெல்லாம் ‘புகுந்து’ விளையாடிக் கொண்டிருந்ததைக் காட்டி ‘அது எனக்கு வேண்டும்’ என்று இரண்டு நாட்களாய் அடம் பிடித்தாய்.. உனக்காக பர்மா பஜார் போய் அலையோ அலை என்று திரிந்து வாங்கி வந்து போட்டுக் காண்பித்தேன். அதன் பின்புதானே மேலேயும், கீழேயுமாக ஆடிக் கொண்டிருந்த நீ ஒரு வழியாக சரியானாய்.. இந்தளவுக்கு உனக்கு வந்த நோய்க்கெல்லாம் உடனடியாக மருத்துவம் செய்தேனே..

இவர்கள் மட்டுமா? கண்டம் விட்டுக் கண்டம் தாவுவது போல் பக்கத்து மாநிலத்திலும் போய் உனக்காக ‘லேகியங்களை’ சுட்டு வந்தனே.. நினைவில்லை..

ஷீலா, சீமா, சாரதா, மேனகா, ஊர்வசி, பார்வதி, லிஸி, என்று ஆரம்பித்து போகப் போக அதிலேயே மதி மயங்கிப் போய் ஷோபனா, வாணி விஸ்வநாத், மஞ்சுவாரியார், சம்யுக்தவர்மா, திவ்யா உன்னி, ஜோமோள், காவ்யா மாதவன், கீதுமோகன்தாஸ், ஜோதிர்மயி, மம்தா மோகன்தாஸ், மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர், விமலாராமன் என்று லேட்டஸ்ட் வரைக்கும் கொண்டு வந்து காண்பித்தனே.. மறக்கலாமா நண்பனே..?

“தெற்கு மட்டும் காட்டி என்ன புண்ணியம்? வடக்கு என்ன பாவம் செய்தது?” என்று நீ கேட்டது எனக்கும் கேட்டது. அதனால் ஐஸ்வர்யாராய், தபூ, மனீஷா கொய்ராலா, சுஸ்மிதாசென், ராணிமுகர்ஜி, ரவீணா டாண்டன், மல்லிகா ஷெராவத், வித்யாபாலன் என்று அழைத்து வந்து நிறுத்தினேனே.. என்னால் மறக்க முடியவில்லை.. உன்னால் எப்படி முடிந்தது நண்பா..?

நாள் முழுவதும் எனக்காக உழைத்து, உழைத்து ஓடாய்த் தேய்ந்து போய் நீயிருந்த நிலையில் குளிர் காற்றும், அதிக வெப்பமும் உனக்கு ஒத்துக் கொள்ளாது என்பதனால் இரவில் உன்னைப் போர்வையால் போர்த்தி வைத்தேன். விடிந்த பின்பு பார்த்தால் இந்தியா மேப்பையே அதில் வரைந்து வைத்திருந்தார் திருவாளர் எலியார்.

அதே எலியார் ஒரு நாள் உனது அன்புத் தம்பி திருவாளர் மெளஸை கொலை செய்துவிட, அன்று மட்டும் நீ மெளன அஞ்சலி செலுத்தும் விதமாக திறக்கவே மறுத்தாய்.. உனக்காக நான் ஆசை, ஆசையாக வாங்கி வைத்திருந்த புத்தகங்களை, எடைக்கு எடை போட்டு கிடைத்த பணத்தில் அருமையான புதிய தம்பியை வாங்கி வந்து கொடுத்தனே..

எலியாரிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்காக அவருக்கு கடலை மிட்டாய் ஒன்றை வைத்து, அதனை அவர் கடித்து, மென்று, சாப்பிட்டுவிட்டு, கடைசியாக கீழ் வீட்டில் போய் மண்டையைப் போட்டுவிட.. அந்த வீட்டுக்காரம்மா வந்து கத்திய கத்து இருக்கிறதே.. ஞாபகமிருக்கிறதா..? கடைசியில் நான்தானே மூஞ்சு முழுக்க துணி சுற்றிக் கொண்டு அரை நாள் முழுவதும் தேடி அந்த எலியாரைத் தேடிப் பிடித்து தூக்கிச் சென்று அடக்கம் செய்தேன். மறந்துவிட்டாயே நண்பனே..

இவ்வளவும் யாருக்காக? உனக்காகத்தான்.. உங்களுக்காகத்தான்.. “நம்மையே சுத்தி, சுத்தி வரானுக.. எதாவது செய்யணும்னு நினைக்கிறேன். முடியலைன்னு நினைக்கும்போது, செத்துரலாம்போல தெரியுது” என்று சமுத்திரக்கனி போல நான் புலம்பி நிற்கவில்லை..

உன் மச்சான் கீபோர்டு உடல் நிலை சரியில்லை என்று இரண்டு பற்களை துப்பியபோது, உடனுக்குடன் வேறு பற்களை வாங்கி சரி செய்தேன். கொஞ்ச நாள் கழித்து எவ்வளவோ போராடியும் காச நோய் வந்து அவன் உயிரைவிட்டபோது நான் பட்டபாடு கொஞ்சமா? நஞ்சமா? ஆயிரம் ரூபாய் கொடுத்து அந்த புது மச்சானை வாங்குவதற்கு நான் எதை விற்றேன் என்று உனக்கும் தெரியும்தானே..?

புது மச்சான் வந்தவுடன் ஒய்யாரமாக நீ புதிய, புதிய கதைகளையெல்லாம் கேட்டாய்.. எனது முதல் வாசகனாக கதை கேட்டு கருத்துச் சொன்னாய்.. சிரித்தாய்.. கண் கொள்ளாமல் இருந்தது எனக்கு.. யாரோ எங்கிருந்தோ கண் வைக்க.. நீ முதல் முறையாக வைரஸ் காய்ச்சலில் படுத்தாய்..

உன் வியாதிக்கு நான் மருந்தையும், மாத்திரைகளையும் வகை, வகையாக அருந்தினேன்.. ஒன்றா? இரண்டா? உன்னைக் கழட்டிப் போட்டுவிட்டு கையில் பணம் கொடுத்தால்தான் ஆபரேஷன் என்று சொல்லி என்னை மிரட்டி நான் கட்டியிருந்த கோவணத்தையும் உருவிவிட்டானே அந்தப் பொருத்துனன்.. அந்தக் கண்றாவி காட்சியையும் பார்த்துவிட்டுத்தான் நீ கண்ணடித்துவிட்டு எழுந்து வந்தாய்.. நானும் எனது வெட்கத்தை மறைத்து உன்னைத் தூக்கி வந்தனே. இதை எங்கே போய் சொல்வது?

“பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்..” என்பார்களே.. அது போலவே இந்த முறை உனது அண்ணன் திருவாளர் சிபியூ ரெண்டு புல் பாட்டில்களை தண்ணி கலக்காமல் குடித்து குப்புறப் படுத்துக்கொண்டார். அவரைச் சரி செய்வதற்கு என்னுடைய ஆறு மாத சேமிப்புப் பணம் ஒரே நாளில் கரைந்ததே.. அந்தக் கொடுமை தெரியும்தானே உனக்கு..?

நீ நன்றாக இருந்தால் உன் அண்ணனுக்கு வயித்து வலி.. உனது அண்ணனுக்கு தலைவலி என்றால், உனது மச்சானுக்கு கால் வலி.. என்று மூவரும் சேர்ந்து என்னை பாடாய்படுத்தினீர்கள்.. நானும் அவ்வப்போது உங்களுக்குத் தேவையானச் ‘சத்துணவு’களையும் கூடுதல் 'ஆயுதங்களை'யும் வாங்கிக் கொடுத்து உங்களைக் கண் கலங்காமல்தான் வைத்திருந்தேன். இவ்வளவு செய்தும், இவ்வளவு பாசமாக இருந்தும் என்னைவிட்டுப் போக உனக்கு எப்படி ராசா மனசு வந்தது..?

நேற்றும் வழக்கமாக உனக்கு ‘குட்மார்னிங்’ சொல்லிவிட்டு உனது முன் அமர்ந்தேன். ‘வணக்கம்’ சொல்லிவிட்டதால் நீ கோபிக்க மாட்டாய் என்று அலட்சியமாக இருந்துவிட்டேன்.

உனக்கு உயிர் கொடுத்த சில நிமிடத்தில் வீடு முழுக்க ஒரு கெட்ட வாடை; எதுவோ கருகுவது போல்.. அக்கம் பக்கம் தேடினேன்.. முகர்ந்து பார்த்தேன் புரியவில்லை; தெரியவில்லை. குனிந்து உன் பின்னால் பார்த்தேன். அரண்டு போய்விட்டேன்.. தீ.. நெருப்புப் பிழம்பு.. ஜோதி என்பார்களே அது போல ஜெகஜோதியாக உனக்குள்ளே ஒரு நெருப்பு கனன்று எரிந்து கொண்டிருந்தது. கோவிலில் பார்த்தால் கும்பிட்டுவிட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அந்த ஜோதியை, இப்போது உனக்குள் பார்த்ததும் பயத்துடன் அலறிவிட்டேன்..

பதட்டத்தில், மின்சார சுவிட்ச்சை ஆ·ப் செய்வதற்குள் “டப்” என்ற ஒரே ஒரு சப்தம். ஸ்டோர் ரூம் மாதிரியான வீடாச்சே நமது வீடு. அனைத்து வீடுகளிலும் கரண்ட் கட். காம்பவுண்ட் முழுக்க மயான அமைதி. சாம்பிராணி புகையைத் தவிர வேறு புகையை சுவாசித்திராத நமது வீடு, கந்தக சுவாசத்தை நேற்றுதான் அனுபவித்தது.. அவ்வளவு புகை..

5 வீட்டிலும் ஓடி வந்து என்னிடம் குசலம் விசாரித்தார்கள். சொல்ல முடியவில்லை.. கரண்ட் வர வேண்டும்.. உனக்கு என்ன ஆனது என்று பார்க்க வேண்டும் என்ற பதைப்பில் இருந்த எனக்கு 2 மணி நேரம் கழித்து மின்சாரம் வந்தவுடன் ஓடோடி வந்து உன்னைப் பார்த்த நான் கதறியேவிட்டேன். “ஐயோடா தம்பீ.. இப்படியா நீ இருப்பாய்? அக்ரஹாரத்து அம்பியைப் போல் அழகாக இருந்த நீ, பெருமாள் கோவில் எண்ணைச் சட்டியைப் போல் ஆகிவிட்டாயே..?” கொடுமையடா முருகா..

இதுநாள்வரையில் எனக்காக உன் உடல், பொருள், ஆவி முழுவதையும் ஒப்படைத்திருந்த என் கண்மணியே, இந்திய நேரப்படி நேற்று இரவு 10.52 மணிக்கு நீ உயிரைவிட்டு விட்டாய் என்பதனை சென்னை மாநகராட்சியில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை கண்ணீரோடு சொல்கிறேன்.

அன்பின் திருவுருவமே.. அடக்கத்தின் அடையாளமே.. தியாக சீலனே.. ஓய்வறியாத உழைப்பாளியே.. ஒப்பற்ற செயல்வீரனே.. சென்று வா.. உனது உழைப்பை, தியாகத்தினை நான் ஒரு போதும் மறக்கமாட்டேன்.. என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன்..

முருகா! இனி நீயே துணை..!

மறுபடியும் ஒரு குழப்பம்..!

29-08-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!





இந்தப் பதிவில் நான் ஏற்கெனவே சொல்லியிருந்த கமெண்ட்டுகள் இடுபவரின் பெயர்கள் தெரிய வேண்டிய இடத்தில் கேள்விக்குறியாகவே வருகிறது என்ற எனது குழப்பம் இப்போது சரியாகிவிட்டது.

நேற்று முதல் கமெண்ட்டுகளை இடுபவரின் பெயர்கள் தமிழிலேயே தெளிவாகத் தெரிகின்றது.



மேலும் மேற்குறிப்பிட்ட பதிவில் பின்னூட்டம் இட்டிருந்த 'மதுரையின் வாலிபச் சிங்கம்', 'இனமானப் பேராசிரியர்' தருமி அவர்கள் குறிப்பிட்டிருந்த பின்னூட்டப் பெட்டியைக் கிளிக் செய்யும்போது எழுந்த Mouse Cursor பிரச்சினையும் தீர்ந்துவிட்டது.

ஆனால், அந்த மணப்பாறை முறுக்காகக் முறுக்கிக் கொண்டு நிற்கும் பதிவின் தலைப்பு மட்டும் அப்படியே இன்னும் பெரிய, பெரிய சங்கிலித் தொடர்களாக போய்க் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக இப்போது வேறு ஒரு பிரச்சினை.

எனது தளத்தினை எப்போது திறந்தாலும் திறந்த 4 நொடிகளில் தளம் மறைந்து படம் 3, படம் 4-ல் இருப்பது போல வந்து நிற்கிறது.


நான் F5 கீயை அழுத்தி 'மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பி' என்று கட்டளை கொடுத்தால் சரியாக வருகிறது.


ஆனால் தளத்தில் ஏதேனும் மாறுதல் செய்துவிட்டு மீண்டும் தளத்தினை திறந்தால் முன்பு பார்த்த Google Error Message Page-ற்கே செல்கிறது.

நான் ஒவ்வொரு முறையும் refresh செய்துதான் தளத்தினை படித்துக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு மட்டும்தான் இப்படியா? அல்லது அனைவரது கம்ப்யூட்டரிலும் இப்படியா என்று எனக்குத் தெரியவில்லை.

தெரிந்த நண்பர்கள் ஏதேனும் தீர்வு இருந்தால் சொல்லவும்..

பின்குறிப்பு : கமெண்ட்டுகளை இடுபவர்களின் பெயர்களை தமிழில் வரச் செய்தது யார் என்று தெரியவில்லை. எந்தப் பதிவராவது அந்த அருஞ்செயலை செய்திருந்தால் உடனேயே எனக்கு தகுந்த ஆதாரத்தோடு மடல் இடவும். கை அரிக்கிறது.. 100 கமெண்ட்டுகளை கொட்டத் தயாராக இருக்கிறேன்..

பதிவர் அனுராதா அம்மா அவர்களுக்கு எனது அஞ்சலி!

28-08-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்று காலை அலுவலகத்திற்குள் கால் வைத்தவுடன் வந்த செய்தி எனக்கு பெரும் துக்கத்தை தந்தது.

“உண்மைத்தமிழன்தானே.. நான் திண்டுக்கல் சர்தார் பேசுறேன்..” என்று ஆரம்பித்த அந்தக் குரல் பிசிறு தட்டாமல், ஒரு தடங்கலும் இல்லாமல் “அனுராதாம்மா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி expired ஆயிட்டாங்க.. உங்களுக்குச் சொல்லணும்னு நினைச்சேன். அதுதான்.. உங்களால முடிஞ்சா ஒரு பதிவு போட்டிருங்களேன்..” என்றார்.

வருத்தங்களை வார்த்தைகளால் மட்டுமே வடிக்கும் அளவுக்கு நமது சமூகப் பிரச்சினைகள் சூழ்ந்திருக்கின்றன என்பதால் எனது வருத்தங்களை அவருக்குத் தெரிவித்து போனை வைத்தேன்.

கடந்த 2003-ம் ஆண்டு முதலே அந்தக் கொடிய நோயுடன் மரணப் போராட்டமே நடத்தி வந்திருக்கிறார் நமது பதிவரம்மா.

பொதுவாக பெண்கள் வெளியில் சொல்வதற்கே சங்கடப்படக்கூடிய பல விஷயங்களை அவருடைய துன்பவியல் அனுபவத்தின் மூலம் வெளிப்படுத்தி நம் சமூகத்திற்கு தேவையான ஒரு உதவியைச் செய்திருக்கிறார் அவர்.

பொதுவாகவே நோய் வந்தால் உடனேயே பயத்திலேயே சுருண்டு படுத்துவிடும் மக்கள் மத்தியில் வந்த நோய் எதனால் வந்தது? ஏன் வந்தது? என்பதையெல்லாம் வெளியில் சொல்லி மற்றவர்களையும் எச்சரிக்கையுடன் இருக்கவைக்க வேண்டும் என்று நினைத்த அந்த உயர்ந்த உள்ளத்திற்கு நாம் எப்படி காணிக்கை செலுத்துவது என்று தெரியவில்லை.

விதி வலியது என்பார்கள். அதனை தனது மதியால் இத்தனை நாட்கள் போராடி வந்த அம்மாவின் மனத்திடம், அனைவருக்கும் வாய்த்துவிடாது. அம்மாவுக்கு அது கிடைத்திருக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக அவர் நீண்ட மருத்துவமனை வாசத்திற்குப் பிறகு வீடு திரும்பியிருப்பதை பதிவாக எழுதியிருந்தார். அப்போதுதான் நான் அவருக்கு போன் செய்து பேசினேன். தான் மிகத் தைரியமாக இருப்பதாகவும், நோயின் தாக்கம் அவ்வப்போது வந்து கொண்டேயிருப்பதால் பதிவுகள் மட்டும் உடனுக்குடன் எழுத முடியவில்லை என்றும் வருத்தப்பட்டார். இதுவே எனக்கு ஆச்சரியம்தான்.. “உங்களை எப்படி பாராட்டுறதுன்னே தெரியலம்மா.. நல்லாயிருங்கம்மா.. எல்லாருத்துக்கும் மேல முருகன் இருக்காம்மா..” என்றேன்.. சிரித்துவிட்டு போனை வைத்தார்.

இவருடைய கணவர்தான் நான் சில காலமாகத் தேடிக் கொண்டிருக்கும் திண்டுக்கல் சர்தார் என்பது எனக்கு நேற்றுதான் தெரியும். நேற்றுதான் அவருடைய பதிவில் இது பற்றி வெளிப்படுத்தியிருந்தார். இந்த நேரத்தில் அது பற்றி கேட்கக்கூடாது என்பதால் நானும் கேட்கவில்லை.

ஆரம்பக் காலத்தில் நான்தான் ‘திண்டுக்கல் சர்தார்’ என்று நினைத்து எனக்கு ஏகப்பட்ட ‘அன்பான’ பின்னூட்டங்கள் டஜன் கணக்கில் வந்து கொண்டிருந்தன. தொல்லை தாங்காமல் நானே அவருக்கு ஒரு வேண்டுகோளும் விடுத்தேன். “முகத்தையாவது காட்டுங்களேன்” என்று.. ஆனால் இப்படியொரு துர்ப்பாக்கிய சூழ்நிலையில் அது நிகழும் என்று நான் நினைக்கவில்லை. எல்லாம் முருகன் செயல்.

நாளை காலை மதுரை, தத்தனேரி மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

அம்மாவின் ஆத்மா சாந்தியடைய அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.

மதுரையில் மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாமாண்டு துவக்க விழா

28-08-2008


என் இனிய வலைத்தமிழ் மக்களே..

அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர்ந்து ஒத்துக் கொள்ளும் ஒரு விஷயம் மக்கள் தொலைக்காட்சியின் அடக்கமான, ஆரவாரமில்லாத வெற்றியைத்தான்.

எந்த சேனலைத் திருப்பினாலும் “மாமியார்-மருமகள் சண்டை, மாமனார், மருமகன் மோதல். விஷம் வைப்பது எப்படி..? அடியாட்களை திரட்டுவது எப்படி? மனைவியை ஏமாற்றுவது எப்படி? திட்டமிட்டு கொலை செய்வது எப்படி? செய்த கொலையில் சிக்காமல் தப்பிப்பது எப்படி?” என்று சமூகத்தின் அனைத்து அநியாயங்களையும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒருவிதத்தில் பார்க்கப் போனால், வேகாத வெயிலில் கிடைக்கின்ற ஜில்லென்ற தண்ணீர்தான்.

தமிழகமே அழுவாச்சி சீரியல்களில் தவித்துக் கொண்டிருக்கும்போது மக்கள் தொலைக்காட்சி மட்டுமே கண்ணீரைத் துடைக்கும் பெண்களைக் காட்டியது. காமெடி என்கிற பெயரில் நடுவீட்டில் எச்சில் துப்புவதைக் கூட துல்லியமாகக் காட்டிய கண்றாவி காட்சிகளுக்கு மத்தியில், சிறுவர்களின் வாழ்க்கை முறைகள் எப்படியிருக்க வேண்டும் என்பதனை படம் பிடித்துக் காட்டியது மக்கள் தொலைக்காட்சிதான்.

நடு இரவில் குருவியைச் சுடுவதைப் போல குற்றவாளியாக்கப்பட்டவர்களை படுகொலை செய்துவிட்டு, மறுநாள் 10 ரூபாய் மாவுகட்டை வாங்கிப் போட்டுக் கொண்டு மருத்துவமனையில் படுத்துறங்கி வீடியோ கேமிராக்களுக்கு போஸ் கொடுத்த உலகப் புகழ் பெற்ற தமிழக போலீஸாரின் பேட்டியை வீரசாகசம் என்று சொல்லி அனைத்து சேனல்களும் கூத்தடித்துக் கொண்டிருந்த வேளையில்...

ஹிட்லருக்குத் தாங்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்களல்ல என்பதை நிரூபிப்பதைப் போல வீரப்பன் வேட்டை என்ற பெயரில் தமிழகக் காவல்துறை நடந்து கொண்ட மிருகத்தனத்தை பெரும் பொருட்செலவில் நஷ்டம் பற்றி கவலையில்லாமல் சீரியலாக எடுத்துப் பெருமையைத் தேடிக் கொண்டது மக்கள் தொலைக்காட்சிதான்.

“மண் பயனுற வேண்டும்” என்பதை தனது தாரக மந்திரமாக வைத்திருக்கும் மக்கள் தொலைக்காட்சி அந்தப் பணியைத் திறம்பட நேர்மையாக செய்து வருகிறது என்றே சொல்லலாம்.

இப்போதுதான் ஆரம்பித்தது போலிருக்கிறது மக்கள் தொலைக்காட்சியின் தோற்றம். ஆனால் மூன்று வருடங்களாகிவிட்டதாம் அதன் வயது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னையில் ஸ்டாலின் தலைமையில் விழா கொண்டாடப்பட்டது.

இப்போது சங்கம் வளர்த்த மாமதுரையில் மக்கள் தொலைக்காட்சி தனது மூன்றாமாண்டு விழாவை அமர்க்களமாக நடத்தவிருக்கிறது. இன்று மாலைதான் எனக்கு அழைப்பிதழ் கிடைத்தது.

உள்ளடக்கம் மனதைக் கவர்வது போலவும், தமிழ்.. தமிழ் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்கின்றவர்கள், அவர்களது அலுவலக அனுமதி அட்டையையே ஆங்கிலத்தில் வைத்து தமிழை பரப்பிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், மக்கள் தொலைக்காட்சி மேடையிலும்கூட தமிழ் மணக்க நிகழ்ச்சிகளை வழங்கப் போகின்றதே என்கிற ஒரு கரிசனையிலும் ஏதோ ஒன்றாகி இந்தப் பதிவினை இடுகிறேன்..

இனி மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாமாண்டு துவக்க விழாவின் நிகழ்ச்சி நிரல்

செப்டம்பர் 6-ம் நாள் மாலை 4 மணிக்கு மதுரை, தல்லாகுளம், இராசா முத்தையா மன்றத்தில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளோடு நிகழ்ச்சி துவங்கவிருக்கிறது.

இசைத்தமிழும், நாட்டியத் தமிழும், நாடகத்தமிழும் ஒருங்கே இணைந்து இயம்பவிருக்கும் இந்த கலை நிகழ்ச்சிகளின் பட்டியல் இதோ..

நாகசுரம் : திருக்குவளை சகோதரிகள்

நாட்டுப்புறப்பாட்டு : திருமதி பரவை முனியம்மா

கலைக்கிராமம் குழுவினர் வழங்கும் உருமி மேளம்

காணிக்காரர் திரு.பழங்குடி பாரதி மற்றும் குழுவினர் வழங்கும் காட்டுப்புறப் பாட்டு

காவடி ஆட்டம் : கலைமாமணி தஞ்சை விநாயகம்

மதுரையில் வீரப்பனும், கூட்டாளிகளும்

மதுரை பத்ரீசியார் நடுநிலைப்பள்ளி மாணவிகள் பாடும் மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாவது ஆண்டு விழா பாடல்

மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் வழங்கம் கலைச்சங்கமம் (மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என அனைத்துக் கலைகளின் சங்கமம்)

புதுகை பிரகதீசுவரன் குழுவினர் வழங்கும் புதிய கோணங்கிகளின் அதிர்வேட்டு.

மக்கள் தமிழ்

மக்கள் செய்திகள் : ஒரு பார்வை என்கிற தலைப்பில் டெக்கான் கிரானிக்கல் இதழின் சிறப்பாசிரியர் திரு.பகவான்சிங் அவர்கள் பேசப் போகிறார்.

மக்கள் தொலைக்காட்சியில் தமிழன் என்கிற தலைப்பில் கவிஞர் திருப்பூர் கிருட்டிணன் பேசவிருக்கிறார்.

மலரும் பூமி நிகழ்ச்சி : ஒரு பார்வை என்கிற தலைப்பில் இயற்கை விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்கள் பேசுவார்.

மக்கள் தொலைக்காட்சியின் தொடர்கள் என்கிற தலைப்பில் திரைப்பட இயக்குநர் திரு.சீமான் அவர்கள் பேசுவார்.

மக்கள் தொலைக்காட்சியின் சமூகப் பார்வை என்கிற தலைப்பில் முனைவர் வசந்திதேவி அவர்கள் சிறப்புரையாற்றுவார்கள்.

மக்கள் தொலைக்காட்சியில் திரைப்படங்கள் என்கின்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர் திரு.அமீர் அவர்கள் உரையாற்றவுள்ளார்.

மக்கள் தொலைக்காட்சியில் தமிழ்க் கலைகள் என்ற தலைப்பில் பேசவிருக்கிறார் முனைவர் திரு.கே.ஏ.குணசேகரன் அவர்கள்.

இயற்றமிழ் பிரிவில் உரையாற்றுபவர்கள்

நெல்லைத்தமிழ் பற்றி கலைமாமணி திரு.சுப்பு ஆறுமுகம் அவர்கள்..

குமரித்தமிழ் பற்றி எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன் அவர்கள்..

கொங்குத் தமிழ் பற்றி எழுத்தாளர் திரு.பாமரன் அவர்கள்..

சென்னைத் தமிழ் பற்றி முனைவர் பெரியார்தாசன் அவர்கள்..

மதுரைத் தமிழ் பற்றி திரு.திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள்..

ஈழத் தமிழ் பற்றி ஐயா திரு.எஸ்.பொ அவர்கள்.

உலகத் தமிழ் பற்றி திரு.செந்தலை கெளதமன் அவர்கள்..

விழாவிற்கு தலைமையேற்க இருப்பவர் மத்திய மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.அன்புமணி இராமதாசு அவர்கள்..

மக்கள் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குநர் திரு.வேணு சஞ்சீவி அவர்கள் வரவேற்புரையாற்றுவார்கள்.

மக்கள் தொலைக்காட்சியின் நிறுவனர் மருத்துவர் திரு.ச.இராமதாசு அவர்கள் சிறப்புரையாற்றுவார்கள்.

மக்கள் தொலைக்காட்சியின் முதன்மைச் செயல் அலுவலர் திரு.அ.சிவக்குமார் அவர்கள் நன்றியுரை நிகழ்த்துவார்.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அன்று மாலை 4 மணி முதல் மக்கள் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவிருக்கிறது.

மதுரை நேயர்களும், வலைப்பதிவர்களும் வாய்ப்பு கிடைத்தால் நேரில் சென்று, கண்டு, களிக்கும்படி வாழ்த்துகிறேன்.

நன்றியுடன்


உண்மைத்தமிழன்

நினைத்தேன் எழுதுகிறேன்-28-08-2008

28-08-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

ரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்றே கொல்லும் என்ற பழமொழி பல நிலைகளில் பலித்திருப்பதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். நேற்றும் கண்டேன்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரனுக்கும், அவருடைய மனைவிக்கும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இந்த பாஸ்கரனும் அம்மாவின் முதல் ‘பொன்னான’ ஆட்சிக் காலத்தில் சப்தமில்லாமல் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார். அதிலும் அப்போதைய பத்திரிகையாளர்கள் சுலபத்தில் இவரை மறந்துவிட முடியாது.

சென்னை, நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் இருந்த அமலாக்கப் பிரிவு அலுவலகத்திற்கு சசிகலா ஆஜராக வந்தபோது பத்திரிகையாளர்கள் பெருமளவு கூடியிருந்தார்கள். அவர்களின் கேமிராக்களில் சசிகலாவின் முகம் பதியாத வண்ணம் எங்கிருந்தோ அழைத்து வரப்பட்டிருந்த வாட்டசாட்டமான ஆட்கள் வட்டவடிவில் நின்று கொண்டு தங்களது கைகளை ஒரு சேரத் தூக்கி இணைத்துக் கொண்டு பத்திரிகையாளர்களை இடித்துத் தள்ளி கோரத் தாண்டவமாடியதை நான் கண்கூடே கண்டேன். அந்த அரும்பணியைச் செய்து புண்ணியம் தேடிக் கொண்டவர் இந்த ரிசர்வ் பேங்க் பாஸ்கரன்தான் என்பதை பத்திரிகைகள் பிற்பாடு புலனாய்வு செய்து சொல்லியிருந்தன.

அந்த ‘ராமராஜ்ய’ கட்டத்தில் சின்னம்மாவின் சீற்றத்திற்குள்ளான அனைத்து விஷயங்களிலும் பாய்ந்தவைகள் இவருடைய வில் சேனையிலிருந்து கிளம்பிய அம்புகள்தான். ஆனாலும் எதிலும் ஆதாரமில்லை என்று சொல்லி அப்போதும் சரி.. அதற்குப் பின்னான தி.மு.க. ஆட்சியிலும் சரி ‘கை’ வைக்க முடியாத நிலையில்தான் இருந்தார்.

ஆனாலும் ஒரு முறை ஒன்று சேர அடித்த சி.பி.ஐ.யின் ரெய்டில் மட்டுமே சிக்கினார். பத்திரிகைகளின் கைகளுக்கு நியூஸ் போகாதவண்ணம் நடந்து முடிந்த இந்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற விசாரணையின் முடிவு மட்டும், அனைத்து கண்டங்களுக்கும் தெரிந்துவிட்டது.

ஆடும்வரை ஆடுங்கள். எல்லாம் முடிந்த பின்பு கிடைக்க வேண்டியது கண்டிப்பாக கிடைத்தே தீரும்.

* * * * * * *

சிபுசோரன் தனது நீண்ட நாள் கனவான முதல்வர் பதவியை அடைந்துவிட்டார். மாயாவதி மாநிலம் முழுவதும் அரசு செலவில் தன்னுடைய உருவச் சிலையை அமைக்கச் சொல்லி உத்தரவிட்டுவிட்டார். லாலூ பிரசாத் யாதவ் அடுத்தத் தேர்தலில் கூட்டணி பற்றி சரத்யாதவுடன் பேசத் தயாராகிவிட்டார். ஜெயலலிதா பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைக்காதபட்சத்தில் கம்யூனிஸ்ட்கள் அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்புண்டு என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவித்துவிட்டார்கள்.

ஆக மொத்தத்தில் லஞ்சம், ஊழல், முறைகேடு, சி.பி.ஐ., கோர்ட், வழக்கு, தீர்ப்பு என்று எல்லா ஜல்லியையும் ஓட்டுப் போட்ட அப்பாவிகளும், பொழுது போகாத நமது பதிவர்களும்தான் பேசவும், எழுதிக் கொள்ளவும் வேண்டும். யாருக்கும் இங்கே வெட்கமில்லை என்பதனை மீண்டும், மீண்டும் நாம் நிரூபித்தே வருகிறோம்.. வாழ்க ஜனநாயகம்..

* * * * * *

டைசியாக நேற்று இரவு கிடைத்த செய்திகளின்படி தம்பி பாலபாரதி திருமணப் பந்தத்தில் சிக்கிக் கொண்டதாக அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

அவர் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ என் அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்.

நெகிழ வைத்த ஜெயராம்-கோபிகா : திரைப்பட விமர்சனம்


25-08-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பல நேரங்களில் காமெடித் திரைப்படம் என்று நினைத்துப் போனால் அழ வைத்துத் திருப்பியனுப்புவார்கள். திரில்லர் படம் என்று நினைத்துப் போனால் காமெடி படம்போல இருக்கும். சண்டைப் படம் என்று போனால் சர்க்கஸ் பார்த்த திருப்தியுடன் வெளியில் வர வேண்டியிருக்கும். குடும்பப் படம் என்று நினைத்து போனால், களியாட்டம் ஆடும் கிளப்புகளின் அன்றாட நிகழ்வுகளை ஒரு சேர பார்த்த வெறியுடன் வெளியில் வர வேண்டியிருக்கும்.

நீங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக திரைப்படங்களைப் பார்க்கும் வியாதியுடையவராக இருந்தால், மேற்கூறியவற்றையெல்லாம் அனுபவித்தவராக இருந்திருப்பீர்கள்.

ஆனால், சில நேரங்களில் மட்டுமே நாம் பார்க்கச் செல்லும் திரைப்படங்களின் தாக்கம் நம்மை மகிழ்ச்சியடைய வைக்கும். பணம் செரித்தது என்ற திருப்தியைத் தரும்.. மனதை குதூகலிக்க வைக்கும்.. அப்படியொரு திடீர் சிலிர்ப்பைத் தந்தது கடந்த வெள்ளிக்கிழமை மாலை உட்லண்ட்ஸ் தியேட்டரில் நான் பார்த்த 'Veruthe Oru Bharya' என்கிற மலையாளத் திரைப்படம்.

நடிகர் ஜெயராமை மலையாளத் திரைப்படங்களை அதீத ஆர்வத்துடன் பார்க்கத் துவங்கியதிலிருந்தே நான் ரசித்து வருகிறேன். குடும்பப் படங்களின் ஒட்டு மொத்த கதாநாயகன் என்கிற இமேஜை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக மலையாளத் திரையுலகில் கட்டிக் காப்பாற்றி வந்த புண்ணியவான்.

இவரும் ஊர்வசியும் நடித்திருந்த மலையாளப் படங்கள், அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யக்கூடிய அளவுக்கு தகுதியான கதையம்சம் கொண்டவைதான். கண்ணியமான கணவன், அப்பாவியான கணவன், குடும்பத்தில் அனைவருக்கிடையிலும் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஒரு சராசரி மனிதன் என்றெல்லாம் தனது நடிப்பு வேட்டையில் பல பரிமாணங்களை வகுத்திருக்கும் ஜெயராமுக்கு 'Veruthe Oru Bharya' என்னும் இந்த புதிய மலையாளத் திரைப்படமும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றும் சுகுணன் என்னும் ஜெயராமுக்கு பிந்து(கோபிகா) என்கிற மனைவியும், 13 வயதுள்ள ஒரு அஞ்சனா என்கிற குழந்தையும் உண்டு.

மனிதனுக்கு பெண் குலத்தின் மீது என்ன வெறுப்போ தெரியவில்லை. பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.. வீடு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தனக்குத்தானே ஒரு கயிற்றைக் கட்டிக் கொண்டு அதற்குள்தான் இருக்க வேண்டும் என்று மனைவியையும், மகளையும் போட்டு இம்சை செய்கிறான்.

பிறந்த வீடு, அரண்மனைபோல் இருக்க இங்கேயோ ஓட்டு வீட்டுக்குள் குடிசை வீட்டில் இருக்கும் பொருட்களைப் போல் இருப்பவைகளை வைத்துக் கொண்டு அல்லாடுகிறாள் மனைவி பிந்து.

காலையில் 5 மணிக்கு அலாரம் வைத்து எழுவதில் இருந்து, இரவு 11 மணிக்கு படுக்கப் போகும்வரை ஓயாமல் உழைக்கிறாள் பிந்து. பெண்கள் வீட்டில் வேலையில்லாமல் சும்மா இருக்கக் கூடாது என்கிற கணவன் சுகுணனின் நினைப்பால் மாடு, கன்றுக்குட்டிகளை மேய்க்கும் கடமைகூட அவளுக்கு உண்டு.

எப்போது நிற்கும் என்று தெரியாத மிக்ஸி, மல்லுக்கட்டும் ஒரேயொரு கேஸ் ஸ்டவ்.. தனக்குக் குளிப்பதற்காக சுடுதண்ணியை விறகு அடுப்பில்தான் வைக்க வேண்டும் என்கிற அளவுக்கான சுகுணனது ஆணாதிக்கம் அந்த வீட்டில் நிறைந்திருக்கிறது. சட்டையைப் போடுவதற்குக்கூட “பிந்து” என்று அழைக்கும்போது பிந்துவின் எரிச்சலைவிடவும் ஒரு பைத்தியம் என்கிற விமர்சனத்தை சுகுணன் பெறுகிறான்.

தினசரி பேப்பரை எட்டுப் படிகளில் ஏற சோம்பேறித்தனப்பட்டு வீசியெறியும் பேப்பர்காரனிடம் சண்டையிடும் சுகுணன், அந்தப் பேப்பரை எடுத்துக் கொண்டு வந்து தாழ்வாரத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து படிக்கத் துவங்கி “பிந்து, பிந்து” என்று பத்து முறை அழைத்து காபியை வாங்கிக் குடிக்கும்போது எனக்கும் வெட்கமாகத்தான் இருந்தது.

வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் எல்லாமே மனைவியே செய்ய.. அவளைத் தான் ஆள வந்தவன் என்ற நினைப்பில் ஜெயராம் செய்யும் அலம்பல்கள்தான் முற்பாதி முழுக்க..

அலுவலகத்திலும் இதே நிலைதான். கையில் ரசீதுகளுடன் பொதுமக்கள் காத்திருக்க அலுவலகத்தில் வெட்டிக் கதை பேசிக் கொண்டிருக்கிறான் சுகுணன். அலுவலக மேலதிகாரி வந்து சொல்லியும் அரசுத் துறை ஊழியர்களின் அலட்சியப் போக்கை கண் முன்னே காண்பிக்கிறான் சுகுணன்.

வீட்டிற்கு வரும் பணக்கார மாமனாரையும், மைத்துனனையும் மதிக்காமல் உடன் சென்று வந்ததற்காக மனைவியை வாசலிலேயே கடிந்து கொள்ளும் போக்கைச் சகித்துக் கொள்ளும் போக்கில் பிந்துவின் மேல் பரிதாபம் கூடுகிறது.

மைத்துனன் திருமணத்தன்று EB Post-ல் இருந்து திருட்டுத்தனமாக கரண்ட் கனெக்ஷன் கொடுத்திருப்பதை அறியும் சுகுணன், “அது தப்பு.. மொதல்ல நிறுத்து..” என்று சொல்லி அதே இடத்தில் களேபரம் செய்வதுதான் படத்தின் முடிச்சு.

மறுநாள் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டிருந்த பிந்துவின் அம்மா மரணமடைந்திருக்க.. எப்போதும் நக்கலுடன் பேசும் சுகுணனுக்கு அன்று மட்டும் தனது மாமனாரிடம் துக்கத்தோடு பேச வேண்டிய சூழல். கடமையை முடித்துவிட்டு வீட்டில் வந்து உட்கார்கிறான்.

பெற்ற தாயின் இறுதிக் காரியங்களை செய்துவிட்டு கணவன் வீட்டிற்கு வரும் பிந்து எடுக்கும் ஒரு அஸ்திரம்தான் ஒத்துழையாமை இயக்கம். “இனி இந்த வீட்டில் நான் ஒரு வேலையும் செய்ய மாட்டேன்..” என்பது. “செய்யாட்டி போ.. நான் பாத்துக்குறேன்..” என்றெல்லாம் சவுடால் விடும் சுகுணனுக்கு ஒரு நாள்கூட தாங்க முடியவில்லை..

கோபத்தில் மனைவியை அடித்துவிட, மறுநாள் காலையே மகளிடம் மட்டும் சொல்லிக் கொண்டு சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு போய்விடுகிறாள் மனைவி. இதற்குப் பின்தான் கதையே சூடு பிடிக்கிறது.

மனைவி இல்லாத சூழலில் ஜாலியாக இருக்க நினைக்கும் சுகுணன் முதல் காரியமாக தனது மகளுக்கு ஒரு செல்போனை வாங்கித் தருகிறான். அதனை வாங்கியவுடன் மகள் செய்கிற முதல் காரியம், அடுத்த வீட்டுப் பையனுடன் பேசத் துவங்குவதுதான்.

தனக்கும், மகளுக்கும் சமைத்துப் போட ஒருவனை நியமிக்கிறான் சுகுணன். வந்தவனோ மகளுக்கு மேஜிக் கற்றுக் கொடுக்கிறேன் என்று சொல்லி அவளைத் தொடப் பார்க்க, கடைசி நிமிடத்தில் பார்த்துவிடும் சுகுணன் அவனை அடித்து விரட்டுகிறான்.

செல்போனில் இடைவிடாமல் தொடர்ச்சியாகப் பேசியதன் பயனாக பக்கத்து வீட்டுப் பையன் தனது ஜீப்பில் அஞ்சனாவின் பள்ளிக்கே வந்து அவளை அழைத்துச் செல்கிறான். விடலைப் பருவத்தின் தூண்டுதலால் செய்வது என்னவென்று தெரியாத, இனம் புரியாத கவர்ச்சிப் போதையில் இளம் தளிர்கள் இருவரும் மாலை நேரத்தில் மலைப்பிரதேசத்தில் போய்க் கொண்டிருக்க.. ஜீப் ரிப்பேர்..

அப்போது அங்கே கையில் பீர் பாட்டிலோடும், கண்களில் போதையோடும் வரும் இளைஞரணி கூட்டமொன்று அஞ்சனாவைத் தூக்க முயல.. ஜீப்காரன் அடிபட்டு கீழே விழுக அஞ்சனா தப்பியோடுகிறாள். சுகுணன் இரவு வீடு திரும்பி, மகளின் தோழிகள், பள்ளி அலுவலகம் என்று பலவற்றிலும் தேடி என்ன ஆனாள் என்பது தெரியாமல் அவதிப்பட்டு தேடி வருகிறான்.

காமுகர்களால் விரட்டப்படும் மகளும், மகளைத் தேடி வரும் அப்பாவும் ஓரிடத்தில் சந்தித்துக் கொள்ள.. பின்னால் வரும் போலீஸாரும் ரவுடிகளைப் பிடித்துக் கொள்ள மகள் காப்பாற்றப்படுகிறாள்.

நல்ல மனிதனாக இருந்த போலீஸ் அதிகாரி மகளுடைய செல்போனை ஆராய்ந்து, அதில் எத்தனை மணி நேரம் அந்தப் பையனுடன் பேசியிருக்கிறாள் என்பதை சுகுணனிடம் சொல்லி, “இனியாவது பத்திரமா பாத்துக்குங்க..” என்று அட்வைஸ் செய்து அனுப்பி வைக்கிறார்.

வீட்டுக்கு வரும் மகள் அப்பாவின் காலில் விழுந்த மன்னிப்பு கேட்க சுகுணன் யோசிக்கிறான். மனைவியை அழைத்து வர இப்பவும் அவனுக்குத் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.. என்ன செய்வது என்று இரவெல்லாம் யோசிக்கத் துவங்க.. இந்த இடத்தில் அவனது மனநிலை மாறுவதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

அங்கே மனைவியின் நிலையோ இதைவிட பரிதாபமாக இருக்கிறது. அப்பாவுக்கும், தம்பிக்கும் இடையில் மாட்டிக் கொண்டு இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறாள் பிந்து.

மறுநாளும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் அஞ்சனாவை அதே மேஜிக்காரன் கையைப் பிடித்து இழுத்து ஆட்டோவுக்குள் திணிக்க முயல மகளை அழைக்க வரும் சுகுணன், இதைப் பார்த்து இன்னமும் பதைபதைத்துப் போகிறான். அவனை விரட்டிவிட்டு மகளை அரவணைக்கும்போது அவனுக்குள் அது அணையாத நெருப்பாகிறது.

மகள் அரவணைக்கப்பட வேண்டியவள். அவளை விரட்டும் கழுகுகள் நிறையவே உள்ளன. பாதுகாக்க வேண்டியது அவன் கடமை என்ற உணர்வுகள் மேலோங்க மனச்சிதைவு நோய்க்கு ஆளாகுகிறான். ஆனால் இதனை கடைசிவரையில் சொல்லாமல் காப்பாற்றியது இயக்குநரின் திறமை.

வீட்டுக்கு வரும் சுகுணன் மனைவியிடமிருந்து வரும் போனை கட் செய்கிறான். கூடவே போன் இணைப்பையும் துண்டிக்கிறான். இரவில் தூக்கத்தின் ஊடேயே இதுவரையில் மகளின் வாழ்க்கையில் குறுக்கே புகுந்த கோடாரிகள் அவர்கள் நினைத்ததை சாதிக்கப் போவதை நினைத்துப் பார்த்து அவஸ்தைப்படுகிறான். உடனேயே எழுந்தோடி வந்து மகளைப் பார்த்து ஆறுதல்படுகிறான்.

மறுநாளில் இருந்து அவனது நடத்தை முற்றிலும் மாறுகிறது. மகளுடைய படிப்பை நிறுத்துகிறான். “வீட்டிலிருந்தே படித்துக் கொள்..” என்கிறான். மகள் பயந்து போய் அம்மாவுக்கு போன் செய்ய முயல.. போன் கட்.. வீடு உட்புறமாகவே பூட்டப்படுகிறது.

நிலைமை புரியாமல் சுகுணனின் அலுவலக ஊழியர்கள் கையில் பாட்டிலோடு தீர்த்தம் சாப்பிட வீட்டுக்குள் வந்து அமர்ந்து அலப்பரையைக் கொடுக்க.. அமைதியாக அதனை மறுக்கும் சுகுணன் அவனது மகளிடம் டம்ளர் எடுத்து வரும்படி ஒருவன் சொல்லும்போது ஆவேசமாகி அனைவரையும் கழுத்தில் கை வைக்காத குறையாக வெளியேற்றுகிறான்.

பிந்துவோ மகளது நிலைமை தெரியாமல் பரிதவித்து பாசம் மேலோங்க அவளது பள்ளிக்குச் சென்று விசாரிக்கிறாள். பிந்து பள்ளிக்கு வந்தே வாரங்களாகிவிட்டது என்று தலைமையாசிரியை சொல்ல.. சுகுணனின் அலுவலகம் வந்து விசாரிக்கிறாள். சுகுணன் வேலைக்கு வந்தும் நாட்களாகிவிட்டது என்று அவர்களும் சொல்ல “போய்தான் பாக்கலாம்.. வாங்க..” என்று சொல்லி அனைவரும் வீட்டிற்கு ஓடி வருகிறார்கள்.

வீட்டின் வெளிவாசல் இறுகப் பூட்டியிருக்க.. நாள் கணக்கில் பேப்பர்கள் எடுக்கப்படாமல் மழையில் நனைந்து நைந்து போயிருக்க.. ஏதோ ஒன்று என்று நினைத்து ஓடுகிறார்கள் மனைவியும், நண்பர்களும்.

வீடு அமானுஷ்ய அமைதியில் பூட்டப்பட்டிருக்க.. அதோடு கூடவே ஜன்னல்களும் இறுகப் பூட்டப்பட்டு அதற்கு மேல் குறுக்குவாக்கில் இரண்டு கட்டைகளும் வைத்து மூடப்பட்டிருக்கிறது. சுற்றிச் சுற்றி வருகிறார்கள் அனைவரும். அனைத்து ஜன்னல்களுமே பாதுகாப்பு கோட்டை போல் இருந்து நிலைமையை பயமுறுத்துகிறது.

ஓரிடத்தில் கிடைத்த இடத்தில் கட்டையை அப்புறப்படுத்தி உள்ளே பார்க்க மகள் அஞ்சனா கடும் குளிரில் அவதிப்பட்டு நடுங்கிக் கொண்டிருக்கிறாள். அப்பா சுகுணனோ போர்வையை எடுத்து போர்த்திவிட்டு சுடுதண்ணி கொண்டு வந்து வைத்தும் ஏதோ உளறிக் கொண்டிருக்கிறான்.

இவர்கள் கதவைத் திறக்கும்படி சொல்ல.. சுகுணன் ஜன்னலை நோக்கி பார்க்க அங்கே அவன் கண்களுக்கு உன்மத்த வெறியுடன் மகளை சுற்றிச் சுற்றி வந்த ரெளடிகளாகவே அனைவரும் தெரியும்போதுதான் சுகுணனின் நிலைமை நமக்குத் தெரிகிறது.

அவன் கதவைத் திறக்க மறுத்து மகளையும் இழுத்துக் கொண்டு அறை, அறையாக ஓட.. கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள் அனைவரும். மனைவி, சக ஊழியர்கள் என்று யாரையும் அறிந்து கொள்ள முடியாமல் வந்திருப்பவர்கள் மகளைக் காவு வாங்க வந்த எமன்கள் என்றே நினைத்து எதிர்க்கிறான் சுகுணன்.

மகளை இறுக அணைத்து அழுகும் மனைவியை அடிக்க இரும்புக் கம்பியை வீசுகிறான் சுகுணன். ஆனால் அடி மகளின் மீது விழுந்து ரத்தம் சிதற.. அந்த ரத்தச் சிதறலே அவனை ஆசுவாசப்படுத்துகிறது.

முடிவில் மனநல மருத்துவரின் நீண்ட தேவையான அட்வைஸால் பிரச்சினைக்கான காரணத்தை முழுமையாக அறிந்து மனநோயிலிருந்து விடுபட்டவனாக இருக்கிறான் சுகுணன்.படத்தின் துவக்கக் காட்சிக்கு முற்றிலும், மாறுபட்ட இறுதிக் காட்சியோடு படத்தை நிறைவு செய்கிறார் இயக்குநர்.

டைட்டில் காட்சியிலேயே படத்தின் மொத்தக் கதையையும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

ஜெயராம் தனது நடிப்பில் இன்னொரு புதிய இடத்தை இப்படத்தின் மூலம் நிரப்பியிருக்கிறார். மகளின் படிப்பு பற்றி கோபிகா புகார் சொன்னவுடன் “ஏன் படிக்கல?” என்று திடீர் கோபத்தில் மகளை விரட்டி விரட்டி அடித்து படிக்கச் சொல்லுமிடத்தில் ஒரு அப்பாவின் தோற்றத்தைக் காட்டுகிறார் மனிதர்.

கோபிகாவை கொஞ்சுவதாகட்டும், கெஞ்சுவதாகட்டும், ஆணாதிக்கக் கணவனை கண் முன்னே கொண்டு வருகிறார். மனைவி பிரிந்து போயிருக்க அதே சூழலில் அலுவலகத்தில் தனது பெண் மேலதிகாரியிடம் தனது புலம்பலைக் கொட்டுகின்ற இடத்தில் ஜெயராமுக்கு ஒரு சபாஷ் போடலாம்.

அலுவலக ஊழியர்களுடன் டூருக்குச் செல்லும்போது தண்ணியை போட்டுவிட்டு சலம்பல் செய்வதும், மனைவியையும், மகளையும் ஒருவன் தவறாகப் பேச அதைக் கேட்டு ஆவேசப்பட்டு அடிதடியில் ஈடுபட்டுவிட்டு போதையில் புலம்புவதைக் காண்கின்றபோது நடிகர்களின் உண்மையான நடிப்பு போதையில் தெள்ளத் தெளிவாக வருமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

கோபிகாவின் நடிப்பு அவர் உருவாக்கியிருக்கும் வெற்றிடம் எவ்வளவு கஷ்டமானது என்பதை காட்டுகிறது. கோபிகாவின் இப்போதைய கடைசித் திரைப்படம் இது என்று மட்டும் நாம் நினைத்துக் கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு படம் முழுவதும் வியாபித்துள்ளார்.

கணவனைப் பற்றி புலம்புவதில் இருந்து மாடு, கன்னுக்குட்டிகளிடம் பேசுவதுவரையிலும் அந்த வீட்டில் அவளுக்கிருக்கும் பெரும் பிரச்சினையே, அவளுடைய ஆதங்கங்களைக் கேட்கக்கூட ஆள் இல்லை என்பதைத் தெளிவாக்குகிறது.

மகளுக்கு ஆபத்து என்றவுடன் இப்போது ஜெயராமு இருக்கும் ஒரே துணை அவள்தான் என்ற உணர்வுதான் அவரை ஆட்கொண்டு மனச்சிதைவு அளவுக்கு கொண்டு செல்வதை இயக்குநர் அழகாகச் சொல்லியிருக்கிறார்.

படத்தின் பாடல்களும் மிகப் பெரும் வெற்றி பெற்றிருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. “மஞ்சில் குளிக்கும்” என்ற பாடல் ஒலித்த போது எனக்கு முன்னால் அமர்ந்திருந்த இளைஞர்கள், கூடவே கடைசி வரையிலும் பாடியது கேட்பதற்கும், பார்ப்பதற்கும் கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது.

மிகக் குறைந்த பட்ஜெட்டில் 1.35 கோடியில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் மலையாளத் திரையுலகின் கதையம்சமுள்ள ஒரு பக்கத்தை மறுபடியும் பறை சாற்றியிருக்கிறது. வெற்றியும் பெற்றிருக்கிறது என்பது மனதுக்கு நிறைவைத் தருகின்ற ஒரு விஷயம்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கிரீஷ்குமார் எழுதியிருக்க.. அக்கு அக்பர் என்பவர் இயக்கம் மட்டுமே செய்திருக்கிறார். இதனை நமது தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் பார்த்துப் படித்து உணர்ந்து கொள்வது அவசியம் என்கிறேன்.

இயக்கத்துடன் கதை, திரைக்கதை, வசனத்தையும் நான்தான் எழுதுவேன் என்று பல இயக்குநர்களும் பிடிவாதம் பிடிப்பதால், வெற்றி பெற வேண்டிய திரைப்படங்கள் பல கூட தோல்வியடைவதுண்டு.

ஒருவேளை தனது கதை இல்லை என்பதால் இந்த இயக்குநர் இதனை தயாரிப்பாளரின் முன் கொண்டு செல்லாமல் போயிருந்தால், ஒரு நல்லத் திரைப்படம் மலையாளத் திரையுலகத்திற்குக் கிடைக்காமல் போயிருக்கும் வாய்ப்பு உண்டே. இத்திரைப்படத்தின் இயக்குநரை இந்த ஒரு விஷயத்திற்காகவே எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

தமிழகம் முழுவதும் பிரமிட் சாய்மிரா நிறுவனம் திரையிட்டுள்ள இத்திரைப்படம், தமிழகத்தில் பரவலாக மலையாள மக்களிடையேயும், சினிமா ஆர்வலர்களிடமும் திடீர் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

“கதா பறையும் போள்” திரைப்படத்தினைவிடவும் இத்திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது என்கிற உண்மையை நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.

பார்க்க விரும்பும் சென்னை வாழ் அன்பர்கள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் உட்லண்ட்ஸ் தியேட்டரிலும், சங்கம் தியேட்டரிலும் சென்று காணும்படி கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற மலையாளத் திரைப்படங்கள் அதிகப்பட்சம் 7 நாட்கள்தான் திரையிடப்படும்.

நல்லவைகளை காண்பதற்கு இன்றே முந்துங்கள்..!

குழப்பம் தீர்த்தால் 100 கமெண்ட்டுகள் இலவசம்!

வலையுலகப் பொறியாளர்களிடம் ஒரு அன்பு வேண்டுகோள்..

ஒரு சிறிய குழப்பம் எனது பதிவில் நடந்து வருகிறது.

குழப்பம்-1

எனது மெயிலுக்கு வரும் கமெண்ட்டுகளில் யார் அனுப்புவது என்கிற இடத்தில் ?????????????????????????? இப்படியே வருகிறது..

அந்த மெயிலை ஓப்பன் செய்து பார்த்தால் மட்டுமே யார் அனுப்பியது என்பது தெரிய வரும்..

இந்தக் கொடுமையைச் சீரமைக்க என்ன செய்ய வேண்டும்?

குழப்பம்-2

வர, வர மாமியார் கழுதையானாள் என்ற கதையாக ???????????????????? என்று கொஸ்டீன் மார்க்காக இருந்த அனுப்பனரின் இடத்தில் இப்போது மெகாத் தொடர் கதையாக இப்படி [&[[[[[#2953 ண ் ம& #3016 த ் த ம ி ழ ன ்] New comment on ந ா& #2985 ு ம ் உ ட ன ே ம ந ் த ி ர ி ய ா க ண ு ம ் -ப க ு த ி -1.]]]]எழுத்துக்கள்தான் வருகிறது.

முன்பெல்லாம் எழுதுபவரின் பெயர்தான் வரும். இப்போது ஏதோ மணப்பாறை முறுக்கு மாதிரி முறுக்கிக் கொண்டு இத்தனை நம்பர்கள் அணிவகுத்து வருவதன் காரணம் என்ன என்று தெரியவில்லை.

இதற்கானத் தீர்வை யாரேனும் வலையுலகப் பொறியாளர்கள் தெரிவித்து அதனை நான் சோதித்துப் பார்த்து அது சரியாக இருந்தால், அந்தப் பதிவர் கை காட்டும் பதிவிற்கு 100 கமெண்ட்டுகள் போடுவேன் என்பதனை எனது அப்பன் முருகப் பெருமான் மீது ஆணையாகச் சொல்கிறேன்.

சீக்கிரமா சொல்லுங்கப்பூ..

நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-8

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

ஆறாம் பாகம்

ஏழாம் பாகம்

படித்து விட்டீர்களா மக்களே..?

என்ன கொடுமை பாருங்கள்..!

தியாகிகளுக்கான பென்ஷன் தொகையைக் கூட்டிக் கொடுங்கள் என்று கேட்டால், அத்துறையில் அவ்வளவுதான் நிதி ஒதுக்கீடு என்று ரீல் விடுகிறார்கள்.

ரயில் பயணத்தில் ஊனமுற்றவர்களுக்கு பாஸ் கொடுங்கள் என்று கேட்டால் ரயில்வே நிர்வாகம் ஏற்கெனவே நிதி நெருக்கடியில் தள்ளாடுகிறது என்கிறார்கள்.

விவசாயிகளுக்கு மலிவு விலையில் உரம் கொடுங்கள் என்று கேட்டால் முடியாது. பட்ஜெட் கையைக் கடிக்குது என்கிறார்கள்.

பருத்திக்கு மான்ய விலை கொடுங்கள் என்றால் பட்ஜெட் காலைக் கடிக்குது என்கிறார்கள்.

கோதுமைக்கு நல்ல விலை கொடுங்கள் என்றால், துட்டு லேது என்கிறார்கள்.

ஆனால் நமது மாண்புமிகுக்கள் இப்படி நாடு, நாடாகப் பறந்து சொகுசு வாழ்க்கை வாழ்வதைப் பாருங்கள்.

இப்படி இவர்கள் பறப்பதற்காகவா நாம் இவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம்?

நாட்டு மக்களின் துயர் துடையுங்கள் என்று இவர்களைப் பணித்தால், இவர்கள் துயர் துடைக்க இவர்கள் பறப்பதைப் பார்க்கின்றபோது நமது ஜனநாயகத்தின் மீது கோபமான கோபம் வருகிறது.

இந்த மந்திரிகள் எந்த வேலைக்காகப் போயிருந்தாலும் சரி, செலவு என்னவோ நமது தலையில்தான். செலவுத் தொகையைக் காட்டிவிட்டு எப்படி செலவானது என்பதை மட்டும் சொல்ல மாட்டோம் என்பது எந்தவிதத்தில் நியாயம்..?

தெருமுனையில் கடை வைத்திருப்பவன் இதே போல் இன்கம்டாக்ஸ்காரர்களுக்கு தகவல் சொன்னால் சும்மா விடுவார்களா அவர்கள்..?

அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதி..? மக்களுக்கு ஒரு நீதியா..?

முடிவு செய்துவிட்டேன் மக்களே..

இனிமேல் இவர்களிடம் வேலை கேட்டு பிரயோசனமில்லை.. உதவித் தொகை கேட்டு பயனில்லை.. ஊக்கத் தொகை கேட்டு புண்ணியமில்லை.. கடன் உதவி கேட்டு மாள முடியவில்லை.. நேரடியாக அடிக்க வேண்டியதுதான்.. எனக்கு உடனே மந்திரி பதவி வேண்டும்.. என்ன செய்வீர்களோ.. ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாது.. எனக்கு உடனே மந்திரி பதவி வேண்டும்... வேறெதுவும் சொல்வதற்கில்லை..

அப்புறம் கடைசியாக,

இந்த மெகா தொடரின் முதல் பகுதியின் முதல் பாராவையும், இந்த கடைசி பகுதியின் கடைசி பாராவையும் மட்டுமே படித்த கழகக் கண்மணிகளுக்கு அன்பு முத்தங்கள்.(வேறென்ன செய்றது..?)

படிக்காமலேயே சும்மா மவுஸை உருட்டிக்கிட்டே வந்துட்டு எஸ்கேப்பாகப் பாக்குற ரத்தத்தின் ரத்தத்தங்களின் காலில் விழுந்து வணங்கி நானும் எஸ்கேப்பாகுறேன்.

கடைசிவரையிலும் படித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டி அனைத்தையும் படித்து முடித்திருக்கும் அன்பு உடன்பிறப்புகளுக்கு எனது கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்.

நன்றி

உண்மைத்தமிழன்

நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-7

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

ஆறாம் பாகம்

பிரதமர்களின் பயணச் செலவுகள்

கடந்த 1996-ம் ஆண்டு முதல் இதுவரை, வெளிநாட்டுப் பயணங்களுக்காக நமது நான்கு பிரதமர்கள் 371 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த சேட்டன் சவுத்ரி என்பவர் நமது பிரதமர்கள் மேற்கொண்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயணங்கள் குறித்தும், அதற்கான செலவுகள் குறித்தும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் கேட்டிருக்கிறார்.

முதலில் இத்தகவல்களைத் தர பிரதமர் அலுவலகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து சேட்டன் சவுத்ரி மேல்முறையிடு செய்துள்ளார்.

அந்த மனுவை விசாரித்த மேல் முறையீட்டு ஆணையம், சேட்டன் கேட்கும் தகவல்களைத் தரும்படி பிரதமர் அலுவலகத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய பொது தகவல் அதிகாரி இந்தத் தகவல்களை கொடுத்துள்ளார்.

அதிலும் 1996-ம் ஆண்டுக்கு முன் நமது பிரதமர்கள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அதற்கான செலவுகள் குறித்த விவரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டதாவும், 2000-ம் ஆண்டிற்குப் பின்பான தகவல்கள் மட்டுமே இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

1996-ம் ஆண்டு முதல் வாஜ்பாய், தேவகவுடா, குஜ்ரால், மன்மோகன்சிங் ஆகிய நான்கு பேரும் பிரதமர்களாக இருந்துள்ளனர். இவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மட்டும் 371 கோடியே 41 லட்சத்து 6538 ரூபாய் செலவாகியுள்ளது.

அதே நேரத்தில் 2000-ம் ஆண்டுக்குப் பின் பிரதமர்கள் மேற்கொண்ட உள்நாட்டுப் பயணங்களுக்கு 27 லட்சத்து 38 ஆயிரத்து 710 ரூபாய் செலவாகியுள்ளது. இது வாஜ்பாய் மற்றும் மன்மோகன்சிங் மேற்கொண்ட பயணங்களுக்கானது.

வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், 1999 முதல் 2003-ம் ஆண்டுவரை வெளிநாட்டுப் பயணங்களுக்காக 185.6 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டில் மட்டும் பிரதமர் மன்மோகன்சிங்கின் வெளிநாட்டுப் பயணத்திற்காக ரூபாய் 67 கோடி செலவாகியுள்ளது.

நமது மனதிருப்திக்காக ஒரு ‘அக்கரை’ கதை

கடந்த ஜனவரி மாதம் பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார் பாகிஸ்தானின் முன்னால் ஜனாதிபதி ஜெனரல் முஷாரப்.

சுற்றுப்பயணத்தின் முடிவில் மூன்று நாட்கள் லண்டன், ஹைட்பார்க் பகுதியில் கட்டணம் அதிகம் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்திருக்கிறார் முஷாரப். மொத்த ஓட்டல் பில் மட்டும் ஜஸ்ட் 63 லட்சம் ரூபாய்.

(தொடரும்)

எட்டாம் பாகம்

நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-6

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

முடிவுரை

"தகவல் அறியும் உரிமைச் சட்டம் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இந்தத் தகவல்களைப் பெற்றிருக்கவே முடியாது.

ஐக்கிய முன்னேற்ற கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து வெளிநாடு சென்று வந்த அமைச்சர்கள், அவர்கள் சென்ற நாடுகள், ஆன செலவு ஆகிய விவரங்களைக் கேட்டு ஒரு RDI மனுவை போன வருடம் செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளது இந்தியா டுடே பத்திரிகை.

செலவு பற்றிய விவரங்களைத் தவிர மற்ற எல்லாத் தகவல்களையும் கொடுத்தது பிரதமர் அலுவலகம். “வழங்கப்படும் தகவல்களில் பயணங்களின் செலவு விவரங்கள் இடம் பெறவில்லை. இந்த அலுவலகம் அந்த விவரங்களை வைத்துக் கொள்ளவில்லை. சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்தும், அமைச்சகங்களிடமிருந்தும் அந்தத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்..” என்று பதில் அளித்திருந்தது பிரதமர் அலுவலகம்.

உடனடியாக ஒவ்வொரு அமைச்சகத்திடமும் அந்த அமைச்சகத்தின் கேபினட் அமைச்சர், இணை அமைச்சர்கள் சென்ற வெளிநாட்டுப் பயணத்தின் விவரங்களையும் உடன் சென்றவர்கள் பற்றிய விவரங்களையும் கேட்டு மனு செய்தது இந்தியா டுடே.

கபில்சிபலின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அமைச்சருக்கும் உடன் சென்ற அதிகாரிகளுக்கும் ஆன செலவுக் கணக்கைத் தந்தது. ஆனால் விமானக் கட்டணம் பற்றி குறிப்பிடவில்லை.

பல அமைச்சகங்கள் நழுவலாகவே பதிலளித்துள்ளன. “சம்பந்தப்பட்ட பொதுத்துறை அல்லது கேபினட் செயலகத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்றபடியே அமைச்சரின் விஜயத்திற்கான செலவுகள் அமைந்தன..” என்று குறிப்பிட்டிருந்தது எ·கு அமைச்சகம்.

“இங்கே குறிப்பிட்டிருக்கும் செலவு மின்சாரத் துறை அமைச்சரின் விமானக் கட்டணத்திற்கு மட்டுமானது. அமைச்சரின் தினப்படி, ஹோட்டல் செலவு, போக்குவரத்துச் செலவு ஆகியவை குறித்த விவரங்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களே கவனித்துக் கொண்டன. பிறகு அது பற்றிய கணக்குள் செலவு மற்றும் கணக்கு அலுவலகத்திற்கும் கேபினட் செயலகத்திற்கும் அனுப்பப்பட்டன..” என மின்சாரத் துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் விரிவாகவே பதிலளித்திருந்தாலும், செலவு பற்றிய கேள்விக்கு, “இவர்களுக்கு செலவு பி.ஏ.ஓ, கேபினட் செயலகங்களின் பயணங்களுக்குப் பிறகு செலவு குறித்த விவரங்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. அங்கிருந்தே நீங்கள் அதனைப் பெற்றுக் கொள்ளலாம்..” என்று பதிலளித்திருக்கிறது.

அதே போல் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான அமைச்சகமும் செலவு தவிர்த்து பிற எல்லாத் தகவல்களையும் அளித்திருக்கிறது.

கடைசியாக அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த செலவு விவரங்களைக் கேட்டு கேபினட் செயலகத்தை அணுகியது இந்தியா டுடே.

“மத்திய கேபினட் அமைச்சர்களின் சம்பளங்கள், படிகள் உள்ளிட்ட செலவுகளைப் பற்றிய தகவல்களுக்கும் கேபினட் செயலகத்திற்கும் சம்பந்தமில்லை. இவையெல்லாம் பில்கள் சம்பந்தப்பட்ட அமைச்சகம், கேபினட் விவகாரங்களுக்கான பி.ஏ.ஓ. இடையில் தீர்த்துக் கொள்ளப்படுகின்றன..” என்று பதிலளித்துள்ளது கேபினட் செயலகம்.

ரயில்வே, தொழிலாளர், சுற்றுலா, வெளியுறவு, உள்நாட்டு விமானப் போக்குவரத்து, விவசாயம், நகர்ப்புற மேம்பாடு, நிதி, நீராதாரங்கள் போன்ற அமைச்சகங்கள் முழுத் தகவல்களையும் கொடுத்துள்ளன.

பல சிக்கலான நடைமுறைகளின் காரணமாக எவ்வளவு செலவாகிறது என்பதை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அதாவது ஒரு அலுவல் ரீதியான பயணத்திற்கு எந்த அளவுக்குச் செலவாகிறது என்பது இன்னமும் மர்மமான விஷயம்தான்.

அதிகாரப்பூர்வமாக வெளிநாடு செல்ல பிரதமர் அலுவலகம் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் நிலையிலும் அமைச்சர்கள் தங்கள் பயணத்தில் பொதுமக்களின் வரிப்பணத்தை இந்த அளவுக்கு செலவழிப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

பிரதமர் அலுவலகம் மட்டும் பல பயணங்களைத் தடுத்திருக்காவிட்டால், இந்தப் பட்டியல் இன்னும் பெரிதாகியிருக்கும். கூட்டணிக் கட்சிகளிலிருந்து வேண்டுகோள் வந்தால், பிரதமர் அலுவலகத்தால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. ஆனால் அதிகம் பறந்திருந்தது காங்கிரஸ் பெருந்தலைகள்தான்.

'முன்னகர்ந்து செல்லும் அரசு' என்ற வார்த்தைப் பிரயோகத்தைக் கண்டுபிடித்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி. இப்போது அவர் உயிரோடு இருந்து ஐ.மு.கூட்டணி அரசு வெளிநாட்டுப் பயணங்களில் நகர்ந்து சென்றிருக்கும் தூரத்தைப் பார்த்திருந்தால் மயங்கியே விழுந்திருப்பார்."

நன்றி : இந்தியா டுடே, பிப்ரவரி 17, 2008

(தொடரும்)

ஏழாம் பாகம்

எட்டாம் பாகம்

நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-5

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

அமைச்சர்கள் அனுபவிக்கும் சலுகைகள்

விதிகள் என்ன?

கேபினட் அமைச்சர் வெளிநாடு செல்வதாக இருந்தால், அது சொந்தப் பயணமாக இருந்தாலும் சரி, அலுவலகப் பயணமாக இருந்தாலும் சரி.. வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும்.

அங்கே ஒப்புதல் பெற்ற பின், பிரதமரின் அனுமதிக்காக கோப்பு அனுப்பப்படும். குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரின் பயணங்களுக்குத்தான் அனுமதி தேவையில்லை.

செலவு

அமைச்சர்கள் வெளிநாட்டிற்குச் செல்லும்போதும் அங்கிருக்கும் இந்தியத் தூதரகங்களே கட்டணங்களைச் செலுத்திவிட்டு பிறகு சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிடமிருந்து தொகையைப் பெற்றுக் கொள்ளும்.

சலுகைகள்

ஒரு நாளைக்கு ரூ.80,000 முதல் 1 லட்சம் வாடகையுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் ஜூனியர் அல்லது எக்சிகியூட்டிவ் சூட்களில் தங்கலாம். நியூயார்க், பாரீஸ், லண்டன் ஆகிய நகங்களில் சுற்றுலா சீசன் உச்சத்தில் இருக்கும்போது சாதாரண சூட்களில்தான் தங்க வேண்டும். ஆனால் அமைச்சர்கள் சில சமயங்களில் ரூ.2,40,000 வாடகையுள்ள பிரசிடென்ஷியல் சூட்களில்கூட தங்குகிறார்கள்.

ஒரு வெளியுறவுத்துறை அமைச்சர் பாரீசிற்குச் சென்றால் அங்கிருக்கும் பொட்டிக் ஹோட்டல்களில்தான் தங்குவாராம். வேறு ஹோட்டலே கிடைக்கவில்லை என்று அங்கிருக்கும் இந்தியத் தூதரகம் இதைச் சமாளிக்கும். இங்கே ஒரு நாள் தங்குவதற்கு வாடகை ரூ.1,14,000.

ஒரு மத்திய அமைச்சர் லண்டனுக்குச் சென்றால் அங்கிருக்கும் தோர்செஸ்டர் ஹோட்டலில் லக்ஸ¥ரி சூட்டில்தான் தங்குவார். இங்கே ஒரு நாள் வாடகை 1,31,000. தனி சேகவர், டிப்ஸ் ஆகியவற்றுக்குத் தனியாக ரூ.15,500 வரை ஆகும்.

அமைச்சர்கள் வெளிநாடு சென்றால் தினப்படியாக ரூபாய் 3000 கிடைக்கும்.

போக்குவரத்திற்கு கார்களை அங்கிருக்கும் தூதரகமே வாடகைக்கு எடுத்துக் கொடுத்துவிடும். அல்லது அழைப்பு விடுத்திருக்கும் நாடே இந்த வசதியைச் செய்து கொடுக்கும்.

மெர்சிடிஸ் ஈ கிளாஸ் கார் எனில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,600-ம், மெர்சிடிஸ் எஸ் கிளாஸ் கார் எனில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.4000-ம் ஆகும்.

உணவு தூதரகத்தாலோ, அழைப்பு விடுத்தாவர்களாலோ அவை வழங்கப்படும்.

வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கிறோம் என்ற பெயரில்தான் அமைச்சர்கள் இந்த சொகுசுகளை அனுபவிக்கிறார்கள். இதில் செலவழிக்க உச்சபட்ச வரம்பு ஏதும் இல்லை.

ஆனால் இதற்காகும் செலவு சில சமயம் திகைக்க வைக்கிறது. அழைப்பு விடுக்கும் அரசாங்கங்களே பெரும்பாலும் தங்கள் அரசு விருந்தினர் விடுதிகளை வழங்கும் என்றாலும், நம் அமைச்சர்கள் இம்மாதிரி ஹோட்டல்களில் தங்குவதையே விரும்புகிறார்கள்.

(தொடரும்)


ஆறாம் பாகம்

ஏழாம் பாகம்

எட்டாம் பாகம்

நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-4

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

வயிறு எரிய வைக்கும் புள்ளி விவரங்கள்

E.அகமது (வெளியுறவுத் துறை இணை அமைசசர்

அமைச்சராக இருந்த நாட்கள் 1,287
மொத்தப் பயணங்கள் 79
அலுவலர் ரீதியானது 76
சொந்தப் பயணம் 3
வெளிநாட்டில் இருந்த நாட்கள் 232
அலுவல் ரீதியானது 220
சொந்தப் பயணம் 12
பயண தூரம் 6,13,277 கி.மீ.
அரசு செல்வு 1.37 கோடி

வயலார் ரவி (வெளிநாடு வாழ் இந்தியர்கள் துறை)

பயணங்கள் 18
பயண தூரம் 2,83,036 கி.மீ.
செலவு 1.14 கோடி

மணி ஷங்கர் அய்யர் (பஞ்சாயத்துராஜ் அமைச்சர்)

பயணங்கள் 17
பயண தூரம் 2,09,239 கி.மீ.
செலவு 40 லட்சம் (சில கணக்குகள் இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை)

அ.ராசா (தொலைத்தொடர்பு, தொழில் நுட்பம்)

பயணங்கள் 12
பயண தூரம் 1,89,994 கி.மீ.
செலவு தகவல் இல்லை.

விலாஸ் முட்டெம்வர் (மரபுசாரா எரிசக்தி இணையமைச்சர்)

பயணங்கள் 9
பயண தூரம் 1,56,025 கி.மீ.
செலவு 87.4 லட்சம்

சைபுதீன் சோஸ் (நீர் ஆதாரங்கள் துறை அமைச்சர்)

பயணங்கள் 9
பயண தூரம் 65,704 கி.மீ.
செலவு 14.2 லட்சம்

பிருத்விராஜ் செளகான் (பிரதமர் அலுவலக இணையமைச்சர்)

பயணங்கள் 9
பயண தூரம் 92,400 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

பனபகா லட்சுமி (சுகாதாரத்துறை இணையமைச்சர்)

பயணங்கள் 8
பயண தூரம் 1,23,811 கி.மீ.
செலவு 28.6 லட்சம்

காந்திலால் புரியா (விவசாயம், நுகர்வோர் விவகார இணையமைச்சர்)

பயணங்கள் 8
பயண தூரம் 1,18,769 கி.மீ.
செலவு 80.8 லட்சம்

சந்தோஷம் மோகன்தேவ் (கனரக தொழில்கள் துறை)

பயணங்கள் 8
பயண தூரம் 1,03,645 கி.மீ.
செலவு 52 லட்சம்.

சங்கர்சிங் வகேலா (ஜவுளித்துறை)

பயணங்கள் 8
பயண தூரம் 1,37,494 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

பிரேம்சந்த் குப்தா (கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சர்)

பயணங்கள் 7
பயண தூரம் 57,388 கீ.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

அம்பிகா சோனி (சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை)

வெளிநாட்டில் இருந்த நாட்கள் 23
இதில் 11 நாட்கள் எங்கேயிருந்தார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

சரத்பவார் (விவசாயம், நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகம்)

அமைச்சராக இருந்த நாட்கள் 1287
மொத்தப் பயணங்கள் 27
அலுவல் ரீதியானவை 7
கிரிக்கெட் வாரியத்திற்காக 17
சொந்தப் பயணம் 3
வெளிநாட்டில் இருந்த நாட்கள் 97
பயண தூரம் 2,62,592 கி.மீ.
செலவு 1.03 கோடி

காந்திசிங் (கனரக தொழில்துறை இணையமைச்சர்)

பயணங்கள் 6
பயண தூரம் 54,756 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

ராம்விலாஸ் பாஸ்வான் (ரசாயனம், உரங்கள்)

பயணங்கள் 5
பயண தூரம் 58,640 கி.மீ.
செலவு 25.3 லட்சம்.

முரளி தியோரா (பெட்ரோலியம், இயற்கை எரிவாயு)

பயணங்கள் 5
பயண தூரம் 41,242 கி.மீ.
செலவு 12.6 லட்சம்

பி.கே.ஹந்திக் (ரசாயனம், உரங்கள் இணையமைச்சர்)

பயணங்கள் 5
பயண தூரம் 51,819 கி.மீ.
செலவு 69,000

அகிலேஷ் பிரசாத் சிங் (விவசாயம், நுகர்வோர் இணையமைச்சர்)

பயணங்கள் 5
பயண தூரம் 79,663 கி.மீ.
செலவு 30.5 லட்சம்

பிரணாப் முகர்ஜி (வெளியுறவுத் துறை)

பயணங்கள் 33
வெளிநாட்டில் இருந்த நாட்கள் 115
பயண தூரம் 3,09,145 கி.மீ.
செலவு 86 லட்சம்

சூர்யகாந்தா பாட்டீல் (கிராமப்புற மேம்பாடு)

பயணங்கள் 3
பயண தூரம் 30,656 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

சிவ்ராஜ் பாட்டீல் (உள்துறை)

பயணங்கள் 4
பயண தூரம் 24,736 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

டி.ஆர்.பாலு (கப்பல், சாலை, போக்குவரத்துத் துறை)

பயணங்கள் 4
பயண தூரம் 73,429 கி.மீ.
செலவு 14.1 லட்சம்

மஹாவீர் பிரசாத் (சிறிய நடுத்தரத் தொழில் துறை)

பயணங்கள் 4
பயண தூரம் 60,706 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

ரகுவன்ஷ் பி.சிங் (கிராமப்புற மேம்பாட்டுத் துறை)

பயணங்கள் 4
பயண தூரம் 42,078 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

தின்ஷா ஜே.படேல் (பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு)

பயணங்கள் 4
பயண தூரம் 93,512 கி.மீ.
செலவு 15.7 லட்சம்

எஸ்.ஜெய்பால் ரெட்டி (நகர்ப்புற மேம்பாட்டுத் துறை)

பயணங்கள் 4
பயண தூரம் 59,180
செலவு 43 லட்சம்.

எம்.எம்.பல்லம் ராஜூ (பாதுகாப்புத் துறை இணையமைச்சர்)

பயணங்கள் 4
பயண தூரம் 58,630 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

எச்.ஆர்.பரத்வாஜ் (சட்டம், நீதித்துறை)

பயணங்கள் 3
பயண தூரம் 47,189
செலவு 20 லட்சம்.

சிஸ்ராம் ஓலா (சுரங்கத்துறை)

பயணங்கள் 3
பயண தூரம் 57,486 கி.மீ.
செலவு 1.17 கோடி

ஆர்.வேலு (ரயில்வே துறை இணையமைச்சர்)

பயணங்கள் 3
பயண தூரம் 54,529
செலவு 11.2 லட்சம்

ப.சிதம்பரம் (நிதித்துறை)

அமைச்சராக இருந்த நாட்கள் 1287
மொத்த பயணங்கள் 24
அலுவல் ரீதியாக 24
பயண தூரம் 2,60,860 கி.மீ.
செலவு 1.45 கோடி

அகிலேஷ்தாஸ் (எ·கு துறை இணையமைச்சர்)

பயணங்கள் 2
பயண தூரம் 31,266 கி.மீ.
செலவு இல்லை.

லாலு பிரசாத் யாதவ் (ரயில்வே துறை)

பயணங்கள் 1
பயண தூரம் 15,826 கி.மீ.
செலவு 40 லட்சம்

சந்திரசேகர் சாஹ (கிராமப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சர்)

பயணங்கள் 1
பயண தூரம் 12,712 கி.மீ.
செலவு 1.18 கோடி

ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் (உள்துறை இணையமைச்சர்)

பயணங்கள் 3
பயண தூரம் 18,481 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

பவன்குமார் பன்சால் (சட்டம், நீதித்துறை)

பயணங்கள் 2
பயண தூரம் 25,528 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

தாசரி நாராயணராவ் (நிலக்கரித் துறை இணையமைச்சர்)

பயணங்கள் 2
பயண தூரம் 32,382 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

நரன்பாய் ரத்வா (ரயில்வே துறை இணையமைச்சர்)

பயணங்கள் 2
பயண தூரம் 36,955 கி.மீ.
செலவு 20.3 லட்சம்

ஏ.கே.ஆன்டனி (பாதுகாப்புத்துறை)

பயணங்கள் 2
பயண தூரம் 17,004 கி.மீ.

ஷகீல் அகமது (தொலைத் தொடர்பு)

பயணங்கள் 2
பயண தூரம் 15,388 கி.மீ.
செலவு 2.5 லட்சம்

மீராகுமார் (சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை)

பயணங்கள் 3
பயண தூரம் 32,296 கி.மீ.
செலவு 8.1 லட்சம்

ராவ்இந்தர்ஜித் சிங்

பயணங்கள் 26
அலுவல் ரீதியாக 23
வெளிநாட்டில் இருந்த நாட்கள் 130
பயண தூரம் 4,99,438 கி.மீ.
செலவு 33.3 லட்சம்

ரேணுகா சவுத்ரி (பெண்கள், குழந்தைகள், மேம்பாட்டுத் துறை)

மொத்த பயணங்கள் 25
அலுவல் ரீதியாக 22
சொந்தப் பயணம் 3
வெளிநாட்டில் இருந்த நாட்கள் 112
அலுவல் ரீதியாக 101
சொந்தப் பயணம் 11
பயண தூரம் 3,17,031 கி.மீ.
செலவு 56 லட்சம்.

எஸ்.ரகுபதி (சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை)

பயணங்கள் 7
பயண தூரம் 70,416 கி.மீ.
செலவு 67,000 (ஒரு பயணத்துக்கு மட்டும்)

சுஷில்குமார் ஷிண்டே (மின்சாரத் துறை)

பயணங்கள் 6
பயண தூரம் 1,47,297 கி.மீ.
செலவு 29.2 லட்சம்

சுரேஷ் பசெளரி (தொழிலாளர் பொதுமக்கள் துறை இணையமைச்சர்)

பயணங்கள் 6
பயண தூரம் 85,932 கி.மீ.
செலவு 28.2 லட்சம்

ஆனந்த் ஷர்மா (வெளியுறவுத் துறை இணையமைச்சர்)

பயணங்கள் 30
பயண தூரம் 5,30,511 கி.மீ.
செலவு 1.33 கோடி

பிரபுல் பட்டேல் (விமானப் போக்குவரத்து)

மொத்த பயணங்கள் 41
அலுவல் ரீதியாக 16
சொந்தப் பயணம் 25
வெளிநாட்டில் இருந்த நாட்கள் 182
அலுவல் ரீதியாக 57
சொந்தப் பயணம் 125
பயண தூரம் 5,12,351 கி.மீ.
செலவு 66.5 லட்சம்

கபில்சிபல் (அறிவியல், தொழில் நுட்பம்)

அமைச்சராக இருந்த நாட்கள் 1,287
மொத்தப் பயணங்கள் 24
அலுவல் ரீதியானவை 23
சொந்தப் பயணம் 1
வெளிநாட்டில் இருந்த நாட்கள் 113
அலுவல் ரீதியானவை 106 நாட்கள்
சொந்தப் பயணம் 7 நாட்கள்
பயண தூரம் 3,97,813 கி.மீ.
செலவு 11.7 லட்சம்
அமெரிக்காவிற்கு மட்டும் 6 முறை சென்றிருக்கிறார்.
மலேசியா, சீன பயணத்தில் சீனாவில் மட்டும் 18 நாட்கள் குடியிருந்திருக்கிறார்.

பி.ஆர். கிந்தியா (பழங்குடியினர் விவகாரத் துறை)

பயணங்கள் 1
பயண தூரம் 11,846 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

கே.எச்.முனியப்பா (கப்பல், சாலை போக்குவரத்துத் துறை)

பயணங்கள் 1
பயண தூரம் 10,540 கி.மீ.
செலவு 1.4 லட்சம்

ஜி.கே.வாசன் (புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம்)

பயணங்கள் 1
பயண தூரம் 9,387 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

கே.வேங்கடபதி (சட்டம், நீதித்துறை இணையமைச்சர்)

பயணங்கள் 1
பயண தூரம் 11,572 கி.மீ.
செலவு பற்றித் தகவல் இல்லை.

எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (நிதித்துறை இணையமைச்சர்)

பயணங்கள் 1
பயண தூரம் 1,370 கி.மீ.
செலவு 2.7 லட்சம்

பிரியரஞ்சன்தாஸ்முன்ஷி (தகவல் மற்றும் ஒளிபரப்பு)

அலுவல் விஷயமாக வெளிநாட்டில் இருந்தது 20 நாட்கள்
சொந்தப் பயணம் 38 நாட்கள்

இதுவரையிலும் வெளிநாட்டிற்குச் செல்லாத அமைச்சர்கள்

எச்.எம். அம்பரீஷ் (தகவல் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர்)
ஜே.பி.என். யாதவ் (நீராதாரங்கள் துறை இணையமைச்சர்)
எம்.வி.ராஜசேகரன் (திட்டத் துறை இணையமைச்சர்)
மாணிக்ராவ் கவிட் (உள்துறை இணையமைச்சர்)
சுப்புலட்சுமி ஜெகதீசன் (சமூக நீதி, மேம்பாடு)
தஸ்லீமுதீன் (விவசாயம், நுகர்வோர் விவகாரங்கள்)
வி.ராதிகா செல்வி (உள்துறை இணையமைச்சர்)

(தொடரும்)

ஐந்தாம் பாகம்

ஆறாம் பாகம்

ஏழாம் பாகம்

எட்டாம் பாகம்

நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-3

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

படையெடுத்த புத்திசாலி மந்திரிகள்

வெளிநாட்டிற்குச் செல்லும் சலுகையை அதிகம் பயன்படுத்தியவர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத்துதான்.. கிட்டத்தட்ட சாதனையே படைத்திருக்கிறார்.

72 முறை பயணம் மேற்கொண்டு 424 நாட்கள் வெளிநாட்டில் கழித்திருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட 14 மாதங்கள்.. போன வருடம் நவம்பர் 30-ம் தேதிவரை சுமார் 10,08,162 கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறார். இவரது பயணங்களுக்காக அரசு ரூபாய் 1.81 கோடியை செலவழித்திருக்கிறது.

வெளியுறவுத் துறை அமைச்சரைவிட இவரே மிகவும் பளிச்சென்று வெளியில் தெரியக்கூடிய நபராக இருக்கிறார். ப்ரஸ்ஸல்ஸ், பாரீஸ், நியூயார்க், பாங்காக், கோலாலாம்பூர், லண்டன் ஆகிய நகரங்களுக்குத்தான் இவர் அடிக்கடி சென்றிருக்கிறார்.

இவரோடு ஒப்பிட்டால் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மிகக் குறைவான நாட்களே வெளிநாட்டில் இருந்திருக்கிறார். அதாவது 118 நாட்கள் மட்டுமே. இவரது பயணத்திற்கு அரசு செலவழித்துள்ள தொகை ரூ.1.45 கோடி.

உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பிர·புல் பட்டேல் 41 முறை வெளிநாடு சென்றிருக்கிறார். அவற்றில் 16 தடவைகளே அதிகாரப்பூர்வமானவை. அமெரிக்காவுக்கு 6 முறையும், பிரிட்டனுக்கு 5 முறையும் சென்றிருக்கிறார்.

இவர் சொந்த விஷயமாக லண்டன், பாரீஸ், நியூயார்க், சிங்கப்பூர், கோலாலம்பூர், பாங்காக், துபாய் போன்ற நகரங்களுக்குச் சென்றிருக்கிறார்.
அமைச்சராக வெளிநாடு சென்ற நாட்களைவிட, தன் சொந்த விஷயமாக வெளிநாடு சென்ற நாட்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 57 நாட்கள் அமைச்சர் என்ற முறையிலும், 125 நாட்கள் சொந்த விஷயமாகவும் சென்று வந்துள்ளார் இவர்.

பத்மி அமைச்சர் என்கிற முறையில் 14 நாட்கள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். ஆனால் சொந்த விஷயமாக 181 நாட்கள் வெளிநாட்டில் சுற்றியிருக்கிறார். மொத்தமாக 2,36,005 கி.மீ. பயணம் செய்திருக்கிறார்.

பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி அமைச்சர் என்கின்ற முறையில் 20 நாட்களும், சொந்த விஷயமாக 38 நாட்களும் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். 1,59,676 கி.மீ. தூரம் பயணம் செய்திருக்கும் இவருடைய அலுவல் ரீதியான பயணங்களுக்கு அரசு 17 லட்சம் செலவழித்திருக்கிறது.

வெளியுறவுத் துறையின் இணையமைச்சர் ஈ.அகமது, தன் துறையின் கேபினட் அமைச்சரான பிரணாப் முகர்ஜியைவிட அதிக நாட்கள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். மொத்தம் 232 நாட்கள். இவரது பயணத்திற்காக அரசு ரூ.1.37 கோடியைச் செலவழித்திருக்கிறதாம். 22 முறை ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றிருக்கும் அகமது, அங்கே 48 நாட்கள் தங்கியிருந்திருக்கிறார்.

அலுவல் ரீதியான பயணங்களைவிட சொந்த விஷயமாக அதிகம் பயணம் செய்தவர்களில் என்.டி.ராமராவின் மகள் புரந்தேஸ்வரியும் ஒருவர். மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சரான இவர், 670 நாட்கள் அமைச்சராக இருந்திருக்கிறார். இந்த நாட்களில் 8 முறை வெளிநாட்டிற்குச் சென்று வந்திருக்கிறார். மொத்தமாக 2 மாதங்கள் வெளிநாட்டில் கழித்திருக்கிறார் இவர்.

அந்தத் துறையின் கேபினட் அமைச்சரான அர்ஜூன்சிங் ஒன்பது வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களை வெளிநாட்டில் கழித்திருக்கிறார்.

சரத்பவார் 97 நாட்கள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். அவற்றில் 49 நாட்கள் BCCI வேலையாகவும், 37 நாட்கள் விவசாய அமைச்சகம் சார்பாகவும் வெளிநாட்டில் இருந்திருக்கிறார்.

வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஆனந்த் ஷர்மா 30 வெளிநாட்டுப் பயணங்களில் 114 நாட்கள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். இவருக்கான மொத்தச் செலவு ரூ.1.33 கோடி.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி தனது 18 வெளிநாட்டுப் பயணங்களில் 125 நாட்களை வெளிநாட்டில் கழித்திருக்கிறார்.

சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகங்களின் சார்பில் 112 நாட்களை வெளிநாட்டில் கழித்திருக்கிறார் ரேணுகா சவுத்ரி.

சுற்றுலா துறையிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு மாறிய பின் கம்போடியா, சிகாகோ, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சொந்தப் பயணமாகச் சென்று வந்திருக்கிறார் ரேணுகா.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் என்ற முறையில் ஆஸ்கர் பெர்னாண்டஸ் சுமார் 46 நாட்களை வெளிநாட்டில் கழித்திருக்கிறார். இதற்கு 2.26 கோடி ரூபாயை அரசு செலவழித்திருக்கிறது.
புள்ளியியல் அமைச்சராகத்தான் ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜெனிவா என அதிக நாடுகளுக்குச் சென்றிருக்கிறார் ஆஸ்கர் ·பெர்னாண்டஸ்.

அமைச்சரான 2 மாதங்களில் பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், இத்தாலி, கனடா நாடுகள் உள்பட 13 முறை வெளிநாடுகளுக்குப் படையெடுத்திருக்கிறார் சுபோத்காந்த் சகாய்.

தாய்லாந்து, கோலாலாம்பூர், ஜெனீவா, செஷல்ஸ், சிங்கப்பூர் என 117 நாட்கள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார் அன்புமணி. மொத்தம் 254 லட்சம் கி.மீ. பறந்திருக்கிறார்.

சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையின் இணையமைச்சரான நமோநாராயண் மீனா கனடா, பிரேசில், அமெரிக்கா, லண்டன், செக் குடியரசு ஆகிய நாடுகளுக்குப் பறந்திருக்கிறார்.

18 அதிகாரப்பூர்வ பயணங்களில் 55 நாட்கள் வெளிநாட்டில் கழித்திருக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உஸ்பெகிஸ்தானுக்கு 3 முறையும், பாங்காக்கிற்கு 2 முறையும் சென்றிருக்கிறார்.

670 நாட்கள் அமைச்சராக இருந்திருக்கும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சரான அஸ்வினிகுமார் கஜகிஸ்தான், எகிப்து, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் 75 நாட்கள் செலவழித்திருக்கிறார்.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சரான ஜெய்ராம் ரமேஷ், பகு, டாக்கா, மணிலா போன்ற யாரும் அதிகம் செல்லாத இடங்களுக்குச் சென்றிருக்கிறார். அமைச்சராக இருந்த 670 நாட்களில் 4 முறை பயணம் செய்திருக்கிறார்.

வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு இணையமைச்சர் குமாரி செல்ஜா, அம்மான், கனடா, பிரான்ஸ், எகிப்து உள்பட 14 பயணங்களில் 66 நாட்கள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார்.

மொத்தத்தில் ஐக்கிய முன்னணி கூட்டணி அரசின் அமைச்சர்கள் 78 பேரில் 71 பேர்கள்(பிரதமரைத் தவிர்த்து) 786 முறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார்கள். 1287 நாட்களில் 1.02 கோடி கி.மீ. தூரம் பறந்திருக்கிறார்கள்.

(தொடரும்)

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

ஆறாம் பாகம்

ஏழாம் பாகம்

எட்டாம் பாகம்

நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-2

முதல் பாகம்

இந்தியா டுடே, பிப்ரவரி 27, 2008

மத்திய அமைச்சர்களின் உள்நாட்டு, வெளிநாட்டு பயணங்களுக்கு நிதியமைச்சகம் நிதி ஒதுக்குகிறது. ஒதுக்கப்படும் நிதியைவிட ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மடங்கு செலவழித்து சாதனை நடத்தி வருகின்றனர் அமைச்சர்கள்.

சிதம்பரம் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் அமைச்சர்களின் பயணத்துக்காக ஒதுக்கீடு செய்தது 46 கோடி ரூபாய். ஆனால் செலவு செய்யப்பட்டதோ 80.2 கோடி.

கடந்த 2005-06ம் நிதியாண்டில் சிக்கன நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டன. அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணத்தை கட்டுப்படுத்தும் வகையில் 28 நிபந்தனைகளை மத்திய அரசு விதித்தது.

இருந்தாலும், அதற்கு முந்தைய ஆண்டைவிட சற்று கூடுதலாகவே அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ பயணத்துக்கு 47.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார் சிதம்பரம்.

முந்தைய ஆண்டைவிட 2006-06ம் நிதியாண்டில் அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ பயணச் செலவு குறைந்தாலும், ஒதுக்கீட்டைவிட அதிகரித்து ரூ.62.58 கோடி செலவு ஏற்பட்டது.

அதற்கு அடுத்தாண்டில் கட்டுப்பாடுகள் கட்டவிழ்ந்தன. சிதம்பரம் 45.18 கோடியை ஒதுக்கீடு செய்ய, செலவு ஏற்பட்டதோ ரூ.92.31 கோடி.

நிறைய செலவாகிறதே என்று 2007-08ம் நிதியாண்டில் தாராளமாக ரூ.75.5 கோடி ஒதுக்கீடு செய்தார் சிதம்பரம். இதனால் குஜாலான நமது அமைச்சர்கள் 150.43 கோடி செலவிட்டு அசத்திவிட்டனர்.

கடைசி நிதியாண்டில் தற்போதைய கூட்டணி அரசு இருக்கிறது. எனவே அமைச்சர்களின் எதிர்பார்ப்பை எல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் மட்டுமல்லாது, அவர்களே வாய் பிளக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் ரூ.160.76 கோடி ஒதுக்கி மனம் குளிர வைத்தள்ளார் சிதம்பரம்.

போன வருடம் நவம்பர் மாதம் 30-ம் தேதியோடு கணக்கிட்டால் 1,287 நாட்கள் ஆட்சியில் இருந்திருக்கிறது ஐக்கிய முன்னணி கூட்டணி அரசு. இந்த நாட்களில் இதன் அமைச்சர்கள் சுமார் 1 கோடி கிலோ மீட்டர்கள் பயணம் செய்திருக்கிறார்கள்.

சொந்தப் பயணங்களும் இதில் அடங்கும் என்றாலும் பெரும்பாலும் அதிகாரப்பூர்வ விஜயங்களும்தான். இவர்கள் பயணம் செய்த மொத்த தூரத்திற்கு பூமியையே 256 முறை சுற்றி வந்துவிடலாம்.

பதவியிலிருந்த போது வெளிநாடுகளுக்குப் பயணம் செய்த அமைச்சர்களில் 47 அமைச்சர்கள் 27 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்கள்.

78 அமைச்சர்களில் 12 அமைச்சர்களாவது தலா இரண்டரை கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறார்கள்.

அலுவலைவிட சொந்த விஷயமாக வெளிநாடுகளைச் சுற்றிய அமைச்சர்கள் பட்டியலும் அதிகமாகவே இருக்கிறது.

மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் எம்.ஏ.ஏ.·பத்மி, புரந்தேஸ்வரி, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ்முன்ஷி, சுரங்கத்துறை அமைச்சர் சிஸ்ராம் ஓலா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் தின்ஷா ஜே.படேல், கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரேம்சந்த்குப்தா, எ·கு துறை இணையமைச்சர் அகிலேஷ்தாஸ் ஆகியோர்தான் சொந்த செலவில் அதிகம் தடவை நாடு சுற்றிய மகாதேவர்கள்.

ஆனால் பல சமயங்களில் அமைச்சகங்களுக்கும், அந்த அமைச்சர்கள் மேற்கொண்ட பயணங்களுக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்து கொள்வது கடினமான காரியமாகவே இருக்கிறது.

வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கான இணையமைச்சர் ஏன் உஸ்பெகிஸ்தானுக்கு மூன்று முறை செல்ல வேண்டும்?

ஏன் அமைச்சர்கள் அடிக்கடி செர்பியா செல்கிறார்கள்?

அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்களில் செலவழிப்பதற்கென்று தனி விதிமுறைகள் இருந்தாலும் சிறந்த ஹோட்டல்களில் தங்கவும், விலையுயர்ந்த காரில் செல்லவும் விரும்புகிறார்கள். இதற்கு அங்கிருக்கும் தூதரகங்களை வற்புறுத்தவும் செய்கிறார்கள்.

பல அமைச்சர்கள் தங்கள் வேலைகளுக்குச் சம்பந்தமில்லாத இடங்களுக்கே செல்கிறார்கள். கிடைத்திருக்கும் தகவல்களின்படி 17 அமைச்சர்கள் தாய்லாந்திற்குச் சென்றிருக்கிறார்கள்.

14 அமைச்சர்கள் மலேசியாவிற்கு ஒரு முறையாவது சென்றிருக்கிறார்கள்.

தங்களுக்குப் போதுமான வேலை ஒதுக்கப்படவில்லை என்று மூக்கு சீந்திய இணையமைச்சர்கள்தான் அதிகம் வெளிநாடுகளில் டூர் அடித்திருக்கிறார்கள்.

மொத்தமுள்ள 40 இணையமைச்சர்களில் 33 பேர் 311 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களில் 7 பேர் வெளிநாட்டு மண்ணையே மிதிக்காத ஏமாளிகளாகவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனியா காந்தி பிறந்த நாடான இத்தாலிக்கு ஏகப்பட்ட அமைச்சர்கள் சொந்த முறையிலும், அதிகாரப்பூர்வமாகவும் சென்று வந்திருக்கிறார்கள்.

ரவிசங்கர்பிரசாத், சுஷில்குமார்ஷிண்டே, கமல்நாத், காந்திலால்புரியா, ஆர்.வேலு, சந்தோஷ்மோகன்தேவ், அம்பிகா சோனி, சுபோத்காந்த்சகாய், சங்கர்சிங்வகேலா, விலாஸ் முட்டெம்வர், எஸ்.ஜெய்பால்ரெட்டி, ஆஸ்கர் ·பெர்னாண்டஸ், பி.ஆர்.சிந்தியா, அகிலேஷ் பிரஸாத்சிங், அஸ்வினிகுமார், பிரகாஷ்ஜெய்ஸ்வால், ரேணுகா சவுத்ரி ஆகிய அமைச்சர்கள் இதில் அடக்கம்.

பிரணாப் முகர்ஜி, ஆனந்த் ஷர்மா, சரத்பவார்(விவசாயத் துறை அமைச்சகம் சார்பாக பறந்ததைவிட பி.சி.சி.ஐ சார்பாக பறந்ததுதான் அதிகம்), அன்புமணி ராமதாஸ், ரேணுகா செளத்ரி, கபில்சிபல், வயலார் ரவி, இந்தர்ஜித் சிங், அஸ்வினி குமார் ஆகியோர் அதிகம் பறந்த சில அமைச்சர்கள்.

(தொடரும்)

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

ஆறாம் பாகம்

ஏழாம் பாகம்

எட்டாம் பாகம்

நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-1

18-08-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எந்த நேரத்தில் ‘எனது ஆகாசக் கனவு’ என்கிற பதிவை எழுதினேன் என்று தெரியவில்லை. அந்தக் கனவை நினைத்து ஏக்கத்துடன் இருப்பவனின் மனதில் நெருப்பு கங்கை கொட்டிவிட்டது கடந்த பிப்ரவரி மாத 'இந்தியா டுடே'யில் வந்திருந்த ஒரு கவர் ஸ்டோரி.

கிடைத்த ஒரு நாள் விடுமுறையில் நான்கு மாதங்கள் கழித்து வீட்டைச் சுத்தம் செய்யலாம் என்று ஒழுங்கு செய்கையில், அந்த 'இந்தியா டுடே' பத்திரிகை கைக்குக் கிடைத்தது. சும்மா ஒரு புரட்டு புரட்டியவனின் கண்ணில்பட்டது இந்த கொடுமை..

படிக்கும்போதே வயிறு எரிய ஆரம்பித்தது. படித்து முடித்தவுடன் எத்தனை குடம் தண்ணீர் குடித்தாலும் தீ அணையாது போலிருந்தது. சரி.. வழக்கம்போல பதிவு போட்டாவது தீயை அணைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து வீட்டை ஒட்டடை அடிக்கும் வேலையை ஒத்திவைத்துவிட்டு டைப் செய்துவிட்டேன்..

கொஞ்சூண்டு நீளமாக இருந்ததினால் பிரித்துப் போட்டுள்ளேன். படித்துப் பார்த்து எனது வயிற்றெரிச்சலில் கொஞ்சத்தையாவது யாரேனும் பங்கு போட்டுக் கொள்ள முன் வந்தால், எனக்கு பெரும் உதவியாக இருக்கும்.. வயிறு எரியுதே? வேற என்ன செய்ய..?

(தொடரும்)

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

ஆறாம் பாகம்

ஏழாம் பாகம்

இறுதி பாகம்

எனது ஆகாசக் கனவு!

11-08-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



சிறு வயதுக் கனவுகள் பெரும்பாலும் நிச்சயம் பலித்துவிடும். அது ‘பொய் சொல்லாத பிரதி’ என்பார்கள். அதில் ஒரு பிரதி எனக்கு மட்டும் இன்றுவரை நிறைவேறாமலேயே இருக்கிறது.

நிலாச் சோறு ஊட்டி வளர்ந்த பிள்ளைகளில் நானும் ஒருவனாக இருந்தும், நிலாவைவிட ஆடிக்கொரு தடவை, அமாவாசைக்கு ஒரு முறையாக வீட்டின் மீது பறந்து செல்லும் விமானங்களின் மீதான கவனம் என்னை அதிக அளவில் ஈர்த்திருந்தது.

என்னுடைய வீட்டில் எனது அண்ணனுக்காக வாங்கிய விளையாட்டு பொருட்கள், எனது அக்காக்கள் இருவரிடமும் சென்று, விளையாடப்பட்டு நசுங்கி அடையாளமே தெரியாத நிலையில் இருந்தபோதும் மறக்காமல் என்னையும் வந்தடைந்தது. அந்தக் கூட்டத்தில் ஒரு சிறிய இறக்கைகளைக் கொண்ட சிவப்பு கலர் விமானம் ஒன்றும் இருந்தது.

என்னை மிகவும் கவர்ந்திருந்த அந்த விமானத்தின் ஸ்பெஷலே அதனுடைய சைஸ்தான். இரண்டு கரப்பான் பூச்சி சைஸில் மட்டுமே இருந்த அந்த விமானம் எனது இணை பிரியாத் தோழனாக இருந்து வந்தது. அந்த விமானத்தின் இரண்டு கருப்பு கலர் சக்கரங்களும் உடைந்து போய் மொன்னையாகத்தான் இருந்தது. ஆனாலும் அதனைத் தரையில் தேய், தேய் என்று தேய்த்து எடுத்துக் கொண்டிருந்தேன். இரவு தூங்கும்பொழுது பொம்மைக்கு பதிலாக அந்த விமானம் எனது கைகளுக்குள் சிறைபட்டுக் கிடந்தது.

கொஞ்சம் வளர்ந்ததும் விமானத்தின் மீதான ஆசையும், பரபரப்பும் அதிகமானது எனக்குள். முதன்முதலாக நான் விமானத்தைப் பார்த்தது எந்த வயதில், எந்தத் திரைப்படத்தில் என்பது தெரியாவிட்டாலும், சிவாஜி நடித்த ஒரு திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் செளகார் ஜானகி ஒரு குழந்தையுடன் விமானத்தில் இருந்து இறங்கி வருவார். திருச்சி விமான நிலையம் என்று நினைக்கிறேன். அப்போதுதான் விமானம் என்னும் பூதம் எனக்குள் ஒருவித கிளர்ச்சியை உண்டு பண்ணியதாக எனது மூளையின் நினைவகம் தெரிவிக்கிறது.

குழந்தைகளுக்கே உரித்தான குணத்தோடு வீடு திரும்பி எனது அப்பாவிடம் “அவ்ளோ பெரிசா இருந்துச்சு.. பெரிய படிக்கட்டு வைச்சு இறங்குனாங்கப்பா..” என்று என் அப்பாவிடம் திக்கித் திணறி சொன்னதையும், வீட்டு வாசப்படியில் அமர்ந்து நகம் வெட்டிக் கொண்டிருந்த எனது தந்தை அதனை அவ்வளவு சிரிப்போடு கேட்டதையும் இப்போதும் நினைத்துப் பார்க்க முடிகிறது.

அதன் பின் விமானம் பற்றிய பலவித செய்திகளும் என்னை பரவசமாக்கிக் கொண்டிருந்தன. பேப்பரில், புத்தகத்தில் என்று எந்த இடத்திலும் விமானம் என்ற பெயருடன் புகைப்படம் இருந்தால் அடுத்த நிமிடம் கிழித்துவிடுவேன். கிழித்தவைகளை பத்திரமாக வைப்பதற்காக எழுதி மக்கிப் போயிருந்த ஒரு நோட்டைத் தேர்ந்தெடுத்து அதனுள் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தேன்.

பள்ளியில் விமானம் பற்றி மாணவர்களுடன் பேசப் பேச அதன் உருவத்தைப் போலவே எனது கனவும் பிரம்மாண்டமாகிக் கொண்டே போனது.

வீட்டிற்குள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று வானத்தில் விமானத்தின் சப்தம் கேட்ட உடனேயே அப்படியே தாவிக் குதித்து வாசலுக்கு ஓடி வந்து தலையை 360 டிகிரியிலும் திருப்பி எங்கோ தூரத்தில் பின்புறத்தில் புகையைக் கக்கிக் கொண்டு செல்லும் எனது கனவைப் பார்த்துவிட்டுத்தான் வருவேன். பால்ய பருவத்தில் இதைவிட வேறு என்ன ஆச்சரியம் இருக்கக் கூடும்?

திண்டுக்கல் அருகே ஒரு முறை வெள்ளம் சூழ்ந்து நல்லமனார்கோட்டை என்னும் ஊர் அழிந்தபோது அதனைப் பார்ப்பதற்காக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். வந்தார்.

அன்றைய பத்திரிகைகளில் எம்.ஜி.ஆர் வருவதைப் பற்றி ஏற்கெனவே படித்திருந்த தெரு மக்களோடு நானும் எனது அம்மாவும் வீட்டு வாசலில் ஏறக்குறைய 4 மணி நேரம் காத்திருந்தது மறக்க முடியாதது.. மதியவாக்கில் 3 மணியிருக்கும்.. வானத்தில் சிறிய அளவு சப்தத்தோடு ஆரம்பித்த அந்த விமானத்தின் அழைப்பால் தெருவே பரபரத்தது.

எனது தெருவில் குடியிருந்த அ.தி.மு.க. கிளைச் செயலாளர் மூக்கம்மா என்பவர் தனது வீட்டு முன்பாக திரளாக பெண்கள் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். ஒட்டு மொத்தத் தாய்க்குலங்களின் கூட்டமும் விமானத்தைப் பார்த்து கைதட்டலைத் துவக்க..

விமானம் வீட்டு மேலேயே பறந்து வந்து கொண்டிருந்தது. கழுத்தை அங்கிட்டும், இங்கிட்டுமாகத் திருப்பி ஒட்டு மொத்தக் கூட்டமும் அந்த விமானம் தங்களது விழிப்பார்வையில் இருந்து மறையும்வரை பார்த்துக் கொண்டிருந்தது. இதுதான் அந்த கனவை நேரில் பார்த்த முதல் அனுபவம்.

“சின்னதா இருக்கு.. கருப்பா இருக்கு.. எங்க போகுது? திரும்பி வருமா? எப்ப வரும்?” என்றெல்லாம் நான் கேட்டுத் துளைத்த கேள்விகளுக்கு பொறுமையாகப் பதிலளித்த எனது அப்பாவின் நினைவு இப்போதும் எந்த ரூபத்தில் விமானத்தைப் பற்றி யோசிக்கும்போதும் உடன் துணைக்கு வரத்தான் செய்கிறது.

விமானம் படம் போட்ட நோட்டுக்கள்தான் வேண்டும் என்று சொல்லி ஆறாம் வகுப்பில் சேரும்போது எனது அண்ணனிடம் போட்ட சண்டையும், அந்த பாழாய்ப் போன கனவினால்தான் வந்தது.. என்னைச் சமாளிக்கவேண்டி எனது அண்ணன் லைப்ரரியில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து அதில் இருந்த ஒரு விமானப் புகைப்படத்தை கிழித்து எனது நோட்டில் ஒட்டி “இதை மட்டும் தமிழ் நோட்டுக்கு வைச்சுக்க..” என்று சொல்லிக் கொடுத்தது எனக்கு இன்றும் நினைவிற்கு வருகிறது.

தொடர்ந்து நான் பார்த்தத் திரைப்படங்களும் இந்த விமானம் என்னும் பூதத்தை பூதாகாரமாக்கிக் கொண்டே சென்றது. ‘நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படத்தில் கமலஹாசனும், ஜெயப்பிரதாவும் விமானத்திற்குள் பேசிக் கொள்ளும் காட்சியில் விமானம் என்றால் இப்படித்தான் இருக்குமோ என்ற எனது எண்ணத்தில் முதல் பிள்ளையார் சுழி போட்டது.

எனக்கு அப்போது புரியாத ஒரே விஷயம், விமானம் தரையிறங்குவதும், புறப்படுவதும்தான். இது விஷயமாக எனது சக மாணவர்களுடன் நான் நடத்திய சண்டைகளும், சச்சரவுகளும் இப்போதும் சிரிப்பை வரவழைக்கிறது.

விமானத்தின் சக்கரங்கள் விமானம் புறப்பட்டதும் உட்புறம் மறைந்து போகும் என்ற வாதத்தையே அப்போதைய எனது வகுப்பு மாணவர்கள் பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அது அப்படியேதான் இருக்கும் என்று ஒரு சிலரும், “இறங்கும்போது அந்தச் சக்கரத்தை வைச்சுத்தான் பிளைட்டு உருண்டு வருமாம்.. இல்லாட்டி நம்ம சைக்கிள் மாதிரி குப்புறடிச்சு விழுந்திரும். அதுனால சக்கரம் அப்படியே நீட்டிக்கிட்டுத்தான் இருக்கும்.” என்றெல்லாம் வாதங்கள் எழும்.

ஆனாலும் எனக்கு இதில் நம்பிக்கையில்லை. விமானத்தை பஸ் மாதிரி ஸ்டார்ட் செய்து ஓட்டுவார்கள்.. கொஞ்ச தூரம் ஓடியதும் ஒரு கம்பியை வைச்சு இழுப்பாங்க. அவுங்க இழுக்க, இழுக்க அது அப்படியே மேல உயர ஆரம்பிச்சிரும். அப்புறம் எந்தப் பக்கம் போகணுமோ அந்தப் பக்கமா ஸ்டியரிங்கை பிடிச்சு வளைப்பாங்க.. பிளைட் போக ஆரம்பிச்சிரும்..” என்றெல்லாம் என் தரப்பு வாதப்பிரதிவாதங்களைத் தயங்காமல் அள்ளி வீசியிருக்கிறேன்.

இதையெல்லாம் அப்போது வேறுவழியில்லாமல் பொறுமையாகக் கேட்டு, என்னையும் சமாளித்து, இன்றும் என்னுடன் நட்புடன் இருக்கும் நண்பன் ஜன்னல்கார முத்தையாவிற்கும் எனக்குமான இன்றைய நட்பில் சிரிப்பை வாரி வழங்குவது இதுதான்.

“அதெப்படி.. அப்படியே மேல எந்திரிச்சு ஸ்டியரிங்கை திருப்பி அப்படியே போயிருமாக்கும்.. மவனே.. இதையெல்லாம் இப்ப எழுதினேன்னு வைச்சுக்க, உன் பொழப்பு நாறிப் போயிரும்..” என்று அவ்வப்போது மிரட்டிக் கொண்டிருக்கிறான். சொல்லவிருப்பவன் சொல்வதற்குள் நாம் முந்திக் கொள்வது நல்லது என்பதால்தான் நான் இங்கே சொல்லிவிட்டேன்.

இப்படி, நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எனது விமானக் கனவு எனது எண்ணத்தை ஊத்திவிட்டுக் கொண்டிருக்க.. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த விடுமுறை நாளில் அந்த அதிசயம் ஒன்று நடந்தது.

அன்றைய காலைப் பொழுதொன்றில் எம்.எஸ்.பி. பள்ளியின் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஒரு விமானம் மிகத் தாழ்வாக பறந்து வந்து கொண்டிருந்தது.. ஆட்டத்தைக்கூடக் கவனிக்காமல் விமானத்தையே ஆச்சரியத்துடன் பார்த்து பிரமித்துப் போனேன்.

நண்பர்களிடம் மிட்டாய்க் கடையை முறைத்துப் பார்த்த கதையாகச் சொன்னபோது “ஆமடா.. இந்த ரோட்டுல கடைசில திருமலைக்கேணி பக்கத்துல ஒரு ஏர்போர்ட் இருக்காம்.. எங்கப்பா சொன்னாரு. அங்கதான் இந்த பிளைட் இறங்கப் போகுதாம்..” என்றார்கள்.

ஆஹா.. எனது நீண்ட நாள் கனவு நனவாகும்போல இருக்கே என்றெண்ணி அப்போதே எனது நண்பர்களுடன் பேசினேன். “விமானத்தை நேரில் போய் பார்க்க வேண்டும். வருகிறீர்களா..?” என்று.. சிலர் ஒத்துக் கொள்ள.. வாடகை சைக்கிளில் போய் வருவது என்று முடிவு செய்து கொண்டோம்.

வீட்டில் சொன்னால் விடமாட்டார்கள் என்பதால் “நாளைக்கு செமிபைனல் மேட்ச் இருக்கு..” என்று பொய் சொல்லிவிட்டு இரவெல்லாம் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தேன். அந்த விமானம் என்னும் பேய் எப்படியிருக்கும்? பெரிசா? சிறிசா? உள்ள விடுவானா? மாட்டானா? பக்கத்துல போய் பார்க்க முடியுமா? முடியாதா என்றெல்லாம் கனவு கண்ட நிலையில்தான் உறங்கிப் போனேன்.

விடிந்தது. YMR-பட்டிக்கு வந்து அங்கிருந்த எங்களது சந்திப்பு சென்டரான தாஸ் டீக்கடையில் ஆளுக்கொரு டீ அடித்துவிட்டு அருகில் இருந்த சண்முகம் சைக்கிள் கடையில் சைக்கிளையும் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

மொத்தம் எட்டு பேர். எட்டு சைக்கிள்கள்.. வண்டிகள் பறந்தன. எங்கும் நிற்காமல் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் சைக்கிளை அலுத்த ஆரம்பித்திருந்தோம். கிட்டத்தட்ட 13 கிலோ மீட்டர் தூரம். அந்த சிறிய ரக விமானத்திற்கான விமான நிலையத்தை தூரத்திலிருந்து பார்த்தபடியே “வந்திருச்சு டோய்..” என்ற சந்தோஷக் கூச்சலுடன் சைக்கிளை மிதி, மிதி என்று மிதித்தோம்.

மூச்சு வாங்கி சைக்கிளை கேட் அருகே போட்டுவிட்டு பார்த்தபோது எனது 15 ஆண்டு கால கனவு ஒன்று, பிரம்மாண்டமான தனது உருவத்துடன் எங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.

இதைத்தானே சரவணா பார்க்கத் துடித்தாய்..? இதுதானே உனக்குள் ஒரு களவாட்டம் ஆடிக் கொண்டிருந்தது..? என்ற ஆசையில் கேட்டைப் பிடித்துத் தொங்கியபடியே பேச்சு மூச்சில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது உடன் வந்திருந்த நண்பன் கெளரிசங்கர் ஒரே ஜம்ப்பில் கேட்டின் மீதேறி தாண்டிக் குதித்தான்.. அருகில் இருந்த ஒரு சிறிய கொட்டகையில் கட்டில் போட்டு வாட்ச்மேன் அமர்ந்திருந்ததை அவனும் கவனிக்கவில்லை. நாங்களும் கவனிக்கவில்லை.

எங்களையும் “வாங்கடா..” என்று அவன் சொல்லும்போதே வாட்ச்மேன் அரக்கப் பரக்க ஓடி வந்தான்.. அவனைப் பார்த்து நாங்கள் கெளரியை எச்சரிக்க மீண்டும் ஒரே ஜம்ப்பில் ஏறி எங்கள் பக்கம் வந்திறங்கினான்.
வாட்ச்மேன் “யாரும் உள்ளே வரக்கூடாது” என்று எச்சரித்தார்.

இவ்ளோ பெரிசை பக்கத்தில் போய் பார்க்க முடிந்தால் எப்படியிருக்கும் என்கிற அப்போதைய வயதின் காரணமாக அந்த வாட்ச்மேனிடம் எவ்வளவோ கெஞ்சினோம்.. ம்.. பலனில்லை. “முடியவே முடியாது..” என்றார். இன்னொரு நண்பன் விளையாட்டாக தன்னிடமிருந்த கடலை மிட்டாயை லஞ்சமாக கொடுக்க நீட்ட.. அதை அவர் வாங்காமல் முறைத்துக் கொண்டார்.

உள்ளே போக வழியில்லை என்பதால் ஆளுக்கொரு திசையாக சென்று ஒவ்வொரு கோணத்திலும் பார்க்க ஆரம்பித்தோம். எந்தத் திசையில் இருந்து பார்த்தாலும் அதன் பிரம்மாண்டமும், வடிவமும் எங்களுக்கு யானையை ஒத்த அதிசயத்தை அளித்தன.

மொட்டை வெயிலில், வியர்வை பொங்கி வழியும் நிலையில் நின்றிருந்த எனக்கு அந்தக் கணம் கொடுத்த பரவசத்தை, மீண்டும் பல ஆண்டுகள் கழித்து சென்னையில் முதன் முதலாக மெரீனா பீச்சில் கணக்கிலடங்கா தண்ணீருடன் வங்காளவிரிகுடாவைப் பார்த்து “ஆத்தாடி.. எம்புட்டு தண்ணி..” என்று வாய்விட்டுச் சொன்னபோதுதான் மீண்டும் கிடைத்தது.

பார்த்துக் கொண்டேயிருந்துவிட்டு நண்பர்கள் ஒவ்வொருவராக தங்களது சைக்கிளை எடுத்துக் கொண்டு நிழல் தேடி போய் அமர்ந்த பின்பும் கீழே கிடந்த சைக்கிளை எடுக்கக்கூட மனமில்லாமல் கேட்டை பிடித்துத் தொங்கியபடியே நின்றிருந்தது மிக, மிக இனிமையான அனுபவம்.

கால் சோர்ந்து போய் தளர, அந்த கேட்டின் அருகிலேயே தரையில் அமர்ந்து அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த கிறுக்குத்தனமும் தொடர்ந்தது. சாயந்தரம்வரையிலும் உட்கார்ந்து, உட்கார்ந்து பேசி முடித்து மாலை 5 மணியானவுடன் சண்முகம் அண்ணனை நினைத்து பயந்து போய் அங்கிருந்து கிளம்பினோம்.

மீண்டும் ஒரு முறை எனது கனவுலகின் நாயகனை கேட் அருகே சென்று ஆசை தீரப் பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது 26 கிலோ மீட்டர்கள் சைக்கிளை அழுத்திய கால்வலியைக்கூட மறக்கடித்தது அந்த கனவின் அழகும், பிரம்மாண்டமும்.

நீண்ட நாட்கள் கழித்து ஊர் விஷயங்களையும், உலக விஷயங்களையும் நண்பர்களுடன் பெட்டிக் கடைகளிலும், சினிமா தியேட்டர்களிலும் விவாதித்துக் கொண்டிருக்கும்போதுதான் அந்த விமான நிலையம் எனது ஊருக்கு வந்ததின் பின்னணியில் இருந்த 'உண்மைக் கதை' என்று சொல்லி ஒரு ‘கதை’ எனக்குச் சொல்லப்பட்டது.

அன்றைய காலக்கட்டத்தில் தமிழ்ச் சினிமாவில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த ஒரு 'நடிப்புத் தாரகை'க்காகவே அந்த விமான நிலையம் கட்டப்பட்டு, விமானமும் வாங்கப்பட்டதாக எனது நண்பர்கள் சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. அது உண்மையா, பொய்யா என்றுகூட இன்றுவரையிலும் என்னால் சொல்ல முடியவில்லை.

அந்த ‘நடிப்புத் தாரகை’ வார இறுதி நாட்களில் சென்னையில் இருந்து திண்டுக்கலுக்கு வருவாராம். அப்போதைய திண்டுக்கல் நகரின் மிகப் பெரிய செல்வந்தரின் வீட்டில் தங்கிவிட்டு, திங்கட்கிழமை காலை மீண்டும் சென்றுவிடுவார் என்று மேலதிகத் தகவல்களைக் கொட்டினார்கள். நம்புவதா வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருந்தேன் நான்.

எனது வீட்டில் கேட்டேன். சிரித்தார்கள். அக்கம்பக்கம் வீடுகளில் கேட்டேன். “அதுதான் ஊருக்கே தெரியுமே?” என்றார்கள். ஆனால் உண்மைதானா என்பதைத்தான் யாரும் சொல்லவில்லை. அனைவரும் சொல்கிறார்கள். ஆகவே நாங்கள் நம்புகிறோம் என்றனர். திண்டுக்கல்வாழ் மக்கள் வழி, வழியாகத் தங்களது பரம்பரையினரின் காதில் இடும் ஒரு அற்புதச் செய்தி இது ஒன்றுதான்..

காதலுக்காக எதை, எதையோ அடைந்தார்கள் அல்லது இழந்தார்கள் என்பதெல்லாம் காற்றோடுபோய், ஒரு விமான நிலையமே கட்டினார்கள் என்கிற கதைதான் திண்டுக்கல் நகர மாந்தர்களின் மிகப் பெரிய பெருமூச்சு.

உண்மையோ, பொய்யோ எப்படியோ எங்களது ஊரில் ஒரு விமான நிலையம் இருக்கிறதே என்கிற பெருமை திண்டுக்கல் மக்களின் மிகப் பெரிய சொத்து. மறுப்பதற்கில்லை.

இந்த பால்ய வயது கனவுக்குத்தான் எவ்வளவு வலிமை..? சுலபத்தில் மனதை விட்டு இறங்க மறுக்கிறது. இந்த வயதிலும் இன்னும்கூட ஊருக்குப் போகும்போதும் சரி. வரும்போதும் சரி.. மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தவுடன் உடல் தானாக எழும்பி கண்கள் விமானங்களைத் தேடுகிறது. இது ஒரு அனிச்சை செயலாக தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்க.. அந்த கனவை ஒரு நாள் அடையும்வரையிலும் இப்படித்தான் இருக்கும் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டே வருகிறேன்.

எந்தத் ‘தாரகை’ எனக்கு உதவுவாரோ தெரியவில்லை.. காத்திருக்கிறேன்..!