ஒரு கல் ஒரு கண்ணாடி - சினிமா விமர்சனம்

24-04-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மிகச் சிறந்த கதை இல்லை. மிகச் சிறந்த நடிப்பு இல்லை.. மிகச் சிறந்த பாடல்கள் இல்லை.. மிகச் சிறந்த உழைப்பும் இல்லை..  ஆனால் ஒன்று மட்டும் இருக்கிறது. அது மிகச் சிறந்த திரைக்கதை.. படம் சூப்பர் ஹிட்.. 

எக்காலத்திற்கும் ஏற்ற காதல் கதை...! வாயைத் தொறந்தாலே எச்சிலாய் ஊறும் நகைச்சுவையைக் கொண்ட நடிகர்.. ஏன் எதற்கு என்று கேட்காமலேயே எவ்வளவு கேட்டாலும் அள்ளிக் கொடுக்கும் ஒரு தயாரிப்பாளர்(தானே உழைத்துச் சம்பாதித்த காசில்லையே..?) கைக்கு அடக்கமான ஹீரோ.. கொடுத்த காசுக்கு மேலேயே நடிப்பை காட்டத் துடிக்கும் ஹீரோயின்.. இது போதாதா ஒரு இயக்குநருக்கு..!? கூடுதலாக தனது இயக்கத் திறமையையும், எழுத்துத் திறமையையும் காட்டி படத்தை வெற்றி காண வைத்துவிட்டார். வாழ்த்துகள் ராஜேஷ்..!


உதயநிதி ஸ்டாலின் கனகச்சிதமாக நகைச்சுவையை தேர்ந்தெடுத்துதான் அறமுகமாகியுள்ளார். சிரிப்பது ரொம்ப ஈஸி. அழுவதுதான் கஷ்டம். அழுகும் நடிப்பை காட்டுவது என்பது ஒவ்வொரு நடிகருக்கும் ஆசிட் சோதனை.. இந்தச் சோதனையில் இருந்து இந்தப் படத்தில் தற்போதைக்கு தப்பித்திருக்கிறார் உதயநிதி.. அடுத்தப் படத்தில் எப்படியோ..?

பிரேமுக்கு பிரேம் ஒரே உச்சரிப்பில், ஒரே முகபாவனையில் நடித்திருக்கும் உதயநிதிக்கு தனது நடிப்பைக் காட்ட ஒரு வாய்ப்பும் கிடைத்த்து. ஆனால் அதனையும் புஸ்வாணமாக்கியிருக்கிறார். அழகம்பெருமாள் மனைவி சரண்யாவை தேடியலைந்து சோர்ந்து போய் வாசலில் அமர்ந்திருக்கும் நேரத்தில் உதயநிதிக்கு நல்ல ஸ்கோப் காத்திருந்த்து. அவரையும், ரசிகர்களையும் சோதிக்க்க் கூடாது என்பதால் அதனையும் ஒரு சாதாரண காட்சி போல் எடுத்து தயாரிப்பாளரை காப்பாற்றியிருக்கிறார் இயக்குநர்.. பொழைக்கத் தெரிஞ்சவர்தான்..!

கவுண்டமணி, வடிவேலு வரிசையில் சந்தானம் இடம் பிடித்துவிட்டார். அவருடைய அறிமுகக் காட்சியில் அப்படியொரு கைதட்டல் தியேட்டரில்..! வாழ்க.. வஞ்சகமில்லாமல் தனது நகைச்சுவைத் துணுக்குகளை படம் முழுவதும் அள்ளி வீசியிருக்கிறார் சந்தானம்.. வசனமே இல்லாமல் வெறும் உடல்மொழியைக் காட்டியே கை தட்டலை வாங்கிவிடுவதில் கவுண்டரும், வடிவேலுவும் வித்தகர்கள். அதனை இந்தப் படத்தில் சந்தானமும் தொடர்ந்திருக்கிறார்..! சந்தானத்தை கட் செய்தால்தான் தங்களது காதல் பிழைக்கும் என்று ஹன்சிகா சொல்லும் காட்சியில், நொடியில் தன்னைக் கழட்டிவிடும் முடிவை உதயநிதியின் வாயாலேயே கேட்டவுடன் சந்தானம் ஒரு ஆக்சன் கொடுக்கிறார் பாருங்கள்.. ரசிகர்களின் அமோக கைதட்டல் இந்தக் காட்சிக்குத்தான்..!

பெண்கள் முகத்தை மூடிக் கொண்டு செல்வதை அடிக்கும் நக்கலில் துவங்கி, இறுதிக் காட்சியில் உதயநிதி பேசும் ஆங்கிலத்தை மொழி பெயர்க்கும் காட்சி வரையிலும் சந்தானத்தின் ராஜாங்கம்தான்..! மனிதர் எதுகை, மோனைகளை மிக அலட்சியமாக பவுன்ஸாக வீசுகிறார்..! 
ஹீரோயின் ஹன்சிகாவைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த ஒரு புகைப்படமே போதும்..! அவர் அறிமுகமாகும் முதல் காட்சியே ரசனையுடன் எடுக்கப்பட்டிருக்கிறது..! இப்படி அழகை பார்த்துவிட்டு எவன் ஜொள்ளுவிடாமல் போவான்..? ஹன்சிகாவை பார்த்துவிட்டு சரண்யா உதயநிதியிடம் சொல்வதுகூட மிக யதார்த்தம்தான்..! ஒரு அப்பாவி அம்மாவின் பரம ரசனையான தேர்வு இது..! இது ஒன்றே உதயநிதிக்குள் காதலை தோற்றுவிக்கிறது என்றவுடன் இனி கேள்வி கேட்பாரே இல்லையே..? ராஜேஷ்.. ஜமாய்ச்சுட்டீங்க..!

இடைச்செருகல் கதையாக வரும் அழகம்பெருமாள்-சரண்யா கதை லாஜிக்காக ஏற்றுக் கொள்ள முடியவில்லையென்றாலும், அதையும் சென்டிமெண்ட்டுடன் கலந்து முடித்திருப்பதால் பெரிய தவறாகப் படவில்லை..!

பாடல்களில் வேணாம் மச்சான் வேணாம் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்..! தியேட்டரில் பெண்களும் ரசிக்கும்படியாக சத்தத்தைக் குறைத்து, சந்தத்தை அனைவரும் கேட்கும்விதமாக மெட்டசைத்து கொடுத்திருக்கும் ஹாரிஸுக்கு ஒரு நன்றி.. அகிலா, அகிலா பாடலும், அட்டா ஒரு காதல் தேவதை பாடல் காட்சியும் ரசனையாக படமாக்கப்பட்டுள்ளது..! உதயநிதியை காப்பாற்ற வேண்டியே ஹன்சிகாவை தமிழகத்து ரசிகர்கள் பார்க்கும்படியாக அப்படி, இப்படி ஓடவிட்டு, ஆடவிட்டு எடுத்திருக்கிறார் இயக்குநர்..! உதயநிதியின் ஸ்டெப்ஸ்களை பார்த்தபோது பழைய கே.பாக்யராஜ் படங்களை பார்த்தது ஞாபகத்திற்கு வந்து தொலைகிறது..! அடுத்தப் படத்திற்குள் நடனத்தைக் கற்றுக் கொள்வார் என்றே நினைக்கிறேன்..!

ஒரு காட்சிதான் என்றாலும் ஆர்யாவின் வருகை களை கட்டுகிறது.. அந்தத் தெனாவெட்டு ஸ்கிரீனுக்கு பிரெஷ்னஸ்ஸாக பிளஸண்ட்டாக அமைந்திருக்கிறது..! அதிலும் ஆண்ட்ரியாவை இடையிடையே கொஞ்சிக் கொண்டே வந்த வேலையை முடித்து வைக்கும் அந்த ஸ்டைலு.. செம கலக்கலு..!

தியேட்டருக்கு வரக் கூடிய இளையோர் கூட்டம்.. சென்ற 2 படங்களில் தமிழக ரசிகர்களை ஈர்த்து வைத்திருந்த ராஜேஷின் ரசிகர் படைகள்.. இருக்கின்ற ஹீரோயின்களில் தமிழர்களுக்குப் பிடித்த ஹன்சிகா.. சந்தேகமே இல்லாமல் இப்போதைய நகைச்சுவை கிங் சந்தானம்.. இளைய தலைமுறைக்கு என்றைக்கும் பிடித்த காதல் சோகத்தைப் பிழிந்தெடுக்கும் பாடல்களும், வசனங்களும் என்று ஒரு வெற்றிப் படத்திற்கு என்னென்ன தேவையோ அத்தனையையும் சம விகிதத்தில் கலந்தடித்து இதனை வெற்றியாக்கியிருக்கிறார் ராஜேஷ்..!

படம் வெளியான முதல் 2 வாரங்களிலேயே கிட்டத்தட்ட 40 கோடியை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் பேச்சு..! இந்தப் பணம் முழுவதும் தயாரிப்பு தரப்பிற்கும், விநியோகஸ்தர்களும் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு செய்த சில்லுண்டி வேலையினால் இதில் 12 கோடி ரூபாய் அரசுத் தரப்புக்கு சென்றுவிட்டது..! 

தமிழ் மொழியை சினிமாவில் வளர்த்தெடுக்க நினைத்து, தாத்தா சென்ற ஆட்சியில் கொண்டு வந்த ஒரு திட்டத்தை ஆத்தா இந்த ஆட்சியில் மேலும் சில விதிமுறைகளைத் திணித்து கடுமையாக்கியிருந்தாலும், இந்த ஒரு கல் ஒரு கண்ணாடி விஷயத்தில் ஜெயலலிதா அரசு செய்தது  அயோக்கியத்தனம்..! வரிவிலக்கு பெற அனைத்து தகுதிகளும் இந்தப் படத்திற்கு உண்டு. அப்படியிருக்க இப்படத்திற்கு அதற்கான தகுதிகள் இல்லை என்று கூறி வரிவிலக்கிற்கு மறுப்பு தெரிவித்தது நயவஞ்சகத்தனம்..! முறைகெட்டத்தனம்..! 

தனிப்பட்ட அரசியல் விருப்பு, வெறுப்புகளை அரசுத் திட்டங்களில் செயல்படுத்தக் கூடாது.. தாத்தாவுக்கு ஆத்தாவும சளைத்தவரில்லை என்பதை இதை வைத்தும் சொல்ல்லாம்..! சென்ற மாதம் வெளியான 3 படத்திற்கு வரிவிலக்கு. இப்படத்திற்கு இல்லை என்றால் இந்த மாநில அரசு ஆட்சி நடத்தத் தெரியாத ஒரு வெக்கம் கெட்ட அரசு என்பதில் எந்தச் சந்தேகமும் கொள்ள வேண்டாம்..! இத்திட்டத்தின் மீது எனக்கும் கருத்து வேறுபாடு உண்டு. ஆனால் இப்படியொரு திட்டம் அமலில் இருக்கின்றவரையில் அதனை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்..!

இந்தப் படத்தில் உதயநிதி, ஹன்சிகாவை மெரீனா பீச்சில் சந்திக்க வரும்போது அணிந்திருக்கும் பனியனில் இருக்கும் வார்த்தை மட்டுமே தேவையற்றதாக இருந்தது.. அந்த ஆங்கில வார்த்தையை ஆங்கில சினிமா சேனல்களே ஸ்டார் போட்டு மறைக்கும்போது இவ்வளவு வெளிப்படையாக அணிய வைத்திருக்க வேண்டாம். 

கூட்டம் தியேட்டர்களில் கூடிக் கொண்டே போக.. இங்கே அரசு தரப்பு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கடிதத்தை கண்டும் காணாததுபோல் இருக்கிறதே என்ற கோபத்தில் வேறு வழியில்லாமல்தான் நீதிமன்றத்திற்குச் சென்றார் உதயநிதி ஸ்டாலின். நீதிமன்றம் ஏன் இன்னும் பார்க்கவில்லை என்ற கேள்வியை எழுப்பிய பின்புதான் அவசரம், அவசரமாக கடந்த 16-ம் தேதியன்று படத்தை பார்த்தனர் தமிழ்நாடு அரசின் வரிவிலக்கு கமிட்டியினர்..!

சினிமா பிரபலங்கள் பழம் பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன், இசையமைப்பாளர் சங்கர்கணேஷ், பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, குடியிருந்த கோவில் ஹீரோயின் ராஜஸ்ரீ ஆகியோருடன் அரசுத் தரப்பு அதிகாரிகள் 3 பேர், ஆக மொத்தம் 7 பேர் போர்பிரேம் தியேட்டரில் படம் பார்த்திருக்கிறார்கள். சினிமா பிரபலங்களுக்கு படம் மிகவும் பிடித்திருக்கிறது..! வரி விலக்கு தரலாம் என்று முதலில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் மேலிட உத்தரவு அதன் பின்புதான் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது..! “கொடுக்கவே கூடாது” என்பது முதலமைச்சர் அலுவலக உத்தரவாம்..!

இதனை பிரபலங்களிடம் அதிகாரிகள் தெரிவிக்க.. அவர்களுக்குள் லேசான தயக்கம்.. முதலில் ஏற்றுக் கொள்ள மறுத்திருக்கிறார்கள். பின்பு அதிகாரிகள் தங்களது நிலையைத் தெரிவித்தவுடன் வேறு வழியில்லாமல் கையெழுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இசையமைப்பாளர் சங்கர்கணேஷ் மட்டுமே கையெழுத்திடவில்லையாம்..! 

இது பற்றித் தகவல் தெரிந்து செய்திகளுக்காக இந்த நான்கு பேரையும் தொடர்பு கொண்டபோது யாருமே பேட்டியளிக்க மறுத்துவிட்டார்கள். “இது விஷயமா பிரஸ்ல பேசுற அதிகாரமே எங்களுக்குக் கிடையாது..” என்றார் எல்.ஆர்.ஈஸ்வரி..!(இருங்கம்மா.. அடுத்தது தளபதி ஆட்சிதான்.. இருக்கு ஆப்பு உங்களுக்கு..!) 

3 படத்தின் தலைப்பும், அப்படத்தில் இடம் பெற்ற பல காட்சிகளும் வரிவிலக்கு பெறும் தகுதியுடையவைகள்தானா என்பதை பலரும் சந்தித்துப் பார்க்க வேண்டும்..! ஆனாலும் படம் ரிலீஸாகும் முன்பாகவே அப்படத்திற்கு வரிவிலக்கு வழங்கப்பட்டதை நினைவு கூற வேண்டும். ஆக, ஆட்சி மேலிடத்திற்கு பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாட்டை இந்த அரசு செய்து வருகிறது என்னும்போதே இது சர்வாதிகாரமான, தான்தோன்றித்தனமான அரசுதான் என்பது ஊர்ஜிதமாகிறது.

இது போன்ற அதிகாரத் துஷ்பிரயோகம் ஆத்தாவுக்கு புதிதல்ல என்றாலும், தயாரிப்பாளர்கள் சங்கம் இதற்கு எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் தங்களது சண்டையையே சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதும் இன்னொரு பக்கம் வேடிக்கையாகத்தான் இருக்கிறது..! 

சினிமாவும், அரசியலும் வேறு, வேறல்ல என்பதை போல இந்தச் சம்பவத்தையும் உதாரணமாக்குகிறார்கள் பத்திரிகையாளர்கள். வலிய வரவே மாட்டேன் என்பவரையும் கையைப் பிடித்திழுத்து அரசியலுக்கு கொண்டு வருகிறார்கள்.. இனி உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. இளைஞரணியில் ஒரு முக்கியப் பொறுப்பிற்கு வந்து ஆத்தாவுக்கு பஞ்ச் டயலாக் அறிக்கை விடும் காலமும் வெகுதொலைவில் இல்லை..! அதற்கு இந்த பட விவகாரமே முக்கியக் காரணமாக இருந்து தொலையும் என்பதிலும் ஐயமில்லை..!

கலைஞர் குடும்பத்து அடுத்த வாரிசையும் அரசியல் களத்தில் வலுக்கட்டாயமாகக் களமிறக்கியிருக்கும் ஜெயலலிதா வாழ்க..!

மை - சினிமா விமர்சனம்

22-04-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்ற வாரம் வெளிவந்த படங்களிலேயே பார்க்கக் கூடியதாக இருப்பது இது ஒன்றுதான்..! 

சுனாமி சுப்பு. பகுதி நேர அரசியல் பேச்சாளன். கூட்டங்கள் இல்லாத நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடிக்கும் பகுதி நேர திருடன். திருடியவைகளை மார்க்கெட்டில் பகிரங்கமாக விற்பனை செய்யும் அளவுக்கு தில்லாலங்கடி திருடன்..! அவனது மேடை பேச்சுக்காக, அவனை சப்போர்ட் செய்யும் ஆளும்கட்சி..! இவனுக்குள்ளும் ஒரு காதல். சிறுவயது முதலேயே வீட்டுக்கு அருகில் இருந்த பானுமதி மீது ஈர்ப்பு.. அவளோ சின்ன லோக்கல் டிவிக்கு ஓனர்..! சமூக விழிப்புணர்வு மிக்க நிகழ்ச்சிகளைத்தான் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பதில் கொள்கைக் குன்றாக இருப்பவள். தன் மீது ஒரு தலைக் காதலாக இருக்கும் சுப்பு, தனது அரசியல் மற்றும் திருட்டு வேலைகளைக் கைவிட்டு யோக்கியமாக இருந்தால் மட்டுமே தன் கழுத்தில் தாலி கட்ட முடியும் என்கிறாள் பானுமதி.. சுப்பு எதைத் தேர்ந்தெடுத்தான் என்பதுதான் மிச்ச மீதிக் கதை..!


விமல் நடித்திருக்க வேண்டிய படம். நடித்திருந்தால் ஹிட்டாக வாய்ப்பு உண்டு என்று அடித்துச் சொல்லலாம்..! ஆனால் இதில் சுப்புவாக விஷ்ணுப்பிரியன்..! ரொம்ப அலட்டல் இல்லை..! அரசியல் பேச்சில் ஏற்ற இறக்கமும், நடிப்பும் அவசியம். சுத்தமாக இல்லை..! அனாவசியமாக கத்திக் கூப்பாடெல்லாம் போடாமல் இயல்பான பேச்சை இயக்குநர் அனுமதித்திருப்பதால், விஷ்ணுப்பிரியனின் நடிப்பெல்லாம் ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை..! 

பானுமதியாக ஸ்வேதாபாசு..! கேரளத்து அழகி என்பது மட்டும் தெரிகிறது..! அம்மணியின் சினிமா ஜாதகம் சரிவரத் தெரியவில்லை. தேடிக் கொண்டிருக்கிறோம்..! வேலூர் கோட்டை மதில் சுவரில் விஷ்ணுவுக்கு கொடுக்கும் அட்வைஸின்போதுதான் பாப்பாவை மனசுக்குள் இன்னும் அழகாகப் பிடிக்கிறது..!  

சுனாமியே வரும்.. தீப்பொறியே வரும் என்று பில்டப்பை கொடுத்துவிட்டு சாதாரணமாக பேச வைத்திருக்கிறார்கள். நல்ல எழுத்தாளர் கூடவா வசனம் எழுத கிடைக்கவில்லை..!? இடைவேளையின்போது ஸ்வேதா பாசு பேசும் வசனமும், ஜெயப்பிரகாஷ் அள்ளி விடும் அரசியல் ராஜதந்திரங்களும் மட்டுமே அசத்தல்..!

ஜெயப்பிரகாஷ்.. மனிதர் எந்த வேடம் கொடுத்தாலும் அசத்துகிறார்..! வில்லன்களுக்கே உரித்தான தனி நடிப்பு அண்ணனிடம் நிறையவே உள்ளது. வார்டு கவுன்சிலர் தேர்தலில் தோற்றுப் போகும் முன்னாள் கவுன்சிலரை செருப்பால் அடித்துவிட்டு திட்டும், அந்த 45 செகண்ட்டுகள் கொண்ட காட்சியே சாட்சி..!

ரவுடிகளை காதலிக்கும் பெண்கள் அல்லது அவர்களைத் திருத்த முயலும் பெண்கள் வரிசையில் இந்தப் படமும் இடம் பிடித்திருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் திரைக்கதை எழுதி கொண்டு வருகிறார்கள். இதில் இடைவேளைக்கு பின்பு திரைக்கதையில் கூட்டியிருக்கும் வேகம்தான் படத்தை ரசிக்க வைக்கிறது..!

இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் படத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது..! தேவதை என்ற பாடல் மட்டுமே  கேட்கும்படியாக இருக்கிறது.. பாடல் காட்சிகளில் கை, கால்களை அசைத்து கொடுமை செய்வது இன்னும் எத்தனை வருடங்கள் தொடரும் என்று தெரியவில்லை..!

கதாநாயகிக்குள், நாயகன் மீதான காதல் வரக் காரணமான அந்த மனநோயாளியைக் காப்பாற்றும் காட்சியில் அழுத்தம் உண்டு.. யதார்த்தம் நிறைய..! நாயகிக்காக சுப்பு இதனை நிறைவேற்றிய பின்பு ஹீரோயின் சுப்பிவிடம் கேட்கும் காரணங்களும், அட்வைஸ்களும்தான் பிற்பாதி கதை என்பதால், இந்த இடத்தில் இயக்குநரின் இயக்கத் திறமை பாராட்டுக்குரியது..!


செங்கல் சூளைக்குள் கொலை செய்துவிட்டு தப்பிக்கலாம் என்று நினைப்பது ஒருவிதத்தில் சரி என்றாலும், காணாமல் போனவரைத் தேடும் முயற்சியும், கட்சிக்குள் என்ன நடந்திருக்கும் என்பதையும் தொடராமலேயே சென்றிருப்பது சட்டப்படி லாஜிக் குற்றம்தான் யுவர் ஆனர்..! கிளைமாக்ஸில் ஏற்படும் அந்த டிவிஸ்ட் மக்கள் எதிர்பார்க்காததுதான்..! ஆனால் அழுத்தமான காரணமும், காட்சியாகவும் இல்லை என்பதில் சிறு ஏமாற்றம்..!

ஆளும் கட்சி கவுன்சிலர்கள் 20 பேர்.. எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் 20 பேர் என்ற திரிசங்கு சொர்க்க நிலையில் இருக்கும் வேலூர் மாநகராட்சியின் வருட மாமூல் கணக்கை அள்ளிவீசும் சுப்பு, அதை அள்ளாமலா இருக்கப் போகிறார்..? அந்த நினைப்பினால்தானே மேயர் பதவியை தன்னிடம் கொடு என்று கேட்கிறார். பின்பு இவர் எப்படி நல்லவராவார்..? போலீஸாரின் ஆசியுடன் திருட்டு.. கட்சிக்காரர்களின் உதவியுடன் கேஸில் இருந்து தப்பிப்பது..! காதலியின் அப்பா மகள் மேல் கரிசனமாக இருப்பது..! இப்படியொரு ரவுடிதான் தனக்கு மருமகன் என்று அவர் நினைத்திருப்பது..! ஓட்டு போடாவிட்டால் வீட்டில் திருட்டு நடக்கும் என்று மக்களை பயமுறுத்துவது.. ஓட்டுக்கள் இதனாலேயே சுப்புவுக்கு விழுவது என்று பல ஓட்டைகளை வைத்துக் கொண்டாலும் யாரும் கேள்வியெழுப்பாமல் பார்த்துக் கொண்டு படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர். 

இந்த வாரக் கோட்டா ஒரு படம்தான் என்றால் கண்ணை மூடிக்கிட்டு தியேட்டருக்கு போங்க..!

கிருஷ்ணா டாவின்சி - நினைவலைகள்..!

17-04-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மறைந்த அண்ணன் கிருஷ்ணா டாவின்சியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நெகிழ்ச்சியுடன் நடந்து முடிந்தது..! நண்பர்கள், தோழர்கள், குடும்பத்தினர் என்று கிருஷ்ணாவுடன் இணைந்திருந்தவர்களின் பலரது நெகிழ்ச்சியான பேச்சுக்களைவிட கிருஷ்ணாவின் இசை ஆர்வத்தை வெளிப்படுத்தும்விதமாய் காட்டப்பட்ட அந்த வீடியோ காட்சிகள்தான் பரவசமூட்டின..! ஒவ்வொரு வீடியோ பதிவின்போதும் அந்த இருட்டுச் சூழலிலும் தோழி ஜெயராணி தன் உடல் குலுங்கி மெலிதாக அழுதபோதுதான் அதுவொரு துக்கச் சூழல் என்பதே புரிந்தது..! 


அண்ணனுக்கு வயது 46-தான். ஆனாலும் அதற்குள்ளாக காலன் அவரை அழைத்துவிட்டான்..! அவருடைய இசை ஆர்வம், படிப்பு ஆர்வம்.. எழுத்தாற்றல் எல்லாவற்றையும்விட சக தோழர்களிடம் நண்பனாக அவர் நடந்து கொண்டவிதம்தான் இத்தனை கூட்டத்தையும் திரட்டியிருந்ததாக எனக்குத் தோன்றுகிறது..!

அண்ணன் கிருஷ்ணா டாவின்சியை நான் முதன்முதலில் சந்தித்தது தி.நகரில் இருந்த மின் பிம்பங்கள் ஸ்டூடியோவில்தான். அந்தச் சமயத்தில் அங்கு அவர் அவ்வப்போது வந்து செல்லும் சூழல் இருந்தது.. அவர் அப்போது குமுதத்தில் பணியாற்றி வந்தாலும், அரசு பதில்களில் அண்ணனின் கைவண்ணமும் இருக்கிறது என்பது அப்போது எனக்குத் தெரியாது. 

ஒரு நாள் மாலைப் பொழுதில் அண்ணன் அங்கே வரும்போது கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருந்தது. கிடைத்த நேரத்தில் “வாங்க.. ஒரு டீ அடிச்சிட்டு வருவோம்..” என்று சொல்லி என் தோளில் கை வைத்து அழைத்துச் சென்றார். 

பேச்சுவாக்கில் “நீங்க எத்தனை வருஷமா இந்த ஆபீஸ்ல இருக்கீங்க..?” என்றார். “4 வருஷமா..” என்றேன். “கதை ஏதாவது எழுதுறீங்களா..?” என்றார். “இல்ல ஸார்.. ஆனால் திருத்தம் மட்டும் பண்ணுவேன்..” என்றேன். புருவத்தை உயர்த்தி கிண்டலான பார்வையுடன், “அதென்ன திருத்தம் மட்டும்..?” என்றார். “இல்ல.. இங்க வர்ற கதைகளைப் படிச்சுட்டு அதுல சீரியலுக்கு ஏத்த மாதிரி ஸ்கோப் என்ன இருக்குன்னு பார்த்துட்டு கிளைக் கதையா டைப் பண்ணித் தருவேன்..” என்றேன். “அப்போ உங்களால சீரியலுக்கு கதை எழுத முடியுமே..? ஏன் அதைச் செய்யாம டைப் அடிச்சிட்டிருக்கீங்க..?” என்றார். எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அதுவரையிலும் நான் அப்போது அது பற்றி யோசிக்கவே இல்லை என்று இப்போது எனக்குப் புரிகிறது..! சமாளிப்பாக, “இல்லண்ணே.. எழுத வாய்ப்பு வரலை..” என்றேன்.. “வாய்ப்பெல்லாம் வராது.. நாமதான் உருவாக்கிக்கணும். இத்தனை சீரியல் பண்ற கம்பெனில உக்காந்துக்கிட்டு, எழுதத் தெரிஞ்சும் ஒண்ணும் செய்யாம இருக்கீங்களே பிரதர்..?” என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னார். 

“ஏதாவது கதை வைச்சிருக்கீங்களா?” என்றார். “ஐடியாஸ் மட்டும் இருக்குண்ணே.. இன்னும் எழுதலை..” என்றேன். “சீக்கிரமா எழுதுங்க.. எழுதி கைலாசம் ஸார்கிட்ட காட்டுங்க.. ஒருவேளை அவருக்குப் பிடிச்சிருந்து உங்களை எழுதச் சொல்லலாம்ல. ஏன் டயத்தை வேஸ்ட் பண்றீங்க.?” என்றார். “இல்லண்ணே.. ஆபீஸ் வேலையே ரொம்ப டைட்டாத்தான் இருக்கு.. நாம கதை எழுதணும்னா கொஞ்சம் டைம் வேணும். இடம் வேணும்.. இங்க உக்காந்து எழுத முடியாது..” என்றேன் தன்மையாக..! 

அதற்குள் கடையின் அருகே வந்துவிட்டோம்.  “அப்போ வீட்ல காலைல சீக்கிரமா எந்திரிச்சு எழுதுங்க...” என்றார்.. ”காலைல சீக்கிரமா எழுந்திருச்சு.. நானு.. முடியாதுண்ணே..” என்றேன் கொஞ்சம் அலட்சியமாக..  “நீங்க வேண்ணா ஒரு நாளைக்கு டிரை பண்ணிப் பாருங்க..” என்றார் விடாப்பிடியாக. “இந்த ஜென்மத்துல நடக்காது..” என்றேன்.. “வொய் பிரதர்..”(தனது பேண்ட் பாக்கெட்டில் இரண்டு கைகளையும் விட்டுக் கொண்டு, எனது முகத்திற்கு அருகே தனது முகத்தை வைத்துக் இப்படி கேட்ட அந்த  ஸ்டைல் இருக்கே..! கிருஷ்ணாண்ணா..!) என்றார்.. “நான் காலைல எழுந்திருக்கிறதே 8 மணிக்குத்தாண்ணே..” என்றேன். 

டீ கைக்கு வர.. அதை வாங்கிக் கொண்டு “ஏதோ கல்யாணமானவன் மாதிரி பேசுறீங்களே சரவணன்.. உங்களுக்கென்ன வேலை, ராத்திரில..?” என்றார் கிண்டலாக.. “இல்லண்ணே.. காலைல 5 மணி, 6 மணிக்கெல்லாம் என்னால எழுந்திருக்கவே முடியாது.. நான் எப்பவும் கொஞ்சம் லேட்டா தூங்குவேன்.. அதுனாலதான்..” என்றேன்.. “அப்போ அலாரம் வைச்சுக்குங்க..” என்றார்.  “அது வைச்சாலும் நம்ம காதுக்குக் கேக்காதுண்ணே.. ராத்திரில மெஷினை கழட்டிருவேன்ல.. அதான்..” என்றேன். “செல்போன்ல அலாரம் வைச்சு காதுக்குப் பக்கத்துல வைச்சுக்குங்க..” என்றார்.. “அப்படி வைச்சாலும், பெட்ஷீட்டை போர்த்திக்கிட்டு படுக்கறதால அதுவும் கேக்காதுண்ணே..” என்றேன்.. விடாப்பிடியாக நான் தொடர்ந்து சொன்ன எதிர்பதில்கள் அவருக்குள் ஏதோ சலிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வெறுப்பாகிப் போன முக பாவனையை கொஞ்சம் காட்டிவிட்டு, சட்டென்று இயல்புக்கு திரும்பினார்.

“நான் ஒரு ஐடியா சொல்றேன்.. செய்றீங்களா?” என்றார் கண்களில் குறும்பு மின்ன.. “சொல்லுங்க..” என்றேன் எதிர்வரும் அணுகுண்டை உணராமல்..! “செல்போனை, வைப்ரேட்டர் மோடுக்கு மாத்திருங்க..” என்றார். “மாத்திட்டு..” என்று நான் கேட்டு பதிலுக்குக் காத்திருக்க, ஒரு வாய் டீயை அருந்திவிட்டு, “ஜட்டிக்குள்ள போட்டுக்குங்க.. காலைல தானா முழிப்பு வரும்..” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு டீ கிளாஸை வைக்க நகர்ந்தார்..

நான் குடித்த டீ, என் மூக்கு வழியாக வெளியே வரும் அளவுக்கு புரையேறி சிரித்துத் தொலைத்தேன்.. கடையே என்னை வேடிக்கை பார்க்க.. இதைப் பற்றியே கண்டு கொள்ளாமல் டீக்கு காசு கொடுத்துவிட்டு “வாங்க போகலாம்..” என்றார்.. “எப்படிண்ணே..?” என்றேன், சிரிப்பை அடக்க முடியாமல்.. “இதெல்லாம் நமக்குத் தானா தோன்றதுதான்..” என்றார்..

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அண்ணனை எப்போது சந்தித்தாலும், அவருடைய கண்களில், இது பற்றிய ஒரு குறும்புப் பார்வையை என்னை நோக்கி வீசுவார்..! அதற்குப் பிறகு அவர் அங்கே வருகை தந்த நாட்களில் கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் பேசும்போது பெரும்பாலும், இசையைப் பற்றிப் பேசுவார். அல்லது சினிமாவைப் பற்றிப் பேசுவார். 


நான் மின்பிம்பங்களில் இருந்து விலகியிருந்த நேரத்தில் ஒரு நாள் மாலை அவருடைய எழும்பூர் இல்லத்தில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். வீடு அப்போதுதான் துடைத்து மெழுகப்பட்டது போன்று பளிச்சென்று இருந்தது. சுற்றிலும் புத்தகங்களுக்கு மத்தியில் எழுதிக் கொண்டிருந்தார். மெல்லிய இசை ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது. வெறும் இசை மட்டும்தான். ஒரு ஆங்கிலப் புத்தகத்தை பார்த்து அதனை தமிழாக்கம் செய்து கொண்டிருந்தார். 

வெளிநாட்டு இசைக் கலைஞர் ஒருவரைப் பற்றி கட்டுரை எழுதுவதாகச் சொன்னார்.(பெயர் மறந்துவிட்டது) அந்த இசையமைப்பாளருக்கு காது கேட்காத சூழல் இருந்தபோதிலும், அவரால் இசை அமைக்க முடிந்தது என்கிற தகவலைச் சொன்னார்.. அது எப்படி என்று நான் ஆச்சரியப்பட்டு கேட்க, அந்தப் புத்தகத்தில் இருந்து சில வரிகளைப் படித்துக் காட்டி மொழி பெயர்த்து சொன்னார்..!

“இசை அறிவு அவருக்குள்ள நிறைய இருக்கு. அதைக் கேக்கணும்னு அவருக்கு அவசியம் இல்லை. இசைக் கோர்வைகளை நோட்ஸ்களாக குறித்துக் கொடுத்தாலே போதும். அதைத்தான் அவர் செஞ்சிருக்காரு..” என்று சொல்லி வரிசையாக பல வெளிநாட்டு இசைக் கலைஞர்களின் பெயர்களைச் சொல்லி “அந்த இசையையெல்லாம் நீங்க கேட்டீங்கன்னா அசந்திருவீங்க..” என்றார். அப்போது ஒலித்துக் கொண்டிருந்த வெறும் இசையைக் குறிப்பிட்டுக் கேட்டேன்.. “எல்லாரும் பாட்டோடதான் கேக்கணும்னு விருப்பப்படுவாங்க.. நீங்க ஏன் இப்படி..?” என்றேன்.. “இது என் விருப்பம். இசை மெட்டு நல்லா இருக்குல்ல.. அதுக்காகத்தான்..” என்றார். “எப்படிண்ணே.. இவ்வளவையும் படிச்சு, மனப்பாடமா வைச்சுக்குறீங்க. நான் ஸ்கூல்லகூட இங்கிலீஷ் புத்தகத்தை புரட்டினதில்லை..” என்றேன்.. 

“படிக்கணுமன்ற ஆர்வம் இருந்தால்போதும்.. வெறும் சினிமா மட்டும் பார்த்துக்கிட்டு இருந்தா நாம அதுல ஒரு டெக்னீஷியனா மட்டும்தான் ஆவோம். கிரியேட்டரா மாற முடியாது. கிரியேட்டரா மாறணும்னு நிறைய கதைகள் படிக்கணும். புத்தகம் வாசிக்கணும்..” என்றார். “நானும் நிறைய படிப்பேண்ணே. புத்தக வெறியன் மாதிரிதான்.. ஆனா தமிழ்ல மட்டும்தான்..” என்றேன். “நான் நம்ப மாட்டேன்..” என்றார். “நான் எப்படிச் சொன்னா நம்புவீங்க..?” என்றேன்.. டக்கென்று எதிரில் இருந்த ஒரு ஆங்கிலப் புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொடுத்து “நேரா மொட்டை மாடிக்கு போங்க.. மேல் சுவர்ல ஏறுங்க.. இதைக் கைல வைச்சு படிச்சிக்கிட்டு நடந்துக்கிட்டே வாங்க.. அப்பத்தான் நீங்க ஒரு புத்தக வெறியன்னு நம்புவேன்..” என்றார். “ஏண்ணே.. இது உங்களுக்கே ஓவரா இல்லை. அப்படியே கீழ விழுந்தா என்னாகும்..?” என்றேன். “புத்தகம் வாசிப்பு சுவாரஸ்யத்தில் உயிரைவிட்ட ஒரு வாசகன்னு அடுத்த வார குமுதத்துல உங்க போட்டோவ போட்டு ஒரு கட்டுரை எழுதிருவேன்.. எனக்கும் காசு வரும்.. என்ன செய்றீங்களா..?” என்றார் குறும்பாக..!

பார்த்தவுடன் எனெர்ஜியை தூண்டிவிடும் ஆற்றல் கொண்டது கிருஷ்ணாவின் முகம். அவ்வளவு வசீகரமானது.. அவருடைய முகத்தில் எப்போதும் இருக்கும் புன்முறுவலும், உற்சாகமும் அடுத்தவரை வசியப்படுத்தக் கூடியது..! குமுதத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய அனைவருமே இப்போதும் இதைத்தான் சொல்கிறார்கள். அவருடைய உற்சாகப்படுத்தலில்தான் தாங்கள் மேலும் முன்னேறினோம் என்று..!

இதற்கெல்லாம் பின்பு ஒரு முறை குமுதம் பத்திரிகையில் நடந்த வாசகர்கள் சந்திப்பில் என்னை முன் வரிசையில் பார்த்தவுடன் அதே குறும்புடன் கண்ணடித்தார் கிருஷ்ணா. “அரசு பதில்களில் பழைய குறும்புத்தனம் இல்லை..” என்ற எனது புகாரைக் கேட்டவுடன் ஜவஹர் சாருடன் இணைந்து கிருஷ்ணாவும் சிரித்தார். இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்தவுடன் மிக வேகமாக என்னருகில் வந்த கிருஷ்ணா, என் தோளில் கை போட்டு “ரொம்ப தேங்க்ஸ் சரவணன்..” என்றார்..! அதற்கடுத்த வாரங்களில் இருந்து அரசு பதில்கள் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பியதையும் சொல்லத்தான் வேண்டும்..!

அரசு பதில்களில் அமரர் எஸ்.ஏ.பி.க்கு பின்பு அதிக காலம் ஆதிக்கம் செலுத்தியவர் கிருஷ்ணா அண்ணன்தான் என்று பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் கிருஷ்ணாவிடம் இது பற்றி ஒரு முறைகேட்டபோது நேரிடையாக பதில் சொல்லவில்லை.. மென்மையாகச் சிரித்தார். அவ்வளவுதான்..! அத்தோடு குமுதம் அலுவலகத்தில் நடக்கும், நடந்த சில சம்பவங்கள் பற்றி நான் ஆர்வத்தோடு கேட்டபோதெல்லாம் மனிதர் அசைந்து கொடுக்கவில்லை. “எல்லா ஆபீஸ்லேயும் இது மாதிரியிருக்கும். நீங்க எங்க போனாலும் இதை பேஸ் பண்ணித்தான் ஆகணும்..” என்று பொத்தாம்பொதுவாகச் சொல்வாரே ஒழிய மேட்டரை ரிலீஸ் செய்யவே மாட்டார்..!

அவ்வப்போது தொலைபேசியில் பேசியபோதெல்லாம் “அடுத்த வருஷம் படம் பண்ணிருவேன்.. கதையெல்லாம் ரெடி.. சீக்கிரமே..” என்றுதான் உற்சாகமாகப் பேசுவார். ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி குமுதத்தில் அவர் எழுதிய தொடர் மிக அழகானது.. அதற்காக பல கடின உழைப்புகளை அவர் செய்திருக்கிறார். ரஹ்மான் தொடருக்காக அவரை தொலைபேசியில் அழைத்து பாராட்டியபோது அதற்காக அவர் சந்தித்த நபர்கள், போன இடங்கள்.. படித்த புத்தகங்கள் என்று பெரும் பட்டியலையே சொன்னார். மலைப்பாக இருந்தது எனக்கு..! இந்தக் கடின உழைப்புக்கு நியாயமான பெயரை அத்தொடர் அவருக்கு பெற்றுக் கொடுத்தது என்று நம்புகிறேன்..!

கடைசியாக வர்ணம் திரைப்படத்தின் வலைப்பதிவர்களுக்கான சிறப்புக் காட்சியில்தான் அவரைச் சந்தித்தேன்.. அப்போதும் அதே உற்சாகம்.. அதே சிரிப்பு.. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, உரையாடலில் அண்ணனின் தலைமையில் ஒரு டீம் செயல்பட்டதாக அறிந்தபோது மிகப் பெரிய சந்தோஷம். படமும் சிறப்பாகத்தான் இருந்தது..! பல வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் பங்கு கொண்டு பரிசுகளை வென்றது.. தமிழில்தான் சரியான விளம்பரம் மற்றும் ஓப்பனிங் என்று சொல்லப்படும் சினிமா ஜாதகத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யாததால் தமிழகத்து மக்களின் பார்வைக்கு அதிகம் போகவில்லை என்பது வருத்தமே..

இப்போது மறுபடியும் அதே நிறுவனத்திற்காக அடுத்த கதை, திரைக்கதையை எழுதி முடித்திருக்கிறார். இடையில் பல சினிமா நிறுவனங்களின் கதை இலாகாவில் பணியாற்றி அதனை இதுவரையில் வெளியில் சொல்லாமலும் இருந்திருக்கிறார் என்பதே அவர் மீதான மரியாதையை பெருமளவில் கூட்டியிருக்கிறது..!

நான் தற்போது பணியாற்றும் டிவி நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கப்பட இருக்கும் சினிமா நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் பணிக்காக கடந்த ஒரு மாதத்திற்கு  முன்பாக அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்..! “இப்போ வேணாம் சரவணன்.. கைல நாலைஞ்சு பிராஜெக்ட் இருக்கு.. முடிச்சிட்டு சொல்றேன்..” என்றார். “நேர்ல வந்து விளக்கமா சொல்றேண்ணே. வரட்டுமா..?” என்றேன்.. “இல்ல சரவணன்.. இப்ப வேண்டாம்.. நாம அப்புறமா சந்திக்கலாம்..” என்று அவசரமாகச் சொன்னார். அவருடனான கடைசி பேச்சு அரைகுறையாக முடிந்துவிட்டதே என்பதை இப்போதைக்கு நினைத்தாலும் வருத்தமாகத்தான் இருக்கிறது..! 

தனது நோயுடன் போராடிய அனுபவங்களை வைத்து அவர் எழுதியிருக்கும் “காலா அருகே வாடா..” என்ற சிறுகதை, அச்சுக்குப் போவதற்கு முன்னாலேயே அவர் விண்ணுலகம் சென்றுவிட்டது மகா கொடுமை..! தனது சாவிலும் அதற்கொரு பொருத்தமான எழுத்தை பதிவு செய்ததுதான் அண்ணனுக்கு கிடைத்திருக்கும் பெருமை..!

தனது எழுத்துப் பணி, சினிமா பணிகள், இசை ஆர்வம், குடும்பம் என்று அனைத்திலும் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும், இந்த விரைவான அவரது விடைபெறல் அதிர்ச்சியானதுதான்..! அவர் இன்னும் சாதித்திருக்க வேண்டியதும், செய்ய வேண்டியதும் நிறையவே காத்திருக்கின்றன.. அவருடைய மரணச் செய்தியைக் கேட்டவுடன் நான் அதனைப் படித்த முகப்புத்தகத்தில் “சாவே உனக்கு சாவு வராதா..?” என்று கோபத்துடன் எழுதினேன்.. அதையே இப்போதும் எழுதுகிறேன்..! சொல்கிறேன்..!

நினைவேந்தல் நிகழ்ச்சியில் காட்டப்பட்ட வீடியோக்களில் அண்ணன் கிடார் இசையமைப்பில் உற்சாகத்துடன், படத்தில் தென்பட்ட அதே உணர்ச்சியுடன் பாடிய அந்தப் பாடல்கள் அவருடைய குடும்பத்தினருக்கு அவர், அவர்களுடனேயே இருப்பதை என்றென்றும் நினைவூட்டும்..! இந்த உற்சாகத்தையும், சந்தோஷத்தையும்தான் அவர் தம் குடும்பத்தினருக்கு அதிகமாக அளித்துள்ளார். கிருஷ்ணா அண்ணனின் தந்தையார் தாங்க முடியாத சோகத்தில் பாதி அழுகையுடனும் பேசி முடித்த அந்த ஒரு கணம், எந்தவொரு தகப்பனுக்கும் இந்த கொடுமை இனிமேலும் நிகழ்ந்துவிடக் கூடாதே என்றுதான் மனம் சொன்னது..!

இது போன்ற அநியாய துக்க நிகழ்வுகளுக்குச் செல்வது, இதுவே கடைசியாக இருந்து தொலையட்டும்..!

சினிமா 360 டிகிரி-3

09-04-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2 வாரங்களாக கடும் வேலைப் பளு. அதனால் எழுத முடியவில்லை. சரி சேர்த்து வைத்து எழுதிக் கொள்ளலாம் என்று நினைத்து கொஞ்சம் லேட் செய்துவிட்டேன்.. ஸாரி.. மன்னிக்கணும்..!

கந்தா - ரிலீஸ் ஆகவில்லை..!

பாவம் இயக்குநர் திருவாரூர் பாபு. 'கனகவேல் காக்க', 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படங்களுக்கு முன்பாக இவரது இயக்கத்தில் கரண் ஹீரோவாக நடிக்க பூஜை போட்டு எடுத்து முடிக்கப்பட்ட படம் 'கந்தா'. இன்றுவரையிலும் ரிலீஸாக விமோசனமில்லை..!


'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படம் வெளியாகி பல மாதங்களான சூழலில் கரணுக்கு தற்போது இருக்கும் மார்க்கெட்டுக்கு ஏற்றாற்போல், கிடைத்த இடங்களில் தியேட்டர்கள் எல்லாம் புக் ஆகி, தயாரான நிலையில் ரிலீஸுக்கு முதல் நாள் படத்தின் தயாரிப்பாளர் சீட்டிங் கேஸில் கைது செய்யப்பட பட வெளியீடும் புஸ்ஸாகிவிட்டது..! 

புதிய இயக்குநர்களின் படம் வெளிவந்தால் அந்த இயக்குநருக்கு மட்டுமல்ல.. அதில் பணியாற்றியிருக்கும் பல புதியவர்களுக்கும் வாழ்க்கை கிடைக்கும். திருவாரூர் பாபு என்ற பெயரில் இவர் எழுதிய கதைகள் வெளியாகாத பத்திரிகைகளே இல்லை.. அந்த அளவுக்கு கதைச் சுரங்கமாக தோற்றமளிக்கும் பாபுவின் இந்தக் கதையும் சோகமாகத்தானிருக்கிறது..! எப்படியும் இந்த மாதம் ரிலீஸாகலாம் என்கிறார்கள் தயாரிப்புத் தரப்பு. ஆனால் சீட்டிங் கேஸ் பைசல் செய்யப்பட்டால்தான் முடியும் என்கிறது எதிர்த் தரப்பு..! நடுவில் இயக்குநரை கவனிக்கத்தான் ஆளே இல்லை..!

மனோ மகன் ஷாகிரின் அறிமுகம்..!

நாங்க படத்தின் ஹீரோக்களில் ஒருவராக பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ஷாகிரும் நடித்திருக்கிறார். நாங்க படம் படம் வெளியான மூன்றே நாட்களில் தியேட்டரில் இருந்து சுருட்டி அனுப்பப்பட்டது மிகப் பெரும் சோகக் கதை.. திருச்சி மாரீஸ் தியேட்டரில் முதல் நாள், முதல் காட்சிக்கு ஒற்றை இலக்கத்தில்தான் ஆள்கள் வந்திருக்கிறார்கள். ஷோ கேன்சல்.. பல இடங்களில் இரவுக் காட்சிகள் கேன்சல் செய்யப்பட்டது. இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் அதிகப்பட்சமாக விளம்பரச் செலவுகளைச் செய்யாமல் சுருக்கிக் கொண்டு தப்பித்திருக்கிறார் தயாரிப்பாளர் செல்வா.


இதற்காக படித்தில் நடித்தவர்கள் அப்படியே விட முடியுமா..? மனோ ஒரு பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்து தனது மகனை அறிமுகப்படுத்தி வைத்து  பத்திரிகையாளர்களிடம் ஆசி வாங்க வைத்தார். கையோடு ஒரு பிளாஸ்டிக் பையை கொண்டு வந்தார். ஏதாவது பிரிண்ட்ட் பேப்பர்கள் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அதில் இருந்த்து இசைஞானி இளையராஜாவின் புகைப்படம். தனது பேச்சைத் துவக்குவதற்கு முன்பாக அந்தப் புகைப்படத்தை எடுத்து தனது கைகளில் தாங்கிப் பிடித்துக் கொண்டு, “நான் இந்த அளவுக்கு உயர்ந்து, உங்கள் முன்னால் நிற்பதற்குக் காரணம் இந்தத் தெய்வம்தான்..” என்றார்.. பத்திரிகையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!   

பொழுது போக்கு புது பட பூஜை

வடசென்னை பக்கம் இருந்து வர்றேன் என்று சொன்னாலே ஒரு ஸ்டெப் பின்னாடி தள்ளி நின்னு பேசற அளவுக்கு வடசென்னையில் பெயர் பரவலாக தமிழகமெங்கும் பரவியிருக்கிறது..! அந்தப் பெயரை இந்தப் படத்தின் மூலமா மாத்தப் போறாங்களாம்..! வடசென்னையிலும் மக்கள்தான் வசிக்குறாங்க. அவங்கள்லேயும் நல்லவங்க இருக்காங்கன்றதுதான் படத்தோட இந்த பொழுது போக்கு படத்தோட கதையாம்..

"படத்தோட கதையைக் கேட்டவுடனேயே படம் தயாரிக்க ஒத்துக்கிட்டேன்" என்றார் தயாரிப்பாளர் சீனிவாசன்.. இப்படி தயாரிப்பாளர்களெல்லாம் இண்டஸ்ட்ரில இருக்கும்போது ஏன் ஆள் கிடைக்கலைன்னு இயக்குநர்கள் புலம்புறாங்கன்னு தெரியலை..!


ஹீரோயினை வளைச்சு வளைச்சு பேட்டியெடுத்தாச்சு.. கேமிராமேன், இசையமைப்பாளரையும் பேச வைச்சாச்சு.. படத்தோட இயக்குநர் எங்கப்பான்னு கேட்டுக் கேட்டு சலிச்சுப் போச்சு பத்திரிகையாளர்களுக்கு.. வெளியூர் போயிருக்கார். திரும்பி வர முடியலைன்னு ஒரு பதிலையே சொல்லி திருப்பியனுப்பினார்கள் தயாரிப்புத் தரப்பினர்.. ஆனாலும் நெருக்கி விசாரித்தபோது கிடைத்தத் தகவல் கொஞ்சம் ஷாக். 

இயக்குநர் நடமாட முடியாத அளவுக்கு உடல் ஊனமுற்றவராம். எங்கே சென்றாலும் அவரை யாராவது தூக்கிட்டுத்தான் போகணுமாம்..! கேட்டதும் அதிர்ச்சியாகிவிட்டது.. பின்ன எப்படி இயக்கம்..? என்று கேட்டால்.. “அதெல்லாம் செய்வாரு ஸார்..” என்று திடமாக பதில் வந்தது கேமிராமேனிடமிருந்து..! வாழ்த்துகள்..!

நான் ஈ - ஆடியோ ரிலீஸ்

சத்யம் திரையரங்க மேடையை நிரப்பிவிட்டார்கள் திரையுலகப் பிரபலங்கள். தமிழ்த் திரையுலகில் பல பெரிய தயாரிப்பாளர்களுக்கும் கற்பக விருட்சமாக இருக்கும் பிவிபி கம்பெனி தயாரிப்பு என்பதால் அழைக்கப்பட்ட அனைத்து விஐபிக்களும் தவறாமல் ஆஜர். அதிசயித்திலும் அதிசயம் கழுத்தில் ருத்திராட்ச மாலையோடு பாலாவும் வந்திருந்ததுதான்..! 

பார்த்திபன் பேசும்போது நான் ஈயை வைட்டமின் ஈயோடு ஒப்பிட்டவர் சட்டென டிராக் மாறி, ராமஜெயம்ன்னு பேர் வைச்சுக்கிட்டாலும் தப்பிக்க முடியாது போலிருக்கே என்று சிச்சுவேஷன் பன்ச் வைத்தார்..! படத்தின் ஹீரோ மிகவும் சிரமப்பட்டு தமிழிலேயே பேசிவிட்டுப் போனார்..! 


ஆனால் சமந்தா பொண்ணுதான் எதைப் பத்தியும் கவலைப்படாம, தமிழ் ஆங்கிலம் ரெண்டையும் ஒண்ணா கலந்து பேசிட்டுப் போச்சு.. பொண்ணு மேடைல உக்காந்த போஸ்ல பாவம்.. ரொம்ப டயர்டாயிருக்கும்னு நினைக்கிறேன். எதுக்கு இப்படி டிரெஸ் பண்ணிட்டு வரணும்.. இவ்ளோ கஷ்டப்படணும். ஆனாலும் நம்ம கேமிராமேன்கள் விடலையே.. ஜூம் பண்ணி எடுத்திருக்காங்க.. நெட்ல தேடிப் பாருங்க.. கிடைக்குது..!

சலவ்ப திரைப்பட விழா

சரண்யா லவ் பரத் இதுதான் படத்தோட கதை. இதைத்தான் சுருக்கமா இப்படி வைச்சிருக்காங்களாம்..! ஒரே நேரத்துல தமிழ், தெலுங்குல படம் தயாராகுது. 15 வருஷம் கழிச்சு இந்தப் படத்துல அமர்க்களமா ஒரு கேரக்டர் ரோல் செஞ்சிருக்காரு நடிகை பிந்துகோஷ். கொஞ்சம் எடையெல்லாம் குறைச்சிருக்காரு..! 15 கிலோ சதையை வெட்டி எடுத்தாங்களாம்.. 3 தடவை ஆபரேஷன் பண்ணிக்கிட்டாராம்.. இன்னும் நிறைய நடிக்கணும் ஸார் என்றார் ஆசையோடு..!


படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ, ஹீரோயின் யாருக்குமே தமிழ் தெரியாது.. அத்தனை பிரஸ்காரங்களும் தலையைப் பிய்ச்சுக்கிட்டாங்க. இதை எப்படி நாங்க டிவில போடுறது என்று அங்கலாய்த்தார்கள். அத்தனை பேருக்கும் சேர்த்து பி.ஆர்.ஓ. யூனியன் தலைவரும், தயாரிப்பாளருமான விஜயமுரளி மேடையில் தனது பேச்சில் அசத்திவிட்டார்..!

எந்த மேடையில் பேசினாலும் ஒரு கதை சொல்லாமல் முடிக்கமாட்டார்  அண்ணன் விஜயமுரளி. இங்கேயும் ஒரு கதையைச் சொன்னார். 

"பிரம்மன் ஒரு தடவை அடுத்த பிறவில என்னவாகப் பிறக்கப் போகிறீர்கள்ன்னு சொல்லுங்க.. அது மாதிரியே பிறக்க வைக்கிறேன்னு மக்கள்கிட்ட சொன்னாராம்.. ஒருத்தன் மட்டும் ஒரு வாரம் டைம் கேட்டு “பூகோளம் போயி நல்லா சுத்திப் பார்த்திட்டு வந்து சொல்றேன்”னு சொன்னானாம். பிரம்மாவும் சரின்னு சொல்ல ஒரு வாரம் கழிச்சு வந்து அந்த ஆளு, “நான் பூலோகத்துல தமிழ்நாட்டுல ஒரு சினிமா கதாநாயகனாத்தான் பொறக்கணும்”னு பிரம்மாகிட்ட கேட்டானாம்.. எதுக்குடான்னு பிரம்மன் கேட்டதுக்கு, “தமிழ்நாட்டுல சினிமா கதாநாயகன்கள்தான் ரொம்ப நிம்மதியா இருக்காங்க.. அவங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. எல்லா செலவும் தயாரிப்பாளர்களுடையதுதான்.. போடுற ஜட்டில இருந்து சாப்பாடு, கார்ன்னு எல்லாத்தையும் தயாரிப்பாளர்களே செஞ்சுர்றாங்க.. அவங்கதான் அங்க ஹேப்பியா இருக்காங்க. அதுனால அது மாதிரி என்னை பண்ணிடுங்க”ன்னு சொன்னானாம்..! அது மாதிரி சினிமா துறைல தயாரிப்பாளர்களைத் தவிர மத்தவங்க எல்லாம் நல்லாத்தான் இருக்காங்க.." என்றார்.

- இப்படி ஒரு கதையை பெரிய நடிகர்கள் இருக்குற மேடைல, அதுலேயும் தமிழ் நடிகர்கள் இருக்குற மேடைல சொன்னா என்ன ஆகும்..? 

பாட்ஷா ஹிந்திக்கு போகுதாம்..!

இத்தனை வருஷம் கழிச்சு இப்போ ஏன் பாட்ஷா படத்தை இந்திக்குக் கொண்டு போகணும்ன்னு தெரியலை..! சத்யா மூவிஸ் சும்மாவே இருக்கிறதாலே ஏதாவது காசாவது கிடைக்குதேன்னு ரைட்ஸை தூக்கிக் கொடுத்துட்டாங்களோன்னு தோணுது. இதுக்குப் பதிலா அவங்களே இந்த வேலையைச் செஞ்சிருக்கலாம்..!

கரெக்ட்டா பேட்டி எடுக்கத் துவங்கியபோது பிரசாத் ஸ்டூடியோ வாசலில் ரஜினி ரசிகர்கள் தெளஸண்ட் வாலா வெடியை போட்டு அமர்க்களப்படுத்திவிட்டார்கள். தயாரிப்பாளர் ரொம்ப விவரமாத்தான் இருக்காரு போலிருக்கு..! ஹிந்தியில் பாஷா என்ற பெயரில் ரிலீஸாகுதாம்..! 


இப்போ இருக்குற நிலைமைக்கேத்தாப்புல கலர் கரெக்ஷன் செஞ்சிருக்காங்க. தேவா திரும்பவும் புதுசா இசையமைச்சு அதனை ஸ்டீரியோபோனிக் மெத்தட்ல அமைச்சிருக்காங்களாம்..! நிறைய  செலவு பண்ணியிருக்கிறதா தயாரிப்பாளர் சொன்னாரு..! படத்தையும் போட்டுக் காட்டினாங்க.. ரஜினிக்கு டப்பிங் பேசினவரு வாய்ஸ்தான் கொஞ்சம் சரியில்லாத மாதிரியிருந்ததா முழு படத்தையும் பார்த்தவங்க சொன்னாங்க..! எனக்கு என்னமோ.. தமிழ்லேயே இந்தப் படத்தை பிடிக்கவே இல்லை. ஏன்னுதான் தெரியலை..!

3 படக் கதை - என் வாழ்க்கையிலும் ஒரு சோகம்..!

 04-04-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அவரவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், துயரமும் கலந்துதான் இருக்கும். மகிழ்ச்சியை நினைத்துப் பார்க்கும் தருணங்களே, நமக்கு சோகத்தைத்தான் தரும். சோகத்தை அதே கணத்தில் திரும்பிப் பார்த்தால் சொல்ல முடியாத துயரத்தைத்தான் தரும்..! வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு உணர்த்தத்தான் கஷ்டமான சூழல் ஏற்படுகிறது என்பார்கள்..! சிலர் இதனை உணர்ந்து தப்பிக்கிறார்கள்.. பலர் உணராமலேயே தாண்டிச் செல்கிறார்கள்..!

3 படத்தை பார்த்தபோது எனக்குள் எழுந்த ஒரு நெருங்கிய உணர்வைப் புறக்கணிக்க முடியாமல் 3 நாட்களாக கஷ்டப்பட்டுவிட்டேன். என்ன செய்தும் அதனை மறக்க முடியவில்லை..!


1 அண்ணன், 2 அக்காள்கள் மத்தியில் வாழ்ந்தவன் நான். என்னுடைய வாழ்க்கையில் எனக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்த ஆசான்கள் மூவர். முதல் நபர் எனது தந்தை திரு.சவடமுத்து. இரண்டாமவர் திருமதி திருமலையம்மாள் சவடமுத்து, எனது தாய். மூன்றாமவர் எனது இரண்டாவது சகோதரி செல்வமணி.

எனது அண்ணனுக்கும் எனக்குமான வயது இடைவெளி 15 என்பதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.. எனது மூத்த அக்கா ஈஸ்வரிதான் எனது வீட்டையே தாங்கிப் பிடித்தவர். நான் பிறந்தவுடனேயே எனது அம்மாவின உடம்பு வீக்காகி நோயாளியாகிவிட.. அப்போதுதான் 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த எனது மூத்த அக்காள் எங்களது நலனுக்காக தனது பள்ளிப் படிப்பை தியாகம் செய்துவிட்டு கரண்டியையும், வீட்டுப் பொறுப்பையும் கையில் எடுத்தார்.. இப்போதுவரையிலும் அடுத்தவருக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஜீவன் எனது பெரியக்கா.. என்னளவில் எனது இன்னொரு தாய் இவர்தான்..!

எனது இரண்டாவது அக்கா செல்வமணி மிகவும் தைரியமானவர். பட்பட்டென்று பேசும் குணமுடையவர்..! எனக்கும் இந்த அக்காவுக்கு சின்ன வயதில் இருந்தே ஆகாது..! எப்போதும் அடிதடியாகவே இருப்போம்..! இப்போதும் ஒரு விஷயம் நியாபகத்திற்கு வருகிறது..! சின்ன வயதில் 2 அல்லது 3-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது இரவு நேரத்தில் தண்ணீர் தாகமெடுத்தால், பாயில் இருந்து எழுந்து உட்கார்ந்து கண்ணை திறக்காமலேயே “ஆயா.. ஆயா.. தண்ணி..” என்று குரல் கொடுப்பேன். எனது மூத்த அக்காளை எனது குடும்பமே “ஆயா..” என்றுதான் அழைக்கும்..! எனது அம்மா படுத்தபடியே பெரிய அக்காவை எழுப்பிவிடும்.. “ஈஸா.. தம்பி கூப்பிடுறான் பாரு.. தண்ணி கொடு..” என்று சொல்லும்.. தண்ணீர் சொம்பு சின்னக்காவின் பக்கத்தில் இருக்கும். பெரியக்கா சின்னக்காவிடம் “தண்ணியை எடுத்துக் குடுடி..” என்று சொல்லும்.. சின்னக்கா சொம்பை எடுத்து என் வாயருகே நீட்டும்.

சொம்பைப் பிடித்திருக்கும் அந்தக் கைகளை பிடித்துப் பார்ப்பேன். என் பெரியக்கா எப்பவும் கண்ணாடி வளையல்தான் அணிந்திருக்கும். சின்னக்கா ரப்பர் வளையல்தான் அணிந்திருக்கும்.. நான் பிடித்த கையில் கண்ணாடி வளையலாக இல்லாவிட்டால் “போ.. இது பிசாசு.. எனக்கு வேணாம்.. எனக்கு ஆயாதான் வேணும்..” என்று அந்த நேரத்திலும் செல்லம் கொஞ்சுவேன்.. சின்னக்கா தலையில் கொட்டும். “இந்த நேரத்துலேயும் கோபத்தை பாரு..” என்று சொல்லிவிட்டு, “இந்தா.. நீயே உன் தம்பிக்கு கொடு.. பிசாசு பய..” என்று சொல்லி பெரியக்காவை எழுப்பிவிடும். பெரியக்கா எழுந்து “ஏண்டா படுத்துற இப்படி..?” என்று தலையைச் சொரிந்து கொண்டே ஒரு கையால் சொம்பை எடுத்து என் வாயில் வைக்க.. அதன் இரண்டு கைகளையும் இறுகப் பற்றிக் கொண்டு தண்ணீரைக் குடித்துவிட்டு அப்படியே கண்ணைத் திறக்காமலேயே திரும்பவும் படுத்துக் கொள்வேன்..! திரும்பவும் பெரியக்கா என்னை எழுப்பி சேலை முந்தானையால் வாயைத் துடைத்துவிடும். இதுவரையிலும் கண்ணைத் தொறக்காமலேயே அந்த சுக அனுபவத்தை அனுபவிப்பேன்..! இப்போது நினைத்தாலும் கண்களில் நீர் முட்டுகிறது..! எத்தனை, எத்தனை அன்பு நிறைந்த நாட்கள் அவை..? எத்தனை பாசத்தை என் அக்காக்கள் என் மீது காட்டியிருக்கிறார்கள்..? 

காலம் விரைந்து செல்ல.. தொண்டை புற்று நோயினால் என் அப்பாவை இழந்த நிலையில், என் இரண்டாவது அக்கா செல்வமணிக்கு மதுரையில் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் கிளார்க்காக போஸ்ட்டிங் கிடைத்தது..! சந்தோஷப்பட்டது குடும்பம்.. இப்போது அண்ணனின் ஒரு சம்பாத்தியத்தோடு கூட ஒன்று கிடைத்ததே என்றுதான்.. எனது பெரியக்காவுக்கு அப்போது திருமணமாகிவிட்டது..!

நாங்கள் அம்மாவுடன் மதுரை தபால் தந்தி நகருக்கு குடிவந்தோம்.. அங்கே திடீரென்று அம்மாவுக்கு கேன்சர் வந்துவிட.. அம்மாவை பரமாரிக்க வேண்டி ஒன்றரை வருட காலம் எங்கேயும் வேலைக்கே போக முடியாமல் தவித்துப் போய், அந்த எண்ணமே இல்லாத அளவுக்கு வீட்டுக்காக வாழ்க்கைப்பட்டேன். அது பெரிய சோகக் கதை.. பின்னாளில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்..!

அம்மாவும் மறைந்த பின்பு, நான், சின்னக்கா, அண்ணன் மூன்றே பேர்தான் வீட்டில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடியிருந்தோம். இப்போது அண்ணனுக்கு திருமணமானது.. அடுத்து ஒன்றரை ஆண்டுகள் கழித்துதான் சின்னக்காவுக்கு கல்யாணமானது. இவரது கல்யாண வாழ்கையில் கிடைத்த மாமாவின் மூலம்தான் எனக்கு கணினியின் அறிமுகமே கிடைத்தது..!

அம்மா இருந்தவரையிலும் அம்மாவை பகல் வேளைகளில் நான்தான் பரமாரிப்பேன்.. இதற்காக செல்வா அக்காவும், அண்ணனும் நான் கேட்கும்போதெல்லாம் பணத்தைக் கொடுப்பார்கள். அப்புறமும் வீட்டுச் செலவுக்காக கொடுக்கும் பணத்திலும் மிச்சப் பணம் நம்ம பாக்கெட்டுக்குத்தான்..!

இப்போது சின்ன அக்காவுடன் நட்பு இறுகியது. சின்ன வயதில் இருந்த காரணமே இல்லாத குரோதமும், பகையும் போய், நட்பும், அன்பும், பாசமும் எங்கள் இருவருக்குமிடையிலேயே அதிகமானது இந்தக் காலக்கட்டத்தில்தான். என்னுடைய 2-வது மாமாவின் மூலமாக கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி பற்றி கேள்விப்பட்டு அவருடைய உறவுக்காரரின் கம்ப்யூட்டர் சென்டரில் டேட்டா என்ட்ரி கற்றுக் கொண்டேன். அங்கிருந்துதான் எனக்கு கணினி அறிவு அறிமுகம். அத்தோடு அப்போதைய கணினி உலகின் அடிப்படை படிப்புகளான பேஸ்கல் மற்றும் டிபேஸ்,  பாக்ஸ்புரோ வரையிலும் அங்கேதான் கற்றுக் கொண்டேன். இதற்கான செலவு முழுவதையும் செல்வாக்காதான் கொடுத்தது..

அண்ணனும் அதே பி.எஃப். அலுவலகத்தில்தான் பணியாற்றி வந்ததினால் சொக்கிகுளத்தில் இருக்கும் ஆபீஸ் குவார்ட்டர்ஸில் இருவரும் அருகருகேதான் குடியிருந்தார்கள். நான் அண்ணன் வீட்டில் தங்கியிருந்து தினமும் இரண்டு பேர் கொடுக்கும் டிப்ஸில் பொழப்பை ஓட்டிக் கொண்டிருந்தேன். சினிமா மீதான ஆர்வம் அதிகமாகி பின்பு வெறியாகி கணினியை சற்று ஓரம் கட்டிவிட்டு முழு நேரமும் சினிமா பைத்தியமான பின்பு, மெட்ராஸ் சலோ என்று ஒரே நாளில் முடிவெடுத்து கிளம்பி வந்தேன்..!

இந்த நேரத்தில் எனது 2-வது மாமாவைப் பற்றியும் சொல்ல வேண்டும். தங்கமான மனிதர்.. எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாதவர்.. டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். கம்யூனிஸ இயக்கத்தில் ஈடுபாடு உடையவர்..! அதன் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்..! நான் சென்னை வந்து முதல் 2 வருடங்கள் நான் படித்த அதே கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து பின்பு தமிழன் எக்ஸ்பிரஸில் வேலைக்குச் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தபோதுதான் அந்த முதல் சம்பவம் நடந்தது..!

சின்னக்காவுக்கு திடீரென்று உடல் நிலை சரியில்லை என்ற தகவல் கிடைத்தது. என்ன விஷயம் என்று விசாரித்தபோது புதுமையாக ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். “ஒரு வேலையும் செய்றதில்லை. போட்டது போட்டபடி அப்படியே இருக்கு.. வெறிச்சு பார்த்தபடியே உக்காந்திருக்கு. புள்ளை அழுகுது.. அதை கூட பார்க்க மாட்டேங்குது..” என்று எதை, எதையோ வீட்டினர் சொன்னார்கள்.

நான் மதுரை வந்து சின்னக்காவை பார்த்தபோது ஒரு சின்ன மாற்றம் தெரிந்தது.. எப்போதும் “வாடா எருமை..” என்றழைக்கும் பாசமும்,  உற்சாகம் குன்றிப் போய் “வாடா..” என்ற ஒற்றை வரியோடு நிறுத்திக் கொண்டது.. அதேபோல் வீட்டு வேலைகளை செய்வதிலும், பிள்ளையை கவனிப்பதிலும் சுணக்கம் தெரிந்தது.. மாமாவும் இதைச் சொல்லி வருத்தப்பட்டார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் பேசிப் பார்த்தபோது தனக்கு ஒன்றுமேயில்லை என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லியது அக்கா..!

ஒரு மாதம் கழித்து உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக கம்பம் சென்றபோது சின்னக்காவின் மாமனார் வீட்டிற்குச் சென்றேன். அப்போது லீவுக்காக சின்னக்காவும் அங்கே வரப் போவது தெரிந்துதான் சென்றேன். அங்கே அக்காவைப் பார்த்தபோது அதிர்ச்சி.. கழுத்தில் பாதி அறுபட்ட நிலையில் காயம் இருந்த்து. “என்னக்கா..?” என்று விசாரித்தபோது ஒரு மதிய வேளையில் தூக்கில் தொங்கி சாக முயற்சித்ததாக மாமாவும், அவரது வீட்டாரும் சொன்னார்கள். எனது அண்ணனும், அண்ணியும் “என்ன பிரச்சினைன்னு உங்கக்கா சொல்ல மாட்டேங்குது..” என்றார்கள்.. கல்யாணத்திற்கு வந்த உற்சாகம் குன்றிப் போய் அக்காவை பக்கத்தில் உட்கார வைத்து “என்னக்கா பிரச்சினை..?” என்று பலவிதமாகக் கேட்டுப் பார்த்தேன். ஒரு வரியில் சொன்னது.. “தூக்குல தொங்குணேண்டா.. எல்லாரும் சேர்ந்து காப்பாத்திட்டாங்கடா..” என்றது.. புரியவே இல்லை..!

எனது மாமா அக்காவை அழைத்துக் கொண்டு சென்னை வந்தார். இங்கே கீழ்ப்பாக்கத்தில் ஒரு லேடி டாக்டரிடம் காட்டி சிகிச்சை பெற்றார். இங்கே வந்தபோதும் ஒருவித அலட்சியப் போக்கும், கிறுக்குத்தனமான பார்வையும் அக்காவிடம் தென்பட்டது.. சென்னை வந்து சென்ற ஒரு மாதத்திலேயே இரவு நேரத்தில் தூங்குவதற்காக கொடுத்த மாத்திரைகளை மொத்தமாக முழுங்கி உயிருக்குப் போராட்டமாக மீண்டும் ஒரு முறை மருத்துவனையில் சேர்க்கப்பட்டார் அக்கா. இந்த முறையும் நான் ஓடோடிச் சென்று பார்த்தபோது, அதே சிரிப்போடு “மொத்தத்தையும் முழுங்கிட்டேண்டா.. இப்பவும் காப்பாத்திட்டாங்க..” என்றது..!

மருத்துவர்களோ “அக்காவின் மூளையில் அதிர்ச்சியால் ஏதோ லேசான படலம் தோன்றியிருக்கிறது. அதனால்தான் சிறு மாறுதல்.. இது கொஞ்சம், கொஞ்சமாத்தான் மாறும்.. கவனிப்புலேயே வைச்சிருங்க.. இல்லைன்னா உங்களுக்காத்தான் ஆபத்து..” என்று எச்சரித்தார்கள். இதன் பின்பு அக்காவை ஷிப்ட் டைம் போட்டு யாராவது ஒருத்தர் பாதுகாக்க வேண்டியிருந்தது.. இதில் ஸ்கூலுக்கு போகும் பெண் குழந்தையும் இருந்தது.. மாமா வீட்டினர் அக்காவையும், குழந்தையையும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டனர். இடையில் சோட்டானிக்கரை பகவதியம்மன் கோவிலுக்கும் அழைத்துச் சென்று பார்த்தனர்.. எங்கெங்கு இதற்கெல்லாம் ஆன்மிக மருத்துவம் இருக்கிறதோ அங்கெல்லாம் பயணப்பட்டார் அக்கா. வீட்டைக்கூட மாற்றிப் பார்த்துவிட்டார்கள். அலுவலகத்தில் இதற்காகவே பேசி, அதே குவார்ட்டர்ஸில் வேறு பிளாக்கிற்கு குடியேறினார் அக்கா..!

இதற்கிடையில் வேலைக்கும் சென்று வந்து கொண்டிருந்தார் அக்கா. அலுவலகத்தில் அவர் மீது எந்தக் குற்றமும் யாரும் சொல்லவில்லை. எப்போதும் போலவேதான் இருந்தார். இடையில் ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் திருச்செந்தூரில் இருக்கும் எங்களது குடும்ப நண்பரின் வீட்டிற்குச் சென்றுவிட்டார். மாமா பதறியடித்துபோய் அவரை அழைத்து வந்தார். “ஏன் போனார்..? எதற்கு போனார்..?” என்ற கேள்விக்கெல்லாம் விடையே கிடைக்கவில்லை. கேட்டு கேட்டு எங்களது வாய் வலித்ததுதான் மிச்சம்..!

அடுத்து மீண்டும் ஒரு தற்கொலை முயற்சியில் ஈடுபட மாமா வீட்டினர் வெறுப்பாகிப் போய்விட்டார்கள். நானும் அருகில் அமர்ந்து எப்படியெல்லாமோ அன்பாகப் பேசியும், பணிவாக நடந்தும் என்ன காரணம் என்பதைச் சொல்லவே இல்லை.. அல்லது சொல்லத் தெரியவில்லையோ எனக்குத் தெரியாது..! 

இப்போது நான் விருப்பப்பட்டு சென்னையில் “டாக்டர் ருத்ரனிடம் அழைத்துச் செல்லலாம்..” என்று சொன்னேன். மாமா மிகவும் சந்தோஷமாக அக்காவை அழைத்துக் கொண்டு வந்தார். கோடம்பாக்கத்தில் அப்போது இருந்த பழைய கிளினிக்கில் ருத்ரன் ஸாரிடம் காண்பித்தோம். சோதனை முடிந்தபோது செல்வாக்கா அழுது கொண்டேதான் வெளியே வந்தது.. அதன் பின்பு எங்களுடன் பேசிய ருத்ரன் ஸார், “நிறைய பேருக்கு இருக்கிறதுதான்..! எப்படி வரும்னு சொல்ல முடியாது..! மனநிலை தடுமாற்றம்.. இவங்களை எந்தக் காரணத்தை முன்னிட்டும் தனியா இருக்க விடாதீங்க.. எப்போதும் சந்தோஷமான மனநிலைல வைச்சுக்குங்க.. கொஞ்சம், கொஞ்சமாத்தான் சரியாகும்..” என்று சொல்லி கை நிறைய மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். பாண்டி பஜாரில் அக்காவுக்கும், பிள்ளைக்கும் டிரெஸ் எடுத்துக் கொடுத்து சந்தோஷமாக அவர்களை மதுரைக்கு வழியனுப்பி வைத்தேன்.

அந்த நேரத்தில் ஒரு புதிய திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.. காமெடி சப்ஜெக்ட்.. என்ன ஆனாலும் சரி.. திரையுலகில் இதன் மூலம் கால் பதித்தால் போதும் என்று நினைத்து, 2003-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி நான் மின் பிம்பங்கள் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்தேன். அதற்கு மறுநாள் ஆந்திரா, நெல்லூரில் அப்போது குடியிருந்த எனது உயிர் நண்பன் குமரேஷ்பாபுவின் வீட்டிற்கு சென்றேன். அங்கே உட்கார்ந்து கதை எழுதலாம் என்று நினைத்தேன்.  

ஜனவரி 10-ம் தேதி இரவில் எனது அக்காவுடன் தொலைபேசியில் பேசினேன்.. “நல்லா இருக்கேன். பாப்பா நல்லாயிருக்கா.. மாமா வேலைக்கு போயிட்டார். நான் மாத்திரையெல்லாம் கரெக்ட்டா சாப்பிடுறேன்.. தேனில உனக்கு ஒரு பொண்ணு சொல்லியிருக்காங்க.. நான் இந்த வாரம் ஊருக்கு போனா அது விஷயமா மாமா, அத்தைகிட்ட பேசிட்டு வரேன்.. நீயென்ன திடீர்ன்னு ரிஸைன் பண்ணிட்டேன்னு சொல்லுற.. பொண்ணு வீட்டுக்காரங்க கேட்டா நான் என்ன்ன்னு பதில் சொல்றது..?” என்றெல்லாம் தெளிவாக விளக்கமாகப் பேசியது அக்கா..!  

“நான் நெல்லூர்ல கதை எழுதி முடிச்சிட்டு, நேரா மதுரைதான் வர்றேன்.. அப்போ அது பத்தி பேசிக்கலாம்..” என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன். மறுநாள் மதியம் 1.30 மணியிருக்கும். திண்டுக்கல்லில் இருக்கும் எனது மாமா ஒருவர், எனக்கு போன் செய்து அந்தத் துயரச் செய்தியை சொன்னார்.. “செல்வா சூஸைட் பண்ணிருச்சுப்பா.. உடனே கிளம்பி வா..” என்றார்.. 

எனது ஆதர்ச கனவான சினிமாவுக்கு கதை எழுதுறோம் என்ற உச்சத்தில் இருந்த சந்தோஷம், அந்த ஒரே நொடியில் தரைமட்டமானது..! கிட்டத்தட்ட 18 மணி நேரங்கள் பயணித்து மறுநாள் மதியம் 1 மணிக்கு மதுரை அரசு மருத்துவமனையின் மார்ச்சுவரியில் கருகிப் போன நிலையில் எனது செல்வாக்காவை பார்த்தபோது நேர்ந்த துயரம், இப்போதும் நான் திரும்பிப் பார்க்க நினைக்காத ஒன்று..! ஆனால் இந்தத் துயரத்தைத்தான் மீண்டும் நினைக்க வைத்துவிட்டது கடந்த வெள்ளியன்று இரவு சத்யம் தியேட்டரில் நான் பார்த்த 3 திரைப்படம்..!  

என்ன காரணம் என்று இன்றுவரையிலும் தெரியவில்லை. அக்கா ஆசைப்பட்டது போன்ற கணவர்.. அழகான குழந்தை.. கை நிறைய சம்பளம்.. சொந்த வீடு வாங்கியாச்சு.. வேறென்ன வேண்டும்..? எப்படி அந்த நோய் அவரைத் தாக்கியது.. அவரது 30 வயது வரையிலும், எங்களுடன் இருந்தவரையிலும் நாங்க பார்த்திருக்காத புதிய தோற்றத்தை சின்னக்காவிற்குள் தோற்றுவித்தது எப்படி..? ஒன்றுமே புரியவில்லை..!

பி.எஃப். அலுவலகத்தில் அப்போது லஞ்ச, லாவண்யம் தலைவிரித்தாடிய தருணம். லஞ்சம் வாங்குபவர்களை “உஜாலா கோஷ்டி” என்பார்கள். எங்களது குடும்ப நண்பர்களான அலுவலர்கள் பலர் இந்த லஞ்ச வழக்கில் சிக்கி சஸ்பெண்ட்டானார்கள். அதில் ஒரு விஷயத்தை மிக அருகில் இருந்து பார்த்தாராம் செல்வா அக்கா. சஸ்பெண்ட்டானவர், சஸ்பெண்ட் லெட்டரை வாங்கியவுடனேயே கமிஷனர் அறையில் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். அவரை தூக்கி வந்து மயக்கம் தெளிய வைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தது செல்வா அக்காதானாம்.. இந்த ஒரு சம்பவத்தை மட்டுமே துவக்க நிலையாக திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள் அலுவலகத்தினர். வேறேதுவும் தெரியவில்லை..

சிந்தனை.. சிந்தனை.. சிந்தனை.. எப்போதும் தலையில் கை விரல்களால் வருடியபடியே அமைதியாக உட்கார்ந்திருக்கும். “என்னக்கா..?” என்று கேட்டால் “ஒண்ணுமில்ல..!” என்று சொல்லிவிட்டு படுக்கப் போய்விடும். ஆனால் தூங்காது.. கொட்ட, கொட்ட முழிச்சிருக்கும். கண்களை மூடினாலும் இமைகள் உள்ளுக்குள் சுழன்று கொண்டிருக்கும். மாத்திரைகள் சாப்பிட்டதால் தொடர்ந்து உடல் குண்டாகி முகமும் உப்பிப் போய்விட்டது. அது தொடர்பான பிரச்சினைகளும் வேறுவிதமாக வர.. பாவம் என்னுடைய மாமாதான் தவியாய் தவித்துப் போனார். அவரும் எவ்வளவுதான் பார்ப்பார்..?

2003 ஜனவரி 13-ம் தேதியன்று காலையில் மாமா வேலைக்குப் புறப்பட்டு போகும்வரையிலும் சாதாரணமாகவே இருந்திருக்கிறது அக்கா. “கேஸ் தீர்ந்து போச்சு.. மண்ணெண்ணைய் வாங்கிட்டு வாங்க..” என்று சொல்ல.. மாமாவும் எந்த சந்தேகமும் இல்லாமல் 10 லிட்டர் மண்ணெண்ணையை வாங்கி வைத்துவிட்டுப் போயிருக்கிறார். பிள்ளையை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு.. மதியம் துணியெல்லாம் துவைத்திருக்கிறார் அக்கா. எதிர் வீட்டினர் இதுவரையிலும் “உங்கக்கா நல்லாத்தான் இருந்துச்சு..” என்கிறார்கள். 

மதியம் 1 மணிவாக்கில்தான் திடீரென்று மண்ணெண்ணெய் கேனைத் தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்று மொத்தத்தையும் தலையில் கொட்டி தீக்குச்சியால் பற்ற வைத்துக் கொண்டு அப்படியே குப்புறப் படுத்திருக்கிறார் அக்கா..! ஒரு சின்ன அலறல் இல்லை.. ஓட்டம் இல்லை..! வெறும் புகை மட்டுமே அந்த மாடியில் இருந்து எழும்பியதாலும், அந்த மொட்டை வெயிலில் யாரும் வெளியில் வராததாலும் கவனிக்க ஆளே இல்லை.. 2 மணிவாக்கில் கீழ்வீட்டுக்காரர்கள் துணி காயப் போட மொட்டை மாடிக்கு வந்தபோதுதான் கருகிப் போன அக்காவை கண்டிருக்கிறார்கள்..!

தற்கொலை என்பதெல்லாம் அதீதமான உணர்ச்சியின் தூண்டுதல்... அந்த நிமிடத்திய முடிவு என்பதெல்லாம் போய்.. போயே தீர வேண்டும் என்று நினைப்பதெல்லாம் மன நோய்தான். ஆனால் இது எப்படி வருகிறது..? ஏன் வருகிறது..? என்பதுதான் யாருக்கும் தெரிவதில்லை. பணக்காரர், ஏழை என்றால்லாம் பாகுபாடு பார்க்காமல் இந்த நோயினால் அழிந்தவர்கள் ஏராளம்..! இது போன்ற பாதிக்கப்பட்ட மனநிலை உடையவர்களை 24 மணி நேரமும் கண் பார்வையிலேயே வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அது கடைசியில் தற்கொலையில்தான் முடியும்..!

நடிகை ராதிகாவின் முன்னாள் ஹேர் டிரெஸ்ஸர்கூட இந்த மாதிரியான மன நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக சொல்லியிருக்கிறார்..! ஐஸ்வர்யாவுக்கு நன்கு தெரிந்த யாராவது ஒருவர் இப்படி தனது வாழ்க்கையைத் தொலைத்திருப்பாரோ என்னவோ..? மிகத் தத்ரூபமாக ஒரு மன நோயாளியின் இரட்டை வேடத்தை வெளிக்காட்டியிருக்கிறார்..! 

ஒரு திரைப்படம் நாம் பார்த்த, சந்தித்த விஷயங்களை கிளறிவிட்டாலே அது நிச்சயம் குறிப்பிடத்தகுந்த படம்தான்.. அந்த வரிசையில் இந்தப் படம் என் வாழ்க்கையிலும் நான் மறக்க முடியாத ஒரு படமாக அமைந்துவிட்டது..! 

3 - சினிமா விமர்சனம்

04-04-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும் திரைப்படங்கள் பலவும் புஸ்ஸாகிப் போவதுதான் தமிழ்ச் சினிமாவின் நடைமுறை. இந்த நடைமுறையையே இப்போது புஸ்ஸாக்கியிருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா..! தனது முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றுவிட்டார்..

சாதாரண சினிமா பாடல் ஒன்று 3 லட்சம் பேரால் பார்க்கப்படும் அளவுக்கு பேசப்படும் என்று அவர்களே நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் கிடைத்ததை சர்வ நிச்சயமாக பயன்படுத்திக் கொண்டது 3 டீம். அதற்காக அவர்களுக்கு பாராட்டுக்கள்..!

தனுஷ் நிச்சயமாக பள்ளி மாணவராக, கல்லூரி மாணவராக நடிப்பதை இந்தப் படத்தோடு நிறுத்திவிடுவதே இப்படத்திற்குக் கிடைக்கும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்..!


படத்தின் முதல் பாதியில் இருக்கும் கண்டவுடன் காதலும், அதைத் தொடர்ந்த காதல் தூது விடும் படலங்களும், எதிர்ப்புகளும், புறக்கணித்த திருமணக் கதைகளும் வாரவாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் படங்களில் இருக்கும் கதைதான். ஆனால் இதில் உண்மை இருக்கிறது.. உணர்ச்சி இருக்கிறது.. நடிப்பும், இயக்கமும் போட்டி போட்டிருக்கின்றன..!

தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இரண்டாவது முறையாகப் பெற்றாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.  பரவசப்படுத்தியிருக்கிறார்.. பள்ளி மாணவர் கெட்டப்பில் அவர் காட்டும் மேனரிசமும், நிமிடத்திற்கொரு முறை மாறும் நடிப்பும் அசத்தல்..! எந்த வகையிலும் தனுஷின் நடிப்பை குறை சொல்லவே முடியவில்லை..! சிவகார்த்திகேயனின் புலம்பலோடு, ஸ்ருதிக்காக காத்திருக்கும் தருணங்களில் அவர் காட்டும் ஆக்சன்கள் காதலிக்காதவர்களைக்கூட அது பற்றிய சிந்தனைக்குள் தள்ளி விடுகிறது..!

ஸ்ருதியை முதல் முறையாக பைக்கில் உட்கார வைத்து ஓட்டிக் காட்டும் காட்சியிலும், ஸ்ருதியின் வீட்டுக்குச் சென்று “இன்னிக்கு நாம சந்திக்கலாமா..?” என்று டென்ஷன்படுத்துவதும், இரவில் தனிமையில் ஸ்ருதியைச் சந்திக்கும் காட்சிகள்.. டியூஷன் சென்டரில் முதல் முறையாக ஸ்ருதி அவரைப் பார்த்து ஸ்மைல் செய்தவுடன் காட்டும் எக்ஸ்பிரஷனும் சொல்ல முடியாதது..! நடிப்பில் தனுஷ் ஒரு படி மேலே போயிருக்கிறார்..!  இதற்கு நேர்மாறாக இடைவேளைக்குப் பின்னான வேறொரு களத்தில் அவர் காட்டும் ஆக்ரோஷம், ஸ்ருதிக்கு தன்னைப் பற்றித் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக தவிக்கும் பரிதவிப்பு.. ஸ்ருதியுடன் இயல்பாக இருப்பதாகக் காட்டிக் கொண்டு இரு மன இடைவெளியில் அவர் வாழும் வாழ்க்கையில் பொய் சொல்லாமல் வாழ்ந்திருக்கிறார் தனுஷ்..!

இதற்கு மிகச் சரியான நடிப்பை ஸ்ருதியிடம் இருந்து வாங்கியிருக்கிறார் ஐஸ்வர்யா. ஸ்ருதியின் டைட் குளோஸப் ஷாட்டுகளும், அவருக்கு டப்பிங் பேசியவரின் உணர்ச்சிப்பூர்வ நடிப்பும் சேர்ந்து ஸ்ருதியை நடிப்பு கேரியருக்குள் தள்ளியிருக்கிறது.. ஏ.ஆர்.முருகதாஸ் அவசியம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். இதே ஸ்ருதியை வைத்து தான் என்ன செய்தோம் என்பதை அவர் சிறிது நேரம் சிந்தித்துப் பார்த்தால் அவருக்கும் நல்லது.... அவரது அடுத்தடுத்த படங்களில் நடிக்கவிருக்கும் ஹீரோயின்களுக்கும் நல்லது..!

முதன்முதலாக தனுஷிடம் அமைதியாக, அடக்கமாக பேசி வீட்டுக்குத் தெரிஞ்சா பிரச்சினையாயிரும் என்று சொல்லும் ஸ்ருதியின் அந்தப் பேச்சு, டியூஷன் சென்டர்வரையிலான தொடர் பார்வையினால் சலனப்பட்டு ஓகே சொல்லும் அந்த ஒரு காட்சியே கவிதைதான்..! 

ச்சும்மா இருக்கும்போது அழகாக இருந்தால் அவர் நடிகையல்ல.. நடிக்கும்போது இன்னும் அழகாக இருந்தால் அவர்தான் நடிகை.. இதில் ஸ்ருதி சென்டமே அடித்திருக்கிறார்..! கோவில் வாசலில் “போடி. அமெரிக்காவுக்கே போயிரு” என்று தனுஷ் கோபப்படும் காட்சியில் கைகளை குறுக்கேக் கட்டிக் கொண்டு அழுதபடியே திரும்பிச் செல்கிறாரே, அந்த ஒரு காட்சிக்காகவே ஸ்ருதிக்கு ஒரு ஓ போடலாம்..! 
அதேசமயம் ஸ்ருதியின் நடிப்புத் திறமை இத்தனை இருக்கிறது என்பதற்காக இன்னும் அவருடைய மிச்ச, மீதி கேரியரில் அழுக வேண்டிய காட்சிகளுக்கு அனைத்தையும் சேர்த்து இந்த ஒரு படத்திலேயே அழுது தீர்த்திருக்கிறார் என்பதையும் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது..!

இப்போதுதான் மயக்கம் என்ன படத்தில் இதே போன்ற ஒரு கதையைப் பார்த்து நொந்து போயிருக்கும் நிலையில் இதே பேட்டர்னில் மீண்டும் ஒரு கதையை செய்ய ஐஸ்வர்யாவுக்கு எப்படி தைரியம் வந்த்து என்று தெரியவில்லை. ஆனால் அந்தத் தைரியத்திற்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.  கதைக் களன் மட்டுமல்ல.. திரைக்கதையையும் தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்றாற்போல சென்னை போன்ற பெருநகரங்களில் பள்ளி மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகளை உரித்துக் காட்டினாற்போல் எடுத்திருக்கும் விதம் அசர வைக்கிறது..!

முதல் பாதிக்கு சிறிதுகூட சம்பந்தமே இல்லாத இரண்டாம் பகுதியில்தான் ஐஸ்வர்யா நிறையவே ஜெயித்திருக்கிறார். இதற்காக அவர் கொடுத்திருக்கும் ஓப்பனிங் லீடிங் எந்தவொரு இயக்குநருக்கும் வராத தைரியம்.. கணவர்தானே நடிகர் என்பதோடு சொந்தத் தயாரிப்பு என்பதாலும் துணிந்திருக்கிறார் ஐஸ்.. மானசீக நடிகர் பிணமாக இருக்கும் காட்சியோடு துவக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தினை ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களா என்ற கேள்விக்குறியோடு வரும்கால இயக்குநர்கள் பாலோ அப் செய்தால் என்னவாக இருக்கும்..? யோசித்துப் பார்த்தால் வேறு எந்த இயக்குநருக்கும் இந்த அளவுக்கு நிச்சயமாக தைரியம் வராது..! வெல்டன் ஐஸ்..!

இயக்கத்தில் குறையே சொல்ல முடியாத அளவுக்கு கச்சிதமாக செய்திருக்கிறார். பிரபு-பானுபிரியாவின் கேரக்டர் ஸ்கெட்ச் எதிர்பாராதது..! எத்தனை பணக்கார வீடுகளில் இது போன்று பக்குவப்பட்டு போயிருக்கிறார்கள்..! இதற்கு நேரெதிராக ஸ்ருதியின் வீட்டைக் காட்டுகிறார் ஐஸ்வர்யா. ஸ்ருதியின் அப்பா தனுஷை பார்த்தவுடனேயே அறைகிறார். வீட்டிலும் கோபப்படுகிறார்.. அம்மா ரோகிணியும் ஆத்திரப்படுகிறார். வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள். ஒரு மிடில் கிளாஸ் பேமிலியர்கள் என்றாலே இப்படித்தானோ என்று பேச வைத்திருக்கிறார் ஐஸ். திருமணம் முடிந்து தனுஷ் ரோகிணி வீட்டிற்கு வந்து அழைக்கும்போது அவரது பேச்சில் மருமகனது உண்மைத்தனத்தை ரோகிணி மட்டுமே கண்டறிவதாக இயக்கம் செய்திருப்பது நன்று..! 

தனுஷ்-ஸ்ருதி முதல் இரவு காட்சி மிகவும் ரசனையானது..! உண்மையாகவே ஆண், பெண் அடிமைத்தனம், திருமண பந்தம் என்ற சங்காத்தமே இல்லாமல் துவங்கியிருக்கும் அந்தக் காதல் வாழ்க்கைக்கு முதல் காட்சியே அமர்க்களம்..! “என்ன பேண்ட் போட்டிருக்க..?” என்ற தனுஷின் கேள்விக்கு “நீயென்ன வேஷ்டியா கட்டிருக்குற..?” என்ற ஸ்ருதியின் பதில் ரசனையானது..!  பிரச்சினை இப்படித்தான் வேறு கோணத்தைத் தொடப் போகிறது என்றுதான் நினைத்தேன். ஆனால் இடைவேளைக்குப் பின்பு அது வேறொருவிதமாகப் போகும் என்று நினைக்கவேயில்லை..!

தனது இயக்கத் திறமைக்கு தீனி போடும்விதமான காட்சிகளைத்தான் வைத்திருக்கிறார் ஐஸ். தனுஷின் நண்பர் சுந்தரிடம் விசாரிக்கத் துவங்கி அவர் மூலமாக காட்சிகளை தொடர்ச்சியாக பின்ன வைத்து, இடையிடையே ஸ்ருதியின் கதறலோடு படத்தின் முழு பாரத்தையும் தனுஷின் மீது சுமத்தியிருக்கிறார் இயக்குநர். ஹோட்டல் கார் பார்க்கிங் ஏரியாவில் நடக்கும் சண்டை காட்சியில் தனுஷ் தனது உச்சக்கட்ட நடிப்பைக் காட்டியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்..! 

நடிப்பு, இயக்கத்திற்கு தோதான வேல்ராஜின் கேமிராவும் அழகையே பதிவு செய்திருக்கிறது..! சென்னையின் எந்த ஏரியாவில் தனுஷ் சைட் அடிக்கும் அந்தப் பகுதியைப் படம் பிடித்தார்கள் என்று தெரியவில்லை. லாங் ஷாட்டில் பார்ப்பதற்கு ஸ்கிரீனெஸ் சூப்பர்ப்..! கிரேடிங்கை கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார்கள் என்பது பலவித காட்சிகளிலும் தெரிகிறது..! 

பல லட்சம் பேர் ஏற்கெனவே கேட்டு முடித்து ஆவலுடன் எதிர்பார்த்ததாலோ என்னவோ, கொலைவெறிடி பாடல் காட்சி மட்டும் சப்பென்றுதான் இருக்கிறது ரசிகர்களுக்கு.. எனக்கு ஓகேதான்.. வேறென்ன செய்ய முடியும்..? ஏர்செல்லின் 2 கோடி ரூபாய் ஸ்பான்ஸரில் இந்த ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்..! படத்தின் தரத்திற்கு இதுதான் சரி என்றே எனக்குத் தோன்றுகிறது..! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பின்பு ஒரே படம், ஒரே பாடலின் மூலமாக மிகப் பெரிய பெயர் கிடைத்திருப்பது அனிருத்திற்குத்தான்.. இதனை இவர் எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார் என்று பார்ப்போம்..! படத்தின் மற்ற பாடல்கள் பரவாயில்லை ரகம்தான்.. ஒவ்வொரு ஷாட்டிலும் ஸ்ருதியும், தனுஷும் பின்னிப் பிணைந்து கொண்டிருக்க.. யார் பாடலைக் கேட்டிருப்பார்கள்..!

மனைவி என்றில்லை.. ஒரு தமிழ்ப் பெண் இயக்குநராக இருந்ததினால் கிஸ் சீன்கள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு, தனுஷிற்கு பெரும் ஏமாற்றமாகியிருக்கும் என்று நினைக்கிறேன். இதுவே ஹிந்தி, தெலுங்கு படமென்றால் ஸ்ருதியின் மூக்கிற்கு பதிலாக உதடுகள் புண்ணாகிப் போயிருக்கும்.. தப்பித்தார் ஸ்ருதி..!

தமிழகம் முழுவதும் படம் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்க.. வழக்கம்போல படத்திற்கு எதிர்ப் பாட்டுக்களும் குறைவில்லாமல் வந்து கொண்டேயிருக்கின்றன..! காரணம் என்ன என்றுதான் தெரியவில்லை. கதை, திரைக்கதை, நடிப்பு, இயக்கம் என்ற வரிசையில் எந்தக் குறையும் சொல்ல முடியாத படம்தான் இது..!

மயக்கம் என்ன படத்திலேயே பார்த்துவிட்டோம் என்பதுதான் இவர்கள் சொல்லும் விளக்கமெனில் அதனைவிட அழகாக, அழுத்தமாக இப்படம் அந்த நோயின் கொடுமையை பதிவு செய்திருக்கிறது என்பதுதான் ஐஸ்வர்யா இப்படத்தின் மூலம் சொல்லியிருக்கும் செய்தி..! தமிழ்ச் சினிமாவிற்கு ஒரு மிகச் சிறந்த பெண் இயக்குநர் கிடைத்திருக்கிறார் என்பதுதான் இப்படத்தின் மூலம் நமக்குக் கிடைத்திருக்கும் செய்தி..

தமிழகம் முழுவதிலும் படத்திற்கு நல்ல வசூல் என்று விநியோகஸ்தர்கள் பாராட்டுகிறார்கள். போட்ட காசை முதல் வாரத்திலேயே கலெக்ட் செய்துவிடலாம் என்பது லேட்டஸ்ட் எதிர்பார்ப்பு. அதற்கடுத்து வருவதெல்லாம் லாபம்தானாம்..! முதல் மூன்று நாட்களிலேயே ஒன்றரை கோடியை சென்னையில் மட்டும் வசூல் செய்திருப்பது சாதனைதான்..! ஐஸ்வர்யா அவரது அப்பனுக்கும் சேர்த்தே கொஞ்சம் சவால் விட்டிருக்கிறார் போல் தெரிகிறது..! படத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்..!

படத்தை இந்த அளவுக்கு பாராட்டுகிறானே என்ற உங்களது சந்தேகம் நியாயமானது. படம் எனக்கு பிடித்திருக்கிறது.. இதற்கும் காரணங்கள் இருக்கின்றன. இப்படத்தின் டியூஷன் காட்சிகளில் இருக்கும் காதல், சைட் அடிக்கும் விஷயங்கள் எனது பழைய கதையை திரும்பவும் பிளாஷ்பேக்காக கிளறிவிட்டது ஒன்று..

இன்னொன்று இதனைவிடவும் இப்படத்தின் இடைவேளைக்குப் பின்னான கதை. மயக்கம் என்ன படத்தைவிடவும் என் சோக வாழ்க்கையின் ஒரு பகுதியை நியாகப்படுத்திவிட்டது.. அனுபவித்தவர்களுத்தான் அதன் வலி புரியும் என்பார்கள். அந்த வகையில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது என் மனம் என் நிலையில் இல்லை..! அந்த அளவுக்கு மீண்டும் பழசை கிளறிவிட்டது..! அந்த எனது பழைய வாழ்க்கை நினைவுகளை இங்கே சென்று படித்துக் கொள்ளுங்கள்..!

கடைசிவரையிலும் தொடர்ந்தமைக்கு எனது நன்றிகள்..!

சூரிய நகரம் - சினிமா விமர்சனம்

02-04-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எத்தனை முறை அடிபட்டாலும், எத்தனை பேரின் கண்ணீர்க் கதைகளைக் கேட்டாலும் புதிய தயாரிப்பாளர்கள் திருந்த மாட்டார்கள் போலிருக்கிறது.!

கையில் பணம் இருக்கிறது என்றாலும், தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு கதையையும், இயக்குனரையும் தேர்வு செய்வதுதான் அவர்கள் செய்ய வேண்டிய மிகப் பெரிய வேலை..! சிறந்த இயக்குநர்கள் எனப்படுபவர்களின் படங்களே தலைகுப்புற விழுகும் சூழலில், புதுமுக இயக்குநரிடம் லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்னும் கேட்கும் அளவுக்கு ஒரு காமெடியான படத்தை எடுத்துக் கொடுத்தால் எப்படி..?


மதுரைதான் கதைக் களம். அதனால்தான் சூரிய நகரம் என்ற டைட்டிலாம்..! ஹீரோ ராகுல், ஹீரோயின் மீரா நந்தனின் வீட்டுக்கு நேர் எதிரில் இருக்கும் கஞ்சா கருப்புவின் வொர்க் ஷாப்பில் மெக்கானிக்காக வேலை செய்கிறார். மீரா நந்தனின் அப்பா இயக்குநர் ஆர்.வி.உதயகுமார். சாதிக்காகவே உயிர் வாழும் உத்தம மனிதர். தன் உயிரைவிட சாதியே பெரிது என்று நினைக்கும் சாதிச் சங்கத்தின் தலைவர் அவர்தானாம்..! எந்தச் சாதி என்பதை வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் தேவர் சாதியைத்தான் குறிப்பிடுகிறார் என்பதற்கு பல குறியீடுகளை இலவசமாக அள்ளி வீசியிருக்கிறார்கள்.

ராகுலின் குடும்பம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. கஞ்சா கருப்பு அண்ட் கோவிடம் எப்படி வந்து மாட்டினார் என்பதும் தெரியாது. ஆனால் ஹீரோயினை பார்த்தவுடன்.. அதுவும் அவரது வளையல் அணிந்த ஒரு கையைப் பார்த்தவுடனேயே லவ்வு பீறிக்கிட்டு வருதாம்..!  பின்னாடியே துரத்துறாரு.. ஹீரோயினும் லவ் பண்ண ஆரம்பிக்க.. 2 டூயட்டுகளுக்கு வசதியா போச்சு..

ஆர்.வி.உதயகுமாரின் அறிமுகத்திற்கு இத்தனை பில்டப்புகள் எதுக்குன்னு தெரியலை..? அத்தோட அவரோட வீட்டு உறவுகளையெல்லாம் அறிமுகப்படுத்துறதெல்லாம் பக்கா சீரியல் டைப்.. உதயகுமாரின் கையாளின் தங்கையை வேறொரு சாதிக்கார பய இழுத்துக்கிட்டு ஓடிட்டினான்னு தெரிஞ்சவுடனேயே தேடத் துவங்குறாங்க பாருங்க.. காமெடி களை கட்டுது.. 

மதுரைல தேவர் சிலை பக்கத்துல தேடிக்கிட்டிருக்குறவங்க டக்குன்னு ஒரு போன் வந்தவுடனேயே பிளைட்ல ஏறி தேனி என்.ஆர்.டி. நகர்ல பாரதிராஜா வீட்டுத் தெருவுக்கே போயிட்டாங்க. இவங்க போய் லைட்டு அடிச்சவுடனேயே மிகச் சரியா லவ்வர்ஸ் அந்தத் தெருவுலதான் துண்டைக் காணோம்.. துணியைக் காணோம்ன்னு ஓடிக்கிட்டிருக்காங்களாம்.. ஆளைப் பிடிச்சவுடனேயே ஒரே வெட்டு.. இவனை என்ன செய்யணுமோ செய்யுன்னு கெத்தா சொல்லிட்டு வண்டியேறுறாரு சாதித் தலைவரு..? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே சீனை காட்டி நம்ம தாலியை அறுக்கப் போறாங்கன்னு தெரியலை..?

இதுல உதயகுமாருக்கு ஒரு தங்கச்சி.. அவருக்கு ஒரு பொறம்போக்கு புள்ளை.. ஆத்தா வீட்ல பார்த்துக்கிட்டிருக்கும்போதே வேலைக்காரியை ரூமுக்குள்ள இழுத்துட்டுப் போய் ஜல்சா பண்ற டைப்பு. உறவு விட்டிரக் கூடாதுன்னு இந்த மருமகனுக்கு கட்டி வைக்கப் பாக்குறாங்க.. ஓடுவதுதான் சிறந்த வழின்னு லவ்வர்ஸ் ஓடத் துவங்க.. அப்பாவும் அவங்களை  மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல பார்த்துர்றார்.. ஹீரோவைத் தூக்கிப் போட்டு மிதிச்சு சட்னியாக்கிட்டு, பொண்ணை அழுங்காம, குலுங்காம தூக்கிட்டுப் போறாரு..! அப்புறம் அவங்க ஒண்ணு சேர்ந்தாங்களா இல்லையான்றதை முடிஞ்சா தியேட்டர்ல போய் பார்த்துக்குங்க..! 

ரீலுக்கு ரீல் சாதி.. சாதி.. சாதின்னு இவங்க பேசுற பேச்சைப் பார்த்தா சாதிக்காரப் பயலுவலே காதைப் பொத்திக்கிட்டு போயிருவாங்க. அந்த அளவுக்கு சாதிப் பித்து பிடிச்சுப் போயிருக்குன்னு இந்தப் படத்துல நிறுவியிருக்காரு இயக்குநரு..!

ஹீரோ ஆயுள் தண்டனை கைதியா ஜெயில்ல இருக்காரு.. விசாரணை கைதியா 15 நாள் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிடுறாரு.. ஆனா ஹீரோவை தண்டனை கைதி உடைல உள்ள கொண்டு போறாங்க.. என்ன பெர்பெக்சன் பாருங்க..!?

ஜெயில்ல தற்கொலை முயற்சியில் ஈடுபடும் ஹீரோவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வர்றாங்க..! எங்கேன்றீங்க.. சரவணா மருத்துவமனைன்ற தனியார் ஆஸ்பத்திரிக்கு. இயக்குநர் இவ்வளவு நாளா வேறெங்கயோ வாழ்ந்திருக்காரு போலிருக்கு..  ஹீரோயினும் விஷத்தைக் குடிச்சிட்டு ச்சும்மா அதே ஆஸ்பத்திரிலதான் ஹாயா படுத்திருக்கு..! இயக்குநர், முன்ன பின்ன விஷம் குடிச்சவங்க கதியை ஆஸ்பத்திரில போய் பார்த்ததில்லை போலிருக்கு..! ஏதோ காய்ச்சல் வந்த மாதிரி படுத்திருக்கு பொண்ணு. கைல டிரிப்ஸ்கூட ஏறலை.. ஏத்தி முடிச்ச மாதிரி காட்டுறாங்களாம்..! அடுத்த சீன்ல தானா எந்திரிச்சு நடக்குது..! அங்க ஹீரோ இருக்குற ரூம் வாசல்ல நிக்குற 2 போலீஸ்காரங்க, “வாய்யா போய் ஒரு டீ அடிச்சிட்டு வருவோம்..”ன்னு டயலாக் பேசிட்டே நடந்து போறாங்க..!  இத்தனை சினிமாக்களை பார்த்தும் இப்பவும் எல்கேஜி ஸ்டூடண்ட் மாதிரியே படத்தை எடுத்துக் கொடுத்தா எப்படி..? 

சாதிக்காரங்க எல்லாரும் சேர்ந்து உங்கப்பா மாதிரியே நீங்களும் தலைவரா இருங்கன்னு சொல்லி வற்புறுத்த முடியாதுன்னு மறுக்குறாரு உதயகுமாரின் மகன்..! இவர்தான் சிறைக்கும், வீட்டுக்குமாக நடந்து அக்காவின் காதலை வாழ வைக்கிறார்..!

10 ஆண்டு கால சிறை வாழ்க்கையை, ஜஸ்ட் ஒரேயொரு சீனில் ஜம்ப் செய்து திரைக்கதையைக் கொண்டு போயிருக்கிறார் இயக்குநர். 10 ஆண்டுகால முடிவில் கைதிகளை விடுதலை செய்யும் திட்டத்தை துணைக்கு வைத்துக் கொண்டு ஹீரோவை விடுவித்து, ஹீரோயினோடு சேர்த்து வைக்க தம்பியும் எண்ணுகிறார்..  ஆனால் விதி வேறு மாதிரியாகி.. ஒரு ஊரே திரண்டு வந்து இவர்களை கொலை செய்தே தீர வேண்டும் என்று சொல்வதெல்லாம் ரொம்பவே டூ மச்.. இதற்காக அந்தத் தம்பி செய்யும் கருணைக் கொலையும் ரொம்ப ரொம்ப டூ மச்சு.. 

இதுதான் இப்படியென்றால் படத்தின் பாடல்களை கேட்டீர்களேயானால் என்ன செய்வீர்களோ தெரியாது..? அந்த அளவுக்கு என்ட்டர் டைப் வசனங்களை பாடல் வரிகளாக்கி இசை என்ற பெயரில் அலங்கோலப்படுத்தியிருக்கிறார்கள்..!

ஹீரோ ராகுலைவிடவும் ஹீரோயின் ஓகேதான்.. பாவாடை, தாவணில ரொம்ப நாள் கழிச்சு ஒரு அழகு பொண்ணை ஸ்கிரீன்ல பார்க்க முடிஞ்சது..! தம்பியை மொட்டை மாடிக்கு அடிக்கடி விரட்டி தான் வரப் போவதைச் சொல்லச் சொல்லும் காட்சியிலும், வொர்க் ஷாப்பில் பூக்கள் மத்தியில் காதல் வசனம் பேசும் காட்சியிலும் அழகும், நடிப்பும் மிளிர்கிறது..! ஏதோ மலையாளத்துக்காக நடிக்க வைத்திருந்தாலும், கேரளாவில் ஓடுமா என்பதும் சந்தேகமே..

ஜாதி மேட்டர் என்பதால் சென்சார் போர்டில் ரொம்பவே உன்னிப்பாக கவனித்திருப்பார்கள் போலும்.. பல இடங்களில் கத்திரி போட்டும், இன்னும் போடப்பட வேண்டியவை நிறையவே உள்ளன..! ஆபாசம், வன்முறையைவிட இது போன்ற இன உணர்வைத் தூண்டும் வசனங்களைத்தான் முற்றிலும் தடை செய்ய வேண்டும்..!

ஜாதின்னா என்ன என்று கேட்கும் அளவுக்கு நமது தலைமுறையை நகர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது உண்மையைத்தான் சொல்கிறோம் என்ற போர்வையில் “ஓஹோ.. நாமெல்லாம் அவுக.. அவுகெல்லாம் வேற ஆளா..?” என்ற சிந்தனையை படம் பார்க்கும் ரசிகர்களின் மனதிலும் விஷமாக விதைக்க முயற்சித்திருப்பதைத் தவிர வேறு எதையும் இந்தப் படம் செய்யவில்லை என்பது வருத்தத்திற்குரியது..!