கபாலி - சினிமா விமர்சனம்

22-07-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இதற்கு முன் இயக்கியது ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ என்ற இரண்டு வெற்றிப் படங்கள்தான். இவைகளின் வெற்றியைவிடவும் இல்லாத ஒன்றைத் தேடிப் பிடித்துச் சொல்வதை போல இவைகளை ‘தலித்திய படங்கள்’ என்று சொல்லியும், ‘தலித்திய இயக்குநர் ரஞ்சித்’ என்று சொல்லியும் அவரை ஒரு அடையாள மேடையாக்கினார்கள். மூன்றாவது படமே சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கினால் எதிர்பார்ப்பு சாதாரணமாகவா இருக்கும்..?
அவரும் ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ என்று தன்னுடைய பாணியில் இரண்டு தோல்வி படங்களை கொடுத்துவிட்டு அடுத்த வெற்றிக்காக காத்திருந்தார். யாரிடம் யார் கவிழ்ந்தார்கள் என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் தாணு 25 வருடங்களாக காத்திருந்தது வீண் போகவில்லை. கிடைத்த வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
ரஞ்சித்தும் அனைத்து இயக்குநர்களையும் பொறாமைப்படும் அளவுக்கு தமிழ் சினிமா வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார். படம் பற்றிய பிரமோஷனில் ரஜினி அனைத்து வகையான ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பினார். படத்தின் கதை நிச்சயம் அரசியலாகத்தான் இருக்கும் என்று கங்கணம் கட்டி சொன்னது மீடியா உலகம்.

இதுவரையிலும் இல்லாத அளவுக்கான விளம்பர வெளிச்சம் இந்த ‘கபாலி’யின் மீது பாய்ச்சப்பட.. கிட்டத்தட்ட தமிழக மக்களுக்கு ‘கபாலி’ என்கிற பெயரில் புதிய காய்ச்சலே வந்துவிட்டது என்று சொல்ல்லாம்.
முதலில் வெளிவந்த டிரெயிலரில் இருந்த ‘கபாலிடா’ சீனும், ‘வந்துட்டேன்னு சொல்லு.. நா திரும்ப வந்துட்டேன்’னு சொல்லு டயலாக்கும் ‘கபாலி’யின் டெம்போவை மென்மேலும் உயர்த்திவிட்டது.
இந்த அளவுக்கு ‘கபாலி’யை அவர்களிடத்தில் திணித்திருக்கும் தயாரிப்பாளரின் விளம்பர டெக்னிக்கை பாராட்ட வேண்டிய அதே நேரம், அதுவே ரஜினிக்கு மட்டும் எதிர்ப்பலையாக மாறியிருக்கிறது என்பதையும் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படியொரு கதைக்குத்தான் இப்படியொரு பில்டப்பா என்று ஒரு பக்கமும், இது ரஞ்சித் படமாகவும் இல்லை.. ரஜினி படமாகவும் இல்லை என்று வேறொறு பக்கமுமாக வெளுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கேங்ஸ்டர் படம்தான். மணிரத்னத்தின் ‘நாயகனு’க்கும் இதற்கும் பெரும் தொடர்புண்டு. அதே பாணியில் ஏற்கெனவே பார்த்தது போலவே இருந்தாலும், ரஜினி என்கிற ஒற்றை மனிதரால் அத்தனையும் புதிதாக தெரிகிறது..!
தன்னுடைய தாத்தா காலத்திலேயே திண்டிவனம் பக்கத்தில் இருந்து மலேசியாவுக்கு வேலை தேடி போனது ரஜினியின் குடும்பம். அங்கே ரஜினி இளைஞராக இருக்கும்போது தொழிலாளர்களுக்கு தலைவராக, போராட்ட குணமுள்ளவராக திகழ்கிறார்.
சீன தொழிலாளர்களுக்கும், தமிழக தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம்தான் தரப்பட வேண்டும் என்று தன் எஸ்டேட் முதலாளியுடன் சண்டையிடுகிறார் ரஜினி. போராட்டம் நடத்துகிறார். ஜெயிக்கிறார். இதனால் இவரது புகழ் மெல்ல பரவுகிறது.
இந்த நிலையில் தொழிற் சங்கத் தலைவராக இருக்கும் நாசரின் கண்ணில் ரஜினி பட.. அவரை தன் பக்கம் இழுத்துக் கொள்கிறார் நாசர். நாசர் உடன் இருக்கும் தோழர்களை போதை மருந்து கடத்தலில் ஈடுபட வைக்க கிஷோரின் டீம் முயல்கிறது. இதனை நாசர் தடுக்க. அவரை ஒரு நல்ல சுபமுகூர்த்த நாளில் பரலோகம் அனுப்புகிறது.
இதனால் அடுத்த தளபதி பதவி தானாக ரஜினியின் கைக்கு வருகிறது. இந்த நேரத்தில் ராதிகா ஆப்தேயை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் ரஜினி. மனைவி கர்ப்பமாக இருக்கும் சூழலில் ரஜினியும் கலந்து கொண்ட ஒரு பார்ட்டியில் நாசரின் மகன் கொல்லப்படுகிறார். இந்தக் கொலைப் பழி ரஜினி மீது சுமத்தப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் ராதிகா ஆப்தேவும் சுடப்படுகிறார். அவருடைய நிலையைப் பார்த்தவுடன் அவர் இறந்துவிட்டாரோ என்று நினைத்துக் கொள்கிறார் ரஜினி.
இந்தக் கொலை வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டு காலமாக சிறையில் இருக்கும் ரஜினி சிறை மீள்வதில் இருந்துதான் படமும் துவங்குகிறது. நன்னடத்தை காரணமாய் விடுவிக்கப்படும் ரஜினியை அவரது பழைய கூட்டாளியான ஜான் விஜய் வரவேற்கிறார்.
அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்போதே அந்த 25 வருடத்திய மலேசியாவின் மாற்றம் ரஜினிக்குள் புகுத்தப்படுகிறது. இப்போது இங்கேயிருக்கும் தமிழர்களின் நிலைமை முன்னைவிட படு மோசம் என்று ஒப்புவிக்கப்படுகிறது. போதை மருந்துகளில் ஆட்கொண்டு இளைய தலைமுறையே அழிந்து கொண்டிருக்கிறது. கந்து வட்டி கடன்காரர்களின் தொல்லை.. அடாவடிகளின் ஆட்சி நடந்து வருவதை சொல்கிறார்கள் தோழர்கள்.
’43-வது கேங்’ என்ற ரவுடி கும்பல்தான் மாணவர்களை போதை மருந்துக்கு அடிமையாக்கி வைத்திருருப்பதாக சொல்ல உடனடியாக அந்தக் கும்பலின் தளபதியான லிங்கேஷை சந்திக்கிறார் ரஜினி. அவனை மிதி, மிதியென்று மிதித்துவிட்டு “நான் கபாலிடா…” என்று எச்சரித்துவிட்டு வருகிறார்.
அவர் சிறைக்குச் சென்றாலும் அவருடைய பெயரில் போதை மருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வுக் கூடத்தை அவருடைய சிஷ்யமார்கள் நடத்தி வருகிறார்கள். இதில் போதைக்கு அடிமையான ரித்விகா சிகிச்சை பெற்று வருகிறார். இங்கே கலையரசனும் ஒரு ஆசிரியராக இருக்கிறார். அதைச் சுற்றிப் பார்க்கும் ரஜினி தன் பெயரில் நடத்தப்படும் ஒரு நல்லதை நினைத்து பெருமைப்படுகிறார்.
தன்னுடைய வீட்டிற்கு வரும் ரஜினி தனிமையான சூழலில் தன் வாழ்க்கையை நினைத்துப் பார்த்து, தன் மனைவி இறந்துவிட்டதாகவே நினைக்கிறார்.  தனது அடுத்த வேலையாக போதை மருந்தை சப்ளை செய்யும் சப் டீலரான மைம் கோபியை போட்டுத் தள்ளுகிறார்.
இது மெயின் டீலரான கிஷோருக்கு பயத்தைக் கொடுக்கிறது. ஏற்கெனவே கிஷோரின் தந்திரத்தால்தான் ரஜினி சிறைக்குச் சென்றிருக்கிறார். இந்த விஷயத்தினால் ரஜினிக்கு முன்பு தான் முந்திக் கொள்ள நினைத்து, ரஜினியை தீர்த்துக் கட்ட தன்ஷிகாவை நியமிக்கிறார் கிஷார்.
ரஜினியை கொலை செய்ய நினைத்து, அவர் பின்னாலேயே அலையும் தன்ஷிகா ஒரு சம்பவத்திற்குப் பிறகு ரஜினியிடமே ஐக்கியமாகிறார். அவர்தான் ரஜினியின் மகள் என்பதும் ரஜினிக்கு தெரிய வருகிறது. அடுத்த காட்சியிலேயே அதிர்ச்சியாக தன் மனைவியும் உயிருடன் இருப்பது மகள் மூலமாகவே ரஜினிக்கு தெரிய வர.. மனைவியைக் கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் இறங்குகிறார்.
இதற்காக தமிழ்நாட்டுக்கு வருகிறார். சென்னையில் தேடியலைந்து கடைசியாக பாண்டிச்சேரியில் தனது மனைவியைக் கண்டறிகிறார். ஆனால் அதே நேரம் மலேசியாவில் இருக்கும் ரஜினியின் தோழர்களை கிஷோரின் ஆட்கள் போட்டுத் தள்ளிவிட.. மனைவி மகளுடன் ஊர் திரும்பும் ரஜினிக்கு இது பேரதிர்ச்சியாகிறது..
ரஜினி எதிரிகளை எப்படி பழி வாங்குகிறார்.. ரஜினியின் முடிவு என்ன என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்..!
இது முழுக்க முழுக்க ரஜினியின் படம்தான். அப்படி நினைத்துதான் ரசிகர்களும் வந்து கூடியிருக்கிறார்கள். அவருடைய மேக்கப், ஸ்டைல், உடையலங்காரம் அனைத்துமே பழசுதான் என்றாலும், கண் இமை கொட்டாமல் ஸ்கிரீனை பார்க்க வைக்கிறது. இதுதான் ரஜினி என்னும் மந்திரம் செய்யும் மாயம். இதற்காகத்தான் இன்றைக்கு ஒரு நாளில் தமிழகமே ஸ்தம்பித்துவிட்டது போன்ற நிகழ்வு நடந்தேறியிருக்கிறது.
பிரேம் பை பிரேம் ரஜினி மட்டுமே செதுக்கப்பட்டிருக்கிறார். அவராலேயே காட்சிகள் நகர்கின்றன. எத்தனை வயதானாலும் அவருக்கே உரித்தான ஸ்டைல் இன்னமும் புதிய ரசிகர்களையும் வசீகரித்திருப்பது உண்மைதான். நடப்பது.. பார்ப்பது.. திரும்புவது.. என்று தனது உடல் மொழி அனைத்திலுமே ஒரு தனித்துவமாக காட்டி அதனையே நடிப்பாக்கியிருக்கிறார் ரஜினி.
அறிவுரை சொல்லும் காவல்துறை அதிகாரியை “போதும். வாயை மூடிக்கோ..” என்பதை போல சட்டென்று திரும்பி உதட்டோரம் கை வைத்து உஷார்படுத்தும் அந்த கணத்தில் ஆரம்பிக்கிறது அவரது நடிப்பு. அதற்கு முன்பான அரை செகண்ட்டில் தனது முதல் வசனத்தை “மகிழ்ச்சி” என்று வெளிப்படுத்தியிருப்பார். அடுத்த அரை செகண்ட்டில் அவரது மனோபாவமும், கேரக்டரும் இப்படி உருமாறுகிறது.
படம் நெடுகிலும் காட்சிக்கு காட்சி அவரது நடை, உடை, பாவனைகள்.. இது போலவே மாற்றப்பட்டிருக்கின்றன. “அம்மா இன்னும் உசிரோடதான் இருக்காங்கப்பா…” என்று சொன்னவுடன் அவர் காட்டுகின்ற ரியாக்ஷனும், தனது மகளை அக்கறையுடன் பார்க்கும் அந்த பாவனையும், மனைவியை 25 ஆண்டுகள் கழித்து பார்த்தவுடன் மனைவியின் அழுகையையும் மீறி ஒரு ஆணாக தனது நடிப்பை காட்டியிருப்பதில் சபாஷ் என்று சொல்ல வைத்திருக்கிறார் ரஜினி.
சண்டை காட்சிகளில் புதிய புதிய டெக்னிக்கல் வசதிகள்.. படமாக்கலில் இருக்கும் நவீனத்துவம்.. இவற்றின் துணையோடு ஒரு புதிய பாணியில் ரஜினி ஜெயித்திருந்தாலும் அதிலும் அவருக்கே உரித்தான ஸ்டைல் இருப்பதாலேயே அவைகளும் பேசப்படுகின்றன.
“மகிழ்ச்சி” என்கிற வார்த்தையை வேறு வேறு வடிவங்களில் அவர் உச்சரித்தவிதமும் அந்தந்த காட்சிகளின் கனத்தை உயர்த்தியிருக்கின்றன. சென்னை ஹோட்டலில் அவர் சொல்லும்விதத்தைக் கேட்டவுடன் அழைத்து வந்தவர் சொல்வாரே.. “சூப்பரா இருக்கு ஸார்..” என்று..  சந்தேகமேயில்லை.. அது ரசிகர்களின் கருத்துதான்..!
எத்தனை புதிய, புதிய நடிகர்கள் வந்தாலும் தன்னுடைய ஸ்டைலிஷான நடிப்பும், ஆக்சனும் வேறு யாருக்கும் வராது. இல்லை என்பதாலேயே இந்த ராஜா இன்னமும் ராஜாவாகவே இருக்கிறார்.
ரஜினியின் மகளாக நடித்திருக்கும் தன்ஷிகாவுக்கு புதிய வேடம். “மூஞ்சி இங்க இருக்கு..” என்று தனது அறிமுகக் காட்சியிலேயே தனது கூட்டாளியிடம் எரிச்சல்படும் இவரது ஆக்சன்கள் பின்பு சண்டை காட்சி ஆக்சன்கள்வரையிலும் நீண்டிருப்பது இவருக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. இடைவேளைக்கு பின்பான காட்சிகளில் இவருடைய கதாபாத்திரத்தின் உதவிதான் ரஜினிக்கே மிக துணையாய் இருக்கிறது.
போதை மருந்தில் ஆட்கொண்ட நோயாளியான ரித்விகா சில காட்சிகள்தான் என்றாலும் மனதைத் தொட்டிருக்கிறார். “வாங்கப்பா..” என்று ரஜினியை அழைக்க அவர் ஒரு கணம் திகைக்க.. அந்த ஒரு காட்சியிலும் மிக யதார்த்தமான நடிப்பும், இயக்கமும் வெளிப்பட்டுள்ளது.
ராதிகா ஆப்தேவை சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக்கணும்னு இயக்குநருக்கு எப்படி தோன்றியதென்று தெரியவில்லை. ஆனால் சரியான ஜோடிதான். முதற்பாதியில் அவ்வப்போது சின்னச் சின்ன ஷாட்டுகளில் மனதைத் தொடுகிறார். ரஜினியை பார்த்து ரொமான்ட்டிக் மூடில் அவர் பேசும் காட்சி டச்சிங்..
25 வருடம் கழித்து கணவரை பார்த்த அதிர்ச்சியில் அவர் காட்டும் நடிப்பும், கிளைமாக்ஸ் காட்சியில் “நான் மறக்கலை.. மறக்கவும் மாட்டேன்..” என்று கிஷோரிடம் சொல்லும் தைரியமான வசன உச்சரிப்பும்.. கை தேர்ந்த நடிகையை காட்டுகிறது.
தினேஷுக்கு அழுத்தமான வேடம். நாயகனை போல இவர்தான் கடைசியான அம்பாக இருப்பார் என்று நினைத்திருந்த நேரத்தில், இவரது பரிதாப மரணம் உச்சுக் கொட்ட வைக்கிறது. அதிலும் அந்த மரணக் காட்சியில் அன்னாரின் நடிப்பு டிக்கெட் கட்டணத்தில் சேர்க்கப்பட வேண்டிய விஷயமாகும்..!
கலையரசன், ஜான் விஜய், லிங்கேஷ், கிஷோர் என்று நால்வருமே முத்தாய்ப்பாக நடிப்பைக் காட்டியிருந்தாலும் மெயினான வில்லனான வின்ஸ்டன் சா அசத்தலான நடிப்பைக் காட்டியிருக்கிறார். வில்லனின் நடிப்பே ஹீரோவை உயர்த்தும் என்பார்கள். அது இதிலும் சாத்தியமாகியிருக்கிறது.  
ஜி.முரளியின் ஒளிப்பதிவு துவக்கக் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் ரம்மியம்தான். மலேசிய காட்சிகள் அனைத்தும் அத்தனை அழகு. சண்டை காட்சிகளில் கேமிராவின் பங்களிப்பும், படத் தொகுப்பாளரான கே.எல்.பிரவீனின் உதவியும் இயக்குநருக்கு நிறையவே கிடைத்திருக்கிறது.
மலேசியா செட்டுகளை கலை இயக்குநர் ராமலிங்கம் அவ்வளவு ரிச்சாகவும், அழகாகவும் போட்டுக் கொடுத்திருக்கிறார். இதை படமாக்கிய கேமிராமேன் உட்புற காட்சிகளில் கலர் டோன் மாற்றம் செய்தும் அசத்தியிருக்கிறார். இதெல்லாம் பெரிய பட்ஜெட் படங்களில்தான் அதிகம் சாத்தியமானது என்றாலும், அதைக்கூட தப்பில்லாமல் அழகாக செய்திருக்கிறார்களே என்று பாராட்டத்தான் வேண்டும்.
பாடல்களைவிடவும் பின்னணி இசைதான் பரவாயில்லை என்று சொல்ல வைத்திருக்கிறது. பாடல்கள் வழக்கம்போலவே இருப்பதால் எதுவும் மனதில் நிற்கவில்லை. ரஜினிக்கு முதல்முறையாக ஆடியோ கேஸட்டில் தோல்வியைக் கொடுத்திருக்கிறது இந்தப் படம். எத்தனையோ இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் ரஜினி நடித்திருப்பதால், இது அவருக்கே நிச்சயம் திருப்தியை தந்திருக்காது என்று நம்புகிறோம்.
இது சூப்பர் ஸ்டார் படமா அல்லது இயக்குநர் ரஞ்சித்தின் படமா என்று கேட்டால் ரஜினி படமாகத் துவங்கி ரஞ்சித்தின் படமாக முடிந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
படத்தின் இடையிடையே ரஞ்சித்தின் பேசும் மொழியான ஒடுக்கப்பட்டவர்களின் குரலும் பல இடங்களில் வசனமாக ஒலித்திருக்கிறது.
"பறவையோட குணாதிசயமே அது பறக்கறதுதான்டா… அதை பறக்க விடு…. வாழ்வா சாவான்னு அது முடிவு பண்ணிக்கட்டும்…. உன்னோட இந்த கருணை அதோட சாவைவிட கொடுமையானது!!.." என்று பறவைகளுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார் ரஞ்சித்.
"காந்தி சட்டையைக் கழட்டினதுக்கும், அம்பேத்கர் கோட், சூட் போட்டதுக்கும்கூட ஒரு அரசியல் காரணம் இருக்கு.." என்று தனது ஆஸ்தான அரசியல் அபிலாஷையை வெளிப்படுத்தியிருக்கிறார் ரஞ்சித். இதனை ரஜினி மூலமாக சொல்ல வைத்திருப்பதன் மூலம் ரஜினியின் கலை வடிவம் அந்த மக்களின் கைகளிலும் இனி வரும் வருடங்களில் விளையாடப் போகிறது என்பது திட்டவட்டமான உண்மை.

"யார்றா நீ.. வெறும் சோத்துக்காக இங்க வந்தவன்தானே..? தின்னுட்டு அமைதியா இருக்க வேண்டியதுதானே..? மத்த்தையெல்லாம் எதுக்கு நீ செய்ற..? செய்றதுக்கு நீ யாரு..? அதெல்லாம் பிறப்பிலேயே இருக்குடா..? உனக்கென்ன தகுதி இருக்கு…? கோட்டு, சூட்டு, கண்ணாடி போட்டா சமமா ஆயிடுவியா..?" என்று கிஷோர் கேட்கும் கேள்விதான் இன்றைக்கு தமிழ்நாட்டில் ஆண்ட பரம்பரை, பேண்ட பரம்பரை என்று சொல்லிக் கொள்ளும் குலக் கொழுந்துகள் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வி. இதனை இப்படி பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி ஒரு சமூக சிந்தனையை உசுப்பேற்றியிருக்கிறார் ரஞ்சித்.
"சோத்துக்கே வழி இல்லாமல்தாண்டா இருந்தோம். ஆனால் இப்ப நாங்க முன்னேறி வருவது, நல்லா படிக்கிறது, உங்க கண்ணை உறுத்துதுன்னா, ஆமாண்டா அப்படித்தான் போடுவோம், படிப்போம், முன்னேறுவோம்.." என்று கபாலி இதற்கு சொல்லும் பதில் வசனமும் தற்போதைய தமிழக மக்களின் வாழ்வியல் சூழலை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது.

இதற்கு முன்பு ஒரு பக்கம் தேவர்களும், இன்னொரு பக்கம் கவுண்டர்களுமாக படங்களில் தங்களுடைய ஆளுமையை செதுக்கியிருக்கும் தமிழ்ச் சினிமாவில், முதல் முறையாக ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் குரலை மிகவும் வெளிப்படையாக இந்தப் படத்தின் மூலம் பதிவு செய்திருக்கும் ரஞ்சித்திற்கு ஒரு பூங்கொத்து பார்சல்..!
படத்தின் இறுதிக் காட்சி சூப்பர் ஸ்டாரின் படத்தில் எந்த இயக்குநரும் வைக்கத் துணியாதது. ரஞ்சித்தின் தைரியத்திற்கு பாராட்டுக்கள். இறுதியில் குண்டு யாருடைய துப்பாக்கியில் இருந்து வெடித்தது என்பதை பார்வையாளரின் முடிவுக்கே விட்டுவிட்டார் இயக்குநர். இது ஒருவேளை அடுத்த பாகத்திற்கான முன்னோட்டமாக இருக்குமோ.. என்னவோ..? 
கேங்ஸ்டர் கதை என்பதோடு அது நிகழ் காலத்தோடு சம்பந்தப்பட்டது என்பதால் கதையின் லாஜிக்கை கொஞ்சமும் இடிக்காமல் கொண்டு போயிருந்திருக்கலாம். அத்தனை வருடங்கள் கழித்து வெளியில் வருபவர்.. அதுவும் மலேசியாவில் உடனடியாக சண்டைக்கு போய் அடித்து உதைத்துவிட்டு பழையபடி டான் தொழிலுக்கே வருவதெல்லாம் எதார்த்தம்தானா இயக்குநரே..?
கிட்டத்தட்ட தமிழ்ப் படங்கள் போலவே.. மலேசியாவிலும் போலீஸ் என்றொரு டிபார்ட்மெண்ட் இல்லவே இல்லை என்பது போலவே திரைக்கதை அமைத்திருப்பது ஏனோ..? இத்தனை கொலைகளும் நடந்த பின்பும், அந்த நாட்டு போலீஸ் என்னதான் செய்தது என்ற கேள்வி எழும்பாதா இயக்குநரே..?
ரஜினியின் பெயரில் அமைப்பெல்லாம் நடத்துபவர்கள், அவருடைய மனைவியைப் பற்றி சிறிதும் கேள்விப்படாதவர்களாக, தேடாதவர்களாகவா இருந்திருப்பார்கள்..?
மனைவியைத் தேடி சென்னைக்கு வரும் ரஜினி, உடனடியாக தேடும் பணியில் ஈடுபடாமல், நிறுத்தி, நிதானமாக ஓய்வெடுத்து பின் தொடர்வதெல்லாம் திரைக்கதைக்கு வேண்டுமானால் உதவியிருக்கலாம். நிஜத்திற்கு வெகு தொலைவில் அல்லவா போய்விட்டது..?
ரஜினி தமிழகம் வந்திருக்கும் சமயம் மலேசியாவில் நடப்பது எதுவும் அவருக்குத் தெரியாதது போல காட்சிகள் இருப்பது ஏனோ..? ஒரு செல்போன் கூடவா ரஜினியிடம் இல்லை..
கிஷோரும் காலி.. ‘வின்ஸ்டன் சா’வும் காலி.. யார் இவர்களை கொலை செய்தது.? இவரது அடியாட்களை தீர்த்துக் கட்டியது யார்..? போலீஸ் விசாரிக்கவே இல்லீங்களா ஸார்..? அதுவும் மலேசிய போலீஸ்..?
கலையரசன்தான் கடைசியில் ரஜினியை பொலி போடப் போகிறார் என்று நினைத்தால் அதற்குள்ளாக போலீஸே ஒரு உளவாளியை அனுப்பி போட்டுத் தள்ள நினைப்பதெல்லாம் எதற்கோ..? இப்போதுதான் அந்த ஊரிலும் போலீஸ் இருக்கிறது என்பதை காட்டவா..? என்னமோ போடா மாதவா..?
இப்படி பல லாஜிக் மீறல்கள் நமக்குள் உதைத்தாலும், சூப்பர் ஸ்டார் என்கிற ரஜினியை.. 68 வயதான ரஜினி என்னும் வயதானவரை அவருடைய வயதுக்கேற்ற கேரக்டரில் நடிக்க வைத்த ஒரேயொரு காரணத்திற்காக இயக்குநர் ரஞ்சித்திற்கு நமது வாழ்த்துகளும், பாராட்டுக்களும், நன்றிகளும் உரித்தாகட்டும்..!
இனிமேல் சூப்பர் ஸ்டார் ரஜினி, சின்ன ஹீரோக்களுடன் மல்லுக் கட்டி அவர்களைப் போல காதல் டூயட்டுகளை அரங்கேற்றி அசிங்கம் செய்யாமல்.. அமிதாப்பச்சன் போல.. இது போன்ற வெரைட்டியான கேரக்டர்களை செய்தால் அது தமிழ்ச் சினிமாவுக்கும், அவருக்கு மிக, மிக நல்ல விஷயமாகவே இருக்கும்.
ரஜினியின் படங்களில் இதுவும் ஒரு முக்கியமான படமாக இடம் பிடித்திருப்பதில் சந்தேகமில்லை. இந்தக் கபாலி “நான்தான்டா கபாலி” என்று அழுத்தமாக சொல்லவும் வைத்திருக்கிறார்..
கபாலிடா..!

ஒன்பதிலிருந்து பத்துவரை - சினிமா விமர்சனம்

17-07-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள்ளாக நடக்கும் கதை என்பதால் இந்த டைட்டில்..” என்றார் இயக்குநர். நம்பித்தான் சென்றோம்.
படத்தின் இயக்குநரான விஜய சண்முகவேல் அய்யனார் லேசுப்பட்ட ஆளில்லை.. கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார் இருவரிடமும் பல படங்களில் திரைக்கதை உருவாக்கத்தில் உடன் இருந்தவராம். இதனாலும் நம்பித்தான் சென்றோம். 
‘நிறம்’, ‘காந்தர்வன்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த அனுபவம் கொண்ட கதிர் இதில் ஹீரோவாகவும் மலையாளத்தில் ‘கீதாஞ்சலி‘ என்ற படத்தில் மோகன்லாலுடன் நடித்த அனுபவம் கொண்ட ஸ்வப்னா கதாநாயகியாகவும் நடித்திருப்பதாலும் நம்பித்தான் சென்றோம். ஆனால்..???

ஹீரோ கதிர்.. கால் டாக்சி ஓட்டுனர். எப்.எம்.மில் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை நடத்தி வரும் ஹீரோயின் ஸ்வப்னாவின் குரலை மட்டுமே கேட்டு அவர் மீது ஒரு இனம் புரியாத பாசத்துடனும், ரசிக மனப்பான்மையுடனும் இருக்கிறார்.
எப்படியாவது ஒரு நாளாவது தனது ஆதர்ச ரேடியோ ஜாக்கியை சந்திக்க வேண்டும் என்றெண்ணி அந்த ரேடியோ ஸ்டேஷனுக்குச் செல்கிறார். அவரைப் பார்க்க முடியாமல் திரும்புகிறார்.  இன்னொரு நாளில் காலை 9 மணிக்கே ஒரு சவாரி அவருக்குக் கிடைக்கிறது.
ஹீரோயின்தான் அதில் பயணிக்கிறார். செங்கல்பட்டில் இருக்கும் தனது வருங்கால மாமியாரை சந்தித்து பேசுவதற்காக போகிறார் ஹீரோயின். ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் இந்தப் பயணமே பிரச்சனையாகிறது. புரிந்து கொள்ளாமை அதிகமாகிவிட.. இருவரும் பரஸ்பரம் ஒருவரையொருவர் தவறாகவே நினைத்துக் கொண்டு திட்டிக் கொள்கிறார்கள்.
ஆனால் கொஞ்ச நேரத்தில் இவர்தான் தனது ஆதர்ச ஒலிபரப்பாளர் என்பதை தெரிந்து கொண்ட ஹீரோ இதற்கு மேல் பவ்யமாகிறார். ஆனால் இதை நடிப்பு என்று நினைத்து இவரை உதாசீனப்படுத்துகிறார் ஹீரோயின்.
செங்கல்பட்டில் ஹீரோயினின் வருங்கால கணவரைப் பார்த்தவுடன் ஹீரோவுக்கு பக்கென்றாகிறது. அவர் தவறானவர் என்று தெரிய வர.. ஹீரோயினின் கல்யாணத்தைத் தடுத்து நிறுத்த எண்ணுகிறார்.
இதற்காக ஒரு நாள் ஹீரோயினின் வீடு புகுந்து அவளது அம்மா, அக்கா, அக்கா கணவரை கட்டிப் போட்டு வருங்கால மாப்பிள்ளைய வீட்டுக்குள் வரவழைக்கிறார் ஹீரோ. அந்த மாப்பிள்ளையும் சேர்த்துக் கட்டிப் போட்டுவிட்டு ஹீரோயினுக்கு போன் செய்து வரச் சொல்கிறார். ஏன் இதனைச் செய்கிறார்..?  கடைசியில் முடிவு என்ன ஆனது என்பதுதான் மீதமான படம்.
படத்தில் இயக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும்படியாக அமைந்திருப்பதால் படத்தை முழுமையாக ரசிக்க முடியவில்லை. இடையிடையே வரும் சில நகைச்சுவை துணுக்குகள் மட்டுமே நம்மை புன்னகைக்க வைக்கின்றன.
இயக்கமே இல்லாத்தால் இவர்களின் நடிப்பைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஹீரோயின் மட்டுமே அழகாகவும் இருக்கிறார். அழகாகவும் நடித்திருக்கிறார். ஹீரோயினுக்கு ஈடுகொடுக்க முயன்று முடியாமல் தோல்வியடைந்துள்ளார் ஹீரோ. அவர் இன்னும் நடிப்பைக் கற்க வேண்டும் போலிருக்கிறது.
போலீஸ் உயர் அதிகாரிகளுக்குள் நடக்கும் மறைமுக ஈகோ போராட்டத்தை சுட்டி மட்டுமே காட்டியிருக்கிறார்கள். இதையும் அழுத்தமாக நல்ல இயக்கத்தோடு உண்மைத்தனத்தோடு சொல்லியிருந்தால் ரசித்திருக்கலாம்.
முதற்பாதியில் சவசவ என்று நகரும் காட்சிகளாலும் சுவாரஸ்யமில்லாத திரைக்கதையாலும் படம் அல்லாடுகிறது. கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே கொஞ்சமேனும் பார்க்கும்படியாக இருப்பதும்.. கிளைமாக்ஸில் வரும் டிவிஸ்ட்டும் எதிர்பாராமல் சற்று பாராட்ட வைக்கிறது..!
ஒளிப்பதிவாளருக்கு மட்டும் ஒரு ஷொட்டு. அவர் வேலையை மட்டும் அவர் அழகாக செய்திருக்கிறார். இசை இருக்கிறது. பாடல்கள் ஒலித்தன. அவ்வளவுதான். பின்னணி இசைகூட காட்சிகளோடு ஒன்றவில்லை..
படப்பிடிப்பு நாட்களைவிடவும் கதை, திரைக்கதை அமைக்க நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டால் நல்லது என்பதற்கு இந்தப் படமும் மிகச் சிறந்த உதாரணம்..! 
வேறொன்றும் சொல்வதற்கில்லை..!

சும்மாவே ஆடுவோம் - சினிமா விமர்சனம்

17-07-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இவரெல்லாம் இயக்குநரா..? பேசாமல் நடிப்பைப் பார்த்துக் கொண்டு போகலாமே..? என்று புரளி பேசிய வாய்களையெல்லாம் மூட வைத்திருக்கிறார் இயக்குநர், நடிகர் ‘காதல்’ சுகுமார்.
‘காதல்’ படத்தில் ஹீரோ பரத்தின் நண்பனாக அறிமுகமான சுகுமார், அதன் பிறகு பல படங்களில் இரண்டாம் நிலை நடிகனாக நடித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பின்பு கடந்தாண்டு ஒரு படத்தை இயக்கி வெளியிட்டார். தேவதர்ஷிணியின் புண்ணியத்தில் அந்தப் படம் கொஞ்சம் பெயரெடுத்து தப்பித்தது.
அடுத்த சில மாதங்களிலேயே இந்த ‘சும்மாவே ஆடுவோம்’ படத்தைத் துவக்கி பல இயக்குநர்களுக்கே அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டார் சுகுமார். பெரிய ஹிட் கொடுத்தவர்களுக்கே படம் கிடைக்காமல் அல்லாடும்போது, தோல்வி படத்தைக் கொடுத்த சின்ன இயக்குநருக்கு எப்படிய்யா படம் கிடைத்தது என்று ஆச்சரியப்பட்டார்கள். பலர் பொறாமைப்பட்டார்கள்.
ஆனால் சுகுமார் தன் வழியிலேயே சென்று ஜெயித்திருக்கிறார். அவ்வளவு சுத்தமான இயக்கம் என்று சொல்ல முடியாது. ஆனால் கடைசிவரையிலும் படத்தைப் பார்க்க வைக்கும் வகையில் இயக்கியிருக்கிறார். திரைக்கதையை சுவாரசியப்படுத்தியிருக்கிறார். பல இடங்களில் ‘அட’ என்று ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். இந்த சின்ன பட்ஜெட் படத்திற்கு இது போதுமே என்றே சினிமா விமர்சகர்களை சொல்ல வைத்திருக்கிறார். பாராட்டுக்கள் சுகுமார்..

கிராமத்துக் கதை. ஊர் ஜமீன்தார் ரொம்பவே நல்லவர். அதே கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களையும் அரவணைத்துச் செல்பவர். இவருக்கு குழந்தைகள் இல்லை. “வேறு ஒரு பெண்ணுடன் உறவு கொண்டு அப்பெண் சூலான பின்னர்தான் கட்டின மனைவிக்கு கரு தரிக்கும்..” என்று ஒரு ஜோஸியர் சொல்லிவிட.. ஜமீன்தார் குழப்பத்திற்கு ஆளாகிறார்.
இதைக் கேள்விப்படும் தாழ்த்தப்பட்ட பெண்ணான அம்மு தானே மனமுவந்து முன் வந்து தன்னை ஜமீனிடம் ஒப்படைத்து கருவுருகிறாள். அதே நேரம் ஜமீனின் மனைவியும் கருத்தரிக்க ஜோஸியர் காசை அள்ளுகிறார்.
இருவருக்கும் ஒரே மருத்துவமனையில் பிரசவம் நடக்கிறது. இருவருக்குமே ஆண் குழந்தை பிறந்தாலும் பிரசவத்தின்போது அம்மு இறந்துவிடுகிறார். இதனால் அவளது குழந்தையை தன் மனைவி பக்கத்தில் மாற்றி, தன் மனைவி மூலம் பிறந்த குழந்தையை அம்முவிடமும் மாற்றி வைக்கிறார் ஜமீன்தார். தான் செய்ததுதான் நடந்திருக்கிறது என்றே இப்போதுவரையிலும் நம்பி வருகிறார் ஜமீன்தார்.
காலங்கள் உருண்டோட.. இப்போது வாலிப வயதில் இருக்கிறார்கள் ஜமீனின் மகன்கள் இருவரும். இதில் ஜமீனுடனேயே வாழும் அர்ஜூன் சினிமாவில் மிகப் பெரிய ஹீரோவாக இருக்கிறான். இவனது அகில உலக ரசிகர் மன்றத் தலைவராக இருப்பவன் ஜமீனின் இன்னொரு மகனான கண்ணன்.
கண்ணனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த லீமா பாபுவுக்கும் இடையே காதல் ஒரு புறம் ஓடிக் கொண்டிருக்கிறது. அர்ஜூனின் புதிய படம் ரிலீஸ் தினத்தன்று கட்அவுட்டை வைக்கும்போது அதே ஊரைச் சேர்ந்த ஒரு ரசிகன் தவறி கீழே விழுந்து உயிரை விடுகிறான்.
இதையறியும் அர்ஜூன் அந்த ரசிகனுக்கு 3 லட்சம் ரூபாய் உதவித் தொகை தருவதாக அறிவிக்கிறான். அதான் தலைவர் அறிவிச்சிட்டாரே.. என்று ஆசையில் அதை வாங்க வரும் கண்ணன் அண்ட் கோ-விடம் ஜமீனின் மைத்துனர் சம்பத்ராம் தரக்குறைவாக பேசியனுப்பிவிடுகிறார்.
ஆனாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றியாக வேண்டும் என்பதால் கண்ணன் தன்னுடைய சொந்தக் கடையை விற்று அந்த 3 லட்சத்தை இறந்து போன ரசிகனின் குடும்பத்திற்குக் கொடுக்கிறான். இதையறிந்து ஊர் மக்கள், “உண்மையான ஹீரோ நீதான் கண்ணா..”  என்று அவனை வாழ்த்துகிறார்கள்.
இந்த நேரத்தில் அந்தக் கிராமத்தில் இருக்கும் நிலங்களை ஒரு பெரிய தனியார் நிறுவனம் வாங்க நினைக்கிறது. ஆனால் அந்த நிலங்கள் அனைத்தையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஜமீன்தார் எழுதி வைத்திருக்கிறார். இதனால் குறுக்கு வழியில் அந்த நிலத்தை மீட்டு தனியார் கம்பெனிக்கு கொடுத்து தான் லாபமடைய நினைக்கிறார் சம்பத்ராம்.
தங்களுடைய நிலத்தை அபகரிக்க நினைப்பதையறிந்த மக்கள் ஜமீனை பார்க்க வருகிறார்கள். ஆனால் அர்ஜூனும், அவரது மாமன் சம்பத்ராமும் மக்களைத் தடுக்கிறார்கள். அந்த வாக்குவாதத்தில்.. “உண்மையான ஹீரோ கண்ணன்தான். நீயில்லை..” என்று மக்கள் அர்ஜூனை பார்த்துச் சொல்ல அவனுக்கு அவமானமாகிறது.
“சினிமால ஹீரோன்னா சாதாரண விஷயமில்லை. கடுமையான உழைப்பு வேணும். வேணும்ன்னா உங்க கண்ணனை ஒரு படத்துல ஹீரோவா நடிச்சு படத்தை ரிலீஸ் பண்ணிக் காட்டுங்க..” என்று சவால் விடுகிறான் அர்ஜூன்.
ஊர் மக்கள் சவாலை ஏற்றுக் கொண்டதோடு இல்லாமல், இந்தப் பந்தயத்தில் தோற்றால் நிலங்களை ஜமீனுக்கே விட்டுக் கொடுக்கவும் ஊர் மக்கள் ஒத்துக் கொள்கிறார்கள்.  சொன்னபடியே படத் தயாரிப்பில் இறங்குகிறார்கள். படத்தை எடுத்து முடித்தார்களா..? நிலத்தை மீட்டார்களா என்பதுதான் படமே..!
சுவையான கதைதான். இந்தக் கதைக்கு அவ்வப்போது சிரிப்பெழும் நகைச்சுவையுடன் கூடிய திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர். இதற்கு முன்பு இதுபோல முன்பு வெளிவந்த சவால்விட்டு ஜெயிக்கும் படங்களை போலத்தான் இதுவும்.  என்ன..? ‘இதுவரையிலும் சினிமா எடுத்துக் காட்டு’  என்று யாரும் சொன்னதில்லை.. அவ்வளவுதான்..
சினிமாதானே எடுத்திரலாம்.. என்ன பெரிய சினிமா..? கேமிராவை கையில் தொட்டவரெல்லாம் கேமிராமேன்.. ஸ்டார்ட், ஆக்சன், கட் சொல்லத் தெரிந்தவரெல்லாம் இயக்குநர்.. என்கிற ரீதியில் சுகுமாரும் படத்தில் தனக்கான ஆட்களை நகைச்சுவை ததும்ப ஆள் பிடிக்கிறார்.
அதே ஊரைச் சேர்ந்த சென்னையில் வசிக்கும் ஒரு துணை இயக்குநர்தான் படத்தின் இயக்குநராகிறார். ஊருக்குள் காதுகுத்தில் இருந்து கருமாதிவரைக்கும் புகைப்படமெடுக்கும் நபர்தான் கேமிராமேன், ஊரில் இருக்கும் சலவைத் தொழிலாளிதான் காஸ்ட்யூமர், சாவுக்கும், கல்யாணத்துக்கும் பந்தல் போடும் நபர்தான் கலை இயக்குநர்.. சலூன் கடை வைத்திருப்பவர்தான் மேக்கப்மேன்.. ஊரிலேயே தடியாக இருப்பவர்தான் ஸ்டண்ட் இயக்குநர்.. ஒல்லியாக இருக்கும் ஒருவர்தான் நடன இயக்குநர்.. என்று அத்தனை பேரையும் உள்ளூரிலேயே வளைத்துப் பிடித்து ஆரம்பிக்கும் காட்சியிலேயே படம் களை கட்டுகிறது.
இது மட்டுமா..? சினிமா சிச்சுவேஷனுக்காக இவர்கள் அமைத்திருக்கும் திரைக்கதையும் நகைச்சுவையைக் கொட்டியிருக்கிறது.
மழை காட்சிக்காக தீயணைப்பு வண்டியில் இருந்து தண்ணியை கொட்ட முடியாததால், பத்து பேர் இரண்டு பக்கமும் நின்று கொண்டு, தண்ணி பாக்கெட்டுகளில் இருந்து தண்ணீரை பீய்ச்சியடித்து மழை சிச்சுவேஷனை உருவாக்குவது.. மாட்டு வண்டியை டிராலியாகப் பயன்படுத்துவது.. ராட்டினத்தில் இயக்குநரையும், கேமிராமேனையும் கட்டிவைத்து அதை ஜிம்மி ஜிப்பாக பயன்படுத்தி படம் எடுக்கும்விதம் என்று அடுத்தடுத்த காட்சிகளில் செம ரகளை செய்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பை நிறுத்த சம்பத்ராம் செய்யும் கலாட்டாவில் அடிக்க வந்த ஆளையே கேரக்டர் ஆளாக்கி நடிக்க வைப்பது சுவையானது. கூடுதல் போனஸாக, பெரிய, பெரிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்களே செய்யாத ஒரு விஷயமாக… பெப்சி பெயரைச் சொல்லி மிரட்டும் ஆளை, மரத்தில் கட்டி வைத்து, உதைத்து திருப்பியனுப்பும் காட்சியை வைத்தததற்காக இந்த இயக்குநர் காதல் சுகுமாருக்கு பெரிய சல்யூட்..!
படம் முடியும் தருவாயில் கேமிராமேன் செய்யும் உள்ளடி வேலையில் அதுவரையிலும் படமாக்கிய அத்தனையும் சம்பத்ராமின கைக்கு போய்விட.. இதை நினைத்து கலங்காமல் அடுத்து 24 மணி நேரத்தில் படமெடுத்துக் காட்டுகிறோம் என்று சவால்விட்டு வேகமாக களத்தில் குதிக்கும்போது படம் படு வேகமெடுக்கிறது..
கடைசியாக கியூப் நிறுவனத்திலும் தடை செய்ய வைத்து.. படத்தை சொந்த ஊரில் இருக்கும் தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் தடுப்பதும், சொந்த ஊரைத் தவிர மற்ற ஊர்களில் படம் ரிலீஸாகி ஹிட்டடிப்பதும் எதிர்பாராத டிவிஸ்ட்..
கண்ணனாக நடித்திருக்கும் அருண் பாலாஜி, அர்ஜூனாக நடித்திருப்பவர், ஹீரோயின் லீமா பாபு, ஜமீன்தார், ஜமீன் மனைவியான யுவராணி அனைவருமே தங்களுக்குச்  சொல்லித் தந்த்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
தாழ்த்தப்பட்ட மக்களிடையே பிரமுகராக இருக்கும் பாலாசிங், ஜோஸியராக வரும் பாண்டு, சம்பத்ராம், மற்றும் பட தயாரிப்பு குழுவில் இருக்கும் அத்தனை பேருமே படத்தின் சுவாரஸ்யத்திற்கு சொந்தக்காரர்களாகியிருக்கிறார்கள். வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் ‘முத்து முத்து கருவாயா’. ‘தலைவா தலைவா’, ‘மகராசி’ பாடல்கள் கேட்கும் ரகம். வில்லியம்ஸின் ஒளிப்பதிவில் குறைவில்லை. மிகக் குறைந்த பட்ஜெட்டில் வெளிப்புறப் படப்பிடிப்பில் நிரடல் இல்லாமல் அனைத்தையும் படமாக்கியிருக்கிறார். பாராட்டுக்கள்.
“கூத்துக் கட்டி ஆடுபவர்களெல்லாம் சினிமா ஸ்டார்களாக முடியாது..” என்று ஒரு டயலாக் படத்தில் உள்ளது. கூத்தாட்டம் ஆடு்ம் கலைஞர்கள் சினிமா கலைஞர்களுக்குக் கொஞ்சமும் சளைத்தவர்களில்லை என்பதை படம் சொல்லும் என்று இயக்குநர் முன்பான பேட்டிகளில் சொல்லியிருந்தார். ஆனால் இதற்கான விளக்கவுரை படத்தில் இல்லாதது மட்டுமே படத்தின் ஒரு சிறிய குறை..!
சின்ன பட்ஜெட்டிற்குள் தெளிவான கதை.. குழப்பமில்லாத திரைக்கதை.. நெளிய வைக்காத நகைச்சுவை.. அழுத்தமான இயக்கம் என்று அனைத்தையும் வைத்து வெற்றிப் படத்துக்குரிய லக்கினங்களோடு படத்தைத் திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ‘காதல்’ சுகுமார். அவருடைய திறமைக்கு நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!
கடைசிவரையிலும் போரடிக்காமல் செல்லும் இந்தப் படமும், ஜெயிக்க வேண்டிய படம்தான்..!
ஜெயிக்க வையுங்கள் மக்களே..!

அர்த்தநாரி - சினிமா விமர்சனம்

10-07-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தன்னில் பாதியான உமையாளைச் சுமக்கும் சிவனின் ரூபத்தை ‘அர்த்தநாரி’ என்பார்கள். இந்தத் தலைப்பை இந்தப் படத்திற்கு எதற்கு வைத்தார்கள் என்பது அந்த சிவனுக்கே வெளிச்சம்..!

நாசர் நடத்தி வரும் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து, படித்து உருவானவர் ஹீரோ ராம்குமார். குழந்தை தொழிலாளர்களை எங்கே கண்டாலும் அவர்களை தடுத்து அந்த இடத்தில் இருந்து வெளியேற்றி பள்ளிக்கு அனுப்பும் வேலையைச் செய்பவர் நாசர். இவரால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹீரோயினான அருந்ததி துடிப்பான போலீஸ் ஆபீஸர். என்கவுண்ட்டர்களுக்கும் அஞ்சாதவர். பெண்களைக் கடத்தி விற்கும் தொழிலில் ஈடுபடுபவர்களை தேடிப் பிடிக்கும் ஒரு அஸைன்மெண்ட்டில் இறங்கியிருக்கிறார்.
இந்த நேரத்தில் அருந்கதி ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் துப்புத் துலக்க போக.. அவரை பாலோ செய்யும் ஹீரோ ராம்குமார் அருந்ததியையே துப்புத் துலக்குகிறார். அருந்ததி அவரை அலட்சியப்படுத்திவிட்டுப் போகிறார். ஆனாலும் ஹீரோ விடாமல் பின்னாலேயே துரத்து, துரத்தென்று துரத்தி தன்னைக் காதலிக்க வைக்கிறார்.
இந்த நேரத்தில் திடீரென்று நாசர் இறந்து போகிறார். அவருடைய மரணம் இயற்கையானது என்று நினைக்கும் நேரத்தில், நாசர் கொலை செய்யப்பட்டிருப்பதாக ராம்குமாருக்கு தகவல் தெரிகிறது.
அதிர்ச்சியான ராம்குமார், அந்தக் கொலையைச் செய்த்து யார் என்று தானே களத்தில் இறங்கி விசாரிக்கத் துவங்குகிறார். இன்னொரு பக்கம் அருந்ததியும் விசாரிக்கிறார். இறுதியில் என்ன ஆனது..? கொலையாளிகளை கண்டுபிடித்தார்களா..? இல்லையா..? என்பதுதான் படத்தில் இருக்கும் திரைக்கதை.
படத்தின் இயக்குநர் சுந்தர இளங்கோவன் இயக்குநர் பாலாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் என்பதைக் கேள்விப்பட்டுத்தான் ஆர்வமாக படம் பார்க்கச் சென்றோம். படத்தில் ஒரு சின்ன ஷாட்டில்கூட பாலாவின் பெயர் ஞாபகப்படுத்தப்படவில்லை என்பது மிகப் பெரிய சோகம்.
மிக, மிக சாதாரணமான இயக்கம். அடுத்து என்ன நடக்கிறது என்பதை சொல்லிவிடக் கூடிய திரைக்கதை. நடிகர்களை கஷ்டப்படுத்தி நடிக்க வைத்திருப்பது மட்டும் தெரிகிறது. ஒரேயொரு காட்சி மட்டுமே படமாக்கியவிதத்தில் அந்த நேரத்தில் சபாஷ் போட வைக்கிறது. தன்னை அடித்துத் துன்புறுத்தியவனை ஒரு சிறுவன் கழுத்தில் பிளேடு போடும் காட்சிதான் அது.
படத்தின் ஹீரோ ராம்குமார் பரவாயில்லை என்கிற ரீதியில் நடித்திருக்கிறார். பார்த்தவுடனேயே காதல்.. பைத்தியக்காரத்தனமான பேச்சு.. போலீஸ் என்று தெரிந்த பின்பும் வேண்டுமென்றே போய் காதல் பேச்சு பேசுவது என்று எரிச்சல்பட்ட திரைக்கதையில் இவர் வருவதால் ரசிக்கத்தான் முடியவில்லை. படத்தின் பிற்பாதியில் வில்லன்களை தேடி இவர் ஓடிக் கொண்டேயிருப்பதால் நல்லவேளையாக நம்மை தப்பிக்க வைத்திருக்கிறார்.
ஹீரோயின் அருந்ததிக்கு விஜயசாந்தியை போல வர வேண்டும் என்று ஆசையாம். இந்தப் படத்தின் நடிப்புக்கே விஜயசாந்திதான் மூலாதாரம் என்றெல்லாம் சொல்லியிருந்தார். விஜயசாந்தி இந்தப் படத்தைப் பார்க்காமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம்.
முதல் காட்சியிலேயே பனியன் மற்றும் இறக்கிக் கட்டப்பட்ட பேண்ட்டுடன் அவர் போடும் சண்டை கிளாமரை விரும்பும் ரசிகர்களை அதிகம் கவர்ந்துவிட்டது. இது போன்று பெண் போலீஸ் அதிகாரிகளை படத்துக்குப் படம் காட்டினால் நன்றாகத்தான் இருக்கும். இதேபோல் பெண் புரோக்கரை பிடிக்க நடுரோட்டில் அவர் நடந்து வரும் அழகு.. தனி ரகம்..!  
அந்த புரோக்கரை தனியறையில் வைத்து வெளுத்து வாங்கும் காட்சியை மட்டும் இயக்குநர் எப்படி, இப்படி உண்மைத்தனத்துடன் படமாக்கினாரோ தெரியவில்லை. அந்த அளவுக்கு தத்ரூபம். அருந்ததி தன்னுடைய ‘உண்மை’யான கோபத்தையெல்லாம் அந்தக் காட்சியில் காட்டிவிட்டார் போலிருக்கிறது. பாடல் காட்சியில் கிளாமரைக் கொட்டியிருக்கிறார். ரொமான்ஸ்தான் வரவில்லை. ஆனாலும் முகத்தைப் பார்க்கையில்…. முடியவில்லை..
நாசர் வழக்கம்போல ஒரு பெரிய மனிதராக வாழ்ந்து காட்டியிருக்கிறார். மொட்டை ராஜேந்திரன் சகுனம், ராகு, கேது, நட்சத்திரம் பார்த்து கொலை செய்யும் நபராக  கொஞ்சம் கலகலப்பு ஊட்டியிருக்கிறார்.
செல்வகணேஷின் இசையில் 3 பாடல்களும் ஒரு முறை கேட்கும் ரகம். ஒளிப்பதிவாளரும் தன் வேலையை சரியாகவே செய்திருக்கிறார்.
ஆட்களைக் கடத்தி புதிய மருந்துகளுக்கான பரிசோதனைக் கூடத்தில் எலிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தும் கொடூரத்தை இதில் சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குநர். நல்ல விஷயம்தான். ஆனால் அழுத்தமில்லாது போன இயக்கம் இதன் உண்மையை உணரவிடாமல் செய்துவிட்டது..!
இயக்குநர் அடுத்தப் படத்தில் இதைவிடவும் அதிகமாக ஜெயிக்க வாழ்த்துகிறோம்..!

தில்லுக்கு துட்டு - சினிமா விமர்சனம்

08-07-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தன்னுடைய சக போட்டியாளர் சிவகார்த்திகேயனின் அசுரத்தனமான வெற்றி, சந்தானத்தையும் யோசிக்க வைத்திருக்கிறது. இனிமேலும் சக நடிகரைக் காப்பாற்றும் காமெடியனாக இருந்தால் சிவாவை தொட முடியாது என்பதை உணர்ந்திருக்கும் சந்தானம், இதன் முதல் படியாக அடுத்தடுத்த வேறு, வேறு களங்களில் ஹீரோ வேஷம் கட்டத் துணிந்துவிட்டார்.
அந்த வரிசையில் ‘இனிமே இப்படித்தான்’ படத்தைத் தொடர்ந்து நடனமாடவும், சண்டையிடவும் ஸ்கோப் உள்ள கதையாகத் தேர்ந்தெடுத்து இதில் நடித்திருக்கிறார் சந்தானம்.

பிரிட்டிஷார் இந்தியாவில் இருந்த காலத்தில் தங்களுக்கு உதவிய ஒரு திபெத்திய மன்னருக்கு தென் தமிழகத்தில் மேகமலை பிரதேசத்தில் சிவன் கொண்டை மலை என்னுமிடத்தில் ஒரு மிகப் பெரிய அரண்மனையைக் கட்டிக் கொடுத்து பாதுகாத்திருக்கிறது பிரிட்டிஷ் அரசு.
அந்த அரண்மனையில் திபெத்திய அரசர் வாழ்ந்து வந்தபோது அரண்மனைக்கு வேலைக்கு வந்த ஒரு அழகியின் அழகில் மயங்கி அவளைத் திருமணம் செய்து கொள்கிறார். அரசர் ஊர் சுற்றக் கிளம்பிச் சென்ற பிறகு, அரசரின் மனைவி தனது கள்ளக் காதலனை அரண்மனைக்கு வரவழைத்து குஷாலாக இருந்துள்ளார். இடையில் ராணிக்கு ஒரு பையன் பிறக்கிறான்.
பையன் வளர்ந்த நிலையில் அரசருக்கு ராணியின் துரோகம் பற்றித் தெரிய வர.. கள்ளக் காதலனை கொலை செய்கிறார். ராணியையும் சித்ரவதை செய்கிறார். இதனால் ராணி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறார். ராணியின் சிறு வயது மகனும் இறந்து போகிறான்.
இந்தச் சோகத்தில் ஆட்பட்ட அரசர் திபெத்துக்கே திரும்பிச் செல்கிறார். ஆனால் அங்கே சென்றவுடன் மன வேதனைப்பட்டே அவர் மரணமடைந்துவிட.. அவருக்குப் பின் வந்த அவரது வாரிசுகள் பலரும் இளம் வயதிலேயே காலமாகிவிடுகிறார்கள்.
இதன் ரகசியம் அறியும் திபெத்திய பித்த பிக்குகள்.. சிவன் கொண்டை மலை அரண்மனையில் தற்கொலை செய்து கொண்ட ராணியும் அவளது மகனும் ஆத்மா சாந்தியாகாமல் இன்னமும் அதே பங்களாவில் அலைந்து கொண்டிருப்பதால்தான் திபெத்திய மன்னர் வாரிசுகள் நிலைக்க மாட்டேன் என்ற ரகசியத்தை அறிகிறார்கள். அந்தப் பேய்களை அடக்குவதற்காக திபெத்தில் இருந்து மேகமலைக்கு வருகிறார்கள் புத்த பிக்குகள்.
இந்த நேரத்தில் சென்னையில் ஹீரோ சந்தானம் வழக்கம்போல என்ன வேலை என்று தெரியாமலேயே வாழ்கிறார். இவருடைய அப்பா ஆனந்த்ராஜ் சினிமாவில் சண்டை நடிகராக இருக்கிறார். அம்மாவின் தம்பியான கருணாஸ், மினி வேனை வாடகைக்கு விடும் தொழிலில் இருக்கிறார்.
இந்த மினி வேனை டியூ கட்டவில்லை என்பதற்காக கடன் கொடுத்த சேட்டுக்காரன் தூக்கிக் கொண்டு போக.. இதனால் ஆத்திரப்படும் கருணாஸ் இதை தனது மருமகனிடம் சொல்லி வருத்தப்பட.. சேட்டுவுக்கு ஒரு பாடம் கற்பிக்க நினைத்த சந்தானம், சேட்டு வீட்டில் கொள்ளையடிக்கச் செல்கிறார்.
அங்கே தற்செயலாக அவரைப் பார்த்துவிடும் சேட்டுவின் மகள் சனாயா.. நைச்சியமாகப் பேசி சந்தானத்தை போலீஸிடம் பிடித்துக் கொடுக்கிறாள். இதே சனாயாதான் சந்தானத்தின் பால்ய வயதில் மிக நெருங்கிய தோழியாக இருந்தாள். சனாயா சந்தானத்தை இன்னமும் மறக்க முடியாமல் அவனைத் தேடியும் வருகிறாள்.
அப்படி சந்தானத்தைத் தேடி அவரது வீட்டிற்கே வரும் சனாயா தான் பிடித்துக் கொடுத்த திருடன்தான் தனது பால்ய வயது காதலன் என்று அறிந்து அதிர்ச்சியானாலும் தனது காதலில் உறுதியாக இருக்கிறார். சந்தானமும் அப்படியே..!
இவர்களது காதலை சேட்டு ஏற்கவில்லை. பிரிக்கப் பார்க்கிறார். முடியவில்லை. இதனால் தந்திரமாக சந்தானத்தின் குடும்பத்தையே கொலை செய்யப் பார்க்கிறார். இதற்காக மொட்டை ராஜேந்திரனை நாடுகிறார்.
மொட்டை ராஜேந்திரனோ “இங்கே வைத்து குடும்பத்தையே கொலை செய்ய முடியாது. வேறு ஊருக்குத் தூக்கிட்டுப் போய்தான் செய்ய முடியும்…” என்று சொல்லி.. சிவன் கொண்டை மலை உச்சியில் இருக்கும் அந்த பேய் வசிக்கும் பங்களாவிற்கு சந்தானத்தின் குடும்பத்தை அழைத்து வரச் சொல்கிறார்.
சேட்டும் மேகமலையில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று பொய் சொல்லி அனைவரையும் அங்கே அழைத்து வருகிறார். கொலை செய்ய ராஜேந்திரன் கும்பலும் அங்கே வந்துவிட.. இவர்களது கொலைத் திட்டம் நிறைவேறியதா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
பேயும், நகைச்சுவையும் கலந்ததுதான் இப்போதைய வெற்றிக்கான பார்முலா என்பதால் அதில் குறை வைக்காமல் திரைக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் ராம்பாலா. விஜய் டிவியில் சந்தானத்தை பிரபலப்படுத்திய ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் இயக்குநரான இவர், சந்தானத்தின் நன்றிக் கடன் குணத்தினால் இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்.
ஒரு பேய் வீடு.. அமானுஷ்யமான சூழ்நிலை. இருட்டு.. திடீர், திடீரென்று மூடும் கதவுகள்.. பறக்கும் பொருட்கள்.. பேயின் சக்தி.. காதைக் கிழிக்கும் பின்னணி இசை.. பேயின் திடுக்கிடும் ஆக்சன் காட்சிகள் என்று பேய் படத்தின் குணாதிசியங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் உள்ளடக்கியிருக்கிறது இந்தப் படம்.
ஆட்கள் அதிகமாக இருந்தால் அவர்களுக்கேற்ற நகைச்சுவை கலந்த தேடுதல் வேட்டையாக திரைக்கதை அமைப்பது மிக, மிக கடினம், இதில் சுந்தர்.சி. மிகவும் எக்ஸ்பர்ட்டானவர். அவரை போலவே இந்தப் படத்திலும் படத்தின் இடைவேளைக்கு பின்னான காட்சிகளில் அனைவரையும் ஒன்று சேர்க்கும்விதமாக திரைக்கதை அமைத்து நகைச்சுவையை வெளிக்கொணர்ந்திருக்கும் இயக்குநர் ராம்பாலாவின் இயக்கத் திறமைக்கு நமது பாராட்டுக்கள்.
பேயாக வேடம் போட்டவர்கள் ஒரு குழுவாகவும், ஒரிஜினல் பேய்கள் இன்னொரு குழுவாகவும் பிரிந்து, பிரிந்து பயம் காட்ட.. யார் ஒரிஜினல்.. யார் டூப்ளிகேட் என்று தெரியாமல் சந்தானம் அண்ட் கோ-வினர் மாட்டிக் கொண்டு முழிக்கும் அந்த 25 நிமிட காட்சிகள்தான் படத்தின் ஹைலைட்டே..! இதில் சிரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. வெல்டன் இயக்குநரே..!
சந்தானம் தனது டிரேட் மார்க் வசன உச்சரிப்போடு அது போல வசனங்களையே இதிலும் உதிர்த்திருக்கிறார். உடலை கிண்டல் செய்யும் வசனத்தை இன்னமும் அண்ணன் கைவிடவில்லை. இதையும் கைவிட்டால் நன்றாக இருக்கும்.
சந்தானத்தின் நடன திறமை கொஞ்சம் கூடியிருக்கிறது. இவருடைய நடனத்துக்காகவே முதல் பாடல் காட்சியான ‘சிவன் மகன்டா’ பாடலை படமாக்கியிருக்கிறார்கள். அத்தனை வேகமான நடனம் அதில் இருக்கிறது. பன்ச் டயலாக்குகளை கொஞ்சம் குறைத்து காட்சிக்கேற்ற வசனங்களையே பேசி சிரிக்க வைக்கிறார்.
“நானென்ன திருடனா?” என்று பலவித மாடுலேஷனில் கேட்டு, கேட்டு கருணாஸை சாகடிக்கும் காட்சி கட்டுப்படுத்த முடியாத நகைச்சுவை. இதேபோல் தனது அப்பாவை எப்போதும் கலாய்த்தபடியிருக்கும் காட்சிகளும் ரசனையானவை. ரொமான்ஸ்தான் மனிதருக்கு சிக்காமல் இருக்கிறது. அடுத்து காதல் கருவில் வரும் படம் அதை நிவர்த்தி செய்யும் என்று நம்புவோமாக.
பாலிவுட்டின் மிகப் பிரபலமான நடிகரான செளரவ் சுக்லா இதில் சேட்டாக.. ஹீரோயினின் அப்பாவாக நடித்திருக்கிறார். தமிழ் தெரியவில்லையென்றாலும் தமிழை மிக அழகாக உச்சரித்திருக்கிறார். டப்பிங்கில் சொதப்பாமல் வெளிவந்திருக்கிறது இவர் பேசியிருக்கும் டயலாக்குகள்.
மனிதர் நடிப்பில் அசர வைப்பவர். இதிலும் குறை வைக்கவில்லை. சந்தானத்தின் டைமிங் காமெடிக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். பேயுடன் மாட்டிக் கொண்டு தவிக்கும் காட்சியில் சிரிப்பலையை முகபாவனையிலேயே வரவழைத்திருக்கிறார். படத்தில் மிக சரியான தேர்வு இவர்தான்.
ஹீரோயின் சனாயா. ஏன் இப்படி படத்துக்குப் படம் புதுமுகங்களை தேடிப் போகிறார்கள் என்று தெரியவில்லை. வழக்கம்போல தமிழ் உச்சரிப்பு தகிடுதத்தம் போட்டாலும், இவரது அழகு  காப்பாற்றுகிறது. பாடல் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்.  இப்போதைக்கு இது போதுமே..!?
கருணாஸ் ஒரு பக்கம் உடன் வந்து தவியாய் தவித்தாலும் ஆனந்த்ராஜ் கட்டிங் விஷயத்தில் கில்லியாக அலைந்து அதை வைத்து ஒரு பக்கம் கிச்சுகிச்சு மூட்டுகிறார். மொட்டை ராஜேந்திரன் இன்னும் எத்தனை படத்தில் இதேபோல் ஆக்சனை காட்டுவாரோ தெரியவில்லை. கொஞ்சம் திகட்டுகிறது. ஆனால் கிளைமாக்ஸில் ஒரிஜினல் பேயுடன் இவர் மல்லுக்கட்டும் விதம் அத்தனை சிரிப்பை வரவழைக்கிறது. மனிதர் ரசித்து, உணர்ந்து நடிக்கிறார். பாராட்டுக்கள்..!
பேய் என்கிற பயத்தை வைத்து இவர்களை சாகடிக்கும் திட்டம் என்பதே ஒரு காமெடி. காமெடியான ஒரு வில்லனை நம்பி சேட்டு இங்கே இவர்களை அழைத்து வருவதை நினைத்தால் சேட்டுவே ஒரு காமெடியாகத்தான் தெரிகிறார்.
அமாவாசையன்று பேய் பெட்டியில் இருந்து வெளியேறும் சூழலில், திபெத்திய சாமியார்கள் ஒரு பக்கம்.. ஒரிஜினல் பேய்கள் ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் போலி பேய்களுடன் மொட்டை ராஜேந்திரனின் கோஷ்டியினர் இன்னொரு பக்கமுமாக திரைக்கதையை எழுதியவர்கள் எப்படித்தான் அல்லல்பட்டு எழுதினார்களோ தெரியவில்லை. அவர்களுக்கு சபாஷ்.. பாராட்டுக்கள்..!
படத்தின் ஒளிப்பதிவாளரான தீபக் குமார் பாடிக்கு ஒரு மிகப் பெரிய பாராட்டு. மனிதர் அனைத்தையும் அழகுற பதிவாக்கியிருக்கிறார். காட்சிகள் அனைத்துமே கண்ணில் ஒற்றிக் கொள்வது போலத்தான் இருக்கிறது. புதிய திறமைசாலியை அறிமுகப்படுத்தியிருக்கிறார் ராம்பாலா.
இதேபோல் படத்தொகுப்பாளர் கோபிகிருஷ்ணாவும் தன் பங்குக்கு சிறப்பான படத்தொகுப்பினை செய்திருக்கிரார். பேய்ப் படங்களில் படத்தொகுப்பு என்பது கத்தி மேல் நடப்பது போன்ற பிரச்சினை. கோபியின் நீண்ட கால அனுபவம் அவருக்குக் கை கொடுத்திருக்கிறது. பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியதைவிடவும், எடிட்டிங்கில் அழகாக தொகுத்து வழங்கியிருப்பதிலும்தான் இந்தப் படத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. பாராட்டுக்கள் கோபி கிருஷ்ணா.
எஸ்.எஸ்.தமனின் இசையில் ‘சிவன் மகன்டா’ பாடல் கேட்கும் ரகம். ‘காணாமல் போன காதல்’ பாடல் ஒரு டூயட்டுக்காக இருக்கிறது. ‘தில்லுக்கு துட்டு’ பாடல், பாதிதான் படத்தில் இடம் பிடித்திருக்கிறது. பின்னணி இசையில் அளப்பறையே செய்திருக்கிறார் கார்த்திக் ராஜா. பாராட்டுக்கள் ஸார்..!
பேய்ப் படங்களின் வரிசையில் பலவகையான பேய்களையும் பார்த்தாகிவிட்டது. இதற்கு மேலும் அவைகளை பார்க்கும் ஆசை தமிழ் ரசிகர்களுக்கு இருக்காது என்று நினைக்கிறோம். அந்த அளவுக்கு திகட்ட, திகட்ட பேய்களை அடையாளம் காட்டிவிட்டார்கள் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்.
இந்தப் படத்தோடு இந்தப் பேய் பிரச்சினை தமிழ்ச் சினிமாவில் முடிவுக்கு வந்தால் நிச்சயம் சந்தோஷப்படுவோம். ஏனெனில் இதற்கு மேலும் பேய்களை சிரமப்படுத்துவது நமக்குத்தான் சிக்கலில் முடியும்..!
காதல், திகில், பேய், பன்ச் வசனங்கள், நகைச்சுவை என்று அனைத்தும் கலந்த ஒரு கலவையாக இருக்கும் இந்தப் படமும், தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்றே நம்புகிறோம்..!