மறக்க முடியாத வி.பி.சிங்..!

28-11-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



அது 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி. காலை தினசரிகளில் "வி.பி.சிங்கின் ஆட்சி இன்று கவிழுமா..?" என்ற தலைப்பிலேயே தலைப்புச் செய்திகள்.. "அடுத்த பிரதமராக மீண்டும் ராஜீவ்காந்தியா..? அல்லது சந்திரசேகரா..? அல்லது தேர்தல்தானா..?" என்றெல்லாம் யூகங்களையும் சொன்னது மீடியாக்கள்.

நான் அப்போது மதுரையில் எனது அண்ணன் வீட்டில் அழையாத விருந்தாளியாக, வெட்டி ஆபீஸராக இருந்தேன். காலை முதலே எனக்குள் ஒரே பரபப்பு. எனது அண்ணன் வி.பி.சிங் தோற்றுவிடுவார் என்று என்னிடம் பந்தயம் கட்டினார். எனக்கு ஒரு நப்பாசை. “இது போனால் அடுத்து தேர்தல் வரும்பட்சத்தில் எதிர்க்கட்சிகளின் ‘ராசி’ப்படி காங்கிரஸ்தான் ஆட்சியைப் பிடிக்கும். அதனால் எதையாவது செய்து வி.பி.சிங் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வார்” என்றேன் நான். “பார்க்கலாம்” என்றார் எனது அண்ணன்.

தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு என்பதால் துவங்குவதற்குள் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு கையில் முறுக்கு பாக்கெட், சொம்ப தண்ணீரோடு டிவி முன் அமர்ந்துவிட்டேன். தூர்தர்ஷனுக்குள் போவதற்கு முன்பாக வி.பி.சிங் பற்றி ஒரு அறிமுகம்.(பல்வேறு பத்திரிகைகளில் வந்த செய்திகளின் தொகுப்பு)

1931-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி அலகாபாத் நகரில் பிறந்த வி.பி.சிங் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை உத்தரப்பிரதேசத்தில் இருந்த தையா சமஸ்தான மன்னர் ஆவார். அந்த மன்னருக்கு 2 மகன்கள். மூத்த மகன் சந்திரசேகர் பிரதாப்சிங். இரண்டாவது மகன்தான் வி.பி.சிங் என்றழைக்கப்பட்ட விஸ்வநாதன் பிரதாப்சிங்.

வி.பி.சிங்குக்கு 5 வயதானபோது மண்டா நகரின் மன்னர் ராவ்பகதூர் அவரை தனது வாரிசாகத் தத்தெடுத்துக் கொண்டார். டேராடூன் கர்னல் பிரவுன் பள்ளியில் படிப்பைத் தொடங்கிய வி.பி. சிங், பின்பு அலகாபாத்தில் உள்ள பாய்ஸ் உயர்நிலைப் பள்ளியிலும், புனே பெர்குஷன் கல்லூரியில் பி.எஸ்.சி,யும் படித்தார்.

அப்போது அணுசக்தி விஞ்ஞானத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த வி.பி.சிங் கல்லூரியில் சிறந்த மாணவராகவும் தேர்ச்சி பெற்றார். 1950-ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி பட்டப் படிப்பை முடித்த வி.பி. சிங் தீவிர அரசியலில் குதித்தார். வினோபாவேயின் பூமிதான இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர். தனது சொந்த நிலத்தையே அந்த இயக்கத்துக்கு தானமாகக் கொடுத்தார்.

1969-ம் ஆண்டு உ.பி. சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 1971-ல் முதல் முறையாக பாராளுமன்றத்துக்கு போட்டியிட்டு எம்.பி. ஆனார். 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி மந்திரி சபையில் துணை வர்த்தக மந்திரி ஆனார்.

பிறகு மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பி 1980-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில முதல் மந்திரியாகப் பணியாற்றினார். இந்தச் சமயத்தில்தான் உத்தரப்பிரதேசம் கொள்ளைக்காரர்களால் சூழப்பட்டிருந்தது. தடியெடுத்தவன் தண்டல்காரன் கதையாக மாநிலமெங்கும் கொள்ளைக் கும்பல்கள் நிரம்பி வழிந்தன. அவர்களை ஒடுக்குவதுதான் தனது முதல் பணி என்று அறிவிப்பு வெளியிட்டார். சில கொள்ளையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை ஜனநாயகப் பாதைக்குத் திருப்பினார். மிச்சம், மீதி இருப்போரையும் தான் நிச்சயம் மாற்றுவேன் அல்லது சிறை பிடிப்பேன் என்றார். ஆனால் இவரது துரதிருஷ்டம், இவரது சொந்த அண்ணனையே கொள்ளையர்கள் கொன்றுவிட தடுக்க முடியாமல் போய்விட்டதே என்று மனம் குமைந்த வி.பி.சிங் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகினார். (இந்த ஆட்சி விலகல் சம்பவம்தான் இவருடைய பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தின்போது பல பத்திரிகைகளில் “நேர்மையாளர், பண்பாளர்” என்ற பட்டம் சூட்ட முதல் காரணமாக இருந்தது)

1983-ல் மறுபடியும் இந்திராகாந்தியின் மத்திய மந்திரிசபையில் சேர்க்கப்பட்டு வர்த்தக மந்திரியாக நியமிக்கப்பட்டார். 1984-ம் ஆண்டு ராஜீவ்காந்தி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது நிதி மந்திரியாகப் பொறுப்பேற்றார் வி.பி.சிங். இங்கேதான் ஐயாவின் அனர்த்தம் துவங்கியது. பொதுவாகவே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மும்பை தொழிலதிபர்களின் லாபியின் தயவு அவர்களுக்குத் தேவை. இந்திராகாந்தி முதல்கொண்டு அனைவருமே அவர்களை அட்ஜஸ்ட் செய்துதான் போனார்கள். ஆனால் வி.பி.சிங் வந்தவுடன் தனது நிதி அமைச்சர் அதிகாரத்தைப் பயன்படுத்தி முதலில் அந்த லாபியை உடைத்தார்.

ஒரு புறம் நேர்மையான தொழிதிபர்கள் மறுபுறம் அரசியல்வாதிகளுக்கு எலும்புத் துண்டை வீசும் நேர்மையற்ற தொழிலதிபர்கள் என்று இந்திய வர்த்தகத்தையே இரு கூறாக்கினார். இந்திராவே மோதத் தயங்கிய திருபாய் அம்பானியிடமே தனது திருவிளையாடலைத் துவக்கினார். அம்பானி குழும அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினார். இதில்தான் முதலில் அவர் பிரபலமானார்.



இதாவது பரவாயில்லை. ராஜீவ்காந்தியின் மிக நெருங்கிய நண்பரான அமிதாப்பச்சனின் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தினார். அப்போதைக்கு ஆடித்தான் போனார் அமிதாப். யாராலேயும் நம்ப முடியவில்லை. எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது அந்தச் செய்தி. அந்தப் பதவி அவருக்கு நித்தியகண்டம்தான் என்பது அப்போதே தெரிந்தது.. அதற்கேற்றாற்போல் நிதி அமைச்சகத்திலிருந்து மாற்றப்பட்டு ராணுவ அமைச்சரானார். ஆனால் அங்கே ஒரு புயலே கிளம்பப் போகிறது என்பது ராஜீவ்காந்திக்குத் தெரியாமல் போனது அவருடைய துரதிருஷ்டம்.

1987 ஏப்ரல் 16ம் நாள் ஸ்வீடன் நாட்டின் வானொலியில் போபர்ஸ் பீரங்கி பேரத்தில் கமிஷன் பணம் கையாளப்பட்டதாகச் சொல்லி செய்தி வெளியானது. செய்தி வெளியானவுடனேயே இந்தியாவே பற்றிக் கொண்டது. இதுதான் சமயம் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கிக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு அவல் மெல்வது போல ராணுவ மந்திரியாக இருந்த வி.பி.சிங் அந்த ஊழலை விசாரிக்க கமிட்டி ஒன்றை நியமிப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்புதான் அவர் தேசியத் தலைவராக உருவெடுக்க முதல் படியாக அமைந்துவிட்டது. பிரதமரான தனக்கு தெரியாமல், தன்னிடம் கலந்தாலோசிக்காமல் இப்படி ஒரு கமிட்டியை அமைத்தது பற்றி ராஜீவ் கோபம் கொண்டார். இந்த மனக்கசப்பு வளர்ந்து தன் அமைச்சர் பதவியிலிருந்து விலகியதும் இல்லாமல் காங்கிரஸை விட்டே விலக நேர்ந்தது. கூடவே எம்.பி. பதவியிலிருந்தும் விலகினார்.

இனிதான் தீவிர அரசியல் என்று நினைத்தாரோ என்னவோ “ஜனமோர்ச்சா” என்ற கட்சியைத் தொடங்கினார் வி.பி.சிங். இந்த ஜனமோர்ச்சாவில் அவருக்குத் துணையாக நின்றவர்கள் ராஜீவ்காந்தியின் அத்தை மகன் அருண்நேருவும், ஆரீப் முகமது கானும். போகிற இடங்களிலெல்லாம் ராஜீவ்காந்தியை வெளுத்து வாங்கினார் சிங். போபர்ஸ் ஊழலில் ராஜீவ்காந்தி லஞ்சம் வாங்கியிருக்கிறார். தான் அதை எதிர்த்துக் கேட்டதால்தான் தன்னை அமைச்சரவையிலிருந்து நீக்கினார் என்று புகார் பாடினார். அவருடைய இந்தத் திடீர் புரட்சியால் கவரப்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து 1988-ல் வி.பி.சிங் ராஜினாமா செய்த அதே அலகாபாத் இடைத்தேர்தலில் போட்டியிட வைத்து ஜெயிக்க வைத்தனர். இவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றுப் போனவர் லால்பகதூர் சாஸ்திரியின் மகன் அனில்சாஸ்திரி.

அதன் பின் காங்கிரஸ¤க்கு எதிராக கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் முழு மூச்சுடன் வெற்றி கண்டார் வி.பி.சிங். ஜனதா கட்சி, ஜனமோர்ச்சா, தெலுங்கு தேசம், லோக்தளம், தி.மு.க. அசாம் கணபரிஷத், காங்கிரஸ்(எஸ்) ஆகிய 7 கட்சிகள் கொண்டு தேசிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி அதன் அமைப்பாளர் ஆனார். அப்போதைக்கு அவருக்கு முழு ஆதரவு கொடுத்து கை கொடுத்தவர் கலைஞர். போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் பற்றி ‘முரசொலி’ இதழில் செய்தி வராத நாளே கிடையாது. அதோடு வி.பி.சிங்கை அழைத்துக் கொண்டு ஊர், ஊராக பொதுக்கூட்டம் நடத்தி காங்கிரஸ¤க்கு எதிராக புயலைக் கிளப்பினார் கலைஞர்.

வி.பி.சிங் தனக்கும் ஒரு தனி அடையாளம் வேண்டும் என்பதற்காக ஜனதா, மக்கள் கட்சி, ஜனமோர்ச்சா, காங்கிரஸ்(எஸ்) ஆகிய 4 கட்சிகளை ஒன்றாக இணைத்து ஜனதா தளம் கட்சியைத் தொடங்கினார். இந்த ஜனதா தளம் கட்சியில்தான் எஸ்.ஆர்.பொம்மை, தேவேகவுடா, ராமகிருஷ்ணஹெக்டே ஆகியோர் ஒன்றாக இருந்தனர்.

இந்த நேரத்தில்தான் ராஜீவ்காந்தி போபர்ஸ் பிரச்சினையை திசை திருப்பும்விதமாக எதையாவது செய்து மக்களின் அபிமானத்தைப் பெறத் துடித்தார். அப்போது அவர் கண்ணில் சிக்கியது இலங்கை பிரச்சினை. எப்பாடுபட்டாவது ஒரு உடன்பாடு கண்டாவது தனது இழந்து போன இமேஜை தக்க வைக்க முடிவு செய்தார். பிடித்தார் ஒரு பிடி.. உடன் இருந்த ஆலோசகர்களின் அனைத்து ஆலோசனைகளுக்கும் தலை ஆட்டினார். அதன் விளைவையும் அவர் ஒருவரே அனுபவித்தார். போகட்டும்.

போபர்ஸ் புயலில் சிக்கி காங்கிரஸ் கவிழ, 1989-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி கூட்டணி வெற்றி பெற்றது. ஆனாலும் அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்காக எலியும், பூனையுமான பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவையும் சேர்த்துக் கொண்டு ஆட்சி அமைக்க முடிவு செய்தார்.

இவர் பிரதமராக வர நடத்திய ஒரு காமெடி நாடகமும் அன்றைக்கு அரங்கேறியது. 1989 டிசம்பர் 1, அன்று பாராளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டியிருந்தார்கள்.(இதையும் நான் தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்பில் பார்த்தேன்) பழைய ஜனதா கட்சியின் இளம் துருக்கியரான சந்திரசேகரும் வந்திருந்தார். பாவம் இளைத்துப் போய் டைபாய்டு காய்ச்சலில் அவதிப்பட்ட நிலையில் சால்வையை போர்த்திக் கொண்டு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார்.

கூட்டணி வெற்றி என்றவுடனேயே அவருக்குத் தான் பிரதமராக வேண்டும் என்கிற ஆசை. அவரைப் பார்க்க வந்த தேவிலாலிடம் தன்னை பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கும்படி கேட்டுக் கொண்டார். தனக்கே ஆதரவு கேட்டு வந்த தேவிலாலுக்கு புரையேறியது. வெளியில் குழப்பம் அதிகரித்துக் கொண்டே போக.. ஜனதா தளத்தின் சீனியர்கள் ஒரு குழப்படி செய்தார்கள். “சந்திரசேகர் வந்தால் உங்களை அமைச்சரவையில் சேர்க்க மாட்டார். அவர் நிறைய ஈகோ பார்ப்பார். வி.பி.சிங் என்றால் யாருக்குமே பிரச்சினையில்லை” என்று சொல்லி அவரை மூளைச் சலவை செய்துவிட்டார்கள்.

மண்டபத்தில் வி.பிசிங் “நான் பிரதமர் பதவிக்குப் .போட்டியிடவில்லை. எனக்கு ஆசையுமில்லை..” என்றார். சந்திரசேகர் அடுத்தது தனக்குத்தான் என்ற சந்தோஷத்தில் திளைத்ததை அவரது முகமே எடுத்துக் காட்டியது. அடுத்து தேவிலால் வந்தார். “வி.பி.சிங்தான் பிரதமர்.. இதில் யாருக்கும் ஆட்சேபணையில்லை.. அவரைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் தகுதியுள்ளவர்கள்..?” என்று பேச.. சந்திரசேகருக்கோ அதிர்ச்சி. பேச முடியவில்லை. முடிந்தது நாடகம்.

வீடு திரும்பிய சந்திரசேகர் அனைவரும் தன்னை நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டதாக பத்திரிகையாளர்களிடம் சொல்லி புலம்பினார். மந்திரிசபையில் சேர வரும்படி வி.பி.சிங் அழைத்தும் வர மறுத்துவிட்டார். (ஆனால் நேரம், காலம் பார்த்துக் காத்திருந்தார். பின்பு அதில் வெற்றியும் பெற்றார்.)

வி.பி.சிங் மறுநாள் டிசம்பர் 2-ம் தேதி இந்தியாவின் 10-வது பிரதமராகப் பதவியேற்றார். காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் இணைந்து மத்தியில் முதல் கூட்டணி அரசை அமைத்தவர் என்ற பெருமையும் வி.பி,சிங்குக்கு உண்டு.

பதவியேற்ற சில நாட்களிலேயே இவருக்கு வந்த சோதனை அப்போதைய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சையத்தின் மகள் மெகபூபை காஷ்மீர் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். சிறையில் இருக்கும் தங்களுடைய தீவிரவாத நண்பர்களை விடுவித்தால்தான் அவரை விடுவிப்போம் என்று நிபந்தனை விதித்தார்கள். என்னென்னமோ அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் தீவிரவாதிகள் தங்கள் நிலையில் உறுதியாக இருக்க.. வேறு வழியில்லாமல் அவர்கள் கேட்ட தீவிரவாதிகளை விடுவித்து உள்துறை அமைச்சரின் மகளை காப்பாற்றியது மத்திய அரசு. இந்த ஒரு செயலே மக்கள் வேறு.. மந்திரி வேறா.. என்ற வாதப் பிரதிவாதங்கள் எழ காரணமாக அமைந்தது. (இந்த மெகபூபா பிற்பாடு சென்னைவாழ் முஸ்லீம் ஒருவருக்குத் திருமணம் செய்விக்கப்பட்டு பின்பு விவாகரத்து பெற்று இப்போது முப்தி முகமது சையத்தின் கட்சித் தலைவராக காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் நடத்தி வருகிறார்.)

இலங்கையில் இருந்த அமைதி காப்புப் படையின் ‘திருவிளையாடல்கள்’ அனைத்தும் பிரதான கூட்டணிக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் மூலம் வி.பிசிங்கிற்கு போக, அமைதி காப்புப் படையை நாடு திரும்ப உத்தரவிட்டார் சிங். நமது ராணுவம் அமைதியை நிலை நாட்டப் போய் எக்கச்சக்கக் கெட்டப் பெயரோடு திரும்பி வந்தது இந்திய வரலாற்றில் ஒரு மறக்க முடியாத சோக நிகழ்ச்சியாகும்.

அமிர்தசரஸ் பொற்கோவிலில் ராணுவம் நுழைந்து பிந்தரன்வாலேயை சுட்டுக் கொன்ற நிகழ்ச்சிதான் இந்திராவின் படுகொலைக்கே ஒரு காரணமாக அமைந்துவிட்டது. இதற்காக அப்போதைய உள்துறை அமைச்சர் பூட்டாசிங்கும், ஜனாதிபதி ஜெயில்சிங்கும் தனித்தனியே மன்னிப்பு கேட்டு பொற்கோவிலில் செருப்பு துடைத்தும் தங்களது மன்னிப்பை பெற்றுக் கொண்டார்கள். பிரதமர் என்ற பொறுப்பில் தானும் தனியே மன்னிப்பு கேட்டு பெருந்தன்மையை மேற்கொண்டார் வி.பி.சிங்.

சரியாக 11 மாதங்களே ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இந்தக் காலக்கட்டத்தில் அவர் செய்த இரண்டு செயல்கள்தான் இன்றைக்கு வரைக்கும் தமிழகத் தலைவர்களும், மக்களும் அவரை மறக்க முடியாத அளவுக்கு வைத்திருக்கிறது.

பல்லாண்டுகளாக பிரச்சினையில் இருந்த காவிரி நதி நீர்ப் பிரச்சினைக்காக நடுவர் மன்றத்தை அமைத்தார் வி.பி.சிங்.

இரண்டாவதாக மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று பிற்பட்டோர்களுக்கான இட ஒதுக்கிட்டை அமல்படுத்தினார். இந்த அறிவிப்பு வந்த பின்புதான் மண்டல் கமிஷன் என்றால் என்ன என்பதெல்லாம் என்னைப் போன்ற அப்பிராணிகளுக்குத் தெரிந்தது. அந்த அளவுக்கு அந்த கமிஷனும், கமிஷன் அறிக்கையும் வெளிப்படுத்தாமல் கிடந்தன.

அந்தச் சமயத்தில் வடநாட்டில் தினமும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. டில்லி பல்கலைக்கழகத்தில் சில மாணவர்கள் தீக்குளித்து இறந்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிறிய சலசலப்புகூட எழவில்லை. இதன் பின்புதான் சமூக நீதிக் காவலரானார் வி.பி.சிங்.

இப்போதும் அம்பானியை விடவில்லை வி.பி.சிங். எல்.அண்ட் டி. நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிற்கு திருபாய்அம்பானி முயற்சி செய்த போது அதனைப் பலவித மோதல்கள், வேலைகள் செய்து தடுத்து நிறுத்தி அம்பானியை அந்நிறுவனத்தைவிட்டு வெளியேற்றிய பெருமை இவரையே சேரும்.

எந்த ஒரு மனிதருக்கும் புனிதர் பட்டம் தர முடியாத சூழல் உருவாகும் என்பது உலக நியதி. இவருக்கும் உண்டானது. இந்த முறை இவருடைய அண்ணன் மகளின் கணவர் அபயசிங்கோ, அஜயசிங்கோ.. இவரும் ராஜ பரம்பரைதான்.. காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இந்தியாவின் பிரபலமான பாட்மிண்டன் வீரர் ஒருவரின் கொலை வழக்கில் சிக்கினார். அந்த வீரரின் மனைவிக்கும் அஜயசிங்கிற்கும் நெருங்கிய உறவு இருந்ததாகவும், அதனாலேயே இந்தக் கொலை நடந்ததாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. இந்த வழக்கு பின்பு சி.பி.ஐ. வசமும் சென்றது. என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆனால் பின்னாளில் கொல்லப்பட்ட வீரரின் மனைவியை அஜயசிங் திருமணம் செய்து கொண்டது மட்டும் நடந்தது. இந்த வழக்கில் அஜயசிங்கிற்கு சாதகமாக அரசுத் தரப்பு நடந்து கொள்வதாக வி.பி.சிங்கை சம்பந்தப்படுத்தி செய்திகள் புறப்பட்டன. இது ஒன்றுதான் எனக்குத் தெரிந்து அவர் சம்பந்தப்பட்டு எழுந்த சலசலப்பு.

தமிழ்நாட்டில் கலைஞர் 89-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற போது நேரில் வந்திருந்து கலைஞரை பாராட்டிவிட்டுப் போனார். கலைஞருக்கும், இவருக்குமான நட்பு ஆட்சி மாறினாலும், அணிகள் மாறினாலும் மாறாமல்தான் இருந்தது. கலைஞர் தில்லி செல்லும்போதெல்லாம் வி.பி.,சிங்கை சென்று பார்த்துவிட்டுத்தான் வருவார்.

கலைஞருக்காக வந்த விமர்சனங்களைக்கூட தாங்கிக் கொண்டார் வி.பி.சிங். சென்னையில் புதிதாக அமைக்கப்பட்ட பன்னாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயரையும், உள்நாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டுவதுதான் முறை என்றாலும், அதனை அப்படியே உல்டா செய்து பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பெயரையும், உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயரையும் வைக்க பேருதவிகள் செய்தார். இது அப்போதே பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஆனாலும் காங்கிரஸ்காரர்கள் கேட்ட கேள்விகளையெல்லாம் கலைஞர் தனது சாதுர்யத்தால் சமாளித்துவிட்டார்.

பொதுவாக நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது இவருடைய ஆட்சி. யார் கண் பட்டதோ தெரியவில்லை. திரு.லால்கிஷன் அத்வானியால் அனர்த்தம் துவங்கியது. இராமஜென்ம பூமியை மையாக வைத்து, இந்துத்துவாவை இந்திய வாக்காளர்களிடம் திணித்துத்தான் பாரதீய ஜனதா வெற்றி பெற்றிருந்தது. இன்னும் அடுத்த ஸ்டெப்பிற்கு போக நினைத்த அத்வானி சோம்நாத்தில் இருந்து அயோத்திக்கு ரத யாத்திரை செல்வதாக அறிவித்து தனது வேலையை ஆரம்பித்தார்.

இந்த ரத யாத்திரைக்கு எந்த இடைஞ்சலும் தரக்கூடாது என்று முன்பேயே வி.பிசிங்கிடம் கேட்டுக் கொண்டார். வி.பி.சிங் போக வேண்டாம் என்று மறுத்தும் தனது அரசியல் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு அயோத்திக்கு வீர நடை நடந்தார் அத்வானி. அப்போது நமது லாலூஜி பீகாரின் முதல்வர். ஆனால் ஜனதா தளத்தின் சார்பாக ஆட்சியில் இருந்தார். அயோத்தியில் இன்றைய நிலைமையில் அத்வானி உள்ளே நுழைந்தாரெனில் எரிமலைதான் வெடிக்கும் என்பதை உணர்ந்திருந்தார் லாலூ. ஆனால் தன்னைத் தடுத்தால் பூகம்பமே வெடிக்கும் என்று சொல்லியிருந்தார் அத்வானி. அதையும்தான் பார்த்துவிடுவோமே என்றெண்ணி லாலூஜி திருமிகு அத்வானியை கைது செய்வதாகச் சொல்லி ரத யாத்திரையை தடை செய்ய.. அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே வி.பி.சிங் தலைமையிலான ஆட்சிக்கு தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டது பாரதீய ஜனதா.

இப்போது விட்ட இடத்திலிருந்து தொடர்கிறேன்.

தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்த நிலையில் நிச்சயம் நமக்குப் புரியாது என்றாலும் எப்படித்தான் பேசுகிறார்கள் என்பதை பார்ப்போமே என்ற ஆசையில் பார்க்கத் துவங்கினேன்.. அப்போதே எனது உடல் லேசாக ஆடவும் தொடங்கியது. நான் சரியாகக் கணிக்கவில்லை எது என்னவென்று..? ஓட்டெடுப்புக்கான நேரம் நெருங்க, நெருங்க எனது உடலும் ஜிவ்வென்றானது. போர்வையை போர்த்திக் கொண்டு அமர வேண்டியதாக இருந்தது.

நள்ளிரவு கடந்த பின்புதான் ஓட்டெடுப்பு நடந்தது.. காங்கிரஸ், பாரதீய ஜனதா கூட்டணி என்று 316 பேர் நம்பிக்கை கோரும் மசோதாவை எதிர்த்தும், தேசிய முன்னணியினர் 142 பேர் நம்பிக்கை கோரும் மசோதாவிற்கு ஆதரவளித்தும் ஓட்டளிக்க வி.பி.சிங் தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்தது. இங்கே என்னால் உட்காரவும், முடியவில்லை.. படுக்கவும் முடியவில்லை. அப்படியொரு அவஸ்தைக்கு உள்ளானேன்.. என்னவென்றே தெரியாமல் டிவியை ஆ•ப் செய்துவிட்டு அடுத்து ஆட்சிக்கு வரப் போவது யார்? சந்திரசேகரா? ராஜீவ்காந்தியா..? என்றெல்லாம் எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டு விடிய விடிய தூங்காமல் முழித்துக் கொண்டிருந்தேன்.

விடிந்தது. அக்கா காபி போட்டுக் கொடுக்க ஒரு சிப் அருந்தியிருப்பேன். அப்படியே வாந்தி. அடுத்து சுடு தண்ணீர் போட்டுக் கொடுத்தார்கள் அக்கா. அதுவும் வாந்தி. நீராகாரம் வந்தது. அதுவும் வாந்தி.. இப்படி எதுவெடுத்தாலும் குமட்டிக் கொண்டு வர.. அண்ணனும், அக்காவும் கவலைப்பட்டார்கள். “உன்னை யார் ராத்திரி முழுக்க டிவி பார்க்கச் சொன்னது..?” என்றார்கள். அப்போதும் நான் கேட்ட கேள்வி, “அடுத்த பிரதமர் யாருண்ணே..? சந்திரசேகரா? ராஜீவ்காந்தியா..” என்று.. (அன்றைக்கு அவ்வளவு அரசியல் வெறி)

என் அண்ணன் தலையில் அடித்துக் கொண்டு பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போனார். ரத்த ஓட்டத்தை சோதனை செய்தார்கள். இருக்க வேண்டிய அளவை விட மிக, மிக குறைவாக இருந்ததாம். “பெட்டில்தான் சேர்க்க வேண்டும். வேறு வழியில்லை” என்றார் மருத்துவர். அண்ணன் உதட்டைப் பிதுக்கி, என்னை கோபப் பார்வை பார்த்துவிட்டு “சரி” என்றார்..

படுத்தேன்.. குளுகோஸ் ஏற்றினார்கள்.. 8 பாட்டில்கள்.. “ராத்திரி முழுக்கத் தூக்கம் இல்லை” என்றேன்.. ஒரு ஊசி போட்டார்கள். சும்மா சுகமாகத் தூங்கினேன்.. மறுநாள் மதியம்தான் கண் விழித்தேன். இப்போதும் எனது அக்காவிடம் “சந்திரசேகரா? ராஜீவ்காந்தியா?” என்றேன்.. “செருப்பால அடிப்பேன்.. கம்முன்னு கிடடா..” என்றார். “வி.பி.சிங், சந்திரசேகர், ராஜீவ்காந்தி..” என்று முணுமுணுத்தபடியே ஊசி போட வந்த நர்ஸ்களிடம் இதே கேள்வியைக் கேட்டு அளப்பறை செய்ததை என்னால் மறக்க முடியவில்லை.

அன்றைக்குத்தான் முதல் முறையாக நினைவு தெரிந்து மருத்துவமனை பெட்டில் இருந்தேன் என்று நினைக்கிறேன். தொடர்ந்து 4 நாட்கள் சேர்ந்தாற்போல் இருந்துவிட்டு ஹாயாக வீடு திரும்பினேன்.. வீட்டில் இருந்த பத்திரிகைகள் ‘சந்திரசேகர் பிரதமர்’ என்று சொன்னது.. சுப்பிரமணியசாமியின் திருவிளையாடலால்தான் இவர் பிரதமரானார் என்று நான் வீட்டில் சொல்ல, அக்காவோ “பாவி.. பாவி.. எவன் வந்தா நமக்கென்ன? போனா நமக்கென்ன? 2000 ரூபா போச்சு..?” என்று என்னைத் திட்டிக் கொண்டிருந்தது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.

அண்ணன் விஸ்வநாதன் பிரதாப் சிங்கை இந்த ஒரு காரணத்திற்காகவே என்னால் மறக்கவே முடியாது. ஆஸ்பத்திரி வாழ்க்கை, குளுகோஸ் ஏற்றுதல், நர்ஸ்களின் ஊசி ஏற்ற நரம்பு தேடி நம்மையே பயிற்சி உடலாக்குதல்.. நேரத்தைக் கணித்து காசு பார்த்துவிட்டு நம்மை வெளியே அனுப்பும் ஆஸ்பத்திரிகளின் தில்லுமுல்லு என்று சகலத்தையும் அறிந்து கொண்டேன். இது பற்றித் தனிப் பதிவே போடலாம்..

இப்போது மீண்டும் வி.பி.சிங்கிற்கு வருவோம்.

வி.பி.சிங்கிற்கு பிறகு சந்திரசேகர் தனது நீண்ட நாள் கனவான பிரதமர் பதவியை ராஜீவ்காந்தியின் துணையோடு கைப்பற்றினார். இதுவும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. தேன்நிலவு ஆறே மாதங்கள்தான். அரியானா மாநில கான்ஸ்டபிள்கள் இரண்டு பேர் ஜன்பத் சாலையில் குச்சி மிட்டாய் சாப்பிடப் போய் அது பிரச்சினையாகி சந்திரசேகர் தன்மானச் சிங்கமாகி “உன் ஆதரவும் வேணாம்.. நீயும் வேணாம்.. இந்தா பிடிய்யா..” என்று சொல்லி ராஜினாமா கடிதத்தை நீட்ட தேர்தல் வந்தது.

தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் துன்பியல் சம்பவத்திற்கு உள்ளாக்க.. அதன் பலனாக எதிர்க்கட்சிகளை துவைத்துக் காயப்போட்ட செல்வாக்கில் காங்கிரஸ் அரியணை ஏற அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அசைக்க முடியாது என்ற நிலையில் எதிர்க்கட்சி கூட்டணி கலகலத்துப் போனது.

மறுபடியும் காட்சிகள் மாறி கோலங்களும் மாறின. 1996-ம் ஆண்டு எதிர்க்கட்சி கூட்டணியான ஐக்கிய முன்னணியின் ஆட்சி அமைய வி.பி.சிங் முக்கிய பங்காற்றினார். அப்போது அவரையே மீண்டும் பிரதமர் பதவியை ஏற்கும்படி கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கேட்டுக் கொண்டனர். ஆனால் தனக்குப் பதவி ஆசையில்லை. ஏற்கெனவே ஒரு முறை இருந்துவிட்டேனே.. என்றெல்லாம் சல்ஜாப்பி சொல்லி மறுத்தார். தலைவர்கள் அவரைப் பார்த்து இரண்டில் ஒன்றை பார்த்துவிடுவது என்று சொல்லி அவரது வீட்டிற்கு வர.. அவர்கள் வருவதை தெரிந்து கொண்டு வீட்டின் பின்புற வாசல் வழியே எஸ்கேப்பானார் வி.பி.சிங். இதன் பின்புதான் தேவேகவுடா பிரதமரானார். அந்த வகையில் தேவேகவுடாவும் குஜ்ராலும் வி.பி.சிங்கிற்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும்.

இந்த நேரத்தில்தான் அவருக்கு சிறுநீரகக் கோளாறும், ரத்தப் புற்று நோயும் தோன்றின. வாரத்திற்கு மூன்று முறை டயாலிஸஸ் செய்ய வேண்டிய நிலைமையிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கட்சிக் கூட்டங்களில் கலந்து கொண்டார். குஜ்ரால் அமைச்சரவை வரையிலும் இவரும் லைம்லைட்டில்தான் இருந்தார். வாஜ்பாய் அரசு அமைந்த பின்பு கலைஞரும் அவருக்கு ஆதரவளித்து ஆட்சியை ஸ்திரப்படுத்தி, எதிர்க்கட்சிகளை சின்னாபின்னமாக்கிய பின்பு, தனது உடல் நலனை முன்னிட்டு தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கினார்.

சமீப காலமாக சற்று உடல் நலம் தேறிய நிலையில் ‘ஜன்மோர்ச்சா’ கட்சியை மீண்டும் தோற்றுவித்தார். இக்கட்சிக்கு நடிகர் ராஜ்பாப்பரை தலைவராகவும் நியமித்தார். அதுவும் கொஞ்ச நாட்கள் ஓடியது. குடிசை வாழ் மக்களுக்காக போராடத் துவங்கினார். உண்ணாவிரதப் போராட்டமெல்லாம் நடத்தினார். உ.பி.யில் மாயாவதி ஆட்சி அமைத்த பின்பு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த விஷயத்தில் நேரடியாகக் களத்தில் இறங்கி போராடி கைதானார். இதுதான் அவர் கடைசியாக செய்த போராட்டம் என்று நினைக்கிறேன். கடைசிக் காலக்கட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ராஜ்பாப்பரும் கட்சியில் இருந்து கழண்டு கொள்ள தனது மகனையே கட்சித் தலைவராக்க எண்ணியிருந்தாராம். அதற்கான செயல்பாடுகளில் முனைந்திருந்தபோது நோய் கடுமையாகத் தாக்கிவிட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வி.பி.சிங்.

2 மாத போராட்டத்திற்குப் பிறகு நோயின் பிடியிலிருந்து விடுதலையாகியுள்ளார் வி.பி.சிங். எத்தனையோ பிரதமர்களைப் பார்த்துவிட்ட இந்தியாவிற்கு இப்படியும் ஒரு பிரதமர் என்ற வரிசையில் மொரார்ஜி தேசாய்க்கு பிறகு பொருத்தமானவராக இருந்தவர் வி.பிசிங் மட்டுமே.. இந்த ஒரு பெயரே அவருக்குப் போதும் என்று நினைக்கிறேன்.

அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.

சென்னையில் டிசம்பர் 17-26 சர்வதேசத் திரைப்பட விழா - ஒரு அறிமுகம்

25-11-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நான் முன்பே சொல்லியிருந்ததைப் போல 6-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 17-ம் தேதியிலிருந்து 26-ம் தேதிவரையிலும் சென்னையில் நடைபெறவிருக்கிறது.

திரைப்பட விழாக்கள் என்றால் முன்பெல்லாம் மும்பையிலும், கொல்கத்தாவில் நடப்பதை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பின்பு மத்திய அரசு மும்பையில் நடத்தி வந்த சர்வதேச திரைப்பட விழா கோவாவிற்கு இடம் மாற்றப்பட்ட பின்பு அதுதான் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவதாக கொல்கத்தாவும், மூன்றாவதாக திருவனந்தபுரத்தில் நடைபெறும் திரைப்பட விழாவும் திரைப்பட ரசிகர்களை வசீகரித்துள்ளன.

கோவா, கொல்கத்தா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் போட்டிகளும் நடத்தப்பட்டு சிறந்த திரைப்படங்களுக்கு விருதும், ரொக்கப் பரிசும் வழங்கப்படுவதால் பல்வேறு நாடுகளிலிருந்து தலைசிறந்த திரைப்படங்கள் வரவழைக்கப்பட்டு திரையிடப்படுகின்றன.

கோவா திரைப்பட விழாவிற்கு மத்திய அரசும், கொல்கத்தா, திருவனந்தபுரம் திரைப்பட விழாக்களுக்கு அந்தந்த மாநில அரசுகளும் நிதியுதவி உள்ளிட்ட சகலத்தையும் செய்து வருவதால் அந்த திரைப்பட விழாக்கள் நடைபெறுவதில் எவ்வித சிரமமும் இருப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மாநில அரசு திரைப்பட விழாக்கள் நடத்துவதில் ஆர்வம் இல்லாமல் இருப்பதினால், தனி அமைப்புகள் மட்டுமே நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

கடந்த 5 வருடங்களாக ICAF என்றழைக்கப்படும் INDO CINE APPRECIATION FOUNDATION என்னும் அமைப்பு சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் அங்கத்தினர்களின் உதவியினாலும், தனி நபர்களின் நன்கொடையினாலும் மட்டுமே இந்த அமைப்பு இத்திரைப்பட விழாவை வருடந்தோறும் நடத்தி வருகிறது.

கோவா, கொல்கத்தா, திருவனந்தபுரம் போன்ற இடங்களுக்குச் சென்று திரைப்படங்களைப் பார்க்கவியலாத சென்னைவாழ் திரை ஆர்வலர்களுக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை என்கிற நிலைமை. அந்த வகையில் கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து அனைத்து திரைப்பட விழாக்களிலும் நான் பங்கேற்று வந்துள்ளேன். இப்போது அடுத்த மாதம் துவங்குவது ஆறாவது வருடம்.

ஒவ்வொரு வருட திரைப்பட விழாக்களிலும் புதுப்புது அனுபவங்களாகக் கிட்டுகின்றபோது கிடைக்கின்ற பரவசங்கள் அனைத்தையும் எழுதிவிட முடியாது.. ஒரு வருடம் ஐரோப்பிய திரைப்படங்கள் மனதை கொள்ளை கொண்டன என்றால் அடுத்த வருடம் கொரியத் திரைப்படங்கள். அதற்கடுத்த வருடத்தில் ஈரான் திரைப்படங்கள்.. தொடர்ந்து லத்தீன் அமெரிக்கத் திரைப்படங்கள் என்று எங்கெல்லாம் செல்லூலாய்டு சிற்பங்கள் செதுக்கப்படுகின்றனவோ, அதுவெல்லாம் சினிமா பற்றிய புரிதலை புதிது, புதிதாக எனக்குள் ஏற்படுத்தி வருகின்றன.

தமிழ்த் திரைப்படங்களையும், இந்தியத் திரைப்படங்களையும், ஆங்கிலத் திரைப்படங்களையும் எங்காவது பார்த்துவிட முடிகிறது. ஆனால் ஆங்கிலம் தவிர்த்த அயல் மொழில் திரைப்படங்கள் சுலபத்தில் கிடைப்பதில்லை. டிவிடிகளில் எந்தத் திரைப்படம் பார்த்தாலும் திரையரங்குகளில் பார்க்கும்போது கிடைக்கும் மனநிறைவும், நூறு சதவிகித உணர்த்துதலும் நமக்குக் கிடைக்காது என்பது மறுக்க முடியாத உண்மை. உதாரணமாக கிளேடியேட்டர் படத்தினையும், Behind the enemy lines படத்தினையும் டிவிடியில் பார்ப்பதற்கு பார்க்காமலேயே இருக்கலாம் என்பது எனது தெளிவு.

திரைப்படம் என்பது ஒரு கலை.. ஒரு மொழி.. ஒரு கலாச்சாரப் பரிவர்த்தனை என்று எத்தனைவிதமாக வேண்டுமானாலும் சொல்லலாம். அது போன்று வருடத்திற்கொரு முறை நமக்குக் கிடைக்கின்ற வாய்ப்பை வீணாக்கக்கூடாது என்று நினைக்கிறேன்.

முதல் 4 திரைப்பட விழாக்களையும் தொடர்ந்து பார்த்த நான், 5-வது திரைப்பட விழாவின்போது மாதாமாதம் சம்பளம் கொடுத்த காரணத்தால் ஒரு அலுவலகத்தில் ஆணி பிடுங்க வேண்டிய கட்டாயத்தில் மாட்டிக் கொண்டேன். அதே போல் இப்போதும்.. இந்த முறை பத்து நாட்கள் விடுமுறை கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அதே சமயம் Loss of Pay-யில் விடுப்பு எடுத்தால் கிடைக்கக் கூடிய நஷ்டம் 3000 ரூபாய் என்பதாலும் சற்று யோசிக்க வேண்டியுள்ளது.

கோவா, கொல்கத்தா, திருவனந்தபுரம் ஆகிய திரைப்பட விழாக்களுக்கு வரும் அனைத்துத் திரைப்படங்களும் இங்கு வராது என்றாலும், குறிப்பிடத்தக்க அளவில் சிறந்த திரைப்படங்களாகத் தேர்வு செய்யப்பட்டவைகளை எப்பாடுபட்டாவது வரவழைக்கிறார்கள். சென்னை திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவு இல்லாததால் அதிகமான புதிய திரைப்படங்கள் இங்கு வருவதற்கு தடையாக இருப்பதாகத் தெரிகிறது. போட்டி வைத்து பரிசு கொடுப்பது என்றால், அது இந்த அமைப்பின் நிதி நிலைமைக்கு ஒத்து வராதது என்பதால் அதனை நிறைவேற்ற முடியவில்லை என்கிறார்கள் நிகழ்ச்சி அமைப்பாளர்கள்.

இந்த முறை நடக்கவிருக்கும் 6-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கம், உட்லண்ட் சிம்பொனி, மற்றும் தென்னைந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கம்(சேம்பர் திரையரங்கு) ஆகிய மூன்று இடங்களில் நடைபெறப் போகிறது. போன வருடம் பைலட் திரையரங்கத்திலும் நடந்தது. ஆனால் இந்த முறை அங்கே இல்லை என்று அறிகிறேன். இது ரசிகர்களுக்கு இந்தாண்டு கொஞ்சம் கூடுதல் சுமையைத் தரும் எனறு நினைக்கிறேன்.

முதல் மூன்று நாட்களில் திரையிடப்படும் திரைப்படங்களின் பட்டியல் முதலில் வழங்கப்படும். அந்தப் பட்டியல் திரையிடப்படும் திரையரங்குகளிலும் ஒட்டப்பட்டிருக்கும். அந்த மூன்று நாட்களுக்குப் பின்பு அடுத்த மூன்று நாட்களுக்கான பட்டியல் வழங்கப்படும். குறித்த நேரத்தில் படப்பெட்டி வராமல் போனால் திரைப்படங்களின் ஷெட்யூல் மாற்றப்படும். படங்களில் மாற்றம் இருப்பின் அவையும் முறைப்படி பார்வையாளர்களுக்கு அறிவிக்கப்படும்.

துவக்க நாளன்று திரைப்பட விழா மலர் ஒன்றையும் வழங்குவார்கள். அந்த மலரில் ஒவ்வொரு திரைப்படத்தின் கதைச்சுருக்கமும், படம் பற்றிய ஏனைய விவரங்களும் அச்சிடப்பட்டிருக்கும். அதனைப் படித்துவிட்டுத்தான் முக்கால்வாசி ரசிகர்கள் திரையரங்கில் கூடுவார்கள். சிலர் முன்பேயே இணையத்தில் அத்திரைப்படம் தொடர்பான பல விஷயங்களையும் படித்துவிட்டு நல்ல படம் என்று தெரிந்திருந்தால் பார்ப்பவர்களிடத்திலெல்லாம் சொல்லிவிட்டு கூட்டத்தைக் கூட்டிவிடுவார்கள்.

சில சமயம் நன்றாக இருக்கும் என்று நினைத்து உள்ளே போனால் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவார்கள். அப்பொழுது பட்டென்று வெளியேறி அடுத்த தியேட்டருக்கள் நுழைவார்கள். அங்கேயும் பிளேடு என்றால் மூன்றாவது தியேட்டருக்கு ஓடுவார்கள். முடியவில்லையெனில் மெல்ல வெளியேறி, வெண்குழலை பத்த வைத்துவிட்டு கதையடிப்பார்கள்.

சென்ற வருடங்களில் உட்லண்ட்ஸில் ‘போர்’ என்றால் சிம்பொனி.. அங்கு ‘பிரச்சினை’ என்றால் அப்படியே வண்டியை எடுத்து மின்னல் வேகத்தில் பைலட் தியேட்டர்.. என்று சுற்றினோம். சில திரைப்படங்களின் கதைச்சுருக்கம் சேம்பர் திரையரங்கத்திற்கும் எங்களை விரட்டியது.. ஆனால் சேம்பர் திரையரங்கில் காலை காட்சிக்கு மட்டுமே அமோக கூட்டம் வரும். ஏனெனில் பேருந்தில் வருபவர்கள் மிக விரைவாக ஜெமினியில் இறங்கி அப்படியே பொடி நடையாக நடந்து வந்துவிடுவார்கள்.

உட்லண்ட்ஸில் இருந்து சேம்பர் திரையரங்கத்திற்கு வர வேண்டுமெனில் காரோ, டூவீலரோ வேண்டும். இருப்பவர்கள் அதைத்தான் பயன்படுத்தியாக வேண்டும். ஆனாலும் அது அலைச்சல்தான்.. அப்படியாக சென்ற ஆண்டு நான் சேம்பர் திரையரங்கில் பார்க்காமல் விட்ட நல்ல திரைப்படங்கள் பல.. இந்த ஆண்டு அப்படியொரு இடியாப்பச் சிக்கல்தான் ரசிகர்களுக்கு..

உட்லண்ட்ஸ், சிம்பொனி இரண்டும் பிடிக்காவிடில் அங்கேயே கூடிக் களித்து கும்மியடிக்கலாம்.. முடிந்தவர்கள் வண்டியை பத்திக் கொண்டு ஜெமினி, சேம்பர் திரையரங்கத்திற்கு ஓடி வரலாம்.. வேறு வழியில்லை..

எப்போதும் மதியம் 1.30 மணிக்கு இடைவேளை விடப்படும். அடுத்து 2.45 அல்லது 3 மணிக்குத்தான் அடுத்தத் திரைப்படம் துவங்கும். உட்லண்ட்ஸ் திரையரங்கு அருகில் நல்ல ஹோட்டல்கள் இல்லாததும் கொஞ்சம் சிரமத்தைத் தருகிறது. ராயப்பேட்டை மணிக்கூண்டு சிக்னல் அருகில் ஒரு சிறிய ஹோட்டல் உள்ளது. சுத்தம் பரவாயில்லை என்ற ரகம். அதனை விட்டால் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் திரும்பினால் பல கடைகள் உள்ளன. போய்க்கொண்டே இருக்கலாம்.

இந்தப் புறமாக நடந்து வந்தால் ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகில் ஒரு நல்ல ஹோட்டல் உள்ளது. ஆனால் அங்கே கை கழுவுவதற்கே கியூவில் நிற்பார்கள். அவ்வளவு கூட்டம் கூடும். இல்லாவிடில் சிறிய ரக கையேந்தி பவன்கள் ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ளன. சுகாதாரம் பற்றியே பேசக்கூடாது என்று நினைப்பவர்கள் தாராளமாக அங்கு செல்லலாம்.

பிலிம் சேம்பர் திரையரங்கின் அருகில் அண்ணா சாலையில் நிறைய ஹோட்டல்கள் உள்ளன. ஆனால் விலைதான் எருமை மாட்டுவிலை.. ஒரு தயிர் சாதமே 15 ரூபாய் என்கிறார்கள். இங்கேயும் சந்து பொந்துக்குள் தேடினால் கையேந்தி பவன்கள் தாராளமாக இருக்கின்றன. ஆனால் சுற்றுப்புறத்தைப் பார்த்தீர்களானால் சாப்பிடவே மனசு வராது.

திரைப்படம் பார்க்க வருபவர்களில் வீட்டிலிருந்தே மதியச் சாப்பாடு கட்டிக் கொண்டு வருபவர்களும் உண்டு. பள்ளிக் காலத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் அவரவர் ஆளுக்கொரு மூலையில் திரையரங்கத்தின் இருட்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

குறைந்தபட்சம் மதியச் சாப்பாட்டுக்கு 20 ரூபாயும், காலை, மாலை காபி, டீ மற்றும் நொறுக்குத் தீனி என்று பட்ஜெட் போட்டாலும் தினமும் 40 ரூபாயாவது செலவாகும். கூடுதலாக வாகனம் வைத்திருந்தால் அவர்களுக்கு ஒரு நாளைக்கு பத்து ரூபாய்தான் நுழைவுக் கட்டணம். எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். பின்பு வந்து நிறுத்திக் கொள்ளலாம் என்ற சிறப்பு விதிவிலக்கு வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு உண்டு. சேம்பர் திரையரங்கில் வாகனங்களுக்கு கட்டணம் கிடையாது. ஆனால் வாகனங்களுக்கு அங்கு யாரும் பொறுப்பில் இல்லை. காணாமல் போனால் உங்கள் தலையெழுத்துதான். ஆக வாகனங்களின் கட்டணத்தையும் சேர்த்தால் 50 ரூபாய் வருகிறது. பத்து நாட்களுக்கு 500 ரூபாய்.. மொத்தமாக திரைப்பட விழாவிற்காக 1000 ரூபாய் இந்த வருடத்தில் செலவானதாக சிதம்பரக் கணக்கு எழுதிக் கொள்ளலாம்.

திரைப்பட விழாவிற்கு வருடந்தோறும் தவறாமல் வரும் சினிமா பிரபலங்கள் குறைவுதான்.. பாலுமகேந்திரா சில நல்ல திரைப்படங்களுக்கு தவறாமல் வந்துவிடுவார். அதிலும் நார்வே, ஸ்வீடன், ஹங்கேரி, டென்மார்க், பிரெஞ்சு, ஜெர்மனி திரைப்படங்கள் எனில் நிச்சயம் அவரை அரங்கில் சந்திக்கலாம்.

இயக்குநர் சந்தானபாரதியும், நடிகர் ரமேஷ்கண்ணாவும் எப்போதும் இணைந்தே இருப்பார்கள். தினந்தோறும் அட்டெண்டண்ஸ் கொடுப்பார்கள். இருவரும் அதிகப் படங்களைப் பார்க்கும் பிரபலங்கள்.. பழம் பெரும் இயக்குநர் ஏ.ஜகந்நாதன் தினமும் ஏதாவது இரண்டு திரைப்படங்களையாவது பார்த்துவிட்டுத்தான் செல்வார். தற்போது ‘சிலம்பாட்டம்’ திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குநர் சரவணன், கடந்த 5 வருடங்களாக திரைப்பட விழாவில் பங்கெடுத்தவர்தான்.

நடிகைகளில் நான் பார்த்து ஒரேயொருவர் மட்டும்தான் கடந்த 5 வருடங்களாகத் தொடர்ந்து திரைப்பட விழாவிற்கு வருகை தந்து என்னை அசத்துகிறார். பெயரைச் சொன்னால் நீங்களும் அதிசயித்துப் போவீர்கள்.. அவர் சி.கே.சரஸ்வதி. காமெடி மற்றும் குணச்சித்திர நடிகையான இவருக்கு உலகத் திரைப்படங்களின்மேல் அலாதி பிரியமாம். இந்தக் காலக்கட்டத்தில் ஷ¥ட்டிங் இருந்தால்கூட அதனைத் தவிர்த்துவிடுவார். அதே போல் கட்சிக் கூட்டங்களையும் ஒருவாறாகச் சமாளித்தே வருவதாக சென்ற வருடம் நான் சந்தித்தபோது சொன்னார். கூடுதலாக சென்ற ஆண்டிலிருந்து நடிகை குயிலியும் தினந்தோறும் வருகை தர ஆரம்பித்துள்ளார்.

திரைப்படக் கல்லூரி மாணவர்களும், சில பெரிய அளவில் பெயரெடுத்திராத திரைப்பட இயக்குநர்களும் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த வருடமாவது நட்சத்திரங்களின் கூட்டம் கூடுகிறதா என்பதைப் பார்ப்போம்.

இந்த ஆண்டு திரைப்பட விழாவில் அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, பால்கன் நாடுகள், பிரேஸில், கனடா, சைனா, குரோஷியா, டென்மார்க், பிரெஞ்சு, போலந்து, ஜெர்மனி, ஹங்கேரி, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், மாசிடோனியா, மலேஷியா, நார்வே, பிலிப்பைன்ஸ், செர்பியா, இலங்கை, அமெரிக்கா என்று இந்தியா உட்பட 35 நாட்டுத் திரைப்படங்கள் அணிவகுக்கப் போகின்றன.

இத்திரைப்பட விழாவின் ஒரு அம்சமாக பிரபல ஜப்பானிய இயக்குநரான Keisuke Kinoshite-வின் நினைவைப் போற்றும்வகையில் இவருடைய திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

Country Focus பிரிவில் ரஷ்யா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் திரைப்படங்கள் இடம் பெறுகின்றன.

Retrospective பிரிவில் Korea நாட்டின் Kim Ki Duk, France நாட்டின் Alain Resnais, Finland நாட்டின் Aki Kaurusmaki ஆகிய திரைக் கலைஞர்களின் திரைப்படங்கள் திரையிடப்படும்.

Theme of Warsaw என்ற பிரிவின் கீழ் போலந்து நாட்டின் 3 திரைப்படங்கள் திரையிட உள்ளது.

உலக சினிமா பிரிவில் புகழ் பெற்ற உலகத் திரைப்படங்கள் அணிவகுக்க காத்திருக்கின்றன.

LIFE TIME ACHIEVEMENT AWARD என்ற பிரிவின் கீழ் தமிழ்ச் சினிமாவில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

Chennai Talent Campus பிரிவின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் ஆவணப்படங்களும், குறும்படங்களும் திரையிடப்படும்.
ஒவ்வொரு திரைப்படத்தின் முடிவிலும் அத்திரைப்படம் தொடர்பானவர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும்.

திரைப்பட விழாவின் துவக்க நாளான டிசம்பர் 17-ம் தேதியன்று காலையிலேயே மூன்று திரையரங்குகளிலும் திரைப்படங்கள் திரையிடப்படும். ஆனால் சம்பிரதாயமாக அன்றைய தினம் மாலைதான் துவக்க விழா உட்லண்ட்ஸ் திரையரங்கில் மட்டும் நடைபெறும். அது சமயம் சிம்பொனியிலும், சேம்பர் திரையரங்கிலும் திரைப்படக் காட்சிகள் இருக்காது.

உட்லண்ட்ஸ் மற்றும் சிம்பொனி திரையரங்குகளில் தினமும் 5 திரைப்படங்கள், சேம்பர் திரையரங்கில் ஒரு நாளைக்கு 4 திரைப்படங்கள் வீதமூம் திரையிடப்பட உள்ளன.

இத்திரைப்பட விழாவின் நுழைவுக் கட்டணமாக ஏற்கெனவே ICAF அமைப்பிலோ அல்லது மற்ற சினிமா அமைப்புகளில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு 300 ரூபாயும், இல்லாத புதுமுகங்களுக்கு 500 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. மேலும் திரைப்படக் கல்லூரிகளில் பயிலும் மாணவச் செல்வங்களுக்கும் சலுகைக் கட்டணமாக 300 ரூபாய் என்றே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சம் 120 திரைப்படங்களுக்கு 500 ரூபாய் என்பது மிகவும் குறைவு என்றுதான் நான் சொல்வேன்.. கணக்குப் போட்டுப் பாருங்கள்.. புரியும்..

உறுப்பினர் அனுமதி சேர்க்கை இப்போது நடந்து வருகிறது. 500 ரூபாய் கட்டணத்தை பணமாகவோ, காசோலையாகவோ செலுத்தலாம். கையோடு ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்றினையும், எடுத்துக் கொண்டு ICAF அமைப்பின் அலுவலகத்திற்கு நேரில் சென்று சமர்ப்பிக்கலாம். பத்து நாட்களுக்கு உங்களது கழுத்தில் தொங்க வேண்டிய அடையாள தாலியை உடனே அங்கேயே வழங்குவார்கள்.

இந்தத் ‘தாலி’ மிக, மிக முக்கியம். இது இல்லாவிடில் உள்ளே நுழைவது மிகவும் கடினம். வருடந்தோறும் முதல் அறிவிப்பாக இதைத்தான் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சொல்கிறார்கள். அப்படியிருந்தும் ஒரு சிலர் வேண்டுமென்றே தாலியைக் கழட்டி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அலம்பலைக் கொடுக்கிறார்கள்.

நிஜமாகவே வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்தவர்களுக்கு தற்காலிகமாக அன்றைக்கு மட்டுமே செல்லுபடியாகக்கூடிய நுழைவுச் சீட்டு கட்டணமின்றி வழங்கப்படும். இது நீங்கள் காட்டும் ஆதாரத்தைப் பொறுத்தது. யாரேனும் தெரிந்தவர்கள் உடனிருந்து சொன்னால் போதும். அல்லது நீங்கள் 500 ரூபாய் பணம் கட்டிய ரசீது வைத்திருந்தாலும் போதும்.

ICAF அமைப்பின் அலுவலக முகவரி :

INDO CINE APPRECIATION FOUNDATION
E Block, Second Floor, Room No.4, Gemini Parsn Apartments, Cathedral Garden Road, Chennai-600006.
Tel: 28212652 / 65163866

மேலதிக விவரங்களுக்கு இங்கே www.chennaifilmfest.org செல்லவும்.

முழுக்க, முழுக்க தனி அமைப்பாகவும், விளம்பரங்கள் மூலமாகவும் மட்டுமே இத்திரைப்பட விழா நடத்தப்படுவதால் நன்கொடைகள் நிறைய வரும்பட்சத்தில் வருடா வருடம் நிகழ்ச்சிகளை மெருகேற்றிக் கொண்டே செல்லலாம் என்பது அந்நிறுவனத்தினரின் அவா.. இந்திய வருமான வரிச்சட்டம் 80G பிரிவின்படி இவர்களுக்கு கொடுக்கும் நன்கொடைகளுக்கு முழு வரிவிலக்கு உண்டாம்.. நன்கொடை கொடுக்கும் எண்ணமுள்ள நல்ல உள்ளங்கள், தங்கள் விருப்பப்படி நன்கொடைகளை வாரி வழங்கலாம்..

வருடா வருடம் இந்தக் கொண்டாட்டத்தின்போது மட்டும் எனக்கு எதுவும் நேரக்கூடாது என்று என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்வேன். அவனும் கடந்த 5 வருடங்களாக லேசான சோதனையை மட்டுமே கொடுத்து பத்திரப்படுத்தினான்.. இந்த வருடமும் அதே போல் விட்டுக் கொடுப்பான் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

நேரமும், வாய்ப்பும் கிடைக்கக் கூடிய அன்பர்களும், நண்பர்களும், திரையுலக ரசிகப் பெருமக்களும் தவறாமல் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

திரைப்பட ஆர்வலர்களையும், திரையுலக பதிவர்களையும், பதிவுலக திரையுலகத்தினரையும், திரையுலக பதிவின் சிகரங்களையும் அரங்கத்தில் ஒருங்கே காண ஆர்வத்தோடு காத்திருக்கிகிறேன்.

வருக.. வருக.. வருக..

ஈழத்தில் இந்திய இராணுவத்தின் வெறியாட்டம் - பாகம்-2

22-11-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நண்பர் கொழுவி விடாக்கொண்டராக இருக்கிறார். முதல் பாகத்தை வெளியிட்டு அதில் எனது கருத்தையும் வெளியிட்ட பின்பும் இதோ அடுத்த பாகத்தையும் அனுப்பியுள்ளார்.

கொழுவியிடம் சண்டை போட முடியுமா..?

வெளியிட்டுவிட்டேன்..

பாகம் 2

ராஜீவ் காந்தியின் தீபாவளிக் கொண்டாட்டம்...!


1987-ம் ஆண்டு ஈழத்தமிழர் வாழ்வில் நிறையவே நடைபெற்றது. இந்தியா அமைதிப்படை என்ற போர்வையில் ஒரு அழிப்புப்படையை ஏவிவிட, அது விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் அப்பாவிகளை பலியெடுத்தது.

விமானத்தில் இருந்து முதலில் உணவுப்பொட்டலங்கள். பின்னர் ஒப்பந்தம். திலீபனின் உயிர் பறிப்பு. குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் தீருவில் தீ. முதல் பெண் மாவீரர் ஆகி மாலதி மரணம். இன்னும் இன்னும். அதன் தொடர்ச்சியாய் அப்பாவிகள் மீதான படுகொலை.

ஒக்ரோபர் 21, 1987 அன்று பாரத மக்கள் ஏன் அனைத்து இந்து மக்களும் நரகாசுரனை வதம் செய்த தீபாவளி திருநாளை குதூகலமாக கொண்டாடுகிறார்கள். ஆனால் யாழ்ப்பாணக் குடாநாடோ சோபையிழந்து அந்நிய இராணுவத்தின் அகோரப்பிடிக்குள் அகப்பட்டு சின்னாபின்னமாகி கொண்டிருந்தது.

யாழ்ப்பாண கோட்டையில் இருந்து இந்திய இராணுவம் வடக்கு நோக்கி ஒரு முன்னேற்ற முயற்சியில் இறங்கியது. அதற்கு ஆதரவாக கோட்டையில் இருந்து செறிவான எறிகணைத் தாக்குதல் நடாத்தப்படுகிறது. அது யாழ்ப்பாணத்தின் எல்லாப் பாகங்களிலும் விழுந்து வெடிக்கிறது. மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு அலறியடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். நிறைய எறிகணைகள் யாழ் மருத்துவமனையை பதம் பார்க்கிறது. பாதுகாப்புக்கு வைத்தியசாலை சிறந்தது என் எண்ணி அதற்குள் ஏராளமானோர் நுழைகிறார்கள். மதியம் ஆரம்பித்த தாக்குதல் இடைவெளி இன்றி தொடர்கிறது.


இப்போது எறிகணைகள் மருத்துவமனையின் நோயாளர் விடுதிகளிலும் வீழ்ந்து வெடிக்கிறது. எல்லோரும் கதறியழுதவாறு சிதறி ஓடுகிறார்கள். சிலர் மேல்மாடியில் இருக்கும் எக்ஸ்ரே அலுவலக அறைக்கும், வைத்தியசாலை அலுவலக அறைக்கும் ஓடுகிறார்கள். மேல்மாடி என்பதால் பாதுகாப்புக்கு உகந்தது என எண்ணியிருக்க கூடும். இதற்குள் காயம் அடைந்தவர்கள் ஒருபுறம். உயிர் பிரிந்த உடலமாக கிடந்தவர்கள் ஒருபுறம்.

மாலை 4.40 மணியளவில் இராணுவம் மேற்கு பக்கமாக வைத்தியசாலைக்குள் நுழைகிறது. ஊழியர்கள் தமது சீருடைகளை தரித்து நிற்கின்றனர். மருத்துவர்களும் தத்தமது உடைகளை அணிந்து அச்சத்துடன் செய்வதறியாது நிற்கின்றனர். இராணுவம் சுட்டபடி உள்ளே நுழைகிறது.

"நாங்கள் ஊழியர்கள்" என்று ஆங்கிலத்தில் ஊழியர்கள் கத்துகிறார்கள். நாங்கள் "சிவிலியன்ஸ்" எனப் பொதுமக்கள் கத்துகிறார்கள். இரத்த வெறி பிடித்த இந்திய இராணுவத்திற்கு இது விளங்குமா? சுட்டுத்தள்ளுகிறது.

"ஐயோ அம்மா! முருகா! முருகா!!" என குழறல் சத்தம் கேட்கிறது. பின்னர் சூட்டுச் சத்தம். இப்போது அந்த குழறல் சத்தங்கள் அடங்குகிறது. நிலைமை மோசமாகிவிட்டதை உணர்ந்த அப்பாவி நோயாளர்கள் இங்கும் அங்கும் திகிலுடன் ஓடுகிறார்கள். அங்கே நின்ற ஒரு சிறுவனும் (வயது 15) சிதறி ஓடுகிறான். அவனது தந்தை ஒரு வைத்தியசாலை ஊழியர்.

இப்படி ஒவ்வொரு விடுதியாக இராணுவம் நுழைந்து தனது மிலேச்சத்தனமான கைவரிசையை காட்டி கொண்டிருக்க இருள் சூழ்ந்து கொண்டது. எல்லோரையும் பயம் கவ்விக்கொண்டது. செய்வதறியாது கட்டில்களுக்கு கீழே படுத்தவர்களும், இறந்தவர்களோடு இறந்தவர்களாக பாவனை செய்து படுத்தவர்களும் என நோயாளர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்தனர். இரவு எங்காவது காயம் அடைந்தவர்களின் முனகல்சத்தம் கேட்கும். அந்த இடத்தை நோக்கி 'டுமீல்' 'டுமீல்' என துப்பாக்கி ரவை பாயும். பின்னர் அந்த சத்தம் அடங்கி விடும். இவ்வாறு அன்று இரவு முழுவதும் முனகல் சத்தமும் பின்னர் சூட்டுச் சத்தமும் நடந்தது. ஏன் என கேட்காமல் அப்பாவிகளை சுட்டுத்தள்ளி தனது கொலைவெறிகளை தீர்த்துக்கொண்டது.


அடுத்தநாள் காலை விடிந்தது(22-10-1987). காலை 8மணியளவில யாரோ ஒரு பெரியவர் இராணுவத்துடன் நோயாளர்களுக்காகவும் நிலைமைகளுக்காகவும் வாதாடினார். பின்னர் வழமைபோல சூட்டுச்சத்தம். ஆட்கள் அலறித்துடித்தபடி வீழ்ந்தனர். அவர் வேறுயாருமல்ல வைத்திய நிபுணர், கலாநிதி அ.சிவபாதசுந்தரம். அவரோடு இறந்தது சில தாதிமார்கள். இச்சத்தம் எல்லா விடுதிகளுக்கும் கேட்டது. மிகுதியாக உயிருடன் இருந்தவர்களை இது உலுப்பி எடுத்தது. என்ன நடக்கும் என அச்சத்தில் இருந்தார்கள்.


10.30 மணி உயிருடன் இருப்பவர்களை கைகளை உயர்த்தியபடி வெளியே வரச்சொல்கிறது இராணுவம். அச்சத்துடன் எல்லோரும் என்னநடக்குமோ என எண்ணியபடி வெளியே வருகிறார்கள். அங்கே இறந்த உடல்கள் எல்லாம் பனங்கிழங்கு அடுக்கியது போல கிடந்தது. வீங்கிய உடல்கள். சிதறிய உறுப்புகள் என பார்ப்பதற்கு கோரமாக இருந்தது. அதற்குள் காயப்பட்டு குறை உயிரில் இருந்தவர்களும் அடங்குவர்.

அந்த சிறுவனும் நண்பனும் வெளியே வருகிறார்கள். அவனுடைய தாயாருடன் ஒரு தம்பி முன்னே செல்வதை காண்கிறான். வெளியே செல்கிறான். ஆனால் அவனது தந்தையாரையும் இரண்டு தம்பிமாரையும் காணவில்லை. எண்ணங்கள் பலவாறாக ஓடுகிறது அவனுக்கு. விறாந்தையில் கிடந்த உடல்கள் இரத்தவெள்ளத்தில் கிடந்தது. இரத்தவாடை மிக மோசமாக இருந்தது. உடலங்களுக்கும், இரத்தவெள்ளத்திற்குள்ளாலும் எல்லோரும் வெளியே வருகிறார்கள். கைகளை கூப்பியபடி கிடக்கும் உடலங்கள் (கும்பிட கும்பிட சுட்டிருப்பார்கள்), மகனை கட்டியணைத்தபடி கிடக்கும் தாய், தந்தை உடலம் என மிகவும் உருக்கமாகவும் கோரமாகவும் காட்சியளித்தது.

அவன் தந்தையை தேடினான். எங்கும் காணவில்லை. இரவு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் உற்வினர் இருந்தால் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். அவனும் சென்று பார்க்கிறான். அங்கே அவனது தந்தையின் உயிரற்ற உடலத்தைப் பார்க்கிறான். திகைத்துப்போகிறான். தம்பிமாரை காணவில்லை. அங்கே காயமடைந்த ஒருவர் சொல்கிறார், "தம்பி உங்கள் அப்பா காயமடைந்த ஒருவர் தண்ணீர் கேட்ட போது, மேசையில் இருக்கும் தண்ணீரை எடுத்துக் கொடுக்க முயன்ற வேளை சிப்பாய் ஒருவனால் சுடப்பட்டு இறந்தார். மனம் கொதித்தான். இருந்தும் நிலைமை மோசம். என்ன செய்ய முடியும்.

இனி தகனக்கிரியைகளை நடத்தவேண்டும் என ஒரு வைத்தியரை அணுகிகேட்க, அவரும் இராணுவத்துடன் தொடர்பு கொண்டார். பிரேத அறைக்கு அருகில் இருந்த வெளியில் எல்லோர் சடலங்களையும் அடுக்கி வைத்திருந்தனர். அந்த சிறுவனின் தந்தையின் உடலை ஒரு கரையாக வைத்து தீயை மூட்ட சொன்னார்கள். அவனும் தீயை மூட்டினான். அவனை கொண்டே ஏனைய உடல்களுக்கும் தீ மூட்டுவித்தனர். எல்லோர் உடல்களும் தீயுடன் சங்கமமாகியது. 15வயது சிறுவன் 70ற்கு மேற்பட்ட உடலங்களுக்கு தீ வைக்கிறான். இந்த கொடுமை எங்கும் நடக்குமா.


ஒருமாதத்தின் பின்னர் அவனது தம்பியரைக் கண்டுபிடித்தான் அந்த சிறுவன். அவர்கள் கூறினர். "உங்களை இராணுவம் சுடத்தான் (22.10.1987 காலை) கூட்டிக்கொண்டு போறான் என நினைத்து, நாம் காயப்பட்டவர்களுடன் கிடந்து பின்னர் நல்லூரிற்கு தப்பி ஓடி வந்தோம் என்றனர்.

இந்திய இராணுவத்தின் இந்த காட்டுமிராண்டித்தனத்தால் 70 ற்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டணர். அவர்களில் 23 வைத்தியசாலை ஊழியர் அடங்குவர். மூன்று சிறப்பியல் வைத்திய நிபுணர்களும் அடங்குவர். விபரம்....

* வைத்திய கலாநிதி அ. சிவபாதசுந்தரம்
* வைத்திய கலாநிதி எம்.கே. கணேசரட்ணம்
* வைத்திய கலாநிதி பரிமேலழகர்
* தலைமைத்தாதி திருமதி வடிவேலு
* தாதி திருமதி லீலாவதி
* தாதி திருமதி சிவபாக்கியம்
* தாதி ராமநாதன்
* வாகன ஓட்டுநர் சண்முகலிங்கம்
* தொலைபேசி இயக்குநர் கனகலிங்கம்
* கள மேற்பார்வையாளர் கிருஷ்ணராஜா
* கள மேற்பார்வையாளர் செல்வராஜா
* கோ.உருத்திரன்
* க.வேதாரணியம்
* இரத்தினராஜா
* மு.துரைராஜா
* மெ.வரதராஜா
* இரா.சுகுமார்
* க.சிவராஜா
* க.சிவலோகநாதன்
* சி.ஜெகநாதன்
* இரா.சுப்பிரமணியம்
* எஸ்.மார்க்கண்டு
* க.பீற்றர்


இன்று அந்த சிறுவன் ஒரு விடுதலைப் போராளி. எவைகள் எமது போராளிகளை உருவாக்குகின்றன். எவைகள் எமது விடுதலைப் போராட்டத்தை விரைவு படுத்தும் என்பதற்கு இவை சான்றுகள்.

ஈழத்தமிழர் வாழ்வில் நடைபெற்ற இந்த துன்ப நிகழ்வுகளின் பதிவுகள் தொடரும்....!

இதே தினத்தில் கொல்லப்பட்ட அனைவருக்கும் எமது கண்ணீர்ப்பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.

படங்கள்

http://4.bp.blogspot.com/_x-hVXy_SDfU/SP2YoCPEDvI/AAAAAAAAAA8/a_ezaCKtYE8/s320/6b00c_jaffnahospital87-2.jpg

http://1.bp.blogspot.com/_x-hVXy_SDfU/SP2YoaccA3I/AAAAAAAAABE/Lixi3mhc4Qk/s320/08d25_jaffnahospital87-3.jpg

http://3.bp.blogspot.com/_x-hVXy_SDfU/SP2YolJdPNI/AAAAAAAAABM/Z7FmxkveRS0/s320/8fe84_jaffnahospital87-1.ஜபக்

இதற்கு என்ன பதில் சொல்வது..?

மதூர் பண்டார்கரின் FASHION - ஹிந்தி திரைப்படம்

06-11-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..


மனித வாழ்வில் அனைத்துவித இயக்கங்களிலும், செயல்பாடுகளிலும் நல்லது, கெட்டது இரண்டுமே இணைந்துதான் உள்ளன. அதிலும் சில நல்லவைகளில் கெட்டவைகளும், கெட்டவைகளில் நல்லவைகளும் இணக்கமாக பிணைந்தும் இருக்கின்றன.

மக்களுக்கு போதனை தருவதற்காக தருவிக்கப்பட்ட ஒரு துறை என்று கலைத்துறையை இப்போது நாம் நினைத்துக் கொண்டாலும், துவக்கத்தில் அது கூத்தாடிகளின் குறுகிய கால கூத்தாட்டம். அவ்வளவுதான்.. பின்பு போகப் போகத்தான் நல்லவைகளை தேனோடு கலந்து தரும் மருந்தாக அதனை மாற்றியது காலம் தவிர வேறல்ல..

மக்களுக்கு மிக நெருக்கமான வாழ்க்கையின் பல பதிவுகளைப் படம் பிடித்துக் காட்டும் ஊடகங்கள், கெட்டவைகளை அம்பலப்படுத்தி மக்களுக்கு எச்சரிக்கை விடுவது, நல்லவைகளை வெளிச்சம் போட்டுக் காண்பித்து மக்களை நல்லவைகளின்பால் ஈர்ப்பு ஏற்படுத்த வைப்பது என்ற இரண்டு கூறுகளைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

ஹிந்தி திரைப்பட இயக்குநர் மதுர் பண்டார்கரின் தொடர்ச்சியானத் திரைப்படங்கள் அனைத்துமே பல்வேறு துறைகளில் இருக்கும் கெட்டவைகளை மட்டுமே சொல்லி வருகின்றன என்பதாக அவருடைய தொடர்ச்சியான திரைப்படங்களை பார்த்து வருபவர்களுக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்.

அந்த வரிசையில் இப்போது FASHION. சண்டிகரை அடுத்த ஒரு சிறு நகரில் இருந்து மாடலிங் துறையில் நுழைந்து புகழ் பெற வேண்டும் என்கிற ஒற்றை இலக்க வெறியோடு மும்பையில் குடியேறும் மேக்னா மேத்தா என்கிற இளம்பெண்ணின் ஆசை நிறைவேறியதா? இல்லையா என்பதுதான் திரைப்படத்தின் கதை.

வண்ண, வண்ண விளக்குகளும், அலங்கார மேடைகளும், ஒய்யாரமான ஒப்பனைகளும், மிகுதியான முகப்பூச்சுக்களும் சூழ்ந்து ஒரு கனவுலகத்தைப் படைத்துக் கொண்டிருக்கும் மாடலிங் துறையின் வெளிச்சத்துக்கு வராத இன்னொரு புறத்தை இத்திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் மதுர்.

மாடலிங் துறையில் பெண்களின் பங்குதான் அதிகப்பட்சமாக உள்ளது. ஆண்களுக்கான உள்ளாடைகளைக்கூட யாரோ ஒரு பெண் காதலியோ, நண்பியோ அதன் நாடாவை இழுத்துப் பார்த்து “அழகாக உள்ளது” என்று சொல்வதைப் போலத்தான் விளம்பரங்களை அமைத்திருக்கிறார்கள். இதில் பெண்களுக்கானது என்றால் சொல்லவே வேண்டாம்.

குறைந்த கால உழைப்பு, கை நிறைய பணம், சொகுசான வாழ்க்கை, நிரம்ப உயர்வர்க்க நட்பு என்று ஒரு காஸ்மாபாலிட்டன் வாழ்க்கைக்கு தங்களை இட்டுச் செல்லும் என்கிற நினைப்பில்தான் மாடலிங் துறைக்குள் வரும் அனைத்துப் பெண்களும் நினைக்கிறார்கள்.

இத்துறையில் அனைவரும் ஒரே நாளில் இரவோடு இரவாக புகழ் வெளிச்சத்துக்கு வர முடிவதில்லை. நிறைய உழைக்க வேண்டும். இந்த ‘உழைப்பு’ என்பதில்தான் நிறைய சமூக மீறல்கள், ஒழுக்கக் கேடுகள் என்று சொல்லப்படும் கொண்டாட்டங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே.


தன்னுடைய தந்தையின் எதிர்ப்பையும் மீறி தாயின் ஆசியுடன் மும்பை வந்து சேரும் மேக்னா தனது உறவினர் ஒருவரின் இல்லத்தில் தங்கி மாடலிங் துறையில் நுழைய முயல்கிறாள். முயற்சியில் அவளுக்குக் கிடைக்கும் புதுப்புது அனுபவங்கள் அவளுக்குக் கிளர்ச்சியையும், உத்வேகத்தையும், நட்பையும், துரோகத்தையும், அப்போதைய சந்தோஷத்தையும் அளிக்கின்றன.

இந்த சந்தோஷங்கள் அனைத்தும் தான் நினைத்ததை அடைய நினைத்த நேரத்தில் காணமால் போகும்போதுதான் அவளுக்குள் ஒன்று தெரிகிறது.. எந்த உச்சியை அடைந்தாலும் எதுவோ ஒன்றை இழந்துதான் தீர வேண்டும் என்பது. அந்த உணர்வை அவள் அடைவதுதான் படத்தின் இறுதிக்கட்டம்.

மேக்னா மேத்தாவாக நடித்திருக்கும் பிரியங்கா சோப்ராவின் நடிப்பை இப்போதுதான் முதல் முறையாக செல்லூலாய்டில் பார்க்கிறேன். நேர்த்தியான நடிப்புதான். மதூரின் கதாநாயகிகள் அனைவரும் எப்போதும் அளவாக அழுவார்கள்.. ஆனால் நிறைய சிரிப்பார்கள். நிரம்ப சந்தோஷம் கொள்வார்கள் என்பதை அவருடைய திரைப்படங்கள் அனைத்தையும் பார்த்ததிலிருந்து தெரிகிறது. இதிலும் அப்படியே.

படத்தில் வருகின்ற கதாபாத்திரங்களில் அத்துறையில் நீக்கமற நிறைந்திருக்கும் தற்போதைய இளைய சமுதாயத்தினரின் இன்னொரு புற கட்டற்ற சுதந்திரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஓரினச் சேர்க்கை பிரியர்கள், சதா சிகரெட் பிடித்தபடியே இருக்கும் பெண்கள், கிளாஸ் என்றில்லாமல் பாட்டிலையே வாயில் கவிழ்த்து தங்களது ஸ்டேட்டஸை காட்டத் தயங்காத மாடலிங் தாரகைகள் என்று அனைத்துப் பகுதிகளையும் விட்டுவிடாமல் காட்டியிருக்கிறார் மதூர்.

போதைப் பழக்கத்திற்கு உள்ளாகி சமீபத்தில் மும்பையில் தெருவோரமாக மீட்டெடுக்கப்பட்ட கீதாஞ்சலி என்கிற முன்னாள் தேவதையான பெண்ணின் கதையும் இதில் உண்டு.

இந்தக் கேரக்டரில் நடித்திருக்கும் கொங்கணா ரணவத்தின் மாடலிங் அழகு சொக்க வைக்கிறது. எப்போதும் முகத்தில் ஒரு சோகத்தை அப்பிக் கொண்டிருக்கும் இந்த அழகை முதல் முறையாகக் காட்டும்போதே ஏதோ அந்தப்புர காரணம் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றிவிட்டது.

இடைவிடாத போதை பழக்கம், புகைப் பழக்கம் என்று தனக்குத்தானே வேதனையை வரவழைத்துக் கொண்டாலும் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு செல்லமாக சொன்னதை செவ்வனே செய்யும் கேரக்டர்தான் சோனாலி என்கிற இந்தப் பெண்.

போதையை விட முடியாமலும், தொழிலில் முனைப்பு காட்ட முடியாமல் ஒரு கட்டத்தில் அனைத்தையும் இழந்து சினிமா தியேட்டர் வாசலில் கண்டெடுக்கப்பட்டு தனது பழைய எதிரியான மேக்னாவால் அரவணைக்கப்படும் சூழல் சினிமாத்தனமானதுதான் என்றாலும் அதில் உருக்கம் இருந்தது.

இந்த சோனாலியின் முடிவுடன் மேக்னாவின் ஒளிவட்டம் துவங்குவது ஒருவருக்கு இறப்பு என்றாலும், ஒருவருக்கு இழப்பு என்றாலும் அது மற்றொருவருக்கு பிறப்பாகவும், வெகுமதியாகவும் இருக்கக்கூடும் என்கிற வாழ்க்கைச் சக்கரத்தை உணர்த்துகிறது.

தான் நேசித்து படுக்கையை பகிர்ந்து கொண்ட முதல் காதலனை புகழும், பணமும் கிடைத்த காரணத்தால் பிரிந்து சென்று பின்பு இரண்டாவது வாழ்க்கையும் தன்னை விட்டுப் போன பின்பு அவனிடமே வந்து நிற்கும் சூழலில் ஏற்பட்ட பரிதாப உணர்ச்சியில் உண்மையான காதல் அதுவரையில் அவளிடத்தில் இல்லை என்பதை வெளிக்காட்டியிருக்கிறார் இயக்குநர்.

எப்போதும் புகைக்கும் பெண்களும், குடிக்கும் பெண்களும் இத்துறையில்தான் சாத்தியம் என்பது புரிகிறது என்றாலும் எதற்காக இத்துறையை அந்தப் பெண்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று பார்த்தால் அது நான் முன்பே சொன்னது போலவை குறைந்த கால உழைப்பு, கை நிறைய பணம் என்பதைத்தான். (அன்புமணி இத்திரைப்படத்தை பார்க்காமல் தவிர்க்கலாம்).

பல்வேறு துறைகளிலும் மறைமுகமாக இருந்து வரும் பரஸ்பரம் பண்டமாற்றுதல் போல பெண்களிடம் சுகத்தை அனுபவித்துவிட்டு, ஆண்களுக்கு அவர்கள் கேட்பதைத் தந்துவிட்டு.. பின்னர் எதுவுமே நடக்கவில்லை என்பதைப் போல் செல்வதற்கு இன்றைய இரு பால் இளம் வர்க்கத்தினரும் மிக, மிகத் துணிந்து விட்டனர்.

கெட்டவர்கள் மட்டுமே நிரம்பியிருப்பதல்ல உலகம். நல்லவர்களும் இருப்பார்கள். அந்த நல்லவர்கள் வெளிப்படுத்தும் நல்லவைகள் என்பதும் சதவிகிதக் கணக்கில்தான் என்பதனை இன்னொரு கேரக்டரின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். நிகழ்ச்சி அமைப்பாளரான நண்பர் மூலமாகவே தன்னை புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து காட்டிவிட்டு தனது நண்பிக்காக வாய் விட்டு அழும் மேக்னாவின் மேல் பரிதாபம்தான் வருகிறது.

தன்னுடைய நிறுவனத்தின் பிராண்டுக்கு பயன்படுத்தும் மாடலை தானும் பயன்படுத்திக் கொண்டு, அவளைவிட அழகிலும், இணக்கத்திலும் கூடுதலாக ஒரு பெண் கிடைத்தவுடன் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு இரவோடு இரவாக வேறு மலர் தாவும் வண்டாக இருக்கும் ஒரு தொழிலதிபர்.. கணவன் செய்யும் துரோகத்தை தெரிந்து வைத்திருந்தும் தனக்குக் கிடைத்திருக்கும் சமூக அங்கீகாரத்திற்காகவும், புகழுக்காகவும் அவனுடன் குடும்பம் நடத்தும் மனைவி, எது எப்படி வேண்டுமானாலும் நடக்கட்டும். தனக்கு கமிஷன் கிடைத்தால் போதும் என்று வேலை செய்யும் கோ-ஆர்டினேட்டர் பெண்மணி என்று உயர்தர வகுப்பினரின் கவலையில்லாத வாழ்க்கையும் இப்படத்தில் உண்டு.

ஓரினச் சேர்க்கையில் பிரியமுள்ள ஆண்களைக் காட்டும்போதும் அது பற்றிய எந்தவித எச்சரிக்கையும் தேவையில்லாதது போல் மிக இயல்பாக காட்சிகளை அமைத்திருப்பதை பாராட்டத்தான் வேண்டும்.

ஓரின முத்தக் காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருந்தன. ஆனால் சென்ஸார் போர்டு வழக்கம்போல நீக்கியே தீர வேண்டும் என்று அடம் பிடிக்க வேறு வழியில்லாமல் நீக்கியிருக்கிறார் இயக்குநர். ஆனால் டிவிடியில் அது நிச்சயம் இடம் பெறும் என்று உறுதியளித்திருக்கிறார்.

அது எந்த அளவிற்கு இத்திரைப்படத்திற்கு சிறப்பு சேர்க்கும் என்று எனக்குத் தெரியவில்லை. அக்காட்சிகள் இல்லாமலேயே படம் இப்போழுதே சிறப்பாகத்தான் உள்ளது.

பெண்களை மையமாக வைத்தே மதூர் இதுவரை எடுத்த திரைப்படங்களின் அழகியலே அந்தப் பெண்கள் மூலமாக இவர் வைக்கின்ற பிரச்சினைகளில் ஆணாதிக்கம் சார்ந்தியங்கும் சமூகச் சூழல் அதிகம் தென்படுவதைக் காணலாம்.

‘சாந்தினி பாரில்’ இரவு நேர நடன விடுதிப் பெண்ணின் வாழ்க்கை, ‘PAGE 3’-ல் சமூக சேவகர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் ஒரு வர்க்கத்தின் இன்னொரு புறம்.. ‘கார்ப்பரேட்’ திரைப்படத்தில் மிகப் பெரிய வணிக நிறுவனங்கள் தங்களது வளர்ச்சிக்காக பணத்தை வைத்து நடத்தும் நாடகங்கள் என்று தெரிந்த வீடுகளில் தெரியாத விஷயங்களை வெளிக்கொணரும்வகையில் மதூரின் இந்தப் படமும் அதே வரிசையில் ஒன்று.

மாடலிங் துறையைப் போலவே மிக அழகாக, ஜொலிக்கிறது. உள்ளுக்குள் இருக்கும் சோகத்தை மறந்துவிட்டு நாமும் பார்த்துவிட்டு எழுந்து வரலாம்.
இயக்குநருக்கு எனது பாராட்டுக்கள்.

கொசுறு :

இத்திரைப்படத்தின் இடைவேளையில் வரப் போகின்ற திரைப்படம் என்று சொல்லி ஒரு ரீல் ஓட்டினார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்பாக நமக்கெல்லாம் கிரிக்கெட் பற்றிச் சொல்லிக் கொடுத்த மந்த்ராபேடிதான் கதாநாயகி. அனுபம்கெர்ரும் உடன் இருக்கிறார். யாரோ ஒரு புதுமுகம் ஹீரோவாக அறிமுகம் என்று நினைக்கிறேன். கடைசியாக அனில் கும்ப்ளேயும் பந்துவீச வந்தார். முதல் நடிப்போ..

ஒரு கிராமம் போன்ற குடியிருப்பு. நட்ட நடுவில் மைதானம். மந்த்ராபேடி பேட் பிடிக்கிறார். பந்து வீசுகிறார். காதலருடன் பேசுகிறார். காதலர் பந்தை அடிக்கிறார். கமெண்ட்ரியும் செய்கிறார். சிறுசுகளுடன் அவுட் இல்லை என்று சத்தம் போடுகிறார். இடையிடையே தனது பேவரைட் மந்தகாச புன்னகையை வீசுகிறார். திருமண விழா போன்ற தோரணையில் அனைவரும் காத்திருக்கிறார்கள். மந்த்ரா அக்கா மைதானத்தின் நடுவில் சோகத்துடன் அமர்ந்திருக்கிறார். பின்பு தலையில் கட்டுடன் காதலரைத் தேடி ஓடுகிறார்.

மறுபடியும் கதை ஆரம்பத்திற்கே வந்துவிட்டதால் இனி படம் பார்த்த பின்புதான் சொல்ல முடியும்..

படத்தின் பெயர் MEERABAI NOT OUT. ஹிந்தி திரைப்படம். பிரித்தீஷ் நந்தியின் தயாரிப்பாம். டிரெய்லரே பார்க்கத் தூண்டுகிறது.

டிவியில் கற்றுக் கொடுத்தது போதாது என்று சினிமாவிலும் கற்றுக் கொடுக்க வருகிறார் மந்த்ராபேடி. பார்ப்போம்..