உலகப் பதிவர்களே உதவி செய்யுங்கள் - உபகாரம் பெறுங்கள்..!

31-05-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எனக்கு பேராசையெல்லாம் இல்லை.. உங்களுக்கே தெரியும்.. அடுத்தவர் பணத்தின் மீது ஆர்வமோ, கண் ஜாடையோ இல்லவே இல்லை.. இதுவும் உங்களுக்கே தெரியும்..

என் உழைப்பின் மூலமாக என் அப்பன் முருகன் கொடுக்கும் துளியூண்டு பணமே எனக்கு தற்போதைக்கு போதுமானது. எதிர்காலத்தில் கூடுதலாக தேவையெனில், முருகனிடம் டீடெயிலாக உட்கார்ந்து பேசி வாங்கிக் கொள்ளவும் என்னால் முடியும்..!

ஆனாலும் வீடு தேடி வரும் லட்சுமியை நாமே வேண்டாம் என்று சொல்லக் கூடாது என்கிறார்கள். ஒருவேளை இதுவே முருகன் அனுப்பியதாக இருந்தால்..? சந்தேகம் வருகிறது தோழர்களே..!

ஆகவே நான் என்ன சொல்கிறேன் என்றால்..

கீழ்க்கண்ட கடுதாசி எனக்கு இ-மெயில் மூலமாக வந்திருக்கிறது. நானும் இந்தக் கடுதாசிக்குப் பதில் போடலாமா வேண்டாமா என்று விருகம்பாக்கம் கெளமாரியம்மன் கோவில் வாசலில் அமர்ந்திருக்கும் மரத்தடி ஜோஸியரிடம் அறிவுரை கேட்டுவிட்டுச் செய்யலாம் என்று காத்திருக்கிறேன்..!

இந்த இடைவெளியில் எனக்கு திடீர் என்று ஒரு யோசனை.. இன்று, நேற்று, நேற்று முன்தினம் வலையுலகத்தில் நடைபெற்ற, நடைபெற்று வரும் சச்சரவுகளையெல்லாம் வைத்து யோசித்துப் பார்த்தால் நான் ஒருவன் மட்டுமே இந்த மூன்று வருடங்களாக வலையுலகத்தில் வீணாக ஒருத்தரைக்கூட தோழனாக வைத்திருக்க முடியாமல் வெட்டியாக பொழைப்பை ஓட்டி வரும் அபாயத்தை உணர்ந்திருக்கிறேன்.

இந்த ரேஞ்சிலேயே என் பொழைப்பு ஓடினால் நான் செத்துப் போனால்கூட இன்றைய நிலைமையில் 5 மாலைகளுக்கு மேல் எனக்கு விழாது என்பது போல் எனக்கு ரொம்ப பீலிங்கா இருக்கு..!

ஸோ, இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எனக்கு முருகப் பெருமான் கொடுத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை நமது சக தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த கடுதாசியில் இருக்கின்ற விவரங்கள் உண்மைதானா..? அல்லது ராமநாராயணன் படத்தில் சாமி ஆடுவார்களே.. அது மாதிரியான டூப்பா.. எது உண்மை என்று எனக்குத் தெரியவில்லை..! தோன்றவில்லை. கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு..!

ஆகவே, லண்டன் மற்றும் இந்தியாவிற்கு வெளியே இருக்கும் நமது சக வலையுலகத் தோழர்கள் கொஞ்சம் கோபித்துக் கொள்ளாமல் இந்த நிறுவனத்தின் முகவரியும், தொலைபேசி எண்ணும் சரிதானா? உண்மைதானா? கூகிள் கம்பெனியின் பெயர் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பது அனுமதியுடன்தானா என்பதையெல்லாம் விசாரித்து தக்கத் தகவலைத் தெரிவித்தால் இந்த பரிசுத் தொகையை அவர்கள் அனைவருக்கும் சம அளவில் பங்கிட்டுக் கொடுத்து அவர்களையெல்லாம் எனது தோழனாக வரித்துக் கொண்டு, நான் செத்துப் போனால் எனக்கு மாலை போட அவர்களை அனுமதிக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்பதை அந்த மருதமலை முருகன் மீது சத்தியமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்..

இதுதான் எனக்கு வந்த மெயில்..!


THE Google UK GIVEAWAY TEAM.
Belgrave House, 76 Buckingham Palace Road London SW1W 9TQ.
Ph: +447024053930, +447024028674, +44702409 2805,
Fax: +44 8704951196 . Office Open 7 Days, 8am-8pm.
ATTN: GOOGLER,

The receipt of your correspondence have been duly acknowledged, please pardon me for this late response. I'm pleased to inform you that your email address have been checked and it falls among our lucky winning email addresses for this year draw. 

On behalf of all team, I'm happy to inform you that you emerged a winner under Category(A), which is part of our anniversary promotional draws. The draws were held to mark  her 11th year of existence(Anniversary) here in UK . 

No purchase of t i c k e t s were required for this draw, all Participants (email addresses) for this draws were randomly selected from a worldwide range of web searchers who uses the Google search engine(Googler) and other Google ancillary services and this is how your email was picked. Participants were selected through a computer ballot system drawn from 2,500,000 email addresses of individuals and companies from Africa, America, Asia, Australia, Europe, Middle East, and Oceania as part of our International Promotions Program. 

Therefore, Your  winning payout is £850,000 GBP(Eight hundred and fifty thousand Great  British Pound Sterling) as you already know ,your email address was randomly selected along with others from over 100, 000 email addresses on the internet and each email address was attached to a ticket number.

PRIZE PAYMENT MODALITIES (INFORMATION) :
 
1 - Personal prize Pickup:
 
All winners are required to come down in person to personally pickup their prize at any of our disbursement locations (cash pickup centers) here in LONDON.

Requirements for personal prize pickup are :

(a) A printed copy of your WINNING NOTIFICATION(the first mail you received from us)

(b) An International Passport or Drivers license

(c) A tax clearance certificate of your country.

(d) An Affidavit of age Declaration

(e) A Printed copy of your Verification form (you may be asked to fill it as done before)

(f)police report attesting your patriotism and crime free citizen of your Country (Note: You are only required to present the above documents only when you are coming down to UK.)
 
In receipt of these requirements your cash prize will be made available to you after 24hrs. Please.

This option is basically for lucky winners who can easily visit us in person with the above stated pickup requirements.

Your claim deadline is exactly 3weeks from the receipt of this email. Inability to meet up with this stipulated date either due to none availability of some claims documents above,  none availability of travel documents etc. 

May result to loss of winnings as funds will be re-used for other upcoming draws.This option is recommended by the Google lotto management to clear doubts and unnecessary thinking.

This is because we have had series of complaints from individuals that people are using our company name for various forms of indecent acts. So the lotto management would prefer beneficiary winners to come and verify things for themselves about their winning.

2- Online Swift Telegraphic Bank Transfer:
 
Your £ 850,000 GBP(Eight hundred and fifty thousand Pounds) which you have won will be transfer to your bank account via swift bank transfer. 

Condition: The international transfer commission fee being charged by our transferring bank in remitting your fund to your local Bank account must be your responsibility since no tickets were sold.

Also note, Your prize will be insured on a bond policy that will debar us of deducting or withdrawing any amount from it  before getting to you. Note that this option is basically design for winners who are not resident of UK and winners who can not visit our payment office in London. 

I shall refer you to our affiliated BANK for details about the remittance procedure and cost of transfer information if you opt to use this mode of payment.

Find below the lottery payment release order form, please fill it correctly and send back to me asap. Note For you to be able to fillout the form below, just click on reply from your mail box then double click(click twice) on the space box by this way you will be able to write in space box. 

Alternatively, you can just writeout the required information out and send to me via this email in plain text if you are unable to fillout the form as directed.
 
GOOGLE LOTTERY PAYMENT RELEASE ORDER FORM   
 
Prefix (Mr.,Mrs., Ms.,Dr.):        
 
First name :        
 
Middle name :        
 
Last name :
        
Date of Birth (yyy-mm-dd) :
        
Sex/Occupation :
        
Address :            
 
City/State/province        
 
Country of Resident /Nationality:        
 
Telephone number(s):            Mobile number(s):                  Fax number(s):                        
 
Email Address 1&2:          
 
Amount won / Date of notification        
 
Ticket number         
 
Payment modalities(tick on any of the mode of payment that you find most convenient)      Personal prize Pickup (here in UK).   Swift Bank Transfer.   
 
I expect you to fill and return the Giveaway payment release order form above within 24hrs upon receipt of this message so that appropriate arrangement can be put in place.
 
Regards,
MR. GRAHAMS BENFIELD.
 
உலகப் பதிவர்களே, மிக விரைவில் உங்களது பதில்களையும், கண்டுபிடிப்புகளையும் எனக்குத் தெரிவித்தால் நலமாக இருக்கும்..!

நன்றி..!

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-28-05-2010

28-05-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்றைக்கு முதலிலேயே கேசரி

ஜாஸ்மின் - பத்தாம் வகுப்பில் முதலிடம்

இந்த வருட பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் சற்று ஆச்சரியத்தை அளித்திருக்கின்றன. மாநகராட்சி பள்ளிகளில் கல்வித் தரம் குறைவாகத்தான் இருக்கும் என்ற பொதுஜன நினைப்பில் மண்ணைத் தூவியிருக்கிறார் ஜாஸ்மின் என்னும் மாணவி.

நெல்லை டவுன் மாநகராட்சி கல்லணை மேல்நிலைப்பள்ளி மாணவியான ஜாஸ்மின், 495 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் முதல் மாணவியாகி அசத்தியிருக்கிறார். அவருடைய தந்தை வீடு, வீடாகச் சென்று துணிகள் விற்பனை செய்பவராம். தான் நன்கு படித்து கம்ப்யூட்டர் என்ஜினியரிங் படித்து அதன் பின் ஐ.ஏ.எஸ். படித்து எங்களது குடும்பத்தைக் காப்பாற்றுவேன். இதுதான் எனது லட்சியம் என்று டிவி பேட்டியில் அந்த மாணவி சொன்னதைக் கேட்டு அசந்து போனேன்.. ம்.. பொறுப்புள்ள மகளாகவும் அந்தப் பெண் வளர்ந்து வருகிறாள். வாழ்த்துகிறேன்..

கூடவே ஜாஸ்மின் படித்த பள்ளியின் ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. இப்போதெல்லாம் மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்க்கத்தான் மிடில் கிளாஸ் குடும்பங்களில் போட்டா போட்டி நடக்கிறது.. சென்ற வருடம் கோடம்பாக்கம் மாநகராட்சி விண்ணப்பங்கள் வந்த கியூ சாலையையும் தாண்டி நின்று கொண்டிருந்ததை பார்த்தேன்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்.. நல்லதுதான்..

இட்லி

கருணாநிதி - ஆர்.எம்.வீரப்பன் கள்ளத் தொடர்பு..

“நாங்க திட்டுற மாதிரி திட்டுவோம்.. அடிக்கிற மாதிரி அடிப்போம்.. அழுகுற மாதிரி அழுவோம்.. இதையெல்லாம் உண்மைன்னு நினைச்ச உங்களை நினைச்சா எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது”ன்னு மறுபடியும் ஒரு லட்சத்தி ஒண்ணாவது தடவையா தமிழினத் தலைவர் நம்மை முட்டாளாக்கியிருக்கிறார்.

எம்.ஜி.ஆருடன் ஆர்.எம்.வீரப்பன் இருந்தபோதும்” என்னோடு கள்ளத் தொடர்பு வைத்திருந்தார். அப்போதும் என் மீது மாசற்ற அன்பையும், பாசத்தையும் கொட்டியவர் வீரப்பன்” என்று புளகாங்கிதமடைந்து புல்லரிக்கும் வகையில் வீரப்பனின் மகன் திருமணத்தில் பேசியுள்ளார்.

“வேல் திருடி வீரப்பனை பதவியில் இருந்து நீக்கம் செய். அவரை கைது செய்து சிறையில் அடை.. தமிழ் மக்களின் முழு முதற் கடவுளான முருகப் பெருமானின் வேலைத் திருடி சினிமா எடுக்கும் வீரப்பனே உனக்கெதுக்கு மந்திரி பதவி..?” - இப்படியெல்லாம் கோஷமிட்டபடியே ஒரு காலத்தில் லட்சக்கணக்கான தொண்டர்களை கால் வலிக்க மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு நடந்தே அழைத்துச் சென்ற இந்த மாமேதை.. இன்றைக்கு தாங்கள் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். இதையும் ஒரு கூட்டம் கூடி கை தட்டி ஆரவாரம் செய்திருக்கிறது. இப்படியொரு ஆட்டு மந்தைகள் இருக்கின்றவரையில் இவரை மாதிரியான ஆட்கள் எதுவும் பேசலாம்.

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை மட்டும்தான் மலம் துடைக்கப் பயன்படுத்தலாம் என்றில்லை. இவர் மாதிரியான அறிவுச் சுரங்கங்கள் எது பேசினாலும், இனிமேல் அவற்றை அதற்கே பயன்படுத்தலாம். தப்பில்லை..

தோசை

கனகவேல் காக்க - விமர்சனமா எழுதுற..?

ஏதோ பிளாக்குல வர்ற சினிமா விமர்சனங்களை படிச்சிட்டுத்தான் பொதுமக்கள் அத்தனை பேரும் சினிமாவுக்குப் போறாங்கன்னு எல்லாருக்கும் நினைப்பா அல்லது மாயப்பிரமையான்னு தெரியலை.

பத்திரிகைகளில் கடுமையான விமர்சனத்தை வைத்தால்கூட எதுவும் பேசாமல் இருப்பவர்கள், வலைத்தளங்களில் எழுதிவிட்டால் உடனேயே புருவத்தை உயர்த்துகிறார்கள். கோபப்படுகிறார்கள்.

நான் எழுதிய கனகவேல் காக்க திரைப்படத்தின் விமர்சனத்தைப் படித்துவிட்டு ஒருவர் போனில் அழைத்தார். 

“நீங்கதான் உண்மைத்தமிழனா?”
“ஆமா.. நீங்க..?”
“நான் கனகவேல் காக்க புரொடியூஸர் பேசுறேன்.. என்னங்க எழுதியிருக்கீங்க விமர்சனம்னு..”

-    இப்படி ஆரம்பித்து சட்டென்று லைன் கட்டானது.

நான் சுதாரித்து நிற்பதற்குள் மறுபடியும் அழைப்பு.. இம்முறை நான் “ஹலோ.. ஹலோ” என்று சொல்ல மறுமுனையில் பதிலே இல்லை. இதுபோல அன்றைக்கே மூன்று முறை அழைப்பு வருவதும், நான் தொண்டை கிழிய “ஹலோ.. ஹலோ” என்று சொல்வதுமாக ஓய்ந்தது.

அன்றைக்குத்தான் என்று நினைத்தேன். அது இன்றுவரையிலும் தொடர்வதுதான் எனது சோகம்.. மூன்று நாட்களாகத் தொடர்ந்து காலையில் 11.15 மணிக்கு போன் வரும். நான் “ஹலோ” என்பேன். மறுமுனையில் பேச்சே வராது. கட் செய்வார்கள். மீண்டும் அழைப்பு வரும். எடுத்தால் மீண்டும் மெளனம்.

சரி நாம அடிச்சுப் பார்ப்போம்னு செஞ்சா ரிங் போகவே மாட்டேங்குது.. என்னன்னு தெரியலை.. நம்பர் வேணுமா - 442081180048. இதுதான். இது எந்த ஊர் நம்பர்னு தெரியலை. ஆனா அவர் அடிச்சா எனக்கு வருது. நான் அடிச்சா போக மாட்டேங்குது.. இன்னாடா இது சோதனை..? முருகன் விதவிதமா சோதனையைக் கொடுக்குறான் பாருங்க..

வடை

அட்சயத் திரிதியை - அள்ளிக்கோ தங்கத்தை..!

இந்த அட்சயத் திரிதியை என்கிற வார்த்தை மிகச் சமீபமாக ஒரு ஐந்தாண்டு காலத்திற்குள்தான் தமிழக மக்கள் கேட்டுத் தெரிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இதற்கு முன்னர் கேள்விப்பட்டதே இல்லை.

அன்றைய தினத்தில் நகை வாங்கினால் குடும்பத்திற்கு நல்லது என்று எந்த புண்ணியவான் பரப்பிவிட்டானோ அவன் தலையில் சத்தியமாக இடிதான் விழ வேண்டும்.

பணத்தைக் கொண்டு போய் கொட்டினால் நகைக்கடைக்காரர்களுக்கு லாபம். அவர்கள் விளம்பரம் கொடுக்கும் டிவிக்காரர்களுக்கு கொழுத்த லாபம்.. பக்கம், பக்கமாக விளம்பங்களை வாங்கிக் குவிக்கும் பத்திரிகையாளர்களுக்கும் செம லாபம்.. இந்த மூன்று பேரும் கூட்டணி அமைத்துக் கொண்டு நம் மக்கள் முழித்திருக்கும்போதே அவர்கள் தலையை மொட்டையடிக்கிறார்கள்.

அன்றைய காலையில் தி.நகரில் கூட்டமே இல்லை. ஆனால் அனைத்து தொலைக்காட்சிகளும் சொல்லி வைத்தாற்போல் “தி.நகரில் கூட்டம் அலை மோதுகிறது.. போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது” என்று ஏகத்துக்கும் பில்டப் கொடுத்து வாங்கின காசுக்கு மேலேயே கூவிவிட்டார்கள்.

இனி நான்காவது எஸ்டேட் என்கிற பெயரைத் தூக்கிப் போட்டுவிட்டு அரசியல்வியாதிகள் லிஸ்ட்டிலேயே இந்த மீடியாக்களையும் சேர்த்துவிடலாம்.. வேறு வழியே இல்லை..

பொங்கல்

குஷ்புவால் ஆடிப் போன ஜெயா டிவி

குஷ்புவின் திடீர் முடிவால் இன்றுவரையிலும் ஜெயா டிவி அதிர்ச்சியுடன்தான் இருக்கிறது. “இதுகூட தெரியாம என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க ஆபீஸ்ல?” என்று டாப் லெவல் பார்ட்டிகளுக்கு கார்டனில் இருந்து போனிலேயே மசாஜ் நடந்திருக்கிறது.

அதிர்ச்சியானவர்கள் நம்ப முடியாமல் இருந்ததற்குக் காரணம்.. குஷ்பு தி.மு.க.வில் சேர்கின்ற அதே நாள், அதே நேரத்தில் ஜெயா டிவிக்கு வந்து அவருடைய அடுத்த பிராஜெக்ட்டுக்காக அக்ரிமெண்ட்டில் கையெழுத்துப் போடுகிறேன் என்று சொல்லியிருந்தாராம்.

இதற்காக அந்த அக்ரிமெண்ட்டையெல்லாம் பக்காவாக எடுத்து வைத்துக் காத்துக் கொண்டிருந்த டிவி பெரிசுகளுக்கு, கலைஞர் செய்திகளில் வந்த ஸ்கிரால் நியூஸை பார்த்து நெஞ்சு வலி வராத குறை.

“இத்தனை நாட்கள் நல்லாத்தான போய்க்கிட்டிருந்துச்சு.. நல்ல கவுரவமாத்தானே வைச்சிருந்தோம். எம்.டி. கார் நிறுத்துற இடத்துல இவர் காரையும் நிறுத்திக்குற அளவுக்கு உரிமை இருந்துச்சே.. ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போயிருக்கலாமே..” என்று தயாரிப்பு தரப்பு முனங்கினாலும், எடுத்து கையில் வைத்திருக்கும் 15 எபிசோடுகளுக்கான சம்பளப் பட்டுவாடாவில் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.

“அதென்ன ஜூஜூபி சம்பளம்..? வாங்க.. அதுக்கு மேலேயே கவனிக்கிறோம்” என்று அறிவாலயத்தில் கிடைத்த உறுதிமொழியுடனேயே அடைக்கலமாகியிருப்பதால் குஷ்புவுக்கு இதில் கவலைப்பட ஏதுமில்லை..

ரவாதோசை

ஸ்டார் ஹிந்தி சேனலின் டான்ஸ் புரோகிராம்

ஒரு நாள் சேனல் சேனலாக மாற்றிக் கொண்டே வரும்போது ஸ்டார் சம்பந்தப்பட்ட ஒரு சேனலில் ஏதோ ஒரு டான்ஸ் புரோகிராம். அனைவரும் ராஜாக்கள் டிரெஸ்ஸில், தர்பார் செட்டப்பில் அமர்ந்திருந்தார்கள். சரி. ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே பார்க்கலாம் என்று உட்கார்ந்தால்..

சனியனே கண்ணுக்குள் வந்து உக்கார்ற மாதிரி ஒரு கான்செப்ட்.. மகாபாரதத்துல திரெளபதியின் சேலையை உருவுற மாதிரி சீனு.. இதுல நடிச்ச நடிகை ஏதோ வீர வசனத்தை பாடியபடியே ஆட.. துச்சாதனனாக நடித்தவர் நிஜமாகவே சேலையை முழுவதுமாக உருவி தனது கழுத்தில் போட்டுக் கொண்டு கெத்தாக பார்க்க.. அந்த நடிகை அப்போதும் விடாமல் விரிந்து கிடந்த கூந்தலை அள்ளி முடியும் சபதத்தை எடுக்கின்றவரையில் அப்படியே டான்ஸ் ஆடிக் காட்டிவிட்டுத்தான் உள்ளே போனார். என்ன கொடுமைடா இதுன்னு யோசிக்கிறதுக்குள்ள.. தொடர்ந்து வந்த இன்னொரு கோஷ்டியும் இதே மாதிரி ஒரு டான்ஸை ஆடிக் காட்டுச்சு. அப்புறம் இன்னொரு கோஷ்டி..

போதுமடா சாமி.. இனிமே இந்த நாட்டுல எத்தனை கோயில் கட்டினாலும் சரி.. எம்புட்டு தடவை விழுந்து விழுந்து கும்பிட்டாலும் சரி.. நாடு நாஸ்திதான்..

ஸ்பெஷல் தோசை

குழந்தைக்கு அம்மாவின் இன்ஷியல் - மும்பை கல்வித்துறை

தமிழ்நாட்டில் இந்த மாதிரியான வசதிகள் இருக்கிறதா என்று தெரியவில்லை. மிகச் சமீபத்தில் மும்பை கல்வித்துறை மாணவர்களின் டி.சி.யில் அவர்களுக்கு பெயருக்கு இன்ஷியலாக அவர்களது தாயாரின் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதியளித்துள்ளது.

அப்பாவின் பெயரையே இன்ஷியலாக வைப்பது வழிவழியாக நம்ம வீட்ல நடக்குறதுதான். ஒரு வித்தியாசமா அம்மா பெயரை வைக்கலாமே என்றுகூட என் வீட்டில் யாரும் யோசித்ததில்லை. தமிழ்நாட்டில் பலரும் வைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

அம்மாவின் பெயரையே தனது பெயருக்கு முன்னால் சேர்த்து வைத்துக் கொண்டவர்களும் உண்டு. அங்காடித் தெரு இயக்குநர் வசந்தபாலனின் அம்மா பெயர் வசந்தா. தனது தாயார் மீதிருக்கும் அதீத அன்பு காரணமாகத்தான் வெறும் பாலனாக இருந்த அவர் வசந்தாவையும் சேர்த்துக் கொண்டு உச்சரிப்புக்காக வசந்தபாலனாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

இன்ஷியலில் முக்கியத்துவம் கொடுப்பதினால் பெண்கள் மீதான மரியாதையும், அணுகுமுறையும் நமது சமூகத்தில் நிச்சயம் மாறும். இதைவிட சிறந்த வழி இன்ஷியலில் அம்மாவின் பெயரையும், அப்பாவின் பெயரையும் சேர்த்து வைத்துக் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும்.. எதுக்கு அப்பாவையும் விடணும்..? அவங்களும் பாவமில்லையா..?

சட்னி

உலகக் கோப்பை கால்பந்து

இப்போதுதான் டி-20 மேட்ச்சுகள் முடிந்து நள்ளிரவில் தூங்கப் போய் மறுநாள் அலுவலகத்தில் நீண்ட கொட்டாவி விட்டுக் கொண்டேயிருந்தது முடிவுக்கு வந்தது.. அடுத்த அட்டகாசம் அடுத்த மாதம் 11-ம் தேதி துவங்குகிறது.

உலகக் கோப்பை கால்பந்து.. பூமிப்பந்தின் நான்கில் ஒரு பங்கு ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் இந்த விளையாட்டு தென் ஆப்பிரிக்காவின் அடுத்த பத்தாண்டுகளுக்குத் தேவையான பொருளாதார வசதியை ஏற்படுத்தி கொடுக்கப் போகிறது என்பதில் ஐயமில்லை.

வரக்கூடிய லட்சக்கணக்கான ரசிகர்களின் வசதிக்காக தென் ஆப்பிரிக்கா தயாராகிவரும் சூழலில் புதிதாக தலைநகர் ஜோஹன்னஸ்பர்க்கில் பிச்சைக்காரர்களே கண்ணில்படக்கூடாது. அத்தனை பேரையும் கண் காணாத இடத்திற்கு கொண்டு போய்விட்டுவிடுங்கள் என்று உத்தரவாகிவிட்டதாம். கூடவே பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கும் இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

பிச்சைக்காரர்களுக்கு சங்கம் இல்லை என்பதால் நாய் பிடிக்கிற வேன் மாதிரி போலிஸ் வேனில் அள்ளிக் கொண்டு போவதை பி.பி.ஸி. சுவாரசியமாகக் காட்டியது. அதே நேரத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்களோ, “நாங்க என்ன பாவம் செஞ்சோம்..? அதான் காண்டம் இல்லாம யாரையும் பக்கத்துல வர விட மாட்டோம்னு சொல்லிட்டோம்ல.. அப்புறமென்ன..? நாங்களும் இந்த சீசன்ல நாலு காசு பார்த்தாத்தான பொழைக்க முடியும்..” என்று போர்க்கொடி தூக்கி ஆர்ப்பாட்டமான ஊர்வலம் நடத்தியதையும் காட்டினார்கள்.

ஆனாலும் அரசு தனது தரப்பில் உறுதியுடன் இருக்கிறது. இந்த கால்பந்து திருவிழாவுக்காக உலகம் முழுவதிலும் இருக்கின்ற காண்டம் தயாரிக்கின்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை லட்சக்கணக்கில் வாங்கிக் குவித்திருக்கிறது தென்னாப்பிரிக்க அரசு. இதற்கு ஐ.நா.வும் நிதியுதவி செய்திருக்கிறதாம்.

“என்ன இருந்தாலும் இவங்களை நம்ப முடியாது.. கடைசி நேரத்துல நிறைய ஆளை பிடிக்கணும்னு நினைச்சு அவசர, அவசரமா காரியத்துல இறங்கினாங்கன்னு வைங்க.. இங்க வந்து போற கால்பந்து ரசிகர்கள்ல நாலு பேருல ஒருத்தருக்கு எய்ட்ஸ் நிச்சயம்..” என்றார் பேட்டியளித்த ஒரு அதிகாரி.

இதற்கெல்லாம் ஒரே வழியாக என் யோசனை.. அனைத்துப் போட்டிகளையும் விடிய, விடிய இரவிலேயே நடத்திவிட்டால் என்ன? இந்தத் தொல்லையும் இல்லை. விடிஞ்சாலும் தூக்கக் கலக்கத்துல தூங்கணும்னு நினைச்சு பாதிப் பேரு ரூம்ல அடைஞ்சு கிடப்பாங்கள்ல.. ஏதோ எனக்கு வந்த யோசனையைச் சொல்றேன்.. புரிஞ்சுக்கிட்டு நடந்தா தென்னாப்பிரிக்க அரசுக்கு நல்லது. என் பேச்சைக் கேட்கலைன்னா போய்ச் சாவுங்க.. எனக்கென்ன..?

சாம்பார்

ராஜபுதன இளவரசி காயத்ரி தேவி

“உசிர் இழுத்துக்கிட்டு இருந்தாலும் பரவாயில்லை.. ஆளு வீட்ல இருந்தாத்தான் மருவாதை” அப்படீன்னு நம்மூர் பெரிசுக சொல்லிக் கேள்விப்பட்டிப்பீங்க.. அப்படித்தான் நடந்திருக்கு ராஜஸ்தான்ல..

இந்தியாவின் கவர்ச்சிக் கன்னியாகவும், ராஜபுதன அழகிகளில் முதலிடத்தைப் பிடித்தவருமான ராணி காயத்ரிதேவி சமீபத்தில்தான் முருகனடி சேர்ந்தார். அவர் இருந்த காலம்வரையிலும் அவருடைய சொந்தங்களுக்கும், அவருக்குமிடையில் மிச்சம், மீதி இருக்கின்ற கோட்டைகளும், கொத்தளங்களும் யாருக்குச் சொந்தம் என்பதில் சண்டை, சச்சரவுகள் இருந்து கொண்டேயிருந்தன.

ஒரு வழியாக அம்மா போய்ச் சேர்ந்தவுடன் சொத்துத் தகராறு ஏற்பட்டு நம்மூர் ஹரி படத்து வெட்டுக் குத்துக்கு அஞ்சாத அளவுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டு மாநில, மத்திய அரசுகள் தலையிட்டு கூல் செய்து வைத்திருக்கின்றன.

இதில் இப்போது அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது காயத்ரி தேவி உயிரோடு இருந்தபோது அவருக்காகவே, அவருடனேயே வாழ்ந்து வந்த சில குடும்பங்கள்தான். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அரண்மனையை ஒட்டிய வீடுகளில் குடியிருந்து காயத்ரிக்கு கார் ஓட்டிய டிரைவர்களின் வீடுகள், காயத்ரியின் செயலாளராக இருந்தவர்களின் வீடுகள், பணிப்பெண்களின் வீடுகள், அரண்மனையில் வேலை பார்த்தவர்களின் வீடுகள் என்று அனைத்தையும் ஒரே நாளில் தரை மட்டமாக்கி அவர்களை வெளியேற்றியிருக்கிறார்கள்.

பாவம் அந்த பெண்கள்.. ராஜ விசுவாசத்தோடு இறுதிவரையில் உடன் இருந்ததற்கு அடையாளமாக அந்த ராணியின் விலைமதிக்க முடியாத புன்னகை தாங்கிய புகைப்படத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு விசும்பலுடன் முக்காடு போட்டுக் கொண்டு போவதைக் காண்பித்தபோது எனக்கு விசுக்கென்றுதான் இருந்தது.

ராஜ விசுவாசத்திற்குக் கூடவா நாட்டில் நன்றியில்லாமல் போய்விட்டது..? என்ன கொடுமை சரவணா இது..?

இடியாப்பம்

அடுத்த ரவுண்ட் மாலைப் பத்திரிகை

ஏதோ 'மாலை முரசு', 'மாலை மலர்', 'தமிழ் முரசு' என்று மாலை பத்திரிகைகள் கொஞ்சம் கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றன. இவைகளிலும் யார் முந்தி, யார் பிந்தி என்றெல்லாம் கலாட்டாக்கள் நடந்து கொண்டிருக்க சந்தேகமேயில்லாமல் தமிழ் முரசு முந்தி சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் துணை முதல்வரின் வீட்டு மாப்பிள்ளை மற்றொரு மாலை பத்திரிகையை சப்தமில்லாமல் விலைக்கு வாங்கி காலத்திற்கேற்றாற்போல் வடிவமைப்பை மாற்றும் டிங்கரிங் வேலைகளை செய்து வருகிறார்.

மிக விரைவில் 'மாலைச்சுடரை' கையில் ஏந்தியபடியே தளபதியின் குடும்ப உறுப்பினர்கள் போஸ் கொடுக்கும் விளம்பரம் கலைஞர் தொலைக்காட்சியில் வருவது உறுதி..

அப்போ 'தமிழ் முரசு' சொல்றதெல்லாம் பொய்யுன்னு விளம்பரம் வருமா..?

பில்ட்டர் காபி

ஒரு கல்யாணம் - உறவு முறை குழப்பம்

விரைவில் ஒரு திருமணம் ஊரறிய நடக்கப் போகிறது. வாழ்த்தலாம் என்று நினைப்பதற்குள் ஏதோ ஒரு பொறி தட்ட.. குழப்பம்தான் ஏற்பட்டது. நீங்களாவது தீர்த்து வையுங்களேன்.

ஏ என்பவரின் அக்கா மகளுக்கும், அதே ஏ-யின் மனைவியின் உடன்பிறந்த அண்ணனுக்கும் திருமணம்..

இது சரியான உறவு முறைதானா..? எனக்கு சந்தேகம்.. உங்களுக்கு..?
 
சாம்பார் இட்லி

பார்த்ததில் பிடித்தது

கொல கொலையா முந்திரிக்கா - திரை விமர்சனம்

25-05-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சின்ன வயதில் அர்த்தமே புரியாமல் பாடித் திரிந்த பாடலை மறுபடியும் நினைக்க வைத்திருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறொன்றும் இந்தப் படத்தில் இல்லை..

"கொல கொலையா முந்திரிக்கா..!
நரிய நரிய சுத்தி வா..!
கொள்ளையடிச்சவன் எங்க இருக்கான்..?
கூட்டத்தில் இருந்தா கண்டுபிடி..!"

இப்படித்தான் பாழாய்ப் போன வைரங்கள் அடங்கிய நாற்காலிகள் நான்கைத் தேடி நான்கு குழுக்கள் தேடி அலைவதுதான் கதை..




செட்டிநாட்டரசரின் கானாடுகாத்தான் அரண்மனையைக் காட்டி சென்னை-1989 என்று கார்டு போடும்போது துவங்குகிற பூச்சூற்றல் கடைசிவரையிலும் தொடர்கிறது..

அருகில் நின்றபடியே நம் காதில் பூச்சுற்றுவது ஒரு வகை.. இதில் நம் தோளில் மீது ஹாயாக ஏறி அமர்ந்து கொண்டு நிதானமாக நம் காதில் பூச்சுற்றுகிறார்கள். கிரேஸி மோகனின் நாடகம் எப்படி இருக்குமோ அதுவேதான் இது.

நொடிந்து போன ஜமீன் குடும்பம் மிச்சமிருக்கும் வைர நகைகளை பாதுகாக்க நினைத்து அதனை நான்கு நாற்காலிகளுக்குள் மறைத்து வைக்கிறார் தற்போதைய ஜமீன். ஜெயிலில் இருந்து வெற்றிப் புன்னகையோடு விடுதலையாகி திரும்பும் பங்காளி வைரத்தில் பங்கு கேட்க வந்த இடத்தில் ஜமீன்தாரையும், ஜமீன்தாரிணியையும் போட்டுத் தள்ளிவிட.. ஒரே பெண்ணான வாரிசு தப்பியோடி விடுகிறது.

ஜமீன்தாரை போட்டுத் தள்ளிய பங்காளி தனது அல்லக்கைகளுடன் சேர்ந்து இத்தனை ஆண்டுகளாக அந்த நாற்காலியைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

டெல்லி கணேஷ்தான் ஜமீனின் மேனேஜர். இவர்தான் அந்த நாற்காலிகளைக் கொண்டு போகிறவர். கடைசியில் கோமாவில் இருக்கும்போது தனது வளர்ப்பு மகன் கார்த்திக்கிடம் சொல்லி நாற்காலியைத் தேடச் சொல்கிறார்.




இப்போது சீரியஸ் திருடனான கார்த்திக்கும், சீரியஸ் திருட்டுக் குடும்பத்தின் அப்பா எம்.எஸ்.பாஸ்கரும், மகள் ஷிகாவும் ஒரு கட்டத்தில் ஒன்று சேர்ந்த இந்த வைரத்தைத் தேடத் துவங்க..

இன்னொரு பக்கம் சிரிப்பு இன்ஸ்பெக்டரான ஜெயராம் ஒரு சிப்பைத் தேடி அலைவதைப் போல் நாற்காலியைத் தேடிக் கொண்டிருக்க..

நாற்காலிகள் யாருக்குக் கிடைத்தது..? ஒரிஜினல் ஜமீன்தாரின் வாரிசு என்னவானார் என்பதுதான் மிச்சக் கதை.. கிளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அதனை சொல்லிவிட்டால் போக விரும்புவர்களுக்கு சுவாரசியம் இருக்காது என்பதால் சொல்ல மாட்டனே..

பக்கம் பக்கமான வசனங்கள், ஒரு வசனத்தின் முடிவில் நூல் பிடித்து அடுத்தாள் வசனம் பேசுவது என்று கிரேஸியாரின் துணுக்குத் தோரணங்கள் தொங்க விடப்பட்டிருக்கின்றன என்றாலும் சமயத்தில் மெகா பிளேடு போட்டுத் தாக்குகிறது. அதிலும் குயிலு, நீலு சம்பந்தப்பட்ட காட்சியில் நமது பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார்கள்.

நகைச்சுவை படம் என்றாலே போதும்.. வசனத்திற்கு வசனம் வேகமாக பேசினாலே சிரித்துவிடுவார்கள் என்று நினைத்துவிட்டார் போலும்.. ஸாரி கிரேஸி ஸார்.. இதில் சிரிப்பு தானாக வராமல் வலுக்கட்டாயமாகத்தான் வரவழைக்கப்படுகிறது..




ஹீரோ கார்த்திக்குமார்.. ஏதோ லவ்வர் பாய் கணக்காக ஹேண்ட்ஸம்மாகத் தோன்றினாலும் காதல் காட்சியில் ஒட்ட மறுக்கிறது. எங்கேயிருந்து பிடித்தார்கள் அந்த ஹீரோயினை.. புதுமுகம் மாதிரியே தெரியவில்லை. டைமிங் வசனத்தில் பின்னியிருக்கிறார். நிச்சயம் பாராட்ட வேண்டும்.. வழக்கம்போல மூன்று டூயட்டுகளில் டான்ஸூம் ஆடி தனது கணக்கை முடித்துக் கொண்டுவிட்டார்.

காட்சிகள் அனைத்துமே பரபரவென வேகமாக அடுத்தடுத்து நகர்வதால் எதுவும் ஒட்டவில்லை.. ஆனால் ட்விஸ்ட்டுகள் ஆங்காங்கே திகைக்க வைக்கின்றன. திருவனந்தபுரத்தில் நடக்கும் இரண்யகசிபு நாடகத்தில் ஒவ்வொரு தூணில் இருந்தும் ஒரு ஆள் வெளியே வந்து எட்டிப் பார்ப்பது செம கலகலப்பு..

ஜெயராமுக்கு கேணத்தனமான இன்ஸ்பெக்டர் வேடம். கச்சிதமாகப் பொருந்துவதுதான் ஆச்சரியம். மனிதர் அனாசயமாக தாண்டிக் குதிக்கிறார். நகைச்சுவையில் எப்போதும் டைமிங்தான் முக்கியம்.. இது மாதிரியான நடிகர்களை வைத்துத்தான் இதனையெல்லாம் ஸ்கோர் செய்ய வேண்டும். ஸ்கோப் செய்திருக்கிறார் ஜெயராம்.

எம்.எஸ்.பாஸ்கருக்கு அதிகம் வேலையில்லை. அவருடைய அதி பயங்கர டயலாக் டெலிவரி அவருக்கே ஆபத்தானதாகப் போய்விட்டது. வளர்ப்பு மகளை துணைக்கு வைத்துக் கொண்டு ஆங்காங்கே திருடுகின்ற பக்கா டீஸண்ட்டான திருடன்.




பங்காளியாக ரொம்ப நாள் கழித்து ஆனந்த்ராஜ்.. அவருக்கு அல்லக்கைகளில் ஒருவர் வாசுவிக்ரம்.. மற்றொருவர் பெயர் தெரியவில்லை. ஆனால் நல்ல நடிப்பு.. பல மேடை நாடகங்களில் நான் அவரைப் பார்த்திருக்கிறேன்.. புதிய நகைச்சுவை நடிகர் ஒருவர் திரையுலகத்திற்குக் கிடைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்..!




இன்னொரு ஆச்சரியம் ராதாரவியின் கேரக்டர்.. பஞ்சாயத்து வருகின்றவர்களிடம் விசாரிக்கும் பாங்கு குபீர் சிரிப்பைக் கொட்டிவிட்டது. அதிலும் தனது மனைவி, துணைவி, வொய்ப், வைச்சுக்கிட்டது என்று ஒரு லிஸ்ட்டையே அறிமுகப்படுத்தும்போது மனிதர் என்னமாக நகைச்சுவையை அடக்கி வைத்திருக்கிறார் என்று யோசிக்கத் தோன்றுகிறது. நாடகத்திலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால் சிரிப்புக்கேற்ற உடல்மொழியையும், பேச்சு மொழியையும் அட்டகாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார் மனிதர்.

அடுத்த ஆச்சரியம் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் ஸ்மால் வேடம்.. ஜக்குபாயின் தோல்வி சரத்குமாரை யோசிக்க வைத்திருக்கிறது போலும். கிடைத்த வேடங்களைச் செய்வோம் என்று அவரும் களத்தில் குதித்திருக்கிறார். நாற்காலிகளை வாங்கி வைத்து அழகு பார்க்கும் ஆசைக்காரராக நடித்திருக்கிறார். படத்தை முடித்து வைப்பதும் சரத்குமார்தான்..

இவர்களுக்கு நடுவே உருட்டை முழி பாண்டியராஜனும் இருக்கிறார். வக்கீல் வேஷம். முதல் காட்சியில் வந்தவர் பின்பு கடைசிக் காட்சியில்தான் தலை காட்டுகிறார்.

எந்த இடத்திலும் தப்பித் தவறிக்கூட நீங்கள் லாஜிக் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக அத்தனையிலும் காமெடியான இணைப்புகள்தான்.. சுடுகாட்டில் ராதாரவின் பிணத்தை வெளியே எடுக்கும் காட்சியை ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.




யாரோ செல்வகணேஷ் என்பவர்தான் இசையாம். வழக்கம்போல அப்படியேதான் இருக்கிறது. பாடல் முடிந்தவுடன் எல்லாமே மறந்துபோய்விட்டது. கொல கொலயா முந்திரிக்கா வரிகளுக்கு மட்டும் தீம் மியூஸிக்கை போட்டுத் தாக்கியிருக்கிறார்.

பெண் இயக்குநர் என்பதால் ஹீரோயினை போர்த்திக் கொண்டுதான் நடிக்க வைத்திருப்பார் என்று நினைத்த என் நினைப்பில் மண்ணையள்ளி போட்டுவிட்டார் இயக்குநர் மதுமிதா. இரண்டு டூயட் காட்சிகளில் ஹீரோயின் தன்னால் முடிந்த அளவுக்கு கவர்ச்சி காட்டி தனது ரூட்டை காட்டியிருக்கிறார். ஆனால் நடிப்பு நன்கு வருகிறது.. இது யாருக்கு வேணும்கிறீங்களா..? அதுவும் சரிதான்.. ஒரு குத்துப் பாடலையும் வைத்து தானும் ஒரு சராசரி இயக்குநர்களில் ஒருவர்தான் என்பதை நிரூபித்திருக்கிறார் பெண் இயக்குநர் மதுமிதா.! கொஞ்சம் வருத்தம்தான்..!

காட்சியமைப்புகள் முழுவதுமே மேடை நாடகம் போன்றதுதான் என்பதால் இயக்கமும் அப்படியேதான்.. இன்னும் கொஞ்சம் நல்லபடியாக செய்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது.. வல்லமை தாராயோவில் முதல் முறையான இயக்குநர் என்பதே தெரியாமல் இருந்தது.. ஆனால் இதில் அப்படியில்லை.. ஏதோ ஒன்று இடிக்கிறது..

சிறையில் இருந்து கார்த்திக்கும், எம்.எஸ்.பாஸ்கரும் தப்பிக்கின்ற காட்சியில் மொத்த நகைச்சுவையையும் வாரிக் கொடுத்திருக்கிறார்கள். லாஜிக் பார்க்கக் கூடாதுன்னு அதான் முன்னாடியே சொல்லிட்டாங்கள்ல.. அப்புறமென்ன..?




எப்படியிருந்தாலும் நகைச்சுவைக்கு பங்கம் விளைவிக்காத நடிகர்களை வைத்திருந்தும், நகைச்சுவை கம்மியாக இருப்பதால் பல நேரங்களில் ரசிகர்கள் செல்போன்களில் மூழ்கி விடுவதைப் பார்க்க நேர்ந்தது. இறுதிக் காட்சியில் நீதிபதியாக வரும் கிரேஸி மோகனும் தனது காது கேட்கும் கருவியை சுத்தியலால் உடைத்துவிட்டு கேஸை விசாரிக்கின்ற காட்சியைப் போலத்தான் படமும் ஆகிவிட்டதாக உணர்கிறேன்..

ஒரு முறை பார்க்கலாம்.. நிச்சயம் குடும்பத்தோடு..!



புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com, chennai365.com

கனகவேல் காக்க! – திரை விமர்சனம்..!

24-05-10

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'ஜென்டில்மேன்', 'இந்தியன்', 'ரமணா' என்று ஏற்கெனவே பார்த்து, பார்த்துச் சலித்துப் போன விஷயத்தைத்தான் மீண்டும் சல்லடையில் சலிக்க வைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கவின்பாலா. மிகுந்த வருத்தத்தோடுதான் எழுந்து வந்தேன்.
 
பணம், செல்வாக்கைக் கொண்டு இந்தியன் பீனல் கோடில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நிஜக் குற்றவாளிகள் சிலரை தேடிப் பிடித்துக் கொலை செய்கிறார் கரண். காரணம் கேட்டால் தனது குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமையை பிளாஷ்பேக்கில் விலாவாரியாக எடுத்துச் சொல்கிறார்.

பார்த்ததுதானே.. கேட்டதுதானே.. இதேதானா.. என்கிற முதல் உணர்வு மனதிற்குள் வரும்போதே ரசிகர்களுக்குள் ஒரு அயர்ச்சித் தன்மை ஏற்பட்டு விடுகிறது. பின்பு எதை ரசிப்புத் தன்மையோடு பார்ப்பது..?


கரண் சிற்சில இடங்களில் நடித்திருக்கிறார். இதுவே போதுமா..? அவரைச் சொல்லிக் குற்றமில்லை. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். நான் பார்த்த ஒரு மலையாள பிட்டு படத்தில் இதைவிடவும் அற்புதமாக நடித்திருந்தார்.

இந்தக் கதையில் நடிக்க முன்னணி ஹீரோக்களைத் தேடிச் சென்று கதை சொல்லியிருந்தால், நிச்சயம் பலரும் மறுத்திருப்பார்கள். கடைசியாகத்தான் கரண் சிக்கியிருப்பார் என்று நினைக்கிறேன்..!

என்னதான் கதை, தற்போதைய நாட்டு நடப்பை தெள்ளத் தெளிவாகச் சொல்லிக் காட்டுகிறது என்றாலும், அதனை ரசிக்கும் அளவுக்கு சுவாரசியமான திரைக்கதை மூலம் சொன்னால்தான் உண்டு. 'ஜென்டில்மேன்', 'இந்தியன்', 'ரமணா'வில் இந்த மூன்றுமே இருந்தது. அதனால்தான் அந்தப் படங்கள் இன்றளவும் டிரெண்ட் செட்டர் படங்களாக பேசப்படுகின்றன.

உதாரணத்திற்கு ஹீரோயின் ஹரிப்பிரியா கரண் மீது காதல் கொள்கின்ற காட்சியைச் சொல்லலாம். 'அவதார்' படத்தில் மனிதர்களைத் தாண்டிய காதலையே அவ்வளவு அழகாக உணர்த்தியிருக்கும்போது இதில் கொஞ்சம் அழுத்தமாக சுவாரசியமாக சொல்லியிருக்கக் கூடாதா..?

இது மாதிரியான திரைப்படங்களில் ஹீரோயின்கள் காட்சிகளுக்கு கனெக்ஷன் கொடுக்கத்தான் பயன்படுத்தப்படுவார்கள். இதிலும் அப்படியே.. இவரை வைத்துத்தான் கரண் தனது பிளாஷ்பேக் கதையைச் சொல்கிறார்.  இரண்டு டூயட்டுகளில் ஆடிப் பாடிவிட்டு இறுதிக் காட்சியில் கண்ணீர் சிந்துகிறார். ஆனாலும் இவருக்கு எதுக்கு இவ்ளோ பெரிய பில்டப்பான அறிமுகம்.. நீச்சலுடையில் கடலில் இருந்து எழுந்து வருகிறாராம்..?!!!

 
திரைப்படத்தின் மேக்கிங் என்பது ஸ்கிரீனில் காட்டப்படும் அத்தனையும் பெர்பெக்ஷனாக இருந்தால்தான் சிறப்பு.. போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்.இன்ஸ்பெக்டர், ஏ.சி., டி.சி., கமிஷனர் என்று அத்தனை போலீஸாரையும் அவரவர் பேட்ஜோடு அடையாளப்படுத்தினார்கள். ஆனால் அவர்களுடைய உடையமைப்பு..!?

அதிலும் பாண்டுவும், ஆதித்யாவும் போட்டிருக்கும் காக்கி டிரெஸ்ஸை பார்க்கின்றபோது இயக்குநர் கொஞ்சம் மலையாள காக்கி படங்களை பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்லத் தோன்றுகிறது.  

படத்தின் நிஜமான ஹீரோ கோட்டா சீனிவாசராவ்தான்.. மனிதர் கலக்கியெடுத்திருக்கிறார். நிமிடத்திற்கு நிமிடம் தனது முகபாவனையை மாற்றி வசனங்களை ஏற்ற, இறக்கத்தோடு செய்யும் அவரது ஸ்டைல் மாடுலேஷனை இன்றைக்கும் தெலுங்குலகில் யாராலும் அடிக்க முடியவில்லை. அதனால்தான் 40 வருஷமா பீல்டு அவுட் ஆகாம இருக்காரு அண்ணாச்சி..!

முதல் காட்சியிலேயே கரண், கோட்டோவைக் கொல்ல முயற்சிப்பதைக் காட்டிவிட்டதால் இதற்குப் பின்னான கதையை ஊகிக்க தியேட்டருக்கு வந்திருக்கும் சொற்பக் கூட்டத்திற்கும் ரொம்ப நேரமாகியிருக்காது.. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது வசனகர்த்தா பா.ராகவன்தான்.

பல இடங்களில் சிறப்பான வசனங்களும், டைமிங்கான திருப்பியடித்தல்களும், அரசியல் குத்தல்களுமாக கொடுத்த காசுக்கு மேலேயே கூவியிருக்கிறார் நம்ம அண்ணாத்த..!(பா.ராகவன் போட்டோ கிடைக்கல.. அதுனால அவருக்குப் பதிலா பாப்பா போட்டோ..!)


ஆனால், சிறந்த ஒளிப்பதிவு அல்லது வசனங்கள் கவனிக்கப்படாத சில திரைப்படங்களில் அமைந்துவிடுவது தமிழ்ச் சினிமாவிற்கு புதிதல்ல. அதில் இதுவும் ஒன்று..!

அண்ணன் தனக்கிருந்த ஐ.நா. சபை செயலாளர் அளவுக்கான வேலைகளில் இதற்காகவும் நேரம் ஒதுக்கி செய்திருக்கிறார் என்றாலும், பருப்பு வேகாத கதையில் வசனங்கள் மாட்டிக் கொண்டதால் கொடுமையாகிவிட்டது.

இறுதிக் காட்சியில் கோர்ட்டில் கரணின் மூலம் "சாட்சிகளை வைத்து தண்டனை கொடுக்கும் முறையை மாற்றுங்கள்" என்று பா.ராகவன் எழுப்பியிருக்கும் புதிய கோஷம் நிச்சயம் நமது நாடாளுமன்றத்தை எட்ட வேண்டும் என்றே நானும் விரும்புகிறேன்..! சில பொய்ச் சாட்சிகளால் பல அப்பாவிகள் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். படத்தின் மையக் கருத்தாக இதையே கொண்டு போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்..!

இனிமேலாவது அண்ணாச்சியின் எழுத்துத் திறமைக்கு ஏற்றாற்போல் சிறந்த கதையும், சிறந்த இயக்குநரும் கிடைக்க என் அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்..!

இசையமைப்பு விஜய் ஆண்ட்டனியாம்.. வழக்கம்போல தற்போது வெளிவரும் அனைத்துத் திரைப்படங்களின் இசை போலவே நமநமத்துப் போயிருக்கிறது. பாடல் காட்சியின்போது ரசிகர்கள் குடும்பத்தோடு எழுந்து வெளியே செல்வதைப் பார்க்கின்றபோது திரையுலகப் பிரமுகர்களை கண்டிப்பாக தியேட்டருக்கு இழுத்து வந்து இதையெல்லாம் காண்பிக்க வேண்டும்போல் தோன்றுகிறது.

 
படத்தின் திரைக்கதையை முடிப்பதற்காக இயக்குநர் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார் போலிருக்கிறது. இதற்காகவே கரணின் நண்பன் ஒருவரை போலீஸ் அதிகாரியாக அனுப்பி.. அவர் ஒரே வசனத்தில் கரணின் துப்பாக்கியைப் பார்த்து அடுத்த இரண்டாவது வசனத்திலேயே கரண்தான் நீங்க தேடும் குற்றவாளி என்று சொல்கின்ற ஜெட் வேகத்தைப் பார்க்கும்போது இதனை படத்தின் இரண்டாவது ரீலிலேயே காட்டியிருந்தால் சிறந்த குறும்படமாக இது மாறியிருக்கும்.

கரணின் குடும்பத்தின் சோகச் சம்பவத்திற்கு அடுத்தததான சட்டப்படியான காட்சிகள் எங்கே..? கோட்டா எப்படித் தப்பித்தார்..? அந்த ஊர் போலீஸ் என்ன செய்தது? என்பதை வசனத்தில்கூட சொல்லாமல் விட்ட பழியும், பாவமும் இயக்குநரையே சேரும்..!

ஒரு காட்சியில் வசந்த் டிவியும், வேறொரு காட்சியில் சன் டிவியுமாக காக்கா பிடித்தாலும், ஸ்பான்ஸர்ஷிப் வசந்த் டிவிதான் என்பதால் வெகுவிரைவில் உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக வசந்த் டிவியில் இந்தப் படத்தைப் பார்க்க வாய்ப்புண்டு..!

கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு தைரியம் சொல்லும் பெண் வக்கீல் வேடத்தில் நடித்து அட்வைஸ்களை வாரி வழங்கியிருக்கும் அந்த நடிகைக்கு ஒரு பூஸ்ட்டு கொடுத்திருக்கிறார் நம்ம வசனகர்த்தா. அந்த வசனங்களை மனப்பாடம் செய்யும் பாக்கியம் அவருக்குக் கிடைத்திருப்பதால் இனி அவரது சொந்த வழக்கையும், வாழ்க்கையையும் இந்த வசனங்களை வைத்தே அவர் காப்பாற்றிக் கொள்வார் என்று நினைக்கிறேன்.. வாழ்க பா.ரா.

தன்னைக் காப்பாற்றிக் கொடுத்ததற்காக எடைக்கு எடை பணம்.. அதனை வாங்க மறுத்து மறுபடியும் அந்தப் பெண்ணுக்கு விபச்சாரி பட்டம் கொடுக்க வைக்கும் வக்கீல் என்று ட்விட்ஸ்ட் காட்சிகள் செல்கின்ற வேகத்தில் மனதில் நிற்காமல் போகிறது. இது போலவே கிளைமாக்ஸ் காட்சியில் சம்பத் கரணை உள் நோக்கத்தோடு ஜாமீன் எடுக்கும் முயற்சியில் வாதிட்டுக் கொண்டிருக்க.. அதற்கு கரண் கொடுக்கும் ரியாக்ஷனும்.. பிற்பாடு கரண் சம்பத்தைத் தாக்கிப் பேசுகின்ற காட்சியில் சம்பத் ஏதோ ஒண்ணு என்கிற ரீதியில் முகத்தை வைத்துவிட்டு அமர.. சொதப்பலான திரைக்கதையாகி நல்ல வாய்ப்பு வீணாகிவிட்டதை உணர முடிகிறது.

பட்ஜெட் திரைப்படம் என்று சொன்னாலும், இந்த ஹீரோவுக்கு இவ்ளோதான் வசூலாகும் என்று விநியோகஸ்தர்கள் சங்கத்தின் நோட்டீஸ் போர்டில் ஒட்டி வைத்திருக்கிறார்களே.. அதனைப் பார்த்தாவது அதுக்கேற்றாற்போல் பிளானிங் செய்திருக்கலாம்..

இனிமேலும் தமிழ்ச் சினிமா ரசிகர்களை மேம்போக்காக ஏமாற்ற முடியாது என்பதை இப்போது வருகின்ற தமிழ்ப் படங்களின் ரிசல்ட்டுகள் தெளிவாகச் சொல்கின்றன. இந்தப் படத்தின் ரிசல்ட்டும் இதேதான்..!

தியேட்டரில் இருந்த 50 ரசிகர்களில் என் பின்னால் அமர்ந்திருந்த ஒரு பத்து பேர் கரணின் ரசிகர்களா அல்லது வசனகர்த்தா பா.ராகவனின் ரசிகர்களா என்று தெரியவில்லை.

நல்ல, நல்ல வசனங்கள் வருகின்றபோதெல்லாம் "ஓ" என்று கத்திக் கூப்பாடுபோட்டு சில நல்லவற்றையும் கேட்க முடியாமல் செய்துவிட்டார்கள்.

தியேட்டரில் டிக்கெட் கிழித்தவரிடம் அவர்களைப் பற்றிக் கேட்டபோது "ஒவ்வொரு ஷோவுக்கும் இப்படி ஒரு பத்து பேர் வர்றானுக ஸார்.. கடைசிவரைக்கும் கத்திக்கிட்டேதான் இருக்கானுக.." என்றார்..

இதை வைச்சே ஒரு திரைக்கதை எழுதலாம் போலிருக்கு..!

"படத்தில் ஒண்ணுமே இல்லையா?" என்றவர்களுக்கு என் கண்ணுக்குத் தெரிந்த அபாரமான ஒரு குறியீடு..!

கரண் வக்கீல் நோட்டீஸ் ஓரிடத்திற்கு கொடுக்க வருகிறார். அப்போது ஹீரோயின்கள் உட்பட மூவரை காரில் வைத்துக் கடத்தி வருகிறார்கள். இதனைப் பார்த்துவிடும் கரண் கதவைத் திறக்கச் சொல்கிறார்.

கோபத்தோடு கதவைத் திறக்கும் கூர்க்காவிடம் தன்னை உள்ளேவிட அனுமதிக்கக் கேட்க கூர்க்கா இந்தியில் மறுக்க..

"தமிழ் தெரியாதா..?" – இது கரண்..!

கூர்க்கா ஒற்றை வரியில் ஏதோ சொல்ல..

கரணின் முஷ்டி 'நச்' என்று கூர்க்காவின் முகத்தில் விழுகிறது..!

சூப்பர்.. நம்ம டயலாக் ரைட்டருக்கு இவ்வளவு கோபம்கூட வரலைன்னா எப்படி..?

போறவங்க போய்க்கலாம்..!

மகனே என் மருமகனே..! - திரை விமர்சனம்


22-05-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

600 எபிசோடுகளுக்குக் கொண்டு போய் வெற்றி விழா நடத்தியிருக்கக் கூடிய சீரியல் கதை. ராஜ் டிவி இதனை சினிமாவுக்குத் தள்ளிவிட்டிருக்கிறது.


நகைச்சுவை கலந்த மிடில் கிளாஸ் கதைகளை உருவாக்குவதில் வல்லவரான விசுவின் அந்தியந்த சீடர் டி.பி.கஜேந்திரனின் ஆஸ்தான கதாசிரியர் டி.துரைராஜின் கதை என்று ஏற்கெனவே தெரிந்ததால் இப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்த்துதான் சென்றிருந்தேன்.

அதேதான்..

சிங்கம்பட்டி ஜமீன்தார் கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். கையில் 'டப்பு' இல்லாவிட்டால்கூட பரவாயில்லை.. கடன் வாங்கியாவது தானமாக வழங்குகிறார். இவருடைய பையன் ஹாஸ்டலில் தங்கி படித்தவன் ஐ.டி. முடித்து லட்சக்கணக்கில் சம்பளத்துடன் சென்னையில் பொட்டி தட்டிக் கொண்டிருக்கிறான்.

ஜமீன்தாரின் அப்பாவின் சின்ன வீட்டுக்குப் பிறந்த பேரன் சிங்காரமாக விவேக். முறுக்கிவிட்ட மீசையோடு அல்லக்கைகள் இருவரோடு ஊருக்குள் அலப்பறை செய்தபடியே திரியும் மைனர். ஜமீன்தார் நாசரின் பொண்ணான பொன்னரசியை எடக்கு மடக்கு செஞ்சு கல்யாணத்தைப் பண்ணிக் கொள்கிறார். ஆனாலும் சீட்டு விளையாட்டில் ஏனோ மனதைப் பறி கொடுத்து பாட்டியின் கழுத்து செயின்வரையிலும் உருவி கொண்டு போய் சீட்டு விளையாட்டில் தொலைக்கிறார்.

விளையாட பணமில்லாத சூழலில் “பொண்டாட்டியை வைச்சு விளையாடலாம் வாடா..” என்றவனை அடித்து உதைத்த நிலையில் “உன் சாவு என் கைலதாண்டா” என்று விவேக் சொல்லி முடிக்க அன்றைக்கே அவன் சாவு நடந்தேறுகிறது.. போலீஸூம் சொல்லி வைத்தாற்போல் விவேக்கை அரெஸ்ட் செய்ய.. ஜமீன்தார் குடும்பத்துக்கு சனி தசை நடக்கத் துவங்குகிறது.. விவேக்கை ஜாமீனில் எடுக்கக்கூட பணமில்லாமல் தவிக்கும் ஜமீன்தார் பையனிடம் கேட்க பையன் தர மறுத்து அவதூறாகப் பேச குடும்பத்திற்குள் பிரிவினை.

இதில் ஜமீன்தாரின் மச்சான் லிவிங்ஸ்டன் மகனை தனக்கு மாப்பிள்ளையாக்க நினைத்து உள்ளடி வேலைகளை செய்து பையனின் மனசைக் கெடுத்துத் தொலைக்கிறார்.

ஜெயிலில் இருந்து திரும்பி வரும் புருஷனைக் கூட்டிக் கொண்டு மெட்ராஸுக்கு வருகிறாள் ஜமீன்தாரின் மகள். "இங்கேயே ஏதாவது வேலை செஞ்சு பொழைச்சு சம்பாதிச்சுக் காட்டிட்டுத்தான் மறுபடியும் நம்ம ஊருக்குள்ள கால் வைக்கணும்" என்று கண்ணகி கணக்காக சூளூரைக்க அது நடந்ததா, இல்லையா என்பதுதான் மிச்சக் கதை..

விவேக்தான் கதாநாயகன் என்பதால் சிரிக்க வைத்துக் கொண்டேயிருப்பார்கள் என்று நினைத்து நீங்கள் போனால் அதற்கு நான் பொறுப்பில்லை. முதல் பகுதியில் ஓரளவுக்கு நம் பல்லைக் காட்ட முடிகிறது.. பிற்பகுதியில் சீரியல்களையே தோற்கடிக்கும் அளவுக்கு திடுக், திடுக் சீரியல் திரைக்கதைகளும், சென்டிமெண்ட்டும் நெஞ்சையும், கண்ணையும் ஒரு சேர பிழிகிறது.

விவேக்கிற்கு டயலாக் டெலிவரி நன்றாகவே வருகிறது. ஆனால் வடிவேலுவை போல உடல்மொழிதான் வர மறுக்கிறது. இதனாலேயே சிரிக்க வேண்டிய காட்சிகளிலெல்லாம் அடுத்தக் காட்சி துவங்கிய பின்புதான் சிரிக்க முடிகிறது.

வசிய மருந்து வைக்க வம்பிழுத்தான்பட்டிக்குள் போய் வயிறு கலங்கி குந்த வைத்து உட்காரும் இடத்தில் நல்ல கலகலக.. மற்றபடி ஸ்பீட் டயலாக்கிலேயே கவரும் முயற்சியில் அவருக்குப் பாதி தோல்வி.. பாதி வெற்றி..!

ஆனாலும் கதாநாயகன் லெவலுக்கு மாறியிருப்பதால் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். குறிப்பாக பாட்டியின் பிணத்தைப் பார்த்து சுடுகாட்டில் அழுவதைச் சொல்லலாம். இதில் புதிதாக ஒன்று.. விவேக் நன்றாக நடனமாடவும் செய்திருக்கிறார். வாழ்க..


ஹீரோயின் யாமினி ஷர்மா. ஏதாவது சரக்கடித்த நிலையில் தேர்வு செய்தார்களா என்று தெரியவில்லை. ஹீரோயினுக்கான பேஸே இல்லை.. பின் எதற்கு..? ஆனால் கிளைமாக்ஸில் நிஜமாவே அழுதுத் தொலைக்கும்போது கொஞ்சம் நடிப்பு தெரிகிறது..! மற்றபடி இந்த ஒரு படத்தோடு கோவிந்தா ஆவது உறுதி..!


மிதுன் என்றொரு பையன் இன்னொரு ஹீரோ. ஜமீன்தாரின் பையனாக நடித்திருக்கிறார். இட்ஸ் ஓகே.. 'தவமாய் தவமிருந்து' படத்தில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்திருந்த மீனாள் இதில் முற்றும் துறந்த முனியாய் காட்சியளிக்கிறார். இவருக்குத் துணை இவரது சகோதரியாக நடித்த ஒருவர். அவரும் அரைகுறை முனிதான். நல்லவேளை இவர்களது அம்மா ஷர்மிளி முழுக்க போர்த்திக் கொண்டுதான் நடித்திருக்கிறார். தப்பித்தோம்..


சகோதரிகள் இருவரும் வீட்டிலேயே கால் சட்டை, அரை டிராயரில் உலா வருவதைப் பார்த்தால் இப்படியொரு இடம் கிடைத்தால், வீட்டோடு மாப்பிள்ளையாக போய்விடலாம்போலத் தோன்றியது.

இந்த வீட்டிலேயே இன்னொரு ஹீரோயினாக தேன்மொழி. நவ்யா நாயர் மலையாளத்தில் அறிமுகமான 'நந்தனம்' படத்தின் அருமையான சின்ன கான்செப்ட்டை அட்டகாசமாக உருவி இதில் சொருவியிருக்கிறார்கள். அதில் பெருமாள்.. இதில் என் அழகு அப்பன் முருகன்.

சதாசர்வகாலமும் என் அப்பன் முருகனிடம் தனது சோகத்தைப் பிழிந்து சொல்லியபடியே இருக்கும் ஒரு கேரக்டர்.. எதற்கு இது என்று மண்டையைப் போட்டு பிய்த்துக் கொண்டதில்தான் இருக்கிறது கதை ஆசிரியரின் திறமை. கிளைமாக்ஸில் கலக்கியிருக்கிறது திரைக்கதை.


'பழனி' என்ற போர்டையும், மலையையும் மட்டும் காட்டிவிட்டு ,லோக்கலில் படம் பிடித்துக் காட்டியிருக்கும் இவர்களை என் அப்பன் மன்னிப்பானாக..


ஜமீன்தாராக நாசர். மனைவியாக சரண்யா. அல்லல்படும் அம்மா கேரக்டருக்கு சரண்யாதான் இனிமேல் பெஸ்ட்.. கொடுத்த காசுக்கு மேலேயே நடித்துக் காட்டுகிறார். சீரியல் இயக்குநர்கள் வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துத்தான் டைட் குளோஸப் ஷாட் வைப்பார்கள். இதிலும் அப்படியே மகனுடன் சொத்துக்காக சண்டையிடும் காட்சியில் சரண்யாதான் நடிப்பில் ஜொலிக்கிறார். 


விவேக்கின் பாட்டியாக பரவை முனியம்மா. பேத்தியை கரம் பிடிக்க பேரனுக்கு ஐடியா கொடுக்கிறார். பேரன் ஒரு புல் பாட்டிலை வைத்து முழுங்கிக் கொண்டிருக்க, பக்குவமாக அவனுக்கு மீன் சுட்டுக் கொடுக்கிறார். அடுத்தக் காட்சியில் தானே ஒரு ஆஃப் அடித்துவிட்டு பேரனை நினைத்து புலம்புகிறார்.. இப்படி ஒரு பாட்டி நமக்கும் கிடைக்கக் கூடாதா..? இவருடன் தாத்தா விவேக்குக்கு 'மாசிலா உண்மைக் காதலே ' என்றொரு பிளாக் அண்ட் ஒயிட் 'டூயட்'டும் உண்டு என்பது அடிஷனல் செய்தி.

வசனம் எழுதியிருப்பவர்களில் பத்திரிகையாளர் 'குமுதம்' கிருஷ்ணா டாவின்ஸியும் ஒருவர்.. பல இடங்களில் விவேக் பேசும் டபுள் மீனிங்கை முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டும். இதையும் கேட்டுவிட்டு 'யு' சர்டிபிகேட் கொடுத்திருக்கும் இந்த சென்சார் போர்டை என்னவென்று சொல்ல..?


இசை தீனா என்று டைட்டில் சொன்னது.. பாடல்கள் வந்தன.. சென்றன.. இரண்டு பாடல்கள் மட்டுமே கேட்கும்படி இருந்தன.  ஒரு ரீமிக்ஸ் பாடல். “ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை..” ம்ஹும்.. வழக்கம்போலை கொலை செய்திருக்கிறார்கள்.. டைட்டில் காட்சியிலேயே ஒரு குத்துப் பாடலை சொருகி சீரியல் நடிகர் ஸ்ரீயை ஆட வைத்திருக்கிறார்கள். உடன் ஆடும் பெண்ணின் 'அனாடமி' பற்றி கேபிள் சங்கர் நிச்சயம் எழுதுவார்.


'அண்ணாமலை' ஸ்டைலில் ஒரே பாடல் காட்சியில் கோடீஸ்வரர் ஆவதைப் போல் காட்சிகளை வைத்து இரண்டாம் பாதியில் சிரிப்பு மூட்டியிருக்கிறார்கள். நகைச்சுவைத் திரைப்படம் என்பதால் லாஜிக் பார்க்க மாட்டார்கள் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்..!

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் நகைச்சுவையை சேர்த்திருத்தால் திரையரங்கில் கூட்டம் கூடியிருக்க வாய்ப்புண்டு. நழுவ விட்டுவிட்டார்கள்..!

'இதயமாற்று தானம்' செய்து தமிழகத்தில் ஒரு புதிய புத்துணர்ச்சியை ஊட்டி ஹிரேந்தினின் கதை இதிலும் வருகிறது. ஆனால் 4 வருடங்களாக படத்தின் தயாரிப்பு இருந்து தொலைத்ததால் ஹிரேந்திரன் சம்பவத்திற்கு முன்பாகவே இது திட்டமிடப்பட்ட கதை என்கிறார் கதை ஆசிரியர். வாழ்த்துவோம்..! அப்போதே ரிலீஸ் ஆகியிருந்தால் இந்த ஒன்றுக்காகவே பரபரப்பைக் கூட்டியிருக்கலாம்..

கல்யாணத்தைப் போலவே சினிமா ரிலீஸையும் உடனுக்குடன், அந்தந்த வயதில் முடித்தாக வேண்டும். இல்லையெனில் இப்படியாக முதிர் கன்னி, முதிர்ந்து போன கதையாகத்தான் போய் முடியும்.

ஏதோ ஒரு படத்துக்குப் போய் பொழுதைக் கழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக இங்கே செல்லலாம்..!

மகனே என் மருமகனே - ஒரு சீரியல் கதம்பம்..!

தியேட்டர் டிப்ஸ் :

ஒரு திரையரங்கை வெற்றிகரமாக நடத்த முடியவில்லை என்று மூக்கால் அழுபவர்கள் வடபழனி ஏவி.எம்.ராஜேஸ்வரி தியேட்டருக்கு வந்து பார்த்துவிட்டுச் செல்லலாம்.

அவ்வளவு சுத்தம்.. டிக்கெட் கொடுப்பவர்கள்கூட ஸார் போட்டுத்தான் பேசுகிறார்கள். பிளாக்கில் டிக்கெட் மூச்.. யாராவது வாங்கியவர்களே விற்றால்தான்.. படம் துவங்குவதற்கு முன்பேயே தியேட்டருக்கு முன்பிருக்கும் இடங்களில் பார்வையாளர்கள் அமர அனுமதிக்கப்படுகிறார்கள். நன்று..!

இந்திய அளவில் 'ஜனகனமண' என்று 'தேசிய கீத'த்தை ஒளிபரப்பும் தியேட்டர் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். தேசிய கீதம் ஒலிக்கும்போது அட்டென்ஷனில் நிற்கலாம். ஓகே.. ஆனால் பாப்கார்னையும், சமோசாவையும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் என்ன செய்வார்கள்..? முழுங்காமல் இருக்க வேண்டுமா? அல்லது முழுங்கலாமா..? அரசியல் சட்டம் என்ன சொல்கிறது என்று தெரிந்தவர்கள் சொன்னால் அடுத்த முறை நான் பின்பற்றிக் கொள்ள வசதியாக இருக்கும்..

படத்தின் பிரமோஷனுக்காக ராஜ் டிவியில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்திற்கு டிக்கெட்டுகள் வாரி வழங்கப்பட்டிருந்ததால் அரங்கம் பாதி நிரம்பியிருந்தது. அதிலும் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒருவர் படத்தில் பங்கு கொண்டவர் போலிருக்கிறது. “இந்த இடத்துலதான் நான் பக்கத்துல உக்காந்திருந்தேன். நின்னுக்கிட்டிருந்தேன்” என்று தனது மனைவியிடம் பீலாவிட்டதையும் கேட்க வேண்டியிருந்தது.

படத்தின் இடைவேளையில் காபி குடிக்க வெளியே வந்தால் படத்தின் கதாநாயகன் விவேக்கே நேரில் வரவேற்றுக் கொண்டிருந்தார். படத்தின் விளம்பரத்திற்காக என்னென்ன செய்ய வேண்டியிருக்கிறது பாருங்கள்..?

வந்தவர்கள் அனைவருக்கும் படத்தின் பெயர் பொறிக்கப்பட்ட அரைத் தொப்பி இலசவமாக வழங்கப்பட்டது. அந்த அரைத் தொப்பியில் விவேக்கிடம் கையெழுத்து வாங்க அடிதடியே நடந்தது.. “படம் சக்ஸஸ் ஸார்..” என்று எங்கிருந்தோ வந்த சவுண்ட்டை கேட்டு திரும்பிப் பார்த்து கும்பிட்டு நன்றி சொல்லிவிட்டுப் போனார் விவேக்.

படம் முடிந்த பின்பு வந்திருந்தால் என்ன நடந்திருக்குமோ..? 


புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com

குங்குமம் இதழின் முதன்மை ஆசிரியருக்கு கத்திக்குத்து - தகவல் வெளிவராத மர்மம்..

16-05-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வழக்கம்போல இன்று காலையில் வெளிவந்த செய்தித்தாள்களையும், நான் எப்போதும் வாங்கும் வார இதழ்களையும் புரட்டிக் கொண்டிருந்தேன். அப்போது 'நவீன நெற்றிக்கண்' என்னும் வாரப் பத்திரிகையில் வெளி வந்த இந்தச் செய்தி என்னை ஒரு கணம் திடுக்கிட வைத்ததும்.. கூடவே ஆச்சரியத்தையும் தந்தது.

நீங்களும் படித்துப் பாருங்கள்..

"கலாநிதி மாறன் - தயாநிதி மாறன் குடும்பத்திற்குச் சொந்தமான 'குங்குமம்' இதழின் முதன்மை ஆசிரியராக இருப்பவர் தி.முருகன். இவர் ஏற்கெனவே 'ஜூனியர் விகடன்' இதழில் பணியாற்றியவர்.


முருகன் 'குங்குமம்' இதழில் பணியாற்றி வந்தாலும் நடிகர் சூர்யா, அவரது அகரம் பவுண்டேஷன் அமைப்பின் நிர்வாகியான முன்னாள் 'ஜூ.வி.' நிருபர் ஞானவேல், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் எம்.எல்.ஏ. ரவிக்குமார் ஆகியோருடன் இணைந்து ரியல் எஸ்டேட் பிஸினஸ் விரிவாக செய்து வந்தார் என்று போலீஸ் வட்டாரம் கூறுகிறது.

முருகன், நடிகர் சூர்யா, ஞானவேல், ரவிக்குமார் எம்.எல்.ஏ., ஆகிய நால்வர் கூட்டணி, இராமநாதபுரம் மாவட்டம் - கீழக்கரை பகுதியில் ஒரு பெரிய சொத்து வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும், இந்த வர்த்தக நடவடிக்கையில் சென்னைக்கு தெற்கே, கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் அவர் கொதிப்பில் இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 'குங்குமம்' முதன்மை ஆசிரியரான தி.முருகன், கடந்த 7-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு ராமாவரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து குங்குமம் அலுவலகம் நோக்கி தனது ஆக்டிவா ஸ்கூட்டரில் புறப்பட்டுச் சென்றார்.

5-வது குறுக்குத் தெருவில் இருந்து புறப்பட்ட முருகன், 6-வது குறுக்குத் தெருவைக் கடக்கும்போது இரண்டு பேர் வழி மடக்கி முகவரி கேட்பது போல பேசியபடியே அவரது இடுப்பு மற்றும் கைகளில் குத்திவிட்டுத் தப்பியோடி விட்டனர்.

ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிய முருகனை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர்.

தற்போது முருகன் ராமச்சந்திரா மருத்துவனையில் 4-வது மாடியில் டி-4 அறையில்(படுக்கை எண் 4412) தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவரது சொந்த ஊர் செஞ்சி. இவரது மனைவியின் பெயர் திண்டிவனம். முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர் இவர்.

வளசரவாக்கம் போலீஸுக்குத் தகவல் கிடைத்து மருத்துவமனையில் இருந்து முருகனை சந்தித்து புகார் பெற்றனர். விசாரணை அதிகாரியாக வளசரவாக்கம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் உள்ளார்.

முருகனை கத்தியால் குத்திய சம்பவம் நடந்தது மே 7-ம் காலை எட்டரை மணியில் இருந்து ஒன்பதரை மணிவரைக்குள். 94430-33305 என்ற மொபைலில் இருந்து முக்கியமான பத்திரிகையாளர்களுக்கும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் முருகனின் நண்பர்களுக்கும் "முருகன் தாக்கப்பட்ட விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம்" என்று ஒரு எஸ்.எம்.எஸ். பறந்து சென்றது.

மேற்கண்ட மொபைல் எண் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாருடையது. அவர் சட்டமன்றத்தில் இருந்தபடியே இந்த எஸ்.எம்.எஸ்ஸை அனைவருக்கும் அனுப்பியுள்ளார்.

இந்த விஷயங்களுடன் ரவிக்குமார் எம்.எல்.ஏ.வை 11-ம் தேதி செவ்வாய்கிழமை மாலை 6.20 மணிக்கு தொடர்பு கொண்டு “எதற்காக நீங்கள் இப்படி எஸ்.எம்.எஸ். கொடுத்தீர்கள்?” என்று கேட்டோம். ரவிக்குமார், “இது பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது..” என்று மறுத்துவிட்டார்.

மே 11 செவ்வாய் மாலை 6.15 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டரும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியுமான கணேசனை தொடர்பு கொண்டு முருகன் கொலை முயற்சி வழக்கின் கிரைம் எண்ணைக் கேட்டோம். “உங்களுக்கு எதுக்கு கிரைம் எண்..? 'குங்குமம்' நிர்வாகமே எண்ணைக் கேட்கவில்லையே..? உங்களுக்கு எதற்கு கிரைம் எண்ணைத் தர வேண்டும்?” என்ற சூடாகக் கேட்டார்.

அவரை நிதானத்திற்கு வரவழைத்து, “க்ரைம் எண் மறைத்து பாதுகாக்கப்பட்ட வேண்டியதா என்ன?” என்று நாம் மடக்கியதும் "271/10 "என்று க்ரைம் எண்ணைக் கொடுத்தார் கணேசன். “விசாரணை எந்த அளவில் உள்ளது?” என்று கேட்டோம். “இப்பத்தான் முருகனைப் பார்த்தேன். அவரோட ஆபீஸ்(குங்குமம்) எம்.டி.யைப் பார்த்தேன். முருகனைத் தாக்கியது தொடர்பாக அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை..” என்றார். மேலும், “ஒரு க்ளூ கிடைச்சா.. குற்றவாளியைப் பிடிச்சிருவோம்..” என்றார் கணேசன்.

“க்ளூ கொடுத்தா கண்டிப்பா குற்றவாளியைப் பிடிச்சிருவீங்களா?” என்றதும், “நிச்சயமா.. பத்து நிமிஷத்துல பிடிச்சிருவோம்..” என்று உற்சாகமாகக் கூறினார் கணேசன்.

நமது கைவசம் உள்ள க்ளூவை கணேசனிடம் கூறிவிட்டு “இந்தக் க்ளூவை வைத்து குற்றவாளியை பத்து நிமிடம் இல்லை.. 24 மணி நேரத்தில் பிடிச்சிருங்க.. உங்களுக்கு ஜனாதிபதி அவார்டு கொடுக்கும்படி எங்க பத்ரிகைலேயே சிபாரிசு செய்றோம்.. அட்டையிலேயே கவர்ல உங்க புகைப்படத்தைப் போட்டு பாராட்டுறோம்..” என்று கூறினோம்.

சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வாயடைத்துப் போய் “சரி ஸார்.. சரி ஸார்..” என்றார்.

'குங்குமம்' முதன்மை ஆசிரியர் தி.முருகனை கொலை செய்ய முயன்ற கூட்டத்தின் பின்னணியைப் புலனாய்வு செய்து குற்றவாளிகளைக் கைது செய்தால் பாராட்டலாம்.. ஆனால் அதற்கான வாய்ப்பு நம் கண்ணுக்குத் தெரியவில்லை..!"

(நன்றி : நவீன நெற்றிக்கண் இதழ் 21-05-2010)

இனி விஷயத்துக்கு வருவோம்..

இந்தச் செய்தி தமிழகத்தின் முதன்மையான பத்திரிகைகளில் இன்றுவரையிலும் வெளியாகாமல் இருந்ததற்கும், இருப்பதற்கும் என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒருவேளை இதிலே சொல்லப்பட்டிருப்பதைப் போல விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் வேண்டுகோளாகவோ அல்லது 'குங்குமம்' நிர்வாகத்தின் விருப்பமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால் ஒரு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட க்ரைம் எண் கொடுக்கப்பட்ட செய்தியொன்று விருப்பு, வெறுப்பில்லாமல் பகிரங்கப்படுத்தப்படுவதுதான் காவல் துறையின் சட்டம்.

தனிப்பட்ட புகார்கள் காரணமாக குடும்பத்தினருடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபடுவது.. குடும்பத்தினருடன் சண்டையிடுவது.. புகார் போலீஸ் ஸ்டேஷன் வருவது.. பஞ்சாயத்து செய்வது.. சமரசம் செய்து வைப்பது இதையெல்லாம்கூட ஒருவகையில் வெளியில் சொல்ல வேண்டியதில்லை என்றே கருதலாம்..

ஆனால் ரத்தம் சிந்தும் அளவுக்கு ஆயுதத்தால் செய்யப்பட்ட படுகொலை முயற்சியையும் இதேபோல் வெளியிடாமல் முயற்சிப்பது காவல்துறையின் நடவடிக்கைகளும் நல்லதல்ல.

நாளை இது போன்ற ஏதேனும் ஒரு அரசியல் வழக்கிலோ அல்லது பத்திரிகையாளர்களின் பத்திரிகை தொடர்பான வழக்கிலோ காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு க்ரைம் எண் கொடுக்கப்பட்டு அது வெளியில் தரப்படாமல் கடைசி நிமிடத்தில் கைது நடவடிக்கையில் இறங்கும்போது இதே பத்திரிகையாளர்களும், பத்திரிகை உலகமும் என்ன செய்யும்..?

அதுவும் தங்களுக்கு விருப்பப்பட்ட செய்திகளை பத்திரிகையாளர்களுக்கு வழங்கி சந்தேகத்தின்பேரில் சிலரைப் பிடித்து அவர்களை தொலைக்காட்சிகளின் முன் நிறுத்தி அவர்கள்தான் குற்றவாளிகள் என்பதை மறைமுகமாக மக்கள் மனதில் நிலை நிறுத்தும் காவல்துறையின் உள்ளடி வேலைக்கு ஒரு பக்கம் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளுக்கு இடையேயான வர்த்தகப் போட்டியும், செயலும் உடந்தையாக இருப்பது என்பதே நமது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல.

இன்றைக்குக்கூட 'தினந்தந்தி' பத்திரிகையிலே ஒரு செய்தி. நடிகர் சின்னி ஜெயந்த் வளர்த்து வந்த நாய் திருடு போய்விட்டது. நடிகர் சின்னி, காவல்துறையில் புகார் செய்திருக்கிறார். காவல்துறை வழக்குப் பதிவு செய்துவிட்டு வலைவீசித் தேடி அந்த நாயை மீட்டுக் கொடுத்திருக்கிறார்கள். நாயைக் கடத்தியதாக ஒரு இளைஞனை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இது ஒரு சாம்பிள்தான்..

இப்படி ஒரு வழக்குப் பதிவு செய்தால் அதனை வெளியிடுவதையும், வேறொரு வழக்கு பதிவு செய்தால் அதனை வெளியிடாமல் மறைப்பது ம் நல்லதொரு ஜனநாயக நடைமுறை அல்ல.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நக்கீரன் கோபாலை கைது செய்தபோதுகூட எந்தக் குற்றச்சாட்டின் கீழ், எந்த போலீஸ் ஸ்டேஷனில்  அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்கின்ற தகவலை மூடி மறைத்து, கோபாலை கைது செய்த பிறகுதான் அதனை வெளியிட்டார்கள். இதனாலேயே கோபால் முன் ஜாமீன் பெற முடியாமல் போய்விட்டது.

பத்திரிகையாளர்களுக்கு ஒரு நீதி.. பொதுமக்களுக்கு வேறொரு நீதி என்கிற போக்கிலேயே சமீப காலமாக பல்வேறு சம்பவங்கள் கண் முன்னே நடந்து வருவதை பார்த்துக் கொண்டு மெளனமாகத்தான் இருக்கிறோம்..

நித்தியானந்தம் விஷயத்தில் பெங்களூருக்கே சிறப்பு நிருபரை அனுப்பி விஷயத்தை தோண்டித் துருவி வெளியே கொண்டு வந்து 5 பக்கங்களுக்கு சிறப்புக் கட்டுரை எழுதிய 'குங்குமம்' இதழ் இதனைப் பற்றி இதுவரையில் ஒரு சிறிய செய்தியைக்கூட வெளியிடாதது பத்திரிகையியல் ரீதியாக சரியானதல்ல..

ஒரு குற்றம் நடந்திருந்தால் அதில் தவறு செய்தவர் கண்டிப்பாக குற்றவாளிதான்.. அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் பத்திரிகையில் வெளிப்படுத்தக் கூடியவர்தான். நித்தியின் சொந்த வாழ்க்கையைத் தோண்டித் துருவியவர்கள் தங்களது பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் தாக்கப்பட்டதையே கண்டு கொள்ளாமல் இருப்பது இவர்களுக்கு ஒரு நீதி.. அடுத்தவர்களுக்கு ஒரு நீதி என்பதைத்தான் காட்டுகிறது..

சமீப காலமாக பல்வேறு பத்திரிகைகளிலும் இது போன்று அவர்களது காம்பவுண்டுக்குள் நடக்கும் குற்ற வழக்கான செய்திகளை அவர்களுடைய பத்திரிகையிலோ, அல்லது பிற பத்திரிகைகளிலோ வெளிவராமல் பார்த்துக் கொள்ளும் போக்கு அதிகரித்தே வருகிறது.

இதில் விதிவிலக்கு நக்கீரன். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அதன் மதுரை நிருபர் ஒருவர் அப்போதைய மதுரையின் பெண் அமைச்சர் ஒருவருடன் நெருக்கமாக இருந்து கொண்டு சொத்துக் குவிக்கும் விஷயத்தில் இறங்கியதை பகிரங்கப்படுத்தி அவரை டிஸ்மிஸ் செய்ததாக தெரிவித்தது.

சமீபத்தில் 'குமுதம்' பத்திரிகை அலுவலகத்திற்குள் நடந்ததாகச் சொல்லப்பட்ட பாலியல் புகார், அதன் எம்.டி.வரதராஜன் பணத்தைச் சுருட்டியதாக ஆசிரியர் அளித்த புகார்.. இது பற்றிய செய்திகள் அதே புலனாய்வு பத்திரிகையில் கவர் ஸ்டோரியாக வெளிவரும் என்று ஆசையோடு காத்திருந்தேன். புஸ்வாணமாகிவிட்டது. பத்திரிகைகளே இப்படியிருந்தால் எப்படி..?

இது மாதிரியான ஒரு பக்கச் சார்பான நடைமுறைகள் ஆட்சி, அதிகார வர்க்கத்தின் முறைகேடுகளை வெளிப்படையாக்கி மக்களுக்குத் துணை நிற்க வேண்டிய உண்மையான பத்திரிகை உலகத்திற்கே ஒரு பக்க பாதிப்பாகத்தான் போய் முடியும்.. ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகையுலகம் தற்போது திசை மாறி ரங்கநாதன் தெரு அண்ணாச்சிகள் கடை லெவலுக்கு வருவாய் என்பதை மட்டுமே குறிக்கோளாய் போய்க் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

நண்பர் தி.முருகன் உடல் நலம் பெற்று வீடு திரும்ப என் அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்..

குருசிஷ்யன் - திரை விமர்சனம்

11-05-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'ஓம் ஸ்ருதி (எ) ஹேமமாலினியாய நமஹ..!'

'ஓம் ஷகிலாயாய நமஹ..!

'ஓம் கிரணாய நமஹ..!'


தமிழ்ச் சினிமா கொஞ்சம் தலை நிமிர்ந்துவிட்டதாக நினைக்கக்கூட விடமாட்டார்கள் போலிருக்கிறது.

மார்க்கெட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. பணம் சம்பாதிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை.. ஓரளவுக்கு நல்ல பொழுதுபோக்கு சினிமாவைத்தான் கொடுப்பேன் என்று நினைக்க மாட்டார்கள் போலிருக்கிறது..

ரெண்டு படம் பெயிலியர்ன்னு தெரிஞ்ச உடனேயே ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏத்திவிட்டுத்தான் நம்ம ஹீரோ பொஸிஸனை தக்க வைச்சுக்கணும்னுதான் முக்கால்வாசி ஹீரோக்களும் நினைக்குறாங்க.. இதற்கு சுந்தர்.சி-யும் விதிவிலக்கானவரில்லை போலும்..!



அடுத்தடுத்த தொடர் தோல்விகளின் உண்மையான காரணம் என்ன என்பதைப் பற்றியறியாமல் மசாலாவை தண்ணி மாதிரி கலந்து கொடுத்தா மக்கள் புது டேஸ்ட்டா இருக்குன்னு ஒரு கை பார்ப்பாங்கன்னு நினைச்சுட்டாரு..

எல்லாத்துலேயும் ஓவர் டோஸ்..!

கதை ரொம்ப சிம்பிள்.. அக்கா மேல கொள்ள பாசத்தோட திரியுற தம்பி.. சின்ன வயசுல விளையாடும்போது அக்கா தன்னோட பிரெண்ட்டை கீழே தள்ளிவிட பிரெண்டு செத்தது மாதிரி நடிச்சுத் தொலையறா.. இதைப் பார்த்து கொலைன்னு நினைச்ச அந்த சின்னப் பையன் அக்காவைக் காப்பாத்த நினைச்சு தான்தான் அந்தக் கொலையை செஞ்சேன்னு ஊருக்குள்ள சொல்லிருக்கான்னுட்டு மும்பைக்கு ஓடிர்றான்..

இருபத்தைஞ்சு வருஷம் கழிச்சு மும்பைல ஒரே நாள்ல ஒரே நேரத்துல செத்துப் போன மாதிரி நடிச்ச அக்காவோட பிரெண்ட்டை அடையாளம் கண்டுபிடிச்சு(திரைக்கதையோட வேகம் அப்படி..) அக்காவோட இன்னிக்கு நிலைமையை கேட்டவுடனேயே கொதிச்சுப் போய் ஊருக்கு ஓடி வர்றாரு..



அக்காவுக்கும், அவ ஹஸ்பெண்ட்டுக்கும் இடைல தகராறு. அக்காவை மாமன்காரன் துரத்திவிட்டுட்டான். ஊருக்குள்ளேயே நடமாடவிடக் கூடாதுன்னு சொல்லி விரட்டி விரட்டியடிக்கிறான். இதுனால தந்திரமாத்தான் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கணும்னு சொல்லிட்டு அக்கா வீட்டுக்காரர்கிட்ட அடியாள் மாதிரி வேலைக்கு சேர்ந்து பல ரகளையும் செஞ்சுட்டு இடைவேளைல “நான் அக்காவுக்கு தம்பி மாமா.. உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சுட்டுத்தான் மறுவேலை”ன்னு சவால் விடுறாரு..

சினிமா பாணில அதைக் கடைசில செஞ்சு முடிச்சாலும் எப்படி செய்யறாருன்றதுதான் இடைவேளைக்கப்புறமான கதை.. இதைச் சொல்ற விதம் இருக்கு பாருங்க.. சீரியல் தோத்துச்சு போங்க.. அப்படியொரு திரைக்கதை.

சத்யராஜ்ன்னு சொன்னாலே லொள்ளும், ஜொள்ளும் இருக்கும்.. இதுலேயும் இருக்கு.. ஆனா ரொம்ப ஓவரு.. சத்யராஜ் இடத்தைப் பிடிச்சுட்டாரு சுந்தர்.. அவரோட அறிமுகமே படம் எந்த லட்சணத்துல இருக்கப் போகுதுன்னு காட்டுது.

மாப்பிள்ளை கோலத்துல மண்டபத்துக்கு வர்றவரு ஆரத்தி எடுக்குற மாமியார்கிட்ட நக்கலா பேசிக்கிட்டு தட்டுல போட வேண்டிய ரூபாய் நோட்டை மாமியாரின் நெஞ்சில் குத்திவிட்டுப் போவதில் அதிர்ச்சியானது கணவராக நடித்த 'பட்டிமன்றப் புகழ்' ராஜா மட்டுமில்ல.. நானும்தான்.. இப்படியொரு காட்சியை நான் தெலுங்கு படங்களில்தான் பார்த்திருக்கேன். தமிழ் சினிமா கலாச்சாரத்திற்கு இது ரொம்பவே புதுசு..

இது மட்டுமா..? ஹேமமாலினியை பொண்ணு பார்க்கப் போற இடத்துல அவங்க அம்மா ஜெயரேகாவை(இந்த அம்மாவின் பூர்வீகம் பற்றி சினிமா வரலாற்றோடு சம்பந்தப்பட்ட நிஜக் கதை ஒன்று இருக்கிறது. யாராவது அடையாளம் கண்டு கொண்டு தெரிவித்தால் நான் அவருக்கு உடனடியாக சிஷ்யனாகி விடுகிறேன்) சைட் அடிக்கிறது.. அந்தம்மா கன்னத்தைக் கிள்ளிவிட்டுட்டுப் போறது.. 



அப்புறம் சந்தானத்தின் ஐடியாபடி பாத்ரூம்ல ஹேமமாலினியை பார்க்கப் போக.. அந்த நேரத்துல அவங்க அம்மா வந்து நிக்க.. மாப்பிள்ளையை பார்த்து மாமியார் அதிர்ச்சியாகி கீழ விழுகப் போக வருங்கால மாப்பிள்ளை.. வருங்கால மாமியாரைக் கட்டிப் பிடிக்க.. மாமனார் “என்ன சத்தம்”ன்னு வந்து கேட்க.. “மாப்பிள்ளை எப்படி கட்டிப் பிடிச்சாரு தெரியுமா? நீங்களும்தான் இருக்கீங்களே.. ஒரு நாளாவது அது மாதிரி கட்டிப் பிடிச்சிருப்பீங்களா?”ன்னு பொண்டாட்டி கேட்டுட்டுப் போக.. இதைக் கேட்டு மாமனார் சிரிச்சு.. “இது என் பரம்பரைப் பழக்கம்.. என் சின்ன வயசுல என் மாமியாரை நான் எப்படியெல்லாம் கட்டிப் பிடிச்சேன்”னு சொல்றாரு பாருங்க.. சத்தியமா இதுக்காக ஷக்தி சிதம்பரத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை தங்கத் தட்டுல வைச்சு நீட்டிரலாம்..

நகைச்சுவைக்கு என்றாலும்கூட இப்படியா வைப்பது..? ம்ஹூம்.. தமிழ்ச் சினிமா உருப்பட்டாப்புலதான்..

சத்யராஜ் அமைச்சரின் பினாமி.. பணத்துக்காக எதையும் செய்யக்கூடிய கேரக்டர்.. அவரிடம் வந்து அடிமையாகிறார் அண்ணன் சுந்தர். செய்ற தப்புக்கெல்லாம் ஒரு விளக்கம் வைச்சு நல்லாவே தப்பு பண்ணுங்கப்பா என்று அட்வைஸும் செய்கிறார்.

சரண்யாவுக்கும் அவருக்குமான போர்ஷன் மட்டும் கச்சிதமான வெட்டுப்புலி ஆட்டம் போல் கத்திரி போட்டு வெட்டியிருக்கிறார்கள். படம் முழுவதும் இடையிடையே பிளாஷ்பேக் காட்சிகளாக வருவதால் முழு கதையும் தெரியாமல் கடைசி வரையிலும் உட்கார வேண்டியிருக்கு..

ஹீரோயின் ஹேமமாலினி. இந்தப் படத்தில் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் 'மச்சான்ஸ்' புகழ் நமீதாதான். 'நான் அவன் இல்லை 'படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்த ஹீரோயின்களையெல்லாம் ஓரங்கட்டியிருந்த ஹேமமாலினியை பார்த்த மாத்திரத்தில் புக் செய்திருக்கிறார் ஷக்தி சிதம்பரம். அதே வேகத்தில் கொஞ்சம் நடிப்பதற்கும் வாய்ப்பு கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.



சுந்தர் பெண் பார்க்க வந்திருக்கும்போது ஜூஸ் டம்ளரை நீட்டியபடியே ஹேமா நிற்கும் கோணத்திற்கே தியேட்டரில் இருந்த 25 சொச்சம் பேரும் கை தட்டினார்கள்.. அம்மணியை உரித்து எடுத்திருக்கிறார் ஷக்தி. மாலத்தீவு கடலில் சுந்தருடன் போடுகின்ற ஆட்டத்திலும், அம்மணி பிகினி உடையில் ஓடி வருகிறதையும் பார்த்தால் ஒரு நல்ல ஹிட்டாகக்கூடிய படத்தில் ஹேமா இருந்தால் ஒரு ரவுண்ட் வர வாய்ப்புண்டு.

இடையிடையே ஒரே ஒரு பாடல் காட்சியில் எனதருமை தங்கத் தலைவி ஷகீலா தோன்றுகிறார். ஸ்கிரீன்ல பார்த்து எவ்ளோ நாளாச்சு..? கொஞ்சம் இளைச்சுட்ட மாதிரி தோணுது.. என்ன கவலையோ..? அவங்க இந்த விஷயத்துல ரிட்டையர்மெண்ட் ஆயிட்டதால, அவங்களை கவர்ச்சி காட்ட வைக்காம.. கிரணை கூட்டியாந்து ஆட விட்டிருக்காங்க.. 





‘பத்ரகாளி' படத்தோட ‘கேட்டேளா அங்கே.. பார்த்தேளா இங்கே' பாடலை ரீமிக்ஸ் செய்து கொடுமை செய்திருக்கிறார்கள். மொதல்ல இந்த ரீமிக்ஸுக்கு தடை போடணும்பா.. பாட்டையும் கெடுத்து, சீனையும் கெடுத்து எழுதினவருக்கும் மதிப்பில்லை.. இசையமைச்சவருக்கும் மருவாதை இல்லாம போகுது..

சுந்தருக்கு அழுக வேண்டிய சீனே இல்லைன்றதால அத்தனையையும் சரண்யாவே குத்தகைக்கு எடுத்துக்கிட்டாங்க. ச்சும்மாவே பதைபதைக்குற கேரக்டரு. இதுல புருஷன் தன்னை ஓட, ஓட விரட்டுறான்னு தெரிஞ்சும் அக்மார்க் தமிழச்சியைப் போல புருஷனோட சேர்றதுக்கு துடியாய் துடிக்கிற கேரக்டர்.. ம்ஹும்.. ஒரு தைரியமான தமிழச்சியைக்கூட தமிழ்ச் சினிமால பார்க்க முடியாது போலிருக்கு.. எல்லாரும் கண்ணகி பரம்பரையாவே இருக்காங்க..!

இவருக்காகவும் ஒரு ரீமிக்ஸ்.. கடலோரக் கவிதைகள்ல வரும் ‘அடி ஆத்தாடி' பாட்டு.. பாவம் பாரதிராஜா.. இதைப் பார்த்தாருன்னு என்ன நினைப்பாரு..? கவிதை மாதிரி எடுத்திருந்தாருப்பா இயக்குநர் இமயம்..





சந்தானம் ஹேமமாலினியோட முறைப் பையன்.. இன்னும் எத்தனை படத்துலதான் இப்படி முறைப் பையனாவே நடிச்சு ஓய்ஞ்சு போகப் போறாருன்னு தெரியலை. ஆனா படத்துல இவருக்குக் கொடுத்திருக்கிற ஓப்பனிங் பில்டப்பெல்லாம் இந்த அளவுக்குத் தேவையான்னு கேக்கத் தோணுது.. ஆனாலும் இவரும் இல்லைன்னா படத்துல உக்காந்திருக்கவே முடியாது. வசனத்தை பக்கம், பக்கமா பேசித் தள்ளுறாரு.. சிரிக்க முடியலைன்னாலும் பரவாயில்லை.. புன்னகைக்க முடியுது..

விஜய்யின் வேட்டைக்காரன் பட ரிலீஸுக்கு போயி தல அஜீத்தை வாரி விடுற சீனே போதும்.. “தல இருக்கிறவன்லாம் தலதான்டா.. எல்லாரும் ஒருத்தனை மட்டும் தலன்னு சொன்னா எப்படி?”ன்னு நியாயம் கேக்குறாரு.. தல வரட்டும். படத்தைப் பார்க்கட்டும். அப்புறம் சந்தானம் தல படத்துல இருப்பாரான்னு யோசிப்போம்..

முதல் பாதில ஏதோ ஹேமமாலினி புண்ணியத்துலேயும் சந்தானம் புண்ணியத்துலேயும் போனாலும் இடைவேளைக்கப்புறம் மாமனும், மச்சானும் போட்டி போட்டுக் கொண்டு இழுக்குற இழுப்புல கதை ஜவ்வா கிழியுது.. ஆனாலும் ச்சின்ன ச்சின்ன டிவிஸ்ட்டுகளை போட்டு இழுத்துப் பிடிக்க பார்த்தாலும் எந்திரிச்சு ஓடுறவங்களை நிறுத்த முடியலை.

படம் பார்க்க உக்காரும்போது இருந்த கூட்டம் படம் முடியும்போது இல்லை.. இப்படித்தான் நடக்கப் போகுதுன்னு ஷக்தி சிதம்பரத்திற்கு முன்னாடியே தெரியும் போல.. அதுதான் எண்ட் டைட்டில்ல டேக்கன் ஷாட்களை போட்டும், மச்சான்ஸ் நமீதாவை ஓரங்கட்டி ஒரு ஷாட்டுக்கு நிக்க வைச்சும் காட்டிருக்காரு.. ஆனாலும்.. ம்ஹூம்..

கவர்ச்சியில் ஓவர் டோஸ்.. முகம் சுழிக்க வைக்கும் சில காட்சிகள்.. ஹெவியான கதைக்கு லைட்டான திரைக்கதை.. உணர்ச்சியைக் கொட்ட வேண்டிய ஒரு கான்செப்ட்டை காமெடியாக்கியது. படத்தின் போஸ்டர்களிலேயே ஓவராக ஜொள்ளுவிட வைத்தது என்று பலவும் வெளியில் பரவ.. இது ஆண்களுக்கான திரைப்படம் என்று நினைக்க வைத்துவிட்டது போலும். நேற்று நான் பார்த்த காட்சியில் இரண்டே இரண்டு பெண்கள்தான் வந்திருந்தார்கள்.

இதே மாதிரி இன்னும் ரெண்டு படம் வந்தால் போதும்.. சத்யராஜூம், சுந்தரும் இருக்குற மார்க்கெட்டும் போய் வீட்ல உக்கார வேண்டியதுதான்..

புரிஞ்சுக்கிட்டா சரிதான்..

“அப்புறம் எதுக்குடா வெண்ணை.. இப்படி நடுராத்தில ஏழு பக்கத்துக்கு என்னத்தையோ எழுதி வைச்சு எங்க உயிரை எடுக்குற?”ன்னு கேக்குறீங்களா..?

அதான் தலைப்புலேயே ‘ஓம் நமஹ'ன்னு மூணு பேருக்கு அர்ச்சனை செஞ்சிருக்கனே.. புரியலையா..? அதுக்குத்தான்.. ஹி.. ஹி.. ஹி..

லொள்ளும், ஜொள்ளும் பிடிச்சவங்க போய்க்குங்க..! 

கோரிப்பாளையம் - திரை விமர்சனம்

10-05-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சில நேரங்களில் சில திரைப்படங்களின் தாக்கத்தினாலோ, இயக்குநரின் மேல் இருக்கும் நம்பிக்கையினாலோ படத்திற்குப் போய்த் தொலைந்தால் பெரும் ஏமாற்றம் நம்மில் பலருக்கும் கிடைத்திருக்கும்..

அதேதான்.. மாயாண்டி குடும்பத்தார் படத்தினையும், இயக்குநர் ராசுமதுரவனையும் நம்பித்தான் இப்படத்திற்குச் சென்றேன்.. டிரவுசர் கிழிந்துவிட்டது.

கத்தியெடுத்தவன் கத்தியாலேயே சாவான் என்பதை 501-வது முறையாக இதில் சொல்லியிருக்கிறார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது 1001-வது முறையாக நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.


 
நான்கு இளைஞர்கள். இந்த இளைஞர்களுடன் சேர்ந்து கஞ்சா, குடி, புகை, பொண்ணுகள் என்று கூத்தடித்து, மாமா வேலை பார்க்கும் இயக்குநர் சிங்கப்புலி. இடையில் பாசத்தைக் காட்டும் அல்லது கொட்டும் சென்டிமெண்ட்டுக்காக மயில்சாமி.. இதுதான் இந்த கோரிப்பாளையத்து கேங்கின் எண்ணிக்கை.

ஒவ்வொரு இளைஞர்களுக்கு பின்பும் சோகமயமான ஒரு பின்னணி கதை உண்டு. படிக்கின்ற வயதிலேயே அப்பன்காரன் சிகரெட், மதுவை வாங்கி வரச் சொல்லிப் பழக்கியதால் அதில் ஆர்வப்பட்டு திசை திரும்பிய ஹரீஷ், அம்மா தன்னைவிட வயது குறைந்த பக்கத்து வீட்டுப் பையனுடன் ஓடிப் போக.. இதனால் அவனது தந்தை தற்கொலை செய்து கொள்ள.. அனாதையான இளைஞன்.. பிறந்த உடனேயே குப்பைத்தொட்டிக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்ட மற்றொரு இளைஞன், இவர்களுக்கு தண்ணிக்கும், தம்முக்கும், நிரோத் பாக்கெட்டுக்கும் காசு கொடுக்கும் துட்டுள்ள ஒரு நண்பன் என்ற இந்தக் கூத்தாடிகளின் கதையைத்தான் விலாவாரியாக எடுத்துத் துவைத்திருக்கிறார்கள்.

சுப்ரமணியபுரம், ரேணிகுண்டா, மாத்தியோசி என்று இதற்கு முந்தைய சமீபத்திய அடிதடி, வெட்டுக்குத்து திரைப்படங்களில் இருந்த அதே காரணங்கள்தான் இங்கேயும்.. வாழ்க்கையின் சுற்றுச்சூழல்தான் தங்களை கத்தியெடுக்க வைத்ததாக இந்த ரவுடிகளான இளைஞர்கள் திருப்பித் திருப்பி சினிமாக்காரர்கள் மூலம் முலாம் பூசி வருகிறார்கள்.

முதல் காட்சிக்கு அடித்துப் பிடித்து வந்து உட்கார்ந்து விசிலடித்து, ஹீரோ ஆடும்போது இவர்களும் எழுந்து ஆடி, காதலுக்கு ஆதரவாகப் பேசும்போது கை தட்டி ஆரவாரம் செய்து, காதலியைத் திட்டும்போது தங்களுக்கே நேர்ந்ததுபோல எண்ணி பீல் செய்து உருகுவது என்று சாதாரணப்பட்ட இளைஞர் கூட்டத்தையே குறி வைத்து எடுத்திருக்கிறார்கள்.

மதுரை வட்டார மொழி என்பது கொஞ்சம் சிக்கலானாது.. மானாமதுரையைத் தாண்டிவிட்டால் அங்கே கொஞ்சம் மாறுபடும்.. இந்தப் பக்கம் கோவில்பட்டியைத் தாண்டிவிட்டால் நெல்லைத் தமிழ் கலந்தடிக்கும்.. திண்டுக்கல் பகுதியைத் தொட்டுவிட்டால் சாயுபுக்கள் திரித்த தமிழ் கலங்கடிக்கும். ஆனாலும் மதுரைத் தமிழை விடாமல் கொத்து புரோட்டா போட்டு சலிக்கச் சலிக்கக் கொடுத்திருக்கிறார்கள்.

படத்தில் மூன்று புரட்சிகள் உண்டு. ஒரு புதுமையான அறிமுகமும் உண்டு. காதலனும், காதலியும் சந்திப்பதை எத்தனையோ திரைப்படங்களில் பார்த்துத் தொலைந்திருக்கலாம். ஆனால் இதில் மாதிரி ஒரு வித்தியாசத்தை நீங்கள் எங்கேயும் பார்த்திருக்க முடியாது.. கதாநாயகிகளில் ஒருவரான பூங்கொடி பொண்ணு வளர்த்து வரும் நாய் வைகையாற்றுப் பாலத்தின் கீழ் படுத்துறங்கும் ராமகிருஷ்ணனின் அருகில் விடாப்பிடியாக ஓடி வந்து அவர் முகத்தில் சிறுநீர் கழிக்கிறது. இரண்டு முறைகள்.. இப்படித்தான் பூங்கொடிக்கும், ராமகிருஷ்ணனுக்கும் இடையே லவ் டிரேக் துவங்குகிறது.


 
புரட்சிகளில் முதல் புரட்சி.. திருமணம் செய்த அன்றைய இரவிலேயே மனைவி தனது குரூப்பில் இருக்கும் காசுள்ள பார்ட்டியைத்தான் விரும்பியிருப்பதை கேள்விப்பட்டதும். அந்த அர்த்தராத்திரியிலேயே நண்பர்களிடத்தில் மனைவியை இழுத்து வந்து, காலையில் தான் கட்டிய தாலியை டக்கென்று அறுத்தெறிந்து அதனை காதலனின் கையில் கொடுத்து “கட்டுறா தாலியை..” என்று தொண்டை புடைக்க கத்தி கட்ட வைத்து, அவர்களை அனுப்பி வைப்பது.. தாலில்ல ஒண்ணுமே இல்லைன்னு நினைக்குறவங்களுக்கு இது ஒண்ணுமே இல்லை. தாலிதான் எல்லாமேன்னு நினைக்குற சினிமாக்காரங்களுக்கு இது நிச்சயம் புரட்சிதான்..


 
காதலனின் உடலுக்கு வயிற்றில் கருவுடன் இருக்கும் பெண்ணே, தீ மூட்டி வைத்துவிட்டுக் கதறுவது இரண்டாவது புரட்சி..

மூன்றாவது புரட்சி தனக்கு ஒரு பாதையைக் காட்டிவிட்டு தங்களுக்காக உயிரைவிட்ட ஹரீஸின் உடலுக்கு குடும்பத்தோடு சேர்ந்து அதே பெண் தீ மூட்டுவது.. இப்படி படம் முழுக்க சாவுகளும், எழவுகளும் நிறையவே இருக்கின்றன.

கடன் கொடுத்த காசு வரவில்லையென்று வீட்டில் இருந்த கைக்குழந்தையை பிடுங்கிச் செல்ல முயலும் சின்ன தாதா நந்தா பெரியசாமியை இந்த நாலு பேரும் நாலு சாத்து சாத்தி அனுப்பி வைக்க.. அவர் தனது அண்ணான பெரிய தாதா ராஜ்கபூரிடம் போய் அழுகிறார். ராஜ்கபூர் பசங்கள் இருக்குமிடத்திற்கே வந்து அவர்களது செவிட்டில் நாலு அறைவிட.. கோபத்தில் ஹரீஸ் மயில்சாமி சும்மாவே தன் இடுப்பில் வைத்திருக்கும் கத்தியை எடுத்து நந்தாவின் வயிற்றில் ஒரு சொருகு சொருகும் காட்சியில் பின்னணி இசையே தேவையில்லை.. என் வயிற்றில் குத்தியது போல் இருந்தது..

இவர்களைச் சமாளிக்க ராஜ்கபூர் திட்டம்போடும்போது சினிமா திரைக்கதையால் பின்பு வசமாக மாட்டுகிறார்கள். இடையில் காதல் காட்சிகளும் வேணும்ல்ல.. அதுக்காக காலேஜுக்கு போகும் இன்னொரு ஹீரோயின் பூங்கொடி ராமகிருஷ்ணனுக்கு கண் சாடை காட்ட.. இந்தப் பக்கம் பத்திக் கொள்கிறது காதல்.. அதென்னமோ ரவுடி மாதிரி தோற்றத்தில் இருப்பவர்களைப் பார்த்தவுடனேயே இன்றைய பாவாடை, தாவணிகளுக்கு லவ் பொங்கிக் கொண்டு வருவதாக சினிமா சூத்திரம் சொல்கிறது.


 
ஹரீஸுக்கும் அவன் வீட்டுக்கும் இடையில் முட்டல் மோதல்.. அப்பாவுடன் சண்டை.. “நீ ஒழுங்கா வளர்த்திருந்தீன்னா நான் இந்த நிலைமைக்கு வந்திருப்பனா?” என்று அவ்வப்போது அப்பாவை திட்டுவது.. எதற்கெடுத்தாலும் உச்சஸ்தாயில் கத்தி, கத்தி காது கிழிந்துவிட்டது.. கோபக்காரனாக காட்டுவதற்கு கத்திக் கொண்டேதான் இருக்க வேண்டுமா..?

இடையிடையே சிங்கம்புலியின் காம நெடியான வர்ணனையுடன் கூடிய காட்சிகள் வேறு. இவர் பார்க்கின்ற பெண்கள் அனைவரின் முந்தானைகளும் விலகித்தான் இருக்கின்றன. இதற்காகவே இவர் பேசுகின்ற பேச்சுக்கள் டபிள், டிரபுள் எல்லாத்தையும் தாண்டி ஜெட் வேகத்தில் செல்கிறது. ‘ஆப்பக்காரி' பாடலுக்கு தியேட்டரில் சுதி ஏற்றிய ஒரு கோஷ்டியே எழுந்து ஆடியது..

 
கஞ்சா இழுப்பது, சாதா ‘தம்' அடிப்பது, ‘தம்' புகையை டிஸைன், டிஸைனாக வெளியில் விடுவது, சாதாரணமாக தண்ணியடிப்பது, தண்ணியை இளநீரில் மிக்ஸ் செய்து குடிப்பது, தண்ணீரை அளவாக கலந்து சரக்கடிப்பது, நரிக்குறவப் பெண்ணை பார்த்த மாத்திரத்தில் டூரிங் தியேட்டருக்கு தள்ளிக் கொண்டு போவது.. பான்பராக் பாக்கெட்டுகளைப் போல சரம், சரமாகத் தொங்கும் நிரோத் பாக்கெட்டுக்களைக் காட்டுவது.. என்று விதவிதமான ஸ்டைலில் இவர்களெல்லாம் ரவுடிகள் என்பதை நம் மனதில் பதிய வைத்திருப்பதில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர்.

இதில் இன்னொரு பேமிலியும் இடையில் நுழைகிறது. கல்குவாரியை பார்த்துக் கொண்டே பெண் பித்தனாகத் தெரியும் ரவி மரியா, அவரது அண்ணன், அவர்களது அப்பா அலெக்ஸ்.. இந்தக் குடும்பத்தில் ஒரு தங்கை.. இந்தத் தங்கை யதேச்சையாக இந்த நாலு பசங்களின் அருகிலேயே நிற்பதுபோல் தெரிய வர.. ராஜ்கபூர் ரவி மரியாவை உசுப்பி விடுகிறார்.. அந்தப் பெண் இவர்களில் ஒருவரை காதலிப்பதாக அந்த வீட்டார் நினைக்க.. அந்தப் பெண்ணுக்கு வீடு சிறைவாசமாகிறது.

இடையில் ராமகிருஷ்ணன், பூங்கொடியை பார்க்க அவள் வீட்டிற்கு வருகிறான். எப்போதுமே தான் அனாதை என்றே நினைத்துக் கொண்டிருந்தவனை டைனிங் டேபிளுக்கு அழைத்து வந்து அமர வைத்து சாப்பிடச் சொன்னதில் உணர்ச்சி பொங்கி கண்களில் கண்ணீர் கரகரவென வடிகிறது.. பூங்கொடி உணர்ச்சிவசப்பட்டு காதலனை கட்டிப் பிடிக்க மன்மதன் தீயைப் பற்ற வைத்துவிடுகிறான். அவர்களிடையே உடலுறவும் நிகழ்ந்துவிடுகிறது.

தாங்கள் கஷ்டப்பட்டு கல்யாணம் செய்து வைக்க இந்த மசிராண்டிகள் பெரிய மனுஷனத்தனமா தாலியை அறுத்துப்புட்டு காதலனோட சேர்த்து வைச்சுட்டாங்களே என்ற கோபத்தில் ஹரீஸை வீட்டுக்கு வராதே என்று ஒட்டு மொத்தக் குடும்பமும் சொல்கிறார்கள். ஆனாலும் ஹரீஸ் வீட்டுக்குப் போய் இல்லாத ரகளையையெல்லாம் செய்து, ஒரு டிராமாவை செட்டப் செய்து தனது அண்ணனை வீட்டைவிட்டு வெளியே அனுப்புகிறார்.

பின்பு அண்ணனின் புது வீட்டுக்குப் போய் அண்ணியின் காலில் விழுந்து தன்னைப் பார்த்து அவளுடைய பிள்ளைகளும் கெட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காகவே தான் அவர்களை வெளியேற்றியதாக ஒரு கண்ணீர் மன்னிப்பை விட.. படத்தில் இது மாதிரியான பல ட்விஸ்ட்டுகள் நிஜமாகவே நன்றாகத்தான் இருக்கின்றன.

ரவி மரியாவின் வீட்டுக்குள் திருடப் போய் முடியாமல் தப்பிக்க.. தங்களது தங்கையை பார்க்கத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று தவறாக நினைத்து ரவி, தங்கையை உடனேயே கொலை செய்ய.. மறுநாள் நடுரோட்டில் அலெக்ஸ் அவர்களை பார்த்து மிரட்ட.. பதிலுக்கு இவர்கள் அவரை தள்ளிவிட கல்லில் அடிபட்டு பொசுக்கென்று அலெக்ஸ் உயிரை விட்டுவிடுகிறார்.

இதைப் பார்க்கும் ஒரு மதுரைக்கார கருங்காலி ரவி மரியா குரூப்பிடம் இந்த கோரிப்பாளையம் ட்ரூப்பை போட்டுக் கொடுக்க.. பணத்தைக் கொடுத்தால் வேலையைக் கச்சிதமா செய்யும் பாண்டி என்னும் ஒரு குட்டி தாதாவின் கையில் இந்த வேலையை ஒப்படைக்கிறார்கள் ரவி மரியா குரூப். பாண்டி குரூப் ஒரு பக்கம்.. ரவி மரியா குரூப் ஒரு பக்கம் அரிவாளோடு இவர்களைத் தேடி அலைய தப்பிக்கிறார்களா இல்லையா என்பதுதான் மீதிக் கதையாம்.

பல வன்முறைகள், பல கொலைகள் என்று தூங்கா நகரமான மதுரை மாநகரத்தை இப்படி தொடர்ந்து அடையாளப்படுத்துவதில் யாருக்கு என்ன வெற்றி கிடைத்துவிடப் போகிறது என்று தெரியவில்லை. மருந்துக்குக்கூட போலீஸ் என்ற பார்ட்டி மதுரைக்குள் என்ன செய்கிறார்கள் என்பதைக் காட்டவேயில்லை.

காசுக்காக கொலை செய்வதையே தொழிலாக வைத்திருக்கும் பாண்டி கோஷ்டி ஒரு கொலையை செய்துவிட்டு அவர்கள் தாங்களாகவே போலீஸிடம் மாட்டுவதாக ஒரு காட்சியை மட்டும் வைத்து காவல்துறையினர் மதுரையில் இருப்பதாகக் காட்டி முடித்துவிட்டார்கள். போதாக்குறைக்கு அஞ்சாநெஞ்சர் அழகிரியின் புகைப்படம் ஒட்டிய போஸ்டரைக் காட்டி டிவி சேனல் ரைட்ஸூக்கு அடிகோலியிருக்கிறார்கள். 

அலெக்ஸ் இவர்களை வீட்டில் பார்க்கவே இல்லை. ஆனாலும் இவர்களை ரோட்டில் பார்த்தவுடன் காரை நிறுத்தி பார்ப்பதுபோல் காட்சி வைத்திருக்கிறார்கள்.

ஜெகனின் கையை ரவி மரியாவின் ஆட்கள் துண்டித்துவிட அதன் பின் எத்தனை நாட்கள் அவர் மருத்துவமனையில் இருந்தார்..? அந்த போலீஸ் கேஸ் என்னாச்சு..? கையே துண்டாகிப் போச்சுன்னாலும் ஏதாவது தனியார் கிளினிக்ல போய் வைத்தியம் செய்ய முடியுமான்னு இயக்குநர்கிட்ட யாராவது கேட்டுச் சொல்லுங்கப்பா..

கடைசியாக ரவி மரியாவை கொலை செய்ய குழி தோண்டச் சொல்லி ஹரீஸ் கத்த நிமிடத்தில் தனது ஒற்றைக் கையாலேயே குழியைத் தோண்டி பக்குமாக வைத்திருக்கும் ஜெகன்நாத்தின் சாமர்த்தியத்தை நாம் என்னவென்று சொல்ல..? ரவி மரியாவின் ஆறடி உயரத்தைவிட கம்மியான அந்தக் குழிக்குள் போட்டுத் தள்ளினால் தப்பிக்க முடியாது என்று இயக்குநர் அடித்துச் சொல்லிவிட்டார். நம்பிவிடுங்கள்..

ஆப்பக்காரியுடன் பேசும் போதெல்லாம் வார்த்தையாலேயே சல்லாபம்.. தான் பெண் பார்க்கப் போன இடத்தில் பெண்ணை விட்டுவிட்டு பெண்ணின் அம்மாவைக் கட்டிப் பிடித்து உம்மா கொடுத்த கதையை சிங்கப்புலி சொல்லும்போது அடடா.. மதுரைக்கார பயலுவ எத்தனை வெள்ளந்தியான மனஷனுங்கன்னு இப்பத்தான் தெரியுது..

இதுனால அந்தம்மாவை அவ புருஷன் துரத்திவிட.. அந்தம்மா மதுரை மாநகருக்கே டோட்டல் பிரார்த்தல் கிளப் தலைவியாக மாறிர்றாங்கன்னு ஒரு கதையைத் திருப்பிப் போட்டு சங்கு ஊதிருக்காரு சிங்கம்புலி.. துவக்கக் காட்சியில் கை, கால்களை தண்ணீரில் நனைத்துக் கொண்டேயிருக்கும் ஒரு கேரக்டரை பார்த்தவுடன் சரி காமெடி.. நல்லா இருக்கும்போல என்று நினைத்தேன். அது இவ்ளோ நல்லாயிருக்கும் என்று நினைக்கவில்லை..


“சிறுக்கி வாடி சிட்டு.. நீ சிரிச்சுப்புட்டா கழன்றிடுமே நட்டு” என்ற அபாரமான கவிதை வரிகளுடன் கூடிய பாடல் காட்சியும், “ஓட்டை ஒடிசல் ஈயம் பித்தளை பேரிச்சம்பழம், என் உசுர பிழியும் பொண்ணோ ஆரஞ்சு பழம்” என்ற தத்துவார்த்த முத்துக்களை உதிர்க்கும் பாடல் காட்சியும் பி அண்ட் சி ரசிகர்களைக் குறி வைத்தே எடுக்கப்பட்ட படம் என்பதைத்தான் காட்டுகிறது.

படத்தில் கொஞ்சம் மூச்சுவிட வேண்டிய விஷயம்.. ரொம்ப ரத்தம் சிந்தவில்லை.. அளவோட எடுத்திருக்காங்க..

கோரிப்பாளையம் மசூதி தெருவின் பெட்டிக் கடை வாசலில் கடைசியாக ஹரீஸ் கொல்லப்படும் காட்சி மட்டுமே மனதில் இறுக்கமாக அமர்ந்தது. தனது அம்மாவிற்கு இரண்டு நிமிடங்கள் அழுதுவிட்டு சாவுக்குத் தயாராகும் அந்த ஜோர் அபாரம்..

இந்தக் கொலையை செய்துவிட்டு வீடு திரும்பும் விக்ராந்திற்கு உடனடியாக கிடைக்கின்ற பிரதிபலனாக அவனது தம்பி விபத்தில் மரணமடைந்து கத்தியைத் தூக்கியெறியும் காட்சியையும் காட்டிவிட.. இதன் தாக்கம் அதிகமாக நிற்கவில்லை. இப்படி போதனைகளின் தாக்கமும் படத்தில் அதிகமாக இருக்க.. ஒரு பக்கச் சார்பாகவே படம் முடிந்துவிட்டது.

சுவையான சின்னச் சின்னக் கதைகள் படம் முழுவதும் விரவி கிடக்கின்றன. அதன் சுவாரஸ்யங்களை படத்தின் காமத்தனமான வசனங்களும், அர்த்தமில்லாத அளவில்லாத வசனங்களுடன் கூடிய நகைச்சுவைக் காட்சிகளும். விரசமான பாடல் காட்சிகளும் படத்திற்கு பிரேக்கடிப்பது போல எனக்குத் தோன்றுகிறது.

மதுரை ரயில்வே ஸ்டேஷன், தங்கரீகல் தியேட்டர், மாணிக்க விநாயகர் தியேட்டர், தமுக்கம் மைதானம், அரசரடி மைதானம், மதுரை மத்திய சிறைச்சாலை, கோரிப்பாளையம் வைகை ஆற்றுப் பாலம், ஊத்தங்குடி பாலம். யானைமலை ஒத்தக்கடை, மேலூர் கல்குவாரிகள், தெப்பக்குளம், மீனாட்சியம்மன் கோவில், அழகர்மலை கோவில், பாண்டி கோவில் என்று மதுரையையும், அதன் சுற்றுப்புறத்தையும் ரொம்ப நாள் கழித்து பார்த்த திருப்தி மட்டுமே கிடைத்தது.

பார்க்க நேரமிருப்பவர்கள் செல்லலாம்.. ஆனால் தனியாக மட்டும்..

புகைப்படங்கள் உதவி : www.indiaglitz.com