22-03-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
அசத்தியிருக்கிறார் கோடி ராமகிருஷ்ணா.. இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.. வெற்றி பெறக்கூடிய திரைப்படம்தான்..
தியேட்டரில் நுழைந்த உடனேயே மூளையைக் கழற்றி மூலையில் போட்டுவிட்டு பின்புதான் அமர வேண்டும். நடக்க முடியாத கதையை நடந்த கதைபோல் காட்டி அசர வைத்திருக்கிறார் இயக்குநர்.
அம்புலிமாமா, ரத்னபாலா கதைதான்.. ஆனால் எடுத்தவிதம்தான் நம்முடைய தொழில் நுட்ப அறிவை பறை சாற்றுகிறது.
அருந்ததி.. கந்தர்வக்கோட்டை என்னும் குட்டி சமஸ்தானக் குடும்பத்தில் ஒரே பெண் வாரிசு. அந்த சமஸ்தானத்தில் மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் அரசாண்ட அருந்ததியே, இப்போது பேத்தியாக பிறந்திருக்கிறாள். அவதார நோக்கம் அப்போது முடிக்காத கதையை இப்போது முடிப்பதற்காக..!
சொந்த அக்கா கணவனான பசுபதியை அவன் செய்த அட்டூழியங்களுக்காக தண்டிக்கிறாள் அருந்ததி. ஊரைவிட்டே துரத்தியடிக்கிறாள். நார், நாராக பிய்த்து எடுக்கப்பட்ட நிலையில் காட்டிற்குள் வீசப்படும் பசுபதி அங்கே நர மாமிசம் சாப்பிடும் அகோரிகளின் கண்களில் படுகிறான். அவர்கள் அவனைக் காப்பாற்றி உயிர் கொடுத்து, ஊன் கொடுத்து, ஊட்டச் சத்துக் கொடுத்து, மந்திர, தந்திரம் கற்றுக் கொடுத்து கை தேர்ந்த வில்லனாக உருவாக்கி அனுப்புகிறார்கள்.
ஏழாண்டு காலத்திற்குப் பின் தனது மாமனாரின் அரண்மனைக்குள் நுழையும் பசுபதி அன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் அருந்ததியின் திருமணத்தில் கொலை விளையாட்டு நடத்துகிறான். மாமனாரை படுகொலை செய்கிறான். அருந்ததியை தான் இப்போதே அடைய வேண்டும் என்கிறான். அவன் விருப்பப்படியே நடந்து கொள்ளும் அருந்ததி தந்திரமாக அவனைத் தாக்கி படுக்க வைக்கிறாள். அந்த நிலையிலேயே அவனைச் சுற்றிலும் கல்சுவர் எழுப்பி உயிரோடு சமாதியாக்கிவிடுகிறாள்.
அத்தோடு அந்த அரண்மனையை அனைவரும் தலை முழுகிவிட்டு போய்விட.. இப்போது பேத்தி அருந்ததி அந்த ஊருக்கு வரும்போதுதான் கதை துவங்குகிறது. அவளை பசுபதியே வரவழைக்கிறான். அவள் வந்த பின்பு அவளையும், அவள் குடும்பத்தையும் அழிப்பேன் என்று சபதமெடுத்த பசுபதி செய்து முடித்தானா? இல்லையா..? என்பதைத்தான் வழக்கமான வில்லன்-ஹீரோயின் கதை போல் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர்.
திரைப்படத்துறையில் கிடைக்கும் அனைத்துத் தொழில் நுட்ப வசதிகளையும் இதில் பயன்படுத்திவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.
முதல் பாராட்டு படத்தின் கலை இயக்குநருக்கு.. படத்தின் ரிச்னெஸ் காட்சிக்கு காட்சி இழையாடுகிறது.. அவ்வளவு அழகான செட் அந்த அரண்மனை.. பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்.
அடுத்தது அனுஷ்கா.. அம்மணி தன்னுடைய கேரியர் முழுவதிலும் நடிக்க வேண்டியதை இந்த ஒரு படத்திலேயே முடித்துவிட்டார் என்று உறுதியாகச் சொல்லலாம்.. நான் ஜெமினி டிவியில் பார்த்த பல பாடல் காட்சிகளில் கடற்கரையோரமாக தாவணியை கழட்டிவீசிவிட்டு காத்து வாங்கிக் கொண்டிருந்தார். 4 நிமிட பாடல் காட்சியில் மூன்றாவது நிமிடத்தில் கிடைத்த பத்து செகண்ட் குளோஸப்பில்தான் அது அனுஷ்கா என்பதே தெரிந்தது.
இடுப்பு சுழிக்கிக் கொள்ளுமளவுக்கு ஆட்டம் ஆடியிருந்த அம்மணியா இப்படி..? ஆச்சரியமாக இருக்கிறது. இயக்குநர்கள் மிகச் சரியானவராக அமைந்தால் திறமை நிச்சயம் வெளிப்படும் என்பார்கள். இதில் கோடிராமகிருஷ்ணாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.. இந்த அம்மணி விஜய்யுடனும், அஜீத்திடனும் நடிக்கப் போகிறாராம்.. பாவம்.. நமது தமிழ் ரசிகர்கள்..!
நமது இயக்குநர்கள் இவர் போன்ற இளமை ததும்பும் நடிகையரிடம் வைக்கத் தயங்கும் குளோஸப் காட்சிகள்தான் இந்தப் படத்தில் அதிகம். கோபத்தின் மூச்சுக் காற்றில் அனுஷ்காவின் மூக்குத்தி நகர்வதைக்கூட துல்லியமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். முதல் பாடல் காட்சியின் இறுதியில் அனுஷ்காவின் பின்புறமிருந்து இடுப்புப் பக்கத்திற்கு கேமிரா உயர்ந்து வந்து நிற்பது என்ன ஒரு ஷாட்..?!
மேக்கப்பே இல்லாமல் காட்சியளிக்கும் பேத்தி அருந்ததியின் நடிப்பைவிட இறுதியில் பாட்டி அருந்ததியே வெறி பிடிக்க வைக்கிறார். இதற்கு மிகப் பெரும் உதவிகரம் ஒளிப்பதிவாளர்.. அரண்மனைக் காட்சிகளில் ஸ்கிரீன் முழுவதுமே மிக அழகாக இருக்கின்றன..
கிராபிக்ஸ் காட்சிகளும், மேக்கப்பும், இசையும்தான் படம் திகில் படம் என்பதை அவ்வப்போது காண்பித்துக் கொண்டேயிருக்கின்றன. வில்லனின் மோப்பம் பிடிக்கும் காட்சியை இரண்டு இடங்களில் பெண் கதாபாத்திரங்கள் மூலமாகச் செய்யும்போது அதிர்கிறது பின்னணி இசை.. அந்த கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளில் டெக்னிக்கல் கொடி கட்டிப் பறந்திருக்கிறது.. ஆக்ஷன் படங்களில் டைம்லேப் மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பார்கள். இதில் கச்சிதமாகவே உள்ளது.
பேயோட்டுபவராக வரும் சாயாஜி ஷிண்டேவுக்கு மிகப் பொருத்தமான வேடம்தான்.. பொதுவாகவே தெலுங்குக்காரர்களுக்கு வில்லன்கள் என்றாலே கர்ஜனை குரல்தான் முக்கியம் என்பார்கள். சாயாஜி அறிமுகக் காட்சியில் இருக்கும் ஸ்பீட் பதைபதைக்க வைக்கிறது..
படத்தொகுப்பாளரின் கட்டிங் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய வரம்.. காட்சிகள் அடுத்தடுத்து அபரிமிதமான இசையமைப்புடனும், ஒளிப்பதிவுடனும் வந்திருக்க.. வில்லன் முகம் மறைத்து பின் வந்து பின் மறைத்து நிமிடத்தில் மாறுகின்றபோதெல்லாம் ஒரு நொடிகூட ஜெர்க் இல்லை.. நச்சென்று இருக்கிறது..
மனோரமாதான் பாட்டி அருந்ததியின் கதையை நமக்குச் சொல்பவர். மனுஷிக்கு எப்பவுமே கண்களில் ஒரு துளி கண்ணீர் திரண்டு நிற்கும். இந்தப் படத்தில் அதற்குத்தான் வேலை அதிகம்.
அடு்த்தது என்ன..? அடுத்தது என்ன..? என்று மிக ஆர்வத்துடன் நகத்தைக் கடிக்க வைத்துவி்ட்டார்கள். லாஜிக் பார்க்கவே முடியாத திரைப்படம் என்றாலும், திரைக்கதை அசுர வேகத்தில் செல்வதால் எதையும் யோசிக்கவே முடியவில்லை..
கல்சுவருக்குள் படுத்துக் கொண்டே அருந்ததியின் தாத்தாவை வழுக்கி விழுக வைக்கவும், அருந்ததியிடம் அவனது வருங்காலக் கணவன் குரலில் பேசவும் முடியும் வில்லன் பசுபதியால் அந்தச் சுவரை உடைக்க முடியவில்லை என்கிற லாஜிக் இப்போதுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் அதற்கும் ஒரு சாஸ்திர சம்பிரதாயக் காரணங்களைச் சொல்லியிருக்கிறார்கள். சுவர் முழுவதும் மந்திரங்களை தட்டில் எழுதி பொருத்தி வைத்திருக்கிறார்கள். அவனால் தொட முடியாது என்று..! கோடிராமகிருஷ்ணா என்ன கொக்கா..? அம்மன் படம் பார்க்க வந்தவர்களை, தியேட்டரிலேயே அம்மனை வரவழைத்து ஆட வைத்தவராச்சே..
பாடல்களில் முதல் பாடல்தான் ஏதோ புரிந்தது.. தமிழுக்கேற்றாற்போல் வாலி எழுதியிருக்கிறார். பசுபதியின் மிரட்டலின்போது பாட்டி அருந்ததி போடும் பாடல் 'காதல் ஓவியம்' படத்தின் 'சங்கீத ஜாதிமுல்லை..' பாடலின் சாயலை ஒத்திருந்தது.. பின்னணி இசை அமர்க்களம்.. அவ்வப்போது பசுபதியும், அருந்ததியும் அவரவர் குரல்களில் பேயாட்டம் ஆடும்போது ஒத்து ஊதுவதை நன்றாகச் செய்துள்ளது இசை.
பசுபதியின் அம்மாவாக நடித்திருக்கும் சுபாஷினியின் அழகான கண்களில் கருவிழிகள் மட்டும் நட்ட நடுவில் உருள்வது பார்க்க பயங்கரமாக உள்ளது. சரியானப் பொருத்தம்.
மாயாஜாலம், மேஜிக், மந்திரம், தந்திரம் என்ற அலப்பறையோடு நிமிடத்துக்கொருமுறை விளம்பரப்படுத்திவிட்டதால் படத்தின் ஓப்பனிங் அபாரம் என்கிறார்கள். படத்தின் நிலை தெரியாமல் பலரும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்கள்.
ஆனால் படத்திற்கு 'ஏ' சர்பிடிகேட் கொடுத்துத் தொலைத்துவிட்டதால் டிக்கெட் கவுண்ட்டரிலேயே குழந்தைகளுடன் வந்தவர்களை திருப்பியனுப்பிவிட்டார்கள். ஆனால் தியேட்டருக்கு வெளியே பிளாக்கில் டிக்கெட் வாங்கி வந்தவர்களை அனுப்ப முடியவில்லை.
அப்படி என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு வாண்டு, பாதிப் படத்திலேயே, படத்தின் வேகத்தில் பயந்து போய் அப்பாவுடன் ஒட்டிக் கொண்டுவிட்டது. அம்மாவும், அப்பாவும் எவ்வளவோ தாஜா செய்தும் ஸ்கிரீன் பக்கம் முகத்தைக் காட்டவே மறுத்துவிட்டது. இது போன்ற திரைப்படங்களுக்கு குழந்தைகளை அழைத்து வரவேகூடாது.
கதையின் அடிப்படையே பெண் மோகம் என்பதால் அதனை நிரூபிப்பதற்காக இருக்கும் ஒரு சில காட்சிகள் பெரியவர்களையே நெளியத்தான் வைக்கின்றன. ஆனால் படத்தின் உயிரோட்டமான இடங்கள் இவைகள் என்பதால் மறுக்க முடியவில்லை..
இத்திரைப்படம் தெலுங்கில் பட்டையைக் கிளப்பியிருக்கிறது என்கிறார்கள். இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.. ஜெயிக்காமல் போனால்தான் ஆச்சரியமாக இருந்திருக்கும்..
திரைப்படங்களையே வித்தை காட்டுதல் என்றுதான் சிலர் சொல்வார்கள். அதற்கு மிகச் சிறப்பான உதாரணமாக இத்திரைப்படத்தைச் சொல்லலாம்.
வயதுக்கு வந்தவர்கள் மட்டும் சென்று பார்க்கலாம்..!
படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com