உப்பு கருவாடு - சினிமா விமர்சனம்

28-11-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘அழகியே தீயே’, ‘பொன்னியின் செல்வன்’, ‘மொழி’, ‘அபியும் நானும்’, ‘பயணம்’, ‘கெளரவம்’ ஆகிய படங்களை தந்த இயக்குநர் ராதாமோகனின் பெருமைமிக்க அடுத்த படைப்பு இது.

ஒரு தோல்விப் படம்.. அடுத்தப் படம் பாதியிலேயே டிராப் என்கிற கேரியரை கையில் வைத்திருக்கும் இன்னமும் அதிகம் பேசப்படாத இயக்குநரான கருணாகரன்.. இப்போதும் தனது அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட்டை எழுதி தயாராக வைத்திருக்கிறார்.
கருணாவின் நண்பரான தயாரிப்பு நிர்வாகி மயில்சாமி 2 கோடி ரூபாயில் ஒரு தயாரிப்பாளர் தயாராக இருப்பதாகவும், “படம் இயக்க நீ ரெடியா..?” என்கிறார் கருணாவிடம். கருணா இதற்கு ஒத்துக் கொள்ளாக வேண்டிய சூழல்.. அவருடைய தங்கைக்கு விரைவில் திருமணம். அடுத்த சில நாட்களில் திருமண நிச்சயத்தார்த்தம் என்று பல சொந்த சுமைகள் அழுத்துகின்றன.
தனது நண்பர்களான உதவி இயக்குநர்கள் சாம்ஸ், நாராயணன் இவர்களோடு தயாரிப்பாளரை சந்திக்கச் செல்கிறார். தயாரிப்பாளர் ‘நெய்தல்’ ஜெயராமன் என்ற பெயருடன் இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர். காசிமேட்டில் மிகப் பெரிய தொழிலதிபர். மீன் பிடி ஏற்றுமதி தொழிலில் விற்பன்னர். கூடவே ஒரு பில்டப் சாமியாரை வைத்துக் கொண்டு அவர் சொல்வதை நம்பிக்கையோடு கேட்டு நடப்பவர்.
“தனது இரண்டாவது மனைவி மூலம் பிறந்த ஒரே மகளான பூங்குழலியை ஹீரோயினாக நடிக்க வைத்தால்தான் இந்தப் பட வாய்ப்பு..” என்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகக் கூடாது என்று உதவியாளர்களும், மயில்சாமியும் வற்புறுத்தவே இயக்குநர் கருணாகரன் படத்தை இயக்க ஒத்துக் கொள்கிறார்.
இந்த நேரத்தில் மயில்சாமி தனது உறவினர் பையனான ‘டவுட்’ செந்திலை மூன்றாவது அஸிஸ்டெண்ட்டாக கருணாகரனிடம் வேலைக்குச் சேர்த்து விடுகிறார். கதையும், திரைக்கதையும் உருவாகிறது. சமுத்திரகுமாரி என்று பெயர் வைக்கிறார்கள்.
இடைவேளை நெருங்கும் சமயத்தில் ஹீரோயின் அறிமுகமாகிறார். பூங்குழலியாக வரும் நந்திதா குழந்தைத்தனமான பேச்சுடன் இருக்கிறார். ஒரு ஹீரோயினுக்கான பேச்சும், நடத்தையும் அவரிடத்தில் இல்லாத்தால் அவரை வைத்து படத்தை இயக்க முடியாது என்கிற நிலைமை ஏற்படுகிறது.
கருணாகரனின் வீட்டின் மேல் மாடியில் குடியிருக்கும் ரக்சனா மீது கருணாவுக்கு காதல். ரக்சனாவின் அழகும், நடிப்புத் திறனையும் பார்த்து அவரை இதில் நடிக்க வைக்க விரும்புகிறார். ஆனால் அது முடியாமல் போனாலும் நந்திதாவுக்கு நடிப்புச் சொல்லிக் கொடுக்க ரக்சனாவை பயன்படுத்திக் கொள்கிறார் கருணா.
அனைவரும் சேர்ந்து வற்புறுத்துவதால் ஒரு வழியாக நந்திதாவை ஹீரோயினாக்கி படமெடுக்க தயாராகிறார் கருணா. படத்தின் பூஜை தினத்தன்று கருணாவுக்கு பேரதிர்ச்சி. ஹீரோயின் நந்திதா திடீரென்று காணாமல் போக.. எம்.எஸ்.பாஸ்கர் தனது அடியாட்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு நேரில் வந்து கருணா உட்பட படக் குழுவினரை அடித்து உதைத்து இவர்களை இழுத்துப் போகிறார்..
ஏன்..? எதற்கு..? என்பதெல்லாம் சுவையான திரைக்கதை. இதை இங்கே படித்தால் படம் பார்க்கும்போது நிச்சயம் சுவாரஸ்யம் இருக்காது என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறோம். அவசியம் படத்தைப் பார்த்து மிச்சத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.
சினிமா தயாரிப்பது சுலபமல்ல என்று தயாரிப்பாளர்களும், சினிமா இயக்குவது சுலபமல்ல என்று இயக்குநர்களும் சொல்லி வரும் அதேவேளையில், சினிமாவை இயக்கும் வாய்ப்பு கிடைப்பதும் அவ்வளவு சுலபமல்ல என்பதை சொல்வதற்காகவும் இந்தப் படத்தை ஒரு உதாரணமாகக் காட்டலாம்.
சினிமாவை களமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களெல்லாம் ஓடாது என்பது கோடம்பாக்கத்தின் மவுத் டாக். நிச்சயம் ஓடும் என்பதை இந்தப் படம் நிரூபிக்கும் என்றே நம்பலாம்.
தன்னுடைய முந்தைய படங்களை போலவே இந்தப் படத்தையும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படமாகத்தான் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ராதாமோகன்.
படத்தின் மிகப் பெரிய பலமே கேரக்டர் ஸ்கெட்ச்சுதான். இதுவரையில் எந்த பிம்பத்திலும் சிக்கிக் கொள்ளாத கருணாகரன், நகைச்சுவையில் பின்னியெடுக்கும் சாம்ஸ், கூடவே பயணிக்கும் நாராயணன், அப்பாவித்தனத்தை தனது முகத்திலேயே ஒளித்து வைத்திருக்கும் ‘டவுட்’ செந்தில், குணச்சித்திர நடிப்பில் மின்னி வரும் எம்.எஸ்.பாஸ்கர், அழகுடன் நடிப்பையும் சேர்த்து தரும் ஹீரோயின் நந்திதா, ராதாமோகனின் ‘செட் பிராப்பர்ட்டி’ என்றே சொல்லும் அளவுக்கு அவருடைய அனைத்து படங்களிலும் இடம் பிடித்திருக்கும் யதார்த்த நடிகரான குமரவேல், விஜய் டிவியின் ‘சரவணன் மீனாட்சி’யில் மீனாட்யாக ஒளிர்ந்த ரக்சனா.. என்று அத்தனை பேருமே அவரவர் கேரக்டர்களில் குறையே சொல்லாத அளவுக்கு நடித்திருக்கிறார்கள்.
கருணாகரன் பல இடங்களில் நடிக்கவே இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு மிக இயல்பாக இருக்கிறார். சாம்ஸ் மற்றும் நாராயணனின் கவுண்ட்டர் வசனங்களுக்கு பதில் சொல்லும் அளவுக்கு கருணாவுக்கும் வசனங்கள் எழுதப்பட்டிருப்பதும், அதை அவர் கை தேர்ந்த ஒரு நகைச்சுவை நடிகரை போல பயன்படுத்தியிருப்பதும்தான், காட்சிக்கு காட்சி நகைச்சுவை மிளிர்ந்ததன் காரணம்..!
மாரிமுத்துவிடம் ‘ஆள், ஆளுக்கு வந்து படத்துக்கு இடைஞ்சல் செய்தால் எப்படி?’ என்று கருணாகரன் பொங்கித் தீர்க்கும் காட்சி சூப்பரோ சூப்பர். இந்தக் காட்சி அடுத்த சில நாட்களில் அனைத்து சேனல்களிலும் தவிர்க்க முடியாத காட்சியாக வலம் வரும் என்பதில் சந்தேகமில்லை. கருணாவுக்கும் அவரது நடிப்பு கேரியரை சுட்டிக் காட்ட இந்த ஒரு காட்சியே போதுமானது.
அதேபோல் பூங்காவில் ரக்சனாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது இன்ஸ்பெக்டர் வந்து ரவுசு செய்ய.. ரக்சனா அவரை வார்த்தைகளால் விளாசும் காட்சி, லட்சணக்கான நட்புகளுக்கு சமர்ப்பணமான விஷயம்.
அடுத்துக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ரக்சனாவை. டிவி சீரியலிலேயே அத்தனை முக பாவனைகளை நொடியில் காட்டி அசத்தும் இவர், தனக்குக் கிடைத்த காட்சிகளில்லாம் பெயரைத் தட்டிச் சென்றுள்ளார். நந்திதாவுக்கு நடிப்பு சொல்லித் தரும் காட்சியில் இவரையே ஹீரோயினாக போட்டிருக்கலாமே என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அப்படியொரு ‘பேக்கு’ கேரக்டருக்கு இவர் சரிப்பட்டு வர மாட்டார் என்பதும் ஒரு சரியான வாதம்தான்..!
படத்தின் அத்தனை பெரிய தாக்கத்தையும் கிளைமாக்ஸில் எம்,எஸ்.பாஸ்கர் உடைத்தெறிந்து தனது மீதான பரிதாப உணர்வு ஏற்படும் அளவுக்கு நடிப்பில் பின்னியிருக்கிறார். திருமூலரின் மந்திர வார்த்தைகளைச் சொல்லி அறிமுகமாகி அவ்வப்போது இடையிடையே அவர் சொல்லும் இன்ஸ்டண்ட் கவிதைகளும், குறள்களும், சொல்லாடல்களும் ராதாமோகனின் படத்தில் மட்டுமே கிடைக்கும் தமிழ் இலக்கிய லட்டுக்கள்..!
இவருடனேயே இருக்கும் போலி சாமியாரின் சினிமா ஆசையும், அதற்காக அவர் நடித்தும் திடீர் டிராமாவும்கூட காமெடிதான்..! சாம்ஸ் மற்றும் நாராயணனின் கடி மற்றும் துணுக்குகள் படத்திற்கு மிகப் பெரிய பலம். மயில்சாமி எதற்கெடுத்தாலும் சகுனம் பார்ப்பதும், சாம்ஸ் எதற்கெடுத்தாலும் திருக்குறளை உதாரணமாகக் காட்டுவதும் படத்தை மிக மிக சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறது. இவர்களையும்விட ‘டவுட்’ செந்திலு அதில் கொஞ்சம் அதிகமாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
அறிமுகமாகும்போது இருக்கும் அதே இன்னசென்ட் பேபியாகவே வருபவர்,, இவரைத் தேடி வந்து மலையாளப் பாடலை பாடி வாய்ப்பு கேட்கும் அந்த சேட்டனின் பாடலுக்கு இவர் காட்டும் மெளனமான அந்த ரியாக்ஷனே தியேட்டரை சிரிப்பலையில் குலுங்க வைக்கிறது. கடைசியில் இவரா ‘அந்த’ வேலையைச் செய்தது என்கிற திடீர் ஆச்சரியம் ப்ளஸ் திகைப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்துவதும் நிஜம்.
‘மாஞ்சா’வாக வரும் குமரவேல் மூலமாக இன்றைய இளம் இயக்குநர்களுக்கு நிறைய அறிவுரைகளை வாரி வழங்கியிருக்கிறார் ராதாமோகன். நல்ல விஷயங்கள்.. எங்கே, யார் மூலம் கிடைத்தாலும் ஈகோ பார்க்காமல் அதையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சினிமா என்பது கூட்டு முயற்சி.. தனி நபர்களின் வெற்றி அல்ல என்பதைச் சொல்வதற்காகவே குமரவேலை பயன்படுத்தியிருப்பது போல தெரிகிறது.
குமரவேல் சொல்லும் பல காட்சிகள்தான் உண்மையிலேயே படத்தின் திரைக்கதை என்பதுதான் இந்தப் படத்தின் மெய்யான சிறப்பு. அந்த வகையில் திரைக்கதைக்குள் ஒரு திரைக்கதை என்று வைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ராதாமோகன்.
‘இந்தக் கதையை எழுதும்போதே நடிகை நந்திதாவை மனதில் வைத்துதான் அந்த கேரக்டரை உருவாக்கினேன்’ என்று இயக்குநர் ராதாமோகன் இந்தப் படத்தின் பிரஸ்மீட்டில் தெரிவித்தார். அது முற்றிலும் சரியானது என்பதை நிரூபித்திருக்கிறார் நந்திதா. இப்படியொரு ‘பேக்கு’ கேரக்டருக்கு அவருடைய முகமும், நடிப்பும் ஒத்து வந்திருக்கிறது.  “இல்ல ஸார்.. ஆமா ஸார்..” என்று நந்திதா இழுத்து இழுத்து பேசும்போதே இவரை வைச்சிக்கிட்டு இவர் என்ன பாடுபடப் போறாரோ என்று நமக்குள் ஒரு கிண்டல் தோன்றுகிறது. இதைத்தான் இயக்குநரும் எதிர்பார்த்தார். நந்திதாவுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்..!
படத்தின் இன்னொரு முக்கிய பலம் வசனங்கள். பொதுவாகவே ராதாமோகனின் திரைப்படத்தில் வசனங்கள்தான் அதிகமாகப் பேசப்படும். இந்தப் படத்திலும் அதேதான். வசனகர்த்தா பொன்.பார்த்திபனின் அத்தனை வசனங்களும் முத்துக்கள்.
நகைச்சுவையும் அதே சமயம் கதையை நகர்த்தும் திரைக்கதையாகவும் வசனங்கள் இடம் பெற்றிருப்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பு. ஒரு நிமிடம் ஸ்கிரீனை கவனிக்கவில்லையென்றால்கூட நாம் ஒரு சிரிப்பை இழுத்துவிடுவோம் என்கிற மனப்பான்மையை ஏற்படுத்திவிட்டது இந்தப் படம்.
படம் முழுவதுமே கடற்கரையோம் என்பதாலும், நிறைய காட்சிகள் பகல் நேரம் என்பதாலும் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமின் ஒளிப்பதிவு எந்த நெருடலையும் கொடுக்கவில்லை. நந்திதா ஆடும் அந்த பாடல் காட்சியை மட்டுமே இரவில் படமாக்கியிருக்கிறார்கள். பாடலைவிடவும் நடனம் சூப்பர். ஆனாலும் ராதாமோகனின் படத்தில் இதனை எதிர்பார்க்கவில்லைதான். ஸ்டீவ் வாட்ஸின் இசையில் பின்னணி இசையிலேயே நகைச்சுவைத் தூண்டும் அளவுக்கு அதற்கு தோதான இசையை அமைத்திருக்கிறார்கள். அதிகம் அலுப்படிக்காமல், காதைக் கடிக்காமல் இருப்பதால் இசையமைப்பாளருக்கு ஒரு ஜே. அதே சமயம் பாடல்கள் அதிகம் கவரவில்லை என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். அதனால் என்ன..? இப்போதும் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் இளையராஜா என்பது இந்தப் படத்திலுன் மூலமும் தெரிகிறதே..!
ஒரு எளிமையான கதை.. ஒரு இயக்குநர் புதிதாக படமெடுக்க ஆயத்தமாகிறார். அதற்கு பல இடைஞ்சல்கள் வருகின்றன. அதையெல்லாம் தாண்டி அவர் எப்படி படமெடுக்கிறார் என்பதை மிக யதார்த்தமான நகைச்சுவையோடு, முகம் சுழிக்கவிடாத காட்சியமைப்புகளோடு, குடும்பத்தோடு பார்க்கக் கூடிய வகையில் தரமான படமாக உருவாக்கித் தந்திருக்கும் இயக்குநர் ராதாமோகனுக்கு நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.. வந்தனங்கள்..! இவருடைய சேவை தமிழ்ச் சினிமாவுக்கு எப்போதும் தேவை என்பதை இந்தப் படமும் நிரூபித்துவிட்டது.
வரும்கால இயக்குநர்களுக்கு ராதாமோகனின் அனைத்து படங்களுமே ஒரு பாடம்தான். அதில் இதுவும் ஒன்றாக இடம் பிடித்திருக்கிறது.
உப்பு கருவாடு – சைவப் பிரியவர்களையும் நிச்சயம் கவரும்..!

ஒரு நாள் இரவில் - சினிமா விமர்சனம்

21-11-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மலையாள சினிமா ரசிகர்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. ஒரு பக்கம் கமர்ஷியல் படங்களுக்கும் ஆதரவு கொடுத்து, இன்னொரு பக்கம் இது போன்ற ரசிப்புத் தன்மையை மேம்பட வைக்கும் படங்களுக்கும் ஆதரவு கொடுத்து கை தூக்கி விடுகிறார்கள். இந்த இரட்டை ரசிக மனப்பான்மை தமிழக ரசிகர்களுக்கும் இருந்துவிட்டால் தமிழ்த் திரையுலகமும் ஆரோக்கியமாக இருக்கும்..!

2012-ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ‘ஷட்டர்’ என்கிற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் இந்தப் படம். மலையாளத்தில் லால் நடித்த கேரக்டரில் சத்யராஜூம், சஜிதா மாடத்தில் நடித்த கேரக்டரில் நடிகை அனுமோலும், சீனிவாசன் கேரக்டரில் யூகிசேதுவும் நடித்திருக்கிறார்கள்.
சிங்கப்பூரில் வேலை பார்த்துவிட்டு நாடு திரும்பியிருக்கிறார் சத்யராஜ். கல்லூரிக்கு செல்லும் ஒரு மகள்.. பள்ளிக்குச் செல்லும் இன்னொரு மகள் என இரண்டு குழந்தைகள். வீட்டு வாசலை ஒட்டினாற்போல இருக்கும் இடத்தில் கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார். அதில் ஒரு கடை காலியாக இருக்கிறது.
தான் சம்பாதித்து வைத்திருப்பதால்தான் தன் குடும்பம் நன்றாக இருக்கிறது என்கிற எண்ணத்தில் இருக்கும் சத்யராஜுக்கு குடும்பத்தில் எல்லாமே தன் சொல்படிதான் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் வருண் தான் எப்படியாவது சிங்கப்பூருக்கு போய் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் இருக்கிறான். சத்யராஜிடம் இது பற்றி பேசியிருக்கிறான். அவர் மூலமாக சிங்கப்பூர் செல்லும் ஆசையில் இருப்பதால் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராகவே இருக்கிறான். சத்யராஜும் இவனுடைய ஆட்டோவில்தான் போய் வந்து கொண்டிருக்கிறார்.
மகள் தன்னுடன் படிக்கும் ஒரு மாணவனுடன் பைக்கில் ஒன்றாக செல்வதை பார்த்த சத்யராஜ் மகளைக் கண்டிக்கிறார். அவள் கல்லூரிக்கு செல்வதை நிறுத்துகிறார். உடனேயே மாப்பிள்ளையை பார்த்து கல்யாண நிச்சயத்தார்த்தம் செய்கிறார். மனைவி, மகள் எதிர்த்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் இருக்கிறார். இந்தப் பிரச்சினையால் கடும் மன உளைச்சலில் இருக்கிறார் சத்யராஜ்.
இந்தச் சூழலில் ஒரு நாள் காலியான கடையில் தனது நண்பர்களுடன் மதுவருந்துகிறார் சத்யராஜ். நண்பர்களிடையே பேசும் பேச்சுக்கள்.. எழும் விவாதங்கள்.. அது குடும்பம், நட்பு, சிங்கப்பூர் வாழ்க்கை என்பதெல்லாம் கடந்துபோய் பாலியல் பிரச்சினையையும் தொட்டு, சத்யராஜின் மனதையும் அந்த நேரத்தில் சபலத்திற்கு ஆளாக்குகிறது.
அன்றைய இரவிலேயே சத்யராஜ் , வருணுடன் ஆட்டோவில் செல்லும்போது பேருந்து நிறுத்த்த்தில் நின்றுகொண்டிருக்கும் பாலியல் தொழிலாளரியான அனுமோலை பார்க்கிறார். அனுமோலின் பார்வை சத்யராஜை கிறுகிறுக்கவைக்க.. வருணிடம் இதைச் சொல்கிறார்.
வருண் ஓடோடிப் போய் அனுமோலை அழைத்து வருகிறான். இருவரும் தங்குவதற்கு ஹோட்டலில் அறை கிடைக்காத்தால் வேறு வழியில்லாமல் அந்தக் காலியான கடைக்கே அழைத்து வருகிறான் வருண். அவர்களை உள்ளே வைத்துவிட்டு வெளியில் பூட்டிவிட்டு அவர்களுக்காக சாப்பாடு வாங்க வெளியேறுகிறான் வருண்.
அன்று காலையில் அவனுடைய ஆட்டோவில் பயணிக்கும்போது தனது படத்தின் கதையை தவறவிட்டுவிட்டு தவிக்கும் சினிமா கதாசிரியர் யூகிசேது அந்த இரவில் வருணை கண்டுபிடிக்கிறார். யூகிசேதுவின் பேக்கை அந்த கடைக்குள் வைத்திருப்பது வருணுக்கு தெரிகிறது. அந்த பேக்கை எடுத்துக் கொடுக்கும்படி யூகிசேது கேட்க.. அவரையும் அழைத்துக் கொண்டு கடைக்கு செல்கிறான்.
செல்லும் வழியில் போலீஸ் சோதனையில் சிக்கிக் கொள்ள.. பிரச்சினையாக.. வருணை ஸ்டேஷனுக்கு இழுத்துச் செல்கிறார்கள் போலீஸார். வருண் போலீஸ் ஸ்டேஷனில் மாட்டிக் கொள்ள.. இன்னொரு பக்கம் பூட்டிய அறைக்குள் சத்யராஜும், அனுமோலும் இருக்க.. சத்யராஜை காணாமல் அவரது குடும்பத்தினர் தவித்துப் போய் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து தேட ஆரம்பிக்க.. அன்றைய நாள் இரவில் அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் மிக, மிக சுவராஸ்யமான இந்தப் படத்தின் திரைக்கதை.
இந்த பரிதவிக்கும் கேரக்டருக்கு சத்யராஜ் மிக பொருத்தமான தேர்வுதான். இவரைவிட்டால் பிரகாஷ்ராஜ் மட்டுமே தமிழில் இந்தக் கேரக்டரை செய்ய முடியும். கொஞ்சம் திமிறும் வேண்டும். அதே சமயம் தவறு செய்ய பயப்படும் சராசரி மனிதன், தகப்பனாகவும் இருக்க வேண்டும். இது மூன்றையும் நிறைவாக செய்திருக்கிறார் சத்யராஜ்.
 கொஞ்சம், கொஞ்சமாக மதுவின் பிடியில் ஆட்பட்டு, சபலத்திற்குட்பட்டவராகவும், அனுமோலின் ஒரு பார்வையில் பட்டவுடன் பதட்டமாகி ஆர்வத்துடன் “அவ என்னைப் பார்த்தாடா..” என்று தன்னை மறந்து சொல்கின்ற நடிப்பும் அவராகவே இல்லை.
அறைக்குள் மாட்டியவுடன் ‘எதுவும்’ செய்யாமல் அமைதியாக இருந்துவிட்டு அவ்வப்போது தனது வீட்டை சன்னல் வழியாக பார்த்துவிட்டு குற்றவுணர்வில் தவியாய் தவிக்கின்ற தவிப்பும் இந்தப் படத்தின் கதையை நேர்மையாக்கியிருக்கிறது..!
சொக்க வைக்கும் சுந்தரியாக படம் முழுக்க வியாபித்திருக்கிறார் அனுமோல். இப்படியொரு பார்வை பார்த்தால் யார்தான் அலற மாட்டார்கள் என்று சொல்லவும் வைத்திருக்கிறார் அனுமோல். மலையாள பெண்களுக்கே உரித்தான முகமும், உடல்வாகுமாக பாலியல் பெண்ணாக துணிந்து நடிக்க முன் வந்திருக்கும் இவருக்கு ஒரு பாராட்டு..!
நிறுத்தி, நிதானமான வசன பேச்சுக்கள்.. “நீங்க என்ன சொன்னாலும் நான் கோச்சுக்க மாட்டேன். ஏன்னா நீங்கதான் கேக்கும்போதெல்லாம் பணம் கொடுக்குறீங்களே..?” என்று சின்னப்புள்ளத்தனமாக அவர் பேசும் பேச்சும், மாடுலேஷனும் ரசிகர்களை கவர்கிறது.. அதேபோல் அவருடைய பேச்சில் இருந்து பணத்தின் மீதான மதிப்பு, குடும்பத்தின் மீதான அக்கறை.. பெண்ணுக்கு கல்வி மிகவும் அவசியம் என்கிற கருத்தாடல் இவையும் சேர்ந்தே வெளி வந்திருக்கிறது..!
கடையைக் காலி செய்ய மறுக்கும் மெக்கானிக் கடைக்காரனை அடிக்கப் போகும் அளவுக்கு கோபக்காரரான சத்யராஜ் அனுமோலை பாதி தைரியத்தில் தொடப் போய் பயந்து பின் வாங்க.. அவர் எதையோ பார்த்து பயந்துவிட்டதாக நினைத்து அரைத் தூக்கத்தில் எழுந்து அறை முழுவதையும் தேடிப் பார்த்துவிட்டு “ஒண்ணுமில்லயே. எதுக்கு பயந்தீங்க..?” என்று பக்குவப்பட்டவராக கேட்கும் அனுமோலை யாருக்குத்தான் பிடிக்காது..? ஹீரோயின்களுக்கு பஞ்சமே இல்லாத கோடம்பாக்கம் இவரையும் அனுமதித்து வரவேற்றால் சிறந்த நடிகையொருவர் நமக்கும் கிடைப்பார்.
யூகிசேதுவும், அவருடைய போலீஸ் இன்ஸ்பெக்டரான நண்பரும் ஒரு தனிக் கதையாக வந்தாலும் படத்தை ஆங்காங்கே தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். யூகிசேது ஒரு வசனகர்த்தாகவும் இந்தப் படத்தில் மிளிர்கிறார். சினிமா கதாசிரியர்களுக்கே உரித்தான படபடப்பு, ஏமாற்ற உணர்வை வெளிக்காட்டிக் கொள்ளாமை.. சகித்துக் கொள்வது என்ற சகல குணங்களையும் உள்ளடக்கி தனது நடிப்பில் காட்டியிருக்கிறார் யூகி.
அறை வாடகை கொடுக்கவில்லை என்கிற நிலைமையில் அவரை ஹோட்டலுக்கே வந்து சந்தித்து தனக்கு குடிக்க கம்பெனி கொடுக்கும்படி கேட்கும் ஒரு தயாரிப்பாளர்… யூகி குடிக்க மாட்டார் என்று தெரிந்தும் தான் பேசுவதையெல்லாம் கேட்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்போடு அவர் வந்திருக்கிறார் என்பதை நமக்கு உணர்த்தி.. கடைசிவரையிலும் பணம், உதவி இது இரண்டையும் செய்யாமலேயே தைரியத்தை மட்டும் சொல்லிவிட்டுப் போகும் அந்த ஆர்.சுந்தர்ராஜனை போன்றவர்கள்தான் இன்றைக்கு திரையுலகில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிரதிநிதியாக இவரை அடையாளப்படுத்தியிருக்கும் யூகியின் மதிக்கு ஒரு பாராட்டு..!
எப்படியும் தனது பை தன் கைக்கு வந்துவிடும் என்பதால் வருணை டார்ச்சர் செய்யாமல் அதை மீட்க யூகிசேது எடுக்கும் முடிவுகளும், கிளைமாக்ஸில் அவரிடத்தில் கதை வந்து சேரும் காட்சியும் ரசிகர்களை நிச்சயம் கலவரப்படுத்தியிருக்கும்..!
அறிமுக நடிகர் வருண் இன்னமும் 2, 3 படங்களில் நடித்து அனுபவம் பெற்றால் தேர்ச்சி பெற்றுவிடுவார். முதல் படம் என்பதால் தேர்ந்த நடிப்பை எதிர்பார்ப்பது சரியல்ல என்பதால் விட்டுவிடுவோம்..!
சத்யராஜின் மகளாக நடித்தவரின் நடிப்பும் படத்திற்கு கடைசி ரீலில் அடுத்தடுத்து தொடர்ந்து கிடைக்கும் கைதட்டல்களுக்கு ஒரு காரணம்.. நல்ல அழகு.. நல்ல நடிப்பு.  சத்யராஜின் மனைவியாக நடித்தவரும்கூட..!
பாலியல் தொடர்பான கதை என்றாலும் ஒரு சின்ன நெருடலான காட்சிகூட இல்லாமல் அந்த அறைக்குள் நிலவும் நுட்பமான ஆண், பெண் சீண்டல்கள்.. அழைப்புகள்.. தவறென்று தெரிந்து மனக்குழப்ப நாடகங்கள்.. இதையெல்லாம் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
ஒரு சின்ன சபல ஆசை.. மனிதனை எப்பேர்ப்ப்ட்ட பிரச்சினைகளுக்குள் கொண்டு போய் தள்ளுகிறது என்பதை உதாரணப்படுத்துகிறது இந்தப் படம். மதுவருந்த கிடைக்கும் தோழர்களெல்லாம் உயிருக்குயிரான நண்பர்களல்ல என்பதையும் இந்தப் படத்தின் கதாசிரியர் நன்கு உரைத்திருக்கிறார். அதேபோல் அவசரத்தனமான இந்தக் காலக்கட்டத்தில் நட்பு என்பது எதுவரையிலும் என்பதை புரிந்து கொண்டு பெற்றோர்கள் செயல்பட வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
பெண் கல்வி மிக மிக அவசியம் என்பதை பாலியல் பெண் ஒருவர் மூலமாகச் சொல்லித் தெரிய வேண்டிய கட்டாயத்தில் தான் இருப்பதை நினைத்து சத்யராஜ் வருத்தமும், வெட்கப்படும் அந்தக் காட்சியில் இயக்குநரின் இயக்கத் திறமைக்கு ‘ஜே’ போட வேண்டும்..!
இயக்குநர் ஆண்ட்டனி அடிப்படையில் எடிட்டர். காட்சிக்கு எது தேவையோ அதை மட்டும்தான் எடுத்தேன். நிறைய எடுத்து நிறைய கட் செய்து தூக்கியெறியவில்லை. மூலக் கதையில் இருந்தே அரை மணி நேர காட்சிகளை ஒதுக்கிவிட்டு இரண்டு மணி நேரமே போதுமானதாக சுருக்கியிருக்கிறோம் என்றார். சுருக்கப்பட்ட இந்தப் பதிவே அற்புதமாக இருக்கிறது. நன்று..!
இசையமைப்பாளர் நவீன் ஐயர் சில இடங்களில் பின்னணி இசையை நாடகத்தனமாகவும், பல இடங்களில் சுறுசுறுப்பாகவும் போட்டிருக்கிறார். பாடல்களே இல்லாமல் வரும் இது போன்ற படங்களால் நிச்சயம் தமிழ் ரசிகர்களின் ரசிக மனப்பான்மை மேலும் உயரும் என்பதில் ஐயமில்லை.
இந்தப் படத்தை ரீமேக் செய்ய நினைத்த இயக்குநர், தயாரிப்பாளர் ஏ.எல்.விஜய்க்கு முதல் நன்றி. நல்ல படத்தை கொடுக்க நினைத்து.. அதில் தான் தலையிடாமல் வேறொருவரை இயக்குநராக்கி அதையும் அழகாக கொடுத்திருக்கும் இயக்குநர் விஜய்யின் படக் குழுவினருக்கு நமது வாழ்த்துகள்..! அதேபோல் சிறந்த கதையைக் கொடுத்திருக்கும் கதாசிரியர், இயக்குநர் ஜாய் மேத்யூவுக்கும் நமது பாராட்டுக்கள்.
‘ஒரு நாள் இரவில்’ நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய படம். மிஸ் பண்ணக் கூடாத படம். ஒரு புதிய அனுபவத்தை நிச்சயமாக உங்களுக்குக் கொடுக்கும். பார்க்கத் தவறாதீர்கள்..!

தூங்காவனம் - சினிமா விமர்சனம்

12-11-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை.. இது பிரெஞ்சு, பெல்ஜியம், லக்சம்பர்க் ஆகிய நாடுகளின் கூட்டு தயாரிப்பில் 2011-ம் ஆண்டு வெளியான sleepless night என்கிற பிரெஞ்சு மொழி படத்தின் ரீமேக் இல்லை…” என்று கடைசியாக நடந்த ‘தூங்காவனம்’ படத்தின் பிரஸ்மீட்டில் சத்தமாக கூறிய இயக்குநர் ராஜேஷை, இப்போது எப்படி திட்டுவது என்றே தெரியவில்லை.
படத்தின் டைட்டிலேயே ‘இந்தப் படம் ‘sleepless night’ படத்தினை அடிப்படையாகக் கொண்டது’ என்றே சொல்கிறார்கள். பின்பு எதற்கு இப்படியொரு பொய்யுரை..? வளர்ந்து வரும் வேளையில் இதெல்லாம் தேவையா இயக்குநர் ஸார்.,.?
இரண்டாவது சங்கடம்.. படத்தின் ஒரிஜினல் படமான ‘sleepless night’  படத்தின் ஒரிஜினல் திரைக்கதை ஆசிரியர்களான Frederic Jardin, Nicolas Saada – இவர்களின் பெயர்களைத்தான் இந்தப் படத்தின் ‘திரைக்கதை’ இடத்திலும் போட்டிருக்க வேண்டும். ஏனெனில் அந்த ‘sleepless night’ படத்தின் திரைக்கதை அப்படியே இந்தப் படத்திலும் இருப்பதுதான்.
ஆனால் ‘தூங்காவனம்’ படத்தின் ‘திரைக்கதை’ என்னும் இடத்தில் நடிகர் கமல்ஹாசன் தன் பெயரை போட்டுக் கொண்டது முற்றிலும் நியாயமற்றது. ‘கூடுதல் திரைக்கதை’ என்று வேண்டுமானால் போட்டிருக்கலாம் கிளைமாக்ஸில் வரும் ஒரு புதிய காட்சிக்காக மட்டும்..!

கமல் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் போலீஸ் அதிகாரி. என்னதான் தடுத்தாலும் போதைப் பொருட்களின் வரவு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் அடிவேரை தேடுவதைவிடவும், தலையைத் தேடுவது உத்தமம் என்றெண்ணி அதற்காக ஒரு ஆபரேஷனை துவக்குகிறார்.  இந்த ஆபரேஷனில் குடும்பக் கஷ்டத்திற்காக பணத்திற்கு அலையும் சக அதிகாரியான யூகிசேதுவை எதுவும் சொல்லாமல் கூட்டணி சேர்த்துக் கொள்கிறார்.
கிலோ கணக்கில் இருக்கும் போதை பொருள் ஒன்று கை மாறப் போவதை துப்பறியும் அவரும், யூகிசேதுவும் அதைக் கைப்பற்ற முயல்கிறார்கள். இந்த சண்டையில் யூகிசேது தன் துப்பாக்கியை பயன்படுத்த நேரிடுகிறது. கடத்தல்காரர்களில் ஒருவன் குண்ட்டிபட்டு சாகிறான். இன்னொருவன் தப்பியோடுகிறான். அதுவொரு விடியற்காலை பொழுது என்பதால் சாலையில் கூட்டமே இல்லை என்பதாலும் போதை பொருளுடன் தப்பியோடுகிறார்கள் கமலும், யூகிசேதுவும்.
ஆனால் தப்பி வந்த கடத்தல்காரனால் போதைப் பொருளை கைப்பற்றி சென்றது கமல்ஹாசன்தான் என்பது அதே ஊரில் நைட் கிளப் நடத்தும் அந்த போதை தொழிலின் ஏஜெண்ட் பிரகாஷ்ராஜுக்கு தெரிய வர.. சட்டென்று கமல்ஹாசனின் மகனை கடத்திச் செல்கிறார்.
கடத்திச் சென்ற போதை பொருள் கைக்கு வந்தால் பையனும் பத்திரமாக திரும்பி வருவான் என்கிறார் பிரகாஷ் ராஜ். தன்னைவிட்டு பிரிந்து டாக்டரான மனைவியால் மகனுடன் தனியே வாழும் கமலுக்கு மகன் மீது கொள்ளைப் பிரியம்.
போதை பொருளைவிட மகனே பிரதானம் என்று நினைத்து அதனை திரும்ப ஒப்படைக்க அந்த நைட் கிளப்பிற்கு போதை பொருள் இருக்கும் பேக்குடன் செல்கிறார் கமல்.
போதைப் பொருளை ஒப்படைத்தாரா..? மகனை மீட்டாரா என்பதுதான் இந்த இரண்டு மணி 7 நிமிடம் அடங்கிய ஒரு விறுவிறு, துறுதுறு திரைக்கதை அடங்கிய திரைப்படத்தின் கதை..!
ஒரு இரவு விடுதிக்குள்ளேயே படமாக்கப்பட்டிருப்பதால்  படம் ஒரு புதிய அனுபவத்தைத் தருகிறது.  அதோடு திரைக்கதையும் நூல் பிடித்தாற்போல் அடுத்தடுத்து நடக்கின்ற அதிரடி சம்பவங்களில் எந்தவித குழப்பமும் இல்லாமல் போவதால் நம் கவனத்தை அந்தப் பக்கம் இந்தப் பக்கமென்று திருப்பக்கூட மனசில்லை.
பேக்கை த்ரிஷா மாற்றி வைக்க.. அதனை கிஷோர் தூக்கிச் செல்ல.. காணாமல் போன பேக்கிற்காக மைதா மாவு பேக்கை கமல் ரெடி செய்வது.. கடைசி நேரத்தில் சம்பத் இதைக் கண்டுபிடிப்பது.. தொடர்ச்சியான திரிஷா கமல் கிஷோர் மோதல்கள்.. பையனை மீட்க போராடி தோல்வியடைந்துவிடாமல் கமல் மீண்டும் மீண்டும் முயல்வது.. இடையிடையே போனில் ‘பிள்ளை எங்கே?’ என்று கேட்கும் முன்னாள் மனைவியை சமாளிப்பது.. எல்லாவற்றுக்கும் மேலாக கமல் தன் வயிற்றில் காயம்பட்ட அந்த வலியையும் அடிக்கடி காண்பித்தபடியே நடித்திருப்பது.. என்று படத்தில் பலவித ஊறுகாய்களே மெயின் சாப்பாடு போலவே தீனி போட்டிருக்கின்றன.
யூகிசேதுவும் இதில் ஒரு சீக்ரெட் பிளானோடு இருக்கிறார் என்பது கமலுக்கும் தெரியவில்லை. ஆனால் அது தெரிய வரும் இடம் டச்சிங்கானது. அதற்கு யூகிசேது கொடுக்கும் ‘சாப்பிடணுமே’ என்கிற ஆக்சன் சூப்பர்..! அந்த ஒரு காட்சியில் அமர்க்களப்படுத்திவிட்டார் யூகி.
கமல் என்றாலே முத்தக் காட்சி இருந்தாக வேண்டும் என்பதென்ன கட்டாயமா..? த்ரிஷாவுடன்தான் முத்தம் என்று காத்திருக்க மதுஷாலினிக்கு அடித்தது யோகம்.. 4 முறை லிப்லாக்கில் ஈடுபடுகிறார்கள் இருவரும். இது வலிந்து திணிக்கப்பட்ட காட்சியாகத்தான் தெரிகிறது. முத்தம் கொடுக்காமலேயே தப்பிச் செல்ல வாய்ப்பிருக்கிறதே..?
வேகமான திரைக்கதைக்கு ஈடாக படத்தில் பெரும்பாடுபட்டு உழைத்திருக்கிறார் கேமிராமேன் ஜான் வர்கீஷ். சமையலறை சண்டை காட்சியிலும், திரிஷா கமல் மோதலிலும் தெறிக்கவிடுகிறார் கேமிராமேன்.
அதே நைட் பார்.. அதே டிஸ்கோத்தே ஹால்.. பிளே ஹால்.. டைனிங் ஹால்.. பார்.. சீட்டுக் கச்சேரி நடக்குமிடம் என்று அனைத்துக்கும் விதவிதமான செட்டிங்ஸ் அமைத்து அனைத்திற்கும் ஒரு லின்க்கையும் கொடுத்து செட் செய்திருக்கும் கலை இயக்குநருக்கு இதற்காகவே ஒரு ஷொட்டு..!
படத்தில் கேரக்டர் செலக்ஷனையும் பாராட்டித்தான் ஆக வேண்டும். திரிஷாவைத் தவிர..! போலீஸ் கேரக்டருக்கு திரிஷாவை பார்த்தால் கான்ஸ்டபிளாக்கூட சொல்ல முடியாது. பிரெஞ்சு படத்தின் அதே கேரக்டர் ஸ்கெட்ச்சை இந்த தமிழ்ப் படத்திலும் வைத்துவிட்டார்களோ என்ற கவலையும் பிறக்கிறது.
கமல், கிஷோர், யூகிசேது, த்ரிஷா நால்வரின் போலீஸ் பதவிகள் என்னவென்று தெரியவில்லை. இதில் கிஷோரும், த்ரிஷாவும் என்னவொரு பதவியில் இருக்கிறார்கள் என்பதே தெரியாத நிலையில் அவர்களும் இதில் இடையில் புகுந்து கலகம் செய்வதும், கமல்ஹாசனுடன் கைகலப்பில் ஈடுபடுவதும், வேகமான திரைக்கதையில் போயே போய்விட்டது. இப்போது யோசித்தால்தான்..?
கமலின் மகனாக நடித்த பையனே சிறப்பாக நடித்திருக்கிறான். இவனுக்கும், ஜெகனுக்குமான காட்சிகளை வைத்தே ஒரு முழு படத்தை இயக்கலாம்.
படத்தின் வசனகர்த்தாவான சுகாவின் சில வசனங்கள் லாஜிக் மீறியும் சிரிக்க வைத்திருக்கின்றன. அந்தச் சூழலை உணர வைக்கின்றன. உதாரணமாக கமலின் மகனும், ஜெகனும் பேசுகின்ற பேச்சு.. ஜெகனை கோபப்பட வைக்க கமலின் மகன் தூண்டில்போட்டு பேசுவதெல்லாம் செம.. “ஒரு மைதா மாவுக்காக ஏன் இந்த 3 பேரும் இப்படி அடிச்சுக்குறாங்க…” என்ற சாம்ஸின் கேள்விக்கு அந்த ஒரு களேபரத்திலும் சிரிக்கத்தான் முடிந்தது..! கடைசி காட்சியில் ஆஷா சரத்திற்கு போன் செய்யும் மகன், “சீக்கிரம் வாம்மா.. இங்க அப்பாவை பார்த்துக்க நிறைய பேர் ரெடியா இருக்காங்க..” என்று அழுத்தமாகச் சொல்வதும் டச்சிங்கான காமெடி..!
சில காட்சிகளே என்றாலும் ஆஷா சரத்தின் முகம் இப்போதும் நிழலாடுகிறது. “போலீஸுக்கு போகட்டுமா..?” என்று கேட்டு சற்று இடைவெளிவிட்டு, “நிஜ போலீஸ்கிட்ட…” என்று சொல்லும்போது தன் நெஞ்சை பிடித்து வலிப்பது போல கமல் காட்டும் ஆக்சன் ஏ ஒன்.
பெர்பெக்ஷன் ஈக்குவல் டூ கமல்ஹாசன் என்பார்கள்.. ஒரு காட்சியில்கூட தேவையில்லாத ஆட்களோ.. விஷயங்களோ இருக்காது. இதிலும் ஒரு காட்சி.. கக்கூஸில் கக்கா போய்க் கொண்டிருக்கும் சம்பத்தின் ஆளை மேலையிருந்து உதைத்து கீழே தள்ளுகிறார் கமல்ஹாசன். கக்கா போன அவசரத்தில் இருந்தவன் அப்படியே கீழே விழுவான். டாப் ஆங்கிளில் அந்த சட்டிக்குள் இருக்கும் கக்காவைகூட கேமிராவில் பதிவாக்கி தனது பெர்பெக்ஷன் நேர்த்தியை காட்டியிருக்கிறார் கமல்ஹாசன். வாழ்க.. வளர்க..!
படத்தின் லாஜிக் மீறல்கள் எல்லையில்லாமல் இருக்கின்றன. மிகப் பெரிய ஓட்டையே.. அவ்வளவு பெரிய நைட் கிளப்பில் ஓனர் தன் அறைக்கு மட்டும்தான் சிசிடிவி செட் செய்து வைத்திருப்பாரா..? மற்ற இடங்களில் இருக்காதா என்ன..? இது ஒன்று போதும் இந்தப் படத்தைக் காலி செய்ய..! ஆனாலும் அதையெல்லாம் நினைக்க வைக்காத அளவுக்கு படத்தை உருவாக்கியிருப்பதால் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா பாராட்டுக்குரியவராகிறார்.
ஒரு பாடல்கூட இல்லையென்பதும் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட். பாடல் இல்லாத குறையை பின்னணி இசையில் நிரப்பியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
உமா ரியாஸ், சந்தானபாரதி, இயக்குநர் ராஜேஷ், சுகா, மது ஷாலினி என்று அனைவரின் முகத்திற்கும், நடிப்பிற்கும் ஒரு ஷொட்டு பாராட்டுக்கள்..!
இந்தப் படம் நிச்சயம் வசூலை குவிக்க வேண்டும். இல்லையென்றாலும் வரும் காலங்களில் கமலின் உயரிய படங்களில் இதுவும் ஒன்றாக இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை..!

வேதாளம் - சினிமா விமர்சனம்

11-11-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ரசிகப் பட்டாளத்தை கொண்ட மாஸ் நடிகர்களுக்கு எப்பொழுதுமே இருக்கும் ஒரு பிரச்சினை.. படம் தனது ரசிகர்களால் கொண்டாடப்பட வேண்டும் என்பதுதான். இதற்காகத்தான் நடிக்கிறார்கள். ஒரு படம் தோல்வியென்றால் அது அவர்களின் கேரியரையும் பாதிக்கும். பண வரவையும் பாதிக்கும். இது எல்லாவற்றையும்விட போட்டியாளரின் வெற்றியினால் ஏற்படும் மன உளைச்சலை அவர்களால் தாங்கவே முடியாது. ஏனெனில் அவர்கள் கண்ணாடி தொட்டி போல.. உடைந்தால் ஒட்ட வைக்கவே முடியாது..
‘தல’ அஜீத்திற்கும், ‘இளைய தளபதி’யான விஜய்க்கும் இப்போது இதுதான் பிரச்சனை. தலையைப் பிய்த்துக் கொள்ளும் அளவுக்கான பிரச்சனை.. எப்படி படம் கொடுத்தால் தனது ரசிகர்கள் அதனை ஏற்றுக் கொள்வார்களென்று..? கவனிக்க.. சினிமா ரசிகர்கள் அல்ல.. அவர்களுடைய ரசிகர்கள் மட்டுமே..!
இதனை மனதில் வைத்து முழுக்க, முழுக்க அஜீத் ரசிகர்களுக்காகவே பண்ணப்பட்ட படம் இந்த ‘வேதாளம்’.. இதைப் புரிந்து கொண்டால் இந்தப் படத்தின் கலந்து கட்டிய விமர்சனங்கள் எளிதாக உங்களுக்குப் புரியும்.


தனது தங்கை லட்சுமி மேனனின் ஓவியத் திறமைக்காக அவரை ஓவியக் கல்லூரியில் படிக்க வைக்க கொல்கத்தாவுக்கு அழைத்து வருகிறார் அஜீத். தங்கையை கல்லூரியில் சேர்த்துவிட்டு தானும் ஒரு கால் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக வேலைக்கு சேர்கிறார்.
ஒரு நாள் அவசரமாக தனது காரில் சவாரிக்கு வந்த இளம் வக்கீலான ஸ்வேதா என்ற ஸ்ருதிஹாசனுக்காக கோர்ட்டில் பொய் சாட்சி சொல்கிறார் அஜீத். ஆனால் அது சொதப்பலாகிவிட ஸ்ருதியின் வக்கீல் தொழில் லைசென்ஸ் கேன்ஸலாகிறது. அஜித் மீது கொலை வெறியாகிறார் ஸ்வாதி.
இந்த நேரத்தில் சர்வதேச போதை மருந்து கடத்தல்கார்ர்களை கண்டுபிடிக்க கால் டாக்சி டிரைவர்களின் உதவியை நாடுகிறது கொல்கத்தா போலீஸ். அஜீத்தும் தற்செயலாக தன் கண்ணில்பட்ட அந்த போதைக் கும்பலை சேர்ந்தவர்களை பாலோ செய்து அவர்களைக் கண்டறிந்து போலீஸுக்கு துப்பு கொடுக்கிறார். போலீஸ் அவர்களைக் கண்டுபிடித்தாலும் முக்கியமான ஒரு புள்ளி தப்பிக்கிறான்.
போதை மருந்தும், பணமும் போலீஸிடம் சிக்கிக் கொண்டதால் கோபப்படும் அந்த ரவுடி கும்பல் துப்புக் கொடுத்த்து யார் என்று தேடுகிறார்கள். அஜீத்தை கண்டறிகிறார்கள். அவரை ஃபாலோ செய்கிறார்கள். அஜீத்தோ அவர்களையே ஃபாலோ செய்து அவர்களது இடத்திற்கே வந்து அவர்களை அதகளம் செய்து தீர்த்துக் கட்டுகிறார்.
இன்னொரு பக்கம் ஸ்ருதியின் அண்ணனான அஸ்வின் ஒரு நாள் அஜீத்தின் கால் டாக்சியில் பயணிக்கும்போது லட்சுமி மேன்னை பார்த்துவிட்டு  காதலிக்கத் துவங்குகிறார். இந்தக் காதலும் நிறைவேறும் தருவாய் வருகிறது.
இந்த நேரத்தில் தனது இரண்டு தம்பிகளை பறி கொடுத்த கோபத்தில் கொல்கத்தா வரும் சர்வதேச கும்பலின் தலைவனான ராகுல் தேவ் அஜீத்தை பழி வாங்க நினைக்கிறார்.  அது முடிந்ததா..? இல்லையா..? என்பதே இந்த வேதாளத்தின் கதை.
எந்த இடத்திற்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வருவான் என்பதற்கு அடையாளமாகத்தான் ‘வேதாளம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்..
சந்தேகத்திற்கிடமே இல்லாமல் இது முழுக்க முழுக்க அஜீத் ரசிகர்களுக்கான படம்தான். அவர்களுக்காகவே உருகி, உருகி படமாக்கியிருக்கிறாகள். கூடவே அண்ணன்-தங்கை சென்டிமெண்ட். மற்றும் குடும்பப் பாசம் இது எல்லாவற்றையும் கலக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
அஜீத் இந்த வயதிலும் பிரமாதமாக சண்டை போடுகிறார். நடனமாடுகிறார். படத்தின் பிற்பாதியில் ‘வரலாறு’ பாணியில் திடீர், திடீரென்று ராட்சஷனாகி முகம் காட்டும்போது தியேட்டரே அதிர்கிறது. அதைத்தான் ரசிகர்களும் எதிர்பார்த்தார்கள்.
இயக்குநரின் திறமையான இயக்கத்தால் அனைத்து நடிகர்களுமே ரசிப்பதுபோல நடித்திருப்பதால் படத்தை பெரிதும் ரசிக்க முடிகிறது. முடியாதது சூரியின் காமெடி என்கிற பெயரில் இருக்கும் வசனங்கள்தான். இது இங்கே எடுபடவில்லை என்பது சூடம் ஏற்றி சத்தியம் செய்து சொல்லலாம்.
ஸ்ருதிஹாசன் இளமை துள்ளலோடு நடித்திருக்கிறார். கோர்ட் காட்சிகளிலும், வீர ஆவேசமாக அஜித்தை தாக்க வரும் காட்சிகளிலும் ரசிக்க வைத்திருக்கிறார். பாடல் காட்சிகளை பாதி பாதியாக கட் செய்து ஓட்டியிருப்பதால் அவரை முழுமையாக ரசிக்க முடியவில்லை. ஆனால் நல்லவேளையாக ஆடைக் குறைப்பு செய்யாமல் ஸ்ருதியை காண்பித்தமைக்கு இயக்குநருக்கு பெரிய நன்றி.
முக்கியமாக படத்தில் ஸ்கோர் செய்திருப்பது லட்சுமி மேனனும், அவருடைய தந்தையான தம்பி ராமையாவும், தாயான சுதாவும்தான். லட்சுமி மேனனின் நடிப்பு ஏ ஒன். படத்தின் பிற்பாதியில் அஜித்தை ஓவர்டேக் செய்து காட்சிகளைக் கைப்பற்றியிருக்கிறார் லட்சுமி.
இதேபோல் தம்பி ராமையா.. கண் பார்வையில்லாத சூழலில் ஒரு ரவுடியின் வீட்டுக்குள் வந்து அமைதியாக பேசியே அவன் தாலியை அறுப்பது என்கிற கொள்கையில் இவர்கள் போடும் டிராமா சிரிக்க வைக்கிறது. பார்க்கவும் வைக்கிறது. இவர்களின் பரிதாப முடிவும், அதைத் தொடர்ந்து “நீ காசு கொடுத்தால்தானே எல்லாத்தையும் செய்வ..?” என்கிற தம்பி ராமையாவின் ஒரு சொல்லும் அஜித்தின் மனதை மாற்றுவதை முடிந்த அளவுக்கு நேர்மையாக பதிவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
சூரியின் காமெடி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரனின் அடாவடியெல்லாம் வேஸ்ட் என்று சொல்லும் அளவுக்குத்தான் இருக்கிறது. ‘நான் கடவுள்’ ராஜேந்திரனையாவது பிற்பாதி திரைக்கதையில் பயன்படுத்தியிருக்கலாமே..? ஏன் விட்டார் இயக்குநர்..?
படத்தில் மிக ரோதனையானது அனிருத்தின் காதைக் கிழித்த இசைதான். போட்டுத் தாக்கியிருக்கிறார். உச்சஸ்தாயியில் அனைத்து இன்ஸ்ட்ரூமெண்ட்டுகளுமே கத்தித் தீர்த்திருக்கின்றன. கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம். ‘ஆலுமா டோலுமா’ பாடலும், பாடலை படமாக்கியிருக்கும் பிரம்மாண்டமான காட்சிகளும் சூப்பர்.. ஆனால் இதற்கெல்லாம் தமிழில் அர்த்தம் கேட்கக் கூடாது.. ஏற்கெனவே ‘லோலாக்கு லோல் டப்பிம்மா’ வரிக்கே இன்றுவரையிலும் நமக்கு அர்த்தம் தெரியவில்லை..
தமிழில் இயக்குநர் வீ.சேகர் அத்தனை காலமும் கஷ்டப்பட்டு சம்பாதித்த மொத்த பணத்தையும் காணாமல் போகச் செய்த சரத்குமார், நமீதா நடித்த ‘ஏய்’ படத்தின் கதையையும், தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், தமன்னா நடிப்பில் வெளிவந்த ‘ஊசரவல்லி’ படத்தின் கதையையும் கலந்து கட்டிய கதையாக இந்தப் படம் இருப்பது கண்கூடு.
ஆனால் அதைப் பார்த்து காப்பியடித்து எடுக்கும் அளவுக்கு ‘சிறுத்தை’ சிவா ஒன்றும் முட்டாள் அல்ல என்பதால் இந்த ஒற்றுமை எப்படி நிகழ்ந்தது என்பதையும் ஊகிக்க முடியவில்லை. ஏனெனில் இது ‘தல’ அஜீத் படம். விஷயம் வெளியே தெரிந்தால் அஜித்திற்கு அசிங்கம் என்பதால் நிச்சயம் செய்யத் துணிய மாட்டார்கள் என்பதால்தான் யோசிக்க வேண்டியிருக்கிறது.
இவ்வளவு பெரிய கொல்கத்தாவின் துறைமுகத்தில் ஒரு சொகுசு கப்பலை நிறுத்திவிட்டு அங்கேயே ‘டான்’கள் ஆட்சி நடத்துவதும், அது அன்றுவரையிலும் போலீஸுக்கே தெரியாமல் இருப்பதெல்லாம் நம்ப முடிகிற விஷயமா..?  இறந்து கிடக்கும் பிணங்களை பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு ஆள் வந்து ‘ஸார் இது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்’ என்று சொல்லி கொடுப்பதெல்லாம் ஓவராகத் தெரியவில்லையா இயக்குநர் ஸார்..?
டெக்னாலஜியை முடிந்த அளவுக்கு திறனாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். ராகுல் தேவின் கட்டளையால் அஜித்தின் போன் நம்பரை டிரேஸ் செய்யும் வேலைகளும், அவர்களை கண்டுபிடிக்க செய்யும் கம்ப்யூட்டர் வித்தைகளும் ரசிகர்களை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும். அந்த வகையில் அந்தக் காட்சியில் இயக்குதல் சிறப்பாக இருக்கிறது. அஜீத் சண்டை காட்சிகளில் காட்டியிருக்கும் தீவிரம் அவரது ரசிகர்களை தெறிக்க வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆயிரம் சொன்னாலும் ‘மங்காத்தா மங்காத்தான்’ என்று சொல்ல வைக்கின்றன அஜீத்தின் அடுத்தடுத்த கமர்ஷியல் ஹிட் படங்கள்.  ஆனாலும், தனது ரசிகர்களை இந்தப் படத்தில் திருப்திப்படுத்தி அனுப்பியிருக்கிறார் அஜீத். இதுவே போதுமா தல..? மத்தவங்க எல்லாரும் பாவமில்லையா..? அடுத்த படத்தையாவது ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களுக்காக மாற்றிக் கொடுக்க முயலுங்கள்..!

மிடாஸ் முதல் ஃபீனிக்ஸ்வரை - கணக்கில்லா கம்பெனிகள்... குவியும் சொத்துக்கள்..!

05-11-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஜெயலலிதா, சசிகலா அண்ட் கோ- புதிது, புதிதாக நிறைய நிறுவனங்களைத் துவக்கியிருக்கிறார்கள் என்றும், அதில் ஒன்றான ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் இருக்கும் 11 லக்ஸ் சினிமா தியேட்டர்களை விலைக்கு வாங்கிவிட்டதாகவும் வெளியான செய்திகளையொட்டி ஜூனியர் விகடன் பத்திரிகை இந்த வாரம் எழுதியுள்ள கட்டுரை இது :

கணக்கில்லா கம்பெனிகள்... குவியும் சொத்துக்கள்..!

புதிய இளவரசர்கள்..!

மிடாஸ் முதல் ஃபீனிக்ஸ் வரை

பூனை சூடுபட்டால் மறுபடி அந்தப் பக்கம் போகாது. ஆனால், மனிதரின் பணத்து ஆசை போகுமா? போகாது என்பதற்கு உதாரணம் இவை.

வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் மீது 1997-ம் ஆண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அதில் 18 ஆண்டுகள் சட்டப் போராட்டங்கள் நடந்து... நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று.. அதன்பிறகு கர்நாடக உயர் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது. ஆனாலும் விவகாரம் முற்றுப் பெற்றுவிடவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பாக இதன் மேல்முறையீடு மனு விசாரணை நடக்க இருக்கும் நிலையில்... இப்போது வெளியில் கசிந்திருக்கும் ஆவணங்கள் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளன.

யார்..? யார்...?

சசிகலா, இளவரசியின் குடும்பத்தினர் பெயர்களைத் தாங்கித் தொடங்கப்பட்டு இருக்கும் பல்வேறு நிறுவனங்கள், அதில் செய்யப்பட்ட முதலீடுகள் பற்றிய ஆவணங்களை மொத்தமாக மத்திய உளவுத் துறை அள்ளிச் சென்று உள்ளது.

சசிகலாவின் மூத்த அண்ணன் பெயர் சுந்தரவதனன். அவருக்கு அனுராதா, டாக்டர் வெங்கடேஷ், பிரபாவதி ஆகிய மூன்று வாரிசுகள் உண்டு. இதில் பிரபாவதியின் கணவரான டாக்டர் சிவக்குமார் பெயர், இந்த ஆவணங்களில் அதிகமாக வலம் வருகிறது. டாக்டர் வெங்கடேஷ், அவரது மனைவி ஹேமா வெங்கடேஷ் ஆகியோர் பெயர்களும் இடம் பெறுகின்றன.

இளவரசிக்கு கிருஷ்ணப்​பிரியா, சகீலா ஆகிய இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில், கிருஷ்ணப்பிரியாவின் கணவரான கார்த்திகேயனின் பெயர் அதிகமாக இடம்பெற்று உள்ளது. திருச்சியைச் சேர்ந்த கலியபெருமாளின் மகன் இந்த கார்த்திகேயன்.

ஜெயலலிதாவின் உதவி​யாளரான பூங்குன்றன் பெயரும் அதிகம் உள்ளது. 

எம்.நடராசனின் சகோதரியான ஆண்டாள் என்பவரின் மகனான குலோத்துங்கன் பெயர், சில நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளது.

2015-ம் ஆண்டு வெளியான திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, ஜெயலலிதாவோடு ஒரே வீட்டில் வசிக்கும் சசிகலா, இளவரசி மற்றும் அவர்களுடைய உறவினர்கள்தான் இந்தப் புதிய சொத்துக்களை நிர்வகித்து வருபவர்களாகவும், அவற்றை இயக்கும் சக்திகளாகவும் இருந்து வருகின்றனர்.


ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங்

2005-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளது. 2011 டிசம்பரில் ‘ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் இயக்குநர்களாக இரண்டு பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் ‘துக்ளக்’ பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி. மற்றொருவர், பூங்குன்றன்.

அதாவது இந்தக் காலகட்டத்தில் தான் சசிகலா குடும்பத்தினர் அ.தி.மு.க-வை விட்டு நீக்கப்படுகிறார்கள். அப்போது, ‘சோ’ ராமசாமி இதனுள் சேர்க்கப்​படுகிறார். பூங்குன்றன் போயஸ் கார்டன் ஊழியர். போயஸ் கார்டன் இல்லத்துக்கு வரும் கடிதங்​கள், பத்திரிகைச் செய்திகளை ஜெயலலிதாவின் பார்வைக்குக்​கொண்டு செல்பவர். இவருடைய தந்தை பெயர் புலவர் மகாலிங்கம். ‘நமது எம்.ஜி.ஆர்.’ பத்திரிகையில் பணியாற்றியவர். 

பூங்குன்றனும், சோ ராமசாமியும்தான் ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் இயக்குநர்களாக இருந்தனர். நவம்பர் 2012-ல் சோ ராமசாமி இந்த நிறுவனத்தில் இருந்து விலகிவிடுகிறார். அதாவது சசிகலா, மீண்டும் உள்ளே வந்த பிறகு சோ விலகிவிடுகிறார். அதன் பிறகு, டாக்டர் கே.எஸ்.சிவக்குமார், கார்த்திகேயன் என்ற இருவரும் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக ஆகின்றனர்.

இந்த ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங் நிறுவனத்தின் சேர்மன் சசிகலா. 2014-ம் ஆண்டு, சேர்மன் சசிகலாவின் முன்னிலையில், இளவரசியை மற்றொரு ‘சேர் பெர்சன்’ என்று அறிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அதோடு, இளவரசி எந்த நாளில் சசிகலா முன்னிலையில் ‘சேர் பெர்சன்’ என்று நியமிக்கப்படுகிறாரோ அன்றுதான் ‘ஹாட் வீல்ஸ்’ நிறுவனத்தின் பெயர், ‘ஜாஸ் சினிமாஸ்’ என்று மாற்றப்பட்டது. 


அதுதான் தற்போது வேளச்சேரி ‘ஃபீனிக்ஸ்’ மாலில் உள்ள நவீன வசதி படைத்த தியேட்டர்கள். (இதற்கான ஆதாரம் 7ம் பக்கத்தில்   காட்டப்பட்டு உள்ளது.) இளவரசியின் மகன் விவேக் ஜாஸ் சினிமாவின் சி.இ.ஓ. என காட்டப்பட்டிருக்கிறார்.

சந்தனா எஸ்டேட்ஸ்

1995-ல் சுதபத்துலு பாஸ்கர ராவ், அடப்பல வீர வெங்கடபாஸ்கர ராவ், அடப்பா நரசிம்ம ராவ், சுதபத்துலு வெங்கட ராம ராவ் என்பவர்கள் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி நடத்திய நிறுவனம்தான், ‘சந்தனா எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட்.’ அதன்பிறகு இந்த நிறுவனம் அவர்களிடம் இருந்து கைமாறி உள்ளது. 

ஒரு காலத்தில் போயஸ் தோட்டத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த ராவணன், இந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்துள்ளார். பிறகு, அவர் வெளியேறி உள்ளார். அவர் வெளியேறியதும் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி இந்த நிறுவனத்தின் இயக்குநராக உள்ளே வந்துள்ளார். 

(ஹாட் வீல்ஸ் நிறுவனத்தில் சேர்க்கப்பட்டது மாதிரியே சோ சேர்க்கப்பட்டு பின்னர் விலகி உள்ளார்.) பிறகு, மீண்டும் ஒருகட்டத்தில், சோ ராமசாமி வெளியேறுகிறார். பூங்குன்றன் இயக்குநர் ஆகிறார். இடைப்பட்ட காலத்தில் சில நாட்கள்  தமிழ்மணி என்பவர் இயக்குநராக இருந்துள்ளார். 

போயஸ் கார்டனில் இருந்து சசிகலா, ராவணன் ஆகியோர் வெளியேற்றப்பட்டபோது இந்த தமிழ்மணி, நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படி நடைபெற்ற, ‘மியூஸிக்கல் சேர்’ போட்டியில், கடைசியில் இப்போது கார்த்திகேயன் மற்றும் டாக்டர் வி.எஸ்.சிவக்குமார் ஆகியோர் இயக்குநர்களாக அமர்ந்து இருக்கிறார்கள்.


ரெயின்போ ஏர்

ஆகஸ்ட் 1, 2009-ல் 5 கோடி ரூபாய் முதலீட்டில் ‘ரெயின்போ ஏர்’ நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் பங்குதாரர்கள் வி.ஆர்.குலோத்துங்கன், சவுந்தரபாலன், கார்த்திகேயன். இது 38-16, ஜியான் அபார்ட்மென்ட்ஸ், 38, வெங்கட்ராமன் தெரு, தியாகராய நகர் சென்னை- 17 என்ற முகவரியில் இயங்கி வருகிறது. (இதே முகவரி 18 நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது) 

நாம் நேரில் போய்ப் பார்த்தபோது, அங்கு எந்த நிறுவனமும் இல்லை. ஆனால், குலோத்துங்கன் என்பவர் அங்கு வசிக்கிறார். ஒரு பெரிய அபார்ட்மென்டில் உள்ள ஒரு  வீடு அது. குலோத்துங்கனின் செக்யூரிட்டி மட்டும் இருக்கிறார்.

 லைஃப் மெட்

கோபாலபுரத்தில் ‘லைஃப் மெட்’ என்ற மருத்துவமனை உள்ளது. இதன் முகவரி, பழைய எண் 32. புதிய எண் 12. கான்ரான் ஸ்மித் சாலை, கோபாலபுரம், சென்னை-86. ஜனவரி 2011-ல் ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் இந்த மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இதன் இயக்குநர்கள் திருநாராயணன் அருண்குமார், ஹேமா வெங்கடேஷ், டாக்டர் கே.எஸ்.சிவக்குமார் ஆகியோர். 

மேவிஸ் சாட்காம்

1998-ம் ஆண்டு மேவிஸ் சாட்காம் நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளது. சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனின் மகன் டாக்டர் வெங்கடேஷ், பிரபாவதி சிவக்குமார், சசிகலாவின் மற்றொரு அண்ணன் விநோதகனின் மகன் கே.வி.மகாதேவன் ஆகியோர் ஆரம்பத்தில் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்துள்ளனர். 

தொடக்கத்தில் இதன் முதலீடு ரூ.21.20 கோடி. அதன் பிறகு, டாக்டர். வெங்கடேஷ் (அ.தி.மு.க இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறையை தமிழகம் முழுவதும் ஒரு காலத்தில் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்) இந்த நிறுவனத்தின் இயக்குநராக சிறிது காலம் இருந்துள்ளார். அதன் பிறகு, டி.டி.வி.தினகரனின் மனைவி அனுராதா தினகரன், மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அதன் பிறகு, அ.தி.மு.க. எம்.பி-யாக இருந்த பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் சிறிது காலம் இந்த நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு, பூங்குன்றன், பிரபாவதி சிவக்குமார், மனோஜ் பாண்டியன், பழனிவேலு ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர். இவர்களில் பழனிவேலு என்பவர் சசிகலாவின் கணவர் ம.நடராஜனின் சகோதரர்.

இந்த நிறுவனத்தின் கீழ்தான், ‘ஜெயா’ தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அவற்றின் குழுமச் சேனல்களையும் இந்த நிறுவனம்தான் ஒளிபரப்புகிறது. மேவிஸ் சாட்காம் என்பது நிறுவனத்தைப் பதிவு செய்வதற்காக கம்பெனி பதிவாளரிடம் கொடுக்கப்பட்ட பெயர்.

கியூரியோ ஆட்டோ மார்க்ஸ்

2002-ம் ஆண்டு, ராஜ் ஹெச்.ஈஸ்வரன், ஹரி ஈஸ்வரன் ஆகியோர் தொடங்கிய நிறுவனம் இந்த ‘கியூரியோ ஆட்டோ மார்க்ஸ்.’ இதன் முதலீடு தொடக்கத்தில் 5 லட்ச ரூபாய்.

பத்திரிகை, செய்தித்தாள், வார இதழ், புத்தகம் அல்லது இதர வடிவிலான ஊடகம் தொடங்கும் நோக்கத்தில் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2004-ல் இந்த நிறுவனத்துக்குப் புதிதாக வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன், அவருடைய சகோதரர் ஜெகதீசன், டாக்டர் சிவக்குமார் ஆகியோர் இயக்குநர்களாக பொறுப்பேற்று உள்ளனர். 

இதையடுத்து, 29 மார்ச் 2008-ல் வைகுண்டராஜனும், நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் ராஜ் ஹெச்.ஈஸ்வரனும் ராஜினாமா செய்துள்ளனர். அதன்பிறகு வைகுண்டராஜனின் சகோதரர் ஜெகதீசன் மற்றும் டாக்டர் சிவக்குமார் ஆகியோர் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்தனர். அதன் பிறகு, பூங்குன்றன் இந்த நிறுவனத்துக்கு இயக்குநராகி உள்ளார். 2012-ம் வருடம், கார்த்திகேயன் மற்றும் டாக்டர் சிவக்குமார் ஆகியோர் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாகி இன்னும் தொடர்கின்றனர்.

மிடாஸ் கோல்டன் ப்ரூவரிஸ்

எம்.நடராஜனின் தங்கை மகன் குலோத்துங்கனும், டாக்டர் சிவக்குமாரும் சேர்ந்து தொடங்கிய நிறுவனம்தான் மிடாஸ் கோல்டன் ப்ரூவரிஸ் நிறுவனம். 2008, பிப்ரவரி மாதம் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளது. பீர், பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களைத் தயாரிக்கும் நிறுவனம்தான் இது.

ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ்

ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம், 1994-ம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளது. பெங்களூரில் நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் இது சேர்க்கப்படவில்லை. எப்படியோ அப்போது இந்த நிறுவனம் தப்பி உள்ளது. 

இதன் ஆரம்ப முதலீடு 50 லட்ச ரூபாய். நிறுவனத்தின் தொழில் நோக்கம், அசையும் அசையாச் சொத்துக்களின் பேரில் நிதி வழங்குவது, கடன் வழங்குவது. அதன் பிறகு, 2002-ம் ஆண்டு, தங்கம், முத்து, பவளம், வைரம் வைடூரியம் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு கடன் வழங்கலாம் என்று தொழில் நோக்கம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

அதன் பிறகு, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 2001-ல், இந்த நிறுவனத்தில் இருந்து விலகி, இரண்டு பேர் புதிய இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் டாக்டர் சிவக்குமார். மற்றொருவர் அனந்தராமன். 

2008-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் முதலீடு 6 கோடியே ஆறரை லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக இருப்பவர்கள், கார்த்திகேயன், டாக்டர் சிவக்குமார் மற்றும் பூங்குன்றன் ஆகியோர். இந்த நிறுவனத்தின் சார்பில் ஜெயலலிதாவுக்கு ஒரு கோடி ரூபாய் கடன் கொடுத்து உள்ளனர்.


மேலும் சில நிறுவனங்கள்...!

1. காட்டேஜ் ஃபீல்டு ரிஸார்ட்ஸ் லிமிடெட்

இதில் டாக்டர் சிவக்குமார், கார்த்திகேயன் ஆகியோர் இந்த நிறுவனத்தில் தொடர்பு உடையவர்களாக உள்ளார்கள்.

15.06.2012-ம் தேதியில் இருந்து இவர்களுக்கு இந்த நிறுவனத்துடன் தொடர்பு உள்ளது.

2. வேர்ல்ட் ராக் பிரைவேட் லிமிடெட்

வைகுண்டராஜன் சுப்பிரமணியன், சிவக்குமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு  23.04.2012 முதல் தொடர்பு உள்ளது.

3. சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்

சிவக்குமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு  15.06.2012 முதல் தொடர்பு உள்ளது.

4. மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரிஸ் பிரைவேட் லிமிடெட்

சிவக்குமார் பெயர் 14.06.2004 தேதியில் இருந்தும் கார்த்திகேயன் பெயர் 23.01.2012-ம் தேதியில் இருந்தும் இருக்கிறது.

5. அவிரி ப்ராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்

சிவக்குமார், கார்த்திகேயன் ஆகிய இருவரது பெயர்களும் 15.06.2012 முதல் உள்ளன.

6. ஃபேன்ஸி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட்

வெங்கடாச்சலம், சங்கர்ராமன் ஆகிய இருவரும் 02.12.2013-ம் தேதியில் இருந்தும் கே.எஸ்.சிவக்குமார், கார்த்திகேயன் ஆகிய இருவரும் 15.06.2012-ம் தேதியில் இருந்தும் தொடர்பில் உள்ளனர்.

விசாரணை வளையம்..?

சில மாதங்களுக்கு முன் டெல்லியில் வைத்து, சுப்பிரமணியன் சுவாமி பேட்டி அளித்தபோது, "சொத்துக் குவிப்பு வழக்கு என்பது 1991 முதல் 1996-ம் ஆண்டு வரையிலான முறைகேடுகளுக்காக மட்டுமே போடப்பட்டது. இந்தக் காலகட்டத்துக்குப் பிறகு பல்வேறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. அது சம்பந்தமாகத் தகவல்களைத் திரட்டி வருகிறேன். புது வழக்கை தாக்கல் செய்வேன்” என்று கூறினார். 

அப்போது முதலே அவர் தகவலைத் திரட்ட ஆரம்பித்து மத்திய அரசிடம் அந்த ஆவணங்களை ஒப்படைத்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்கப்பிரிவு போன்ற துறைகள் கண்கொத்திப் பாம்பாக இதனைக் கவனிக்க ஆரம்பித்து உள்ளன. தேர்தல் அஸ்திரங்களில் இதுவும் ஒன்றாக மாறலாம்.

எந்தெந்த நிறுவனங்கள்...?

18 ஆண்டு தலைவலிக்குப் பிறகு மீண்டு வந்து, (உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வராவிட்டாலும்…!) மீண்டும் பிரச்னை தரக்கூடிய நிறுவனங்களாக எழுந்து நிற்பவற்றில் சில...

1. ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட் 

2.  சந்தனா எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட்

3. ரெயின்போ ஏர் நிறுவனம்

4.  லைஃப்மெட்

5.  மேவிஸ் சாட்காம்

6.  கியூரியோ ஆட்டோ மார்க்ஸ்

7.  மிடாஸ் கோல்டன் ப்ரூவரிஸ்

8. ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ்

9.  காட்டேஜ் பீல்டு ரிஸார்ட்ஸ் லிமிடெட்

10.  வேர்ல்ட் ராக் பிரைவேட் லிமிடெட்

11.  சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்

12. மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரிஸ் பிரைவேட் லிமிடெட்

13.  அவிரி ப்ராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்

14.  ஃபேன்ஸி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட்

15.  ஜாஸ் சினிமாஸ்

- இவற்றுக்குக் கீழே கிளை நிறுவனங்களாகப் பல உள்ளன.

கடன் பெற்றுள்ள நிறுவனங்கள்..!

ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் மற்றொரு நிறுவனம், ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ். இதில், ஜெயா பிரின்டர்ஸ் என்ற நிறுவனம் 76 லட்சமும், ஜெ. ஃபார்ம் ஹவுஸ் என்ற நிறுவனம் 58 லட்சமும், மகாலெட்சுமி என்ற நிறுவனமும் மகாலெட்சுமி திருமண மண்டபமும் 28 லட்சமும் முதலீடு செய்துள்ளன. 

இந்த நிறுவனங்கள் எல்லாம் பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான நிறுவனங்கள் என்று நிரூபிக்கப்பட்டவை. 

அதாவது, அவர்களுடைய நிறுவனங்கள் அவர்களுடைய மற்ற நிறுவனங்களின் பங்குகளை வாங்கி, விற்று, அவர்களுக்கே கடன் கொடுக்கும் தொழில் செய்துவருகின்றன. 

அது எப்படி என்பதற்கு ஆதாரமாக ஜெயா ஃபைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளவர்களையும் முதலீடு செய்தவர்களையும் பார்த்தால் புரியும்.

1.ஜெயலலிதா, 2.வி.கே.சசிகலா, 3.இளவரசி, 4.ஸ்ரீஹரி சந்தானா ரியல் எஸ்டேட்ஸ், 5.ஃபேன்சி டிரான்ஸ்போர்ட்ஸ், 6.க்ரீன் ஃபார்ம் ஹவுஸ், 7.ஜெயா பிரின்டர்ஸ், 8.ஜெயா ரியல் எஸ்டேட்ஸ், 9.லெக்ஸ் ப்ராப்பர்டீஸ் அண்டு டெவலப்பர்ஸ், 10.ஸ்ரீஹரி சந்தானா ரியல் எஸ்டேட்ஸ், 11.ராயல் வேலி ஃப்ளிடெக் எக்ஸ்போர்ட்ஸ், 12.அவிக்னா அக்ரோ, 13.காட்டேஜ் ஃபீல்ட் ரிசார்ட்ஸ், 14.அவிரி ப்ராப்பர்ட்டிஸ், 15.பரணி ரிசார்ட்ஸ், 16.காட்டேஜ் ஃபீல்ட் ரிசார்ட்ஸ், 17.கோவிந்தராஜன், 18.ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங், 19.ஜெயா இன்வெஸ்ட்மென்ட் ஏஜென்சி, 20.வி.ஆர்.குலோத்துங்கன்

சத்யம் தியேட்டர  அதிபர் மீது நில அபகரிப்புப் புகார்

சென்னை, நுங்கம்பாக்கம், காசி கார்டன், குமரப்பா தெருவில், அடிபள்ளி கந்தசாமி செட்டி அண்டு செஞ்சு வெங்கடசுப்பு குருவஜம்மா அறக்கட்டளை இயங்கி வருகிறது. இதன் பொருளாளர் எதிஸ் குப்தா.

இவர் 2013-ம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில், தங்கள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 16  கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு இன்றைய தேதியில் பல கோடி ரூபாய். 

ஆனால், அதை தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வியின் சம்பந்தியான உமா மகேஸ்வரி எங்களிடம் இருந்து மிகக் குறைந்த விலையைக் கொடுத்து அபகரித்துக்கொண்டார். 

அப்படி அபகரித்துக்கொண்ட நிலத்தில், 2.5 கிரவுண்டை சூசய் ஆனந்த் ரெட்டி என்பவருக்கு விற்றுவிட்டார். அதை சூசய் ஆனந்த் ரெட்டி அவருடைய உறவினரான ஸ்வரூப் ரெட்டிக்கு விற்றுவிட்டார். ஸ்வரூப் ரெட்டி என்பவர் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் இயக்குநர்.

இப்போது, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு எங்களை மிரட்டவும் செய்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து எங்கள் நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டு இருந்தார். 

இதையடுத்து, உமா மகேஸ்வரியும் சூசய் ஆனந்த் ரெட்டியும் கைது செய்யப்பட்டனர். சத்யம் சினிமாஸ் இயக்குநர் ஸ்வரூப் ரெட்டி கைது செய்யப்படவில்லை. ஆனால், செப்டம்பர் 2013 - அன்று அவருடைய பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி : ஜூனியர்விகடன் - 08. நவம்பர், 2015

பள்ளிக்கூடம் போகாமலே - சினிமா விமர்சனம்

05-11-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மதிப்பெண்கள்தான் முக்கியம் என்று பெற்றோர்களும், தேர்ச்சி விகிதம்தான் முக்கியம் என்று பள்ளிகளும் நினைத்து இன்றைய மாணவர்களை பிழிந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான ஒரு நோக்கமே தவறு என்பதை ஒரு திரைப்படத்தில் சொல்ல வந்திருப்பதே இந்தக் காலக்கட்டத்தில் மிகப் பெரிய விஷயம்.
அந்த மிகப் பெரிய விஷயத்தை இத்திரைப்படத்தில் செய்திருக்கிறார் இயக்குநர் ஜெயசீலன் பவுல்தாஸ்..!

கால் டாக்சி ஓட்டுனரான ஏ.வெங்கடேஷுக்கு தனது மகன் நன்றாகப் படித்து நல்ல மார்க் எடுக்க வேண்டும் என்று ஆசை. இதற்காக பார்க்கும்போதெல்லாம் மகனை படி, படி என்று கண்டித்துக் கொண்டேயிருக்கிறார். அம்மா தேவதர்ஷிணியின் அனுசரனையால் வீட்டில் அப்பாவுடன் ஒட்டுதல் இல்லாமல் வளர்கிறார் மகன் தேஜஸ்.
தேஜஸின் பிளஸ் டூ வகுப்பில் அதே ஊரில் பெரும் புள்ளியான ரியல் எஸ்டேட் அதிபரான ராஜ்கபூரின் மகள் ஐஸ்வர்யாவும் படிக்க வருகிறாள். இருவருக்கும் இடையில் துவக்கத்தில் மோதல் உருவாகி பின்பு ஒரு கணத்தில் அது முடிவுக்கு வந்து நட்பாகிறது. அதே வகுப்பில் இருக்கும் மிகப் பெரிய பணக்காரரின் மகனான திலீபன் தான்தான் எதிலும் முதல்வனாக இருக்க வேண்டும் என்ற எண்ணமுள்ளவன். இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என்று நினைப்பவன்.
பள்ளி மாதத் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தேஜஸை பெற்றோர்களும், ஆசிரியர்களும் திட்டுகின்றனர். இதனால் விரக்தியடைந்த தேஜஸ் தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது அவரைக் காப்பாற்றும் ஐஸ்வர்யா தேஜஸுக்கு ஊக்கம் கொடுத்து அவனை படிக்க வைக்கிறாள். ஐஸ்வர்யாவின் தூண்டுதலாலும், அவளது அன்பான பேச்சாலும் கவரப்பட்டு படிப்பில் ஆர்வம் கொண்டு படிக்கிறான் தேஜஸ். மாத்த் தேர்வுகளில் வகுப்பில் முதல் மாணவனாக வருகிறான்.
இந்த நேரத்தில் பொதுத் தேர்வுக்கு சில நாட்கள் இருக்கும்போது ஒரு மாலை வேளையில் ஐஸ்வர்யாவும், தேஜஸும் காணாமல் போகிறார்கள். ஐஸ்வர்யாவின் அப்பாவும், தேஜஸின் பெற்றோர்களும் அவர்களைத் தேடுகிறார்கள். போலீஸும் வலைவீசி தேடுகிறது..
ஏன் காணாமல் போனார்கள்..? எங்கே போனார்கள்..? யார் அவர்களைக் கடத்தியது..? என்பதுதான் மிச்சம் மீதி கதை..!

அறிமுக நடிகரான தேஜஸ் பிளஸ்டூ மாணவருக்கு பொருத்தமானவர்தான். நடிப்பென்று பார்த்தால் இயக்குநர் சொன்னதை அப்படியே செய்திருக்கிறார் என்று தெரிகிறது. இன்னும் நான்கைந்து பட வாய்ப்புகள் கிடைத்து தன்னை மேம்படுத்திக் கொள்வார் என்று நம்புவோம். நடனமும் நன்கு ஆடியிருக்கிறார்.
ஐஸ்வர்யா மற்றும் திலீபன் இருவருமே நடிப்புக்கு பஞ்சம் வைக்கவில்லை. மெச்சூரிட்டியான வேடத்தை ஏற்றிருக்கும் ஐஸ்வர்யா சிறப்பான இயக்கத்தினால் தனது நடிப்பைக் காட்டிவிட்டு தப்பியிருக்கிறார். அதேபோல் திலீபனும்.. இறுதிக் காட்சியில் தனது அப்பாவிடம் வீர ஆவேசமாகப் பேசிவிட்டு தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருக்கும் காட்சியில் ஒரு தனியான தவிப்பைக் காட்டியிருக்கிறார். அறிமுக இளம் பிஞ்சுகளை இந்த வகையில் அமர்க்களமாக நடிக்க வைத்த இயக்குநருக்கு ஒரு பாராட்டு..
கணேஷ் வெங்கட்ராமுக்கு இது எத்தனாவது போலீஸ் வேடம் என்று தெரியவில்லை. ஆனால் இது சாலப்பொருத்தம். விசாரணை செய்யும் விதம்.. கேள்விகளை கேட்கும் தொனி, கம்பீர மிடுக்கு.. அதே சமயம் சாந்தமாக உரையாடி பதில்களை பெறுவது என்று போலீஸ் இன்வெஸ்டிகேஷனுக்கு உதவுவதை போலவே இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சை அமைத்திருக்கிறார் இயக்குநர். மறைந்த நடிகர் ஸ்ரீஹரியின் அழுத்தமான நடிப்பும் படத்திற்கு ஒரு பலமாகக் கிடைத்திருக்கிறது.
யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்திருக்கும் பலம். படத்தின் கதைக்களம் சென்னைதான் என்றாலும் படம் முழுக்க முழுக்க கேரள பகுதிகளில் படமாக்கப்பட்டிருப்பது ஒளிப்பதிவு மூலமாகவே தெரிகிறது. இசையும், பாடல்களும் சுமார் ரகம். பாடல் காட்சிகளை படமாக்கியிருக்கும்விதம் குளுமை..!
கிளைமாக்ஸில் கணேஷ் வெங்கட்ராம் பேசும் பேச்சுக்கள் இன்றைக்கு இந்தியா முழுவதிலும் இருக்கும் மாணவர்களின் மனதில் இருக்கும் கேள்விகள்தான்.. மதிப்பெண்களை மையமாகவே வைத்தே மாணவர்களின் திறமையை எடை போடுவது முட்டாள்தனம். ஒவ்வொருவனுக்கும் வேறு, வேறு திறமைகள் இருக்கும். அதை வைத்தும் அவன் வாழ்க்கையில் ஜெயிக்கலாம். வெறுமனே மதிப்பெண்களை அதிகம் வாங்கி தொழில் கல்வி படிப்பதாலேயே வாழ்க்கையில் அவன் ஜெயித்ததுபோலாகிவிடாது என்கிறார் கணேஷ்.
ஒவ்வொரு பள்ளியும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சிரமங்களை நினைத்தே பார்க்காமல் தங்களது பள்ளியின் தேர்ச்சி விகித்த்தை எப்பாடுபட்டாவது அதிகப்படுத்துவதே தங்களது நோக்கம் என்று செயல்படுவது சமூகச் சீர்கேட்டைத்தான் விளைவிக்கிறது என்கிறார் கணேஷ்.
இந்த விவாத மேடையை கடைசியான சில நிமிடங்களில் நடத்திக் காட்டி உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இப்படியான வெளிப்படையான பேச்சு இதுவரையிலும் எந்த சினிமாவிலும் வந்த்தில்லை என்பதால் பாராட்டுவோம்.
சிற்சில லாஜிக் இடறல்கள் இருக்கின்றன. இருந்தாலும் அத்தனையையும் தாண்டி படம சொல்லும் நீதி இன்றைய இந்திய மாணவர்களின் உரிமைக் குரலாக இருப்பதால் இந்த பள்ளிக்கூடம் போகாமலே படத்தினை வாழ்த்தி வரவேற்போம்.

விரைவில் இசை - சினிமா விமர்சனம்

01-11-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கோடம்பாக்கத்தில் இயக்குநராக வேண்டும் என்கிற வெறியில் இருக்கும் சுதந்திர சேகரன் என்னும் சுசியும், இசையமைப்பாளராக பெயரெடுக்க வேண்டும் என்கிற தீராத தாகத்தில் இருக்கும் ஏ.ரங்கராமன் என்கிற ராமனும் இணை பிரியாத தோழர்கள். அறை தோழர்களும்கூட.

இருவரும் முதல் படத்திலேயே இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற கொள்கையுடையவர்கள். இதனால் சுசி கதை சொல்லப் போகும்போதுகூட ராமனையும் சேர்த்தே அழைத்துச் செல்லும் வழக்கத்தை வைத்திருக்கிறான்.
இவர்களைப் போன்றவர்களுக்கு வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் டீக்கடைகள்தான் பைவ் ஸ்டார் ஹோட்டல்கள். டெல்லி கணேஷ் நடத்தும் டீக்கடையைத்தான் கதைகளை அலசி ஆராயும் இடமாக வைத்திருக்கிறார்கள்.  
திடீரென்று விஜயசங்கர் இவர்களை சந்திக்கிறார். தான் ஹீரோவாக வேண்டும் என்கிறார். அவர்கள் இருவரின் மாதச் செலவுகள் அனைத்தையும் தானே பார்த்துக் கொள்வதாக உறுதியளிக்கிறார். இப்போதைக்கு பணப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்ததே என்றெண்ணி அவரையும் அறையில் அனுமதிக்கிறார்கள்.
பாண்டிச்சேரியில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லி ஓகே வாங்கி அட்வான்ஸையும் வாங்கிக் கொண்டு திரும்புகிறார்கள். ஆனால் அடுத்த நாளே “என் ஜோஸியர் இப்போதைக்கு எதுவும் வேண்டாம்ன்னு சொல்லிட்டார்..” என்று தயாரிப்பாளர் சொல்ல சுசியின் தலையில் இடி விழுகிறது.
இடையில் சுசிக்கு புகைப்படம் எடுக்கப் போன இடத்தில் அர்ப்பனாவுடன் காதல் உருவாகிறது. வெளிநாட்டில் இருக்கும் தன் அப்பாவுக்கு வருங்கால மருமகன் என்னவாக இருக்கிறான் என்பதைச் சொல்ல வேண்டுமே என்கிற தவிப்பில் “சினிமாவை விட்டுவிட்டு யதார்த்தமாக யோசித்து வேறு வேலையைத் தேடிக் கொள்..” என்று அக்கறையாகச் சொல்கிறார் அர்ப்பனா. “என் வாழ்க்கையே சினிமாதான். நீ உன் வழியைப் பார்த்திட்டுப் போ.. நான் என் வழில போறேன்…” என்று அந்தக் காதலுக்கு சங்கூதிவிட்டு ஒரு ஃபுல்லை ராவாக அடித்துவிட்டு காதலை மறந்து தொலைக்கிறார் சுசி.
இன்னொரு பக்கம் ராமனுக்கும் ஒரு காதல் வருகிறது. அது தொலைபேசியில் ‘கடன் வேண்டுமா?’ என்று கேட்கும் டெலிகாலில் இருந்து ஆரம்பிக்கிறது. ஹீரோயின் ஸ்ருதி தனது கஷ்டப்படும் குடும்ப சூழலுக்காக மாதந்தோறும் டார்கெட் வைத்து இந்த கஷ்டமான வேலையைச் செய்து வருகிறார்.
அந்த இனிய குரலுக்காகவே ஸ்ருதியை விரும்பத் துவங்கும் ராமன் ஸ்ருதியுடனான தனது காதலை உறுதி செய்து கொள்கிறான்.
மறுபடியும் தேடுதல் வேட்டையை தீவிரமாக நடத்தி ஒரு தயாரிப்பாளரை பிடிக்கிறான் சுசி. சுசி சொன்ன கதைக்கு தயாரிப்பாளர் ஒத்துக் கொள்கிறார். படத்தின் வேலைகளை ஆரம்பிக்கிறார். “நாளைக்கு காலைல பூஜை. சீக்கிரமா ஸ்டூடியோவுக்கு வந்திருங்க…” என்று சொல்லிவிட்டு தயாரிப்பாளர் போக.. பரபரவென்று இருக்கிறார்கள் சுசியும், ராமனும்.
இந்த நேரத்தில் ஸ்ருதி ஆர்டர் பிடிப்பதற்காக ஒருவரை பார்க்க அவனது வீட்டிற்குச் செல்ல.. அங்கே ஒரு பெரிய களேபரமே நடக்கிறது. தான் ஒரு ஆபத்தில் சிக்கியிருப்பதாகவும், வந்து காப்பாற்றும்படியும் ஸ்ருதி செல்போனில் அழைக்க.. ராமனும், சுசியும் அங்கே ஓடி வருகிறார்கள்.
அவர்களின் வாழ்க்கை லட்சியத்திற்கு பூஜை போடும் அந்த நன்னாளில் அந்த இடத்தில் வேறு ஒரு ‘பூஜை’ எதிர்பாராமல் நடந்துவிட.. அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. அது என்ன என்பதும்..? இறுதியில் என்ன ஆனது..? படம் ஸ்டார்ட் ஆனதா.. இல்லையா.. என்பதெல்லாம் தியேட்டரில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
நடிகர்களில் சுசியாக நடித்திருக்கும் மகேந்திரன் ராமனாக நடித்திருக்கும் ரோஜர் இருவருக்குமே நடிப்புக்கு ஸ்கோப் இருந்தாலும் நடிக்க வைக்கப்படவில்லை என்பதால் எதுவும் சொல்ல முடியவில்லை. நாயகிகளில் அர்ப்பனாவும், ஸ்ருதியும் மட்டுமே கொஞ்சமாவது நடித்திருக்கிறார்கள். ஸ்ருதியின் அழகு ரசிக்க வைக்கிறது. அவரை இன்னமும் அழகாகப் பயன்படுத்தியிருக்கலாம்..
டெல்லி கணேஷ் அவர் வருகின்ற காட்சிகளிலெல்லாம் தனது அனுபவ நடிப்பால் பார்க்க வைத்திருக்கிறார். ஜெய்சங்கரின் இரண்டாவது மகனான விஜய்சங்கர் இதில் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். இயக்குதலில் கோட்டைவிட்டதால் இவருடைய அறிமுகமும் வீணாகிவிட்டது.
பாடல்களும், இசையும் சுமார் ரகம். ஒளிப்பதிவு அதைவிட சுமார் ரகம். பிட்டு, பிட்டான காட்சிகள்.. தொடர்பில்லாத திரைக்கதை அமைப்பு.. இதெல்லாம் சேர்ந்து படத்தின் பிற்பாதியில் சலிப்பைத்தான் தருகின்றன.
கிளைமாக்ஸில் வரும் அந்த டிவிஸ்ட் நிச்சயம் எதிர்பாராதது. இன்னும் நல்லபடியாக பயன்படுத்தியிருந்தால் மூவரின் மீதும் ஒரு பரிதாப உணர்வு வந்து படத்தின் தன்மைக்கு ஒரு பெயராவது கிடைத்திருக்கும். அந்த இடத்திலும் அழுத்தமான நடிப்பும், காட்சிகளும் இல்லாததால் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.
சொந்த மாநிலமாகவே இருந்தாலும் கோடம்பாக்கத்தில் வாழும் துணை, இணை இயக்குநர்களெல்லாம் அகதி மக்கள் போலவேதான் காலம் தள்ளி வருகிறார்கள். என்றைக்காவது ஒரு நாள் தங்களது லட்சியம் நிறைவேறும். நாங்களும் படங்களை இயக்கி புகழ் பெறுவோம். பாராட்டுக்களை வாங்குவோம் என்கிற லட்சியக் கனவோடு அரை வயிறு, கால் வயிறோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது நகைச்சுவையோடு சொல்லக் கூடிய விஷயமே அல்ல.
இந்தப் போராட்ட உணர்வை அதற்கேற்ற காட்சியமைப்புகளோடு, திரைக்கதையோடு சொல்லியிருக்க வேண்டும். எத்தனையோ திரைக்கதைகள் அமைத்திருக்கலாம்.  ஆனால் இந்தப் படம் இரண்டாங்கெட்டனாக சீரியஸும் இல்லாமல், காமெடியும் இல்லாமல் இயக்குநர் ஏதோ தனக்குத் தோன்றியவகையில், தனக்குத் தெரிந்த வகையில் திரைக்கதை அமைத்து இயக்கி கொடுத்திருக்கிறார். அப்ரண்டிஸிப் இயக்குநர் என்கிற பெயரைப் பெறுவதற்கு எதற்கு இத்தனை முஸ்தீபு செய்து முதல் படத்தை இயக்க வேண்டும்..?
இயக்குநர் வி.எஸ்.பிரபா கோபித்துக் கொள்ளாமல், இன்னும் நான்கைந்து திரைப்படங்களில் வேறு இயக்குநர்களிடம் பணியாற்றி இயக்குதல் தொழிலைக் கற்றுக் கொண்டு படமெடுக்க வந்தால் அவருக்கும் நல்லது. அவரை நம்பி பணம் போடத் துணியும் தயாரிப்பாளருக்கும் நல்லது.
ஒரு நல்ல கதை வீணாகிவிட்டது..!