தப்பாட்டம் - சினிமா விமர்சனம்

30-09-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தில் அறிமுக நாயகன் துரை சுதாகர் ஹீரோவாகவும், அறிமுக நாயகி டோனா ரொசாரியா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.
மேலும், கோவை ஜெயக்குமார், பேனா மணி, கூத்துப் பட்டறை துளசி,  பேராசிரியை லட்சுமி,  ரூபி,  பொள்ளாச்சி M.K.ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை – பழநி பாலு, ஒளிப்பதிவு – ராஜன், படத் தொகுப்பு – ஆர். சரண் சண்முகம், கலை -பவானி ஈஸ்வரன், நடனம் – ராதிகா, பாடலாசிரியர் – விக்டர் தாஸ்,  கார்த்திக்  &  பாலு, சண்டை பயிற்சி – ஆக்சன் பிரகாஷ், எழுத்து, இயக்கம் – முஜிபூர் ரஹ்மான், தயாரிப்பு -ஆதம் பாவா.
உண்மை அறியாமல் மனைவியை சந்தேகப்பட்டால் என்ன ஆகும் என்பதை கதைக் கருவாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நாயகன் தப்பாட்டம் ஆடும் கலைஞன். இவருடைய சொந்த அக்காள் மகளை காதலிக்கிறார். அவரும் அப்படியே..! இவருடைய தாயாரும் அதே ஊரில்தான் இருக்கிறார்.
அந்த ஊர்ப் பண்ணையாரின் ஒரே மகன் ஸ்த்ரீ லோலன். ஊருக்குள் ஒரு பெண்ணை விடுவதாக இல்லையாம். பட்டப் பகலில் வயக்காட்டுக்குள் விரட்டி, விரட்டி கற்பழிக்கிறார். எப்பா.. எத்தனை நாளாச்சு இது மாதிரியான கற்பழிப்பு காட்சிகளை பார்த்து..?
இதே ஜூனியர் பண்ணையார் நாயகனின் அக்கா மகளான ஹீரோயினையும் ஒரு நாள் கையைப் பிடித்திழுத்து அடிவாங்கிக் கொண்டு போகிறார். இந்தச் செய்தியை அறியும் ஹீரோயினின் அம்மா அவசரம், அவசரமாக நாயகனுக்கும், நாயகிக்கும் திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
இதை எதிர்பார்க்காத ஜூனியர் பண்ணையார் தனது கெத்தை காட்ட வேண்டும் என்பதற்காக சாராயக் கடைக்கு வந்த இடத்தில் நாயகியை தான் ஏற்கெனவே ‘கை’ வைத்துவிட்டதாகச் சொல்கிறார். இதனைக் கேட்டு ஆவேசப்படும் நாயகன் ஜூனியர் பண்ணையாரை அங்கேயே ஒரு ‘கை’ பார்க்கிறார்.
ஆனால் அங்கே நாயகியோ கர்ப்பமாக இருக்கிறாள். தன் மனைவியின் கர்ப்பத்துக்குத் தான் காரணம் இல்லை என்று நினைக்கிறார் ஹீரோ. இதனால் மனைவியிடமிருந்து ஒதுங்குகிறார். அக்காவும், அம்மாவும் சொல்லியும் கேட்காமல் சதா குடியிலேயே மிதக்கிறார்.
நாயகியோ கணவரின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார். நாயகன் திரும்பி வந்தாரா.. இல்லையா.. என்பதுதான் படத்தின் திரைக்கதை.
படத்தின் பட்ஜெட்டை கருத்தில் கொண்டு படம் 1980-களில் நடப்பதாக மாற்றியிருக்கிறார்கள். அப்போதுதானே தென்னந்தோப்புக்குள் சாராயக் கடை வைத்திருப்பதாக காட்சி வைக்க முடியும்..?!
புதுமுகங்களின் நடிப்பைப் பற்றிச்  சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதிலும் ‘ப்ப்ளிக் ஸ்டார்’ என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ள தலைப்பட்டிருக்கும் ஹீரோ துரை சுதாகர், தன்னால் எந்த அளவுக்கு முடியுமோ அதைச் செய்திருக்கிறார்.
‘என் ராசாவின் மனசிலே’ ராஜ்கிரணை மனதில் நினைத்துக் கொண்டு அவர் போலவே படம் நெடுகிலும் ஆக்சனை காட்டியிருக்கிறார் ஹீரோ. தப்பில்லைதான். ஆனால் இது நடிப்பில்லையே என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.
ஹீரோயின் இதைவிட மோசம்.. படு செயற்கையான நடிப்பு. வலுக்கட்டாயமாக வலிந்து வரவழைக்கப்பட்ட நடிப்பாகவும் இருக்கிறது. அவர் குழந்தைத்தனத்துடன் பேசுவதை கேட்டால் நமக்கே பாவமாக இருக்கிறது. அப்படியொரு அப்பிராணி நடிப்பைக் கொட்டியிருக்கிறார்.
இவருடைய அம்மா, பாட்டி இருவருமே வயதுக்கு மீறிய கேரக்டரில்… பாட்டி ஓவரான மேக்கப்பிலும், ஓவரான நடிப்பிலும் சொதப்பியிருக்கிறார்.
பண்ணையார், மற்றும் பாவா லட்சுமணன் இருவர் மட்டுமே நடித்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.
1980-களில் நடக்கும் கதையை இப்போது ஏன் எடுக்க வேண்டும் என்பதற்கான நியாயமான ஒரு காரணத்தைக்கூட படத்தில் சொல்லவில்லை. பின்பு ஏன் இப்போது இதனை இப்படி எடுத்தார்கள் என்றும் தெரியவில்லை.
வசனங்கள் பலவும் அரதப் பழசாக இருக்கின்றன. “ஆடி மாசத்துல கல்யாணம் செஞ்சா தப்பில்லையே..?” என்று பாட்டியே சொல்கிறார். அதுவும் கிராமத்தில்.. நம்பத்தான் முடியவில்லை. பல வசனங்கள் காமெடியாகவே பேசப்பட்டிருக்கின்றன.
இயக்குநரின் திறமையினால் ஒட்டு மொத்தமாய் படம், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை மாரத்தான் ஓட்டம் போல மெதுவாய் ஓடிய கதையாய் தெரிகிறது.
ஒளிப்பதிவு, சண்டை பயிற்சி இதையெல்லாம் கணக்கில்கூட சேர்க்காதீர்கள். பாடல்களை ஒரு முறை கேட்கலாம் என்கிற அளவுக்கு இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர். பாராட்டுக்கள்.
அந்தக் காலத்திய மரத்தடி பஞ்சாயத்து போல கற்பழிப்புக்கு தண்டனையாக ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் அந்த நிகழ்வு, தமிழ்ச் சினிமா இன்னமும் சாகவில்லை என்பதை நிரூபித்திருக்கிறது.
அதீதமான குடிக்கும் காட்சிகள், மற்றும் லாஜிக்கே இல்லாத திரைக்கதை இவையிரண்டும் படத்திற்கு வில்லன்களாக அமைந்துவிட்டன.
இந்தக் கதைக்கு ஹீரோவின் தப்பாட்டம் ஆடும் கேரக்டர் ஸ்கெட்ச் எதற்கு என்று தெரியவில்லை. தேவையற்ற இந்த ஹீரோயிஸத்தால் படம் மக்களையும் அதிகம் கவரவில்லை.
‘மனைவியை சந்தேகப்படாதே’ என்பது சரியான கருத்துதான். ‘உண்மையை ஆராய்ந்து பார்த்து அறிந்து தெரிந்து கொள்’ என்பதையும் கிளைமாக்ஸில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆனால் அந்தக் காட்சியில் நடிப்பென்று எதுவும் இல்லாததால் அதுவும் காற்றோடு காற்றாய் போய்விட்டது..!
தப்பாட்டம் – உண்மையாகவே தப்பாட்டம்தான்..!

விவேகம் - சினிமா விமர்சனம்

26-08-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
படத்தில் அஜித்குமார் நாயகனாக நடித்திருக்கிறார். காஜல் அகர்வால், அக்சரா ஹாசன், விவேக் ஆனந்த் ஓபராய், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கலை – மிலன், ஒளிப்பதிவு – வெற்றி, இசை – அனிருத், படத் தொகுப்பு – ரூபன், தயாரிப்பு – சத்யஜோதி பிலிம்ஸ், எழுத்து, இயக்கம் – சிவா.

பல்கேரியாவில் இருக்கும் Counter Terrorist Squad என்கிற அமைப்பில் ஒரு ரகசிய ஏஜெண்ட்டாக இருக்கிறார் அஜய்குமார் என்னும் அஜித்குமார். இவருடன் விவேக் ஆனந்த் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்ட மேலும் மூன்று பேரும் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
ஒவ்வொரு ஆபரேஷனிலும் இந்த நால்வர் கூட்டணி வெற்றி மேல் வெற்றி பெற்று வருகிறது. இந்தக் குழுவுக்கு தலைமை வகிக்கும் அஜித் பல சந்தர்ப்பங்களில் தனது குழுவினரை துப்பாக்கிக் குண்டுகளில் இருந்து காப்பாற்றியிருக்கிறார். தனது டீம் மெம்பர்களை தனது உயிரினும் மேலான உடன்பிறப்புகளாக நம்புகிறார் அஜித்.
பல்கேரியாவில் தமிழ் ஹோட்டலை நடத்தும் காஜல் அகர்வாலுடன் அஜித்திற்கு காதலாகி, அவரையே கல்யாணமும் செய்து கொள்கிறார் அஜித்.
இந்த நேரத்தில் பூமிக்கு அடியில் வெடிக்கக் கூடிய வகையில் அணுகுண்டுகளை உலகத்தின் பல இடங்களிலும் புதைத்து வைத்திருக்கிறார்கள் சில தீவிரவாதிகள். இந்த குண்டுகளை சில நாடுகளில் வெடிக்க வைத்து, செயற்கையாக பூகம்பங்களை ஏற்படுத்தி, அந்தந்த நாடுகளில் இயற்கை பேரிடர்களை வரவழைத்து, அந்த நாட்டை நிலை குலையச் செய்து, இதன் மூலமாக தங்களுடைய வணிகத்தை அந்தந்த நாடுகளில் செயல்படுத்தத் துவங்குகிறார்கள் சில உலகளாவிய பலசாலி தொழிலதிபர்கள்.
இப்படியொரு அதிபுத்திசாலித்தனமான கூட்டம் அடுத்து இந்தியாவை குறி வைத்திருக்கிறது. இதையறியும் அஜித் அண்ட் கோ இந்த கொடிய செயலை நிறுத்த எண்ணுகிறார்கள். இதற்காக இந்த குண்டுகளை வெடிக்காமல் இருக்க வைக்கும் புரோகிராம் கோடிங்கை தேடுகிறார்கள் அஜித்தும் அவரது குழுவினரும்.
இதற்காக இணைய ஹேக்கிங் துறையில் உலகத்திலேயே அதி புத்திசாலியான அக்சரா ஹாசனை தேடுகிறார்கள். பல்கேரியாவிலிருந்து குரோஷியா, செர்பியா என்றெல்லாம் பயணம் செய்து கடைசியாக செர்பியாவில் அக்சராவை கண்டு பிடிக்கிறார் அஜித்.
ஆனால் அக்சராவோ தான் வெறும் ஹேக்கர் மட்டும்தான் என்றும், ஒரிஜினல் கோடிங் தன்னிடம் இல்லை என்கிறார். இதையறியும் அஜித்தின் கூட்டாளிகள் அக்சராவை விட்டுவிட்டு திரும்பும்படி அஜித்திடம் சொல்கிறார்கள். ஆனால் அஜித் இதனை ஏற்காமல் அக்சராவை காப்பாற்ற நினைக்கிறார்.
இந்த நேரத்தில் எங்கிருந்தோ வரும் ஒரு கூட்டம் அக்சராவை குறி வைத்து தாக்க இந்தத் தாக்குதலில் அக்சரா பலியாகிறார். இதனால் வெகுண்டெழும் அஜித் தாக்கியவர்களை கொலை செய்துவிட்டு தப்பித்து வர.. அவருடைய நண்பர்களே அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.
தான் உயிருக்கு உயிராய் நினைத்த நண்பர்களே தனக்கு எதிரியாய் இருப்பதை நம்ப முடியாமல் திகைக்கும் அஜித்.. அவர்களுடைய கொடூரத் தாக்குதலில் இருந்து எப்படியோ தப்பித்துவிடுகிறார்.
பின்னர் அஜித் உயிருடன் இருப்பதை அறியும் விவேக் ஓபராய் தலைமையிலான டீம், இப்போது பிளேட்டை மாற்றிப் போட்டு உலகத்தில் நடந்த அத்தனை குண்டு வெடிப்புகளையும் அஜித்தின் மீது சுமத்துகிறது. அஜித் ஒரு ‘மோஸ்ட் வான்ட்ட் டெர்ரரிஸ்ட்’ என்று உலகத்தை நம்ப வைக்கிறார்கள்.
இதன் மூலமாக அஜித்தை கொலை  செய்ய சர்வதேச அளவில் பெர்மிஷன் வாங்கிக் கொண்டு அதனை செயல்படுத்த நினைக்கிறார் விவேக் ஓபராய். தன்னுடைய ஒரு காலத்திய நட்புகளே இப்போது தன்னை கொலை செய்ய நினைப்பதை அறியும் அஜித் அதனைத் தடுக்க நினைக்கிறார். இன்னொரு பக்கம் இந்தியாவை தாக்கப் போகும் அந்த செயற்கையான பூகம்ப முயற்சியைத் தடுத்து இந்திய துணைக் கண்டத்தைக் காப்பாற்றவும் நினைக்கிறார்.
இது முடிந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை..!
அஜித்திற்கு இது 25-வது வருடம். இத்தனையாண்டு கால அவருடைய திரையுலக வாழ்க்கையில், இந்தப் படத்தில் அவர் கொடுத்திருக்கும் உழைப்பை போல வேறு எந்தப் படத்திலும் கொடுத்திருக்க மாட்டார் என்று உறுதியாகச் சொல்லலாம்.
அந்த அளவுக்கு கடுமையான உழைப்பை படத்தில் கொட்டியிருக்கிறார்கள். சண்டை பயிற்சியாளர், கலை இயக்குநர், உதவி இயக்குநர்கள், சண்டை கலைஞர்கள் என்று அத்தனை பேரின் வியர்வையும், உழைப்பும் இந்தப் படத்தின் பிரேம் பை பிரேம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
ஆனால்..
படத்தில் கதை என்ற ஒரு வஸ்து இல்லவே இல்லை என்பதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய கொடுமை. அஜித்குமார் வேலை செய்யும் அந்த அமைப்பை யார் நடத்துவது..? இந்திய அரசா..? ஐ.நா. சபையா..? ஐரோப்பிய யூனியனா..? அல்லது நேட்டோ அமைப்பா..? எது என்பதே தெரியாமல் சர்வதேச அரசியலை உலுக்கும் அளவுக்கான ஒரு முக்கிய விஷயத்தில் சட்டென்று ஜேம்ஸ்பாண்ட் பாணியில் குதித்து செயற்கரியச் செயலைச் செய்கிறார் அஜித்.
படத்தில் துப்பாக்கி குண்டுகளும், மனிதர்களும் பறந்து கொண்டேயிருக்கிறார்கள். ஆக்சன் காட்சிகளை அல்வா சாப்பிடுவது போல படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சிவா.
படத்தின் துவக்கத்தில் வரும் அறிமுகக் காட்சியும், அக்சரா ஹாசனின் காதலனை தேடி குரோஷியாவில் ரவுடி கும்பலின் இருப்பிடத்திற்கே சென்று தாக்கும் காட்சியிலும் இப்பேர்ப்பட்ட சண்டை பயிற்சிகளுக்கு கலைஞர்கள் எப்படி இத்தனை கடுமையாய் உழைத்தார்கள் என்று யோசிக்க வைத்திருக்கிறார்கள்.
என்ன இருந்து.. என்ன புண்ணியம்..? கதை இல்லியே..?
குரோஷியா, செர்பியா, பல்கேரியா என்று கதை மூன்று நாடுகளிலும் பயணிக்கிறதே ஒழிய.. எதற்காகச் செல்கிறார்கள்.. என்ன செய்யப் போகிறார்கள்.. ஏன் செய்கிறார்கள்.. என்பதற்கான விளக்கமே படத்தில் இல்லை.
இது தமிழ்ப் படம் என்பதையே உணர முடியாத அளவுக்கு இயக்குநர் சிவா படமெடுத்திருக்கிறார். அக்சராவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததை கண்டறியும் காட்சியில் அந்த மருத்துவருடன் அஜித் பேசும் வசனங்களை மட்டும் தனியாக கேட்டால் “கோணங்கி எழுதிய சிறுகதையில் வரும் வரிகளா..?” என்று கேட்பீர்கள். அந்த அளவுக்கு சாமான்ய ரசிகனுக்கும் அன்னியமாக இருக்கின்றன பல வசனங்கள். தமிழைவிடவும் ஆங்கில வசனங்களே அதிகம் என்பதும் படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்.
அதிலும் பல வசனங்கள் ரிப்பீட்டாகிக் கொண்டேயிருக்க.. எதற்காக இப்படி திரும்பத் திரும்ப ‘ஜன கன மண’ போல ரசிகர்களின் மனதில் பதிய வைக்கிறார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களை பாராட்ட வேண்டியதுதான். ஆனால் இப்படி சீன் பை சீன் பாராட்டிக் கொண்டேயிருந்தால் எப்படி..? அதிலும் வில்லனாக நடித்திருக்கும் விவேக் தன்னைப் பற்றிச் சொல்கிறாரோ இல்லையோ.. அஜித் எப்போதும் சாக மாட்டார் என்று அவரே கட்டியம் கட்டிச் சொல்லிக் கொண்டே போகிறார். பின்பு எப்படி அவரது கேரக்டரை ரசிக்க முடியும்..?
அஜித்தோ மனைவியிடம் பேசும்போதும் அதே மாடுலேஷன்.. வில்லன்களிடம் பேசும்போதும் அதே மாடுலேஷன்.. அக்சராவிடம் அமைதியாய் பேசும்போதும் அதே மாடுலேஷன்.. இப்படி வித்தியாசமே காட்டாமல் வசனங்களை ஒப்பித்திருப்பதால், பல சமயங்களில் கடுப்புதான் நம் தலைக்கு ஏறுகிறது. அதிலும் அவரைப் புகழ்ந்து பாடும் வசனங்களை அவரே பேசுவதுதான் எரிச்சல்.
இதுவரையிலும் தமிழ்ச் சினிமாவில் நட்புக்கு இலக்கணமாய் இருக்கும் சசிகுமார், சமுத்திரக்கனி கோஷ்டியையே இந்தப் படத்தில் அஜித்குமார் ஓரங்கட்டிவிட்டார். அந்த அளவுக்கு ‘நட்பு’ என்கிற வார்த்தையை வைத்து ‘போதும்பா.. போதும்பா..’ என்று கதறும் அளவுக்கு கிளாஸ் எடுத்திருக்கிறார் அஜித். போதும் தல.. விட்ருங்க.!
பல குளோஸப் காட்சிகளில் அஜீத் தாத்தா லெவலுக்கு போய்விட்டார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பின்பு எப்படி ரசிகர்களால் அந்த கேரக்டரோடு ஒன்ற முடியும்..? இதைப் பற்றி யாராவது யோசித்தார்களா.. இல்லையா..?
பல்கேரியா சம்பந்தப்பட்ட காட்சிகளில் அவர் எத்தனை கடுமையாய் உழைத்திருக்கிறார் என்பது கடைசியான டைட்டிலில் தெரிகிறது என்றாலும் மனதில் நிற்காத கதை என்பதால் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.
காஜல் முதல்முறையாக நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம். ஆனால் இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்கூட என்ன என்றே தெரியவில்லை. பல்கேரியாவில் பரத நாட்டியத்தையும், தமிழ் சங்கீதத்தையும் கற்றுக் கொள்ளவும் ஆட்கள் இருப்பதை நினைத்துப் பார்க்கும்போது, நம் நெஞ்செல்லாம் ஆனந்தத்தில் விம்முகிறது.
‘மனோகரா’வின் தர்பார் காட்சியில் கண்ணாம்பா ‘பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரா’ என்று முழக்கமிடுவாரோ.. அதற்கு ஒப்பீடாக கிளைமாக்ஸ் காட்சியில் காஜலும் பாட்டு பாடி அஜித்தின் ஆண்மையை பொங்க வைக்கிறார். சத்தியமாக அஜித்தின் படத்தில் இப்படியொரு ஆண்ட்டி கிளைமாக்ஸை எதிர்பார்க்கவே இல்லை.
அந்த சண்டை காட்சியை அழகாக படமாக்கியிருக்கிறார் என்றாலும் பீங்கானின் டிஸைன் அழகு என்பதால், அதிலிருக்கும் திராவகத்தைக் குடிக்க முடியுமா என்ன..?
படத்தில் கொஞ்ச நேரமேனும் மூச்சுவிட வைத்து சுவாரஸ்யப்படுத்தியது அக்சரா ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான். அதிலும் அக்சராவை பூங்காவுக்கு வரவழைக்கும் திட்டமும், ‘பிளான் பி’ திட்டமும் அசத்தல்.. இதன் பின் கொஞ்ச நேரத்திற்கு படம் ஓடும் அந்த ஓட்டம், நிச்சயமாக ஒரு பரபரப்பை ஏற்படுத்துகிறது என்பதில் சந்தேகமேயில்லை.
இதற்கு நடுவிலேயே காஜல் மருத்துவமனையில் இருந்து “உங்க பிள்ளையோட லப்டப்பை கேளுங்க…” என்று சொல்ல.. அத்தனை டென்ஷனிலும் அஜித் அதை கேட்பது.. இதுவரையிலுமான கணவன், மனைவி செண்டிமெண்ட் காட்சிகளையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது.. வேறென்ன சொல்றது..?
விவேக் ஓபராய்க்கு அசத்தலான அறிமுகம் என்றார்கள். அவரே அப்படித்தான் சொன்னார். ஆனால் படத்தில் அவரது நடிப்பு ஓகேதான் என்றாலும் கதையில் அவருக்குரிய கேரக்டர் ஸ்கெட்ச் வலுவாக இல்லாததால் அவர் அதிகம் பேசப்பட வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை.
‘பாகுபலி’ படத்தில் பிரபாசுக்கு குரல் கொடுத்தவர்தான் இந்த படத்தில் விவேக் ஓபராய்க்கும் குரல் கொடுத்திருக்கிறார் போலும். அந்தக் குரலுக்கு மட்டும் ஒரு ‘ஜே’ போடுவோம்..
கருணாகரன் காமெடி என்று நினைத்து வசனங்களை ஒப்பித்திருக்கிறார். எப்போதும் காமெடியில் எதிரணியின் ரியாக்ஷன்தான் மிகவும் முக்கியம். அஜித்தோ, கருணாகரன் பேசும் அத்தனை வசனத்தையும் ராணுவ கோர்ட்டில் விசாரணை செய்யும் அதிகாரி போல எதிர்கொள்வதால் அத்தனையும் புஸ்வாணமாகிவிட்டது.
அனிருத் இசையமைத்திருக்கிறார். பாடல்களில் பாதி ஆங்கிலத்தில் இருப்பதால் யாருக்கும் புரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியும் பாடல்களுக்கு சப்-டைட்டில் போட்ட முதல் தமிழ்ப் படம் என்கிற பெருமையையும் இந்தப் படமே பெற்றுள்ளது. பின்னணி இசையில்கூட காதைக் கிழித்தெடுத்திருக்கிறார் அனிருத்.  
திராவிட இயக்க வழித்தோன்றலில் வந்த குடும்பம் தயாரித்த படம் என்பதால் சப் டைட்டிலிருந்து மெயின் டைட்டில்வரையிலும் பல தமிழ் வார்த்தைகளில் எழுத்துப் பிழைகள் இருந்தது மன்னிக்க முடியாத குற்றமாகிறது.
படத்தில் பெரும் பாராட்டுக்குரியவர் ஒளிப்பதிவாளர் வெற்றிதான். அவருடைய பிரமாதமான ஒளிப்பதிவில்தான் காட்சிகள் அனைத்தும் அழகாக படமாக்கப்பட்டிருக்கின்றன. மூன்று நாடுகளின் அழகையும் அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
படத்தின் தொகுப்பாளர் ரூபனும் கவனிக்கப்பட வேண்டியவர். ஆக்சன் காட்சிகள் அதிகம் இருக்கும் இந்தப் படத்தில் இவருடைய திறமையினால் ஆக்சன் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறது.
அஜித்தை வைத்து ஏற்கெனவே ‘வீரம்’, ‘வேதாளம்’ என்ற இரு படங்களை கொடுத்த சிவா, இந்த மூன்றாவது படத்தை சர்வதேச அளவுக்கு ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு நிகராக கொண்டு சென்றிருக்கிறார்.
முதல் பாதியில் பட்டாசு போல துப்பாக்கிக் குண்டுகள் வெடித்துக் கொண்டேயிருக்க… அடுத்த பாதியில் அஜித்தின் கெத்தை கூட்டுவது போன்ற காட்சிகள் நிறைய இருப்பதும், சம்பந்தமில்லாமல் இடையிடையே செண்ட்டிமெண்ட் காட்சிகள் தலையை விரித்துப் போட்டு ஆடியிருப்பதும்தான் படத்திற்கு எமனாக போய்விட்டது.
அதிரடி, சரவெடி என்று சொல்லி காதல், சென்டிமெண்ட், நட்பு, துரோகம், தேசப்பற்று என்று அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் சிவா. ஆனாலும் பேஸ்மெண்ட்டில் இருந்திருக்க வேண்டிய கதை இல்லாததால், எல்லாமே தள்ளாடுகிறது.
‘விவேகம்’ என்ற தலைப்புக்கு ஏற்ற இந்தப் படம் விவேகமாக எடுக்கப்படவில்லை. ‘வேகம் மட்டுமே இருக்கிறது’ என்பதுதான் உண்மை.
“இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லாச் சூழ்நிலையிலும், ‘நீ தோத்துட்ட தோத்துட்ட’ன்னு, உன் முன்னாடி நின்னு அலறினாலும், நீயா ஒத்துக்கிறவரை எவனாலும் எங்கேயும், எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது. Never ever give up..” – இதுதான் இந்தப் படத்தின் மூலமாக அஜித்குமார் தனது ரசிகர்களுக்கு சொல்லும் செய்தி.
இது இந்தப் படத்தின் வெற்றி, தோல்வி பற்றிய விமர்சனங்களுக்கும் பொருந்தும்..!

தரமணி - சினிமா விமர்சனம்

16-08-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை ஜே.எஸ்.கே.புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.
இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, அஞ்சலி, வசந்த் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஏட்ரியன் நைட் ஜெஸ்ஸி, அழகம்பெருமாள், ஜே.எஸ்.கே., லிஸி ஆண்டனி, சாரா ஜார்ஜ், அபிஷேக் டி.ஷா, நிவாஸ் ஆதித்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர், படத் தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத், இசை – யுவன் சங்கர் ராஜா, கலை – குமார் கங்கப்பன், பாடலாசிரியர் – நா.முத்துக்குமார், ஒலி வடிவமைப்பு – எம்.ரவி, ஆடை வடிவமைப்பு – வீணா சங்கரநாராயணன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, நிழற் படங்கள் – ஜெய்குமார் வைரவன், விளம்பர வடிவமைப்பு – நந்தன் ஜீவா, எழுத்து, இயக்கம் – ராம்.
‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’ படத்திற்கு பிறகு தனது மூன்றாவது படைப்பான இந்தத் ‘தரமணி’யிலும் தனது படைப்புத் திறனை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராம்.

இதுவரையிலான ஆண்-பெண் உறவுகள், குடும்பம் மீறிய உறவுகள்.. எல்லை தாண்டிய நட்புகள் இது எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு சில படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் அவைகளில் எந்தப் படமும் இந்த அளவுக்கு பட்டவர்த்தனமாய் உண்மையைப் பேசவில்லை. முதல்முறையாக, முழுமையாக ஒரு ஆணையும், பெண்ணையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார் இயக்குநர் ராம்.
தனது முதல் காதல் முறிந்து போன நிலைமையில் வேதனையைச் சுமந்து கொண்டு ஒற்றை அறையில் நண்பர்களுடன் ஷேரிங் செய்து வாழும் டீஸண்ட்டான பிச்சைக்கார ஹீரோவுக்கும், திருமண வாழ்க்கையில் சில மாதங்களே வாழ்ந்து அந்த வாழ்க்கையை தியாகமாய் விட்டுக்கொடுத்துவிட்டு தனியே வந்து ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து இப்போதும் தனியாய், சுயமாய் நின்று உழைத்துக் கொண்டிருக்கும் அல்ட்ரா மாடர்ன் ஆங்கிலோ இந்தியப் பெண்ணுக்குமான நட்பு, காதல், காமம், கலவி, குடும்பம், அன்பு, பாசம் எல்லாவற்றையும் பங்கு போட்டுச் சொல்கிறது இந்தக் கதை.
ஒரு கன மழைப் பொழுதில் தனது இரு சக்கர வண்டியின் சக்கரம் பழுதடைந்த நிலையில் மழைக்காக ஒதுங்கிய இடத்தில் தனது கால்களையும், தன்னையும் குறி பார்க்கும் பிரபு நாத்தை பார்த்து சீறுகிறாள் ஆல்தியா. இதிலிருந்து துவங்குகிறது குழப்பமில்லாத இவர்களது நட்பு.
பார்த்தவுடன், பேசியவுடன் தன்னைப் பற்றிச் சொல்லி தனது முறிந்து போன காதலைப் பற்றிச் சொல்லி நட்பாகிறான் பிரபு. மழை விட்டவுடன் வண்டியை தான் தள்ளலாமா என்று கேட்டு உரிமையுடன் தள்ளி வருபவன், அதே உரிமையுடன் வண்டி தயாரானவுடன் அவள் பின்னால் ஏறி அமர்கிறான்.
இதில் துவங்கும் இவர்களது நட்பு “உனக்கு சிகரெட் பிடிக்கத் தெரியலை…” என்று ஒருவித உரிமைப் போராட்டத்தில் துவங்கி அவளது குழந்தைக்கு உற்ற தோழனாகப் பாவித்து.. அவளுக்கு உரிமையுடன் உதவிகளை செய்யப் போய்.. அவளுக்குள் ஒரு கவன ஈர்ப்பை தன் பால் ஈர்க்கிறான் பிரபு.
அலைந்து திரியும் கேசமும், நீண்ட நெடிய தாடியும்.. சொல்ல முடியாத பதில்களையும் தன்னகத்தே வைத்திருக்கும் பிரபுவை பார்த்தவுடன் ஆல்தியாவின் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. ஆறு மாதங்களுக்கொரு புதிய புதிய ஆட்களை நண்பர்களாக வீட்டுக்கு அழைத்து வரும் மகள் என்கிற கோபத்தில் ‘பிட்ச்’ என்று வார்த்தையை பேரனிடம் பாட்டி உதிர்க்க.. இதையெதிர்த்து ஆல்தியா அந்த இரவில் வெளியேறி தனது முன்னாள் நண்பனின் பிளாட்டில் குடியேறுகிறாள்.
அந்த வீட்டின் பிரமாண்டமும், இனிமேல் ஆல்தியாவுக்கு பின்னணியில் யாரும் இல்லை என்கிற தைரியமும் பிரபுவுக்கு தோள் கொடுக்க தானும் இங்கேயே தங்கிக் கொள்வதாய் சொல்லி உரிமையாய் உள் நுழைகிறான். வீட்டுக்குள் நுழைந்தவன் ஆல்தியாவின் மனதிற்குள் நுழைந்து, கடைசியாய் அவளது உடலையும் ஆக்கிரமிக்கிறான்.
மாதம் 80000 ரூபாய் சம்பாதிக்கும் தைரியம் இருந்தாலும் தனது மகன் ஏட்ரியனுக்காக ஒரு ஆண் துணை தேவை என்று வந்தவனை அரவணைக்கும் ஆல்தியாவுக்கு போகப் போக உளவியல் ரீதியாக சோதனைகளைக் கொடுக்கிறான் பிரபு.
ஆணின் மனம் மிக விசித்திரமானதுதான். ஆனால் பிரபுவின் மனம் ஒட்டு மொத்தமாய் விசித்திரமாய் இருக்கிறது. சந்தேகம் என்னும் பூச்சானை மனம் முழுவதும் அப்பியிருக்கும் பிரபு தனது சந்தேக  கேள்விகளாலும், ஆல்மியாவின் ஒழுக்கம் குறித்து பல நா கூசும் வார்த்தைகளாலும் அவர்களின் அழகிய வாழ்க்கையைச் சிதைத்துப் போடுகிறான்.
ஏற்கெனவே ஆங்கிலோ இந்தியன் என்கிற எல்லாவற்றுக்கும் தயார் என்கிற இனம் சார்ந்த பெயருடன், சிறு வயது பையனுடன், கொள்ளை கொண்ட அழகுடன் இருக்கும், ஆல்தியாவைச் சுற்றி எண்ணற்ற காமக் கண்கள்.. பார்க்கும் ஆண்களெல்லாம் அவரை எங்கே என்று இடம் பார்க்காமல் வலை விரித்தபடியிருக்க.. ஒவ்வொரு ஆணிடமும் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கவே படாதபாடுபடும் ஆல்தியாவுக்கு வீட்டிலேயே இருக்கும் தனது லைப் பார்ட்னரின் கொடூர பேச்சுக்கள் கொடுமையை அளிக்க.. அவனை வீட்டைவிட்டு வெளியே அனுப்புகிறாள்.
இருந்தவரையிலும் உணவுக்கும், பணத்துக்கும் பிரச்சினையில்லாமல் இருந்த பிரபுவுக்கு எல்லையற்ற தரமணி பகுதியும், மீதமிருக்கும் சென்னையும் ‘வா’ என்று அழைத்தாலும் பலவித பிரச்சனைகளை அவனுக்குக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கின்றன.
போகாத இடந்தேடி அலைந்து திரிந்து மிகப் பெரிய அவமான அனுபவங்களையும், வாழ்க்கை என்னும் சக்கரத்தின் வியூகத்தையும் கண்ட பின்பு… உண்மை தெரிந்து, உள்ளம் தெளிந்து, மனம் திருந்தி, திரும்பி வந்து நிற்கும் பிரபுவை… ஆல்தியா எப்படி எதிர்கொண்டாள் என்பதுதான் படத்தின் இறுதிப் பகுதி..!
‘தரமணி’ என்பது வெறும் பெயர் மட்டுமல்ல.. நவீன இந்தியாவின் அடையாளமாய் சென்னையில் இருக்கும் பகுதி. ஒரு பக்கம் பழைய பஞ்சாங்கத்தில் ஊறிப் போயிருக்கும் சென்னையின் பூர்வீக மக்களும், இன்னொரு பக்கம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பயணித்து வந்து இந்தியாவை தவிர மற்ற நாடுகளுக்காக இரவு, பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் பல்வேறு மத, இன இளைஞர்களும், இளைஞிகளும் வாழும் பகுதி..!
நவீன யுக யுவதிகளும், இக்கால இளைஞர்களுக்குமாக தரமணியைச் சூழ்ந்திருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் நடக்கும் இந்தக் கதைக்கு இந்தத் தலைப்பு கச்சிதமான பொருத்தம்.!
இந்தத் ‘தரமணி’ வெறுமனே ஒரு பிரபுவையும், ஒரு ஆல்தியாவையும் மட்டுமே குறிப்பிடவில்லை. இவர்களைச் சுற்றி வாழும் பல்வேறுவகைப்பட்ட மனிதர்களையும், அவர்களுக்குள் இருக்கும் உறவுச் சிக்கல்களையும், தற்காலத்திய குடும்ப வாழ்வின் பிடிமானவங்களையும் துவைத்துப் போட்டிருக்கிறது ‘தரமணி’.
‘காதல்’ என்ற வித்தையைப் பயன்படுத்தி தான் வாழ நினைக்கும் காதலி.. காதலியின் எதிர்பாராத ஏமாற்றத்தால் தன்னை இழந்து தவிக்கும் காதலன்.. ஓரினச் சேர்க்கையாளன் என்பதை இந்தச் சமூகம் ஏற்காது என்பதாலேயே மணமுடிக்கும் ஒரு மகன்.. திருமண பந்தத்திற்குப் பின்பும் தனது ‘கே’ காதலனை கைவிட முடியாமல் தவிப்பனை தான் கைவிட்டு வாழ்த்தி வழியனுப்பும் மனைவி.. கணவன் அகன்ற பிறகு தன் வயிற்றில் வளரும் குழந்தையை அழிக்க நினைக்காமல் தானே பெற்றெடுத்து வளர்க்க முடிவெடுக்கும் தாய்.. அதீத சுதந்திரம்.. கை நிறைய சம்பளம்.. இதனால் தானே சுயமாய் முடிவெடுக்கும் திறன்.. சிகரெட்டும், மதுவும் கூடவே பிரியாமல் இருக்கும் நாயகி.. வல்லூறுகளாய் தன்னைச் சுற்றி வரும் பலவித மனிதர்களையும் சமாளித்தபடியே வாழ்க்கையை நகர்த்தும் ஆல்தியா..
நவீன தொழில் நுட்பத்தின் உதவியோடு முடிந்த அளவுக்கு ஏமாறும் மனைவிகளை, காதலிகளை ஏமாற்றும் ஒரு நாள் காதலன்.. சபலம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்கும் அப்பாவி மனைவிகள்.. அதிகாரத்தால் பெண் ஊழியர்களை படுக்கைக்கு அழைக்கும் மேலதிகாரிகள்.. எதற்கும் பயம் வேண்டாம். நான் துணை நிற்கிறேன் என்று பல்லைக் காட்டும் ஆணாதிக்க சமூகத்தின் அங்கத்தினர்கள்.. மகளின் வழி தவறிய வாழ்க்கையை ஏசுவிடம் மட்டுமே இறைஞ்சி கேட்கும் தாய்.
தான் மட்டும் வேலி தாண்டும் வெள்ளாடாக இருந்து கொண்டு வீட்டில் இருக்கும் மனைவியை பத்தினியாக இருக்கும்படி அறிவுறுத்தும் ஆண்கள்.. மனைவிக்கான தேவையை பூர்த்தி செய்யத் தவறி தனது தவறை உணர்ந்து உணர்த்தியவனையும் அரவணைக்கும் தெய்வ குணம் கொண்ட இன்னொரு ஆண்.. அடித்துப் போட்டால்கூட கேட்க நாதியில்லை என்று சொல்வதற்கு எடுத்துக்காட்டாய் திகழும் அயல் மாநிலத்து தொழிலாளிகள்.. ஆணின் ஒழுங்குபடுத்தலில் வாழத் துடிக்கும் பெண்.. அதே ஆணின் வழிகாட்டுதலில் அன்பிற்காக ஏங்கும் சிறுவன்..
அ.முத்துலிங்கத்தின் சிறுகதையில் ஏக்கமாய் ஏங்க வைத்த புறாக் கதை.. சாலையோரத்தில் அம்போவென்று இறந்து கிடக்கும் நாய்..  இந்த நாயினும் கீழாக நைட் கிளப் வரும் பெண்கள் இப்படித்தானோ என்று நினைத்து எவ்வளவு என்று கேட்கும் சில ஆண் நாய்கள்.. காதலனை ஏமாற்றியதற்கு தண்டனையாக கணவன் என்னும் ஒருவன் வந்திறங்கியிருக்கும் கொடூரம்.. அந்த தூய காதலை நினைத்து ஏங்கும் முன்னாள் காதலி..! தான் செய்த திருட்டுக்காக மனம் திருந்தி அக்குடும்பத்தாரிடம் பணத்தைத் திரும்ப ஒப்படைக்கச் செல்லும் ஒருவன்..
இப்படி பலவித கேரக்டர்களின் உணர்ச்சிப்பூர்வ பரிமாணங்களை அடுத்தடுத்து அதிர்ச்சியளிக்கும்விதமாய் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராம். பெரு வணிக மயமாதலில் அடியோடு மாறிப் போன நமது குடும்ப உறவுகள்.. நட்புகள் இதையெல்லாம் இன்னமும் புரிந்து கொள்ளாத நம்மிடையே இருக்கும் சில மனிதர்கள்.. இவற்றையெல்லாம் தொகுத்துதான் இந்தத் ‘தரமணி’யை செதுக்கியிருக்கிறார் ராம்.
ஆல்தியா என்னும் கேரக்டரில் வாழ்ந்திருக்கும் ஆண்ட்ரியாவுக்கு இது மிக மிக முக்கியமான திரைப்படம். அவருடைய அழகான தோற்றம், அற்புதமான உடல் மொழி, சின்ன சின்ன உணர்வுகளைக்கூட வெளிப்படுத்தும் நுட்பமான முக பாவனைகள், அழுத்தமான வசன உச்சரிப்புகள் என்று அனைத்துமே ஆண்ட்ரியாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு பொருத்தமாய் இருக்கின்றன.
போனில் டார்ச்சர் செய்த்தோடு நடு ரோட்டிலும், டூவீலரிலும் பயணிக்கும்போதும் “அவன் ஏண்டி உன்னைக் கட்டிப் பிடிச்சான். நட்ட நடுரோட்டுல அதைச் செய்யலாமா…?” என்று கத்தும் காதலனிடமிருந்து தப்பிக்க நினைக்கும் அந்தக் காட்சிகள் ‘ஐயோ பாவமே’ என்று மாதாவிடம் முறையிடச் செய்கிறது.
வீட்டில் இதேபோல் சந்தேகப்பட்டு கத்து, கத்தென்று கத்தும் காதலனிடம் பதிலுக்கு பதில் பேசும் அந்த நீண்ட, நெடிய காட்சியில் ஆண்ட்ரியாவும், பிரபும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். என்ன சொல்லி பாராட்ட என்று தெரியவில்லை..?!
இதேபோலத்தான் தனது மனைவியின் சிறு சபலத்திற்கு தானும் ஒருவகையில் காரணம் என்றெண்ணி அதையே கோபம் மற்றும் குமுறலாக வடிக்கும் அழகம் பெருமாளும், கடைசியில் அவனை அழைத்து கட்டியணைத்து “ஒரு தப்பை உணர்த்திட்ட..” என்று சொல்லி பெருந்தன்மையோடு மன்னித்து அனுப்பும் அந்தக் காட்சி படம் பார்ப்போரை பெரிதும் நெகிழ வைக்கிறது.
இன்னொரு பக்கம் ஆண் என்னும் திமிரில் அதைவிடவும் போலீஸ் அதிகாரி என்கிற அதிகாரத் திமிரில் தறிகெட்டு அலையும் ஒரு ஆண், தன் மனைவி மட்டும் சீதை போல் கண்ணியமாகவும், ஒழுக்கமாகவும் இருக்க நினைத்து அது முடியாமல் போய் வீட்டிற்கு வந்து ருத்ர தாண்டவம் ஆடும் இந்தக் காட்சியில் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், நடிகர்கள், இயக்குநர் அனைவருமே போட்டி போட்டு தங்களது திறமையை வெளிக்காட்டியிருக்கிறார்கள். மனதாரப் பாராட்டுகிறோம்..
காவல்துறை அதிகாரி ஜே.சதீஷ்குமாரின் மனைவியாக நடித்திருந்த லிஸி ஆண்டனியின் அற்புதமான நடிப்பில் இந்தக் காட்சிதான் படத்தின் ஹைலைட்டாக இருக்கிறது. இப்படியொரு மனைவிக்கான பின்புலமும் நியாயப்படுத்தப்படுகிறது. “அவன்கூட படுத்தீல்ல..?” என்ற கணவனின் ஆவேசக் கேள்விக்கு “ஆமாம்.. படுத்தேன்.. படுத்தேன்…” என்று பதினோறு முறை ஆக்ரோஷமாக கத்தும் அந்த மனைவியின் நடிப்பு தத்ரூபம்..!
“புத்தகம் படிக்கும்போதே நினைச்சேன்டீ…” என்று கணவன் கத்தும் காட்சியில் ஒலிக்கும் வசனம் அரை நூற்றாண்டு காலமாக இந்தியாவின் வீடுகளில் ஒலிக்கின்ற வசனங்கள்தான்..! கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார் ராம்.
“உனக்குக் கிடைக்க ஹஸ்பெண்ட் நல்லவர்டி..” என்று ஆதங்கமாய் ஆண்ட்ரியா கேட்க, “நாய்ல நல்ல நாய், கெட்ட நாயெல்லாம் ஏதுடி..? பிஸ்கட்டை தூக்கிப் போட்டா வாலாட்டப் போதுக..” என்ற தோழியின் வார்த்தைகள் சுளீர்..!
வசியம் மிகுந்த வார்த்தைகளினால் காதலனை மடக்கி அவன் கொடுக்கும் பணத்திலேயே அமெரிக்கா சென்றடைந்து பின்பு மெல்ல, மெல்ல காதலனிடமிருந்து விலகி ஓடும் காதலி.. தான் யாரை நம்பி கழுத்தை நீட்டினமோ அவனிடமே தனக்கு நிம்மதியில்லை என்று தெரிந்தாலும் தனது முன்னாள் காதலனை அழைத்து தான் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் பாங்கில் காதலியையும் சமன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
இங்கேதான் அந்த ஆணாதிக்கத் திமிர் பொங்கி வழிய.. எந்த உணர்ச்சியும் அற்று படுக்கையில் கிடக்கும் காதலியுடன் செல்பியெடுத்து இதனை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டும் அந்த புத்தி ஆண்களுக்கே உரித்தானது. உடனேயே சாக்லெட் டப்பாவிற்குள் பணத்தை வைத்திருந்து நீட்டும் காதலியின் குணம் இதற்குக் கொடுக்கும் செருப்படி..! அவருடைய மிக நிதானமான, மென்மையான பேச்சு அவருக்குள் இருக்கும் சோகத்தை அழகாக வெளிக்காட்டியிருக்கிறது..! வெல்டன் அஞ்சலி..
அதே சமயம் யாருடைய செயலையும் நியாயப்படுத்தாமல், சரியென்றும் சொல்லாமல் அவரவர் தரப்பில் இருந்து பார்க்கும்போது அது நியாயமாய் தெரியும்விதமாய் காட்சிப்படுத்தியிருப்பது படத்தின் மீதான தரத்தை உயர்த்தியிருக்கிறது. அனைத்து குற்றங்களுக்கும் ஒரு பின்னணி உண்டு. அனைத்து உண்மைகளுக்குப் பின்னாலும் ஒரு வலியிருக்கும் என்பதையும் உணர்த்தியிருக்கிறார் ராம்.
புதுமுகம் வசந்த் ரவியை தேடிப் பிடித்து கதாபாத்திரத்திற்கு பொருத்தமாய் பொருந்த வைத்திருக்கிறார் இயக்குநர். அனாதை என்ற உண்மையை பார்த்தவுடன் தெரிவிக்கும் முகமாய் சாந்தமான அவரது தோற்றம்.. காதலியினால் பட்ட ஏமாற்றம்.. ஆண்ட்ரியாவினால் படும் குழப்பம்.. இதனால் அவருக்குள் விழையும் ஆத்திரம்.. இந்த ஆத்திரத்தினால் அவர் செய்யும் குற்றச் செயல்கள்.. இறுதியில் அவர் தனியாய் நாகூருக்கு போய் தான் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் செய்யும் செயல்கள் என்று அனைத்திலும் தனியே தனி மரமாய் நின்று உழைத்திருக்கிறார் வசந்த் ரவி.
சென்னையில் படூரின் அருகேயிருக்கும் ஏரிக்கு நடுவில் சாலை.. அந்த ஏரியைக் காட்டும் பிரம்மாண்டம்.. ‘தரமணி’ என்னும் சொர்க்கபூரியின் ஏரியல் வியூ என்று அனைத்தையும் தேனி ஈஸ்வரின் கேமிரா முழுமையாகப் பதிவு செய்திருக்கிறது.
பல காட்சிகளில் கேமிராவில் படமாக்கப்படுவதற்காகவே இத்தனை கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார்களோ என்று எண்ணவும் வைத்திருக்கிறார் தேனி ஈஸ்வர். மேலே குறிப்பிட்ட நான்கு காட்சிகளிலும், கூடுதலாக நாகூரில் பயணிக்கும் காட்சிகளிலும் ஒளிப்பதிவு ஒரு மேதையால் செய்யப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது இந்தப் படம்.
புறாவின் பயணத்தை அத்தனை அழகாக படமாக்கி.. அதன் மரணத்தைக்கூட ‘மரணம்கூட அழகு’ என்ற வாக்கியத்தை நிரூபிப்பதுபோல படமாக்கியிருக்கும் தேனி ஈஸ்வருக்கு ஒரு பூச்செண்டு..!
யுவன் சங்கர் ராஜாவுக்கு, ராம் என்றால் தனி பிரியம். இதில் அடித்து ஆடியிருக்கிறார். பின்னணி இசைக்கென்றே இந்தப் படம் பேசப்பட வேண்டும். அப்படியொரு இசையை வழங்கியிருக்கிறார் யுவன். பாடல் காட்சிகளில் வார்த்தைகளை மிதக்கவிட்டு இசையை அடித்தளமிட்டு ஒலிக்க வைத்திருப்பதால் பாடல்கள் கவனம் பெற்றன. நாகூர் பாடலில் ஒரு இளையராஜாவை திரும்பவும் பார்த்த திருப்தியைக் கொடுத்திருக்கிறார். இறந்தும் வாழ்ந்திருக்கிறார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.
இத்தனை கொடூரமான குடும்பக் காட்சிகள் கொண்ட திரைக்கதையில் வசனங்களை கேட்கவிடாமல் செய்யாத அளவுக்கு பின்னணி இசையை ஒலிக்க வைத்து.. கதாபாத்திரங்களின் உணர்ச்சிபூர்வ நடிப்பை முழுமையாக ரசிக்க வைத்திருக்கிறார் யுவன்.  நன்றிகள் யுவனுக்கு..!
படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் கச்சிதமான நறுக்குதலில் காட்சிகள் ஒன்றையொன்று கத்திரிக்காமல் தொடர்புடன் இருக்க.. காட்சிகள் அனைத்தையும் ரசிக்க முடிந்திருக்கிறது.
படம் முழுவதிலும் ஆண்ட்ரியாவின் முகம் நடித்திருப்பதை போலவே, அவருடைய தொடைகளும் நடித்திருக்கின்றன. இத்தனை சிறந்த திரைப்படத்தில் உடலழகை மையப்படுத்தலாமா என்கிற கேள்விக்கு பதில் படத்தின் கதைக் கருவே இதுதான் என்பதுதான்..!
பெண்கள் எந்த ஆடை உடுத்தினாலும் தூக்கிச் சென்று பலாத்காரம் என்ற செய்தி வரும் இந்த வேளையில் தனக்குப் பிடித்தமான முறையில், பிடித்தமான வடிவமைப்பில் உடையணியும் ஒரு பெண்ணுக்கு அந்த உடையே அவளது குணத்தை நிர்ணயிப்பதாக இருப்பது இந்திய பெண்களுக்கு மட்டுமே நேர்ந்த ஒரு சோகச் செய்தி.
இதைத்தான் இந்தப் படத்தில் பல இடங்களில் குறிப்பிடுகிறார் ஆல்தியா என்னும் ஆண்டிரியா. பார்க்கும் ஆண்களெல்லாம் அவரை படுக்கைக்கு அழைக்க.. ஒவ்வொருவரிடத்திலும் அவர் தப்பிக்கும் பாங்கு.. என்னடா உலகம் இது..? என்றுதான் சொல்ல வைத்திருக்கிறது.
ஆண்ட்ரியாவின் பாஸாக நடித்திருக்கும் அபிஷேக் டி.ஷாவின் வசன உச்சரிப்பும், நடிப்பும் மிக அருமை. அந்தக் காட்சி முழுவதிலுமே புதிய கோணத்தில் படமாக்கியிருப்பதால் மிகவும் ரசிக்கவும் முடிந்திருக்கிறது.
இதேபோல் அபிஷேக்கை அடுத்த நாளே தன் காலில் விழ வைத்து வேலையைவிட்டு அவராகவே ராஜினாமா செய்துவிட்டு போகும் அளவுக்கு டிராமா போடும் ஆல்தியாவின் அந்த புதிய திரைக்கதைக்கு ஒரு ஷொட்டு..!
குறியிடூகள் படம் முழுக்க நிரம்பி வழிகின்றன. படம் துவங்கும் அந்த பறவை பார்வை ஷாட்டில் இருந்து.. இறுதியில் கும்மிருட்டில் கதவுக்கு அந்தப் பக்கம் ஆல்தியாவின் ஏமாற்றமான அழுகையும், இந்தப் பக்கம் தான் திருந்தினாலும் அதை நிரூபிக்க முடியாத சூழலில் திரும்பிப் போகும் பிரபுவின் இருளடைந்த முகம்வரையிலும் படத்தின் தன்மை குறையவில்லை..!
தான் திருடிய பணத்தைத் திருப்பி ஒப்படைக்க நாகூர்வரையிலும் சென்று அங்கே ஒரு பாடத்தைக் கற்றெடுக்கும் பிரபு அங்கேயே அப்போதே தனது ‘தான்’ என்னும் எண்ணத்தை உடைத்தெறிவதாகவும், ஏரியில் மிதக்கும் பிணத்தைத் தன் தோள் மீது தூக்கி வைத்துக் கொண்டு வந்து கரையில் போடும்போதும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச் நியாயப்படுத்தப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம்.
ஆல்தியாவின் கிறித்துவ மதம், தன்னுடைய எதிர்பாராத இறப்பினால் பணத்தைத் தொலைக்கும் ஒரு முஸ்லீம் குடும்பம்.. இவற்றுக்கிடையே சதி செய்யும் ஒரு இந்துத்துவ பிரபுநாத் என்று மூன்று மதங்களையும் சேர்த்து படமாக்கியிருந்தாலும், இது இந்துத்துவத்திற்கு எதிரானதா என்றுகூட சொன்னாலும் கவலையில்லை. பெருவாரியான மதத்தில் இருப்பவர்களில் ஒருவர் பிரபு என்று நினைத்துக் கொள்ளுங்களேன். தப்பில்லை..!
இது எல்லாவற்றையும்விட இடையிடையே மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்துவரும் இயக்குநர் ராமின் பேச்சும் கலகல.. “இவர்களின் காதலை பற்றி யோசித்த நீங்கள் ஏரிக்குள் இத்தனை பெரிய கட்டிடத்தை கட்டியிருக்கிறார்களே என்று யோசிக்கவில்லை பார்த்தீர்களா…?” என்று கேட்கும் ராமின் கேள்விக்கு பலத்த கைதட்டல்தான் ஒரே பதில்.
இதேபோல் நாகூரில் பணத்தைத் திருப்பிக் கொடுத்தவுடன் பாரதப் பிரதமரின் டிமாண்டிசேஷனால் பண நீக்க உத்தரவு பிறப்பிக்கப்படுவதும்.. இதைச் சரியாகப் பயன்படுத்தியிருப்பதும் தியேட்டரை அதிர வைத்திருக்கும் வசனங்கள்..!
எத்தனை ஆண்டுகள் மாறினாலும் மாறாது இந்திய பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற இந்திய ஆண்களின் மனோபாவம்.. ஒரு பெண் காதலியானவுடன், மனைவியானவுடன் எப்படியிருக்க வேண்டும்.. எப்படி வாழ வேண்டும் என்பதை அந்தக் காதலனோ, கணவனோதான் தீர்மானிக்கிறான் என்பதுதான் இந்தியச் சமூகத்தின் சாபக்கேடு. இந்தச் சாபக்கேட்டை துடைப்பக் கட்டையால் அடிப்பதுபோல எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறது இத்திரைப்படம்.
கே.பாலசந்தரின் அனேக படங்கள் பெண்களுக்கானவைதான். அவர்களின் வாழ்க்கையை அவர்களேதான் அமைத்துக் கொள்ள வேண்டும். அதில் எத்தனை ஆண்கள் நுழைய விரும்பினாலும் அதற்கு அனுமதி கொடுப்பது பெண் மட்டுமே என்பதை வலியுறுத்தியது அவரது அனைத்துப் படங்களும்.. பாரதிராஜாவும், பாலு மகேந்திராவும் பெண்களின் இன்னொரு பக்கத்தையும், நவீன பழக்கங்களை கொண்ட பெண்களை தைரியமாக தங்களது படைப்புகளில் படர விட்டார்கள்.
இந்த இயக்குநர்கள் கேட்காத கேள்வியையெல்லாம் இப்போது இந்தத் ‘தரமணி’யில் கேட்க வைத்திருக்கிறார் இயக்குநர் ராம். இது ஒன்றுக்காகவே இந்தப் படம் ‘இறைவி’ பற்றிய படைப்புகளில் முதலிடத்தைப் பிடிக்கிறது என்று உறுதியாய் சொல்லலாம்.
அதே சமயம் இன்னமும் முழு மனதோடு பெண்களுக்கு விடுதலைப் பத்திரம் கொடுத்திராத இந்தச் சமூகத்தில் எந்த அளவுக்கு சுதந்திரமும், வசதிகளும் பெண்களை திசை திருப்பும் என்பதும் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. புதிய உலகத்தின்படி விவகாரத்து, மறுமணம், குழந்தைகள், காட் பாதராக வருபவர்களின் எதிர்பார்ப்புகள் என்று இந்த உறவுச் சிக்கல்களையும் முழுமையாக கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய சமூகத்தின் மிகப் பெரிய பிரச்சினையான ஆண், பெண் சேர்ந்து வாழ்தல், குடும்பம் தாண்டிய காதல் இதனை பாசாங்கில்லாமல் அழுத்தமாய் பதிவு செய்திருக்கும் விதத்திற்கே இந்தப் படத்தை எத்தனை வேண்டுமானாலும் பாராட்டலாம்..!
கொண்டாடப்பட வேண்டிய இயக்குநர்களில் ஒருவர் ராம். இந்தப் படமும் அவரை இன்னொரு உச்சியில் ஏற்றியிருக்கிறது. இத்துணை திறமை வாய்ந்த இயக்குநரை பலப்படுத்துவது தமிழ்த் திரையுலகத்தின் கடமை. அந்தக் கடமையைச் செய்ய தயாரிப்பாளர்கள் முன் வருவார்கள் என்று உறுதியாய் நம்புகிறோம்..!
இந்தத் ‘தரமணி’யில் ஜொலித்த இயக்குநர் ராம் அடுத்து தான் கொண்டு வரப் போகும் ‘பேரன்பு’வில் நம்மையெல்லாம் ஆக்கிரமிக்க இருக்கிறார் என்று நிச்சயமாய் எதிர்பார்க்கலாம்..!
குழந்தைகளை முற்றிலுமாய் தவிர்த்து அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம் இது என்று ஆணையிட்டுச் சொல்கிறோம்..!