27-03-2008
என் இனிய வலைத்தமிழ் மக்களே..
எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. நேரம்தான் இல்லை..
அனைத்திற்கும் நேரம் ஒதுக்கி எழுதுவதற்குள் காலம் கடந்து விஷயம், ஊசிப் போன வடையாக மாறிவிடுகிறது.
இடையில் படிப்பதற்கு வராத சோம்பேறித்தனம், தட்டச்சு செய்வதற்கு வந்து தொலைக்கிறது..
எழுதலாம் எனில் எத்தனை பேருக்குத்தான் ஒரே சமயத்தில் பதில் சொல்வது என்று அயர்ச்சி ஏற்படுகிறது.
சரி.. பதிலைத்தான் சொல்லித் தொலைவோமே என்றால் எத்தனை முறைதான் ஒரே பதிலை சொல்லிக் கொண்டேயிருப்பது என்று வெறுப்பாக உள்ளது.
அதுதான் ஒரு பத்து நாளாக அமைதி காத்து.. வேடிக்கை பார்த்து.. காத்து வாங்கி.. மூச்சு விட்டு.. முனங்கி, எழுந்து பார்ப்பதற்குள் தமிழ்மணம் எங்கேயோ போய்விட்டது.
சரி.. ஏதாவது எழுதலாம் என்று உட்கார்ந்தால் வழக்கம்போல் மனம் பேயடித்த குரங்கு போல் உள்ளது.
“ஒட்டு மொத்தமா எல்லாத்துக்கும் ஒரே பதிவுல பதிலை போட்டுட்டு விட்ருங்க. எதுக்கு போயி வீணா டென்ஷனாகுறீங்க..” என்று 'வலையுலக வசிஷ்ட மாமுனி' அட்வைஸ் செய்ததால்.. சரி, நாமும் ஒரு கேள்வி-பதிலை போட்டு அதிலேயே எல்லாத்தையும் கொட்டிட்டு போர்வையைப் போர்த்திக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன்..
இனி எனது கேள்வி-பதில்
கேள்வி : தமிழ்மணத்தின் தற்போதைய நடவடிக்கைகளை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா..?
பதில் : ஒரு காலத்தில் பீகாரில் நடந்த ராப்ரிதேவியின் ஆட்சிக் காலத்தை ஞாபகப்படுத்துவதைபோல் இவ்வளவு நாளும் ஜனநாயகத்தை மெளனமாகக் கட்டிக் காத்த தமிழ்மணம் நிர்வாகிகள் இன்றைக்குத்தான் தூங்கி எழுந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
அதிலும் 12 பேர் இருக்கிறார்களாம். “அவ்வப்போது கூடிப் பேசிக் கொண்டிருந்தோம். இப்போதுதான் நடவடிக்கை எடுத்துள்ளோம்..” என்று நமது அரசியல்வாதிகளுக்கு இணையாக பதில் சொல்லி காமெடி செய்திருக்கிறார்கள்.
அந்த ‘வீராங்கனை’ முதலில் ஒழுங்காக காப்பி-பேஸ்ட் செய்து வந்து, பின்பு திடீரென்று தடம் மாறி ரயில் புரண்டபடி தண்டவாளத்தில் ஓடுவதைப் போல் பதிவுகள் எழுதியபோதே பலரும் சொல்லிப் பார்த்தார்கள். கண்டித்துப் பார்த்தார்கள். பேசிப் பார்த்தார்கள். அம்மையார் திருந்தியபாடில்லை.
இதற்கு முன்பேயே வீராங்கனையின் தோஸ்த்து கோயம்புத்தூர்காரர் ‘படங்களாக’ காட்டியபோதே தமிழ்மணம் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தால், இப்போதைய துரதிருஷ்டமான நிலை நமக்கு வந்திருக்காது. தமிழ்மண நிர்வாகம் அப்போதெல்லாம் சுண்டக்கஞ்சி குடித்துவிட்டு, குப்புறப்படுத்து தூங்கியதைப் போல் இருந்தது.. அதற்கெல்லாம் இப்போது பதில் இல்லை.
அப்போது நான் கோயம்புத்தூர்க்காரரை கண்டித்து கமெண்ட் மேல் கமெண்ட் போட்டு “சரியான அரை லூஸ்ய்யா நீ..” என்று அவரிடம் ‘பாட்டு’ வாங்கியதுதான் மிச்சம்.
இந்த வீராங்கனையின் பதிவின் தலைப்புகளை பார்த்து, பார்த்து தமிழ்மணம் தளப் பக்கத்தை திறப்பதற்கே எரிச்சல் வந்துவிட்ட நிலையில்தான் நானும் ஒரு பதிவைப் போட்டேன்.. கிடைத்தது ‘காயடிக்கப்பட்ட காளை’ என்றொரு பட்டம்.
ஏற்கெனவே பல பதிவர்களும் விதவிதமான பட்டங்களை அம்மையாரிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டிருந்ததால், எனக்கும் இப்படித்தான் நடக்கும் என்று நான் எதிர்பார்த்திருந்தேன்.. அதுவே நடந்தது.
நாம் ஒன்றும் அந்த வீராங்கனையின் பதிவுகளைத் தவறு என்று சொல்லவே இல்லை.. பெண்களுக்கெதிராக நடக்கும் கொடுமையான அந்த நிகழ்வுகளைத்தான் அவர் படம் பிடித்திருந்தார். நடக்கவே இல்லை என்று யாரும் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது.
ஆனால் அதை மலிவான விளம்பர நோக்கில் தலைப்பிலேயே அந்த வார்த்தையைக் குறிப்பிட்டு தொடர்ந்து பல நாட்கள், பல இடுகைகளாக எழுதியதுதான் அப்பதிவுகள் குறித்து பரிதாபத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக பலருக்கும் அருவருப்பை ஏற்படுத்திவிட்டது.
இதை பலரும் பலவிதமாக, நல்லவிதமாக, மிக மரியாதையாக எடுத்துச் சொல்லியும் கேட்காமல் சக பதிவர்களுக்கு எழுதிய பதிலில் ஒரு மனிதனாககூட அவர்களைக் கருதாமல் அள்ளி வீசிய வசவுகளால்தான் அந்த அம்மணி பலரிடமிருந்தும் கண்டனங்களையும், விரோதங்களையும் எதிர்கொண்டார். அதை அவர் இன்றுவரையிலும் புரிந்து கொள்ளாதது நமக்கு வருத்தமே.
அப்போது தூங்கியிருந்த தமிழ்மணம் இப்போது அதே வீராங்கனை, பெயரிலியுடன் மோதிய பின்பு முழித்துக் கொண்டதைப் போல் ஆக்ஷன் செய்வதுதான் கொடுமையிலும் கொடுமை.
அங்கே, இங்கே என்று கை வைத்து கடைசியில் சிவனின் தலையிலேயே கை வைத்ததைப் போல் ‘வீராங்கனை’ பெயரிலியின் தலையில் கை வைக்கப் போய் அது இந்த நடவடிக்கையில் போய் முடிந்துவிட்டது.
அது சரி.. இதற்கு முன்பு நான் உள்ளிட்ட பல பதிவர்கள் அம்மையாரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதெல்லாம் தமிழ்மணத்திற்குத் தெரியுமே...
‘அவர்களெல்லாம் சக பதிவர்கள்தானே.. ஒரு எச்சரிக்கையாச்சும் விடுவோமே’ என்ற எண்ணம்கூட அப்போதெல்லாம் தமிழ்மண நிர்வாகிகளுக்கு வரவில்லை. ஆனால் அவர்களின் அடிமடியில் கை வைத்தவுடன் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.
அப்படியானால் அந்த 12 பேரின் பார்வையில், என்னைப் போன்ற அப்பிராணி பதிவர்களெல்லாம் யாராம்..?
கேள்வி : உங்களுக்குக் கிடைத்துள்ள இந்த ‘காயடிக்கப்பட்ட காளை’ என்ற பட்டத்தினால் பெருமையடைகிறீர்களா..?
பதில் : பின்ன..? யார்கிட்டேயிருந்து வாங்கியிருக்கேன்னு நினைக்கிறீங்க..
பெரியாரின் போர்வாள்.. சுயமரியாதை இயக்கத்தின் சுடரொளி.. பெண்ணியத்தின் கண்ணியமான தலைவி.. சங்கம் வளர்த்து பிரான்ஸில் தமிழ் வளர்க்கும் பேரொளி.. இத்தனை பட்டத்தையும் கைல வைச்சிருக்கிறவர்கிட்டயிருந்து ஒரு பட்டம் வாங்கிறதுன்னா சும்மாவா.. இதுக்கெல்லாம் கொடுத்துல்ல வைச்சிருக்கணும்..
கேள்வி : இந்த ‘காயடிக்கப்பட்ட காளை’ என்ற பட்டத்திற்கு அர்த்தம் தெரியுமா?
பதில் : அந்தக் கொடுமைய ஏன் கேக்குறீங்க..?
கோயம்புத்தூர்க்காரர்கிட்ட கேட்டேன். “உன் பிரெண்ட் இப்படியொரு பட்டப் பேரை எனக்குக் குடுத்திருக்கு சாமி. அதுக்கு என்ன அர்த்தம்..?”னு கேட்டேன். “அப்படியா ரொம்ப.. ரொம்ப சந்தோஷம்யா.. காயடிக்கப்பட்ட காளைன்னா ‘இனவிருத்தி செய்ய முடியாத மாடு’ன்னு அர்த்தம் சாமி.. என்ஜாய்”ன்னு சொன்னாரு.
இன்னும் கல்யாணம்கூட ஆகாத.. அக்மார்க் எலிஜிபிள் பேச்சுலர் நான். எனக்குத் தேவைதானா இது..?
கேள்வி : லக்கிலுக்கின் தளத்தை தமிழ்மணம் தூக்கிவிட்டதே.. இது குறித்து..?
பதில் : இதற்கெல்லாம் மூல காரணம் யார் என்பதை தம்பி லக்கிலுக் இப்போதாவது உணர வேண்டும்.
சும்மா கிடந்த ஓணானை தூக்கி மடில போட்டுட்டு அப்புறமா ‘குத்துதே’, ‘குடையுதே’ன்னு அலைஞ்ச மாதிரி.. அன்னிக்கே தூர வீசிட்டுப் போயிருந்தா, இப்படியொரு பிரச்சனை தம்பிக்கு வந்திருக்காது..
ஏதோ இந்த 'வீராங்கனை'தான் பெரியாரை உலகம் முழுக்க கொண்டு போகப் போறார்ன்னு நினைச்சுட்டு ‘கும்மியடிப்பு’ என்ற பெயரில் அவரோடு சேர்ந்து அடித்த கூத்துதான் இத்தனைக்கும் காரணம்.
லக்கியின் தளம் நீக்கப்பட்டது வருத்தத்திற்குரியதுதான். அதே சமயம் லக்கியும் ஒரு முறை தன்னை திரும்பிப் பார்க்க வேண்டும்.
அவருக்குப் பிடிக்காதவற்றை யார் பேசினாலும், உடனேயே அவர்களை ஏக வசனத்தில் எடுத்தெறிந்து பேசி வருவது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். (உதாரணம் : அண்ணன் காசி ஆறுமுகத்துடனான அவருடைய மோதல். அது முட்டாள்தனம் என்பது எனது கருத்து)
வலையுலகில் அதிகம் பேர் இப்போதெல்லாம் தாங்களே நேரடியாகத் திட்டாமல், அனானி பெயரில் கமெண்ட்ஸ்களை அனுமதித்து அதன் மூலம் அந்த கமெண்ட்ஸ்களுக்குத் ‘நாங்கள் பொறுப்பல்ல.. எழுதியவர் எவரோ அவரேதான்..’ என்ற பிலாத்து மன்னனைப் போல் ‘கை கழுவல்’ வேலையை பொறுப்பாகச் செய்து வருகிறார்கள். இதற்கு லக்கிலுக்கும் விதிவிலக்கல்ல..
இந்த விஷயத்தில் லக்கி ஒருவரை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. முக்கால்வாசி அரசியல் பதிவர்களின் தளங்களிலும் இதுதான் தென்படுகிறது.
இந்த ‘வீராங்கனை’யின் ‘சித்து’ விளையாட்டு, இரயாகரன், தமிழரங்கம் என்று சுற்ற ஆரம்பித்து கடைசியில் பெயரிலி ‘கார்ட்டூன் கேரக்டர்’ என்று கிண்டலடிக்கும்விதத்தில் எழுதி, அது லக்கியின் கை வண்ணத்தில் ‘தூத்தேறி.. முண்டம்..’ என்கின்றவரையில் போனது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயம்.
பெயரிலியும் தனது பதிவில் சொல்லியிருந்த ‘கேபரே டான்ஸ்’ என்கின்ற வார்த்தையையெல்லாம் தவிர்த்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் எழுதிவிட்டு அந்த 12 பேரில் ஒருவர் என்ற பேனரின் கீழ் அவர் ஒளிந்து கொண்டது முட்டாள்தனம்.
லக்கியின் தளத்தை அந்த ஒரு பதிவிற்காக நீக்கியது சரிதான் என்றால், இன்னொருபுறம் பெயரிலியின் தளத்தையும் அதே காரணத்திற்காக நீக்கியிருக்க வேண்டும். அதுதான் நியாயம்..
அப்படியானால் அந்த வீராங்கனையின் பதிவு..?
அதை எப்போதோ தூக்கியெறிந்திருக்க வேண்டும்.. அந்தமட்டும் நான் சந்தோஷப்படுகிறேன்..
ஒரு பெண்ணால் பதிவர்களுக்குள் எத்தனை சண்டைகள்..? எத்தனை பிரிவுகள்..? எத்தனை வேதனைகள்..? தாங்காதுடா சாமி..
கேள்வி : ஓசை செல்லா தமிழ்மணத்திலிருந்து விலகி விட்டாரே..?
பதில் : இதற்கும் அந்த ‘கூடா நட்பு’தான் காரணம்..
அப்படியென்னதான் கூடிப் பேசி திராவிடத்தைத் தூக்கி வளர்க்கப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
ராத்திரி தூங்கி காலையில் உயிரோடு எழுவோமா என்பதே உறுதிப்படுத்தப்படாத நிகழ்வு.
வாழ்க்கையே அந்த ஓட்டத்தில் இருக்க.. இருக்கின்றவரையில் தமிழ் மொழியை அடுத்தக் கட்டத் தலைமுறைக்குக் கொண்டு போகும் மகத்தான பணியில் நாம் இருக்கின்றபோது இது போன்ற விளம்பர அல்பத்தனங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி.. நம்முடைய நேரத்தை வீணாக்குவது செல்லா போன்ற துடிப்பு மிக்க இளைஞர்களுக்கு நல்லதல்ல..
அவர் தமிழ்மணத்தை விட்டு விலகியது உணர்ச்சிப் பெருக்கில் எடுத்த முடிவாக இருக்கலாம். ஆனால் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
கேள்வி : மகரநெடுங்குழைநாதனுடனான உங்களது நட்பு இப்போது எப்படி உள்ளது?
பதில் : ‘தளபதி’ படம் பார்த்தீர்களா..? அதில் ராஜாஜி மண்டபத்து படிக்கட்டுகளில் மம்மூட்டி, அம்ரீஷ்பூரியுடன் பேசுவார் பாருங்கள்.. அது போன்று பேச வேண்டிய கட்டாயத்துடன் இருக்கிறேன். நேரில் பார்த்தால் அதைத்தான் பேசுவேன்.
கேள்வி : இந்த மாதத்தில் நல்ல விஷயங்கள் எதையாவது செய்திருக்கிறீர்களா..?
பதில் : ஓ. உண்டே.. புதிதாக வலைப்பதிய வந்த பதிவர்கள் மூன்று பேர் எனக்கு தொலைபேசி செய்து எனது எழுத்து பற்றி பேசினார்கள்.
அப்படியே கப்பென்று அவர்களுக்கு வலைவீசிப் பிடித்து, அவர்களுக்கு கிளாஸ் எடுத்து.. வலையுலக அரசியல், வலையுலக அராஜகம், வலையுலக மோதல்கள், போகக்கூடாத தளங்கள்.. போக வேண்டிய தளங்கள்.. போய் பார்த்துவிட்டு பேசாமல் திரும்ப வேண்டிய தளங்கள்.. கமெண்ட்ஸ்களை கண்டிப்பாக போட வேண்டிய தளங்கள் என்று அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டேன்.
அடுத்த நாளே அவர்களிடமிருந்து போன்.. ‘காப்பாத்திட்ட தெய்வமே..’ என்று.. இது எப்படியிருக்கு..?
கேள்வி : இதுக்கு முந்தின கேள்விக்கும், அதுக்கும் முந்தின கேள்விக்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டா..?
பதில் : எனக்குத் தெரியாது..
கேள்வி : ‘வலையுலக தாதா’ எப்படியிருக்கிறார்..?
பதில் : அப்படியேதான் இருக்கிறார். முகத்தில் கொஞ்சம் தேஜஸ் கூடியிருக்கிறதாம். பர்ஸின் 'கனம்' சமீபகாலமாக அதிகரித்துள்ளதுதான் இதற்குக் காரணம் என்று சொல்கிறார்கள் சிலர்.
போன் பேசும்போதெல்லாம் ஏதாவது ஒரு பேருந்தில் சென்று கொண்டிருக்கிறார். கேட்டால் “வெயிட்டைக் குறைக்கிறேன்” என்கிறார். ஆனால் “பஸ்ஸ¤க்கு வெயிட் ஏறுகிறதே..” என்று கேட்டால் “ங்கொய்யால..” என்று பஸ்ஸில் இருந்தே கத்துகிறார்.
நண்பர்களை நேரில் அழைத்து காபி, டீ, வடை, பஜ்ஜி வாங்கிக் கொடுக்கும் பழக்கத்தை இப்போது அடியோடு நிறுத்திவிட்டாராம்.. நிறைய பேர் ‘ஆட்டே’ போடுகிறார்கள் என்று கண்ணைக் கசக்குகிறாராம்.
‘மப்பு மாப்ளை’ வந்தால் மட்டுமே கூடப்போய் தோள் மேல் கை போட்டு 10 ரூபாய் காபி கடையில், கால் மேல் கால் போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.
அதே ‘மப்பு மாப்ளை’ டாஸ்மாக் கடைக்குப் போகும்போது மட்டும் “எனக்கு வயித்த வலிக்குது” என்று சொல்லி எஸ்கேப்பாகிறாராம்.
இரவு நேரங்களில் மட்டும், “அமாவாசை’ இரவினிலே நிலவது உதிப்பதில்லை..” என்று யாரையோ நினைத்து ஏகாந்தம் பாடிக் கொண்டிருப்பதாகக் கேள்வி.
கேள்வி : அ.தி.மு.க. பெருந்தலை ஜோதி, தி.மு.க.வில் சேர்ந்தது பற்றி..?
பதில் : அரசியல் கட்சிகள் என்ன பொதுநல சேவையா செய்கிறார்கள். தனியார் கம்பெனி மாதிரிதான்.. இங்கே சம்பளம் கம்மி என்றால் கூட யார் கொடுக்கிறார்களோ அங்கே போய்விட வேண்டியதுதான்..
கேள்வி : சசிகலா வகையறாக்கள் எப்படி இன்கம்டாக்ஸ் கட்டுகிறார்கள் என்று கேட்டுள்ளாரே..?
பதில் : இதே கேள்வியை போயஸ் கார்டனில் இருக்கும்போது அவர்களிடமே கேட்டிருந்தால் பதில் கிடைத்திருக்கும். இப்போது யார் பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்த்து இப்படி கொஸ்டீன் கேக்குறார்ன்னு தெரியல..
கேள்வி : சாருநிவேதிதாவின் ஈ-மெயில் ஐடி களவாடப்பட்டு நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பற்றி..?
பதில் : மனுஷன் பாவம் நொந்து போயிருக்கிறார்.
அவரோட வெப்சைட்லேயே ‘எனக்கு ஹெல்ப் பண்ணுங்க’ன்னு எழுதி பேங்க் நம்பரையெல்லாம் போட்டிருக்கார்.. அப்பவெல்லாம் கண்டுக்காதவங்க, எவனோ ஒருத்தன் இன்னிக்கு எழுதினான்னவுடனேயே 500, 600 டாலர்ன்னு அனுப்புனதை நினைச்சு மனசு வெடிச்சுப் போயிருக்கார்.
“நான் கேட்டப்பல்லாம் எங்கய்யா போயிருந்தாங்க..”ன்னு நொந்து போய் சொல்லிக்கிட்டிருக்கார்..
இதுக்கெல்லாம் காரணம்னு சமீப காலமா பிரபலமான ஒரு நாஞ்சில் நாட்டு எழுத்தாளரை கை காட்டி சொல்றாரு..
வெகுவிரைவில் ஏதாவதொரு இலக்கியக் கூட்டத்தில் ‘முதல்முறையாக சாரு நிவேதிதா அடி கொடுத்தார்’னு செய்தி வந்தாலும் வரும்.. எதிர்பாருங்கள்..
கேள்வி : நடிகர் சங்கத்தில் ஜெயமோகனை பொளந்து கட்டீட்டாங்களாமே..?
பதில் : பின்ன.. மனுஷன் வந்திருந்து அர்ச்சனைகளைக் கேட்டிருந்தா.. தமிழ்நாட்டைவிட்டு கேரளாவுக்கே ஓடிப் போயிருப்பார்.. அம்புட்டு அர்ச்சனை மழை..
சாம்பிளுக்கு கேட்டுக்குங்க..
மனோரமா :
"சிவாஜி, எம்.ஜி.ஆர். இருவரும் தமிழ் சினிமாவின் கலை பொக்கிஷங்கள். அவர்களைப் போய் ஒரு நாய் விஷம் கக்கியிருக்கிறது. அவனை சும்மா விடலாமா? அப்பன் பெயர் தெரியாத பயல் அந்த ஜெயமோகன். அதுதான் அப்படி எழுதத் துணிந்திருக்கிறான். அவனுடைய பொறப்பே தவறாக இருந்திருக்கிறது. இவனை சும்மா விடக்கூடாது.."
சத்யராஜ் :
"மாமா(ராதாரவியைப் பார்த்து) நீ சட்டம் படித்திருக்கிறாய்தானே..? பேசுவதற்கும், எழுதுவதற்கும் சட்டத்தில் உரிமை இருக்கும்போது ஒருத்தன் முகத்தில் காறித் துப்புவதற்கு உரிமை இருக்கிறதா..? (ராதாரவி 'இல்லை' என்று தலையாட்டினார்) இருந்தா சொல்.. அவன் முகத்தில் காறி துப்ப வேண்டும் போலிருக்கிறது. யார் அந்த ஜெயமோகன். எவனென்றே தெரியவில்லை. தெரியாத ஒருத்தனை எப்படி திட்டுவதென்றே தெரியவில்லை. ஆனாலும் அவனை சும்மாவிட மனசு ஏற்கவில்லை.."
ராதாரவி :
"சிவாஜியும், எம்.ஜி.ஆரும் நம் கலைத்துறையின் தலைமகன்கள். அவர்களை கொச்சைப்படுத்தியுள்ள அவனை எப்படித் தண்டித்தாலும் என் மனசு ஆறாது. நிக்க வச்சு அந்தப் பயலை உதைக்க வேண்டும். காலில் போட்டிருக்கிற செருப்பை கழட்டி நாலு சாத்து சாத்தணும் போலிருக்கிறது. அந்தப் பொறம்போக்கு எழுதியதை இங்குள்ள பத்திரிகையும் எடுத்துப் போட்டு எம்.ஜி.ஆர்., சிவாஜியின் புகழை மேலும் அசிங்கப்படுத்தியிருக்கிறது."
போதுமா..?
கேள்வி : இனி சினிமாத் துறைக்குள் ஜெயமோகன் ஊடுறுவ முடியுமா?
பதில் : இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். அவர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே நடக்கும். காரணம் டெக்னீஷியன் யூனியனும், லைட்மேன் யூனியனும் இந்த விஷயத்தில் உறுதியாக இருக்கிறார்கள். அந்த இரு சங்கத்திலும்தான் எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரின் ஆதரவாளர்களும், அவர்களால் வளர்க்கப்பட்ட குடும்பத்தினரும் அதிகம் இருக்கிறார்கள். அதுதான் காரணம்.
கேள்வி : ஆ.வி.ல என்ன சொல்றாங்க..
பதில் : இப்படியெல்லாம் நடக்கும்னு அவங்களுக்கு என்ன ஜோஸ்யமா தெரியும்.. நேரம் சரியில்லை.. மாட்டிக்கிட்டாங்க.. மன்னிப்பு கேட்டு லெட்டர் எழுதிக் கொடுத்திட்டு அவங்களோட படத்தோட ஷ¥ட்டிங்கை நடத்த ஆரம்பிச்சிட்டாங்க.. இல்லாட்டி முடியுமா? போட்ட பணத்தை எடுக்க வேண்டாம்.
கேள்வி : பிரச்சனை முடிஞ்சிருச்சா இல்லையா..?
பதில் : யார் சொன்னது..? ஆ.வி.க்குன்னு இல்ல, சென்னை பத்திரிகையாளர்களுக்கே புரியாத புதிர் ஒண்ணும் இந்த விஷயத்துல இருக்கு.. இந்த மேட்டரை ஆ.வி.ல எழுதினது ‘கிஷோர்’ அப்படீன்ற ரிப்போர்ட்டர்னு போட்டிருந்தது.. ஆனா இந்த ‘கிஷோர்’ யாருன்னு ஆ.வி. ஆசிரியருக்கே தெரியலையாம்..
பத்திரிகையோட ஓனரும், எம்.டி.யும் சேர்ந்து வருகைப் பதிவேட்டை தலைகீழா புரட்டிப் பாத்துட்டாங்களாம்.. ம்ஹ¤ம்.. அப்படியொரு பேர், வாட்ச்மேன் லிஸ்ட்லகூட இல்லை.. விசாரணை கமிஷன் வைச்சுத்தான் அந்தாள் யாருன்னு கண்டுபிடிக்கணும்னு சொல்றாங்க..
கேள்வி : உங்களுடைய இன்னொரு தளத்தில் புதிய இடுகைகள் எதுவும் இல்லையே.. ஏன்.. கதைப் பஞ்சமா..?
பதில் : கதைகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த இடத்தில் இப்போது புதிய நிபந்தனைகளை விதித்திருக்கிறார்கள். அதனால் உள்ளே நுழைந்து காப்பி, பேஸ்ட் செய்வதற்கு இப்போது சிக்கல் எழுந்துள்ளதாம்.. இதுதான் காரணம்.
கேள்வி : வலையுலக வசிஷ்ட மாமுனி திடீரென்று நிஜமாகவே காட்டுக்குப் போகப் போகிறேன் என்று சொல்லி விட்டாராமே..
பதில் : அவர் சொல்லிவிட்டால் போதுமா..? விடப் போவது யார்..? இப்போதே அவர் தலையில் ஸ்டிக்கர்களை விற்கும் பொறுப்பை சுமத்தியிருப்பதாகத் தெரிகிறது. மனிதர் அதற்கே தத்தளிக்கிறார்..
மார்ச்-30 காந்தி சிலையருகே கூடப் போகும் பதிவர்களின் பாக்கெட்டில் இருந்து கணிசமாக தொகையை தானே கையைவிட்டு அள்ளப் போவதாக சபதம் செய்திருக்கிறார். ஜாக்கிரதை பதிவர்களே..
கேள்வி : பெங்களூர் பதிவர் ஏன் அதிகம் பதிவு எழுதாமல் இருக்கிறார்..?
பதில் : அலுவலகத்தில் பியூஸை பிடுங்கிவிட்டார்களாம். வீட்டிலும் புதுசா வந்த வீட்டுக்காரம்மாவும் அதுக்குத் தடா போட்டுட்டாங்களாம்.. மொதல்ல பொழப்ப பாருங்கன்னு அட்வைஸ் பண்றாங்களாம்.. அதுதான்..
கேள்வி : உங்களுடைய பதிவுகள் எல்லாமே ரொம்ப நீளமா இருக்குன்னு நிறைய பேர் கம்ப்ளையிண்ட் பண்றாங்களே..
பதில் : அதெல்லாம் மவுஸை கிளிக் பண்றதுக்கு சோம்பேறித்தனப்படும் பதிவர்கள் சொல்வது..
இப்போதெல்லாம் நானே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு நிறைய பேர் புதுசா, புதுசா எழுத ஆரம்பிச்சிட்டாங்க.. சமீபமா நம்ம முட்டம் அண்ணாச்சி எழுதித் தள்ளிருக்காரு.. போய் படிச்சுப் பாருங்க..
கேள்வி : வளர்மதி-சுகுணா திவாகர் மோதல் பற்றி..?
பதில் : இந்த விஷயத்தில் பதிவுலகினர் யாரும் அதில் தலையிடாமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.
ஏனெனில் இருவருமே இவ்வளவு ஆக்ரோஷமாக எழுதுவதற்கு காரணம் இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் தனித்து விடப்பட்டதுதான்..
ஒரே ஒரு முறை எங்காவது நேரில் சந்தித்து தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக கொட்டி விட்டார்களானால் அவர்களுடைய ஆவேசம் நிச்சயம் அடங்கிவிடும். அப்படியொரு சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிட்டும்வரையில் இந்த தர்மசங்கடம் அவர்களுக்கு இருக்கத்தான் செய்யும்.
இருவருமே தமிழகத்தின் முன்னணி பின் நவீனத்துவத் தளபதிகள். இவர்களுடைய எழுத்து நமது தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் கண்டிப்பாக தேவை..
இப்போதே இந்த இருவரையும் விழாவுக்கு அழைத்தால் முதல் நாள் ஒருவரும், இரண்டாம் நாள் ஒருவருமாக கலந்து கொள்ள வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது.
மதுரையில் ஒரு திரைப்படத் திறனாய்வுக் கூட்டத்தில் இப்படித்தான் நடந்ததாக எனக்கு ஒரு செய்தி கிடைத்தது.
சென்ற ஆகஸ்ட்-20 வலைப்பதிவு கூட்டத்தில்கூட வளர்மதி வந்து சென்ற பிறகுதான் சுகுணா வந்தார்.
விட்டு விடுங்கள்.. காலம் அவர்களின் காயங்களை ஆறப்படுத்தி ஒன்று சேர்க்கும்.. அதுவரைக்கும் நாம் பொறுத்திருப்போம்.
கேள்வி : வாத்தியார் சுஜாதா பற்றிய சுகுணா திவாகரின் கட்டுரையைப் படித்தீர்களா? எதிர்வினை..
பதில் : ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படம் பார்த்தீர்களா..? அதில் பெண் பார்க்கும் படலத்தின் இறுதியில் அப்பா எஸ்.வி.சுப்பையா ‘ஒரே ஒரு வார்த்தை பேசிக்கிறேன்மா..’ என்று மகள்களிடம் பெர்மிஷன் கேட்டு கடைசியில் ஒரு வார்த்தையை வீசுவார்.. அது மாதிரி நானும் ஒரு பெளன்ஸரை எனக்குள் வைத்திருக்கிறேன்.. மனுஷன் நேர்ல சிக்கட்டும்.. பேசிக்கிறேன்.
கேள்வி : வரப் போற மார்ச்-30 வலைப்பதிவர் சந்திப்பில் என்ன செய்யப் போறீங்க..?
பதில் : குட் கொஸ்டீன்.. ஒரு தீர்மானம் கொண்டு வரப் போறேன்..
சென்னையில் இருந்து கொண்டே முகத்தைக் காட்டாமல், போன் நம்பரைக்கூட சொல்லாமல், யாருக்கும் தெரியாமல்.. பெயரை மட்டும் போட்டுக் கொண்டு, எல்லா பதிவுகளுக்கும் தவறாமல் வந்து தலைகீழாக யோசித்து கேள்வி கேட்டு வெறுப்பேற்றும் சிலரை கண்டறியும் பொருட்டு.. இனி ஊர், பேர், ஆள் தெரியாத நபர்களின் கமெண்ட்ஸ்களை பப்ளிஷ் செய்யக்கூடாது என்று ஒரு தீர்மானம் கொண்டு வரலாமா என்று யோசித்து வருகிறேன்.
‘அதிரடிக்கார மச்சான்’. ‘தெய்வ மச்சான்’, ‘பைத்தியக்காரனின் லக்கிலுக் பாசம்’.. இன்ன பிற பற்றி.. அவர்களே மறந்து தொலையப் போகும் பின்னாளில் பேசுவோம். அப்போதுதான் நமக்கும் பொழுது போகும்.. தமிழ்மணத்திற்கும் புதிய விஷயம் ஒன்று கிடைக்கும்.
அதுவரையில்.. குட்பை..
|
Tweet |