|
Tweet |
இன்றைய அரசியல் - காமெடி கருத்துகள் - துக்ளக்
Posted by உண்மைத்தமிழன் at 24 comments
Labels: அரசியல், காட்சியும் கருத்தும்
கலைஞரின் குடும்ப அரசியல்-துக்ளக் கார்ட்டூன்
May 31, 2007
எனக்கு இது போன்ற கருத்து தோன்றியது. ஆனால் கார்ட்டூன் வரையத் தெரியவில்லை. எனவே துக்ளக்கிடம் இரவல் வாங்கிப் போட்டுள்ளேன். பார்க்க.. படிக்க.. புரிந்து கொள்க..
தினகரன் வெளியிட்ட பிரச்னைக்குரிய கருத்துக் கணிப்பு, அதைத் தொடர்ந்து நடைபெற்றத் தாக்குதல் ஆகியவற்றைப் பற்றி, சட்டசபையில் முதல்வர் கருணாநிதி பேசிய பேச்சின் ஒரு பகுதி இது :
".....கனிமொழி இப்போதுதான் தி.மு.க., கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் கலைப் பிரிவுகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஒரு கவிஞர் என்ற முறையில் கலந்து கொண்டிருக்கிறாரே தவிர, அவரும் பல பேட்டிகளில் தனக்கு அரசியலில் நுழைய விருப்பம் இல்லை என்பதை வெளிப்படையாகவும், சூசகமாகவும் தெரிவித்திருக்கிறார்.."
- சட்டசபையில் முதல்வர் கருணாநிதி பேச்சு (முரசொலி : 11.5.2007)
இதன் பிறகு மே 26-ம் தேதி, கனிமொழியை ராஜ்யசபை உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளராக அறிவித்ததை ஒட்டி வந்த செய்தி இது :
".....கனிமொழி ஏற்கெனவே அரசியலில் இருக்கிறார். அதனால்தான் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.."
- ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் கருணாநிதி கூறியது ('தி ஹிந்து' : 27.5.2007)
அதாவது மே 10-ம் தேதி வரை கனிமொழி அரசியலில் இருக்கவும் இல்லை; அரசியலில் நுழைய விரும்பவுமில்லை. "தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளின் கலைப் பிரிவுகள் நடத்தும் நிகழ்ச்சிகளில், ஒரு கவிஞர் என்ற முறையில் மட்டுமே கலந்து கொண்டிருந்தார்.." என்பது முதல்வரே கூறியது..
ஆனால் திடீரென்று 26-ம் தேதி அவர், "ஏற்கெனவே அரசியலில் இருப்பராகிவிட்டார். அவர் இப்போதுதான் அரசியலுக்கு வந்தார் என்று வைத்துக் கொண்டாலும் வந்து, உடனே ராஜ்யசபை அங்கத்தினராகவிருக்கிறார். வரலாறு காணாத வளர்ச்சி!
இந்த நியமனத்தை விளக்குவதற்கு, மாற்றி மாற்றிப் பேசி முதல்வர் திண்டாட வேண்டியதில்லை.
'கழகம் ஒரு குடும்பம்' - 'அது என் குடும்பம்' என்று வெளிப்படையாகச் சொல்லிவிடலாம். அதற்குப் பின் கேள்விக்கு ஏது இடம்!
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 16 comments
Labels: கலைஞர் குடும்பம், காட்சியும் கருத்தும்
என் சொத்துக்கள் முழுவதும் உங்களுக்கே..!
May 31, 2007
என் இனிய வலைத்தமிழ் மக்களே,
நோயற்ற வாழ்க்கை ஒரு மனிதனுக்குக் கிடைத்தது என்றால் அவன் நிச்சயமாக பாக்கியசாலிதான். நோய் எதனால் உண்டாகிறது என்றால் உடலின் ஏதோ ஒரு உறுப்புக்கு ஒவ்வாத ஒன்றை மனிதன் தன்னுள் திணித்திருக்கிறான். அல்லது திணிப்பதற்கு உதவியாக இருந்திருக்கிறான் என்று சொல்லலாம்.
மரணங்கள் இல்லங்கள் தோறும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதே போல் பிறப்புகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதில் ஒரே ஒரு வித்தியாசம்தான். பிறப்பின்போது வீடு முழுவதும் மகிழ்ச்சி கரைபுரண்டோடுகிறது. ஆனால் மரணத்தின்போது அந்த வீட்டையே துக்கம் சூழ்ந்திருக்கிறது. மரணத்தை வெல்வது சாத்தியமில்லை என்றாலும், அதை முடிந்தபட்சம் தவிர்க்கலாம்.
ஆண்டு தோறும் நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், அதில் புகையிலை என்னும் கொடிய வஸ்துவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களுக்கு இரண்டாமிடம் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த எண்ணிக்கை ஆண்டு தோறும் கூடிக் கொண்டே செல்வதாகவும் புள்ளி விவரங்களும் தெரிவிக்கின்றன.
புகையிலை என்னும் ஆள் விழுங்கும் வஸ்து பீடி, சிகரெட், சுருட்டு போன்ற புகை பிடிக்கும் முறையிலும், மென்று முழுங்கும் வகையிலும் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் 10 ஆண்டுகளாக நான் வசித்து வந்தாலும், எனக்கு நெருங்கிய நண்பர்கள் மிக மிக குறைவு. என் வீட்டிற்கு தற்போது கடன்காரர்களைத் தவிர வேறு யாரும் வருவதில்லை. நான்தான் நண்பர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். காரணம் வெரி சிம்பிள். எனக்குப் புகை பிடிக்கும் பழக்கமோ, மது அருந்தும் பழக்கம் இல்லை. நான் இருக்கும் மீடியா துறையில், இது இரண்டும்தான் அதிகப்படியான இளைஞர்களுக்கு ஆக்ஸிஜன்.
நான் பேச்சிலராகவும் இருப்பதால் வீட்டுக்கு வரும் நண்பர்கள் "சிகரெட் பிடிக்கலாமா..?" என்பார்கள். நான், "வீட்டின் உள்ளே வேண்டாமே.." என்று மறுதலித்ததும், வாசலில் நின்று பிடிப்பார்கள். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பறந்துவிடுவார்கள். தொடர்ந்து நான்தான் அவர்களைத் தேடி ஓடுவேன். இப்படித்தான் எனது பத்தாண்டு கால சென்னை வாழ்க்கையில், நண்பர்களைத் தேடும் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.
முதலில் ஆண்கள் என்றாலே அவர்கள் கையில் சிகரெட்டுடன் இருந்தால்தான் அது அவர்களுக்கு கவுரவம், மரியாதை என்ற ரீதியில் இந்த சிகரெட் என்னும் போதையை நம் இளைஞர்கள் மத்தியில் புகுத்திவிட்டார்கள்.
போதாக்குறைக்கு அவர்களுடைய 'திரையுலகத் தெய்வங்கள்' முதல் காட்சியிலேயே சிகரெட்டை ஸ்டைலாக உதட்டோரமாக வைத்து கை தட்டலுடன் தோன்ற, அந்தப் பழக்கம் அப்படியே விசிலடிச்சான் குஞ்சுகளாக ஆர்ப்பரிக்கும் நமது இளைஞர்களைத் தொற்றிக் கொண்டுள்ளது.
இந்த சினிமா, தனி நபர் மயக்கத்திலிருந்து அவர்கள் விடுபட குறைந்தபட்சம் 10 வருடங்களாவது ஆனாலும்கூட, அதற்குப் பின்னும் அந்த போதை அவர்களை விடாது. அல்லது இவர்களும் அதை விடுவதில்லை. அது அவர்களின் ஸ்டேட்டஸை நிர்ணயிக்கின்ற ஒன்றாகவே இப்போது மாறிவிடுகிறது.
சமீப ஆண்டுகளாக பெண்களும் சிகரெட் புகைக்கும் பழக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது. சென்னையில் சத்யம் தியேட்டர் வளாகம், ஸ்பென்ஸர் பிளாஸா என்று பொருளாதார நுகர்வு அதிகமுள்ள இடங்களில் இது மாதிரியான பெண்களை நான் பார்த்திருக்கிறேன். பார்க்கின்ற அனைவருக்கும் இது டேக் இட் ஈஸியாக தோன்றுகிறது.
இது அவர்கள் உயிர்வாழும் நாட்களில் ஒவ்வொரு நொடியையும் குறைத்துக் கொண்டே போகிறது என்பது அவர்களுக்குத் தெரியுமா? தெரியும். கண்டிப்பாகத் தெரியும். தெரிந்தும் ஏன் அதைப் பிடிக்கிறார்கள். வேறென்ன போதைதான்.. விட முடியவில்லை என்பார்கள்.
நிகோடின், பென்சோபைரின் போன்ற புற்று நோயை உருவாக்கக்கூடிய நச்சுப் பொருட்கள்தான் இந்தப் புகையிலையில் உள்ளன. புகைப்பிடிக்கும்போது புகையுடன் சேர்த்து இந்த நச்சுப் பொருட்களும் புகைப்பவரின் ரத்தத்தில் கலக்கின்றன. இதனால் உடலின் அனைத்துப் பாகங்களும் பாதிக்கப்பட்டு புற்று நோய் ஏற்படுகிறது.
நகர்ப் பகுதியில் இருப்பவர்களும், படித்தவர்களுமே மரணம் நிச்சயம் என்ற நிலையிலும் புகை பிடிக்கும்போது, கிராமப் புறங்களில் புகையிலையை மெல்லும் மக்களை என்னவென்று சொல்வது?
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை என்பது நமது கிராமப் புறங்களில் தலைமுறை, தலைமுறையாக தொடர்ந்து வரும் ஒரு கலாச்சாரமாக இருந்து வருகிறது.
சுக்குமல்லி காபியும், கஷாயமும், நீராகாரமும், காபித்தண்ணி என்ற பால் இல்லாத காபியும் மணக்கும் கிராமப் பகுதிகளில், இந்த புகையிலை என்னும் அரக்கனும் கோலோச்சிக் கொண்டிருக்கிறான்.
கிராமங்களில் வாழும் மக்களில் அநேகம்பேர் படிப்பறிவில்லாதவர்களாக இருப்பதால், இதனால் வரக்கூடிய தீமைகளை அதிகம் அறிந்தவர்களாக இல்லை. அப்படியே ஊரில் ஒருவருக்கு இந்த நோய் வந்து அவர் இறந்ததை கண்ணார பார்த்திருந்தும்கூட இதை விட முடியாமல் தவிக்கிறார்கள். அதற்கான மன தைரியத்தையும், மனத் தெளிவையும் தரக்கூடிய அளவுக்கு அவரது குடும்பத்தாரும், சுற்றத்தாரும் கல்வி கற்றவர்களாக இல்லாததால், இவர்களும் பின்னாளில் அதே நோய்க்கு பலியாகிறார்கள்.
நமது மத்திய அரசும் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் புகையிலைப் பொருட்களுக்கு வரி அதிகமாக விதித்தாலும்கூட, சிகரெட், புகையிலை விற்பனை குறையவில்லை. எந்த விலையைக் கொடுத்தாவது வாங்கிப் புகைக்கின்றனர். உலகமயமாக்கல் காரணமாக எது எது ஏழை நாடுகளைப் பாதிக்கக்கூடாதோ, அதுவெல்லாம் இப்போது வளர்ந்து வரும், மற்றும் வளர்ந்த நாடுகளையும் பாதிக்கத் துவங்கிவிட்டது. அதன் முதல்படிதான் இந்த புகையிலை நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டுக்கு அதிகரிப்பது.
இந்தக் கொடிய புகையிலையை மெல்லுவது, சுவைப்பது, புகைப்பது ஆகிய காரணங்களால் உலகில் ஆண்டு தோறும் 50 லட்சம் பேர் புகைக்குப் பலியாகின்றனர். இந்நிலை இப்படியே தொடர்ந்து நீடித்தால் வரும் காலங்களில் ஆண்டுக்கு ஒரு கோடி பேர் பலியாகக் கூடிய நிலைமை வரும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தற்போது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அதிகரித்துள்ள போதிலும், பொது இடங்களில் புகை பிடிப்பதற்குத் தடை, பீடி, சிகரெட் விளம்பரங்களுக்குத் தடை என்ற போதிலும், புகைப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. கூடிக் கொண்டேதான் செல்கிறது.
தற்போது உலகம் முழுவதும் 65 கோடி பேர் புகைக்கின்றனர். இவர்கள் அனைவருமே புகையிலையால் புஸ்வாணமாக வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கென்ன வழி? சிறு வயதிலிருந்தே அதாவது பள்ளிப் பருவத்திலிருந்தே இது போன்ற போதைப் பொருட்களை, நமது குழந்தைகளிடமிருந்து நாம் தள்ளியே வைக்க வேண்டும். எத்தனை வீடுகளில் இதைப் பின்பற்றுகிறார்கள் சொல்லுங்கள்? வீட்டின் உள்ளேயே குழந்தைகள் முன்பாகவே சிகரெட் பிடிக்கும் எத்தனையோ ஆண்களை நான் பார்த்திருக்கிறேன். அது குழந்தைகளைப் பாதிக்கும் என்ற அடிப்படை உண்மையைக் கூட அவர்கள் அறிவதில்லை.
இன்னும் சில பேர் சிகரெட், பீடி முதலியவைகளை தங்கள் பிள்ளைகளிடம் சொல்லி வாங்கி வரச் சொல்கிறார்கள். இப்படி பழக்கமான பிள்ளைகள் எதிர்காலத்தில் என்னவாக வருவார்கள்? அதே பழக்கம் அவர்களையும் தொற்றும்தானே..
குழந்தைகளிடமிருந்து இந்த போதைகளை நாம் விலக்கியே வைக்க வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டவர்களை பெரியவர்களாகிய நாம் பார்க்கச் செல்லும்போது குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்று காட்ட வேண்டும். அப்போதுதான் இந்த போதைப் பொருட்களைப் பயன்படுத்தினால் இப்படியரு கொடுமைக்கு நாம் ஆளாக நேரிடுமே என்ற பய உணர்வு குழந்தைகளுக்கு ஏற்படும்.
இது போதாது என்று பலரும் புகை பிடிக்கும்போது அதை அருகிலிருந்து சுவாசிப்போருக்கும் புகையிலை தொடர்பான நோய் வருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அடுத்தவர் புகையால் மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்பதால் - சிகரெட் புகையை சுவாசிக்காமல் இருப்பது அடிப்படை மனித உரிமை என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. இதனால்தான் பல்வேறு நாடுகளிலும் பொது இடங்களில் புகை பிடிப்பதைத் தடை செய்வதற்கு ஆதரவு பெருகி வருகிறது.
தற்போது புகைப்பதற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை புகை பிடிப்பவர்கள்கூட வரவேற்றுள்ளனர். புகை இல்லாத சூழ்நிலையில் பழக்கப்படும்போது, புகை பிடிப்பவர்கள்கூட கொஞ்சம் கொஞ்சமாக அதை மறக்க வாய்ப்புண்டு.
இந்த அரசுகளும் கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கதையாக புகையிலையை ஆரம்பத்தில் வளர்த்தார்கள். நிறைய வரி கிடைக்கிறதே என்றெண்ணி எவ்வித நிபந்தனைகளையும் விதிக்காமல் குடிசைத் தொழில் போல் நடத்துவதற்கு அனுமதி கொடுத்தவர்கள், எல்லாம் கையை மீறிப் போனவுடன் இப்போதுதான் நினைத்துப் பார்க்கிறார்கள். ஆனால் அதற்குள் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
புகையிலை மற்றும் சிகரெட்டினால் வரும் வரி வருவாய், இந்திய அரசின் பட்ஜெட்டில் கணிசமான அளவைக் கொண்டிருப்பதால் அவற்றை முற்றிலுமாகத் தடை செய்ய முடியாத சூழ்நிலையில் அரசு இருக்கிறது. ஆனால் அதே நேரம் இதே புகையிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆகும் சிகிச்சைக்கான செலவும் இதே அளவுதான் ஆகிறது. வேறென்ன செய்வார்கள் ஆட்சியாளர்கள்?
"வரவுக்கும், செலவுக்கும் சரியாப் போச்சு..." என்று சொல்லி தேய்ந்து போன ரிக்கார்டாக வருடாவருடம் பட்ஜெட்டின்போது கிளிசரின் போடாமலேயே அழுத நிலையில் பேசுகிறார்கள். பட்ஜெட் நிறைவேற்றப்பட்டவுடன் இந்த நடிப்பும் காணாமல் போய்விடும். அடுத்த நடிப்பு அடுத்த பட்ஜெட்டின் போதுதான்..
புகையிலையால் பாதிக்கப்பட்டு மரணமடையும் நபரின் குடும்பம் எந்தளவுக்குத் துன்பப்படும் என்பதை அவரவர் அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.
இந்த உண்மைத்தமிழன் ஏன் இவ்வளவு உருகி, உருகி எழுதுகிறான் என்றால் அவனும் இப்படியரு கொடுமையான அனுபவத்தைப் பெற்றவன்தான். அதிலும் அவனுடைய வாலிப வயதில் பார்க்கக் கூடாத கொடுமைகளை இந்தப் புகையிலை என்னும் அரக்கன் அவனது தந்தையின் மூலமாகக் காட்டிவிட்டான். அந்த அனுபவத்தால்தான் சொல்கிறான்.. தயவு செய்து.. தயவு செய்து.. புகையிலையைத் தவிருங்கள்..
வாழ்க்கை என்பது ஒரு முறைதான். அது முடிகின்றபோது தானாக முடியட்டும். நாமே அதைத் தேடிச் சென்று அடைய வேண்டாம்..
புகை பிடிக்கும் பழக்கமுள்ள வலைப்பதிவர்கள் அதைக் கைவிட உண்மைத்தமிழனின் சில உருப்படியான(!) யோசனைகள்
1. எப்போதும் வீடு அல்லது அலுவலகத்திற்குள்ளேயே இருக்கவும். வெளியே வர முயற்சிக்க வேண்டாம்.
2. எப்பொழுதும் சட்டைப் பாக்கெட்டில் குடும்பத்தினரின் சிறிய புகைப்படத்தை வைத்துக் கொள்ளுங்கள்.
3. அலுவலகத்திலும் ஒரு புகைப்படத்தை பிரேம் செய்து கண் முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். திருமணமாகாதவர்கள்கூட பேரன், பேத்திகளை பார்க்க வேண்டுமே என்ற வைராக்கியத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
4. குச்சி மிட்டாய் அல்லது இஞ்சி மிட்டாய் அல்லது TITBITS அல்லது சூரி மிட்டாய் இவைகளை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு, எப்போதெல்லாம் உங்களுக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து முழுங்கி விடுங்கள்.
5. புகைப் பிடிக்கும் பழக்கமுள்ள உங்களுடைய மாம்ஸ்கள், மச்சான்கள், மாப்பிள்ளைகள் வந்தால் நீங்கள் 'இல்லை' என்று சொல்லச் சொல்லிப் பழகுங்கள்.
6. அப்படியும் வெளியில் செல்லும்போது மாட்டிக் கொண்டால் "எனக்கு சிகரெட் பிடித்தவுடன், ஒட்டக பிரியாணி சாப்பிட்டே ஆக வேண்டும். வாங்கித் தர்றியா மாம்ஸ்..?" என்று கேளுங்கள். உங்களது 'மாம்ஸ்' ஒட்டகம் பாணியிலேயே தவ்வித் தவ்வி ஓடி விடுவார்.
7. வலையுலகில் கொள்கை ரீதியான எதிரிகளை நிறைய சம்பாதித்து வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களைப் பற்றி நிறைய புலம்பல்களும் இடுகைகளும் வரும். தொடர்ந்து அதற்குப் பதிலளித்துக் கொண்டே இருக்கலாம். புகை பிடிக்க நேரம் இல்லாமல் போனாலும் போகலாம்.))))
8. குளிக்கும் நேரம், பாத்ரூம் செல்லும் நேரம், அலுவலக நேரம், சாப்பிடும் நேரம்.. இவை போக மீதி நேரமெல்லாம் தமிழ்மணத்தை திறந்து வைத்துக் கொண்டு சும்மாவாச்சும் வெறுமனே பார்த்துக் கொண்டாவது இருங்கள். புகை பிடிப்பது நாளடைவில் மறந்து விடும்.)))))
9. கவிதைகளைப் பிடிக்காதவர்கள் தப்பித் தவறிக்கூட கவிதைகள் பக்கம் போக வேண்டாம். அதேபோல் கட்டுரைகளைப் பிடிக்காது கவிதைகளைச் சுவாசிப்பவர்கள் கட்டுரைகளின் பக்கமே செல்ல வேண்டாம். இரண்டுமே கடைசியில் டென்ஷனில் கொண்டு போய் முடிந்து சிகரெட்டை தொட வைத்துவிடும்.
10. 2077-ம் ஆண்டு மே-31ம் தேதி சென்னை நடேசன் முதலியார் பார்க்கில் நடைபெறவிருக்கும் 300-வது வலைத்தமிழர்களின் மாநாட்டின்போது உண்மைத்தமிழன் அதுவரை தான் சம்பாதித்து வைத்திருக்கும் சொத்துக்கள் முழுவதையும் வலையுலகப் பதிவர்கள் சங்கத்தில் பதிவு பெற்ற பதிவர்கள் அனவருக்கும் சம பங்காகப் பிரித்துத் தர எண்ணியுள்ளான். அன்றுவரை இருந்து எனக்குரிய பங்கை வாங்கித்தான் தீருவேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். புகையிலை வஸ்துவை நாட மனசு வரவே வராது.)))))
வாழ்க வளமுடன்
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 36 comments
Labels: சமூகம், புகை பிடித்தல்
வேஷ்டியில் இருக்கிறதா கவுரவம்?
May 30, 2007
என் இனிய வலைத்தமிழ் மக்களே...!
'தமிழர் என்றோர் இனமுண்டு; அவருக்கோர் தனியே குணமுண்டு!' என்று தமிழர் பெருமையைப் பெருமையாகச் சொல்லியே, இரண்டாயிரம் ஆண்டுகள் ஓடிப் போய்விட்டது.
ஆதி காலத்துத் தமிழன் எப்படியிருந்திருப்பான் என்றெல்லாம் நாம் கற்பனை செய்து பார்க்கத் தேவையில்லை. அந்தந்தக் காலக்கட்டத்திற்கேற்ப பிறப்பின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, அதன்படியே வாழ்ந்து தன் காலத்தை முடித்துக் கொண்டிருப்பான்.
இந்தத் தமிழன் எப்படிப்பட்ட கலாச்சாரத்தில் வாழ்ந்திருப்பான் என்பதெல்லாம் இப்போது கேள்வியல்ல. கலாச்சாரம் என்பதெல்லாம் அந்தந்தக் காலக்கட்டத்தில் மக்களுடைய பயன்பாட்டுப் பொருட்களாக எது இருக்கிறதோ, எது கிடைக்கிறதோ அதை வைத்து அவர்கள் வாழும் வாழ்க்கை, அல்லது வாழ்ந்த வாழ்க்கையின் ஒரு தொகுப்புதான் என்று நான் அறிகிறேன்.
இந்தக் கலாச்சாரத்தில் மிக முக்கியமாக உடனடியாக பிடிபடுவது உடைகள்தான். "அந்தக் காலத்துல.." என்று 90 வயது முதியவர் ஆரம்பித்தாலும் உடையில்தான் தன் சோகக் கதையை ஆரம்பிப்பார். எனக்குத் தெரிந்து நான் முதலில் பார்த்த உடை வேஷ்டியும், சட்டையும் ஆண்களுக்கு. சேலை, ஜாக்கெட் பெண்களுக்கு. பின்பு சினிமாவில் மட்டும்தான் ஜிகினா உடைகள், பேண்ட் என்றழைக்கப்பட்ட ஆதி காலத்து குழாய் டைப் சராய்கள்..
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே எனது தந்தை அலுவலகம் புறப்படும்போது மட்டும்தான் பேண்ட் அணிவார். மீதி நேரமெல்லாம் வேஷ்டிதான்.. இந்த வேஷ்டியை எதற்காக அணிகிறார்கள் என்ற ஆராய்ச்சியிலெல்லாம் நான் இறங்கவில்லை. அது பெரியவர்கள் அணியும் ஒரு உடுப்பு என்பதாகத்தான் எனக்குப்பட்டது.
ஆனால் வேஷ்டி தங்களுக்கு வசதியானதுதானா என்று என் தந்தையும், என் அண்ணணும் ஒரு போதும் தங்களுக்குள் பேசியிருந்து நான் பார்த்ததில்லை. அயர்ன் செய்து வைத்திருப்பதை எடுக்கிறார்கள். பிரிக்கிறார்கள். ஒரு தக்கையின் மீது அடிபடுவதுபோல் சப்தம் வரும் அளவுக்கு அதை உதறுவார்கள். இந்த சப்தம் எனக்கு மிகவும் பிடித்தது. எனக்கு மட்டுமல்ல.. என் வீட்டில் அதற்குப் பிறகு வளர்ந்த சிறு குழந்தைகளுக்குக்கூட பிடிக்கும்.
என் அக்காவின் மகன் தவழும் குழந்தையாக இருந்தபோதெல்லாம் என் அண்ணன் வேண்டுமென்றே வேஷ்டியை இரண்டு, மூன்று முறை உதறுவார். பால் குடித்துக் கொண்டிருந்தால்கூட அந்த சப்தம் கேட்டு ஓரக்கண்ணால் திரும்பி என் அண்ணனைப் பார்த்துச் சிரிப்பான். என் அண்ணனுக்கு அப்படியரு பூரிப்பு.. ஒரு குழந்தையை பைசா செலவில்லாமல் சிரிக்க வைத்தோமே என்று..
இந்த வேஷ்டி தமிழர்களின் கலாச்சாரமான உடை என்று இப்போது பலரும் சொல்கிறார்கள். மெட்ரோபாலிட்டன் சிட்டியைத் தவிர தமிழ்நாட்டின் மற்ற ஊரகப் பகுதிகள், கிராமங்களில் அதிகமானோர் இன்னமும் வேஷ்டியைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
இந்த அரசியல் கட்சிகளால் தமிழ்ச் சமுதாயத்திற்கு கிடைத்த ஒரே ஒரு பயன் கட்சிக்காரர்கள் வேஷ்டியை தேசிய உடையைப் போல் அணிய.. இன்றைய தலைமுறையினருக்கு இது எனது அப்பாவின் உடை. தாத்தாவின் உடை என்று நாங்கள் அறிமுகப்படுத்தி வைக்க ஏதுவாக உள்ளது.
இந்தக் கலாச்சார உடைக்கு மாற்றாக நாம் வெளிநாட்டிலிருந்து தருவித்த பேண்ட் என்னும் உடை, தமிழர்களை ராஜாக்கள் போல் காட்டியதோ இல்லையோ.. அந்த மாதிரியான உடை தயாரிப்பவர்களை நிஜமான ராஜாக்களாக மாற்றிவிட்டது.
பேண்ட் ஒரு நவீன மனிதனின் சிம்பல்.. அடையாளம்.. அதை அணிவதுதான் அழகு.. என்றெல்லாம் எழுத்தும், பேச்சும் வர.. இன்னும் தமிழ்நாட்டு மிருகக்காட்சி சாலையில் இருக்கும் மிருகங்கள் மட்டும்தான் அந்த உடையை அணியவில்லை. மற்றபடி சகலமும் இங்கே அதுதான்..
இதை அணிந்தால்தான் மனிதர்.. இல்லையேல் மனிதர் இல்லை என்று சொல்கின்ற அளவுக்கு ஒரு தரம் தாழ்ந்த நம்பிக்கை, மனித நம்பிக்கையின் ஊற்றாக கருதப்படும் தமிழ்நாட்டிலேயே உருவாகியிருப்பது வருத்தத்திற்குரியது.
சென்னை கிரிக்கெட் கிளப்பில் ஒரு மீட்டிங்கில் பேச சென்ற ஒருவரை, அவர் வேஷ்டி அணிந்து வந்திருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக உள்ளே அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் கிளப் நிர்வாகிகள். வந்தவரோ கிரிக்கெட் கிளப்பில் வேலை கேட்டு வரவில்லை. அங்கே நடந்த ஒரு கருத்தரங்கில் பேசுவதற்காக வந்த ஒரு பேச்சாளர்தான்.
மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறையில் கெளரவ ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார் நாராயணன் என்பவர். இவர்தான் அந்தப் பிரமுகர். பெயருக்கு முன்னால் சும்மா 'அமெரிக்கா' என்று சேர்த்து 'அமெரிக்கா நாராயணன்' என்று சொன்னால் தமிழக அரசியல் கட்சிக்காரர்கள், அரசியல் நோக்கர்கள் அனைவருக்குமே தெரியும். அந்தளவுக்கு முக்கியமானவர்தான்.
அமெரிக்காவில் படித்து, வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென்று தாய் நாடு திரும்பி சமுதாயப் பணி செய்யப் போகிறேன் என்று சொல்லி ஒரு நல்ல நாளில் சென்னையில் கால் வைத்தவரை, கட்சிப் பணிக்கு இழுத்து இந்தியப் பிரதமரிடமே நேரிடையாகப் பேசுகின்ற அளவுக்கு இந்த நாராயணனை செல்வாக்கு பெற வைத்தவர் அன்றைய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் திரு.கருப்பையா மூப்பனார்தான்.
அப்போதைய தமிழ் மாநில காங்கிரஸின் கொள்கைகளை வடிவமைத்ததில் தற்போதைய மத்திய நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரத்துடன் இணைந்து பணியாற்றியவர் இவர்.
கிராமங்கள்தோறும் கிராமத் தொழில் மையத்தைத் துவக்க தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கும் நாராயணன், அது தொடர்பான ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ளத்தான் சென்னை கிரிக்கெட் கிளப்பில் இருக்கும் உள்ளரங்கிற்கு வந்துள்ளார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது சென்னை ரோட்டரி கிளப்.
கருத்தரங்கு நாட்டு நலன் சம்பந்தப்பட்டது. பேச வேண்டியவரோ இப்படிப்பட்ட குறிப்பிடத்தக்க மனிதர். அவர் பேசப் போவதும் நாட்டு நலனின் முன்னேற்றத்திற்காக ஒரு துறையில் வளர்ச்சியை எப்படிப் பெருக்குவது என்பதைப் பற்றியதுதான்.. இதில் வேஷ்டி என்ன பாவம் செய்தது? அதைக் கட்டிக் கொண்டு ஒரு அரங்கத்திற்குள் நுழைவது என்ன பாவப்பட்டச் செயலா?
தில்லி, ராஷ்டிரபதி பவன், அசோகா ஹாலில் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றிய பல தலைவர்களும் இதே வேஷ்டி சட்டையில்தான் அதற்கான பதவிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இதில் என்ன அழுக்கு இருக்கிறது? இதில் என்ன கவுரவக் குறைச்சல் இருக்கிறது?
'கிங் மேக்கர்' என்று பெயரெடுத்த கர்மவீரர் காமராஜர் தன் கடைசிக் காலம்வரையிலும் இதே வேஷ்டியில்தான் உலா வந்தார். பீஜிங் விமான நிலையத்தில் அந்த மாமனிதருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தபோது அந்தக் கடும் குளிரிலும் வேஷ்டி அணிந்த அந்த கம்பீர உருவம், நாற்பது தப்படிகள் நடந்து மரியாதையை ஏற்றுக் கொண்டபோது கிடைத்த பெருமை தமிழ்நாட்டுக்குத்தானே..
லால்பகதூர்சாஸ்திரி என்ற பரம பரதேசியான இந்தியப் பிரதமர் ஒருவர் 'பிரதமர்' என்ற பதவிக்கே பெருமை சேர்த்தவர். தாஷ்கண்ட்டில் இந்திய-பாகிஸ்தான் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்காகச் சென்றவரிடம் இரண்டே இரண்டு வேஷ்டிகள்தான் இருந்தது. ஹோட்டல் அறையில் தினமும் இரவு தன்னுடைய வேஷ்டியை தானே துவைத்து காய வைத்து மறுநாள் அதையே அணிந்து கொண்ட வரலாற்றையும் இந்தியா பார்த்திருக்கிறது..
அன்றைய தினம் நாராயணனால் அந்த நிலைமையில் யாரிடமும் பேச முடியவில்லை. "Naaraaayaaanaan..." என்று ஸ்டைலாக பத்திரிகையாளர்கள் முன்பாகவே அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியால் செல்லமாக அழைக்கும் அளவுக்குச் செல்வாக்கில் இருந்த இந்த நாராயணன், இன்றைக்கு அந்தக் கருத்தரங்கில் பேசியே தீர வேண்டுமே என்பதற்காக அருகில் இருக்கும் ஒரு கடைக்கு ஓடிப் போய் புதிதாக ரெடிமேட் பேண்ட் ஒன்றை அணிந்து வந்து கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிவிட்டு வந்திருக்கிறார்.
பாவம் அவர் என்ன செய்வார்? நாடு முழுவதும் நடக்கும் இந்தக் கருத்தரங்குகள் பற்றிய செய்திகளை வாரந்தோறும் பிரதமருக்கு அனுப்பி வைக்கும் பணி அவருக்குக் காத்திருக்கிறது. கருத்தரங்கில் பேசி முடித்துவிட்டு மறுநாள்தான் இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் தனது வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார்.
அந்த கிளப் நிர்வாகியோ இதற்கு சமயோசிதமாக ஒரு பதிலைச் சொல்லியிருக்கிறார். "எங்களுக்கு முன்னால் இருந்த நிர்வாகிகள் இந்த விதிமுறையை இங்கே விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதனால் அதனை நாங்கள் அப்படியே பின்பற்றுகிறோம்.." என்று.. ஏன் அந்த நிர்வாகியின் பெயரைக் கொண்டவர்கள் யாரும் அங்கே பணியாற்றக் கூடாது என்று ஒரு நிபந்தனையை விதித்திருந்தால், இந்த நபர் சும்மா விட்டிருப்பாரா?
அப்படியென்ன அந்த வேஷ்டியில் ஒரு கறையைக் கண்டார்கள் இந்தக் கயவர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. புரியவில்லை. கருத்தரங்கம் ஏற்பாடு செய்வதே பேசுவதற்காகத்தான்.. யார், யார் எந்த மாதிரி உடையில் வருகிறார்கள் என்பதை பார்ப்பதற்காக யாரும் அங்கே வரப் போவதுமில்லை. பிறகென்ன?
இந்த கிளப் நிர்வாகிகள் பலரும் வெளிநாடுகளில் சென்று படித்து முடித்துவிட்டு இந்தியாவிற்கு ஓய்வெடுப்பதற்காக வந்தவர்கள். வீட்டில் ஓய்வெடுப்பது போதாது என்று இது மாதிரியான கிளப்பிற்கும் வந்து ஓய்வெடுக்கிறார்கள். இவர்களது பார்வையில் வேஷ்டி கட்டிய ஒருவன் கிராமத்தான், பட்டியான், முட்டாள், அருவெருக்கத்தக்கவன் என்பதுதான்..
இப்படியரு முட்டாள்தனமான விதிமுறை இன்றோ, நேற்றோ இவர்கள் வைத்திருக்கவில்லை. ஏற்கெனவே இதேபோல் இதே கிளப்பிற்கு ஒரு மீட்டிங்கிற்கு வந்த இந்தியத் திருநாட்டின் ஒரு முக்கியப் பிரமுகரை அனுமதிக்க மறுத்து சர்ச்சையைக் கிளப்பினார்கள். அவர் யார் தெரியுமா?
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி, மூதறிஞர் ராஜாஜியின் சீடர், கர்ம வீரர் காமராஜரின் அமைச்சரவையில் விவசாயத் துறை மந்திரியாக பதவி வகித்தவர். மத்தியில் பண்டித நேரு அவர்களின் அமைச்சரவையிலும் அமைச்சராகப் பதவி வகித்தவர், காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவர், இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய புண்ணியவான், ஹிந்தி மொழி பிரச்சினைக்காக தன் மத்திய அமைச்சர் பதவியைத் தூக்கியெறிந்த தூயவர், மகாராஷ்டிர மாநில கவர்னராக பதவி வகித்தவர், எல்லாவற்றிற்கும் மேலாக 'பாரதரத்னா' விருதையும் பெற்றவர். அவர் அமரர் திரு.சி.சுப்ரமணியம்.
அப்போதும் அந்த கிளப் நிர்வாகிகள் சொன்ன பதில், "இது எங்களது கிளப்பின் விதிமுறைகளுக்கு முரணானது.." அவ்வளவுதான் சிம்பிளான பதில். அப்போது ஆட்சியிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு சி.எஸ். என்றழைக்கப்படும் இந்தப் பெரியவர் மீது கிண்டல் எழுப்ப ஒரு சமயமும், காரணமும் கிடைத்ததால் அதை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அலட்சியப்படுத்தினார்கள்.
இந்த கிளப் இப்போதும் சொசைட்டிஸ் ஆக்ட்டின்கீழ் செயல்படும் ஒரு அமைப்புதான். சொஸைட்டிஸ் ஆக்ட்டின் கீழ் செயல்படும் அமைப்புகளின் விதிமுறைகள் அரசியலமைப்பு சட்டத்திற்கும், மக்கள் பொது நலனுக்கும் விரோதமாக இருந்தால் அந்த அமைப்பைத் தடை செய்யும் அதிகாரம் அரசுக்கு உண்டு. அப்போதே அந்த வேலையைச் செய்திருந்தால் இந்த உயர்குடி கனவான்கள் இப்படி ஒரு முட்டாள்தனமான வேலையைச் செய்திருக்க மாட்டார்கள்.
ஆனால் யார் கேட்பது? அங்கே உறுப்பினர்களாக இருப்பவர்களெல்லாம் ஆட்சியாளர்களின் 'கற்பகத்தரு'க்கள்.. பெரும் செல்வந்தர்கள். தமிழ்நாட்டின் விரல் விட்டு எண்ணக்கூடிய முக்கியப் புள்ளிகள். எப்போது வேண்டுமானாலும் எந்தக் கட்சிகளுக்கு வேண்டுமானாலும் வாரி, வாரி நன்கொடை வழங்கும் பழக்கமுள்ள எட்டப்பர்கள். எந்தக் கட்சிக்காரர்கள் அவர்களைப் பகைத்துக் கொள்வார்கள்? சொல்லுங்கள்..
அவர்களும் சாமான்யப்பட்டவர்களல்ல.. அரசியல்வாதிகளை அழைப்பதாக இருந்தால் வேஷ்டியுடன்தான் வருவார்கள் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்களுக்கு மட்டும் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு விழா வைத்து நடத்தி முடித்தி அனுப்பிவிடுவார்கள். அல்லது அலுவலக வாசலில் ஒரு மேடை போட்டு நடத்தி முடித்து வணக்கம் போட்டுவிடுவார்கள். தப்பித்தவறிக்கூட உள்ளேயிருக்கும் உள்ளரங்கில் மட்டும் மீட்டிங் வைக்கவிட மாட்டார்கள். அந்தளவிற்கு தங்களுடைய கொள்கையை விட்டுக் கொடுக்காமல் இன்றுவரை நீடித்து வருகிறார்கள்.
அந்த வேஷ்டி உடை என்ன அவ்வளவு மோசமானதா? எதற்காக அவர்கள் வேஷ்டி அணிந்து உள்ளே வரக்கூடாது என்கிறார்கள் என்பது தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கே தெரியவில்லை. இன்றுவரை அந்த ரகசியத்தை அவர்கள் பொத்திப் பொத்தி பாதுகாத்து வருகிறார்கள். யார் கேட்பது..?
வேஷ்டி என்பது தமிழர்களின் கலாச்சார உடை. அதை அணிவதுதான் தமிழர்களின் கடமை என்று நான் சொல்லவில்லை. விருப்பம் இருப்பவர்கள் அணியலாம். அசெளகரியமாக இருப்பவர்கள் அணியாமலும் இருக்கலாம். அது அவரவர் விருப்பம்.
ஆனால் பொது விழாக்களுக்கு வரும்போது வேஷ்டி அணிந்திருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாட்டில் ஒரு இடத்திற்குள் அனுமதிக்க முடியாது என்று சொல்வது தென்னாப்பிரிக்காவில் 'இங்கே இந்தியர்கள், கருப்பர்களைத் தவிர மற்றவர்கள் நுழையலாம்' என்று போர்டு எழுதி மாட்டி இனவெறியைக் கண்ணும், கருத்துமாக பார்த்துக் கொண்டார்களே, அந்தக் கொடுமைக்குச் சமமானது.
இப்போதும் அந்த கிளப் நிர்வாகிகள் வெளியில் சொல்கிறார்கள். "எங்களிடம் மட்டும் இந்த அரசியல்வாதிகள் விளையாட முடியாது. ஏனெனில் அவர்கள் அனைவருமே எங்களது பாக்கெட்டில்தான் இருக்கிறார்கள்.." என்று..
மதுரை அருகே புகைவண்டியில் சென்று கொண்டிருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பவர், இந்த வேஷ்டிகூட இல்லாமல் கோவணத்தைக் கட்டிக் கொண்டு வயலில் உழுது கொண்டிருந்த ஒரு தமிழனைப் பார்த்துத்தான் தன் கோலத்தையும் மாற்றிக் கொண்டு 'மகாத்மா' என்று பெயரெடுத்தது இந்த உயர்குடி கனவான்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.
வேறென்ன சொல்வது...?
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 29 comments
என் சாவைத் தடுக்க இவர்கள் யார்..?
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 106 comments
அடுத்த ஜனாதிபதி யார்? கட்சிகள் போடும் ஜிங்சாங்.. ஜிங்சாங்..
என் இனிய வலைத்தமிழ் மக்களே...!
தமிழக ரசிகர் பெருமக்களுக்கு 'சிவாஜி' பட ரிலீஸில் எவ்வளவு குழப்பமோ அதைவிட அதிகமான குழப்பம் டெல்லி அரசியல்வாதிகளுக்கு.
இந்தியாவின் 12-வது ஜனாதிபதியாக யாரை உட்கார வைப்பது என்று யோசனை செய்து, யோசனை செய்து மண்டை காய்ந்து போய் இருக்கிறார்கள் அனைத்துக் கட்சியினரும்.
11-வது ஜனாதிபதியாக கொடி கட்டிப் பறந்த திரு.அப்துல்கலாம் அவர்களால்தான், இந்த 12-வது ஜனாதிபதி தேர்வு மிகப் பெரிய சிக்கலைச் சந்தித்திருக்கிறது. காரணம் இந்த ஐந்து வருடத்தில் தற்போதைய 'பொம்மலாட்ட' பிரதமரைவிட, கயிற்றைத் தன் கையில் வைத்திருக்கும் 'பொம்மலாட்ட ஆசிரியையை' விடவும் அதிகமாக மக்களிடையே நெருங்கிவிட்டார் தற்போதைய ஜனாதிபதி. இது அரசியல்வாதிகளுக்கு ஆபத்தான விஷயம்தானே..
தங்களைத் தவிர வேறு யாராவது மக்களிடையே பிரபலமானால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியுமா? அடுத்த நபரையும் அப்படி ஆளாக கொண்டு வந்து வைத்தால் நமக்குத்தானே சிக்கல் என்று இப்போது அனைவருமே வட்டமேசை மாநாடு போடாத குறையாக தங்களுக்குள் மீட்டிங் பேசி கொண்டிருக்கிறார்கள்.
உலகளவில் மற்ற நாடுகளைப் போல இந்திய ஜனாதிபதி மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. இதையே இப்போதைய ஜனாதிபதியும் குறையாகச் சொல்லி கொஞ்சம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.
பாராளுமன்ற இரு அவை உறுப்பினர்களும், மாநில சட்டசபை எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப் போட்டுத்தான் இந்தியாவில் மக்களுக்கான ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
இந்தியாவில் நடப்பது மக்களாட்சி, ஜனநாயக ஆட்சி முறை என்கிறார்கள். ஆனால் அவர்களுடைய ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் அதிகாரம் மக்களுக்கில்லை. எங்களுக்குத்தான் என்கிறார்கள் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும்.
மற்றத் தேர்தல்களைப் போல இதுவும் ஒற்றை எண்ணிக்கை ஓட்டு அல்ல. ஒவ்வொரு எம்.பி.க்கும், ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்கும் மதிப்பு உண்டு. இந்த மதிப்பு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுமாம்.
தொகுதியின் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்குச் சென்று தூங்குவதால் எம்.பி.க்களின் ஓட்டுக்கு மதிப்பு அதிகம். அவரவர் மாநிலத் தலைநகரங்களில் இருக்கும் சட்டமன்றத்தில் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தாவி, தாவி அடிப்பதால் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு சற்று குறைவாம்.
தற்போது ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு 708 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு எம்.எல்.ஏ.வின் மதிப்பு மாநிலத்தின் அளவுக்கேற்ப 100 முதல் 200 வரை இருக்கும்.
அடிதடி, வெட்டுக்குத்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று எதற்கும் அஞ்சாத வீராதி வீரர்களை எம்.எல்.ஏ.க்களாக வைத்திருக்கும் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் ஒரு எம்.எல்.ஏ.வின் மதிப்பு 208.
அதே சமயம் என்றைக்காவது ஒரு நாள் முடிந்தால் பஸ் மீது கல்லெறியும் அளவுக்கு வீரத்தைக் காட்டும் தமிழக எம்.எல்.ஏ.வின் ஓட்டு மதிப்பு 178.
கையில் வாளுடன் சொர்க்கம் போகக்கூடத் தயார் என்று தெருவில் வந்து போராடும் சிங்கங்களான பஞ்சாப் மாநில எம்.எல்.ஏ.க்களின் மதிப்பு 116.
காஷ்மீர் மாநில எம்.எல்.ஏ.க்கள் விவரமில்லாதவர்களாகவும், அடிதடியில் அவ்வளவு பக்குவம் இல்லாதவர்களாக இருப்பதால், அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வின் மதிப்பு 72-தானாம்.
மாநிலங்கள்வாரியாக எம்.எல்.ஏ.க்களின் மானாவாரி ஓட்டு மதிப்பையும் கொஞ்சம் பாருங்கள்..
உத்தரபிரதேசம் 208
தமிழகம் 176
மகாராஷ்டிரா 175
பீகார் 173
கேரளா 152
மேற்கு வங்கம் 151
ஒரிசா 149
ஆந்திரா 148
குஜராத் 147
கர்நாடகா 131
மத்தியபிரதேசம் 131
சட்டீஸ்கர் 129
ராஜஸ்தான் 129
அசோம் 116
பஞ்சாப் 116
அரியானா 112
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் படித்தவர்கள், நேர்மையானவர்கள், ஒழுக்கமானவர்கள் என்று நாம் நம்பினாலும், இந்த ஜனாதிபதி தேர்தல் ரகசிய ஓட்டெடுப்பு முறையில்தான் நடக்கும்.
'அந்த வேட்பாளர் இன்னும் கல்யாணமாகாதவர், மக்களோட கஷ்டத்தை நல்லாத் தெரிஞ்சவர், அவர்தான் பதவிக்கு வரணும்..' அப்படீன்னு நீங்களா எதையும் நினைச்சுக்கக் கூடாது.. இதெல்லாம் தனி நபர்களின் சர்வாதிகாரம்.. கட்சி யாருக்கு ஓட்டுப் போடச் சொல்லுதோ அவருக்குத்தான் எல்லாரும் ஓட்டுப் போடணும். இதுதான் கட்சிகளின் ஜனநாயகம்.
லோக்சபாவில் இருக்கும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 545. ராஜ்யசபாவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 275. இந்த இரு அவை எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு 5,47,000. அனைத்து மாநிலங்களிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு 5.48,000. இரண்டையும் சேர்த்தால் ஜனாதிபதி தேர்தலில் விழப் போகும் ஓட்டுக்களின் ஒட்டு மொத்த மதிப்பு 10,95,000.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர் வெற்றி பெற வேண்டுமென்றால் அவர் 5,48,000 அளவுக்கு பெரும்பான்மை ஓட்டுக்களைப் பெற வேண்டும். இந்த அளவு ஓட்டை எதிர்பார்த்துத்தான் அனைத்துக் கட்சிகளும் இன்றைக்கு வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன.
தற்போதைய ஜனாதிபதி தேர்தலுக்காக ஐந்து அணிகள் தயாராக கியூவில் நிற்கின்றன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி. பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, சமாஜ்வாதி கட்சி உருவாக்கியுள்ள மூன்றாவது அணி(அ.தி.மு.க., தெலுங்கு தேசம் உட்பட) மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும் இடது சாரி கட்சிகள், உ.பி.யின் புதிய 'புரட்சித்தலைவி' மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய ஐந்து அணிகளே முக்கியமாக கருதப்படுகின்றன.
அனைத்து மாநிலங்களிலும், பாராளுமன்றத்திலும் பாரதீய ஜனதா அணியான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தம் 3,47,000 ஓட்டுக்கள் இருக்கின்றன. இவர்கள் தரப்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமானால் கூடுதலாக இன்னும் 2,01,000 ஓட்டுக்கள் தேவைப்படுகின்றன.
முலாயம்சிங்கின் சமாஜ்வாடி தலைமையிலான மூன்றாவது அணியிடம் 1,13,000 ஓட்டுக்கள் உள்ளன. முலாயம்சிங்கோ காங்கிரஸைவிட பாரதீய ஜனதாவைத்தான் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் திட்டித் தீர்த்தார். ஆனாலும் அரசியல்வாதிகள் இன்றைக்கு அடித்துக் கொள்வார்கள். நாளையே கொஞ்சிக் கொள்வார்கள் என்ற ரீதியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முலாயம் கட்சியினர் ஓட்டு போட்டால், இவர்களின் ஓட்டுகளையும் சேர்த்து இக்கூட்டணிக்கு 4,60,000 ஓட்டுக்கள் கிடைக்கும். அப்படியும் 88,000 ஓட்டுக்கள் இன்னமும் தேவை. மீதிக்கு என்ன பண்ணுவாங்க தாமரைக் கட்சிக்காரங்க..?
ஜிங்சாங்.. ஜிங்சாங்..
காங்கிரஸ் பக்கம் பாருங்க.. அவுங்க என்னமோ தெரியலை.. சம்பந்தமே இல்லாம ஐக்கிய முற்போக்கு கூட்டணின்னு பேரு வைச்சிருக்காங்க.. இவர்களிடம் மொத்தமாக 4,24,000 ஓட்டுக்கள் உள்ளனவாம். இவுங்க சொல்ற ஜனாதிபதி ஜெயிக்கணும்னா, இவுங்களுக்கு இன்னமும் 1,24,000 ஓட்டுக்கள் வேணும்.
"ஆதரிப்போம். தட்டிக் கேட்போம், அட்ஜஸ்ட் செய்து கொள்வோம், போர்க்கொடி தூக்குவோம், ஆட்சியைக் கவிழ்க்கவும் தயங்க மாட்டோம்"னு டெய்லி பொழுது விடிஞ்சு பொழுது போனா புலம்புறாங்க பார்த்தீங்களா நம்ம அரிவாள், சுத்தியல் கட்சிக்காரங்க.. அவுங்ககிட்ட 1,11,000 ஓட்டு இருக்குதாம்.
தப்பித் தவறி இவுக மன்மோகன்சிங் மேல பாசம் வைச்சு காங்கிரஸ¤க்கு ஓட்டுப் போட்டா அப்ப கூட்டணியின் பலம் 5,35,000 ஓட்டுகளா மாறிரும். அப்பவும் கூடுதலா இன்னும் 13,000 ஓட்டுகள் வேணும். இவுக என்ன பண்ணுவாங்க..?
ஜிங்சாங்.. ஜிங்சாங்..
இப்போது டெல்லியில் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலையில் தாங்கள் சொல்கின்ற வேட்பாளர்தான் ஜெயிக்க வேண்டும் என்று உலகத்தின் ஒரேயரு ஜனநாயக கம்யூனிஸ்ட்களான இந்திய இடதுசாரி கட்சிகள் விரும்புகின்றன. தாங்கள் நிறுத்தும் வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு தர வேண்டும் என்ற மப்பான மனநிலையில் உள்ளார்கள் தோழர்கள்.
இப்போது இரு தரப்பாரின் பார்வையும் உத்தரப்பிரதேசத்தின் புதிய 'புரட்சித் தலைவி' மாயாவதி மீதும், ஆட்சியைப் பறி கொடுத்த முலாயம்சிங்கின் மீதும் படிந்திருக்கிறது.
மாயாவதி என்ற 'புரட்சித் தலைவி'யிடம் 60,000 ஓட்டுக்கள் உள்ளன. இந்தப் 'புரட்சித் தலைவி', 'இந்தியாவின் புரட்சித் தலைவி'யான அன்னை சோனியாவுக்கு கை கொடுத்தால், பெரும்பான்மையைவிட 48,000 ஓட்டுக்கள் அதிகமாகவே கிடைக்கும்.
அதே நேரத்தில் தன்னை ஒரு காலத்தில் முதுகில் குத்தி, கீழே போட்டு உருட்டி, மிரட்டி, பல வழக்குகளைத் தொடுத்து, இருந்த கொஞ்ச நஞ்ச பேரையும் கெடுத்து தன்னை அலைக்கழிக்க வைத்த பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக மாயாவதி சாய்ந்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 5,26,000 ஓட்டுக்கள்தான் கிடைக்கும். இப்போதும் அவர்களுக்கு 28,000 ஓட்டு கம்மி.
என்ன செய்வாங்க வாஜ்பாயும், அத்வானியும்..?
ஜிங்சாங்.. ஜிங்சாங்..
இப்பத்தான் இந்த சுயேச்சைகளுக்கு மவுசு கூடுது. சுயேச்சைகளாகவும், எந்த கட்சியிலும் சேராமல் நடுநிலைமைக் கருத்துக்களை பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் அள்ளி வீசும், இந்த உண்மைத்தமிழனைப் போன்று இருப்பவர்களின் ஓட்டு மதிப்பு 39,000 உள்ளது.
இவுங்க யாருக்கு ஓட்டுப் போடப் போறாங்கன்னு இவுகளுக்கே இன்னிவரைக்கும் தெரியாது. எந்தக் கட்சி, யார் வேட்பாளர் அப்படீங்கறதுக்காக யாரும் வெயிட் பண்ணலை.. யாரு 'சூட்கேஸை அதிகமாகத் திறப்பாங்க'ன்னு பார்த்துட்டு அப்புறமாத்தான் இவுக அவுகளோட முடிவைச் சொல்வாங்க.. ஸோ.. அதுவரைக்கும் மத்தக் கட்சிக்காரங்க என்ன செய்வாங்க..?
ஜிங்சாங்.. ஜிங்சாங்..
ஆக, காங்கிரஸ் கூட்டணி, கம்யூனிஸ்ட்டுகள் இவர்களுடன் சமாஜ்வாதி கட்சியோ, அல்லது பகுஜன் சமாஜ் கட்சி என்று பொருந்தாக் கூட்டணி ஒன்று பொருந்தி வந்தால் மட்டுமே காங்கிரஸ் வேட்பாளர் ஜெயிப்பார்.
காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழையா விருந்தாளியாக கட்சியின் துணைத் தலைவரான அமர்சிங்கை அனுப்பி வைத்தும், சினிமா பாணியில் அந்த வீட்டுக்காரம்மா சோனியாஜி அவரைக் கண்டு கொள்ளாமல் காபிகூட கொடுக்காமல் மூலையில் அமர வைத்து "யார் அவரு? கொல்லைப்புற வாசல் அந்தப் பக்கம் இருக்கு.." என்று சொல்லாமல் சொல்லி வெளியேற்றியதை முலாயமே தன் வாயால் சொன்னதைப் போல் 'சிதையில் படுத்திருக்கும்போது'கூட மறக்க மாட்டார்.
ஆக முலாயம்ஜி, காங்கிரஸ¤க்கு சப்போர்ட் பண்ணுவாரான்றது இந்த இடைப்பட்டக் காலத்தில் மாயாவதி அம்மா அவர் மீது என்ன ஆக்ஷன் எடுக்கப் போறாருன்றதை பொறுத்துத்தான் அமையும்.
மாயாவதி அம்மாவுக்கோ தன் மீது சிபிஐ தொடுத்திருக்கும் வழக்கை சிபிஐ எந்தத் திசையில் கொண்டு போகிறது என்பதைப் பொறுத்துத்தான் காங்கிரஸ¤க்கு ஆதரவு கொடுக்கலாமா? வேண்டாமா என்று முடிவு செய்வார். எது எப்படி போனாலும் இந்த ஜனாதிபதி தேர்தலில், அதிக 'அறுவடை' செய்யப் போவது உ.பி.யின் புரட்சித்தலைவிதான். அதில் சந்தேகமில்லை.
இந்தப் பக்கம் பாரதீய ஜனதா, சமாஜ்வாதி, மாயாவதி, சுயேச்சைகள் என்று அனைவரையும் வலைவீசி ஒன்று திரட்டினால்தான் தாமரைக் கட்சி வேட்பாளரால் ஜெயிக்க முடியும்.
தாமரைக்கு சப்போர்ட் செய்தால் உத்தரப்பிரதேசத்தில் கொஞ்ச நஞ்சம் இருக்குற ஆதரவையும் இழந்துவிட நேரிடும் என்பது முலாயம்ஜிக்கு நன்கு தெரியும். இருந்தாலும் இனிமேல் மாயாவதி தனக்குக் கொடுக்கப் போகும் பேதி மாத்திரைகளுக்கு பி.ஜே.பியிடம் இருந்துதான் குளுகோஸ் மருந்துகளை வாங்க வேண்டியிருப்பதால், முலாயம்ஜி இந்தப் பக்கம் சாய்வதும், சாயாததும் மாயாவதியின் கையில்தான் இருக்கிறது.
மாயாவதிக்கு பி.ஜே.பியின் பக்கம் சாய்வது இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை ஒரு ரூபாவுக்கும் பிரயோசனப்படாத விஷயம். எனவே அதற்கு சான்ஸே இல்லை என்று அடித்துச் சொல்லிவிடலாம். அவருக்கு கில்லி விளையாட ஒரு கிரவுண்ட்டையே காங்கிரஸ் தயாராக வைத்திருக்கும்போது, அவர் எதற்கு பம்பர விளையாட்டிற்கு வட்டம் போட இடம் தேடி அலையணும்?
ஜனாதிபதி வேட்பாளர் யாருன்னு அறிவிக்கிறதுக்கே, இன்னொரு மகாபாரதத்தை அனைத்துக் கட்சிகளும் நடத்திக் கொண்டிருக்கின்றன.
காங்கிரஸ் கட்சி சார்பா முதல்ல சுஷில்குமார் ஷிண்டே, கரண்சிங் அப்படீன்னு ரவுண்டு கட்டினாங்க.. சுஷில்குமார் 'நாளைக்கேன்னாலும் நான் ரெடி'ன்னு சிரிச்சுக்கிட்டே டிவில சொன்னாரு..
விடுவாங்களா நம்ம அரிவாளு, சுத்தியலுக்காரங்க.. "நீங்க என்ன முடிவெடுக்கிறது? நாங்க சாம்பார் ஊத்தினாத்தான் நீங்க சோத்துல பிசைஞ்சு திங்க முடியும்.. நாங்க ஊத்துறோம் பாரு சூப்பர் சாம்பாரு.."ன்னுட்டு சோம்நாத் சாட்டர்ஜியை இறக்கிட்டாங்க..
ஏதோ அப்துல்கலாமுக்கு தூரத்து சொந்தக்காரர் மாதிரி அப்பப்ப '•பிலிம்' காட்டுறதுனால சோம்நாத் சாட்டர்ஜி மேல எல்லாருக்கும் ஒரு கண்ணு இருக்கு. ஐயையோ ஆபத்தாச்சேன்னு 10, ஜன்பத் ரோடு கண்ணைக் கசக்கிக்கிட்டு ஆளைத் தேட ஆரம்பிச்சு.. கடைசியா, "எப்படியும் ஒரு வங்காளிதான உங்களுக்கு வேணும்..? இதோ எங்ககிட்ட இருக்கார் பாருங்க.. ஒரு முகர்ஜி.. பிரணாப்முகர்ஜி.. அவர்தான் எங்க வேட்பாளர்.." அப்படின்னு பேர் சொல்லாம வெளில நியூஸை பரப்பிவிட்டது காங்கிரஸ்..
வுடுவாங்களா அரிவாளுக்காரங்க.. "முகர்ஜி'க்கு 'சாட்டர்ஜி' எந்த வகையிலும் குறையில்லை. வேண்ணா அவரை துணை ஜனாதிபதியாக்கிருங்க.." அப்படீன்னு நூல் விட்டிருக்காங்க.. ஆனா தில்லி 'அம்மாவும்' அம்மாவோட கிச்சன் காபினெட்டும் "இப்போதைக்கு நாமதான் மெஜாரிட்டி.. நம்ம ஆளுதான் ஜனாதிபதியாகணும். வேண்ணா அவுக ஆளை துணை ஜனாதிபதியாக்கிரலாம்.." அப்படின்னூ உப்பமா செஞ்சு வெளில விட்டிருக்காங்க..
இந்தப் பக்கம் பார்த்தா நம்ம தாமரைக் கட்சிக்காரங்க.. இப்போதைய ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான பைரோன்சிங் ஷெகாவத்தே ஜனாதிபதியாகணும். அதுதான் அவருக்கும் மரியாதை. எங்களுக்கும் மரியாதை.. அப்படி.. இப்படின்னு சொல்லிட்டிருக்காக.. யார் இதைக் காதுல வாங்குறா..?
ஷெகாவத் பாவம்.. முன்னாடி ராஜஸ்தான்ல தெருத்தெருவா அலைஞ்சு, திரிஞ்சு பி.ஜே.பி. கட்சியை வளர்த்தவரு.. அங்கனேயே சீப் மினிஸ்டராவும் கொஞ்ச நாளைக்கு இருந்தவரு.. இப்ப வயசாயிருச்சு இல்லையா.. நடக்கவே கஷ்டப்படுறாரு. ஆனா ரெண்டு, மூணு மாசமாவே இந்த சோனியா அம்மா கலந்துக்குற பங்ஷன்னா.. நடக்க முடியலைன்னாலும் யாரையாவது பிடிச்சுக்கிட்டு முன்னால வந்து நின்னுக்குறாரு.. 'பெரிசு எப்படி பிராக்கெட் போடுது பாரு'ன்னு டெல்லில அம்புட்டு பத்திரிகைக்காரனும் நமட்டுச் சிரிப்புச் சிரிக்கிறான்.
"அவர் வேணாமா? சரி.. ஜனாதிபதியா ஆகுறதுக்கு என்ன தகுதி வேணும்? குச்சி ஊன்றி நடக்கணும்.. இல்லைன்னா ரெண்டு பேர் அல்லக்கைல கை வைச்சு அழைச்சுக்கிட்டு வரணும். அவ்ளோதான.. இதோ எங்ககிட்ட வாங்க.. இந்தியாவின் தலைசிறந்த கவிஞர் இருக்கார். பேரு அடல்பிஹாரி வாஜ்பாய். அவரை தேர்ந்தெடுத்திருவோம்.. பொது வேட்பாளரா சொல்லிருங்க.." அப்படின்னு அத்வானிக்கு வேண்டப்பட்ட தலைவர் ஒருத்தர் சொல்லிப்புட்டாரு.
இதை கவிஞர் வாஜ்பாய் கேட்டுப்புட்டு பதறிப் போய், 'வேணாம்.. இது அத்வானி அடுத்த பிரதமரா வர்றதுக்கான சதி வேலை'ன்றதை வெளில சொல்லாம.. "எனக்கு அந்தப் பதவி மேல ஆசையில்லை.."ன்னு அப்படின்னு இந்த வயசுலேயும் பச்சைப் பொய்யை முனங்கிக்கிட்டே சொல்லிட்டாரு..
இவுக ரெண்டு பேரும், தான் சொல்ற ஜனாதிபதிதான் அவ்ளோ பெரிய மாளிகைல உக்காரணும்னு ஏன் நினைக்கிறாங்க? டெய்லி இவுங்களைக் கூப்பிட்டு சாப்பாடு போட போறாரா புது ஜனாதிபதி? இல்ல.. கம்யூனிஸ்டுக மாதிரி வாங்குற சம்பளம் முழுசையும் இவுகளுக்கே நீட்டப் போறாரா? அதெல்லாம் இல்லீங்கோ..
இந்திராகாந்தி பிரதமரா இருந்தப்ப, அவர் ரேஸ்கோர்ஸ் வீட்ல இருந்து கிளம்பிட்டாருன்னா, அப்ப ஜனாதிபதியா இருந்த பக்ருதீன் அலி அகமது தன் வீட்டு வெளிவாசல்ல வந்து காத்துக்கிட்டிருப்பாராம்.. அவர் ஜனாதிபதி. இப்ப..
"எங்களின் நம்பிக்கை நட்சத்திரம், ராக்கெட் விஞ்ஞானி.. அவர்தான் எங்களது மானசீகத் தலைவர்.." அப்படி இப்படின்னு பில்டப் கொடுத்து நம்ம APJ.அப்துல்கலாமை, நெப்போலியன் ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டாக நம்ம பய புள்ளைக..
ஒரு அளவுக்கு மேல அவரை நெருக்க முடியல எல்லாக் கட்சிக்காரனாலேயும். அதான் அடுத்த தடவ உஷாரா இருந்து, நமக்கு கைச்செலவுக்கு காசு இல்லேன்னா கூட உடனே எடுத்துக் கொடுக்குற மாதிரி ஒரு ஜனாதிபதி ஆளை ரெண்டு கட்சிக்காரவுகளும் தேடுறாங்க. தேடிக்கிட்டே இருக்காக.. கிடைப்பாங்களா?
அதுவரைக்கும் ஜிங்சாங்.. ஜிங்சாங்..
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 42 comments
Labels: அரசியல், நாட்டு நடப்பு
கண்டேன் கண்டேன் என் அய்யன் முருகனைக் கண்டேன்
கீழேயும் பஸ்ஸ¤க்காக ஒரு கியூ.. இந்தியாவில் எங்கே சென்றாலும் கியூதான்.. அப்போதுதான் ஒரு எண்ணம் உதிர்த்தது. வரும்போது பஸ்ஸில் வந்தோம். போகும்போதாவது முருகனுக்காக நடப்போமே.. இரண்டு கிலோ மீட்டர் தூரம்தானே.. என்ன ஆகிவிடப் போகிறது? நமக்கென்ன வயதா ஆகிவிட்டது என்ற எண்ணத்தில் கீழே நடக்கத் துவங்கினேன்..
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 83 comments
Labels: பக்தி, மருதமலை முருகன்