என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
திரைக்கதை இவ்வளவு திராபையாக இருக்கும் என்று நான் துளியும் எதிர்பார்க்கவில்லை..! அடுத்தடுத்த காட்சிகளை மிக எளிதாக யூகிக்கும்வகையிலேயே திரைக்கதை அமைத்திருப்பது ஏன் என்றும் தெரியவில்லை. ஒருவேளை இது நம்ம படம்ன்னு ஆடியன்ஸ் நினைச்சு கை தட்டுவாங்கன்னு நினைச்சாங்களோ என்னவோ..?
அதேசமயம் லண்டன் போலீஸை இதைவிடவும் வேறு யாரும் குறைவாக நினைத்து, கேவலமாக காண்பித்திருக்கவும் முடியாது.. சந்தானம் சிக்கிய பின்பும் அலட்சியமாக அவரை அனுப்பிவிட்டு, மேலும் ஒவ்வொரு கொலையின்போதும் அவரை தூக்குவது தமிழ்நாட்டு போலீஸின் பழக்கம். இதையே அந்த ஊர் போலீஸுக்கும் காண்பித்துவிட்டார் இயக்குநர்..!
ஐபேடை கையில் வைத்துக் கொண்டு நாசர் விசாரணை செய்வதெல்லாம் செம காமெடி.. வெறுமனே நோட்பேடில் எழுதி வைத்தெல்லாம் ஒரு கொலையின் முடிச்சை கண்டுபிடிக்க முடியுமா என்ன..? ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் விக்ரமை அவருக்கே தெரியாமல் புகைப்படம் எடுப்பதும், விக்ரம் அழிக்கச் சொன்னதும் அழிப்பதும் அந்த ஊர் மனித உரிமை மீறலுக்கு உதாரணமாக இருக்கலாம். ஆனால் லாஜிக்கே இல்லாமல் இவர் ஏன் போட்டோ எடுக்க வேண்டும் என்றுதான் தெரியவில்லை..! அதான் விபத்து ரிக்கார்டில் புகைப்படத்துடன் பதிவாகிவிடுமே..! அதைக்கூட சந்தானத்திடம் காட்டியிருந்தால் நமக்குத் தலைவலி 20 நிமிடத்தோடு போயிருக்கும்..!
இதைவிட அபத்தமான லாஜிக் மீறல். விக்ரமின் கல்யாணத்தில்.. படித்திருப்பது கண் டாக்டருக்கு.. வேலை பார்ப்பது டெல்லியில்.. இவ்வளவு எஜூகேட்டடாக இருக்கும் பெண்தான் தனக்கு வரப் போகும் கணவன் என்ன வேலை பார்க்கிறான் என்றுகூட தெரிந்து கொள்ளாமலா கழுத்தை நீட்ட சம்மதித்திருப்பாள்..? அதிலும் இருவருக்கும் இடையில் லவ் வரும்வரையிலும் “நோ டச்சிங் டச்சிங்” என்று கவுரவமான ஒப்பந்தம் வேறாம்..! என்ன கண்றாவி திரைக்கதை இது..!?
கென்னியாக நடித்தவர் தனது சோகக் கதையைச் சொன்னவுடன் அதற்காகவே காத்திருந்தாற்போல் அனைத்து வில்லன்களும் வரிசையாக விக்ரமின் கண் முன்னே ஒன்று சேர்கிறார்கள்.. திரைக்கதைக்காக ரூம் போட்டு யோசிக்காமல், காரில் போகும்போதே எழுதியிருப்பாரோ என்னவோ..?
சென்னை போலீஸ் மாதிரி லண்டன் போலீஸும் துரத்துது.. துரத்துது.. துரத்துது.. துரத்திக் கொண்டேயிருக்குது..! ஆனால் விக்ரமை பிடிக்க முடியவில்லை. அதே டிரெஸ்ஸை போட்டுக் கொண்டுதான் விக்ரம் லண்டனில் இதற்குப் பின்பும் வலம் வருகிறார்.. ரொம்ப பட்ஜெட் பற்றாக்குறையோ..?
இறுதிக் காட்சியில் இன்னும் காமெடி.. தளபதி படத்தின் தோல்விக்கு மிகப் பெரும் காரணமாய் இருந்தது அப்படத்தின் கிளைமாக்ஸ்தான்..! அதேதான் இங்கேயும்..! இத்தனை கொலைகளை செய்தவரை இரு நாட்டு அரசுகளும் பாராட்டுவதை கனவில்தான் காண முடியும்..! அதிலும் இங்கிலாந்தில்..!? முதலில் உளவுத்துறையின் ஏஜெண்ட், உயரதிகாரிகள் யாரையும் எந்த நாடுமே அடையாளம் காண்பிக்க மாட்டார்கள்..! உளவுத் துறையில் பணியாற்றுபவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அந்தந்த நாடுகளின் கண்காணிப்பில் இருக்கும் விருந்தினராக மட்டுமே செல்ல முடியும் என்று என் சிற்றறிவு சொல்கிறது.. ஐயா.. கொலைகளையும் செய்துவிட்டு.. தப்பிக்கவும் செய்கிறார்.. சீரியஸ் டைப் கதைகளில் லாஜிக்கை பார்க்கத்தான் வேண்டும்..!
இதுதான் இப்படி என்றால் நடிப்பு.. மகா சொதப்பல்..! ராஜபாட்டையில் எந்தெந்த கோணங்களிலெல்லாம் விக்ரம் வயதானவராகத் தோன்றுவாரோ அது போலவே காட்சிகளை வைத்திருந்தார்கள். இதிலும் அப்படியே..! வயதாவதைத் தடுக்க முடியாதுதான்.. ஆனால் கேமிராவில் ஏமாற்றலாமே..? வழக்கமான விக்ரமையே காணோம்..! இறுக்கமான முகத்துடன் கண் பார்வையற்றவர் பேசும்பேச்சுக்கள் ஓகே.. ஆனால் கல்யாண மாப்பிள்ளை விக்ரமும் அப்படியேதான் பேச வேண்டுமா..? தில், தூள் விக்ரமெல்லாம் எங்கே போய்த் தொலைஞ்சார்..?
இதய தெய்வம்.. தங்கத் தாரகை அனுஷ்காவை இப்படி வீணடித்திருக்க வேண்டாம்.. அனுஷ்காவும் இல்லையேல் படத்தில் உக்காந்திருக்கவே முடியாது என்பது இன்னொரு விஷயம்..! அவரது அழகையும், நடிப்பையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் தெலுங்குவாலாக்கள்தான்.. அந்த டெக்னிக் அவர்களுக்குத்தான் வரும்போலிருக்கிறது..! முழுக்க, முழுக்க போர்த்திக் கொண்டு நடித்தாலென்ன..? ஒரு கனவுக் காட்சியிலாவது நடனத் தாரகையை ஆட வைத்திருக்கலாமே..? “உயிரின் உயிரே” பாடலில் மட்டும்தான் கொஞ்சமாவது பார்க்க முடிந்தது..! “அனிச்சப் பூவழகி” பாடலில் நீரவ் ஷாவின் கேமிரா செய்த சதி வேலையில் அம்மணியின் முகம் விக்ரமின் முகத்தைவிட பயங்கரமாக காட்சியளித்ததுதான் கொடுமையிலும் கொடுமை..!
சந்தானம், சரண்யா, டெல்லி கணேஷ், தம்பி இராமையா என்று பட்டியல்கள் இருந்தாலும் எதுவும் கதைக்கு ஆகவில்லை. சந்தானத்தின் பேச்சுக்கு சிரிப்பதா அழுவதா என்று பட்டிமன்றமே நடத்தலாம்..! அந்த அளவுக்கு கொடுமை..! தம்பி இராமையாவின் பேச்சையெல்லாம் சிரிப்பு வருது ரீதியில் பலரும் எழுதியிருப்பதை பார்த்தவுடன் எனக்கே என் மீது டவுட் எழும்பியிருக்கிறது. நான்தான் முசுடாகிவிட்டேனோ..? என்ன கொடுமை சரவணா இது..?
லண்டன் அழகிப் போட்டியில் அழகியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார் எமி ஜாக்சன். இராம.நாராயணன்கூட நல்லபடியாக இந்தக் காட்சியை எடுத்திருப்பார். இதுக்குத்தான்யா இந்த விஷயத்துல ஷங்கரை அடிச்சுக்க முடியாதுன்னு சொல்றது.. மெகா பட்ஜெட் படம்.. மிகப் பெரிய சீன்ஸ் சீக்குவேஷன்ஸ் வேண்டாமா..? நிஜமாகவே ஏவி.எம். ஏசி புளோரில் செட் போட்டு எடுத்திருக்கிறார்கள்..! இது மட்டுமில்லை.. எமி ஜாக்சனுக்கு நடக்கும் பாராட்டு விழாவும் ஏவி.எம்.மில்தான். இந்தக் காட்சிக்குப் பின்புதான் படத்துக்கு பூசணிக்காய் உடைத்தார்கள். கூடவே கேக் வெட்டி எல்லாருக்கும் தன் கையாலேயே கேக்கை கொடுத்துவிட்டுத்தான் “ஐ” ஷூட்டிங்கிற்கு ஷிப்ட் ஆனார் எமி.. கேக் வாங்கிய புண்ணியவான்களில் அடியேனும் ஒருவன்..!
எந்தக் காட்சியிலும் அழுக வைக்காமல், மெல்லிதாக வருத்தப்பட வைத்தே நடிக்க வைத்திருப்பதால் எமியின் நடிப்புக்கு எதுவும் ஸ்கோர் சொல்ல முடியவில்லை. அடுத்தப் படத்தில் பார்க்கலாம். பெல்காம் அழகி லட்சுமிராயும் இன்னொரு பக்கம் அவதாரமெடுத்திருக்கிறார். இதுவும் அடிக்கடி கண நேரத்தில் வந்துபோவதுதான்..! நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் பார்க்க பளீச் சென்று பிரெஷ்ஷாக இருந்தது இந்த டோனியின் கில்லிதான்..!
அண்ணன் கஜபதிபாபுவைப் பத்தியும் கொஞ்சம் சொல்ல வேண்டும்..! தெலுங்கில் கொஞ்சம் மார்க்கெட் வேண்டும் என்பதற்காக நடிக்க வைத்திருக்கிறார்கள்..! இதைவிட பெரிய விஷயம் படத்தில் ஏதுமில்லை.. ஆனால் நேரில் மனிதர் அவ்வளவு அழகான தமிழ் பேசுகிறார். பிறந்ததும், படித்ததும் சென்னையில்தானாம்..! அண்ணாத்தே ரொம்ப லேட்டா கோடம்பாக்கத்துல எண்ட்ரியாகியிருக்காரு..! விக்ரமுடன் போனில் பேசும்போது அனுஷ்காவை வைத்துக் கொண்டு "ஜாக்கிரதை.. தொலைச்சிருவேன்" என்பது போல் மறைமுகமாக எச்சரிக்கும்போதுதான் கொஞ்சூண்டு வில்லத்தனம் தெரிந்தது..!
தாண்டவம் டைட்டில் சாங்கும், “அனிச்சப் பூவழகி” பாடலும், “உயிரின் உயிரே” பாடலும் கேட்கும்படி இருந்தது என்றாலும், பார்க்கும்படி இல்லை..! ஜி.வி.பிரகாஷின் அடுத்த படங்களில் இதுபோல் சுதந்திரமாக தான் செய்ததை தானே திரும்பவும் எடுத்துக் கொடுத்தால்கூட நலம்தான்..!
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது நீரவ்ஷாவின் ஒளிப்பதிவுதான்.. லண்டனையும், தமிழ்நாட்டையும் அழகாகக் காண்பித்திருக்கிறார். ஆனால் அதற்காக அந்த ஆஸ்பத்திரியின் முகப்பையே எத்தனை தடவைதான் காட்டுவது..? வேறு கோணத்தில் இன்னும் அழகாகக் காட்டியிருக்கலாமே..? ஏரியல் வியூவில் லண்டன் நகரம் அழகுதான். ஆனால் குண்டு வெடிப்பதாகச் சொல்லி சிஜியில் ஆங்காங்கே காட்டுவதுதான் பல்லை இளிக்கிறது..! ரைட்டு.. விஜய்யை ரொம்பவும் ஓட்ட வேண்டாம்..! ஆனால் அதே சமயம், இந்தக் கதைக்கும், திரைக்கதைக்கும்தான் இத்தனை சண்டை, சச்சரவுகளா என்று ஆயாசமும் தோன்றுகிறது..!
படம் ரொம்ப மோசமும் இல்லை.. ரொம்ப ஓஹோவும் இல்லை. சராசரிதான்.. பார்க்கணும்னு நினைச்சா பார்க்கலாம். இல்லைன்னா விட்ரலாம்.. எதுவும் தப்பில்லை..!
|
Tweet |