துரோகி - சினிமா விமர்சனம்

30-09-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'நண்பேன்டா' என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லி 'பாஸ் என்கிற பாஸ்கரன்' சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்க.. அதே வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிப்பதைத்தான் இதில் சொல்லியிருக்கிறார்கள்.


சிறு வயதில் நெருங்கிய நண்பனாக இருந்தும் தனக்கு எதிராக பேசிவிட்டானே என்ற ஒரு காரணத்திற்காக வன்மம் கொண்டலையும் இரண்டு நண்பர்கள் விஷ்ணுவும், ஸ்ரீகாந்தும். பெரியவர்களான பின்பும் ஆளுக்கொரு ஆள், அம்பு, சேனை படையுடன் அவ்வப்போது மோதிக் கொள்கிறார்கள். இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் தாதா குரூப்புகள் இவர்களை மோத வைத்து மூழ்கடிக்கப் பார்க்க.. இறுதியில் பிழைக்கிறார்களா அல்லது இது போன்ற படங்களின் வழக்கமான பார்முலா படி இறைவனடி சேர்கிறார்களா என்பதுதான் கதை..


இதுவரையில் தமிழ்ச் சினிமாவில் பங்களித்திருக்கும் பெண் இயக்குநர்களில் கமர்ஷியலை முழுமையாகக் கொடுத்திருப்பவர் இத்திரைப்படத்தின் இயக்குநர் சுதாதான். மணிரத்னத்தின் சீடராம். படம் முழுகத் தெரிகிறது. குறிப்பாக வசனத்திலும், ஒலிப்பதிவிலும்.. திருந்தவே மாட்டார்கள் போலிருக்கிறது அந்த டீம்.

திரைக்கதை மிக சுவாரஸ்யம்.. சிறு வயதில் நடந்தவைகளை முதலிலேயே காட்டிவிடுவதால் பிற்காலத்திய மோதலில் நாமும் தூசி பறக்க அவர்களுடன் ஓட முடிகிறது. ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் ட்விஸ்ட்டுகள்தான் திரைக்கதையின் பலமே..


பூஜாவின் கதையும், அந்தப் பள்ளிக்கூடத்தின் காட்சிகளும் வெகு இயல்பாக, அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது. இப்படியொரு டீச்சரெல்லாம் எனக்குக் கிடைச்சிருந்தா, நான் ஒழுங்கா படிச்சு இந்நேரம் எங்கயோ போயிருந்திருப்பேன்.

இப்போதெல்லாம் சிறு வயதுப் பிள்ளைகளை அளவுக்கு அதிகமாக இமாஜின் செய்தோ, வயதை மீறிய பேச்சை அவர்களை பேச வைப்பதும் தமிழ்ச் சினிமாவுக்கு வழக்கமாகிவிட்டது. அது போலவே இதிலும்.. சின்ன வயது விஷ்ணு பேசுகின்ற பேச்சு ஒரு உதாரணம்.. பிளேடை வைத்து ஆளையே கொலை செய்யும் அளவுக்குப் போவது கொஞ்சம் டூ மச்சான திரைக்கதைதான். பிற்காலத்திய சண்டைக்கு வலுவாக்க வேண்டி வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.

அம்மணமாக பள்ளியை ஒரு ரவுண்டு ஓடி வந்தால் பேசுவதாக சின்ன வயது விஷ்ணு சொல்ல.. இதை நம்பி ஓடிவந்துவிட்டு, பின்பு அவன் வார்த்தை மீறியவுடன் சின்ன வயது ஸ்ரீகாந்தின் எக்ஸ்பிரஷனும், அதைத் தொடர்ந்து தியாகராஜனுடன் போய்ச் சேரும் காட்சிகளும் ரொம்பவே ஸ்பீடு. ஆனாலும் இந்தக் காலத்திலேயும் இப்படி பட்டப் பகல்ல கொலை செஞ்சுட்டு ஹாயா வீட்ல இருக்கிற மாதிரி காட்டுறது அவ்வளவு நல்லாயில்லை.

ஸ்ரீகாந்த் இதுவரையில் சாக்லேட் பையனாக கஷ்டப்படாமல் நடித்திருந்தவர் இந்தப் படத்தில்தான் கொஞ்சம் உயிரைக் கொடுத்து நடித்திருப்பதுபோல் தெரிகிறது. விஷ்ணுவை வெறுப்பேற்ற அவனது தங்கையுடன் உறவில் இருப்பதைப் போல் செல்போனில் ஆக்ட்டிங் கொடுப்பது உவ்வே ரகம் என்றாலும், அந்தக் காட்சியில் இருக்கும் வெறுப்புணர்வு டபுள் ஓகே.

யு.பி.எஸ்.சி. இண்டர்வியூ அறைக்குள் நுழையும் முன் இது மாதிரியான சோதனை உங்களுக்குக் கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்..? அத்தோடு அந்த இண்டர்வியூவில் வைத்திருக்கும் ட்விஸ்ட்டு.. படத்தின் இறுதியில்தான் உடைக்கப்படுகிறது. ஒரு லாஜிக் எர்ரர்.. இன்ஸ்பெக்டராக இருந்தவர், யு.பி.எஸ்.சி. சேர்மனாக வர முடியுமா..? அவரே தனது பழைய பகையை வைத்து "அவனை கொலை செய்துவிட்டு வா.." என்று சொல்வதும், இதை விஷ்ணு ஏற்றுக் கொள்வதும் என்னமோ மாதிரியிருக்கு.

இதுதான் இப்படியென்றால் "கையைப் பிடிச்சு இழுத்தியா..?" ஸ்டைலில், "என் இடுப்பை பார்த்தியா...?" என்று நட்ட நடு ரோட்டில் அம்மா பூனம் பஜ்வா சவுண்டு விடுவதும் ஓவரப்பா.. அவருடைய திருமணத்தின்போது சின்ன வயது விஷ்ணு, குணா ஸ்டைலில் கியூவில் நின்று பூனத்தின் கன்னத்தில் வைக்கின்ற முத்தமும், "புள்ளை பொறந்தா அழகா இருக்கும்" என்ற சின்ன வயதுப் பேச்சும் படத்தின் இயக்குநர் ஒரு பெண்மணி என்பதையே சுத்தமாக மறக்கடித்துவிட்டது.

போதாக்குறைக்கு படத்தின் பல இடங்களில் வசனத்தில் சென்சார் போர்டு வைத்திருக்கும் கத்திரியைப் பார்த்தால் சுதா, பல ஆண் இயக்குநர்களுக்கு சவால் விட்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.

சின்ன அசின் என்று பூர்ணாவை எதற்காகச் சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் பூர்ணா சின்ன அசின்தான் என்பதை இந்தப் படத்தைப் பார்த்தாவது ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அவ்வளவு வளர்சிதை மாற்றம், உடையிலும், பேச்சிலும், ஆக்ட்டிங்கிலும்.. அசத்தல்.. ஏதோ ஒரு மாற்றத்தை விரும்பும் இயக்குநரிடம்தான் இது போன்று செய்ய முடியும்.. அசினின் மேனரிஸம் ஒத்துப் போகுமளவுக்கு பூர்ணாவின் நடிப்பு இருப்பது அவர் செய்த பாக்கியம்.. நாம் செய்த புண்ணியம்..


இன்னொரு கதாநாயகி பூனம் பஜ்வா. அழகாக இருப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனால் அம்மா பஜ்வா தனது இடுப்பைக் காட்டுவதற்காக நொடியில் அவிழ்ந்துவிடும் அளவுக்கு சேலையை இறக்கிக் கட்டி கொஞ்சம் கிக்கை ஏற்றியிருக்கிறார். வாழ்க இயக்குநர் சுதா. பெண் கேட்க வந்த இடத்தில் மாப்பிள்ளையை பார்த்து அம்மா ஜொள்ளு விடுவதையெல்லாம் பார்த்தால், தமிழ்ச் சினிமா ரொம்பவே வளர்ச்சியடைந்து கொண்டே வருகிறது என்று ஒத்துக் கொள்ள வேண்டும்.


தாதாவாக மம்பட்டியான் தியாகராஜன். வழக்கமான எல்லா தாதாவுக்கும் இருப்பதைப் போல இவருக்கென்று தனி ஸ்டைல் இல்லை என்பதால் குறிப்பிடும்படி எதுவும் சொல்ல முடியவில்லை. ஸ்ரீகாந்துடன் பேசியபடியே மொட்டை மாடிக்கு வந்த பின்பு காந்துக்கு கார் வாங்கிக் கொடுத்திருப்பதை குறிப்பால் உணர்த்தும்போது அதே ஆக்ஷன். இறுதியில் ஸ்ரீகாந்தை கொல்வதற்காக துப்பாக்கியைத் தூக்கும்போதும் அதே இறுக்கம்தான். ஆமாம். இவர் என்றைக்கு வேறு விதமாக நடித்திருக்கிறார்? 'கொம்பேறி மூக்கனில்' 14 ரீலிலும் இப்படியேதான் வருவார். ஆனாலும் படம் ஓடியதே..!


விஷ்ணுவின் தோற்றம் தாதா போல் இருந்தாலும் இடையிலேயே அவர் ஐ.பி.எஸ். ஆபிஸராகி யமஹா பைக்கில் வந்து செல்வதுமாக காட்சியை வைத்து கொஞ்சம் சிதைத்திருக்கிறார்கள். ஸ்ரீகாந்துக்கு இந்த வேடத்தைக் கொடுத்துவிட்டு விஷ்ணுவிற்கு தாதா வேடத்தைக் கொடுத்திருக்கலாம். எத்தனையோ போலீஸ் ஹீரோக்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இதில்.. கொடுமை.. மற்றபடி நன்றாகவே நடித்திருக்கிறார்.

படத்தின் துவக்கத்தில் வரும் அந்த தண்டவாளக் காட்சிகளும், அதைத் தொடர்ந்து வாய்ஸ் மைண்ட்டில் கதை நகர்த்திய போக்கும், உச்சக் கட்டக் காட்சிகளும் எதிர்பார்ப்பை வெகுவாகத் தூண்டியிருந்தது.

இத்தனை படுகொலைகள் செய்தும், லோக்கல் போலீஸ் ஆதரவுடன் தியாகராஜன் அண்ட் கோ தைரியமாக வெளியில் நடமாடுவது கொஞ்சம் சிரிப்பைத் தந்தாலும், எதிரணியுடன் சேர்த்து வைக்க போலீஸே அல்லாடுவதாக இன்றைய ராயபுரம் ஏரியாவை அப்படியே கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார் சுதா.

காட்சிக்குக் காட்சி வேறு வேறு லொகேஷன்கள்.. குறிப்பான, ஷார்ட்டான, ஷார்ப்பான வசனங்கள்.. எதிர்பார்க்க வைத்திருக்கும் திரைக்கதை என்று நன்றாகவே கொண்டு சென்றிருக்கிறார் சுதா.

கிளைமாக்ஸில் "உன்னைத்தான் கொல்ல வந்தான்" என்று ஸ்ரீகாந்திடம் சொல்கின்ற காட்சியும், தொடர்ந்து தியாகராஜனை போட்டுத் தள்ளும் காட்சியும் ட்விஸ்ட்டுகளின் உச்கக்கட்டம்.. படம் நெடுகிலும் கேமிராமேன் கூடவே ஓடி வந்திருக்கிறார் போலும்..! நல்ல அருமையான பதிவு..! ஸ்ரீகாந்தும், விஷ்ணுவும் மோதிக் கொள்ளும் காட்சி படமாகக்ப்பட்டிருக்கும் விதம் பாராட்டுக்குரியது..!

பெண் இயக்குநர் என்றாலென்ன..? நாங்களும் வைப்போம்ல்ல என்பதைப் போல ஒரு குத்துப் பாடலை வைத்து அசத்தியிருக்கிறார் சுதா. இயக்குநருக்கு தேங்க்ஸுங்கோ. இதையே மற்ற பெண் இயக்குநர்களும் பாலோ செய்தால் என்னைப் போன்ற அப்பாவி ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும். வாழ்க சுதா..


ஒரு நல்ல கமர்ஷியல் கம்மர்கட்டை கொடுத்திருக்கிறார். ஆனாலும் இன்றைய வழக்கப்படியான தமிழ்ச் சினிமா ரிசல்ட்டைத்தான் இது கொடுத்திருக்கிறது. எந்திரன் பீவரில் சுமாராகத் தப்பித்து இரண்டாவது வாரமும் கணிசமாக காசை சம்பாதித்திருக்கிறது.

ஆண் இயக்குநர்களுக்கு சுதா கொடுத்திருக்கும் சவால்தான் இந்தத் துரோகி..

ஒரு முறை பார்க்கலாம்..

புகைப்பட உதவிக்கு நன்றி : www.indiaglitz.com

சேது சமுத்திரத் திட்டம் - கடலில் கரையும் பணம்...!

28-09-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எம்.பி.க்களின் சம்பள உயர்வு, ஸ்பெக்டரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று நமது வயித்தெரிச்சலைக் கொட்டிக் கொண்ட அரசியல்வியாதிகளைத் திட்டித் திட்டி நமக்குத்தான் வாய் வலிக்கிறது. அவர்களுக்கு சூடும், சொரணையும், வெக்கமும், மானமும் வந்தபாடில்லை. இருந்ததாகவோ, இருப்பதாகவோ அவர்களும் காட்டிக் கொள்வதில்லை. நாம் அவர்களைக் குற்றம்சாட்டுவது மக்கள் பணத்தை ஏன் விரயமாக்குகிறீர்கள்? கொள்ளையடிக்கிறீர்கள்? என்றுதானே ஒழிய, அவர்களது சொந்தப் பணத்தில் ஏன் முத்துக் குளிக்கிறீர்கள் என்று நாம் கேட்கவில்லை.

அரசியல்வியாதிகள் என்றாலே ஆண்டவர்கள் என்றாகிவிட்டது. அதிலும் ஆள்பவர்கள் என்றாலே உலகை படைத்தவர்கள் என்கிற ரீதியில் அவர்களது அலட்சியப் போக்கும், உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என்ற எகத்தாளமான சொல்லும், செயலும்தான் நம்மை எதிர்கொள்கின்றன.

அந்த வரிசையில் நம்முடைய உழைப்பை, நம் பணத்தை, நம் செல்வத்தை இந்த அரசியல்வியாதிகளின் போட்டி அரசியலிலால் தொலைத்துவிட்ட இன்னொரு கதையாக சேது சமுத்திரத் திட்டம் திகழ்கிறது.

பல்வேறு நாடுகளில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வரும் கப்பல்கள் தற்போது தலையைச் சுற்றி மூக்கைத் தொடும்விதமாக இலங்கையைச் சுற்றிக் கொண்டு தூத்துக்குடிக்கு வந்து செல்கின்றன. மேலும் சில சரக்குக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திலேயே சரக்குகளை இறக்கிக் கொள்கின்றன. இதனால் தூத்துக்குடி துறைமுகத்திற்கு இழப்பு ஏற்படுகிறது.

இதனைத் தவிர்த்து ராமேஸ்வரம் கடல் பகுதியினை ஆழப்படுத்தி அங்கே கப்பல் போக்குவரத்திற்கு ஏதுவாக கடல் பாதை அமைப்பதே இந்த சேது சமுத்திரத் திட்டத்தின் நோக்கம்.

இதனால் சுமார் 800 கிலோ மீட்டர் தூரமுள்ள பயண நேரம் குறைவதோடு, கப்பல்கள் வந்து செல்லவும் மிக எளிதாக இருக்கும். இதனால் அதிக சரக்குக் கப்பல்கள் தூத்துக்குடிக்கு வந்து செல்ல வாய்ப்புண்டு. தென் தமிழகத்திற்கு வியாபார அனுகூலங்கள் நிறைய கிடைக்கும். வளர்ச்சி பெருகும் என்றெல்லாம் மனக்கோட்டைகள் பலவற்றை அரசியல்வியாதிகள் மக்கள் முன் அடுக்கினார்கள்.

எதிர்த் தரப்பு அரசியல்வியாதிகள் இதனை பக்காவான பக்தி அரசியலாக்கினார்கள். அந்தப் பாதையில் ராமர் பாலம் இருக்கிறது. அதனை உடைத்தால்தான் கடல் பாதை அமைக்க முடியும். ராமர் பாதம் பட்ட பாலத்தை உடைபடுவதை நாங்கள் பார்த்துக் கொண்டு ச்சும்மா இருக்க முடியாது என்று கொதித்தெழுந்தன.

ஆனாலும் எதிர்ப்பையெல்லாம் கண்டு கொள்ளாமல் வழக்கம்போல பூஜை போட்டு அவசரம், அவசரமாக வேலையைத் துவக்கினார்கள். எந்தவிதத்திலும் ராமரை இழுக்காமல் அரசியல் நடத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்ட பா.ஜ.க. இதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தியது. இத்தனைக்கும் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் அப்போதைய அமைச்சர் அருண்ஜெட்லிதான் சேது சமுத்திரத் திட்டம் பற்றிய முன் வரைவுகளுக்கு அனுமதியளித்துள்ளார்.

இதற்கிடையில் இந்தியாவின் தற்போதைய நம்பர் ஒன் ஜோக்கரான சுப்பிரமணியசுவாமி உச்சநீதிமன்றத்தில் ராமர் பாலத்தை உடைக்கக் கூடாது. சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும் என்று கூறி தாக்கல் செய்த மனுவினாலும், கேரள, தமிழக மீனவர்கள் இயற்கை வளங்கள் அழிக்கப்படும், மீன்கள் அழிக்கப்படும். எங்களின் வாழ்வாதாரமே சிதைந்து போகும் என்று தாக்கல் செய்த மனுவினாலும் சேது கால்வாய் திட்டம் பாதியில் அம்போவென நிற்கிறது.

உச்சநீதிமன்றமும் மாற்றுப் பாதைகள் பற்றி மத்திய அரசு சிந்திக்க வேண்டும் என்று சொல்லி பச்சோரி என்பவரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்துவிட.. அந்தக் குழு இப்போது மாற்றுப் பாதைகளைக் கண்டறிந்து வருகிறது..

2,400 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இத்திட்டத்தை இனிமேற்கொண்டு செய்து முடிக்க இன்றைய தேதியில் 10,000 கோடியாவது வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

நான்கூட இத்திட்டம் தொடங்கிய புதிதில் இத்திட்டத்தை ஆதரித்துதான் பதிவு எழுதியிருந்தேன். அது தொடர்பான பல பதிவுகளில் ஆதரித்துதான் பின்னூட்டம் இட்டேன். காரணம், 2,400 கோடி என்பதால் மிகக் குறைந்த வருடங்களில் போட்ட பணத்தை எடுத்துவிட்டு அதன் மேற்கொண்டு தொழில் வளர்ச்சி நிச்சயம் பெருக வாய்ப்புண்டு என்கிற பல செய்திகளைப் படித்ததினால்தான்.

ஆனால் இந்த வார துக்ளக்(29-09-2010) வார இதழில் வெளியாகியிருக்கும் இது பற்றிய கட்டுரையைப் படித்த பிறகு நிச்சயம் ராமருக்காக இல்லாவிட்டாலும் செலவழிக்கப் போகும் பணத்தினை நினைத்துப் பார்த்தாவது திட்டத்தைச் செயல்படுத்துவது பற்றி மறுபரீசிலனை செய்யலாம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

இது பற்றிய துக்ளக் கட்டுரையை முழுமையாக படித்துப் பார்த்தீர்களேயானால் உங்களுக்கே புரியும்.

இனி துக்ளக் கட்டுரைக்குள் செல்வோம்..

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்கு மத்திய அரசு தடைக்கல்லாக இருக்கிறபடியால், தென் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு முட்டுக்கட்டையாய் இருக்கிறது என்கிற பொருள்பட தமிழக முதல்வர் கருணாநிதி சமீபத்தில் திருச்சியில் நடந்த விழாவில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை இரட்டிப்பாக அதாவது ரூ.2247 கோடி என்பது சுமார் 5000 கோடியாக ஆக்கலாம் என்ற ஹேஸ்யத்தை சில பத்திரிகைகள் வெளிப்படுத்தியுள்ளன.

ராமபிரான் புண்ணியத்தில் உருவான சேது பாலத்தை உடைக்கும்போது இதுவரை ஏற்பட்ட விஞ்ஞான மற்றும் சட்ட ரீதியான தாமதங்களினால் ஏற்கெனவே இதன் செலவு குறைந்தபட்சம் ரூபாய் 8000 கோடிகளையாவது தாண்டியிருக்கலாம் என்று பல பொருளாதார வல்லுனர்களும், மத்திய அரசின் தணிக்கை அதிகாரிகளும் சொல்கிறார்கள்.

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே எந்தப் பாலமும் இல்லை. அதை ராமபிரானே உடைக்கச் செய்தார் என்று தமிழக அரசின் உளவுத் துறையின் பல்லவியை பல பத்திரிகைகள் இங்கும், வெளிமாநிலங்களிலும்கூட பின்பாட்டாகப் பாடின. பாடி வருகின்றன.

விஞ்ஞானி ரீதியான தடங்கல்கள் இதுவரை மூன்று முறைகள் ஏற்பட்டுள்ளன. கடலுக்குள் புதைந்துள்ள மணல்மேடுகளை அகற்றி அவற்றை ஆழப்படுத்த வரவழைக்கப்பட்ட மூன்று விசேஷ இயந்திரங்கள் பொருந்திய கப்பல்கள் பழுதாகியுள்ளன. ஏன்..? ஒன்று மூழ்கியேவிட்டது. அப்படி நாசமான ஒரு கப்பலின் பெயர் ஆஞ்சநேயரைக் குறிப்பதாக வேறு இருந்தது.

சேது பாலம் என்ற ஒன்று இருந்து, அது இடிக்கப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி கேரளா மற்றும் தமிழக மீனவர்கள் எழுப்பிய ஐயப்பாடுகளுக்குச் செவிசாய்த்த உச்சநீதிமன்றம் இத்திட்டத்திற்கு 2007-ம் ஆண்டு இடைக்காலத் தடை விதித்தது.

இயன்றால் தனுஷ்கோடிக்கும், ராமேஸ்வரத்தின் நில முடிவு எல்லைக்கும் இடையே ஒரு பாதையை வகுத்து, அவ்வழியில் இத்திட்டத்தைப் பூர்த்தி செய்ய இயலுமா என மத்திய மாநில அரசுகளை ஆராயும்படி தனது உத்தரவில் அது அப்போது பணித்தது. இது சம்பந்தமாக ஆர்.கே.பச்செளரி கமிட்டி 2008-ல் அமைக்கப்பட்டு, இதுவரை அது ஐந்து முறை கலந்தாய்வுகளை நடத்திவிட்டது.

இந்தக் காலக்கட்டங்களில் பச்செளரிக்கு பன்னாட்டு அவப்பெயர் உண்டாயிற்று. அதன் காரணமாகவோ என்னவோ, எல்லாமே கிடப்பில் போடப்பட்டுவிட்டன. இது குறித்து நமது ஆய்வில் தெரிய வந்த சில விஷயங்கள் :

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தின் மூலமாக தென் தமிழகம் பெருமளவு முன்னேறும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் கோடானுகோடி முறை கூறிவிட்டார்கள். அத்திட்டத்திற்கு இதுநாள்வரை எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது என்ற உண்மையை யாரும் இன்னும் பகிரங்கமாகச் சொல்லவில்லை. என்றாலும், அத்திட்டம் முடிவடையும் முன்னர் இத்தொகை ரூ.10,000 கோடியைத் தாண்டலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் இப்போது கூறுகிறார்கள்.

இத்தொகை வட்டியுடன் வசூலாக அப்பாதை வழியே செல்லும் கப்பல்கள் வருடம் ஒன்றுக்கு ரூ.2,000 கோடிகள் வீதம், பதினைந்து ஆண்டுகளாவது செலுத்த வேண்டும். செலவான தொகைக்கான வட்டி குட்டி போட்டு இந்தத் தொகை ரூ.30,000 கோடிகளைத் தாண்டும் என ஒரு கணக்கு கூறுகிறது.

வருடம் ஒன்றுக்கு ரூ.2.000 கோடிகள் வசூலாக வேண்டும் என்றால், கப்பல் ஒன்றுக்கு சராசரியாக ஐந்து லட்சம் ரூபாய் கட்டணம் என்று வைத்துக் கொண்டால் (இத்தொகைதான் இப்போது இலங்கையைச் சுற்றி வர செலவாகிக் கொண்டிருக்கிறது) வருடம் ஒன்றுக்கு அவ்வழியே 40,000 கப்பல்கள் செல்ல வேண்டும்.

இந்நிலையில் சேதுக் கால்வாய் வழியாகச் செல்லும் கப்பல்களோ 30,000 டன் எடைக்கு மேல் இருக்க முடியாது என்பதை வல்லுனர்கள் கூற, அக்கூற்றை தமிழக அரசும் ஒப்புக் கொண்டுள்ளது.

சென்னைத் துறைமுகம் 2005-2006, 2006-2007, 2007-2008-ம் ஆண்டுகளில் முறையே 1867, 2059, 2052 கப்பல்களைத்தான் மொத்தமாகவே கையாண்டது என்பது அரசுக் கணக்கு. 2008-2009ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2600-ஐ தாண்டவில்லை.

இந்தியாவின் அனைத்துத் துறைமுகங்களிலும் கையாளப்பட்ட கப்பல்களின் எண்ணிக்கையே வருடம் ஒன்றுக்கு மொத்தமாக எப்போதுமே 20,000-ஐ தாண்டியதில்லை.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் ஹரிஹரன் அளித்த சில கணக்குகளை இங்கே பாருங்கள்.

2003-ம் ஆண்டிலேயே திட்டம் முடிவடையும் என்ற அடிப்படையில் கணித்த கணக்கு - சேதுக்கால்வாய் மூலம் செல்லக் கூடிய கப்பல்களின் எண்ணிக்கை

வருடம் -             குறைந்தபட்சம் -             சுமாரான கணக்கு -             நடக்க முடியாத ஹேஷ்யம்

2004                              2344                            2416                                            2490
2008                              2858                            3055                                            3249
2010                              3140                            3417                                            3683
2015                              3900                            4432                                            4895
2020                              4754                            5621                                            6343
2025                              5883                            7141                                            8234

விந்தை என்னவென்றால் இவை மத்திய-மாநில அரசுகளே ஏற்றுக் கொண்ட கணிப்புகள்.

நிலைமை இவ்வாறிருக்க.. சேதுக் கால்வாய் மூலமாக மட்டும், வருடம் ஒன்றுக்கு 40,000 கப்பல்கள் எவ்வாறு செல்லும்..?

அப்படியே செல்வதாக இருந்தால், தூத்துக்குடி துறைமுகத்திற்கு இவற்றில் குறைந்தபட்சம் வருடம் ஒன்றுக்கு தலா 23,000 டன் எடையாவது உள்ள 12,000 கப்பல்கள்வரை வந்து செல்ல வேண்டும். அதாவது 27.60 கோடி டன் எடையுள்ள பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதியாகி, ஏற்றுமதியாக வேண்டும்.

அதற்கான இடம், பொருள், ஏவல், இத்யாதிகள் அத்துறைமுகத்திலோ அல்லது அருகாமையிலோ இருக்கிறதா? அது உருவாக சுமார் ரூ.20,000 கோடிகள் செலவாகும். அப்படியே அதெல்லாம் உருவாகக் கூடிய பட்சத்தில் சுமார் 55 கோடி டன் எடையுள்ள பொருட்களைத் தயாரிக்க தூத்துக்குடியைச் சுற்றி தொழிற்சாலைகள் உண்டா? அல்லது உருவாகுமா?

அதை உருவாக்க தமிழகம் தயாராக இருப்பின், அப்பொருட்களை துறைமுகம்வரை கொண்டு செல்லும் சாலைகள் உருவாகும் திட்டங்கள் இருக்கின்றனவா? அதற்கு மட்டும் மேலும் ரூ.12,000 கோடிகள் தேவை. இதுவும் வானத்தில் இருந்து மழையாய்ப் பெய்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இத்தனை பொருட்களையும் தயாரிக்க குறைந்தபட்சம் 2,000 மெகாவாட் மின்சாரம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டுமே தேவைப்படும்.

மான்யம் மூலம் மத்திய அரசு ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் குறைந்தபட்சக் கடனாகவும், ரூ.6 கோடிகளைச் செலவிடத் தயாராக உள்ளது. ஆக, இன்னொரு ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கீட்டை எந்த அரசிடமிருந்து தமிழகம் பெறும்..?

இதெல்லாம் உருவாக சிமெண்ட், எஃகு, ரோடு போட கற்கள், தார் ஆகியவை எங்கிருந்து வரும்? எல்லாமே நடந்து விடுகிறது என்று வைத்துக் கொண்டால்கூட மாதாமாதம் கால்வாய் ஆழப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். காரணம், அவ்வாறு செய்யாவிட்டால் திரும்பவும் மணல் சேர்ந்து தூர்ந்துவிடும்.

சரி, இதையெல்லாம் மீறி அக்கடல் பகுதியில் சுனாமி அல்லது கடல் பொங்கும் அபாயங்களும் ஏற்படலாம் என்று பல விஞ்ஞானிகளும் கூறியிருக்கிறார்கள். இதனை தமிழக அரசு பல முறை மறுத்து இருக்கிறது.

மேற்படி தகவல்களெல்லாம் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் தெரியும்தான். சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் காசி, கயா ஆகிய புண்ணிய ஷேத்திரங்களில் முன்னோர்களுக்குச் சிரார்த்தம் செய்த பிறகு, ராமேஸ்வரத்திலும் அதைச் செய்தாலும் பித்ரு கடன் முழுமை பெறும் என்று நம்புவதுண்டு.

நமது வியர்வையால் உருவான வரிப் பணம், எந்தப் பூர்வ ஜென்மக் கடனை அடைக்க, இப்படி என்றுமே உருவாக முடியாத சேதுக் கால்வாய்க்காகப் பலனில்லாத பிண்டமாகிக் கொண்டிருக்கிறதோ? இது அந்த ராமபிரானுக்கும், அவர் வணங்கிய சிவபெருமானுக்கும்தான் வெளிச்சம்.

நன்றி : துக்ளக் வார இதழ்(29-09-2010)

என்ன தோழர்களே.. படித்து விட்டீர்களா..? உங்களை மாதிரியேதான் எனக்கும் குழப்பமாக இருக்கிறது..

ஒரு பக்கம் நிச்சயமாக சம்பாதித்து விடலாம்.. தொழில் வளர்ச்சி பெருகும் என்று ஆட்சியாளர்கள் ஒரு பக்கம்.. எங்களின் வாழ்க்கை சிதைந்து போகும். மீன்கள் கிடைக்காமல் அல்லாட வேண்டி வரும் என்று மீனவர்களின் கதறல் ஒரு பக்கம்.. ராமர் பாதம் பட்ட பாலத்தை உடைக்கப் போகிறார்களே.. பாவிகள்... என்ற ஆன்மிக தமிழர்களின் புலம்பல் ஒரு பக்கம்.. எதை நம்புவது.. எதன் மீது நியாயம் இருப்பதாக உணர்வது..?

10,000 கோடி ரூபாய் என்பது மிகச் சாதாரணத் தொகையல்ல.. நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைப் பங்காளனும் தனது வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்து சேர்த்துக் கொடுத்திருக்கும் பணம். பயன்பட்டால் பரவாயில்லை. ஆனால் கடலில் கரைத்த பெருங்காயமாக போய்விடக்கூடாது.

இதுவரையில் செலவு செய்த தொகையே பல ஆயிரம் கோடிகளாகிவிட்டதால் இதனை பாதியில் இப்போது நிறுத்தினால் அத்தனையும் வீண்தான்.. தொடர்ந்து செயல்படுத்தினாலும் பணமும் செலவாகி, செலவழித்த பணமும் திரும்ப வராது என்பதும் உறுதியாகிவிட்டது.

மொத்தத்தில் இத்திட்டத்தினால் கமிஷன் வாங்கியிருக்கும், அல்லது வாங்கப் போகும் அரசியல்வியாதிகளுக்கும், கான்ட்ராக்ட்டில் கொள்ளையடிக்க காத்திருக்கும் பெரும் முதலாளிகளையும் தவிர வேறு யாருக்கு என்ன பயன் என்றும் தெரியவில்லை.

மாற்றுப் பாதையை இவர்கள் எப்போது கண்டறிந்து.. அதனைச் செயல்படுத்தி திட்டத்தை முடித்துக் காட்டி போக்குவரத்தைத் துவக்குவது..?

அந்த ராமனுக்கே வெளிச்சம்..!

பெட்ரோல் விலை உயர்வில் புதைந்துள்ள மர்மங்கள்..!


26-09-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த வார துக்ளக்(29-09-2010) பத்திரிகையில் வெளியாகியிருக்கும் இரண்டு கட்டுரைகள் நாம் கண்டிபபாக அறிந்து கொள்ள வேண்டியவையாக உள்ளன. அதில் ஒரு கட்டுரையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தின் பின்னணியில் உள்ள பல மர்மமான விஷயங்கள் விரிவாக அலசப்பட்டிருக்கின்றன.

அதனை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. அந்த விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய்யின் விலை உயர்வையே காரணமாக அரசு காட்டுகிறது. ஆனால் முழுமையான காரணம் அதுவல்ல.

 

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை விலையில், அரசு விதித்த வரிகளே பாதிக்கும் அதிகமாகும். வரி வசூல் மூலம் நிதி திரட்ட உகந்த ஒன்றாக பெட்ரோலை மத்திய மாநில அரசுகள் பயன்படுத்துகின்றன.

எல்லா நாடுகளும் பெட்ரோலியப் பொருட்களின் மீது வரி விதிக்கின்றன. ஜெர்மன், இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகள் அதிக வரி விதிக்கும் நாடுகளாக இருக்கின்றன. ஆனால், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகளே காரணம் என்று இவை கூறுகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல என்கின்றன எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகள்.

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஓபெக் 2004-2008 வரையிலான ஆண்டுகளில் தான் விற்பனை செய்த கச்சா எண்ணெயின் மதிப்பு 3,346 பில்லியன் அமெரிக்க டாலர். அதே காலக்கட்டத்தில் ஜி-7 என்னும் ஏழு நாடுகளின் அமைப்பில் அடங்கிய நாடுகள் பெட்ரோலியப் பொருட்கள் மீது விதித்த வரிகளின் மூலம் பெற்ற வருவாய் 3,418 பில்லியன் டாலர்கள் என்கிறது. அதாவது எண்ணெய் ஏற்றுமதி செய்த நாடுகளுக்குக் கிடைத்ததைவிட அந்த எண்ணெயின் மூலம் ஜி-7 நாடுகள் திரட்டிய வரி வருவாய் அதிகம்.

இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நாம் கொடுக்கும் விலையில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமாக வரிகளுக்கே செல்கிறது. கச்சா எண்ணெய்க்கு நுழைவு வரி, மாநிலங்கள் வசூலிக்கும் சுங்கம், துறைமுகக் கட்டணம், மாநிலங்கள் விதிக்கும் விற்பனை வரி(தமிழ்நாட்டில் இது 30 சதவிகிதம்) கல்வி வரி, மத்திய அரசின் விற்பனை வரி என்று பல வரிகளின் மூலமே பெட்ரோலின் விலை பூதாகாரமாக உயர்கிறது.

 

அரசு தனது சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்த வரி விதிப்பின் மூலம்தான் வருவாய் திரட்ட முடியும் என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. என்ன நோக்கங்களுக்காக வரி விதிப்பின் மூலம் வருவாய் திரட்டப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்படுகின்றனவா?

உதாரணத்திற்கு, 1991-92ம் ஆண்டில் இருந்து எண்ணெய்த் தொழில் வாரியத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு விற்பனை வரியாக 84,337 கோடி ரூபாயைத் திரட்டியிருக்கிறது. ஆனால் எண்ணெய்த் தொழில் வளர்ச்சி வாரியத்திற்கு 902 கோடி ரூபாயை மட்டுமே தந்திருக்கிறது.

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை மானிய விலையில் தந்து கொண்டிருப்பதாகவும், அதனால் எண்ணெய் நிறுவனங்களும், அரசும் நிதிச் சுமையைத் தாங்க நேரிடுவதாகவும் அடிக்கடி கூறப்படுகிறது. இதில் கொஞ்சமும் உண்மையில்லை. 2009-2010-ம் ஆண்டில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலியத் துறையின் மூலம் வரிகள் மற்றும் சுங்கத் தீர்வைகள் வாயிலாக தங்களது கஜானாவிற்குக் கொண்டு சென்ற தொகை 1,83,861 கோடி ரூபாய்.

அதே 2009-2010-ல் பெட்ரோலிய நிறுவனங்களான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன்(ONGC) ரூ.16,767 கோடியும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ரூ.10,220 கோடியும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ரூ.1301 கோடியும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ரூ.1,837 கோடியும், ஆயில் இந்தியா நிறுவனம் ரூ.2,610 கோடியும் லாபம் ஈட்டியுள்ளன. இந்த நிறுவனங்களின் ஒட்டு மொத்த லாபம் ரூ.32,735 கோடி ரூபாய். இது இறுதியில் அறிவிக்கப்பட்ட லாபம். ஆனால் உண்மையான லாபம் இதைப் போல ஐந்து மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதே உண்மை. அந்தத் தொகை எங்கே போயிற்று..?

எண்ணெய் நிறுவனங்கள் மிகவும் ஆடம்பரமான செலவுகளைச் செய்கின்றன. அத்துடன் இந்த நிறுவன ஊழியர்களின் சம்பளம் வேறு எந்தத் துறையிலும் கற்பனை செய்ய முடியாதது. 

உதாரணத்திற்கு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 15 வருட அனுபவம் பெற்ற சாதாரணத் தொழிலாளியின் வருடச் சம்பளம் 8,39,757 ரூபாய். எம்.காம். பட்டம் பெற்ற டிரைவர்களின் சம்பளம் வருடத்திற்கு 22 லட்சம் ரூபாய். கெஸ்ட் ஹவுஸ் பராமரிப்பாளர்(படித்தது 5-ம் வகுப்பு) பெறும் வருடச் சம்பளம் 8,56,731 ரூபாய். 8-ம் வகுப்பு மட்டுமே படித்து 1976-ல் வேலையில் சேர்ந்த அட்டெண்டரின் தற்போதைய சம்பளம் ஆண்டிற்கு 45,99,234 ரூபாய்.

எண்ணெய் நிறுவனங்களின் உண்மையான லாபம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இவை ஒரு எடுத்துக்காட்டு.

மக்களுக்கு மான்ய விலையில் தந்து கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். அதனால் நிறுவனங்களுக்கு நஷ்டம் என்கிறார்கள். அரசுக்கு நிதிச் சுமை என்கிறார்கள். கச்சா எண்ணெய்க்காக, எண்ணெய்ப் படுகைகளில் துரப்பணமிடும்போது, அதை எரிபொருளாகப் பயன்படுத்துகிறோம். அதற்குப் பிறகு கச்சா எண்ணெய் கிடைக்கிறது.

அந்தக் கச்சா எண்ணெயில் இருந்து சமையல் எரிவாயு, பெட்ரோல், நாப்தா, கெரசின், விமான எரிபொருளான வெள்ளை பெட்ரோல், டீசல் வகைகள், ஆயில் வகைகள், தார், மெழுகுகள் என பிரித்து எடுக்கப்படுகின்றன. இந்தப் பொருட்களின் மீது சுத்திகரிப்புச்செலவு, அவற்றின் மதிப்புக்குரிய வகையில் பிரித்து, மதிப்புக் கூட்டப்படுகிறதா..?

பெட்ரோலியப் பொருட்களுக்காக அரசின் பட்ஜெட்டில் இருந்து மானியம் என்ற பெயரில் எந்த நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. ஆனால், மானியம் அளிக்கப்படுவதாக கணக்குக் காட்டப்படுகிறது. இது மானியம் அளிக்காமலேயே அளிக்கப்படுகிறது என்று காட்டும் மாயையை உண்டாக்கும் போக்கு அல்லவா..?

 

பெட்ரோலியப் பொருட்களுக்காக அரசின் பட்ஜெட்டில் இருந்து மானியம் என்ற பெயரில் எந்த நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. ஆனால், மானியம் அளிக்கப்படுவதாக கணக்குக் காட்டப்படுகிறது. இது மானியம் அளிக்காமலேயே அளிக்கப்படுகிறது என்று காட்டும் மாயையை உண்டாக்கும் போக்கு அல்லவா..!?

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷனின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா, ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்கு 5,515 கோடி ரூபாயை மான்யமாகத் தந்திருப்பதாக அறிவிக்கிறார்.

எண்ணெய் விநியோக நிறுவனங்கள் 3,661 கோடி ரூபாயை லாபம் ஈட்டியுள்ள காலாண்டில் எதற்காக மான்யம் தரப்பட வேண்டும்..? கூடுதலான விலையில் விற்றிருக்கும் எண்ணெயை குறைந்த விலையில் அந்த நிறுவனங்கள் விற்றனவாம். அதனால் அந்த இழப்பை ஈடுகட்ட ONGC மான்யம் தருகிறதாம்.

விற்றிருக்க வேண்டிய விலை என்று ஒரு தொகையை இவர்களாக நிர்ணயித்து விற்ற விலையுடன் ஒப்பிட்டு இழப்பு ஏற்பட்டதாகச் சொல்லி மான்யம் அளிக்கிறார்கள். ஆக விலை குறைத்து விற்ற நிலையிலேயே அந்த நிறுவனங்கள் 3661 கோடி லாபம் ஈட்டியிருக்கின்றனவே. நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு நாங்கள் மான்யம் தந்து நஷ்டப்படுகிறோம் என்ற மாயையை மக்களிடம் ஏற்படுத்தும் யுக்தியா இது..?

மான்யம் என்பது என்ன..? அதிக விலைக்கு ஒரு பொருளை கொள்முதல் செய்து, அதைக் குறைந்த விலைக்கு மக்களுக்கு விநியோகம் செய்யும்போது ஏற்படும் நஷ்டத்தை அரசே ஏற்றுக் கொள்வதுதானே மான்யம்..

உதாரணத்திற்கு, மத்திய அரசு நெல்லை கொள்முதல் செய்து அரிசியாக்கும்போது ஒரு கிலோ அரிசியின் விலை சுமார் 13 ரூபாய் ஆகிறது. அதை மத்திய அரசு, மாநில அரசுக்கு மூன்று ரூபாய்க்குத் தருகிறது. மாநில அரசு அதை மக்களுக்கு ஒரு ரூபாய்க்குத் தருகிறது. ஆக, மக்கள் ஒரு ரூபாய் விலையில் பெறும் ஒரு கிலோ அரிசியில் மத்திய, மாநில அரசுகள் 12 ரூபாயை இழக்கின்றன. இந்த இழப்பை மக்களுக்கு அளித்த மான்யமாக ஏற்றுக் கொள்கின்றன.

இப்படிப்பட்ட தெளிவான முறை பெட்ரோலியப் பொருட்களின் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. காரணம், இவ்விஷயத்தில் மான்யம் என்று எதையும் அரசு தரவில்லை. மாறாக, வரிகள் என்ற பெயரால் லாபம் மட்டுமே அடைகிறது. அதனால் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயத்தில், உண்மை நிலை என்ன என்பதை நிபுணர்கள் ஆராய்வது அவசியம்.

பெட்ரோல் விலை மீதான விலைக்கட்டுப்பாட்டை இப்போது அரசு நீக்கிவிட்டது. அதனால் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்ப இனி பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படும் என்கிறது அரசு. கச்சா எண்ணெய் விலை ஏறினால், பெட்ரோல் விலை உயரும். கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோல் விலை குறையும் என்று இதற்கு அர்த்தம்.

ஆனால் கச்சா எண்ணெய்யுடன் விதவிதமான வரிகளும் சேர்ந்தே பெட்ரோலியப் பொருட்களின் விலையாக உள்ள நிலையில், இனி எந்த நிலையிலும் பெட்ரோல் விலை பெரிதாகக் குறைவதற்கான வாய்ப்பு மிக, மிகக் குறைவுதான்.

- எஸ்.புஷ்பவனம்
செயலாளர்
தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழு
திருச்சி.

நன்றி : துக்ளக் இதழ் - 29-09-2010

கணவர்களைத் திருடும் நடிகைகள்..! - கோடம்பாக்கம் சர்வே

24-09-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழகத்தில் இன்றைய முக்கியப் பிரச்சினைகளான விலைவாசி உயர்வு, மின் தடைப் பிரச்சினை, அயோத்திப் பிரச்சினை, ஈழப் பிரச்சினை, எதிர்வரும் தேர்தல் நிலவரம் - இது பற்றியதையெல்லாம்விட இன்னொரு முக்கிய விஷயத்தில்தான் தமிழகத்து மக்கள் இப்போது மும்முரமாக இருக்கிறார்கள். அது பிரபுதேவா-நயன்தாராவின் முறைப்படியான திருமணம் நடந்தேறுமா என்பதுதான்..!

முதல் மனைவியை டைவர்ஸ் செய்யாமல் திருமணம் செய்தால் பிரபுதேவா கைது செய்யப்படுவார் என்றுகூட ஆருடம் சொல்லும் அளவுக்கு பத்திரிகைகள் இதில் சட்ட வல்லுநர்களிடம் கருத்துக் கேட்கின்றன. அந்த அளவுக்கு தேசிய பிரச்சினையாகிவிட்டதுபோலும்.

நான் ஏற்கெனவே இந்தப் பதிவில் எழுதியிருந்த பாலிவுட் கட்டுரைக்கு அடுத்து உடனேயே இதனை எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். பல தகவல்கள் உடனேயே கிடைக்கவில்லை என்பதால் சிறிது தாமதமாகிவிட்டது. நண்பர்கள் மன்னிக்கவும்..!

பல பத்திரிகைகளைப் பார்த்தும், புரட்டியும், படித்தும்.. பத்திரிகைத் துறை நண்பர்கள், சினிமா துறை பெரியவர்களைச் சந்தித்துப் பேசியும் சில தகவல்களைப் பெற முடிந்தது. ஆனால் அவர்கள் சொன்னது முழுவதையும் எழுத முடியாத சூழல். பொறுத்துக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே பக்கம், பக்கமா எழுதுகிறேன் என்ற குற்றச்சாட்டும் உள்ளது என்பதால் அதிகமாக இழுக்கக் கூடாது என்பதால் மையக்கருத்தையும் சுருக்கமாகவே தந்திருக்கிறேன்.

இது நாட்டுக்கு ரொம்ப அவசியமா என்று கேட்பவர்கள் தயவு செய்து ஒதுங்கிக் கொள்ளுங்கள். இதனைத் தெரிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.. பிழைகள், குறைகள், குற்றங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். நானும் தெரிந்து கொள்கிறேன்..!

1. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம்

‘வசந்தசேனா’ என்ற படத்தில் நடிக்கும்போதுதான் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும், டி.ஏ.மதுரத்திற்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. தன்னைப் போலவே ஈகை குணத்துடன் கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லும் பழக்கமே இல்லாத மதுரம்மாவின் குணநலன்களே, என்.எஸ்.கே.வுக்கு அவர் மீது பிடிப்பு வரக் காரணமாக இருந்தது.


அப்போது ஏற்கெனவே என்.எஸ்.கிருஷ்ணனுக்கு திருமணமாகியிருந்தது. ஆனாலும் மதுரம் அம்மையார் மீது அதீத காதல் கொண்டுவிட்டார். ‘வசந்தசேனா’ படத்தின் ஷூட்டிங்கிற்காக பீகாருக்கு ரயிலில் சென்றபோதுதான் மதுரம் அம்மாவிடம் தான் அவரை விரும்புவதாகச் சொல்லி தனது மனதைக் கலைத்து மதுரம்மாவின் மனதையும் கலைத்தார்.

மதுரம் அம்மாவும் மிகவும் யோசித்து அந்த ஷூட்டிங்கின்போதே தனக்கும் சம்மதம் என்று சொல்ல.. பீகாரிலேயே அவர்களுக்குத் திருமணம் நடந்து முடிந்தது.

ஆனால் சென்னை திரும்பிய பிறகுதான் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்தது மதுரம் அம்மாவுக்குத் தெரிய வந்து சில நாட்கள் பேசிக் கொள்ளாமல் சண்டையிட்டபடியே இருந்ததும் நடந்திருக்கிறது.! மதுரம் அம்மாவுக்குக் குழந்தை பிறந்து சில மாதங்களில் இறந்துவிட்டது. வாரிசு வேண்டும் என்பதற்காக மதுரம் அம்மாவின் தங்கை வேம்பு அம்மாளையும் கலைவாணர் திருமணம் செய்து கொண்டது வேறொரு கதை..!

ஆனாலும் இந்தக் காதல் தம்பதியரின் வாழ்க்கையைத் தொடாமல் தமிழகத்தின் அரசியலையும், வரலாற்றையும்  யாரும் சொல்லி முடிக்க முடியாது என்பதே இவர்களது பெருமையைச் சொல்லும்..

2. எம்.ஜி.ஆர். - சதானந்தவாதி - வி.என்.ஜானகி

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி இறந்த பின் தனது தாயார் சத்யா அம்மையாரின் வற்புறுத்தலுக்காக சதானந்தவதியை திருமணம் செய்தார். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே சதானந்தவதி நோய்வாய்ப்பட்டு படுத்தப் படுக்கையானார்.

இந்த நேரத்தில்தான் எம்.ஜி.ஆருக்கு முதல்முதலாக திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.. ‘மோகினி’, ‘நாம்’, ‘மருத நாட்டு இளவரசி’ ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து வி.என்.ஜானகியுடன் ஜோடியாக நடித்து வந்தார் எம்.ஜி.ஆர். ‘மருத நாட்டு இளவரசி’ படத்தில் நடிக்கும்போதுதான் வி.என்.ஜானகி எம்.ஜி.ஆரை தான் விரும்புவதாக அவரிடமே சொல்லி தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.


எம்.ஜி.ஆர் சட்டென முடிவெடுக்காமல் தனது தாயார், மற்றும் தனது மனைவி சதானந்தவதியிடம் இது பற்றிச் சொல்லி அவர்கள் அனுமதியுடன்தான் ஜானகியை 1957-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஜானகியுடனான இந்தத் திருமணத்திற்குப் பிறகு 1968-ல் சதானந்தாவதி அம்மா மரணமடையும்வரையிலும் ஜானகி அம்மையாரும், அவரும் ஒரே வீட்டில்தான் எம்.ஜி.ஆருடன் வசித்து வந்தார்கள்.

இந்த சிச்சுவேஷனுக்கு ஜானகியம்மாவை துரத்தியது அவரது உறவுக்காரர்தான். ஜானகியம்மாவுக்கு அப்போதே திருமணமாகி கணவரிடமிருந்து விலகியிருந்தார். ஒரு ஆண் குழந்தையும் அவருக்கு இருந்தது. அப்பு என்றழைக்கப்பட்ட அவரை எம்.ஜி.ஆர்.தான் வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கினார். தி.நகரில் இப்போதும் இருக்கும் அப்பு ஹவுஸ் ஜானகியம்மாவின் மகன் அப்புவுடையதுதான். இவரும் தற்போது உயிருடன் இல்லை.

தனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவே ஜானகியம்மா தானே விரும்பி எம்.ஜி.ஆரிடம் சரணடைந்தார். மிச்சமிருக்கும் இந்தக் தம்பதிகளின் காதல் கதை உலகமறிந்தது..!

3. சிவாஜிகணேசன்-ரத்னமாலா

இவருமா..? இருக்காது.. இல்லைவே இல்லை என்கிற நம்பிக்கையோடுதான் நானும் பல ஆண்டுகளாக இருந்து வந்தேன். ஆனால் சினிமா உலகத்திற்குள் கால் வைத்த பின்புதான் எனது அந்த நம்பிக்கை புஸ்ஸானது.

ஆம்.. நடிகர் திலகத்திற்கும் இன்னொரு குடும்பம் உண்டு. அவர் ரத்னமாலா என்னும் நடிகை.  இவரும் ஆரம்பக் காலச் சினிமாக்கள் சிலவற்றில் நடித்திருக்கிறார். பாடகியாகவும் இருந்திருக்கிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக நாடக வாழ்க்கையிலேயே ரத்னமாலா, சிவாஜிக்கு நெருக்கமானவராக இருந்திருக்கிறார்.

வெகு நாட்களாக சினிமாவுலகத்தில் மிக நெருங்கியவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் இருந்த இந்த இரகசியத்தை  வெளியிட்டவர் எம்.ஜி.ஆர்தான். விகடனில் தான் எழுதி வந்த ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரில் ஒரு கிசுகிசு பத்திரிகையாளரைப் போல் ஒரு விஷயத்தை எழுதியிருந்தார். எம்.ஜி.ஆர். “நான் கோவையில் தங்கி நாடகங்களில் நடித்து வரும்போது தம்பி சிவாஜி தினம்தோறும் தவறாமல் எங்களது நாடகக் கொட்டகைக்கு வந்து செல்வார்” என்று பூடகமாக எழுதியிருந்தார். அப்போது எம்.ஜி.ஆருடன் அன்றைய நாடகங்களில் நடித்து வந்தவர் இந்த ரத்னமாலாதான்.

இந்த விஷயத்தை இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து பட்டென்று போட்டு உடைத்தவர் ‘இதயம் பேசுகிறது’ மணியன். எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக அவர் இருந்த காலத்தில் ‘இதயம்’ பத்திரிகையில் தேவையே இல்லாமல் ‘இரு மலர்கள்’ படம் பற்றிக் குறிப்பிட்டு “சிவாஜி தன் சொந்த வாழ்க்கையில் அவதிப்படுவதை அப்படியே தத்ரூபமாக படத்தில் வெளிக்காட்டி நடித்திருக்கிறார்..” என்று எழுதித் தொலைத்துவிட்டார். இந்த ஒரு விஷயத்துக்காகவே மணியன் மீது சிவாஜி இறுதிவரையில் கோபத்துடனேயே இருந்தார் என்கிறார்கள் திரையுலகப் பத்திரிகையாளர்கள்.

சினிமா பத்திரிகையாளர்களையும் தாண்டி, அரசியல் பத்திரிகையாளர்களுக்கும் இந்த விஷயம் தெரிந்தும், சிவாஜி மீது அவர்களுக்கு இருந்த அபிமானம் காரணமாகவே அனைவருமே இது பற்றி எழுதாமல் விட்டதாக இப்போது சொல்கிறார்கள்.

ரத்னமாலா மூலமாக  சிவாஜிக்கு இன்றைக்கு பேரன், பேத்திகளும் இருக்கிறார்கள். சிவாஜி மறைந்த பின்பு சில ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் ரத்னமாலாவும் இறந்து போனார், யாருக்குமே தெரியாமல்..! ‘தினமலர்’ பத்திரிகை மட்டுமே அன்றைக்கு அவரது இறப்புச்  செய்தியோடு  அவர் யார் என்பதையும் எழுதியிருந்தது..! 

சிவாஜி-பத்மினி ஜோடி பற்றிய செய்தியில் சிறிது உண்மையிருந்தும், அது கூடாமல் போய்விட்டது என்பதில் சிவாஜியின் ரசிகர்களுக்கு நிரம்பவே வருத்தம்தான். எனக்கும்தான்..!

4. எஸ்.எஸ்.ராஜேந்திரன் - விஜயகுமாரி

சிவாஜியைவிடவும் தெள்ளுத் தமிழைத் தீயாய் உச்சரிக்கும் பாங்கு உடையவர் என்று திரையுலகில் பாராட்டைப் பெற்றவர் எஸ்.எஸ்.ஆர். திராவிட இயக்கங்களால் பெண் என்பவளுக்கு அடையாளமாகக் காட்டப்பட்ட கண்ணகிக்கு உருவகம் கொடுத்தவர் விஜயகுமாரி.

‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’, ‘பூம்புகார்’, ‘தெய்வத்தின் தெய்வம்’, ‘தங்கரத்தினம்’, ‘சாரதா’, ‘சாந்தி’ என்று பல படங்களில் ரசிகர்களுக்குப் பிடித்தமான ஜோடியாகத் திகழ்ந்தது எஸ்.எஸ்.ஆர்.-விஜயகுமாரி ஜோடி.

அப்போது எஸ்.எஸ்.ஆருக்கு பங்கஜம் என்ற மனைவியும், மகன்களும் இருந்தார்கள். ஆனாலும் தொடர்ந்து தனக்கு  ஜோடியாக நடித்து வந்த விஜயகுமாரியை தீவிரமாக விரும்பினார் எஸ்.எஸ்.ஆர். எல்லாரும் செய்றதுதான..? நம்ம என்ன தப்பாவா பேசிட்டோம்.. செஞ்சிட்டோம் என்று நினைத்து விஜயகுமாரியுடன் திருமணம் செய்யாமலேயே குடித்தனத்தைத் துவக்கினார் எஸ்.எஸ்.ஆர்.


எல்டாம்ஸ் சாலை வீட்டில் முதல் மாடியில் முதல் மனைவியும், இரண்டாவது மாடியில் விஜயகுமாரியுடனும் குடியும், குடித்தனமுமாக இருந்தார் எஸ்.எஸ்.ஆர்.

எந்த அளவுக்கு நடிப்பையும், அரசியலையும் விரும்பினாரோ அதே அளவுக்கு மதுவையும் விரும்பினார் எஸ்.எஸ்.ஆர். பல தலைவர்களிடம் சொல்லியும், பேசியும் பஞ்சாயத்து செய்தும் பலனளிக்காமல் போக, விஜயகுமாரி தன் மகன் ரவியோடு எஸ்.எஸ்.ஆரிடம் இருந்து விலகிச் செல்ல நேரிட்டது. இன்றுவரையிலும் தொடர்பில்லாமல் தனித்துதான் இருக்கிறார் விஜயகுமாரி.

அவர் விலகிச் சென்ற சிறிது காலத்திலேயே தாமரைச்செல்வி என்ற பெண்ணை மூன்றாவது மனைவியாக்கிக் கொண்டு எல்டாம்ஸ் சாலை வீட்டின் மூன்றாவது மாடியில் குடி வைத்தார் எஸ்.எஸ்.ஆர். இத்தோடு இவரது காதல் முடிந்தது.

இந்த நேரத்தில் ‘நவசக்தி’ பத்திரிகையில் எஸ்.எஸ்.ஆரின் திருமணங்கள் பற்றி கார்ட்டூன் போட்டு கிண்டலடித்திருந்தார்களாம். பத்திரிகையைப் பார்த்த பெருந்தலைவர் காமராஜர் காலையிலேயே தனது வீட்டில் பஞ்சாயத்தைக் கூட்டி அனைவரையும் திட்டித் தீர்த்துவிட்டாராம்..! சம்பந்தப்பட்டவர் எஸ்.எஸ்.ஆரிடம் நேரில் போய் மன்னிப்பு கேட்டுவிட்டு வந்த பின்புதான் காலை சாப்பாட்டில் கை வைத்தார் காமராஜர் என்கிறார்கள் அன்றைய பத்திரிகையாளர்கள். இதெல்லாம் அந்தக் காலம்..!

5. ஜெமினி கணேசன் - புஷ்பவல்லி

“என் சொந்த வாழ்க்கையில் ஆயிரம் பெண்களையாவது நான் பார்த்திருப்பேன்” என்று வெளிப்படையாகத் தன்னைப் பற்றித் தெரிவித்துக் கொண்ட காதல் மன்னன் ஜெமினி கணேசனின் வாழ்க்கையே இந்த விஷயத்தில் ஒரு பாடம்தான்.

ஜெமினியின் முதல் மாட்டுதல் புஷ்பவல்லியிடம்தான். ஜெமினி ஹீரோவாக அறிமுகமான ‘மிஸ் மாலினி’யின் ஹீரோயின் புஷ்பவல்லிதான். ஜெமினி ஸ்டூடியோவில் கேரக்டருக்குத் தகுந்தாற்போன்ற நடிகர்-நடிகையரைத் தேர்வு செய்யும் பொறுப்பான பதவியில் இருந்த ஜெமினியின் கண்களில் தானாக விழுந்தவர் புஷ்பவல்லி. இத்தனைக்கும் புஷ்பவல்லியின் தங்கையான சூர்யபிரபாதான் ஜெமினிக்கு முதல் பிரெண்டு. இந்த பிரெண்டு மூலமாகவே புஷ்பவல்லியும் பிரெண்டாக நட்பு ஓரளவோடு நின்றிருந்தது..!


இடையில் புஷ்பவல்லிக்கு வேறொருவருடன் திருமணமாகி ஒரு பையனும் இருந்த நிலையில்தான் மீண்டும் ஒரு முறை யதேச்சையாக ஜெமினிகணேசனை பீச்சில் சந்திக்கப் போய் வினையாகிவிட்டது. பரவுவதற்கு நல்லதொரு கொடி மரம் தேடிக் கொண்டிருந்த புஷ்பவல்லி, ஜெமினியை வலுக்கட்டாயமாக நெருங்க.. ஜெமினி சரண்டரானார்.

அடுத்த வருடமே பானுரேகா என்னும் ரேகாவும், தொடர்ந்து ராதா என்ற பெண்ணுமாக அவசரமாகப் பிறக்க.. தொடர்ந்து அவர்களது பிரிவும் அவசரமாகவே இருந்துவிட்டது. காரணம் ஈகோதான்.

சிறிய இடைவெளியாக இருந்த இந்த விஷயத்தை மீளவே முடியாதபடிக்கு மாற்றியது சாவித்திரியின் வருகை. ஹீரோயினாக ஜெமினியுடன் தொடர்ந்து பல படங்களில் ஜோடி போட்ட சாவித்திரியிடம், ஜெமினியின் நட்பு குறித்து ஸ்டூடியோவுக்கே நேரில் போய் புஷ்பவல்லி வாய்ச்சண்டையெல்லாம் போட்டதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. இதை ஒரு காரணமாக வைத்து  ஜெமினியை விட்டு முற்றிலுமாக விலகினார் புஷ்பவல்லி..!

இந்த உறவு பத்திரிகைகளில் லேசுபாசாக மட்டுமே கிண்டி கிளறி எழுதிக் கொண்டிருந்த நிலையில், பானுரேகா அசத்தல் ரேகாவாக ஹிந்தியில் கொடி கட்டிப் பறந்தபோது, தன்னுடைய தந்தை ஜெமினிகணேசன்தான் என்று பேட்டியளித்த பின்புதான் எல்லாமே வெட்டவெளி்ச்சமானது.

இத்தனைக்கும் ஜெமினியும், புஷ்பவல்லியும் முறைப்படி திருமணமே செய்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்..!

6. ஜெமினி கணேசன் - சாவித்திரி

திரையுலகின் பொருத்தமான ஜோடிகள் என்று தென்னிந்திய திரையுலகமே போற்றிப் புகழும் வண்ணம் வாழ்ந்த காதல் ஜோடிகள் இவர்கள்..!

ஆந்திராவில் பிறந்து வளர்ந்து 1955-ல் எல்.வி.பிரசாத் இயக்கம் செய்த ‘மிஸ்ஸியம்மா’வில் ஹீரோயினாக அறிமுகமான சாவித்திரி அந்தப் படம் முடிவடைவதற்குள் தன்னுடன் இணைந்து நடித்த ஜெமினிகணேசனிடம் தனது மனதைப் பறி கொடுத்தார்.

ஏற்கெனவே ‘மனம் போல மாங்கல்யம்’ திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்து அதிலேயே இவர்களது காதல் ஆரம்பித்து எல்.எஸ்.எஸ். பேருந்து போல் நான் ஸ்டாப்பாக அடுத்தடுத்த படங்களில் நடிக்கும்போதும் வளர்ந்து கொண்டேயிருந்தது. புஷ்பவல்லி மீதான உறவில் ஜெமினிக்கு இருந்த வருத்தத்தையெல்லாம் சர்ப் பவுடர் போட்டுத் துடைத்தது சாவித்திரியின் நட்புதான்.

சாவித்திரி தனது அப்பாவின் தொல்லை தாங்காமல்  ஒரு இரவு நேரத்தில் ஜெமினியின் வீட்டிற்கே சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ள.. இப்படித்தான் இந்தத் தெய்வீகக் காதல் தம்பதிகளின் காதல் திருமணம் நடந்தேறியது.

அப்போது ஜெமினிகணேசனுக்கு பாப்ஜியின் மூலம்  இரண்டு பெண் குழந்தைகளும், புஷ்பவல்லியின் மூலம் இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர். ஆனாலும் காதல் என்று சொல்லப்பட்ட ஒன்று இருவரின் கண்ணையும் மறைத்தது..!


யார் கண் பட்டதோ இருவருக்குமிடையில் பிளவு ஏற்பட்டு. பிரிவு வந்து யார் சொல்லியும் கேட்காமல் ‘பிராப்தம்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதனால் சொத்துக்கள் அத்தனையையும் இழந்து துயரப்பட்ட  நடிகையர் திலகம் சாவித்திரி, தனது 44-வது வயதிலேயே இறந்தது தமிழ்த் திரையுலகம் சந்தித்த ஒரு மிகப் பெரும் கொடூரம். (இவங்களைப் பத்தி தனியா ஒரு பதிவு போடணும்ப்பா..)

7. பீம்சிங் - சுகுமாரி

‘பா’ வரிசைப் படங்களையெடுத்து தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருந்த இயக்குநர் பீம்சிங். இயக்கத்திலேயே தலை சிறந்தவராக அந்தக் காலத்தில் கொண்டாடப்பட்டவர். 


கதைகளுக்காகத்தான் நடிகர்களே தவிர.. நடிகர்களுக்காக கதை இல்லை என்பதைத்தான் அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர். எந்தவித காம்பரமைஸ்களுக்கும் உட்பட மறுத்து ‘பா’ வரிசைப் படங்களின் கிரேஸ் முடிந்த பின்பு, ஜெயகாந்தனின் கதைகளையே வரிசையாக படமெடுக்கத் துவங்கியவர்.


இவரும் திருமணமாகி குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த வேளையில் அப்போது கதாநாயகிகளுக்கு நண்பியாகவும், குரூப் நடனமாடியும் வந்த தற்போது ‘மலையாள சினிமாவின் மனோரமா’ என்று சொல்லப்படும் பழம் பெரும் நடிகை சுகுமாரியை 'பா' வரிசைப் படங்கள் வெளிவந்த காலக்கட்டத்திலேயே இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் வெளிப்படையாக தெரிந்தபோது சுகுமாரி இது பற்றி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாதவர்.. இத்தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

8. டி.ஆர்.ராமண்ணா - பி.எஸ்.சரோஜா - ஈ.வி.சரோஜா

ரொம்பவே அதிர்ஷ்டக்காரக் கணவர் இவர். இவருடைய மூன்று மனைவிகளில் இருவர் தமிழ்த் திரையுலகில் ஹீரோயின்களாக நடித்தவர்கள். மூன்று மனைவிகளின் பெயர்களும் சரோஜாதான்.

அந்தக் கால கனவுக்கன்னியான டி.ஆர்.ராஜகுமாரியின் உடன் பிறந்த தம்பியான இவர் தனது 14-வது வயதிலேயே திரையுலகில் கால் பதித்தவர். சவுண்ட்டு அஸிஸ்டெண்ட், ஒளிப்பதிவாளர், நடிகர், இயக்குநராக பல படிகளைத் தொட்டவர் இவர். எம்.ஜி.ஆர். சிவாஜி மட்டுமல்லாமல் என்.டி.ராமராவ், ஜெயலலிதாவையும் வைத்து இயக்கியிருக்கிறார்.

இவர் இயக்கிய ‘கூண்டுக்கிளி’, ‘புதுமைப்பித்தன்’, ‘குலேபகாவலி’, ‘காத்தவராயன்’, ‘மணப்பந்தல்’, ‘பெரிய இடத்துப் பெண்’, ‘பாசம்’, ‘குமரிப்பெண்’, ‘நான்’, ‘சொர்க்கம்’, ‘தங்கச் சுரங்கம்’, ‘நீ’, ‘மூன்றெழுத்து’, ‘உன்னைப் போல் ஒருவன்’ என்று பல படங்களிலும் அன்னாரின் இயக்கம் சிறப்பு வாய்ந்தது. இன்றைய பல கமர்ஷியல் இயக்குநர்களின் முதல் குருவாக இவரைத்தான் சொல்ல வேண்டும்.


ராமண்ணா நடித்த முதல் படமான ‘என் தங்கை’ என்ற படத்தில் இவருடன் இணைந்து நடித்தவர்தான் ஈ.வி.சரோஜா. இவர் பின்பு 'மதுரை வீரன்', 'குலேபகாவலி', 'வீரத்திருமகன்', 'பாக்கியலட்சுமி', கொடுத்து வைத்தவள், ‘படிக்காத மேதை’ உட்பட பல படங்களில் நடித்தவர். ராமண்ணாவுடன் நடித்தும், அவர் இயக்கிய படங்களில் நடித்தும் வந்தபோதுதான் காதல் கைகூடி இவரை மணந்தார் ராமண்ணா.

அடுத்தவர் பி.எஸ்.சரோஜா. ‘வண்ணக்கிளி’ படத்தில் ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்ற பாடலில் சோகத்தைப் பிழிந்தெடுப்பார் பாருங்கள். அவர்தான் பி.எஸ்.சரோஜா. பி.யூ. சின்னப்பா நடித்த. ‘விகடயோகி’ என்ற படத்தில்தான் இவர் அறிமுகமானார். அதன் பின்னர் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார் சரோஜா. .ராமண்ணா இயக்கிய ‘கூண்டுக்கிளி’, ‘புதுமைப்பித்தன்’ படங்களில் நடித்தபோது இவர் மீதும் காதல் கொண்டு இவரையும் திருமணம் செய்து கொண்டார். 

இது விரும்பியே மணந்ததுதான் என்பதால் எதுவும் சொல்வதற்கில்லை. இப்போது ராமண்ணாவும், ஈ.வி.சரோஜாவும் இறந்துவிட்டார்கள். பி.எஸ்.சரோஜா மட்டுமே உயிருடன் இருக்கிறார்.

9. ரவிச்சந்திரன் - ஷீலா

ஒரு ச்ச்ன்ன ஸ்லிப்தான் வாழ்க்கையை திசை திருப்பியது என்பார்கள். அது இவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.. பாசம் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக டி.ஆர்.ராமண்ணாவால் அறிமுகப்படுத்த ஷீலா, ஜோஸப் தளியத்தால் மலையாளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வேகத்தில் மலையாள உலகின் உச்சத்திற்கே போயிருந்தார். அந்தச் சூழலில் அவ்வப்போதுதான் தமிழ்ப் படங்களில் தலை காட்டுவார்.


அப்படி நடிக்கத் துவங்கிய இவர்களது நட்பு மலையாளப் படங்களுக்கு ரவிச்சந்திரனை சிபாரிசு செய்யும் அளவுக்கு ஷீலாவை கொண்டு சென்றது..! ரவிச்சந்திரனுக்கு அப்போது விமலா என்பவருடன் ஏற்கெனவே திருமணமாகியிருந்தது.

இருந்தாலும் இருவருக்குள்ளும் காதல் இல்லை என்று அவர்களால் சொல்ல முடியாததால் திருமணமும் செய்து கொண்டார்கள். தம்பதிகள் ‘மஞ்சள் குங்குமம்’ என்ற பெயரில் சொந்தமாகத் திரைப்படமும் தயாரித்தார்கள். படம் படுதோல்வி.


இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருந்த நிலையில் சில ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாட்டால் ஷீலா முறைப்படி டைவர்ஸ் செய்து கொண்டு மகனுடன் வெளியேற.. ரவிச்சந்திரன் மறுபடியும் தனது முதல் மனைவியுடன் இணைந்து கொண்டார்.

தோல்வியடைந்த காதலுக்கு இவர்களும் ஒரு உதாரணம்..!

10. விஜயகுமார் - மஞ்சுளா

தமிழ்ச் சினிமாவில் மேற்கண்ட ஜோடிகளைப் போல திருமணம் செய்து கொண்டு இன்றுவரையிலும் ஒற்றுமையாக இருப்பவர்கள் விஜயகுமார்-மஞ்சுளா ஜோடிதான்.


எம்.ஜி.ஆர். படவுலகில் இருந்து விடுபட்டு கோட்டையில் முதலமைச்சராக அமர்ந்த பிறகு அடுத்த நட்சத்திரங்களுக்கு ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருந்த மஞ்சுளாவுடன் எடுத்த எடுப்பிலேயே ஜோடி போட்டுவிடவில்லை விஜயகுமார். இரண்டாவது கதாநாயகன், ஹீரோவின் நண்பன் என்றுதான் பல படங்களில் மஞ்சுளாவுடன் நடித்து வந்தார்.

இந்த இருவரும் அல்லி தர்பார் படத்தில்தான் முதலில் ஜோடியாக நடித்தார்கள். பின்பு சங்கர், சலீம், சைமன், குப்பத்து ராஜா என்று   வரிசை தொடர்ந்து போது தனது முதல் மனைவி முத்துக்கண்ணுவுடன் வாழ்ந்து வந்தார் விஜயகுமார்.


ஸ்ரீப்ரியா, சுஜாதா, லட்சுமி, ஜெயசித்ரா, ஸ்ரீதேவி என்று தனக்குப் போட்டிக்கு ஆட்கள் நிறைய வந்துவிட்டதால் மஞ்சுளாவும் தன்னுடைய ரிட்டையர்டுமெண்ட் பற்றி யோசித்து வந்தவேளையில் விஜயகுமார் மஞ்சுளாவின் தனது காதலைத் தெரிவிக்க, அவர் "எங்கம்மாகிட்ட வந்து பேசுங்க.." என்று பொறுப்பாகப் பதில் சொன்னாராம். 

தனது முதல் மனைவியின் ஒப்புதலுடன்தான் மஞ்சுளாவை திருமணம் செய்தார் விஜயகுமார். அப்போதிலிருந்து இப்போது வரையிலும் ஒரே வீட்டில் ஒரு சமுதாயமாகவே வாழ்ந்து வருகிறது இவர்களது குடும்பம்..!

11. பாலுமகேந்திரா - ஷோபா - மெளனிகா

சாவித்திரிக்குப் பிறகு நடிப்பு என்பதற்கு அடையாளம் இவர்தான் என்றெல்லாம் சொல்லப்பட்டவர் ஷோபா. நவீன தமிழ்ச் சினிமாவின் துவக்கப் புள்ளியில்தான் இவரும் தனது திரையுலக வாழ்க்கையைத் துவக்கினார்.


பாலுமகேந்திரா இயக்கத்தில் 'கோகிலா', ‘அழியாத கோலங்கள்’, 'மூடுபனி,'  ஆகிய படங்களில் நடித்த ஷோபா, ‘பசி’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்ற ஷோபா, ஏன் இந்த முட்டாள்தனத்தை தேர்ந்தெடுத்தார் என்பது புரியாத புதிர்...!


பாலுமகேந்திராவுடனான காதலை வளர்த்துக் கொண்டே பல திரைப்படங்களிலும் நடித்து வந்த ஷோபா, பாலுமகேந்திராவின் முதல் மனைவி அகிலா தன்னை ஏற்றுக் கொள்ளாத சோகத்திலும், இது தொடர்பாக பாலுமகேந்திராவுடன் தனக்கு ஏற்பட்ட பிரச்சினையிலும் சட்டென்று எடுத்த ஒரு முடிவால் தமிழ்த் திரையுலகம் ஒரு மாபெரும் நடிகையை இழந்துவிட்டது.


இதன் பின்பு கேமிரா கவிஞர் அறிமுகப்படுத்திய அனைத்து நடிகைகளையும் அவருடன் இணைத்து கதைகள் பல பேசப்பட்டு கண், காது, மூக்கு வைத்து பேசப்பட்டும் எல்லாம் பொய் என்று நினைத்திருந்து எத்தனை தவறு என்பது கடைசியாகத்தான் தெரிந்தது.

‘வண்ண வண்ணப் பூக்கள்’ படத்தில் தான் ஹீரோயினாக அறிமுகம் செய்துவைத்த மெளனிகாவுடனான தனது நட்பை வளர்த்துக் கொண்டு. இப்போது துணைவியாகவும் ஆக்கிக் கொண்டுள்ளார் கேமிரா கவிஞர்.

12. கமல்ஹாசன் - வாணி - சரிகா

கமல்ஹாசன்-வாணி என்கிற நட்சத்திர ஜோடியின் திருமணம் சட்டென்று நடந்து முடிந்ததா? அல்லது நீண்ட நாள் காதலின் முடிவுதானா? என்பது பற்றி இப்போது பேச்சில்லை. ஆனால் சர்ச்சைகள் இருந்ததுண்டு. இதுவும் நன்றாகத்தான் இருந்தது பத்தாண்டுகள் வரையிலும்..

திடீரென்று கமல்ஹாசன், “சரிகாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை நான்தான்” என்று அறிவிக்கும்வரையில், இந்தத் தம்பதிகளின் உட்பூசலும், பிரச்சினையும் வெளியில் வரவே இல்லை.

செய்தி வந்த பின்பு நடந்த சமரசப் பேச்சுக்களும், சில அடிதடிகளும் எந்தவிதத்திலும் வாணிக்கு உதவாமல் போனது அவரது துரதிருஷ்டம்தான்.

கர்ப்பமாக இருந்த சரிகாவை பெங்களூரில் வழிமறித்த கூலிப்படைகளிடம் இருந்து காப்பாற்ற, நடுரோட்டில் டாக்ஸியில் இருந்து ரிக்ஷா வண்டிக்கு மாற்றியனுப்பி சரிகாவை பாதுகாக்கும் அளவுக்கு ரியல் வாழ்க்கையில் ஹீரோவாக மாறிய கமலின் அப்போதைய நிலைமை நிச்சயம் பரிதாபத்துக்குரியதுதான். இதுதான் பஞ்சாயத்து பேச சொம்புடன் தயாராக இருந்த கோடம்பாக்கத்து நாட்டாமைகளை, மவுனம் கொள்ள வைத்தது.  .

ஆனால் இந்த அடிதடியே கமலுக்குள் வைராக்கியத்தை விதைத்துவிட, “பாத்ரூமில் தாலியைக் கழட்டி வீசியெறிந்து அலட்சியப்படுத்தும் இவருடன் நான் எப்படி வாழ்வது?” என்ற அக்மார்க் தமிழ் கணவனின் பேச்சைப் போன்ற கமல் தரப்பு நியாயத்தைக் கேட்டு பேஸ்த்தடித்துப் போனது கோடம்பாக்கம்.

கடைசியில், பத்து லட்சம் ரூபாய் நஷ்டஈட்டுடன் ‘மேல் நாட்டு மருமகள்’ படத்தில் நடிக்க சென்னைக்கு வந்து இங்கேயே மருமகளாக செட்டிலான வாணி கமல்ஹாசன், வாணி கணபதியாக மீண்டும் உருமாறி தனது சொந்த ஊரான பெங்களூருக்கே திரும்பிச் சென்றார்.


இந்தக் காதல் நீடித்தது பத்தாண்டுகள் என்றால் அடுத்து சரிகாவுடனான கமலஹாசனின் காதலும் முறிந்ததை விதி என்று சொல்லலாமா..? யாராலும் நம்ப முடியவில்லை. அதிலும் ஆழ்வார்பேட்டை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து முதுகெலும்பில் அடிபட்டு ஆபத்தான நிலைமையில் இருந்த சரிகாவை கண்ணும், கருத்துமாக கவனித்து வந்தார் கமல்ஹாசன்.

சரிகா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி மூன்று மாதங்களுக்குள் அதே ஆழ்வார்ப்பேட்டை தெருக்களில் 'குமுதம்'  பத்திரிகை ஒட்டியிருந்த  “சரிகாவிடமிருந்து பிரிந்துவிட்டேன்” என்ற கமலின் ஒப்புதல் வாக்குமூலம் தாங்கிய நோட்டீஸ்தான் பார்ப்பவர்களைத் திகிலடைய வைத்தது. என்ன எழவு ஈகோவோ தெரியவில்லை..?

இந்த முறிவுக்குப் பின்பு இடையில் ஒரு மெல்லிய தென்றலாய் புகுந்தார் இடையழகி சிம்ரன். 'விருமாண்டி' ஷூட்டிங்கிற்காக உத்தமபாளையத்தில் முகாமிட்டிருந்த கமலை சந்திக்க காண்டசா கிளாஸிக் காரில் பவனி வந்து கொண்டிருந்த சிம்ரனைப் பார்த்தவுடன் அடுத்தது இவர்தான் என்று முடிவே செய்திருந்தது கோடம்பாக்கத்து கிசுகிசு பத்திரிகைகள். ஆனாலும் கதை புஸ்ஸானது சிங்கப்பூரிலாம்..!

நடிகர் சங்கத்தின் கட்டிட நிதிக்காக சிங்கப்பூரில் நடந்த கலை நிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில் ஏதோ ஒரு பிரச்சினையால் தங்கியிருந்த ஹோட்டலின் அறைக் கதவைத் திறக்க மறுத்து சிம்ரன் அடம் பிடிக்க.. அறை வாசலில் நீண்ட நேரம் இருந்து பெல் அடித்துப் பார்த்து வெறுத்துப் போனார் கமல்ஹாசன் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.

அன்றைய இரவில் காரிடாரில் கமல் இருந்த கோலத்தைப் பார்த்து உச்சுக் கொட்டிய உடன் சென்ற நடிகர்கள்தான் அவரைச் சமாதானம் செய்து அவரது அறைக்கு அனுப்பி வைத்தார்களாம்..! காதல்தான் எதை, எதையெல்லாம் செய்ய வைக்கிறது பாருங்கள்..! இதனாலேயே சென்னை திரும்பும்போது கமல்ஹாசனின் மனதில் சிம்ரன் தொடர்பில்லை என்றாகிவிட்டது.

இப்படி சிம்ரன் வந்த வேகத்தில் விலகிப் போக... அப்போதுதான்  தனது நீண்ட நாள் தோழியான கவுதமியை புற்றுநோய் தாக்கிய நிலையில் அப்போலாவில் பார்த்த மாத்திரத்தில் உருகிப் போனார் கலைஞானி.

தனது பி.ஜே.பி. கட்சித் தொடர்புகளை வைத்து தொழிலில் முன்னேற நினைத்த கணவனால்  ஏமாற்றப்பட்டு விரக்தியடைந்துபோய் டைவர்ஸ் கேட்டிருந்த நிலையில்தான் புற்றுநோய்த் தாக்கி சீரியஸாகி இருந்தார் கவுதமி. அவருக்கு ஆறுதல் சொல்லியபடியே துவங்கிய கமலின் நட்பு, மீண்டும் துளிர்விட்டு இப்போது உடன் வாழும் துணைவி என்று நிலையில் வந்து நின்றிருக்கிறது..!

இந்தக் கலைஞனுக்குள் இருக்கும் மனதை யார் புரிந்து கொள்வது..?

13. பிரபு - குஷ்பு

இந்த ஜோடிக்கு திருமணத்தை நடத்தி வைத்த பாவத்தைச் செய்தவர்கள் சாட்சாத் தமிழ்ப் பத்திரிகையாளர்கள்தான். அதில் எனக்குச் சந்தேகமில்லை.


பிரபு-குஷ்புவுக்கே தோன்றியிருக்காத ஒரு எண்ணத்தை... "காதல் இருக்கா..? இருக்கோ..? இருக்காம்ல்ல..? என்ன சொல்ல மாட்டேங்குறீங்க?" என்றெல்லாம் தினம்தோறும் அந்த எண்ணத்தை, அவர்களது மனதில் விதைத்து திருமணம் வரையிலும் கொண்டு போய்ச் சேர்த்து புண்ணியத்தைக் கட்டிக் கொண்டது தமிழ்ச் சினிமா பத்திரிகையுலகம். போதாக்குறைக்கு இந்த இருவருக்குமே ஒருவரே பி.ஆர்.ஓ.வாகவும் இருந்ததினால் நட்பு, காதலாகி, கசிந்து திருமணத்தில் முடிய வேண்டிய கட்டாயம்..!

அதுவரையிலும் 'அன்னை இல்ல'த்தின் அடுப்படிவரையிலும் உரிமையுடன் சென்று தானே எடுத்துப் போட்டு சாப்பிட்டு வரும் அளவுக்கு பழக்கமாகி இருந்த குஷ்புவை, திரும்பவும் அந்த வீட்டுக்குள் கொஞ்ச காலம் நுழையாதபடிக்குக் கொண்டு சென்றது அந்த மண விவகாரம். 

நடிகர் திலகத்திற்கு பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக மூன்று மாதத்தில் இந்த ஜோடி பிரிய வேண்டிய கட்டாயத்திற்கு வந்தது. அந்த நேரத்தில் பிரிவது என்று இருவரும் எடுத்துக் கொண்ட முடிவு பாராட்டுக்குரியது. ஒரு திருமணத்தால் குடும்பமே பிரியக்கூடிய அளவுக்கு போகுமென்றால், பத்து பேரின் சந்தோஷத்திற்காக இருவர் துயரத்தை அனுபவிப்பதில் தவறில்லை என்பதால் துன்பத்தைத் தாங்கிக் கொண்டார்கள். 

பத்திரிகைகளுக்கு இதுவும் ஒரு பரபரப்புச் செய்திதான்.. மஞ்சள் குளித்தன பத்திரிகைகள்.!  ஆனாலும் ரசிகர்களுக்கு மனம்கொள்ளா வருத்தம்தான்..! அவர்களுக்குப் பிடித்த ஜோடியல்லவா..!?

14. அம்பிகா - ரவிகாந்த்

ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகத்தின் சொத்தையே ஒட்டு மொத்தமாக அள்ளிக் கொண்டு போன நட்சத்திர நடிகைகள் குடும்பத்தில் இவர்தான் மூத்தவர்.. அமெரிக்காவில் விஞ்ஞானியாக இருக்கும் ஒரு மணாளனுக்கு வாழக்கைப்பட்டுச் சென்றவர் மிகச் சில ஆண்டுகளில் இரண்டு ஆண் குழந்தைகளுடன் திரும்பி வந்தார்.


தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தான் அவரை டைவர்ஸ் செய்துவிட்டதாகச் சொல்லிவிட்டு மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்கத் துவங்கினார். ‘அருணாச்சலம்’ படத்தில் ரஜினியுடன் பிளாஷ்பேக் காட்சியில் தோன்றி தனது செகண்ட் இன்னிங்ஸை துவக்கினார்.

இந்த நேரத்தில் தொலைக்காட்சியிலும் நடிக்க வாய்ப்பு வரவே அதிலும் நடிக்கத் துவங்கினார். அப்படி தன்னுடன் நடிக்க வந்த ரவிகாந்த் என்கிற நடிகருடன் ஜோடியாக நடித்தவர், வெகு சீக்கிரத்தில் நிஜ வாழ்க்கையிலும் ரவிகாந்துடனேயே ஜோடி சேர விரும்பினார். ரவிகாந்த் ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தவர்.

பல இரண்டாவது மனைவிகள் சொல்வதைப் போலவே, “ரவியின் முதல் மனைவி அவரைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் இருவரும் ஒத்த கருத்துடையவர்கள். ஆகவே திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்..” என்றார் அம்பிகா. ரவிகாந்த் தனது முதல் மனைவியை விவகாரத்து செய்த பின்பு, இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த ஒருமித்தத் தம்பதிகள் பத்தாண்டுகள் கழித்து மிகச் சமீபத்தில்தான் தங்களிடையே ஒத்து வரவில்லை என்பதை உணர்ந்து முறைப்படி பிரிந்துவிட்டார்கள். பிரிந்த வேகத்தில் ரவிகாந்த் மீண்டும் ஒரு திருமணம் செய்து செட்டிலாகிவிட்டது ஒரு தனிக்கதை..!

-----------------------------

இதில் பழகிப் பார்த்து திருமணம் முடிந்து, பின்பு மனம் மாறி பிரிந்து சென்ற சில ஜோடிகளை தவிர்த்திருக்கிறேன். யார் என்று உங்களுக்கே தெரியும்..! நல்லதொரு மண வாழ்க்கையில் இப்போதும் அவர்கள் இருக்கையில் வாழ்க வளமுடன் என்று வாழ்த்திவிட்டு போவதுதான் நமக்கு நல்லது..!

இதுவெல்லாம் சாதாரண விஷயங்கள் என்று இன்றைக்குச் சொல்லக் கூடிய அளவுக்கு சமூகத்தில் பல்வேறு பிரிவினரிடையேயும் இந்தப் பழக்கம் இருந்து வருவது அனைவரும் அறிந்தது.

இதற்கான முதல் காரணம் சிறு வயதிலேயே.. அதாவது 25 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொண்டவர்களின் வாழ்க்கையில் இன்னொரு பெண் வருவது என்பது தவிர்க்க முடியாததாக இருந்து தொலைக்கிறது.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ராமண்ணா, எஸ்.எஸ்.ஆர். என்று பட்டியலிட்ட அத்தனை பேருமே மிகக் குறைந்த வயதிலேயே திருமணம் செய்தவர்கள்தான்.  அது குடும்பப் பெரியவர்களின் பெயரைத் தட்டக் கூடாது என்பதற்காகத்தான்..

இப்படியொரு கட்டாயத்திற்காக திருமணம் செய்துவிட்டு பல வருடங்கள் கழித்து தங்களுக்குப் பொருத்தமாக இல்லையே என்றெண்ணிதான் பலரும் அப்போதைக்கு மனதுக்குப் பிடித்த வேறொருவரை நாடுகிறார்கள். இது இரு பாலரும் செய்யக் கூடியதுதான்.. நிறைய பேர் இதில் பக்குவப்பட்டு சிறந்திருக்கிறார்கள். பலர் தரித்திரமாகப் போயிருக்கிறார்கள்.

காதல் என்பதை மட்டுமே வைத்து திருமணம் செய்தவர்கள் இன்றைக்கும் நன்றாகத்தான் உள்ளார்கள். கவுரவம், அழகு, பெயருக்காக செய்தவர்கள் பாதியிலேயே அலங்கோலமாகி தங்களது வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள்.

இங்கே குறிப்பிட்டது கொஞ்ச பேர்தான். திரைத்துறையைத் தவிர்த்து மற்ற சமூகத்தினரிடையே தேடினால் ஊருக்கு நூறு பேராவது இப்படியிருப்பார்கள். அவர்களும் ஆளுக்கொரு காரணத்தைச் சொல்வார்கள். அவைகள் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கும்.

ஒரு கோணத்தில் பார்த்தால் சமூகத்தின் பார்வையில் இது குற்றம். ஆனால் தனி மனித விருப்பத்திலும், அவர்களது பார்வையிலும் இதில் தவறில்லை. தவிர்க்க முடியாதது.

காதல் எப்போது, யார் மீது யாருக்கு வரும் என்பதைச் சொல்லிவிட முடியாது என்பதாலும், இதில் தனி மனித உரிமையும் அடங்கியிருக்கிறது என்பதாலும் இதற்கு மூக்கணாங்கயிறு போடுவது என்பது சட்டப் புத்தகங்களால் முடியவே முடியாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும்விட சமூக நலன் முக்கியமா? தனி மனித உரிமை முக்கியமான என்ற கேள்விக்கு விடை தேடும்போதுதான் இது போன்ற விஷயங்களுக்கும் நாம் தீர்வு காண முடியும். அது நிச்சயம் முடியவே முடியாது என்பது மட்டுமே முடிவானது..!

வந்தே மாதரம் - சினிமா விமர்சனம்

22-09-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தலைப்பைப் பார்த்தும், படத்தில் அர்ஜூன் இருக்கிறார் என்பதைப் பார்த்தும் கதை என்ன என்பது இந்நேரம் உங்களுக்கே தெரிந்திருக்கும்.



தமிழ்ச் சினிமாவில் இந்திய ஏகாதிபத்தியத்தின் ஒரே அடையாளமாகத் திகழும் அண்ணன் அர்ஜூனுக்கேற்ற கதைதான். ஆனால் விதைத்தது நான்காண்டுகளுக்கு முன்பாக. 'அறுவடை' என்ற பெயரில்தான் இந்தப் படத்தைத் துவக்கினார்கள்.

தயாரிப்பாளர் பங்கஜ் ஹென்றியும் இந்திய தேசத்தின் மீது அசாத்திய பற்றும், நேசமும் கொண்டவர். அவரேதான் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். இயக்கியிருப்பவர் அரவிந்த் என்னும் புதுமுகம்.(என்று நினைக்கிறேன்)

தேசிய நதிநீர்த் திட்டத்தைத் துவக்கி வைக்க கன்னியாகுமரிக்கு வரும் இந்தியப் பிரதமரை கொலை செய்ய பாகிஸ்தானில் இருந்து மாலிக் என்னும் தீவிரவாதி இந்தியாவுக்குள் புகுந்திருப்பதாகவும், அவனைக் கண்டுபிடிக்க மம்முட்டி தலைமையில் ஒரு டீமை அமைத்து, அவர்கள் போராடி, அடித்துப் பிடித்துச் சண்டையிட்டு அந்த ஒரேயொரு தீவிரவாதியை அடியோடு ஒழித்துக் கட்டி தாய்த்திரு நாட்டின் ஒளிவிளக்கான நமது பிரதமரை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை..




முதல் பாதி ஜெட் வேகத்தில் பறந்தது.. இரண்டாம் பாதி ஜெட் வேகத்தில் தூங்கியது.

முதல் ரீலில் தலையைக் காட்டிவிட்டு நான்கு நிமிட பாடலுக்கு ஆடிய புன்னகை இளவரசி சினேகா, அதன் பிறகு இடைவேளைக்குப் பிறகு எட்டாவது ரீலில்தான் தலையைக் காட்டுகிறார். அந்தப் பாடல் காட்சியிலும் சினேகாவை மிகப் பெரிய குண்டாசட்டிக்குள் குளிக்க வைத்து அதையும் எடுக்கத் தெரியாமல் எடுத்து, கவர்ச்சியைக் கூட காட்ட முடியாமல் வைத்திருப்பது இயக்குநர் மேல் கோபத்தை வரவழைக்கிறது. கொடுத்த காசுக்கு இதுகூட இல்லைன்னா எப்படிங்க..?




ஆனாலும் ஜில்பான்ஸ் ரசிகர்களுக்காக இரண்டு குத்துப் பாட்டுக்களை வைத்து ஒப்பேற்றியிருக்கிறார்கள்.



மம்முட்டி இது போன்ற வேடங்களில் பல முறை மலையாளத்திலேயே திறமை காட்டிவிட்டதால் இதில் ஏதோ இன்வால்வ் ஆகாமலேயே நடித்திருப்பதுபோல் தோன்றுகிறது. ஒரு சிங்கிள் ஷாட்டில்கூட மம்முக்காவின் ஆக்ஷனையே காணோம்.. ஒருவேளை இயக்குநரின் திறமை இவ்வளவுதானோ.. என்னவோ..?

அர்ஜூனுக்கு ஜோடி இல்லாததால் அவரால் டூயட் பாட முடியாத கோபத்தில் படம் முழுக்க கடுகடுப்பாகவே இருக்கிறார். மம்முட்டி உதவியாளர் என்பதாலும் தனித்தக் காட்சிகளில் தவிர மற்றவைகளில் ஒப்புக்குச் சப்பாணிதான். சண்டைக் காட்சிகளில் மனிதர் இன்னமும் இளைஞராகத்தான் இருக்கிறார். இது ஒன்றுக்காகவே அவரை பாராட்டலாம்.




ஈ.சி.ஆர். ரோட்டில் இருக்கும் சவுக்குத் தோப்பில் நடக்கும் சண்டைக் காட்சியில் அர்ஜூன் அண்ணன் மரத்திலேயே தாவி, தாவி சண்டையிடும் காட்சியைப் பார்த்து வாய்விட்டு அழுக வேண்டும்போல் இருந்தது. இயக்குநருக்கு ஏன் இந்த கற்பனை வறட்சி..? நிலம் முழுவதும் கன்னிவெடிகளை புதைத்து வைத்திருக்கிறானாம் மாலிக். அவன் ஒருத்தனே அந்த ஏக்கர் முழுவதும் புதைக்க முடியுமா என்று சின்ன லாஜிக்கைக் கூடவா துணை இயக்குநர்கள் யோசிக்கவில்லை.. மேலும், இதே போன்ற சண்டைக் காட்சியை வரவிருக்கும் இரண்டு திரைப்படங்களில் காணத் தவறாதீர்கள்.



முற்பாதியில் அடிக்கடி வரும் ட்விஸ்ட்டுகளால் மட்டுமே படம் வேகமாக பெடலெடுத்தது.. ராஜ்கபூரை ஏமாற்றி உண்மையை வரவழைப்பதற்காக செய்யும் ஒரு டிவிஸ்ட்டும், இடைவேளைக்குப் பின்பு சினேகாவை வைத்து செய்யும் டிவிஸ்ட்டும் ரசனைக்குரியவைதான். ஆனால் இது இரண்டில் ஒன்றை மாவீரனிலும், மற்றொன்றை வேறு ஏதோவொரு ஆங்கில சினிமாவிலும் பார்த்த ஞாபகம் வேறு வந்து தொலைக்கிறது.

கொச்சியில் நடைபெறும் கொலை சம்பவத்தில் இருந்து சூடு பிடிக்கும் அந்தத் திரைக்கதையை இடைவேளைக்கப்புறம் எப்படி நகர்த்துவது என்பது தெரியாமல் விட்டுவிட்டதாக நினைக்கிறேன். செல்போனில் டிரேஸ் செய்வது ஒரு புறம் இருக்க.. மாலிக் சென்னைக்குள் கால் வைக்க குண்டுவெடிப்பை நடுரோட்டில் ஏற்படுத்தி தப்பிக்கின்ற காட்சியை கொஞ்சம் பாராட்டலாம். கஷ்டப்பட்டுத்தான் எடுத்திருக்கிறார்கள்.



தீவிரவாதம் என்றவுடனேயே எடுத்த எடுப்பிலேயே முஸ்லீம்கள்தான் என்று கருதுவதில் இந்தக் கதாசிரியரும் தப்பவில்லை. அப்படியொரு முஸ்லீம் தீவிரவாதியை வேட்டையாடும் கதைதான் இது என்று அவர் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம். ஏன் இந்தப் பயங்கரவாதம் என்கிற விஷயத்திற்குள் அவர் போகவே இல்லை.. நான்கு மெஷின் கன்கள் பாதுகாப்போடு ஏதோ ஒரு கால்வாய்க்குள் முழு நீள சொக்காய் போட்ட பட்டாணியர்களுடன் பேச வைத்து பாகிஸ்தான் லின்க்கை காட்டி முடித்திருக்கிறார்கள்.

முஸ்லீம்-இந்து பிரச்சினையும் வந்துவிடக் கூடாது என்பதால் மிகவும் பிரயத்தனப்பட்டிருக்கிறார்கள். படத்தில் மம்முட்டியின் பெயர் கோபிகிருஷ்ணன், அர்ஜூனின் பெயர் அன்வர்.. பிரதமராக நாசர் என்ற பிம்பம்.. இவற்றோடு மாலிக்கை மோத வைத்து.. அவர்களுக்கு முஸ்லீம் என்பது பிரச்சினையில்லை.. இந்தியாதான் பிரச்சினை என்பதைப் போல் சொல்லியிருக்கிறார் கிறிஸ்துவரான கதாசிரியர் ஹென்றி. கூட்டிக் கழிச்சுப் பாருங்க.. எல்லாம் சரியா வரும்.. இந்தக் கூத்தை விசாரிக்கணும்னா இன்னொரு சினிமாதான் எடுக்கணும்.




ராஜ்கபூர் முஸ்லீம். இவர்தான் ஆயுத வியாபாரி. மாலிக்கிற்கு ஆயுதங்களை சப்ளை செய்தவர். இவரைப் பிடித்துக் கொடுக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரான ராஜன் பி.தேவ் ஒரு முஸ்லீம். “உன்னை மாதிரி ஆளுகதாண்டா.. நம்ம நாட்டுக்கே முதல் எதிரி” என்று ராஜன் பி.தேவ் சொல்வதைப் போல் வசனத்தை வைத்து பேலன்ஸ் செய்ய பார்த்திருக்கிறார். முடியலை..




இது போன்ற படங்களில் நடிப்பையெல்லாம் நீங்கள் பெரிதாக பார்க்கக் கூடாது.. ஐயோ.. அம்மா.. காட்சியெல்லாம் அதிகமாக இல்லை என்பதால் நடிப்பவர்களை ரொம்பவும் கஷ்டப்படுத்தாமல், அவர்களும் அலட்டிக் கொள்ளாமல் வந்தவரைக்கும் நடித்துக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள். சினேகா மரிக்கும் காட்சியில்கூட கண் கலங்காமல் இருந்ததைக் கண்டு எனக்கே வருத்தமாகிவிட்டது. என்ன இயக்கம் இது?  இதனால்தான் படம் வெளியாக இத்தனை நாட்களானதோ..?

கேரளாவிலும் படம் போணியாக வேண்டும் என்பதற்காக மலையாள குணச்சித்திர நடிகர் ஜெகதீஷை மம்முட்டிக் துணையாக போட்டிருக்கிறார்கள்.

கடைசியில் பட்ஜெட்டுக்கேற்றாற்போல் விற்பனை செய்ய முடியாமல் தயாரிப்பாளர் கஷ்டப்பட்டிருக்கிறார். பாவம்.. அவர் என்ன செய்வார்..? ஆரம்பித்த ஜோரிலேயே முடித்து ரிலீஸ் செய்திருந்தாலாவது வட்டிக் காசாவது திரும்பக் கிடைக்கும்.

இப்போதும் போட்டிக்கு பெரிய படங்கள் எதுவும் இல்லாத சூழலாக பார்த்து திட்டம் போட்டுத்தான் படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார். என்றாலும், கூட்டம் குறைவு என்பதுதான் ரிசல்ட்.




படத்தின் ஒளிப்பதிவைத் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்லலாம். நன்றாகவே எடுத்திருக்கிறார். அதிலும் கொச்சி கொலைக்களன்களை அருமையாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். படம் முழுக்க கேமிரா வானத்திலேயே பறந்திருப்பதைப் போல் தெரிகிறது. சவுக்குத் தோப்புக் காட்சிகளும், தாம்பரம் குண்டுவெடிப்பு காட்சிகளும் படமாக்கிய விதம் ஒளிப்பதிவாளரைத் தனித்து பாராட்ட வைக்கிறது..

படத்திலேயே பாராட்டக் கூடிய ஒரு விஷயம்.. படத்தின் இடையில் வரும் ஒரு டாக்குமெண்ட்ரி படம். விவசாயிகள் பிரச்சினை பற்றியும், இந்திய நதிகள் அனைத்தையும் இணைப்பது பற்றியும் எடுத்திருப்பது நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

பொதுவாக இது போன்ற தேச நலனை முன்னிட்டு எடுக்கும் படங்களில் ஏன் இந்தப் பிரச்சினை தோன்றியது என்பதை மட்டும் வசதியாக அத்தனை பேரும் மறந்துவிட்டு, இப்போதைய தீர்வுக்குக் காரணத்தை மட்டும் சொல்வார்கள். அதுவும் எந்தச் சமயத்திலும் இந்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போய்விடவும் கூடாது என்கிற ரீதியிலேயேதான் இருக்கும். இங்கேயும் அதேதான். இதுவே கொஞ்சம் கசப்பாக இருக்கிறது. சரி.. ஒரு சம்பவத்தை மட்டுமே வைத்து படம் எடுத்திருக்கிறார் என்று திருப்திபட்டுக் கொள்ல வேண்டியதுதான்..

நீங்கள் இந்திய தேசியத்தின் ஆதரவாளரா..? 'தாயின் மணிக்கொடி பாரீர்' பாடலின் தீவிர ரசிகரா நீங்கள்..? 'வந்தே மாதரம்' என்பது உங்களது தாரக மந்திரமா..? 'ஆம்'  எனில் அவசியம் சென்று பாருங்கள்..!

ஜெய்ஹிந்த்..!



புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com