பிரம்மன் - சினிமா விமர்சனம்

24-02-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு நண்பன் ஜெயித்தால், சக நண்பனும் ஜெயித்த மாதிரி என்பதுதான் நட்பு பட வரிசையில் அடுத்த படமான இந்த பிரம்மனின் ஒன்லைன்..


சிறு வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் கொண்டவர் சசிகுமார். ஊரில் அனைவராலும் கைவிடப்பட்ட ஒரு ஓட்டை தியேட்டரை லீஸுக்கு எடுத்து பழைய படங்களாக திரையிட்டு நஷ்டத்தைச் சம்பாதித்து வந்தாலும் சினிமா ஆசையால் அதனைக் கைவிடாமல் இருக்கிறார். ஒரு நாள் வணிகவரி கட்டவில்லையென்று தியேட்டர் சீல் வைக்கப்பட.. 5 லட்சம் ரூபாயை சம்பாதிக்க வேண்டி சென்னைக்கு படையெடுக்கிறார் சசிகுமார். சென்னையில் மிகப் பெரிய இயக்குநராக இருக்கும் தனது பால்ய கால நண்பன் மதன்குமாரிடம் உதவி கேட்டு அதன் மூலம் தியேட்டரை மீண்டும் நடத்திக் காட்டுவேன் என்று சவால் விடுகிறார். இந்த சவாலில் ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் கதை..!

சசிகுமார் எப்படி இந்தக் கதையில் சிக்கினார் என்றே தெரியவில்லை. அவர் நடித்திருக்க வேண்டிய படமே இல்லை.. இயக்குநரோ ச்சிகுமாரை தவிர வேறு யாரையும் நினைத்து கூட பார்க்கவில்லை என்றார். நட்பு என்கிற அடையாளத்துடன் படம் வருவதால், இப்போதைக்கு அதற்கு காப்பிரைட்ஸ் வாங்கி வைத்திருக்கும் ச்சிகுமார்தான் பொருத்தம் என்று அழைத்துவிட்டார் போலும். கதையைக் கேட்டவுடன் தான் இதில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறியிருந்தார் சசிகுமார். ஒருவேளை இடைவேளைக்கு பிறகு வரும் கதையையும், கிளைமாக்ஸையும் மட்டும் சொல்லியிருப்பார் போலிருக்கிறது.

கொஞ்சம் ஹேர்ஸ்டைலை மட்டும் மாற்றியிருக்கும் சசி, நடிப்பு ஸ்டைலை மட்டும் மாற்றவில்லை. இன்னும் எத்தனை படங்களில் இதையே பார்ப்பது..? அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் மூலமாக திருட்டு விசிடி, சினிமா மூலமாக மக்களுக்கு நல்ல பொழுது போக்கு.. டிவி சீரியல்களினால் குடும்பம் கெடுகிறது.. சினிமா தொழில் சிறந்த தொழில்.. அதில் இருக்கும் தொழிலாளர்களை பார்க்க வேண்டும்.. துணை இயக்குநர்களாக இருப்பவர்களின் எதிர்காலக் கனவு.. தயாரிப்பாளர்களின் கதை கேட்கும் முறை.. பைனான்சியர்களின் அறிமுகம்.. தயாரிப்பாளர்களின் பயம்.. சக இயக்குநர்களின் பொறாமை.. நல்ல கதை கேட்டு அலைவது.. கதையைத் தன் பெயரில் போட்டு படமெடுக்கும் இயக்குநர்கள்.. என்று சினிமாவின் சகலத்தையும் சசிகுமாரின் கேரக்டர் மூலமாகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இதுதான் படத்தின் நெகட்டிவ் ரிசல்ட்டுக்கு முதல் காரணம்..!

திரைக்கதை ஏதோ கொஞ்சம் சுவாரஸ்யத்தைத் தருமென்று பார்த்தால், 1002-வது படமாக சசிகுமாரின் காதல் உருவாகும் கதையைச் சொல்கிறார்கள். ரோட்டில் நடந்து போகையில் பார்த்தவுடன் காதல்.. பின்பு அவள் படிக்கும் கல்லூரி வாசலில் போய் நின்று முட்டாள்தனமாக லெக்சரரிடம் காதல் பற்றி பேசுவது.. அவரும் லவ் லெட்டரை பாஸ் செய்வது.. திரும்பவும் வந்து கதையைச் சொல்வது என்று அழுத்தமே இல்லாத நம்பவே முடியாத காமெடியான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர்.

காதல் காட்சிகளில் காட்டும் ரொமான்ஸை ச்சிகுமாரால் இந்தப் படத்தில் காட்டவே முடியவில்லை. ஒருவேளை இது இயக்குநரின் தவறாக இருக்குமோ..? ஹீரோயினின் வீட்டுக்கு அவளை பார்க்கப் போய் திரும்பச் செல்லும்போது போயிட்டு வரேன் என்று சப்பையாக மழுப்பிவிட்டு கிளம்புவதை பார்த்தால் எரிச்சலாக வருகிறது.. என்ன மொக்கைத்தனமான இயக்கம்..?

இடைவேளைக்கு பின்பு சசி சென்னைக்கு வந்து அடுத்தடுத்து நடக்கும் டிவிஸ்ட்டுகள் மட்டுமே படத்துக்கு பலம் சேர்க்கின்றன. மதன்குமாரின் அஸிஸ்டெண்ட் என்று சொல்லி கதை கேட்க வைத்து அட்வான்ஸ் வாங்குவது.. மதன்குமாரே தேடி வந்து யார் நீ என்று கேட்பது.. அப்போதே நான்தான்டா பழைய பங்காளி என்று சொல்லியிருந்தால் படம் அப்போதே முடிந்திருக்கும். இழுக்க வேண்டும் என்பதால் கடைசிவரையில் சொல்லாமலேயே கொண்டு போயிருக்கிறார்கள்..

சூரியின் வாயால் ச்சியின் ஜாதகத்தை தெரிந்து கொண்டு தயாரிப்பாளர் கதையை மட்டும் கேட்டவுடன் கொடுப்பதாகச் சொல்லிவிட்டு ஊருக்கே திரும்பி வருகிறார் ச்சி. அந்தக் கதையைப் படித்தவுடன் அது தன்னுடைய கதைதான் என்ற சின்ன ஜெர்க்கூட வரவில்லையா இயக்குநர் மதன்குமாருக்கு.? நீங்க எந்த ஊர்..? என்ன பேக்கிரவுண்ட் என்று சசிகுமாரிடம் அவர் கேட்டிருந்தால்..?

தங்கச்சிக்கு ஒரு பையன் லவ் லெட்டர் கொடுத்திருக்கான்னு சொன்னா.. அதை வாங்கப் போறாருன்னு பார்த்தா.. திருட்டு டிவிடியை பார்த்துட்டு ஒரு கதையடிச்சிட்டு கிளம்புறார் சசி. கல்யாணத்தன்று தங்கையின் பழைய காதலன் தேடி வர.. பொறுப்பாக அவனை தங்கையிடம் கொண்டு வந்து நிறுத்திவிட்டு கொன்னிரு என்று சொல்லி கத்தியை எடுத்துக் கையில் கொடுத்துவிட்டுப் போகிறார்.. என்ன மாதிரியான கேரக்டர் ஸ்கெட்ச் என்றே புரியவில்லை. ஆனால் இது சைக்காலஜிக்கலா ரெண்டு பேருக்கும் சமாதானம் செஞ்சு வைக்கிறாராம். நிஜத்தில் நம்ப முடிகிறதா இதை..?

சென்னைக்கு வந்த பின்பு காதலியை இவர் மறந்துவிடுகிறார். ஆனால் சந்தர்ப்பவசமாக சென்னை வரும் ஹீரோயின் இவரைத் தேடி வருகிறார். பார்க்க முடியவில்லை. இவர் தேடியலைகிறார். இதனை கண்டறிந்த பின்பும் ஊர் திரும்பும் ஹீரோயின் வேறு திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார். திரைக்கதையின் இந்த போங்காட்டத்தில் கதையின் மீது ஈர்ப்பே இல்லாமல் போய்விட்டது..

கிளைமாக்ஸ் எதிர்பார்த்தது போலவேதான்.. சில விஷயங்களை இது நடந்துவிட்டது என்று குறிப்பால் உணர்த்திவிட்டு தனது நண்பனை தேடி வந்து பார்க்கும் மதன்குமார், தான் இயக்குநராக ஜெயித்தவுடனேயே தன் நண்பனை தேடி வந்திருக்கலாமே..? இப்போ யார் அவரைத் தடுக்கப் போகிறார்..? ம்ஹூம்.. திரைக்கதையில் இருந்த ஓட்டைகள் படத்தை சுவாரஸ்யமாக்கத் தவறிவிட்டன..!

சசிகுமாரின் நட்பு குறித்த டயலாக்குகள், காதல் குறித்த டயலாக்குள்.. அப்பா-மகன் மோதல் இப்படி சில விஷயங்களை மட்டுமே ரசிக்க முடிந்த்து.. எப்போதும் உவமையுடன் காமெடி டயலாக் பேசுவதை சந்தானம் எப்போது நிறுத்தப் போகிறார் என்று தெரியவில்லை..? அவ்வப்போது சிரிக்க வைத்திருக்கிறார். இடைவேளைக்கு பின்பு சூரி குத்தகைக்கு எடுத்து கதையை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறார்.

தேவிஸ்ரீபிரசாத்தின் இசை. பாடல்கள் முரசு கொட்டி ஒலித்தன. மெலடிகளை திரும்பக் கேட்கும் ஆசையில்லை. ஆனால் ஒரேயொரு ஆறுதல் பத்மபிரியாவின் குத்தாட்டம்.. எத்தனை நாளாச்சு அம்மணிய பார்த்து..? நல்ல நடிகை. ஆனால் தமிழ் ஹீரோக்களுக்குத்தான் தங்களைவிட நல்லா நடிச்சா பிடிக்காதே.. பாவம்.. மலையாளம் தத்தெடுத்துக் கொண்டுவிட்டது.. வாழ்க வளமுடன்..!

மிகப் பெரிய பொருட்செலவில் தயாரித்திருக்கிறார் கன்னட தயாரிப்பாளரான கே.மஞ்சு. தமிழகம் முழுவதும் மிகுந்த ரிஸ்க் எடுத்து சொந்தமாகவே ரிலீஸ் செய்திருக்கிறாராம். மதுரை, ராமநாதபுரம் ஏரியாவை சசிகுமாரே வாங்கி வெளியிட்டிருக்கிறார்கள். எந்தச் சேதாரமும் இல்லாமல் போட்ட காசாவது கிடைக்க வேண்டும் என்று என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

அநேகமாக இயக்குநர் சாக்ரடீஸின் சொந்தக் கதையாக இது இருக்கலாம் என்று நான் யூகிக்கிறேன். அதனால்தான் விடாப்பிடியாக இந்த ஒரு கதையை வைத்துக் கொண்டு 3 வருடங்களாக தயாரிப்பாளரை விரட்டியிருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் இதனைவிட நல்லவிதமாக படங்கள் செய்ய சாக்ரடீஸுக்கு வாழ்த்துகள்..!

மிஸ்டர் ராகுல்காந்தி.. ஆந்திராவுக்கு ஒரு நீதி..? தமிழ்நாட்டுக்கு ஒரு நீதியா..?

23-02-2014

அன்பிற்கும், பண்பிற்கும் உரிய திரு.ராகுல்காந்தி அவர்களுக்கு..



இந்திய துணைக் கண்டத்தில் ஒடுக்கப்பட்ட இனமான தமிழினத்தில் பிறந்திருக்கும் ஒரு சாதாரணமான குடியானவன் எழுதிக் கொள்வது..

முதலில் உங்களது தந்தையின் இறப்புக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.. அவர் மரணமடையும்போது இது போன்ற அரசியல் கட்டுரைகள் எழுதும் வாய்ப்பு எனக்கு இல்லாததால், அப்போது சொல்ல முடியாத இரங்கலை இப்போது உங்களது குடும்பத்தினருக்குச் சமர்ப்பிக்கிறேன்..! 

உங்களது தந்தை கொல்லப்பட்ட சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு தூக்குக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்குமான தூக்குத் தண்டனையை சமீபத்தில் இந்திய உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. இதற்கு அந்நீதிமன்றம் சொன்ன காரணம், சம்பந்தப்பட்டவர்களின் கருணை மனுவை பரிசீலிக்க ஜனாதிபதி மாளிகை அதிக நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதுதான்.. கொஞ்ச நஞ்சமல்ல.. 11 வருடங்கள். 

உச்சநீதிமன்றம் இவர்களை குற்றவாளி அல்ல என்று சொல்லி இவர்களது தண்டனையைக் குறைக்கவில்லை. இவர்கள் செய்த குற்றங்கள் பற்றி உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதாட முற்படும்போது, “அந்த நோக்கில் நாங்கள் இந்த வழக்கை விசாரிக்க முடியாது..” என்று எடுத்த எடுப்பிலேயே நிராகரித்துவிட்டது சுப்ரீம் கோர்ட். இதனை தாங்கள் கவனிக்க வேண்டும். 

இந்திய குடியரசுத் தலைவரும், அவருக்கு இது போன்ற விஷயங்களில் ஆலோசனை கூறும் தகுதியுடைய இந்தியாவின் உள்துறை அமைச்சகமும் செய்த கால தாமதம் மட்டுமே இதற்குக் காரணமாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும் அதே தீர்ப்பில் “இவர்களின் விடுதலை பற்றி தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம். இது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 432 மற்றும் 433-ஏ-ன்படி, அரசு எடுக்கும் தண்டனை மாற்றுதல் அல்லது தள்ளுபடி செய்தல் நடவடிக்கைக்கு உட்பட்டது..”  என்றும் தெளிவாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி தமிழக முதலமைச்சர் மறுநாள் காலையில் தனது அமைச்சரவையைக் கூட்டி  சுப்ரீம் கோர்ட் அளித்திருக்கும் தீர்ப்பின்படியும், அனுமதியின்படியும் சம்பந்தப்பட்ட 3 ஆயுள் தண்டனை கைதிகளையும் உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்க முடிவெடுத்துள்ளார். ஆனாலும் இந்த வழக்கு மத்திய அரசின் சி.பி.ஐ.யினால் விசாரிக்கப்பட்டதாலும், காலாவதியான தடா சட்டத்தின் கீழ் பதிவான வழக்கு என்பதாலும் குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 435-ன்படி மத்திய அரசின் ஆலோசனையுடன் இவர்களை விடுவிக்க முடிவு செய்து, அதனை சட்டமன்றத்தில் ஒரு அறிக்கையாகவும் தாக்கல் செய்துள்ளார்.

இதைக் கேட்டு வழக்கம்போல உங்களது கட்சியினர் பொங்கியெழுந்து எதிர்க்குரல் கொடுத்த போதிலும், இறந்து போனவரின் மகன் என்கிற முறையில் மட்டுமே உங்களது கருத்து எதிர்பார்க்கப்பட்டது. அதில் நீங்கள் சொல்லியிருப்பது இதுதான்..

“தமிழக அரசு தவறான முடிவை எடுத்துள்ளது.. கொலை கைதிகள் விடுதலை செய்யப்படுவது எனக்கு துயரம் அளிப்பதாக உள்ளது. இந்த நாட்டில் பிரதமராக இருந்த ஒருவருக்கே நீதி கிடைக்கவில்லை என்றால், சாமானிய மனிதனுக்கு எப்படி நீதி கிடைக்கும்? இது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  மரண தண்டனையில் எனக்கு நம்பிக்கை இல்லை. அந்த தண்டனையை நிறைவேற்றுவதால் எனது தந்தை திரும்ப வந்துவிடப்போவது இல்லை. ஆனால் இது எனது தந்தை அல்லது எனது குடும்பம் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. இது, இந்த தேசத்தின் பிரச்சினை...” என்று கூறியுள்ளீர்கள்.

ஒரு பாதிக்கப்பட்ட மகனாக உங்களது இந்தக் கருத்தில் பொதிந்திருக்கும் உங்களது துயரத்தை எங்களால் உணர முடிகிறது. அதே சமயம் “கொலை கைதிகள்”, “பிரதமராக இருந்தவருக்கே..” “சாமான்ய மனிதனுக்கு எப்படி நீதி கிடைக்கும்?”, “இது இந்த தேசத்தின் பிரச்சினை..” என்றெல்லாம் அரசியல் வார்த்தைகளை குவித்து அளித்திருக்கும் உங்களது அறிக்கையைப் பற்றித்தான் எனது கவலையெல்லாம்..!


“19.11.1997 அன்று காலை 11.50 மணி. ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் ராமாநாயுடுவின் சினி ஸ்டூடியோவில் இருந்து வெளியில் வந்து கொண்டிருந்தன கார்களின் அணிவகுப்பு. அதில் நடுநாயகமாக வந்த காரில் நடிகர் மோகன்பாபுவுடன், அனந்தப்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பரிதலா ரவியும் இருந்தார்.



தான் தயாரித்த தனது தந்தை ஸ்ரீராமுலுவின் வாழ்க்கை சரித திரைப்படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டுவிட்டு, அதில் தனது தந்தையாக நடிக்க ஒப்பந்தமாயிருக்கும் மோகன்பாபுவுடன் பேசியபடியே ஹோட்டலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் ரவி. ரவியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து ஸ்டூடியோவில் இருந்து 25 அடி தூரத்தில் ஒரு பழைய பியட் கார் நின்று கொண்டிருந்தது.. எமனாக நிறுத்தப்பட்டிருந்த அந்தக் காரில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் அது வெடிக்கப்படும் சூழலில் தயாராய் இருந்தது. 

எல்லாம் சரியாக இருந்திருந்தால் பரிதலா ரவியுடன் அன்றைக்கு நடிகர் மோகன்பாபுவும் சேர்ந்தே இறந்து போயிருப்பார். ஆனால் எங்கும், எதிலும் முந்திக் கொள்ளும் மன நிலையை உடைய பத்திரிகையாளர்கள் செய்த ஒரு சின்ன செயலால்தான் அன்றைக்கு பரிதலா ரவி லேசான காயங்களோடு தப்பித்துக் கொண்டார்.

ரவியின் வாகனத்திற்கு பின்னால் வந்து கொண்டிருந்த தெலுங்கு E டிவியின் செய்தியாளர்கள் குழு வந்த வாகனம் திடீரென்று ரவியின் வாகனத்தை முந்திக் கொண்டு முன்னால் சென்றது.. இந்த பத்து செகண்ட்டுகள் வித்தியாசத்தில் ரிமோட் கண்ட்ரோல் அழுத்தப்பட பியட் கார் வெடித்த வெடிப்பில் E டிவியின் கார் சுக்கு நூறானது.. அதில் இருந்த 6 செய்தியாளர்களும் இறந்து போனார்கள். அந்த இடத்தில் இருந்த அப்பாவி மக்களையும் சேர்த்து மொத்தம் 26 பேர் மரணம். 32 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். மோகன்பாபுவும், பரிதலா ரவியும் சிறிதளவு காயங்களுடன் தப்பித்தது கடவுள் புண்ணியம்தான்.


ஆந்திராவே பதைபதைத்தது.. இப்போதும் அனந்தப்பூர் மாவட்ட போலீஸ் மட்டும் இது சூரியின் வேலையாகத்தான் இருக்கும் என்று உடனுக்குடன் போலீஸ் தலைமையகத்துக்கு செய்தி அனுப்பியதுடன் சூரியுடன் கடைசியாக அனந்தப்பூரில் தென்பட்ட, தர்மாவரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோட்லரு வாசுதேவ ரெட்டி என்ற 20 வயது வாலிபனைப் பற்றிய துப்பையும் வழக்கை விசாரிக்க ஆரம்பித்த சி.ஐ.டி. போலீஸார் வசம் சேர்ப்பித்தனர்.

இங்கேயிருந்து நூல் பிடித்த போலீஸின் தேடுதல் வேட்டையில் ஜூனால கூத்தப்பள்ளி, குண்டிமடி ராமுலு, பானுகோடா கிஷ்டப்பா, பெருகு வெங்கடேச்சலூ  பி.லஷ்மண ரெட்டி, கொண்டா ரெட்டி,   என்று எல்லாவிதமான ரெட்டிகளும் சிக்கிக் கொண்டார்கள். போலீஸின் தேடுதல் வேட்டையில் சூரியின் மனைவி பானுமதி போலீஸில் பிடிபட்டார். அவரை வைத்து போனில் மிரட்டியதையடுத்து, கர்நாடகாவில் சித்ரதுர்கா என்னுமிடத்தில் பதுங்கியிருந்த சூரி நாராயண ரெட்டி அதே ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி பெங்களூரில் யஷ்வந்த்புரம் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.



இந்த வழக்கில் மொத்தம் 21 பேர் குற்றம்சாட்டப்பட்டு அதில் 14 பேர் மட்டுமே பிடிபட்டார்கள். மீதியிருக்கும் 7 பேர் இன்றுவரையிலும் தேடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இதில் சூரிய நாராயண ரெட்டிதான் முதல் குற்றவாளி.

குற்றஞ்சாட்டப்பட்ட 14 பேர்களில் 6 பேரை குற்றவாளிகளாக அறிவித்த நீதிமன்றம், மீதி 8 பேரை விடுவித்தது. ஏ-1 குற்றவாளியான சூரிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது செஷன்ஸ் நீதிமன்றம். இதனை எதிர்த்து சூரி அப்பீல் செய்தபோது, ஆந்திர உயர்நீதிமன்றம் “சூரிய நாராயண ரெட்டி இனிமேல் தன் வாழ்நாள் முழுவதும் சிறையில்தான் இருக்க வேண்டும்” என்று மாற்றித் தீர்ப்பளித்து ஆந்திராவையே பரபரப்பாக்கியது.

இந்த நிலையில் சிறையில் ரவியைப் போட்டுத் தள்ளாமல் தூக்கம் வராமல் சூரி அல்லாடிக் கொண்டிருந்திருக்கிறார். சிறையில் தனக்குக் கிடைத்த புதிய நண்பரான ஜூலகண்டி சீனிவாச ரெட்டியுடன் கலந்தாலோசித்து தனது இறுதி திட்டத்தை வகுத்திருக்கிறார்.

இந்த நேரத்தில்தான் அல்வா மாதிரியான மேட்டர் ஒன்று சூரிக்குக் கிடைத்திருக்கிறது. ஜில்லா பரிஷத் தேர்தல்கள் பற்றிய கலந்துரையாடலுக்காக பரிதலா ரவி அனந்தப்பூர் கட்சி அலுவலகத்திற்கு வரப் போகும் செய்திதான் அது.  அன்றைக்கு ரவியைப் போட்டுத் தள்ளுவதுதான் இப்போதைக்கு சிறந்த வழி. கட்சியின் தொண்டனாக அவரை அப்போதுதான் நெருங்க முடியும். இதைவிட்டால் நமக்கு வேறு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து அன்றைக்குத்தான் முகூர்த்தத்தைக் குறித்துக் கொடுத்திருக்கிறார் சூரி.

ஜூலகண்டா சீனிவாச ரெட்டி தன்னுடன் நாராயண ரெட்டி, ரெகமய்யா என்று ஒரு டீமையே இணைத்துக் கொண்டு ஜனவரி 23, 2005-ல் அனந்தப்பூர் கிளம்பினார்.. அங்கே ஏற்கெனவே அவர்களுக்காகக் காத்திருந்த ராம்மோகன் ரெட்டி என்ற வங்கி ஊழியரின் இல்லத்தில் தங்கியிருந்தார்கள். தாமோதர் ரெட்டி, நாராயண ரெட்டி, ஓபி ரெட்டி, வடே சீனா, ரங்க நாயகலு, கொண்டா என்ற கூட்டணி பெரிதாகியது.

2005, ஜனவரி 24, மதியம் 1 மணிக்கு தனது மனைவி சுனிதாவுடன் கட்சி அலுவலகத்திற்கு வந்தார் ரவி. மனைவி ஒரு பக்கம் போய் பெண் உறுப்பினர்களுடன் பேசிக் கொண்டிருக்க.. தனது கட்சியின் பிரமுகர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் ரவி. இந்த நேரத்தில்தான் சூரியின் ஆட்கள் அங்கே வந்திருக்கிறார்கள். உள்ளே சிலர் நுழைய, சிலர் வெளியில் நின்றிருக்கிறார்கள். அங்கே யாரையும் சோதிக்க வசதியில்லை என்பது இந்தக் கொலையாளிகளுக்கு வசதியாகப் போய்விட்டது.

கட்சியினரிடம் பேசிவிட்டு வீட்டுக்குப் போவதற்காக நடந்து   வந்திருக்கிறார்.  அந்த நேரத்தில்தான் ஜூலகண்டா சீனிவாச ரெட்டி அவரைச் சுட்டிருக்கிறார். அருகில் இருந்த நாராயண ரெட்டியின் துப்பாக்கிக் குண்டும் இணைந்து கொள்ள ரவியின் உடலை குண்டுகள் துளைத்திருக்கின்றன என்று போலீஸ் கூறுகிறது.  ஆனால் உண்மையில் முதல் குண்டு சூரியின் துப்பாக்கியில் இருந்துதான் வந்திருக்கிறது என்று ரவியின் ஆதரவாளர்கள் இப்பவும் நம்புகிறார்கள். சூரி, அரசுத் தரப்பின் உதவியுடன் சிறையில் இருந்து இரண்டு நாட்கள் கேஷுவல் லீவில் புறப்பட்டு வந்து இந்தக் கொலையைச் செய்துவிட்டு மீண்டும் ஜெயிலுக்கே போய் பதுங்கிவிட்டதாக குற்றம்சாட்டுகிறார்கள் ரவியின் குடும்பத்தினர். ஆனால் இதனை வழக்கம்போல மறுத்த காங்கிரஸ் அரசு.

அந்த நேரத்தில் சுட்டவர்கள் எப்படித் தப்பித்தார்கள் என்பதை ஊகிக்க முடியவில்லை என்றாலும் தொண்டர்கள் பலரும் சிதறி ஓடியிருக்கிறார்கள். அதனால்தான் அவர்களால் தப்பிக்கவும் முடிந்திருக்கிறது என்கிறது சி.பி.ஐ. ஆனால் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால்தான் பாதுகாவலர்களும் தங்களது ஏ.கே.47 துப்பாக்கியைக் கீழே போட்டார்கள் என்பதை சி.பி.ஐ.யின் விசாரணையில் கொலையாளிகள் தெரிவித்துள்ளார்கள்.

இந்தக் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ., கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது சிறையில் இருந்த சூரிதான் என்று கண்டறிந்தது. சூரியை முதல் குற்றவாளியாக அறிவித்தது. இதற்குப் பின் சி.பி.ஐ.க்கு வேலையே வைக்காமல் குற்றவாளிகள் அனைவரும் தினத்துக்கு ஒருவராக அவர்களாகவே நேரில் வந்து சரண்டைந்திருக்கிறார்கள். வழக்கு இப்போதும் அனந்தப்பூர் மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.....................”

இது ஒரு பக்கம் இருக்கட்டும். இதற்கு மேல் நடந்ததை படியுங்கள் ராகுல்..!

................2009 அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று ஆயுள் தண்டனை பெற்று பத்தாண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனையை அனுபவித்த 940 சிறைக் கைதிகளை விடுதலை செய்யும்படி அப்போதைய ஆந்திர மாநில அரசு, அப்போதைய கவர்னரிடம் பரிந்துரை செய்தது. அந்தப் பட்டியலில் சூரி மட்டுமன்றி ஜூப்லிஹில்ஸ் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் தண்டனை பெற்ற அத்தனை பேருமே இருந்தார்கள். 

பாதிக்கப்பட்ட பரிதலா ரவியின் கட்சியான தெலுங்கு தேசக் கட்சி இதனை கடுமையாக எதிர்த்தது. ஆனாலும் பலனில்லை. அப்போது உங்களது காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியின் முதலமைச்சர் சொன்னது.. “இவர்கள் செய்த குற்றத்திற்கு இத்தனை நாள் தண்டனை அனுபவித்ததே போதுமானது. சட்டத்தை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும்..." என்பதுதான்.. 

ஆனால் சூரியால் அந்த அக்டோபர் 2-ம் தேதியன்று சிறையில் இருந்து வெளியில் வர முடியவில்லை. காரணம் பரிதலா ரவியின் படுகொலை தொடர்பாக அவர் மீதிருந்த வழக்கில் ஜாமீன் கிடைக்காததுதான்... 2009, டிசம்பர் 24-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பரிதலா ரவி கொலை வழக்கிலும் முறைப்படி ஜாமீன் பெற்றுதான் சூரி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.............”

படித்தீர்களா ராகுல்..? ஒரு பியட் காரில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிக்கும் அளவுக்கான வெடிகுண்டுகளை பொருத்தி, அதனை அருகிலேயே இருந்து ஆன் செய்து வெடிக்க வைத்து 26 அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்திருக்கிறார் இந்த மட்டலச்செருவு சூரியநாராயண ரெட்டி என்னும் சூரி. ஆந்திர மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தின் காங்கிரஸ் கட்சியின் பெரும் புள்ளி. பரம்பரை காங்கிரஸ்காரர்.

இந்த வழக்கின் ஏ-1 எனப்படும் முதல் குற்றவாளியே இவர்தான்.. இவருக்கு கீழ் கோர்ட்டில் கிடைத்த ஆயுள்தண்டனையை எதிர்த்து, இவர் தொடுத்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றம், “இப்படிப்பட்ட கொடூர மனம் கொண்ட மனிதர், தன் வாழ்நாள் முழுவதையும் சிறையில்தான் கழிக்க வேண்டும்...” என்று கடுமையான தீர்ப்பை வழங்கியது..

ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருந்த உங்களது காங்கிரஸ் தொண்டர் சூரி அப்போதும் சும்மாயில்லை. சிறைக்குள்ளே இருந்தபடியே ஸ்கெட்ச் போட்டு ஜூபிலி ஹில்ஸ் குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய தனது எதிரியான தெலுங்கு தேசக் கட்சியின் அனந்தப்பூர் மாவட்ட தலைவரும், சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பரிதலாரவியை 2005-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி, அனந்தப்பூர் நகரத்தில் தனது ஆட்களை வைத்து படுகொலை செய்துள்ளார்.

இந்த வழக்கிலும் ஏ-1 அதாவது முதல் குற்றவாளி உங்களது அதி தீவிர காங்கிரஸ் தொண்டரான அதே சூரிதான்.. இப்படி இவர் மீது வழக்கைப் பதிவு செய்து இவரை சிறையிலேயே கைது செய்து விசாரித்து சிறையில் இருந்தபடியே இவர்தான் பரிதலா ரவியைப் படுகொலையைச் செய்தவர் என்று கண்டுபிடித்தது யார் தெரியுமா..? 

மத்திய புலனாய்வுத் துறை. 

அப்போது அந்தத் துறையை ஆட்சி செய்து கொண்டிருந்தது யார் தெரியுமா..? உங்களது காங்கிரஸ் கட்சியின் மவுன குருவான இப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்குதான்..! 

நன்றாக யோசித்துப் பாருங்கள்.. நன்கு திட்டமிட்ட ஒரு படுகொலை.. முன் விரோதம் காரணமாக.. அரசியல் பகை காரணமாக நடக்கிறது. இதற்கான வெடி மருந்துகள் ஆந்திரா-கர்நாடக எல்லையோரத்தில் உள்ள கல்குவாரிகளில் இருந்து பெறப்பட்டுள்ளது. இதனை பெற்று வந்தது முதல் குற்றவாளி சூரிதான். அவருடைய காரில்தான் வெடிமருந்தை வாங்கி வந்திருக்கிறார்கள்.. அவர்தான் மற்றவர்களுக்கு பணம் கொடுத்து வாடகைக் கொலையாளியாக பயன்படுத்தியிருக்கிறார். இப்படித்தான் அந்த ஜூப்லி ஹில்ஸ் படுகொலையின் குற்றப்பத்திரிகையில் ஆந்திர மாநில சி.ஐ.டி. போலீஸ் கூறியிருந்தது. இதனால்தான் அந்தக் கொலையாளியான சூரி, ஆயுள் முழுவதும் வெளியில் வரவே கூடாது என்று கூறியது உயர்நீதிமன்றம்.

இத்தனைக்கு பிறகும், சிறையில் இருந்தபடியே இன்னொரு படுகொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்து, அதனையும் நிறைவேற்றியிருக்கிறார் என்றால் இந்த சூரி எவ்வளவு பெரிய கிரிமினல் குற்றவாளியாக, கொடூர குற்றவாளியாக இருந்திருப்பார் என்று யோசித்துப் பாருங்கள்.

பரிதலா ரவியின் படுகொலையினால் ஆந்திராவில் ஏற்பட்ட வன்முறையினால் சுமார் 200 கோடிக்கும் மேலான பொருட்கள் சேதமாகி, இழப்பு ஏற்பட்டதாக அரசியல் சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் நடந்த பெரிய கலவரங்களில் இரண்டாவது இதுதானாம்.. உங்களது கட்சித் தொண்டரின் கொலைச் செயலால் எத்தனை, எத்தனை இழப்புகள் ஆந்திராவில்..? 

ஆனால் உங்களது காங்கிரஸ் கட்சி அரசு என்ன செய்தது..? இன்னொரு படுகொலை வழக்கில் இவர்தான் முதல் குற்றவாளி. அந்த வழக்கில் சூரிக்கு இன்னமும் ஜாமீன் கிடைக்கவில்லை என்று தெரிந்திருந்தும், அரசு ஆணைப்படி உடனேயே விடுவித்தாலும் அவரால் வெளியில் வர முடியாது என்று தெரிந்திருந்தும்.... அவரை மன்னித்து விடுவிப்பதாக அறிவித்தால், இது எவ்வளவு பெரிய மனிதாபிமான செயல்..?

“தமிழக அரசு தவறான முடிவை எடுத்துள்ளது.. கொலை கைதிகள் விடுதலை செய்யப்படுவது எனக்கு துயரம் அளிப்பதாக உள்ளது. இந்த நாட்டில் பிரதமராக இருந்த ஒருவருக்கே நீதி கிடைக்கவில்லை என்றால், சாமானிய மனிதனுக்கு எப்படி நீதி கிடைக்கும்? இது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  மரண தண்டனையில் எனக்கு நம்பிக்கை இல்லை. அந்த தண்டனையை நிறைவேற்றுவதால் எனது தந்தை திரும்ப வந்துவிடப்போவது இல்லை. ஆனால் இது எனது தந்தை அல்லது எனது குடும்பம் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. இது இந்த தேசத்தின் பிரச்சினை...” என்று கூறியுள்ளீர்களே ராகுல்ஜி...!?

அப்படியெனில் ஜூப்லிஹில்ஸில் 26 அப்பாவிகளை சூரி படுகொலை செய்தது மிகப் பெரிய குற்றமில்லையா..? 

முன்னாள் அமைச்சரை.. அப்போதைய சட்டமன்ற உறுப்பினரை சிறையில் இருந்தபடியே படுகொலை செய்தது மிகப் பெரிய குற்றமில்லையா..? 

இந்த இரண்டு வழக்கிலும் முதல் குற்றவாளியாக இருந்தவரை, கருணை உள்ளத்தோடு, தாய்மை மனதோடு 10 ஆண்டுகள் சிறையில் இருந்தது போதும் என்று நினைத்து வீட்டுக்கு அனுப்பிய, உங்களது கட்சியின் இந்த நடவடிக்கை சரிதானா..? 

உங்களது தந்தை ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இப்போது ஆயுள்தண்டனை கைதியாக்கப்பட்டிருக்கும் 3 பேரும் நேரடி குற்றவாளிகள் அல்ல.. வெறும் சதிக்கு உடந்தையாக இருந்ததாக மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். அதிலும் பேரறிவாளனின் மீதிருக்கும் குற்றச்சாட்டை முறைப்படி தான் பதிவு செய்யவில்லை என்று வழக்கை விசாரித்த அதிகாரியே இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். இப்படி சந்தர்ப்பவசத்தால் இந்த வழக்கில் சிக்கிக் கொண்ட அப்பாவிகள்தான் இவர்கள்..!



நளினி ஏ-9-வது குற்றவாளி.

முருகன் ஏ-11-வது குற்றவாளி.

ராபர்ட் பயாஸ் - ஏ-17-வது குற்றவாளி.

ஜெயக்குமார் - ஏ-18-வது குற்றவாளி.

ரவி என்னும் ரவிச்சந்திரன் - ஏ-24-வது குற்றவாளி.

அறிவு என்னும் பேரறிவாளன் - ஏ-26-வது குற்றவாளி.

திருச்சி சாந்தன் - ஏ-36-வது குற்றவாளி.

இந்தப் பட்டியலைப் பாருங்கள்.. உங்களுடைய தந்தை கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முதல் எட்டு பேரும் இப்போது உயிருடன் இல்லை.. ஆனால் இந்தக் கொலை வழக்கில் சந்தர்ப்பவசத்தால் உடந்தையாக இருந்து தொலைந்த ஒரே காரணத்திற்காக இவர்களெல்லாம் சதிக்கு உடந்தை என்ற அளவிலேயே தண்டனை பெற வேண்டியவர்கள்..

உங்களது தந்தையின் கொலை வழக்கில் இவர்களது பங்களிப்பு உண்மையா இல்லையா என்பது குறித்து விரிவாகப் பேசினால், இந்தப் பதிவின் தன்மையும், நோக்கமும் மாறிவிடும் என்பதால் தற்போது இவர்களது விடுதலையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன். இவர்களும் இதற்கு உடந்தை என்றே நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அதற்கான தண்டனை தூக்கா..? 16 பேர் படுகொலையான சம்பவத்தில் உடந்தையாக இருந்தவர்களுக்கு தூக்கு.. 26 பேர் படுகொலை சம்பவத்தில் முதல் குற்றவாளிக்கே ஆயுள் தண்டனைதான். அதுவும் 10 வருடங்கள் மட்டும்தான். இது போன்ற விசித்திரங்கள் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும் ராகுல்ஜி.

இவர்களைத் தூக்கில் போடுவதாலோ... அல்லது ஆயுள்வரைக்கும் சிறையில் வைப்பதாலோதான் நாட்டில் அமைதி திரும்பும் என்றால்.. உங்களுடைய கட்சியின் முதல்வர் ஒரு படு பயங்கர குற்றவாளியையும், அவர்தம் கூட்டத்தினரையும் கட்சிக்காரர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக விடுவித்தாரே அந்த வழக்கை என்னவென்று சொல்வீர்கள்..?

காங்கிரஸ்காரர்கள் குண்டு வைத்தால் அது நாட்டுக்கு நல்லது.. தெரியாமல் உதவி செய்து ஒரு பயங்கரத்தில் சிக்கிய அப்பாவிகள் சிறைக்கு வெளியில் இருந்தால் அது தேசத்திற்கே விரோதமா..? என்னவொரு வித்தியாசமான கொள்கையுடன் இருக்கிறீர்கள் மிஸ்டர் ராகுல்..? 

ஒரு படுபயங்கரமான, முதல் குற்றவாளியான ஆயுள் தண்டனை கைதிக்கு 10 ஆண்டுகளே போதுமென்று சொல்லும் உங்களது காங்கிரஸ் கட்சி, இந்த வழக்கில் சதிக்கு உடந்தையாய் இருந்தாய் குற்றஞ்சாட்டப்பட்டு 23 ஆண்டுகளை சிறையில் கழித்துவிட்ட இந்த ஆயுள் தண்டனை கைதிகளின் விடுதலைக்கு  மட்டும் எதிர்க்குரல் கொடுப்பது ஏன்..? 

மாநிலத்திற்கு மாநிலம் உங்களது கட்சியின் கொள்கைகள் மாறுமா..? அல்லது இந்திய தேசியம் தமிழகத்தைப் பொறுத்தவரையில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது என்கிற வார்த்தைக்கு இதுவும் ஒரு உதாரணமா..?  

தமிழகத்தை வஞ்சிப்பதாக நினைத்துக் கொண்டு, தமிழர்களுக்கெதிராக உங்களது காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவினர் மேற்கொண்டுள்ள தனி மனித விரோத மனப்பான்மை எந்தவகையிலும் நியாயமல்ல. உண்மையில் அவர்கள் என்றென்றும் நன்றியுணர்வுடன்தான் இருந்தாக வேண்டும். ஏனெனில் உங்களது தந்தை இங்கே வந்தது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு. அழைத்தது உங்களது கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர்கள்தான். ஆனால் உங்களது தந்தையின் சாவின்போது  உங்கள் கட்சியின் தமிழ் மாநில தலைவர்கள் யாருமே அவரது அருகில் இல்லை என்பதையும் கொஞ்சம் நினைவில் வையுங்கள் ராகுல்ஜி..!
நேரு, இந்திரா, ராஜீவ் என்ற உங்களது குடும்பத்தின் மூத்தவர்கள் மீது தமிழக மக்கள் எத்தனை பாசத்துடனும், நேசத்துடனும் இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது.  காங்கிரஸ் கட்சி ஒரு தீண்டத்தகாத கட்சியாக தமிழகத்தில் இருக்கும் பொதுவான மக்களும் நினைக்கும்வகையில்தான் உங்களது இந்த ஈழ எதிர்ப்பு கருத்துக்களும், செயல்பாடுகளும் இருக்கின்றன.  காங்கிரஸ் கட்சியை அடியோடு அழிப்பதுதான் உங்களது பணி என்றால் அதனைத் தாங்கள் தொடர்ந்து மேற்கொள்ளலாம். அதற்கு முன்பாக ஆந்திராவில் நீங்கள் ரிலீஸ் செய்த அந்த படுபயங்கர கொலையாளி சூரி கடைசியில் எப்படி கொல்லப்பட்டார் என்பதை தெலுங்கானா அல்லது சீமந்திரா பகுதி காங்கிரஸ்காரர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தமிழக அரசின் விடுவிப்பு முடிவு சரிதான் என்றாலும் வழிதான் தவறு என்று மட்டுமே கூறியிருக்கிறது. அந்த வழியை தமிழக முதல்வர் தனது பதிலில் விரைவில் கூறிவிடுவார். வழக்கு மீண்டும் தூக்கு ரத்து என்ற தீர்ப்பை மறுசீராய்வை நோக்கிப் போக வாய்ப்பே இல்லை.. ஆனால் 432, 433-ஏ ஆகிய பிரிவுகளினால் இவர்களை விடுவிப்பதா..? அல்லது பிரிவு 435-ஐ பயன்படுத்தி விடுவிப்பதா என்கிற சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்படிதான் நடக்கப் போகிறது..!

ஆனால் ஒன்று மிஸ்டர் ராகுல்காந்தி.. இந்த இரண்டில் எது நடந்தாலும் அது ஒரு காங்கிரஸ்காரரின் கையொப்பத்துடன்தான் நடைபெறப் போகிறது. அது யார் தெரியுமா..? தமிழக கவர்னராக இருக்கும் திரு.ரோசையாதான்.. தன்னிடம் வரவிருக்கும் அமைச்சரவையின் முடிவுக்கு அவர் அரசியல் சட்டப்படி கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். அப்படியே மறுக்க மனம் வந்தாலும், அவருடைய மனசாட்சிப்படி அதில் கையெழுத்திட்டுத்தான் ஆக வேண்டும்..! 

ஏன் தெரியுமா..?

2009-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதியன்று அந்த பயங்கர குற்றவாளியான சூரியை விடுதலை செய்யும்படி ஆணையிட்ட ஆந்திர மாநில அமைச்சரவைக்குத் தலைமை வகித்த முதலமைச்சர், இதே ரோசையாதான்.. அப்போது ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சிக்காக ஒரு முறைகேட்டை செய்தார். இன்றைக்கு தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் இந்த நல்ல விஷயத்தைச் செய்யப் போகிறார்..! 

காலம்தான் எத்தனை விசித்திரமானது பாருங்கள் மிஸ்டர் ராகுல்..! யார், யாருக்கு எங்கே முடிச்சுப் போடும் என்று யாருக்குமே தெரியாது..! இப்போதும் முடிந்தால் திரு.ரோசையாவிடம் இது பற்றி விசாரித்து நல்ல முடிவை எடுங்கள்..!  

நன்றி..

என்றும் அன்புடன்

சரவணன் என்னும் உண்மைத்தமிழன்

அம்மா திரையரங்கம் சாத்தியம்தானா..? - ஒரு அலசல்..!

20-02-2014


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட்டை போல இப்போது பெருநகரங்களில் ஆட்சி நடத்தும் மாநகராட்சிகளின் பட்ஜெட்டும் கவனிக்கப்பட்டு வருகிறது. நேற்று சென்னை மாநகராட்சியில் சமர்ப்பிக்கப்பட்ட 2014-2015-ம் ஆண்டுக்குரிய பட்ஜெட்டில் சென்னையில் ‘அம்மா திரையங்குகள்’ அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஏழை-நடுத்தர வசதி கொண்டோரின் பொழுதுபோக்கு அம்சத்தை பூர்த்தி செய்திட சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள பல்வேறு இடங்களைத் தேர்வு செய்து அவ்விடங்களில் தேவைக்கேற்ப எண்ணிக்கையில் குறைந்த டிக்கெட் கட்டணத்தில் அம்மா திரையரங்குகள் அமைக்கப்படும்..” – இப்படி சொல்லியிருக்கிறது சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் வாசகங்கள்..


ரொம்ப நாளாக பலரும் சொல்லி வருவது இதைத்தான்.. ஆனால் இது சாத்தியம்தானா என்று முதலில் யோசிக்க வேண்டும்..!

சின்ன தியேட்டர்கள் என்றால் குறைந்தபட்சம் 100 பேர் அமரும் அளவுக்காவது இருக்க வேண்டும்.  குறைந்த கட்டணம் என்றால் நிச்சயமாக ‘அம்மா மெஸ்’ மாதிரியே கூட்டம் அள்ளும். புதிய திரைப்படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். ரசிகர் மன்றக் குஞ்சுகள் இங்குதான் படையெடுப்பார்கள். அவர்கள் வருகைக்கேற்றவாறு அந்த தியேட்டரின் பரப்பளவு இருக்க வேண்டும். இதைப் பார்த்துவிட்டு சில நேரங்களில் கார்களில்கூட ரசிகர்கள் வருகை தந்தால் அவற்றை நிறுத்துவதற்குக்கூட இடம் வேண்டும்.. முறையான பராமரிப்பு.. காற்றோட்ட வசதி.. கழிப்பிட வசதிகள் என்று பலவற்றையும் முறைப்படி செய்ய வேண்டும்..

இதனை கட்டுவதற்கு ஆகும் செலவு பற்றி முதலில் யோசிக்க வேண்டும்.. இப்போதைய சூழலில் ஒரு திரையரங்கம் அமைப்பதற்கு கட்டிடத்திற்கே 3 கோடி ரூபாயாவது வேண்டும்.. இதில் குளிர்சாதன வசதி செய்யப்படுமா என்று தெரியவில்லை. அதுவும் இருந்தால் கூடுதலாக ஒரு திரையரங்கத்திற்கு 50 லட்சம் ரூபாய் செலவாக வாய்ப்புண்டு.. பின்பு திரையிடும் டிஜிட்டல் புரொஜெக்சன் முறைகளைத் தேர்வு செய்து அவற்றுக்கு மொத்தமாக சில லட்சங்களை செலவு செய்தாக வேண்டும்..! மொத்தமாக பார்த்தால் 10 திரையரங்கங்கள் அமைத்தால்கூட 40 கோடிகளை முழுங்கிவிடும்..!

இதற்குப் பிறகு எந்தெந்த படங்களை திரையிட வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்..! இதனை யார் முடிவு செய்வது..? முடிவு செய்பவருக்கு சினிமா தொழில் பற்றிய அறிவு இருக்குமா..? அப்படிப்பட்டவரை மாநகராட்சி ஊழியர்களாக மாநகராட்சிகள் வேலைக்கு எடுக்குமா..?

சென்னையில் திரைப்படங்கள் திரையரங்குகளில் வாடகை முறையில் மட்டும்தான் ஓட்டப்படுகின்றன.. படத்தின் தயாரிப்பாளர் திரையரங்கு உரிமையாளர் ஒத்துக் கொண்டால், வாடகையைக் கட்டிவிட்டு படத்தை ஓட்டிக் கொள்ளலாம். இதுதான் இப்போதும் நடக்கிறது.. அம்மா திரையங்கம் இதைத்தான் பின்பற்ற முடியும்..!

இது போன்ற சின்ன தியேட்டர்களில் பெரிய பட்ஜெட் படங்களை ஒருபோதும் கொடுக்கவே மாட்டார்கள்..! ‘வீரம்’, ‘ஜில்லா’ படத்தை வாங்கிய முதல்நிலை விநியோகஸ்தர்கள் அதில் கொஞ்சம் கூடுதல் விலை வைத்து அடுத்த விநியோகஸ்தரிடம் தள்ளிவிட.. அவர் தியேட்டர் உரிமையாளர்களிடத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் விலை வைத்து கொடுக்க.. கடைசியில் இந்த இரு படங்களுமே தியேட்டர்களுக்கு வரும்போது படத்தின் பட்ஜெட்டைவிட 50 சதவிகிதம் அதிகமாகவே விலைக்கு போயிருக்கிறது. ஆனால் தியேட்டர் கட்டணத்தின் மூலம் வந்த பணத்தை கணக்குப் பார்த்ததில் இரண்டாம் நிலை விநியோகஸ்தர்களுக்கும், வாங்கி வெளியிட்ட தியேட்டர்காரர்களுக்கும் பெரும் நஷ்டம்..

இது போன்ற சிக்கல்கள் இருப்பதால் 100, 200  சீட்டுகள் மட்டுமே கொண்ட தியேட்டர்களில் 10, 20, 30 கட்டணத்தில் படத்தை ரிலீஸ் செய்ய எந்த பெரிய பட்ஜெட் தயாரிப்பாளருக்கு மனசு வரும்..? இந்தத் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள்தானே 100, 120, 150 கட்டணம் கொண்ட பெரிய தியேட்டர்களுக்கு ஓடி வருபவர்கள்.. 30 ரூபாயில் பார்த்துவிடலாம் என்று நினைத்து இங்கேயே வந்துவிட்டால், பெரிய தியேட்டர்களுக்கு கூட்டம் வராதே.. அங்கே கூட்டம் வரவில்லையெனில் கலெக்சன் வராதே..? கோடிகளில் சுருட்ட நினைக்கும் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு இது எப்படி சாத்தியமாகும்..? அவர்கள் சுலபத்தில் ஒத்துக் கொள்வார்களா..?

சரி விடுங்க.. சின்ன பட்ஜெட் படங்களை பார்ப்போம். தியேட்டர் வாடகையைக் கட்டிவிட்டு ஓட்டுகிறார் தயாரிப்பாளர்.. வாடகைக்கு மேல் வசூலாகும் தொகையில் மாநகராட்சியும், தயாரிப்பாளர் அல்லது விநியோகஸ்தர்கள் இருவரும் குறிப்பிட்ட சதவிகிதத்தில் பணத்தை பிரித்துக் கொள்ளலாம். வசூலானால் நல்லதுதான்.. வசூலாகவில்லையெனில்.. நஷ்டம் முழுவதும் தயாரிப்பாளருக்கு.. மாநகராட்சிக்கு வாடகை பணம் வந்துவிடும்.

இந்த வாடகை பணம், அந்தத் தியேட்டரை தொடர்ந்து நடத்துவதற்கு மாநகராட்சிக்கு போதுமானதாக இருக்குமா..? ஏனெனில் அது பொதுமக்களின் வரிப் பணம்..! திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் பணமல்ல.. அவர்களையும் உள்ளடக்கிய சென்னைவாழ் மக்களின் பணம்.. அதனால் கூடுதலாகத்தான் வாடகை வைக்க வேண்டும் என்றால் அது சின்ன பட்ஜெட் படங்களுக்கு தாங்குமா..?

அரங்கத்தின் மொத்த சீட்டுகள் 100 என்றால் இதில் 33 x 10, 33 x 20, 33 x 30 என்று டிக்கெட்டுகள் பகிர்ந்தளிக்கப்படும். 330-660-990 என்று ஒரு காட்சியில் ஹவுஸ்புல்லானால் கிடைக்கும் மொத்தத் தொகை 1,980 ரூபாய். ஒரு நாளில் நடக்கும் 4 காட்சிகளில் கிடைக்கும் தொகை 7,920 ரூபாய். ஒரு வெள்ளியில் இருந்து அடுத்த வியாழக்கிழமை வரையிலான 7 நாட்களில் கிடைக்கும் தொகை 55,440 ரூபாய். மாதத்திற்கு 2,21,760 ரூபாய். இது ஒரு மாதத்தில் அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்புல்லானால் கிடைக்கும் தொகை. இதில் பாதியாவது வருவது உறுதியென்று நம்பலாம். அதாவது 1, 10,880 ரூபாய்.

இதுவே 200 சீட்டுக்கள் என்றால் ஒரு காட்சிக்கு 3,960 ரூபாயும், 4 காட்சிகளுக்கு 15,840 ரூபாயும் கிடைக்கலாம்.. ஒரு வாரத்திற்கு 1,07,880 ரூபாய்.  ஒரு மாதத்திற்கு 4,31,520 ரூபாய்.  இதில் பாதி கிடைக்கும் என்றால், 2,15,760 ரூபாய் வசூலாக வாய்ப்புண்டு..

ஒரு திரையரங்கில் குறைந்தபட்சம் ஊழியர்களாக 10 பேராவது இருக்க வேண்டும். இவர்களுக்கு மாநகராட்சி நிர்ணயித்திருக்கும் சம்பளம் தர வேண்டும். தோராயமாக 5000 என்று வைத்துக் கொண்டாலும், மாதம் 50000 ரூபாய் இவர்களுக்கு சம்பளமாகவே தேவை. பிறகு மின் கட்டணம்.. இதரச் செலவுகள் என்று பார்த்தால் அவைகளும் இன்னொரு 50000 ரூபாயாவது வரும்.. இதில் திரையரங்குகள் குளிர்சாதன வசதி செய்யப்படுமா என்று தெரியவில்லை. அது இருந்தால், மின்சாரக் கட்டணம் முழுங்கிவிடும்.. எப்படியிருந்தாலும் இதுவொரு இடியாப்பச் சிக்கல்..!

சின்ன பட்ஜெட் படங்களெல்லாம் இப்போது சென்னையில் மட்டும் பெரிய திரையரங்குகளில் ஏதாவது ஒரு காட்சி மட்டுமே திரையிடப்பட்டு வருகின்றன. மீடியம் பட்ஜெட் படங்களும் கிடைக்கின்றன என்றாலும் அவைகளும் காலை காட்சி மட்டும் என்றுதான் திரையிடப்படுகின்றன.!

உதாரணமாக சென்ற வாரம் வெளியான ‘காதலில் யாரடி’ என்ற படம் சென்னையில் தேவி காம்ப்ளக்ஸில் செகண்ட் ஷோ மட்டுமே ஓடியது.. ஒரேயொரு ஷோதான். இப்படித்தான் படங்கள் வந்து வாய்க்கின்றன. அதிலும் ஷோவுக்கு 10 பேர் வந்தால் மட்டும்தான் சில தியேட்டர்கள் படங்களை ஓட்டுவார்கள். இல்லையேல் கேன்சல்தான்.. 

சின்ன பட்ஜெட் படங்களை திரையிட்டு கூட்டம் வந்தாலும், வராவிட்டாலும் தயாரிப்பாளரிடமிருந்து வாடகைப் பணத்தை வாங்கித்தான் இந்த அம்மா திரையரங்குகளை நடத்த முடியும்.. பெரிய பட்ஜெட் படங்கள் இங்கே கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.. 

இது போன்ற சித்து விளையாட்டுக்கள் நிரம்பியிருக்கும் தமிழ்த் திரைத்துறையில் இதையெல்லாம் தெரிந்து வைத்திருந்து தமிழக அரசுக்கு ஆலோசகராகவும், படங்களை வாங்கிக் கொடுக்கும் உண்மையான ஊழியராகவும் பணியாற்ற யார் வரப் போகிறார்கள். இவர்களுக்கும் தனி சம்பளம் தரணுமே..? ஏனெனில் இது பொது மக்களின் வரிப்பணம்..!

இவ்வளவு பயப்படுவதற்கு காரணம் இருக்கிறது.. அரசு, மாநகராட்சிகளின் செயல்பாடுகளின் லட்சணம்தான் நமக்கே தெரியுமே..? இப்போது மாநகராட்சியின் கக்கூஸ், பாத்ரூம்களில் நுழைவுக் கட்டணமே கிடையாது என்று சொல்லியும், அவற்றின் வாசலில் லோக்கலில் இருக்கும் ஆளும் கட்சியினர் டேபிள், சேர் போட்டு உட்கார்ந்து வசூல் செய்து கொண்டுதான் இருக்கின்றன. யார் கேட்பது..? அப்புறம் எதற்கு ‘இலவசம்’ என்ற அரசு ஆணை..! அந்த ஆணையை அவர்களது கட்சிக்காரர்களே மீறுகிறார்கள் என்றால் அதற்கு முதல் காரணம் அது அரசின் சொத்து.. அரசின் சொத்து என்பதே ஆளும் கட்சியின் சொத்து என்பதுதான்..!

இந்த லட்சணத்தில் இந்த ‘அம்மா திரையரங்கு’ளை பொதுமக்களின் வரிப் பணத்தில் அமைத்தால் ஆளும் கட்சிக்காரர்கள் சம்பாதிப்பதற்கு இதுவும் ஒரு வழியாகத்தான் இருக்கும்..!  இந்த ஆட்சி போய் அடுத்து வேறொரு ஆட்சி வரும்போது “இவைகள் நஷ்டத்தில் ஓடுகின்றன அதனால் நடத்த இயலவில்லை..” என்று மூடிவிட்டுப் போக மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்..? அப்போது இதைக் கட்டுவதற்கும், நடத்துவதற்கும் ஆன செலவுகளை யார் ஈடுகட்டுவது..? எப்போதும் இளிச்சவாயர்கள் பொதுமக்கள்தானா..? 

அரசுகள் இது போன்ற கேளிக்கை வரி வசூலிக்கும் துறைகளில் நேரடியாக ஈடுபட்டால் அது ஊழலுக்கும், நிதி துஷ்பிரோயகத்திற்கும்தான் வழி வகுக்கும்.. இதற்குப் பதிலாக மாநகராட்சியின் இடத்தை தியேட்டர்களை கட்ட விரும்பும் தனியார்களுக்கு மிகக் குறைந்த விலைக்கோ.. அல்லது குத்தகைக்கோ கொடுத்துவிட்டு.. அவர்களை திரையரங்குகளை கட்டி நடத்தச் சொல்லலாம்.

தமிழ்த் திரையுலகின் நெளிவு, சுழிவுகளை தெரிந்தவர்கள் என்றால் சின்ன பட்ஜெட் மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வாங்கி, விநியோகம் செய்வதில் தங்களது திறமையைக் காட்டி முடிந்த அளவுக்கு லாபகரமாகவே நடத்துவார்கள்..

அரசு அவர்களது திரையரங்கிற்கு ஒரு குறிப்பட்ட குறைந்த கட்டணத்தை நிர்ணயித்து.. அதனை அவ்வப்போது கண்காணித்து, வசதிகளையும் வசதிக் குறைவுகளையும் பேலன்ஸ் செய்து இதனை நடத்தினால் நிச்சயம் இது அனைவருக்குமே பலனளிக்கும்..

அரசுகளும், மாநகராட்சிகளும் நேரடியாக இத்தொழிலில் இறங்கினால் அது கட்டும்போதே ஊழலில் துவங்கி கடைசியாக ஆளும் கட்சிக்காரர்களின் பாக்கெட்டுக்குத்தான் போய்ச் சேரும்..!

திரையுலகம் மட்டுமே தமிழகம் அல்ல.. அதையும் தாண்டிய உலகமும் இருக்கிறது.. அவர்களது பணத்தை நாம் சுரண்டக் கூடாது. ஏனெனில் நம்முடைய பிள்ளைகள் நாளைய காலங்களில் ‘திரையுலகம் தாண்டிய பொதுமக்களாக’ மாறிவிடுவார்கள்.. அப்போது வருத்தப்படப் போவதும் நமது வாரிசுகளாகத்தான் இருக்கும்..!

நன்றி : www.tamilcinetalk.com 

இது கதிர்வேலன் காதல் - சினிமா விமர்சனம்

17-02-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நெற்றியில் சந்தனம், கழுத்தில் அனுமார் டாலர், கையில் அனுமார் காப்பு என்று பக்காவான அனுமார் பக்தனாக இருக்கும் ஹீரோவுக்கு அப்சரஸ் மாதிரியான ஒரு பெண்ணை பார்த்தவுடன் அனுமார் மறந்து போய் கிருஷ்ணன் பிடித்த சாமியாகிவிட.. அந்தப் பெண்ணை எப்படி மடக்கி.. வரும் எதிர்ப்புகளை எப்படியெல்லாம் சமாளித்து காதலில் வெற்றியடைகிறார் என்பதுதான் கதை.

‘சுந்தரபாண்டியன்’ என்ற ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குநர் பிரபாகரனும், ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற சூப்பர் ஹிட்டை கொடுத்த உதயநிதியும் இணைந்து வழங்கியிருக்கிறார்கள்.. எந்தவொரு இயக்குநருக்கும் முதல் படம்கூட டென்ஷன் இருக்காது. ‘போனால் முடி.. வந்தால் தலை’ என்ற நினைப்பில் இருப்பார்கள். ஆனால் முதலில் ஒரு ஹிட்டை கொடுத்துவிட்டு, அடுத்த்தும் ஹிட் தரவில்லையெனில் கோடம்பாக்கம் தன்னை எப்படி பார்க்கும் என்பது அவர்களுக்கே தெரியும். இந்த ரிசல்ட்டுக்குத்தான் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பார்கள். பிரபாகரனுக்கு கிடைத்திருக்கும் செய்திகள் அவ்வளவு சுவையாக இருக்காது என்றே நினைக்கிறேன்..!

நிறைய படங்களில் பார்த்த கதைதான் என்றாலும், ட்ரீட்மெண்ட் வித்தியாசமாக கொடுத்தால் நிச்சயம் ஜெயிக்கும் என்பார்கள். இதில் ட்ரீட்மெண்ட் வித்தியாசம் என்னவென்று கண்டறியவே முடியவில்லை.. முற்பாதி முழுவதும் கொஞ்சம் சிரிக்க வைக்காமல் டயலாக் பேசியபடியே கடந்து போகிறார்கள். பிற்பாதியில்தான் சந்தானத்தின் உதவியால் கதை களைகட்டியிருக்கிறது..!

காதலை எதிர்க்கும் ஊர்.. அந்த ஊரின் பஞ்சாயத்துக்காரரின் மகளே காதலிக்க.. தண்டனையாக தானே ஊரைவிட்டு வெளியே தோப்புக்குள் வந்து குடியிருக்கிறார்.. காதலித்து சென்ற மகள் வீட்டுக்கார்ருடன் மனஸ்தாப்ப்பட்டு வீடு திரும்ப.. அக்காவை சேர்த்து வைக்க தம்பி உதயநிதி கோவைக்கு பயணமாகிறார்.

கோவையில் அக்காவின் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருக்கிறார் நயன்தாரா. அவளைப் பார்க்காத.. பார்த்தாலும் சைட் அடிக்காத.. சைட் அடிச்சாலும் லவ் பண்றேன்னு சொல்லிராத.. அவங்க குடும்பத்துக்கும் நம்ம மாமா குடும்பத்துக்கும் பெரிய சண்டை.. ஒத்து வராது.. அப்புறம் பெரிய பிரச்சினையாயிரும் என்று அக்கா திருப்பித் திருப்பிப் போனில் சொல்ல.. அப்படி என்ன பெரிய அழகியா என்று உதயநிதி ஆர்வத்தில் நயன்ஸை பார்த்துவிட்டு பின்பு டிராக் மாறுகிறார். அனுமார் போய் கிருஷ்ணர் வர.. படம் கதை நகரத் துவங்குகிறது..! நயன்ஸை முதல்ல காதல் வலையில் விழ வைச்சு.. அப்புறமா இரு வீட்டுப் பிரச்சினையை தீர்த்து வைச்சு.. கடைசீல தன்னோட அப்பாவை சமாதானப்படுத்தி.. எப்படி தன்னோட காதல்ல கதிர்வேலன் ஜெயிச்சான்றதுதான் மிச்சப் படம்..!

நயன்ஸ்.. நயன்ஸ்.. நயன்ஸ்.. படம் முழுக்க தனது அழகால் ஸ்கிரீனை வியாபித்திருக்கிறார் நயன்தாரா. வருடம் கூட கூட அவருடைய அழகும் கூடிக் கொண்டேயிருக்கிறது.. என்ன.. உதயநிதியை பக்கத்தில் வைத்துப் பார்க்க ஒருவிதத்தில் அக்கா-தம்பி போலவும் இருக்கிறது..! அதுதான் கொஞ்சம் சங்கடமாக இருந்தது..! தேவதைகள் எது பேசினாலும் அது ரம்மியமாகத்தான் இருக்கும்.. இருந்தது.. பாடல் காட்சிகளில் எப்போதும்போல முகத்தில் காட்டிய எக்ஸிபிரஸன்களில் கொடுத்த காசு செரிச்சுப் போச்சுன்ற பீலிங்கும் வந்திருச்சு..! நயன்ஸின் காஸ்ட்யூமரை எத்தனை பாராட்டினாலும் தகும்.. பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவுக்கேற்ப.. பார்த்தவுடனேயே பிடித்துவிடுவதை போல டிரெஸ்ஸிங் மேட்ச்.. கேட்ச்சிங்காக இருந்தது.. படம் முழுக்க ஒருவித பிரெஸ்னஸ் தெரிந்ததற்கு ஒளிப்பதிவும், நயன்ஸும் ஒரு காரணம்..!

உதயநிதி முந்தைய படத்தைவிட கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகியிருக்கிறார். நடிப்பிலும், நடனத்திலும்.. இன்னமும் சண்டை காட்சிகளில் நடிக்கவில்லை என்பதால் அதையும் பார்த்த பின்புதான் மொத்தமாகச் சொல்ல முடியும்.. டைமிங்சென்ஸில் சந்தானத்திற்கு மிகவும் ஈடு கொடுத்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் நல்ல இயக்குநரின் கைகளில் கிடைத்தால்.. மோல்டிங் ஆகலாம்..!

சந்தானம் இதிலும் 2 வரி பன்ச்சுகளை வைத்தே கதையை ஓட்டியிருக்கிறார்.. படத்தை பிற்பாதியில் முழுமையாகத் தாங்கியிருப்பது அவர்தான்.. அவர் கொடுக்கின்ற ஐடியாவில் கதை நகர்ந்து.. நின்று.. பின்பு மீண்டும் இவரே நகர்த்தி.. அனைத்தையும் இவர் தலையிலேயே கட்டியிருப்பதால் சந்தானம் இல்லையேல் இந்தப் படமும் இல்லையென்றாகிவிட்டது.. மயில்சாமியின் இடைச்செருகலால் விளையும் பயனும், அந்தக் காட்சி பயன்படுத்தப்பட்டவிதமும் இயக்குநரின் திறமைக்கு ஒரு சான்று..!

ஒரு சப்பை மேட்டருக்காக போய் சித்தப்பனும், மகனும் 20 வருஷமா பேசாம இருக்காங்கன்னு சொல்லிக் காட்டி அதை முடித்து வைப்பதும்.. கதை பட்டென்று நகர்ந்து மதுரைக்குச் சென்று உதயநிதியின் வீட்டில் நிற்பதும் ரன் பாஸ்ட்.. இடையிடையே படத்தை நிறுத்துவது பாடல் காட்சிகள்தான்.. அதுவும் இல்லைன்னா நயன்ஸை அப்புறம் எப்படித்தான் ரசிப்பது..?

ஹாரிஸ் ஜெயராஜ் இசை.. வெளிநாட்டு லொகேஷன்களுக்கு ஏற்ற பாடல்கள்.. பாடல்களுக்கேற்ற நடனம்.. அதுக்கேற்ற ஒளிப்பதிவு.. ‘சரசர’ பாடலில் நயன்ஸ் கொடுத்திருக்கும் பெர்பார்மென்ஸ் ஓஹோ..! அதிலும் தாவணி ஒதுங்கி தொப்புள் தெரிந்துவிடக் கூடாதுன்னு பின் போட்டு டைட் செய்தவர் மாராப்பை மட்டும் விட்டுவிட்டது ஏனோ.. அதுதான் கவர்ச்சி போலும்.. இன்னொரு பாட்டில் தொடையழகி ரம்பாவைத் தோற்கடிக்கும்விதமாக துணியின் அளவை குறைத்து அணிந்துகொண்டு அவர் போட்டிருக்கும் ஒரு ஸ்டெப் பகீரென்றது.. கேமிரா கொஞ்சம் முன்னாடி நகர்ந்திருந்தால் போச்சு போச்சு..!? நம்மளைவிட இயக்குநர் நயன்ஸின் பெரும் ரசிகராக இருப்பார் போலிருக்கிறது..!

வழக்கமான அம்மாவாக சரண்யா.. கண்டிப்பான அப்பாவாக நரேன்.. அழகு அக்காவாக பழைய ஹீரோயின் சாயாசிங்.. அது யாரு.. நயன்ஸின் மலையாளத் தோழி.. நச்சென்று கலராக இருக்கிறார்.. சந்தானத்திற்கு மணமுடித்தது சாலப்பொருத்தம்.. சின்ன கேரக்டரில் ஜெயபிரகாஷ். இவரது மனைவியாக வனிதா.. சாயாசிங்கின் கணவராக நடித்தவருக்கு நல்ல ஸ்கோப் இருக்கிறது.. புதுமுகமாக இருந்தாலும் வெகு இயல்பாக நடித்திருக்கிறார். வெல்டன் ஸார்..!

முற்பாதியில் தேய்த்து தேய்த்து கொண்டுபோன டயரை போல செல்லும் கதை.. பிற்பாதியில் சந்தானத்தின் துணையுடன் சிரிப்புத் தோரணத்துடன் கதையைக் கடக்கிறது.. இன்னும் கொஞ்சம் திரைக்கதையை செப்பனிட்டு செய்திருந்தால், பார்த்தே ஆக வேண்டிய படமென்று சொல்லியிருப்போம்..!

ஜஸ்ட் மிஸ்ஸிங்..!

மாதவனும், மலர்விழியும் - சினிமா விமர்சனம்

17-02-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



தாய், தந்தையில்லாமல் பாட்டியின் அரவணைப்பில் கொடைக்கானலில் இருப்பவர் ஹீரோ மாதவன். வெட்டி ஆபீஸர். கூடவே நாலைந்து வெட்டி நண்பர்கள்.

ஒரு நாள் புகைப்படம் எடுக்கச் செல்லும்போது ஹீரோயின் காஞ்சனாவை சந்திக்கிறார். மோதலில் ஏற்படும் சந்திப்பு காஞ்சனாவுடன் அடிக்கடி மோதவும் செய்ய வைக்கிறது.. காஞ்சனாவை டார்ச்சர் செய்ய நினைத்து அவள் நடனம் பயிலும் பள்ளியில் ஹீரோவும் சேர்கிறார்.

அங்கே நடன ஆசிரியர் மலர்விழி. இளம் விதவை. அடிக்கடி மயக்கம் போட்டு விழுகிறார். சிகிச்சைக்காக மருத்துவரிடம் செல்லும்போது “ஆண் துணையில்லாமல் இருப்பது ரொம்ப கஷ்டம். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குங்க. இது மாதிரி இன்னொரு தடவையும் வந்தா ரொம்பச் சிக்கலாயிரும்..” என்கிறார் டாக்டர். இதனை அரைகுறையாகக் கேட்டுத் தொலைக்கிறார் ஹீரோ.

இன்னொரு நாள் மலர்விழி மயங்கி விழுகும்போது டாக்டர் சொன்னது ஹீரோவின் நினைவுக்கு வர.. டீச்சருடன் கலவி கொள்கிறார். மயக்கம் தெளிந்து உண்மையறிந்த மலர்விழி ஹீரோவை சந்திப்பதைத் தவிர்க்கிறாள். ஆனாலும் அவளுக்குள் காதல் ஏற்பட்டுவிடுகிறது. இதே நேரம் காஞ்சனா அதுவரையில் வேண்டாம் என்று ஒதுக்கிய ஹீரோவை திருமணம் செய்ய நினைக்கிறார். இருவரில் யாருக்கு ஹீரோ கிடைத்தார் என்பதுதான் படம்.

ஏதோவொரு மலையாளப் படத்தை ரீமேக் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஹீரோத்தனமே இல்லாத ஹீரோ.. விடலைத்தனமாகவே பேசி, பழகி காதலிக்கும் கேரக்டர்.. சீரியஸ்னெஸ்ஸே இல்லை.. முற்பாதியைவிட பிற்பாதியில் கொஞ்சம் நடித்திருக்கிறார்.. ஆனாலும் திரைக்கதை அவ்வளவு வேகமில்லை என்பதால் அதிகம் ரசிக்க முடியவில்லை.

காஞ்சனாவாக நடித்தவரின் முகவெட்டு பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. எப்படி ஹீரோயினாக ஆனார் என்பது அந்த முருகனுக்கே வெளிச்சம்.. பார்க்கும்போதே சின்னப் புள்ளைக மாதிரியே இருக்காங்க.. இவங்க ரெண்டு பேரும் லவ் பண்றதை நினைக்கவே முடியலை.. அப்புறம் எப்படி கதையில் ஒன்றிப் போவது..?

ஒரேயொரு ஆறுதல் மலர்விழியாக நடித்திருக்கும் ஸ்ரீஜாரோஸ் மட்டுமே.. அழகு தேவதை.. இதற்கு முன்னர் 2 படங்களில் நடித்துவிட்டு இப்போதும் தமிழ் பக்கம் அதிகம் வராமல் இருக்கிறார். ஏனோ தமிழ் இயக்குநர்களும் அப்ரோச் செய்யாமல் இருக்கிறார்கள். நடிப்பு சுண்டிவிட்டாலே வருகிறது.. அழகும், திறமையும், நளினமும் ஒருசேர இருக்கிறது அம்மணியிடம்.. எடுத்துக் கொடுக்கத்தான் ஒரு நல்ல இயக்குநர் இல்லை போலும்..! பாடல் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். லொகேஷனும், இவருடைய காஸ்ட்யூம்ஸும், நடனமும் மீண்டும், மீண்டும் பார்க்க வைக்கும்..

வெண்புறா வெங்கடேஷ் என்ற கேரக்டரில் நம்ம வில்லன் பொன்னம்பலம்.. கிளைமாக்ஸ் காட்சிவரைக்கும் அழுத்தமாக நடித்திருக்கிறார்.. பட்.. எல்லாமே சொதப்பல் கிளைமாக்ஸினால் வீணாகிவிட்டது..! இந்த 2014-லிலும் கொடைக்கானலில் போலீஸே இல்லாததுபோல காட்டியிருப்பது மன்னிக்க முடியாத குற்றம்.. பொன்னம்பலத்தின் ரவுடித்தனம் பற்றிய காட்சிகளெல்லாம் நம்பும்படியாக இல்லை..

கிளைமாக்ஸ்வரைக்கும் படம் சாதாரண ஒரு காதல் படமாக.. ஏற்றுக் கொள்ளக்கூடிய படமாகவே இருந்திருந்த்து. கிளைமாக்ஸில் வைத்திருக்கும் அந்த நடனக் காட்சி தேவையில்லாமல் கதையை அடல்ட் ஒன்லி கதையாக்கி.. யு-ஏ சர்டிபிகேட்டையும் வாங்கிக் கொடுத்துவிட்டது.. இதெல்லாம் தேவைதானா..? காதலை தியாகம் செய்துவிட்டு போவது போலவே கொண்டு போயிருக்கலாம்.. நிர்வாணமாக பரத நாட்டியம் ஆடச் சொல்லி ரசிப்பதெல்லாம் என்னவொரு டிராஜடி டேஸ்ட்..? இயக்குநர் ஸார்.. ரொம்ப ரொம்ப பேட் டேஸ்ட் உங்களுடையது..

‘வைதேகி காத்திருந்தாள்’ கதையை கொஞ்சம் திருப்பிப் போட்டு எடுத்திருப்பதை காட்டுவதற்காக அந்தப் படத்தின் பாடலையே ஒலிக்க வைத்திருப்பது ரொம்ப டூ மச்சா இருக்கு..! ஆனாலும் வசந்தமணியின் இசையில் ஒலித்த 4 பாடல்களுமே அருமை.. அதிலும் ‘சிந்து நதியிலே’ பாடலும், ‘அட்டா ஜிம்கானா’ பாடலும் திரும்பத் திரும்ப கேட்க வைப்பவை..

இது போன்ற சின்ன பட்ஜெட் படங்களில்தான் பாடல்கள் நன்றாக இருக்கின்றன.. பெரிய பட்ஜெட் படங்களில் இசையமைப்பாளர்கள் வாங்கும் செக் மட்டுமே சிறப்பாக இருக்கிறது.. சந்தேகமிருந்தால் இப்படத்தின் பாடல்களை கேட்டு பாருங்கள்..!

ஒரு சராசரியான காதல் படமாக வந்திருக்க வேண்டியது கிளைமாக்ஸ் கொடுத்த அதிர்ச்சியினால் கருத்தே சொல்ல முடியாத அளவுக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டது.. ஸாரி டைரக்டர் ஸார்..!

பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம்

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



குறும்பட இயக்குநர்களின் வெற்றி சரித்திரத்தில் அடுத்த பதிப்பு இது.. திடீரென்று இணையத்தில் எழுந்த இந்த பண்ணையாரும் பத்மினியும் என்ற பெயர் இக்குறும்படத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியது.. மிகக் குறுகிய காலத்தில் அதிகமானோர் இதனை பார்த்தார்கள்.. இதன் விசாரிப்பு அதிகமான பின்பு திடீரென்று ஒரு நாள் இணையத்தில் இருந்து இந்தக் குறும்படம் தானாகவே விலகிக் கொண்டது.. பின்பு விசாரித்தபோதுதான் இது படமாக உருவாகப் போகிறது என்றார்கள்.

விஜய்சேதுபதியை கையெடுத்து கும்பிட வேண்டும்.. எத்தனையோ நடிகர்கள் ஒரு படம் ஓடினாலே அடுத்து யார் அதிகச் சம்பளம் தருகிறார்களோ அவர்களுக்கே தங்களது கால்ஷீட் என்று வீட்டு வாசலில் போர்டு மட்டும் மாட்டாமல் அந்த வேலையை மட்டுமே செய்கிறார்கள். தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்துவிட்டு வரிசையான படங்களும் நிச்சயம் வித்தியாசமானதாகவே இருக்க வேண்டும் என்ற கொள்கையை இவர் மட்டுமே கடைப்பிடிக்கிறார்.. வெற்றியும் பெற்றிருக்கிறார். இந்தப் படமும் அதே வெற்றிதான்..!

என்னுடைய சின்ன வயதில் நான் அதிகம் பார்த்திருந்த 2 கார்களில் ஒன்று அம்பாசிடர்.. இன்னொரு இந்த பிரிமீயர் பத்மினி. இந்தக் காரின் முன்னால் பேனட்டுக்குக் கிழே அடையாளச் சின்னமாகப் பொறிக்கப்பட்டிருக்கும் PAL என்ற இரும்புத் தகடு ஒன்றை பல நாட்கள் நான் என் வீட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்தது இப்போது ஞாபகத்திற்கு வருகிறது. அம்பாசிடரைவிட எடை குறைவாக.. மத்தியத் தர மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்திய கார் இது.. இந்தக் கார்தான் இதில் கதாநாயகன்..!

ஜெயபிரகாஷ் ஊர் பண்ணையார். அவரது மனைவி துளசி. தன்னுடைய உறவினர் மகாதேவனின் வீட்டிற்கு செல்லும் ஜெயபிரகாஷ், அவருடைய புத்தம் புதிய காரான பிரிமியர் பத்மினியை முதன்முதலாகப் பார்க்கிறார். பார்த்தவுடன் ஈர்ப்பு வந்துவிடுகிறது. அதன் பின்பு அவரது கவனமும், பேச்சும் முழுக்க முழுக்க பத்மினியை பற்றியே இருக்கிறது.. மகாதேவன் வெளியூர் செல்ல நேரும்போது காரை ஜெயபிரகாஷிடம் கொடுத்துவிட்டுப் போகிறார். ஜெயபிரகாஷ் தன்னுடைய ஊர்க்காரரான விஜய்சேதுபதியை அழைத்து கார் ஓட்டும் பணியை வழங்குகிறார். அதுவரையிலும் டிராக்டரை மெதுவாக ஓட்டிப் பழகிக் கொண்டிருக்கும் விஜய்சேதுபதிக்கும் இது ரொம்பவே பிடித்துப் போகிறது..! அந்த ஊரில் ஏற்கெனவே ரொம்ப நல்லவராக இருக்கும் ஜெயபிரகாஷ்.. இந்தக் கார் வந்தவுடன் அநியாயத்திற்கு நல்லவராக உருவெடுக்கிறார்.

ஊரில் நடக்கும் அனைத்து நல்ல, கெட்ட விஷயங்களுக்கும் காரை கொடுத்து உதவுகிறார். காரில் பயணம் செய்யாத ஊர்க்காரர்களே இல்லை என்ற நிலைமை வருகிறது.. ஜெயபிரகாஷுக்கு காரின் மீதான பாசம் கூடிக் கொண்டே போகிறது.. கொஞ்ச நேரம்கூட பிரிந்திருக்க முடியாத சூழல்.. ஊரையே அழைத்துப் போகும்போது கட்டின மனைவி காரில் ஏற மறுப்பது ஜெயபிரகாஷுக்கு வருத்தத்தைத் தருகிறது. என்னிக்கு நீங்க கார் ஓட்டுறீங்களோ அன்னிக்குத்தான் நான் அந்த கார்ல ஏறுவேன் என்று துளசி உறுதியாகச் சொல்லிவிட தானே தனியாக கார் ஓட்டக் கற்றுக் கொள்ள முயல்கிறார் ஜெயபிரகாஷ்.. அவர்களது கல்யாண நாளன்று கோவிலுக்கு மனைவியை இதே காரில் தானே ஓட்டி அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறார் ஜெயபிரகாஷ்..

கிட்டத்தட்ட தனித்து ஓட்ட முடிந்த நிலையில் ஜெயபிரகாஷின் மகள் நீலிமாராணி தனக்கு கார் வேண்டும் என்று அடம்பிடித்து எடுத்துச் சென்று விடுகிறார். கல்யாண நாளன்று கார் கிடைத்ததா..? பண்ணையார் என்ன ஆனார்..? என்பதற்கான விடை தியேட்டரில் கிடைக்கும்..!
ஒரு புதிய இயக்குநர்கள் எப்படியொரு கதையை தேர்வு செய்ய வேண்டும்..? அதனை எப்படி திரைக்கதையாக்க வேண்டும்..? கதைகளுக்கேற்ற நடிகர்களை தேடிப் பிடிப்பது எப்படி..? வியாபார நுணுக்கத்திற்கேற்ப ஒரு படத்திற்கு இயக்குநர் தனது பங்களிப்பைத் தருவது எப்படி..? இயக்குதல் என்பது எப்படி என்கிற அனைத்து கேள்விகளுக்கும் இந்த ஒரு படத்தில் விடை கிடைத்திருக்கிறது..!

சிறுவயதில் காரில் அமரக்கூட வாய்ப்பில்லாத சூழலில் வளர்ந்து வந்தவன்.. தானே சுயமாக கார் வாங்கும் அளவுக்கு வந்த பின்பு அந்தக் காரை ஓட்டிப் பார்க்கும் அனுபவமும்.. தன்னை அதற்குத் தூண்டியவர்களை பார்க்கத் துடிக்கும் ஆசையையும் காட்டித்தான் இந்தப் படம் துவங்குகிறது..! சுருக்கமாகச் சொன்னால் மூன்றாம் நபரின் கண் பார்வையில்தான் படத்தின் துவக்கமும், முடிவும்.. அந்தச் சின்னப் பையன் கேரக்டரை படு சஸ்பென்ஸாக வைத்திருந்து கடைசியில் பட்டென்று போட்டுடைக்கும்போது நமக்குள் இதுபோல இருந்த நிராசையான ஆசைகளும், கனவுகளும் பட்டென்று வெடித்தாற்போன்று இதயக்கூட்டில் பலமான சிதறல்.. ஹாட்ஸ் அப் டைரக்டர்..!

கேரக்டர் ஸ்கெட்ச்சில் மிக கவனமாக இருந்திருக்கிறார் இயக்குநர். அவ்வளவு பெரிய வீட்டில் கணவன், மனைவியைத் தவிர வேறு யாருமில்லை.. மகளைக் கட்டிக் கொடுத்தாகிவிட்டது. மகள் மீது பெரிய அளவுக்கு பாசமில்லை.. மகளின் குணம் அவர்களுடையது இல்லை.. வீடு வெறிச்சோடி கிடக்கிறது.. பாசத்தைக் கொட்ட ஆளில்லை. வாங்க ஆள் இருந்தும் கொடுக்கவும் ஆளில்லை. வேலைக்காரப் பெண்கள் தோட்டத்து, வயலு வேலைகளை பார்த்துக் கொள்ள.. அடிமைத்தனம் நடத்த பண்ணையாருக்கு குணமில்லை.. அவர் வேறு என்னதான் செய்வார்..? அவருடைய பாசத்தை, இயல்பை, குணத்தை, நேசத்தை, அன்பை காட்டுவதற்கும், பகிர்வதற்கும் ஏதாவது ஒரு பிடிப்பு அவருக்கு இப்போது தேவைப்படுகிறது.. அதுதான் கார் மீதான பாசமாகவும், பற்றாகவும் மாறுகிறது..! வெல்டன் டைரக்டர்..!

படத்தின் ஹீரோ விஜய்சேதுபதி இல்லை. ஜெயபிரகாஷ்தான்.. அந்த அளவுக்கு சேதுபதியை டாமினேட் செய்திருக்கிறார்.. இவருக்கு சற்றும் சளைத்தவரில்லை துளசி. ஆதலால் காதல் செய்வீர் படத்திலேயே இவரது நடிப்பைப் பார்த்து அசந்துதான் போனோம்.. இப்போது இன்னொரு முறை.. ஒவ்வொரு முறையும் தனது கணவரை ஏமாற்றும் பேச்சைத் தொடர்வதும்.. அதற்கான ஜெயபிரகாஷின் ஏமாற்றத்தை பார்த்து மனதுக்குள் ரசிப்பதும், அதற்காக அவர் காட்டுகின்ற முகபாவனைகள்.. எக்ஸலண்ட்..!

இரவில் படுத்திருக்கும்போது இவர் முழித்திருக்கிறார் என்று அவரும், அவர் முழித்திருக்கிறார் என்று இவரும் நினைத்து பேசிவிட்டு.. பின்பு தூங்கிவிட்டார்கள் என்று ஏமாறுவதும்.. ஒருத்தருக்கொருத்தர் மீது வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டும் காட்சிகளும் ஒரு அழகான காதல் கவிதையை படித்தது போல இருக்கிறது.. நடுத்தர வயது காதலர்களின் அன்னியோன்யத்தை இதைவிட அழகாக யாரும் காட்டிவிட முடியாது.. அந்தக் கிராமத்தினருக்கே உரித்தான பேச்சு, தொனி, பழக்க வழக்கம் இவற்றோடு பெண்மையையும், ஆண்மையையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார் இயக்குநர்..!

மகள் மீதான பாசத்தில் ஒரு நிமிடம் நிலை தடுமாறி யாரை எங்கே வைக்கணுமோ அங்கதான் வைக்கணும். நான்தான் தப்பு பண்ணிட்டேன் என்று சொல்லும் ஜெயபிரகாஷ் கடைசியில், “ஐயா சாமி.. என்னை மன்னிச்சிருடா.. உள்ள வாடா..” என்று தலைக்கு மேல் கையைத் தூக்கி மன்னிப்பு கேட்கும் காட்சியிலும் இரு வேறு நடிப்பு.. ஆனால் கைதட்டல்களை அள்ளியது.. மகள் வீட்டிற்குச் சென்ற பிறகும் கவுரவத்திற்காக காரை கேட்காமலேயே வந்துவிட்டு பின்னர் கார் ஒரு நாளைக்கு கொடுன்னு கேட்டிருக்கலாம். நிச்சயம் கொடுத்திருப்பால்லே என்று அப்பா பாசத்தில் பேசி மருகுவதும் வெகு இயல்பு..!

சினேகா வீடு தேடி வந்து தனது அப்பா கொடுத்தவைகளை கேட்கும்போது தவிக்கின்ற தவிப்பு இருக்கிறதே ரசிகனை சீட்டு நுனிக்கே கொண்டு வரச் செய்துவிட்டார். எங்கே துளசி சொல்லிவிடுவாரோ என்கிற பதை, பதைப்புடன் அது எனக்கே தெரியும்.. இங்கயே இருக்கட்டும் என்று சினேகா சொன்னவுடன் ஜெயபிரகாஷைவிட நமக்குத்தான் பரம திருப்தி.. ச்சே.. என்னவொரு திரைக்கதை..!

பெற்ற மகள் என்றாலும் வரும்போதெல்லாம் எதையாவது தூக்கிக் கொண்டு போகும் கெட்ட பழக்கத்தினாலேயே வெறுப்படையும் அளவுக்கு பாசம் வைத்திருக்கும் துளசி.. அதே இயல்பில் கிளைமாக்ஸில் “போனா போறா.. விடுங்க..” என்று அலட்சியப்படுத்தி தனது கணவரின் சந்தோஷத்தையே பெரிதாக எண்ணுவதாகக் காட்டி முடித்திருப்பது முத்திரையான காட்சி..!

விஜய் சேதுபதிக்கு இது மீண்டும் ஒரு வெற்றி படம்தான்.. இந்த மாதிரியான கேரக்டருக்கு இவரைவிட்டால் வேறு ஆளில்லை என்று சொல்ல வைக்குமளவுக்கு இயல்பாகவே நடித்திருக்கிறார்.. ஜெயபிரகாஷ் மீதான மரியாதை, பாசத்தைவிட.. அந்தக் காரின் மீதான பாசம் அவருக்குள் அதிகமாகிக் கொண்டே போவதை பல காட்சிகளில் கொஞ்சம், கொஞ்சமாக காண்பித்திருக்கிறார் இயக்குநர்.. ஜெயபிரகாஷ் தனக்கு டிரைவிங் கற்றுக் கொடுக்கும்படி சொல்வதையே தன்னை கழட்டிவிட்டுவிடுவாரோ என்றெண்ணி முதலில் மறுத்து.. பின்னர் கல்யாண நாளுடா.. அவளை ஒரு நாளாவது சந்தோஷப்படுத்தணும்டா என்ற ஜெயபிரகாஷின் கள்ளம்கபடமில்லாத பாசத்தைப் பார்த்து உருகிப் போய் காதலி அழைத்திருக்கும் நாளில் வாங்க டிரைவிங் கத்துக்கலாம் என்று இழுத்துப் போகும் அவரது இயல்பான நடிப்பு சூப்பர்..


காருக்குள் டிரைவிங் சொல்லித் தரும்போது டயலாக் டெலிவரியில் பின்னியிருக்கிறார்கள் விஜய்யும், ஜெயபிரகாஷும்.. நேரா பாருங்க.. கீழ பாருங்க.. கிளட்ச், பிரேக், ஆக்சிலேட்டர் என்று மூன்றையும் மாறி மாறி சொல்லித் தரும் அந்தக் காட்சி மிகச் சிறந்த இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு.. இந்தப் படத்தின் மிகச் சிறப்பான காட்சிகளில் இதுவும் ஒன்று..!

நான்காவதாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ‘பீடை’ என்று சுருக்கமாகவும், ‘பெருச்சாளி’ என்று பெயராகவும் நடித்திருக்கும் பாலசரவணன். நல்ல அழுத்தமான நடிப்பு. எந்த இடத்திலும் சோடை போகவில்லை. இவரை வைத்து நடத்தியிருக்கும் காமெடி தர்பார் உச்சக்கட்டத்திற்கு போனது மாட்டு வண்டியை அழைக்கப் போன இடத்தில் அச்சாணி முறிந்து உடைந்து போயிருக்க.. அதற்கடுத்து வண்டிக்காரனுக்கும், பெருச்சாளிக்கும் இடையே நடக்கும் வாய்த் தகராறுதான்.. சிரித்து, சிரித்து சட்டென்று வயித்து வலியே வந்திருச்சு.. செம டயலாக்குகள்.. செம டைரக்சன்.. வாவ்.. வாவ்.. ஒரு ரவுண்டு வாப்பா..!

‘ரம்மி’ ஐஸ்வர்யா இதிலும் ஹீரோயின். நல்ல அழுத்தமான கிராமத்துப் பெண் கேரக்டர்.. இவருக்கு பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும், ரசிக்க வைக்கிறார் காதலையும், அவரையும்.. ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பாருன்னு நினைக்கிறேன். ஏனெனில் கிராமத்து வெட்ட வெளியில் எப்போது லைட் வரும்..? எப்போது போகும்ன்னு யாருக்கும் தெரியாது.. சீரான ஒளியும் கிடைக்காது.. அப்படியிருந்தும் மிக அழகாக படம் பிடித்திருக்கிறார்.. வெறுமனே காட்சிப் படிம்மே சோகத்தைத் தருகிறது எனில், நீலிமா காரை எடுத்துச் சென்ற பிறகு வெறுமையாக இருக்கும் அந்த இடத்தை கேமிரா படம் பிடித்திருக்கும்விதத்தைச் சொல்லலாம்.. வெல்டன் ஸார்..

ஜஸ்டின் பிரபாகரன் தனது முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்திருக்கிறார். ‘நம்ம வண்டி’ பாடல், ‘பேசுறேன்.. பேசுறேன்’ பாடல்.. ‘எனக்காக பொறந்தாயே’ பாடல்களில் இசையைத் தாண்டியும் குரல்கள் ஒலிக்கின்றன.. ரசிக்க வைத்திருக்கின்றன.. மெல்லிய பின்னணி இசை படத்தின் எந்த இடத்திலும் எதையும் குலைக்கவில்லை. மாறாக ரசிப்புக்கு இடையூறும் செய்யவில்லை. இறுதி காட்சியில் அட்டக்கத்தி தினேஷ் குடுகுடுவென்று ஓடி வந்து பத்மினியில் ஏறும் காட்சியின் இசையை கொஞ்சம் கேட்டுப் பாருங்கள். நம்மையும் கூடவே தூக்கிக் கொண்டு போனதுபோல இருந்தது..!

எல்லாவற்றுக்கும் காரணம் இயக்குநரின் திறமைதான்.. மிகச் சிறந்த இயக்குநர் ஒருவர் நமக்குக் கிடைத்திருக்கிறார். கோடம்பாக்கம் அவரை பத்திரமாகக் காப்பாற்றி அவருடைய திறமையைத் தொடரச் செய்தால் அதற்கும் நல்லது..! ரசிகர்களுக்கும் நல்லது..!

பண்ணையாரும், பத்மினியும் ஒரு புதுமையான அனுபவம்.. அவசியம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.. மிஸ் பண்ணிராதீங்க..!

புலிவால் - சினிமா விமர்சனம்

8-2-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



சினிமாவில் சொல்லப்படும் கதையாடல் என்பது உலகம் தழுவியது. இதனால்தான் உலக சினிமா என்று ஒரு சில திரைப்படங்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அப்படத்தின் கதைகள் உலகத்தின் எந்தப் பகுதி மக்களாலும் ரசிக்கப்படக் கூடியவை என்கிற அர்த்தத்தில் உலக சினிமா அர்த்தமுள்ளதாகிறது..!

2009-ம் வருடம் பிப்ரவரி 19-ம் தேதி Handphone என்ற தென்கொரிய திரைப்படம் வெளிவந்தது. இதிலிருக்கும் கதை, உலகம் தழுவிய கதை என்பதால் இதுவும் ஒரு உலக சினிமாவாகிவிட்டது.. ரொம்பச் சின்ன கதைதான்..

ஒரு செல்போனின் அதன் உரிமையாளர் சம்பந்தப்பட்ட செக்ஸ் காட்சிகள் பதிவாகியிருக்கிறது. ஒரு நாள், ஒரு சந்தர்ப்பத்தில் அது தொலைந்து போகிறது. இப்போது அது வேறொருவனின் கையில் உள்ளது என்பது உரிமையாளருக்குத் தெரிய வருகிறது. அதனை எடுத்தவனிடம், செல்போனின் உரிமையாளர் திருப்பிக் கொடுக்கும்படி கெஞ்சுகிறான். ஆனால் அந்த செல்போனை இப்போது வைத்திருப்பவன் அதனைத் திருப்பித் தர மறுக்கிறான். செல்போனை தொலைத்தவன் எப்படி தனிப்பட்ட முறையில் துப்பறிந்து தன்னுடைய செல்போனை திரும்பப் பெறுகிறான் என்பதுதான் கதை..!

இது உலக சினிமாவுக்கான கதைதானே..?

நம்மூர்க்காரர்கள் விட்டு வைப்பார்களா..? மலையாளத்தில் முதல் படம் தயாரானது. ‘டிராபிக்’ படத்தின் 100-வது நாள் விழாவின்போது இப்படத்தின் பூஜையும் போடப்பட்டது. படத்தின் பெயர் ‘சப்பா குருஸு’.. இதற்கு தமிழில் ‘தலையும், வாலும்’ என்று அர்த்தம். படத்தைத் துவக்கி வைத்தவர் பத்மபூஷன் கமல்ஹாசன். மலையாள ‘டிராபிக்’ படத்தின் 100வது நாள் விழாவன்று இந்தப் படத்துக்கும் பூஜை போடப்பட்டது. ‘டிராபிக்’ படத்தின் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன்தான் இந்தப் படத்துக்கும் தயாரிப்பாளர் என்பதால்தான் அன்றைக்கு பூஜை.

பகத்பாசில், வினீத் சீனிவாசன், ரம்யா நம்பீசன், ரோமா அஸ்ரானி, நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்திருந்தனர். சமீர் தாஹீர் இயக்கியிருந்தார். 2011 ஜூலை 11-ல் படம் ரிலீஸானது.. வசூலில் பெரிய அளவுக்கு போகவில்லையென்றாலும், பல்வேறு விருதுகளை பெற்றுக் குவித்தது இப்படம்.

Kerala State Film Awards 2011 – Second Best Actor – Fahadh Faasil

Ramu Kariat Memorial Cultural Forum Awards – Best Second Film – Chaappa Kurish

Film Guidance Society of Kerala Film Awards – Best Supporting Actress – Remya Nambeesan

Vayalar Ramavarma Chalachitra Television Award – Best Actress – Remya Nambeesan

Asianet Film Awards Best Character Actress – Nominated – Remya Nambeesan

Asiavision Movie Awards – Trendsetter Award – Won – Listin Stephen

Vanitha Film Awards – Best supporting Actress – Won – Remya Nambeesan

Mathrubhumi Kalyan Silks Film Awards – Best Path Breaking Movie of the Year – Nominated – Chaappa Kurish

Amrita Film Awards – Best Film – Won – Chaappa Kurish

Kochi Times Film Awards – Best Youth Film – Won – Chaappa Kurish

அடுத்தது கன்னடம் நோக்கிய பயணம். ‘வீர விஷ்ணுவர்த்தன்’ என்ற பெயரில் பி.குமார் என்ற புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் இப்படம் துவங்கியது. சுதீப், சோனு சூட், பாவனா, பிரியாமணி நடித்திருந்தனர். 2011 டிசம்பர் 8-ம் தேதி படம் ரிலீஸானது. வெறும் 7 கோடியில் தயாரான இப்படம் 20 கோடி அளவுக்கு வசூலை குவித்திருந்தது. படத்தின் துவக்கத்தில் இப்படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும் என்று மறைந்த கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தனின் மனைவி பாரதி, கன்னட பிலிம் சேம்பரிடமும், கன்னட சினிமா அமைப்புகளிடமும் கோரிக்கை வைத்தார். கன்னட திரையுலகின் மூத்த தயாரிப்பாளரான துவாரகீஷ்தான் படத்தைத் தயாரித்தார். பெயர் மாற்றத்திற்கு முதலில் மறுக்க.. பலவித பஞ்சாயத்துக்களுக்கு பிறகு ‘ஒன்லி விஷ்ணுவர்த்தனா’ என்று பெயர் மாற்றப்பட்டது. கன்னடத்திலும் இப்படம் பெரிய அளவுக்கு விருதுகளை வாங்கியிருக்கிறது.

Filmfare Award for Best Director – Kannada – Nominated – P. Kumar

1-st South Indian International Movie Awards 
Best Debut Director – Kannada – Winner – P. Kumar 
Best Film – Kannada – Nominated – B.S. Dwarakish 
Best Actor (Female) – Kannada – Nominated – Bhavana 
Best Actor in a Supporting Role – Kannada – Nominted – Arun Sagar 
Best Actor in a Negetive Role – Kannada – Nominated – Sonu Sood 
Best Cinematographer – Kannada – Nominated – Rajarathnam 
Best Playback Singer (Female) – Kannada – Nominated – Sowmya Raoh

4-th Suvarna Film Awards 
Suvarna Film Awards Best Actor – Winner – Sudeep

Bangalore Times Film Awards
Best Actor – Winner – Sudeep 
Best Film – Nominated – Only Vishnuvardhana
Best Actor in a Negetive Role Male – Nominated – Sonu Sood 
Best Actor in a Negetive Role Female – Nominated – Priyamani

அடுத்ததுதான் இந்த ‘புலிவால்’ என்ற தமிழ் ரீமேக். மலையாளத்தில் தயாரித்த லிஸ்டின் ஸ்டீபனே, ராதிகா சரத்குமாருடன் இணைந்து தமிழில் தயாரித்திருக்கிறார்.

பகத் பாசில் கேரக்டரில் பிரசன்னா.. வினீத் சீனிவாசன் கேரக்டரில் விமல். ரம்யா நம்பீசன் கேரக்டரில் ஓவியா. நிவேதா தாமஸ் கேரக்டரில் அனன்யா, ரோமா கேரக்டரில் இனியா.. என்று ‘நச்’ என்று பொறுக்கியெடுத்த நட்சத்திரங்கள்… கதை மேலே சொன்னதுதான். அதில் எந்த மாற்றமுமில்லை..

‘புலிவால்’ சரியான டைட்டில்தான். ‘புலிவாலை பிடிச்ச கதை’ என்பார்களே.. அது இந்தக் கதைக்கு மிகப் பொருத்தமானது. படத்தில் பெரிய ஆர்ட்டிஸ்ட் இருக்க வேண்டும். அப்போதுதான் தியேட்டருக்கு கூட்டம் சட்டென்று வரும்.. அதேபோல் அந்தக் கேரக்டருக்கு பொருத்தமானவராகவும் இருக்க வேண்டும். தமிழில் வேறு ஆட்கள் இல்லை என்பதால் விமலை தவிர வேறு யாரையும் சொல்ல முடியாது.. பிரசன்னா குட் சாய்ஸ்.. ஓவியா, அனன்யாவும் குட் சாய்ஸ்தான்.. நல்ல கதை, சிறந்த திரைக்கதை, முற்பாதியைவிடவும் பிற்பாதியில் செம விறுவிறுப்பு..!

மலையாளத்தில் மசாலா படங்களையும் ரசிக்கிறார்கள். இது போன்ற சீரியஸான கிரைம் படங்களையும் ரசிக்கிறார்கள். ஆனால் நம்ம தமிழ் ரசிகர்கள்தான் காமெடியும் வேணும்.. பாடல்களும் வேணும்.. என்று பிடிவாதம் பிடிப்பதால் தமிழுக்காக மெனக்கெட்டு சூரி கேரக்டரையும், சூப்பர் மார்க்கெட் மேனேஜராக தம்பி ராமையாவையும் வைத்து முடிந்த அளவுக்கு நகைச்சுவையில் திருப்திபடுத்தியிருக்கிறார்கள்..! சூரி.. இந்தப் படத்துக்காக எஸ்.எம்.எஸ். ஜோக்குகளை மனப்பாடம் செய்திருக்கிறார் போலிருக்கிறது. பலவைகளை ரசிக்க முடிந்தாலும், கொஞ்சம் ஓவர் டோஸாகிவிட்டது.. தம்பி ராமையாவின் டயலாக் டெலிவரியைச் சொல்லவே வேண்டாம்.. பண்பட்ட வில்லன் நடிகராகவும் பிரமிக்க வைப்பவர்.. இதிலும் அப்படியே.. சுந்தரியுடன் மைண்ட் வாய்ஸில் அவர் பேசும் டயலாக்குகள் அனைத்துமே ஜிலீர் ரகம்.. இவர்களின் போர்ஷனுக்கு ஒரு ஷொட்டு..

முற்பாதியில் இரண்டு மாறுபட்ட கலாச்சாரத்தைக் காட்டுவதிலும், ஹீரோ, செகண்ட் ஹீரோக்களின் வாழ்க்கை முறையைக் காட்டுவதிலும் பெரும்பாலான நேரம் செலவானதால், படம் எதை நோக்கிச் செல்கிறது என்பதே தெரியாமல் கொஞ்சம் நெளிய வேண்டியிருந்தது.. 

விமலுக்குள் இருக்கும் ஊசலாட்டத்தை காட்சிகளின் மூலமாகச் சொல்லியும், திருடாதே பாடல் மூலமாக அவரது குணத்தைக் காட்டியும்.. திருப்பிக் கொடுக்க முனைவதைச் சொல்லியிருந்தாலும் அதனை திரைமொழியில் புரிவது போல அழுத்தமாகச் சொல்லாததினால் சில இடங்களில் ஜிவ்வென்று போயிருக்க வேண்டிய முற்பாதி திரைக்கதை சவசவ என்று ஆகிவிட்டது..!

விமலின் நடிப்பை வினீத் சீனிவாசனுடன் ஒப்பிட்டுப் பார்த்து குறை சொல்வதெல்லாம் தேவையில்லாதது..! தமிழில் இவ்வளவுதான் முடியும்.. இல்லாவிடில் புதுமுக நடிகரை நடிக்க வைத்திருக்க வேண்டும். அப்படியெனில் படத்தின் விற்பனைக்கு யார் பொறுப்பேற்பது..? சிறந்த முறையில் விளம்பரம் செய்து.. சிறந்த கதையை பரப்புரை செய்வதுதான் மிகச் சிறந்த வர்த்தக அணுகுமுறை..!

செல்போனை திருப்பிக்கொடுக்க முன் வந்தும், பிரசன்னா அடியாளுடன் வருவது.. சம்பந்தமில்லாமல் தன்னை தாக்கியது.. இதையெல்லாம் மனதில் வைத்து இரண்டு முறை செல்போனை கொடுக்க மறுத்து விமல் திரும்புவது ஓகேதான்.. அதையே தன்னுடைய சொந்த லாபத்துக்காக பிரசன்னாவை திசை திருப்புவது என்பதுதான் சினிமாட்டிக்.. இங்கேதான் செமத்தியான டிவிஸ்ட்டு.. இயக்குநர் மாரிமுத்து மூலத்தை சிதைக்காமல் கொண்டு சென்றிருக்கிறார்..

பிரசன்னா ஐடி கம்பெனி ஓனராக அதற்கேற்றாற்போலவே நடித்திருக்கிறார்.. பெண்களை கவர்வது ஒன்றே தனது தொழிலாக இருப்பதை அவ்வப்போது சைலண்ட்டான ஆக்சன்களில் காட்டியிருக்கிறார்.. ஒரு பக்கம் ஓவியாவுக்கு கனெக்சன் கொடுத்துக் கொண்டே, இன்னொரு பக்கம் இனியாவிடம் கோபம் காட்டாமல் பேசிவிட்டு வழிவதெல்லாம்…. இது போன்ற பால்வடியும் முகங்களில் மட்டுமே செய்ய முடியும்..!

அதே துள்ளல்.. அதே குதூலகம்.. அனன்யாவின் அத்தனை நடிப்பும் ‘நீலாங்கரை’ பாடல் காட்சியில் தெரிகிறது.. ‘கிச்சு கிச்சு’ பாடலில் ஓவியாவின் அத்தனை திறமைகளும் தெரிகிறது.. ரெண்டுக்கும்தான் எத்தனை வித்தியாசம்.. ?ஒண்ணு போர்த்திக் கொண்டு.!. இன்னொன்னு முடிந்த அளவுக்கு..?? இந்த இரண்டு பாடல்களைத் தவிர ‘வாழ்க்கை உன்னை’ பாடலும் அந்த சிச்சுவேஷனில் நிறையவே மனப்பாரத்தை ஏற்றியிருக்கிறது.. இசையமைப்பாளர் ரகுநந்தனுக்கு ஒரு ஷொட்டு..

எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் சரி.. சென்றாலும் சரி.. காலத்தால் அழியாத இசை என்றாலே இன்றைய தலைமுறைக்கும் இளையராஜாவின் இசைதான் என்பதை எவராலும் மறுக்க முடியாது.. இந்தப் படத்தில் தம்பி ராமையா மற்றும், அவரது காதலிக்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கும் ராஜாவின் டியூன்கள் அனைத்தும் சிச்சுவேஷனுக்கேற்ற டியூன்கள். ரகுநந்தனே முடியாமல் ஒதுங்கியிருக்கிறார் என்றால் இசைஞானிதான் யார்..? புரிந்து கொள்ளட்டும் புதியவர்கள்..!

முடிந்த அளவுக்கு படத்தின் தன்மை கெடக்கூடாது என்பதால் மலையாள மூலத்தில் இருந்தே காட்சிகளை இறக்குமதி செய்திருக்கிறார்கள்.. அதற்காக மலையாளத்தில் நடித்த பெண் போலவே இருக்கும் சொர்ணமால்யாவைத் தேடிப் பிடித்திருக்க வேண்டுமா..? அம்மணி எப்படி அந்த கேரக்டரில் நடிக்க ஒத்துக் கொண்டார்ன்னு தெரியலை.. நடிப்புக்காக என்றாலும் அதற்காகவேணும் அவரைத் தனியாகப் பாராட்ட வேண்டும்..!

இத்தனை போராட்டத்திற்குப் பிறகு விமலை தேடிப் பிடித்த பின்பும், அவர் சொன்ன ஒரே வார்த்தைக்கு பிறகு உண்மையைத் தெரிந்து கொண்டு செல்போன் கடைக்காரனை போட்டு புரட்டியெடுப்பதும்… கடைசியில் மனம் மாறி ஓவியாவை கைப்பிடிப்பதாகவும் சென்றிருப்பது இந்திய மொழிகளுக்கேற்ற சினிமாட்டிக் திரைக்கதை..

முற்பாதியில் தம்பி ராமையா-சூரியின் நகைச்சுவையாலும், ஓவியா மற்றும் அனன்யாவின் ஜில்லென்ற ஸ்கிரீன் பிரசென்ஸினாலும் படம் நகர்ந்து பிற்பாதியில் தேடுதல் வேட்டையின் பரபர ஸ்கிரீன்பிளேயில் படத்தை வெகுவாக ரசிக்கவே முடிகிறது..!

கொரியன் படத்தையும், மலையாளப் படத்தையும் பார்த்துவிட்டதினால் படத்தின் பாதிப்பை அவ்வளவாக எழுத்தில் கொண்டு வர முடியவில்லை. ஆனால் எதையும் பார்க்காமல் முதல் படமாக பார்ப்பவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு புதுவித அனுபவத்தைத் தரும் என்றே நம்புகிறேன்..!

மலையாளம், கன்னடம், தமிழ் என்று முடித்த பிறகு இப்போது தெலுங்கில் ரவிதேஜா நடிப்பில் இதே கதையில் படம் தயாராகி வருகிறதாம். கூடவே மராத்தி மொழியிலும் படத்தை எடுத்துவிட்டார்களாம்.. ஹிந்திக்கு, மலையாள தயாரிப்பாளர் முயற்சி செய்து கொண்டிருக்கிறாராம்.. கதையின் ஒரிஜினல் உரிமையாளரான Kim Mi-hyeon-க்கு இது தெரியாமலேயே இருக்கட்டும்.. ஒருவேளை அவருக்குத் தெரிந்து போய் ரீமேக்கான அனைத்து படங்களையும் பார்த்துவிட்டு “ஐயையோ.. சுட்டாலும் சுட்டீங்க..? இப்படியா என் கதையை எடு்க்கணும்..?” என்று கதறி அழுதுவிட்டாரென்றால்..? பாவமில்லையா..?

மலையாள, கன்னட சினிமாக்கள் பெற்ற விருதுகளை இங்கே குறிப்பிட்டதன் காரணம்.. அடுத்த வருடம் இதே போன்று இந்தத் தமிழ் வடிவமும், ஏதாவது சில வழிகளில் விருதுகளைப் பெற்றாக வேண்டும்.(அதற்கான தகுதியுள்ள படம்தான் இது.) ஆனால் பெறுமா என்பதை யோசித்துப் பார்க்கத்தான்..!

புலிவால் – நிச்சயம் பார்க்க வேண்டிய படம்தான். பாருங்க..!

உ - சினிமா விமர்சனம்

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



புதிய இயக்குநர்களை உற்சாகமூட்டி வரவேற்கும் அதே நேரத்தில், அவர்களுடைய படைப்புகளையும் எந்தப் பாகுபாடுமில்லாமல் விமர்சிக்கத்தான் வேண்டும்.. இந்தப் படம் வித்தியாசமான களத்துடன்.. சின்ன பட்ஜெட்டில் புதிய முயற்சியையும் எடுத்துக் காட்டுகிறது. அந்த வகையில் இது பாராட்டுக் கூடிய விஷயம்..!

சினிமா. சினிமா.. சினிமா என்று சினிமாவில் இயக்குநராவதையே லட்சியமாக்க் கொண்டு அலைந்து, திரியும் நடுத்தர வயது தம்பி ராமையாவுக்கு ஒரு புதிய தயாரிப்பாளர் கிடைக்கிறார். தன்னுடன் இணைந்து பணியாற்றும்படி தனது அறை தோழர்களை கேட்கிறார் ராமையா. அவர்களோ இவருக்கு மட்டும் படம் கிடைத்துவிட்டதே என்கிற பொறாமையில் இவரைப் பற்றி மட்டமாகவே பேசித் தொலைக்கிறார்கள். உள்ளே இறங்கிய சரக்கும் கூடுதலாக வேலை செய்ய.. அப்போதே சபதம் போட்டு அவர்களைவிட்டு பிரிகிறார்.

சரக்கடித்துவிட்டு நடுரோட்டில் மட்டையானதால் போலீஸ் ஸ்டேஷனுக்கு அள்ளிக் கொண்டு போகிறார்கள். அங்கே அவரைப் போலவே வேறு வேறு வகைகளில் பிட்டு கேஸ்களில் வரும் 4 இளைஞர்களை பார்க்கிறார்.. அவர்களிடத்தில் சினிமா பற்றி ஏதோ தேடல் ஒன்று இருப்பதை உணர்ந்து அவர்களை அரவணைக்கிறார்.. புதிய படத்தின் டிஸ்கஷனை அவர்களுடனேயே துவக்குகிறார். இதனையறிந்த பழைய தோழர்கள் இதனை உடைக்க நினைக்கிறார்கள். இதையும் தாண்டி ராமையா தனது முதல் படத்தை எப்படி எடுத்து முடிக்கிறார் என்பதுதான் படமே..!

சந்தேகமே இல்லாமல் இது தம்பி ராமையாவின் படமேதான்.. அவருடைய டயலாக் டெலிவரி இயக்குநருக்கு மிகப் பெரிய அளவுக்கு உதவிகளைச் செய்திருக்கிறது.. கணேஷ் என்கிற அந்த கேரக்டரில் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் பட்ட கஷ்டத்தையெல்லாம் சேர்த்து வைத்து வெளுத்துக் கட்டியிருக்கிறார் ராமையா. அந்த 4 நண்பர்கள் நல்ல தேர்வு.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான கேரக்டர் ஸ்கெட்ச்.. இதுதான் படத்தின் பலம்.. அவரவரும் தங்களது பார்வையில் ஒரு கதையே நகர்த்திச் செல்ல.. அந்தக் கதையை டைரக்டர் தயாரிப்பாளரிடம் தன் பாணியில் திருப்பிச் சொல்லி ஓகே வாங்குவதெல்லாம் காமெடி கலந்த உண்மைச் சம்பவங்கள்..

உண்மையாகவே இன்றைய கோடம்பாக்கத்தின் சந்து பொந்துகளில் இருக்கும் உதவி, துணை, இணை இயக்குநர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் சென்று பாருங்கள்.. தினம் தோறும் ஏதாவது ஒரு கதையின் டிஸ்கஷன் நடந்து கொண்டேதான் இருக்கும்.. அறைத் தோழர்கள் ஒவ்வொருத்தரும் கதையை ஒவ்வொரு பக்கமாக டெவலப் செஞ்சுக்கிட்டே போயி.. இது இப்படியிருந்தா நல்லாயிருக்கும்.. இந்த இடத்துல பாட்டு இருந்தா நல்லாயிருக்கும் என்று பேசிக் கொண்டேதான் இருப்பார்கள்.. அவர்களது சிந்தனை திறன் கதை என்று வந்தவுடன் ராக்கெட் வேகத்தில் செயல்படும். இதில் கதை பண்ணத் தெரிந்தவர்களுக்கு அதிகமாக இயக்கம் வராது.. இயக்கம் நன்கு தெரிந்தவர்களுக்கு கதை பண்ணத் தெரியாது. இந்த இரண்டையும் புரிந்து கொண்டு தங்களுக்கு துணையானவர்களை வைத்துக் கொண்டு ஜெயித்தவர்கள்தான் தமிழ்ச் சினிமாவின் அனைத்து சாதனையாளர்களும். யாரும் இங்கே விதிவிலக்கில்லை..!

“பக்கத்து ஊர்ல ஒருத்தன் ஜெயிச்சா தலைல தூக்கி வைச்சு கொண்டாடுறீங்க.. ஆனா உங்க கூடவே இருக்கிறவன் ஜெயிச்சா மட்டும் ஏண்டா உங்களால தாங்கிக்க முடியலை..” என்று மனம் வெறுத்துப் போய் கேட்கிறார் தம்பி ராமையா.. இது சினிமாவுலகில் முக்கால்வாசி உதவி, துணை, இணை இயக்குநர்களுக்கும் பொருந்தும். இந்த வசனம் என்றில்லை.. படம் முழுக்கவே வசனங்கள் அனைத்துமே டைமிங்குதான்.. அத்தனையையும் பஞ்ச் டயலாக்காகவும் வைத்துக் கொள்ளுமளவுக்கு எழுதித் தள்ளியிருக்கிறார் இயக்குநர்.. கூடவே டபுள் மீனிங் டயலாக்குகளும் வருகின்றன.. அவற்றை நீக்கியிருக்கலாம்.. ஏனோ விட்டுவிட்டார் இயக்குநர். இது ஒன்றுதான் இப்படத்தில் எனக்குப் பிடிக்காத விஷயம்..!

‘பக்குலன் பிலிம்ஸ்’ என்று வாயில் நுழையாத படத் தயாரிப்பு நிறுவனம்.. உள்ளே இடிச்சப்புளியாக அமர்ந்திருக்கும் தயாரிப்பாளர் பயில்வான் ரங்கநாதன்.. ‘கேஸ் லீக்’ வியாதியில் சிக்கியிருக்கும் அவர் அவ்வப்போதுபோடும் ‘குண்டுகள்’ மட்டுமே பிடித்தமில்லாதவை. மற்றபடி சினிமாவைப் பற்றி துளியும் தெரிந்து கொள்ளாத ஒரு தயாரிப்பாளரின் அடையாளத்தை, பயில்வான் மூலமாக திரையில் வெற்றிகரமாக கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்..!

தமிழ்த் திரையுலகின் இன்றைய நிகழ்வுகளை அப்படியே கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். வயதாகிப் போன நிலையிலும் மனம் தளராமல் இயக்குதலுக்காக போராடும் தம்பி ராமையா.. கூடவே செவ்வாழைகளாக இருக்கும் தோழர்கள்.. அவர்களது பொறாமை.. தயாரிப்பாளரின் அருகிலேயே இருப்பதால் பூசாரியாக தன்னை நினைத்துக் கொள்ளும் மேனேஜர்.. பியூன் வேலை பார்ப்பவனிடம்கூட பணிவாக பேச வேண்டிய சூழலில் இருக்கும் புதுமுக இயக்குநர்.. மேனேஜரின் மிரட்டலுக்கு பயந்து பயந்து பேசும் இயக்குநர்.. டிஸ்கஷனில் இருக்கும் உதவியாளர்களிடம் கொஞ்சம் நைச்சியமாக பேசுவது.. பின்பு மிரட்டுவது.. பின்பு கெஞ்சுவது.. சில நாட்கள் ஆனவுடன் மடியில் படுத்து காலை பிடித்துவிடச் சொல்வது.. பின்பு “சாப்பிட்டீங்கள்ல.. கதையைச் சொல்லுங்கடா”ன்னு என்று அங்கலாய்ப்பது.. தயாரிப்பாளரிடம் மட்டும் கையைக் கட்டிக் கொண்டு நிற்பது.. மைண்ட் வாய்ஸில் “இந்தப் படம் ஜெயிக்கட்டும் அப்புறம் பாருங்கடா…” என்று தனது ஆத்திரத்தைக் காட்டுவது.. என்று ஒரு வளரும் இயக்குநர் என்ன செய்வாரோ அதை அப்படியே த்த்ரூபமாகச் செய்து காட்டியிருக்கிறார் இயக்குநர்..!

தனக்கு மட்டும் கதை பிடித்தால் போதாது.. தனக்கு பைனான்ஸ் கொடுக்கும் பைனான்ஸியருக்கும் பிடிக்கணும். அவர்கிட்டேயும் போய்ச் சொல்லுங்க என்று ராமையாவை அனுப்பி வைக்கின்ற காட்சியை ரசிகர்கள் பார்த்து கோடம்பாக்கத்தின் உண்மையான உண்மையை தெரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.. தமிழ்ச் சினிமாவில் இது எப்போதும் நடப்பதுதான்.. பல மீடியம் பட்ஜெட், சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களின் கதி இதுதான்.. “வட்டியை கரெக்ட்டா கொடுத்திருவீல்ல.. அப்போ நீதான் தயாரிப்பாளர். கதையை மட்டும் நான் கேட்டு பிக்ஸ் பண்ணிக்கிறேன்…” என்று சொல்லி மறைமுகமாக தயாரிப்பாளரை தன் கன்ட்ரோலில் வைத்துக் கொண்டு ஆட்டிப் படைத்த.. படைக்கும் பைனான்ஸ் முதலைகள் நிறைய பேர் இப்பவும் கோடம்பாக்கத்திற்குள் இருக்கத்தான் செய்கிறார்கள்..!

நண்பர்கள் செய்யும் கதையில் இடம் பெற்றிருக்கும் அந்த உள் கதையே இன்னொரு சினிமாவாக எடுக்கப்பட வேண்டிய கதை.. அதில் இடம் பெற்றிருக்கும் நடிகர், நடிகைகளை மிகவும் பாராட்ட வேண்டும்.. அதிலும் நான் ஸ்டாப்பாக பேசும் ஒருவரின் முக பாவனை.. டயலாக் டெலிவரியும் பிய்ச்சு எடுத்திருக்காரு.. அந்தச் சின்னப் பையனும், பொண்ணும் சரியான செலக்சன்.. அந்தக் கதையின் ஊடாகவே இவர்களது கதையையும் கொஞ்சம், கொஞ்சமாக நகர்த்தியிருக்கும்விதம் படத்தின் எதிர்பார்ப்பை அதிகமாகவே தூண்டியிருக்கிறது..

அபிஜித் ராமசாமின் இசையில் முருகன் மந்திரத்தின் ‘ஆகா இது சினிமா’ பாடல் ஏற்கெனவே இணையத்தளங்களில் பிரபலமாகிவிட்டது.. சிறந்த மான்டேஜ் காட்சிகளை வைத்து மிக அழகாக ஷூட் செய்திருக்கிறார்கள்.. மிக எளிமையான பாடலாக தம்பி ராமையா டீம் பாடும் சோகப் பாடல். ஒலிக்கிறது. முருகன்மந்திரம் இன்னும் மேலே உயர்வார் என்றே நம்புகிறேன்.. அதற்கான திறமை அவரிடம் இருக்கிறது. இந்தப் படத்தில் கூடுதல் தயாரிப்பாளராகவும் இருந்து ஜெயித்திருக்கிறார்..

முதல் பாதி ரன் வேகத்தில் பறக்கிறது.. பிற்பாதியில் கொஞ்சம், கொஞ்சம் போரடித்தாலும் மறுபடியும் யோகி தேவராஜை சந்தித்தவுடன் பறக்கத் துவங்குகிறது.. கூண்டுக்குள் அடைக்கப்பட்ட கிளிகளுக்கு ‘அமலாபால்’, ‘அஞ்சலி’ என்று பெயர் வைத்து அழைக்கும் பைனான்ஸியரின் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்குள் இருக்கும் உள்குத்தை யோகி தேவராஜே அறிவார்.. வாழ்க..

மாற்று முயற்சியாக எதையாவது புதிதாக செய்து ஜெயித்தாக வேண்டும் என்ற நிலையில் புதிய சிந்தனையோடு, புதிய கோணங்களோடு இந்தப் படத்தை படைத்திருக்கிறார் இயக்குநர் ஆஷிக். சிறந்த திறமைசாலிகளை ஊக்குவிப்பதை நாமும் வளர்த்துக் கொண்டால் நமது வாரிசுகளுக்கு நல்ல படங்கள் நிச்சயம் கிடைக்கும். அந்த வகையில் இந்த டீமுக்கு ஒரு பாராட்டுப் பத்திரத்தையே தருகிறேன்.. அடுத்த முறை இப்போதிருக்கும் சில குறைகளைக்கூட இல்லாமல் செய்து ஜெயிக்கும்படி வாழ்த்துகிறேன்..!

கடைசியாக ஒன்று.. ‘உ’ என்று பிள்ளையார் சுழி போட்டு தனக்கும் ஒரு புதிய வாழ்க்கையைத் துவக்கியிருக்கிறார் படத்தின் இயக்குநர் ஆஷிக். ஆனால் படத்தின் இறுதியில் ஒலிக்கும் தத்துவப் பாடலை, ஆஷிக்கிற்கு சுட்டிக் காட்ட வேண்டிய சூழல், எப்போதும் வரவே கூடாது என்று என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!