02-05-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
அண்ணன் கமல்ஹாசன் ஒரு திரைப்படத்தில் நன்றாக நடித்திருக்கிறார் என்று பொத்தாம் பொதுவாக எழுத முடியுமா என்ன..? நடிப்பை மட்டும் விட்டுவிட்டு கதைக்களத்தை ஆய்வு செய்தாலே விமர்சனங்கள் தீயாய் பறக்கும். இந்தப் படமும் அதைத்தான் செய்யச் சொல்கிறது.
‘சாகும் நாள் தெரிந்துவிட்டால் வாழும் நாள் நரமாகிவிடும்’ என்பார்கள். ஆனால் இப்போது நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களுக்கு நாள் தெரியாவிட்டாலும் மாதங்கள், வருடங்கள் மட்டும் தெளிவாகச் சொல்லப்பட்டுவிடுகிறது.
‘சாவு’ என்கிற ஒரு வார்த்தையின் அர்த்தத்தை மனிதன் உணராமல் தான் என்ற அகந்தையுடன் ஆடிய ஆட்டத்தையெல்லாம் பார்த்துதான் நாகரிகம் வளர வளர.. வசதி, வாய்ப்புகளும், தொழில் நுட்பமும், விஞ்ஞானமும் வளர வளர, புது புது வியாதிகளை கொடுத்துக் கொண்டேயிருக்கிறான் ஆண்டவன்.
எந்த வியாதி வந்தாலும் அதைத் தீர்ப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் இதே மண்ணில் இருந்தே தேடி எடுக்கிறார்கள் மனிதர்கள். ஆனாலும் நோய்கள் குறைந்தபாடில்லை. சிகிச்சை முறைகளும் அதிகமாகிக் கொண்டேதான் செல்கின்றன.
சில சமயங்களில் சாவுகூட நல்லதுதான் என்பார்கள். இதனால் சில குடும்பங்கள் பிரியலாம். பல குடும்பங்கள் ஒன்று சேரலாம். இதில் ஏதோ ஒன்று அந்தக் குடும்பத்தில் நிகழும் என்பார்கள் நம் முன்னோர்கள்.
இப்போதைய கம்ப்யூட்டர் யுகத்தில் நோயின் பிடியில் சிக்கி மரணத்திற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருப்பவர்கள் உயிர் போவதற்குள் குடும்பம் ஒன்றாக வேண்டும்.. குடும்பத்திற்கு பிரச்சினையில்லாமல் பணத்தை சேர்த்துவைக்க வேண்டும்.. செய்ய வேண்டிய கடமைகளைச் முடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். பலரும் இதைச் செய்துவிட்டுத்தான் நிரந்தரமாக கண்ணை மூடுகிறார்கள்.
அப்படியொருவனுக்கு திடீரென்று சாவின் நாள் தெரிந்துவிட்டால் அடுத்து அவன் என்ன செய்வான்..? என்ன செய்ய நினைக்கிறான்..? என்பதைத்தான் தனது மனோரஞ்சன் கேரக்டர் மூலமாக தமிழ்ச் சமூகத்திற்கு சொல்லியிருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன்.
‘உலக நாயகன்’ மனோரஞ்சன் திரையுலகில் முன்னணி ஹீரோ. ரசிகர்களின் ஆர்ப்பரிக்கும் கைதட்டல்களை வாங்கக் கூடிய ஹீரோ. ‘மார்க்கதரிசி’ என்ற தீர்க்கதரிசியான கே.பாலசந்தரின் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமானவர். ஆனால் இப்போது அவருடன் தொடர்பில்லாமல் இருக்கிறார்.
மனோரஞ்சன் இப்போது பெரும்பாலும் தன்னுடைய மாமனாரான பூர்ணசந்திரராவின் சொந்தப் படங்களிலேயே நடத்தி வருகிறார். பி.பி. நோயாளியான மனைவி.. வாய்ப்புக் கிடைத்தால் ரொமான்ஸில் சடுகுடு விளையாட தயாராக இருக்கும் இள வயது மகன்.. இவர்களுடன் மாமனாரும், மாமியாரும்.. ஒரு கூட்டுக் குடும்பமாகவே வாழ்கிறார்கள். இதில்லாமல் மனோரஞ்சனுக்கு அவரது பிரத்யேக மருத்துவரான அர்ப்பணா என்னும் ஆண்ட்ரியாவுடனும் இல்லீகல் தொடர்பு இருக்கிறது.
மனோரஞ்சனுக்கு இந்தக் கட்டத்தில் தலைவலி வந்து உயிரையெடுக்கிறது.. அவ்வப்போது மயக்கம் போட்டு விழுகிறார். சி.டி. ஸ்கேன் செய்ய பல முறை அழைத்தபோதும் வர மறுக்கிறார். தன்னை எதுவும், எதுவும் செய்ய முடியாது என்கிற தீர்க்கமான நம்பிக்கையில் இருக்கிறார்.
இந்த நேரத்தில் அவரது முதல் காதலியான யாமினியின் கணவரான ஜெயராம் கமலை சந்தித்து அவருக்கும் “யாமினிக்கும் பிறந்த மகளான மனோன்மணி உயிருடன் இருப்பதாகவும், அவள் அவரை பார்க்க விரும்பாமல் இருந்தாலும் யாமினியின் விருப்பப்படி அவளை உங்களிடத்தில் காட்ட வேண்டியது என்னுடைய கடமை..” என்கிறார்.
தன்னைச் சந்திக்க விருப்பமேயில்லாத மகளை மிகவும் விரும்பிச் சந்திக்கிறார் கமல். தன் முகத்தை பார்க்கக்கூட விரும்பாத மகளை நினைத்து வருத்தத்தில் இருக்கும் சூழலில் திரும்பவும் மயக்கம் வருகிறது கமலுக்கு. இந்த முறை ஸ்கேன் செய்தே தீர வேண்டிய நிலைமை. விதி தனது கோரப்பல்லைக் காட்ட கமலின் வாழ்க்கை இன்னும் சில மாதங்களே என்பது தெரிகிறது. மூளையில் கேன்ஸர் என்று தெரிந்து முதல்முறையாக பயப்படுகிறார். அதிர்ச்சியாகிறார்.
தன்னுடைய வாழ்க்கையை அன்றைய தினத்தில் இருந்து நெறிமுறைப்படுத்த விரும்புகிறார். தான் முதலில் சந்திக்க விரும்பும் நபராக தன்னைத் திரையுலகத்தில் அறிமுகப்படுத்திய குருவையே தேர்ந்தெடுக்கிறார். கே.பி.யை சந்திக்கிறார் கமல்ஹாசன். தான் அவருடைய படத்தில் நடிக்க விரும்புவதாகச் சொல்கிறார் கமல்.
ஏற்கெனவே அவருடைய மாமனாரால் அசிங்கப்பட்டு ஒதுங்கியிருக்கும் கே.பி. இதற்கு மறுக்கிறார். பின்பு “கதை இல்லையேடா..? என்கிறார். “நீ இருக்குற லெவலுக்கு நான் எப்படிடா கதை பண்றது..?” என்கிறார். இந்த நேரத்தில் ஆண்ட்ரியாவையும் அழைத்து தன்னுடைய உடல் நலன் பற்றிய உண்மையைச் சொல்ல வைக்கிறார் கமல். அதிர்கிறார் கே.பி. பதறுகிறார். நம்ப முடியாமல் திணறுகிறார். உண்மை உணர்ந்து ஏதாவது செய்ய வேண்டுமே என்று துடிக்கிறார்.
“கதைதானே வேண்டும். நான் தருகிறேன்.. நல்ல காமெடி சப்ஜெக்ட்.. நீங்க ஒத்துக்கணும்..” என்று சொல்லி ஒரு கதையைச் சொல்ல கே.பி. ஓகே சொல்கிறார். இது தெரிந்த கமலின் மாமனாரும், மனைவியும் கோபித்துக் கொண்டு தனிக்குடித்தனம் செல்கிறார்கள்.
படத்தின் ஷூட்டிங் துவங்குகிறது.. ஒரு கட்டம்வரையில் படம் வளர்ந்தவுடன் கமல் தனியாக இருப்பதை அறிந்த கே.பி. தனது பிடிவாதத்தையும் விட்டுவிட்டு கமலின் குடும்பத்தாரிடம் அது பற்றி பேசி உண்மையை உணர வைக்க வருகிறார். குடும்பங்கள் ஒன்று சேர்கின்றன. கமலின் வாழ்க்கை போராட்டம் அவர்களுக்குத் தெரிய வர.. யாமினியின் மகள் உட்பட அனைவரும் கமலுக்காக ஏங்குகிறார்கள்.
படம் முடிவடையும் தருணத்தில் கமலை, நோய் தீவிரமாய்த் தாக்க மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அவரது வருகைக்காக ஒட்டு மொத்தக் குடும்பமும், பட யூனிட்டும் காத்திருக்கிறது. மனோரஞ்சன் என்னும் கமல்ஹாசன் வருவாரா..? வந்தாரா..? என்பதுதான் கிளைமாக்ஸ்..!
இந்தச் சோகக் கதை நிறைய பார்த்ததுதான். படித்ததுதான்.. சாகும் நாள் தெரிந்தவுடன் ஒரு மனிதன் செய்யும் செயல் என்ன என்பதுதான் படத்திற்கான அடிப்படை. இந்த நிலையற்ற வாழ்க்கை என்ற உண்மையை மனிதன் தனது அந்திமக் காலத்தில்தான் அதிகமாக உணர்கிறான்.
இந்த மனோரஞ்சன் என்னும் கமல்ஹாசன் அதை உணரும்போது தான் முதலில் சந்திக்க விரும்புவதாக நினைப்பது தனது குருவைத்தான். இங்கே ஒரு கதாசிரியனாக, ஒரு நடிகனாக கமல்ஹாசன் தன்னுடைய உண்மையான மனதையே வெளிப்படுத்துகிறார். ஒரு உண்மை கலைஞன் இதைத்தான் விரும்புவான்.
தானும் கே.பி.யும் இணைந்து சாகாவரம் பெற்ற பல படங்களை கொடுத்திருப்பதால் தனது கடைசி படமும் நல்ல, சிறந்த படமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் நடிகன் மனோரஞ்சன். இது ஒரு நல்ல கலைஞனுக்கான மனது. அதனைச் செயல்படுத்தவும் செய்கிறார்.
திருமணத்திற்கு அப்பாற்பட்டு ஒரு தொடர்பு தனக்கு இருக்கிறது என்பதையும் உணர்ந்து அதை இந்தக் கலைஞன் தவறென்று சொல்லவே இல்லை. மாறாக தான் மரணத்தின் வாசலில் இருக்கும் சூழலிலும் அதனை விரும்பி கண்ணடித்துவிட்டுத்தான் சுவாசத்திற்குள் மூழ்குகிறார். ஆக.. கலைஞர்கள் இப்படித்தான். நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள்.. ஒழுக்கம் என்பதெல்லாம் கலைஞர்களுக்கு அப்பாற்பட்ட, தேவையற்ற விஷயம் என்பதை இந்தப் படத்தின் மூலமாக அழுத்தம்திருத்தமாக அண்ணன் கமல்ஹாசன் நமக்கு இப்படி உணர்த்தியிருக்கிறார். புரிந்து கொள்வோமாக..!
தன்னுடைய உடல் நிலையை தானே முன் வந்து குடும்பத்தாரிடம் சொல்ல முடியாது என்பதால் கே.பி. மூலமாகச் சொல்ல வைக்கிறார் கமல். மயங்கி விழுந்து மருத்துவமனையில் இருக்கும் மனைவியின் இயலாமையை மிக இயல்பாக எதிர்கொள்கிறார்.
இதுநாள்வரையிலும் தனது மகனை பற்றிய கவலையில்லாமல்.. அவனே தன்னுடைய படத்தை ‘மொக்கை படம்’ என்று சொல்வதையெல்லாம் கேட்டுவிட்டு கண்டு கொள்ளாமல் போகும் மனநிலையில் இருப்பவர், வாழ்க்கையின் இறுதிக் கட்டம் என்றவுடன் மகனை கட்டியணைத்து “என்னவாகப் போற..? எப்படி படிக்கிற..?” என்று அக்கறையாக விசாரிக்கிறார்.
பக்கத்து வீட்டு காம்பவுண்டில் இருந்து எட்டிப் பார்த்து கையசைக்கும் ரசிகர்களை “எங்களை தனியா விடுங்கப்பா.. எங்களுக்கும் பிரைவசி வேணும்ப்பா..” என்கிறார்.
தன்னுடைய முதல் காதலி தன்னை விட்டுப் பிரிந்து போனதற்கு தன்னுடைய இத்தனையாண்டு கால மேனேஜரும் ஒரு காரணம் என்று தெரிந்தும் அவரை மன்னிக்கிறார். தன்னுடைய மகளிடம் அந்தக் கதையைச் சொல்லி தன் மீது தவறில்லை என்பதை நிரூபித்து மகளிடத்தில் அன்பை வாங்கிக் கொள்கிறார்..
எப்போதும் எதிர்த்து பேசும் குருவிடம் இப்போது தன்மையாகப் பேசி மாற்றுக் கருத்தை படத்தில் பதிவு செய்கிறார். பக்குவமாக, அதே சமயம் வேகமாகவும் நடந்து படத்தை முடித்துக் கொடுக்கிறார். இதுவரையிலும் எல்லாம் சரிதான்..!
தமிழ்த் திரையுலகம் எதிர்பார்க்காத கதைதான்.. திரைக்கதைதான்.. அமர்க்களமான நடிப்பு.. அசத்தலான ஒளிப்பதிவு.. சுவையான வசனங்கள்.. குற்றம், குறை சொல்ல முடியாத இயக்கம்.. இந்த ஒரு கதையே போதுமே இந்தப் படத்திற்கு..? எதற்கு இரண்டாவதாக ‘உத்தம வில்லன்’ என்ற கதை..?
முன் கதை முழுவதும் ஒருவித சோகம் அடர்பனியால் சூழ்ந்திருப்பதால் அதிலிருந்து ரசிகர்களை ரிலாக்ஸ் செய்ய கமல் எடுத்திருக்கும் கதைதான் இந்த சாகாவரம் பெற்ற உத்தம வில்லனின் கதை.
சாகப் போகும் மனோரஞ்சன், சாகாவரம் பெற்ற உத்தமனாக நடிப்பது எப்பேர்ப்பட்ட முரண்பாடு. இந்த முரண்பாடுகளை தான் உறுதியாய் நம்பும் கடவுள் மறுப்பு, பகுத்தறிவு என்னும் சில கொள்கைகளை வைத்து வலிந்து திணிக்கப்பட்ட ஒரு திரைக்கதையில் கொடுத்திருக்கிறார். இதற்கு ‘தெய்யம்’ என்னும் கேரளாவின் தெய்வீகக் கலையையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார் கமல்..!
தெய்யம் மரபு வழித்தோன்றலில் கூத்தாட்டம் ஆடும் உத்தமன் கமல்ஹாசனை முதலில் ஒரு பாம்பு கடிக்கிறது. இறப்பு சடங்குகளை முடித்து ஆற்றோடு விடுவதற்கு வசதியாக மூங்கிலில் கட்டி வைத்திருக்கும்போது முழிப்பு வருகிறது உத்தமனுக்கு.. இதைப் பார்த்து பயந்து ஓடுகிறார்களாம் சடங்கு செய்ய வந்த அந்தணர்கள்.
தன்னைக் கடிக்க வரும் முதலையிடமிருந்தும் தப்பித்து ஊருக்குள் வரும் உத்தமன், அந்தணர்களின் சாப்பாட்டு பந்தியில் சாப்பிடுவதற்காக அமர்கிறார். பேய்தான் வந்திருக்கிறது என்று நினைத்து அனைவரும் விலகி ஓட.. முந்தைய நாள் பாம்பு கடிக்க காரணமாக இருந்த பாம்பு பிடாரியே உலக்கையால், உத்தமனின் தலையைப் பொளக்க.. மறுபடியும் மயக்கமாகிறார் உத்தமன்.
இப்போதும் ஊர்க்காரர்களால் செத்துப் போனதாக நினைக்கப்பட்ட உத்தமன் பட்டென்று மறுபடியும் உயிர் பிழைக்கிறார். 'சாகாவரம் பெற்றவன் போலிருக்கானே..?' என்கிறார்கள் அந்தணர்கள். இந்தச் செய்தி அந்த ஊரின் கோட்டைவரைக்கும் காது வழியாகவும், வாய் வழியாகவும் பரவுகிறது. ஆக.. ஒரு மூடப் பழக்கத்தை.. பகுத்தறிவுக்கு ஒவ்வாததை அந்தணர்கள்தான் பரப்புகிறார்கள் என்பதை மறைமுகமாக ஊருக்கும், உலகத்துக்கும் சொல்கிறார் திரைக்கதையாசிரியர் கமல்ஹாசன்.
அதே நேரம் அந்த ஊர் ராஜாவை தந்திரமாக கொலை செய்துவிட்டு ஆட்சியைப் பிடிக்கிறார் மந்திரியான முத்தரசன் என்ற நாசர். இறந்து போன ராஜாவின் மகளான கற்பகவல்லி என்னும் பூஜாகுமாரை அடைய நினைக்கிறார் நாசர். பூஜாவோ, அந்த மல்லுக்கட்டலில் நாசரின் ஒரு பக்கக் காதைக் கடித்துக் குதறி துப்பிவிடுகிறார். இதன் பின் பூஜாவைச் சிறைப்படுத்திவிட்டு ஒற்றைக் காதுடனே நாட்டையே நிர்வகித்து வருகிறார் நாசர்.
இவருக்கும் சாகாவரம் பெற்ற உத்தமன் பற்றி தகவல் கிடைக்க.. அவரை இழுத்து வரச் செய்கிறார். சில, பல காமெடி காட்சிகளுக்குப் பின் உத்தமனின் சாகாவரம் நாசருக்கு உண்மையென்று தெரிய.. உத்தமனை அருகில் வைத்துக் கொள்ள விரும்புகிறார்.
ஆனால் பூஜாகுமார் தான் பைத்தியம் போல் நடித்து நாசரிடம் இருந்து தப்பித்திருப்பதை உத்தமனிடம் சொல்ல.. நாசரை கொல்ல… நல்ல மந்திரியான ஞானசம்பந்தனும் இவர்களும் சேர்ந்து கொள்ள ஒரு திட்டம் தீட்டுகிறார்கள்.
ஹிரண்ய கசிபுவின் நாடகத்தை நடத்துகிறார் உத்தமன். அதில் நாசரையும் நடிக்க வைத்து.. உடன் பூஜாகுமாரையும் நடிக்க வைத்து கதையை திருப்பிப் போட்டிருக்கிறார் திரைக்கதை ஆசிரியரான கமல்ஹாசன். நரசிம்ம அவதாரமாக வெளிவரும் நாசரை ஹிரண்ய கசிபுவும், அவரது மகன் பிரகலாதனும் சேர்ந்தே கொல்கிறார்கள். (!!!)
இந்த ஒரு காட்சியோடு நடிகர் மனோரஞ்சன் மயங்கி விழுக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார். எடுத்தவரைக்குமான காட்சிகளை எடிட் செய்து அதை மருத்துவமனையில் காத்திருக்கும் மனோரஞ்சனின் உறவினர்களிடத்தில் போட்டுக் காட்டுகிறார் இயக்குநர் மார்க்கதரிசி..! இப்படியாக படத்திற்குள் படமாக வரும் ஒரு கதையும் முடிவுக்கு வருகிறது..!
ஒரு சோகக் கதையின் உள்ளூடாக இன்னொரு சோகக் கதையும் இருத்தலாகாது என்று யார் சொன்னது..? சொல்பவரும், நடிப்பவரும் கமல்ஹாசனாக இருந்தால் சாத்தியமாகியிருக்கும். ஆனால் இந்த கமல்ஹாசன் வழக்கம்போல தனக்கு தெரிந்தவைகள், தன்னுடைய கொள்கைகள் அனைத்தையுமே குண்டா சட்டியில் போட்டு அரைத்து நமக்குக் கொடுத்திருக்கிறார்.
இது சுவையான துவையலாக இருந்திருந்தால் ரசித்திருக்கலாம். ஆனால் பாதி நகைச்சுவையாகவும், மீதி எடுக்கப்பட்ட விதமே நகைச்சுவையாகவும் இருப்பதால் கொஞ்சம், கொஞ்சம் தேக்க நிலை படத்தின் பிற்பாதியில் ஏற்பட்டிருக்கிறது..!
காதைக் கடித்து துப்புவது.. புலியைப் பார்த்து தப்பிப்பது.. கட்டி வைக்கப்பட்டிருக்கும் பூஜா குமாரிடம் அறிமுகமாகி பின்பு புலியை வைத்து நாடகமாடுவது.. என்பதெல்லாம் சோர்ந்துபோக வைக்கும் அளவுக்கான திரைக்கதைகள்.. கமல்ஹாசனின் எந்த காவியத் திரைப்படத்திலும் பார்த்திராத அளவுக்கு கடைசி ஒரு வரியில் அந்த உத்தமன் கேரக்டரையே பொசுக்கென்று பக்கத்து நாட்டு ராஜாவாக்கியிருக்கிறார் கமல்ஹாசன். கிட்டத்தட்ட ‘தளபதி’ படத்தில் மணிரத்னம் கிளைமாக்ஸில் அடித்த அண்டர்பல்டி போல..!
பிராமணர்களை கிண்டல் செய்திருக்கும்விதம். மற்றும் அவர்கள் சாப்பிடும்விதத்தை இன்வளவு நெருக்கமாக காண்பிக்க வேண்டுமா என்ன..? அந்தக் காலத்தில் பேயாய் வருகிறானே என்று நம்பும் அளவுக்கா மக்கள் முட்டாள்களாக இருந்திருக்கிறார்கள்...? இந்த அரசனையும் முட்டாளாக்கி உத்தமனின் கதை முழுவதுமே முட்டாள்தனமான கதையாகத்தான் தோன்றுகிறது..
இதில் எதற்கு ஹிரண்ய கசிபுவின் கதை..? ‘தெய்யம்’ ஆட்டம் வழி வழியாக வந்திருக்கும் தெய்வீக நடனம். அது ஒரு போதும் நாத்திகத்தை பரப்புரை செய்வதில்லை.. நடிகர் கமல்ஹாசன் என்னும் தெய்வீகக் கலைஞருக்கு தெய்யமும் அத்துப்படி என்பதைக் காட்டுவதற்காகவே இது இடைச்செருகலாக திணிக்கப்பட்டதோ என்று சந்தேகம் வருகிறது.
இந்த தெய்யம் ஸ்டில்ஸ் வெளியானபோது இருந்த பரபரப்பை இரு தரப்பினருமே எதிர்பார்த்தார்கள். மேக்கப் போடுவதற்கே 5 மணி நேரங்கள் ஆகும். வாயை திறக்கவே முடியாது. ஸ்டிரா வைத்துதான் ஜூஸ் குடித்தார் கமல்ஹாசன். 2 மணி நேரம் படுத்தபடியேதான் இருந்தால்தான் இந்த மேக்கப்பை போட முடியும் என்றெல்லாம் ஏகத்திற்கும் ஏற்றப்பட்ட இந்த ‘தெய்யம்’ மேக்கப்பிற்கு படத்தின் முடிவில் கிடைத்திருக்கும் பாராட்டு என்ன..?
படத்தில் இந்தக் காட்சிகள் வரும்போதெல்லாம் நம் கண்கள் திரையைவிட்டு அகலவில்லை என்பது உண்மைதான். ஆனால், யார், யார் எந்த மேக்கப்பில் இருக்கிறார்கள் என்பதை கண்டறியே சில குளோஸப் காட்சிகள் தேவைப்பட்டன. அதை உணர்வதற்குள்ளாக வசனக் காட்சிகளும், பாடல் காட்சிகளும் தொடங்க.. பட்டென்று தொடர்புகள் அறுந்து போயின.
மீண்டும் மேக்கப்புகள் மாறி ஹிரண்ய கசிபு மற்றும் நரசிம்ம அவாதரம் மாறிய களக் கதை வந்தவுடன் அதில் வரும் காமெடி நடனம் மற்றும் பாடல் காட்சிகள், எறும்பு நாசரை கடிப்பது என்றெல்லாம் மிக வேகமாக நகர்ந்த காட்சிகளினால் அந்தத் ‘தெய்யம்’ கலையின் மேக்கப்பையும், அதன் நடன திறமையையும் கண்டறியும் பாக்கியம் நமக்குக் கிடைக்காமலேயே போய்விட்டது.
இதைத் தொடர்ந்து பட், பட்டென்று மாறிய அடுத்தடுத்த ஷூட்டிங் சம்பந்தமான காட்சிகள் இந்த நடனக் கலையை நம் மனதில் நிறுத்தாமல் போயிருப்பதை நாம் இப்போது யாரிடம் போய் சொல்வது....? ‘விஸ்வரூப’த்தில் குறுக்கீடே இல்லாமல் ஆடிய அந்த ‘கதக்’ நடனமும், ‘சலங்கை ஒலி’ திரைப்படத்தில் விநாயகர் சிலை முன்பு தனித்து கமல்ஹாசன் ஆடியிருக்கும் நடனமும், இன்னமும் நம் மனக்கண்ணில் ஆடிக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
அவரவர் கொள்கை அவரவர்க்கு.. ‘கடவுள் இல்லைன்னு சொல்லலை.. இருந்திருந்தால் நல்லாயிருக்குமேன்னுதான் சொன்னேன்..’ என்று பேசினாலே கடவுள் மறுப்புக் கொள்கை தீயாய் பரவும் என்று நினைத்தவர்தான் அண்ணன் கமல்ஹாசன். இதில் ஹிரண்ய கசிபுவின் கதையை தன்னுடைய கொள்கையைப் பரப்ப தோதான ஒரு விஷயமாக கையில் எடுத்திருக்கிறார்.
உண்மையான கதைப்படி நரசிம்ம அவதாரம்தான் ஹிரண்ய கசிபுவை காலி செய்கிறது. இதில் ஹிரண்ய கசிபுதான் நரசிம்ம அவதாரத்தை காலி செய்கிறது. நாசரை ஹிரண்ய கசிபுவாகவும், உத்தமனை நரசிம்ம அவதாரமாகவும் மாற்றி அமைத்திருந்தால் திரைக்கதையின்படி நியாயமானது. ஆனால் கமல் தன்னுடைய நாத்திகக் கொள்கையை பறை சாற்றவே சம்பந்தமே இல்லாமல் ஹிரண்ய கசிபுவே நரசிம்ம அவதாரத்தை கொல்வது போல மாற்றியிருப்பதை பார்த்தால், நிஜமாக ஹிரண்ய கசிபுவே இந்தத் திரைக்கதையை எழுதியிருப்பது போலத்தான் தோன்றுகிறது..!
இப்படி எத்தனை பாடுபட்டாலும் இந்த நாட்டு மக்களிடமிருந்து ஆத்திக உணர்வை அழிக்க முடியாது என்பதை அண்ணன் கமல்ஹாசன் உணர்ந்து கொள்ள வேண்டும். எத்தனை நரசிம்ம அவதாரங்கள் வேண்டுமானாலும் பிறவியெடுக்கட்டும்.. எத்தனை ஹிரண்ய கசிபுக்கள் வேண்டுமானாலும் தோன்றட்டும். ஆனால் பக்த பிரகலாதன்களை ஒருபோதும் இந்தியாவில் அழிக்க முடியாது..!
நடிகர் கமல்ஹாசனின் நடிப்பைப் பற்றி பேசுவதற்கு ஒன்றுமேயில்லை. சாதாரணமான ‘சிங்காரவேலனி’லேயே நடிப்பைக் கொட்டியவர். இதில் சொல்ல தேவையே இல்லை..!
நடிப்பு என்பதே கலைஞர்களின் முகம் காட்டும் வித்தியாசமான உணர்ச்சிகளின் தொகுப்புதான். வருடக் கணக்காக பார்த்திருக்கிறோம்.. எந்தக் காட்சியில் எப்படி நடிப்பார் என்று.. அதில் சிறிதும் தவறவில்லை.. எதிலும் குறையும் வைக்கவில்லை..!
குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், ஆண்ட்ரியா அறையை விட்டு வெளியேறச் சொல்லும்போது ஒரு ஹம்மிங் வாய்ஸோடு சின்னப் பிள்ளை போல முத்தம் கேட்டு அடம் பிடிக்கும் அந்தக் காட்சியில் இப்போதைய இளம் ஹீரோக்களுக்கெல்லாம் சவால் விட்டிருக்கிறார் உலக நாயகன்.
ரொமான்ஸ் காட்சிகளில் தான் இன்னமும் கிங் என்பதை நிரூபித்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா கமலுக்கு..? முதல் பாடலில் அவர் ஆடும் ஆட்டமெல்லாம் முணுமுணுக்க வைக்காத பாடலினால் வீணாகத்தான் இருக்கிறது. இந்த ஆட்டமெல்லாம் கமலுக்கு இந்த வயசுக்கு பின்பு தேவைதானா என்று ஒரு கூட்டம் கேட்கிறது.. அவர் காதில் விழுந்தால் சரிதான்..!
எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சி கொடுப்பதை போல ஆண்ட்ரியாவிடமிருந்து முத்தம்.. தொடர்ந்து ரொமான்ஸ்.. இறுக்கியணைத்து உம்மா.. கிளைமாக்ஸில் மாக்ஸுக்குள் இருந்து முத்தம் கொடுப்பதும், கண்ணடிப்பதுமாக தன்னுடைய ரசிகர்களை கொஞ்சமாவது திருப்தி செய்திருக்கிறார் கமல். ‘வாவ்’ என்று நம்மையும் சொல்ல வைத்திருக்கிறார்.
தன்னுடைய குருநாதரான கே.பி.யிடம் எப்போதும் சாதாரணமாக அவர் பேசுகின்ற டயலாக்குகளையே இதில் பயன்படுத்தியிருக்கிறார். “ஒரு படம் மட்டும் நடிச்சுக்குறேன் ஸார்..” என்று கெஞ்சுகின்ற காட்சியும், கே.பி.க்கு உண்மை தெரிந்தவுடன் அதை கமல் புரிந்து கொண்டு கே.பி.க்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே என்கிற பதட்டத்தோடு பேசுகின்ற தொடர்ச்சியான வசனங்களும் டச்சிங், டச்சிங் சீன்ஸ்.
தன்னுடைய மகனுடன் கிரிக்கெட் பாலை கேட்ச் செய்து பேசியபிடியே தன்னுடைய நோயை அவனிடம் சொல்வது இன்னொரு டச்சிங் காட்சி. முதலில் கமலின் கை வலிக்கும் அளவுக்கு பந்தை வீசியெறியும் மகன், கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பீடை குறைத்து வீசிக் கொண்டே போய் கடைசியாக “கேன்ஸரா..?” என்று கேட்ட பின்பு, “ஆம்” என்ற பதிலைச் சொன்னவுடன் தலை குனிந்து ஓடும் மகனை விரட்டிப் பிடித்தபடியே கமல் பேசும் தொடர்ச்சியான அந்த காட்சிகள் ‘குணா’ படத்தின் ரவுண்டு டேபிள் காட்சிக்கு ஈடானது..! இந்தப் படத்திலிருந்து கமலின் பொக்கிஷமான காட்சிகளில் சேர்க்கப்படும் முதல் தரமான காட்சி இதுவாகத்தான் இருக்கும்..
30 வயது ஹீரோவாக கேன்ஸர் வந்து சாகப் போகும் நடிப்பையெல்லாம் ‘வாழ்வே மாயம்’ படத்திலேயே செய்து காட்டிவிட்டதால் இதில் அதிகமாக முக மொழியை வெளிப்படுத்தாமல் உடல் மொழியை வெளிப்படுத்தியே நடித்திருக்கிறார் கமல். தன்னுடைய மகளை பார்த்தவுடன் பதற்றத்தில் பேசும் உணர்ச்சிபூர்மான காட்சி.. யாமினிக்கு தான் எழுதிய கடித்த்தை மகளிடம் படிக்கக் கொடுத்துவிட்டு அவள் படிக்க படிக்க தன்னுடைய மேக்கப்பை கலைத்தபடியே பேசும் காட்சி... சில முகத்திற்குண்டான குளோஸப் காட்சிகளிலும் அதிகமாக நடித்திருப்பது அவருடைய கண்கள்தான். ஆனால் இதையே நடிப்பென்றால் எப்படி..? இந்தப் படமும் கமல்ஹாசனின் நடிப்புக்கு முழு தீனியை போடவில்லை.
ஆனால் மேக்கப் கலைக்கு ஒரு பிரமாதமான முன்னுதாரணத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் கமல். ‘தெய்யம்’ கலைஞ்ன் வேடத்தில் வரும் அந்த முகத்தில் தெரிவதே இரண்டு கண்கள்தான். அதை வைத்தே ஒளிப்பதிவாளரின் கண் ஓவியத்தில் நடிப்பை வரைந்திருக்கிறார் கமல். கடின உழைப்பு = கமல்ஹாசன் என்பதற்கு இந்தப் படத்தில் வரும் உத்தமன் கேரக்டரும் ஒரு உதாரணம்..!
மற்ற நகைச்சுவை படங்களில் நடித்த நடிப்பைத்தான் இதிலும் இந்த உத்தமன் வேடத்தில் காட்டியிருக்கிறார். பெரிதும் உதவியிருக்கும் வசனங்களினால் பல காட்சிகளில் சிரிப்பூட்டிய அதே சமயம், சில காட்சிகள் எரிச்சலையும் கொடுத்தன என்பதையும் ஒப்புக் கொண்டாக வேண்டும்..!
குளோஸப் காட்சிகளைவிடவும் ‘காதலாம் கடவுள் முன்’ பாடல் காட்சியில் நாசரின் முன்பாக நடந்து சென்றபடியே கமல் காட்டும் நவரசங்களே ரசிக்கக் கூடியவையாக இருந்தது. கிரேஸி மோகன் டைப் வசனம் மூலமாக உத்தமன், கமல்ஹாசனை ரசிக்க முடிந்தாலும் அது அவ்வப்போது வெளியில் சென்று நிஜ உலகத்துக்குள் சற்று நேரம் பிரவேசித்துவிட்டு திரும்பவும் வந்து சேர்வதால் இரண்டுவித மன நிலையையும் நமது ரசிக மனப்பான்மைக்குள் கொண்டு வர முடியவில்லை. இதனால் அதிகம் ரசிக்க முடியாமல் போனது உத்தமனைத்தான்..! உத்தமன் தனியாகவே எடுக்கப்பட்டிருக்கலாம்..!
தன்னுடைய வாழ்க்கையின் முடிவில் மிகப் பெரிய ஒரு சாதனையை படைத்துவிட்டுப் போயிருக்கிறார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். தன்னுடைய சிஷ்யனுக்காக இந்தப் படத்தில் நடித்ததுகூட என்னவொரு பொருத்தம் பாருங்கள். சாகப் போகிற ஹீரோவை வைத்து படமெடுத்த இந்த இயக்குநர் உண்மையில் இறந்து போக.. ஹீரோவாக நடித்தவர் படத்தினை வெளியிட்டிருக்கிறார். என்னவொரு உண்மையான, அழகான முரண்பாடு பாருங்கள்..!
எப்போதும் கமலிடம் உரிமையாக பேசுவதைப் போலவே படம் முழுக்க பேசியிருக்கிறார் கே.பி. கே.பி.யின் இந்தப் பேச்சுகளுக்கு ஊடாக “போடா, வாடா” என்றும் “ராஸ்கல்..” என்றும், “உன்னை மிஞ்ச யாருடா இருக்கா…?” என்கிற டயலாக்குகளெல்லாம் விரவியிருப்பதை பார்த்தால் பெரிசு, சொந்தச் சரக்கையும் சேர்த்தே பேசியிருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது..!
கமலின் நோய் பற்றித் தெரிந்தவுடன் தன்னுடைய சேரில் அவரை உட்கார வைத்து பதட்டத்துடன் அவர் படும்பாடும்.. அதுவரையில் கமலின் மாமனாரின்பேரில் இருந்த ஈகோவினால் அவரைச் சந்திக்க மறுத்து வந்த அந்த குணத்தை நொடியில் மாற்றிக் கொண்டு தனது முதல் சிஷ்யன் என்கிற பதட்டமும் அவருக்குள் தொற்றிக் கொண்டதை மிக இயல்பாக படம் பிடித்திருக்கிறார் இயக்குநர். வெல்டன் ஸார்..
எப்போதும் சினிமாவுடனேயே வாழ்ந்து கொண்டிருந்த கே.பி.யை அச்சுப் பிசகாமல் காண்பிப்பதை போல மருத்துவமனைக்கு டிவிடி பிளேயருடன் வந்து கமல் நடித்த காட்சிகளை போட்டுக் காட்டுவதை போல திரைக்கதை அமைத்திருக்கும் கமலுக்கு ஒரு பூச்செண்டு..!
இவரை போலவே கோபத்தில் இருக்கும் பூர்ணசந்திரராவ் என்ற தயாரிப்பாளராக இயக்குநர் கே.விஸ்வநாத். கே.பி.யை கிண்டலோடு அழைத்து பேசத் துவங்கி.. கடைசியாக “இந்த வீடு என் பேர்லதான இருக்கு..?” என்று கமல் கேட்டவுடன் அமைதியாக வெளியேறும் தன்மையுடன் இவரது கேரக்டர் ஸ்கெட்ச் சிறப்பானது.. பாவம் அந்த ஒரிஜினல் தயாரிப்பாளரான பூர்ணசந்திரராவ்.. பல தமிழ், தெலுங்கு படங்களை தயாரித்த பெரிய தயாரிப்பாளர் அவர்.
சில காட்சிகளே வந்தாலும் தன்னுடைய படபட பேச்சிலும், பி.பி. குறையாத நோயாளியான தோற்றத்திலும் ஊர்வசி அசத்தியிருக்கிறார். யாருக்கு கட்டி என்று எம்.எஸ்.பாஸ்கரிடம் கேட்டுவிட்டு மாடியிறங்கி வந்து அழுகை முகத்துடன் கமலை பார்த்தபடியே தரையில் சரியும் ஊர்வசியின் நடிப்புக்கு ஒரு ஷொட்டு.
எம்.எஸ்.பாஸ்கருக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு மைல் கல்லுதான். ஆனால் உண்மையாக அவரை கண்ணீர்விட வைத்திருக்கிறார்கள்.. “எத்தனை வருஷமா கூடவே இருந்தேன்.. என்கிட்டகூட சொல்லாம மறைச்சுட்டாரே…?” என்கிற கோபத்தில் புலம்புவதும், யாமினியின் கடிதத்தை கமலிடம் கொடுக்காமல் மறைத்துவிட்ட பாவத்தைச் செய்துவிட்டு அழுவதும் அந்தக் காட்சியை கனமாக்கியிருக்கின்றன.
ஆண்ட்ரியாவைவிடவும் பூஜா குமாருக்கு அதிக ஸ்கோப்.. ஆடல், பாடலில் கமலுக்கு ஈடு கொடுத்திருக்கிறார் இந்த 37 வயதான நங்கை. கற்பகவள்ளியாக பவனி வரும் பூஜாவின் முத்துப்பல் வரிசை அழகைக் காட்டும்விதமான வசனக் காட்சிகளும், நடனத்தில் அம்மணி காட்டியிருக்கும் தாராளமான அம்சங்களும் இவரையும் போரடிக்காமல் பார்க்க வைத்திருக்கின்றன. ராகவா லாரன்ஸ் வியாதி கமலுக்கும் தொற்றிக் கொண்டதோ தெரியவில்லை.. புலியைப் பார்த்து பயந்து பூஜாவின் இடுப்பிலும் ஏறி அமர்ந்துவிட்டார் கமல். எப்படித்தான் தாங்கினாரோ தெரியலை..?
ஆண்ட்ரியா என்னும் அழகி இன்னொரு ரகம்.. இது போன்ற முகங்களுக்கு விஸ்வாமித்திரரே தப்ப முடியாது..! குடும்ப மருத்துவராக இருந்தாலும் ஒருவிதத் தொடர்பில் இருப்பதை கூச்சமே இல்லாமல் செய்வதும்.. முத்தம் கொடுத்து வாங்கி,.. ரொமான்ஸில் கமலுக்கு ஈடு கொடுத்திருக்கிறார்.. காரில் பயணிக்கும்போது “இங்க இருக்குற மூணு ஆம்பளைங்களும் இதை வெளில சொல்லக் கூடாது..” என்று சொல்லிவிட்டு, கமலஹாசனை இறுக்க அழைத்துக் கொள்ளும் அந்தக் காட்சிக்காக யாரும் அவரைக் கோபித்துக் கொள்ளப் போவதில்லை. அசத்தல் எக்ஸ்பிரஷன்..!
நாசர் எப்போதும் போலவே.. தன்னுடைய மகன் ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோதும் இந்த நகைச்சுவை காட்சிகளில் வந்து நடித்திருக்கிறார். பிறவிக் கலைஞன். எப்படி முடிந்தது இவரால்..?
தொடர்ச்சியான காமெடி வசனங்களினாலும், டயலாக் டெலிவரியினாலும் சிரிக்க வைத்திருக்கிறார். ரசிக்க வைத்திருக்கிறார். ஒரு முட்டாள் அரசன் இப்படித்தான் இருப்பான் என்பதற்கு இந்தக் கேரக்டரும் ஒரு உதாரணமாகிவிட்டது..!
இன்னும் நிறைய நட்சத்திரங்கள் ஜெயராம், கு.ஞானசம்பந்தன், சித்ரா லட்சுமணன், வையாபுரி, அஜய் ரத்னம் ஆகியோர் இடையிடையே கிச்சு கிச்சு மூட்டுவதை போல வந்து சென்றிருக்கிறார்கள்.
இதில் தனித்திருப்பவர் கமலின் மகளாக வரும் பார்வதி மேனன். முதல் முறையாக அப்பாவை பார்க்க வந்து வெறுப்புடன் பேசும் காட்சியில் மலையாளப் பொண்ணுகள் சோடை போனதில்லை என்பதை நிருபித்துவிட்டார். அவருடைய கேரக்டரின் நியாயம் புரியும் அளவுக்கு அவருடைய முகத்தின் எக்ஸ்பிரஷன்களும் இருந்தன. கடைசியில் இவரும் திருந்திவிட்டார் என்பதை அதிவேக திரைக்கதையினால் நாமளே புரிந்து கொண்டு பார்க்க வேண்டியதாகிவிட்டது..!
ஷம்ஷத்தின் ஒளிப்பதிவு.. ஜிப்ரானின் பின்னணி இசை இரண்டுமே படத்திற்கு மிகப் பெரிய பக்க பலம்தான்..! உண்மையில இளையராஜா இசையமைத்திருக்க வேண்டிய படம். ஏன் கமல் அதைச் செய்யவில்லை என்று தெரியவில்லை. பாடல்கள் அனைத்துமே வழக்கம்போல ஒரு முறை மட்டுமே கேட்பது போல இருந்தது.. தமிழ்ச் சினிமாவிற்கு பிடித்த சாபக்கேடாகிவிட்டது இது..!
கலை இயக்குநர் லால்குடி இளையராஜாவுக்கு ஒரு சபாஷ்.. உத்தமன் கதையில் அவருடைய கை வண்ணத்தில் ஊறு இல்லாமல் காட்சிகளை ரசிக்க முடிந்திருக்கிறது. பாடல் காட்சிகளில் எங்கே பிடித்தார்கள் லொகேஷனை என்று கேட்கவும் வைத்திருக்கிறார்கள்..! பூஜா குமாருக்கு அதிக டிரெஸ் கொடுக்காமல் பார்த்துக் கொண்டதற்கும், ஆண்ட்ரியாவுக்கு குறைத்துக் கொடுக்காமல் அப்படியே விட்டுவைத்ததற்காக காஸ்ட்யூம் டிஸைனர் கவுதமிக்கு நமது பாராட்டுக்கள்..!
படத்தின் பட்ஜெட் நிச்சயம் 40 கோடியை தாண்டியிருக்கலாம். அந்த அளவுக்கு உழைப்பும் படத்தில் இருக்கிறது..! கமல் போன்ற நடிகரையெல்லாம் இயக்குவதென்பது கரும்புக் காட்டுக்குள் யானையை மேய்ப்பதற்கு சமம்.. இயக்குநர் ரமேஷ் அரவிந்தின் இயக்கத்தில் குறையில்லை. கமலை அறிமுகப்படுத்தும் முதல் காட்சியிலேயே இத்தனை கூட்டத்தைக் கூட்டி அதற்கு நடுவில் வரவழைத்து.. ஒரு ஹிப்பை உயர்த்தியிருக்கிறார். இயக்கத்தில் கமலின் கை வண்ணம் நிச்சயம் இருந்திருக்கும்.. இது போன்ற பெரிய நடிகர்களின் படங்களெனில் இயக்குநரின் தனித்திறமையைக் காண வேறொரு தனி படங்கள் அவசியம் தேவை.. இயக்குநர் ரமேஷ் அரவிந்திற்கு நமது பாராட்டுக்கள்..
ஒட்டு மொத்தமாக ஒரு திரைப்படம் தரும் ‘ஐயோ கொன்னுட்டாங்களே’ என்ற பீலிங்கை இந்தப் படம் இறுதியில் தராமல் ஏமாற்றியது நமது தவறல்ல..
ஆனாலும் இறுதிக் காட்சியில் வழக்கமான தமிழ்ச் சினிமாக்கள்போல ஒப்பாரி காட்சிகளெல்லாம் இல்லாமல் ஒரு சின்ன ஷாட் மூலமாகவே ‘அதை’ உணர்த்திவிட்டு மனோரஞ்சனை நம் மனதில் நிலை நிறுத்திய இயக்குநருக்கு நமது நன்றி..!
உலக நாயகன் கமல்ஹாசனின் படங்களில் தரமான படங்கள் லிஸ்ட்டில் இது நிச்சயம் இடம் பெறும் என்றாலும், எந்த வரிசையில் என்றால் சொல்ல முடியவில்லை..!