பெப்சி-தயாரிப்பாளர் சங்க மோதல் - திசை திரும்புகிறது..!

31-01-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வரப் போகும் அஷ்டலட்சுமியை எதிர்பார்த்து வட்டிக்கு வாங்கிப் படமெடுத்து வந்த தயாரிப்பாளர்கள் ஒரு பக்கம்.. கிடைக்கின்ற பணத்தை அன்றாடச் சோத்துக்கு பயன்படுத்திவிட்டு நாளைய பொழுதை உழைப்பதற்காக மட்டுமே கைவசம் வைத்திருக்கும் தொழிலாளர்கள் மறுபக்கம்.. இப்படி இரண்டு பேரும் கலக்கத்தில் இருக்க.. திரையுலகத்தின் அறிவிக்கப்படாத ஸ்டிரைக் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது..!


பாரதிராஜா கலைஞர் டிவிக்காக தான் எடுத்து வரும் சீரியலில் பணியாற்றும் பெப்ஸி மற்றும் உள்ளூர் தொழிலாளர்களை வைத்தே அன்னக்கொடியும், கொடி வீரனும் படத்தை தேனியில் இயக்கிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு மொட்டை போட்டிருக்கும் மேக்கப்பில் படம் எடுத்து வரும் பாலா, கன்டினியூட்டி போயிரும் என்ற ஒரு வார்த்தையில் தப்பித்து ஷூட்டிங்கை நடத்தி வருகிறார்..!

நேற்றோடு 23 திரைப்படங்களின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு அமைதி காக்கப்பட்டு வருகிறது. பெப்ஸி அலுவலகத்திற்கு பெப்ஸி தொழிலாளர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது..! யாருக்கும் பதில் சொல்ல முடியவில்லை.. அதிகாரமும், பண பலமும்தான் தொழிலாளர்களை தொழிலாளர்களாவே வைத்திருக்கிறது என்பதற்கு இதையும் ஒரு உதாரணமாகச் சொல்ல்லாம்..!

நேற்றைக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அனைவரையும் முந்திக் கொண்டு தொழிலாளர் நலத் துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு அளித்துள்ளனர். பெப்ஸி நிர்வாகத்தினரோ அம்மாவின் மீது முழு நம்பிக்கை வைத்து உண்ணாவிரதம் இருக்க இடம் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்..!

இடையில் தயாரிப்பாளர்களுக்கு முழு அளவில் ஆதரவு தரும் இயக்குநர் சேரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதன் முழு விபரம் இங்கே :

நியாயத்தின் கதவுகளைத் திறந்து பாருங்கள்.. - இயக்குனர் சேரன்


“சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை - பாரபட்சமான பொருளாதார நிலைமைகளை மாற்றியமைத்து உழைப்போர் சுரண்டப்படுவதைத் தடுக்க வேண்டும்” என்ற பெருநோக்கில் ‘உலகத் தொழிலாளர்களே.. ஒன்று கூடுங்கள்..” என்று சமூக மாற்றத்திற்கான விஞ்ஞானத்தை விதைத்தவர் மார்க்ஸ்.

சமூக மறுமலர்ச்சிக்கு, புதிய தலைமுறையின் விடியலுக்கான அந்தப் பாதையில் விளைந்தது தான் தொழிற்சங்கங்களும், தொழிலாளர் அமைப்புகளும். பாடுபடும் தொழிலாளர்களுக்கு நியாயமான, நேர்மையான ஊதியத்தைக் கொடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், நியாயமான, நேர்மையான ஊதியம் எது..? என்பதில்தான் இப்போது தயாரிப்பாளர் சங்கத்திற்கும் - தொழிலாளர் சம்மேளனத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னை.

திரைப்படத் தொழிலாளர் சம்மேளம் முன்வைக்கும் ஊதிய உயர்வை, தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏன்?

‘லாபத்தில் பங்கு' என்பதுதான் நியாயம். தொழிலாளர்களைச் சுரண்டி முதலாளிகள் கொழுத்துத் திரிய, தொழிலாளர்களோ, கஷ்டத்திலும், வறுமையிலும் வாடிச்செத்ததைக் கண்டுதான் சோஷியலிசம் - கம்யூனிசமாக உருப்பெற்றது. மிகப்பெரும் லாபமீட்டும் முதலாளிகள், தொழிலாளர்களுக்கு மிகச் சொற்பத் தொகையை ஊதியமாகக் கொடுத்தால், அதை எதிர்க்கும் முதலணியில் முதல் ஆளாக நிற்பது என் கடமையும், உரிமையும்.

இன்றைய இந்தியா முதலாளிகளின் கைப்பாவையாகத்தான் இருக்கிறது. பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளின் ஊதுகுழலாகத்தான் சமூகத்தின் ஒட்டு மொத்த அமைப்பும் விளங்குகிறது. தொழிலாளிகள் அற்ப - சொற்ப சம்பளத்துக்கு தங்களது வியர்வையையும், உதிரத்தையும் சிந்தி முதலாளிகளை, பெரு முதலாளிகளாகவும், பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். கண்டிப்பாக இது மாற வேண்டும்.

கடந்த ஐந்தாண்டுகளில் புற்றீசல் போல பெருகி நிறைந்திருக்கும் அயல்நாட்டுநிறுவனங்களுக்கு இன்றைய நம் வாழ்க்கையை அடகு வைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் என்ன சாப்பிட வேண்டும்?என்ன குடிக்க வேண்டும்? எப்போது தூங்க வேண்டும்? எங்கு வசிக்க வேண்டும்? என்று சகலத்தையும் பன்னாட்டு நிறுவனங்களே தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் குறைந்த ஊதியம் பெற்றுக் கொண்டு உழைக்க, அவர்களோ கொள்ளை லாபத்தில் கொழிக்கிறார்கள். இதெல்லாம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

ஆனால், இன்றைய திரைப்படத்துறை குறிப்பாகத் தமிழ் சினிமா என்ன நிலைமையில் இருக்கிறது? திரைப்படத் தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்துக் கொண்டு, தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியத்தைக் கொடுக்கிறார்களா? பெருவாரியான லாபத்தை எடுத்துப் பதுக்கி வைக்கிறார்களா? கோடிகளில் புரள்கிறார்களா? என்ற கேள்விகளுக்கு, ஒரே பதில்.. இல்லை! என்பதுதான்.

முன்னொரு காலத்தில் தமிழ் சினிமா ஆரோக்யமானதாக இருந்தது. திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என்று அத்தனை பேரும் லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர். சினிமாப்படம் தயாரிக்க நான், நீ என்று ஆளாளுக்கு ஓடி வந்தனர். ஆனால் இன்றென்ன நிலைமை?

ஏராளமான திரையரங்குகள் திருமண மண்டபங்களாகவும், கொடவுன்களாகவும், வர்த்தக நிறுவனங்களாகவும் மாறி விட்டன. திரையரங்குக்கு உரிமையாளராக ஆக வேண்டும் என்ற நிலைமை மாறி, இருக்கிற தியேட்டரை விற்றால் போதும் என்றிருக்கிறது. திரைப்படங்களை வாங்கி, விற்கும் வினியோகஸ்தர்களும் அருகி விட்டனர். சரி.. திரைப்படங்களைத் தயாரிக்கவாவது யாரேனும் வருகிறார்களா என்றால், அதுவும் இல்லை.

பல முன்னணித் தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுப்பதையே கைவிட்டு விட்டு அஞ்சிக் கொண்டிருக்கின்றனர். படமெடுக்கும் மிகக் குறைந்த சிலரும், நஷ்டத்தை மட்டுமே சம்பாதிக்கின்றனர். கடந்த ஆண்டில் முதல் படத்தைத் தயாரித்த எத்தனை தயாரிப்பாளர்கள் மீண்டும் தயாரித்தார்கள்? அப்படித் தயாரித்த எத்தனை தயாரிப்பாளர்கள் வெற்றியை அல்லது லாபத்தைக் கண்டார்கள்? கடந்த ஆண்டில் புதிதாகத் துவங்கப்பட்ட திரையரங்குகள் எத்தனை? என்று கணக்கெடுத்தாலே போதும், இதற்கெல்லாம் நமக்கு விடை கிடைத்து விடும்.
புவி வெப்பமயமாதல் அதிகரித்து, ஓசோன் மண்டலத்தில் துளை பெரிதாகிக் கொண்டிருப்பதைப் போல இன்னொரு உண்மை; தமிழ் சினிமா நசிந்து கொண்டிருக்கிறது. கோமா ஸ்டேஜுக்கு சென்று கொண்டிருக்கிறது. திருட்டு வி.சி.டி.,க்கள் தொடங்கி, சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை, வினியோக உரிமை என்று சகல விஷயங்களிலும் ஒவ்வொரு தயாரிப்பாளரும் நசுக்கப்பட்டு, செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கின்றனர். தற்கொலை முயற்சிக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இன்றைக்கு ஒரு சினிமாவைத் தயாரிப்பது லாபமான செயலா? என்று ஒரு குழந்தையைக் கேட்டால் கூட அது மறுத்து விடும். ஒரு ஆண்டில் ஏறத்தாழ நூறு திரைப்படங்கள் வெளியாகின்றன. அதிகபட்சம் பத்து படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைமைதான். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் தொன்னூறு சதவீத தயாரிப்பாளர்கள் தங்களது வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும், வெளியாகும் நூறு படங்களில் தொன்னூறு சதவீத படங்கள் சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்கள் தான். பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கும் படங்கள் பத்து சதவீதத்திற்கும் குறைவுதான். லாபத்தில் தானே பங்கு கொடுக்க முடியும்? நஷ்டத்தில் பங்கேற்க யாரும் தயாராக இல்லை. ஒரு படம் தோல்வியடைந்து விட்டது; போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை என்று கூறி கொடுத்த சம்பளத்தைத் திருப்பிக் கேட்க முடியுமா? அதாவது, சினிமா - மற்றைய தொழில்களைப் போலல்லாது ஒரு சூதாட்டமாகிவிட்ட இன்றைய சூழலில் தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தை நூறு சதவீதம் உயர்த்திக் கேட்பது எந்த நியாயம்?

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சம்மேளனத்தில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கமும், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கமும் அங்கம் வகிக்கின்றன. தற்போதைய தொழிலாளர் விதிப்படி மேற்படி சங்கங்களைச் சேர்ந்தவர்களும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தையே பெற வேண்டும். ஆனால், எதார்த்தம் என்ன? ஒரு படம் ஓடினால் மட்டுமே ஒரு இயக்குனர் தன்னுடைய சம்பளத்தை உயர்த்திக் கொள்ள முடியும்.

ஒளிப்பதிவாளர்களும், படத்தின் பட்ஜெட்டிற்கேற்ப மட்டுமே சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஒருவர், அடுத்ததாக சிறிய பட்ஜெட் படத்தில் பணியாற்ற நேர்ந்தால், தன்னுடைய சம்பளத்தைக் குறைத்துத்தான் வாங்குகிறார்.

இந்த நியாய, தர்மங்கள் - தொழிலாளர்களுக்கும் பொருந்த வேண்டும் அல்லவா! நூறு கோடி, ஐம்பது கோடியில் எடுக்கப்படும் பெரிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் சரி.. ஒரு கோடி, இரண்டு கோடிகளில் எடுக்கப்படும் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி.. அவர்களுக்கு ஒரே ஊதியம் தான். எடுக்கப்படும் பெரிய பட்ஜெட் படங்களோ பத்து சதவீதம்தான். இது பாரபட்சமான அணுகுமுறை.

பெரிய பட்ஜெட் படங்களில் தொழிலாளர்கள் சம்பளத்தை உயர்த்தி வாங்கிக் கொள்ளட்டும். அதுபோல, சிறிய பட்ஜெட் படங்களில் அவர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்து வாங்கிக் கொள்ளட்டும் என்பது தான் ஒரு இயக்குனராக, ஒரு தயாரிப்பாளராக நான் முன் வைக்கும் கருத்து.

சினிமா நலிந்து வரும் இன்றைய காலகட்டத்தில் அதை மேலும் நலியச்செய்து திரைப்படங்களைத் தயாரிக்கவே யாரும் முன்வராத ஒரு சூழலைத் திரைப்படத் தொழிலாளர்களே ஏன் செய்ய வேண்டும்? திரைப்படம் எடுக்காத ஊரில் அவர்கள் என்ன வேலை செய்ய முடியும்?

இன்றைக்கு ஒரு சிறிய பட்ஜெட் படத்தை ஒருவர் தயாரித்தால், பட்ஜெட்டில் பாதியைத் தொழிலாளர்களுக்குத்தான் தர வேண்டியிருக்கிறது. அதாவது, ஐம்பது லட்சத்தில் எடுத்து முடிக்க வேண்டிய ஒரு படத்தை, தொழிலாளர் சம்மேளன விதிகளுக்கு உட்பட்டு எடுத்தால் ஒரு கோடி ரூபாயில்தான் முடிக்க முடியும். அத்தனை நெருக்கடிகளை, சட்ட விதிகளை சம்மேளனம் முன் வைக்கிறது.

அதாவது, படத்துக்கு தேவைப்பட்டாலும், படாவிட்டாலும் ஃபெப்சியின் 24 துறைகளைச் சேர்ந்த அனைவரையும் வேலைக்கு வைக்க வேண்டும். குறைந்தது இத்தனை பேரை வேலைக்கு வைக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறது. இப்படி காசு கொடுத்து தயாரிப்பாளர்கள் அழைத்து வரும் தொழிலாளர்கள், படப்பிடிப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதுதான் நியாயமா? இதுதான் தொழில் தர்மமா? வேலைக்கே ஆள் தேவைப்படாத போது, வேலைக்கு ஆள் வைக்கக் கட்டாயப்படுத்தி, அவர்களுக்குச் சம்பளம் வாங்கித்தருவது வழிப்பறிக் கொள்ளையாகத் தெரியவில்லையா?

தெரிந்தே நசுக்கும் இதுமாதிரியான சட்டங்கள், தயாரிப்பாளர்களை மட்டுமல்ல, படைப்பாளியான இயக்குனர்களையும் விட்டுவிடுவதில்லை. அவர்களுடைய சிந்தனைக்கு இடையூறு செய்வதின் மூலம், படத்தின் தன்மையும் பாதிக்கப்படுகிறது. ‘என்னிடம் இருக்கும் ஒரு ஐம்பது லட்சத்தில் ஒரு திரைப்படம் எடுத்து விட முடியும்,' என்று எந்த இயக்குனரும் நினைக்க முடியாது. ஃபெப்ஸி தொழிலாளர்களை வைத்து பணி செய்யாவிட்டால், அந்தப் படமே திரைக்கு வர முடியாது.

இதுபோன்ற நெருக்கடிகளால், ஏகாதிபத்தியச் சிந்தனைகளால் தமிழ்த் திரையுலகமும், சினிமா ரசிகர்களும் இழந்து விட்ட சிறந்த படைப்புகள் ஏராளம்.. சிறந்த இயக்குனர்கள் ஏராளம். சினிமாவின் காட்சித்தன்மை இன்று மாறிவிட்டது. திரையரங்கிற்குச் சென்று மட்டுமே ஒரு திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற நிலைமை இன்று இல்லை. டிஜிட்டல் சினிமா விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

ஒரு லட்ச ரூபாய்க்கும் குறைந்த செலவில் டிஜிட்டல் கேமராவை வாங்கிவிட்டால் யார் வேண்டுமானாலும், படத்தை எடுத்துவிட முடியும். தொழிலாளர் நலன் என்ற போர்வையில் நிலவும் ஏகாதிபத்தியச் சட்டங்கள் ஒழிந்து விட்டால், ஆண்டொன்றுக்கு ஆயிரம் படங்கள் வெளியாகும். அதில் ஐந்நூறுக்கும் மேற்பட்டவை வெற்றி பெறும். அப்படி ஒரு சூழல் உருவாகும் போது, இப்போது சம்மேளனத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

திறமை இருந்து, தொழில்நுட்பம் தெரிந்திருந்தால் சில லட்சங்களில் ஒரு திரைப்படத்தை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். ஆனால், அதுவே, ஃபெப்ஸி சட்ட - திட்டங்களுக்கு உட்பட்டு படமெடுக்க வேண்டுமென்றால் அது ஒரு கோடி ரூபாய்க்குச் சற்றும் குறையாது. இது போன்ற எதேச்சதிகார, எதார்த்த நிலைமைகளுக்கு முற்றிலும் மாறான, தமிழ்த்திரையில் பல நல்ல படைப்புகளும், இயக்குனர்களும் உருப்பெற்று விடாமல் தடுக்கும் அரண்களைத் தகர்க்க வேண்டிய நேரமிது!

படைப்பாளிகளையும், படைப்புகளையும் சிறை வைக்காதீர்கள். சினிமாவை ஒரு குடத்தில் மூடி வைக்காதீர்கள். அதை எல்லோருக்கும் திறந்து விடுங்கள். அது கங்கையாகப் பெருகி ஓடும். தேசத்தின் தாகத்தைத் தீர்க்கும். உலகெங்கும் தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கும். தமிழ் சினிமா பீடுநடை போட்டு, இழந்த பெருமையை மீட்டெடுக்கும்.

தமிழ் இயக்குனர் சேரன்,

(எந்த நிலையிலும் ஒரு இயக்குனராக - என்றும் கனவுகளோடும் வாழும் தொழிலாளி)

சேரனின் இந்த அறிக்கை தற்போது இயக்குநர்கள் சங்கத்திலும் புயலைக் கிளப்பியுள்ளது. மாதச் சம்பளம் பெறும் இயக்குநர்கள் சங்கம் தங்களது தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வை உயர்த்தித் தரும்படி கேட்டிருந்தும் தயாரிப்பாளர்கள் சங்கம் இதற்கு பதில் அளிக்கவில்லை. இயக்குநர்கள் சங்கத்தின் துணைத் தலைவரான (இருந்த-இருக்கும்) சேரன், இதுவரையில் அதற்காக ஒரு ஸ்டெப்கூட எடுக்காமல் ஊதிய உயர்வை எப்படி எதிர்க்கலாம்.. என்ற கொதிப்புகள் சங்கத்திற்குள்ளும் வெடித்துவிட்டது..!

மேலும், படம் தோல்வியடைந்தால் படத்தில் கோடி, கோடியாக சம்பளம் வாங்கியவர்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்கலாமே..? படம் எவ்வளவு வியாபாரம் ஆகிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதன் பின்பு நடிகர், நடிகைகள் தங்களது சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாமே..? படம் வெற்றியடைந்தால் அதில் பங்கு வாங்கிக் கொண்டும், தோல்வியடைந்தால் ஒரு குறைந்தபட்சத் தொகையை நடிப்புக்காக வாங்கிச் செல்ல்லாமே.. இதை சேரன் ஏன் குறிப்பிடவில்லை. கேவலம், சில ஆயிரங்கள் சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள்தான் பணத்தைத் திருப்பித் தர வேண்டுமா? என்றெல்லாம் குமரன் காலனி தெருக்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இந்த நிலையில், தினச் சம்பளம் பெறும் சங்கங்களின் ஊதிய உயர்வு விபரம் வெளியான நிலையில் துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் நிலை பற்றி தெரியவில்லையே என்ற கேள்விக்கு பதில் சொல்லும்விதமாக இயக்குநர்கள் சங்கச் செயலாளர் அமீர் தலைமையில் கூடிய செயற்குழு உறுப்பினர்களில் ஒரு அணி தாங்களே தங்களுக்கான புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயித்து அவசரமாக வெளியிட்டுள்ளார்கள்.


இயக்குநர் மற்றும் இணை, துணை, உதவி இயக்குநர்களின் புதிய ஊதிய விகிதம் பற்றிய தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் அறிக்கை

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமும், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் நிர்வாகிகளோடு பேசி, புதிய ஊதியங்கள் மற்றும் பணிகளுக்கான வரைமுறைகள் குறித்து 2008 ஏப்ரல் 10-ம் தேதி கையெழுத்திட்டு கொண்ட ஒப்பந்தம் முடிந்து காலாவதியாகிவிட்டபடியால் எங்கள் சங்க இயக்குநர்கள் மற்றும் இணை, துணை, உதவி இயக்குநர்களின் நலன் கருதிய ஊதிய உயர்வை உயர்த்தி முறைப்படி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மூலமாக தயாரிப்பாளர் சங்கத்தில் 2011 மே 27 அன்று கொடுத்தும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஒரு வருட காலத்திற்கு மேலாக்க் காத்திருந்தும் எந்தத் தீர்வும் எட்ட முடியாத நிலையில் தற்காலச் சூழலுக்கு ஏற்றாற்போல் இயக்குநர்கள் மற்றும் முக்கியமாக இணை, துணை, உதவி இயக்குநர்களின் நலன் கருதி, புதிய ஊதிய உயர்வை நாங்கள் அறிவிக்கிறோம். 

தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாத நிலையில் திரைப்படத்தில் சிக்கல் ஏற்படும்போது அப்படத்தின் ஊதியமாக இயக்குநருக்கு 10 லட்சம் ரூபாய் தரப்பட வேண்டும்.

இதே நிலை இணை, துணை, உதவி இயக்குநர்களுக்கு ஏற்படும்பட்சத்தில்

இணை இயக்குநருக்கு - 4 லட்சம்
துணை இயக்குநருக்கு - 3 லட்சம்
முதல் நிலை உதவி இயக்குநருக்கு - 2 லட்சம்
இரண்டாம் நிலை உதவி இயக்குநருக்கு - 1 லட்சம்

என தரப்படுதல் வேண்டும்.

இயக்குநர் மற்றும் இணை, துணை, உதவி இயக்குநர்கள் படப்பிடிப்பில் பணி புரியும் நேரங்களில் கீழ்க்கண்டவாறு தினப்படி வழங்கப்பட வேண்டும்.

நாளொன்றுக்கு..

இயக்குநர் - 1000 - 2000
இணை இயக்குநர் - 500 - 600
துணை இயக்குநர் - 400 - 500
முதல் நிலை உதவி இயக்குநர் - 300 - 400
இரண்டாம் நிலை உதவி இயக்குநர் - 200 - 300

திரைப்பட வேலையாக அலுவலகம் வரும் நாட்களிலும் முன் தயாரிப்பு மற்றும் பின் தயாரிப்பு பணிகளில் இயக்குநர் மற்றும் இணை, துணை, உதவி இயக்குநர்களுக்கு தினப்படியாக மேற்குறிப்பிட்டுள்ள தொகையில் 50 சதவிகிதம் வழங்கப்பட வேண்டும்.

ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கும் ஊதியம் இணை, துணை, உதவி இயக்குநர்களுக்கு படக் கலவைக்கு முன்பாக நிலுவையின்றி வழங்கப்பட்ட வேண்டும்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் எக்காரணம் கொண்டும் ஒப்பந்தம் செய்து கொள்ளாமல் எந்த்த் திரைப்படத்திலும் வேலை செய்யக் கூடாது. ஒப்பந்த்த்தின் நகல் இயக்குநர் சங்கத்தில் ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.

திரைப்படத்தின் இயக்குநரே கதை, திரைக்கதை, உரையாடலுக்கு பொறுப்பேற்கும்போது கதை, திரைக்கதை, உரையாடலுக்கென்று தனி ஒப்பந்தம் இயற்றிக் கொள்ள வேண்டும்.

இனிமேல் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழுக்காக, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திடமிருந்து குறிப்பிட்ட திரைப்படத்தின் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அதன் பிறகே தயாரிப்பாளர் சங்கம், படத் தணிக்கைக்காக தடை இல்லாச் சான்றிதழை தணிக்கை அலுவலகத்திற்கு வழங்க வேண்டும்.

தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்டு ஆகிய இடங்களில் திரைப்படங்களின் தலைப்பை பதிவு செய்வதை போன்று இனி வரும் காலங்களில் நமது உறுப்பினர்களின் நலனை கருதி இயக்குநர்களின் சங்கத்திலேயே படத் தலைப்பை பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் இயக்குநர்கள் அமீர், ஜனநாதன், சமுத்திரக்கனி, எஸ்.எஸ்.ஸ்டான்லி, பிரபு சாலமன், எம்.தம்பிதுரை, பாலசேகரன், கமலக்கண்ணன், முகமது அஸ்லாம், ஜெகதீசன், ஐந்து கோவிலான் போன்றோர் கலந்து கொண்டனர்.

இப்போது அமீர் தலைமையிலான குழு சொல்லியிருக்கும் இந்த ஊதிய உயர்வு சென்ற தேர்தலின்போதே இந்தக் குழுவினர் முன் வைத்ததுதான். இப்போது அறிவித்திருக்கிறார்கள். ஊதிய ஒப்பந்தம் இல்லாமல் இனிமேல் எந்த இயக்குநரும் பணியாற்றக் கூடாது என்பது புதிய விதி. அந்த ஊதிய ஒப்பந்தத்திலும் அறிமுக இயக்குநருக்கே சம்பளம் 10 லட்சம் என்று அறிவித்திருப்பது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் நடைமுறையில் சாத்தியமில்லை என்கிறார்கள் சில உதவி இயக்குநர்கள்..!

35, 40, 50, 60, 70, 80, 90 லட்சங்களில்கூட குறைந்த பட்ஜெட் செலவில் படமெடுக்கிறார்கள். இந்த புதிய ஊதிய ஒப்பந்தப்படி பார்த்தால் இயக்குநர்கள் டீமிற்கே 20 லட்சம் ரூபாய் செலவாகிறது.. இதற்கு யார் ஒத்துக் கொள்வார்கள்..? ஒத்துக் கொள்ளாவிட்டால் நீ இயக்காதே.. அவர்கள் படம் தயாரிக்க வரக் கூடாது என்பதுதானே பொருள்.. அப்படியெனில் குறைந்த பட்ஜெட் தயாரிப்பாளர்களையே பீல்டில் இருந்து வெளியேற்றும் முயற்சி இது என்று ஆதங்கப்படுகிறார்கள் சின்ன பட்ஜெட்  தயாரிப்பாளர்கள்.

சென்ற வருடம் வெளியான 142 தமிழ்த் திரைப்படங்களில் 10 படங்கள் மட்டுமே வெற்றிக் கோட்டை எட்டியுள்ளன. அதாவது போட்ட காசு திரும்பக் கிடைத்திருக்கிறது. மீதமுள்ளவைகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு சம்பளமாக சில ஆயிரங்களைச் செலவிட்டிருந்தாலும், தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் நஷ்டத்தைத்தான் கொடுத்திருக்கின்றன. 


இந்த 142 சினிமாக்களில் கண்டிப்பாக 100 படங்கள் லோ பட்ஜெட் படங்கள்தான். அதாவது 1 கோடிக்கும் குறைவான தொகையில் உருவான படங்கள்தான்..! இந்தப் படங்களிலும் பல வகைகள் உண்டு. கில்மா டைப் படங்களெனில் 30 அல்லது 35 லட்சத்தில் 10 பிரிண்டுகள் மட்டும் போடப்பட்டு ரிலீஸ் ஆகிவிடும். இதற்கு மேலான படங்களில் பலவற்றில் பணம் இன்வெஸ்ட் செய்பவர்களின் மகனோ, அல்லது மகளோ அதில் நடித்திருப்பார்கள். பணம் உள்ளவர்கள் பணம் கொடுத்து தாங்களே நடித்திருப்பார்கள். தங்கள் முகம் திரையில் தெரிய வேண்டும் என்பதற்காகவே படம் எடுப்பவர்களும் உண்டு. உதாரணம், சென்ற ஆண்டு கடைசியில் வெளியான கருத்தக்கண்ணன் ரேக்ளா ரேஸ், வழிவிடு கண்ணே வழிவிடு, மற்றும் சென்ற வாரம் வெளியான தேனி மாவட்டம் படங்களை சொல்லலாம்.

இவர்களெல்லாம் இயக்குநர்களுக்கு 1 அல்லது 2 லட்சத்தை சம்பளமாகக் கொடுத்துவிட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைந்த பட்ச நாட்களில்(30 அல்லது 40 நாட்களுக்குள்) குறைந்த பட்ச தொழிலாளர்களை வைத்து படத்தை எடுத்து முடிப்பார்கள். இவர்களின் மொத்தத் தயாரிப்புச் செலவே 1 கோடிக்குள்தான் இருக்கும்..! இவர்களை போன்றவர்கள்தான் இடைநிலை தயாரிப்பாளர்கள். இவர்களால்தான் புதிய புதிய இயக்குநர்கள் அறிமுகமாகிக் கொண்டேயிருக்கிறார்கள். 

அமீர் தெரிவித்திருப்பதை போன்ற ஊதிய ஒப்பந்தத்தில் இது போன்ற எந்த லோ பட்ஜெட் படமும் தயாரிக்கவே முடியாது.. நிச்சயமாக தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். இயக்குநர்களுக்கு 20 லட்சம் கொடுத்துவிட்டு படத்தில் நடிக்கவிருப்பவர்களுக்கு 5 லட்சம் என்று பட்ஜெட் போட முடியாது..! இப்போது அறிமுக இயக்குநர்களுக்கு அதிகமான லோ பட்ஜெட் படங்களில் 1 லட்சம் ரூபாய்தான் சம்பளம். இதற்கு மேல் யாரும் கொடுப்பதில்லை.

பெரிய பேனர் என்றால்தான் தங்களது கம்பெனியின் பெயருக்காக 2 அல்லது 3 லட்சம் தருகிறார்கள். இது இயக்குநருக்கு மட்டும். இயக்குநர்கள் டீமிற்கு என்று பார்த்தால் தற்போது சங்கம் வழி சம்பளம் வருவதால் மட்டுமே நியாயமான சம்பளம் பலருக்கும் கிடைத்து வருகிறது. இதனிலும் குறைத்து துணை இயக்குநர்கள் தங்களது விருப்ப்ப்படி கடிதம் மூலம் ஒப்புதல் அளித்து குறைவான சம்பளத்தை பெற்று வருகிறார்கள். இயக்குநர்களுக்காக அல்லது தங்களுக்கு வேலை அல்லது பணிப் பயிற்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக இதனை செய்கிறார்கள்.

குறைந்த பட்ஜெட் படங்களென்றால் 100 சதவிகிதமும் தோல்வி என்பது உறுதிதான். ஒரு வாரம்தான் ஓடும் என்று தயாரிப்பாளருக்கும் தெரியும்.. இயக்குநருக்கும் தெரியும். தெரிந்தும் ஏன் எடுக்கிறார்கள் என்றால் ஒரு வேளை ஹிட்டடித்துவிட்டால் என்று தயாரிப்பாளர் நினைப்பார். இதையேதான் இயக்குநரும் நினைக்கிறார். இது சூதாட்டம் போலத்தான்..! அரசு மானியமாக 10 லட்சம், சேனல் ரைட்ஸாக 5 லட்சம், மற்றபடி மாதச் சம்பளம் போல தயாரிப்பாளர் சங்கம் மூலமாக படத்தின் கிளிப்பிங்ஸ்களை சேனல்களுக்கு விற்பனை செய்தால் கிடைக்கும் சொற்பத் தொகை.. என்று சில வரவுகள் இருந்தாலும், போட்ட காசு தேறவே தேறாது..

பணம் ஒரு பெரிய பிரச்சினையே இல்லை என்பவர்கள் தூக்கிப் போட்டுவிட்டு போய்விடுவார்கள். அடுத்த படத்தையும் தயாரிப்பார்கள். நம்ம பவர் ஸ்டார் சீனிவாசனை எடுத்துக் கொள்ளுங்கள். தான் சினிமாவுலகில் பிரபலமாக வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் திரையுலகத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்னால் பிரசாத் லேப்பில் நடந்த காதல் பாதை படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வருகை தந்தார். அவர் வந்தபோது 10000 சர வெடி போட்டு, மாலை போட்டு உற்சாக வரவேற்பு அளிக்க வைத்தார். இதற்கான செலவெல்லாம் அவருடையதுதான்.. இது ஒருவகையான விளம்பர ஆசை.

அவருடைய லத்திகா படத்தை இன்னமும் ஒரு தியேட்டரில் ஓட்டி வருகிறார். தியேட்டர் வாடகையை முன்கூட்டியே 3 மடங்கு உயர்த்திக் கட்டியிருக்கிறார். வேறு எந்த படம் போட்டாலும் இந்த அளவுக்கு காசு கிடைக்காது என்பதால் தியேட்டர் ஓனர் விட்டுவிட்டார்.. எப்படியாவது 200 நாள் ஓட்டியே தீருவது என்று ஷோவுக்கு 2 3 பேருடன் நடத்திக் காண்பித்துவிட்டார்..! இது அவரிடம் இருக்கும் பணத்தினால் விளைந்தது..! 

பவர் ஸ்டார் தனது அடுத்த படத்தில் இயக்குநருக்கு இது போன்று சம்பளம் தரலாம். அவருக்குத் தாங்கும். ஆனால் 40 லட்சத்தில் படமெடுக்க நினைக்கும் தயாரிப்பாளர்களால் முடியுமா..? இயக்குநர்கள் சங்கத்தின் இந்த ஊதிய உயர்வால் இது போன்ற குறைந்த பட்ஜெட் தயாரிப்பாளர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இது நடைமுறையில் சாத்தியமில்லாத்து என்று திரையுலகின் அனைத்துத் தரப்பினரும் ஒத்துக் கொள்கிறார்கள்.

இதே பிரஸ் மீட்டில் பெரிய படங்கள், சின்ன படங்கள் என்று தனித்தனியே பிரித்து சம்பளம் பெறலாம் என்ற தயாரிப்பாளர்களின் யோசனையை அமீர் முற்றிலுமாக நிராகரித்துவிட்டார். “பெரிய பட்ஜெட் என்றாலும், சின்ன பட்ஜெட் என்றாலும் தொழிலாளி செய்யக் கூடிய வேலை ஒன்றுதான்.. நாங்கள் அந்த வேலைக்கு ஏற்றாற்போல் சம்பளம் கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். எங்களால் படத்தின் பட்ஜேட்டுக்கேற்ப சம்பளம் வாங்க முடியாது” என்றார்.

குறைந்த பட்ஜெட் படங்களில் ஸ்டில் கேமிராவை வைத்தே இப்போது படமெடுக்கிறார்கள். இதனை பயன்படுத்த ஆட்கள் தேவையில்லை. ஒளிப்பதிவாளரும், அவருக்கு ஒரு உதவியாளருமே போதுமானது. அனைத்தையும் வெளிப்புறக் காட்சியாகவே எடுத்தாலும் லைட்டிங் வசதிக்கு 2 கேவி லைட்டுகளே போதும் என்பார்கள். ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுப்பதுதான் இதில் அவர்கள் செய்யும் அதிகப்பட்ச செலவு. டிராலி ஷாட்டுகளை இவர்களின் படங்களில் பார்க்கவே முடியாது. சாம் மார்த்தாண்டன் நடித்த படத்தை பாருங்கள். அதிகப்பட்சம் வெளிப்புறக் காட்சிகள். பட்டப் பகலில் கிடைக்கின்ற சூரிய வெளிச்சத்திலேயே எடுத்திருப்பார்கள். இது போன்றுதான் 20 லட்சம் ரூபாய் செலவில் கேரளாவில் சந்தோஷ் பண்டிட் கிருஷ்ணனும், ராதையும் என்ற படத்தை எடுத்து.. அவருடைய நல்ல நேரம்.. பெரும் வசூல் செய்திருக்கிறார். 

ஷூட்டிங்கில் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கையே 20-ஐ தாண்டாமல் பார்த்துக் கொள்வார்கள். இதனால் சாப்பாட்டு செலவும் மிச்சமாகும். கேமிராவுக்கும், ஹீரோயினுக்கும் மட்டுமே ஒரு பழைய அம்பாசிடர் காரை ஏற்பாடு செய்துவிட்டு மீதமிருப்பவர்கள் ஆட்டோவில் வந்து செல்வார்கள். 3 படம் இயக்கியிருக்கும் இயக்குநர்கள் இப்போதும் டூவிலரில்தான் ஷீட்டிங் போய்க் கொண்டிருக்கிறார்கள். பல படங்களுக்காக விளம்பரம் கூட செய்யப்படுவதில்லை. படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை எவ்வளவு சிம்பிளாக முடிக்க வேண்டுமோ அவ்வளவுக்கு முடிக்கிறார்கள். ரிலீஸ் சமயத்தில் மட்டுமே பத்திரிகையாளர்களை சந்தித்து கவர் கொடுத்து டைட்டிலை மட்டும் பிரபலப்படுத்துங்கள் என்கிறார்கள். இன்னும் சிலர் இதையும் செய்வதில்லை. 

சென்ற வாரம் வெளியான பாரி, அன்புள்ள துரோகி ஆகிய படங்களுக்கு அதிக விளம்பரங்கள் செய்யப்படவில்லை. ஒரு வாரம் முழுவதும் தினத்தந்தி, தினகரனில் மட்டுமே விளம்பரம் செய்து முடித்துவிட்டார்கள். அன்புள்ள துரோகி படம் 4 திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ். இது அவரவர் வசதிகளைப் பொறுத்தது. இப்படி வசதிகளைக் குறைத்து, குறைத்து தயாரிப்புச் செலவை பெருமளவு குறைத்துதான் படத்தை எடுத்து முடிக்கிறார்கள். எப்படியோ படம் ரிலீஸாகிவிட்டது என்று தயாரிப்பாளரும், டைட்டில் கார்டில் பெயர் கிடைத்துவிட்டது என்று இயக்குநரும் திருப்திபட்டு ஒதுங்க வேண்டியதுதான்..!

இது போன்ற படங்களின் படப்பிடிப்புகளில் துணை நடிகர்கள் சங்கத்தினரும், டெக்னீசியன் யூனியனும், லைட்மேன் யூனியனும்தான் அடிக்கடி தகராறு செய்வதாக பெப்ஸியில் வண்டி, வண்டியாக புகார்கள். பல அவுட்டோர் படப்பிடிப்புகளில் லோக்கல் ஆட்களை நடிக்க வைப்பதற்கு துணை நடிகர்கள் சங்கத்தினர் ஆட்சேபணை தெரிவிக்கிறார்கள். எங்கள் சங்கத்து நபர்களைத்தான் நடிக்க வைக்க வேண்டும். இல்லையெனில் அபாரதம் கட்டுங்கள் என்று போர்க்கொடி தூக்குகிறார்கள். பார்த்த முகங்களையே திருப்பித் திருப்பிப் பார்ப்பதா என்று இயக்குநர்கள் சொன்னாலும், உண்மையான காரணம்.. பட்ஜெட்டுதான்..

துணை நடிகர்களெனில் அனைவரும் சென்னையில் வசிப்பவர்கள். இங்கேயிருந்து அவர்களை வெளியூர்களுக்கு அழைத்துச் செல்ல ஆகும் போக்குவரத்துச் செலவு, தங்கும் செலவு, தினமும் அளிக்க வேண்டிய பேட்டா செலவு, சாப்பாட்டுச் செலவு இதையெல்லாம் மனதில் வைத்துதான் குறைந்த பட்ஜெட்டில் படமெடுப்பவர்கள் இதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார்கள். அதிலும் ஹீரோ, ஹீரோயினோட அப்பா, அம்மாக்கள், சொந்தக்காரர்கள் என்று உள்ளூர்காரர்களை வேலைக்கு வைத்தால், அவர்களுக்கு சோறு மட்டும் போட்டால் போதும்.. பல இடங்களில் தங்கள் முகம் திரையில் தெரிய வேண்டி அவர்களே இலவசமாக நடித்துக் கொடுப்பதுண்டு. துணை நடிகர்கள் சங்கமோ இதனைத்தான் எதிர்க்கிறது..! 

லைட்மேன் யூனியன்காரர்களும், டெக்னீஷியன்களும், குறைந்தபட்சம் தங்களுடன் 3 பேராவது வேலை செய்ய வேண்டும். என் ஒருத்தரால் மட்டுமே இத்தனை வேலைகளையும் செய்ய முடியாது என்கிறார்கள். பட்ஜெட் பற்றாக்குறையால் இதையும் எதிர்க்கிறார்கள் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள்.

கலை இயக்குநரை மட்டும் புக் செய்தால் போதாது. இவருடைய குறைந்தபட்சம் 2 உதவியாளர்களையும் வைத்துக் கொள்ள வேண்டும். இது போலவே மேக்கப், காஸ்ட்யூம்ஸ் என்று சில சங்கங்களும் மொத்தமாக 3 பேர் வருவோம் என்று அடம் பிடிப்பார்கள். சில சின்ன பட்ஜெட் படங்களில் பார்த்தீர்களேயானால் ஹீரோவின் வீட்டில் காட்டப்படும் வேல் வைத்திருக்கும் கிரேக்க வீரனின் சிலை, ஹீரோயினின் வீட்டிலும் இருக்கும். எதையாவது செய்து கேமிராவை பில்லப் செய் என்று சொன்னால் கையில் கிடைப்பதைத்தான் வைக்க முடியும். இரண்டும் வேறு வேறு நாட்களில் எடுக்கப்படும் காட்சியாக இருந்தால் கலை உதவியாளர் தெரியாமல் வைத்துவிடுவார். படத்தொகுப்பில்தான் இதனை கண்டு பிடிப்பார்கள். சின்ன பட்ஜெட்தானே எவன் இதையெல்லாம் பார்க்கப் போறான்... விட்டிரு என்பார்கள் சிலர். இது போன்ற குழப்பங்களை இது போன்ற சின்ன பட்ஜெட் படங்களில் அதிகம் பார்க்கலாம்..!

இப்படி சின்ன பட்ஜெட் படங்களுக்கு தேவைப்படாத அளவுக்கு தொழிலாளர்களை சில சங்கங்கள் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் இப்பிரச்சினை இன்றைய நிலையில் பெரிதாவதற்கு காரணமாகிவிட்டது..! பெரிய பட்ஜெட் படங்களுக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. இப்போது பாலா இயக்கி வரும் புதிய படத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கும், ஆண்களுக்கும் மொட்டை போட்டு.. அதிலும் தினமும் மொட்டையை ரெப்ரஷ் வேறு செய்து வருகிறாராம். இது அவரால் சாத்தியமானது. அவருடைய படத்தின் பட்ஜெட்டுக்கு தோதானது. இதை தண்டச்செலவு என்று யாரும் சொல்ல மாட்டார்கள். இதனையும் சின்ன பட்ஜெட் படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, சம்பள உயர்வையும், ஆட்களின் எண்ணிக்கையையும் கூட்டுவது திரையுலகத்தின் வளர்ச்சிக்கு எந்தவிதத்திலும் ஒவ்வாததுதான்..!

100 குறைந்த பட்ஜெட் படங்கள் வெளியானாலும்கூட அதில் வேலை செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 2000 அதிகப்பட்சம் 6000 இருக்கலாம். இந்தத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்ததே இது போன்ற படங்களால்தான்..! இப்போது இந்தப் படங்களுக்கும் இயக்குநர்கள் சங்கம் மறைமுகமாகத் தடை போட்டுள்ளது. சங்கம் நிர்ணயித்துள்ள ஊதிய விகித்த்தின்படியே ஊதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும். அது இல்லாமல் இயக்குநர்கள் யாரும் பணியாற்றக் கூடாது என்று சொல்லியிருப்பதன் மூலம் தயாரிப்பாளர்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை இயக்குநர்கள் சங்கம் தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொருமல் துவங்கிவிட்டது..!

இதற்கான தயாரிப்பாளர்களின் பதில் என்ன என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். ஆனாலும் இயக்குநர் சங்கத்தின் இந்த ஊதிய உயர்வு அறிவிப்பு, இந்தப் பிரச்சினையை வேறு திசை நோக்கி கொண்டு செல்லப் போகிறது என்பது மட்டும் உறுதி. 

தமிழ்த் திரையுலகம் - தயாரிப்பாளர்கள்-பெப்சி தொழிலாளர்கள் மோதல்..!

27-01-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் முணுமுணுப்புடன் இருந்த கருத்து வேறுபாடுகள் இன்றைக்கு வெளிப்படையாக வெடித்து முதலாளிகளையும், தொழிலாளர்களையும் ஆளுக்கொரு பக்கமாக பிரித்திருக்கிறது..!

பெப்சி எனப்படும் தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் 23 திரைப்படத் தொழிலாளர் சங்கங்கள் இணைந்துள்ளன.


1. தென்னிந்தியத் திரைப்பட நடிகர்கள் சங்கம்

2. தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம்

3. தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்

4. தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம்

5. தென்னிந்தியத் திரைப்பட படத் தொகுப்பாளர்கள் சங்கம்

6. தென்னிந்தியத் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம்

7. திரைப்பட நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கம்

8. தென்னிந்திய திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர்கள் மற்றும் ஸ்டண்ட் நடிகர்கள் சங்கம்

9. தென்னிந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கலை இயக்குநர்கள் சங்கம்

10. தென்னிந்தியத் திரைப்பட நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கம்

11. தென்னிந்தியத் திரைப்பட ஒப்பனைக் கலைஞர்கள் சங்கம்

12. தென்னிந்திய திரைப்பட உடை, அலங்காரக் கலைஞர்கள் சங்கம்

13. தென்னிந்திய சலனப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம்

14. திரைப்படத் தயாரிப்பு உதவியாளர்கள் சங்கம்

15. திரைப்பட வெளிப்புற ஒளி ஊழியர்கள் சங்கம்

16. தென்னிந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி வெளிப்புறப் 
படப்பிடிப்பு யூனிட் டெக்னீஷியன்கள் சங்கம்

17. தென்னிந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி அரங்க அமைப்பு ஊழியர்கள் சங்கம்

18. தென்னிந்திய வெண்திரை சக நடிகர்கள் சங்கம்

19. திரைப்பட (சக நடிகர்கள்) முகவர்கள் சங்கம்

20. தென்னிந்திய திரைப்பட ஸ்டில் புகைப்படக்காரர்கள் சங்கம்

21. தென்னிந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி வாகன ஓட்டுநர்களின் சங்கம்

22. தென்னிந்தியத் திரைப்பட நளபாக ஊழியர்கள் சங்கம்

23. தென்னிந்திய திரைப்பட மகளிர் ஊழியர்கள் சங்கம்

இந்த 23 சங்கங்களில் உறுப்பினராக இருக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2007-2010-ம் ஆண்டுகளுக்கான ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து, புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்க வேண்டும். ஆனால் இப்போதுவரையிலும் அது நடக்கவில்லை. காரணம் தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்பட்ட குழப்பம்.

அப்போதைய காலக்கட்டத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்த இராம.நாராயணன் மீதும், அப்போதைய நிர்வாகிகள் மீதும் பல தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்து ஆட்சேபணை தெரிவித்து வந்த காரணத்தினால், இராம.நாராயணனால் சம்பளப் பிரச்சினை பற்றி பெப்ஸிடம் பேசுவதற்கு ஒரு கமிட்டியை கூட போட முடியவில்லை என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

அப்போது பெப்சியின் தலைவர் வி.சி.குகநாதன். எம்.ஜி.ஆரின் பக்தராக பல வருடங்களாக திரையுலகில் வலம் வந்த இவர், கடந்த ஆட்சிக் காலத்தில் கலைஞரின் அதி தீவிர பக்தராகிவிட்டார். பேசுவோம்.. ஒண்ணும் அவசரமில்லை.. என்று பேச்சுவார்த்தையை தொங்கலில் போட்டுவிட்டாராம்..! எதிரணியில் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டிய இராம.நாராயணனும், அதி தீவிரமான தி.மு.க. விசுவாசி என்பதால் இருவரும் கை கோர்த்து வலம் வந்தார்கள். தொழிலாளர்கள் அமைதி காத்தார்கள்..!

மாநில சட்டசபைக்கான தேர்தல் நெருங்குகிறது.. இந்த நேரத்தில் தயாரிப்பாளர் கவுன்சிலிலும் தேர்தல் நடத்தப்பட வேண்டியிருந்தது. இந்த ஊதிய விவகாரத்தில் ஏதாவது ஏடாகூடமாகிப் போனால் மீண்டும் தி.மு.க. சார்பானவர்கள் ஜெயிக்க முடியுமா என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இராம.நாராயணன் அணியினர் ரொம்பவே யோசித்திருக்கிறார்கள். பிரச்சினையை ஆறப் போட்டுவிட்டு சட்டசபைத் தேர்தல் முடிந்த பின்பு பெப்சியுடனான பேச்சுவார்த்தை மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் இரண்டையும் வைத்துக் கொள்ளலாம் என்று ஒத்திப் போட்டுக் கொண்டே சென்றுள்ளார்கள்..!

சட்டசபைத் தேர்தலும் நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று ஆத்தாவின் வெற்றி உறுதியான அந்த இரவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம.நாராயணனும், செயலாளர் சிவசக்தி பாண்டியனும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டுப் போனவர்கள், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஓட்டு போட மட்டுமே பிலிம் சேம்பருக்கு திரும்பி வந்தார்கள். தலைவர் இல்லாத நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், எதிர்ப்பே இல்லாமல் தான் தலைவராக இருக்க விரும்புவதாக கூற, அவர் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதற்குப் பின்பு கடந்த 2011-ம் ஆண்டு மே 31-ம் தேதியன்று பெப்சியின் தலைவர் வி.சி.குகநாதன் தலைமையில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இரு தரப்பினரும் கூடி ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை எப்படி மேற்கொள்வது என்று பேசியிருக்கிறார்கள். 2011 ஜூன் 3-ம் தேதி முதல், ஜூன் 30-ம் தேதி வரை தினமும் இரு தரப்பினரும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை தயார் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை.. மறுநாள் 2011, ஜூன் 1-ம் தேதியன்று பெப்சி அலுவலகத்தில் அனைத்துச் சங்கத்தின் நிர்வாகிகளையும் அழைத்து ஒரு கூட்டத்தைக் கூட்டி தாங்களே ஒரு ஊதிய உயர்வை நிர்ணயித்து இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று சொல்லி ஒரு கடிதத்தையும் தயாரிப்பாளர் சங்கத்தினருக்கு அனுப்பியிருக்கிறார்கள் பெப்ஸி அமைப்பினர்.

இதனைச் சற்றும் எதிர்பார்க்காத தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் மறுபடியும் பெப்ஸிக்கு கடிதம் எழுதி, நாம் முன்பே பேசியது போல ஜூன் 3-ம் தேதி முதல் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்கள். இந்த அழைப்பை ஏற்று, பெப்ஸி அமைப்பு தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது.

இதற்கிடையில் பெப்சியிலும் ஒரு குழப்பம். வி.சி.குகநாதன் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு வெளியேறிவிட்டார். இதனால் அதுவரையிலும் பொருளாளராக இருந்த ராமதுரையை பொறுப்பு தலைவராக நியமித்தது பெப்சி.

அந்தப் பக்கம் தயாரிப்பாளர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து மோதலில் சங்கம் இரண்டாக பிளவுபட்டு நிற்க.. உடனடியாக தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, பேச்சுவார்த்தையும் அப்படியே தொங்கலில் விடப்பட்டது.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடந்து முடிந்து எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் புதிய அணி பொறுப்பேற்ற பின்பும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் கிடைத்து தினச் சம்பளம் பெறும் 9 சங்கங்களில் 5 சங்க தொழிலாளர்கள் கேட்ட ஊதிய உயர்வினை தயாரிப்பாளர் சங்கம் ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டுள்ளது. மிச்சமிருந்த 4 சங்கங்களின் பேச்சுவார்த்தைக்காக தயாரிப்பாளர்கள் சங்கத்தை பெப்சி அணுகியபோதுதான் பிரச்சினை துவங்கி இப்போதைய நிலைமை வரைக்கும் வந்துள்ளது.

இதற்கிடையில் உயர்த்தப்பட்ட புதிய ஊதியத்தின் கீழ் சில சங்க தொழிலாளர்கள் பல படப்பிடிப்புகளில் பணியாற்றி வந்திருக்கிறார்கள். ஒஸ்தி படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் சம்பளம் தரப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயம் சில படப்பிடிப்புகளில் பழைய சம்பளத்திற்கும் தொழிலாளர்கள் வேலை செய்திருக்கிறார்கள். புதிய ஊதியத்தை கேட்டபோது ஒப்பந்தம் கையெழுத்தாகட்டும். அதன் பின்பு தருகிறோம். அதுவரையில் பழைய ஒப்பந்த்த்திலேயே வேலை பாருங்கள் என்று சில தயாரிப்பாளர்கள் தொழிலாளர்களை வற்புறுத்தியிருக்கிறார்கள். வேலை வேண்டும்.. இன்றைக்கு சம்பளம் வேண்டுமே என்ற அன்றாட பிரச்சினை காரணமாக சில தொழிலாளர்கள் பழைய சம்பளத்திற்கே பணியாற்றி வந்திருக்கிறார்கள்..!

இதில் செட் அஸிஸ்டெண்ட் மற்றும் லைட்மேன், புரொடெக்ஷன் அஸிஸ்டெண்ட்ஸ் போன்ற சங்கங்கள் எந்தெந்த படப்பிடிப்புகளுக்கு யார், யாரை அனுப்பி வைப்பது என்கிற அதிகாரம் படைத்தவை. சங்கத்தின் மூலமாகவே இவர்கள் வேலைக்கு வருவதால், புதிய சம்பளம் கிடைக்கும் படப்பிடிப்பு, பழைய சம்பளம் கொடுக்கப்படும் படப்பிடிப்பு என்ற குழப்பத்தில் தொழிலாளர்களை பிரித்து அனுப்ப முடியாமல் அவர்களுக்குள்ளேயே சிக்கல்களை உருவாகியுள்ளது.

கடைசியாக இந்த மாதம் 12-ம் தேதியன்றும் ஊதிய உயர்வுக்காக இரு தரப்பினரும் பேசியிருக்கிறார்கள். அப்போதும் கையெழுத்தாகாமல், ஜனவரி 19-ம் தேதியன்று பெப்ஸியின் பொதுக்குழுவைக் கூட்டி அதில் பேசிய பின்பு மீண்டும் அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருவதாக பெப்ஸி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

சொன்னது போலவே நடந்த பெப்ஸியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய பல உறுப்பினர்கள் பழைய சம்பளத்தில் பல தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அதே வேலை பார்க்கும் சில தொழிலாளர்கள் புது சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். இருவருக்குமிடையில் குழப்பம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.. இதனை உடனேயே சரி செய்ய வேண்டும். ஒன்றரை ஆண்டுகளாகியும் ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இழுத்தடிப்பது தொழிலாளர்களை ஏமாற்றுவதற்குச் சமம் என்று பலரும் பெப்ஸி நிர்வாகிகளை காய்ச்சி எடுத்திருக்கிறார்கள். 

நிர்வாகிகளில் அதிகமானோரின் கருத்துப்படி உடனடியாக புதிய ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே இனிமேல் நமது தொழிலாளர்கள் வேலை செய்வார்கள் என்று பெப்சி அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டது இதன் சூழலில்தான்..!

அறிக்கையை பத்திரிகைகளில் பார்த்த உடனேயே சூடாகிவிட்ட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எப்படி எங்களிடம் சொல்லாமல் நீங்களே அறிவிக்கலாம் என்று கோபப்பட்டிருக்கிறார்கள். பெப்ஸி அமைப்பினரோ, நீங்கள்தான் கையெழுத்துக்கு முன் வர மறுக்கிறீர்களே.. பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என்று இழுத்தடிப்பது ஏன் என்று திருப்பிக் கேட்டுள்ளார்கள். இந்தப் பேச்சுவார்த்தையே ஈகோ பிரச்சினையாகிவிட, தயாரிப்பாளர் சங்கத்தின் அவசரப் பொதுக்குழு கூட்டம் கடந்த 23-ம் தேதி பிலிம் சேம்பர் திரையரங்கில் நடைபெற்றது.


கூட்டம் துவங்கியது முதலே எங்களைக் கேட்காமல் ஊதிய உயர்வினை தன்னிச்சையாக அவர்களாக எப்படி அறிவிக்கலாம் என்று ஆரம்பித்து, இறுதியில் பெப்ஸி தொழிலாளர்களின் மீதான தனிப்பட்ட தாக்குதலில் கொண்டுபோய் முடித்துவிட்டதுதான் சோகம்..! 

வந்திருந்த தயாரிப்பாளர்களில் முக்கால்வாசி பேர் குறைந்த பட்ஜெட் தயாரிப்பாளர்கள் என்பதால் அவர்கள் தங்கள் பங்குக்கு சில சங்கங்களின் அராஜக செயல்பாடுகளினால் தாங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள்..!

கேமிரா அஸிஸ்டெண்ட்டுகள், செட் அஸிஸ்டெண்ட்டுகள், தயாரிப்பு உதவியாளர்கள், நளபாக ஊழியர்களை வலுக்கட்டாயமாக தங்களது தலையில் சுமத்துவதாக பல தயாரிப்பாளர்கள் குறைபட்டுக் கொண்டார்கள். இதில் உண்மை என்னவெனில் கேமிராவை வாடகைக்கு எடுத்தால் அந்த நிறுவனத்தில் இருந்து 2 அஸிஸ்டெண்ட்டுகளை கட்டாயமாக அனுப்பி வைப்பார்கள். கூடுதல் உபகரணங்களை நீங்கள் வாங்கினால் அதற்கேற்றாற்போல் கூடுதல் தொழிலாளர்களை நீங்கள் பெற்றுத்தான் ஆக வேண்டும்.. இது போக ஒளிப்பதிவாளரும் தனது பங்குக்கு 2 அல்லது 3 உதவியாளர்களை வைத்திருப்பார்கள்..! ஒளிப்பதிவாளரின் தரத்திற்கேற்ப இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்..! 5 பேருக்கு பேட்டா காசு, சம்பளக் காசு அதிகமாச்சே.. 3 பேரை வைத்து வேலை செய்ய முடியாதா..? ஒருத்தரை அனுப்பி வைக்கக் கூடாதா..? எதுக்கு 2 பேரை தலைல கட்டுறீங்க..? செட் அஸிஸ்டெண்ட் ஒருத்தரை அனுப்புங்க போதும்னு சொன்னா கேக்குறதுல்ல.. 2 பேரை அனுப்பி வைச்சுக் கொல்றாங்க.. அவனுக்கு எவன் சம்பளம் கொடுப்பான்..? பேட்டா கொடுப்பான்..? என்றெல்லாம் சில தயாரிப்பாளர்கள் கொதித்தார்களாம். இத்தனைக்கும் ஒரு செட் அஸிஸ்டெண்ட்டுக்கு தினச் சம்பளம் வெறும் 350 ரூபாய்தான். இதுவே அதிகம் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்..!

எப்போதும் கீரியும், பாம்புமாய் இருக்கும் ராதாரவியும், பாரதிராஜவும் இந்த மேடையில் புதுமணத் தம்பதிகள்போல் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தது ஆச்சிரியமானதுதான்.. அதைவிட ஆச்சரியம்.. 2 பேரும் ஒருத்தருக்கொருத்தர் பேசி வைத்துக் கொண்டு மேடையில் அவ்வப்போது மைக்கை பிடித்து தயாரிப்பாளர்களுக்கு பூஸ்ட் கொடுத்ததுதான்..!

பாரதிராஜாவின் பேச்சும் படு சூடாகவே இருந்தது என்கிறார்கள். எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு.. சென்ற வாரம் தேனியில் நடைபெற்ற அவருடைய  அன்னக்கொடியும், கொடி வீரனும் படத்தில் வேலை செய்ய சென்ற தொழிலாளர்கள் கூடுதல் ஊதியத்தைக் கேட்க, பாரதிராஜா தர மறுத்திருக்கிறார். அப்படியானால் நாங்கள் நடிக்க மாட்டோம் என்று அவர்கள் சொல்லியிருக்க.. அப்படியே அத்தனை பேரையும் சென்னைக்கு பேக்கப் செய்து அனுப்பி வைத்திருக்கிறார் பாரதிராஜா. அந்தக் கோபத்துடனேயே சென்னைக்கு பறந்தோடி வந்திருக்கிறார் இயக்குநர் இமயம். ரவிபிரசாத் நிறுவனத்தில் கேமிராவை பெற்றுவிட்டு தொழிலாளர்கள் புது ஊதியத்திற்காக வேலை செய்ய மறுத்த கதையையும் பாரதிராஜா மேடையிலேயே கூறினார். 

பெப்சி அமைப்பின் மீது பாரதிராஜாவுக்கு நீண்ட பல வருடங்களாக தனிப்பட்ட கோபமும் உண்டு. 'கிழக்குச் சீமையிலே' படத்தின்போது அப்படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தங்களது சங்கத்தை சேர்ந்தவர்களை நடிக்க வைக்காமல் லோக்கல் ஆட்களை நடிக்க வைத்ததாக கடைசி நிமிடத்தில் பெப்ஸியில் புகார் கொடுத்து 50000 ரூபாய் நஷ்ட ஈடாக பெற்றுக் கொண்டது ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் யூனியன். அப்போதே இதனை கடுமையாக எதிர்த்துப் பேசிய பாரதிராஜா இதன் பின்பு மீண்டும், மீண்டும் வேண்டுமென்றே லோக்கல் ஆட்களையே தனது படங்களில் நடிக்க வைத்து வருகிறார்..! இதற்கு பின்பு ஒவ்வொரு முறையும் யூனியன் புகார் கொடுப்பதும், பெப்சி விசாரிக்க முடியாமல் தவிப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது..!

“கக்கத்தில் கருப்புப் பணம் வைத்திருக்கும் ஒரு நடிகர் இங்கேயிருந்து டில்லிக்கு சென்று அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். பக்கத்தில் இருக்குற முல்லைப் பெரியாறுக்காக அவர் ஏன் வாய் திறக்கவில்லை..” என்று நடிகர் விஜய் பற்றி பாரதிராஜா கூறியிருந்த கருத்துக்கு எஸ்.ஏ.சி.யிடம் பதில் கருத்து கேட்டபோது “விரைவில் சொல்கிறேன்..” என்று மட்டுமே சொல்லியிருந்தார். இங்கே மேடையில் அதையெல்லாம் தூரமாக வைத்துவிட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவராக மட்டுமே பாவனை காட்டினார் எஸ்.ஏ.சி. 

கடைசியாக பேச வந்த நடிகை ஜெயசித்ராவிடம் இருந்து மைக்கை பிடுங்குவதற்கு படாதபாடுபட்டார்கள்..! ஆனாலும் அம்மணி தான் பேச வேண்டியது அத்தனையையும் பேசிக் கொட்டிவிட்டுத்தான் அமர்ந்தார். அவருடைய மகனை ஹீரோவாக வைத்து அவர் இயக்கிய படப்பிடிப்பில் மேக்கப் கலைஞர்கள் நேரத்தை வீணாக்கி டபுள் பேட்டா கொடுக்க வைத்ததாகக் குற்றம் சாட்டினார். இவரை போலவேதான் முக்கால்வாசி தயாரிப்பாளர்கள் புகார் புராணம் பாடினார்கள்.

கடைசியாக பேச வந்த எஸ்.ஏ.சந்திரசேகர், "தன்னிச்சையாக பெப்சி ஊதிய உயர்வினை அறிவித்ததால் நமக்கும் அவர்களுக்கும் இடையில் எந்தவித ஒப்பந்தமும் இப்போது இல்லை.." என்று தடாலடியாக அறிவித்தார். "15 பேர் கொண்ட குழுவை அமைத்து அவர்கள் நிர்ணயிக்கும் சம்பளத்தை தயாரிப்பாளர்களுக்கு 2 நாட்களில் அனுப்பி வைப்போம். அதனை மட்டுமே தயாரிப்பாளர்கள் வழங்க வேண்டும். கூடுதலாக வழங்கினால் அந்தத் தயாரிப்பாளருக்கு யூனியன் எந்தவிதத்திலும் ஒத்துழைக்காது.." என்றார் சந்திரசேகர்.

இந்த நேரத்தில்தான் இயக்குநர் சேரன் குடுகுடுவென்று மேடைக்கு ஓடிச் சென்று எஸ்.ஏ.சி.யிடம் ஏதோ வாதாட.. மேடையில் இருந்த கே.ராஜனும், டி.ராஜேந்தரும் சேரனுடன் மல்லுக் கட்டினார்கள். சேரனுக்கு ஆர்.கே.செல்வமணியும், பல தயாரிப்பாளர்களும் சேர்ந்து கொண்டு ஆதரவு கொடுக்க.. டி.ராஜேந்தர் மீண்டும் மைக்கை பிடித்து, “இப்ப இருந்த பொண்டாட்டியை டைவர்ஸ் பண்ணியாச்சு. அடுத்து புதுசா வரப் போற பொண்டாட்டி, கருப்பா சிவப்பா, குட்டையா நெட்டையான்னு நாமதான் முடிவு பண்ணணும்.. அவளை எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது.. எங்க வைச்சு பண்ணிக்கிறது..? எவ்வளவு செலவுல கல்யாணத்தை வைச்சுக்குறதுன்னு முடிவெடுக்க வேண்டியது நாமதான்.. பொண்டாட்டி இல்லை.. புரிஞ்சதா..?” என்றார்..!

பல தயாரிப்பாளர்களும் மேடையேறி எஸ்.ஏ.சி.க்கு அட்வைஸ் கொடுக்க பாரதிராஜாவே எழுந்து வந்து சேரனையும், செல்வமணியையும் சமாதானப்படுத்தினார். தொடர்ந்து பேசிய எஸ்.ஏ.சி., “நாம் யாரை வேண்டுமானாலும் வைத்து வேலை செய்வோம்.. அவர்களுக்கு சம்பளம் எவ்வளவு என்பதையும் நாம்தான் தீர்மானிப்போம்..” என்றோம். அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது. (இதைத்தான் சேரன் தரப்பினர் வற்புறுத்தியிருப்பார்கள் என்று யூகிக்கிறேன்)

தயாரிப்பாளர்களின் கை தட்டலையே ஒப்புதலாக எடுத்துக் கொண்டு தீர்மானங்கள் நிறைவேற.. பாரதிராஜா மீண்டும் மைக்கை பிடித்து தயாரிப்பாளர் கவுன்சில் எடுத்திருக்கும் இந்த்த் தீர்மானத்திற்கு இயக்குநர்கள் சங்கம் முழு ஆதரவளிக்கும் என்று ஒரு போடு போட்டார். உடனேயே கலைப்புலி தாணு எழுந்து சென்று பாரதிராஜாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்து பாராட்டினார். மேடையே ராசாவுக்கு கை கொடுத்து பாராட்ட.. எஸ்.ஏ.சி., நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவியின் ஆதரவை கோரினார். ராதாரவி உட்கார்ந்த நிலையிலேயே தனது கைகளை உயர்த்தி தனது ஆதரவை நல்கிவிட.. பெப்சியில் இருக்கும் 2 பெரிய சங்கங்கள் தயாரிப்பாளர்கள் யூனியனுடன் இணைந்து தொழிலாளர்களுக்கு எதிர்ப்பாகிய கதை உருவாகியது.

எதிர்பார்த்ததுபோலவே பெப்சி அமைப்பினர் மறுநாளே தங்களது அவசரப் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டி பேசினார்கள். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சியில் தலைமைப் பதவிக்கு வருவதற்கு இணைக்கப்பட்ட 23 சங்கங்களில் ஏதேனும் ஒரு சங்கத்தில் தலைவராகவோ அல்லது செயலாளராகவோ, பொருளாராகவோ இருத்தல் அவசியம். 23 சங்கங்களின் நிர்வாகிகள் சேர்ந்துதான் பெப்சி அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளரை தேர்வு செய்வார்கள். அந்த வகையில்தான் எழுத்தாளர்கள் சங்கத்தின் செயலாளராக இருந்த வி.சி.குகநாதன் பெப்சியின் தலைவரானார். ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் செயலாளரான ஜி.சிவா பெப்சியின் செயலாளரானார். கலை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவரான ராமதுரை, பெப்சியின் பொருளாளரானார். அன்றைய கூட்டத்தில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் அமீரும், பொருளாளர் ஜனநாதனும் கலந்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் பெப்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள்தான்..!

கூட்டத்தின் முடிவில் பெப்சியை உடைப்பதற்கு யார் எந்தவிதத்தில்  முயற்சியை செய்தாலும் அதனை நாங்கள் வன்மையாக எதிர்ப்போம் என்றும், புதிய ஊதிய ஒப்பந்தத்தை வழங்கிவரும் நேரத்தில் ஏன் அதனை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள தயாரிப்பாளர்கள் யூனியன் மறுக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்கள். 350 ரூபாய் சம்பளம் வாங்கும் தொழிலாளிக்கு 30 சதவிகிதம் தொகையைத்தான் உயர்த்தியுள்ளோம் என்றனர் பெப்சி அமைப்பினர். தங்களுடன் தயாரிப்பாளர் சங்கம் உடனடியாக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், படப்பிடிப்புகள் தொடர்ந்து நடக்க பெப்சி முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் கூறினார்கள். தமிழக அரசு தலையிட்டுத்தான் தங்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத் தர வேண்டும் என்று மறைமுக சரண்டரை பெப்சி கூறியது.


பாரதிராஜாவின் பெப்ஸி ஆதரவு பற்றி அமீரிடம் கேட்டபோது, “பாரதிராஜா பப்ளிக்கா சொன்னாரா..? இல்லீல்ல.. பொதுக்குழுலதான பேசினாரு.. எங்க சங்கக் கூட்டத்துக்கு வந்து, ஆபீஸுக்கு வந்து, சங்கம் சார்பா பேசினாருன்னா கேளுங்க.. பதில் சொல்கிறேன்..” என்றார்.. அன்னக்கொடியும், கொடி வீரனும் பட ஷூட்டிங்கில் நடந்த ஊதிய உயர்வு ரகளையைப் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு “அப்படி எதுவும் நடக்கவே இல்லை..” என்று சாதித்தார் அமீர். ஆனால் தேனிக்கு சென்று வெறும் கையுடன் திரும்பி வந்திருந்த பெப்சி தொழிலாளர்கள் அலுவலகத்தில் மாடியருகே நின்று கொண்டு அனைத்து பத்திரிகையாளர்களிடத்திலும் நடந்த கதையை முழுதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இவருடைய இந்தக் கருத்திற்கு மறுநாள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த பிரஸ் மீட்டில் இயக்குநர் சேரன் கடும் கண்டனம் தெரிவித்தார். “பெரிய பட்ஜெட் படத்தினை மட்டுமே நினைவில் வைத்து அமீர் இப்படி பேசியிருக்கிறார்.. அவர் மீது சங்கத்தில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்..” என்று சேரன் துணிவுடன் சொன்னது ஆச்சரியமானது. அமீர் பொதுச் செயலாளர். ஜனநாதன், பொருளாளர். இந்த இருவரும் பெப்சியின் பக்கம். தலைவர் பாரதிராஜா, துணைத் தலைவர் சேரன்.. இவர்கள் தயாரிப்பாளர்கள் பக்கம். மேலும் சேரன் ஏற்கெனவே தனது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சங்கத்தில் கடிதம் சமர்ப்பித்திருக்கிறார். ஆனால் அதனை பாரதிராஜா ஏற்க மறுத்து நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிகிறது..! இப்படி இயக்குநர்கள் சங்கத்திலும் இந்த பிரச்சினையால் கலகம் விளைந்துள்ளது.   

பெப்சி அமைப்பினர் கூறியது போல தொழிலாளர்கள் கேட்பது வெறும் 30, 40 ரூபாய்கள் அல்ல.. என்று கூறிய தயாரிப்பாளர்கள், சில பெப்சி தொழிலாளர் சங்கத்தினர் கேட்டிருந்த ஊதிய உயர்வுத் தொகையினை புள்ளிவிவரத்துடன் வெளியிட்டனர்.

லைட்மேன் - 350, 530

ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் - 250, 320

மகளிர் யூனியன் - 290, 400

செட் அஸிஸ்டெண்ட் - 350, 625

டிரைவர்ஸ் யூனியன் - 270, 415

காஸ்ட்யூம் அஸிஸ்டெண்ட்ஸ் - 700, 850

புரொடெக்ஷன் அஸிஸ்டெண்ட்ஸ் - 350, 550

லைட்மேன் யூனியன் 180 ரூபாய், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் 70 ரூபாய், மகளிர் யூனியன் 110 ரூபாய், செட் அஸிஸ்டெண்ட்ஸ் 275, டிரைவர்ஸ் யூனியன் 145, காஸ்ட்யூம் அஸிஸ்டெண்ட்ஸ் 150, புரொடெக்ஷன் அஸிஸ்டெண்ட்ஸ் 200 ரூபாய் என்று தங்களது ஊதிய உயர்வை உயர்த்திக் கேட்டிருக்கிறார்கள். 

இந்தத் தொழிலாளர்கள் வாங்குகின்ற சம்பளம் 5 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..! 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி 70 ரூபாய், 110 ரூபாய், 150 ரூபாய் என்று உயர்த்துவது கூடவா தயாரிப்பாளர்களுக்கு சுமையைத் தருகிறது? என்ன கொடுமை சரவணா இது..? வருடத்திற்கு என்று பார்த்தால்கூட அதிகப்பட்சம் 45 ரூபாய்தான் உயர்த்தியிருக்கிறார்கள். இதிலென்ன தவறு இருக்க முடியும்..? 

இப்போதைய சூழலில் தமிழ்த் திரைப்பட உலகத்தில் திரைப்படங்கள் எடுப்பது குறைந்துபோய் தொழிலாளர்கள் தேவைக்கும் அதிகமானோர் இருக்கிறார்கள். இதில் ஒரு சங்கத்தில் இருப்பவர்கள் அனைவருக்குமே வேலை கிடைப்பதில்லை.. இதனால்தான் சில சங்கத்தினர் தங்களது தொழிலாளர்களை ஷிப்டிங் முறைப்படி தாங்களே அனுப்பி வைக்கிறார்கள். இப்படி அனுப்பினால் அனைத்து தொழிலாளர்களுக்கும் சம அளவுக்கு வேலை கிடைக்குமே என்கிற காரணத்தினால்தான்..! படத் தயாரிப்புகள் குறைவினால் ஒரு தொழிலாளிக்கு மாதத்தில் 10 நாட்கள் வேலை கிடைத்தாலே பெரிய விஷயம்..! 

இதில் ஒரு லைட்மேனுக்கு 530 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. 10 அல்லது 15 நாட்கள் என்று வைத்துக் கொண்டால்கூட குறைந்தபட்சம் 5000 ரூபாய் முதல் அதிகப்பட்சம் 8000 ரூபாய்தான் அந்த்த் தொழிலாளியால் சம்பாதிக்க முடியும்..! இதனை வைத்துக் கொண்டு சென்னையில் எப்படி குடும்பம் நடத்த முடியும் என்கிறார்கள் தொழிலாளர்கள்..! 

கடந்த வாரம் ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பில் லைட்மேன் ஒருவர் உயரத்தில் கட்டியிருந்த சாரத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டாராம்.. சங்கத்தில் இருந்து மருத்துவச் செலவுக்காக 10000 ரூபாய் கொடுத்தார்களாம். அவ்வளவுதானாம்..! அந்தத் தொழிலாளியின் மனைவி தன்னுடைய நகைகளை விற்று தற்போது கணவருக்கு சிகிச்சையளித்து வருகிறாராம். அவரால் திரும்பவும் நடக்க முடியுமா என்றே சந்தேகம் என்கிறார்கள். இப்படி வாழ்க்கையே நிரந்தரமில்லாத சூழலில் நியாயமான சம்பளம் கொடுத்தால்தானே தொழிலாளியும் மன நிறைவோடு இருக்க முடியும் என்கிறார்கள் தொழிலாளர்கள். இதுவும் நியாயமாகத்தான் இருக்கிறது..!

ஒரு படம் வெற்றி பெற்றாலே அடுத்தப் படத்தில் லட்சத்தில் சம்பளம் வாங்குகிறார் ஹீரோ. அவருக்கும், ஹீரோயினுக்கும் லட்சத்திலும், கோடியிலும் கொட்டிக் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் பிச்சை காசு.. சில ஆயிரம் மட்டுமே செலவாகும் தொழிலாளர்களுக்கான சம்பளத்தில் மட்டும் இவ்வளவு சிக்கனம் காட்டுவது ஏன் என்றுதான் புரியவில்லை. இதில் சில தயாரிப்புகள் Pre Production-லேயே பல லட்சங்களை செலவிடுகிறார்கள்.. 

வெளிநாட்டுக்குச் சென்று பாடல் கம்போஸிங் செய்கிறார்கள். வெளிநாட்டிலேயே பாடல் கேஸட்டை ரிலீஸ் செய்கிறார்கள். கதை டிஸ்கஷனுக்காக வெளிநாட்டுக்கே பறக்கிறார்கள்..! படம் ரிலீஸாகும் வரையிலும் மாதந்தோறும் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களுக்கு கவர் கொடுத்தும், கட்டிங்கை ஊத்தியும் தங்களது படங்களை பிரபலப்படுத்த முயல்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் எத்தனை லட்சங்கள் செலவாகின்றன என்பதை யோசித்துப் பாருங்கள்..!

ஒரு லைட்மேனும், டெக்னீசியனும் காலை 6 மணி கால்ஷீட்டுக்கு ஈஸிஆர் ரோட்டுக்கு வர வேண்டுமென்றால் தனது வீட்டில் இருந்து 3 மணிக்குக் கிளம்பி தன்னை அழைத்துச் செல்ல வரும் வேனிற்காக 4 மணிக்கே காத்திருக்க வேண்டும். 5 மணிக்கெல்லாம் ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு சென்று தனது பணிகளைத் துவக்க வேண்டும். மீண்டும் இரவு 6 மணிக்கு முடிந்தாலோ அல்லது தொடர்ந்து நடந்து 10 மணிக்கு முடிந்தாலோ வீடு திரும்ப 1 மணி ஆகிவிடும். மீண்டும் காலையில் 3 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.. இப்படியே சுழற்சியாக ஓடிக் கொண்டிருப்பவன் தனது குடும்பத்தை எந்தவிதத்தில் கவனிப்பான் என்று நினைக்கிறீர்கள்..?

தங்களது பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள்..? எப்படி படிக்கிறார்கள்..? அவர்களது கல்வி நிலை என்ன என்பதைக்கூட கேட்க முடியாத அளவுக்குத்தான் இந்தத் தொழிலாளர்களின் நிலைமையும் உள்ளது. வேலை இல்லாத காலத்தில் வேலை தேடுவதுதான் இவர்களிடத்தில் இருக்கும் ஒரே வேலை. இவர்களுக்குத் தெரிந்த்து சினிமா தொழில் மட்டுமே.. தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் பல்வேறு பணம் சம்பாதிக்கும் வழிகள் இந்தத் தொழிலாளர்களுக்குத் தெரியாது என்பது மறுக்க முடியாத உண்மை.

தயாரிப்பாளர்கள் நஷ்டப்பட்டால் சில ஹீரோக்கள் தங்களது சம்பளத்தில் இருந்து கோடிகளை விட்டுக் கொடுக்கிறார்கள். அதுபோல தொழிலாளர்கள் விட்டுத் தருவார்களா என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் கேட்பது வேடிக்கையாக இருக்கிறது..! 

பணக்காரர்களிடத்தில் பத்திரமாக வங்கியிலோ அல்லது வீட்டிலோ ச்சும்மா வைத்திருக்கும் கோடிகள் எங்கே..? அன்றாடங்காய்ச்சிகள் அடுத்த வேளை உணவுக்காக வாங்கிச் சேமிக்க நினைக்கும் சில ரூபாய்கள் எங்கே..? எப்படி இவர்கள் இப்படி மனசாட்சியில்லாமல் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை..!? 

ஒரு படம் எடுத்து தயாரிப்பாளர் நஷ்டமடைந்தால் அதற்கு தொழிலாளி எப்படி பொறுப்பாக முடியும்..? முழு பொறுப்பும் இயக்குநரைத்தான் சேரும்.. சிறந்த முறையில் படத்தை எடுக்க தெரியாமல் எடுத்துவிட்டு அதில் வேலை பார்த்த தொழிலாளர்களிடத்தில் நஷ்டஈடு கேட்பது முட்டாள்தனம் இல்லையா..?

மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு நோயாளி இறந்துவிட்டால் மருத்துவமனையின் கட்டணத்தை கட்ட மறுத்தால் அவர்கள் விட்டுவிடுவார்களா..? அல்லது இதே தயாரிப்பாளர்களிடத்தில் அவர்கள் எடுத்த படம் நல்லாயில்லை. பிடிக்கலை.. போர் அடிக்குது.. காசை திருப்பிக் கொடு என்று கேட்டால் இவர்கள் திருப்பித் தருவார்களா..? என்னவொரு அராஜகமான சிந்தனை இது..? அக்மார்க் கொள்ளைக்கார முதலாளித்துவத்தின் கோரப் பல் என்று இந்த ஒரு கேள்வியையே நாம் சொல்லலாம்..!

இப்போது பால்விலையில் இருந்து பேருந்து கட்டணம் வரையிலும் உயர்ந்துவிட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலைவாசியா இப்போதும் இருக்கிறது..? காய்கறிகளின் விலை வாரந்தோறும் உயர்ந்து கொண்டே செல்வது இந்த முதலாளிகளின் காதுகளுக்கும், கண்களுக்கும் தெரியவில்லையா..? சென்னையில் குடும்பம் நடத்துவதே சர்க்கஸ் கம்பெனியில் சிங்கத்துடன் விளையாடுவதுபோல.. இந்த லட்சணத்தில் குடும்ப்ப் பொறுப்புகளையும் சுமந்து கொண்டு கடின உழைப்பை செய்து வரும் இந்த்த் தொழிலாளிகளின் மேல் பரிவு கொண்டு பாசத்துடன் தங்களது சம்பாத்தியத்தை பகிர்ந்து கொண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுதான் ஒரு சிறந்த முதலாளியின் கடமையாக இருக்க வேண்டும்..!

இப்படி தான் செய்யும் பல வீண் செலவுகளையெல்லாம் கணக்கில் வைத்துக் கொள்ளாமல், நினைத்துக்கூட பார்க்காமல், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்காமல் அவர்களை முடக்கப் பார்ப்பது.. தொழிலையே அழிக்கப் பார்ப்பது சர்வாதிகாரம்..! எந்த வகையிலும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாதது..

நேற்றைய தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் 16 படங்களின் ஷூட்டிங் ஊதிய உயர்வு சர்ச்சையால் நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. உண்மையில் இந்தப் படப்பிடிப்புகளை நிறுத்தியிருப்பது தயாரிப்பாளர் சங்கம்தானே ஒழிய பெப்சி தொழிலாளர்கள் அல்ல..! புதிய ஊதிய உயர்வு பற்றிய தகவல் வந்த பின்பு படப்பிடிப்புகளை வைத்துக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர்கள் தங்களது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியிருப்பதால் இந்த ரத்துச் சம்பவம் நடந்துள்ளது..! இதற்கு தொழிலாளர்களை பொறுப்பாக்கக் கூடாது..!

இதற்கிடையில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக எம்.ஜி.ஆர். சமாதி முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் இருப்பதற்காக அனுமதி வேண்டி விண்ணப்பித்துள்ளனர் பெப்சி அமைப்பினர். அத்தோடு கூடவே பெப்சி கார்டு இருப்பவர்களுடன் மட்டுமே எமது தொழிலாளர்கள் வேலை பார்ப்பார்கள் என்று வெளி மாநில அமைப்புகளுக்குக் கடிதம் எழுதி, அவர்களின் உதவியையும் நாடியுள்ளனர்..!

காரணம், யாரை வேண்டுமானாலும் வைத்து வேலை செய்வோம். நாங்கள் கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக் கொண்டு வேலை பார்த்தால் ஓகே என்று தயாரிப்பாளர்கள் கூறியிருப்பதை இயக்குநர் இமயம் பாரதிராஜா நியாயப்படுத்தி தனது ஷூட்டிங்கை நேற்றைக்கு தேனியில் மீண்டும் துவக்கியிருக்கிறாராம்..! அவருடைய சொந்த யூனிட்.. லோக்கல் ஆட்களை வைத்து வேலை வாங்கி வருகிறாராம்..! இது கண்டிப்பாக பெப்சியை உடைக்கும் வேலை என்றே நம்புகிறார்கள் பெப்சி தொழிலாளர்கள்..! 

இரு தரப்பினருமே கடைசியாக ஆத்தாவிடமே சரணடைந்துள்ளனர். படைப்பாளி பிரச்சினையின்போது ஆத்தா செய்த உதவிகளை பெப்சி பட்டியலிட்டு இப்போதும் உதவியை நாடியுள்ளது. நீ போனா நானும் வருவேன் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தினரும் அம்மா, தாயே என்று சரண்டர் ஆகியிருக்கிறார்கள்..! 

தனது சக அமைச்சர்கள், கட்சி எம்.எல்.ஏ.க்கள், கட்சித் தலைவர்கள்,  உடனிருந்த உற்றார் உறவினர்கள் என்று பலரையும் உளவு பார்த்து அந்தத் தகவல்களை படிக்கவே நேரமில்லாமல் இருக்கும் தமிழகத்தின் அன்னைக்கு இதையெல்லாம் கவனிக்க நேரம் இருக்குமோ தெரியவில்லை. 

உங்களுடைய அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்று பத்திரிகையாளர்கள் திருப்பித் திருப்பி கேட்ட பின்புதான் எஸ்.ஏ.சி. உண்மையான சமரசத் தீர்வை சொன்னார். பெரிய பட்ஜெட் படங்களுக்கு தனி ஊதியம், சின்ன பட்ஜெட் படங்களுக்கு தனி ஊதியம் என்று இரண்டாக பிரித்து வழங்கலாமா என்று யோசித்து வருவதாக் கூறியிருக்கிறார்.

உண்மையிலேயே இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இதுதான். தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் கடும் எதிர்ப்பலையைக் காட்டியது சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள்தான். 60 அல்லது 70 லட்சம் முதலீட்டில் படம் தயாரிக்க வருபவர்களுக்கு தேவையான பெப்சியின் தொழிலாளர்களை படத்திற்குத் தேவைப்பட்டாற்போல் குறைத்து அனுப்பலாம். அத்துடன் பட்ஜெட்டிற்கேற்றாற்போல் சம்பளத்தையும் குறைத்துக் கொள்ளலாம். எந்த்த் தொழிலாளர் இதற்கு சம்மதித்து வேலைக்கு போகிறாரோ அவரையே அனுப்பி வைக்கலாம். இதில் தவறொன்றுமில்லை.. தொழிலாளர்கள் தரப்பினர் இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டால் நல்லதுதான்..! 

விஜய் படத்தின் பாடல் காட்சிக்கு 4 கேமிரா தேவையென்றால் வைத்துக் கொள்ளலாம். தப்பில்லை. கூடுதல் தொழிலாளர்களையும் வைத்துக் கொள்ளலாம். சம்பளத்தை 1000 ரூபாயாக உயர்த்திக் கொடுத்தால்கூட தயாரிப்பாளர் இதனால் நஷ்டப்பட வாய்ப்பில்லை. அதே சமயம் லோ பட்ஜெட் படத் தயாரிப்பில் 500 ரூபாய் சம்பளத்தில் தொழிலாளி ஒத்துக் கொண்டு பணியாற்றினால் ஒரு சிறு முதலீட்டு படத்தினை வெளிக்கொணர்ந்த பெருமையில் அவருக்கும் பங்கு கிடைக்குமே..?

சிறு முதலீட்டுப் படங்களும் தமிழ்த் திரையுலகத்தை வாழ வைத்து வருகின்றன. எப்படியெனில், பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்றும் தொழிலாளர்களில் பலரும் தொடர்ச்சியாக பல பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்றியவர்களாத்தான் இருப்பார்கள். கேமிராமேன், இயக்குநர்கள், சொந்த யூனிட் என்றால் அதன் தொழிலாளர்கள் என்று பலரும் தெரிந்தவர்களாகவே இருப்பதினாலும், தன்னையொத்த ரசினையுடையவர்களையே தற்போதைய இளைஞர்களும் விரும்புவதால் அவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. 

வாய்ப்பு கிடைக்காத மூத்தோர்கள் மற்றும் தங்களை முன்னிறுத்தத் தெரியாத தொழிலாளர்களை சிறு முதலீட்டு படங்கள்தான் காப்பாற்றி வருகின்றன. தொழிலாளர்களும் தற்போதைய யதார்த்த நிலைமையை மனதில் கொண்டு இந்த அடிப்படையில் தயாரிப்பாளர்களுடன் அவர்களது சமரச முயற்சியை ஏற்று பேச்சுவார்த்தையை நடத்தி வெற்றி கண்டால் அவர்களுக்கும் நல்லது.. தமிழ்த் திரையுலகத்திற்கும் நல்லது..!

மின்வெட்டு - கிராமப்புறங்களில் அகோரம்..!

17-01-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

10 நாட்கள் இன்பச் சுற்றுலாவை முடித்துக் கொண்டு இன்றுதான் சென்னை திரும்பினேன்..! திண்டுக்கல், வேடசந்தூர், தேனி, உத்தமபாளையம், கம்பம், திருச்சி என்று ஒரு மின்னல் வேக டூர்..! நெருங்கிய சொந்தங்களையும், சொந்தங்களாக இருப்பவர்களையும் 2 ஆண்டுகள் கழித்து நேரில் சந்தித்து நான் உயிருடன் இருப்பதை நிரூபித்துவிட்டு வந்தேன்..!(எப்படியெல்லாம் பில்டப்பு கொடுக்க வேண்டியிருக்கு..?)

டூர் அனுபவங்களை சிறிய தொகுப்பாக அளிக்க விரும்புகிறேன். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நான் எழுதியாக வேண்டும். அதில் முக்கியமானது சென்னையைத் தவிர மற்ற ஊர்களில் நிலவும் கடுமையான மின் வெட்டு..!

வேடசந்தூரையும் தாண்டி 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொம்மலூர் கவுண்டனூரில் அக்கா வீட்டில் இருந்தேன். அங்கேயிருந்த 3 நாட்களும் மின்சாரம் திடீர் என்று வந்தது. திடீரென்று போனது. எந்த நேரத்தில் கட்டாகும்..? எப்போது வரும்..? என்று கிராம மக்களுக்கே தெரியவில்லை. நினைத்த நேரத்திலெல்லாம் மின் வெட்டை அமல்படுத்தி வருகிறார்கள்..!

இது எந்த அளவுக்கு அந்த ஊர் மக்களை பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது தெரியுமா..?


கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாகவரையிலும் நெல் மட்டுமே பயிரிட்டு வந்த அந்தப் பகுதி விவசாயிகள் தற்போது அதனை அடியோடு மாற்றிவிட்டார்கள். சோளம், கம்பு, கடலை, வெங்காயம் போன்ற குறுகிய கால விளைபொருட்களையே இப்போது பயிரிட்டு வருகிறார்கள். ஊர் முழுவதும்  தற்போது கடலைதான் பயிரிட்டிருக்கிறார்கள். ஏன் என்று கேட்டபோது, “நினைச்ச நேரத்துக்கு கரண்ட் வருது.. அதை நம்பி நாம நெல்லை விதைச்சா.. அப்புறம் தண்ணிக்கு எங்க போறது..? குறைந்தபட்சம் காலைல 4 மணி நேரம், சாயந்தரம் 3 மணி நேரமாவது கரண்ட் இருந்து, நாங்க தண்ணி பாய்ச்சினாத்தான் நெல்லுக்கும் நிம்மதி. எங்களுக்கும் நிம்மதி.. இப்பத்தான் வர்றதே தெரியலையே.. இதை நம்பி போன ஆட்சிக் காலத்துல நாங்க நெல்லை போட்டுட்டு பட்ட பாடு இருக்கே.. முடியலீங்க.. அதான் 2007-லேயே இந்த ஊர்ல எல்லாருமே நெல்லு விதைக்காம விட்டுட்டோம்..” என்றார்கள்.

தற்போது அந்த ஊரில் மின்சாரம் காலை 6-8, 10-12, 3-4, 6-8 என்று நிறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நான் இருந்த ஒரு நாள் மாலை 6 மணிக்கு போன மின்சாரம் மறுநாள் மதியம் 4 மணிக்கு நான் அங்கேயிருந்து கிளம்புகின்றவரையிலும் வரவில்லை. என்னத்த சொல்லறது..?

பக்கத்து வீட்டுக்காரர்களின் புலம்பல் பரிதாபமாக உள்ளது. “கல்யாணமாகி பொண்ணும், மாப்பிள்ளையும் ஊருக்கு வந்திருக்காங்க.. இட்லிக்காக மாவு அரைக்கலாம்ன்னா பாதில கரண்ட் கட்டு.. வரும், வரும்னு எதிர்பார்த்து வேற வழியில்லாம ராத்திரி 10 மணிக்கு வீட்டு வாசல்ல இருந்த கல்லுல நானும், என் பொண்ணுமா கை வலிக்க அரைச்சோம்.. இப்படியே 3 நாளும் செய்ய முடியுமா..? உங்கக்கா வீட்ல பாதி மாவு, பக்கத்து வீட்ல பாதி மாவுன்னு 2 இடத்துல கொடுத்து அரைச்சு வைச்சுத்தான் 3 நாளும் சமாளிச்சோம்.. இதை நாங்க எங்க போய்ச் சொல்றது..? ஏதோ நீங்க சிட்டில இருக்கீங்க.. 1 மணி நேரம்தான் மின் வெட்டுன்னு சொல்றாங்க. தப்பிச்சீங்க.. எங்களை மாதிரி கிராமத்துல இருக்கிறவங்களைத்தான் ஏமாளியா நினைக்குது கவர்ன்மெண்ட்டு..” என்றார் ஒரு அக்கா..!

இன்னொரு பக்கத்து வீட்டு அக்காவோ நம்மைப் போன்றவர்களுக்கு சாபமே விட்டுவிட்டார்..! “பிள்ளைக படிக்க உக்காரும்போது கரண்ட் கட்டு..! நீயே பார்த்தீல்ல.. 6 மணிக்கு போச்சு 9 மணிக்கு வருது.. இந்த நேரத்துல பிள்ளைக தூங்குமா? இல்லாட்டி படிக்குமா..? எப்படி ஹோம்வொர்க் செய்யுங்க..! ஸ்கூல்ல இருந்து 2 பஸ் மாறி வீட்டுக்கு வருதுக.. அவ்வளவு அலுப்பா இருக்குறதுகளை 5 மணிக்கே ஹோம்வொர்க் செய்யுன்னு சொல்லி டார்ச்சர் பண்ணிக்கிட்டிருக்கோம். எவ்வளவு வெறுப்பா இருக்கு தெரியுமா..? காலைல இந்தக் குளிர்ல பெரியவங்க நமக்கே எந்திரிக்க முடியலை. சின்னப் புள்ளைகளை எழுப்பி படிக்க வைக்க மனசுக்கு கஷ்டமா இருக்கு..! அவர் ஆட்சிலதான் இப்படின்னு சொல்லி மாத்தி ஓட்டைப் போட்டு வைச்சா.. இப்போ அதைவிட கொடூரமா இருக்கு. போன ஆட்சிலயாவது கரண்ட் போற டைம் கரெக்ட்டா தெரியும். இந்த ஆட்சில அதுவும் போயிருச்சு.. எங்களை மாதிரி பாவப்பட்டவங்க பேச்சையெல்லாம் யார் காது கொடுத்துக் கேக்குறா..? இதே மாதிரி சிட்டில செய்ய முடியுமா..? அங்க மட்டும் ஏன் நாள் முழுக்க கரெண்ட்டை கட் செய்ய மாட்டேன்றாங்க..? அவங்கள்லாம் உடனே பஸ் மறியல், போராட்டம்ன்னு உக்காந்தர்றாங்க.. பாரு.. இங்க 30 வீடுதான் இருக்கு. வீட்ல இருக்குற எல்லாரும் கூலி வேலைக்கு போனாத்தான் அன்னிக்கு கஞ்சியாத்த முடியும்.. இதுல எங்கிட்டு போய் போராடறது..” என்றார் வெறுப்பாக..!


இந்த ஊர் மட்டுமல்ல.. என்னுடைய தாயின் சொந்த ஊரான குரும்பப்பட்டியிலும் இதே நிலைமைதான்..! தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த எனது தாய் மாமாவைப் பார்த்துப் பேசிவிட்டு அவருடனேயே சாயந்தரமாக ஊருக்குள் வந்தபோது, வீட்டு வாசலில் அமர்ந்து பிள்ளைகள் மும்முரமாக ஹோம்வொர்க் செய்து கொண்டிருந்தார்கள். “கரெக்ட்டா 6 மணிக்கு கரண்ட் போயிரும். திரும்ப எப்ப வரும்னு அய்யனாருக்கு மட்டும்தான் தெரியும்.. அதான் இப்பவே.. விளையாடப் போற நேரத்துல எழுதிக்கிட்டிருக்குக..” என்றார் மாமா.

இந்த ஊரிலும் நெல்லை ஓரங்கட்டிவிட்டு சோளத்தையும், கடலையையும், வெங்காயத்தையும் பயிரிட்டிருக்கிறார்கள்..! மாடு இருந்தாலும், விவசாயம் பார்க்கும் பெரிசுகளுக்கு வயதாகிவிட்டதால் தண்ணி இறைக்க முடியவில்லையாம். என் மாமாவுக்கு வயது 72. இந்த வயதிலும் தண்ணி இறைக்கத்தான் செய்கிறார். “ஒரு நாள்விட்டு ஒரு நாளுன்னா முடியும்பா.. டெய்லின்னா உடம்புக்கு முடியல. அதான் நானும் நெல்லை விட்டுட்டு வெங்காயத்தை போட்டுட்டேன். இதுக்கும் தண்ணி வேணும்தான். ஆனால் நெல்லு அளவுக்கு இல்லை.. காலைல இருந்து மதியம்வரைக்கும் தண்ணியை இறைச்சி ஊத்தினா போதும்..” என்றார்..!

திண்டுக்கல்லின் நகர்ப் பகுதிகளிலும் காலை, மாலை என இரு முறையும் சேர்த்து 4 அல்லது 6 மணி நேரம் மின் வெட்டு இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத் தலைநகரம் என்றாலும், இருந்த ஒரேயொரு பூட்டு தொழிலுக்கு பூட்டு போடப்பட்டுவிட்டதால், இந்த மின்வெட்டை அனைவருமே தங்களுக்குப் பழக்கமாக்கிக் கொண்டுவிட்டார்கள்..!

நான் அங்கேயிருந்த அன்றைக்குத்தான் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியனை போட்டுத் தள்ளிவிட்டார்கள். இரவு 8 மணிக்கு. வீட்டு வாசலில் சேரில் அமர்ந்து திருச்சியில் இருந்த சுந்தரி என்ற தனது நண்பியுடன் கடலை போட்டுக் கொண்டிருந்தவரின் அருகில் 3 பேர் திடீரென்று சைக்கிளில் வந்து இறங்கியிருக்கிறார்கள். அதில் இரண்டு பேர் சட்டை அணியாமல் கிராமத்தான் போல் இருந்திருக்கிறார்கள். “யாருப்பா நீங்க..” என்று போனை ஆனில் வைத்தபடியே கேட்டிருக்கிறார் பாண்டியன். நொடியும் தாமதிக்காமல் அவரை எழுந்திருக்க விடாமலேயே வெட்டித் தள்ளியிருக்கிறார்கள் கொலையாளிகள். சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளே இருந்து ஓடி வந்த ஆட்கள் கொலையாளிகளைத் தேடியபோது, அந்தப் பகுதி முழுவதும் கும்மிருட்டு..! 

யெஸ்.. திண்டுக்கல் நந்தவனப்பட்டி பகுதியில் இரவு 8-9 கரண்டு கட்டு..! யார் என்ற அடையாளமே தெரியவில்லை.. சைக்கிளை மட்டுமே போலீஸ் கண்டெடுத்திருக்கிறது. தற்போது 2 பேர் கோர்ட்டில் சரணடைந்தாலும், கொலையாளிகள் அவர்கள் இல்லை என்றே போலீஸ் இப்போதுவரையிலும் நம்புகிறது. சரி.. ஆளை பிடித்து நொங்கு உரித்தால், காட்டுகிற இடத்தில் கையெழுத்து போடத்தான் போகிறார்கள். ஆனால் கோர்ட்டில் நிக்காதே.. நேரில் பார்த்த சாட்சியே இல்லை..! என்ன கலர் சட்டைன்னுகூட சொல்ல முடியாது.. எத்தனை பேரை அரெஸ்ட் காண்பித்தாலும், இந்த கேஸ் கடைசியில் என்னாகும் என்று பத்திரிகை அலுவலகங்களில் வாட்ச்மேன் வேலை பார்ப்பவர்கூட சொல்லிவிடுவார்..!  மின் வெட்டினால் ஒரு உயிர் பறி போயிருக்கிறது..!

தேனி, பாளையம், கம்பம் பகுதிகளிலும் காலை, மாலை இரு வேளைகளிலும் 4 மணி நேர மின் வெட்டு. இடையில் திடீரென்று ஏதாவது ஒரு நாள் மின் பராமரிப்பு என்று சொல்லி ஒரு நாள் முழுக்க நிறுத்தி விடுகிறார்களாம்..! 

ஏற்கெனவே கம்பம் பள்ளத்தாக்கு பகுதியிலும் நெல் விளைச்சலை மட்டுப்படுத்தி வெற்றிலை, சோளம், கம்பு, வெங்காயம், கடலை என பயிரிட்டு தங்களைக் காப்பாற்றி வருகிறார்கள். இதில் அரசு வேளாண்மை அதிகாரிகள் ஊர், ஊராக வந்து நெல் விளைச்சலை அதிகப்படுத்த விவசாயிகளை ஊக்குவித்து வருகிறார்கள். வருபவர்களிடம் “மொதல்ல கரெண்ட்டை கரெக்ட்டா கொடுங்க. அப்புறமா வந்து பேசுங்க..” என்று சொல்லித் திருப்பியனுப்பவதாகச் சொன்னார் ஒரு சொந்தக்கார விவசாயி..!

“இப்போதைக்கு முல்லை பெரியாறு பிரச்சினைக்காக தீவிரமா இருக்கிறதால மின் வெட்டு இந்தப் பக்கம் 2 வது விஷயமா போயிருச்சு. அதைப் பத்தி இங்க யாரும் பெரிசா கவலைப்படலை.. ஆனா முல்லைப் பெரியாறு மட்டும் இப்போ மேட்டரா இல்லைன்னா, மின் வெட்டு இந்தப் பகுதியில் பெரும் கலவரத்தை உண்டு பண்ணியிருக்கும்..” என்றார் எனது உறவினர் மாமா ஒருவர்.

இப்படி விவசாயத் துறையில் ஒரு தலைகீழ் மாற்றத்தையே கொண்டு வந்திருக்கும் இந்த மின் வெட்டு விவகாரத்தை, மாநில அரசு இன்னமும் சீரியஸாகக் கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

மின் வெட்டை தீவிரமாக கிராமப்புறங்களில் அமல்படுத்தி மெட்ரோபாலிட்டன் நகரங்களுக்கு 23 மணி நேரமும் சப்ளையைக் கொடுத்து வருகிறார்கள். ஆட்சியின் மீதான விமர்சனம் என்பதே பெருநகர மக்கள் சொல்வது மட்டும்தான் என்று இந்த ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள் போலும். 

மின் உற்பத்தியைப் பெருக்க சென்ற தி.மு.க. ஆட்சியில் போடப்பட்டிருக்கும் திட்டங்களின் மூலம் இன்னும் 3 ஆண்டுகள் கழித்துதான் மின் சப்ளை கிடைக்கும் என்கிறார்கள். அதுவரையிலும் இந்தக் கொடுமைதான் என்றாலும், அப்போது கூடுதல் சப்ளை கிடைத்தாலும், அதையும் நகர மக்களை திருப்திபடுத்த வேண்டி நகரங்களுக்கே திருப்பியனுப்பி, கிராமத்தினரை அம்போவாக்கும் முயற்சிதான் அப்போதும் நடக்கப் போகிறது..!

தற்போதைக்கு ஆத்தா ஜெயலலிதாவின் கவலையெல்லாம் உடன் பிறவா சகோதரியும், அவர்தம் சொந்த பந்தங்களும் சுருட்டி வைத்திருக்கும் பணத்தை அவர்களிடமிருந்து கைப்பற்ற வேண்டும் என்பதும், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து எப்படியாவது தப்பியாக வேண்டும் என்பதும்தான்..! இந்த லட்சணத்தில் மக்களின் குறைகளை காது குடுத்துக் கேட்கக்கூட இந்த ஆட்சியில் ஒருவரும் தயாராக இல்லை என்பது நமது துரதிருஷ்டம்தான்..! 


வேட்டை - சினிமா விமர்சனம்..!

14-01-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

புதிய மிக்ஸியில், புது கம்பெனி மசாலாத் தூள்களைச் சேர்த்து பழைய பாணியில், காரமான மீல்ஸை திரும்பவும் கொடுத்திருக்கிறார் லிங்குசாமி. விநியோகஸ்தர்கள் தரப்பில் சந்தோஷப்படுகிறார்கள் படம் தப்பித்துவிட்டது என்று.. பொங்கல் ரிலீஸில் முதலிடத்தில் உள்ளது என்று பூரிக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் தரப்பு. தியேட்டர்களில் இளசுகளின் கை தட்டல் ஓங்கி ஒலிக்கிறது நண்பனைவிடவும். சந்தேகமேயில்லாமல் இந்த வருடத்தின் முதல் ஹிட் இதுவே என்று சொல்லிவிடலாம்..!



 
கே.பாக்யராஜின் 'அவசர போலீஸ் 100' படத்தின் 2 பாக்யராஜ்களின் கேரக்டர் ஸ்கெட்ச்சை அப்படியே வைத்துக் கொண்டு தற்காலத்திற்கு ஏற்றாற்போல் திரைக்கதைக்கு டிங்கரிங் வேலை செய்திருக்கிறார். திரைக்கதை உருவாக்கத்தில் அஜயன்பாலா சித்தார்த், கிருஷ்ணா டாவின்சி போன்றோரெல்லாம் இருந்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..! பாவம் அண்ணன் பாக்யராஜ்.. ராயல்டி கேக்க முடியாத சோகத்தில் இருப்பார்..!
 
பயந்தாங்கொள்ளி அண்ணன்.. அடிதடிக்கு அஞ்சாத தம்பி.. ஆனாலும் பாசக்கார சகோதர்கள். கண்டிப்புடன் வளர்க்கும் இன்ஸ்பெக்டர் அப்பா.. அவரது மரணத்துக்குப் பின் வீடு தேடி வருகிறது வேலை அண்ணனுக்கு. அண்ணன் பயந்தாலும் தம்பியின் நச்சரிப்பு தாங்காமல் இன்ஸ்பெக்டர் வேலையை ஏற்றுக் கொள்கிறார்.

அடிதடிகளுக்கும், வெட்டுக் குத்துக் கொலைகளுக்கும் அஞ்சாத தூத்துக்குடி நகரின் இன்ஸ்பெக்டராகிறார் அண்ணன் மாதவன். இவர் நடவடிக்கை எடுப்பதற்காக போக வேண்டிய இடங்களுக்கெல்லாம் தம்பி ஆர்யா சென்று தன் புஜபலத்தை வைத்து ரவுடிகளை அடக்க.. பாராட்டெல்லாம் அண்ணனுக்கு போய்ச் சேர்கிறது..!

இடையில் காதலே இல்லாமல் மாதவன்-சமீரா ரெட்டியின் திருமணமும், அதைத் தொடர்ந்து ஆர்யா-அமலாபால் காதலும் தொடர்கிறது. மாவட்டத்தின் பெரிய ரவுடியின் கடத்தல் சரக்கை சகோதரர்கள் பிளான் செய்து பிடித்ததால் கோபப்படும் பெரிய ரவுடி, சகோதரர்களை பழி தீர்க்க முயல்கிறார். சகோதரர்களின் முகமூடி பாசம் ஒரு கட்டத்தில் ரவுடிகளுக்குத் தெரிந்துவிட நேருக்கு நேர் மோதுகிறார்கள். முடிவு உங்களுக்குத் தெரிந்ததுதான்..!

முதல் ஸ்கோர் மாதவனுக்குத்தான்..! எந்த ஹீரோயிஸ வட்டத்துக்குள்ளேயும் இதுவரையில் சிக்காதவர் என்பதால் பயந்த பார்ட்டி கேரக்டர் கச்சிதமாகப் பொருந்துகிறது. தியேட்டரில் ரவுடிகளைப் பார்த்து பயப்படும் காட்சியில் தொடங்குகிறது இவரது அக்கப்போர்..! போலீஸ் ஸ்டேஷன் முன்பாக எரியும் நபரை பார்த்து தம்பி இராமையாவின் பின்பாக பதுங்கும் மாதவனா.. பிற்பாதியில் வெளுத்துக்கட்டுவது என்ற சந்தேகத்தை ஏற்படும் அளவுக்கு அவரது ஆக்டிங் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறது..!


 
எந்த ஹீரோவும் செய்யத் துணியாத, சொல்லக் கூச்சப்படும் வார்த்தைகளை அள்ளி வீசி ஆர்யாவுக்கு பட்டுச் சாமரம் வீசியிருக்கிறார் மாதவன்.. கிளைமாக்ஸ் காட்சியி்ல அவர் ஆர்யாவுக்குக் கொடுக்கும் பில்டப்பை கேட்டால் மற்ற ஹீரோக்கள் காதில் மட்டுமில்லை... கண்ணிலும் புகை வரலாம்..! இதற்காகவே மாதவனை தனி மேடை போட்டு பாராட்டலாம்..!

மாதவனுக்குள் ரெளத்ரம் வந்த பின்பு அவருடைய தெனாவெட்டு ஸ்டைல் கொஞ்சம் கவர்ந்தாலும், ஆர்யா இதையே ஆர்ப்பாட்டமில்லாமல் தனியாக ஸ்கோர் செய்து விடுகிறார்..! இறந்து கிடக்கும் அப்பாவின் உடலைப் பார்த்து “நாளைக்கு போகணும்னு சொன்னாரே.. இதுதானா அது..?” என்று சொல்வதிலேயே அவருடைய கேரக்டரை பதிய வைத்துவிட்டார் இயக்குநர். படம் நெடுகிலும் அவருடைய உடலின் ஒவ்வொரு பாகமும் அடிதடியில் இறங்கியிருக்கிறது..!

கூடவே அமலாபாலுடன் அவர் செய்யும் காதல் கலாட்டாவும் ரசிக்க வைக்கத்தான் செய்கிறது..! கண்ணாடியில் அமலாவின் உடலை பார்த்துவிட்டதை மறைமுகமாக ஆர்யா சொல்லிவிட்டுப் போக அதன் பின்பு அமலா படும் வெட்கத்தையும், தொடரும் அக்கப்போரையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார் இயக்குநர். அமலாவை மணக்க வரும் அமெரிக்க மாப்பிள்ளைக்கு அமலாவும், ஆர்யாவும் கொடுக்கும் ட்ரீட்டும், அந்தக் கல்யாணக் கலாட்டாவும் செம கலகலப்பு..!

படத்தில் 2 காட்சிகளில் மட்டுமே தியேட்டரே கை தட்டலால் அதிர்ந்தது. சமீராரெட்டி ஆர்யாவின் காலில் விழுந்து கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ள கெஞ்சும்போது சமீப காலமாக சினிமாவுலகில் மறக்கடிக்கப்பட்ட ஆணாதிக்கத்தை, இயக்குநர் லிங்குசாமி மீண்டும் கொண்டு வந்துள்ளது தெரிகிறது..! இதற்காக அவருக்கு விரைவி்ல் வெளியுலகத்தில் மண்டகப்படி கிடைக்கும் என்று நினைக்கிறேன். இந்தக் காட்சியில் முதல் தரமான அதிகக் கை தட்டல் கிடைத்ததையும் நினைத்துப் பார்த்தால், தமிழ்நாட்டு இளைஞர்களே இந்த மனப்பான்மையில்தான் இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

2-வதாக மங்காத்தா படத்தின் காட்சியில் அஜீத் தோன்றும்போதும் தியேட்டரே ஆடிப் போனது. ரஜினிக்கு பின்பு ஸ்டைல் என்றால் அது அஜீத்துதான் என்றாகிவிட்டது.. அனைத்துவகை ரசிகர்களுக்கும் பிடித்துவிட்டது.. இதனையே அஜீத் தொடர்ந்தால் அவருக்கும் நல்லது...!
 
 

இரண்டு ஹீரோயின்கள். அக்காவா சமீரா ரெட்டியும், தங்கையாக அமலாபாலும். சமீராவுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தவர் இப்படி கொலை செய்திருக்க வேண்டாம்..! உதட்டசைவு கூட ஒத்து வரவில்லை..! இதையும்விட குரலின் கொடுமைதான் தாங்க முடியவில்லை. சமீரா ரெட்டி போன்ற அக்காமார்களுக்கு இப்படியொரு கர்ணக் குரல் தேவைதானா..?

பாடல் காட்சிகளில் இருவரும் காட்டியிருக்கும் தாராளத்திற்கு நன்றி..! அமலா பால் இனிமேல் ஆடப் போகும் திரைப்படங்களுக்கெல்லாம் மொத்தமாக இதில் இடுப்பை ஆட்டிவிட்டார் என்றே சொல்லலாம். பாவம்.. சுளுக்கு பிடித்திருக்காது..?

“ச்சும்மாதான் இருக்கேன்..” என்ற ஆர்யாவின் பதிலுக்கு சமீரா காட்டும் கடுமையும், மாதவனை வாடா, போடா என்று கூப்பிடக் கூடாது என்று சொல்லும்போது கதை திசை திரும்பப் போகிறதோ என்று நினைத்தேன். நல்லவேளை.. அந்தத் தவறை இயக்குநர் செய்யவில்லை.. மீண்டும் மசாலாவுக்குள்ளே இறக்கி நம்மைக் கரைத்துவிட்டார்..!

அமலாபாலின் பால் வடியும் முகத்தில் இப்படியொரு டெர்ரர் இருக்குமா என்று நினைக்கவில்லை. அமெரிக்க மாப்பிள்ளையுடன் காரில் சென்று கொண்டிருக்கும்போது ஆர்யாவுக்கு வைக்கின்ற லிப் கிஸ்ஸிலேயே தியேட்டரில் பாதி திட்டுக்கள் ஆர்யாவுக்கு அள்ளி வீசப்பட்டது..! அம்மணி ஏற்கெனவே அவரைக்காயை பாதியாய் அறுத்ததுபோலத்தான் இருக்கிறார். இதில் டான்ஸும் செய்தால் எப்படி..? தாங்க முடியலை.. ஆனாலும் அவருடைய கண்கள் என்னமோ செய்கின்றன..!

3 காட்சிகள் என்றாலும் நச் என்று மனதில் நிற்கிறார் நாசர். முதல் முறை வந்த வேகத்தில் திரும்பும்போது ஸ்டேஷனில் இருக்கும் தப்படிப்பவர்களை அடிக்கச் சொல்லிவிட்டு, தப்பு அடிக்கும் வேகத்தில் தன் தலையை மட்டும் ஆட்டி ஆக்சனும், டான்ஸ் மூவ்மெண்ட்ஸும் கொடுக்கிறாரே மனுஷன்..! வாவ்.. பிறவிக் கலைஞரய்யா இவர்..!

தம்பி இராமையாதான் இன்னொரு குறிப்பிடத்தக்க ஆக்டர். பிழைத்து வந்தவுடன் மாதவன் கேட்கும் “என்னை விட்டுட்டு ஏன் ஓடினீங்க..?” என்ற கேள்விக்குப் பின்பு கதை மாறும் அபாயம் இருந்ததால், “எல்லாம் உங்க மேல இருந்த ஒரு நம்பிக்கைலதான்..” என்ற அவரது பதிலுக்குப் பின்புதான் நமக்கே ஆசுவாசம் ஏற்படுகிறது.. திரைக்கதைக்கு ஒரு பாராட்டு..!

ஒளிப்பதிவு நீரவ்ஷா. பாடல் காட்சிகளில் அக்கா, தங்கைகளையே நளினமாகக் காட்டி திரைக்கு அழகு சேர்த்திருக்கிறார். பப்பரப்பா பாடல் காட்சியில் ஜொலிக்கிறது திரை. ஆனாலும் பாடலுடன் ஒப்பிட்டால் அந்தப் பாடலின் காட்சியமைப்பு சுமார்தான்..!

படத்தில்  ஒட்டவே ஒட்டாதது சண்டைக் காட்சிகள்தான். ஆர்யாவுக்கும், மாதவனுக்கும் அப்படியொன்றும் வயசாகிவிடவில்லையே..! ஏன் இப்படி? மோகன்லாலும், மம்முட்டியும் போடும் சண்டைகள் போல எடுத்துத் திணித்திருக்கிறார்கள்.. ஸ்பீடே இல்லாத ஸ்போர்ட்ஸ் கார் போல..!

லிங்குசாமியின் உடன் பிறவா சகோதரர் நா.முத்துக்குமார் அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார். சந்தேகமே இல்லாமல் ‘பப்பரப்பா’ பாட்டு ஹிட்டுதான்.  கூடவே  ‘கட்டிப் பிடி என்னை’ மற்றும் ‘தையத் தக்கா’ போன்ற பாடல்களும் லிங்குசாமியின் முந்தைய படங்களைத்தான் நமக்கு நியாபகப்படுத்துகின்றன..!

என்னதான் மசாலா என்றாலும், ஒரு லாஜிக் வேண்டாமா..? போலீஸ் ஸ்டேஷன் வாசலில் கொலை நடக்கிறது..! போலீஸ் இன்ஸ்பெக்டரையே அடித்துத் துவைக்கிறார்கள்..! 10 போலீஸோடு போனாலே டிரவுசர் கிழிந்துவிடும் அபாயத்தில் தப்பி ஓடுவார்களே.. எதற்கு இந்த ஹீரோயிஸம் என்பவர்கள் அமைதியாகிவிடுங்கள்..!

லாஜிக்கே பார்க்கக் கூடாத சினிமா இது என்பதால் இது போன்று யோசித்து தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம்.. “ச்சும்மா சிறுத்தை மாதிரி சீறுது..” என்கிறார்கள் என்னுடன் படம் பார்த்த இளசுகள். அவர்களுக்கு ஏற்றாற்போலவே காட்சிகளை வைத்து கடைசிவரையிலும் கொஞ்சம் அந்த வேகத்தை இறக்கிவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் லிங்குசாமி.!

இப்போதெல்லாம் சினிமா பார்க்கப் போனாலே அது விமர்சனம் எழுதத்தான் என்பதால் உண்மையிலேயே என்னால் பல சினிமாக்களை ரசிக்க முடியவில்லை. சினிமா விமர்சனாகவே என்னை நான் வரித்துக் கொண்டிருப்பதால், சினிமாக்காரனாகவும் இருக்க முடியவில்லை..! ரெண்டுங்கெட்டான் நிலைமை..

ஆனால் திருச்சி ஊர்வசி தியேட்டரில் நான் பார்த்த இந்தக் காட்சியில் ரசிகர்களின் ஆரவாரம், கரகோஷம் அனைத்துமே சில மணி நேர சந்தோஷத்தின் வெளிப்பாடு. அவ்வளவுதான். அவர்களுக்குத் தேவை ஜஸ்ட் டைம் பாஸ்.. அதனை தெளிவாக உணர்ந்து எடுத்திருக்கிறார் லிங்குசாமி..

திருப்பதி பிரதர்ஸ் சார்பில் படத்தை எடுத்து நல்ல விலைக்கு யூ டிவிக்கு விற்றிருக்கிறார். இதிலேயே கணிசமாக, கோடிகளில் லாபம் பார்த்துவிட்ட லிங்குசாமிக்கு இந்தப் படத்தின் வெளியீட்டின்போது கிடைத்திருக்கும் இந்த வெற்றியும் நிச்சயம் லாபம்தான்..!

வேட்டை - மசாலா பிரியர்களுக்கு ஏற்ற வேட்டை..!