திருட்டு விசிடி - சினிமா விமர்சனம்

29-09-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மூன்று நண்பர்களின் முதல் எழுத்தை சேர்த்தால் விசிடி என்று வரும். இதுதான் படத்தின் தலைப்புக்கு பொருத்தம். மூன்று பேருமே திருடர்கள் என்பதும் ஒரு காரணம். படத்தின் கதையும் ஹாலிவுட்டில் இருந்து சுட்டது என்பதால் இன்னும் பொருத்தமாகிறது..!

சென்னையில் வேலை வெட்டியில்லாமல், பணம் இரட்டிப்பு, கடன் கொடுக்க முன் பணம், மேலும் சதுரங்க வேட்டை பாணியில் சில வேலைகளையெல்லாம் செய்து பிழைப்பை நடத்தி வருகிறார் ஹீரோ பிரபா. இவரிடம் ஒரு பெரிய அஸைன்மெண்ட் ஒப்படைக்கப்படுகிறது.
தூத்துக்குடியில் இருந்து போதைப் பொருட்கள் அடங்கிய வேனை சென்னைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அந்த வேலை. ஒத்துக் கொள்ளும் பிரபா, இதற்குத் தனக்குத் துணையாக தனது முன்னாள் கூட்டாளிகளான காதல் சுகுமார், மற்றும் மனோவையும் அழைத்துக் கொள்கிறார்.
மேலும் மனோவின் ஏற்பாட்டின்படி சின்னத்திரை நடிகையான தேவதர்ஷினியையும், ரீத்துவையும் குறும்பட படப்பிடிப்பு என்று பொய் சொல்லி தூத்துக்குடிக்கு அழைத்து வருகின்றனர். அங்கேயிருந்து சென்னைக்கு கிளம்பும்வரையில் நன்றாக இருக்கும் நேரம், கிளம்பியவுடன் காற்று வேகத்தில் சுழன்றடிக்க.. குழுவினருக்கு பலவித பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இதையெல்லாம் சமாளித்து சென்னை வந்தார்களா? இல்லையா? என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!
‘We Are The Millers’ என்கிற பெயரில் 2013-ல் வெளிவந்த ஹாலிவுட் படத்தின் வாடை இந்தப் படத்தில் முதலில் இருந்து கடைசிவரையிலும் வீசுகிறது.
படத்தின் துவக்கத்தில் சினிமாத் துறையினருக்காக ஒரு நினைவஞ்சலி பாடல் ஒலிக்கிறது. பின்பு முன் கதைச் சுருக்கத்தை நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி தனது கணீர் குரலில் பேசியிருக்கிறார்.
படத்தை இயக்கியிருக்கும் காதல் சுகுமார் நல்ல நடிகர். காதல் படத்தில் பரத்தின் நண்பராக அறிமுகமானவர். அதற்குப் பின்னர் 160 படங்களில் நடித்து முடித்துவிட்டார். இயக்கம் செய்ய ஆசைப்பட்டு இப்படியொரு படத்தை இயக்கியிருக்கிறார்.
முதல் படம்.. தனது இயக்கம் என்பதால் காமெடி இல்லையேல் வொர்க் ஆகாது என்பதை உணர்ந்து அதற்கேற்றாற்போல் திரைக்கதை அமைத்திருக்கிறார். ஆனால் அழுத்தமில்லாத காட்சிகளாலும், திறமையில்லாத இயக்கத்தினாலும் படம் பல இடங்களில் டிவி சீரியல் போல காட்சியளிக்கிறது.
தேவதர்ஷினி மட்டும் இல்லையெனில் படம் என்னாகியிருக்குமோ என்ற கவலையும் ஏற்படுகிறது. அப்படியொரு நடிப்பை கொட்டியிருக்கிறார் தேவதர்ஷினி. இன்னொரு பக்கம் விச்சு அண்ட் கோ-வின் காமெடி காமெடியாகவே இருந்தாலும், சில இடங்களில் ரசிக்க முடிந்த்து..!
செந்திலின் கேரக்டர் சுத்த வேஸ்ட். அந்தக் காட்சிகளெல்லாம் நம்மை சோதனைக்குள்ளாக்குகின்றன. படத்திற்காகவே ஹீரோயின் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். 2 டூயட்டுகளில் பாடிவிட்டு அக்கடா என்று கடைசியில் துப்பாக்கியுடன் வந்து மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களின் கிளைமாக்ஸை நினைவுபடுத்துகிறார்.
இயக்கம் ஏனோ தானோவென்று இருந்தாலும், நடிகர்களின் சொந்த நடிப்புத் திறமையினால் கொஞ்சம், கொஞ்சம் சமாளித்து கடைசிவரையிலும் படத்தை பார்க்க வைத்திருப்பதே இந்தப் படத்தின் இயக்குநரின் சாமர்த்தியம்..!
சின்ன பட்ஜெட்.. புதிய இயக்குநர், புதிய தொழில் நுட்பக் கலைஞர்கள்.. புதிய தயாரிப்பாளர்.. தங்களால் முடிந்ததை படமாக உருவாக்கியிருக்கிறார்கள். இதனாலேயே படம் நன்றாக இருக்கிறது.. சூப்பர். அட்டகாசம்.. என்றெல்லாம் வாழ்த்திவிட முடியாது..  இருந்தாலும் இன்னும் திறமையை வளர்த்துக் கொண்டு படமெடுங்கள் என்று வாழ்த்தினால் ஏற்றம் பெறுவார்கள் என்பதால் அடுத்தப் படத்தை வெற்றிப் படமாக்க வாழ்த்துகிறோம்..!

ஜிப்பா ஜிமிக்கி - சினிமா விமர்சனம்

28-09-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஆணுக்குரிய ஜிப்பாவையும், பெண்ணுக்குரிய ஜிமிக்கையும் பெயர் பொருத்தத்திற்காக மட்டுமே தலைப்பாக வைத்திருக்கிறார்கள். மற்றபடி வழக்கமான ஆண், பெண் ஈகோத்தனமும், கொஞ்சம் செயற்கையான சினிமாத்தனமும் கலந்து எடுக்கப்பட்ட படம் இது.

சின்ன வயதில் இருந்தே சண்டை கோழிகளாக இருந்து வருகிறார்கள் ஹீரோ கிரிஷ்க் திவாகரும், ஹீரோயின் குஷ்பு பிரசாத்தும்.. பள்ளியில் படிக்கும்போதும், கல்லூரியில் படிக்கும்போது இது தொடர்ந்து இப்போது ஒரே கம்பெனியில் வேலை பார்க்குமிடத்திலும் இதே அக்கப்போர்தான்..
ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமலேயே எதற்காக சண்டை போடுகிறோம் என்பது தெரியாமலேயே ஒருவரை மற்றவர் வெறுக்கிறார்கள். இவர்கள் இப்படியிருக்க.. இவர்களது அப்பாக்களோ நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்.
இருவருக்கும் திருமணம் செய்து வைத்து இதுவரையில் நண்பர்களாக இருந்த நாம் சம்பந்திகளாகிவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்தக் கல்யாணத்திற்கு ஹீரோயின் ஒப்புக் கொள்ள மறுக்கிறார். ஹீரோயின் அழைத்து வருவது எனது பொறுப்பு என்று அவரது பாட்டி சொல்ல அதை நம்பி நிச்சயத்தார்த்தத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். கடைசிவரையிலும் ஹீரோயின் அசைந்து கொடுக்காமல் போக.. அவர் இல்லாமலேயே நிச்சயத்தார்த்தம் நடந்தேறுகிறது.
இடையில் இவர்களது கம்பெனியில் வேலை செய்யும் ஒருவரது திருமணம் கர்நாடக மாநிலம் கூர்க்கில் நடைபெறுவதால் இருவருமே அங்கே புறப்படுகிறார்கள். “அவங்க டூர் போயிட்டு வரட்டும். அப்புறமா நாம பேசி சரி பண்ணலாம்…” என்று பெற்றவர்கள் தங்களைச் சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள்..
இவர்கள் இருவரின் பயணம் தொடர்ந்ததா..? காதல் உருவானதா..? கல்யாணம் நடந்ததா என்பதெல்லாம் திரையில் மட்டுமே பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவு பின்னியெடுத்திருந்தது. ‘இவ்வளவு கலர்புல்லாக எடுத்திருக்கிறாரே.. படத்தில் ஏதோ ஒன்று இருக்கும்’ என்று நினைத்து படம் பார்க்க உட்கார்ந்தால்.. இப்படியா இயக்குநரே ஏமாற்றுவீர்கள்..?
இசை வெளியீட்டு விழாவில் காட்டிய கலர்புல் பிரதி படத்தில் இல்லாததால் படம் முழுவதுமே டிஐ செய்யப்படாமல் ஒளிப்பதிவின் வீரியம் தெரியாமல் மங்கிப் போய் இருந்தது.. வன்மையான கண்டனங்கள்..
ஹீரோ கிரிஷ்கிற்கு இதுதான் முதல் படம் என்பது நன்றாகவே தெரிகிறது.. இவர் இன்னும் போக வேண்டிய உயரம் நிறையவே இருக்கிறது. நல்ல இயக்குநர்கள் கிடைத்து இன்னும் சிறப்பான கதை கிடைத்து நடிப்பில் தேர்ந்தால் நிச்சயம் ஜெயிக்கலாம்..
ஹீரோயின் சின்ன குஷ்புவாக வருவார் என்று அனைவரும் சொல்லிக் கொண்டிருக்க.. படத்தில் ஏமாற்றம்தான்.. குஷ்பு போல அழகாக இருப்பது முக்கியமல்ல.. கொஞ்சம் நடிக்கணும் தாயி.. அடுத்தத் தடவை நல்ல வேடம் கிடைத்து நடிப்புக்கு தீனி கொடுத்து நம்மை காப்பாற்றுவாராக..!
‘ஆடுகளம்’ நரேனும், ‘தாயுமானவன்’ ஆதியும்தான் இயக்குநரின் பெயரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். நல்ல நடிப்பு. இளவரசு மற்றும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனின் கேரக்டர் ஸ்கெட்ச்சுகள் திடுக்கிட வைத்தன. நெகிழ வைத்தன.. இளவரசு தனது மனைவி பற்றி சொல்லும் கதை ஒரு சிறுகதைக்குச் சம்மானது.. அதேபோல் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனின் கதையும்தான்..! படத்தில் குறிப்பிட வேண்டிய விஷயங்கள் இந்த இரண்டும்தான்..!
ஒரு காட்சியில் அனாதை பையனை அணைத்து ஆறுதல் சொல்லும் ஹீரோவிடம் அந்தப் பையன் ‘என்னை இதுவரைக்கும் யாரும் இப்படி கட்டிப் பிடிச்சதில்லை’ என்று சொல்லி கண் கலங்கும் காட்சியில் இயக்குநர் பாராட்டைப் பெறுகிறார்.
அதேபோல் கர்நாடக, தமிழக காவிரி பிரச்சினையை வைத்து ஒரு காட்சியில் கர்நாடக மக்களுக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார் இயக்குநர். பாவா லட்சுமணனின் அந்த ‘மாமா’ வேலை படத்திற்கு எந்த உதவியையும் செய்யவில்லை. நீக்கியிருக்கலாம்..
ஏற்கெனவே சொன்னதுபோல ஒளிப்பதிவாளரின் உழைப்பு டிஐ செய்யாமல் விட்டதினால் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.. இசையும், பாடல்களும் கேட்கும்படி இருக்கின்றன என்பது ஒரு ஆறுதல்..
பழைய கதைதான்.. புதிதாக சொல்ல வந்தால் இன்னும் புதிதாக சிந்தித்து வேறு திரைக்கதையில் சொல்லியிருக்க வேண்டும். சுவாரஸ்யமில்லாத திரைக்கதையினால் படம் பல இடங்களில் நொண்டியடிக்கிறது..
கதை, திரைக்கதை, இயக்கத்தில் இயக்குநர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் படத்தை குறிப்பிடத்தக்க படமாகக் கொண்டு வந்திருக்கலாம்..!
இயக்குநர் அடுத்த முறை ஜெயிக்க வாழ்த்துகிறோம்..!

குற்றம் கடிதல் - சினிமா விமர்சனம்

38-09-3025

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘உலகத் திருமறை’ என்று கொண்டாடப்படும் ‘திருக்குறள்’ தமிழ் மொழிக்குக் கிடைத்த மிகப் பெரிய கொடை. ஆனால் அதில் இருக்கும் ஒரு குறளைக்கூட உலக மக்கள் யாருமே பின்பற்ற முடியாது.. அதுதான் இந்த நூலூக்குக் கிடைத்திருக்கும் தனி சிறப்பு.
மனித வாழ்வியலை அக்கு அக்காகப் பிரித்து இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்வதெல்லாம் படிக்கின்றபோது மிக எளிதாகத்தான் இருக்கிறது. கருத்தும் பிரமிப்பாக தோன்றுகிறது. ஆனால் பின்பற்றத்தான் முடியவில்லை.
அந்த திருக்குறளில்  பொருட்பாலில் அரசியல் இயலில், குற்றங் கடிதல் அதிகாரத்தில் 434-வது குறளாக வருகிறது இக்குறள்..!
“குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை”
இதன் விளக்கம்.. ஒருவன் குற்றம் புரியாமல் இருப்பதையே தன்னுடைய நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால், அவன் செய்கின்ற குற்றமே அவனுக்குப் பகையாக மாறும்.
கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் யாரால் பின்பற்ற முடியும்..? இந்த இரண்டு வரிகளை வைத்து இன்றைய நாட்டு நடப்புக்கு ஏற்றாற்போல் ஒரு கதையை எழுதி அதனை தனது அழுத்தமான, அபாரமான இயக்கத்தினால் நேரம் போவது தெரியாமல் பார்க்கக் கூடிய ஒரு திரைப்படமாக உருவாக்கி கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜி.பிரம்மா.

பெற்றோர்களை எதிர்த்து காதல் திருமணம் செய்திருக்கிறார்கள் இந்துவான ராஜ்குமாரும், கிறித்துவரான ஆசிரியை ராதிகா பிரசித்தாவும்..! திருமணம் முடிந்து அதற்கான லீவும் முடிந்து முதல் நாள் பள்ளிக்குச் செல்கிறார். இன்னொரு ஆசிரியர் அவசரமாக பெர்மிஷனில் செல்வதால் அவருடைய வகுப்பை கவனித்துக் கொள்ள அந்த வகுப்பிற்குச் செல்கிறார்.
அங்கேயிருக்கும் ஒரு துடுக்குத்தனமான மாணவனின் செயலைக் கண்டு திடீர் கோபமாகி அந்தப் பையனின் கன்னத்தில் அறைகிறார் ராதிகா. பட்டென்று கீழே விழுகும் சிறுவன் மயக்கமாகிறான். மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றால், அங்கே கோமா நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
இது பெரிய பிரச்சினையாகும் என்பதை ஊகிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராதிகாவையும், அவரது கணவரையும் ஊரைவிட்டுப் போகும்படி சொல்லி அனுப்பி வைக்கிறார். பையனின் விதவை அம்மாவும், கம்யூனிஸ்டான மாமாவும் ஓடி வருகிறார்கள். தோழர் மாமா பெரும் கோபம் கொண்டு ராதிகாவைத் தேடுகிறார்.
இன்னொரு பக்கம் மீடியாக்களில் இது பெரிய விஷயமாக அலசப்பட ராதிகாவின் வீடு, தலைமை ஆசிரியரின் வீடு.. பள்ளி மாணவிகளின் வீடு இவற்றிலெல்லாம் மீடியாக்கள் உட்புகுர.. ஒரு பள்ளி பிரச்சினை தேசிய பிரச்சினையாகிறது..
குற்றவுணர்வோடு ஊரைவிட்டு ஓடும் ராதிகாவால் இதனையெல்லாம் எதிர்கொள்ள முடியவில்லை. இவரைச் சமாதானப்படுத்த முடியாமல் தவிக்கிறார் இவரது கணவர். இறுதியில் என்னதான் ஆனது என்பதை ஒரு சோக காவியமாக படைத்திருக்கிறார் இயக்குநர்.
மலையாள இயக்குநர் சிபிமலயில் படங்களில் மட்டுமே இது போன்ற சோகம் கப்பிய ஷாட்டுகளையும், காட்சிகளையும் தொடர்ச்சியாக பார்க்க முடியும். அப்படியொரு ஈர்ப்பை இந்தப் படம் கொடுத்திருக்கிறது.
அவசரத்தனமான குணமுடைய டீச்சர் ராதிகா.. இதற்கு நேர் எதிரான கணவன், பொறுப்பான தலைமை ஆசிரியர்.. இவருக்கு இணையான இவரது மனைவி.. பள்ளியில் செக்ஸ் கல்வி அவசியமா என்று விவாதிக்கும் அளவுக்கு வெளிப்படையாகப் பேசும் டீச்சர்கள். இதைத் தவறென்று சொல்லும் ஒரு அம்மாஞ்சி வாத்தியார்.. பெந்தகோஸ்தே இறைப் பணியில் இருக்கும் ராதிகாவின் அம்மா.. மகனுக்காகவே உயிர் வாழ்வதை சில காட்சிகளிலேயே காட்டிவிடும் அந்தத் தாய்.. கம்யூனிஸ்ட் தோழராக இருப்பதால் கேள்வி கேட்பதிலும், நியாயத்திற்கு போராடுவதிலும் சளைக்காத பையனின் மாமா.. அந்த துடுக்குத்தனமான பையன்.. ஒரு நிமிடத்தில் டீச்சரின் செயலை மாற்றிப் பேசும் சிறுமி..  நடித்தே காரியம் சாதிக்கத் துடிக்கும் பெண் போலீஸ் அதிகாரி.. மருத்துவர் என்கிற பெயரையே திமிரானது என்பதைக் காட்டத் துடிக்கும் தனியார் மருத்துவமனை தலைமை மருத்துவர்.. இப்படி படத்தில் வரும் அத்தனை கேரக்டர்களின் குணாதிசயங்களையே தனி விமர்சனமாக எழுதலாம்.
இந்த அளவுக்கு நுணுக்கமாக.. மிகக் கவனமாக பார்த்து, பார்த்து செதுக்கியிருக்கிறார் இயக்குநர். பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கும் டீச்சரான ராதிகா தனது அழகான, ஈர்ப்பான நடிப்பால் படம் முழுவதையும் ஆக்கிரமித்துவிட்டார். அடித்துவிட்ட பதற்றத்துடன் தவித்து.. பின்பு கோபத்துடன் சிறுமியை அடிக்க கையை ஓங்கிய நிலையில் நின்று பார்க்கும் காட்சியிலேயே படத்தின் கதையை உணர்த்திவிட்டார்.
அவருடைய அவசரத்தனமான கேரக்டர் குணாதிசயங்களை தாலியை மறைக்க நினைத்து பின்பு மனம் மாறி வெளியில் எடுத்துவிடுவது.. லாரியில் பட்டென்று ஏறுவது.. காலையில் பூசிய பொட்டை சட்டென்று அழிப்பது.. மத துறப்புதான் தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியதோ என்று நினைப்பது.. திடீரென்று பஸ்ஸில் இருந்து காணாமல் போவது.. அந்தப் பையனோட அம்மாவை பார்க்க வேண்டும் என்று சொல்வது என்ற காட்சிகளிலெல்லாம் ஒரு தவியான தவிப்பை படம் பார்க்கும் ரசிகனுக்குள்ளும் திணித்திருக்கிறார் ராதிகா. வெல்டன் மேடம்..
இவருடைய கணவராக நடித்தவர் நிச்சயம் மேடை நாடகங்களில் நடித்தவராக இருப்பார் என்று நினைக்கிறோம். பேசுகின்ற பேச்சுக்கேற்றாற்போன்று உடல் மொழியையும் வெளிப்படுத்தியுள்ளார். ராதிகாவைக் கண்டித்து பேசுவதாகட்டும்.. ஹோட்டல் அறையில் தனக்குத்தானே பேசிக் கொண்டு நிற்கும் ராதிகை பார்த்து துணுக்குற்று அவரை அணைத்து ஆறுதல் சொல்வதாகட்டும்.. மனைவியைத் தேடியலைந்து கடைசியாக பார்த்தவுடன் கோபப்படாமல் அவர் பேச்சைக் கேட்டு நடப்பதாகட்டும்.. ஒரு பொறுப்பான கணவனாகவும், சந்தர்ப்பம் தெரிந்தவராகவும் தெரிகிறார்.
ஆட்டோவை எடுத்துக் கொண்டு தனியே ஓட்டும் மகனை விரட்டிப் பிடித்து நாலு சாத்து சாத்துவதில் தெரியும் அந்த தாயின் பாசம்.. மருத்துவமனையில் உம்மென்று அமர்ந்து தனது சோகத்தை பகிரக்கூட தெரியாமல் அந்தத் தாயாக நடித்தவருக்கு மிகப் பெரிய பாராட்டு கிடைக்கட்டும்.. கடைசியாக ராதிகா அவரைத் தேடி வந்து அணைத்துக் கொள்ளும்போது அவர் பேசும் வசனங்களும், நடிப்பும் மனதை பிசைய வைக்கிறது..!
இந்த்த் தாயின் சகோதரனாக கம்யூனிஸ்ட் தோழனாக வரும் நவநீதனின் கேரக்டர் இவர் வருகின்ற காட்சிகளிலெல்லாம் டென்ஷனை கூட்டியிருக்கிறது. ஓங்கிய குரலில் எப்போதும் பேசுபவர்.. கோபத்துடன் பிடி மாஸ்டரை அடிப்பவர்.. தலைமை ஆசிரியரிடம், “அந்த டீச்சர் எங்கே..?” என்று ஆக்ரோஷப்படுபவர்.. கொஞ்சம் கொஞ்சமாக சுதியிறங்கி கடைசியாக மாக்சிம் கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவலை ராதிகாவுக்கு பரிசாக்க் கொடுக்கும் அளவுக்கு பக்குவப்பட்டுப் போகிறார். அங்கே ஒரு சிறப்பான கை தட்டலையும் வாங்கியிருக்கிறார் இயக்குநர்.  ஆனாலும் ஒரு கம்யூனிஸ இயக்கத் தோழராக இருந்து கொண்டும் எடுத்த எடுப்பிலேயே கோபப்படுவதும், பி.டி. மாஸ்டரை கை நீட்டி அடிப்பதும் நியாயம்தானா தோழர்..?
வேகமாகவும், கோபமாகவும் தலைமை ஆசிரியர் வீட்டுக்குள் வருபவரிடம் தலைமை ஆசிரியரும், அவரது மனைவியும் சமாளிக்கும்விதமும், இதே நவநீதன் ராதிகாவின் தாயின் வீட்டுக்குப் போய் அவர் ஜெபப் பாடல்களை பாடி முடிக்கும்வரையிலும் காத்திருந்து பின்பு அவரிடத்தில் கொதித்துப் பேசி ‘பிரதர்’.. ‘பிரதர்‘ என்ற அந்தம்மாவின் வார்த்தைகளைக் கேட்டு மனமிறங்கி திரும்பி வருவதெல்லாம் இயக்குநரின் அற்புதமான இயக்கத் திறமையைக் காட்டுகிறது.
அந்தத் துறுதுறு பையனை எங்கேயிருந்து பிடித்தார்களோ தெரியவில்லை. பட்டென்று சிரிக்க வைத்து சட்டென்று நம்மை சோகத்தில் ஆழ்த்துகிறான். டீச்சர்ஸ் ரூமில் செக்ஸ் கல்வி பற்றிப் பேசும் பயாலஜி ஆசிரியையின் கச்சிதமான பேச்சு.. டைமிங்கான வசன உச்சரிப்பு.. தெளிவான நடிப்பு அனைத்துமே அந்தக் காட்சியை ஒன்றிணைத்து பார்க்க வைக்கிறது.
செய்திகளுக்காக அகோரப் பசி கொண்டு அலையும் மீடியாக்களின் விளம்பர வெறியை நூற்றுக்கு நூறு சதவிகிதம் அப்படியே உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். ஏன் அடித்தார் என்கிற விஷயத்தையே கவனத்தில் கொள்ளாமல் பள்ளியில் மாணவர்களை அடிக்கலாமா என்கிற ரீதியிலேயே பிரச்சினையைக் கொண்டு சென்று இதற்கு மனோதத்துவ நிபுணர்களிடம்கூட கருத்துரை கேட்டு தங்களது அறிவுப் புரட்சியை வெளிப்படுத்துகிறார்கள் மீடியாக்காரர்கள்.
ஒரு பெண் நிருபவர் தனது சக ஆண் நிருபரிடம் இந்த விஷயத்தைப் பற்றிப் பேச பேச விஷயம் விபரீதமாக மீடியா, பப்ளிசிட்டி என்பதையும் தாண்டி ஆண், பெண் சமத்துவம் நோக்கில் போவதெல்லாம் சத்தியமான உண்மை. இப்படித்தான் பல விஷயங்களில் பெண்ணியவாதிகள் முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போட்டு பேசுகிறார்கள்.
படத்தில் அதிகம் உறுத்தாமல் இருந்தது ஷங்கர் ரங்கராஜனின் பின்னணி இசைதான். பாடல் காட்சிகள் இரண்டிலுமே கதைகள் சொல்லப்பட்டிருப்பதால் அதிலேயே நமக்கு ஆர்வம் பொங்கி வழிகிறது.  மணிகண்டனின் ஒளிப்பதிவும், எடிட்டர் சி.எஸ்.பிரேமின் கச்சிதமான பிரேம் கட்டிங்கும் இயக்குநருக்குக் கிடைத்த மிகப் பெரிய உதவிகள்..!
ராதிகாவும், அவரது கணவரும் லாரியில் செல்லும் காட்சிகள், ஹோட்டல் அறை காட்சிகள்.. மருத்துவமனை காட்சிகளையெல்லாம் ரசித்துப் பார்த்ததற்கு படத்தின் ஒளிப்பதிவும் ஒரு காரணமாக இருந்தது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
எல்லாம் சரியாக இருந்தும் கிளைமாக்ஸில் மட்டும் ஏன் இப்படி பல்டியடித்தார் இயக்குநர் என்பது மில்லியன் டாலர் கேள்வி..?
வட்டார கல்வி அலுவலர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கும்போது இடைமறித்த டீச்சர் ராதிகா தான் மாணவியை அடித்த்து தவறு என்று திரும்பத் திரும்ப சொல்வதும்,, இதைக் கேட்ட பின்பு தோழர் நவநீதன் ‘தாய்’ நாவலை அவருக்குப் பரிசளிக்க முன் வருவதும் முரண்பாடான விஷயம்..!
முதலில் படத்தின் அடிப்படையான விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ‘ஒரு  ஆசிரியை மாணவனை தண்டிப்பதை குற்றம்’ என்கிறார் இயக்குநர் பிரம்மா. ‘இந்தக் குற்றத்தைச் செய்ததால்தான் டீச்சர் ராதிகா மீதான பகையே உண்டானது’ என்கிறார் இயக்குநர்.
ஆசிரியரும், மாணவரும் ஈருடல், ஓருடலாக அப்பா, மகன், தாய் மகள் போலவோ பழகினால் அந்தப் பிள்ளைகள் நிச்சயம் படிக்க மாட்டார்கள். அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை கண்டிக்கத்தான் செய்வார்கள். தண்டிக்கத்தான் செய்வார்கள். செய்துதான் தீர வேண்டாம். இது செய்யவே கூடாது என்றால் மாணவ, மாணவிகளுக்குள் நல்லொழுக்கத்தை புகுத்தவே முடியாது.. சில இடங்களில் பெற்றோர்களே தங்களது பிள்ளைகளை கண்டிக்கும்படியும், தண்டித்து சொல்லிக் கொடுக்கும்படியும் பள்ளிக்கே வந்து ஆசிரியர்களிடத்தில் சொல்லிவிட்டுப் போகிறார்கள்.
“உங்களுக்கும் முத்தம் கொடுப்பேன்” என்று ஒரு மாணவன் டீச்சரிடம் கூறினால் டீச்சர் அடிக்கத்தான் செய்வார். தண்டிக்கத்தான் செய்வார். அது தப்பு என்று கிளாஸ் எடுக்கவா முடியும்..? எத்தனை பேருக்கு இது சாத்தியமாகும்..?
தமிழ்நாட்டில் சமீப காலமாக பல பள்ளிகளில் இது போன்ற சண்டை, சச்சரவுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதில் டீச்சர்களை அதிகம் குறை சொல்லும் பள்ளிகளும் இருக்கின்றன. மாணவர்களை குறை சொல்லும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு பள்ளியில் பி.டி. மாஸ்டரின் உத்தரவினால் ஒரு சின்னப் பையன் தன்னைவிட எடை அதிகமான குண்டு பையனை தூக்கிக் கொண்டு ஓடியதில் அவனது முதுகு தண்டில் காயம் ஏற்பட்டு இப்போதும் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கிறான்.   இன்னொரு பள்ளியில் ஆசிரியர் அடித்த அடியில் ஒரு பையனுக்கு கால் விரலையே நீக்க வேண்டிய கட்டாயம்.. பல பள்ளிகளில் ஆசிரியர்கள் போலீஸார் வைத்திருக்கும் லத்தியைவிடவும் பெரிய கம்பாகத்தான் வைத்திருக்கிறார்கள். இதற்கொரு அளவுகோல் தேவைதான்.. இல்லையென்று மறுக்கவில்லை.
அதே சமயம்.. இந்தப் படத்தைப் பொறுத்தவரையிலும் ரசிகர்களுக்குள் பரிதாப உணர்வை ஏற்படுத்த வேண்டும்.. டீச்சருக்குள் ஒரு பரிதவிப்பை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்திலேயே திரைக்கதையை எழுதியிருக்கிறார் என்றே தோன்றுகிறது..
அந்தப் பையனுக்கு ஏற்கெனவே ஒரு நோய் இருக்கிறது. இதனால் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்திருக்கிறது என்கிற உண்மையெல்லாம் கடைசியில்தான் சொல்கிறார்கள். இது முதலிலேயே தெரிந்திருந்தால் இதுவொரு சாதாரண விஷயமாகியிருக்கும். அடித்த விஷயம் பின்னால் போக.. படம் பார்க்கும் பார்வையாளனுக்குள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்காது.
இந்த விஷயம் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், கேஸ், மருத்துவமனை என்று போனால்கூட நிற்காது என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான்..!  பள்ளி மாணவனை அடித்ததற்காக எந்தவொரு ஆசிரியரும் இதுவரையிலும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதில்லை என்பது இயக்குநருக்கும் தெரிந்த விஷயம்தான்..
டீச்சர் ராதிகா ஓடிப் போகாமலேயே மருத்துவமனையில் உடன் இருந்து பிரச்சனையை சமாளிப்பதுபோல் படத்தின் திரைக்கதையை எழுதியிருந்தால் இந்தப் படம் நிச்சயம் இந்த அளவுக்கு புகழ் பெற்றிருக்காது.. பெயர் வாங்கியிருக்காது. இயக்குநர் இந்த மாதிரி திரைக்கதை எழுதியதன் நோக்கமே, படம் பார்க்கும் ரசிகனை பதட்டப்படுத்தி டென்ஷனாகவே வைத்திருக்க வேண்டும் என்பதால்தான்..!
சிறந்த இயக்கம். சிறந்த திரைக்கதை, சிறந்த நடிப்பு என்கிற விதத்தில் இந்தப் படம் நிச்சயம் பேசப்படும். ஆனால் சிறந்த படம், சிறந்த கதை என்கிற ரீதியில் இந்தப் படம் நிச்சயம் விமர்சிக்கப்பட்டே தீரும். அதற்கான காரண, காரியங்களை இயக்குநரே இதில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
எப்படியிருந்தாலும் தன்னுடைய இயக்கத் திறமையைக் காட்ட விரும்பிய இயக்குநர் கச்சிதமாக தான் எழுதிய திரைக்கதைக்கு தனது கதாபாத்திரங்களை வளைத்து நடிக்க வைத்து அதில் முழு வெற்றியும் பெற்றிருக்கிறார். பாராட்டுக்கள்.. வாழ்த்துகள் ஸார்..!
குற்றம் கடிதல் – ஒரு புதுமையான அனுபவம்..! நிச்சயம் பார்க்க வேண்டிய படம்..!

கிருமி- சினிமா விமர்சனம்

25-09-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பாம்புக்கு பால் வார்ப்பதும் போலீஸுக்கு துணை போவதும் ஒன்றுதான் என்பார்கள். இது இந்திய மக்களுக்கு மட்டுமல்ல.. உலக மக்களுக்கே பொருத்தமானதுதான்.
அதிகாரம் இருக்குமிடத்தில் ஆசையும், ஆணவமும் அதிகம் இருக்கு. எப்படியாவது பதவியைப் பயன்படுத்தி சமூகத்தில் பெரிய ஆளாக வர வேண்டும் என்று நினைப்பதற்கு போலீஸ் அதிகாரிகளும் விதிவிலக்கல்ல. இந்தியா மாதிரியான ஜனநாயகம் என்கிற கேலிக்கூத்தான அரசியல் அமைப்பை வைத்திருக்கும் நாட்டில் காவல்துறையின் ஒட்டு மொத்த பிம்பமும் சிதைந்து போயிருப்பது கண்கூடு.
இதனால்தான் ஒரு கொலையோ, சட்ட விதி மீறலோ.. பொதுமக்கள் புகார் அளிக்கவும், சாட்சியம் அளிக்கவும் முன் வருவதில்லை. சட்டத்திற்குட்பட்டு நடக்கின்ற அதிகாரிகளை பூதக்கண்ணாடி வைத்துதான் தேடி வேண்டியிருக்கிறது.. சட்டத்தை அமல்படுத்த போலீஸுக்கு உதவுபவர்களை பாதுகாக்க காவலர்களே முன் வருவதில்லை என்பதால்தான் காவல்துறைக்கும், பொதுமக்களுக்குமான இடைவெளி அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
இந்தியாவில் போலீஸ் அமைப்பே ஒரு குறு நில மன்னர்கள் கொண்ட அமைப்பாகத்தான் இருக்கிறது. அதன் அதிகாரிகள் அவரவர் தகுதிக்கேற்ப தாங்கள் கோலோச்சும் பகுதிக்கு சிற்றரசர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கின்ற மரியாதை அரசியல்வாதிகளுக்கும், மற்ற துறை அதிகாரிகளுக்குக்கூட கிடைப்பதில்லை. காரணம் இன்னமும் நாம் பயன்படுத்திவரும் உளுத்துப் போன இந்திய அரசியமைப்புச் சட்டம்தான்..!

மிகப் பெரிய மரியாதை.. உடனடி பணம்.. இது இரண்டையும் தேடியலையும் வாழ்க்கையில் அனுபமில்லாத ஒரு இளைஞன் திடீரென்று தனக்குக் கிடைக்கும் தேன் தடவிய வார்த்தைகளையும், போலி மரியாதையையும் நம்பி காவல்துறையினருக்கு எடுபிடி வேலை செய்யத் துவங்கி.. அவனைப் பயன்படுத்திக் கொண்ட நாடகம் முடிந்ததால் அவனை  துரத்தியடிக்க நினைக்கும் போலீஸை புரிந்து கொள்ள முடியாமல் மாட்டிக் கொண்டு தவிக்கும் கதைதான் இந்த ‘கிருமி’ திரைப்படம்.
22 வயதிலேயே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தையுமான ஹீரோ தனது சொந்த அக்கா மகளையே மணந்திருக்கிறார். பாதி நாட்கள் வீட்டுக்கு வராமல் நண்பர்களின் அறையில் தங்கிக் கொண்டு பொழுதைக் கழித்து வருகிறார். ஏதோ கிடைக்கிற வேலையை பார்த்து அதில் கிடைக்கும் பணத்தையும் சூதாட்டத்தில் விட்டு குடி, கும்மாளம் என்று அலையும் ஒரு நல்ல தமிழ்நாட்டு குடிமகன்.
தன்னுடைய நெருங்கிய நண்பர்களின் அவமரியாதையான ஒரு வார்த்தை அவருக்குள் வண்டாய் துளைக்கவே.. தான் எப்படியாவது வெகு சீக்கிரத்தில் அவர்கள் மதிக்கக் கூடிய அளவுக்கு பெரிய ஆளாகிவிட வேண்டும் என்று துடிக்கிறான்.
அவனுடைய குடும்ப நண்பரான சார்லி போலீஸுக்கு துப்பு கொடுக்கும் கூலியாளாக வேலை பார்த்து வருகிறார். அவருடைய உதவியால் இவனும் போலீஸுக்கு உதவும் கருங்காலியாக மாறுகிறான்.
போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் டூவிலர்களை அகற்றுவது.. இரவு நேரத்தில் குடித்துவிட்டு வருபவர்களை கண்டுபிடித்து ஒப்படைப்பது என்று சின்னச் சின்ன வேலைகளைச் செய்துவிட்டு போலீஸ் கொடுக்கின்ற டிப்ஸ்களை வைத்து தான் ஒரு ராஜா என்பதை போல நினைத்துக் கொள்கிறான் ஹீரோ.
தன்னை ஒரு சமயத்தில் அடித்து அவமானப்படுத்திய சூதாட்ட கிளப்பின் ஓனரை சிக்கலில் மாட்டிவிட விரும்பி அந்த கிளப்பில் அனுமதியே இல்லாமல் சூதாட்டம் நடப்பதாக இன்ஸ்பெக்டருக்கு துப்புக் கொடுக்கிறான் ஹீரோ. இவனது தயவால் சூதாட்ட கிளப்பை முற்றுகையிடும் போலீஸ் அந்த கிளப்பில் இருந்து 25 லட்சம் ரூபாய் பணத்தையும் அபகரித்துவிட்டுச் செல்கிறது.
மாமூலெல்லாம் மாதாமாதம் சரியாகத்தானே ஸ்டேஷனுக்கு போகிறது என்று நினைத்து சூதாட்ட கிளப் ஓனர் குழம்பிப் போய் நிற்க… வந்த்து லிமிட் தாண்டிய வேறு ஸ்டேஷன் போலீஸ் என்பது தெரிய வந்து தனது பணத்தை மீட்க முட்டி மோதுகிறார். இவருடைய முயற்சியால் நகர போலீஸ் கமிஷனர், இரண்டு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களையும் அழைத்து கண்டிக்கிறார். ஒருவரை சஸ்பெண்ட் செய்கிறார்.
இந்த நேரத்தில் ஒரு நள்ளிரவில் சார்லியும், ஹீரோவும் டூவிலரில் வீடு திரும்பும்போது ரவுடிகளால் தாக்கப்படுகிறார்கள். ஹீரோ தப்பித்து ஓட.. சார்லி பரிதாபமாக உயிரைவிடுகிறார். யார் அவரை கொலை செய்தது..? ஏன் செய்தார்கள்..? என்பது தெரியாமல் ஹீரோ தவிக்க.. முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்கின்றன..
காவல்துறையின் அரசியல் சதுரங்கத்தில் தான் வெட்டுவதற்காகவே நகர்த்தப்படும் சாதாரண சிப்பாய் என்பதை தாமதமாகப் புரிந்து கொள்ளும் ஹீரோ அதிலிருந்து  விலகி ஓட நினைக்கிறான். அவனால் அதனை செய்ய முடிந்ததா.. இல்லையா.. என்பதுதான் மிச்சம் மீதியான கதை.
சில ஆண்டுகளுக்கு முன்பாக ‘போலீஸ் நண்பர்கள் குழு’ என்கிற பெயரில் சில தடிப் பசங்களின் கைகளில் தடியைக் கொடுத்து பல அக்கிரமங்களை செய்து வந்த போலீஸின் உண்மைக் கதையை இங்கேயும் உண்மையாக்கியிருக்கிறார் இயக்குநர்.
தங்களுக்குப் பிடிக்காதவர்களை நாலு தட்டு தட்ட போலீஸ் டிரெஸ்ஸில் இல்லாத முட்டாள் மூடர்களை பயன்படுத்திக் கொண்டது அப்போதைய போலீஸ் அரசு. சென்னை தி.நகரில் ஒரு நகைக் கடையில் மாமூல் வாங்கச் சென்றபோது, “யாருக்கும் மாமூல் கொடுக்கக் கூடாது என்பது எங்களது கொள்கை…” என்கிற நகைக் கடை உரிமையாளர்களின் வார்த்தையைக் கேட்டு முகம் சுழிக்காமல் சிரித்தபடியே வந்த போலீஸ் கூட்டம்.. அன்றைய நாள் இரவிலேயே தங்களது நண்பர்கள் குழுவை வைத்து கடையையே வாரிச் சுருட்டியது.. இன்றுவரையிலும் அவர்கள் யார் என்று தெரியவில்லை. பாவம் அந்த கடைக்கார்ர். கடை திறந்து 10 நாட்கள்தான் ஆனது. நகைகளை இன்ஸூரன்ஸும் செய்யாமல்விட்டதால், பல கோடிகளை ஒரே நாள் இரவில் இழந்தார்.
இதையெல்லாம் தட்டிக் கேட்பதற்குக்கூட அப்போதெல்லாம் ஆட்கள் இல்லை. போலீஸ் டிபார்ட்மெண்ட்டிலேயே டிரான்ஸ்பர் என்கிற உயர்ந்த பனிஷ்மெண்ட் ஒன்றுதான் இருக்கிறது. வேறு இடத்திற்கு போனாலும் இதையேதானே செய்வார்கள் என்று மீடியாக்கள் கேட்டால் உயரதிகாரிகள் சிரிப்பார்கள். அவர்களால் முடிந்தது அவ்வளவுதான்..!
படத்தில் யாருக்கும் மேக்கப் இல்லை. மிக யதார்த்தமான நடிப்பை அனைவரிடத்தில் இருந்தும் வெளிக்கொணர்ந்திருக்கிறார் இயக்குநர். மதயானைக் கூட்டத்தில் பார்த்த கதிர்தான் இதில் ஹீரோ. இந்தக் கேரக்டருக்கு மிகப் பொருத்தமானவராகவே இருக்கிறார்.  அப்பாவித்தனத்துடன் வலைய வந்தபடியே இருப்பவரை பார்த்தால் கடைசியில் நமக்கே கோபம்தான் வருகிறது. இப்படியொரு பிரதிபலிப்பை ரசிகனிடத்தில் ஏற்படுத்துவதே இயக்குநருக்குக் கிடைத்த வெற்றிதான்.
போலீஸ் வாகனத்தில் இடம் பிடித்துவிட்ட கெத்தில் அவர் காட்டும் பெருமிதம்.. நண்பர்களிடத்தில் சிறிது உதார்விட்டுவிட்டு பின்பு அவர்களை இன்ஸ்பெக்டரிடத்தில் இருந்து காப்பாற்றும்போது அவர் காட்டும் கெத்து.. இன்னொரு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தன்னை லாக்கப்பில் வைத்துவிட்டதை தனது ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் விகல்பம் இல்லாமல் போட்டுக் கொடுத்துவிட்டு அப்பாவியாய் பார்ப்பது என்றெல்லாம் அவரது வயதுக்கே உரித்தான நடிப்பைக் காட்டியிருக்கிறார்.
5 நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்துவிட்டு தனது மனைவியிடம் பெர்மிஷன் போடும்படி கெஞ்சி.. ஒரு மணி நேரம்.. கடைசியாக 10 நிமிடமாக குறைந்து நிற்கும் அந்த வாலிப முறுக்கில்கூட ரசிக்க முடிகிறது ஹீரோ கதிரை..! இறுதியில் அலட்சியமாக ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு பையனைத் தூக்கிக் கொண்டு நடந்து செல்லும்போது அவர் காட்டும் சிரிப்புக்கு ஆயிரம் அர்த்தங்கள். அது பற்றி நமக்கு கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவரைப் பொறுத்தவரையில் அது சரியே..!
ஹீரோயின் என்றில்லாமல் ஒரு லீடிங் கேரக்டரில் ரேஷ்மி மேனன். எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஒரு மனைவியாக.. கணவனுக்காக வருத்தப்படும் ஒரு மனைவியாக.. தனது கேரக்டரை நிறைவாகவே செய்திருக்கிறார். இவரைவிடவும் சார்லியும், அவரது மனைவியாக நடித்தவர்களின் கேரக்டர் ஸ்கெட்ச்சு ரசிகர்களை வெகுவாக பாதித்திருக்கிறது.
இவர்களுக்கு குழந்தை இல்லை என்கிற விஷயத்தை ஹீரோவும், அவனது மனைவியும் எதிர்கொண்டு அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்ற முன் முயற்சிகள் பலே.. “நான் மனசு மார்றதுக்குள்ள வந்திரு…” என்று சார்லி அழைக்கின்ற அந்த அழைப்பையும், நொடியில் முகம் மலர நிற்கும் அவருடைய மனைவியின் முகமும் இன்னும் மனதில் நிற்கிறது. சார்லியின் கொடிய மரணம் அத்தனையையும் புரட்டியெடுக்க அதன் பின் இவருக்கு குழந்தை பிறக்க.. அந்தச் சோகம் இவரது காட்சிகள் முழுவதிலுமே வந்து கொண்டேயிருக்கிறது..!
இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் டேவிட் சாலமன் நல்லவரா, கெட்டவரா என்பதே தெரியாத அளவுக்கு நடித்திருக்கிறார். இவரும் இன்னொரு இன்ஸ்பெக்டரான மாரிமுத்துவும் காட்டியிருக்கும் சில எக்ஸ்பிரஷன்கள் படத்தை மிக யதார்த்தவாத படமாக சொல்ல வைக்கிறது..!
கமிஷனர் இருவரையும் நிற்க வைத்து பேசும் அந்த வசனத்திற்கு தியேட்டரே அதிர்வதாக செய்திகள் வருகின்றன. “ஒருத்தன்கிட்ட அஞ்சு மாட்டைக் கொடுத்து மேய்ஞ்சிட்டு வாடான்னா சொன்னா.. அதுல நாலை வித்திட்டு.. ஒரு மாட்டை அடிச்சு தின்னு ஏப்பம் விட்டுட்டு அஞ்சுமே காணாப் போச்சுன்னு சொல்றவங்கய்யா நீங்க..” என்ற வசனம் போலீஸ் துறையினரை அடையாளப்படுத்தியிருக்கும் அற்புதமான வசனம்..!
போலீஸ் ஸ்டேஷன் செட்டை த்த்ரூபமாக அமைத்து சபாஷ் போட வைத்திருக்கிறார் கலை இயக்குநர்.  அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவு ஒரு தனி கேரக்டராகவே படம் முழுக்க வந்திருக்கிறது. இரவு நேர காட்சிகளில் ஒளிப்பதிவும், இயக்குநர் அமைத்திருக்கும் ஷாட்டுகளின் கோணமும் பலே போட வைக்கிறது. இவர்களுக்கு இணையாக இசையமைப்பாளர் கே பல இடங்களில் இசையை மெளனப்படுத்தி உதவியிருக்கிறார். இந்தப் படத்திற்கு பாடல் காட்சிகளே தேவையில்லை என்றே சொல்லலாம். அந்த 4 நிமிடங்கள்தான் பிரேக்காக இருந்தன.  
104 நிமிடங்களே இருந்த இந்தப் படத்தை இறுக்கமாக அமைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநரும் எடிட்டருமான அனுசரண். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி எடிட்டிங் செய்து தனது பணியை கச்சிதமாகச் செய்திருக்கிறார் இயக்குநர் அனுசரண். ‘காக்காமுட்டை’ படத்தின் இயக்குநர் மணிகண்டனும் இந்தப் படத்தின் கதாசிரியர்களில் ஒருவர் என்கிற ரீதியில் பாராட்டுக்குரியவராகிறார்.
படத்தின் இறுதிக் காட்சிதான் படம் பார்க்கும் பல விமர்சகர்களுக்கும் விமர்சனங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. படமோ கருத்து சொல்கிறது. ஆனால் இறுதியில் “எதைப் பற்றியும் கவலைப்படாதே. நீ உன் வேலையை பார்த்துவிட்டு போய்க் கொண்டேயிரு..” என்று சொல்வது எந்தவிதத்தில் சரியாக இருக்கும் என்கிறார்கள்.
ஒரு சாமான்யனால் இந்த அரசியல் அமைப்பையும், நிர்வாக அமைப்பையும் ஒரே நாளில் தூக்கி நிமிர்த்திவிட முடியாது. இப்போதுதான் ‘தனி ஒருவன்’ படத்தில் ஒரு இன்ஸ்பெக்டர் நல்லது செய்ய நினைத்தும் தனது நண்பர்கள் துணையோடுதான் அதனை செய்கிறார். அது போல ஹீரோவும் செய்திருக்கலாமே என்கிறார்கள். கேட்பது நல்ல கேள்விதான்.. இதற்கு இயக்குநர்தான் பதில் சொல்ல வேண்டும்.
அதோடு படத்தின் ஆரம்பத்தில் இருந்தே ஹீரோ மீது பரிதாபம் வரக்கூடிய அளவுக்கு ஒரு காட்சிகூட இல்லை. மாறாக ‘பொறுப்பற்ற பயல்’ என்ற கண்டனத்தைச் சுமத்தக் கூடிய அளவுக்குத்தான் அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் இருக்கிறது. கடைசியில் இவருக்குக் கிடைத்திருக்கும் தண்டனை நியாயமானதுதான் என்று சொல்லும் அளவுக்கு அவருடைய செயல்கள் இருக்கின்றன. இவர் எப்படி போலீஸை குறை சொல்லும் அளவுக்கும், கேலியாகச் சிரிக்கும் அளவுக்கும் பெரிய ஆளானார் என்பதையும் நாம் இயக்குநரிடம்தான் கேட்க வேண்டும்..!
இரண்டு திருடர்களிடையே நடைபெற்ற மோதலில் ரத்தக் காயம் ஏற்பட்டு.. பின்பு இருவருக்குள்ளும் சமாதானம் ஏற்பட்டு இருவரும் அவரவர் வழியில் திரும்பிப் பார்க்காமல் போகிறார்கள். இந்த இருவரில் இந்தச் சமூகத்தின் கிருமி யார் என்பதை இயக்குநர் சொல்லாமல் விட்டுவிட்டது ஏன் என்றுதான் தெரியவில்லை..!
படத்தின் உருவாக்கம் தரமானதாகவும், மிக உயர்வானதாகவும் இருந்தாலும் கதையோட்டத்தில் விமர்சகர்களுக்கு பிரச்சினையைக் கொடுக்கும் படமாக இது அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
104 நிமிடங்கள் நேரம் போனதே தெரியாமல் படத்தினை உருவாக்கியிருப்பதன் மூலம் இயக்குநர் அனுசரனின் இயக்கத் திறமை பளிச்சிடுகிறது. கோடம்பாக்கத்திற்கு புதிதாக நல்லதொரு இயக்குநர் கிடைத்திருக்கிறார் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்..!
கிருமி அவசியம் பார்க்க வேண்டிய படம்..!

உனக்கென்ன வேணும் சொல்லு - சினிமா விமர்சனம்

25-09-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வாரம் ஒரு பேய்ப் படம் வெளியாகி தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு அலுப்பு தட்டும் நிலையில் இருந்தாலும், படத்திற்கு படம் விதம்விதமான பேய்கள் காட்டும் சுவாரஸ்யங்களும் குறைவில்லாமல்தான் இருக்கின்றன.
இந்தப் படமும் அந்த வரிசையில் ஒன்று. மூன்றுவிதமாக அணுகக்கூடிய வகையிலான கதை. ஆனால் கச்சிதமாக பொருத்தியிருக்கிறார்கள். இதுவரையிலும் இல்லாததுபோல் புதுமையாக.. கவனிப்பாரின்று இறந்து போன ஒரு குழந்தை தனது கொலைக்கான நியாயத்தை தன்னைப் பெற்றவர்களிடம் கேட்கிறது.. மிக நெகிழ்ச்சியான இந்த ஒரு வரிக் கதையை திகிலுடனும், பயத்துடனும் கொடுத்திருக்கிறார்கள்.

குணாளன் மோகனும், ஜாக்லினும் சிங்கப்பூரில் வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதிகள். இவர்களது எட்டு வயது மகன் ஒரு இனம் புரியாத நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறான். அவனது சிகிச்சைக்காக சென்னை வர வேண்டிய கட்டாயம். ஜாக்குலினுக்கு சென்னைக்கு வருவதற்கு தயக்கமாக இருக்கிறது.. ஆனால் வந்தே தீர வேண்டிய கட்டாயம் வரவே.. வந்துவிடுகிறார்கள்.
ஜாக்குலினின் குடும்ப கெஸ்ட் ஹவுஸில் தங்குகிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் ஒரு அறையில் அமானுஷ்யமாக இருக்கும் ஒரு சக்தி அவர்களை விரட்டுகிறது.. ஏதோ ஒன்று இந்த வீட்டில் இருப்பதை உணர்கிறார்கள் இருவரும். இந்தப் பிரச்சினையைப் போக்க பேயோட்டியை தேடி வருகிறார்கள்.
பேயோட்டி நிலைமையைப் புரிந்து கொள்கிறார். பேயின் சக்தியையும் தெரிந்து கொள்கிறார். ஏதோ ஒரு விஷயம் இந்த வீட்டில் நடந்துள்ளது என்பதை யூகிக்க.. ஜாக்குலினே முன் வந்து தனது வாழ்க்கையில் மறைவாக உள்ள ஒரு கதையைச் சொல்கிறாள்.
குணாளனுடனான கல்யாணத்துக்கு முன்பாகவே தீபக்குடன் உறவு ஏற்பட்டு திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் தரித்து குழந்தையையும் பெற்றெடுத்திருக்கிறாள். ஆனால் அந்தக் குழந்தையை வளர்க்க விருப்பமில்லாமல் தனது தோழி ஸ்வேதா மூலமாக அனாதை ஆசிரமத்தில் விட்டுவிடுகிறாள். ஆனால் அந்தக் குழந்தை இரண்டே நாட்களில்  குழந்தையில்லாத ஏக்கத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் அனிதாவின் கைகளுக்கு போய் பரிதாபமாக இரண்டே நாட்களில் இறந்து போகிறது.
இதற்கிடையில் அதே தீபக் இதே அனிதாவுடன் எதிர்பாராமல் பேசிப் பழகி சந்தித்து வருகிறான். அனிதா திடீரென்று தாக்குதலுக்குள்ளாகி மருத்துவமனையில் இருக்க அங்கேதான் அனிதாவின் சுயரூபம் தீபக்கிற்கு தெரிகிறது.
பேயோட்டி மைம் கோபி, ஜாக்குலினிடம் தீபக்கை தேடும்படி சொல்ல.. அவளும் தேடிப் பிடிக்கிறாள். இப்போது பெற்றோர்களை வைத்து குழந்தையின் ஆன்மாவை சாந்தப்படுத்தி அந்த வீட்டில் இருந்து ஆவியை அப்புறப்படுத்த மைம் கோபி திட்டமிடுகிறார்.. இது முடிந்ததா இல்லையா என்பதுதான் இந்தத் திகிலூட்டும் பின்னணி கொண்ட கதை..!
படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் படத்தில் ஒருவித சஸ்பென்ஸும், திகிலும் கலந்தே இருக்கிறது. பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படம் முழுக்கவே இணைந்து பணியாற்றி ரசிகர்களை பயமுறுத்தியிருக்கின்றன.
ஜாக்குலினாக நடித்தவர்தான் படத்தின் பெரும் பகுதியை ஆக்ரமித்திருக்கிறார். தீபக்கிடம் அவரது வேலை பறி போன பின்பு “உனக்கு பொறுப்பே இல்லையா?” என்று கண்டித்து பொறுமித் தீர்க்கும் காட்சியில் சபாஷ் போட வைக்கிறார். மென்மையான பெண்மையை சீண்டிப் பார்த்தால் எது நடக்குமோ, அதை அப்படியே கண் முன்னால் கொண்டு வந்திருக்கிறார்.
தீபக்கிடம் சென்று தனது பிரச்சினைக்காக ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்குமிடத்தில் சட்டென்று சுண்டிவிடப்படும தனது தன்மானத்திற்காக கோபப்பட்டு பேசும் வசனமும், நடிப்பும் அவரையொரு பண்பட்ட நடிகை என்று சொல்ல வைத்திருக்கிறது. வெல்டன் மேடம்..!
மென்மையான நடிப்போடு தனது மகனுக்காக மனைவியின் முன்னாள் காதல் வாழ்க்கையைக்கூட மிக எளிதாக எடுத்துக் கொண்டு மருத்துவமனையில் மகனுக்காக அல்லல்படும் குணாளன் மோகன் பரிதாபப்பட வைத்திருக்கிறார்.
மைம் கோபிதான் பாவம்.. படத்திற்கு படம் ஆவிகளுடன் மல்லுக்கட்டி தனது உயிரை இழந்து கொண்டிருக்கிறார். இதில் கெஸ்ட் ஹவுஸிற்குள் முதலில் நுழைந்துவுடன் ஆவியை கண்டறியும் காட்சியிலும் ஆவி, தான் அந்த வீட்டில் இருப்பதை நிரூபிக்கும் காட்சியிலும் கேமிராவும், பின்னணி இசையும், மைம் கோபியின் நடிப்பும் படத்தை அந்த நிமிடத்திலேயே தூக்கி நிறுத்திவிட்டன. இதன் பின்பு கவனித்ததெல்லாம் அடுத்தது என்ன என்கிற ஆர்வத்துடன்தான்..!
மைம் கோபியின் வசன உச்சரிப்பும், அவருக்கான குளோஸப் காட்சிகளும் வித்தியாசமாக இருக்கவே பெரிதும் கவரப்படுகிறார். பெரும்பாலும் இந்துக்களாக இருக்கும் பேயோட்டிகள் அதிகம் உலா வந்து கொண்டிருக்க.. இந்தப் படத்தில் கிறித்துவராகக் காட்டப்படுகிறார் பேயோட்டி. கூடவே ஆவிகளை பாதிரிமார்களும் நம்புகிறார்கள் என்பதை அழுத்தமாகச் சித்தரித்திருக்கிறார் இயக்குநர். அவருடைய மரணத்திற்கு அச்சாரமாக பாதிரியாரின் வசனத்தை ரிப்பீட் செய்திருப்பது சாலப் பொருத்தம்.
தீபக் பரமேஷின் கேரக்டர் ஸ்கெட்ச் கொஞ்சம் குழப்பத்தைக் கொடுத்தாலும்.. இறுதி காட்சியில் அத்தனை பேரின் மனதையும் தொட்டுவிட்டார். அலட்சியமாக “இப்போ புள்ளை பெத்துக்கலாம்…” என்கிறார். அதே அலட்சியத்துடன் டெலிவரி டைமில் மனைவியைவிட்டுவிட்டு “சிங்கப்பூர் போய்விட்டு வருகிறேன்…” என்கிறார். சிங்கப்பூரில் இருந்து டாய்ஸ்களையெல்லாம் வாங்கி வந்த நிலையில் “எங்க என் புள்ளை..? எங்க என் மகள்..?” என்கிறார்.. இதில் இவர் ஐடி ஊழியர் என்கிறார்கள். நம்பத்தான் முடியவில்லை.
இதே தீபக்குதான் கிராஸ்டாக்கில் கிடைக்கும் ஒரு பெண்ணின் அறிமுகத்தை கப்பென்று பிடித்துக் கொண்டு அதை வைத்தே பெண்ணை மடக்க நினைக்கிறார். ஆக இவரது கேரக்டரே ஸ்பாயிலாக இருக்கும் நிலையில் இவரது மகள் பாசம் மட்டுமே இவரை நாம் விரும்புவதற்குக் காரணமாக இருக்கிறது..!
குழந்தையில்லாத ஏக்கத்தில் மனநிலை பாதிப்பு நிலையில் இருக்கும அனிதாவின் நடிப்பும் நம்ப முடியாத அளவுக்குத்தான் இருக்கிறது. அனிதா, ஜாக்குலினுக்குள் நடக்கும் போரும், குழந்தையின் கடைசி அந்திம எரிப்பும் ஒரு மரணத்தைத் தொட்டுக் காட்டுகின்றன.
கவிதை எழுதுவதற்குச் சமமானது குழந்தையிடம் சிரிப்பை வரவழைப்பது என்பார்கள். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ்தான் இதற்கு பொருத்தமான காட்சி. அற்புதமான கற்பனை.. இயக்குநரை எத்தனை பாராட்டினாலும் தகும்.
ஹிப்னோதெரபி மூலமாக தனது மகளுடன் உரையாடும் தீபக்கின் வசனங்கள் அதுவரையில் திகிலான மனநிலையில் இருக்கும் ரசிகர்களின் மனதை கொஞ்சம் கரைத்து இளசாக்குகிறது. எந்தவொரு கதை புத்தகத்திலும் இந்த பாசப் போராட்டத்தைப் வாசித்திருக்கவே முடியாது. வெளியில் மருத்துவரின் எச்சரிக்கையையும் மீறி தீபக், மெல்ல மெல்ல தனது மகளுக்கு அடிமையாகி கடைசியில் அவளுடன் கை கோர்த்து வெளியேற.. ஒரு பாச காவியமே நடந்தேறுகிறது.. இந்த கிளைமாக்ஸுக்காகவே இயக்குநரை வெகுவாகப் பாராட்ட வேண்டும்..!
டெய்ஸி என்கிற அந்த சின்னப் பெண்ணின் முகமும், பேச்சும், நடிப்பும், கேமிராவின் பார்வையும், டிஐ செய்திருக்கும் கலரும், கரெக்ஷனும், இயக்கமும் சேர்ந்து அந்தக் காட்சிகளை சொக்க வைத்திருக்கின்றன. 
மனீஷ் மூர்த்தியின் ஒளிப்பதிவில் படம் முழுவதுமே திகிலைக் கொடுத்திருக்கிறது. தானும் ஒரு கேரக்டராகவே வந்திருக்கிறார். பின்னணி இசையும் இது போலத்தான்.. சிவ சரவணன் பாடல் காட்சிகளில் மென்மையைக் கையாண்டு பின்னணி இசையில் இறங்கி அடித்திருக்கிறார். சட்டென்று பேயின் ஆட்டங்கள் தோன்றும் காட்சிகளிலெல்லாம் பின்னணி இசைதான் நம்மை அதிகம் பயமுறுத்துகிறது.
அமெரிக்காவில் சினிமா கற்றுக் கொண்டு வந்திருக்கும் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கத்திற்கு டெக்னாலஜியை எந்த அளவிற்குப் பயன்படுத்தலாம்.. எந்தெந்த கதையில் பயன்படுத்தலாம் என்பதெல்லாம் தெள்ளத் தெளிவாகவே தெரிந்துதான் இருக்கிறது.. அதை கச்சிதமாகவே பயன்படுத்தியிருக்கிறார்.
கருவில் இருக்கும் குழந்தையை கொல்வதும்.. குழந்தைகளை குழந்தைகளாக இருக்கும்போதே கொல்வதும் மிக கொடூரமான குற்றம் என்பதை சமூகம் இன்னமும் அறிந்தபாடில்லை.. ஆனால் சூழ்நிலை மக்களை திசை திருப்புகிறது. இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள் அலட்சியமாக..!
ஆனால் சாகடிக்கப்படும் குழந்தைகளுக்கும் ஒரு மனது இருக்கிறது என்பதையும், அவர்கள் தங்களது பெற்றோரிடம் கேட்கவும், பேசவும் நிறைய கேள்விகள் இருக்கின்றன.. விஷயங்கள் இருக்கின்றன என்பதையும் மனோதத்துவ ரீதியாக இந்தப் படத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
“என்னய்யா இதுவும் பேய்ப் படமா..?” என்றெண்ணி சலிப்போடு பேசுவர்கள்கூட இந்தப் பட்த்தைப் பார்த்தால் படம் ஆவிகளைப் பற்றியதல்ல.. குழந்தைகளின் உரிமைகள் பற்றியது என்பதைப் புரிந்து கொள்வார்கள்..!
தரமான படம்.. அவசியம் பாருங்கள்..!

49-ஓ - சினிமா விமர்சனம்

21-09-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இப்படியொரு படத்தைத் தயாரிக்க துணிந்த தயாரிப்பாளருக்கு நமது வந்தனங்கள். எந்த ஹீரோவும் செய்யத் துணியாத ஒரு கேரக்டரை செய்து காட்டி இப்போதும் தான்தான் நாயகன் என்பதை நிரூபித்திருக்கிறார் நகைச்சுவை அரசர் கவுண்டமணி. அவருக்கும் நமது சல்யூட்..
மூணு டூயட்டுகள்.. ஒரு சோகப் பாட்டு, ஹீரோவின் பில்டப்புக்கென்று ஒரு பாட்டு.. ஒரு குத்துப்பாட்டு. ஒரு இடைவேளை.. சில காமெடி காட்சிகள் என்று எப்போதும்போல எழுதப்படும் கதை, திரைக்கதையை முற்றிலுமாக சிதைத்து.. இந்த மண்ணில்.. சினிமா என்னும் மீடியத்தின் மூலமாக இப்படியும் செய்ய முடியும்.. இதையும் சொல்ல முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆரோக்கியதாஸ். இவர் எல்லா ஆரோக்கியத்தையும் பெற்று பெறுவாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.

உலகம் முழுவதிலும் இரண்டாம் தரம் மற்றும் மூன்றாம் தர நாடுகளில் கட்டவிழித்துவிடப்பட்டிருக்கும் பொருளாதார சீர்த்திருத்தங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது விவசாயத் தொழில்தான். கனரகத் தொழில், ஐ.டி, விஞ்ஞானம், மருத்துவம், சேவை என்று அனைத்து துறைகளுமே நான்கு படிகள் தாண்டி மேலேறிக் கொண்டிருக்க.. விவசாயத் துறை மட்டுமே சீரழிந்து கொண்டிருக்கிறது. காரணம் அரசுகளின் பாரமுகமும், அவைகள் விவசாயப் பெருங்குடி மக்களின் மீது திணித்திருக்கும் பொருளாதார சுமைகளும்தான்..!
ஒரு ஐடி நிறுவனம் அமைக்க நிலத்தையும், கடன்களையும் தாராளமாக வாரி வழங்கும் இந்த அரசுகள்தான் ஒரு விவசாயியின் பயிர்க் கடனுக்கு வட்டியைக் குறைக்க மறைக்கிறது. தானியங்கள் வாங்கவோ, உரம் பெறவோ கடன் கொடுக்கவே மறுக்கின்றன. ஆனால் நிலத்தை விவசாயத்திலிருந்து நீக்குவதாக இருந்தால் இரண்டே நாட்களில் செய்து முடிக்கிறது அரசு. இதுதான் விவசாயத்தின் மீது இந்த அரசுகள் கொண்ட அக்கறை..
ஒரு பக்கம் நிலத்தடி நீர் மட்டும் குறைந்து கொண்டே போவது.. இன்னொரு பக்கம் சாயக் கழிவுகளால் நதி நீர் மாசுபட்டு மூணு போகம் விளைந்த வயல்காடுகள் இன்றைக்கு ஒரு போகத்திற்குக்கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலைமை. ஆறுகள் தேசிய மயமாக்கப்படாமல் அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அரசியல் சூழ்ச்சிகளால் அங்கும் தண்ணீர் தட்டுப்பாடு. வாகனங்களின் மாசு புகையினால் ஓசோன் படலம் கெட்டுப் போய் பருவ மழையே பொய்த்துப் போகும் நிலைமை. மழை நீர் இல்லாமல் நீர் ஆதாரங்கள் வற்றி வரண்டு போய் இருக்கும் கொடுமை.
இந்த லட்சணத்திலும் தங்களுக்கு இருக்கும் நிலத்தில் தங்களுக்குத் தெரிந்த விவசாயத்தைச் செய்யத் துணியும் விவசாயிகளை அடித்துப் புரட்டியெடுக்கும் அரசியல் அடாவடிகள்.. இடுப்பில் கோவணமும் வியவர்வையைத் துடைக்க துண்டு மட்டுமே அணிந்திருக்கும் அந்த ஏழை விவசாயி எத்தனை துயரத்தைத்தான் தாங்குவான்..?
அவர்களின் ஒரு துயரக் கதையை துயரமாகவே சொன்னால் தியேட்டரில் மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்பதால்  யார் சொன்னால் நடக்குமோ.. கேட்பார்களோ.. அவரையே பேசி நடிக்க வைத்து வெற்றி காண வைத்திருக்கிறார்கள்.
தஞ்சை மாவட்டம் திருகோணம் கிராமத்தில் சுற்றிலும் வயல்காடு. அனைவருமே விவசாயிகள். நெல் விளைகிறதோ இல்லையோ.. தெரிந்த தொழிலை செய்வோம் என்றெண்ணி விவசாயத் தொழிலை இன்னமும் கைவிடாத மக்கள்..
அந்த ஊரின் அருகிலேயே புதிய புகைவண்டி நிலையமும், பேருந்து நிலையமும், தொழில் பூங்காவும் வரப் போவதை அறிகிறார் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஜெயபாலனின் மகனான திருமுருகன். அத்திட்டம் வந்துவிட்டால் அருகிலிருக்கும் நிலங்களின் விலைகளெல்லாம் உயர்ந்துவிடும். அதற்குள்ளாக நாமளே அதை விலைக்கு வாங்கி அதன் பின்பு வேறொருவருக்கு நல்ல விலைக்கு விற்று காசு பார்க்கலாம் என்கிற உயரிய எண்ணத்தில் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு கேட்கிறார்கள்.
அதே ஊரில் இருக்கும் சுவுரி என்னும் விவரமான விவசாயி இதை மறுத்து சக விவசாய மக்களுக்கு அறிவுரை சொல்கிறார். ஆனால் விதி வேறாக இருக்க.. விவசாயிகள் தங்களது குடும்பச் சூழலுக்காக நிலத்தினை விற்கும் பவர் ஆஃப் அட்டர்னியை திருமுருகன் கோஷ்டிக்கு விற்பனை செய்கிறார்கள்.
குறைந்த அளவு பணத்தைக் கொடுத்துவிட்டு மீதியை தர முடியாது என்று சொல்லி அவர்களை ஏமாற்றுகிறார்கள். இதையறிந்து சவுரி தன் மக்களுக்காக களத்தில் இறங்கி போராடுகிறார். நேர்மையாகச் சென்றால் இவர்களை வெல்ல முடியாது என்பதால் தானும் புதிய திரைக்கதையோடு களத்தில் குதிக்கிறார். அவை இரண்டுமே படத்திற்கு சுவாரஸ்யம் கூட்டியிருக்கின்றன.
திடீரென்று சட்டமன்ற உறுப்பினரான ஜெயபாலன் இறந்துவிட்டதால் வரவிருக்கும் இடைத்தேர்தலில் மக்களின் வாக்குகளை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து நிலத்தை மீட்கலாம் என்று ஐடியா போடுகிறார் சவுரி. ஆனால் இது நடக்காமல் போகிறது.
அடுத்து அந்த ஊர் மக்களுக்காக தனது நிலத்தினை விற்பனைக்குத் தயார் என்று சொல்லி அங்கு ‘ஆறடி தாய் மடித் திட்டம்’ என்கிற பெயரில் சுடுகாட்டனை கட்டி விற்பனை செய்கிறார். ஏற்கெனவே விற்பனைக்குத் தயாராக இருக்கும் மனைகளுக்கு நடுவில் சுடுகாடும் இருப்பதால் நிலத்தை வாங்கி விற்பனை செய்யும் கும்பலுக்கு இது பெரும் இடைஞ்சலாகிறது. இருந்தும் மேற்கொண்டும் சிக்கல் தீராமல் இருக்க.. வேறொரு வழியைக் கையாள்கிறார் சவுரி.
அத்தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலை நடக்காமல் செய்ய ஒரு திட்டம் தீட்டுகிறார். ஊர் மக்கள் அனைவருமே தேர்தலில் வேட்பாளர்களாக நின்று ‘நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எங்களுக்கு நாங்களே ஓட்டுப் போட்டுக் கொள்கிறோம்’ என்கிறார்கள். அரசும், அதிகார வர்க்கமும் ஸ்தம்பிக்கிறது. அதிர்ச்சியாகிறது..
மீடியாக்கள் மூலமாக உண்மை தெரிந்து இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த ‘49-ஓ’-வின் மீதிக் கதை..!
‘40-ஓ’ என்பது தேர்தல் கமிஷனின் சட்டத் திருத்தத்தின் ஒரு பகுதி. ஒரு தேர்தலில் யாருக்குமே வாக்களிக்க விருப்பமில்லை என்று சொல்லி தனியே பதிவு செய்வதற்குப் பெயர்தான் ‘49-ஓ’.  ஆனால் இந்த சட்டப் பிரிவினால் ஜனநாயகத்திற்கு எந்த பலனும் இல்லை என்பதை அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறது இந்தப் படம்.
அரசாளும் அரசுகள் வழி தவறிப் போனால் அவர்களின் கவனத்தை ஈர்க்கவும், அவர்களைத் தண்டிக்கவும் ஜனநாயக வழியிலேயே இது போன்று அனைத்து மக்களுமே முன் வந்து தேர்தலில் போட்டியிடத் துவங்கினால் என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் யோசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். இதுவும் நல்ல யோசனைதான்.
முகத்தில் வயதின் தாக்கம் தெரிந்தாலும், வசன உச்சரிப்பிலும், நடிப்பிலும், எகத்தாளத்திலும் இன்னமும் பழைய கவுண்டமணியாகத்தான் தெரிகிறார். படத்தின் மிகப் பெரிய பலமே வசனங்கள்தான். விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வசனங்களும், அரசியல் சாட்டையடி வசனங்களும் எக்கச்சக்கம். ‘எவன் நல்லவன்னு மக்களுக்கும் தெரியலை.. நல்ல அரசியல்வாதியா எப்படி நடந்துக்கணும்னு அவனுக்கும் தெரியலை’ என்று சாட ஆரம்பித்து, கடைசிவரையிலும் ஒருவர்விடாமல் அனைவரையும் வெளுத்துக் கட்டியிருக்கிறார் கவுண்டர்.
கவுண்டரை வைத்து கதை சொன்னால் இப்படித்தான் செய்ய முடியும் என்பதாகவே அந்த ‘ஆறடி தாய் மடித் திட்ட’த்தை திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். அதுவே சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. அதற்கு கவுண்டர் கொடுக்கிற ஒவ்வொரு பஞ்ச்சும் சிரிக்க வைக்கிறது. இப்படி குடியிருப்புப் பகுதிகளுக்குள் சுடுகாடுகளை அமைத்தாவது விவசாய நிலங்களை காப்பாற்ற வேண்டும் என்கிறார் இயக்குநர். குட் ஐடியா.
இன்றைய இளம் நடிகர்கள் யார் தமிழை அழகாக உச்சரிக்கிறார்கள்..? பாடல் காட்சிகளில் உதட்டை அசைக்கிறார்கள் அவ்வளவுதான். ஆனால் இந்தப் படத்தில் கவுண்டரோ பாடல் காட்சிகளில் ஒரு வரிகூட மிஸ் ஆகாமல் இருக்க நினைத்து அழகாக பாடலுடன் கூடவே பாடியிருக்கிறார். நடிப்பை பணம் சம்பாதிப்பதற்காக இல்லாமல், தொழிலாக இல்லாமல், அதையொரு விருப்பமாக செய்பவர்களால்தான் இது முடியும்..!
நான்கு பாடல்களுமே கேட்கக் கூடியவையாகத்தான் இருக்கின்றன. அதிலும் ‘அம்மா போல’ பாடலும், நடனமும் அழகு. கவுண்டர் இத்தனை வருட நடிப்பு சேவையில் அதிகமாக நடனமாடியிருப்பது இந்தப் படத்திற்காகத்தான் இருக்கும். கலக்கிட்டீங்க கவுண்டரே..!
படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும், படத்தின் ஒட்டு மொத்தக் கருவை மனதில் கொண்டு அவைகளையெல்லாம் விட்டுவிடலாம். அதுவும் அதிகம் உறுத்தாத டெக்னிக்கல் தவறுகள்தான். அடுத்தப் படத்தில் ஆரோக்கியதாஸ் அதையெல்லாம் சுத்தம் செய்துவிடுவார் என்று நம்புகிறோம்..!
ஒளிப்பதிவு, எடிட்டிங் என்று எந்த டெக்னாலஜிக்கும் அதிகம் வேலை கொடுக்காமல் கொடுத்த பட்ஜெட்டிற்குள் கச்சிதமான, பெயர் சொல்லும் படமாக தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் டாக்டர் சிவபாலன்.
“யாருக்குமே இல்லாத அக்கறை உங்களுக்கெதுக்கு டாக்டர்…?” என்று சிலர் சொல்லும் அளவுக்கு இந்தப் படம் ஒரு குற்றவுணர்வை பல இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கம் நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும்.  இதையே இந்தப் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக கருதலாம்..!
இந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு விவசாயியும் தனது விளைநிலத்தை விற்பனை செய்யும் தருணத்தில் ஒரு நிமிடமாவது யோசித்துப் பார்த்தால் அதுவே கவுண்டருக்குக் கிடைத்த வெற்றியாகவும் இருக்கும்..!
கவுண்டரின் இது போன்ற அடுத்தடுத்த அதிரடிகளை எதிர்கொள்ள தமிழ்த் திரையுலகம் காத்துக் கொண்டிருக்கிறது..!
49-ஓ – அவசியம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம். மிஸ் பண்ணிராதீங்க..!

மாயா - சினிமா விமர்சனம்

18-09-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பேய்ப் பட வரிசையில் மிக வித்தியாசமான பேயாக மிரட்டலாக வந்திருக்கிறது இந்த ‘மாயா’.
அனைத்து வகையான பேய்ப் படங்களிலும் மிக சாதா, சாதா, மிகையான, அதிகமான, மிக அதிகான பயமுறுத்தல்களெல்லாம் அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருக்கும். ஆனால் இந்த ‘மாயா’ படத்தில் முதல் ஷாட்டில் இருந்து படத்தின் முடிவுவரையிலும் ஒவ்வொரு காட்சியிலும் ஒருவிதமான பயமுறுத்தல் இருந்து கொண்டேயிருக்கிறது.
அதே சமயம் தப்பித் தவறி 2 நிமிடங்கள்கூட திரையைப் பார்க்காவிட்டால் படத்தின் கதை நமக்கு அன்னியமாகிவிடும். அப்படியொரு மிகுந்த புத்திசாலித்தனமான திரைக்கதை அமைப்போடு இந்தக் கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் அஷ்வின் சரவணன்.

கதைக்குள் ஒரு கதையாக.. சினிமாவுக்குள் ஒரு சினிமாவாக இதில் வைக்கப்பட்டிருக்கும் முன் பின் நகர்த்தப்பட்ட திரைக்கதை யுக்திகள்தான் படத்தின் மிகப் பெரிய பலம். கதைக்குள் ஊடுறுவும் கதையின் மாந்தர்களும், ஏற்கெனவே கதையின் மாந்தர்களாக இருப்பவர்களும் ஒரு சேர பயணிக்கும் ஒரு கதையின் திரைக்கதையை குழப்பாமல் கொண்டு செல்வது சுலபமல்ல. இதில் அதனை அத்தனை இலகுவாக அமைத்திருக்கிறார் கதாசிரியர்.
கைக்குழந்தையுடன் கணவரைப் பிரிந்து தனியே தனது தோழியுடன் வசிக்கிறார் நயன்தாரா. கணவர் கொடுக்கும் பண உதவிகளை ஏற்க மறுக்கிறார். விளம்பரப் படங்களில் நடிக்கும் நடிகையாக இருக்கும் நயன்தாராவுக்கு கடன் பிரச்சினையும் அதிகமாக உள்ளது.
தோழி பணியாற்றும் படத் தயாரிப்பு நிறுவனத்தில் ஹீரோயின் வேஷத்திற்காக மேக்கப் டெஸ்ட்டுக்கு செல்கிறார். முடிவுக்குக் காத்திருக்கும் சூழலில் கடன்காரன் வீடு தேடி வந்து பிரச்சனை செய்ய.. பணப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டிய கட்டாயம் நயனுக்கு..
தோழியின் பட நிறுவனம், தாங்கள் தயாரித்த திகில் படத்தை தன்னந்தனியே தியேட்டரில் அமர்ந்து பார்ப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு தருவதாகச் சொல்கிறது.  அந்தப் படத்தை தனியே அமர்ந்து பார்க்கும் தயாரிப்பாளர் ஜி.எம்.குமார் மாரடைப்பால் செத்துப் போக.. அவரிடத்தில் பணப் பாக்கியை பெற வரும் நயன் அதிர்ச்சியாகிறார்.
எப்படியாவது பணத்தை பெற்றாக வேண்டும் என்று துடிக்கும் நயன் அடுத்த பலியாக தான் அந்தப் படத்தைத் தனியே பார்க்க தயாராகிறார். தோழியின் எச்சரிக்கையையும் மீறி படத்தைப் பார்க்கிறார். இதன் முடிவு என்ன என்பதுதான் இந்த ‘மாயா’வின் கதை..!
படத்தின் துவக்கத்தில் சொல்லப்படும் கதையே இடைவேளைக்கு பின்பு டிவிஸ்ட்டாக வேறொரு கதையாக படத்தில் திணிக்கப்பட ‘அட’ என்று சொல்ல வைத்திருக்கிறார் இயக்குநர்.
காட்டுக்குள் ஒரு பங்களா. அங்கே சில மன நோயாளிகள்.. சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். மருந்துகள் கொடுத்து சோதிக்கப்படுகிறார்கள். ஒதில் ஒருவர் ‘மாயா’ என்றொரு பெண். அவருக்கு பெண் குழந்தை பிறந்ததும் அவரிடமிருந்து பிரிக்கப்படுகிறது. மிகுந்த துன்புறுத்தலால் ‘மாயா’ சாகிறாள். அவளுடன் அவள் அணிந்திருந்த விலை மதிப்பில்லாத வைர மோதிரமும் புதைக்கப்படுகிறது.
அந்த மோதிரம் பற்றிய ரகசியம் அறிந்து அதைக் கண்டுபிடிக்க அந்தக் காட்டுக்குள் போனவர்கள் யாரும் உயிருடன் திரும்பி வரவில்லை. அதைத் தேடி அலைகிறார்கள் சிலர். இந்த அலைச்சலுக்கு அவர்கள் ஒரு பத்திரிகையில் கதையாக எழுதி விளம்பரமும் தேடிக் கொள்கிறார்கள்.
இது கதையாகவும் வருகிறது. காட்சியாகவும் வருகிறது. இதில் நயன்தாரா என்னும் ‘மாயா’ வெளியில் நடிகையாகவும், கதையின் உள்ளே கதையின் நாயகியாகவும் உருமாறி வருகிறார்.
கொஞ்சம் பிசகினாலும் கதை புரியாது என்று சொல்வது போல சிக்கனமான வார்த்தைகளால் வசனங்களை வைத்து, பயமுறுத்தலான இயக்கத்தினாலும், மிக அமானுஷ்யமான காட்சிப்படுத்தலிலும், ஒளிப்பதிவிலும் மிரட்டியிருக்கிறார்கள்.
படம் முழுக்க ஒளிப்பதிவில் செய்திருக்கும் கலர் டோனும், பிளாக் அண்ட் ஒயிட் பேக்கிரவுண்ட் காட்சிகளும்.. நள்ளிரவு சுடுகாட்டு காட்சிகளும் பரபரப்பையும், திகிலையும் ஒரு சேர கொடுத்திருக்கின்றன.
படம் முழுக்க வியாபித்திருக்கும் திகில் போலவே நயன்தாராவும் நம்மை ஆட் கொள்கிறார். பேரழகி என்பதற்கு மிகச் சிறந்த அடையாளம் நம்ம நயன்ஸ்தான். குளோஸப் காட்சிகளில் சொக்க வைக்கிறார். திரும்பத் திரும்ப அவர் இருக்கும் ஷாட்டுகள் ஏன் வரக் கூடாது என்றும் யோசிக்க வைக்கிறார்.
“உங்களுடைய முதல் திருமண நாள். அன்றைக்கு உங்களுடைய கணவருக்கும் வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பது உங்களுக்குத் தெரிய வருகிறது. அன்றைக்குத்தான் நீங்கள் கர்ப்பம் தரித்திருப்பதும் தெரிய வருகிறது. இப்போது உங்களது ரியாக்ஷன் என்ன..?” என்கிற இயக்குநரின் கேள்வியும், அதற்கு நயன்ஸ் கொடுக்கும் ரியாக்ஷனும், ‘ஹேப்பி ஆன்னிவர்ஸரி’ என்று உச்சரிக்கும் தொனியும் ஒரு பரிதாபத்தையும், பச்சாபத்த்தையும் அவர் மேல் சுமத்துகிறது..!
அதிலிருந்து அவர் பிள்ளைக்காக படும்பாடும், கடன் தொல்லையும் நமக்கே வந்த்து போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. இதற்காக இயக்குநருக்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு..!
ஆரியின் கேரக்டரை உண்மை என்று நம்பிக் கொண்டேயிருப்பது போல காட்சிகளை நகர்த்தியிருப்பதும் செம டிவிஸ்ட்டு.. முதல் காட்சியில் பேய் போன்ற தோற்றத்தை உருவாக்குவதில் இருந்து கடைசியில் பேய்களிடமிருந்து தப்பிப்பதுவரையிலும் அவர் ஒரு கேரக்டராகவே வந்து போகிறார். கிளைமாக்ஸில் கொடுக்கும் ஒரு டிவிஸ்ட்டும் செம.. ஆரிக்கு நெடுஞ்சாலையின் தொடர்ச்சியாக இந்தப் படமும் முக்கியமான படமாக இருக்கும்.
லட்சுமிபிரியா, மைம் கோபி, ரேஷ்மி மேன்ன், ரோபோ சங்கர் என்று அனைவருமே அவரவர் கேரக்டர்களில் அளந்து நடித்திருக்கிறார்கள். வெறுமனே தனது உடல் மொழியால் மட்டுமே தியேட்டரில் சிரிப்பலையை ஏற்படுத்தியிருக்கிறார் ரோபோ சங்கர். அவருடைய முடிவிலும் ஒரு டிவிஸ்ட்டை வைத்திருப்பது நல்ல டிவிஸ்ட்.. இவர்களையும் தாண்டி அந்த ஆட்டோ டிரைவர் வேடத்தில் நடித்தவருக்கும் ஒரு மிகப் பெரிய பாராட்டு.
இயக்குநரின் திறமை, பின்னணி இசையின் திடுக் உணர்வு, எடிட்டரின் கச்சிதமான எடிட்டிங்.. இது எல்லாவற்றையும் தாண்டி நடிப்பவர்கள் காட்டும் மிரட்சிதான் திகில் படங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும். இதை அந்த ஆட்டோ டிரைவர் கேரக்டர் கச்சிதமாகச் செய்திருக்கிறார். பாராட்டுக்கள்..!
படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் ஷாட் பை ஷாட் மிரட்டலாகப் படம் பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனுக்கு ஒரு மிகப் பெரிய பாராட்டு.  துவக்கத்தில் ஆரி வரும் காட்சிகளுக்கு ஒரு கலர் டோன், அடுத்து நயன்தாரா வரும் காட்சிகளுக்கு வேறொரு கலர் டோன் என்று வித்தியாசத்தைக் கொடுத்தாலும் அதனை உணராத வண்ணம் செய்திருப்பதுதான் இவருடைய திறமையைக் காட்டுகிறது.
ரான் ஏதன் யோகனின் இசையில் பின்னணி இசை திகிலைக் கூட்டியிருக்கிறது. பட்டென்று பயமுறுத்தும் காட்சிகளுக்கு பொருத்தமான இசையும் இது போன்ற படங்களில் இடம் பெறும் பாடல்களுக்கென்றே இருக்க வேண்டிய இசையையும் கொடுத்து பேலன்ஸ் செய்திருக்கிறார்.  டி.எஸ்.சுரேஷின் கச்சிதமான எடிட்டிங் படத்திற்கு இன்னமும் மிகப் பெரிய பலத்தைக் கொடுத்திருக்கிறது.
வெறும் மேக்கப்பும், ஸ்லோமோஷன் ஆக்சன்களும், ஸ்டெடிகேம் ஷாட்டுகளும், அதீத காட்டுக் கத்தல் பின்னணி இசையுமே ஒரு பேய்ப் படத்திற்கான உணர்வினை தந்துவிடாது. அதையும் தாண்டி கதையும் நமக்கு ஒரு உணர்வினைத் தர வேண்டும். அதை இந்தப் படம் கொடுத்திருக்கிறது.
படத்திற்குத் தேவையில்லாமல் எந்த ஷாட்டும் இல்லை. தேவையில்லாமல் ஒரு வசனமும் இல்லை. எல்லாமே அளந்து, அளந்துதான் வைத்திருக்கிறார்கள். 2 மணி 20 நிமிட படத்தில் பயம் இல்லாத காட்சியே இல்லை என்பதே இந்தப் படத்தின் தனிச் சிறப்பு..
‘மாயா’ மிரட்டியிருக்கிறாள்.

யட்சன் சினிமா விமர்சனம்

13-09-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஆனந்தவிகடனில் எழுத்தாள இரட்டையர்களான சுபா எழுதிய ‘யட்சன்’ கதையையே கொஞ்சம் டிங்கரிங் வேலை செய்து திரைப்படமாக்கியிருக்கிறார்கள்.
வேறு வேறான நோக்கத்துடன் பயணிக்கும் இருவர் எதிர்பாராமல் சந்திக்கும் நேரத்தில் நடக்கும் அசம்பாவிததால் தொடரும் திரைக்கதையின் தொகுப்பு என்று இந்தப் படத்தைச் சுருக்கமாக சொல்ல்லாம்.

பரம்பரை பரம்பரையாக பழனியில் பஞ்சாமிர்த தொழிலைச் செய்து வரும் குடும்பத்தில் பிறந்த கிருஷ்ணாவுக்கு கோடம்பாக்கத்தில் குடியேறி இன்றைய சூப்பர் ஸ்டார்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கிற வெறி. இவருக்கு ஒரு காதலி. காதலனைவிடவும் காதலி புத்திசாலியாகவும், அனுபவசாலியாகவும் இருக்கிறாள்.  தன் வீட்டில் தனக்காக வைத்திருக்கும் நகைகள், பணம் எல்லாவற்றையும் காதலனிடம் கொடுத்து சென்னைக்கு பஸ் ஏற்றி அனுப்புகிறாள்.
இன்னொரு பக்கம் தூத்துக்குடியில் சின்னச் சின்ன அடிதடி செய்யும் சின்னா என்னும் ரவுடியான ஆர்யா.. தற்செயலாக ஒரு கொலையைச் செய்துவிட்டு அந்த குரூப்பிடமிருந்து தப்பிக்க நினைத்து சென்னைக்கு வண்டியேறியிருக்கிறார். சென்னையைவிட்டும் வேறு ஏதாவது ஒரு நாட்டுக்கு போய்விடலாம் என்று நினைக்கிறார். அதற்கு 2 லட்சம் பணம் வேணுமே என்கிற தவிப்பில் இருக்கிறார்.
பிறவியிலேயே அனாதை இல்லத்தில் வளர்ந்து வரும் இன்னொரு ஹீரோயினான தீபா சந்நதி, திடீரென்று மின்னல் தாக்கி தூக்கி வீசப்படுகிறாள். உயிர் பிழைத்தாலும் அன்றிலிருந்து யாராவது ஒருவரை உற்றுக் கவனித்தாலே அவருக்கு அடுத்து என்னென்ன நடக்கும் என்பது தெரிய ஆரம்பிக்கிறது.
ஈ.எஸ்.பி. எனப்படும் இந்த எதிர்காலத்தைக் கணிக்கும் ஆற்றல் ஒரு நேரத்தில் தீபாவுக்கு சிக்கலை உருவாக்க.. தீபாவை கொலை செய்ய லோக்கல் கட்சிப் பிரமுகர் திட்டமிடுகிறார். அந்தக் கொலையை செய்யும் பணி ஆர்யாவுக்குக் கிடைக்கிறது. லட்சத்தில் பணம் கிடைக்குமே என்றெண்ணி இதற்கு ஒத்துக் கொண்டு ஒரு நல்ல நாள் குறித்துக் கொடுக்கிறார் கொலைச் சம்பவத்திற்கு..
இன்னொரு பக்கம் கிருஷ்ணா அரும்பாடுபட்டு எஸ்.ஜே.சூர்யாவின் கண்ணில்பட்டு தல அஜீத்திற்கு தம்பியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். அதற்கான அறிவிப்புக் கூட்டமும் அதே நல்ல முகூர்த்த நாளில்தான் நடைபெறுகிறது.
திருவல்லிக்கேணியின் அருகருகே இருக்கும் லாட்ஜ்களில் தங்கியிருக்கும் கிருஷ்ணாவும், ஆர்யாவும் தங்களை அழைக்க வந்த கார்களில் மாறி உட்கார்ந்து பயணிக்க படமும் வேறு திசையில் பயணிக்கிறது. அவரவர் வேலையை செய்து முடித்தார்களா? இல்லையா? என்பதுதான் மிச்சம் மீதிக் கதை.
ஒரு கதையாகப் படித்தபோதும், இப்போது திரும்பவும் வாசிக்கின்றபோதும் அதில் கிடைத்த ஒரு சுவாரஸ்ய அனுபவமே படத்தை பார்த்தே தீர வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஆனால் எதிர்பார்த்தது முழுமையாக கிடைக்கவில்லையே என்கிற அதிருப்தியும் நமக்குண்டு.
இது போன்ற படங்களை சீரியஸாகத்தான் அணுகியிருக்க வேண்டும். பாதி சீரியஸாகவும், மீதியை காமெடியாகவும் நகர்த்தியிருப்பதால் கடைசியில் ஒரு பக்கா கமர்ஷியல் படம் பார்த்த திருப்தியை மட்டுமே படம் நமக்குக் கொடுத்திருக்கிறது.
ஆர்யாவின் கெட்டப்பிலும், செட்டப்பிலும் எந்த மாற்றமுமில்லை. இப்படியே இன்னும் எத்தனை படங்களில்தான் நடிக்க முடியும்..? இயக்குநரையும் தாண்டி நம்மை ரசிக்க வைக்க நடிகர்கள்தான் எதையாவது செய்ய வேண்டும்..? இதில் அவர் என்ன செய்திருக்கிறார் என்று ஆர்யாதான் சொல்ல வேண்டும். பட் ஒன் கின்க்.. தீபா சந்நதியை நினைத்து நினைத்து உருகுவதை மாற்றி மாற்றிப் பேச இதற்கு சென்ட்ராயனின் குயில்கள் விளக்கம் கொடுக்கும் காட்சி ரம்மியம்.. ஆர்யாவின் நடிப்பும், துடிப்பும் ரசிக்க வைக்கிறது..! மற்றபடி சண்டை காட்சிகள், நடனக் காட்சிகளின் ஆர்யாவின் பங்களிப்பு அதே வழக்கம்போலத்தான்..
கிருஷ்ணா இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கிறார். நிறைவாகவே இருக்கிறது. திரைக்கதையின் வேகத்திலும், அடுத்து என்ன என்கிற எதிர்பார்ப்பிலும் இருப்பதால் இதையெல்லாம் யோசிக்கவே நேரமுமில்லை. தோணவும் இல்லை. கிருஷ்ணாவிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.
சந்தேகமே இல்லாமல் நடிப்பில் முதலிடம் ஸ்வாதி ரெட்டிக்குத்தான். இவ்வளவு தேர்ந்த நடிப்பைக் காட்டும் இவர் ஏன் இன்னமும் தமிழ்த் திரையுலகில் முன்னணிக்கு வரவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கிருஷ்ணாவின் வீடு தேடி வந்து மிரட்டுவதில் இருந்து கிருஷ்ணாவை தேடி வந்து மாட்டிக் கொண்டு கடைசியில் அவரைக் கண்டுபிடித்து லெப்ட் அண்ட் ரைட் வாங்குவதுவரையிலும் பின்னியிருக்கிறார். வெல்டன் மேடம்..
தீபா சந்நதி. இவரை அதிகமாக அழுக வைத்தே கதையை முடித்திருக்கிறார் இயக்குநர். பாடல் காட்சியொன்றில் மட்டுமே அழகாக சிரித்திருக்கிறார். ஆனால் தமிழ் தகிரத்தாளம் போடுவதால் பல குளோஸப் ஷாட்டுகளில் இழுத்து, இழுத்து பேசவது அப்பட்டமாகத் தெரிகிறது.
ஆர்.ஜே.பாலாஜியின் காதல் எபிசோடுகள் சுவாரஸ்யம்.. இடையிடையே இவர் உதிர்க்கும் ஜோக்குகள் திரைக்கதைக்கு சுவாரஸ்யத்தைக் கொடுத்திருக்கின்றன.  தங்கமணியாக வரும் தம்பி ராமையா வழக்கம்போல.. ஏற்ற இறக்கத்துடன் வசனங்களை பிய்ச்சு, பிய்ச்சு பேசி பிரித்து மேய்ந்திருக்கிறார். அடக்கமான அரசியல்வியாதியாக ஒய்.ஜி.மகேந்திரா.. கண்டிப்பான அரசியல்வாதியா.. அல்லது தட்டிக் கொடுக்கும் அண்ணனா என்பதே புரியாத அளவுக்கு வசனத்தை பேச வைத்து இயக்கியிருக்கிறார் இயக்குநர். இவருடைய கேரக்டர் ஸ்கெட்சுன்னால் கடைசியில் ஒரு சிறிய குழப்பம்..  இவரை கொலை செய்தால் அப்படியே போலீஸ் விட்டுவிடுமா..?
ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவிற்கு ஒரு பெரிய கும்பிடு. அடுத்தடுத்த பல காட்சிகளிலும் கலர் காம்பினேஷனை மாற்றி, மாற்றி காட்டி கண்களை குளிர வைத்திருக்கிறார். தூத்துக்குடியின் கடல் பரப்பு.. சென்னையின் வான் பரப்பு.. பாடல் காட்சிகளில்  அத்தனை கலர்புல்.. மழை காட்சிகளில்கூட ஏதோ ஒருவித பயம் கொண்ட சூழலை கேமிராவிலேயே காட்டியிருக்கிறார். பாராட்டுக்கள் ஸார்..! இறுதியான கிளைமாக்ஸில் கேமிராவின் பரபரதான் ரசிக்க வைத்திருக்கிறது.
யுவனின் இசையில் ‘காக்கா பொண்ணு’ பாடலும், ‘கொஞ்சலை’யும் கேட்க வைத்திருக்கிறது. பின்னணி இசை தேவையே இல்லை என்கிற ரீதியில்தான் படத்தில் இருக்கிறது. யுவன் எப்போதுமே இதற்கு மெனக்கெட மாட்டார். இதில் மட்டும் செய்துவிடுவாரா என்ன..?
விஷ்ணுவர்த்தின் இயக்கம் தனி ஸ்டைல் கொண்டது. இதில் அதற்கான பல காட்சிகள் உண்டு என்றாலும் கதையின் முடிச்சு வலுவில்லாமல் இருப்பதாலும், யூகிக்க முடிந்த திரைக்கதையினாலும் விஷ்ணுவர்த்தனுக்கு இந்தப் படத்தில் பெயர் கிடைப்பதென்பது சந்தேகம்தான்..
ஆர்யாவின் சென்னை அறையில் அவரை தனித்து காட்டும் பல ஷாட்டுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது. ஆனால் அத்தனையும் அருமை. பஸ்ஸ்டாண்டில் பொன்வண்ணனின் அடியாட்களின் ரகளை.. இதில் கிருஷ்ணன் மாட்டுவது.. டீக்கடையில் கிருஷ்ணனும், ஆர்யாவும் எதேச்சையாக சந்திப்பது.. ஸ்வாதியும், கிருஷ்ணாவின் அப்பாவும் வரும்போது உள்ளே தம்பி ராமையா இருப்பது.. பொன்வண்ணனின் கேரக்டர் ஸ்கெட்ச். அவரது அறிமுகம்.. வில்லனின் பிளாஷ்பேக் கதை.. என்றெல்லாம் சில சில விஷயங்கள் படத்தினை பேச வைத்திருக்கின்றன.
ஆனால் ஒரு விஷயம்.. ஈ.எஸ்.பி. எனப்படும் முன்கூட்டியே அறியும் சக்தியை கொண்ட தீபாவால் இறந்து போனது வெற்றியா அல்லது அவர் தம்பி செல்வமா என்பதை சொல்ல முடியவில்லையா..? செத்தது செல்வம்தான் என்று தீபா சொல்வது உண்மையெனில் கிளைமாக்ஸில் வெற்றி சொல்வது பொய்யாக அல்லவா இருக்கும். ஏன் இந்தக் குழப்பம்..?  
‘யட்சன்’ என்றால் ‘காப்பவன்’ என்றும் சொல்லலாம். ஆர்யாவுக்கு இந்த டைட்டில் பொருத்தமில்லை.. கிருஷ்ணாவுக்கும் இந்த டைட்டில் பொருத்தமில்லை.. தீபாவுக்கும் டைட்டிலில் வேலையில்லை. ஆனால், கச்சிதமான பொருத்தம் ஸ்வாதி ரெட்டிக்குத்தான்..!
அவர்தான் சவுண்டோடு ஜீப்பில் ஆட்களைக் கூட்டி வந்து தன் காதலனையும் மற்றவர்களையும் காப்பாற்றுகிறார். ஆக,, இந்த அடாவடி பொண்ணை ரசிக்கணும்னே இந்தப் படத்தைப் பார்க்கலாம்..!