பதிவர் சந்திப்பு அமங்கலமான துயரம்..!

30-03-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வீட்டில் முதன்முதலாக நடக்கப் போகின்ற திருமணம்.. ஆசைஆசையாக முதன்முதலில் கட்டிய வீட்டின் கிரஹப்பிரவேசம்.. குழந்தையின் முதல் பிறந்த நாள் விழா.. இப்படி நமக்கு சந்தோஷத்தை அள்ளிக் கொடுக்கிற நாளில் அது அமங்கலமாகி முடிந்தால் உங்களுக்கு எப்படி இருக்குமோ அப்படித்தான் எனக்கும் அன்றைய நாளில் இருந்தது..!

நானும், தண்டோராவும், கேபிள் சங்கரும், சூர்யாவும் சந்திக்கின்றபோதெல்லாம் ஏதாவது ஒரு அமைப்போ, சங்கமோ வலைப்பதிவர்களுக்காக அமைத்தால் நன்றாக இருக்குமே.. எப்போது செய்யலாம்.. எப்படி செய்யலாம்.. என்று பகிர்ந்து கொண்டிருக்கிறோம். அது சாத்தியமாகாமல் மனதிற்குள்ளேயே கிடந்தமைக்கு முக்கியக் காரணம் அவரவர்க்கு இருந்த சொந்த வேலைகள்.

எந்தவொரு முயற்சியின் வெற்றியின் பின்னாலும் ஒரு வெறியான பொறி இருந்திருக்க வேண்டும். இருக்க வேண்டும். அது யாருக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றியெல்லாம் தெரியாது. ஆனால் எனக்கு வந்தது கடந்த 20-ம் தேதியன்று சென்னையில் நடந்த இண்டிபிளாக்கர் கூட்டத்தில்.

அந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டபோது அங்கு வந்திருந்த பதிவர்களின் கூட்டத்தையும், அவர்கள் நிகழ்ச்சியை நடத்திய பாங்கையும், எதிர்காலத்தை மனதில் வைத்து அவர்கள் ஆரம்பித்திருக்கும் அமைப்பையும் யோசித்தபோது(இத்தனைக்கும் அவர்கள் இந்தியா முழுமைக்குமான ஆங்கிலப் பதிவர்கள்) பிரமிப்பாக இருந்தது.

இத்தனை தூரம்.. தமிழ்.. தமிழ் என்றெல்லாம் மாநிலம் முழுவதும், பதிவுகள் முழுவதும் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கின்ற நம்மால் ஏன் இது போல் செய்ய முடியாது.. அவர்களும் நட்பை வளர்ப்பதையும், தொடர்வதையும், எழுத்து ஆர்வத்தை தூண்டுவதையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இந்த அமைப்பினை நடத்துவதாகச் சொன்னார்கள். நல்ல விஷயம்தானே.

அமைப்பு என்கிறபோது யார் நடத்துகிறார்கள் என்கிற கேள்விக்கு ஒரு விடை கிடைத்துவிடுகிறது. தனி நபர்கள் இது போன்று மிகப் பெரும் அளவுக்கு நடத்திவிட முடியாது. அதற்காக சில தனி நபர்களின் பணத்திலேயே நிகழ்ச்சியை நடத்திவிட்டு அதனை பின்னாளில் விமர்சனம் செய்கின்றபோது இரு தரப்பாருக்குமே மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புண்டே.

அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீடு திரும்பியவுடனேயே அண்ணன் தண்டோராவுக்கு போன் செய்து அமைப்பு பற்றிய பேச்சைத் துவக்கினேன். இடைமறித்த அவர், "அண்ணே.. நானும் அந்த மூட்லதான் இருக்கேன். இப்பத்தான் கேபிள்கிட்ட பேசினேன்.. அடுத்த வாரம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னோடியா ஒரு நிகழ்ச்சியை அறிவிச்சிரலாம்.. நீங்களும் போஸ்ட் போடுங்க.." என்றார்.

மட்டற்ற மகிழ்ச்சி. நானே அது பற்றிப் பேசலாம் என்று போனை போட.. அவரும் அதையே சொல்கிறார் என்றால் ஏதோ ஒன்று இருவருக்குள்ளும் பொறியாக இருந்திருக்கிறது என்பதை நினைத்து சந்தோஷப்பட்டேன்.

கவனிக்க.. சங்கம் அமைக்க ஆலோசனைகளையும், கருத்துரைகளையும் கேட்கத்தான் இந்தக் கூட்டத்தை கூட்டுகிறோம் என்று பதிவில் எழுதியிருந்தார் தண்டோரா அண்ணன். கேபிளும் அதையேதான் முன் மொழிந்திருந்தார். நானும் எனது பதிவில் இன்னும் கொஞ்சம் விரிவாக கேள்விகளையும் கேட்டு இதற்கெல்லாம் பதில் கிடைக்க வேண்டும். வாருங்கள் என்று அழைத்திருந்தேன். சங்கம் அமைக்கலாமா வேண்டாமா என்பது பற்றிய ஆலோசனைக்கு அல்ல.. சங்கத்தை அமைப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனைக்காகத்தான்..

அடுத்தது அந்த டிராப்ட் பேப்பர். தண்டோரா அண்ணனிடம் "நான் ஒரு டிராப்ட்டை வடிவமைப்பு அனுப்புகிறேன். பாருங்கள்.. பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.. ஏதேனும் திருத்தம் இருந்தால் திருத்திக் கொள்ளலாம்.." என்றேன். கேபிளிடமும் இதையே சொன்னேன். சரி என்றார்கள். ஆனால் என் நேரம் பாருங்கள்.. என் அப்பன் முருகன் இடையில் புகுந்து விளையாடிவிட்டான்.

நான் அனுப்பிய பாண்ட் தண்டோரா அண்ணன் சிஸ்டத்தில் ஓப்பன் ஆகவே இல்லை.. கேபிளுக்கும் இதே கதிதான்.. சரி.. சூர்யாவிடமாவது கருத்துக் கேட்கலாம் என்று சொல்லி அவருக்கும் அனுப்பி வைத்தேன். அவரும் இதையேதான் சொன்னார்.. நேரமும் கடைசி நாள் என்பதாகிவிட்டதால் "நீங்க பிரிண்ட் அவுட் எடுத்திட்டே வந்திருங்க.. பார்த்துக்கலாம்.." என்று தண்டோரா அண்ணனும், கேபிளும் சொல்ல.. எடுத்து வந்தேன்.

அதில் இருந்த வாசகங்கள்.. கருத்துக்கள்.. கேள்விகள்.. அனைத்தும் நானே என் சொந்த புத்தியில் எழுதியவைதான்.. பிரிண்ட் அவுட்டாகத்தான் தண்டோராவும், கேபிளும் மற்றவர்களும் பார்த்தார்கள்.

நான் முதலில் மைக்கை பிடித்தவுடனேயே தெளிவாகச் சொன்னேன். "சங்கம் ஆரம்பித்தால் என்னென்ன செய்ய வேண்டும்..? எப்படியெல்லாம் செயல்பட வேண்டும்..? யார், யாரெல்லாம் இருக்க வேண்டும்..? அதற்கான அரசு வழிமுறைகள் என்னென்ன..? அதை நாம் எப்படி பின்பற்றுவது.. இதைத்தான் இந்தக் கேள்விகளில் கேட்கப்பட்டிருக்கிறது. பதிவர்கள் தயவு செய்து இந்தக் கேள்விகளுக்கு தங்களது ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவிக்குமாறுதான்" நான் கேட்டுக் கொண்டேன்.

"நமக்காக ஒரு அமைப்பை ஆரம்பிக்கலாமா? வேண்டாமா?" என்று நான் கேட்பதாக இருந்தால், எதற்கு இப்படி ஒரு வில்லங்கத்தை தட்டச்சு செய்து கொண்டு வர வேண்டும்..? ஒரு அமைப்பு நமக்கு வேண்டும் என்று நினைத்துதான் நான் அதனை கொண்டு வந்து கொடுத்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது..? அமைப்பு ஆரம்பிக்கலாமா வேண்டாமா என்பதுதான் அன்றைய அஜெண்டா என்றால் கடைசி நேரத்தில் அண்ணன் ஞானி கேட்டதுபோல் கையைத் தூக்கும்படி நான் முதலிலேயே கேட்டிருப்பனே..?

மேதகு சிவராமன் எங்களது பதிவுகளைப் படித்ததாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் என்ன, எப்படி படித்தார் என்று எனக்குத் தெரியவில்லை.

அமைப்பைத் துவக்க ஆலோசனைக்காகத்தான் அழைத்திருந்தோம். அமைப்பாக உருவெடுக்க எங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை ஒரு வரியில் சொல்லி முடித்திருக்கலாம். தேவையில்லாமல் நாங்கள் ஏதோ திட்டமிட்டே முன்பே சதி வேலை செய்து அமைப்பை உருவாக்கிவிட்டு பின்பு வெறும் கண்துடைப்புக்காக அவர்களை அழைத்ததாக கதையைத் திரித்துவிட்டார் மேதகு சிவராமன்.

வலையுலகத்திற்கு அமைப்பு எதற்காக இப்போது தேவை என்று இந்த மேதகுதான் கேட்டார். வெறும் இரண்டு பேர் மட்டுமே சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கி மாதந்தோறும் ஒரு திரைப்படத்தினை காட்டும்போது, கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 5000 வலைப்பதிவர்கள் இயங்கி வரும் இந்தத் தமிழ்ச் சூழலில் அவர்களை வைத்து ஒரு அமைப்பாக்கி என்னவெல்லாம் செய்யலாம் என்று ஏன் இந்த பின்னவீனத்துவ ஐயாவுக்குத் தோணவில்லை என்பது எனக்குப் புரியவே இல்லை.

எதற்குத் தேவை என்று கேட்டதற்குக்கூட நான் ஒரு இடத்தில் பதில் சொன்னேன்..

அமைப்பை உருவாக்கி அதன் மூலம் இணையத்தில் எழுதும் ஆர்வமுள்ளவர்களை நாம் வலையுலகத்திற்குள் இழுக்கலாம்.

அவர்களுக்கு வலையுலகத்தை அறிமுகப்படுத்தலாம்.

ஒரு அலுவலகம் அமைத்து அங்கே வலையுலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு நாமே சொல்லிக் கொடுத்து அவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.

மாநகராட்சி பள்ளிகள், மற்றும் கல்லூரிகளுக்கு அமைப்பின் சார்பாக வலைப்பதிவர் பட்டறையை நடத்தலாம்.

வலையுலகத்திற்குள் பலரும் வருவதால் அவர்களுக்கு நிச்சயமாக பலன்கள் கிடைக்கும். நட்புகள் கிடைக்கும்.. இதனால் எனக்குக் கிடைத்ததுபோல் நல்லவைகளும் நிச்சயம் நடக்கும்..

என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னேன்.

இதையெல்லாம் தனி நபர்களாக இருந்து செய்கின்றபோது பல்வேறு விமர்சனங்களும் பணச்சிக்கல்களும் ஏற்படக்கூடிய சூழல் உண்டு. ஒரு அமைப்பின்கீழ் என்றால் உடனடியாக எங்கே வேண்டுமானாலும் அனுமதி கிடைக்கும்.. ஏன் ஸ்பான்ஸர்ஷிப்கூட உடனடியாக கிடைக்கும். அதனை வைத்து நாம் நடத்த வேண்டியவைகளை பெரிய அளவில் பேர் சொல்லக் கூடிய அளவுக்கு நடத்தலாமே.. தனி நபர்களாக இருக்கின்றபோது இது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்..

ஒரு அமைப்பின் கீழ் இருந்தால் நாளை எந்தவொரு அதிகார வர்க்கத்திடமும் நாம் தைரியமாகப் பேசலாம். குரல் கொடுக்கலாம். தனி நபர்களாக போய் பேசுவதற்கும், அமைப்பின் பெயரில் போய் பேசுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

இனி வரும் காலங்களில் அரசும், ஆட்சி நிர்வாகமும், அரசியல் சட்டமும் வலையுலகத்தினரை பத்திரிகையாளர்களில் ஒருவராக அங்கீகரிக்காவிட்டால் பலவித பிரச்சினைகள் பதிவர்களுக்குத்தான் ஏற்படப் போகிறது. ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட் வழக்கொன்றில் "வலைத்தளங்களில் யார் என்ன எழுதினாலும் அதற்கு அவரே பொறுப்பு.. அது குற்றச்சாட்டாக இருந்தாலும், அவதூறாக இருந்தாலும், வெளியில் இருந்து எடுத்துக் கையாண்டதாக இருந்தாலும் சரி.. அவர்தான் பொறுப்பேற்க வேண்டும்.." என்று தீர்ப்பு சொல்லியுள்ளது.

இது எப்படி இருக்கிறது எனில், ஒரு பத்திரிகையில் ஒரு அரசியல்வாதியை ஊழல்வாதியாக எழுதியிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தச் செய்தியை நீங்கள் உங்களது பதிவில் காப்பி செய்து வெளியிட்டீர்களேயானால் அந்த ஊழல் அரசியல்வாதி உங்கள் மீது வழக்குத் தொடர்ந்தால் அந்த அரசியல்வாதி ஊழல் செய்தார் என்பதை நீங்கள்தான் நிரூபித்தாக வேண்டும். அந்தப் பத்திரிகையில் இருந்ததை நான் காப்பி செய்தேன் என்று சொல்லி ஜகா வாங்க முடியாது.

இதே செய்தி பத்திரிகையில் வந்திருந்தால் கட்டுரையை எழுதிய கட்டுரையாளர் நமது நிருபர் என்று எழுதியிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. அப்போது அது பத்திரிகையின் ஆசிரியரைத்தான் தாக்கும். ஆனால் எந்தவொரு அரசியல்வாதிகளும் இப்போதைய நிலையில் பத்திரிகைகளுக்கு நோட்டீஸ் கொடுத்து மறுப்பு அறிக்கை போடச் சொல்வதோடு விட்டு விடுவார்கள். ஆனால் நமக்கு என்ன பாதுகாப்பு..?

அதற்காக "அதையெல்லாம் ஏன் எழுதுற.. போய் நாலு சினிமா விமர்சனம் எழுதிட்டு போய்க்கிட்டே இரு"ன்னு சொல்லாதீங்க.. யோசித்துப் பாருங்கள்.. எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்றுதான் இதனை சொல்கிறேன். அதற்காக இதுவே முக்கியக் காரணமும் அல்ல.. முக்கியக் காரணங்கள் நான் மேலே சொன்னவைகள் மட்டுமே..

ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், மீன்பாடி ஓட்டுநர்கள் சங்கம், டிரைகிளீனர்ஸ் சங்கம் என்று அவர்கள்கூட ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு தங்களது தொழிலுக்கு எந்தவிதத்தில் யாரால் பங்கம் வந்தாலும் அதனை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்கள் அமைப்பின் சார்பில்.. யாரும் தனி நபராகக் குரல் கொடுப்பதில்லை. நமக்குத்தான் பிரச்சினையே இல்லையே.. நாமதான் ஜம்முன்னு மகாராஜா மாதிரி இருக்கோம்னு சொன்னால் எப்படி..?

கிட்டத்தட்ட 7 அல்லது 8 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வலைப்பதிவுகள் அறிமுகமாகி அதில் தலைநகரான சென்னையில் மட்டும் முகம் தெரிந்து வெறும் 60 பதிவர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்..? சென்னையில் இருக்கின்ற வார்டுகளின் எண்ணிக்கையே நூற்றுக்கும் மேல்..

பலரும் வாசிக்கிறார்கள்.. ஆனால் எழுதத் தயங்குகிறார்கள். அவர்களை நாம் எப்படி இழுப்பது..? இப்படி பொதுச் சேவை செய்வதற்கு யாருக்கு, எத்தனை பேருக்கு இங்கு இப்போது நேரம் இருக்கிறது..? நாம் மட்டுமே போதுமா..? நாம் இந்த இடத்தில் இருந்து விலகும்போது நமக்குப் பின்பாக ஒரு ஐயாயிரம் பேராவது சென்னையில் இருக்க வேண்டாமா..? நாம் நினைத்தால் முடியும்.. மனம் வைத்தால் முடியும்..

அமைப்பை உருவாக்குவோம்.. சந்தா உருவாக்குவோம்.. அவரவர் முடிந்த அளவுக்கு பணத்தைக் கொடுப்போம்.. நிதியினை மேம்படுத்துவோம்.. அதனை முறைப்படி பராமரிப்போம். பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்போம். வலைப்பதிவுகளை ஆரம்பிக்க நினைப்போர், எழுத நினைப்போர் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். அழையுங்கள் என்று நாம் அவர்களை அழைப்போம்.

அழைப்பு விடுத்தவர்களை சங்க அல்லது அமைப்பின் அலுவலகத்தில் ஒரு நாளில் பயிற்சி கொடுத்தனுப்புவோம்.. அவர்களது சந்தேகங்களை தீர்த்து வைப்போம்.. மாதத்தில் 15 நாட்களில் ஒரு நாளைக்கு ஒருவர் என்றால்கூட மாதம் 15 பேர், வருடத்திற்கு 180 பேரை நமது அலுவலகத்தின் வாயிலாகவே நாம் உருவாக்கலாமே..?

இதன் பின் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது தனியார் கல்லூரியில் அமைப்பின் சார்பில் பேசி பட்டறைகளை நடத்தினால் எத்தனை பேரை நாம் வலையுலகத்திற்குள் இழுக்க முடியும்..?

இதற்கு முதலில் என்ன தேவை..? ஒரு அலுவலகம்.. போதுமான கணினிகள்.. சொல்லித் தருவதற்கு ஒரு நபர்.. முதலில் அமைப்பில் இருப்பவர்கள் முறை வைத்து சொல்லித் தருவோம். பின்பு இதற்கென்றே தனியாக ஒருவரை சம்பளத்திற்கு நியமித்து செய்வோம்.. ஏன் முடியாது..?

எடுத்த எடுப்பிலேயே ஏன்.. எதுக்கு.. என்று கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்தால் அடுத்தக் கட்டத்திற்கு எப்படிச் செல்வது..?

இப்படியே மாதந்தோறும் நமக்கு நாமே ஒரு திரைப்படத்தைப் பார்த்து ஒப்பேத்திவிட்டு.. சென்னை வரும் பதிவர்களுக்கு வரவேற்பு கொடுத்து அவர்களை மனம் குளிரவைத்து அனுப்பிவிட்டு டாட்டா.. பை.. பை.. சொல்லிவிட்டுச் செல்வதில் யாருக்கு என்ன புண்ணியம்..?

ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப்களில் சமூக சேவைகளையும் செய்கிறார்கள். அதோடு தங்களுக்கிடையிலான குடும்ப உறுப்பினர்களையும் அறிமுகப்படுத்தி குடும்பமாக பழகுகிறார்கள். நாம் என்றைக்காவது இதனைச் செய்திருக்கோமா..?

இரண்டாண்டுகளுக்கு முன்பெல்லாம் எந்தவொரு பதிவர் சந்திப்பிலும் "எங்க வேலை பார்க்குறீங்க..?" அப்படீன்ற கேள்விக்கு மட்டும் சரியான பதில் கிடைக்கவே கிடைக்காது.. ஏதோ ஒரு கம்பெனின்னு மட்டும்தான் சொல்வாங்க.. "வீடு எங்க இருக்கு?"ன்னு கேட்டாலும் அதுக்கும் அதுதான் பதில் கிடைக்கும். அப்போதிருந்த சூழல் அப்படி.. ஆனால் இன்றைக்கு அப்படியல்ல..

இரண்டு மாதங்களுக்கொரு முறை அமைப்பின் சார்பில் எங்கேயாவது அனைத்துப் பதிவர்களும் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளலாம்.. பரஸ்பரம் குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ளலாம்.. தனி நபர்களாக இருந்து இதனை எப்படிச் செய்ய முடியும்..?

இது எதுவுமே வேணாம்.. ச்சும்மாவே இருப்போம் என்றால் என்ன மயித்துக்கு, என்ன எழவுக்கு.. என்ன வெங்காயத்துக்கு.. பின்னவீனத்துவத்தையும், இலக்கியத்தையும், அரசியலையும், சினிமாவையும் எழுதணும்.. அதையும் எழுதாம விட்டுட்டு அவங்கவங்க சோலியைப் பார்த்துட்டுப் போகலாமே..? எதுக்காக அங்க வாங்க. இங்க வாங்கன்னு சொல்லிக் கூப்பிட்டு பெட்ரோலையும் வேஸ்ட் பண்ணி.. நேரத்தையும் ஏன் நாம வீணாக்கணும்..? நாம செத்த பின்னாடி நூறு பேரு இரங்கல் தெரிவிச்சு பதிவு மட்டும் போட்டுட்டு அதை நம்ம பிள்ளைககிட்ட காட்டிட்டு அமைதியா இருக்கவா..?

மெஜாரிட்டியாக ஆரம்பிக்கலாம் என்பது தெரிந்த பின்பு "நான் அதனை எதிர்க்கவில்லை. ஏன் முன்பே பிளான் செய்தீர்கள் என்பறுதான் கேட்டேன்.." என்று இடக்கு மடக்காக கேள்வி கேட்டு மீண்டும் பிரச்சினையைத் திரித்ததும் 'மேதகு' பார்ட்டிதான்.. அந்தப் படபடப்பில், அனைவருமே நண்பர்களாக இருந்ததினாலும் யாரையும் கண்டித்துப் பழக்கமில்லாத காரணத்தினாலும் எனக்கும், கேபிளுக்கும் வேறு வழியே இல்லாமல் மீட்டிங்கை முடிக்க வேண்டியதாகிவிட்டது.

இத்தனையும் செய்துவிட்டு "இப்போது நீங்கள் அமைப்பை ஆரம்பித்தால் நிச்சயம் நான் சேருவேன்" என்று சொல்கின்றவரை என்னவென்று சொல்வது..? பின்பு எதற்காக இவ்வளவு பெரிய வெட்டி ஆர்ப்பாட்டம்..? இந்த அறிவுஜீவித்தனமான பேச்சுக்களுக்கெல்லாம் இந்த அர்த்தராத்திரியில் கண் முழித்து பதில் சொல்லித் தொலைய வேண்டியிருக்கிறது..

இதிலும் சினிமா பி.ஆர்.ஓ.க்கள் மாதிரி கதை ஒன்றையும் சொல்கிறார் மேதகு சிவராமன்.. அவர் கீழே இறங்கி வந்தபோது தண்டோராவும், கேபிளும் அங்கே இல்லவே இல்லையாம்.. எப்படி இருப்பார்கள்..? யாருக்காவது பேசுவதற்கு மனசு வருமா..?

பந்தல் கட்டி, தோரணம் அமைத்து தாலி கட்டுற நேரத்துல பொண்ணை இழுத்துக்கிட்டு ஓடுறவன், சொல்லிட்டுப் போறதுக்கு மாப்பிள்ளை சொந்தங்களையே காணோம்னு புலம்பினானாம்.. இப்படித்தான் இருக்கு இது..

எனக்கும் அங்கே இருப்பதற்கு மனசில்லைதான். ஆனால் டிவிஆர் ஸார், "கண்டிப்பா டீ வாங்கிக் கொடுத்தே ஆகணும்.." என்று வற்புறுத்தியதால் கடைக்கு வந்து நிற்க வேண்டியதாகிவிட்டது.

கேபிள் மற்றும் தண்டோரா, சூர்யா, அகநாழிகை வாசுதேவன், பலாபட்டறை இவர்களுடன் நானும் இரவு பத்தே கால் மணிவரையில் அந்தப் பகுதியில்தான் இருந்தோம்.

ஏதோ எழுதுவதற்கு ஒன்றுமே இல்லை என்று பக்கத்தை நிரப்பும் பத்திரிகை பாணியில் மேதகு சிவராமன் எழுதியிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை படித்துப் பார்த்தபோது ழான்சத்தார் ஏன் முன்பே செத்துப் போனார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது..

இதில் இன்னுமொரு காமெடி அருமைத் தம்பி அதிஷா. ஆதரித்துப் பேசிய அனைவரையும் குறுக்குக் கேள்வி கேட்டு அமைப்பை உருவாக்க எதிர்ப்புக் குரல் கொடுத்துக் கொண்டேயிருந்தவர், கடைசியில் வீட்டிற்குப் போகும்போது கேபிளிடம் "நானும் சேர்கிறேன்" என்றாராம்.

நான் கடையருகே பார்த்தபோது அதிஷாவிடம் பேசினேன். "நீ பத்திரிகையாளர் சங்கத்தில் சேர்ந்துவிட்டாயா..?" என்றேன். "ஆமாண்ணே.. சேரப் போறேன்.." என்றார். "அங்க ஏன் சேரப் போற..?" என்றேன். "முதல்வர் வீடு கொடுக்கப் போறாரு.. எனக்கு வீடு வேணும்.. அதுக்காக சேரப் போறேன்.." என்றார். "சந்தோஷம்.. அதே மாதிரி நாம ஒரு அமைப்பா சேர்ந்து நாலு பேருக்கு உதவி செய்யலாமே.. இதை ஏன் எதிர்க்குற..?" என்று கேட்டேன்.. "ஏன் இப்படியே செய்யலாமே..?" என்று திருப்பிப் பதில் சொன்னார். "அப்ப உனக்கு ஒரு நியாயம்.. எனக்கு ஒரு நியாயமா..?" என்று என் தொண்டைவரையில் கேள்வி எழுந்தது.. ஆனாலும் அப்போதைய நாகரிகம் காரணமாக அடக்கிக் கொண்டேன். இப்போது இங்கே எழுதிவிடத் தோன்றுகிறது. எழுதிவிட்டேன்.

இவருக்கு வீடு கிடைக்கிறது என்பதற்காக இவர் ஒரு அமைப்பில் உறுப்பினராகச் சேரலாமாம். ஆனால் நாம் யாராவது ஒருத்தருக்கு ஒரு நூறு ரூபாய் உதவி செய்வதற்குக்கூட அமைப்பை உருவாக்கக் கூடாதாம்.. ம்ஹும்.. தாங்க முடியவில்லை..

எப்படியிருப்பினும் அமைப்போ, அல்லது சங்கமோ, அல்லது அஸோஸியேஷனோ எதுவோ ஒன்று அரசு அங்கீகாரத்துடன் அமைப்பதாக முடிவாகிவிட்டது. இந்த அளவுக்கு பதிவர்கள் கொடுத்த ஒத்துழைப்புக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றிகள்..

மீண்டும் சந்திப்போம்..

இந்தக் கடன்களை யார் அடைப்பது..? நமது வாரிசுகளா..? ஆட்சியாளர்களின் வாரிசுகளா..?

26-03-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தினம்தோறும் செய்தித்தாள்களைத் திறந்தால் மக்களுக்கு வழங்கியிருக்கும் திட்டங்களினால் மக்கள் மகிழ்வோடு இருக்கிறார்கள்.. நிறைவாக இருக்கிறார்கள். மகிழ்ச்சியோடு காணப்படுகிறார்கள். என்றென்றைக்கும் நாங்கள்தான் முதல்வர்கள் என்கிற ரீதியில் ஆளும் கட்சியின் அடிப்பொடிகள் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளோ எதை வைத்து ஆளும்கட்சியை எதிர்ப்பது என்பது தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றன. பொதுவில் வைத்துதான் கொள்ளையடித்துப் பழக்கமான ஜெயலலிதாவுக்கு பிடிபடாமலேயே கொள்ளையடிக்கும் திறன் கொண்ட கலைஞர் கூட்டணியின் சாமர்த்தியம் போதவில்லை.

என்ன செய்தால் இந்த ஆட்சி ஒழியும் என்று ஜெயலலிதாவும், இன்னும் என்னென்னவற்றை வாரி வழங்கினால் நமது அடுத்த மூன்றாவது தலைமுறை வரையிலும் நான் ஆட்சிக் கட்டிலில் இருக்கலாம் என்று ஆளும் கட்சியும் மாறி மாறி செய்து வரும் திட்டத்தில் தங்கள் தலையில் துண்டு விழுந்திருப்பதை உணராமலேயே.. தாங்கள் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெரியாமலேயே மக்கள் சந்தோஷமாக இலவச டிவியில் படம் பார்த்துக் கொண்டு இலவச கேஸ் ஸ்டவ்வில் இலவச அரிசியையும், சமையல் பொருட்களை வைத்து பொங்கி, ஆக்கி தின்று தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி இலவசங்களை வாரி வழங்குகின்ற அரசர் தனது குடும்பத்தினர் இதுவரையில் நம்மிடமிருந்து சம்பாதித்த சொத்துக்களில் இருந்து கொடுத்திருக்கிறாரா என்றால் அதுதான் இல்லை.. அனைத்துமே நம்மிடம் இருந்தே.. நம் பெயரில் வெளி ஆளிடம் கடனாகப் பெற்று.. நமக்காக வாங்கியதாகச் சொல்லி பாதியை நம்மிடமும், மீதியை அவரிடமும் தள்ளிவிட்டு போய்க் கொண்டேயிருக்கிறார்.

எப்படியும் நமது கழுத்துக்கு ஒரு நாள் கத்தி வரும்போதுதான் இந்த உண்மை நமக்குத் தெரியும்.. புரியும். அதனால் என்ன..? அப்போது அவர்கள் இருந்தால்தானே.. இருக்கின்றவரையில் அரசராக இருந்துவிட்டு போன பின்பு எதுவாக இருந்தால் அவர்களுக்கென்ன..? மாட்டப் போவது நாம்தானே.. நம் வாரிசுகள்தானே.. அவர்களது வாரிசுகள் இல்லையே..? அவர்கள்தான் இப்போது தமிழகத்திலேயே முதன்மையான பணக்காரர்களாகிவிட்டார்களே..!

இதுவரையில் ஆண்ட தமிழக அரசுகள் வாங்கிக் குவித்திருக்கும் கடன் தொகையை இங்கே பட்டியலிட்டிருக்கிறது ஒரு பத்திரிகையின் கட்டுரை. (தினமலர் என்று நினைக்கிறேன்) படித்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும்..

நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழக அரசு ஆண்டுதோறும் வாங்கும் கடன் அளவு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், திருப்பிச் செலுத்தும் அளவு குறைவாகவே உள்ளது. இதனால், தற்போது தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனின் தலையிலும், 10 ஆயிரம் ரூபாய் கடன் சுமத்தப்பட்டுள்ளது.

மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசலில் ஒவ்வொரு லிட்டருக்கும் வசூலிக்கப்படும் கட்டணத்தில் பாதியளவு மாநில, மத்திய அரசுகளுக்கு வரியாகப் போகிறது. சாலை வரி, கல்வி வரி போன்ற சேவை வரிகள், சம்பளம் வாங்குவோரிடம் மாநகராட்சிகள் வசூலிக்கும் தொழில் வரி, இது தவிர ஆண்டுதோறும் வருமான வரி என, அனைத்து விதத்திலும் வரிகளைச் செலுத்தி, நடுத்தர வர்க்கத்தினர் தடுமாறிக் கொண்டுள்ளனர்.

மக்களின் இந்தச் சுமையை குறைக்க வேண்டிய அரசு, மேலும் மேலும் கடனை வாங்கி, அதைச் சரிகட்ட, இது போன்று புதுப்புது வழிகளில் வருவாய் தேடி வருகிறது.

கடந்த நான்காண்டு காலத்தில், தமிழக அரசு எந்த பொருளுக்கும் வரியை உயர்த்தாவிட்டாலும், "டாஸ்மாக்' வருமானம் மற்றும் உள்ளாட்சிகள் மூலம் வருவாய் உயர்வு போன்றவற்றால் சமாளித்து வருகிறது.

அதே சமயம், கடன் வாங்கும் அளவும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டுள்ளது. தற்போதைய நிலையில், தமிழக அரசுக்கு 73 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது.

கடந்த 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, முந்தைய அரசு 28 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறி, புதிய வரிகளை விதித்தார். இதனால், மக்கள் மீதான சுமை அதிகரித்தது. ஆனால், அ.தி.மு.க., ஆட்சி முடியும் நிலையில், தமிழக அரசின் கடன் 53 ஆயிரம் கோடியாக உயர்ந்து இருந்தது.

இப்படி மாறி மாறி கடனை வாங்கினாலும், அதை நியாயப்படுத்தவும் ஆளுங்கட்சிகள் தவறவில்லை. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள கடன் வாங்குவது அவசியம் என்றும், கடன் வாங்காமல் எந்த அரசும் செயல்பட முடியாது என்றும் நியாயப்படுத்துகின்றனர்.

கடந்த 1988-89 வரை, கடன்கள் ஆண்டுக்கு 1,027 கோடி, 1,554 கோடி ரூபாய் என்ற அளவில்தான் வாங்கப்பட்டது. திருப்பிச் செலுத்தியது போக, மீத கடன் சுமை, ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் அளவில் இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த கடன் சுமைதான், மொத்தமாக இன்றைக்கு 73 ஆயிரம் கோடி ரூபாயாக தமிழகத்தின் மீது உள்ளது. ஏறத்தாழ, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகன் பெயரிலும் 10 ஆயிரம் ரூபாய் கடன் சுமை உள்ளது.

ஏற்கனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிதி பொறுப்புடைமைச் சட்டப்படி, மாநில அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்துக்கு மேல் கடன் பெறக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேல் கடன் வாங்கினால், மாநிலத்தின் நிதி நிலைமை பாதுகாப்பாக இல்லை என்று அர்த்தம். காரணம், அதற்கு மேல் கடன் வாங்கினால், வட்டியை மட்டுமே கட்ட முடியும்; அசலை திருப்பிச் செலுத்த முடியாது.

தமிழகத்தை பொறுத்தவரை, 10 சதவீதத்துக்கு உள்ளாகவே கடன் வாங்குகிறோம் என்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு குறைவாகவே, பட்ஜெட் நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

பொதுக் கணக்கை மட்டும் பார்க்காமல் மற்றவற்றையும் சேர்த்தால், 3 சதவீதத்துக்கு அதிகமாகவே இருக்கும் என்பதுதான் உண்மை. முந்தைய ஆட்சிகளில் கடனை திருப்பிச் செலுத்தும் அளவு கூடுதலாக இருந்தது.

1999ல் 8,545.81 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்ட போதிலும், 5,438.15 கோடி திருப்பிச் செலுத்தப்பட்டது.

கடந்த 2000ம் ஆண்டில், 11 ஆயிரத்து 596 கோடியே 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கப்பட்டு, 7,719 கோடியே 99 லட்சம் ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட்டது.

2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில், 65 ஆயிரத்து 627.63 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டு, 34 ஆயிரத்து 844.71 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கடன் வாங்குவது குறைந்தும், திருப்பிச் செலுத்துவது அதிகரித்தும் வந்ததைக் காண முடிகிறது.

கடந்த 2006-ல் தி.மு.க., அரசு அமைந்த பின், 53,526.63 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு, இதுவரை 19,155.84 கோடி ரூபாய்தான் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியைவிட தி.மு.க. ஆட்சியில் குறைவான அளவே கடன் வாங்கப்பட்டிருந்தாலும், திருப்பிச் செலுத்தும் தொகை மிகக் குறைவாக இருந்ததால், கடன் சுமை அதிகரித்துள்ளது.

பொதுக் கடனை பொறுத்தவரை, முந்தைய ஆண்டுகளில் பெற்ற கடனுக்கான அசல் மற்றும் வட்டி அடுத்தடுத்த ஆண்டுகளில்தான், திருப்பிச் செலுத்தப்படுகிறது. இருந்தாலும், கடன் சுமையைக் குறைக்க, திருப்பிச் செலுத்தும் தொகையை அதிகரித்து இருக்கலாம்.

ஆண்டுதோறும் பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க, கூடுதலாக கடன் வாங்கி ஈடுகட்டுவது வழக்கமாகி விட்டது. இவ்வாறு ஈடுகட்டப்பட்டு, அதிகரித்துள்ள கடன் சுமை ஒவ்வொன்றும் மக்கள் தலையில்தான் விழுந்துள்ளது.

கடன் தொகை அதிகமானது எப்படி?

1989-ம் ஆண்டில் கடன் 602.31 கோடி

1990-ல் 755.60 கோடி

1991-ல் 874.36 கோடி

1992-ல் 943.78 கோடி

1993-ல் 1,044.68 கோடி

1994-ல் 1,625.71 கோடி

1995-ல் 1,192.57 கோடி

என்று திருப்பி செலுத்திய பின், ஆண்டுதோறும் கடன் சுமை இருந்து வந்தது.

பின்னர் அமைந்த தி.மு.க., ஆட்சியில்,

1996-ல் 1,442.26 கோடி

1997-ல் 1,724.92 கோடி

1998-ல் 2,159.64 கோடி

1999-ல் 3,107.66 கோடி

2000-ம் ஆண்டில் 3,876.04 கோடி

என்று கடன் சுமை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது.

அதன் பின் வந்த அ.தி.மு.க., ஆட்சியில்

2001-ம் ஆண்டு 3,445.20 கோடி

2002-ல் 7,251.91 கோடி

2003-ல் 5,195.36 கோடி

2004-ல் 4,948.32 கோடி

2005-ல் 5,644.53 கோடி

என்று அதிகரித்தது.

தற்போதைய அரசு அமைந்த பின்

2006-ல் 2,456.91 கோடி

2007-ல் 4,643.03 கோடி

2008-ல் 9,482.21 கோடி

2009-ல் 9,928.71 கோடி

என்று திருப்பித் தராத கடன் சுமை அதிகரித்துள்ளது.

இது பற்றி தமிழகத்தின் நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் சமீபத்தில் சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியபோது தெரிவித்த கருத்து முத்துக்கள் இவை..

"மாநிலத்தின் சமூக நலத் திட்டங்களால் ஒருபக்கம் செலவு அதிகரிக்கிறது. ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதால், அரசு ஊழியர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை ரூ. 11,093 கோடி வழங்க வேண்டியுள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 5,156 கோடி தொடர் செலவு ஏற்படும்.

இந்த ஆண்டுக்கு மட்டும் ஊதிய உயர்வு காரணமாக, சுமார் ரூ. 7,500 கோடி கூடுதல் செலவும், சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான ஒட்டுமொத்த செலவு ரூ. 30,647 கோடியாகவும் இருக்கும். இது மாநிலத்தின் மொத்த வருவாய் செலவில் 52 சதவீதம் ஆகும்.

2008-2009ம் ஆண்டில் உணவு மானியம் ரூ. 1,950 கோடியாக இருந்தது. இப்போது, இது ரூ. 2,800 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி ஏழைக் குடும்பங்களுக்கான மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட காப்பீட்டுத் திட்டங்களுக்காக அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ. 2,080 கோடி செலவு ஏற்படும்.

கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிந்த நிதியாண்டில் மாநில அரசின் கடன் ரூ. 74,456 கோடி. இது 2000-2001ம் நிதியாண்டில் ஆட்சியிலிருந்து திமுக விலகியபோது, ரூ. 28,685 கோடியாக இருந்தது.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, அதிமுக ஆட்சியில் இருந்து விலகியபோது, அவர்கள் வைத்துச் சென்ற கடன் தொகை ரூ. 57,457 கோடி. அதற்கு அடுத்த ஆண்டு ரூ. 60,170 கோடி என கடன் தொகை உயர்ந்து கொண்டே வருகிறது. நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும்.

தமிழகத்தில் கடந்த மூன்றாண்டு காலத்தில் நிதித் துறை செம்மையாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மொத்த வருமானத்தில், 3 சதவீதம் அளவுக்கு நிதி பற்றாக்குறை பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வரையிலும் மூன்று சதவீதம் அளவிலேதான் தமிழகத்தின் நிதி பற்றாக்குறை இருக்கிறது. ஆனால், வருங்காலத்தில் சற்று அதிகமாகலாம்.

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் நிதி நிலைமை சற்று கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபுறம் வருவாய் வளர்ச்சி சரிந்து வருகிறது. மறுபக்கத்தில் செலவினங்கள் அதிகரித்து வருகின்றன. மாநிலத்தின் சொந்த வரி வருவாயில், குறிப்பாக வணிக வரிகள் மற்றும் முத்திரைத்தாள் தீர்வைகளின் வளர்ச்சி விகிதம் பெரும் சரிவை சந்தித்துள்ளது.

மத்திய வரியில் இருந்து பெறப்பட்ட மாநில அரசின் பங்கு முதலில் எதிர்பார்க்கப்பட்ட தொகையைவிட ரூ. 986 கோடி குறைந்துள்ளது. மத்திய அரசில் இருந்து மாநில அரசுக்கு வழங்குகிற நிதிப் பகிர்வு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வந்திருக்கிறது. மூன்றாவது திட்டக் குழு காலத்தில் அது 7.48 சதவீதமாக இருந்தது. 12வது திட்ட காலத்தில் அது 5.31 சதவீதமாக குறைந்துவிட்டது"

என்றார் பேராசிரியர் அன்பழகன்.

போதுமா...?

ஒரு பக்கம் நிதியுதவிகளாலும், இலவசத் திட்டங்களினாலும் மாநில அரசின் பட்ஜெட்டில் ஒட்டை விழுந்திருப்பதை நிதியமைச்சரே வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்கிறார். ஆனால் இதை நிவர்த்தி செய்வது முடியாது என்பதையும் மறைமுகமாக ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஆட்சிப் பொறுப்பிற்கு மறுபடியும் வரத் துடிப்பதால் இப்படியெல்லாம் இலவசங்களை வாரி வழங்கினால்தான் மக்கள் ஓட்டளிப்பார்கள் என்பதால் இதிலிருந்து இவர்களால் தப்பிக்க முடியவில்லை.

ஆக.. இவர்கள் ஆட்சிக்கு வந்து மீண்டும் கொள்ளையடிக்கத் துடிப்பதால்தான் இலவசத் திட்டங்கள் தொடர்கின்றன என்பதுதான் உண்மையே தவிர.. ஏதோ நிஜமாகவே ஒரு சிறந்த ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அல்ல..

ஒரு கதை சொல்கிறேன்.. உங்களுடைய வீடாகவே இருக்கட்டும். வீடோ குடிசை வீடு என்று வைத்துக் கொள்ளுங்கள். சம்பளமோ மாதம் ஐந்தாயிரம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்தச் சம்பளத்திலேயே எல்.சி..டி. டிவி, பிரிட்ஜ், கட்டில், மெத்தை, என்று பலதரப்பட்ட பொருட்களையும் யாரிடமாவது கடன் பெற்றாவது வாங்குவீர்களா..?

இதுவெல்லாம் இருந்தால் மனம் சந்தோஷமாகத்தான் இருக்கும். ஆனால் திருப்பிக் கட்ட வேண்டுமே என்று யோசிக்க மாட்டீர்களா..? கடன் வாங்காமல் குடும்பம் நடத்த முடியாது எனில், இதுவரையில் குடும்பம் நடத்தியவர்களையெல்லாம் என்னவென்று சொல்வது..?

காலம் மாறுகின்றபோது தேவைகளும் மாறுகிறதே என்று நீங்கள் சொன்னாலும் தேவைகளை நினைத்துப் பார்க்க வைக்கும் ஆசைகளைத் தூண்டிவிட்டது உங்களுடைய திறந்துவிடப்பட்ட பொருளாதாரம்தான் என்பதும், அந்த நிறுவப்பட்ட திட்டமிடப்பட்ட பொருளாதார வளர்ச்சியால் அதிகம் வளர்ந்தது ஆதிக்கத்தில் இருந்தவர்கள் என்பதும்தான் உண்மை.

ஸோ.. இப்படியே போனால் நிலைமை என்ன..? எப்போது இந்தக் கடன்கள் தீரும்..? கடனை அடைக்க முடியாமல் போனால்.. போகாது.. மத்திய அரசு இருக்கிறது. அது கடனை அடைத்துவிடும். அந்த லூஸுகளுக்கும் இதே போல பல மடங்கு கடன் இருக்கிறதே.. அவர்கள் எப்படி அடைப்பார்கள்..? இல்லை.. இல்லை.. எப்பாடுபட்டாவது கூடுதலாக கரன்ஸி நோட்டுக்களை அடித்து வெளியி்ட்டு இதன் மூலமாவது கடனை அடைத்துவிடுவார்கள்..

கரன்ஸிகளை அதிகம் வெளியிட்டு கடனை அடைத்துவிடலாம் என்கிற அபார யோசனை அரசுகளுக்குத் தெரிந்திருந்தால் இவர்கள் ஏன் கடன் வாங்குகிறார்கள். வெறும் கரன்ஸி நோட்டுக்களை அச்சடித்து அதையே பயன்படுத்தியிருக்கலாமே.. எதற்காக கேவலமாக இன்னொருவரிடம் போய் கையேந்த வேண்டும்..?

அட போப்பா.. என்னவோ.. எவன் கடன் வாங்கினா என்ன..? எனக்கு டிவி வந்திருச்சு.. ஓசில கேஸ் வந்துச்சு.. ஓசில அரிசி, பருப்பெல்லாம் கிடைச்சுச்சு. நான் சாகுறப்பகூட ஓசில உதவித் தொகை என் குடும்பத்துக்கு கிடைச்சிரும்.. அப்புறம் நான் எதுக்கு இதைப் பத்தி யோசிக்கணும்.. அதான் நான் மண்ணோட மண்ணா ஆகியிருவனே..

இதைப் பத்தி யோசிக்க வேண்டியவன் நானில்லை.. எனக்கப்புறம் இங்க குடியிருக்கப் போறானுக பாரு.. நம்ம வாரிசுக அவங்க பாடு.. ஆட்சியாளர்கள் பாடு..! நான் இருக்கிறவரைக்கும் ஜாலியா, சந்தோஷமா, நிம்மதியா இருந்திருவேன்..!

என்ன ஒரு சுயநலம் நம் அனைவருக்குள்ளும்..!?????

 தொடர்புடைய பதிவு : ஊழலை தொடர்ந்து, வாங்கிய கடனும் லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது..!



வலைப்பதிவர்கள் கலந்துரையாடல் கூட்டம் - மறக்காம வந்திருங்க..!

25-03-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!!!

சனிக்கிழமை. கிரகந்தான்.. ஆனா அதைவிட பெரிய கெரகம் நாமதான். நமக்கே தெரியும்.. 'சனி போனால் திரும்பி வராது'ம்பாங்க.. அதுனால நாம விடக்கூடாது.. அன்னிக்கே நாம நம்மளோட சதி வேலையை, ஸாரி!! 'சனி' வேலையை ஆரம்பிச்சாகணும்..

ச்சும்மா எத்தனை நாளைக்குத்தான் 'அவர் ஏற்பாடு'.. 'இவர் ஏற்பாடு'ன்னு பெயரைச் சொல்லிக்கிட்டே இருக்குறது.. 'நம்ம சங்க ஏற்பாடு'. 'நம்ம அமைப்போட ஏற்பாடு'.. 'நம்ம பேமிலி செட்டப்பு' அப்படீன்னு சொல்றதுக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு..

அதுக்குத்தான் வசதியா வர்ற சனிக்கிழமை (27-03-2010) வலைப்பதிவர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் கே.கே.நகரில் முனுசாமி சாலையில் உள்ள டிஸ்கவரி புக் ஸ்டால்ல நடக்கப் போகுது..

உண்மையாக இனிமேல் வலைப்பதிவர்கள் சமூகம் என்ன செய்ய வேண்டும்..?

எப்படிச் செயல்பட வேண்டும்..?

குழுமமாகவா..? அல்லது ஒரு தொழிலாளர் சங்கத்தைப் போன்றா..? அல்லது ஒரு கட்சியைப் போன்றா..?

குழுமம் என்றால் அதன் நடைமுறைகள் என்னென்ன..? யார், யார் அதில் பொறுப்பேற்பது..? என்னென்ன பொறுப்புக்களை அமைப்பது..? எப்படி அதன் செயல்பாடுகளை வடிவமைப்பது..?

அந்தக் குழுமத்தின் நோக்கம் என்ன..? அதன் செயல்பாடுகள் என்ன..? எப்படியெல்லாம் செயல்பட வைக்க வேண்டும்..? அதன் நடைமுறைகளை அமல்படுத்துவது எப்படி..?

குழுமத்தை நேரடியாக நிர்வகிப்பது எப்படி.? யார் கவனித்துக் கொள்வது.? நிர்வாகச் செலவுகளை யார் ஏற்பது..? குழுமத்தின் செலவுகளுக்காக பணம் வசூலிப்பது எப்படி..? அதனை பொறுப்பாகக் கவனித்துக் கொள்வது யார்..?

இப்படி நமக்குள் ஒளித்து வைத்திருக்கும் அல்லது எழுந்திருக்கும் பலதரப்பட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில்கள் உடனுக்குடன் அனைவராலும் வெளிப்படையாக வைக்கப்பட வேண்டும்.

இங்கே யாரும் இப்போது வெட்டி ஆபீஸராக இல்லை என்பது நமக்கே நன்கு தெரியும்.. ஒரு முறை கூடி பேசுகின்றபோதே ஏதாவது ஒரு முடிவை நாம் எடுத்தாக வேண்டும். கட்சிக் கூட்டம் போல அடுத்தக் கூட்டத்தில் பேசித் தீர்ப்போம் என்று காலத்தைக் கடத்துவதில் அர்த்தம் இல்லை.

பதிவர்கள் வருகின்றபோதே மேலே சொன்னதுபோலோ அல்லது மேலே சொன்னதில் இல்லாமல் உங்களுக்குத் தோன்றியவற்றிற்கும் தயாரான பதில்களையோ அல்லது இது பற்றிய உங்களது மேலான கருத்துக்களையோ தயார் செய்து கொண்டு வந்துவிட்டால் நமது வேலை சுலபமாகிவிடும்.

இந்தக் கூட்டம் "கலந்துரையாடல் மட்டுமே" என்று தெரிவிக்கப்பட்டிருப்பதால் அனைத்துப் பதிவர்களும் தங்களது கருத்துக்களை முன் வைத்து அந்தக் கருத்துக்கள் பெருவாரியான பதிவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அது அங்கேயே ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில் கூட்டம் நிறைவு பெற வேண்டும்.

இது எனது அவா..!

மற்றபடி தோழர் லக்கி தனது பதிவில் எழுதியிருப்பதைப் போல் 'எழுத்தாளர்' என்கிற வார்த்தை நமக்குத் தேவையில்லை என்றே நானும் நினைக்கிறேன்.

அதேபோல் வெறுமனே 'தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்' என்று வைப்பதற்குப் பதிலாக 'சென்னை தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்' என்று ஆரம்பிக்கலாம்.

ஏனெனில் இதேபோல் பல்வேறு ஊர்களில் இருக்கின்ற வலைப்பதிவர்களும் ஊர்ப் பெயரில்லாமல் 'தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்' என்று வைத்தால் குழப்பம் வருமே..?

இதற்கு மாறாக அவரவர் ஊர்களின் பெயர்களில் வலைப்பதிவர் குழுமங்களை ஆரம்பித்தால் அழைப்பதற்கும், குழப்பங்கள் வராமல் இருப்பதற்கும் ஏதுவாக இருக்கும்.

'தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்' என்று சங்கங்களின் சட்டத்தின் அடிப்படையில் ஒரு இடத்தில்தான் பதிவு செய்ய முடியும் என்பதையும் நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும்.

ஆகவே 'சென்னை தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்' அல்லது 'சங்கம்' என்று ஆரம்பிப்பது சாலச் சிறந்தது என்கிறேன்.

மேற்கொண்டு ஒரு விஷயம் சொல்ல வேண்டுமெனில் கூட்ட அரங்கம் சிறியது என்பதால் அங்கே மெட்டல் டிடெக்டர் கருவியெல்லாம் வைத்து பதிவர்களுக்கு பாதுகாப்பு வழங்க இயலாது.

ஆகவே வீசுவதற்கேற்ற முட்டைகள், அரிவாள், கத்திகள், சுத்தியல்கள், கம்புகள் மற்ற இத்யாதி.. இத்யாதிகள்.. அரங்கத்தின் உள்ளே பாதுகாப்பு கருதி அனுமதிக்கப்படாது.

ஆனால் பதிவர்கள் அவரவர் வாகனங்களில் கொண்டு வந்து வாகனத்திலேயே வைத்திருக்கலாம்.. அது பற்றி நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை.

எப்படியும் நிகழ்ச்சி முடிந்தவுடன் தாகசாந்திக்காக எந்தப் பக்கம் செல்வது என்கிற சர்ச்சையில் சிலர் இறங்கக்கூடும். அதை சாக்காக வைத்து ஆசையோடு காத்திருக்கும் நண்பர்கள் தாங்கள் கொண்டு வரும் 'பூஜை பொருட்களை' முடிந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக வருகின்ற பதிவர்களுக்கு கொடுக்கப்படவிருக்கும் டீ, பிஸ்கட் செலவுக்கான தொகையை மட்டும்(பீடி, சிகரெட், கஞ்சா, பிரவுன்சுகர், தாகசாந்தி அயிட்டங்களுக்கு அல்ல) நான் ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்பதை எனது அண்ணாச்சிகளுக்கு தெரிவித்துவிட்டு தற்காலிகமாக உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்..

நன்றி

வணக்கம்.


நிகழ்ச்சி நிரல்

தேதி : 27.03.10/சனிக்கிழமை
நேரம் : மாலை 5.30
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6.முனுசாமி சாலை முதல் மாடி,
மஹாவீர் காம்ப்ளெக்ஸ்
பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்,
மேற்கு கே.கே.நகர்,
சென்னை –78

மக்கள் நித்தியானந்தன்களைத் தேடி ஏன் ஓட வேண்டும்..?

24-03-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த மூன்று வாரங்களாக கோடி ரூபாய்கள் செலவிட்டிருந்தால்கூட நித்தியானந்தத்திற்கு இவ்வளவு விளம்பரம் கிடைத்திருக்காது.. அவ்வளவை அள்ளியிருக்கிறார் நித்தி. சில பரபரப்பு ஊடகங்கள் தங்களது தார்மீகத்தை துறந்து சிற்றின்பத்தைத் தூண்டிவிடும் விளையாட்டை பொதுமக்கள் மத்தியில் விளையாடி அதற்கும் ஒரு கட்டணத்தை சுளையாக சம்பாதித்துக் கொண்டு தங்களுக்கும் நித்தியானந்தத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை பறைசாற்றிவிட்டார்கள்.

நித்தியானந்தம் தினம்தோறும் ஒரு அறிக்கையையும், வீடியோவில் தோன்றி தான் இன்னமும் இளமைப் பொலிவுடன்தான் இருக்கிறேன் என்பதையும் காட்டிக் கொண்டார்.. ரஞ்சிதா போன இடமும், மறைவில் இருக்கும் இடமும் தெரியவில்லை. அவருடைய சீடர்கள் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகி தலைமறைவாகிவிட்டார்கள். நித்தம், நித்தம் நித்தி புராணங்களை பாடிய, ஓதியவர்களெல்லாம் இன்றைக்கு அதே வாயால் அவரை வைந்து.. கூடவே நித்தியிடம்விட்ட காசை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நித்தி இன்னமும் இறைவன்தான் என்று நம்புகிறவர்களில் சிலர் மட்டுமே அவரது ஆசிரமத்தில் குப்பை கொட்டிக் கொண்டிருப்பதாகத் தகவல்.

இந்தக் களேபரத்தில் மத்திய அரசு கொண்டு வந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு தமிழக மக்களை மறக்கடிக்க செய்துவிட்டது.. வழக்கம்போல எருமை மாட்டின் மீது மழை விழுந்த கதையாக இதையும் ஜீரணித்துவிட்டு அடுத்த சாமியாரின் வீடியோவுக்காக காத்திருக்கிறது தமிழகம்.

அன்றைய இரவு எட்டு மணிக்கு முன்புவரையில் மகானாக கருதப்பட்ட நித்தி அடுத்த நொடியில் இருந்து கிரிமினலாக உருவகப்படுத்தப்பட்டார். அவரை தெய்வமாக கருதியவர்கள்தான் இன்றைக்கு துப்புகிறவர்கள் வரிசையில் முதலில் இருக்கிறார்கள். ஏன் இவர்களுக்கு இது முன்பே தெரியவில்லை.. நித்தியும் ஒரு சக மனிதர்தான் என்று..

நித்தியானந்தத்தின் வயது 32. இந்த வயதிற்குள் உலகம் முழுவதும் ஆசிரமங்களை அமைத்தாகிவிட்டது. நான்காயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு இருக்காது என்றாலும் நிச்சயம் கோடிகளில்தான் சொத்துக்கள் இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

எப்படி சேர்ந்தது இது..? யார் கொடுத்தது இது..?

தெருவோர காளியாத்தா, மாரியாத்தா கோவில்களின் உண்டியல்களில் போடப்படும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய்களா அங்கே கோடிகளாக உருவெடுத்தன.. இல்லையே..?

பல ஆயிரங்கள்.. பல லட்சங்கள்.. சில கோடிகள் என்று ஒரே செக்கில் கொண்டு வந்து கொட்டியிருக்கிறார்களே பணக்கார பெருமக்கள்.. அவர்களெல்லாம் யார்..? அவர்களுக்கெல்லாம் கல்வியறிவு இல்லையா..? மனிதனுக்கும், கடவுளுக்கும் பாகுபாடு பார்க்கத் தெரியாத முட்டாள்களா அவர்கள்..? அப்படியெனில் இவ்வளவு பணம் அவர்களிடம் எப்படி சேர்ந்தது..? சொல்ல முடியுமா..?

இந்த கோடீஸ்வரர்கள் எதற்கு நித்தியைத் தேடி ஓடினார்கள்.. நிம்மதி வேண்டி.. எதற்கு நிம்மதி வேண்டி இவரிடம் ஓட வேண்டும்..? அதுதான் போதுமென்கிற அளவுக்கு பணம் இருக்கிறதே.. அதனை வைத்து அந்த நிம்மதியைத் தேடிக் கொள்ளலாமே.. ஏன் இவர்கள் செய்யவில்லை.. பணம்தான் அளவற்று இருக்கிறதே.. அது இருந்தால் எதையும் செய்யலாமே..?

தீராத நோய் என்கிறார்கள். பணம் இருந்தால் சுவிட்சர்லாந்துவரையிலும் சென்று வைத்தியம் பார்க்கலாமே..? எதற்காக காவி உடையிடம் வந்து மருத்துவம் பார்க்கச் சொல்கிறீர்கள்..?

குடும்பத்தில் குழப்பம் என்கிறார்கள். பணத்தை விட்டொழித்துவிட்டு குழப்பத்தை நீக்கிவிட்டு சந்தோஷத்தைக் கொண்டாடலாமே.. ஏன் செய்யவில்லை..?

இந்தப் பணக்காரர்களுக்கு அப்படி என்னதான் கவலை..? பணம்.. பணம்.. பணம்.. வேறொன்றுமில்லை..

பணத்தை பத்திரப்படுத்த நினைக்கிறார்கள். இன்னமும் பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள்.. தங்களது உடல் நலனில் தனி கவனம் செலுத்துகிறார்கள்.. தாங்கள் எப்படியும் நூறு வருடங்களைத் தாண்டி வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏனெனில் இவர்கள் பணக்காரர்கள்.. கோடீஸ்வரர்கள்.. அவர்கள் இப்போது அனுபவிக்கும் இன்பமயமான வாழ்க்கையை இப்படியே தொடர வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது எல்லாவற்றிற்குமான அடிப்படை காரணம் என்ன..?

பதில் ஒரே வார்த்தைதான்.. ஆசை..

வேறொன்றுமில்லை. இவர்களுடைய ஆசைக்காகத்தான் நித்தி முதற்கொண்டு அத்தனை மனிதர்களையும் தெய்வங்களாக்கி புனிதப் பசுவாக்குகிறார்கள்.

இதில் சிலர் தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதினாலும், மற்றவர்களின் சொல் வார்த்தையில் நம்பிக்கை வைத்து இவர்களை சேவிக்கிறார்கள். ஆனால் தொழிலிலும் கடுமையாக உழைக்கிறார்கள். அந்த உழைப்பு அவர்களுக்கு செல்வத்தை மென்மேலும் ஈட்டித் தருகிறது. ஆனால் அந்த மனிதரை சந்தித்துவிட்டு வந்த பின்புதான் தனக்கு செல்வம் கொட்டுகிறது என்று நினைத்து தன்னுடைய கடுமையான உழைப்பை பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த மனிதரை முன்னுக்குத் தள்ளுகிறார்கள் இந்த பணக்காரர்கள்.

இதை பிரபலமான ஒருவர் செய்தால் என்னவாகும்..? அது கொசுவின் வளர்ச்சியைப் போல் பிரபலங்கள் வட்டாரத்தில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில்.. இந்த பிரபலங்கள் கொட்டாவி விடுவதைக்கூட ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அடுத்தக் கட்ட நிலையில் இருக்கும் மிடில் கிளாஸ் மாதவன்களுக்கும், மிடில் கிளாஸ் காமன்மேன்களுக்கும் அந்த மனிதனே இன்னொரு தெய்வமாகிறான்.

அடுத்த படை கிளம்புகிறது. இப்போது மிடில் கிளாஸ்காரர்கள். கையில் பணம் இல்லாமல் இருந்தாலும் கடன் வாங்கியாவது கொண்டு போய் பணத்தைக் கொட்டிவிட்டு வருகிறார்கள். இவர்களில் நூறில் ஒருவருக்கு ஒரு நல்லது நடந்தால்கூட அது மிச்சமிருக்கும் 99 பேருக்குள்ளும் சந்தேகத்தை கிளம்பி.. நாம்தான் சரியா விழுந்து கும்பிடாமல் வந்துவிட்டோமோ என்றெண்ணி மறுபடியும் கிளம்பி ஓடுகிறார்கள்.

இதுதான் இந்த ஆன்மீக உலகத்தில் அப்பாவி மக்களின் செயல்பாடுகளால் தெய்வங்களாக்கப்பட்ட மனிதர்கள் வளர்ந்த கதை..

கவியரசர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் என்னும் நூலில் இடம் பெற்றிருக்கும் புகழ் பெற்ற பாடல் இது.

"ஆவீன மழை பொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய் நோவ அடிமை சாக
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற
தள்ளவொணா விருந்து வர.. சர்ப்பந் தீண்ட
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க
குருக்கள் வந்து தட்சணை கொடு என்றாரே.."

வீட்டில் பசுமாடு கன்று ஈன்றிருக்கிறது..!

ஊரில் மழை கொட்டித் தீர்த்திருக்கிறது..

அந்த மழையினால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்துவிட்டது.

வீட்டில் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. படுத்த படுக்கையாக இருக்கிறாள்.

வீட்டு வேலைக்காரி இரண்டு நாட்களுக்கு முன் இறந்துபோயிருக்கிறாள்.

மழை கொட்டியதால் வயலில் ஈரம் இருக்கின்ற இந்த நேரத்திலேயே விதையை நட்டு வைத்துவிடலாம் என்றெண்ணி விதைகளை எடுத்துக் கொண்டு வயற்காட்டை நோக்கி ஓடுகிறான் அவன்.

அந்த விதைகள் வாங்க கடன் கொடுத்தவன் எதிரில் வந்து இவனது இடுப்பு வேட்டியை பிடித்திழுத்து முதலில் தனது கடனுக்கு பதில் சொல்லிவிட்டுப் போ என்கிறான்.

அவனிடம் ஒருவாறு வாய்தா வாங்கிவிட்டு மீண்டும் ஓடுகிறான் வயலுக்கு.

பக்கத்து ஊரில் இருந்து அவனது பங்காளியின் சாவு செய்தியை ஒருவன் எதிரில் வந்து சொல்கிறான்.

செய்தியை வாங்கி ஜீரணித்துவிட்டு மீண்டும் வயற்காட்டை நோக்கி ஓடுகிறான்..

அதே நேரம் அவனது வீட்டிற்கு அவனது சம்பந்தி விட்டார் மனைவியைப் பார்க்க வருகிறார்கள்.

இங்கே பங்காளியின் மரணத்தைப் பற்றி சிந்தித்தபடியே சென்றவன் வயலில் இருந்த பாம்பை மிதித்துவிட அது அவனைக் கொத்திவிடுகிறது.

அணிந்திருந்த வேஷ்டியை கிழித்து பாம்பு விஷத்தை உடலில் ஏற்றவிடாமல் தடுத்துவிட்டு எப்படியும் விதையை நட்டுவிட்டுத்தான் மறுவேலை என்பதைப் போல் தனது வயற்காட்டில் கால் வைக்கிறான்.

அங்கே அவனுக்கு முன்பாகவே அரசு அதிகாரிகள் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். விவசாய வரியை இதுவரையிலும் கட்டவில்லை.. எப்ப கட்டப் போறீங்க..? பதில் சொல்லுங்க என்று அவனை மறித்து நிற்கிறார்கள்.

அதே நேரம் ஊருக்கு பொதுவான கோவிலின் கொடையை அன்றைய தேதிக்கு அவர்களது குடும்பம்தான் தரவேண்டும் என்பதால் படி அரிசி கேட்டு வாசலில் வந்து நிற்கிறார் கோவில் குருக்கள்.

இவ்வளவு கஷ்டமும் ஒரு மனுஷனுக்கு, ஒரே நாள்ல அடுத்தடுத்து வந்தா அவன் என்ன ஆவான்..? செத்து சுண்ணாம்பாயிர மாட்டான்..? ஆனால் இதுவெல்லாம் வராது என்று நினைக்காதீர்கள். வரும்.. நிச்சயமாக வரும். இதுதான் மனித வாழ்க்கை..

கஷ்டங்களெல்லாம் சொல்லி வைத்தாற்போல் சேர்ந்துதான் வரும். நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் இந்தக் கஷ்டங்கள் வருகிறது..? மனிதன் எதையோ செய்கிறான். ஏன் செய்கிறான்? அவனுக்கு அவன் செய்த செயல் தொடர்பாக ஒரு ஆசை. அந்த ஆசையினால் அந்தச் செயலை செய்யப் போய் சிக்கலில் மாட்டுகிறான். ஆக எல்லாவற்றிற்கும் அடிப்படை இந்த ஆசைதான்.

நியாயமான ஆசைகளாக இருந்தாலும் அதற்காக நாம் கஷ்டப்படத்தான் வேண்டும். இங்கே கஷ்டம் என்பது பெற்றோர்களின் கடமை, பிள்ளைகளை வளர்ப்பது, பிள்ளைகள் பெற்றோரை காப்பது.. இதற்காக அவர்கள் சில தியாகங்களைச் செய்வது போன்றவற்றிற்குள் அடங்கும்.

ஆனால் நியாயமில்லாத ஆசைகளினால் துன்பங்களை அனுபவித்தால் யார் அதற்கு பொறுப்பாவது..?

சுருக்கமாக ஒரு உதாரணத்தோடு சொல்கிறேன்.

ஒரு பையன். பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறான். 50 சதவிகித மதிப்பெண்கள்தான் எடுத்திருக்கிறான். ஆனால் அவனது பக்கத்து வீட்டுப் பையன் 90 சதவிகித மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கிறான். இவனது அப்பா இவனை பொறியியல் படிக்க வைக்கிறார்.

இதேபோல் 50 சதவிகிதம் மதிப்பெண் எடுத்த பையனையும் அவனது தந்தை பொறியியல் படிக்க வைக்க முயல்கிறார். அரசுக் கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை. தனியார் கல்லூரியில்தான் கிடைக்கிறது. ஆனால் இதற்கு பணம் நிறைய செலவாகும். ஆனால் வேறு வழியில்லை. தன் பையனை பக்கத்து வீட்டுப் பையனைப் போல பொறியாளனாக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொள்கிறார்.

மனைவியிடம் இருந்த நகைகளை விற்றுக் காசாக்கி பையனை தனியார் கல்லூரியில் நுழைத்துவிடுகிறார். பையனும் பெயருக்கு கல்லூரிக்குப் போகிறான். படிப்பதைப் போல் ஏதோ செய்கிறான். அப்பா அடுத்த செமஸ்டருக்கு பீஸ் கட்ட பணமில்லாமல் கடன் வாங்குகிறார். பின்பு இந்தக் கடனை அடைக்க வேறொருவரிடம் பெரிய அளவிலான வட்டி விகிதத்தில் கடன் வாங்குகிறார்.

கடன் கழுத்தை நெரித்த வேளையில் தாங்க மாட்டாமல் இதனை அடைக்க வேண்டி தான் வேலை பார்க்கும் அரசு வேலையில் முறைகேடாக நடந்து கொள்ள முயல்கிறார். லஞ்சம் வாங்குகிறார். முதல் முயற்சி ஜெயிக்கிறது. தொடர்ந்து கொண்டே செல்கிறார். பையன் அரியர்ஸில் குளித்துக் கொண்டிருக்கும்போது இவர் லஞ்சத்தில் குளிக்கிறார்.

கடைசியாக ஒரு நாள் பிடிபடுகிறார். ஜெயிலுக்கு போகிறார். இப்போது இவரது மனம் சொல்கிறது நான் என் பையனுக்காகத்தான் செய்தேன் என்று.. பையன் சொல்கிறான் இது அப்பாவின் கடமைதானே என்று..

இது நியாயமில்லாத ஆசைதானே..? இந்தப் பையனுக்கு இருக்கின்ற அறிவை வைத்து, எடுத்திருக்கின்ற மதிப்பெண்களை வைத்து, அவனால் பொறியியல் படிப்பை படிக்க முடியுமா? முடியாதா? என்றல்லவா அந்தத் தகப்பன் சிந்தித்திருக்க வேண்டும்..?

பொறியியல் துறை இல்லையென்றால் பாலிடெக்னிக், கம்ப்யூட்டர், ஐ.டி.ஐ. என்று பல்வேறு பிரிவுகளில் திருப்பிவிடலாமே.. நிறைய வழிகள் இருக்கிறதே.. செய்யவில்லையே இந்தத் தந்தை..

அவரது இந்த அர்த்தமற்ற ஆசைக்கான விலையை அவர்தானே கொடுக்க வேண்டும். இத்தனையையும் வரிசையாக செய்துவிட்டு "எனக்கு ஏன் இப்படி சோதனையைக் கொடுக்கிறாய்..?" என்று முருகனின் கோவணத்தை இழுத்தால் என்ன நியாயம்..?

நான் இன்றைக்கும் நிரந்தரமான வேலை கிடைக்கவில்லையே என்று புலம்பிக் கொண்டிருப்பதற்கும் நானேதான் காரணம். எனக்கே நன்கு தெரிகிறது. சினிமா துறையில் இயக்குநர் ஆக வேண்டும் என்றால் இந்நேரம் நான் எத்தனை கஷ்டப்பட்டாலும் ஏதாவது ஒரு இயக்குநரிடம் ஒட்டியிருக்க வேண்டும். நான் செய்யவில்லை.

சீரியல்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் மட்டுமே எழுதுவேன் என்று நினைத்து முனைப்போடு போராட நினைத்திருந்தால் இந்த பிளாக்கையெல்லாம் இழுத்து மூடிவிட்டு அங்கே ஓடியிருக்க வேண்டும். அதையும் நான் செய்யவில்லை.

இங்கே பாதி கால்.. அங்கே பாதி கால் என்று வைத்து அலம்பிக் கொண்டிருப்பதினால்தான் எனது நிலைமை இப்போதுவரையிலும் திரிசங்கு சொர்க்கமாக இருக்கிறது. எனக்கே நன்கு தெரிகிறது.. தவறு என் மீதுதான் என்று.

"இது தொடர்பாக ஏதாவது ஒரு முயற்சியை நான் எடுக்கிறேன் முருகா.. அதற்கு ஏதேனும் ஒருவகையில் நீ எனக்குத் துணையிரு. அது போதும்.. வழியைக் காட்டு. நான் ஓடுகிறேன். ஆளைக் காட்டு. நான் பேசுகிறேன்.." என்று முருகனுடனான ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்தில்தான் எனது நம்பிக்கையான வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் எனது ஆசை சினிமா என்பதால் அதற்கு என்ன விலை கொடுத்தாக வேண்டுமோ அதனை நான் கொடுத்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.

இந்நேரம் எனக்கு சாதாரணமாக ஐயாயிரம் ரூபாயில் டிடிபி வேலை கிடைத்தாலும் பரவாயில்லை. வாழ்க்கையில் செட்டிலானால் போதும் என்று நான் நினைத்திருந்தால் இந்தப் பிரச்சினைகளெல்லாம் எனக்கு வந்திருக்காதே.. ஆக.. இந்த மாதிரியான பிரச்சினைகள் உருவாவதே நமது ஆசைகளினால்தான்..

போதும் என்ற மனதோடு.. வாழ்க்கையை ஆண்டவனின் கைகளில் ஒப்படைத்துவிட்டு.. எப்போது வேண்டுமானாலும் இறப்பை எதிர்நோக்கி காத்திருப்பவனுக்கு எந்த ஒரு வழிபாடும் தேவையில்லை.

நானும் இப்படித்தான் காத்திருக்கிறேன். இது சுயபச்சாபதமில்லை! நிஜமாகவே.. இன்றைக்கு.. இந்த நேரத்திற்கு.. இந்த நிமிடத்தில்.. இந்த நொடியில்கூட நான் இறப்பதற்கு தயாராக இருக்கிறேன். முருகன்தான் கூப்பிட மறுக்கிறான்.

மனசு நிறைய கனவுகளோடு, நிறைய எதிர்பார்ப்புகளோடு உழைத்துக் கொண்டிருப்பவர்களை திடீரென்று அழைத்துக் கொள்கிறானே என்பதை நினைக்கின்றபோது அவனை திட்டுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை.

நான் இப்போதே இறக்கத் தயார் என்று சொல்வதாலேயே உடனேயே எனக்கு இறப்பு வந்துவிடாது என்பது எனக்கும் தெரியும். ஆனால் இதில் இருக்கும் ஒரு கூடுதல் வசதி என்னவெனில், எதன் மீதும் அதிகம் நாட்டம் வராது.. இருப்பதே போதும் என்று ஆசையை அளவோடு வைத்துக் கொள்ளலாம்.

"நாம் உழைத்துக் கொண்டேயிருப்போம். இறப்பை பற்றிக் கவலைப்படாமல் உழைப்போம். முருகன் எப்ப கூப்பிடுறானோ அப்போ போய்க்குவோம்... எதுக்கு அதைப் பத்தி நினைக்கணும்"னு சொல்கிறவர்களும் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த மாதிரி மனப்பான்மை உள்ளவர்கள்தான் ஒரு போதும் நித்தி மாதிரியான சாமியார்களிடம் போகவே மாட்டார்கள்.

வெற்றியும், தோல்வியும், இன்பமும், துன்பமும், லாபமும், நஷ்டமும் வாழ்க்கையில் சகஜம். அதற்காக துவண்டு போகக் கூடாது. அதைத் தூக்கிப் போட்டுட்டு மேலும், மேலும் உழைக்க வேண்டும்.. எல்லாமே கடந்து போகும் என்கிற மனநிலை நமக்குக் கிடைத்தால் நிச்சயம் இந்த மாதிரியான மனித போலிகளான சாமியார்களின் தயவு நமக்குத் தேவையிருக்காது.

நானும் இதுவரையில் இது மாதிரியான எந்த சாமியாரிடமும் போனதில்லை. ஆர்வமும் கொண்டதில்லை.. காரணம் எனக்கும், என் அப்பன் முருகனுக்கும் இடையில் எந்த புரோக்கரும் தேவையில்லை. எனக்கு அவன்.. அவனுக்கு நான்.. இதுவே எங்களுக்கு போதும்..

RIVALES - SPANISH FILM - திரைப்பட விமர்சனம்

23-03-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மொழி தெரியாதவர்களைக்கூட படத்தில் ஆழ்த்திவிடும் அளவுக்கு சர்வ உலகத்தினரைக் கவரும் திரைக்கதை அமைப்போடு திரைப்படங்கள் வெளியாவது சற்று அபூர்வம்தான்.

சற்று புகழ் பெற்ற திரைப்படங்கள் அனைத்துமே சிறந்த திரைக்கதையாலும், இயக்கத்தாலும்தான் புகழ் பெற்றிருக்கின்றன. சீரியஸ்வகைப் படங்கள் அந்தத் திரைப்படத்தின் தன்மைக்கேற்ப புகழ் பெற்றிருந்தாலும், அத்திரைப்படம் ஏதோ ஒருவகையில் மக்களை ஈர்த்திருக்கும்.

அப்படியொரு வகையான திரைப்படங்களில் இதுவும் ஒன்று. ஸ்பானிய திரைப்படமான இதன் மற்றுமொரு சிறப்பு யதார்த்த வாழ்க்கையை நகைச்சுவை கலந்து அள்ளித் தெளித்திருப்பதுதான்.


பதின்ம வயதுக்குட்பட்டவர்களைக் கொண்ட Deportivo Madriclno என்கிற கால்பந்து அணிக்கும் Atletica Barcelones என்கிற கால்பந்து அணிக்கும் இடையே காலம்காலமாக போட்டி நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு அணிகளின் மைதானத்தில் மோதினால், பாகிஸ்தான், இந்தியா போல அந்தப் பகுதியில் பரபரப்பை ஊட்டக் கூடிய விஷயம்.

அப்படியொரு பைனல் மேட்ச் மாட்ரிட்டில் நடைபெறப் போகிறது. இரண்டு அணி வீரர்களான பிள்ளைகளும் அங்கே செல்ல பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்க.. உடன் அவர்களது பெற்றோர்களும் கிளம்புகிறார்கள்.

கில்லிரெமோ ஒரு வெற்றியடையாத சேல்ஸ்மேன். அவனது தொழிலைப் போலவே குடும்ப வாழ்க்கையிலும் தோல்வியடைந்தவன். டைவர்ஸ் கேஸ். அவனது மகன் வில்லி பைனல் மேட்ச்சில் விளையாடப் போகிறான். அதனால் அவனை அழைத்துக் கொண்டு மாட்ரிட் கிளம்புகிறான் கில்லி.

இதேபோல் மரியா மற்றும் கார்லோஸ் தம்பதிகள் தங்களது பையனை அழைத்துக் கொண்டுபோக பிளான் செய்து கொண்டிருக்கும்போது ஜார்ஜ், மரிபோல் தம்பதிகளைச் சந்திக்கிறார்கள். அவர்களோ மரியாவையும், கார்லோஸையும் தங்களுடன் காரில் வரும்படி அழைக்கிறார்கள். கார்லோஸ் இதனை ஏற்றுக் கொள்ள மரியா வேண்டாம் என்கிறார்கள். கார்லோஸ் காரணம் கேட்க அவர்கள் swapping couples என்கிறாள். கார்லோஸ் இதனை நம்பாமல் போகலாம் என்று தலையை ஆட்டிவிடுகிறான்.

ரோஸ் என்னும் மூதாட்டி தனது பேரனும் மாட்ரிட் வருவதால் அவனை வரவேற்க வேண்டி விமான நிலையத்தில் காத்திருக்கிறாள். ஆனால் பேரன் வரவில்லை. நேரமாகிவிட்டதால் மாட்ரிட்டுக்கு டிரெயினில் செல்ல விரும்புகிறாள். அதுவும் முடியாமல் போக கடைசியாக அவளுடைய பேரனின் எதிர்க்கட்சி மாணவர்கள் செல்கின்ற அதே பேருந்தில் இடம் கிடைக்கிறது. அதே பேருந்தில் பயணம் செய்யும் ஒரு மாணவனின் தந்தை ரோஸை ஈவ்டீஸிங் செய்தபடியே வர.. தனது பேரனுக்காக அதையும் சகித்துக் கொண்டு மாட்ரிக்குச் செல்கிறாள் ரோஸ்.

பெரும் தொழிலதிபரான குமாட்ஸும் தனது மகனை அழைத்துக் கொண்டு மாட்ரிட் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். இவனுக்கு தனது டென்ஷனான அழகான காதலியான சாராவையும் உடன் அழைத்துப் போக வேண்டிய கட்டாயம். எப்போதும் ஹேண்டிகேம் கேமிராவில் எதையாவது படம் எடுத்துக் கொண்டிருக்கும் மகனுக்கு சாராவைப் பிடிக்கவே இல்லை. அவளை வெறுப்பேற்றியபடியே வருகிறான்.

போதாக்குறைக்கு பெட்ரோல் பங்கில் போலி போலீஸாரிடம் சிக்கிக் கொள்ள.. அவர்கள் சாராவைச் சோதனையிடுவதாகச் சொல்லி அத்துமீறுகிறார்கள். சாரா கோபமாகி தனக்குத் தெரிந்த கராத்தேவில் அவர்களை நாலு சாத்து சாத்திவிட.. குமாட்ஸுக்கு டென்ஷன் கூடிப் போகிறது. பையன் மீதிருக்கும் பாசத்தில் காதலியையும் கைவிட முடியாமல் தவித்தபடியே மாட்ரிட் வந்து சேர்கிறான்.

இரண்டு எதிரெதிர் பகையாளி அணிகளின் வீரர்களும் ஒருவரையொருவர் முறைத்தபடியே இருந்தாலும் இரண்டு அணிகளின் கோச்சுகள் நெருக்கமோ நெருக்கத்தில் இருக்கிறார்கள். இருவருமே காதலர்கள். அதுவும் ஆண் காதலர்கள். ஹோமோக்கள்.

இப்படி மாட்ரிட் வந்து சேர்ந்த இந்தக் குடும்பத்தினர் என்ன ஆனார்கள் என்பதையும், மேட்ச் நடந்ததா என்பதையும்தான் நம்மை எதிர்பார்க்க வைத்து போகிற போக்கில் கலாச்சார புரட்சியையும் சர்வசாதாரணமாகப் புரட்டிப்போடும் நகைச்சுவையில் கலாய்த்திருக்கிறார் இயக்குநர்.

சிறுநீரகப் பையில் இருக்கும் கற்களை வெளியேற்ற முடியாமல் அவதிப்படும் உடல் உபாதையுடன் மகனது விளையாட்டை நேரில் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் மகனை அழைத்துக் கொண்டு செல்லும் கில்லி மகனுக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கிறேன் என்கிற ரீதியில் கேள்வி மேல் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டேயிருக்கும் காட்சியில் பரிதவிப்பான அப்பாவி அப்பா போல் நிஜமாகவே நடித்திருக்கிறார் கில்லி.

சாப்பிட்ட கடையில் கொடுக்க காசில்லாமல் குட்பால் மேட்ச்சிற்கு பிறகு கொண்டாட்டத்திற்காக வைத்திருந்த பீர் பாட்டில்களை கடைக்காரனிடம் கொடுத்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடுவதும், பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் பெண்ணிடம் தன்னிடம் பணம் இல்லை என்பதை நாசூக்காக சொல்லிவிட்டு தப்பிப்பதுமாக இவரது கதை பாவப்பட்டதாக இருக்கிறது.

மகன் வில்லி அப்பா மீதிருக்கும் கோபத்தில் பெட்ரோலுக்கு பதில் டீசலை நிரப்பிவிட வழியிலேயே வண்டி மக்கராகி நின்றுவிடுகிறது. பின்னால் துரத்தி வரும் பெட்ரோல் பங்க் ஆட்களிடமிருந்து தப்பிக்க வேண்டி காரை நிறுத்திவிட்டு ஓடுகிறார்கள். இப்போதுதான் தனது பர்ஸை திருடி வைத்துக் கொண்டது வில்லிதான் என்று தெரிய வர.. அப்போதும் பையனை விட்டுக் கொடுக்க முடியாமல் அவன் புட்பால் மேட்ச் விளையாடியே தீர வேண்டும் என்று தனது சோகத்தையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அழைத்துச் செல்கின்ற காட்சியில் உலகத்தின் தந்தைமார்களின் மனதை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

காரில் செல்லும்போது தனது கணவன் கார்லோஸ், மரிபாலை ஜொள்ளுவிடுவதைப் பார்த்து கண்டிக்கவும் முடியாமல் தண்டிக்கவும் முடியாமல் தவிக்கின்ற மரியாவின் நடிப்பு நம்ம சீரியல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது. ஜார்ஜ் தன்னை நெருக்குவதைப் புரிந்து கொண்டு புரியாததுபோல் நடித்து கடைசியில் நாலு சாத்து சாத்துகின்ற காட்சியில் செம காமெடி.

ஆண்கள் அத்தனை பேரும் எல்லா நாட்டிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள்..

நமது தொலைக்காட்சி சீரியல்களில் வரும் திடுக் திருப்பம்போல மரியா கதையைத் திருப்பி கார்லோஸின் தாய் மரணப்படுக்கையில் இருப்பதாக ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு திரும்பிப் போக முடிவெடுக்க.. ஜார்ஜும், மரிபாலும் தாங்களும் உடன் வருவதாகச் சொல்லிக் கிளம்பிவிட.. நிமிடத்தில் மரியா அடிக்கும் பல்டி ஸ்டண்ட் சூப்பர்.. தொடர்ச்சியான கைதட்டல்கள் தியேட்டரில்..

நகைச்சுவைக்கு ஏது மொழி..? என்னதான் சப்டைட்டில் ஓடினாலும் அதையும் மீறின அந்த உடல் மொழியின் நடிப்புக்கு இணை ஏதுமில்லையே..?

இந்தத் தம்பதியினர் ஒருவருக்கொருவர் மீதிருக்கும் கோபத்தில் அந்த கூட்டுக் கலவிக்குள் தாங்களே விரும்பி ஒத்துக் கொண்டு நீச்சல் குளத்திற்குள் ஜோடி மாற்றம் நடைபெறும் காட்சி பக்.. பக்குதான்.. சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் என்பதால் காட்சிகள் மட்டுப்படுத்தப்பட்டாலும், தம்பதிகள் அந்தக் குற்றவுணர்வோடு கடைசியில் விடைபெறும்போது விரசம் இல்லாமல் சோகம் மட்டுமே நிரம்பி வழிந்தது. இதிலும் ஒரு ஸ்பாஸ்டிக் காமெடியாக மேட்டரை முடித்துவிட்டு லிப்ட்டில் கீழே இறங்கி வரும்போது ஒருவரையொருவர் காதலுடனும், ஏக்கத்துடனும் பார்க்கின்ற பார்வை இருக்கிறதே.. அட்டகாசமான இயக்கம்.

ரோஸ் பேரனை மட்டுமே எதிர்பார்த்து காத்திருக்க.. பேரனோ ஒரு கேர்ள் பிரெண்ட்டை தள்ளிக் கொண்டு வந்திருக்க ரோஸுக்கு பெரும் ஏமாற்றம். அந்த கேர்ள் பிரெண்ட்டை தன்னை ஜொள்ளுவிடும் சேவியரின் மூலம் மூளைச் சலவை செய்து அனுப்பி வைக்க முயற்சி செய்ய.. அந்தப் பெண் தில்லாலங்கடி பெண்ணாக சேவியரின் ஜட்டியை மட்டும்விட்டு மீதியையெல்லாம் லவட்டிக் கொண்டு செல்வது பக்கா நம்மூர் காமெடி. சிரித்து, சிரித்து மாய்ந்து போனேன்.

விளையாட்டு வீரர்கள் சாப்பிடும் இடத்தில் ஏற்படும் சிறு கலவரம் பெரும் பொறியாகக் கிளம்பி யார், யாரை அடித்தார்கள் என்பதே தெரியாத அளவுக்கு வன்முறை வெடித்துக் கிளம்ப.. மேட்ச் கேன்சலாகிறது. ஆனாலும் என்ன.. நீண்ட நாள் காதலர்களான இரு அணிகளின் கோச்சுகளும் கொட்டுகிற மழையிலும் மைதானத்தில் கட்டிப் புரண்டு தங்களது காதலைத் தெரிவித்துக் கொள்ள.. ஒரு ஹைக்கூ ஹோமோ கவிதை அங்கே அரங்கேறுகிறது..

சாராவாக நடித்திருக்கும் கீராவைப் பற்றியும் சொல்ல வேண்டும். எப்போதும் ஏதோவொரு டென்ஷனோடு இருக்கின்ற ஒரு மாதிரியான குணம்.. படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டு டென்ஷனை குறைக்க முடியாமல் தவிக்கின்ற தவிப்பும், காதலனுக்காக அவன் மகனின் சேட்டைகளைத் தாங்கிக் கொள்ளும் பரிதவிப்புமாக பெஸ்ட்டாக செய்திருக்கிறார்.


இத்திரைப்படம் திரையிடப்பட்டபோது கீராவும் ஸ்பெயினில் இருந்து சென்னை வந்திருந்தார். படம் முடிந்ததும் அவரைப் பார்த்தபோது ஆள் அடையாளமே தெரியவில்லை.. படத்தில் கொஞ்சம் ஊதியிருந்தாலும், அடுத்த இரண்டு படங்களில் நடிப்பதற்காக டயட்டில் இருந்து உடலைக் குறைத்துவிட்டதாக தெரிவித்தார்.

இப்படித்தான் வருஷா வருஷம் இந்தப் பிள்ளைகளை கூட்டிக்கிட்டு வரும்போது ஏதாவது ஒரு பிரச்சினை வந்துக்கிட்டே இருக்கும்.. யாராவது ஒருத்தரால ரகளை கண்டிப்பா நடக்கும்.. ஆனாலும் நாங்கள் எதை வேண்டுமானாலும் இழப்போம்.. விடுவோம்.. கால்பந்தின் மீதான வெறியை மட்டும் விடமாட்டோம் என்று படத்தின் கிளைமாக்ஸில் ரோஸின் மூலமாகச் சொல்லியிருக்கும் இந்தக் கதையை கண்டிப்பாக தமிழுக்காக மாற்றம் செய்யலாம்.

தமிழின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர்களை ஒன்றிணைத்து கதையை கொஞ்சம் நம்மூருக்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்து சிறந்த நகைச்சுவை இயக்குநரின் இயக்கத்தில் வெளியிட்டால் படத்தின் வெற்றி உறுதி.!!!

ஏழு நாட்கள் மட்டும் பொறுத்துக்குங்க..!

22-03-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



என்னைப் பற்றிச் சொல்வதற்கு அதிகமாக ஒன்றுமில்லை.. பிறந்தது திண்டுக்கல்லில்.. வளர்ந்தது பாதி திண்டுக்கல்லிலும், மீதி பாதி மதுரையிலுமாக எனது வாலிபப் பருவத்தை ஆடாத ஆட்டமெல்லாம் ஆடித் தொலைத்தேன்.


இயற்பெயர் ச.சரவணன். படித்தது பத்தாம் வகுப்பு, திண்டுக்கல் அரசு ஐ.டி.ஐ.யில் டீசல் மெக்கானிக்.. ரோட்டோர கம்யூட்டர் இன்ஸ்ட்டிட்யூட்டில் டேட்டாபேஸ் மேனேஜ்மெண்ட்டில் டிப்ளமோ என்று இப்போதைய தொழிலுக்கு எந்தத் தொடர்பும் இல்லாத படிப்பு.

படிக்க வேண்டிய வயதில் அதனைச் செய்யாமல் போனதாலும், வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்த பல பாடங்களை அப்போதைக்கு புரிந்து கொள்ளாமல் போனதாலும் எனது வாழ்க்கையை மிகச் சரியாக 27-வது வயதில்தான் உணரத் தொடங்கினேன்.

எனது தந்தை எனது 17-வயதில் மறைந்தபோது எனது எதிர்காலம் என்னவாகப் போகிறது என்று கவலைப்பட்டேன். எனது தாயார் அடுத்த ஐந்தாண்டுகளில் காலமானபோதுதான் எனது குடும்பத்தில் எனது நிலை என்ன என்பது புரிந்தது. குடும்பச் சூழலால் புலிப்பாய்ச்சல் காட்ட வேண்டிய வயதில் சோம்பலாகவும், கற்பனைக் கதைகளை எனது மனதுக்குள் கட்டி வைத்துக் கொண்டு உழலுகின்ற சாதாரணமானவனாகும் இருந்துவிட்டதால் வாழ்க்கை என்னை இழுத்தடித்துவிட்டது.

என்னவாகப் போகிறேன்.. என்ன செய்யப் போகிறேன். எப்படி வாழப் போகிறேன் என்றெல்லாம் தெரியாத சூழலில் வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் காலடி எடுத்து வைத்தேன். நான் வந்த தினம் முதல் சென்னையில் வாசம் செய்து வந்த அத்தனை பிச்சைக்காரர்களோடு ஒருவனாக நானும்தான் வளர்ந்து வந்தேன்.

படித்தது ஒன்று.. விரும்பியது ஒன்று என்ற ஊசலாட்டத்தில் விரும்பியதை நாடி மனம் செல்ல.. அது எழுத்தின் பக்கம் என்னைக் கொண்டு சென்றுவிட்டது. பத்திரிகையுலகில் நான் விரும்பியதைச் செய்யப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு உள்ளே நுழைந்த எனக்கு அது அவ்வளவு எளிதல்ல என்பதை சொல்லிக் கொடுத்தது நான்கரை ஆண்டு பத்திரிகை பணி.

அது முடியும் தருவாயில் டிவி மீடியாவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க அங்கேயும் ஒரு பரமபத ஆட்டம். தொடர்ந்து 7 வருடங்கள் அருமையாக எனக்குக் கிடைத்த அனுபவங்களை ஆழ்ந்து அனுபவித்த நான் எனது வாழ்க்கையை செப்பனிட இப்போதும் ஏனோ மறந்து தொலைத்துவிட்டேன். தொலைந்தது தொலைந்ததுதான். இன்றைய எனது பிச்சைக்காரத்தனமான நிலைமைக்கு இந்தக் காலக்கட்டத்தை நான் பயன்படுத்திக் கொள்ளாத முட்டாள்தனம்தான் காரணம்.

தொலைந்தது அந்தக் கனவு. ஒரு கதவு மூட மறு கதவு திறக்கும் என்பார்களே... அதைப் போல மற்றுமொரு கனவை எனக்குள் விதைத்தது தமிழகத்தின் தலையாய கனவுத் தொழிற்சாலை.. அதை நோக்கி நான் அலைந்து கொண்டிருந்த சூழலில்தான் பதிவுலகத்தில் மூத்த பதிவரான 'தடாலடி' கெளதமின் அறிமுகத்தில் இந்த பிளாக் எனப்படும் வலைப்பதிவின் அறிமுகம் கிட்டியது.

ஓசிதானே.. நமக்குத்தான் தமிழ் தட்டச்சு தண்ணிபட்ட பாடாச்சே.. நாமும் செய்து பார்த்தால் என்ன என்ற ஆர்வத்தில் கெளதம் கொடுத்த உற்சாகத்திலும், உசுப்பேற்றலிலும் சிக்குண்டு வலை உலகத்திற்குள் பிரவேசித்தேன்.

எப்போதும் உற்சாகத்திலும், உழைப்பிலும் ஈடு இணையில்லாத முனைப்புடனும் பலருக்கு வழிகாட்டுதலில் முதன்மையானவராகவும் இருக்கும் எனது உடன் பிறவா சகோதரர் கெளதமிற்கு எனது நன்றியும், வாழ்த்துக்களும்..!


முதல் போனியே ராசியான கையால் கிடைத்தது. அருமைத் தம்பி பாலபாரதிதான் என் கைப்பிடித்து எனது வலைத்தளத்தைத் திறந்து வைத்து பதிவுகளை எப்படி இடுவது..? படங்களை எப்படி இணைப்பது..? எப்படி பின்னூட்டங்களை இடுவது..? இத்யாதி.. இத்யாதி.. என்று பலவற்றையும் சொல்லிக் கொடுத்தார். அவருக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன்..!

2007-ம் ஆண்டு இதே மார்ச் மாதம் இதே 23-ம் தேதியன்றுதான் எனது முதல் பதிவினை எனது தளத்தில் பதிவு செய்தேன். என்னவொரு ஒற்றுமை பாருங்கள்..?

இந்த மூன்றாண்டுகளில் இதுவரையிலும் 455 பதிவுகளைத்தான் எழுதியிருக்கிறேன். மிகக் குறைவுதான். ஆனாலும் இடையிடையே சிறுபிள்ளைத்தனமாக பலருடனும் கோபப்பட்டு எழுதாமல் நிறுத்திக் கொண்ட காரணத்தினால் அன்றைய காலக்கட்டத்தில் மட்டும் வலைப்பதிவர்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்ட கதையையும் அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

அடியேன் பதிவுலகத்தில் நடக்க வேண்டிய நேரத்திலேயே ஓடத் துவங்கினேன். நிறுத்த வேண்டிய இடத்திலெல்லாம் விடாப்பிடியாக நடந்து கொண்டே சென்றேன். போகக் கூடாத இடத்தையெல்லாம் தொட்டுப் பார்த்தேன். தோண்டக் கூடாத செய்திகளையெல்லாம் தோண்டிப் பார்த்து.. நோண்டக் கூடாததையெல்லாம் நோண்டிப் பார்த்து.. இதனால் படக்கூடாததையெல்லாம் பட்ட பின்புதான் எனது விதிப்பயன் என்னவென்று புரிந்தது.

வலையுலகம் எனக்குக் கற்றுக் கொடுத்தது வாழ்க்கையில் நான் பார்த்திராத சில அனுபவங்களை.. குறிப்பாக, போலி டோண்டுவான மூர்த்தி என்னும் வலைப்பதிவருடன் நான் மல்லுக்கட்டியதை இப்போது நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது.

காவல்துறையினரை வெளியில் இருந்தே விமர்சித்து வந்த நான், அவர்களை மிக அருகில் பார்த்துப் பழகும் நேரம் இந்த மூர்த்தி அண்ணனால் கிடைத்தது ஒரு புறமிருந்தாலும், காவல்துறையினர் பற்றிய மறுபக்கத்தையும் நேரிலேயே உணர முடிந்தது. அந்த வகையில் அன்னாருக்கு எனது நன்றிகள்.

அதேபோல் பார்த்தவர்களையும் நண்பராக்கிக் கொள்ளத் துடித்த எனது மனதுக்கு கடிவாளம் போட்டதும் போலி டோண்டு மேட்டர்தான். அத்தோடு அந்தப் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு எழுத்து என்பது எழுத்தோடு சரி.. தனிப்பட்ட முறையில் அனைவரையும் நண்பராக்கிக் கொள்வது, நம்முடைய நடத்தையால்தான் ஏற்படும்.. எழுத்து பற்றிய பிரமிப்பினாலோ, எழுத்தின் மீது ஏற்படும் கவர்ச்சியினாலோ ஏற்படாது என்பதையும் எனக்குப் புரிய வைத்தது இந்த போலி டோண்டுவான மூர்த்தியுடனான உரசல் மேட்டர்.

மேலும் வலையுலகத்தில் எனக்கென்று இருக்கின்ற நண்பர்கள்தான் இப்போதும் தினமும் என்னுடன் பேசுகின்றவர்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது நான் வலையுலகத்தினால் சம்பாதித்தது இந்த நட்பு ஒன்றை மட்டும்தான் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

இத்தனை வருடங்களாகியும் இப்போதுவரையிலும் நெருங்கியவர்கள் என்று உறவினர்களையும், உடன் பிறந்தவர்களையும் பலரும் சொல்கின்றபோது நான் மட்டும் எனது வலையுலக நண்பர்களைச் சுட்டிக் காட்ட வேண்டிய நிலைமையில் இருக்கிறேன்.

நட்புகளே இன்றைக்கும் என்னைத் தாங்கிக் கொண்டிருப்பதையும், இருக்கின்றவரையில் நமக்கென்று சிலர் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கையைத் தந்து கொண்டிருப்பதையும் நினைத்தால் பெருமையாகத்தான் இருக்கிறது.

எனது அப்பா கற்றுக் கொடுத்த வாசிப்பு என்கிற பழக்கத்தினால்தான் இன்றைக்கு உங்கள் முன் உண்மைத்தமிழனாக காட்சியளிக்கிறேன். முதலில் அவருக்கு எனது நன்றி.

கடந்த நான்காண்டுகளாக வலைப்பதிவு எழுதி வருகிறேன். ஏதோ எனக்குத் தோன்றியது, எழுத வந்தது என்று அத்தனையையும் மனதில் ஒன்று வைக்காமல் எழுதிக் குவிப்பதால் 'நீட்டமான பதிவர்', 'அலுப்பான பதிவுகள்..' 'போரடிக்கும் எழுத்து நடை' என்று 'காட்டமான' விமர்சனங்கள் பல வந்தாலும், மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணையையெல்லாம் ஒரு தட்டில் வைத்து என் அப்பன் முருகப்பெருமானிடம் "நீயே வைச்சுக்க உன் சொத்தை..!" என்று சொல்லித் திருப்பிக் கொடுத்துவிட்டதினால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கவும் முடிகிறது.. எழுதவும் முடிகிறது. இனியும் அப்படித்தான் எழுதுவேன்..

வலைப்பதிவில் எழுதத் துவங்கி மூன்றாண்டுகளாகியும் இப்போதுதான் முதல் முறையாக தமிழ்மணத்தில் நட்சத்திரப் பதிவராக இருக்கிறேன். இதற்கு முன்பும் பல முறை தமிழ்மணம் நிர்வாகிகள் என்னை நட்சத்திர போஸ்ட்டிற்கு அழைத்தபோது என் அப்பன் முருகன் மீதிருந்த பயத்தில் "வேண்டாம்.. முடியாது.." என்று சொல்லியிருந்தேன்.

ஆனால் இப்போது கேட்டவுடன் இனிமேலும் முருகனிடம் பயந்து கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்பது எனக்குப் புரிந்ததினால் இப்போது சம்மதித்துவிட்டேன்.

என்னையும் ஒரு பதிவராக எண்ணி ஒரு வாரத்திற்கு உலகளாவிய தமிழ்மணத்தின் ரசிகர்களை விரட்டியடிக்கும் வேலையைக் கொடுத்திருக்கும் தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு எனது பணிவான நன்றிகளும், வணக்கங்களும். ஆனாலும் இவர்களுடைய நல்ல மனதுக்காக இந்த வாரம் இவர்களை நோக்கி வீசுகின்ற பழி அம்புகள் அனைத்தையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்..!

ச்சும்மா.. ஒரு வாரம் மட்டும்தான்.. வழக்கம்போல முருகன் மேல பழியைப் போட்டுட்டு என் ரம்பத்தை ஆரம்பிக்கிறேன்.. பல்லைக் கடிச்சுக்கிட்டு ஏழு நாள் மட்டும் பொறுத்துக்குங்க சாமிகளா..!!!

மாத்தி யோசி - திரைப்பட விமர்சனம்..!

13-03-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுத வேண்டாம்னுதான் நினைச்சேன். ஆனா முடியலை.. மன்னிச்சுக்குங்க..!!!

தண்டோரா மணி, அகநாழிகை வாசுதேவன், பட்டர்பிளை சூர்யா என்ற அண்ணன்மார்களின் அன்புக் கட்டளைக்கிணங்கி படம் பார்க்கச் சென்றிருந்ததால், அவர்கள் மனம் வருத்தப்படுமே என்கிற காரணத்துக்காக இந்த விமர்சனம்..!


ஏன் எழுத வேண்டாம் என்று நினைத்தால் படம் நான் நினைத்துச் சென்றதைப் போல் எதையும் மாத்தி யோசித்து எடுக்கப்படவில்லை.. எதையோ மாத்தணும்னு நினைச்சுத்தான் கதை பேச உக்காந்திருக்காங்க போலிருக்கு. ஆனா எதையுமே மாத்தாம அப்படியே எடுத்து வைச்சிருக்காங்க..

சினிமாவுக்குள்ளேயே இருந்துக்கிட்டு சினிமாக்காரங்களை திட்டுறதுக்கு மனசு வர மாட்டேங்குது.. "ஆனா விமர்சனம் பண்ணலாமே..?" அப்படீன்னு நீங்க கேக்குறீங்க கரெக்ட்டா..? கரெக்ட்டுதான்.. ஆனா எதை விமர்சனம் பண்றதுன்னுதான் தெரியலை.. ஏதாவது இருந்திருந்தால்தானே..?

மாங்கா, பாண்டி, கோனா, மாரி இந்த நாலு பேரும் மதுரைக்குப் பக்கத்துல இருக்குற கடவூர் அப்படீன்ற கிராமத்துல இருக்குற காலனி பசங்க.. செய்றதெல்லாம் சேட்டை.. உடும்பு பிடிக்கிறது.. ஓணானை அடிக்கிறது.. முயலை கொல்றது, ஊர் பக்கம் வரும் ஸ்டேஷனிரிஸ் வேனை நிறுத்திக் கொள்ளையடிக்கிறதுன்னு பலவித கொடுமைகளைச் செய்யும் சேட்டைக்காரர்கள்.


ஊரில் இருக்கும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள், ஊர்க் கோவிலின் தேரை சுத்தம் செய்யும் காலனி சிறுமியை அடித்துவிட, அதனால் கோபப்பட்டு ராவோடு ராவாக ஊர்க் கோவிலில் இருந்த முருகனை தேரோடு தள்ளிக் கொண்டு காலனிக்குள் கொண்டு போய் வைத்துவிடுகிறார்கள் இந்த நாலு மாத்தி யோசி மைனர்களும்.

ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி நாலு பேரையும் அடித்து உதைக்கும் ஆதிக்கச் சாதியினர், எப்போதும் அவர்களுக்குத் துணை போகும் காவல்துறையிடம் காலனி பசங்களை மாட்டிவிட்டு லாடம் கட்ட வைக்கிறார்கள். அடி, உதைபட்டு வரும் நம்ம காலனி பசங்க டீம் பண்ணையாருக்கு பாடம் புகட்ட வேண்டி பண்ணையாரின் வீட்டுக்குள் நுழைகிறது. பண்ணையாரின் மகளை ஒன் சைடாக லவ்விக் கொண்டிருந்த ஒரு டீம் மெம்பர் தூங்கிக் கொண்டிருக்கும் பண்ணையாரின் மகளுக்கு வலுக்கட்டாயமாக கிஸ் கொடுத்துவிட்டுத் தப்பியோடுகிறது. தங்களைத் தேடி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு மொட்டையடித்து ஹிட்லர் மீசையோடு ஊருக்குள் அனுப்பி வைக்க..


இப்போது போலீஸும், ஆதிக்கச் சாதியினரும் ஒன்று சேர்ந்து கொலைவெறியோடு இந்த மாத்தி யோசி டீமைத் தேடுகிறார்கள். உயிருக்குப் பயந்து சென்னைக்கு வண்டியேறுகிறார்கள் நால்வரும்..

வந்தாரை வாழ வைக்கும் சென்னை இவர்களுக்கு 'பெப்பே' என்கிறது.. வந்த இடத்தில் வயிற்றுப் பசிக்காக மாத்தி யோசித்து ஒரு அருமையான வழியைக் கண்டுபிடிக்கிறார்கள். அது திருட்டு. அப்படியொரு இடத்தில் திருடப் போய் ஹீரோயின் என்று சொல்லப்படும் ஷம்முவை காப்பாற்றி தனது டீமில் சேர்க்கிறான் பாண்டி.

ஒரு மாமா பயலினால் பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்ட ஷம்மு வெளிநாடு செல்லவோ அல்லது மேல்படிப்பு படிக்கவோ முயல்கிறாளாம்.. பல காட்சிகளில் வசனங்களை கொத்து புரோட்டா போட்டிருப்பதால் இவ்வளவுதான் ஊகிக்க முடிகிறது.

'மாத்தி யோசி' டீம் ஷம்முவை கஷ்டப்பட்டு ஊருக்கு அனுப்பிவைக்க.. அவள் போன வேகத்தில் அவர்களிடமே திரும்பி வந்து நிற்கிறாள். அவளைத் தேடி வரும் மாமா ஊரில் இருக்கும் சல்லிப் பயல்களிடமெல்லாம் ஷம்முவின் போட்டோவைக் காட்டி கண்டுபிடிக்கச் சொல்ல..


இந்த 'மாத்தி யோசி' டீம் கடைசியில் என்னதான் செய்தது என்பதையும், ஷம்மு என்னவானாள் என்பதையும் தயவு செய்து இன்னும் சில தினங்களில் உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக கலைஞர் தொலைக்காட்சியில் இப்படம் காட்டப்படும்போது பார்த்துக் கொள்ளுங்கள்.

நல்ல இலக்கிய ரசனை தெரிந்தவர். அடிப்படையில் பத்திரிகைக்காரர்.. நிறைய விஷய அனுபவம் உள்ளவர் படத்தின் இயக்குநர் நந்தா பெரியசாமி. அந்த ஒரு தகுதிக்காகவே இத்திரைப்படத்தை முதலில் பார்க்க நினைத்து ஓடினேன். பெருத்த ஏமாற்றம்..

கொஞ்சமும் சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை.. அலுப்பூட்டும் காட்சியமைப்புகள்.. சவசவ என்று மதுரை ஸ்லாங்கை கொத்துக் கறி போட்டிருக்கும் வசனங்கள்.. வசன டப்பிங்கில் ஏகத்துக்கும் குளறுபடி.. அரதப் பழசான பின்னணி இசை.. என்று எல்லாமே ஒரே நேரத்தில் நம்மைத் தாக்கினால் எவ்வளவுதான் தாங்குவது..?


கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்பதை ஒத்துக் கொள்கிறேன். உடல் உழைப்பு மட்டுமே ஒரு திரைப்படத்தை ஜெயிக்க வைத்துவிடாது. பிரசன்டேஷன் சிறப்பான முறையில் வேண்டும். அது இல்லையெனில் அத்தனையும் வீண்தான்.. சினிமா உலகத்தில் படம் ஓடினால்தான் வெற்றி. இல்லையெனில் தோல்விதான். அந்த வகையில் இவர்களுடைய நல்ல உழைப்பு வீணாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில்தான் கடைசியாக பார்த்தது இது மாதிரியான பின்னணி இசை. பல காட்சிகளில் இசைஞானி இளையராஜாவின் பழைய பாடல்களின் மெட்டையே உலாவ விட்டிருப்பது எரிச்சலோ எரிச்சலைத் தருகிறது. அதிலும் தன்னிடம் விசிட்டிங் கார்டு கொடுத்த பெண்ணைத் தேடி 'மாத்தி யோசி' டீம் செல்லும்போது, ஒலிக்கும் 'கிழக்கே போகும் ரயில்' பாட்டு.. எரிச்சலோ எரிச்சல்..


ஷம்முவின் கேரக்டர் படத்தில் நுழைந்தவுடன் வருகின்ற லாஜிக் ஓட்டைகளில் படம் ஓட்டை விழுந்த படகுபோல் தள்ளாடுகிறது.. நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுகின்ற பெண் இந்தச் சட்டை போடாத நாலு பேருடனும் சென்னையில் உலா வருகின்ற காட்சிகளைப் பார்த்தாலே கொடுமையாக இருக்கிறது.. இதில் இயக்குநர் என்ன மாத்தி யோசித்திருக்கிறார் என்று தெரியவில்லை..?

ஒரு துப்பாக்கி கையில் கிடைத்தவுடன் அதை வைத்துக் கொண்டு அத்தனை கொலைகள் செய்யும்போதும் கத்துகிறார் பாருங்கள் அந்த நடிகர்.. அப்படியே அந்தத் துப்பாக்கியை பிடுங்கி.. நாமளும் பதிலுக்கு..?????? செஞ்சிரலாம்னு கோபமா வருது..

பீலிங் வர வேண்டிய இடத்துல சிரிப்பையும், சிரிப்பு வர வேண்டிய இடத்துல கோபத்தையும் கொடுத்து நமது பி.பி.யை எகிற வைத்திருக்கிறார் இயக்குநர்.

படத்தில் கோபம் வருவதற்காக பாரதியாரின் "ஆத்திரம் கொள்.. ரெளத்திரம் பழகு" என்ற பாடலையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார். உண்மையில் நமக்குத்தான் கோபம் கொப்பளிக்கிறது..

படத்தில் ஒன்றுமே நன்றாக இல்லையா என்று விசனப்பட வேண்டாம். பாராட்டப்பட வேண்டியவர் ஒருவர் இருக்கிறார். அவர் எடிட்டர் கோலா பாஸ்கர். அவர் ஒருவரால்தான் படம் கொஞ்சமாவது தப்பித்தது என்று சொல்லலாம். அடுத்த நிலையில் இருப்பவர் படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்.. சென்னையைவிட கிராமத்து வாழ்க்கையைக் காட்டுகையில் ஜொலிக்கிறது கேமிரா.


நடிகர்களில் மாமாவாக நடித்திருக்கும் ரவி மரியாதான் முதலிடம். கொஞ்சமாவது ரசிக்க வைக்கிறது அவரது நடிப்பு. சட்டை போடாமல் நடக்க வைத்து, தாவ வைத்து, குதிக்க வைத்து, ஓட வைத்து, அலம்ப வைத்து, சலம்ப வைத்து.. இன்னும் என்னென்னமோ வைத்தெல்லாம் பார்த்துவிட்டார்.. மனதை ஒட்டாத கதையினாலும், காட்சிகளினாலும் அந்த நான்கு பேரின் நடிப்பு விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.

உண்மையாகவே ஆதிக்கச் சாதி, காலனி மக்கள் பிரச்சினையைத்தான் கொடுக்கப் போகிறோம் என்று முடிவு செய்து கதையை மாற்றம் செய்திருந்தாலாவது ஒரு 'மாத்தி யோசி'த்த கதை என்று சொல்லியிருக்கலாம். பாதியிலேயே அந்தக் கதையில் இருந்து ஒரே தாவாக தவ்விவிட்டு கடைசிக் காட்சியில் மட்டும், "நாங்களும் உங்களை மாதிரிதானடா.. உங்களை மாதிரியே சாப்பிடுறோம்.. உங்களை மாதிரியே சிரிக்குறோம்.. அழுகுறோம்...!" என்று வசனம் பேசினால் எப்படி..?

சென்னையின் தாதாக்களின் சக்தியைக் காட்டுவதாக நினைத்து போலீஸ் துறையை எந்த அளவுக்கு கேவலமாக்க வேண்டுமோ அந்த அளவுக்கு ஆக்கிவிட்டார்கள். அதிலும் இந்தத் தாதா தனது தம்பியை இன்ஸ்பெக்டர் கடத்தியதற்குப் பதிலடியாக இன்ஸ்பெக்டர் மனைவியைக் கடத்திவந்து தன் வீட்டில் கட்டிவைத்துவிட்டு அவள் கண் முன்பாகவே தன் மனைவியுடன் சல்லாபத்தில் ஈடுபடுவாராம்.. கொடுமை இல்லையா..?

இன்னொரு இடத்துல 'மாத்தி யோசி' டீம் பணத்துக்காக கடத்தின பெண்ணோட அம்மா, "எனக்குப் பணம்தாண்டா முக்கியம்.. பொண்ணு முக்கியமில்லை. பிள்ளை போனா இன்னொரு பிள்ளைய பெத்துக்கலாம்.. பணம் சம்பாதிக்கிறதுதான் கஷ்டம்"னு சொல்லிட்டு அசால்ட்டா போறதை பார்த்தா இவங்களோட 'மாத்தி யோசி'ப்பு எந்த அளவுக்கு இருக்குன்னு புரிஞ்சுக்க முடியுது..!

ஆனாலும், சிற்சில இடங்களில் மட்டுமே 'மாத்தி யோசி'த்திருக்கிறார்கள். ஆனால் அந்த இடங்கள் வெறும் குறியிடூகளாக இருந்து தொலைந்ததானால், கதைக்கு எந்தவிதமான உதவியையும் அவைகள் தராமல் போக அதுவும் வீணானதுதான் மிச்சம்.

படத்தில் ஐந்து நிமிடங்களுக்கொரு முறை வரும் 'மச்சான் மாத்தி யோசி..' 'மச்சான் மாத்தி யோசி..' பாட்டை இயக்குநரும், அவர்தம் குழுவினரும் படத் தயாரிப்பின்போது தினம்தோறும் கேட்டிருந்தாலே உருப்படியாக எதையாவது மாத்தி யோசித்திருப்பார்கள்..

நல்ல கதைக்களம் ஒன்று கையில் இருந்தும், குரங்கு கையில் சிக்கிய பூமாலையாகிவிட்டது இந்த மாத்தி யோசி.

ம்ஹும்.. போறவங்க போய்க்கலாம்..

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com

இசைஞானி இளையராஜாவின் இன்னொரு முகம்..!

08-03-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சிற்சில சமயங்களில் வலையுலகத்திற்கு மிகத் தேவையான கட்டுரைகள் பரவலாக பலரும் அறிவதற்கான வழிமுறைகளைத் தொட இயலாமல் நம் கண் முன் வராமல் போய் விடுகிறது.

ஆனால் அதில் சொல்லப்பட்டிருக்கும் நிஜமான விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளாமல் மறுபடியும், மறுபடியும் அதனுடன் முரண்பட்டே பேசி வருகிறோம்.


தற்போது இசைஞானி இளையராஜாவின் இசைப் படைப்புகளின் ராயல்டியை வாங்கியிருக்கும் சிங்கப்பூர் அகி மியூஸிக் நிறுவனத்தின் தலைவர் அகிலன், தன்னுடைய வாழ்க்கையில் இளையராஜாவின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருந்தது என்பதையும், இப்போது இளையராஜாவின் இசைப்படைப்புகளின் ராயல்டி தனக்கு எப்படி கிடைத்தது என்பதையும் இந்தக் கட்டுரையில் சுவைபட சொல்லியுள்ளார். படித்துவிட்டு மறக்காமல் அவருக்கு பின்னூட்டமிட்டு வாழ்த்திவிடுங்கள்..!

இசைஞானி இளையராஜாவின் இன்னொரு முகம்