பலூன் - சினிமா விமர்சனம்

30-12-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

70 MM Entertainment நிறுவனத்தின் சார்பில் கந்தசாமி நந்தகுமார். டி.என்.அருண் பாலாஜி. திலீப் சுப்பராயன் மூவரும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டுள்ளார்.
படத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் மூவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, கார்த்திக் யோகி, சுப்பு பஞ்சு, நாகிநீடு, ரிஷி, மோனிகா, ராமச்சந்திரன், ஜாய் மேத்யூஸ், ராஜ் தருண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சரவணன் ராமசாமி, இசை – யுவன் சங்கர் ராஜா, படத் தொகுப்பு – ரூபன், பாடல்கள் – அருண்ராஜா காமராஜ், சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், மக்கள் தொடர்பு – டிஒன், சுரேஷ் சந்திரா, தயாரிப்பு – கந்தசாமி நந்தகுமார், டி.என்.அருண் பாலாஜி, திலீப் சுப்பராயன், எழுத்து, இயக்கம் – சினிஷ்.

இந்த 2017-ம் ஆண்டின் கடைசி பேய்ப் படம் இதுதான்..!
கொல்லப்பட்ட நபர்களின் ஆவி, பிறிதோர் உயிர்களின் உடலில் ஏறி தங்களை கொலை செய்தவர்களை பழி வாங்கும் அதே கதைதான் இந்த ‘பலூனிலும்’ வந்திருக்கிறது.
சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் ஜெய்க்கு உடனடியாக ஒரு திகில், மர்மம் கலந்த கதையை உருவாக்க வேண்டிய கட்டாயம்.
அப்போது முகநூலில் ஊட்டியில் இருக்கும் ஒரு மர்ம வீடு பற்றிய செய்தியைப் படிக்கிறார். அந்த வீடு பற்றிய சர்ச்சையான செய்திகள் ஜெய்யைக் கவர்ந்திழுக்கிறது. உடனேயே ஊட்டிக்குச் சென்று அந்த வீடு பற்றிய செய்தியை தெரிந்து, அதையே கதையாக்கலாம் என்கிற முடிவுக்கு வருகிறார்.
இதற்காக தனது மனைவி அஞ்சலி, அண்ணன் மகனான பப்பு, துணை இயக்குநர் நண்பர்களான யோகிபாபு, கார்த்திக் யோகி இவர்களோடு ஊட்டிக்கு வருகிறார்.
அந்த மர்ம வீடு பற்றிய பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறார். ஆனால் பாதிதான் தெரிகிறது. இன்னும் விசாரிக்க வேண்டு்ம் என்று நினைத்திருக்கும்போது அந்த வீட்டில் பாதிக்கப்பட்டு இறந்து போன ஒரு குழந்தை பேயால், அந்த வீட்டில் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன.
தங்களைத் தவிர வேறு யாரோ அந்த வீட்டில் இருக்கிறார்கள் என்பதை ஜெய்யும், அஞ்சலியும் உணர்கிறார்கள். ஒளிந்து நின்று வேடிக்கை காட்டியதும், அலற விட்டதும்போதும் என்று நினைத்த அந்த குழந்தை பேய், திடீரென்று பப்புவின் உடலில் ஏறிக் கொள்கிறது.
இப்போது வாலண்டியராக அங்கே வரும் சர்ச் பாதர் அந்த குழந்தை பேயின் பூர்வாசிரம கதையைச் சொல்லி திகிலூட்டுகிறார். அந்தப் பேய்க்கும் ஜெய்க்கும் இருக்கும் தொடர்பின் காரணமாகத்தான் அது பப்புவைப் பிடித்திருப்பதாகவும் சொல்கிறார் பாதர்.
30 வருடங்களுக்கு முன்பு இப்போது ஜெய் போலவே இருக்கும் பலூன் விற்கும் இன்னொரு ஜெய் அதே ஊட்டியில் வசித்திருக்கிறார்.  அதே ஊரில் வசிக்கும் ஜனனி ஐயருக்கு அவர் மீது தீவிரமான காதல். அந்தக் காதலை உடைக்க நினைக்கும் ஜனனியின் அப்பா, ஊர் பெரிய மனிதரான நாகிநீடுவிடம் வந்து உதவி கேட்கிறார்.
அப்போதைய சட்டமன்றத் தேர்தலில் தனக்கு எம்.எல்.ஏ. சீட் இல்லை என்று தலைமை சொல்லியிருப்பதால் கோபத்தில் இருக்கும் நாகிநீடு இந்தப் பிரச்சினையை மதப் பிரச்சினையாக மாற்றி, அதில் குளிர் காய்ந்து எம்.எல்.ஏ. சீட்டை பெறலாம் என்று திட்டம் போடுகிறார்.
இதன்படி ஜனனியை தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புரளியைக் கிளப்புகிறார்கள் நாகிநீடுவின் ஆட்கள். தொடர்ந்து ஜெய்யின் வீட்டுக்குள் நுழைந்து அவரை உயிரோடு எரிக்கிறார்கள். ஜெய்யின் வளர்ப்பு குழந்தையையும் கிணற்றில் தள்ளி கொலை செய்திருக்கிறார்கள்.
இ்ப்போது இந்தக் கதையைக் கேட்டு ஜெர்க்காகிப் போயிருக்கும் ஜெய்க்கு தான்தான் அந்த பலூன் விற்ற ஜெய்யின் அடுத்த பிறவி என்பது புரிகிறது. இதற்கடுத்த அதிர்ச்சியாக அஞ்சலியை ஜனனியின் பேய் பிடித்தாட்டுகிறது. பலூன் விற்ற ஜெய்யை, கண்ணில் காட்டினால்தான் தாங்கள் போவோம் என்று பிடிவாதம் பிடிக்கின்றன இரண்டு பேய்களும்.
கடைசியில் பேய்கள் பழி வாங்கியதா… அஞ்சலி மற்றும் பப்புவின் உடலில் இருந்து வெளியேறியதா என்பதுதான் இரண்டாம் பாதியில் இருக்கும் திரைக்கதை.
பல ஆங்கிலப் படங்களில் இருந்து இந்தப் படம் தழுவலாக உருவாக்கப்பட்டிருப்பதாக படத்தின்  இயக்குநர் சினிஷ் மிக நேர்மையாக டைட்டிலில் அந்தந்த படங்களின் பெயரோடு போட்டிருக்கிறார். இதற்காக இவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆனாலும் இந்த ‘பலூன்’ படத்தின் அதிகப்படியான காட்சிகளும், திரைக்கதையும் ‘IT’ என்ற ஆங்கிலப் படத்தில் இருந்து சுடப்பட்டவைதான் என்று ஆங்கிலப் படங்களின் ரசிகர்கள் சொல்கிறா்கள்.
முதல் பாதி மிக வேகமாகவும், விறுவிறுப்பாகவும் ஜெட் வேகத்தில் பறக்கிறது. கூடவே சஸ்பென்ஸ், திரில்லருடன் பயத்தையும் கூட்டும் அளவுக்கு இருக்கிறது. போதாக்குறைக்கு யோகிபாபுவின் கவுண்ட்டர் அட்டாக் காமெடியும் கை கொடுக்க நேரம் போவதே தெரியவில்லை.
ஆனால் இரண்டாம் பாதியில் பார்த்து, பார்த்து சலித்துப் போன திரைக்கதையில் எப்படியும் பேய் கொலை செய்யத்தானே போகிறது என்கிற எதிர்பார்ப்புடனேயே படம் அமைந்திருப்பதால் சப்பென்றாகிவிட்டது. அதோடு பலூன் ஜெய் சம்பந்தப்பட்ட கதையில் உயிர்ப்பு இல்லாமல் இருப்பதால் பெரிதாக மனதைத் தொடவில்லை.
ஆனால் அரசியல்வாதி நாகிநீடு இந்தக் காதல் பிரச்சினையை மதம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக்கி அரசியல் செய்ய முனையும்போது, கொஞ்சம் பரபரப்பைக் கூட்டுகிறது.
ஜெய் காதல் காட்சிகளில் மட்டும் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் பயமுறுத்தப்படும் காட்சிகளில்கூட அப்படியேதான் இருக்கிறார் என்பது நமக்கு சோகமான விஷயம். கிளைமாக்ஸ் காட்சிகளில் தெறி ஸ்டைலில் இரும்புக் கம்பியை தோளில் சுமந்து கொண்டு வந்து வன்முறை வெறியாட்டம் போடும் காட்சியிலும், பலூன் விற்ற ஜெய்யாகவும் இடையிடையே மாறி மாறி வரும் காட்சிகளில் இயக்கம் சூப்பர்ப்..!
ஜெய்க்கு வெறுமனே வசனம் பேசும் காட்சிகள் மட்டுமேதான் ஓகே.. அழுகையுடனும், சோகக் காட்சிகளையும் அவரால் உணர்வுப்பூர்வமாக திரையில் கொண்டு வர முடியவில்லை. சரி. விடுங்க. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்..!
ஜாக்குலினாக நடித்திருக்கும் அஞ்சலி ரொமான்ஸ் காட்சிகளில் கொஞ்சம் பிடிக்க வைத்திருக்கிறார். பேய் பிடித்த நிலையில் ஜனனியின் ஆசையை வெளிக்காட்டும் காட்சிகளில் பயமுறுத்தியிருக்கிறார். அஞ்சலியின் அதட்டல் வாய்ஸும், ஜெய்யின் கரகர வாய்ஸும் ரொம்பவே மேட்ச்சிங்காகத்தான் இருக்கிறது..!
ஜனனி ஐயருக்கு நடிப்புக்குண்டான பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும் இன்னொரு ஹீரோயினாக இருக்கிறார். யோகிபாபுவும், கார்த்திக் யோகியும்தான் படத்தின் முற்பாதியை தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். அதிலும் யோகிபாபுவின் தொடர்ச்சியான கவுண்ட்டர் டயலாக்குகள் சிரிப்பை வரவழைக்கவில்லையென்றாலும் படத்தை போரடிக்காமல் ரசிக்க வைத்திருக்கிறது.
இவருக்கும் பப்புவுக்கும் இடையில் நடக்கும் சொற்போர் செமத்தியான ரகளை.  பப்புவாக நடித்திருக்கும் ரிஷி அலட்சியமான கேள்விகளாலும், குழந்தைத்தனமான பேச்சினாலும் கவர்ந்திழுக்கிறார்.
காலாவதியாகிப் போன கிணற்றில் இருந்து பலூன் பறந்து வருவது.. பொம்மையின் தலை திரும்புவது.. கதவுகள் மூடுவது.. கிரீச்சென்ற சப்தத்துடன் ஜன்னல்கள் மூடுவது.. நிழல் மட்டுமே தெரியும் அளவுக்கு பேய்கள் ஓடுவது.. கண் வெளிர் நிறத்துடன் இருக்க பேய்கள் கண்களுக்குத் தெரிவது.. கண்ணாடியில் மட்டுமே பேய் தெரிவது.. கட்டிலைத் தூக்கி நிறுத்துவது.. தூக்கியடிச்சிருவேன் பாத்துக்க என்பதுபோல அனைவரையும் தூக்கி வீசுவது.. கிறித்துவ சிலுவைக்கு மட்டுமே பேய்கள் கட்டுப்படுவது..  என்று காலம்காலமான பேய்ப் படங்களின் அடையாளங்களை இந்தப் படமும் தனக்குள் கொண்டுள்ளது.
என்றாலும், ஒரு திகிலையும், விறுவிறுப்பையும் கொண்டு வந்திருப்பதற்கு பின்னணி இசையமைத்திருக்கும் யுவன் சங்கர் ராஜா பெரிதும் உதவியிருக்கிறார். ஒரு டூயட் பாடலுக்கு இசையமைத்த கையோடு படம் முழுக்க யுவனின் மிரட்டல் இசைதான் படத்தின் நடிகர், நடிகையர் கொடுக்காத ஒரு டெம்போவை கொடுத்திருக்கிறது.
ஆர்.சரவணனின் ஒளிப்பதிவும் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம். பயமுறுத்தலுக்கு கேமிராவின் பயணிப்பும் ஒரு காரணியாகக் கிடைத்திருக்கிறது. பாடல் காட்சிகளைவிடவும் பேய்களின் அட்டூழிய காட்சிகளை அழகாக, பயமுறுத்துவது போலவே படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இதற்கு இன்னொரு பக்கம் படத் தொகுப்பாளர் ரூபனின் கத்தரி பணியும் உதவி செய்திருக்கிறது.
பப்புவை பேய் பிடித்தவுடன் அவன் செய்யும் அதகளத்துடன் பாதருடன் சேர்ந்து செய்யும் போராட்டக் காட்சிகளும் மிரட்டல். கிளைமாக்ஸில் ஜெய்யின் இரண்டுவித அடையாளங்களுடன் பழி வாங்கல் காட்சிகள் இருப்பதையும் புரிவதை போல தொகுத்தளித்திருக்கிறார் தொகுப்பாளர் ரூபன்.
கிளைமாக்ஸில் ராம்ஸின் பின்னணியில் வரும் டிவிஸ்ட்டும், அதைத் தொடர்ந்த இன்னொரு டிவிஸ்ட்டுமாக படத்தை பார்க்க வைத்தாலும், இடைவேளைக்கு பின்பு படம் ஆங்காங்கே தொய்வடைந்துதான் போகிறது.
இந்த பலூன் உடையவில்லை. அதே சமயம் பறக்கவும் இல்லை..!

களவாடிய பொழுதுகள் - சினிமா விமர்சனம்

30-12-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஐங்கரன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக கே.கருணாமூர்த்தி, சி.அருண்பாண்டியன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
இதில் பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், பூமிகா மூவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இன்பநிலா என்னும் புதுமுகமும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இசை – பரத்வாஜ், பாடல்கள் – வைரமுத்து, படத் தொகுப்பு – பீ.லெனின், சி.சு.பிரேம், கலை இயக்கம் – சி.கதிர், ஒளிப்பதிவு, எழுத்து, இயக்கம் – தங்கர்பச்சான்.
‘அழகி’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, ‘சொல்ல மறந்த கதை’ போன்ற அற்புதமான திரைப்படங்களை தமிழுக்கு தந்திருக்கும் இயக்குநர் தங்கர்பச்சானின், அடுத்த மரியாதைக்குரிய, பெருமைக்குரிய படைப்புதான் இந்த ‘களவாடிய பொழுதுகள்’.
இத்திரைப்படம் கடந்த 2009-ம் ஆண்டு துவக்கப்பட்டு 2010-ம் ஆண்டு தயாரித்து முடிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களினால் தாமதமாகி, இப்போதுதான் திரைக்கு வந்திருக்கிறது.

இயக்குநர் தங்கர்பச்சானின் இயக்கத்தில் ஏற்கெனவே வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற ‘அழகி’ படம் போலவே இதுவும் காதலை மையப்படுத்திய கதைதான்.
இன்னும் சொல்லப் போனால் ‘அழகி’ படத்திலிருந்து தலைகீழ் மாற்றம் உள்ள கேரக்டர்களைக் கொண்ட படம் இது. ‘அழகி’யில் ஏழை காதலி.. பணக்கார காதலன் என்றிருக்கும். இத்திரைப்படத்தில் காதலி பணக்காரி; காதலன் ஏழை. அவ்வளவுதான்..!
தங்கர்பச்சான் எழுதிய ‘சருகுகள்’ என்னும் சிறுகதையின் திரை வடிவம்தான் இது..!
கார் டிரைவரான பிரபுதேவா ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கு ஒரு சவாரியை அழைத்துச் சென்றவர் திரும்பி வருகையில் சாலையில் ஒரு விபத்து நடந்திருப்பதை பார்க்கிறார். அந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்திருக்கிறார் பெரும் தொழிலதிபரான பிரகாஷ் ராஜ். யாருமே காப்பாற்ற முனையாத அந்த நேரத்தில் பிரபுதேவா, பிரகாஷ்ராஜை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்து காப்பாற்றுகிறார்.
மறுநாள்வரையிலும் மருத்துவமனையில் கூடவே இருந்து பிரகாஷ்ராஜை பார்த்துக் கொள்கிறார் பிரபுதேவா. விஷயம் கேள்விப்பட்டு பிரகாஷ்ராஜின் மனைவி பூமிகா பதறியடித்து மருத்துவமனைக்கு ஓடி வருகிறார். அவரைப் பார்த்தவுடன் பெரும் அதிர்ச்சியாகும் பிரபுதேவா, சொல்லாமல் கொள்ளாமல் அங்கேயிருந்து கிளம்பி தனது சொந்த ஊரான ஈரோட்டிற்கு திரும்புகிறார்.
சவாரியில் கிடைத்த பணத்தையெல்லாம் பிரகாஷ்ராஜுக்கு செலவழித்துவிட்டு கையில் காசில்லாமல் ஊர் திரும்பிய பிரபுதேவாவை அவரது மனைவி இன்பநிலா திட்டித் தீர்க்கிறார்.
அங்கே பிரகாஷ்ராஜ் பூரண நலம் பெற்று வீடு திரும்பியவர், தன்னை சரியான சமயத்தில் மருத்துவமனையில் சேர்ப்பித்து உயிரைக் காப்பாற்றிய பிரபுதேவாவை பார்க்க விரும்புகிறார். தனது மனைவி பூமிகாவிடம் சொல்லி பிரபுதேவாவை சென்னைக்கு வரச் சொல்கிறார். ஆனால் பிரபுதேவா வர மறுக்கிறார். ஏன் என்று காரணம் கேட்கையில் அவர் தன்னுடைய பழைய காதலர் என்பது பூமிகாவுக்கு தெரிய வர அவரும் அதிர்ச்சியாகிறார்.
கல்லூரி காலங்களில் பிரபுதேவாவும், பூமிகாவும் காதலிக்கிறார்கள். திருமணம் செய்யவும் முடிவெடுத்து காத்திருக்கிறார்கள். ஆனால் பெரும் பணக்காரரான பூமிகாவின் அப்பா சதித் திட்டம் தீட்டி பிரபுதேவா மீது கஞ்சா புகாரை பதிய வைத்து அவரை ஜெயிலுக்கு அனுப்பி தண்டனையும் வாங்கித் தருகிறார்.
தண்டனை காலம் முடிந்து வெளியில் வரும் பிரபுதேவாவுக்கு பூமிகாவுக்கு திருமணமான விஷயம் தெரிய வர.. அதிர்ச்சியானவர் வேறு வழியில்லாமல் இன்பநிலாவை கல்யாணம் செய்து செட்டிலாகியிருக்கிறார்.
பூமிகாவோ தனது தந்தை செய்த சதிச் செயல் பற்றித் தனக்குத் தெரியாது என்றும், தனது தந்தையின் தொழிலில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக அதற்கு பண உதவி செய்தமைக்காக கட்டாயத்தினால் பிரகாஷ்ராஜை கல்யாணம் செய்ய நேரிட்டதாகவும் சொல்கிறார்.
பூமிகா, பிரபுதேவாவை போனில் அழைத்தும் அவர் வராமல் போகவே… நேரில் அழைக்க ஈரோட்டுக்கே வருகிறார் பூமிகா. பிரபுதேவாவின் மனைவியிடம் லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்துவிட்டு, அவரை ஏதாவது பிஸினஸ் செய்து பிழைத்துக் கொள்ளச் சொல்லும்படி சொல்லிவிட்டுக் கிளம்புகிறார்.
பிரபுதேவா மனம் கேட்காமல் பூமிகாவை பின் தொடர்ந்து வர அவரை எமோஷனல் பிளாக்மெயில் செய்து சென்னைக்கு அழைத்து வருகிறார் பூமிகா. இங்கேயும் பூமிகா பல உதவிகளைத் தான் செய்வதாகச் சொல்லியும் தான் அவளது அருகில் இருக்க விரும்பவில்லை என்று சொல்லி கிளம்பிப் போகிறார் பிரபுதேவா.
இன்னொரு பக்கம் பிரகாஷ்ராஜ் பிரபுதேவாவை பார்த்தே தீர வேண்டும் என்று விருப்பத்தில் இருக்கிறார். பின்பு வேறொரு சந்தர்ப்பத்தில் வேண்டாவெறுப்பாக சென்னைக்கு வரும் பிரபுதேவா, பிரகாஷ்ராஜை சந்திக்கிறார். அந்தச் சந்திப்பின் முடிவாக தான் சென்னையில் இருந்து பிரகாஷ்ராஜின் தொழிலில் உதவி செய்வதாக ஒப்புக் கொள்கிறார் பிரபுதேவா.
பிரகாஷ்ராஜின் சக்கரை ஆலையின் நிர்வாகத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் பிரபுதேவா அதனை திறம்பட நடத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். அதே சமயம் பூமிகாவும் அவரும் சந்திக்கும் சமயங்கள் அதிகரித்துக் கொண்டேயிருக்க… அது அவர்களது நட்பை குலைக்கிறது. காதலையும் வளர்க்கிறது.
இடையில் பிரபுதேவாவின் மனைவி கர்ப்பமடைய.. இதைக் கேட்டவுடன் இதுவரையில் குழந்தையில்லையே என்கிற ஏக்கத்தில் இருக்கும் பூமிகாவுக்கு பிரபுதேவாவின் மீது இனம் புரியாத கோபம் ஏற்படுகிறது. இது தங்களுக்குள் முறைகேடான ஒரு தொடர்பை ஏற்படுத்திவிடுமோ என்கிற பயம் பிரபுதேவாவுக்கு ஏற்படுகிறது.
இதனை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சட்டென்று ஒரு முடிவெடுத்து ஊரைவிட்டுக் கிளம்புகிறார்.. இன்னொரு பக்கம் பூமிகாவும் அவரைக் காணாமல் தேடுகிறார். பிரகாஷ்ராஜும் பிரபுதேவாவை தேடுகிறார். முடிவு என்னாகிறது என்பதுதான் இந்த ‘களவாடிய பொழுதுகள்’ படத்தின் சுவையான திரைக்கதை.
காதலித்தவர்களுக்குத்தான் தெரியும் அந்த வலி என்பார்கள். அதுபோல காதலித்தவர்கள், காதலித்துக் கொண்டிருப்பவர்கள், காதலிக்கப்பட்டவர்கள் இத்திரைப்படத்தைப் பார்த்தால் நெக்குருகிப் போவார்கள் என்பது மட்டும் உறுதி.
காதலர்கள் வாழ்க்கையில் சேர முடியாமல் போய் பிரிந்து சென்று பின்பு மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு வந்தால் என்ன நடக்கும்.. அவர்கள் மனதுக்குள் நடக்கும் போராட்டம் எத்தகையதாக இருக்கும் என்பதை அவர்கள் மட்டுமே உணர முடியும். அப்படியொரு காதல் போராட்டத்தைத்தான் இந்தப் படத்தில் காதலனான பொற்செழியனும், காதலியான ஜெயந்தியும் படுகிறார்கள்.
பிரிந்தவர் கூடினால் பேச்சு எழாது என்பார்கள். ஆனால் துக்கமும், கோபமும், வலியும் ஒருங்கே சேர்ந்து அந்தக் காதலர்களை துன்புறுத்தும். அதுவரையிலான அவர்களது சந்தோஷ வாழ்க்கையில் ஒரு புயல் வீசி அவர்களைத் தடுமாற்றத்துக்குள்ளாக்கும். இந்தப் போராட்டத்தைத்தான் படத்தில் மிக யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் தங்கர்பச்சான்.
சிறுகதையைப் போலவே திரைப்படத்திற்கான திரைக்கதையையும் செதுக்கியிருப்பதால் படம் எந்த நிலையிலும் போரடிக்கவில்லை. மெதுவாகச் செல்கிறதே தவிர, அடுத்து என்ன என்கிற ஆவலையும், ஆசையும் தூண்டிவிட்டிருக்கிறது.
பொற்செழியன் என்னும் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் பிரபுதேவா. கல்லூரி காலத்தில் சிரித்த முகத்தோடு இருக்கும் காட்சிகள் சிலவைதான். அதிலும் ஆக்ரோஷமாக கேள்விகளை எழுப்பும் துடிப்பான இளைஞராகவும் தென்படுகிறார்.
இதன் பின்பு தனது பழைய காதலையும், காதலியையும் மறக்கவும் முடியாமல், மறைக்கவும் தெரியாமல் அல்லல்படும் அந்தக் காதலனின் மனத்துடிப்பை தன் நடிப்பில் அட்சரப்பிசகாமல் காட்டியிருக்கிறார் பிரபுதேவா.
தனது ஏழ்மையைச் சுட்டிக் காட்டி பேசும் மனைவியிடம் பதிலளிக்க முடியாமல் திணறுவதும், சராசரியான ஒரு கணவனால் பெரிதாக என்ன செய்துவிட முடியும் என்று தனது இயலாமையையும் வெளிப்படுத்தியிருக்கும் பிரபுதேவாவை உண்மையாக இந்த அளவுக்கு திறம்பட நடிக்க வைத்திருக்கும் தங்கர்பச்சானுக்கு ஒரு ‘ஜே’ போடலாம்..!
காதலியாகவும், மனைவியாகவும் இருதலைக்கொள்ளி எறும்பு போல தவிக்கும் கேரக்டரில் பூமிகா அற்புதமாக நடித்திருக்கிறார். இத்தகையை நடிப்புத் திறமையுள்ள நடிகையை தமிழ்ச் சினிமாவுலகம் சரிவர பயன்படுத்திக் கொள்ளாதது ஏன் என்றுதான் தெரியவில்லை.
காதலனுக்கு உதவ நினைப்பதும், பின்பு அவன் பக்கத்திலேயே குடி வந்ததும் அவனது நினைவுகளே தன்னை ஆக்கிரமிப்பதையும் தாங்கி முடியதவராக தடுமாற்ற வாழ்க்கையில் அடையாளம் தெரிவதுபோல நடித்திருக்கிறார் பூமிகா.
தன்னை எப்போதும் தாங்கிப் பிடிக்கும் கணவன் ஒரு பக்கம், தன்னை உயிருக்கு உயிராய் காதலித்த காதலன் இன்னொரு பக்கம்… என்று இரண்டு பேரையுமே விட்டுக் கொடு்க்க மனசில்லாமல் ஒருநிலைப்பாடில்லாமல் தத்தளிக்கும் மன விளையாட்டை பூமிகா நடித்துக் காண்பித்திருக்கிறார்.
தன்னால்தான் தனது காதலனின் வாழ்க்கை இந்த அளவுக்கு சீர்கெட்டுப் போனதே என்கிற குற்றவுணர்ச்சி வேறு பூமிகாவை வறுத்தியெடுக்க அவரால் ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை. தாய்மையும், பெண்மையும் கலந்த உருவமாக அவர் இருப்பதால் அவர் படும்பாடு இனிமேல் தப்பித் தவறிக்கூட காதலித்துவிடக் கூடாது என்று பெண்களுக்கு எச்சரிக்கையாக சொல்வது போலவே இருக்கிறது..!
ஜெண்டில்மென் என்பதற்கேற்ற கேரக்டர் ஸ்கெட்ச் பிரகாஷ்ராஜூக்கு. “லூஸாய்யா நீயி”, “உனக்கு என்னதாய்யா பிரச்சினை..” என்று பிரபுதேவாவிடம் சண்டைக்கு நின்று பின்பு அவரை அரவணைக்கிறார்.
முதல் நாளிலேயே தனது கம்பெனியை டேக் ஓவர் செய்யும் அளவுக்கு இருக்கும் பிரபுதேவாவின் பேச்சுத் திறமையை பாராட்டும் தன்மையான குணம் பிரகாஷ்ராஜுக்கு. நடிப்பில் ஒரு துளியைக்கூட அவர் குறைக்கவில்லை.
கிளைமாக்ஸில் அவருடைய பதற்றமான நடிப்பும், தனக்கு எல்லாம் தெரியும் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் சொல்லி, பூமிகாவை காப்பாற்றும் ஒரு நேர்மையான கணவன் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்திப் போகிறார் பிரகாஷ்ராஜ்.
பிரபுதேவாவின் மனைவியாக நடித்திருக்கும் இன்பநிலா இ்ன்னொரு பக்கம் விளாசித் தள்ளுகிறார். தனது குடும்பம் இருக்கும் சூழலை அடிக்கடி சொல்லிக் காட்டி பணத்தேவையை கணவனுக்கு அறிவுறுத்தும் சராசரி பெண்ணின் கேரக்டர் இவருக்கு.
கிளைமாக்ஸில் தனது மகளின் படிப்பு, மற்றும் குடும்பத்தின் அப்போதைய நிலைமை.. திரும்பிச் சென்று என்ன பாடுபட வேண்டும் என்றெல்லாம் கெஞ்சலாகச் சொல்லி அழகும் அவருடைய நிலைமை யாருக்கும் வரக் கூடாதுதான்.. மிக இயல்பாக நடித்திருக்கிறார் இன்பநிலா. வாழ்த்துகள். குழந்தை யாழினி இந்தக் காட்சியில் “நாம மறுபடியும் ஏழையாயிட்டோமாப்பா…” என்று பிஞ்சுக் குரலில் கேட்கும்விதம் அடிவயிற்றை ஒரு நிமிடம் புரட்டிவிடுகிறது..!
சத்யன் கேரக்டர் மீண்டும் படத்தில் வந்தவுடனேயே எப்படியும் அவர்தான் குட்டை உடைக்கப் போகிறார் என்பது தெள்ளத் தெளிவாகவே தெரிந்துவிட்டது.
படத்தின் திரைக்கதை வேகமில்லாமல் மெதுவாக ஊர்ந்து செல்வதுதான் படத்தின் பிரதான குறை. ஆனால் கத்தி மீது நடப்பது போன்ற கதை என்பதால் இதனை இப்படித்தான் சொல்ல முடியும்.
தங்கர்பச்சானே ஒளிப்பதிவு செய்திருந்தாலும் இன்னும் அழகான பிரேம்களில் படம் பிடித்திருக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது. பாடல் காட்சிகளையும், சில, பல பிரேம்களிலும் அவரது கண்கட்டுவித்தை தெரிகிறது என்றாலும் கலர் டோன் கண்ணை உறுத்துகிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.
பரத்வாஜின் இசையில் ‘சேரன் எங்கே’ பாடல் பட ரிலீஸுக்கு முன்பே ஹிட்டாகிவிட்டது. அந்தப் பாடல் காட்சியில் பிரபுதேவாவை கொஞ்சம் நடனமாட அனுமதித்திருக்கிறார் இயக்குநர். மற்றபடி நடனப் புயல் பிரபுதேவாவை இந்தப் படத்தில் பார்க்கவே முடியாத நிலைமை.
அறிவுமதியின் ‘அழகழகே’ பாடல் காட்சியும், ‘தயவு செய்து என்னைக் களவாடு’ பாடலும், காட்சிகளும் கவிதை வடிவில் அழகாக படமாக்கப்பட்டிருக்கின்றன.  கொஞ்சம், கொஞ்சமாக விட்டுவிட்டு ஒலித்த ‘தேடித் தேடிப் பார்க்கிறேன்’ பாடலும் ரசிக்க வைத்திருக்கிறது.
வெறும் காதல் மட்டுமில்லாமல் நாட்டின் மிக முக்கிய பிரச்சினையான அரசியல்வியாதிகளின் அட்டூழியம், லஞ்சம், ஊழல், ஊடகங்களின் கார்ப்பரேட் கலாச்சாரம், மதுபானக் கடை ஒழிப்பு, அரசுப் பள்ளிகளின் அலட்சியம் என்று பேச வேண்டிய பலவற்றையும் பேசியிருக்கிறார் இயக்குநர். இதற்கு மிகப் பொருத்தமான இடத்தில் சத்யராஜ் பெரியார் வேடத்தில் வந்து புத்திமதியும் சொல்லிவிட்டுப் போகிறார். இவைகள் இடைச்செருகல்தான் என்றாலும் அனைத்துமே நன்று..!
கிளைமாக்ஸில் பிரபுதேவா அப்படியொரு முடிவை எடுப்பதற்கு அந்த ஒரு நிமிட அத்துமீறல்தான் காரணம் என்பதை நாமாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதுபோல திரைக்கதை இருப்பதுதான், படத்தின் மிகப் பெரிய குறை. சாதாரண மக்களால் இதனை உணரவே முடியாது.
ஆனால், அது அருமையான முடிவு. அருகருகேயிருக்கும்போது எப்படியும் தங்களை மீறி எல்லை மீறிவிடுவோம் என்பதை உணர்ந்துதான் இனிமேல் இருவரும் சந்திக்கவே கூடாது என்பதாக பிரபுதேவா எடுக்கும் தீர்மானம்… அவரவர் வாழ்க்கையை சிறப்பாக வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு நேர்த்தியான கதையில், குழப்பமேயில்லாத திரைக்கதையில்.. சிறப்பான வசனங்களுடன், நேர்த்தியான நடிப்பில்.. அழுத்தமான இயக்கத்தில் சிறந்த படைப்பாக வெளிவந்திருக்கிறது இந்த ‘களவாடிய பொழுதுகள்’ திரைப்படம்.
நிச்சயமாக இத்திரைப்படம் நமது நேரத்தைக் களவாடாது. மாறாக நம் மனதை நிச்சயமாக களவாடும்..!
அவசியம் பாருங்கள்..!

சங்கு சக்கரம் - சினிமா விமர்சனம்

29-12-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய திரைப்படங்களை தயாரித்த லியோ விஷன் நிறுவனமும், கே.சதீஷின் சினிமாவாலா பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.
படத்தில் குழந்தை நட்சத்திரங்கள்தான் பிரதான பாத்திரங்களை ஏற்றுள்ளனர். மோனிகா, தீபா, ஜெனிபர், நிஷேஷ், தேஜோ, ஆதித்யா, அஜெஷ், ஆதர்ஷ், இவர்களுடன் ‘புன்னகைப் பூ’ கீதா, திலீப் சுப்பராயன், பிரதீப், ஜெர்மி ரோஸ்கி, ராக்கி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஜி.ரவிக்கண்ணன், இசை – ஷபிர், படத் தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி, சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், கலை இயக்கம் – எஸ்.ஜெயச்சந்திரன், தயாரிப்பு நிறுவனம் – லியோ விஷன், சினிமாவாலா பிக்சர்ஸ், தயாரிப்பாளர்கள் – வி.எஸ்.ராஜ்குமார், கே.சதீஷ், எழுத்து, இயக்கம் – மாரிசன்.
வருடக் கடைசியில் பேய்ப் பட வரிசையில் தனது வருகையை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இந்தச் ‘சங்கு சக்கரம்’ திரைப்படம்.

ஒரு தெருவில் வசிக்கும் சில பணக்கார பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடக்கூட இடமில்லாமல் தவிக்கிறார்கள். பஞ்சு மிட்டாய் விற்க வரும் ஒரு பெரியவர் ‘பக்கத்தில் இருக்கும் பெரிய பங்களாவில் யாருமே இ்ல்லை’ என்றும், ‘அங்கே போய் விளையாடினால் யாரும் கேட்கவே மாட்டார்கள்’ என்றும் ஆசையைத் தூண்டுகிறார்.
அந்த பங்களாவை ‘பேய் பங்களா’ என்றே அனைவரும் அழைக்கிறார்கள். இந்த விஷயம் அந்தப் பிள்ளைகளுக்குத் தெரியாது. அந்த பங்களாவை வாங்கியிருக்கும் ரியல் எஸ்டேட் புரோக்கர், அங்கேயிருக்கும் பேயை ஓட்டுவதற்காக மந்திரவாதியை வைத்து முயற்சி செய்து கொண்டேயிருக்கிறார்.. ஆனால் இன்னமும் முடியவில்லை.
அதே நேரம் அதே பகுதியில் வசிக்கும் ‘தமிழ்’ என்ற சின்னப் பையன் 500 கோடி சொத்துக்கு அதிபதி. பெற்றோர் இல்லாததால் இரண்டு நபர்களின் கார்டியனில் வாழ்ந்து வருகிறான். இந்தச் சின்ன வயதிலேயே நிறைய அறிவுப்பூர்வமான கேள்விகளையெல்லாம் கேட்கிறான்.
இவனை கொலை செய்துவிட்டு அந்த 500 கோடியை அபேஸ் செய்ய, அந்த இரண்டு கார்டியன்களும் திட்டம் தீட்டுகிறார்கள். இதற்காக இருவரும் ஜோடி சேர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில்தான் திப்பு சுல்தானின் வாலும், தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த முதல் பல்பும் அந்த பங்களாவில் இருப்பதாக ஒரு கார்டியன் உளறி வைக்க, இதனை சீரியஸாக எடுத்துக் கொண்ட தமிழ் அதைப் பார்ப்பதற்காகவே அந்த பங்களாவிற்குள் நுழைகிறான்.
அதே நேரம் தெருவில் விளையாடி வந்த 6 பிள்ளைகளும், தொந்தரவு இல்லாமல் விளையாடுவதற்காக அந்த பங்களாவிற்குள் நுழைகிறார்கள். இவர்கள் கூட்டணியில் சேர்க்காத ஏழை பையன் ஒருவனும் அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்கள் பின்னாலேயே பங்களாவுக்குள் வருகிறான்.
இந்தப் பையன்களை கடத்திச் செல்வதற்காக ஆகாயம் என்னும் பிரபல ரவுடியான திலீப் சுப்பராயனும், இவனுக்குத் தகவல் சொல்லி உதவிய பஞ்சு மிட்டாய் விற்ற பெரியவரும் அதே பங்களாவுக்குள் வருகிறார்கள்.
தமிழை கொலை செய்ய அந்த இரண்டு கார்டியன்களும் துப்பாக்கியுடன் பங்களாவிற்குள் வருகிறார்கள்.
இதே நேரம் அதே பங்களாவிற்கு தனது காதலியை ஏமாற்றி அழைத்து வருகிறான் ஒரு காதலன்.
இப்போது அதே பங்களாவில் ரொம்ப வருடங்களாக ஒரு தாய் பேயும், மகள் பேயும் குடித்தனம் நடத்தி வருகிறார்கள். அவர்களில் மகள் பேயை இந்தச் சிறார்கள் உசுப்பிவிட மகள் பேய் தன் வயதையொத்த அந்த சிறுவர், சிறுமியரின் விளையாட்டை ரசிப்பதற்காகவே அவர்கள் பின்னாலேயே அலைகிறது.
அதே நேரம் ஆகாயம் தமிழை கொலை செய்ய வந்த இரண்டு கார்டியன்களையும் தலையில் அடித்து வீழ்த்தி இருவரையும் கட்டிப் போட்டு வைக்கிறான்.
இந்த நேரத்தில் தாய் பேயையும் இவர்களே உசுப்பிவிட்டுவிட அது இவர்களை தங்களது வீட்டைவிட்டு வெளியேறும்படி விரட்டுகிறது. ஆனால் போவதற்கு வழி தெரியாமல் இவர்கள் அல்லல்படுகின்றனர்.
ஆகாயம், பெரியவரின் எதிர்ப்பையும் மீறி பிள்ளைகள் 8 பேரையும் பிடித்துக் கட்டிப் போட்டு வைக்கிறான்.
இந்த நேரத்தில் ரியல் எஸ்டேட் புரோக்கர் ஜப்பான் மற்றும் அமெரிக்க மாந்தரீகர்களை அழைத்துக் கொண்டு அங்கே வருகிறார். அவருடைய ஆஸ்தான தமிழகத்து மாந்தரீகரையும், தாய் பேய் அடித்து வீழ்த்திவிட அவர்கள் பங்களாவிற்கு வெளியில் நிற்கிறார்கள்.
இப்போது வெளிநாட்டு மாந்திரீகள் தாய் பேயையும், மகள் பேயையும் தங்களது சக்தியால் கட்டுப்படுத்தி ஒரு குடுவைக்குள் போட்டு அடைத்து வைக்கிறார்கள். அதே நேரம் ஆகாயம் பிள்ளைகளை கடத்திச் செல்ல நினைக்கிறான். தமிழை கொலை செய்துவிட்டு தப்பிக்க இரண்டு கார்டியன்களும் நினைக்கிறார்கள். பஞ்சு மிட்டாய் பெரியவர் எப்படியாவது பிள்ளைகளை காப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார். பிள்ளைகளோ எப்படியாவது இந்த பேய் பங்களாவிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இதில் யார் நினைத்தது நடந்தேறியது என்பதுதான் இந்தச் ‘சங்கு சக்கரம்’ படத்தின் சுவையான திரைக்கதை.
பேய்ப் படங்களுக்கே உரித்தான முறையில்தான் படமாக்கல் செய்திருக்கிறார் இயக்குநர் மாரிசன். பேய்களுக்குக் கொடுக்கப்படும் பில்டப்பும், தாய், மகள் இடையேயான பாசப் போராட்டமும், பேய்கள் கடைசியாக குழந்தைகளைக் காப்பாற்ற துடிப்பதுமான செண்டிமெண்ட் காட்சிகளையும் சரியான திரைக்கதையில் அமைத்திருக்கிறார்.
குழந்தைகள் யாரும் குறை சொல்ல முடியாதபடிக்கு நடித்திருக்கிறார்கள். படம் முழுவதுமே ஓடிக் கொண்டேயிருப்பதால் தனித்த நடிப்பு என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. இருந்தாலும் அந்த மகள் பேயாக நடித்தவரை மனதாரப் பாராட்டுகிறோம்.
தாயாக நடித்திருக்கும் ‘புன்னகைப் பூ’ கீதா மனிதர்களுக்கும், பேய்களுக்குமான வித்தியாசத்தை சொல்லிக் காட்டு்ம்போது தியேட்டரே அதிர்கிறது கை தட்டலில்.. உண்மைதான் பேய்களின் உலகத்தில் பொய், பொறாமை, களவு, திருட்டு எதுவுமே இல்லையே..!
இதேபோல் ‘தமிழ்’ கேட்கும் பல புத்திசாலித்தனமான கேள்விகள் நகைக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன. பள்ளிகளில் மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் வரக் கூடாது என்பதற்காகத்தான் யூனிபார்ம் என்றால் பள்ளிக்கு, பள்ளிக்கு யூனிபார்ம்கள் ஏன் வேறு, வேறாக இருக்கிறது என்கிறான் சிறுவன் தமிழ். சரியான கேள்விதானே..?
தமிழ் கடைசியாக “ரஜினி அங்கிள் எப்போ அரசியலுக்கு வருவார்..?” என்ற பேய்களிடம் கேட்க, அவைகள் தங்களுக்கே தெரியாது என்பதைபோல உதட்டை பிதுக்குவது உச்சபட்ச காமெடி.
குண்டான கார்டியன் கேரக்டரில் நடித்தவர் பயந்து கொண்டே நடிக்க இன்னொருவர் தமிழை கொலை செய்துவிட்டுத்தான் மறுவேலை என்பதை போல நடிப்பது சுவையான கேரக்டர் ஸ்கெட்ச். பஞ்சு மிட்டாய் விற்கும் பெரியவர் துப்பாக்கியை வைத்துக் கொண்டு மிரட்டி கொஞ்சம், கொஞ்சமாக டென்ஷனை கூட்டியிருக்கிறார்.
இதேபோல் தமிழ் மாந்திரீகர்களுக்கும், வெளிநாட்டு மாந்திரீகர்களுக்கும் இடையில் நடக்கும் போட்டியும் ரசனையானது. ஒலியெழுப்பும் கருவிகள் மாறி, மாறி போடும் சண்டை உக்கிரமாவதுவரையிலும் கொண்டு போயிருப்பது பார்க்கவும், கேட்கவும் சிறப்பு.
ஆகாயமாக நடித்திருக்கும் திலீப் சுப்பராயன் இனிமேல் சண்டை பயிற்சியாளர் வேலையை விட்டுவிட்டு நடிப்புத் தொழிலுக்கே வந்துவிடலாம். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். அடிக்கடி தனது திறமையைப் பற்றி தானே சொல்லிக் கொள்ளும்விதமாக அமைக்கப்பட்டிருக்கும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச் சின்னக் குழந்தைகளுக்கு நிச்சயமாக பிடிக்கும்.
காதைக் கிழிக்காத பின்னணி இசையில் பயமுறுத்தும் கிராபிக்ஸ் காட்சிகளோடு பேய்களின் அட்டகாசத்தை படமாக்கியிருக்கும் விதத்தில் இந்தப் படக் குழுவினர் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.
ஒளிப்பதிவாளர் ஜி.ரவிக்கண்ணனின் பணி மெச்சத் தகுந்தது. நிறைய கிராபிக்ஸ் பணிகளும், தொழில் நுட்பப் பணிகளும் செய்திருக்கும் படத்தில் மிக நுணுக்கமாக தவறுகளே கண்ணுக்குத் தெரியாத வகையில் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்.
பேய்கள் பறந்து செல்லும் காட்சி, அரூபமாக பின் தொடர்ந்து வரும் காட்சி, சண்டை காட்சிகள் என்று அனைத்திலும் ஒளிப்பதிவாளரின் திறமை திரையில் தெரிகிறது. இதேபோல் கலை இயக்குநர் எஸ்.ஜெயச்சந்திரனின் பங்களிப்பும் படத்தில் பெரியது. அவருக்கும் நமது பாராட்டுக்கள்.
விஜய் வேலுக்குட்டி தனது படத் தொகுப்பினால் படத்தை தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். பல காட்சிகளின் கட் டூ கட் காட்சிகளாக வடிவமைத்திருப்பதால் கொஞ்சமும் பிசிறு தட்டாமலும், அடுத்தக் காட்சியை யூகிக்க முடியாதவண்ணமும் திரைக்கதைக்கு பெரிதும் உதவியிருக்கிறார் படத் தொகுப்பாளர்.
குழந்தைகளுக்காக குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் பேய் படத்தில் ஒரு திருஷ்டி பொட்டாக அந்தக் காதலர்களின் வருகையை இணைத்திருக்கிறார்கள். அப்போது காதலர்கள் பேசும்பேச்சு குழந்தைகளுக்கானது இல்லை என்பதை இங்கே அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறோம். வசனங்களை மட்டும் மாற்றியமைத்திருக்கலாம்.
இதேபோல் பஞ்சு மிட்டாய் விற்கும் பெரியவரின் கேரக்டர் ஸ்கெட்ச்சில் கடைசியில் சொல்லும் டிவிஸ்ட் எதிர்பாராததுதான் என்றாலும் தேவையில்லாதது.. அப்படியே வி்ட்டிருந்தால்கூட நன்றாகத்தான் இருந்திருக்கும்..!
பேய்ப் படங்களில் லாஜிக் பார்ப்பது பேய்களை நம்புவது போலத்தான் என்பதால் அதையெல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு, குழந்தைகளோடு பார்த்து குதூகலிப்பதற்கு ஏற்ற திரைப்படமாக இந்த ‘சங்கு சக்கரம்’ வந்திருக்கிறது.
குழந்தைகளோடு தியேட்டருக்கு சென்று கொண்டாடுங்கள்..!

உள்குத்து - சினிமா விமர்சனம்

29-12-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை P.K.Film Factory நிறுவனத்தின் சார்பில் ஜி.விட்டல்குமார் மற்றும் ஜி.சுபாஷினி தேவி இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
இந்தப் படத்தில் தினேஷ் நாயகனாகவும், நந்திதா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் பால சரவணன், ஸ்ரீமன், ஷரத் லோகிதஸ்வா, திலீப் சுப்பராயன், ஜான் விஜய், சாயாசிங், முத்துராமன், செஃப் தாமோதரன், மிப்பு சாமி, கதிர், ஃப்ரின்ஸ், ஜெயவாணி மற்றும் மூணார் ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – பி.கே.வர்மா, படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், கலை இயக்கம் – விதேஷ், தயாரிப்பு – ஜி விட்டல்குமார், ஜி.சுபாஷினி தேவி, எழுத்து, இயக்கம் – கார்த்திக் ராஜூ.

கந்து வட்டி பிரச்சினை இப்போது தமிழகத்தில் தறிகெட்டு ஓடிக் கொண்டிருப்பதால் இந்த நேரத்திற்காக காத்திருந்து படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். ஏனெனில் இத்திரைப்படம் 2015-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு பின்புதான் இதற்கு விமோசனம் கிடைத்திருக்கிறது.
கன்னியாகுமரி அருகேயிருக்கும் முட்டம் என்கிற கடலோர ஊரைச் சுற்றி நடக்கிறது கதை.
‘சுறா சங்கர்’ என்னும் பால சரவணன் மீனவக் குப்பத்தைச் சேர்ந்தவர். தன்னுடன் இரண்டு நண்பர்களை சேர்த்துக் கொண்டு, மீன் மார்க்கெட்டில் மீன்களை வெட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்து வருகிறார்.
இவரிடத்தில் ஒரு நாள் ஊர், பேர் தெரியாத நிலையில் சிக்குகிறார் தினேஷ். தன்னுடைய பெயர் ராஜா என்றும் தான் எம்.பி.ஏ. படித்திருப்பதாகவும், தன்னுடைய தந்தை தன் தாய் இறந்தவுடன் இன்னொரு திருமணம் செய்து கொண்டதாகவும், அது பிடிக்காமல் தான் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் சொல்கிறார்.
தினேஷ் மீது பாவப்படும் பால சரவணன் அவரை தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார். பால சரவணனின் தங்கையான ‘கடலரசி’ என்னும் நந்திதா துணிக்கடையி்ல் வேலை பார்த்து வருகிறார். வேண்டாவெறுப்பாக தினேஷை அவர்களது வீட்டிலேயே தங்க ஒப்புக் கொள்கிறார் நந்திதா.
தான் வேலை செய்யும் அதே மீன் மார்க்கெட்டில் தனது வேலையை தினேஷுக்கு சொல்லிக் கொடுத்து அவரையும் வேலையாள் ஆக்குகிறார் பால சரவணன்.
திடீரென்று ஒரு நாள் பக்கத்து குப்பத்தில் பெரிய ரவுடியாகவும், படகு செய்யும் தொழிலதிபராகவும் இருக்கும் ‘காக்கா முட்டை’ என்னும் சரத் லோகிதஸ்வாவின் அடியாள் பால சரவணனை கடற்கரையில் வைத்து அடித்துவிடுகிறார். நண்பனுக்காக இடையில் புகும் தினேஷ் அந்த அடியாளை அடித்துத் துவைத்து அனுப்பி விடுகிறார்.
இதனால் கோபமடையும் ஷரத்தின் மகனான சரவணன் தனது அடியாள் படையுடன் வந்து தினேஷை தாக்க.. தினேஷ் பதிலுக்குத் தாக்கி சரவணனை அடித்து, அவமானப்படுத்தி அனுப்பி வைக்கிறார்.
இப்போது குப்பத்தில் தினேஷுக்கும், பால சரவணனுக்கும் மவுசு கூடுகிறது. தனது தங்கை நந்திதாவை தினேஷுக்கு கல்யாணம் செய்து கொடுக்க சம்மதம் சொல்கிறார் பால சரவணன். ஏற்கெனவே காதல் வயப்பட்டிருந்த காதலர்கள் 
இருவரும் சந்தோஷத்தில் மிதக்கிறார்கள்.
தொடர்ந்து குப்பத்தில் நடக்கும் படகு போட்டியில் கடைசி நிமிடத்தில் போட்டியை விட்டுக் கொடுத்து ஷரத்தின் மகனான சரவணனை ஜெயிக்க வைக்கிறார் தினேஷ்.
இதையறியும் ஷரத் தினேஷை நேரில் வரவழைத்து மிரட்டுகிறார். ஆனால் தினேஷோ கபடி விளையாடுவது போல் விளையாடி ஷரத்தையே அடித்து வீழ்த்திவிடுகிறார்.
இதை அவமானமாக எடுத்துக் கொள்ளாமல் தினேஷை தன்னுடன் சேர்த்துக் கொண்டால், தனக்கு பலம் கிடைக்கும் என்று நினைத்து தினேஷை தன் குழுவில் சேர்த்துக் கொள்கிறார் ஷரத்.
தினேஷை கல்யாணம் செய்யும் கனவில் இருக்கும் நந்திதாவின் கண்ணில்படும்படியாக ஒரு ரவுடித்தனத்தை செய்கிறார் தினேஷ். இதனால் நந்திதா தினேஷை தன்னை மறந்துவிடும்படியும், உடனே வீட்டைவிட்டு போகும்படியும் சொல்கிறார்.
தினேஷ் இப்போதுதான் தனது உண்மைக் கதையைச் சொல்கிறார். தான் ஷரத் லோகிதஸ்வாவையும், சரவணனையும் பழி வாங்குவதற்காகவே இந்தக் குப்பத்துக்கு வந்திருப்பதாகவும் சொல்லி தன்னுடைய உண்மையான பூர்வாசிரம கதையைச் சொல்கிறார்.
அந்தக் கதை என்ன.. அவர் எதற்கு ஷரத்தையும், அவரது மகன் சரவணனையையும் கொலை செய்ய முயல வேண்டும் என்பதுதான் இடைவேளைக்கு பின்னான சஸ்பென்ஸ் திரைக்கதை.
தினேஷை இதில் கமர்ஷியல் ஹீரோவாக்க முடிவு செய்திருக்கிறார்கள் போலும். அடிதடி, வெட்டுக் குத்து, சண்டை என்று அனல் பறக்கிறது படம்.  வழமையான தமிழ்ச் சினிமாவின் அதே டெம்ப்ளேட் திரைக்கதையில்தான் இந்தப் படமும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றாலும், அழுத்தமான இயக்கத்தினால் கடைசிவரையிலும் பார்க்க வைத்திருக்கிறார்கள்.
ஹீரோ தினேஷைவிடவும், ஹீரோயின் நந்திதாவைவிடவும் படத்தில் அதிகம் நடித்திருப்பவர்கள் ஷரத் லோகிதஸ்வாவும், அவரது மகன் சரவணனாக நடித்திருக்கும் திலீப் சுப்பராயனும்தான். இவருக்கு அடுத்து அதிகமாக வசனங்களை பேசியிருப்பது பால சரவணன். இவர்களுக்கு பின்புதான் ஹீரோயினும், ஹீரோயினும் வருகிறார்கள்.
ஷரத் லோகிதஸ்வா இந்தப் படத்தில்தான் அதிகக் காட்சிகளில் நடித்திருக்கிறார் என்று உறுதியாய் சொல்லலாம். அவமானம், கோபம், பொறாமை, மகன் மீதான பாசம்.. என்று காட்சிக்கு காட்சி தனது முரட்டுத்தனமான நடிப்பை முகத்தில் காட்டியிருக்கிறார். இதேபோல் வஞ்சகமில்லாத நட்போடு தினேஷை அரவணைக்கும் போதும், அவரிடத்தில் பாசத்தோடு பேசும்போதும் ஒரு படி மேலேதான் போயிருக்கிறார். வெல்டன் ஸார்..
கோபக்கார இளைஞனாக.. தன்னை ‘சரவணன்’ என்று பெயர் சொல்லி அழைப்பதையே கவுரவக் குறைச்சலாக நினைக்கும் குட்டி ரவுடி இளவரசனாக நடித்திருக்கும் திலீப் சுப்பராயனுக்கு இத்திரைப்படம் மிகப் பெரிய திருப்பு முனை. ஜான் விஜய்யை போட்டுத் தள்ளிவிட்டு ஆற்றாமையால் கொந்தளிக்கும் காட்சியில் ரவுடித்தனத்தின் வெறியைக் காட்டியிருக்கிறார் திலீப்.
படத்தில் சுவையான, சுவாரஸ்யமான போர்ஷன் ஜான் விஜய் மற்றும் சாயா சிங்கின் கதைதான். அதிலும் ஜான் விஜய் சாயாவை கொஞ்சம் காட்சிகளும், அதற்காக அவர் செய்யும் கில்மாக்களும் ஒரு அழகான காதல் ஜோடியை நினைக்க வைத்திருக்கிறது.
பதற்றத்துடன் ஜான் விஜய் செய்யும் அந்த ஒரு செயல் அவருடைய வாழ்க்கையையே புரட்டிப் போடுவதும், அதன் பின்னர் நடப்பதும் மிக கனமான திரைக்கதை. ஆனால் இதை தினேஷ் என்னும் குருவியின் தலையில் பனங்காயை வைத்தது போல வைத்துவிட்டார்கள் என்பதுதான் சோகமான விஷயம்.
நந்திதா அழகாக இருக்கிறார். கொடுத்த வாய்ப்பில் நன்கு நடித்திருக்கிறார். ஹோம்லியான கேரக்டர். அதிகம் வேலையில்லை என்பதால் இவ்வளவுதான் சொல்ல முடியும்.
பால சரவணன் படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் நான் ஸ்டாப்பாக பேசிக் கொண்டேயிருக்கிறார். ‘சுறா சங்கர்ன்னா சும்மாவா’ என்ற அவரது டயலாக் இனிமேல் மீடியாக்களில் ரொம்பவே பேமஸாகும். அவ்வளவு வெத்து அலப்பறை கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டு பின்பு புலம்பும்போதும் சிரிக்கவும் வைத்திருக்கிறார்.
செஃப் தாமோதரன், ஜெயவாணி என்று குறிப்பிட்டுச் சொல்லும் நடிகர்களும் இருக்கிறார்கள். அதிலும் ஜெயவாணி தனது மகனை கொலை செய்தவனை கொன்றுவிட்டு வா என்று சொல்லி அக்மார்க் தமிழ்ச் சினிமாவின் அம்மாவாகவே காட்சியளிக்கிறார்.
கடற்கரையோர பிரதேசத்திலேயே முழு படத்தையும் எடுத்திருப்பதால் ஒளிப்பதிவாளருக்கு அதிகம் வேலை வைக்காமல் படத்தை உருவாக்கியருக்கிறார் இயக்குநர். கடற்கரை பிரதேசங்களை அவ்வப்போது அழகாக காட்டியிருப்பதோடு தனது பங்களிப்பை முடித்துக் கொண்டார் ஒளிப்பதிவாளர்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் இரண்டு பாடல்கள் திரையில் ஒலித்தன. அதையும் பிட்டு பிட்டாய் ஓட்டியது ஏன் என்று தெரியவில்லை. படம் இருந்த சீரியஸுக்கு இன்னும் இரண்டு பாடல்கள் இருந்தால்கூட நன்றாகத்தான் இருந்திருக்கும். இந்தளவுக்கு கொஞ்சமும் ரிலாக்ஸே இல்லாமல் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர்.
கந்து வட்டிக் கொடுமையைக் காட்டும்படியாக, பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பம் காலையி்ல் இருந்து மாலைவரையிலும் மகளை அடமானம் வைத்துவிட்டு அல்லல்படும் காட்சி ஈரமான பதிவு.
கபடி விளையாடியபடியே தனது தலைவன் என்னும் கெத்தைக் காட்டும் ஷரத்தின் செயல் அவ்வளவு ஈர்ப்பாக இல்லை. அதிலும் இரண்டு முறை வரும் கபடி காட்சிகளின் நீளமும் அதிகம். குறைத்திருக்கலாம்.
எதற்காக தினேஷ் இப்படி நாடகமாடுகிறார் என்பதற்கான பிளாஷ்பேக் கதை இடைவேளைக்கு பின்புதான் வருகிறது என்றாலும், அதை செய்வதற்கான வழிகளை லாஜிக் மீறல்களோடு அமைத்திருப்பதால் மனதில் ஒட்டவில்லை.
ஜான் விஜய்யின் மரணத்தைப் பார்த்துவிட்டு ஒரு நிமிடத்தில் ஷ்ரிமன் மனம் மாறுவதும், ஷரத்தை கொல்ல அவர் திட்டம் போட்டுத் தருவதும், தினேஷ் அதைச் செயல்படுத்துவதுமாக கதையை நகர்த்தியிருப்பது சரியான டிவிஸ்ட்டுதான் என்றாலும் காட்சி வடிவில் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை.
இப்படி பல குறைகளுடன் இருக்கும் திரைக்கதையில், இன்னும் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருந்தால் படம் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்.