களத்தூர் கிராமம் - சினிமா விமர்சனம்

27-10-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இப்படத்தை ஏ.ஆர்.மூவி பேரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ளார். டட்டூ சினிமா சார்பில் ஆரூர் சுந்தரம் தமிழகமெங்கும் வெளியிட்டிருக்கிறார்.
கிஷோர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக யக்னா ஷெட்டி நடித்திருக்கிறார். இவர் ஏற்கெனவே சில கன்னடப் படங்களில் நடித்தவர். மேலும், ‘தகராறு’ சுலீல் குமார், அஜய் ரத்னம், தீரஜ் ரத்னம், ரஜினி மகாதேவய்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – புஷ்பராஜ் சந்தோஷ், இசை – இசைஞானி இளையராஜா, பாடல்கள் – இளையராஜா, கண்மணி சுப்பு, படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், நடனம் – நிர்மல், சண்டை பயிற்சி – மகேஷ்- ஓம் பிரகாஷ். எழுதி இயக்கியிருப்பவர் சரண் கே. அத்வைதன்.

போலீஸ் ரெக்கார்டில் கரும்புள்ளியாக குத்தப்பட்ட கிராமம்தான் தமிழக ஆந்திர எல்லையில் இருக்கும் களத்தூர் கிராமம். களவுத் தொழிலையே தங்களது குலத்தொழிலாக செய்து வரும் அந்த கிராமத்து மக்களுக்கு தலைவரான கிஷோர் போலீசுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார். அதேசமயம் தங்களது கிராமத்துக்குள் நியாய, தர்மத்துக்கு கட்டுப்பட்டவர். அவரது உயிர் நண்பன் வீரண்ணாவோ (சுலில் குமார்) கொஞ்சம் சபல பேர்வழி. 
அதனால் உள்ளூரில் பெண் கிடைக்காத அவருக்கு கிஷோரின் உத்தரவாதத்தின் மூலம் பக்கத்து கிராமத்தில் இருக்கும் ஒரு குடும்பம் பெண் கொடுக்க முன் வருகிறது. ஆனால், நண்பனுக்காக பெண் கேட்க, சொன்ன நேரத்தில் கிஷோர் வர முடியாமல் போக நண்பர்கள் இருவருக்கும் பகை மூள்கிறது.
இந்த நேரத்தில் தன்னைத் தேடி வந்து தனது மகளை மீட்டுக் கொடுக்கும்படி கேட்கும் ஒரு பெரியவரின் பேச்சைக் கேட்க வேண்டிய சூழல் கிஷோருக்கு. பண்ணையாரின் வீட்டுக்குள் புகுந்து அவரைத் தாக்கிவிட்டு ஹீரோயின் யக்னாவை தூக்கி வருகிறார் கிஷோர். ஆனால் திரும்பி வருவதற்குள் பண்ணையாரின் ஆட்கள் யக்னாவின் அப்பாவை கொலை செய்துவிடுகிறார்கள்.
இதனால் நிமிடத்தில் அனாதையாகும் யக்னாவின் மீது பரிதாபப்படும் கிஷோர் அவரை தன் மனைவியாக்கிக் கொள்ள விரும்புகிறார். இதே நேரம் போலீஸிடம் யக்னாவின் அப்பாவை கிஷோர்தான் கொலை செய்தார் என்றும், பண்ணையாரைத் தாக்கிவிட்டு யக்னாவை கடத்திச் சென்றுவிட்டதாகவும் புகார் சொல்கிறார்கள்.
இதனால் போலீஸார் கிஷோரை தேடி வர.. யக்னாவும், கிஷோரும் ஒரு மலைப்பகுதிக்கு சென்று பதுங்குகிறார்கள். அங்கேயே அம்மன் சிலை முன்பாக மாலை மாற்றி திருமணம் செய்து கொள்கிறார்கள். உறவு கொள்கிறார்கள். ஆனால் விடிந்த பொழுதில் போலீஸ் அவர்களைச் சுற்றி வளைக்கிறது.
தன் திருமண நிச்சயத்தார்த்தத்திற்கு வராமல் போய் கல்யாணம் நின்று போன கோபத்தில் கிஷோரை தேடி வருகிறார் வீரண்ணா. அவரிடம் தனது மனைவியான யக்னாவை ஒப்படைத்துவிட்டு அவளை தன் வீட்டில் பாதுகாத்து வைக்கும்படி சொல்கிறார் கிஷோர். பின்பு, தானே போலீஸிடம் சரண்டராகிறார் கிஷோர்.
இப்போது யக்னாவை ஊருக்கு அழைத்து வரும் வீரண்ணா அவளை தன் மனைவி என்று பொய்யாக ஊர் மக்களிடம் சொல்கிறான். இதை யக்னா எதிர்க்க.. உண்மையைச் சொன்னால் பண்ணையாரின் ஆட்களும், போலீஸும் உன்னை தூக்கிச் சென்றுவிடுவார்கள் என்று பொய் சொல்லி அவளது வாயை அடைக்கிறான்.
யக்னா கிஷோருடனான அந்த ஒரு நாள் உறவில் கர்ப்பமடைய.. மகனை பெற்றெடுக்கிறாள். சில வருடங்கள் கழித்து சிறையில் இருந்து வெளியே வந்த கிஷோர் தனது மனைவியை அழைக்க வர அப்போதுதான் ஊர்க்காரர்களுக்கே யக்னா கிஷோரின் மனைவி என்கிற விஷயமே தெரிகிறது.
இப்போது ஏற்படும் மோதலில் வீரண்ணாவை தானே கொல்ல வேண்டிய சூழலுக்கு ஆளாகிறார் கிஷோர். அதற்கு பிராயச்சித்தமாக தங்களுக்கு பிறந்த மகனை வீரண்ணாவின் பெற்றோரிடம் கொடுத்து நல்லவிதமாக வளர்க்க சொல்கிறார் கிஷோர்.
ஆனால் அவர்களோ கிஷோர் – யக்னா மீது வெறுப்பை ஊட்டி வளர்ப்பதுடன், சிறுவனை அழைத்துக் கொண்டு ஊரைவிட்டே வெளியேறுகின்றனர்.
கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கிஷோர் பரோலில் ஊருக்கு வருகிறார். இப்போது அவரை அங்கேயே தீர்த்துக் கட்ட போலீஸ் நினைக்கிறது. வீரண்ணாவின் பெற்றோரிடம் வளர்ந்த கிஷோரின் மகனும் அவரை கொல்ல நினைத்து ஊருக்கு வருகிறான். இருவரிடமிருந்து கிஷோர் தப்பித்தாரா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் பிற்பாதி கதை.
படம் முழுவதும் கிட்டத்தட்ட பிளாஸ்பேக்கிலேயே அதுவும் இரண்டுவிதமான காலகட்டத்திலே நகர்வதாக திரைக்கதை அமைந்துள்ளது. படத்தின் துவக்கத்தில் ஒரு பொட்டல் காட்டில் அக்கிராமத்தைச் சேர்ந்த சிலரை போலீஸ் போலியாக என்கவுண்ட்டர் செய்கிறது. இது பற்றி விசாரிக்க நீதிபதியான அஜய் ரத்னத்தின் தலைமையில் அமைக்கப்படும் விசாரணை கமிஷனில்தான் அந்த ஊர் மற்றும் அனைவரின் வாழ்க்கை வரலாற்றுக் கதையும் சொல்லப்படுகிறது.
‘கருவத்திருக்கை’ என்கிற கேரக்டரில் இரண்டுவிதமான தோற்றங்களில் கச்சிதமாக பொருந்தியுள்ளார் கிஷோர். சொல்லப் போனால் அவரைத் தவிர அந்த கேரக்டரில் வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை. மொத்தக் கதையையும் தனது தோளில் சுமந்து தூக்கி செல்கிறார் கிஷோர்.
நடிப்பு, வசன உச்சரிப்பு, தோற்றப் பொலிவு என்று அனைத்திலும் கிஷோரை மறந்து ‘கருவத்திருக்கை’யை மட்டுமே பார்க்க முடிகிறது. வயதான தோற்றத்திலும் தனது ஆளுமையை விட்டுக் கொடுக்காமல் போலீஸிடம் பேசுவதும், தனது மகனே தன்னைக் கொலை செய்ய வந்திருப்பதை அறிந்து பாசமும், அதிர்ச்சியும் கலந்து பேசுகின்ற காட்சியிலும் அப்ளாஸ் வாங்குகிறார் கிஷோர். 
கிஷோரின் நண்பன் வீரண்ணாவாக வரும் சுலில் குமார், பார்வையிலும் செயலிலும் தெனாவெட்டாக, பார்க்கும் நமக்கே கோபம் வரும் விதமாக தனது கேரக்டரை உள்வாங்கி பிரதிபலித்துள்ளார்.
கிஷோரின் மகனாக வரும் மிதுன்குமார் தானும் பொருத்தமான தேர்வுதான் என தனது பங்களிப்பை நூறு சதவீதம் தந்திருக்கிறார். தனது தந்தை பற்றிய உண்மையை அறிந்து கொள்ளாமலேயே அவரது கேரக்டரை நகர்த்தி சென்றிருப்பதன் மூலம் திரைக்கதைக்கு நியாயம் செய்துள்ளார் இயக்குநர் சரண் அத்வைதன்.
நாயகி யக்னா ஷெட்டி, அந்த களத்தூர் கிராமத்து பெண்ணாகவே மாறிப்போய்விட்டார். கொஞ்சம் அப்பாவி தோற்றத்துடன், பயந்த சுபாவத்துடனும் இயல்பாக நடித்திருக்கிறார். ஊரார் முன்னிலையில் வீரண்ணாவின் முகத்தை தோலுரித்துக் காட்டி கிஷோருடன் அவர் கிளம்பும் காட்சி கதைக்கு வலு சேர்க்கும் ஒன்று. வயதான காலத்தில் புதிய நபர்கள் யார் வந்தாலும் அது தன் மகன்தானோ என்று நினைத்து பரிதவிக்கும் தாயின் கேரக்டரில் கொஞ்சம் பரிதாபத்தை உணர்த்தியிருக்கிறார்.
வீரண்ணாவின் தந்தையாக வரும் நம்ம ராகுல் தாத்தாவும், அவரது மனைவியாக வருபவரும் யதார்த்தம் கலந்த, ஒரு சாமான்ய பெற்றோரின் ஆதங்கத்தை மிகச் சரியாக வெளிப்படுத்தி உள்ளனர். 
நீதிபதியாக, விசாரணை கமிஷன் அதிகாரியாக நடிப்பில் வரும் அஜய் ரத்னம், காவல் துறையினரை சாட்டையடி வார்த்தைகளால் விளாசும் காட்சிகளும், விசாரணையை நேர்மையாக நடத்தும் விதமும் நீதித் துறையின் மீதான மதிப்பை உயர்த்தவே செய்கின்றன.
தவிர, இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரிகளாக, காவலர்களாக நடித்துள்ள அனைவரும் எந்த இடத்திலும் இது ஒரு படம் என நாம் நினைத்துவிடாதபடி, வலம் வருகின்றனர். அதுதான் இந்தக் கதையின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. 
படம் முழுவதும் பிளாஸ்பேக் காட்சிகளாக கதை விரிந்தாலும் எடிட்டர் சுரேஷ் அர்ஸின் தெளிந்த நீரோடை போன்ற படத் தொகுப்பு குழப்பமில்லாமல் படத்துடன் ஒன்ற நமக்கு உதவுகிறது.
சுற்றுப் பக்கம் அனைத்தும் கருவேல மரங்கள் அடங்கிய ஒரு கிராமத்தை எப்படித்தான் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. அந்த கிராமும் அது சார்ந்த மலைப்பகுதியும் ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷின் கைவண்ணத்தில் நம்மையும் களத்தூர் கிராமத்துவாசியாகவே மாற்றி விடுகிறது.
இந்த மொத்தப் படத்திற்கும் தனது பின்னணி இசையால் உயிரூட்டியுள்ளார் இசைஞானி இளையராஜா.. படம் துவங்கியது முதல் வேறெந்த சிந்தனையும் இல்லாமல் படம் முடியும்வரை நாமும் கதை மாந்தர்களுடன் பயணிப்பதற்கு திரைக்கதையுடன் சேர்த்து பின்னணி இசையும் பக்கபலமாக இருப்பதை மறுக்க முடியாது.
இந்தப் படத்தில் ஆங்காங்கே சின்னச் சின்ன குறைகள் தென்பட்டாலும்கூட, நல்ல சினிமாவில் தேடித் தேடி குறைகள் கண்டுபிடிப்பது சரியான விஷயம் இல்லை என்பது படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது உங்களுக்கும் புரியும்.
மொத்தத்தில் இந்த களத்தூர் கிராமம் ரசிகர்களை, இரண்டு மணி நேரம் அப்படியே முற்றிலும் மாறுபட்ட ஒரு  உலகத்திற்கு இந்தப் படம் அழைத்து செல்கிறது.. 
தனது முதல் படத்திலேயே அழுத்தமான  ஒரு உண்மை சம்பவத்தை கையிலெடுத்ததுடன் அதை கொஞ்சம்கூட அலுப்பு தட்டாமல் படமாக்கிய இயக்குநர் சரண் அத்வைதனை, அறிமுக இயக்குநர் என்று சொன்னால் நம்புவது கடினம்தான். தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கையான இன்னொரு இயக்குநர் கிடைத்துவிட்டார் என தாரளமாக சொல்லலாம்.
நல்ல சினிமா வரவில்லை என குறைபட்டுக் கொள்பவர்கள் களத்தூர் கிராமம் பார்த்துவிட்டு கை தட்டிக் கொள்ளலாம்.
களத்தூர் கிராமம் – ஒரு வாழ்வியல் பதிவு

மேயாத மான் - சினிமா விமர்சனம்

23-10-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

Stone Bench Films நிறுவனத்தின் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
படத்தில் வைபவ் ஹீரோவாகவும், பிரியா பவானி சங்கர், இந்துஜா இருவரும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் விவேக் பிரசன்னா, அருண் பிரசாத், அம்ருதா சீனிவாசன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
விளம்பர வடிவமைப்பு – அமுதன் பிரியன், மக்கள் தொடர்பு – நிகில், விளம்பரம் – பவன் நரேந்திரா, தயாரிப்பு மேற்பார்வை – மதன் சண்முகம், தயாரிப்பு நிர்வாகம் – சி.அனந்தபத்மநாபன், நிர்வாகத் தயாரிப்பாளர் – சாருகேஷ் சேகர், தயாரிப்பு வடிவமைப்பு – அசோக் நாராயணன், உடை வடிவமைப்பு – பிரவின் ராஜா, ஒலி சேர்ப்பு – அருண் சீனு, ஒலி வடிவமைப்பு – சூரன் ஜி.அழகியகூத்தன், எஸ்.நாகாவெங்கட், பாடல்கள் – விவேக், நடனம் – எம்.ஷெரீப், சந்தோஷ், கலை இயக்கம் – குமார் கங்கப்பன், இசை – பிரதீப் குமார், சந்தோஷ் நாராயணன், படத் தொகுப்பு – ஷபீக் முகமது அலி, ஒளிப்பதிவு – வித்யு அய்யன்னா, இணை தயாரிப்பு – கல் ராமன், எஸ்.சோமசேகர், கல்யாண் சுப்ரமணியன், தயாரிப்பு – கார்த்திகேயன் சந்தானம், எழுத்து, இயக்கம் – ரத்னகுமார்.

நாயகன் வைபவ் தாய், தந்தையை இழந்தவர். கல்லூரியில் படித்து வரும் தனது ஒரே தங்கையான இந்துஜாவுடன் வாழ்ந்து வருகிறார். சராசரிக்கும் கீழான குடும்பம். ‘மேயாத மான்’ என்கிற பெயரில் ஒரு மெல்லிசை குழுவை நடத்தி வருகிறார்.
இவருடைய நண்பர்கள் விவேக் பிரசன்னா, அருண் பிரசாத். வைபவ் தன்னுடன் கல்லூரியில் படித்த பிரியா பவானி சங்கரை ஒருதலையாய் காதலித்து வந்திருக்கிறார். ஆனால் கடைசிவரையிலும் காதலை சொல்லவே இல்லை என்பதால் இப்போது பிரியா இன்னொருவருடன் திருமணத்திற்கு தயாராகி நிச்சயத்தார்த்தம்வரையிலும் சென்றுவிட்டார்.
இந்த நேரத்தில் பிரியாவின் நிச்சயத்தார்த்தம் பற்றி தெரிந்து கொண்ட வைபவ் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தனது நண்பர்களுக்கு போன் மூலம் தெரிவிக்கிறார். இதனால் பயந்து போன நண்பர்கள் விவேக்கும், அருணும் பிரியாவின் வீட்டிற்கு போய் அவரிடம் பேசுகிறார்கள்.
வைபவ்வை திட்டி உசுப்பேற்றிவிடும்படியாக பேசினால்தான் அவன் தற்கொலை முடிவை கைவிடுவான் என்கிறார்கள். பிரியாவும் இதற்கு உடன்பட்டு நண்பர்கள் எழுதிக் கொடுத்தது போலவே வைபவ்விடம் போனில் பேச, இதனால் கோபப்படும் வைபவ் தற்கொலை முடிவை கைவிட்டுவிட்டு தான் அவள் கண் முன்பாகவே வாழ்ந்து காட்டுவதாகச் சொல்கிறார். இந்த போன் உரையாடலின்போது வைபவ் தன்னை எப்படியெல்லாம் காதலித்தார் என்பதை பிரியா தெரிந்து கொள்கிறார்.
இதன் பின்பு நடக்கும் நண்பன் அருணின் திருமணத்தின்போது பிரியாவை பார்த்துவிடும் வைபவ் அவளை தன்னால் மறக்க முடியவில்லை என்கிறார் நண்பர்களிடம். இப்போது பிரியா தன் வீட்டாரிடம் தனது திருமணத்திற்கு 1 வருட அவகாசம் கேட்டு ஒத்தி வைக்கிறார். இடையில் ஏற்படும் ஒரு அசம்பாவிதத்தின்போது பிரியாவுக்கு கல்யாணமே நடக்கவில்லை என்பது வைபவுக்கு தெரிய வர.. தான் அவளை காதலிப்பதாகவே நினைத்து சந்தோஷப்படுகிறார்.
இன்னொரு பக்கம் வைபவின் நண்பனான விவேக்கை, வைபவ்வின் தங்கை இந்துஜா ஒரு தலையாய் காதலிக்கிறார். இதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களால் பிரியா வைபவை உண்மையாகவே காதலிக்கத் துவங்குகிறார். பிரியாவின் வீட்டில் அவளது கல்யாணத்திற்காக வற்புறுத்த, பிரியா இதற்காக ஒரு திட்டத்தை வைபவ்விடம் சொல்கிறாள். இந்தப் பிரச்சனையின்போது ஏற்படும் வாக்குவாதத்தால் பிரியாவும், வைபவ்வும் பிரிகிறார்கள்.
விவேக்-இந்துஜா திருமணம் நடந்தேறும் அதே தினத்தில் பிரியாவுக்கும் வேறு மாப்பிள்ளைக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் சுவையான திரைக்கதை.
‘இறைவி’ கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் தனது குடும்பத்தினரின் பெயரில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். ‘இறைவி’யின் பார்மெட்டில் இன்றைய இளைஞர்களின் மனப்போக்கை முற்றிலுமாக அறிந்து கொண்டு அவர்களுக்காகவே எடுக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம்.
வைபவ்வுக்கு நிச்சயமாக இந்தப் படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுத் தரும். பக்காவான லோக்கல் பையனாக நடித்திருக்கிறார். மருத்துவமனையில் விவேக்கையும், பிரியாவையும் ஒன்றாக பார்த்துவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்து நண்பனை சாத்து, சாத்தென்று சாத்திவிட்டு ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை’ என்ற பிரியாவின் வார்த்தையைக் கேட்டுவிட்டு அதே நண்பனை கட்டியணைத்து நடனமாடும் அந்தச் சந்தோஷ காதலனின் முகத்தை அழகுபட நடிப்பில் காட்டியிருக்கிறார் வைபவ். வெல்டன் ஸார்.
தற்கொலை முயற்சியில் ஈடுபடும் இரண்டு காட்சிகளிலும் சீரியஸ்ஸை குறைத்து காமெடியாக்கி படம் தற்கொலை முயற்சிக்குள்ளாதவகையில் காப்பாற்றியிருக்கிறார் இயக்குநர். இதற்கு தனது நடிப்பினால் உதவியிருக்கும் வைபவுக்கு நன்றிகள்.
ஒரேயொரு டிவி சீரியிலில் நடித்த கையோடு தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தனக்கென தனியான ரசிகர் மன்றக் கூட்டத்தினை உருவாக்கிய பிரியா பவானி சங்கருக்கு இது முதல் படம். ஆனால் அவருடைய நடிப்பில் அப்படி தெரியவில்லை.
மிகச் சாதாரணமாக அறிமுகமாகி போகப் போக அந்தக் கேரக்டருக்கே தனியான ஒரு அடையாளத்தையே தந்திருக்கிறார் பிரியா. மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏறும் நிலையில் அலட்சியமாகவும், அவசரமாகவும்  ‘எனக்கு கல்யாணமே நடக்கலை’ என்று வெடுக்கென்று சொல்லும் பாவனையில் ‘அதான் சொல்லிட்டாங்கள்ல.. காதலிச்சு தொலைங்கேளாப்பா’ என்று பார்ப்பவர்களையும் சொல்ல வைத்திருக்கிறார்.
திருமணத்திற்கான தந்திர ஏற்பாடாக நடக்கும் அந்த சம்பவத்தின்போது தன்னுடைய இயலாமையினால் புலம்பித் தள்ளும் வைபவ்விடம் “நீயா செஞ்ச…?” என்று பிரியா சட்டென்று கேட்கும் தருணத்தில் தியேட்டரே அதிர்கிறது..!
நல்லதொரு டைமிங்சென்ஸ் டயலாக் டெலிவரியுடன் கூடிய நடிப்பாற்றல் பிரியாவிடம் உள்ளது. நல்ல கதைகளையும், கேரக்டர்களையும் செலக்ட் செய்து நடித்தால் ஒரு ரவுண்டு வரலாம். இனிமேல் எல்லாமே அவர் கையில்தான் உள்ளது.
படத்தின் இன்னொரு மிகப் பெரிய பலம் வைபவ்வின் தங்கையாக நடித்திருக்கும் இந்துஜா. இதுதான் முதல் படம் என்று நினைக்கிறோம். மிக அழகாகவும், கவரும்விதத்திலும் நடித்திருக்கிறார். அறிமுகக் காட்சியே அடிதடியில் இருக்க.. போகப் போக குடும்பப் பாங்கான பெண்ணாக துணிச்சலான கதாபாத்திரத்தில் யதார்த்தமாக நடித்து மனதில் பதிகிறார்.
இதுவரையிலும் அடியாளாகவும், ரவுடிக் கும்பலில் ஒருவனாகவும் முகம் காட்டியிருந்த வைபவ்வின் நண்பராக நடித்திருக்கும் விவேக் பிரசன்னாவுக்கு இந்தப் படம் முழு அடையாளம் கொடுத்திருக்கிறது. படம் முழுக்க வைபவ் கூடவே வந்து, நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். பாராட்டுக்கள் பிரதர்.
படத்தின் இடையிடையே வரும் மெல்லிய நகைச்சுவையே படத்தை நகர்த்தியிருக்கின்றன. தீவிர அய்யர் குடும்பமாக தோன்றும் பிரியாவின் வீட்டிற்கு வந்து சொம்பில் தண்ணீர் குடிக்கும் வைபவ் அதைக் கவ்விக் குடிக்க.. இதைப் பார்த்து கோபமாகும் அவரது அம்மா, “அடுத்தவங்க வீட்ல இப்படித்தான் குடிப்பீங்களா…?” என்று கேட்க, “நீங்க எதை வைச்சுக் குடிப்பீங்க..?” என்று வைபவ் பட்டென்று திருப்பிக் கேட்பதும் ஒரு மிகப் பெரிய குறியீடுதான். சர்ச்சைகள் வேண்டாம் என்பதால் விட்டுவிடுவோம்.
ஒளிப்பதிவு, இசையெல்லாம் படத்திற்கு பெரிய பலத்தையெல்லாம் தரவில்லை. குறிப்பாக இசையில் ஒன்றுமேயில்லை. இப்போதும் இந்தப் படத்திற்கும் இளையராஜாதான் உதவியிருக்கிறார் என்பதிலேயே இப்போதைய இசையமைப்பாளர்களின் திறமை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது புரிகிறது.
வைபவ் – பிரியாவின் கிளைமாக்ஸ் காட்சி சொல்லும் கதையைவிடவும், விவேக்-இந்துஜாவின் காதல் கதைதான் படத்தில் அதிகம் பேசப்படுகிறது என்பதுதான் உண்மை..!
இப்போது 21-ம் நூற்றாண்டுதான் என்றாலும் திருமணத்திற்கு தங்களது குடும்பத்தினரிடம் சம்மதம் வாங்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்திற்கு முன்பாகவே குழந்தை பெற்றுக் கொள்ளத் துடிக்கும் மனோபாவத்தை இன்றைய வளரும் இளைய சமுதாயத்தினரின் மத்தியில் விதைக்க வேண்டாம் என்பதையும் இயக்குநருக்கு சொல்லிக் கொள்கிறோம்.
குறும்படமாக பேசப்பட்ட ஒரு விஷயத்தை முழு படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார். முழு திரைப்படத்திற்கான திரைக்கதை விரிவாக்கத்தில் கொஞ்சம் பிசிறு தட்டுவதால் இடையில் போரடிக்கிறது. பின்பு வேகமெடுக்கிறது. ஆனாலும் ஒட்டு மொத்தமாய் படம் பார்த்து ரசிக்கும்படிதான் உள்ளது.
மேயாத மான் – பார்க்கலாம்தான்..!

மெர்சல் - சினிமா விமர்சனம்

20-10-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் இளைய தளபதி விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா மூவரும் நடித்துள்ளனர்.
மேலும், நடிகர்கள் சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யன், நடிகைகள் கோவை சரளா, தேவதர்ஷினி, சுரேகா வாணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.  
ஒளிப்பதிவு – ஜி.கே.விஷ்ணு, படத் தொகுப்பு – ரூபன், கலை – முத்துராஜ், கதை – கே.வி.விஜயேந்திர பிரசாத், வசனம் – ரமணகிரிவாசன், இசை – ஏ.ஆர்.ரஹ்மான், பாடல்கள் – விவேக், வேல்முருகன், சண்டை பயிற்சி – அனல் அரசு, ஒலி வடிவமைப்பு – தபஸ் நாயக், நடனம் – ஷோபி, மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமத், கிளாமர் சத்யா, நிர்வாகத் தயாரிப்பு – ஹெச்.முரளி, கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – ஆர்.மகேந்திரன், தயாரிப்பு – என்.ராமசாமி, ஹேமா ருக்மணி, எழுத்து, இயக்கம் – அட்லி.
இத்திரைப்படம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படம் என்பதால் மிக பிரம்மாண்டமான முறையில் 140 கோடி ரூபாய் செலவில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
மருத்துவத் துறையில் நடைபெறும் மோசடிகளையும், கல் இதயம் படைத்த மருத்துவர்களையும் வெளிக்காட்டுவதற்கு கொஞ்சம் ‘மூன்று முகம்’, ‘அபூர்வ சகோதரர்கள்’ கேரக்டர் ஸ்கெட்ச்சில் மூன்று விஜய்களை வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அட்லி.

மதுரை அருகேயிருக்கும் மானூர் கிராமத்தில் வசிக்கும் வெற்றிமாறன் விவசாயி. ஆனால் பலசாலி. பஞ்சாப்புக்கே போய் அங்கேயிருக்கும் மல்யுத்த குஸ்தி பயில்வான்களுடன் போட்டியிட்டு ஜெயித்தவர். இவரது மனைவி நித்யா மேனன். இவருக்கு ஒரு மகன் வெற்றி.
அந்த ஊரில் புதிதாக கோவில் கட்ட பூஜை நடந்த தினத்தன்று நடந்த சதி வேலையில் தீ விபத்து ஏற்படுகிறது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் வெறும் 10 நிமிட தாமத்த்தினால் சில உயிர்களை இழக்க வேண்டி வருகிறது.
வெற்றிமாறன் யோசித்து “நமது ஊருக்கு இப்போது கோவில் வேண்டாம். அதே இடத்தில் ஆஸ்பத்திரி கட்டுவோம்…” என்று சொல்லி அந்தக் கிராம மக்களிடையே பணம் வசூல் செய்து ஒரு மக்கள் நல மருத்துவ மையத்தை கட்டுகிறார். இந்த மருத்துவமனைக்கு மருத்துவராக வேலைக்கு வரும் எஸ்.ஜே.சூர்யா, விஜய்யிடம் பிரமாதமாக நடித்து அந்த மருத்துவமனையை தன் பெயருக்கு மாற்றிக் கொள்கிறார்.
பின்பு கொஞ்சம், கொஞ்சமாக அதனை கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனையாக மாற்றியமைக்க திட்டமிடுகிறார். இந்த நேரத்தில்தான் தனது இரண்டாவது பிரசவத்திற்காக அதே மருத்துவமனையில் அட்மிட் ஆகிறார் வெற்றிமாறனின் மனைவியான ஐஸ்வர்யா என்னும் நித்யா மேனன்.
குழந்தை இயற்கையாக பிறக்க வாய்ப்பிருந்தும், நித்யாவுக்கு சிசேரியன் செய்யச் சொல்கிறார் சூர்யா. மயக்க மருத்துவ நிபுணர் மருத்துவமனையில் இல்லையென்றாலும் அறுவை சிகிச்சை நிபுணரே இதையும் செய்ய… அப்போது ஏற்படும் கோளாறில் குழந்தை பேச்சுமூச்சில்லாமல் பிறக்கிறது. நித்யாவுக்கும் திடீரென்று பிக்ஸ் வர.. இந்தக் குழப்பத்தில் வெற்றிமாறனுக்கு அனைத்து உண்மைகளும் நிதயா மூலமாகவே தெரிகிறது.
சூர்யா தனது அடியாட்களுடன் சேர்ந்து வெற்றி மாறனை கொலை செய்கிறார். வெற்றி மாறன் தன் கொலைக்கு முன்பாகவே சின்னப் பையனான மாறனை ஒரு லாரியில் ஏற்றி தப்பிக்க வைக்கிறார். இறந்து போய்விட்டது என்று சொல்லி குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட தம்பி வெற்றிக்கு திடீரென்று உயிர் கிடைக்கிறது.
வெற்றிமாறனின் உடன் பிறந்த தம்பியாய் அந்த வீட்டில் வளைய வந்த வடிவேலுவின் துணையோடு, இப்போதைய மாறன் புகழ் பெற்ற மருத்துவராய் அதே ஊரில் மருத்துவமனை கட்டி பெயர், புகழோடு இருக்கிறார்.
இன்னொரு மகனான வெற்றியும் அதே ஊரில்தான் புகழ் பெற்ற மேஜிக்சியனாக இருக்கிறார். அண்ணனைவிட தம்பியான வெற்றிதான் தனது அப்பாவின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்க துடிக்கிறார். இது நடந்த்தா, இல்லையா என்பதுதான் கதை.
தலையைச் சுற்றி மூக்கைத் தொடும்விதமாக ஒரு விஜய்யின் கதைக்குள் இன்னொரு விஜய்யை வரவழைத்து அதன் பின்பு இவர்கள் இருவரும் சேர்ந்து பெரிய விஜய்யின் கதையைச் சொல்வது போல திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். அதுவும் இரண்டாவது பாதியில்தான் முழுக் கதையும் தெரிய வருகிறது.
விஜய் மூன்று வேடங்களிலும் பெரிய மாற்றம் இல்லாமல் நடித்திருக்கிறார். மதுரைக்கார மைந்தர் கேரக்டர்தான் பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறது. முறுக்கு மீசை, முரட்டு தாடியுடன் பார்க்கவே தெக்கத்தி ஆள் போலவே தெரிகிறார். அந்தப் பக்க பாஷையையும் குதறாமல் பேசியிருக்கிறார்.
பாட்டியுடன் பாசம், மனைவியுடன் கொஞ்சல், எம்.எல்.ஏ.விடம் கோபம்.. தனது குழந்தையிடம் அன்பு, நட்புகளுடன் அரவணைப்பு என்று கிடைத்த இடங்களிலெல்லாம் தன்னால் முடிந்த நடிப்பைக் காட்டியிருக்கிறார். சூர்யா அண்ட் டீமுடன் போடும் சண்டையில் பெரிதாக ஹீரோயிஸம் வைக்காததால், சாகும் தருவாயில் அவருடைய நடிப்பை ரசிக்க முடிந்து அவர் மீதான அனுதாபமும் கூடுகிறது.
இன்னொரு பக்கம் மாறன் என்ற 5 ரூபாய் மருத்துவர் பிரான்சில் சிறந்த மருத்துவருக்கான விருதைப் பெறுவதற்காக சென்று அங்கே இன்னொரு சென்னையின் தாதா மருத்துவரின் உதவியாளரான காஜல் அகர்வாலின் நட்பை சம்பாதித்துவிட்டு அவருடன் டூயட்டும் பாடுகிறார்.
இந்த கேரக்டருக்கும் வெற்றி என்னும் மேஜிக் ஹீரோவுக்கும் பெரிதாக எந்த வித்தியாசத்தையும் காட்டவில்லை என்பதால் கடைசி கட்ட காட்சிகளில் ரசிகர்களுக்கே குழப்பமே வந்துவிட்டது. அதனை கால் மணி நேரம் கழித்து வசனம் மூலமாகவே சொல்வதுகூட திரைக்கதையில் கூடுதல் டிவிஸ்ட்டுதான்.
கையில் செல்போன் வைத்துக் கொள்ளாதது.. எளிமையாக மக்களோடு மக்களாக இருப்பது.. வெளிநாட்டிற்குச் சென்றால்கூட வேஷ்டி, சட்டையிலேயே செல்வது என்று மாறனின் கேரக்டர் ஸ்கெட்ச், விஜய்யின் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது.
சமந்தாவுடனான இவரது காதல் போர்ஷன் கொஞ்சம் சுவாரஸ்யமானது.. ‘டே தம்பி’ என்று சமந்தா ‘டேய்’ போட்டு கூப்பிடும் காதல் காட்சி சுவையானது. அட்லீயின் மிகச் சிறந்த இயக்கம் இந்தக் காட்சியில்தான் என்று உறுதியாகச் சொல்லலாம்.
வெற்றிக்கென்று பிரத்யேக கேரக்டர் குணாதிசயங்கள் இல்லையென்றாலும் மேஜிக்ஸியனாக இருந்து கொண்டே திடீரென்று அந்த பொல்லாத மருத்துவரை போட்டுத் தள்ளும் காட்சியில் திகிலை ஊட்டியிருக்கிறார். கடைசியில் தண்டனையை ஏற்றுக் கொண்டு ஜெயிலுக்குப் போகும்போது தனது ரசிகர்களுக்கு ஸ்டைலாக கை ஆட்டும் அந்த ஒரு காட்சியே அவர்களுக்குப் போதுமானது..!
காஜல் அகர்வாலுக்கு பெரிதாக ரோல் இல்லை. ஆனால் நடனக் காட்சிக்கும், கதைக்கும் அவர் அவசியம் தேவைப்பட்டிருக்கிறார். சமந்தா க்யூட்.. இந்தப் படத்தில் இவரது நடிப்பைப் பார்த்தால், இவர் இவ்வளவு சீக்கிரம் ரிட்டையர்மெண்ட் ஆவக் கூடாது என்று கடைசி பெஞ்ச் ரசிகனும் நிச்சமாக நினைப்பான். ரொமான்ஸ் காட்சியில் குழந்தைத்தனமான முகத்துடன் ஒரு அமுல் பேபி முகத்தைக் காட்டியிருக்கிறார்.
இந்த இருவரைத் தவிர நித்யா மேனனுக்கு கூடுதல் நேரம் கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். தன்னுடைய சொந்தக் குரலில் பேசியிருப்பதால் கூடுதலாக அழகில் தெரிகிறார்.  ஐஸ்வர்யா என்னும் கேரக்டரில் நித்யாவின் நடிப்பும், அழகும்தான் படத்தின் பிற்பாதியில் யாரும் தூங்கி வழியாமல் இருக்க உதவியிருக்கிறது.
தான் கர்ப்பமாக இருப்பதை சூசகமாகச் சொல்லும் காட்சியிலும், சாகும் தருவாயில் உண்மையை உரக்கச் சொல்லிவிட்டு போகும் காட்சியிலும் நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார் நித்யா மேனன்.
நீண்ட நாட்கள் கழித்து திரைக்கு வந்திருக்கும் வடிவேலுக்கு ஊறுகாய் வேடம். ஆனால் இவர் பேசும் ஒரேயொரு வசனத்திற்கு காது கிழியும் அளவுக்கு தியேட்டரில் கை தட்டல். பிரான்ஸ் ஹோட்டலில் திருடர்களிடத்தில் காலியாய் இருக்கும் தன் பர்ஸை காட்டி ‘New India. Only Digital Money.. அங்கே யார்கிட்டேயும் பணம் கிடையாது. பூராவுமே கியூதான். அங்கே எல்லாருமே..” என்று சொல்லிவிட்டு தன் புறங்கையை நாக்கால் வழித்துக் காட்டும் வடிவேலு, இன்றைய இந்தியாவின் ஒரு சாதாரண பிரஜையின் மறு வடிவம்.
எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் நடிப்பு விஜய்க்கு ஈடு கொடுத்திருக்கிறது. கோவை சரளாவின் அம்மா செண்டிமெண்ட் நடிப்பும், தளபதி விஜய்யின் பாட்டி கேரக்டர் நடித்தவரின் நடிப்பும் குற்றிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.
காளி வெங்கட்டின் பாசமான அப்பா கேரக்டரும், செந்தியின் அம்மா கேரக்டரும் இந்தியாவில் இப்போது நடக்கும் மருத்துவக் கொள்ளைகளை ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிய வைக்கிறார்கள்.
அறிமுக ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவில் மிக அழகாக இருக்கிறார் விஜய். அவரது ரசிகர்களுக்கு எப்படியெல்லாம் விஜய் இருந்தால் பிடிக்குமோ அந்தக் கோணத்திலேயே படம் பிடித்திருக்கிறார். ஒரு சின்ன காட்சியில்கூட அழகு குறையவில்லை. பாடல் காட்சிகளில் வெளிநாடுகளின் அழகையும் சேர்த்தே படம் பிடித்திருக்கிறார்.
2 மணி 50 நிமிட மிக நீண்ட படமான இதில் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். ஆனால் கதை சொன்னவிதம், விஜய் என்னும் ஹீரோவை அடுத்தத் தலைவராக்கும் முயற்சிதான் இந்தப் படம் என்பதால், இயக்குநரால் இதனைத் தவிர்க்க முடியவில்லை போலும்.
படத் தொகுப்பாளர் ரூபனின் உழைப்பையும் பாராட்டியே ஆக வேண்டும். நடனக் கலைஞர்கள், சண்டை கலைஞர்கள் என்று அனைவருமே விஜய்க்காக உருகி, உருகி உழைத்திருக்கிறார்கள். நன்று..!
இசைப் புயலின் இசையில் பாடல்கள் ஒலித்தன. ஆனால் எதுவுமே நினைவில் இல்லை. அந்த அளவுக்கு இசைக் கருவிகளின் ஆதிக்கம். ‘ஆளப் போறான் தமிழன்’ என்கிற முதல் வரியில் சில வார்த்தைகள் மட்டுமே காதில் விழுந்தன. மீதியெல்லாம் ரசிகர்களுக்கு தேவையில்லை என்று நினைத்துவிட்டார்கள் போலும். பின்னணி இசையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாத அளவுக்கு தனது இசைத் திறமையைக் காட்டியிருக்கிறார் இசைப் புயல்.
இப்போதைய இந்தியாவில் மருத்துவமனைகளில் நடைபெறும் கொள்ளைகள் நிறையவே. ஆனால் அதனை நோயாளிகளாலும், அவர்களது குடும்பத்தாராலும் உணரவே முடியாது.
விபத்து ஏற்பட்டால் அருகில் இருக்கும் எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் சேர்க்கலாம் என்று விதிமுறைகள் இருந்தாலும், சில ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கமிஷன் கிடைக்குமே என்கிற எண்ணத்தால் மிக அதிக கட்டணத் தொகை கொண்ட மருத்துவமனைக்கு நோயாளிகளை கொண்டு வந்து சேர்ப்பதும், அங்கே நோயாளியின் மொத்தச் சொத்துக்களையும் பறித்துக் கொண்டு வெளியில் அனுப்புவதும் இப்போது அமோகமாக நடைபெறுகிறது.
இப்படியொரு கொள்ளை சம்பவத்தைத்தான் காளி வெங்கட்டின் கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இந்த விழிப்புணர்வை காட்டியமைக்காக இயக்குநருக்கு நமது நன்றி.
இப்போது பிரசவ மருத்துவமனைகளில் பெரும்பாலும் சிசேரியன்தான் செய்கிறார்கள். நார்மல் டெலிவரி செய்தால் பணம் கிடைக்காது என்பதால் சிசேரியனை வேண்டுமென்றே சில மருத்துவர்கள் செய்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் நாடு முழுவதும் பரவலாக எழுந்துள்ளது. இதற்கான காரணங்களாக எஸ்.ஜே.சூர்யா சொல்லும் விஷயங்கள் அப்பட்டமான உண்மைதான்.
படத்தின் பல வசனங்கள் இன்றைய இந்தியாவின் எதார்த்த நிலைமையை பிரதிபலிப்பதால் தியேட்டரில் கைதட்டல்களை அள்ளுகின்றன. 
பேக்டரி கட்டப் போகிறோம் என்று எம்.எல்.ஏ. சொன்னவுடன் அது பற்றி ஆலோசிக்கக் கூடியிருக்கும் கிராமத்து மக்கள் கூட்டத்தில் விஜய் பேசும்பேச்சு இன்றைய பல கிராமங்களின் நிலைமையை வெளிப்படுத்தியிருக்கிறது.
“படிக்காத நம்ம பாட்டனும், பூட்டனும் கண்மாய் வெட்டுனாங்க. குளத்தை கட்டுனாங்க. மரத்தை நட்டாங்க. அதை அம்புட்டையும் மூடணும்ன்னு நினைக்கிறது முட்டாள்தனம். கண்மாயையும், குளத்தையும் வளைச்சிட்டு அதுல வீடுகள் கட்டினா மழை தண்ணீர் எங்கே போகும்? நடுவீட்டில்தானே வந்து நிக்கும்..? ரெண்டு வருஷமா மழையும் பெய்யலை. ஒரு சொட்டுத் தண்ணிீரையும் சேர்த்து வைக்கலைன்னா அப்ப தண்ணீருக்கு எங்க போறது..? பக்கத்து ஊர்ல போயி பிச்சையா எடுப்பீங்க..? அப்படியொரு நிலைமை யாருக்குமே வரக் கூடாது. காசு கொடுத்து தண்ணீர் வாங்குற ஊரு உருப்படாது..” என்று பொரிந்து தள்ளுகிறார் விஜய்.
பாரீஸ் நகரில் மருத்துவ சேவைக்காக விருது பெறும்போது விஜய் மருத்துவத்தை சேவையாக பாவிக்க வேண்டும் என்கிறார். “சேவை செய்வதற்காக துவக்கப்பட்டது மருத்துவம். ஆனால் இன்றைக்கு உலகின் நம்பர் ஒன் வியாபாரமாக ஆகிட்டிருக்கு மருத்துவத் துறை. உயிர் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். ஒரு நாட்டில் ரிச்சஸ்ட்மேனுக்கு கிடைக்கிற மருத்துவ வசதி அதே நாட்டு புவரஸ்ட் மேனுக்கும் கிடைக்கணும். அப்படிப்பட்ட நாடுதான் உலகின் சிறந்த நாடு. உலகில் உள்ள ஒவ்வொரு மனுசனுக்கும் இலவச மருத்துவம் கிடைக்கும்வரை நான் போராடுவே்ன்..” என்கிறார் விஜய்.
கிளைமாக்ஸ் காட்சியிலோ அனைத்துக்கும் சேர்த்து பொங்கல் வைத்திருக்கிறார் இயக்குநர்.
“7 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வாங்குற சிங்கப்பூரில் மக்களுக்கு இலவசமா மருத்துவம் தர்றப்போ.. 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வாங்குற நம்ம அரசாங்கத்தால் ஏன் மருத்துவத்தை இலவசமாக தர முடியவில்லை..?
மருந்துகளுக்கு 12 சதவிகிதம். ஆனால் தாய்மார்கள் தாலியை அறுக்குற சாராயத்துக்கு ஜி.எஸ்.டி.யே கிடையாதாம். நம்ம நாட்டில் நம்பர் ஒன் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்ஸிஞன் சிலிண்டர்கள் இல்லை. என்ன காரணம் என்றால், அதை சப்ளை செய்ய 2 வருஷமா கவர்ன்மெண்ட்கிட்ட பணம் இல்லையாம்.
ஜனங்க இப்பவெல்லாம் நோயைப் பார்த்து பயப்படுவதில்லை. ஆனால் கவர்ன்மெண்ட் ஆஸ்பிட்டலை பார்த்துதான் பயப்படுறாங்க..” என்று பொறுமித் தள்ளியிருக்கிறார்கள் இயக்குநரும், விஜய்யும்..!
இது போதாமல் மோடி அரசு எடுத்த பண மதிப்பு நீக்கத்தையும் கிண்டல் செய்திருக்கிறார்கள். மாறனின் ஆஸ்பத்திரிக்கு வரும் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தை உண்டியலில் போட அதைப் பார்த்துவிட்டு யோகிபாபு, “என்னடா இது..? புது 500 நோட்டையும் செல்லாதுன்னு சொல்லிட்டாங்களா..?” என்கிறார். இதற்கும் தனி கைதட்டல் கிடைக்கிறது.
ஆக.. வெளியில் சொல்ல முடியாமல் முனங்கிக் கொண்டிருக்கும் சாதாரண பொதுஜனத்தின் எண்ணவோட்டத்தை இந்தப் படத்தில் கிடைத்த இடத்திலெல்லாம் பரவலாக பேச வைத்திருக்கும் தைரியத்திற்காக இயக்குநருக்கும், விஜய்க்கும் நமது பாராட்டுக்கள்.
இதே நேரத்தில் மருத்துவ துறையின் முறைகேடுகளை தட்டிக் கேட்கிறார்கள் என்கிற ஒற்றை விஷயத்துக்காக படத்தை ஒட்டு மொத்தமாய் தலையில் தூக்கி கொண்டாட முடியவில்லை. கருத்தாக்கத்தில் படம் நன்று என்று சொல்லலாம். ஆனால் படைப்பாக்கத்தில் குற்றம், குறைகள் நிறையவே உண்டு.
விஜய் என்ற ஒற்றை மனிதனின் ஹீரோயிஸத்திற்காக பலவித லாஜிக் எல்லைகளையும் தாண்டி சர்க்கஸ் சாதனை செய்திருக்கிறார் இயக்குநர் அட்லீ.
சாதாரண வேஷ்டிக்காக பிரான்ஸ் குடியுரிமை அதிகாரிகள் விஜய்யை சோதனையிட முயல்கிறார்கள் என்பதும், அப்போது அவர்கள் தகாத முறையில் நடந்து கொள்கிறார்கள் என்பது போலவும் காட்டியிருப்பது தவறு. இது போன்று அநாகரிகமாக நடந்து கொள்பவர்கள் இந்தியாவில் இருக்கும் இந்திய அதிகாரிகள்தான் என்பதை அடிக்கடி விமானங்களில் பயணிக்கும் பயணிகளைக் கேட்டால் தெளிவாகச் சொல்லிவிடுவார்கள்.
அதேபோல் ஒரு பயணிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவுக்காக பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்கிவிட்டு தப்பித்துச் சென்று காப்பாற்றுவதெல்லாம் ஓவரான ஹீரோயிஸம்.. இதேபோல் மேஜிக்ஸியன் வெற்றி மருத்துவரைக் கொலை செய்துவிட்டு பிரான்ஸ் நாட்டில் இருந்து சப்தமேயில்லாமல் தப்பித்து இந்தியா வருகிறார் என்பதெல்லாம் எம்.ஜி.ஆர். காலத்து திரைக்கதை. இந்தக் கொலைக்காக சட்டென்று இந்தியாவில் இருந்து பறந்து வரும் விசாரணை அதிகாரி சத்யராஜின் திணிப்பு ‘அட’ போட வைக்கும் ஆச்சரியம்..!
வெற்றியும், மாறனும் வடிவேலுவுடன் தொடர்பில்தான் இருக்கிறார்கள். ஆனால் வெற்றிதான் பழி வாங்கும் செயலைச் செய்கிறார். இவருக்கு உதவுகிறார் வடிவேலு. இதே வடிவேலு, மாறனுடன் பிரான்ஸுக்கும் வருகிறார். குடும்ப நட்பாகவும் இருக்கிறார். ஆனால் அவருடைய அப்பாவின் கதையை இவரிடத்தில் சொல்லவேயில்லை. வெற்றி எப்படி கண்டெடுக்கப்பட்டார்..? யாரால் வளர்க்கப்பட்டார்..? எப்படி வடிவேலுவுடன் இணைந்தார்..? அவருக்கு யார் எஸ்.ஜே.சூர்யாவின் பின்னணியைச் சொன்னது..? என்பதெல்லாம் படத்தில் சொல்லப்படாதது ஏன் என்று தெரியவில்லை.
அதே பகுதியில்தான் வெற்றியும் வாழ்ந்து வந்திருக்கிறார் என்றால் இதுநாள்வரையிலும் எப்படி அவர் மாறனின் கண்படாமல் இருந்தார்..? மற்ற மக்களுக்கு இவர்களின் முக ஒற்றுமை எப்படி தெரியாமல் போனது என்றெல்லாம் கேள்விகள் எழாமல் இல்லை. பதில்தான் கிடைக்காது.
1976-ல் வெளிவந்த ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தின் பின்னணியில் எம்.ஜி.ஆர். போலவே விஜய்யும் அரசியல் களத்தில் குதிக்கிறார் என்பதை விஜய்யின் அனுமதியுடனேயே அவருக்காகவே காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர் அட்லீ. இப்போதுதான் புரிகிறது அட்லீக்கு பம்பர் பரிசாக இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று..? வாங்கிய பணத்திற்கு உண்மையாகவே உழைத்திருக்கிறார் அட்லீ.
வெறும் 7 சதவிகித ஜி.எஸ்.டி. வரி வாங்கும் சிங்கப்பூரில் அனைத்து மருத்துவ வசதிகளும் இலவசம் என்று போகிறபோக்கில் அடித்துவிட்டு போகிறார் இயக்குநர். விசாரித்தால் இதுவே பொய் என்கிறது சிங்கப்பூர் வட்டாரம்.
சிங்கப்பூர் என்றில்லை.. உலகத்தின் எந்த நாட்டிலும் மருத்துவ வசதிகள் முழுக்க, முழுக்க இலவசமில்லை. மக்கள் மருத்துவக் காப்பீடு பெற்றுக் கொள்ள வேண்டியது அத்தியாவசியம் என்று சொல்லி மருத்துவக் காப்பீடை தங்களது சொந்தப் பணத்தின் மூலமாகவும், சட்டத்தின் மூலமாகவும் வாங்க வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
தமிழ்நாட்டிலும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் இலவசமாகவே கிடைக்கின்றன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசம், பணம் கொடுத்து சிகிச்சை என்று இரண்டு பிரிவுகளிலும் சிகிச்சைகள் கிடைக்கின்றன. அரசு மருத்துவமனைகளை அப்பலோ மருத்துவமனைகள் போல தரமானதாக மாற்றவில்லை என்று வேண்டுமானால் சண்டையிடலாம்.
ஆனால் தரம் சிகிச்சையிலா..? தோற்றத்திலா என்று யோசித்து தரத்தில்தான் என்று பார்த்தால், அரசு மருத்துவமனைகளின் சிகிச்சையே தரமானது என்பதை நாம் ஒப்புக் கொள்ளலாம்.
சமயம் கிடைத்த இடத்தில் ஜி.எஸ்.டி.யையும் போட்டுத் தாக்கியிருக்கிறார் விஜய். அரசியலுக்கு வரும் முன்னாட்டமாக தற்போதைய இந்தியாவின் முக்கிய பிரச்சினைகளைத் தொட்டுப் பேசி தான் அரசியலுக்குத் தயார் என்பதை இந்தப் படத்தின் மூலமாகக் காட்டிவிட்டார் விஜய்.
இந்தப் படத்தின் கதையாடல் காரணமாக விஜய் நடிக்கவிருக்கும் அடுத்தப் படத்தின் ரிலீஸ், சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று அப்பன் முருகனை இப்போதே வேண்டிக் கொள்வோம்..!
இந்த ‘மெர்சல்’ திரைப்படம் அரசியல்வியாதிகளை நிச்சயம் மெர்சலாக்கும்..!