முதல் காதல் அனுபவம்

http://senshe-kathalan.blogspot.com/2007/03/blog-post_28.html



// உண்மைத்தமிழன் அவர்களே உங்களை Weird ஆட்டைக்கு கூப்ட்டிருக்கேன்.. வந்து கலக்குங்க :))

சுட்டி :http://senshe-kathalan.blogspot.com/2007/03/blog-post_28.htmlசென்ஷி //


மொதமொதல்லா நம்ம வூட்டுக்குள்ளப் பூந்து ஒரு கமெண்ட் அடிச்சிட்டாரே மனுஷன்னு பார்த்தா.. கிடா சாப்பிட வாடான்னு கூப்பிட்டு கைல தீச்சட்டியைக் கொடுத்த மாதிரி ஏதோ weird-ஆமே.. அதைத் தூக்கிக் குடுத்துட்டாரே இந்த மனுஷன்..



இப்படி மாட்டி விட்டுட்டீங்களே சென்ஷி.. ஏதோ சாப்பிட்டியா? தூங்கினியான்னு கேக்குற மாதிரி "உங்க முதல் காதல் எது?"ன்னு கேட்டுப்புட்டீகளே..? சொல்லக்கூடிய விஷயமா இல்ல.. நினைக்கக்கூடிய விஷயமா அது? ம்.. சரி.. சொல்லிப்புடறேன்.. கேட்டுக்குங்க..


ஏற்கெனவே 'ஆட்டோகிராப்'ன்னு ஒரு படம் வந்தது பாருங்க.. அந்தப் படத்தைப் பார்த்துப்புட்டு நம்ம பய மக்கா அல்லாரும் அஞ்சாறு நாளைக்கு தூக்கம் வராம புரண்டு புரண்டு படுத்திருக்கானுக.. அதுல நானும் ஒருத்தன்.. இப்ப அதையே கிளறச் சொல்றீங்களே சாமி.. சரி.. 'மனசுல இருக்குறதை வெளில கொட்டிட்டா பாரம் குறையும்'னு எங்க ஆயி அப்பப்ப சொல்லும்.. சொல்றேன்.. கேளுங்க.. ஆனா யார்கிட்டேயும் சொல்லிராதீங்க. ஏன்னா எனக்கு எதையும் மூடி மறைச்சு எழுதத் தெரியாது.. எல்லாம் ஸ்ட்ரெயிட்டுத்தான்..


அப்ப நான் திண்டுக்கல்ல செயிண்ட் மேரீஸ் ஸ்கூல்ல பத்தாப்பு படிச்சிருட்டிருந்தேனுங்க.. படிப்புல நம்ம எப்பவும் ஒண்ணுல இருந்து அஞ்சு ரேங்க்குக்குள் வந்திருவேங்க.. ஆனா பாருங்க.. இந்த இங்கிலீஷ் சனியனும், கணக்கு பிசாசும் நம்ம மண்டைல ஏறவே மாட்டேன்றுச்சு.. அப்புறம் எப்படி அஞ்சுக்குள்ளன்னு யோசிக்குறீங்களா? மத்த மூணுலேயும் நம்ம எப்பவுமே 90க்கு மேலதான் அப்பு..


அப்பத்தான் 'பைனல் எக்ஸாம் வரப் போகுது'ன்னு 'விடாது கருப்பு' மாதிரி வீட்ல பயமுறுத்துக்கிட்டே இருந்தானுங்க.. சரி நாம அடுத்த வருஷமும் பத்தாம்கிளாஸ்தான் நினைச்சுக்கிட்டேன். திடீர்ன்னு எங்கண்ணன் என்ன பண்ணாரு.. திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் பக்கத்துல மெங்கிள்ஸ் ரோட்டுல 'மெக்காலே'ன்னு ஒரு வாத்தியார் இருந்தார். அவர் அப்ப டட்லி ஸ்கூல்ல வாத்தியார். அவர்கிட்ட கொண்டு போய் என்னை நிறுத்தி, "இந்தப் பய இங்கிலீஷை கண்டா பயந்து ஓடுறான் ஸார்.. கணக்கைத் தொடவே மாட்டேங்குறான் ஸார்"ன்னு வண்டி வண்டியா கம்ப்ளையிண்ட் பண்ணிட்டார்.. எனக்கு, "என்னடா எழவு இது? நம்ம ஸ்கூல்ல சொல்லித் தர்றதே மண்டைல ஏறலை.. இவர் வேற ஸ்கூல் வாத்தியார்.. இவர் என்ன சொல்லித் தரப் போறாரு?"ன்னு நினைச்சுக்கிட்டு முதல் நாள் டியூஷனுக்குப் போனேங்க..


அங்கதாங்க எனக்கு ஆப்பு.. உள்ள நுழைஞ்சா தலையே சுத்துது.. கண்ணை சிமிட்டிக்கிட்டே இருந்துச்சு. என்னன்னா..? உள்ளாற ஒரு பத்து, பன்னெண்டு பாவாடை, தாவணிக உக்காந்திருந்துச்சுக.. அம்புட்டுத்தான்.. அப்படியே சுவரோட சுவரா போய் ஒட்டிக்கிட்டோம்ல..


அதுல பாருங்க ஒரு விஷயம்.. அந்த மெக்காலே ஸார் ரொம்ப தங்கமான மனுஷன்.. அடிக்கடி இடைல இடைல ஜோக்கடிச்சு கலகலப்பாக்கிருவாரு.. டியூஷனும் ஆரம்பிச்சிருச்சுங்க. ஆனா நமக்கு வேற கணக்கு ஆரம்பிச்சிருக்குங்க. அதாங்க லுக் விடுறது.. அதுல பாருங்க.. நம்மளை கிறுக்குப் பிடிக்க வைக்கணும்னா கணக்கும், இங்கிலீஷ¤ம் வேணாம்ங்க.. லேசா ஒரு கண் பார்வை போதும்ங்க.. அதேதான் அன்னைக்கும் நடந்துச்சு.. செத்தேன் போங்க..


ராத்திரி வீட்ல எங்கக்கா தட்டுல என்னத்தையோ வைச்சுது.. என்னத்தையோ ஊத்துச்சு.. மோட்டு வளையை பார்த்துட்டு நானும் என்னத்தையோ தின்னுத் தொலைச்சிட்டு வாயைக்கூடத் தொடைக்காம படுத்துட்டேன்.. எங்க தூக்கம் வர்றது? அந்த முகம்.. லேசான உதட்டுச் சுழிப்பு.. குறுகுறுன்னு ஓரக்கண்ணுல பார்க்குற பார்வை.. (ஐயையோ சென்ஷி.. இன்னிக்குத் தூங்க முடியாதே..) முடியல அண்ணாத்தே..


மறுநாள்தான் பேர் என்ன? குலம் என்ன? கோத்திரம் என்னன்னு லேசுபாசா விசாரிக்க ஆரம்பிச்சேன்.. பேரு சாந்தியாம்.. ஆஹா.. அமைதியான பொண்ணுக்கு ஏத்த அழகான பேராச்சேன்னு மனசு குதிக்க ஆரம்பிச்சிருச்சு.. இந்தப் பக்கம் நம்ம மெக்காலே ஸார் வாங்குற பீஸ¤க்கு வஞ்சகம் இல்லாம பாடம் சொல்லிக் கொடுத்தாரு.. ஆனா நாம கேக்கணுமே.. நாமதான் ஓணானுக்கே தண்ணி காட்டுறவனுகளாச்சே..


லேசா பேச ஆரம்பிச்சேன்.. ஆரம்பிச்சோம்.. நோட்டு வாங்கி எழுதுற மாதிரி கையெழுத்தைப் பார்த்து 'அடியாத்தீ'ன்னு மூக்குல விரல் வைச்சு என்னை நிமிர்ந்து பார்த்தப்ப அப்படியே அப்துல்கலாம் ரேஞ்சுக்கு போயிட்டேன் போங்க.. அடுத்த நாள் அவுக நோட்டை நான் வாங்கி அழகா எழுதிக் கொடுத்தேன் பாருங்க.. அவுக பார்த்த பார்வையும் உதடு குவிச்சு சொன்ன 'தேங்க்ஸ¤ம்' அம்சமாத்தான் இருந்துச்சு..அடுத்த நாள் எங்கண்ணன்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி ரெண்டு ரூபா வாங்கி அதுல எட்டணாவுக்கு கடலை மிட்டாய் வாங்கி டியூஷனுக்கு இடைல எல்லாருக்கும் தானதர்மம் கொடுத்து 'கர்ணன்'னு மெக்காலே ஸார்கிட்ட பேர் எடுத்தேன்.. அப்ப நம்ம மயிலுக்கு என் கையால கொடுத்து அதை அது வாங்கி லேசா ஒரு 'பார்வை' பார்த்து வாயில் போட்டது பாருங்க.. இப்பவும் நான் பிச்சைக்காரன்களைப் பார்த்தா ஒத்த ரூபா.. ரெண்டு ரூபான்னு போட்டுக்கிட்டுத்தான் இருக்கேன். எவனும் அப்படியொரு தேங்க்ஸ் சொல்லலீங்க..


எக்ஸாம் வேற பக்கத்துல நெருங்கிருச்சு.. நம்ம பசங்க நம்மளை கரெக்ட்டா புடிச்சிட்டானுங்க. "டேய்.. வேணாம் விட்ரு.. அவுங்க அப்பன் ஒரு மாதிரி ஆளு.. பார்த்து நடந்துக்க.."ன்னு ஏகப்பட்ட அட்வைஸ்.. அதெல்லாம் நம்ம மண்டைல ஏறுமா.. ம்ஹ¤ம்.. அடிபடப் போறன்னாங்களா.. அடிபடாம இருக்கிறதுக்கு என்ன வழின்னு யோசிச்சேன். நேரா அவுங்க வீட்டுக்கே போயிட்டா என்னன்னு ஒரு கிறுக்கு..


போயிட்டேன்ல.. அடுத்த நாள்.. அது என்னன்னா.. அப்பத்தான் 'வைதேகி காத்திருந்தாள்' படம் ரிலீஸான சமயம்.. மெக்காலே ஸார் வீட்ல டேப் ரிக்கார்டர் இருந்துச்சு. சமயத்துல அவர் வர்றதுக்கு லேட்டாயிருச்சுன்னா அவரோட வூட்டுக்காரம்மா (இவுகளும் அதே டட்லி ஸ்கூல்ல டீச்சர்தான்) அந்த கேஸட்டை போட்டு பாட்டு போடுவாங்க.. அதைக் கேட்டுக்கிட்டு ஸார் வர்றவரைக்கும் அமைதியா இருப்போம்.. அதுல பாருங்க.. அந்த 'ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு'ன்ற பாட்டு அப்படியே என்னை உருக்கிருச்சு.. அது அப்படியே என்னை நினைச்சுத்தான் ஆர்.சுந்தர்ராஜன், இளையராஜாகிட்ட சொல்லி பாட்டு வாங்கிருப்பாரோன்னு நினைப்பு..


அந்த கேஸட் வேணும்னு நம்ம மயிலு, மெக்காலே ஸார்கிட்ட ஒரு நாள் கேட்டுச்சு. "வேற ரிக்கார்ட் போட்டு தர்றேம்மா"ன்னாரு ஸார்.. சரின்னு தலையாட்டிக்கிட்டு கிளம்புச்சா.. நமக்கு கோபம்னா கோபம்.. 'என்ன இந்தாளு.. கேக்குறது யாரு? நம்ம மயிலு.. கேட்டு இல்லைன்னு சொல்லலாமா?' அப்படீன்னுட்டு பட்டுன்னு அந்த கேஸட்டை சுட்டுட்டேன்.. முதல் திருட்டு. (ம்ஹ¤ம்.. லவ் மேட்டர் என்னல்லாம் பாடு படுத்துச்சு பாருங்க)


நம்ம மயிலு அவுக வீட்டுக்குப் போயிட்டிருந்தாக.. நானும் பின்னாடியே அவுகளுக்குத் தெரியாம போயிட்டேன். அவுக வீடும் திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் பக்கத்துல இடது பக்கம் ஒரு சின்ன சந்துக்குள்ள இருந்துச்சு. அவுக உள்ள போயி பத்து நிமிஷம் கழிச்சு, நானும் வீட்டு வாசல்ல போய் நின்னேனா.. ஷாக்குன்னா ஷாக்.. அப்படியொரு ஷாக்..


ஆனாலும் வரவேற்பு பலம்ல.. "வாங்க.. வாங்க.."ன்னு கூப்பிட்டு அப்படியொரு பாசத்தைக் கொட்டிட்டாகல்லே.. "இந்தப் பக்கமா வந்தேன். நீங்க உள்ள நுழைஞ்சதை பார்த்தேன்.. உங்க வீடா இருக்குமோன்னு சந்தேகம். அதான் வந்தேன்ணேன்(எப்படி சமாளிப்பு)".. "காபி குடிங்க"ன்னாங்க.. வேணாம்னுட்டு.. அப்படியே நைஸா நான் சுட்டுட்டு வந்த கேஸட்டை கொடுத்தேன். பார்த்தவுடனே அவுக முகத்துல இருந்த சந்தோஷம் பாருங்க.. அப்படியே செத்துட்டேன் போங்க. எந்தக் கேள்வியும் கேக்காம வாங்கிட்டு "அம்மா கோட்டை மாரியம்மன் கோவிலுக்குப் போயிருக்காக.. வந்தவுடனே நாளைக்குப் பணம் வாங்கிட்டு வர்றேன்"னாங்க.. பணத்துக்கா இவ்ளோ அலப்பறை.. "இல்லங்க.. வேணாங்க.. என் பிரெண்ட் மூணு கேஸட் வைச்சிருந்தான். எனக்கு ரெண்டு கொடுத்தான். அதுல ஒண்ணுதான் இது.."ன்னு சொல்லி நம்ப வைச்சேன்.


இப்படியே ஆரம்பிச்சுதுங்க.. நம்ம ஒன் சைடு லவ்வு.. இடைல ஒரு நாள் அவுகளை அப்படியே படமா வரைஞ்சு அவுக நோட்ல வைச்சுக் கொடுத்தேன். மறுநாள் பார்த்தேன். ஏதாவது பலன் கிடைக்குமான்னு.. ஒண்ணுமே சொல்லாம.. கிளாஸ் முடிஞ்சப்புறம்.. வெளில வரும்போது ரகசியமா "படம் பார்த்தேன்.. நல்லாயிருந்துச்சு. தேங்க்ஸ்.. என் வீட்ல ஒட்டி வைச்சிருக்கேன்.."னு சொல்லிட்டு போச்சா.. அம்புட்டுத்தான்.. அன்னிக்கும் தூக்கமில்லாம போச்சுங்க..


என் பிரெண்ட்ஸ்லாம் "சீக்கிரம் லெட்டரை குடுறா.. லெட்டரை குடுறான்"னு அனத்துனாங்க.. என்ன எழுதுறது? எப்படி எழுதுறதுன்னு தெரியலை.. எப்படியோ நாலு வரில ஒரு கடுதாசியை எழுதி வைச்சுப்புட்டு "நாளைக்கு குடுக்கலாம்.. நாளன்னிக்கு கொடுக்கலாம்"னு அப்படியே பொத்தி பொத்தி வைச்சிருந்தேனுக.. அப்படியே டைமும் ஓடிருச்சு. டெய்லி சாயந்தரம் அவுககூட அவுங்க வீடுவரைக்கும் போய் பத்திரமா விட்டுட்டு அப்புறம்தாங்க நம்ம வீடு இருக்குற குமரன்திருநகருக்கு போவேன். இப்படியொரு செக்யூரிட்டி வேலை..


எக்ஸாம் நெருங்கின உடனே மெக்காலே ஸார் எங்களுக்கெல்லாம் வீட்லயே ஒரு பார்ட்டி வைச்சு எங்களை உற்சாகப்படுத்தி பேசினார். சரி.. இன்னிக்காச்சும் சொல்லிரலாம்னு சொல்லி என் பேண்ட் பாக்கெட்ல இருந்த லெட்டரை எடுத்து வசதியா இருக்கும்னு நினைச்சு சட்டைப் பாக்கெட்ல வைச்சுக்கிட்டு திரிஞ்சேன்.. சனியன் புடிச்ச அன்னிக்குப் பார்த்து அவளோட அண்ணன்காரன் தங்கச்சியைக் கூப்பிடுறதுக்காக நேராவே வந்துட்டான். அவனைப் பார்த்தவுடனே "ஏதோ வேலை இருக்கு.. சீக்கிரம் போகணும். வரேன் ஸார்"ன்னு சொல்லிட்டுப் போயிட்டா..


நானும் விடலை.. "எனக்கும் வேலை இருக்கு ஸார்"ன்னு சொல்லிட்டு கிளம்பி வாசலுக்கு வந்தா... மச்சான்காரன் பைக்ல கூட்டிக்கிட்டுப் போறான். நம்மளோ நடராஜா பஸ் சர்வீஸ்.. இதுல எங்க போய் ஒட்டுறது? வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.. போங்க..


அன்னிக்கு சாயந்தரமே அவுக வீட்டுக்கு நான் போக.. அவுக வீட்ல இருந்த பெரிசுக.. ரெண்டு வார்த்தை பேசறதுக்குள்ள "எக்ஸாமுக்கு படிக்க வேணாமா? நீ உள்ள போய் படிம்மா.. நீ போப்பா.."ன்னு கழுத்தைப் புடிச்சுத் தள்ளாத குறையாத் தள்ளிட்டானுக.. வெறுத்தே போச்சுங்க.. இதுல எங்க வூட்ல வேற ஏதோ நான் படிச்சு கலெக்டராகப் போறேனாக்கும் என்ற நினைப்பில் "படி.. படி.. வீட்டை விட்டு வெளில போகக்கூடாது. போன.. கால் இருக்காது"ன்னு தடா, பொடா உத்தரவெல்லாம் போட்டுக் கொன்னுட்டானுக..


ஒரு வழியா எக்ஸாம் முடிஞ்சு மயில பார்க்க அவசரம் அவசரமா அவுக வீட்டுக்குப் போறேன்.. வூடு பூட்டிருக்கு. "அவுக எங்கயோ வீடு மாறிப் போயிட்டாங்க"ன்னு அக்கம்பக்கத்துல சொன்னாங்க.. என்னடா இது கருமாந்திரம்..? எப்படியும் கண்டுபிடிச்சிருவோம்னு நினைச்சு திண்டுக்கல் முழுக்க அலையோ அலைன்னு அலைஞ்சு எனக்கு வெறுத்துப் போச்சு..


வருஷம் ஓடிருச்சுங்க.. ஒரு அஞ்சாறு வருஷமாயிருக்கும். திண்டுக்கல் எம்.வி.எம். காலேஜ்ல படிச்ச என்னோட சொந்தக்கார அக்கா ஒருத்தங்க சர்டிபிகேட் வாங்க காலேஜுக்கு போனாங்க. நானும் துணைக்குக் கூடப் போயிருந்தேன். காலேஜ் ஆபீஸ்ல அவுங்க சர்டிபிகேட் வாங்க உள்ள போக நான் வெளியே காத்திருக்க..

அப்ப பாருங்க.. அந்தக் கண்ணு.. அதாங்க நம்ம மயிலு.. கண்ணு காட்டிக் கொடுத்திருச்சே.. எதுத்தாப்புல வருது.. நமக்கு அப்படியே காணாததைக் கண்டவன் மாதிரியாயிருச்சுங்க.. ஏதோ கவிதை, கதைல எழுதுவாங்களே.. மூளைல நட்சத்திரம் வெடிச்ச மாதிரி.. பல்பு எரியற மாதிரின்னு.. அப்படித்தான்.. நானும் அவுங்களை நோக்கிப் போறேன்.. அவுங்களும் நம்மளை நோக்கி வர்றாக. திடீர்ன்னு பார்த்தா நம்மளை பார்த்துக்கிட்டே உள்ள போறாக.. அப்படியே அசந்துட்டேன் போங்க.


பின்னாடியே ஒரு ஆள் வேற போறான்.. 'என்னடா இது? இவன் யாரு புதுசா இருக்கு?'ன்னு யோசிச்சுக்கிட்டே நிக்கேன்.. நிக்கேன். நின்னுக்கிட்டே இருக்கேன்.. பத்து நிமிஷம் கழிச்சு மயிலு வெளில வந்து வாசல்ல நின்னுச்சா.. இப்பத்தான் சாமி முழுசா பார்த்தேன் என் மயில..! வயிறு வீங்கிப் போயிருந்துச்சு..


"எனக்கு எப்படி இருந்திருக்கும்?" கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.. சினிமால வர்றா மாதிரி கூட வந்தவன் அவ தோள்ல கை போட்டு நடக்க அதுவும் நடக்குது.. நானும் அப்படியே பின்னால நடக்குறேன்.. என்ன செய்றதுன்னே தெரியலை..


மயிலோட வூட்டுக்காரன் வண்டியை ஸ்டார்ட் செஞ்சு கிளப்புறான்.. மயிலு வண்டில உக்காருது.. நான் பார்த்துக்கிட்டே இருக்கேன். வண்டி கிளம்புது. நான் முன்னால நடக்குறேன்.. காலேஜ் மெயின் கேட் பக்கத்துல வந்தவுடனே மயில் லேசா திரும்பி என்னைப் பார்த்து தன்னோட இடது கையை தன் வயித்து மேல வைச்சு லேசா ஒரு சிரிப்பு சிரிச்சுச்சு பாருங்க..


அதே சிரிப்புதான்.. என் கையெழுத்தைப் பார்த்து சிரிச்ச அதே சிரிப்புத்தான்.. கடலைமிட்டாய் வாங்கிட்டு சிரிச்ச சிரிப்புத்தான்.. நான் வரைஞ்சு கொடுத்த ஓவியத்தைப் பார்த்து சிரிச்ச அதே சிரிப்புத்தான்.. எந்த வித்தியாசமும் இல்லீங்கண்ணேன்.. சென்ஷியண்ணேன்.. சத்தியமா சொல்றேன்.. அடுத்த ஆறு மாசத்துக்கு அண்ணன் தேவதாஸ் மாதிரிதான் திரிஞ்சேனுங்க..


இன்னிவரைக்கும் அந்தச் சிரிப்புக்கான அர்த்தம் என்னன்னுதான் தெரியலீங்க.... என்னை அடையாளம் கண்டுக்கிட்டதா நினைச்சு சிரிச்சாளா? இல்ல.. எவனோ ஒருத்தன் தன்னை பார்த்துக்கிட்டு நிக்குறானேன்னு நினைச்சுப் பார்த்தாளா? படிக்கிற நீங்களாச்சும் எனக்குச் சொல்லுங்க..


ஆனா ஒண்ணு சாமி.. எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் சரி.. இந்தக் 'கண்ணு' மேட்டர்ல மட்டும் ஒருத்தன் சிக்குனான்னு வைங்க.. அவன் நாயுடு கடை கொத்து புரோட்டாதான். இது என் அனுபவம்.. சொல்லிப்புட்டேன்.. பார்த்து நடந்துக்குங்க..


அண்ணன் சென்ஷி அவர்களே.. உங்க புண்ணியத்துல என் மனசுல இருந்ததைக் கீழ கொட்டிட்டேன்.. இம்புட்டுத்தான் நம்மளோட பர்ஸ்ட் லவ்வு மேட்டர்.. இதைப் படிச்சுப்புட்டு இளதாரிப் பயலுக அல்லாரும் சுதாரிப்பா இருந்துக்கணும்னு நாலு பயபுள்ளைகளுக்கு புத்தி சொல்லி திருத்துங்க.. இன்னா.. வரட்டா..?

பீடிங் பாட்டிலில் பீர்-கலக்குது கலாச்சாரம்









































































































































கோடானு கோடி தமிழர்களே.. இங்கே எனக்கு காணக் கிடைத்த அற்புதத்தை உங்களது பார்வைக்கும் வைக்கிறேன். பார்த்துத் தொலையுங்கள்.. இந்தக் கர்மமோ, காவியமோ.. நடந்தது ரேடியோ மிர்ச்சி நிறுவனம் நடத்திய விழாவில்..
































ராகங்களும் பாடல்களும்

நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியிருந்த மெயிலில் இசை பற்றிய இந்த விஷயம் இருந்தது. தமிழ் பாடல்கள் அமைந்திருக்கும் ராகங்களை அதில் பட்டியலிட்டிருக்கிறார். தலைப்பு ராகங்களையும், அடுத்து இருக்கும் வரிசையில் முதலில் இருப்பது பாடலையும், இரண்டாவதாக அப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தினையும், மூன்றாவதாக அப்பாடலை பாடியவர்களையும் குறிக்கிறது.

ராகங்களும் பாடல்களும்
1. கனகாங்கி
மோகம் என்னும் - சிந்துபைரவி - ஜேசுதாஸ்
2. தோடி

கங்கைக் கரை மன்னனடி-வருஷம் 16-ஜேசுதாஸ்
3. மாயாமளவகெளலா

நண்டு ஊறுது - பைரவி - டி.எம்.செளந்தர்ராஜன்
தென்னங்கீற்றும் - முடிவில்லா ஆரம்பம் - மலேசியா வாசுதேவன், பி.சுசீலா
மதுரை மரிக்கொழுந்து - எங்க ஊரு பாட்டுக்காரன் - மனோ, சித்ரா
இளமனதில் - மஞ்சள் நிலா - ஜேசுதாஸ், பி.எஸ்.சசிரேகா
மஞ்சள் நிலாவுக்கு - முதல் இரவு - பி.சுசீலா, ஜெயச்சந்திரன்
பூங்கதவே - நிழல்கள் - தீபன், உமாரமணன்
கண்ணின் மணியே - மனதில் உறுதி வேண்டும் - சித்ரா
கனவா இது உண்மையா? - அறுவடை நாள் - எஸ்.பி.பி. சித்ரா
ராமநாமம் - ராகவேந்திரா - ஜேசுதாஸ், வாணிஜெயராம்

4. சரசாங்கி

என்றென்றும் ஆனந்தமே - கடல் மீன்கள் - மலேசியா வாசுதேவன்

5. சாலநாட்டை

பனிவிழும் - நினைவெல்லாம் நித்யா - எஸ்.பி.பி.
கூடாமல்லிப் பூவே - கல்லுக்குள் ஈரம் - எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்

6. சுபபந்துவல்லி

வைகறையில் - பயணங்கள் முடிவதில்லை - எஸ்.பி.பி.
வா வெளியே - பாடு நிலாவே - எஸ்.பி.பி., சித்ரா
அலைகளில் மிதக்குற - அந்த ஒரு நிமிடம் - எஸ்.பி.பி. எஸ்.ஜானகி

7. கல்யாணி

வந்தாள் மகாலட்சுமி - உயர்ந்த உள்ளம் - எஸ்.பி.பி.
விழிகள் மீனோ - ராகங்கள் மாறுவதில்லை - எஸ்.பி.பி.
நதியில் ஆடும் பூவனம் - காதல் ஓவியம் - எஸ்.பி.பி. ஜானகி
நான் என்பதும் நீ என்பதும் - சூரசம்ஹாரம் - மனோ, சித்ரா
கலைவாணியே - சிந்துபைரவி - ஜேசுதாஸ்
வைதேகி ராமன் - பகல் நிலவு - எஸ்.ஜானகி
நான் பாட வருவாய் - உதிரிப்பூக்கள் - எஸ்.ஜானகி
ஜனனி ஜனனி - தாய் மூகாம்பிகை - இளையராஜா
மஞ்சள் வெயில் - நண்டு - உமா ரமணன்

8. சிம்ஹேந்த்ரமத்யமாம்

ஆனந்தராகம் - பன்னீர்புஷ்பங்கள் - உமா ரமணன்
பல ஜென்மம் - அழகிய கண்ணே - எஸ்.பி.ஷைலஜா
நீ பெளர்ணமி - ஒருவர் வாழும் ஆலயம் - ஜேசுதாஸ்

9. ஷண்முகப்பிரியா

தகிடதமி - சலங்கை ஒலி - எஸ்.பி.பி.
தம்தனதம்தன - புதிய வார்ப்புகள் - ஜென்ஸி, வசந்தா
10. ரசிகப்பிரியா

சங்கீதமே - கோவில்புறா - எஸ்.ஜானகி

11. பந்துவராளி

ரோஜாவைத் தாலாட்டும் - நினைவெல்லாம் நித்யா - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி

12. வசந்த

அந்திமழை - ராஜபார்வை - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி,
மான் கண்டேன் - ராஜரிஷி - ஜேசுதாஸ், வாணி ஜெயராம்
13. கெளலா

வேதம் நீ - கோவில் புறா - ஜேசுதாஸ்

14. ரசிகரஞ்சனி

அமுதே தமிழே - கோவில்புறா - பி.சுசீலா, உமா ரமணன்
நீலக்குயிலே - மகுடி - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி

15. கெளரி மனோகரி

கண்ணா வருவாயா - மனதில் உறுதி வேண்டும் - ஜேசுதாஸ், சித்ரா
தூரத்தில் நான் - நிழல்கள் - எஸ்.ஜானகி
கண்ணன் நாளும் - இளமைக்கோலம் - எஸ்.ஜானகி
பொன்வானம் - இன்று நீ நாளை நான் - எஸ்.ஜானகி
தாழம்பூவே - இன்று நீ நாளை நான் - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி, எஸ்.பி.ஷைலஜா
சோலைப்பூவில் - வெள்ளைரோஜா - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி

16. ஹம்ஸவத்னி

மயிலே மயிலே - கடவுள் அமைத்த மேடை - எஸ்.பி.பி., ஜென்ஸி
தேர்கொண்டு வந்தவன் - எனக்குள் ஒருவன் - பி.சுசீலா
நிலா காயும் மேகம் - செம்பருத்தி - மனோ - ஜானகி
சொர்க்கமே என்றாலும் - ஊரு விட்டு ஊரு வந்து - இளையராஜா, ஜானகி
இன்னும் என்ன செய்ய - சிங்காரவேலன் - எஸ்.பி.பி., ஜானகி

17. ஹம்சநந்தி

ராகதீபமே - பயணங்கள் முடிவதில்லை - எஸ்.பி.பி.
நீ பாடும் பாடல் - எங்கேயே கேட்ட குரல் - எஸ்.ஜானகி
ராத்திரியில் - தங்கமகன்- எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
வா.. வா.. அன்பே - அக்னிநட்சத்திரம் - ஜேசுதாஸ், சித்ரா
வேதம் - சலங்கை ஒலி - எஸ்.பி.பி., எஸ்.பி.ஷைலஜா

18. ரீத்திகெளலா

சின்னக்கண்ணன் அழைக்கிறான் - கவிக்குயில் - பாலமுரளிகிருஷ்ணா
தலையைக் குனியும் தாமரையே - ஒரு ஓடை நதியாகிறது - எஸ்.பி.பி., எஸ்.ராஜேஸ்வரி
ராமன் கதை கேளுங்கள் - சிப்பிக்குள் முத்து - எஸ்.பி.பி., குழுவினர்

19. அபிஹோகி

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ - வைதேகி காத்திருந்தாள் - ஜெயச்சந்திரன், வாணிஜெயராம்

20. கீரவாணி

காற்றில் எந்தன் கீதம் - ஜானி - எஸ்.ஜானகி
தங்கச்சங்கிலி - தூறல் நின்னு போச்சு - எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்
கீரவாணி - பாடும் பறவைகள் - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
மலர்களிலே ஆராதனை - எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்

21. கரஹரப்பிரியா

மாப்பிள்ளைக்கு - நெற்றிக்கண் - பி.சுசீலா, மலேசியா வாசுதேவன்
பூ மலர் இந்த - டிக் டிக் டிக் - ஜேசுதாஸ், ஜென்ஸி

22. மத்யமாவதி

சோலைக்குயிலே - பொண்ணு ஊருக்குப் புதுசு - எஸ்.பி.ஷைலஜா
என் கல்யாண வைபோகம் - அழகே உன்னை ஆராதிக்கிறேன் - எஸ்.பி.ஷைலஜா
தாகம் எடுக்கிற - எனக்காக காத்திரு - உமாரமணன்
நீதானே - நினைவெல்லாம் நித்யா - எஸ்.பி.பி.

23. சுட்டசந்யாஸி
ராகவனே - இளமைக்காலங்கள் - பி.சுசீலா
சிறுபொன்மணி - கல்லுக்குள் ஈரம் - இளையராஜா, எஸ்.ஜானகி
காலை நேர - பகவதிபுரம் ரயில்வே கேட் - தீபன்சக்கரவர்த்தி, எஸ்.பி.ஷைலஜா
மனசு மயங்கும் - சிப்பிக்குள் முத்து - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
மாஞ்சோலைக் கிளிதானோ - கிழக்கே போகும் ரயில் - ஜெயச்சந்திரன்
விழியில் விழுந்து - அலைகள் ஓய்வதில்லை - பி.எஸ்.சசிரேகா
புதிய பூவிது - தென்றலே என்னைத் தொடு - எஸ்.பி.பி. எஸ்.ஜானகி
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு - உன்னால் முடியும் தம்பி - எஸ்.பி.பி.

24. பிலஹரி

மாமன் வீடு மச்சு வீடு - எல்லாம் இன்ப மயம் - எஸ்.பி.பி.
மனிதா சேவை - உன்னால் முடியும் தம்பி - ஜேசுதாஸ்

25. சந்திரகவுன்ஸ்

வெள்ளிச் சலங்கைகள் - காதல் ஓவியம் - எஸ்.பி.பி.

26. மதுவந்தி

என்னுள்ளில் - ரோசாப்பூ ரவிக்கைக்காரி - வாணி ஜெயராம்
மீண்டும் மீண்டும் வா - விக்ரம் - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி

27. கப்பி

ஏய் பாடல் ஒன்று - ஜேசுதாஸ், ஜானகி
சங்கத்தில் - ஆட்டோராஜா - இளையராஜா, எஸ்.ஜானகி
தாயும் நானே - எங்கேயோ கேட்ட குரல் - எஸ்.ஜானகி

28. சாரமதி

பாடறியேன் - சிந்துபைரவி - சித்ரா

29. தர்பாரிகண்டா

பூமாலை வாங்கி வந்தான் - சிந்துபைரவி - ஜேசுதாஸ்

30. சிந்துபைரவி

நான் ஒரு சிந்து - சிந்துபைரவி - சித்ரா
மணியோசை கேட்டு - பயணங்கள் முடிவதில்லை - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
மாதா உன் கோவிலில் - அச்சாணி - எஸ்.ஜானகி
ஓம் நமச்சிவாயா - சலங்கை ஒலி - எஸ்.ஜானகி
தரிசனம் கிடைக்காதா - அலைகள் ஓய்வதில்லை - எஸ்.ஜானகி

31. மோகனம்

நின்னுக்கோரி வர்ணம் - அக்னி நட்சத்திரம் - சித்ரா
பூவில் வண்டு - காதல் ஓவியம் - எஸ்.பி.பி.
நான் ஒரு - கண்ணில் தெரியும் கதைகள் - எஸ்.பி.பி., பி.சுசீலா, எஸ்.ஜானகி
நான் உந்தன் - உல்லாசப்பறவைகள் - எஸ்.ஜானகி
மீன் கொடி தேரில் - கரும்புவில் - ஜேசுதாஸ், ஜென்ஸி
தோகை இளமயில் - பயணங்கள் முடிவதில்லை - எஸ்.பி.பி.

32. சுத்தஜாவேரி

ராதா ராதா - மீண்டும் கோகிலா - எஸ்.பி.பி. எஸ்.ஜானகி
மலர்களில் ஆடும் - கல்யாண ராமன் - எஸ்.பி.ஷைலஜா
கோயில் மணி ஓசை - கிழக்கே போகும் ரயில் - எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்
காதல் மயக்கம் - புதுமைப்பெண் - ஜெயச்சந்திரன், சுனந்தா

33. ஆராபி

சந்தக் கவிதை - மெட்டி - பிரம்மானந்தம்

34. அமிர்தவர்ஷிணி

தூங்காத விழிகள் - அக்னி நட்சத்திரம் - ஜேசுதாஸ், எஸ்.ஜானகி
மழைக்கொரு தேவனே - ராகவேந்திரா - ஜேசுதாஸ்

35. லலிதா

இதழில் கதை எழுதும் - உன்னால் முடியும் தம்பி - எஸ்.பி.பி., சித்ரா

36. மலையமருடம்

கோடி இன்பம் - நெஞ்சில் ஆடும் பூ ஒன்று - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
கண்மணி நீ வர - தென்றதே என்னைத் தொடு - ஜேசுதாஸ், உமா ரமணன்
பூஜைக்காக - காதல் ஓவியம் - தீபன் சக்கரவர்த்தி

37. சாருகேசி

சின்னஞ்சிறு கிளியே - முந்தானை முடிச்சு - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
உயிரே - என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு - ஜேசுதாஸ், சித்ரா
ஆடல் கலையே - ராகவேந்திரா - ஜேசுதாஸ்

சொந்தமும், பந்தமும்

வரதன் படு டென்ஷனில் இருக்கிறான். காரணம், ஊரில் இருந்து அவனது தம்பி தண்டபாணி வந்திருக்கிறான். வந்தவன் சும்மா வரவில்லை. தனது லைன்மேன் லைசென்ஸ் எடுப்பதற்காக பணம் கேட்டு வந்திருக்கிறான். மனைவி புவனாவுக்கு அவனைப் பார்க்க பாவமாக இருக்க.. பணத்தைக் கொடுத்து அனுப்பும்படி சொல்கிறாள். வரதனுக்கோ “இன்னும் எவ்ளோதான் இவனுகளுக்கெல்லாம் அழுகுறது?” என்று கத்துகிறான்.

பிள்ளைகள் ராஜாவும், சித்ராவும் பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள். புது வருடம்.. இருவரும் 4, 6 வகுப்புகளுக்குத் தாவியிருக்கிறார்கள். நேற்று இரவே நோட்டுப் புத்தகங்களுக்கு அட்டைப் போட்டுக் கொடுத்தான் வரதன். அதில் பாதிதான் போட முடிந்தது. அதற்குள் தம்பியைப் பார்த்த டென்ஷனில் எழுந்து வெளியே போய்விட்டான் வரதன்.

ராஜா இன்னும் போடாமல் இருக்கும் புத்தகங்களுக்கு அட்டை போட்டுக் கொடுத்தால்தான் ஸ்கூலுக்குப் போவேன் என்று கத்துகிறான். சித்ராவும் “எனக்கும் அதே மாதிரி போட்டுக்கொடுங்க.. இல்லேன்னா மிஸ் அடிப்பாங்க..” என்று கண்ணைக் கசக்குகிறாள். வரதன் இருக்கின்ற நிலைமைக்கு அவனால் முடியவில்லை. “முடிஞ்சா நீயே போட்டுக் கொடுடி” என்று மனைவியையே திட்டுகிறான். “நான் அடுப்பு வேலைய பார்ப்பேனா.. இதை பார்ப்பேனா?” என்று திட்ட வரதன் கோபித்துக் கொண்டு வெளியே செல்கிறான்.

“கோபத்தைப் பாரு.. வெட்டி வீறாப்பு..” என்று புவனா சொல்லும்போது குளித்து முடித்த நிலையில் சித்தப்பா தண்டபாணி வருகிறான். “சித்தப்பா.. சித்தப்பா உங்களுக்கு நோட்டுக்கு அட்டை போடத் தெரியுமா? போட்டுக் கொடுங்க சித்தப்பா..” என்கிறார்கள் பிள்ளைகள். “அவ்ளோதான.. பத்தே நிமிஷத்துல போட்டுடலாம்..” என்ற தண்டபாணி அப்படியே தலையைக்கூடத் துவட்டாமல் அட்டைப் போடத் துவங்குகிறான்.

இருவருக்கும் டிபன் பாக்ஸில் லன்ச்சைத் திணித்த புவனா பையன் ராஜாவை மட்டும் தனியே அழைத்து.. “உனக்கு மட்டும் கூட நாலு பிஸ்கெட் வைச்சிருக்கேன். அக்காகிட்ட காட்டாம அப்புறமா சாப்பிட்டிரு..” என்கிறாள். “போம்மா.. எதுக்கும்மா அக்காவுக்குத் தெரியாம வைச்ச.. அக்காவுக்கும் அதே மாதிரி வைம்மா..” என்கிறான் ராஜா. “இல்லடா. நீ சின்னப் பையன்.. நிறைய பசிக்கும்ல.. அதுக்குத்தான்..” என்கிறாள் புவனா. “போம்மா.. சின்னப் பையனோ, பெரிய பையனோ.. நாங்க ரெண்டு பேருமே உங்க பிள்ளைகதான.. நேத்து பாருங்க.. என் வாட்டர் கேன்ல தண்ணி தீர்ந்து போச்சா? கிளாஸ்ல யாருமே எனக்குத் தண்ணி தர மாட்டேங்கா.. கடைசியா அக்காதான் வந்து அது வைச்சிருந்தத எடுத்துக் கொடுத்துச்சு.. எனக்கு ஒண்ணுன்னா அக்காதான முன்னாடி ஓடிவரும். அதான் சொல்றேன்.. எனக்கு ரெண்டு, அக்காவுக்கு ரெண்டு வை..” என்கிறான். புவனா நெகிழ்ந்து போகிறாள்.

அலுவலகத்திற்கு புறப்பட வேண்டுமே என்ற அவசரத்தில் வீட்டுக்குள் நுழைய முயன்ற வரதன் இதைக் கேட்க அவனுக்குள் ஏதோ ஒன்று உறைப்பதைப் போல் தெரிகிறது. புவனாவிடம் தனியாகச் சென்று “தம்பிக்கு டிபன் போட்டு உக்கார வை.. ATM-ல போய் பணத்தை எடுத்திட்டு வந்திடறேன்.. அவனை வெறும் கையோட அனுப்ப வேண்டாம்..” என்று சொல்லிவிட்டு சிட்டாய் பறக்க காரணம் புரியாமல் அவனைப் பார்க்கிறாள் புவனா.

உரிமை

நமக்கு ஞாயம் இருக்கிறது. இந்த டில்லி அரசாங்கத்தை மாற்ற.. நமக்கு ஞாயம் இருக்கிறது. நம் அரசாங்கத்தை அமைக்க.. அடியோடு இந்தியா பூராவுக்கும் மாற்றாவிட்டாலும், நம் நாட்டைப் பொறுத்தவரைக்கும் நாம் தனிச் சுதந்திர ஆட்சி என்று செய்து கொள்ள நமக்கு உரிமை இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு வந்ததே - முன்னே நான் சொன்னாற்போல, ஒரு பித்தலாட்டத்தினாலே வந்ததே தவிர, நமக்கெல்லாம் ஆசை இருந்து வரவில்லையே.. இந்தியா என்கிற ஒரு தேசம் கணும். அதிலே நாம் ஒரு நாட்டானாக இருக்கணும். அதற்கு ஒரே தேசம்.. அப்படி என்று ஆரம்பிக்கவில்லையே..

- பெரியார் (09-12-1973)

துக்க நாள், மோசடி ஏமாற்றுதல்

நானும் ஆரம்பக் காலந்தொட்டு "இது ஒரு மோசடி, மோசடி என்று ஏமாற்றுதல்தான் என்று சொல்லிக் கொண்டேதான் வந்திருக்கிறேன். சுதந்திரம் வந்தது.. சுதந்திர நாள் என்றபோதே நான் சொன்னேன்.. "இது சுதந்திர நாள் அல்ல.. துக்க நாள்.. மோசடி.. நம்மை ஏமாற்றத் துரோகம் செய்கிற நாள்.. என்று நான் அன்றைக்கே சொன்னவன்தான்..

- பெரியார் (08-12-1973)

கம்யூனிஸ்ட்களின் வேலை

கம்யூனிஸ்ட்.. எவன் காலை நக்கியாவது வயிறு வளர்க்கிறதுதான் அவன் வேலை. இன்னின்னாரோடுதான் இருக்கணும் என்கிற எண்ணம் இல்லை. நாம் வலுத்தால் நம்கிட்ட.. பார்ப்பான் வலுத்தால் அவன்கிட்ட.. இன்னொருவன் வலுத்தால் அவன்கிட்டே.. உலகத்தில் கொள்கையே இல்லாத ஒரு கூட்டம் என்றால் அது நம் கம்யூனிஸ்ட்தான்.

அதற்கு அடுத்தாற்போல காங்கிரஸ். என்ன பண்ணியாவது பதவிக்கு வரணும் என்கிறவன்.. இப்போது துவக்கின ஒரு கட்சி இருக்கிறது.. அண்ணா முன்னேற்றக் கழகம் என்று இருக்கிறது. அவர்களுக்கு சொந்தத்தில் ஏதாவது வேலை இருக்கிறதா? அவர்கள் எதிரிகிட்ட பேசிக் கொண்டு, "காலிகளை ஒழித்துவிட்டு வருகிறேன். எனக்கு ஏதாவது எச்சல்களை போடுகிறாயா?" என்று கேட்கிறார்கள்.

- பெரியார் உரை (04-11-1973)

மதங்கள்

...கிறிஸ்துவ மத தர்மப்படி, மனிதர்கள் எல்லோரும் பாவிகளே ஆவார்கள். ஏசு மூலம் ஜபம், பிரார்த்தனை செய்தால் மன்னிக்கப்பட்டு விடுவார்கள் என்பது கட்டளையாகும். இதனால்தான் மற்ற மதங்களைவிட கிறிஸ்துவ மதத்தில் நேர்மையற்றவர்கள் அதிகமான பேர்கள் இருக்க வேண்டியாதாகிவிட்டது. இஸ்லாமியர்களும், தொழுகையினால் வேண்டுகோளால் பாவம் மன்னிக்கப்பட்டு விடுகிறது என்ற கொள்கையைக் கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள் என்பவர்களோ எல்லா விதமான பாவத்திற்கும் அவை ஒழிய கோவில், குளம், ஸ்தல யாத்திரையே போதுமானவையாகும் என்பது உறுதியான கொள்கையாகும். இந்த நிலையில் எந்த மனிதன்தான் யோக்கியனாக இருக்க முடியும்? மனிதன் எதற்காக யோக்கியனாக இருக்க வேண்டும்?

- 'விடுதலை'(03.09.1973)யில் பெரியார்


பலி


இந்தத் திருமண முறையானது காட்டுமிராண்டி காலத்தில், அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை இன்றைக்கும் மனிதன் எதற்காகக் கடைப்பிடிக்க வேண்டும்? ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே திருமணம் நடைபெறுகிறது. கோவிலுக்கு எப்படி மிருகங்களை பலி கொடுக்கிறார்களோ, அது போலவே ஆணுக்குப் பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்? இந்த நாட்டில் மக்கள் தொகையில் சரி பாதியான பெண்கள் இனத்தை எதற்காக இப்படிக் கொடுமைப்படுத்த வேண்டும்? ஆண்களும், பெண்களும் இத்தகைய தொல்லைகளில் மாட்டிக் கொள்ளாமல், படித்து ஆராய்ந்து விஞ்ஞான அதிசய அற்புதங்களையெல்லாம் கண்டுபிடித்து மேன்மை அடைய வேண்டாமா?

- 'விடுதலை'(03.09.1973)யில் பெரியார்

முட்டாள்தனம்


இந்த அதிசயக் காலத்தில் எனது தாய்மொழி, எனது தாய்நாடு இதற்காக எனது உயிரை விடுவேன் என்று முட்டாள்தனமாகப் பிடிவாதம் பிடித்தால், நாம் எப்போது முன்னேறுவது? உலகம் நாளுக்கு நாள் நமக்கு நெருக்கமாக வந்து கொண்டிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

- 'விடுதலை'(14.11.1972)யில் பெரியார்


கம்யூனிஸ்ட்கள்

...நம் நாட்டுக் கம்யூனிஸ்ட்களைப் பொறுத்தமட்டிலும் அத்தனையும் பொய்யாகிவிட்டது. பெரும் அயோக்கியர்களையும், பித்தலாட்டக்காரர்களையும், கலகக்காரர்களையும், கொள்ளை, கொலையையும் தூண்டி விடும் அராஜகச் செயலைக் கொண்டவர்களையும் கொண்டுள்ளது.
- 'விடுதலை'(05.08.1955)யில் பெரியார்

மதிப்பு தேவையில்லை


பாரத மாதா கொடி, பாரத நாட்டின் கொடி என்றால் அது வட நாட்டைப் பொறுத்த மட்டும்தான். நாங்கள் அதற்கு மதிப்புக் கொடுக்கத் தேவையில்லை. காங்கிரஸ்காரர்கள் என்றால் தாய்நாட்டுப் பற்று, தாய் மொழிப் பற்று, தன்மான உணர்ச்சி, சுய அறிவு இவைகளை எல்லாம் தத்தம் செய்தாக வேண்டும்.

- 'விடுதலை'(04.08.1955)யில் பெரியார்

இந்திய அரசாங்கம் வேண்டாம்

எங்களுக்குத் தமிழர்களுக்கு - தமிழ் நாட்டாருக்கு - இந்திய அரசாங்கம் வேண்டாம். தமிழ்நாடு - தமிழர்கள் இந்திய அரசாங்கத்தின் கூட்டு ஆட்சியில் இந்திய யூனியனில் இருக்க விரும்பவில்லை. நாங்கள் எங்களை நாட்டை, தனிப்பட்ட பூரண சுயேச்சையுள்ள தனியரசு நாடாக ஆக்க விரும்புகிறோம். மத்திய கூட்டாட்சியிலிருந்து பிரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். ஆகவே இந்திய தேசியக் கொடியைக் கொளுத்துவது - இந்தியக் கூட்டாட்சி என்பதில், தமிழ் நாட்டுத் தமிழர்களாகிய நாங்கள் பிரஜைகளாக இருக்க சம்மதப்படவில்லை என்கின்ற எங்களுடைய இஷ்டமின்மையக் காட்டுவதேயாகும்.

- 'விடுதலை'(20.07.1955)யில் பெரியார்

ஹிந்தி இருக்கட்டும்

இந்தி வேண்டவே வேண்டாம் என்பதல்ல எங்கள் கொள்கை. அதைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்று நாங்கள் சொல்லுகிறோம். சில காரியத்திற்காக இந்தியைக் கட்டாயமாக்க வேண்டுமானாலும் கட்டாயமாக்குங்கள். ஆனால் குழந்தைகளுக்கு வேண்டாம். பெரியவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுமானால் இருக்கட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.

- 'விடுதலை'(07.10.1948)யில் பெரியார்

வயிற்றுப் பிழைப்பு


நம் நாட்டிலும் கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள்; இவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு மட்டும் பொதுவுடைமையைச் சாதனமாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்களே ஒழிய, பொதுமக்கள் கடைத்தேற ஒன்றும் செய்யவில்லை. எனவே, நாட்டில் பொதுவுடைமைக் கொள்கையைக் கொண்ட அரசாங்கம் ஏற்பட்டு முயன்றால்தான், மக்களின் குறைபாடுகள் நீங்குமே ஒழிய, பொறுக்கித் தின்னும் இந்த கம்யூனிஸ்ட்களின் காலித்தனம், பலாத்காரத் தூண்டுதல் மூலம் ஒன்றும் முடியாது.

- 'உண்மை'(பிப்ரவரி-மார்ச் 1972)யில் பெரியார்

இந்துக்கள் என்றால்..?

நான் பந்தயம் கட்டிச் சொல்வேன் நம் மக்களில் (இந்துக்கள் என்பவர்களில்) கடவுளை வணங்குகிறவர்களில் ஒருவர்கூட அறிவாளரோ, யோக்கியரோ, உண்மை அறிந்தவரோ இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை.. என்று கூறுவேன்.

- 'கடவுள் ஒரு கற்பனையே' நூலில் பெரியார்

ஒழிக்கப்பட வேண்டியவைகள்

மக்களிடம் உணர்ச்சி ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால், சினிமா ஒழிக்கப்பட வேண்டும். நீதி, நேர்மை ஏற்பட வேண்டுமானால், வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும். நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டுமானால், பத்திரிகைகள் ஒழிக்கப்பட வேண்டும். அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்பட வேண்டுமானால், தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

- பெரியார் பிறந்த நாள் விழா மலர்-84 (17.09.1962)

தமிழனின் தத்துவங்கள்

மெக்கானிக்கல் இன்ஜீனியர் மெக்கானிக் ஆகலாம். ஆனா சாப்ட்வேர் இன்ஜீனியர் சாப்ட்வேர் ஆக முடியாது.

பாக்கு மரத்துல பாக்கு இருக்கும். தேக்கு மரத்துல தேக்கு இருக்கும்.. ஆனா பனை மரத்துல பனை இருக்குமா?

சனிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வரை ஒரு நாள்.. ஆனால் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து சனிக்கிழமை வரை..?

சைக்கிள்ல போனா 'சைக்கிளி'ங்க.. அப்ப டிரெயின்ல போனா டிரெயினிங்கா..?

டீ கப்புல டீ இருக்கலாம்.. ஆனால் வோல்ர்டு கப்புல வோர்ல்டு இருக்க முடியாது.

எவ்ளோ காசு கொடுத்து பிளேன்ல போனாலும் ஜன்னலைத் திறந்து வேடிக்கை பார்க்க முடியாது..

'கீபோர்ட்ல' 'கீ ' இருக்கும்.. ஆனால் மதர் போர்ட்ல 'மதர்' இருக்க முடியுமா?

பிரஷ்ஷை வைச்சு பல்லை கிளீன் பண்ணலாம்.. ஆனா பல்லை வைச்சு பிரஷ்ஷை கிளீன் பண்ண முடியுமா?

பேண்ட் போட்டு முட்டி போட முடியும். ஆனா முட்டி போட்டுட்டு பேண்ட் போட முடியுமா?

இன்பாக்ஸ்ல இலை பார்க்க முடியும். ஆனால் மேட்ச் பாக்ஸ்ல மேட்ச் பார்க்க முடியுமா?

இருக்குறப்ப என்னதான் காம்ப்ளான், போர்ன்விட்டா குடிச்சாலும், செத்தப்புறம் எல்லாருக்கும் பால்தான்..

சவுத் இண்டியால நார்த்தாங்காய் கிடைக்கும்.. ஆனால் நார்த் இண்டியால சவுத்தாங்காய் கிடைக்குமா?

பச்சை மிளகாய்ல பச்சை இருக்கும்.. ஆனா கொடை மிளகாய்ல குடை இருக்குமா?

லன்ச் பேக்ஸ்ல லன்ச் எடுத்திட்டுப் போகலாம்.. ஆனால் ஸ்கூல் பேக்ல ஸ்கூல எடுத்திட்டுப் போக முடியாது..

மெழுக வைச்சு மெழுகுவர்த்தி செய்யலாம். ஆனால் கொசுவ வைச்சு கொசுவத்தி செய்ய முடியாது.

கோவில் மணிய நம்ம அடிச்சா சத்தம் வரும்.. ஆனால் கோவில் மணி நம்மள அடிச்சா ரத்தம்தான் வரும்.

மின்னலை பார்த்தா கண்ணு போயிரும்.. ஆனால் பாக்கலைன்னா மின்னலும் போயிரும்..

நீ எவ்ளோ பெரிய நீச்சல்காரனா இருந்தாலும் டம்ளர் தண்ணில நீந்த முடியாது.

நெய் ரோஸ்ட்ல நெய் இருக்கும்.. பேப்பர் ரோஸ்ட்ல பேப்பர் இருக்குமா?

க்ரீம் பிஸ்கெட்ல கிரீம் இருக்கும்.. ஆனாநாய் பிஸ்கெட்ல நாய் இருக்குமா?

சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வைச்சு எடுத்திட்டுப் போகலாம்.. ஆனா டிபன் கேரியர்ல சைக்கிள வைச்சு எடுத்திட்டுப் போக முடியாது.

நீ எவ்ளோ பெரிய டான்ஸரா இருந்தாலும் உன்னோட சாவுக்கு உன்னால ஆட முடியுமா?

காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளைமுட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருந்து வர்ற காக்கா கருப்புதான்..

டிரெயினுக்கு டிக்கெட் வாங்கி பிளாட்பார்ம்ல உக்காரலாம்.. ஆனா பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கி டிரெயின்ல உக்கார முடியாது.

சோடாவ பிரிட்ஜ்ல வைச்சா கூலிங் சோடா ஆகும்..அதையே வாஷிங் மெஷினுக்குள்ள வைச்சா வாஷிங் சோடா ஆகுமா?

அயர்ன் பாக்ஸால அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸால பென்சில் பண்ண முடியாது.

டிக்கெட் வாங்கிட்டு உள்ள போறது சினிமா தியேட்டர். உள்ள போயி டிக்கெட் வாங்குறது ஆபரேஷன் தியேட்டர்.

சிற்பி கல்லை உளியால அடிச்சா அது கலை.. நாம சிற்பிய உளியால அடிச்சா அது கொலை..

நாம எவ்ளோதான் வேகமாக நடந்தாலும் ஒரு கால் முன்னாடி போனா ஒரு கால் பின்னாடிதான் இருக்கும்..

குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுத்துக்கலாம்.. ஆனாகுப்புற படுத்துட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது..

வாயால நாயுன்னு சொல்லலாம். ஆனா நாயால வாய்ன்னு சொல்ல முடியுமா?

மண்டைய மண்டைய ஆட்டுறது டிஸ்கோ. மண்டைய போட்டா ஆடுறது டப்பாங்குத்து..

எத்தனால் குடிச்சா நாலு பேர் முன்னாடி ஆடலாம்.. மெத்தனால் குடிச்சா நாலு பேர் உன் முன்னாடி ஆடுவாங்க..

வேலை செஞ்சாத்தான் சோறு..வேலை ரொம்ப செஞ்சா போரு..

காருக்குள்ள டயர் இருந்தா அது ஸ்டெப்னி.. அதுவே நம்ம மேல இருந்தா நாம சட்னி..

தூங்கப் போறதுக்கு முன்னால தூங்கப் போறேன்னு சொல்லலாம்.. எந்திரிக்கப் போறதுக்கு முன்னால எந்திரிக்கப் போறேன்னு சொல்ல முடியுமா?

நீங்க பைக்ல எவ்ளோதான் பாஸ்ட்டா போனாலும் உங்களையே நீங்க ஓவர்டேக் பண்ண முடியாது..

கோல்டு செயினை அடகு வைச்சு சைக்கிள் வாங்கலாம்.. ஆனா சைக்கிள் செயினை அடகு வைச்சு கோல்டு வாங்க முடியாது..

ஆம்பளைங்க அடிபட்டா ஆம்புலன்ஸ் வருமாம்.. அப்போ பொம்பளைங்க அடிபட்டா பொம்புலன்ஸா வரும்..?

ரயில்வே ஸ்டேஷன்ல போலீஸ் ஸ்டேஷன் இருக்கும்.. ஆனா போலீஸ் ஸ்டேஷன்ல ரயில்வே ஸ்டேஷன் இருக்குமா?

பாய்ஸன் பத்து நாள் ஆனாலும் பாயாஸம் ஆக முடியாது. ஆனாபாயாஸம் பத்து நாள் ஆனா பாய்ஸன் ஆயிரும்..

ஒரு எறும்பு நினைச்சா ஆயிரம் யானையை கடிக்கும்.. ஆனா ஆயிரம் யானைக நினைச்சாலும் ஒரு எறும்பைக்கூட கடிக்க முடியாது..

புயலால கரையைக் கடக்க முடியும்.. ஆனா கரையால புயலைக் கரைக்க முடியுமா?

செல்லுல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது. ஆனா மனுஷனுக்கு கால் இல்லேன்னா பேலன்ஸ் பண்ண முடியாது..

நீ என்னதான் காஸ்ட்லி மொபைல் வைச்சிருந்தாலும் அதுல எவ்ளோதான் ரீசார்ஜ் பண்ணினாலும் உன்னால உனக்கே கால் பண்ண முடியாது..

என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும் அதால மீன் குழம்புல நீந்த முடியாது..

இன்னிக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனா நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதால நன்றின்னு வாயால சொல்ல முடியாது..

என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும் அதால அவிச்ச முட்டை போட முடியுமா?

நாய்க்கு நால் கால் இருந்தாலும் அதால கால் மேல் கால் போட்டு உக்கார முடியாது.

அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம். பால் கொட்டினா வேற பால் வாங்கலாம். ஆனா தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியுமா?

Files-ன்னா உக்காந்து பாக்கணும்.. Piles-ன்னா பாத்து உக்காரணும்..

நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது..

ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம். காலேஜ் டெஸ்ட்ல் பிட் அடிக்கலாம். ஆனா பிளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியாது..

ஆயிரம்தான் இருந்தாலும் ஆயிரத்தி ஒண்ணுதான் பெரிசு..

என்னதான் அஹிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்திய சுட்டுதான் சாப்பிடணும்..

நீ என்னதான் வீரனா இருந்தாலும் குளிரடிச்சா திரும்பி அடிக்க முடியாது..

காசு இருந்தா கால் டாக்ஸி. காசு இல்லேன்னா கால்தான் டாக்ஸி..

பல்லு வலின்னா பல்ல பிடுங்கலாம்.. ஆனா கண்ணு வலின்னா கண்ண பிடுங்க முடியுமா?

இட்லிப் பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்க சாப்பிட முடியுமா?

என்னதான் உக்காந்து சாப்பிடற அளவுக்குச் சொத்து இருந்தாலும் பாஸ்ட்புட் கடைக்குப் போனா நின்னுதான் சாப்பிடணும்..

கொஞ்சம் பணம் கொடுத்து குடை வாங்கலாம்.. எவ்ளோ பணம் குடுத்தாலும் மழையை வாங்க முடியுமா?

தன்னம்பிக்கைக்கும், தலைக்கனத்துக்கும் ஒரு நூல் அளவுதான் வித்தியாசம் என்னன்னா..?என்னால ஒரு புல் அடிச்சிட்டு ஸ்டெடியா நிக்க முடியும்னு சொன்னா அது தன்னம்பிக்கை.. என்னால மட்டும்தான் புல் அடிச்சிட்டா ஸ்டெடியா நிக்க முடியும்னு சொன்னா அது தலைக்கனம்..









இவர்களுக்கு எதற்கு ஓட்டு?

....தேர்தலில் வயது வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டு அளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது திருடன், காலித்தனம் செய்பவன், எதற்கும் அருகதையற்றவன், பாமரர் - ஆகிய அனைவருக்கும் ஓட்டு. இவர்கள் எப்பேர்ப்பட்டவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதை சற்று நடுநிலையிலிருந்து யோசித்தால், நான் ஏன் அரசியல் வேலை முக்கியமல்ல என்று கூறுகிறேன் என்பது விளங்கும்.

- குடியரசு(14.5.1948)வில் பெரியார்






காங்கிரஸ் கட்சி ஒரு அரக்கன்


காங்கிரஸ் என்பது நமது நாட்டையும், இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையான நமது சங்கத்தையும் அழிக்க வந்த ஒரு அரக்கன் என்றுதான் சொல்ல வேண்டும்.

- குடியரசு(7.11.1926)வில் பெரியார்





அய்க்கோர்ட்(உயர்நீதிமன்றம்) ஒரு சனியன்


இன்று நமக்குப் பெரும் சனியனாக அய்க்கோர்ட் ஒன்று இருக்கிறது. மற்ற எல்லா ஸ்தாபனங்களும், நமக்குப் பெரிதும் அனுகூலமாக இருக்கின்றன என்றே சொல்லலாம்.

- விடுதலை(7.10.1972)யில் பெரியார்





மது தேவை


குடிப்பது தவறில்லை. கள் குடிச்சு செத்தவங்க எத்தனை பேர் சொல்லுங்களேன்.. நண்பர்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கேன். கள்ளுக்கடை எல்லாம் மூடி இருந்தாங்களே, அப்ப குடிக்காம இருந்தாங்களா? குடிச்சிக்கிட்டுத்தான் இருந்தாங்க. ஒருத்தரும் அப்போ குடியைத் தடுக்கலை. வருமானம் குறைஞ்சதுதான் மிச்சம். ஜனங்க சோம்பேறியாய் ஆனதுக்குக் காரணமே மது ஒழிப்புதான்.

- தந்தை பெரியார்




எந்த மதத்துக்கும், எந்த ஜாதிக்கும் சலுகை கூடாது

மதங்கள் என்பவை எல்லாம் அவரவர்களுடைய தனி எண்ணமாகவும், தனி ஸ்தாபனங்களாகவுமே இருக்கும்படிச் செய்வதுடன், அரசியலில் - அரசியல் நிர்வாகத்தில் அவை எவ்வித சம்பந்தமும் குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும். ஜாதிக்கென்றோ, மதத்திற்கென்றோ எவ்விதச் சலுகையோ உயர்வு, தாழ்வோ, அந்தஸ்தோ, அவற்றிற்காக அரசாங்கத்திலிருந்து தனிப்பட்ட முறைகளைக் கையாளுவதோ, ஏதாவது பொருள் செலவிடுவதோ ஆகியவை கண்டிப்பாய் இருக்கக் கூடாது.

- தந்தை பெரியார்




இரண்டு தடவைக்கு மேல் பதவி கூடாது

யாராக இருந்தாலும் இரண்டு தடவைக்கு மேல் ஒரு ஆள் பதவிக்கு வரக்கூடாது என்று சட்டம் செய்ய வேண்டும். இப்போதுள்ளவன், சாகிறவரையில் பதவியில் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறான். அதற்காகப் பல காரியங்களைச் செய்யப் பயப்படுகிறான். இதைத் தடுக்க வேண்டும்.

- விடுதலை(27-01-1970)யில் பெரியார்




பொதுத் தொண்டன் எப்படி இருக்க வேண்டும்?


பொதுத் தொண்டனுக்குத் தன்னால் பாதுகாக்க, பெருக்க வேண்டிய பெரிய தொழில், சொந்தத் தொழில் இருக்கக்கூடாது. இருந்தால் எதிரிகளுக்குப் பயந்து லட்சியத்தை விட்டுக் கொடுக்க நேரும். மனைவி, பிள்ளை, குட்டிகள் இருக்கக்கூடாது. இருக்கவே கூடாது. பொதுத்தொண்டு ஊதியத்தால் வாழ்கிறவர்கள், அவர்கள் குடும்பங்கள், மக்கள் சராசரி வாழ்க்கைத் தரத்துக்கு மேல் வாழக் கூடாது. வாழவே கூடாது. வாழ வேண்டி வந்தால் வாழ்ந்து, ஆனால் நான் பொதுத் தொண்டன், தியாகி. கஷ்டப்பட்டவன் என்று சொல்லாதே. சொல்வதற்கு வெட்கப்படு. அப்படி நினைப்பாயேயானால், நீ மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று விட்டதாகக் கருதிக் கொண்டிருப்பவன் என்றுதான் சொல்ல வேண்டும்.

- தந்தை பெரியார்


அண்ணாதுரை ஏன் போனார்?


அண்ணாதுரை ஏன் போனார்? திராவிடர் கழகத்தில் இருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது. பெரிய நிலைக்கு வர முடியாது என்று கருதினார். வெளியேறினார். செளக்கியமாக பணம் சம்பாதித்துக் கொண்டு வாழ்கிறார். அதைப் பார்த்து ஆத்திரப்பட்டுத்தானே நாமும் பணம் சம்பாதிக்க வேண்டும்; எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பது என்று கருதித்தானே, இன்றைய துரோகிகளும் வெளியேறுகின்றார்கள்..?

-தந்தை பெரியார்



தேர்தலுக்காக


காங்கிரஸ் ஆட்சி பலத்தால், திராவிட நாடு பிரிவினை கேட்பவர்கள் தேர்தலுக்கு நிற்க முடியாது என்று விதி செய்து கொண்டவுடன் தி.முக., “நாங்கள் திராவிட நாடு பிரச்சினையை விட்டுவிட்டோம்” என்று சொல்லி தேர்தலுக்கு நின்று வெற்றி பெற்று இன்று ஆட்சிக்கும் வந்துவிட்டார்கள். தேர்தலுக்கு அது ஒரு தடைப் பிரச்சினையாக ஆகிவிட்டதால் அவர்கள் அதைப் பற்றி பேச்சு மூச்சுவிடக்கூடாத நிலையில் இருக்கிறார்கள். மத்திய அரசாங்கம் காங்கிரஸார் கையில் இருப்பதால் அவர்களுக்குப் பயந்து கொண்டு அடிக்கடி தி.முக.வினர் காலாகாலம் பார்க்காமல், “நாங்கள் திராவிட நாடு பிரச்சினையை கைவிட்டுவிட்டோம்; விட்டு விட்டோம்; விட்டே விட்டோம்” என்று சொல்ல வேண்டிய அவசியத்திற்கு வந்துவிட்டார்கள்.

- விடுதலை(30.3.1967)யில் பெரியார்



அநியாயம் நிறைந்த அரசியல் சட்டம்

இந்திய அரசாங்கமானது அநியாயம் நிறைந்து விளங்கும் அரசியல் சட்டத்தைக் கொண்டிருக்கிறது. மேலும் அரசியல் நிர்ணய சபையாவது ஒழுங்கானது என்று சொல்ல முடியுமா? எனவே, இவர்களால் செய்யப்பட்ட அரசியல் சட்டம் நமக்குத் தேவையில்ல என்று நாம் கூறுவது மட்டுமே போதாது. அதை ஒழித்துக் கட்ட ஒரு வழி தேடித்தான் ஆக வேண்டும். எனவே, நாம் என்ன செய்ய வேண்டும்? அந்த அரசியல் சட்டம் நமக்குத் தேவையில்லை. கையால் அதன் கீழ் நாம் சட்டசபைக்குப் போவது சரியல்ல என்பதை உணர வேண்டும்.

- விடுதலை(22.09.1951)யில் பெரியார்

ஏமாற்றுத் திருவிழா


ஆதலால் வெள்ளையருக்கும், காங்கிரஸ¤க்கும் ஏற்பட்ட ஓர் ஒப்பந்த ஆட்சிதானே ஒழிய, இந்திய மக்களுக்கு ஏற்பட்ட சுதந்திர ஆட்சியல்ல. இதன் பயனால் இந்த நாட்டில் உள்ள காங்கிரஸ் அல்லாத மக்களுக்கு நன்மை இல்லை. பிரதிநிதித்துவம் இல்லை. ஏற்படப் போகும் மாகாண ஆட்சி என்பது வெள்ளையர் அதிகார ஆட்சிக் காலத்திலிருந்த உரிமையைவிட மோசமான ஆட்சியேயாகும். ஆதலால் இம்மாதம் 15ம் தேதி நடக்கும் சுதந்திரத் திருநாள் என்னும் ஆரியர்-பனியா ஏமாற்றுத் திருவிழாவில் நாம் கலந்து கொள்வதில்லை என்கிறோம்.

- விடுதலை(20.8.1972)யில் பெரியார்

சுதந்திர நாள் அல்ல; துக்க நாள்

என்னைப் பொறுத்தவரையில் நான் இதை சுதந்திரம் பெற்ற நாள் என்று சொல்ல மாட்டேன். அடிமையும், மடமையும், ஒழுக்கக் கேடும், நேர்மைக் கேடும் ஏற்பட ஏதுவான துக்க நாள் என்றுதான் சொல்வேன். இதை நான் இன்று மாத்திரம் சொல்லவில்லை. இந்தியாவுக்கு சுதந்திரம் என்று என்றைக்கு வெளியிடப்பட்டதோ, அன்றே சொன்னவன் நான்.

காலித்தனத்துக்குப் பெயர் வேலை நிறுத்தம். அயோக்கித்தனத்துக்குப் பெயர் அஹிம்சை. சண்டித்தனத்திற்குப் பெயர் சத்தியாக்கிரஹம். தான் பதவி பெற்றக் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டு எதிர்க்கட்சி ஆளாவது முதலிய அயோக்கியத்தனங்கள் எப்படி யோக்கியமான சுதந்திரமாக இருக்க முடியும்? மற்றும் இன்றைய சுதந்திரம் என்பதில் எந்த அயோக்கியத்தனமான காரியம் விலக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியும்? இதை சுதந்திர ஆட்சி என்று வயிற்றுப் பிழைப்பு, பதவி வேட்டை தேசியவாதிகளும், மக்களும்தான் சொல்லிக் கொள்ள முடியுமே தவிர, நேர்மையான அறிவுள்ள ஜன சமுதாயத்தால் சொல்ல முடியுமா என்று கேட்கிறேன்.

- விடுதலை(15.8.1972)யில் பெரியார்

சுதந்திரத்தின் சரித்திரம்

சுதந்திரத்திற்கும், காங்கிரஸ¤க்கும் அதன் போராட்டத்திற்கும் தியாகத்திற்கும் சம்பந்தமில்லை. வெள்ளையன் தானாக வீசி எறிந்துவிட்டுப் போன சுதந்திரத்தை எடுத்துக் கொள்ள இந்தியாவில் கட்டுப்பாடான வேறு கட்சிகள் இல்லாமல் காங்கிரஸ்-ம், முஸ்லீம் லீகும் மாத்திரம் இருந்ததால், முஸ்லீம் லீகுக்கு பயந்து இணங்கி ஆளுக்கு கொஞ்சமாகப் பங்கு போட்டுக் கொண்டார்கள். அதாவது அனாதையாகக் கிடந்ததை பங்கு போட்டுக் கொண்டார்கள். இதுதான் சுதந்திரத்தின் சரித்திரம்.

- விடுதலை(16.2.1965)யில் பெரியார்

சுதந்திரம், சோறு, மானம் இல்லை


பந்தயம் வேண்டுமானாலும் கட்டுவேன். மத்திய அரசாங்கப் பிடியில் இருந்து திராவிட நாடு தனி நாடாகப் பிரியாவிடில் சுதந்திரம் இல்லை. சோறு இல்லை. மான வாழ்வு இல்லை. இது உறுதி.. உறுதி.. உறுதி..

- விடுதலை(25.2.1949)யில் பெரியார்

வடநாட்டான் பிரதமராக இருக்கலாமா?

வெள்ளையன் ஒழிந்ததுபோல் வட நாட்டானும் ஒழிய வேண்டாமா இந்நாட்டைவிட்டு? இந்நாட்டிற்கு சுதந்திரம் வந்துள்ளது உண்மையாயின் எதற்காக ஒரு இமயமலைப் பார்ப்பான் ஒரு வட நாட்டவன் எங்கள் நாட்டிற்கு பிரதம மந்திரியாக இருக்க வேண்டும்? எதற்காக வடநாட்டவர்கள் இங்கிருந்து நம்மைச் சுரண்டி வர வேண்டும்? கேட்பாரில்லையே இத்தமிழ் நாட்டில்.. எதற்காக இந்நாட்டை வடநாட்டவன் ஆதிக்கத்திற்கு ஒப்படைத்துவிட்டு இந்நாட்டவர்கள் அவர்களின் சிப்பந்திகளாக, ஏவலாட்களாக பணியாற்றி வர வேண்டும்? வேறு சுதந்திரம் பெற்ற நாடுகளைப் பார்த்தாயினும் உங்களுக்கு புத்தி வரக்கூடாதா?

- விடுதலை(19.10.1948)யில் பெரியார்

முஸ்லீம் செய்யும் கொடுமை

முஸ்லீமை எடுத்துக் கொண்டால், பெண்களை உலகத்தைக்கூட பார்க்க விட மாட்டேன் என்கிறானே.. முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதைவிடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?

- விடுதலை(25.6.73)யில் பெரியார்

ஒழுக்கம் அவசியமில்லை

சாதாரண மனித ஜீவனின் உணர்ச்சியையும், இந்திரியச் செயலையும் கட்டுப்படுத்தும்படியானதான கொள்கைகளை, ஒழுக்கங்களை, கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினால் அது செலாவணியாகுமா? செலாவணியாவதாயிருந்தாலும், அதற்கு என்ன அவசியம் என்பன போன்றவைகளை கவனிக்க வேண்டாமா என்றுதான் கேட்கிறோம்.

- தந்தை பெரியார்

அடிமைத்தனம்

மக்களின் அன்பும், ஆசையும் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, அது இன்ன விதமாக, இன்னாரோடு மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்பதாக நிர்ப்பந்திக்க எவ்வித நியாயமும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. ஏனெனில், ஆசை என்பது ஜீவசுபாவமானது. அதை ஏதோ நிர்ப்பந்தத்திற்காக தடுத்து வைப்பது என்பது ஒரு வகையான அடிமைத்தனமேயாகும்.

- தந்தை பெரியார்

கர்ப்பத்தின் விளைவு

பெண்கள் வியாதியஸ்தர்கள் வதற்கும், சீக்கிரம் கிழப் பருவம் அடைவதற்கும், ஆயுள் குறைவதற்கும், அகால மரணமடைவதற்கும் கர்ப்பம் என்பதே மூல காரணமாயிருக்கிறது. பெண்கள் விடுதலைக்கும், சுயேச்சைக்கும், முன்னேற்றத்திற்கும் அவர்கள் பிள்ளை பெறுவது என்பதை நிறுத்த வேண்டும் என்று நாம் சொல்லுகின்றோம்.

- தந்தை பெரியார்

ஒரே புருஷன் என்ற கட்டாயம் கூடாது

... இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன், ஒரு மனைவியுடனும், ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியதென்றும், கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகிறது. இதன் பலாபலன் எப்படியிருந்தாலும் இந்தப்படிச் சொல்கின்றவர்களை எல்லாம் உலகனுபவமும், மக்கள் தன்மையின் அனுபவ ஞானம் இல்லாதவர்கள் என்றோ, அல்லது இயற்கைத் தன்மையையும், உண்மையையும் அறியாதவர்கள் என்றோ, அல்லது உண்மையறிந்தும் வேறு ஏதாவதொரு காரியத்திற்காக வேண்டி, வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றோதான் கருத வேண்டியிருக்கிறது.

... இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்தப் பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், அவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதாகும் என்றுதான் சொல்ல வேண்டும்.

- தந்தை பெரியார்

பெண் விடுதலை

---கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும். கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு காதலும், அன்பும் இல்லாதவனுடன் இஇருக்க வேண்டும் என்கிற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்.

- தந்தை பெரியார்

பெண்ணடிமை ஒழிய...


பெண்ணடிமைக்கு அடிப்படைக் காரணங்கள் திருமணம், கற்பு என்பனவைகளேயாகும். திருமணம் என்பது மனிதத் தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமை கொள்ளவே ஏற்பட்டது. திருமணம் என்பது ஆண்களுக்கு நன்மையாகவும், பெண்களுக்கு கேடாகாவும் இருக்கிறது. பெண்களை அடிமையாக வைத்திருப்பது என்பது ஆண்களுக்கு லாபமாக இருக்கிற காரணத்தால், பெண்கள் உரிமைக்கு ஆண்கள் ஒப்புவது இல்லை. இந்த நிலை மாறியாக வேண்டும். நாளைக்கே ஒரு அரசாங்கம் வந்து, திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று சட்டம் செய்துவிட்டால் பிரச்சினை இல்லை. எனவே பெண்ணடிமை ஒழிய திருமண முறை ஒழிந்தாக வேண்டும். அதோடு மட்டுமல்ல, மனிதன் சுதந்திர மனிதனாக இருக்க வேண்டுமென்றாலும், இந்தத் திருமண முறை ஒழிந்தே ஆக வேண்டும்.

- தந்தை பெரியார்

பெண்களுக்கு அறிவுரை

ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக லுங்கி கட்ட வேண்டும். ஜிப்பா போட வேண்டும். நம் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது புடவை, நகை, துணி, அலங்கார வேஷங்கள்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். பெண்கள் எல்லாம் ஆறடி, ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்வது, அநாகரீகமும், தேவையற்ற தொல்லையுமாகும். ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக் கொள்ள வேண்டும்.

- தந்தை பெரியார்

கேள்வி : பெண்களுக்கு புருஷர்கள் என்றைக்கு சுதந்திரம் கொடுப்பார்கள்?

பதில் : ‘கற்பு’ என்கிற வார்த்தையும், ‘விபச்சார தோஷம்’ என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ, அன்றுதான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும். இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடுதலையும் பெற்றிருப்பதற்குக் காரணம் ஆண்கள் தங்களுக்குள் ‘கற்பு’ என்பதையும் அடியோடு ஒழித்து விட்டதாலயே சட்டப்படி முழு விடுதலையும் பெற்றிருக்கிறார்கள்.

- 29.10.1935‘குடியரசு’-வில் பெரியார்

கற்பு ஒருக்காலும் கூடாது

பெண்கள் அடிமை நீங்க வேண்டுமானால், முதலாவதாக அவர்களை ‘கற்பு’ என்னும் சங்கிலியால் கட்டிப் போட்டிருக்கும் கட்டை உடைத்தெறிய வேண்டும். கட்டுப்பாட்டிற்காகவும், நிர்ப்பந்தத்திற்காகவும் கற்பு ஒருக்காலும் கூடாது.. கூடாது..

- ‘தந்தை பெரியார் சமுதாய சீர்திருத்தம்’

உண்மையான சமரசம்

ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால், பெண் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப் போகும். உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு கஷ்டமே இருக்காது.

- ‘தந்தை பெரியார் அறிவுரை-100’

கற்பு என்பது புரட்டு

சாதாரணமாகவே இன்றைய ‘கற்பு’, ‘விபச்சாரம்’ என்னும் வார்த்தைகள் சுதந்திரமும், சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்கு சிறிதும் தேவையே இஇல்லாததேயாகும். எப்படி ‘கற்பு’ என்ற வார்த்தையும், அதைப் பயன்படுத்தும் முறையும் புரட்டானது என்றும், பெண்ணடிமை கொள்ள உத்தேசித்து சொல்லுகிறோமோ, அது போலவே ‘விபச்சாரம்’ என்னும் வார்த்தையும் அதன் பிரயோகமும் புரட்டானதும், பெண்களை அடிமை கொள்வதற்கென்றே ஏற்படுத்தப்பட்டதென்றும் காணப்படுவதோடு, அது முக்கியமாய் இயற்கைக்கு விரோதமானதென்றும்கூட விளங்கும்.

- ‘தந்தை பெரியார் அறிவுரை-100’

பெண்களும், கற்பும்


பெண் தன்னைப் பற்றியும், தனது கற்பைப் பற்றியும், காத்துக் கொள்ள, தகுதி பெற்றுக் கொள்ள விட்டுவிட வேண்டுமே ஒழிய, ஆண் காவல் கூடாது. இது ஆண்களுக்கு இழிவான காரியமாகும்.

- 3.11.1935‘குடியரசு’-வில் பெரியார்

கற்பு, ஒழுக்கம் என்பது பூச்சாண்டி

உலகில் ‘கற்பு’, ‘காதல்’ என்பன போன்ற வார்த்தைகளை எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கி ளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அது போலவேதான் ‘ஒழுக்கம்’ என்னும் வார்த்தையும், எளியோரையும் பாமர மக்களையும் ஏமாற்றி, மற்றவர்கள் வாழப் பயன்படுத்தி வரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமேயல்லாமல், அதில் உண்மையோ, சத்தோ ஒன்றுமே கிடையாது.

‘கற்பு’, ‘காதல்’, ‘சத்தியம்’, ‘நீதி’, ‘ஒழுக்கம்’ என்பனவெல்லாம் ஒரே தாயின் பிள்ளைகள். அதாவது குழந்தைகளைப் பயமுறுத்த பெரியவர்கள் ‘பூச்சாண்டி’, ‘பூச்சாண்டி’ என்பது போல், இவை எளியோரையும், பாமர மக்களையும், வலுத்தவர்களும் தந்திரக்காரர்களும் ஏமாற்றச் செய்த ஒரு பெரும் சூழ்ச்சியாகும்.

- ‘மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்’ நூலில் பெரியார்

திருக்குறள் ஒரு கெட்ட நாற்றம்

வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?” என்று பதில் கூறுவேன்.
- விடுதலை(1.6.50)யில் பெரியார்

சிலப்பதிகாரம் ஒரு புளுகு


....அந்தக் கண்ணகியைப் புகழ்வதும், தமிழச்சிக்கு உதாரணம் காட்டுவதும் தமிழர் சமுதாயத்துக்கு எவ்வளவு இழுக்கு தெரியுமா? ... இந்த சிலப்பதிகாரம் போல் வேறு அழுக்கு மூட்டை இலக்கியம் இல்லவே இல்லை. இது ஒரு கற்பனைக் கதை. கண்ணகியும் ஒரு கற்பனை பெண் பிள்ளை. நூல் முழுதும் மடத்தனம். புளுகு. இப்படியா தமிழனுடைய வாழ்க்கைக்கு உதாரணம் காட்டுவது?
- விடுதலை(28.3.60)யில் பெரியார்

சிலப்பதிகாரம் ‘தேவடியாள்’ மாதிரி


இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், பாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக - அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப்பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய் கொண்டும், வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப்படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்.

- விடுதலை(28.7.51)யில் பெரியார்

முக்கொலை

போதாக்குறைக்கு ‘பெரியார் கல்லூரியில் படித்தவர்கள்’ என்றும் ‘நாங்கள் பகுத்தறிவுவாதிகள்’ என்றும் சொல்லிக் கொள்ளும் இன்றைய மந்திரிகள், ‘தமிழுக்கு, தமிழ் மொழிக்கு கேடு வந்தால் நாங்கள் பதவியை விட்டு வெளியேறி விடுவோம்’ என்று சொல்கிறார்கள் என்றால் இதில் என்ன பகுத்தறிவு இருக்கிறது? என்ன பெரியார் வாசனை இருக்கிறது? உயர்தர படிப்புகளையெல்லாம் கல்லூரியிலும்கூட தமிழிலேயே ஆக்குகிறோம் என்றால், மக்களை முட்டாளாக்குகிறோம் என்றுதானே பொருள்? இப்படியான நிலை ஏற்பட்டால் இது முக்கொலை என்றுதானே ஆகும்? தமிழ் மொழியும் கெட்டு, பாட விஷயமும் பொருளும் கெட்டு, ஆங்கிலமும் கெடும்படி ஆவதால் இது மூன்று கொலை செய்ததாகத்தானே முடியும்? இதுதானா இந்தச் சிப்பாய்கள் வேலை?

- விடுதலை (5.4.67)யில் பெரியார்

இன்றைய தேவை ஆங்கிலம்

நாம் இன்றைய நிலைமையைவிட வேகமாக முன்னேற வேண்டுமானால் ஆங்கிலம்தான் சிறந்த சாதனம் என்றும், ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனை மொழியாகவும் இருந்தாக வேண்டுமென்றும், ஆங்கில எழுத்துக்களே தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்களாவது அவசியம் என்றும், ஆங்கிலமே நம் பேச்சு மொழியாவது நலம் பயக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

- ‘மொழியும் அறிவும்’ நூலில் பெரியார்

தமிழ் ஒன்றுக்கும் பயன்படாது

தமிழ் படித்தால் பிச்சைகூட கிடைக்காது. தமிழ் படித்து பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, அதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனுபவப் புலவர் பாடியுள்ளார்.

- தந்தை பெரியார் விடுதலை(27.11.43)யில்..

தமிழின் பெயரால் பிழைப்பு

நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்க முடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள். அவர்கள் துடிதுடிப்புத்தான், ‘தமிழைக் காக்க வேண்டும்’; ‘தமிழுக்கு உழைப்பேன்’, ‘தமிழுக்காக உயிர் விடுவேன்’ என்பது போன்ற கூப்பாடுகள். இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக்கூடாது.

- தந்தை பெரியார் விடுதலை(16.3.67)யில்..

தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம்

...தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ, வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? தாய்ப்பால் சிறந்தது என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தமற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும். தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?

இப்படிப்பட்ட இந்தத் தாய்ப்பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை, காலில் நடப்பதைத் தவிர உழைப்புக்கு - காரியத்துக்கு பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை - ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே - என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.

இன்றைய தினம்கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.

- தந்தை பெரியார் ‘தாய்ப் பால் பைத்தியம்’ நூலில்

பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன்?


சாதாரணமாகப் பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

- தந்தை பெரியார் ‘அறிவு விருந்து’ நூலில்

வெளிநாட்டான் அறிவு இனிப்பு; மொழி கசப்பா?

சர்வத்தையும், விஞ்ஞான மயமாக வெளிநாட்டு முறைகளைக் கொண்டு ஆக்கி, சர்வத்திலும் மேல் நாட்டானை(புதிய முறைகளை)ப் பின்பற்றி வளர்ச்சி அடையவே முயற்சிக்கிறோம். திட்டம் போடுகிறோம். இந்தக் காரியங்களுக்கு தமிழர்-முத்தமிழர் சங்கங்களையே நம்பி என்ன காரியத்திற்கு ஆங்கிலக் கருத்தோ, இங்கிலீஷ் சொல்லோ, ஆங்கிலேயனிடம் பயிற்சியோ இல்லாமல் இங்கிலீஷை பகிஷ்கரித்துவிட்டு என்ன சாதித்துக் கொள்ள முடியும்?

- தந்தை பெரியார்

தமிழில் என்ன நல்ல கருத்து உள்ளது?

நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்து இன்றைக்கு 20வது ஆண்டு நடக்கிறது. 20 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, ‘இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ் வேண்டும்.’ இதுதானா? அய்யோ பைத்தியமே தமிழை (பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல்களில் எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ் ‘சுவை’ அல்லாமல் அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா? கண்டு பிடித்துப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன்.

- தந்தை பெரியார்

தொல்காப்பியன் மாபெரும் துரோகி

தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும்வகையில், பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும்வகையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.

- தந்தை பெரியார் ‘தமிழும், தமிழரும்’ நூலில்

வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?

தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? நமது நாட்டுக்கு கமால்பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும், யோக்கியனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்பதால், பல முண்டங்கள் பலவிதமாய் பேசி முடிக்கிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன்.

- தந்தை பெரியார்

பிழைப்புக்கு ஆதாரமாய் தாய்மொழி வேஷம்

அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள், மக்களின் மடமையை நிறுத்து அறிந்ததன் காரணமாய், அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தாய் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம், மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.

- தந்தை பெரியார்

தமிழறிஞர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம்

தமிழ் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாத வித்துவான்களாக.. தமிழ்ப் புலவராகவே வெகுகாலம் இருக்க நேர்ந்துவிட்டதால், அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு, அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள். ஆகவேதான் புலவர்கள் வித்துவான்கள் என்பவர்கள் 100க்கு 90 பேர்கள்வரை இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்பதற்கல்லாமல் மற்றெதற்கும் பயன்படுவதற்கில்லாதவர்களாக ஆகிவிட்டார்கள்.

தமிழால் என்ன நன்மை?

தமிழ் தோன்றிய 3000-4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்தப் புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இதுவரை தமிழனுக்கு ஏற்படுப்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.

தமிழ் காட்டுமிராண்டி பாஷை

இந்தத் தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர்கூட சிந்தித்துப் பேசுவதில்லை. ‘வாய் இருக்கிறது; எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்’ என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிதுகூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும், ‘தமிழ் மொழி 3000-4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி’ என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாகக் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கியக் காரணமாகய்ச் சொல்கிறேன். அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணிணியாகட்டும் மற்றும் எவன்தான் ஆகட்டும், இவன்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உனக்குப் புத்தியில்லாவிட்டால், நீ தமிழைப் பற்றிப் பேசும் தகுதி உடையவனவாயா?