காக்கிசட்டை - சினிமா விமர்சனம்

28-02-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தொடர்ச்சியாக 6 படங்களை அடுத்தடுத்து கொடுத்து, அதில் 5 படங்களை சூப்பர் ஹிட்டாக்கி தமிழ்ச் சினிமாவுலகில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தனது தனித்தன்மையால் முன்னுக்கு வந்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் 7-வது படம் இது.
‘என்னை அறிந்தால்’ படத்தின் அதே கதைதான் இங்கேயும். மனிதர்களின் மாற்று உறுப்புகளை திருடும் சர்வதேசக் கும்பலை தேடிப் பிடிப்பதுதான் திரைக்கதை. ஆனால் இதை சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு பிடித்தாற்போல் சிவாவை முன்னிறுத்தியே படத்தை கொண்டு சென்றிருப்பதால், தலைவலியே வராத போலீஸ் படமாகவும் இதனைச் சொல்லலாம்.

விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனின் குற்றப் பிரிவில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் சிவாவுக்கு போலீஸ் டிரெஸ்ஸோடு அலைய வேண்டும் என்றொரு ஆசை. ஆனால் குற்றப் பிரிவில் இருப்பதால் அது முடியாமல் போகிறது. கூடவே காவல்துறையின் உள்ளேயே நடக்கும் அட்டூழியங்களையும், அநியாயங்களையும் பார்த்து கொதித்துப் போகிறார்.
திருடு போன நகைகளை பறிமுதல் செய்து அவற்றில் சிலவற்றை மட்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்துவிட்டு மீதத்தை போலீஸ் உயரதிகாரிகளின் உத்தரவிற்கிணங்க அவர் கொடுக்கச் சொன்னவரிடம் கொடுத்துவிட்டு சல்யூட் செய்வது.. அடாவடி அரசியல்வாதிகளுக்கு ஸ்டேஷனே வளைந்து கொடுப்பது என்று பலவற்றையும் பார்த்துவிட்டு ஒரு கட்டத்தில் இன்ஸ்பெக்டர் பிரபுவிடம் பொங்கித் தீர்க்கிறார் சிவா.
யதார்த்தமாக, இப்போதைய நடைமுறைச் சிக்கல்களையெல்லாம் எடுத்துச் சொல்லியும் தனது வயதின் காரணமாக சிவா அதனை ஏற்க மறுக்க.. “நீ ஒரு பெரிய கேஸை பிடிச்சிட்டு வா.. அப்புறமா அதுல நேர்மையா நாம விசாரணை செய்யலாம்..” என்று பிரபு வாக்குறுதியளிக்க.. பெரிய கேஸ் சிக்குமா என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
ஆனால் நர்ஸான ஹீரோயின் வித்யா சிக்குகிறார். அவரை விரட்டிப் பிடித்து காதலுக்கு ஓகே வாங்குவதற்குள் முதல் முக்கால்மணி நேரம் ஓடிவிடுகிறது. இதற்குள்ளாக 3 பாடல்கள்..
வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்கு ஆட்களை அழைத்து வரும் கும்பல் ஒன்று முகவரியற்ற.. அனாதை இளைஞர்களை திட்டமிட்டு கொலை செய்து அவர்களது உடல் உறுப்புக்களை மிகப் பெரிய மருத்துவமனை ஒன்றின் மூலம் திருடுகிறது.
இதனை தற்செயலாக தெரிந்து கொள்ளும் சிவா, அந்தக் கும்பலைப் பிடிக்க பிரபுவிடம் சொல்கிறார். பிரபுவும் ஆக்சன் எடுத்து முக்கியப் புள்ளியைக் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைக்க போகும் முன்பே கொல்லப்படுகிறார். இதன் பின்னணியில் பல பெரிய தலைகள் இருக்கின்றன என்பதை அறிந்த சிவா அவர்களை எப்படி தன்னுடைய கான்ஸ்டபிள் பதவியை வைத்துக் கொண்டே பிடிக்கிறார் என்பதுதான் படமே..!
படத்தின் திரைக்கதைக்காக 8 பேர் கொண்ட டீம் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தலைமையில் அமர்ந்து யோசித்து எழுதியிருக்கிறார்கள். ஹீரோ அறிமுகப் பாடல்.. இப்போதைய சிச்சுவேஷன்.. ஹீரோயின் அறிமுகம்.. ஹீரோ துரத்தல்.. மீண்டும் வேலை.. மீண்டும் காதல் வேலை.. டூயட்.. என்று கச்சிதமாக போரடிக்காமல் ஒரு படத்தின் திரைக்கதையை எப்படி கொண்டு போவது என்பதற்கு இந்தப் படத்தை உதாரணமாக்கியிருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் நடிப்புக்காக மெனக்கெடவில்லை. அவரிடம் ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ..? எந்த ஸ்டைல் பிடிக்கிறதோ..? என்ன மாதிரியான டயலாக் டெலிவரி பிடிக்கிறதோ அதையே இதிலும் பாலோ செய்திருக்கிறார். ஸோ.. இவர் பேசும் பன்ச் வரிகளுக்கு தியேட்டரில் கைதட்டல் அள்ளுகிறது. “பசங்க காதலிச்சா கல்யாணம் பண்ணுங்க. ஆனா ஆளையே மாத்தணும்னு நினைக்காதீங்க..” என்ற டயலாக்குதான் கைதட்டலின் உச்சத்தைப் பெற்றது.
ஹீரோயினிடம் போலீஸ் வேலையை மறைத்துவிட்டு உதார்விட்டு நடுரோட்டில் மாட்டிக் கொள்வது.. அக்யூஸ்ட்டை பிடிக்க பிச்சைக்காரர்களுடன் அமர்ந்து பிச்சையெடுப்பது. ஹீரோயினின் வீட்டிற்கே சென்று ஜொள்ளு விடுவது.. தன் அம்மா, தங்கையிடமே மாட்டிக் கொண்டு முழிப்பது என்று பல காட்சிகளில் சிவாவின் நடிப்பு நிச்சயம் குடும்பத்தினருக்கே பிடித்தமானது. இதனால்தான் சிவாவின் படங்களுக்கு தொடர்ச்சியாக குடும்பம், குடும்பமாக வருகிறார்கள்.
இதில் கூடுதலாக சண்டை காட்சிகளிலும் ஆக்சன் காட்டியிருக்கிறார். தொழில் நுட்பம் கை கொடுக்க இதையும் சிறப்பாகவே செய்திருக்கிறார் சிவா. பல ஆண்டு டிவி அனுபவம் இவருக்கு சிறப்பாகவே கை கொடுக்கிறது. எந்தெந்த காட்சியில் எப்படியெல்லாம் ஆக்சனை காட்டவேண்டும். குறைக்க வேண்டும் என்பதையெல்லாம் காட்டித்தான் சிவா வெற்றி பெறுகிறார். இதிலும் அப்படியே..! வாழ்த்துகள்.. படத்துக்குப் படம் இவரது ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது..! இதிலும் கூடும்..!
ஹீரோயின் ஸ்ரீதிவ்யா.. முன்னாள் ஹீரோயின் கெளசல்யாவின் முகத்தை ஞாபகப்படுத்துகிறார். குளோஸப்பில் பார்க்க முடியலை.. இப்படியே இழுத்துப் போர்த்திக் கொண்டு இன்னும் எத்தனை படங்களில் நடிக்க முடியுமென்று தெரியவில்லை. நடிப்பில் தனித்துவம் இல்லாததால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆனால் நடனத்தில் கொஞ்சம் தேறியிருக்கிறார். இந்த ஜோடி நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்தைவிடவும் இந்தப் படத்தில் இருவருக்குள்ளும் கொஞ்சம் நெருக்கம் கூடியிருக்கிறது போல தெரிகிறது..!
பிரபுவின் அந்த கம்பீர உச்சரிப்பு இதிலும் தனித்துவத்துடன் ஒலிக்கிறது.. ‘இதுதாண்டா கேஸுன்ற மாதிரி ஒரு கேஸை பிடிச்சிட்டு வா.. அப்புறம் பார்ப்போம்.. எவன் வந்தாலும் எதிர்த்து நின்னு கேஸை நடத்திக் காட்டுவோம்’ என்று ஆக்ரோஷப்படும் பிரபுவும், ஒவ்வொரு வசன டெலிவரிக்கும் ஒவ்வொருவிதமான ஆக்சனை காட்டி ஆச்சரியப்படுத்தும் இமான் அண்ணாச்சியும் சிவாவுக்கு கச்சிதமாகக் கை கொடுத்திருக்கிறார்கள்.
மாமா வேலை பார்க்கும் மனோபாலாவின் காட்சிகளில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.  ஆனாலும் வழக்கம்போல இவர் வரும் சீன்களிலெல்லாம் கலகலதான். வில்லன் துரையரசனாக நடித்திருப்பவரின் உடல் மொழியும், குரலும், நடிப்பும் வில்லன் கேரக்டருக்கே ஒரு தனி அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது.
பட்டுக்கோட்டை பிரபாகரனின் வசனங்களும் படத்திற்கு மிகப் பெரிய பலம். ரசிக்க வைத்திருக்கின்றன. கமிஷனரிடம் ஒரு சாதா கான்ஸ்டபிள் இப்படியெல்லாம் பேசலாமா என்றெல்லாம் லாஜிக் பார்க்கவில்லையென்றால், அந்த வசனம் இந்தியா முழுவதிலும் இருக்கும் சாதாரண கான்ஸ்டபிள்களின் எண்ணம்தான்..
இந்த ஒரு விஷயத்தில் மட்டுமல்ல.. படத்தின் பிற்பாதியில் பல காட்சிகளில் லாஜிக் மீறல்கள்தான்.. இதையெல்லாம் பார்த்தால் படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு போக முடியாது என்பதால் அத்தனையையும் அனுமதித்திருக்கிறார் இயக்குநர்.
மைனா சுகுமாரின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் வரும் வெளிநாட்டு லொகேஷன்களை அழகாக படம் பிடித்திருக்கிறது. ஹீரோயினைவிடவும் ஹீரோவே அழகாகவே காட்டியிருக்கிறார். அனிருத்தின் இசை இந்தப் படத்தில் தேவையே படாத ஒன்று.. பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை.. கடைசியான அதிரடி பாடலின் நடன அசைவுகள் சூப்பர்ப்.. அதிலும் ஹீரோயினின் ஸ்டெப்ஸ்களினால் இந்தப் பாடல் காட்சி தொடர்ச்சியாக இனிமேல் தொலைக்காட்சிகளில் வலம் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
‘காக்கிசட்டை’ என்று பெயர் வைத்திருப்பதினால் ஒரிஜினல் ‘காக்கிசட்டை’யின் பெயர் டேமேஜ் ஆகிவிடுமோ என்று பயந்தவர்களெல்லாம் இப்போது சந்தோஷமாக இருக்கிறார்கள். நல்லவேளை காப்பாற்றப்பட்டுவிட்டது.
அந்த ‘காக்கிசட்டை’யில் கமலின் அப்பாவும் போலீஸ்காரர்தான். இதில் சிவாவின் அப்பாவும் போலீஸ்காரர்தான். அதில் கமல் போலீஸாக செலக்சன் ஆக முடியாமல் போய், கடைசியில் தனிப்பட்ட முறையில் வில்லன் கூடாரத்தில் ஊடுறுவி வெற்றிக் கொடி கட்டுவார். இதில் சிவா போலீஸாகவே இருந்து வில்லன்களை துரத்துகிறார்.  அவ்வளவுதான்..!
‘எதிர்நீச்சலில்’ சிவாவை கரை சேர்த்த இயக்குநர் துரை செந்தில்குமார்.. இதிலும் சிவாவை கரை சேர்த்திருக்கிறார் என்று உறுதியாகச் சொல்ஸலாம்..!
100 சதவிகித பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் இந்தப் படம்..!

எட்டுத்திக்கும் மதயானை - சினிமா விமர்சனம்

28-02-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘ராட்டினம்’ பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி தயாரித்து, எழுதி, இயக்கியிருக்கிறார். ‘ஸ்டூடியோ-9’ ஆர்.கே.சுரேஷ் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.
சத்யா, ஸ்ரீமுகி, கே.எஸ்.தங்கசாமி, லகுபரன், சாம் ஆண்டர்சன், பானுசந்தர், மதுரை பாலா, ‘அசத்தப் போவது யாரு’ ராஜ்குமார், ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு ஆர்.ஜே.ஜெய். இசை மனுரமேசன். எடிட்டிங் – தீபக் துவாரகநாத். கலை – மணி கார்த்திக்.

ராமேஸ்வரத்தில் பெயிண்ட் கடை வைத்திருக்கிறார் தங்கசாமி. இவரது தம்பி லகுபரன். கல்லூரி மாணவர் ஒரு பெரிய அரசியல்வாதியின் மகளைக் காதலிக்கிறார். இதையறியும் அந்த அரசியல்வாதியின் உறவுக்காரரான உள்ளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இதனை அரசியல்வாதியிடம் போட்டுக் கொடுக்க.. லகுபரனை தட்டி வைக்கச் சொல்கிறார் அரசியல்வாதி.
கல்லூரி வளாகத்திற்குள்ளேயே மாணவர்களுக்குள் மோதல் என்பது போல ஒரு செட்டப் செய்து லகுபரனை அடித்து உதைக்கிறார்கள். இதற்கு இன்ஸ்பெக்டரும் உடந்தையாக இருக்க.. இந்தத் தாக்குதலில் லகுபரன் மரணமடைகிறார்.
உண்மை தெரிந்து தங்கசாமி உள்ளூர் போலீஸில் புகார் செய்ய, அவர்கள் விஷயத்தை அந்த இன்ஸ்பெக்டருக்கு பாஸ் செய்கிறார்கள். கூடவே தங்கசாமி மீதும் பொய் வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்புகிறார்கள்.
இதனால் வெகுண்டெழும் தங்கசாமி உண்மையில் தனது தம்பியின் கொலைக்குக் காரணமான அந்த இன்ஸ்பெக்டரை பழிக்குப் பழி வாங்க துடிக்கிறார். அந்த இன்ஸ்பெக்டர் இப்போது திருநெல்வேலியில் வேலை பார்க்க.. அங்கேயே தனது ஜாகையை மாற்றிக் கொண்டு நல்ல நேரத்திற்காகக் காத்திருக்கிறார்.
இதே நேரம் அதே ஊருக்கு டிரான்ஸ்பராகி வருகிறார் சப்-இன்ஸ்பெக்டர் பானுசந்தர். அவரது மகன் சத்யா. வெட்டி ஆபீஸர். உள்ளூர் டிவியில் அறிவிப்பாளராக இருக்கும் ஹீரோயின் ஸ்ரீமுகியை பார்த்தவுடன் காதல் கொள்கிறார். சில, பல துரத்தல்கள், பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு காதல் ஓகேவாகிறது.
இந்த நேரத்தில் திடீரென்று சப்-இன்ஸ்பெக்டர் பானுசந்தர் கொலையாகிறார். அவரை யார் கொலை செய்தது என்பது தெரியாமலேயே இருக்க.. சத்யாவுக்கு கருணை அடிப்படையில் போலீஸ் வேலை கிடைக்கிறது. இவரும் சப்இன்ஸ்பெக்டராகிறார். அதே ஊருக்கே வருகிறார்.
வில்லன் இன்ஸ்பெக்டரும், அரசியல்வாதியும் காரில் செல்லும்போது விபத்து ஏற்பட அரசியல்வாதி சாகிறார். வில்லன் இன்ஸ்பெக்டர் இது தனக்கு வைக்கப்பட்ட குறி என்பதை உணர்ந்து துப்புத் துலக்க ஆரம்பிக்கிறார்.
இன்னொரு பக்கம் தனது தந்தையின் சாவுக்கு யார் காரணம் என்பதை கண்டறியும் வேலையில் இறங்குகிறார் சப் இன்ஸ்பெக்டர் சத்யா.
வில்லன் இன்ஸ்பெக்டரை தீர்த்துக் கட்டிவிட்டுத்தான் மறுவேலை என்று துடித்துக் கொண்டிருக்கிறார் தங்கசாமி.
இந்த மூன்றும் நடந்ததா இல்லையா என்பதுதான் கதை..!
இந்த இயக்குநரின் முதல் படமான ‘ராட்டினம்’ படம் தந்த ஒரு புதிய அனுபவம்தான் இந்தப் படத்தின் மிகப் பெரிய விளம்பரம். அதனாலேயே இந்தப் படத்தை ‘ராட்டினம் பிக்சர்ஸ்’ என்ற சொந்த நிறுவனத்திற்கே பெயர் சூட்டியிருக்கிறார் இயக்குநர் தங்கசாமி.
சத்யா ‘அமரகாவியம்’ படத்திற்கு முன்பேயே நடித்த படம் இது. ஆனால் ‘அமரகாவியம்’ இதைவிட படு வேகமாக தயாரிக்கப்பட்டதால் அந்தப் படத்தை முடித்துவிட்டுத்தான் மறுபடியும் இந்தப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
மூன்றாவது படத்திலேயே குருவி தலையில் பனங்காயை வைத்தக் கதையாக போலீஸ் கேரக்டர்.. இயக்குநர் ரொம்ப நம்பிட்டாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. போலீஸ் உடையில் வரும் கம்பீரம் இல்லையென்றாலும் தேடுதல் வேட்டையிலும், புதிய வேலையில் சேரும் ஒரு அப்பாவி சப்-இன்ஸ்பெக்டர் வேடம் இவருக்குப் பொருந்துகிறது. முற்பாதியில் செய்யும் காதல் துரத்தல்களைவிடவும் பிற்பாதியில் பொறுப்பான மகன் கேரக்டரே பெரிதும் ரசிக்க வைக்கிறது.
ஹீரோயின் ஸ்ரீமுகி. மூக்கும், முழியுமாக லட்சணமாக இருக்கிறார். தமிழ்ச் சினிமாவுக்கு புது வரவுதான். நடிப்புக்கென்றே தனியாக ஸ்கோப் இல்லையென்றாலும் சின்னச் சின்ன ஆக்சன்களில் ரசிக்க வைத்திருக்கிறார். கண்ணியமான இயக்குநரின் கைவண்ணத்தில் பாடல் காட்சிகளில் கண்ணியமாகவே வந்து செல்கிறார்.
சாம் ஆண்டர்சன் துணைக்கு வந்து அவ்வப்போது கலகலக்க வைக்கிறார். இயக்குநர் தங்கசாமியும் நடித்திருக்கிறார். படத்தின் பிற்பாதியில் ஒரு பயவுணர்வை கொடுப்பதே இவர்தான். முகத்தில் தெரியும் கோபம் சினிமாத்தனம் இல்லாமல் இயற்கையாக இதுவரையில் பார்க்காததாக இருப்பதுதான் பிளஸ் பாயிண்ட்.  மனைவி கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்திலும் தம்பியின் மரணம் தன்னைத் தூங்கவிடாமல் செய்வதினால் எத்தனை கஷ்டம் வந்தாலும் சமாளிக்கத் தயார் என்று சொல்லும் அந்த காட்சி மிக யதார்த்தம்.
‘ராட்டினம்’ படத்திலும் இவரே லகுபரணின் அண்ணன் வேடத்தில் நடித்திருந்தார். இனி அடுத்த படங்களில் நடிக்காமல் அந்த வாய்ப்பை வேறொரு நடிகருக்கு தாரை வார்த்துவிட்டு இயக்கத்தை செய்தால்,  படத்தின் மார்க்கெட் வேல்யூவிற்கு கூடுதல் பலம் கிடைக்கும்.
‘ராட்டினம்’ ஹீரோ லகுபரன் படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் சின்னச் சின்ன கேரக்டர்கள்தான் என்றாலும் பானுசந்தர், அவரது மனைவியாக நடித்திருந்த பிரியா, ஹீரோயினின் பாசமான அப்பா.. தங்கசாமியின் மனைவியாக நடித்திருந்த இன்னொரு பிரியா அனைவருமே ரசிக்க வைத்திருக்கிறார்கள். படத்தின் பாடல்களுக்கான இசை ஓகேதான் என்றாலும் பின்னணி இசை நடித்தவர்களுக்கு உதவியளிக்கவில்லை.
பாழாய்ப் போன இந்தக் காதல் இல்லையேல் தமிழ்ப் படங்கள் ஓடாது என்கிற விநியோகஸ்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்காக சில விட்டுக் கொடுத்தல்கள் செய்ய வேண்டியிருக்கிறது. இதனாலேயே படத்தின் முற்பாதியில் முக்கால் மணி நேரம் கழித்தே கதை என்ன என்பது லேசாக தெரிகிறது. இதுதான் படத்தின் மைனஸாக இருக்கிறது..
இப்போதெல்லாம் படத்தின் முதல் ஷாட்டிலேயே கதையைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். மக்கள் அத்தனை நேரம் பொறுமையாகக் காத்திருக்கும் பக்குவத்தை கடந்துவிட்டார்கள் என்பதை இயக்குநர்களும புரிந்து கொள்ள வேண்டும்.
2008-ம் ஆண்டு சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற மோதலை ஞாபகப்படுத்தும்வகையிலான காட்சிதான் படத்தின் முதல் காட்சி.
இதேபோல் நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் 2010-ம் ஆண்டு வெற்றிவேல் என்ற சப்-இன்ஸ்பெக்டர் சில ரவுடிகளால் வெட்டிக் கொல்லப்பட்டார். இது ஆள் மாறாட்டத்தினால் நடந்தது. வேறொரு இன்ஸ்பெக்டருக்கு வைத்த குறி, இவர்தான் அவர் என்று நினைத்து தவறுதலாக வெற்றிவேலை கொலை செய்துவிட்டார்கள். இந்தச் சம்பவத்தையும் படத்தின் மிகப் பெரிய டர்னிங் பாயிண்ட்டாக வருமளவுக்கு திரைக்கதையில் கச்சிதமாகப் பொருத்தியிருக்கிறார் இயக்குநர்.
பழிக்குப் பழி கதைதான்.. ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக சஸ்பென்ஸ், திரில்லராக கொண்டு போக முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் தங்கசாமி. படத்தின் திரைக்கதையை தலைகீழாக மாற்றி சொல்லியிருந்தால் இன்னமும் சுவராஸ்யப்பட்டிருக்கும்.
‘எட்டுத்திக்கும் மதயானை’ டைட்டிலுக்கேற்ப இந்தப் படத்திற்கும் ‘எட்டுத்திக்கிலும் மத யானைக் கூட்டங்கள்’தான். இவற்றுக்கிடையில் அடித்துப் பிடித்து நுழைந்திருக்கும் இந்தச் சின்னப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..! 

தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் - சினிமா விமர்சனம்

22-02-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மூன்று சம்பவங்கள் ஒரு புள்ளியில் வந்து நிற்கும் கதை. இது போன்ற கதைகள் பல இதற்கு முன்பு வந்திருந்தாலும் இப்போது வந்திருப்பது அவற்றில் இருந்து சற்று வித்தியாசமாக..!

எலக்ட்ரானிக்ஸ் துறையில் மிக அதீத ஆர்வமும், அறிவும் கொண்டு எதையாவது புதுசு, புதுசாக கண்டுபிடிக்க வேண்டும் என்கிற வெறியில் இருக்கும் ஒரு ஹீரோ நகுல். இந்த நகுலிடம் காலேஜ் பிராஜெக்ட் வாங்க வந்து அவனுடைய அபரிமிதமான அறிவுத்திறனை பார்த்து அவன் மேல் காதல் கொண்டு நிற்கும் ஒரு ஹீரோயின் ஐஸ்வர்யா..
எதையாவது சொல்லி கட்டிய வீட்டை கஸ்டமர் தலையில் கட்டிவிட்டு சம்பாதிக்கத் துடிக்கும் ஹீரோ தினேஷ். தனது சிறிய வயதில் தற்கொலை சம்பவத்தால் தனது குடும்பத்தையே இழந்துவிட்டதால் இப்போது அந்த மாதிரி எண்ணம் கொண்டவர்களை காப்பாற்றும் நோக்கோடு அவர்களுக்கு பகுதி நேரமாக கவுன்சிலிங் செய்து வரும் பிந்து மாதவி.. இவர்கள் இருவரும் தற்செயலாக சந்தித்து பேச துவங்கி அது வழக்கம்போல காதலில் சென்று முடிய காத்திருக்கிறார்கள்..
இன்னொரு பக்கம் டாக்ஸி டிரைவர் சதீஷ்.. நல்ல பொண்ணா.. கெட்ட பொண்ணா என்பதே தெரியாத அளவுக்கான கேரக்டர் ஸ்கெட்ச்சில் இருக்கும் ஒரு பெண்ணை நம்பி தன் வாழ்க்கையைத் தொலைக்க காத்திருக்கிறார்.
நாடெங்கும் குண்டு வெடிக்கச் செய்யும் கும்பலின் அஸைன்மெண்ட்படி சதீஷின் டாக்ஸியில் குண்டு வைக்கப்பட்டு அது அரசு அலுவலகத்திற்குள் அனுப்பப்படுகிறது. மிக சரியாக அதே நேரம் காந்தப் புயலால் சூரிய மண்டலத்தில் காற்று வீச்சு தடைபட்டு நகரம் முழுவதிலும் செல்போன்கள் செயல் இழந்து போகின்றன.
இது போன்ற சூழலில் என்ன செய்தால் செல்போன்கள் வேலை செய்யும் என்கிற ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார் நகுல். தன் காரில் குண்டு வைத்திருப்பது தெரியாமலேயே சதீஷ் காரில் தனது காதலியுடன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். வில்லன் அவரது காரை பாலோ செய்து வருகிறார்.
இன்னொரு பக்கம் தினேஷை பார்க்க வந்த பிந்து மாதவி கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொள்ள.. அவரை குழிக்குள் தள்ளி மேலே தகர கதவுகள் சூழ்ந்துகின்றன. அவரது தலைக்கு மேலே 75 டன் எடையுள்ள பிரமாண்டமான கல் தொங்கிக் கொண்டிருக்கிறது.
ஒரு பக்கம் தினேஷ் பிந்து மாதவியைத் தேடுகிறார். இன்னொரு பக்கம் நகுலின் ஆராய்ச்சியைப் பற்றி கேள்விப்பட்டு அந்த செல்போன் நிறுவனத்தின் தலைவர், கல்லூரியின் முதல்வர் மற்றும் பிராஜெக்ட்டை காட்டிய மாணவர்களுடன் நகுலின் வீட்டுக்கே வந்திருக்கிறார்கள். நகுலின் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
காரில் வெடிகுண்டு இருப்பதே தெரியாமல் சதீஷ் தன் காதலியுடன் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்க.. பின்னாலேயே வில்லன் துரத்துகிறான்.  செல்போன் மீண்டும் இயங்கத் துவங்கினால் குண்டு வெடிப்பு நடக்கும். நகுல் தன் முயற்சியில் தீவிரமாக இருக்க.. பிந்து மாதவி தப்பிக்கத் துடித்துக் கொண்டிருக்க.. பிந்துவைத் தேடி தினேஷ் அலைந்து கொண்டிருக்க.. என்ன நடக்கிறது என்பதுதான் படம்..!
படத்தின் துவக்கத்திலேயே கதையைச் சொல்லி விடுகிறார் இயக்குநர். இதனாலேயே பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் பரபரப்பை கூட்ட வேண்டிய நேரங்களில் அது தேமே என்று இருப்பதுதான் சற்று மந்தமாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் அளவுக்கதிகமான டெக்னிக்கல் வார்த்தைகள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சம்பந்தமான பேச்சுக்கள் அதிகமாக இருக்க.. அப்சர்வேஷன் செய்யவே சற்று நேரமாகிறது..!
குண்டு வெடித்தால் என்கிற பதைபதைப்பும், அந்த பிரமாண்டமான கல் கீழே விழுந்தால் என்கிற படப்படப்பையும் இயக்குநர் நமக்குத் தந்திருக்க வேண்டும். கொஞ்சம் மிஸ்ஸிங்காகிவிட்டது.. ஆனாலும் இறுதிவரையில் ஒரு எதிர்பார்ப்பை கொண்டு சென்றிருக்கிறார். கிளைமாக்ஸ் எதிர்பாராதது.. என்றாலும் சினிமாத்தனம்தான்..
நகுலுக்கு இந்தப் படத்தில் காஸ்ட்யூமே இல்லை என்று சொல்ல்லாம். வெரி சிம்பிளாக இருக்கிறார். இயல்பாக நடித்திருக்கிறார். சண்டை காட்சிகள் இல்லை.. டூயட்டுகளிலும் மாண்டேஜ் ஷாட்டுகள் என்பதால் அதிலேயே கதையைச் சொல்லி நகர்த்தியிருக்கிறார்கள்.. நகுல் இது போன்று தொடர்ந்து கதைகளுக்கேற்ற படங்களில் நடித்தால் அவரது கேரியருக்கு நல்லதுதான்..!
பிந்து மாதவி.. வழக்கம்போல அழகில் அசர வைக்கிறார். அவரை அறிமுகப்படுத்தும் காட்சியில் பின்னணியில் ஒலிக்கும் இசையே அசத்தல்.. கண்களிலேயே பாதி கதையை பேசிவிட்டுப் போகிறார். தினேஷ் இவரிடம் என்னை நல்லா திட்டிருங்க. அதுக்கப்புறம் நான் இனிமே வர மாட்டேன் என்று சொல்ல திட்டுவதற்காக அவர் டிரெயினிங் எடுத்து பழகிப் பார்த்து முடியாமல்.. நிசமாகவே திட்ட வேண்டிய சூழலில் பொங்கி எழுந்து பேசும் காட்சிகளில் அவரது நடிப்பை பலே என்று சொல்ல முடிகிறது..! இன்னும் கொஞ்சம் இயக்கத்தில் முயற்சி செய்திருந்தால் பிந்து மாதவி தன் நடிப்பு பற்றி சிலாகிக்க இந்தப் படத்தை உதாரணமாகச் சொல்லியிருக்க முடியும்..!
தினேஷின் தலை சுற்றல் இந்தப் படத்திலும் நிற்கவில்லை போலும். விமலுக்கு அடுத்து தனது தலை அசைவிலேயே நடிப்பைக் காட்டி வருவது தினேஷ்தான். இதோடு விட்டுவிட்டால் நமக்கும் நல்லது.. கஸ்டமர்களின் வீட்டை விற்கும்போது பீலா விட்டு அது உடனே பொய் என்று தெரிய வர சமாளிப்புத் திலகமாக மாறி நகைக்க வைக்கிறார். இவருடைய போர்ஷனில் காதல் உடைந்து பின் மீண்டும் உண்டாகியிருக்கும் காட்சிகளை கட் டூ கட் போர்ஷனாக இடைவேளைக்கு பின்பு சொல்லியிருக்கும் விதம் ரசிப்புக்குரியது.
அறிமுக நடிகை ஐஸ்வர்யா தத்தா மூக்கும், முழியுமாக லட்சணமாக இருக்கிறார். கல்லூரி மாணவி கேரக்டருக்கு கனப் பொருத்தம். அதிகமாக நடிக்க வாய்ப்பில்லாததால் அதிகமாக பாராட்ட முடியவில்லை. ஆனால் ரசிக்க வைத்திருக்கிறார். அடுத்தடுத்து பார்ப்போம்..!
சதீஷின் காமெடிதான் படத்தின் முற்பாதியில் படத்தை பெரிதும் நகர்த்தியிருக்கிறது. அவரை மாப்பிள்ளை பார்க்க மாமனாரும், பெண்ணும் காரில் ஏறி அலப்பறை கொடுக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. அந்தப் பெண்ணின் கேரக்டர் ஸ்கெட்ச்சை கடைசிவரையிலும் நட்ட நடு நிலை சென்டராகவே காட்டி சதீஷை அலற வைத்திருக்கிறார் இயக்குநர்.
செல்போனை தொலைத்துவிட்டு தொலைத்தவனிடம் சதீஷ் பேசும் பேச்சுக்களெல்லாம் எந்தப் படத்திலும் பார்க்காதது. காமெடியன் காமெடியனாகவே இருக்கட்டும் என்று நினைத்துவிட்டார்கள் போலும்..!
ஒரு சில காட்சிகளே என்றாலும் ஊர்வசியின் அலப்பறை நடிப்பு இதிலும்.. வித்தியாசமான அம்மாவாக நகுலின் காதலியை பற்றி நேருக்கு நேராக விசாரிப்பதும், காதலிக்கு செல்போனில் மெஸேஜ் கொடுப்பதுமாக குறும்புத்தனமான அம்மாவெனில் அது ஊர்வசிதான் என்பது வேறு ஆல்டர்னேட் இல்லை என்றே சொல்லலாம்.
மனோபாலாவை காமெடிக்கு பயன்படுத்தியிருப்பது ஓகேதான் என்றாலும், இந்த அளவுக்காக ஒரு பொறியியல் கல்லூரியின் முதல்வரை கீழமைப்படுத்துவது..? கஷ்டகாலம்..! தவிர்த்திருக்கலாம்..!
தமனின் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே.. பிந்து மாதவிக்காக இசைத்திருக்கும் இசை டபுள் ஓகே..!  ஆனால் பின்னணியில் இரைச்சல்தான் காதை கிழிக்கிறது..!
இப்போதைய தமிழ்ச் சினிமாவின் டிரெண்ட்டு தீவிரவாதம்தான் போலிருக்கிறது. இந்தக் குண்டு வெடிப்பு கலாச்சாரத்தை மையமாக வைத்து சென்ற ஆண்டே கணக்கு வழக்கில்லாமல் படங்கள் வந்திருந்தன. இந்தாண்டு அதையும் மிஞ்சிவிடும் போலிருக்கிறது..!
குண்டு வெடிப்பு என்றாலும் அதனை முறியடிப்பது எப்படி என்றே பல படங்கள் கதை சொல்லி வருகின்றன. ஏன் வைக்கிறார்கள்..? அதன் முன் காரணங்கள் என்ன..? பின் விளைவுகள் என்ன என்பதை பற்றி யாரும் யோசிப்பதேயில்லை.. இதைப் பற்றி இந்தப் படம் பேசியிருந்தால் படமும் பேசப்பட்டிருக்கும்..!
‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ என்ற டைட்டிலை வைத்துக் கொண்டு இந்த நம்பரை அழுத்தினால் வெடிக்கும் என்கிற கான்செப்ட்டே இல்லாமல், மூன்றாவது ரிங்கில் குண்டு வெடிக்கும் என்று வைத்தது ஏனோ..?
படம் முக்கால்வாசி பரபரப்பைத்தான் கொடுத்திருக்கிறது என்றாலும் இசையைத் தவிர வேறு தலைவலி தரக் கூடிய விஷயங்கள் இல்லையென்பதால் தாராளமாக பார்க்கலாம்..! அறிமுக இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பாவின் அடுத்தடுத்த படங்கள் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!

சண்டமாருதம் - சினிமா விமர்சனம்

28-02-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனமும், ரேடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கின்றன. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ஹீரோவாக நடித்திருக்கிறார். கதாநாயகிகளாக ஓவியா, மீரா நந்தன் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரகனி நடித்திருக்கிறார்.
மற்றும் விஜயகுமார், ராதாரவி, இமான் அண்ணாச்சி, நரேஷ், தம்பி ராமையா, வெண்ணிற ஆடை மூர்த்தி, சிங்கம் புலி, ‘காதல்’ தண்டபாணி, நளினி, டெல்லி கணேஷ், மோகன்ராம், ஜி.எம்.குமார், சந்தானபாரதி, ரேகா சுரேஷ், வின்சென்ட் அசோகன், ‘கானா’ உலகநாதன் என்று மிகப் பெரிய பட்டாளமே நடித்திருக்கிறது. சரத்குமாரின் சொந்தக் கதை இது. கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதை அமைத்தியிருக்கிறார். கூடுதல் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஏ.வெங்கடேஷ்.
ஒளிப்பதிவு – N.S.உதய்குமார், இசை – ஜேம்ஸ் வசந்தன், பாடல்கள் – மோகன்ராஜ், சுமதிஸ்ரீ, எடிட்டிங் – V.T. விஜயன், கலை – ரூபேஷ், ஸ்டண்ட் – ஸ்டண்ட் சிவா, நடனம் – கல்யாண், விஷ்ணு தேவா, தலைமை செயல் அதிகாரி – பா..சக்திவேல், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – A.N.சுந்தரேசன், தயாரிப்பு மேற்பார்வை – வினோத் சபரீசன், தயாரிப்பு – R.சரத்குமார், திருமதி ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன், வசனம் இயக்கம் – A.வெங்கடேஷ் .

கும்பகோணத்தில் அரசியல்வாதிகளைவிடவும் அதிகமாக அராஜகம் செய்து வருகிறார் சர்வேஸ்வரன் என்கிற வில்லன் சரத்குமார்.
இவர் தன்னுடைய எதிரிகளை வித்தியாசமான முறையில் ‘ஒப்வாலசிகா’ என்கிற கெமிக்கல் முறையில் தீர்த்துக் கட்டுகிறார். ஒரு சின்னஞ்சிறிய குடுவையில் இந்த வாயுவைப் பிடித்து அடைத்து வைத்திருக்கும் சூழலில், குடுவையைத் திறந்து வைத்தால் நான்கே விநாடிகளில் அதன் அருகில் இருப்பவர் 100 சதவிகிதம் தீக்காயம்பட்டவரை போலாகி மரணமடைவார்.
இவருடைய அராஜகத்தை அடக்கியொடுக்க கும்பகோணத்திற்கு டி.ஜி.பி.யின் நேரடி உத்தரவின் பேரில் மாற்றலாகி வருகிறார் சமுத்திரக்கனி. இவரை இங்கேயே விட்டுவைத்தால் தனக்கு ஆபத்து என்று கருதி ஒரு நாள் இவருக்கும் நாள் குறித்து பரலோகம் அனுப்ப திட்டமிடுகிறார் வில்லன் சரத்குமார்.
இதே நேரம் பொள்ளாச்சியில் வசிக்கும் இளைய சரத்குமார், தான் ஒரு போலீஸ் ஆபீஸர் என்பதையே தனது தந்தையைத் தவிர தனது குடும்பத்தினர் யாரிடமும் சொல்லிக்காதவர். சட்.. சட்டென்று ஊர், ஊராகச் சென்று குருவியைச் சுடுவதை போல ரவுடிகளை என்கவுண்ட்டர் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதற்கு போலீஸ் மேலிடத்தின் ஆதரவும் உண்டு.
கும்பகோணத்தில் இருந்து பொள்ளாச்சி வந்த சமுத்திரக்கனி அங்கே வில்லன் சரத்குமாரின் ஆட்களால் கொல்லப்பட இப்போது நண்பனுக்காக பழிக்குப் பழி வாங்க கும்பகோணத்திற்கு வருகிறார் இளைய சரத்குமார். அதைச் செய்து முடித்தாரா இல்லையா என்பதுதான் மிச்சம், மீதி கதை..!
இப்போதெல்லாம் வில்லன்கள் ஹீரோக்களைவிடவும் அதிகம் பேசப்படுகிறார்கள் என்கிற கான்செப்ட்டின்படி வில்லன் கேரக்டரையும் தானே செய்திருக்கிறார் சரத்குமார்.
கிளைமாக்ஸ் சண்டை காட்சியின்போது துள்ளலுடன் எகத்தாளத்துடனும் பேசும்போது மட்டும் வில்லனாக ரசிக்க முடிகிறது. மற்றபடி எப்போதும் ஹீரோவாக பார்த்தவர்கள் சட்டென்று மனநிலை மாறுவது கடினம்தான்..!
இளைய சரத்குமார் அதேபோலத்தான். கவுண்டமணி, வடிவேலுகூடவெல்லாம் சக்கை போடு போட்டவர் இப்போது தம்பி ராமையா, வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் மல்லுக் கட்ட வேண்டியிருக்கிறது.
பாடல் காட்சிகளில் எப்போதும் தனக்கிருக்கும் சிக்ஸ் பேக் உடம்பைக் காட்டியதால், அதே பாடல் காட்சிகளில் அதே சிக்ஸ் பேக் காட்டி அசத்தலாக ஆடியிருக்கும் ஓவியாவை ரசிக்கவிடாமல் செய்திருக்கிறார். என்னண்ணே இப்படி பண்றீங்களேண்ணே..?
 தம்பி ராமையாவின் புலம்பல் சில இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறது. படத்துக்கு படம் அண்ணனின் நடிப்பு கேரியர் ஏறிக் கொண்டேதான் இருக்கிறது.. வெண்ணிற ஆடை மூர்த்தியின் வழக்கமான நகைச்சுவை கலந்த ‘பிட்டு’ பேச்சுகள் இதிலும் உண்டு. கொஞ்சம் நைஸாக அதனை திணித்திருக்கிறார்கள்.
குடும்ப குத்துவிளக்காக மீரா நந்தன். கவர்ச்சிக்கு ஓவியா.. முன்னவருக்கு கொஞ்சம் நடிப்புடன் கூடிய வேடம்.. ஆனால் ஹீரோவுடன் பார்க்கும்போது அப்பா-மகள் போல இருக்கிறார்கள். பின்னவருக்கு கவர்ச்சியுடன் ச்சும்மா வந்து போகும் வேடம்.. திடீரென்று வருகிறார். அடுத்த காட்சியிலேயே தான் ஒரு போலீஸ் ஆபீஸர் என்கிறார்.. இப்படி படமே ரன் வேகத்தில் போகும்போது இவர்களை எப்படி கவனித்துக் கொண்டேயிருப்பது..?
கமர்ஷியல் படங்களுக்கே உரித்தான வேகத்தில்.. பல திருப்பங்களில் படம் செல்வதாலும், இயக்குநர் ஏ.வெங்கடேஷன் வழக்கமான இயக்கத்தினாலும் எந்தக் காட்சியும் மனதில் அழுத்தமாக பதியாமல் போய்விட்டது.
ராஜேஷ்குமாரின் திரைக்கதை சிறப்பாக இருந்தும் படத்தின் முடிவு இடைவேளையின்போதே தெரிந்துவிடுவதால் எப்படி சாகிறார் என்பதை பார்ப்பதற்காகவே கடைசிவரையிலும் உட்கார்ந்து பார்த்தோம் என்றாகிவிட்டது.
சமுத்திரக்கனியின் தீர்க்கமான பார்வையே அவர் ஏற்கும் வேடத்திற்கு கம்பீரத்தை அளிக்கிறது. இதிலும் அப்படியே..! இயல்பாக வந்து சென்றாலே போதுமென்னும் அளவுக்கு நடித்திருக்கிறார். வின்சென்ட் அசோகனும் இன்னொரு தேடுதல் வேட்டை நடத்தும் போலீஸ் அதிகாரியாக வந்திருக்கிறார்.
ஜேம்ஸ் வசந்தனின் இசையில் பாடல்கள் ஒலித்தன. சரத்குமார், ஓவியா டூயட் பாடல் ஓகேதான் என்றாலும் இன்னுமொரு சரணத்தைக் கூடுதலாக வைத்து நேரத்தைக் கூட்டியிருக்கலாம். லொகேஷனும், ஓவியாவும், அவரது சிக்ஸ் பேக்கும் அப்படியொரு அழகு..! ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமாரின் கேமிராவுக்கு நன்றிகள்… சண்டை காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும், பொள்ளாச்சி காட்சிகளிலும் ஒளிப்பதிவு தனித்தே தெரிகிறது.
படத்தின் இடையிடையே பல விதங்களில் தமிழக சினிமா ரசிகர்களுக்கு பல்வேறுவிதமான அறிவியல் சம்பந்தமான பொது அறிவு விளக்கங்களை கொடுத்திருக்கிறார்கள்.
சினிமாவுக்கு போனோமா..? ஹீரோவை பார்த்தோமா..? ஹீரோயினை பார்த்தோமா? வந்தோமா என்றில்லாமல் இந்தப் படம் பார்த்துவிட்டு ஒரு அறிவியல் புதுமையை தெரிந்து கொண்டு வெளியில் வருகிறார்கள் ரசிகர்கள். இதைச் சாத்தியப்படுத்திய திரைக்கதை மன்னன் ராஜேஷ்குமாருக்கு எமது நன்றிகள்.
கமர்ஷியல் படமேயென்றாலும் தமிழ்ச் சினிமாவில் தனது இருப்பையும் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் சரத்குமார் இனிமேல் சங்கோஜமே இல்லாமல் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தேர்வு செய்யும் கதைகளில் நடிக்கலாம். அப்போது கமர்ஷியல் தரப்பு ரசிகர்கள் இன்னும் அதிகமாக அவரை வரவேற்கக் கூடும்.

அனேகன் - சினிமா விமர்சனம்

16-02-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கண்வலி என்று மருத்துவரிடம் போகும்போது கலைடாஸ்கோப்பை கையில் கொடுத்து “இதைப் பார்த்துக்கிட்டேயிருங்க.. பத்து நிமிஷத்துல கண்ணு சரியா போயிரும்..” என்று சொல்வதுபோல கமர்ஷியல் படம்தான் வேண்டும் என்றாலும் 10 படங்களுக்கு கொடுக்க வேண்டிய விஷயங்களை ஒரே படத்தில் கொடுத்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இந்த ‘அனேகனை’ செதுக்கி, செதுக்கி கொடுத்திருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.
இந்தப் படத்திற்கு ஒரு சிறப்பு. இதன் கதையை எந்தக் கோணத்தில் வேண்டுமானாலும் நாம் பார்க்கலாம். கதை சொல்லலாம். சொல்லாடலாம்.. அந்த அளவிற்கு இறுதியில்  இருந்து முதல் காட்சிக்கு.. முதல் காட்சியில் இருந்து இறுதிக்கு.. இடைவேளைக்கு பின்பில் துவங்கி, இடைவேளைக்கு முன்பு துவங்கி.. என்று அனைத்துவித குறுங்கோணங்களிலும் சொல்ல முடிகின்ற வகையில் படத்தின் கதையைப் பின்னிப் பிணைந்திருக்கிறார்கள் கதாசிரியர்கள் சுபா இரட்டையர்கள்.

மூன்று ஜென்மக் கதைகள். முதல் ஜென்மத்தில் காதல், காதலியின் அப்பாவால் அழிக்கப்படுகிறது. அடுத்த ஜென்மத்து காதல், காதலியை மணக்க விரும்பிய ஒரு பணக்காரனால் சமாதியாக்கப்படுகிறது. இந்த ஜென்மத்து காதலாவது ஜெயிக்குமா? ஜெயிக்காதா என்பதுதான் கதை..!
தனுஷ் என்ற ஒற்றை நாடி நடிகர் தனது புருவம் முதற்கொண்டு அனைத்தையும் ஆட வைத்தும், நடிக்க வைத்தும் அசர வைக்கிறார். படத்துக்கு படம் தனுஷின் நடிப்பில் ரசனை கூடிக் கொண்டே செல்கிறது.. பர்மா தனுஷ் ரொம்ப சின்னப் பையனாக.. பக்குவம் வராத இளைஞனாக தன்னை நாடி வரும் காதலியை அழைத்துக் கொண்டு நாடு திரும்பும் அளவுக்கு யுக்தியுள்ள பையனாக வருகிறார்.  ரசிக்க வைக்கிறார். காதலியைக் காப்பாற்றியதற்காக அவள் அம்மா பணம் கொடுக்க முயல.. “நீங்களே இப்போ விலை பேசுறீகளே..?” என்று செட்டி நாட்டு பாஷையில் பேசி மறுத்துவிட்டு அலட்சியமாக செல்லும் அந்த நடிப்புதான் கடைசிவரையிலும் அப்படியே இருக்கிறது.
வியாசர்பாடி இளைஞனாக பரிமாணிக்கும் தனுஷின் அடுத்தக் கட்ட நடிப்பும் அசர வைக்கிறது. கஸ்டம்ஸ் ஆபீஸரை காப்பாற்ற சண்டையிட்டுவிட்டு.. ஆஷிஷ் வித்யார்த்தியிடம் சமாளிப்போடு பேசும் காட்சியெல்லாம் தனுஷுக்கு விடப்பட்ட சவால்.. அல்வா சாப்பிடுவதுபோல மிக எளிதாக இந்தக் காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார். 
தற்போதைய ஜெனரேஷன் தனுஷ் ஹீரோயினின் மாமாவிடம் “100 கோடி, 200 கோடியிருந்தா வீட்லயே வைச்சிருக்க வேண்டியதுதானே? எதுக்கு அம்பதாயிரம் சம்பளத்துக்கு அனுப்புறீங்க..?” என்று முறைப்பு காட்டுவது.. ஹீரோயினிடம் இருந்து தப்பிக்க நினைத்தும் முடியாமல் போவதையெல்லாம் கொஞ்சமும் அலுப்பு தட்டாமல் சொல்லியிருப்பதற்கு தனுஷ் ஒருவரே காரணம் என்றே சொல்லலாம்.
கிளைமாக்ஸில் கார்த்திக் போலவே தனுஷ் நடித்துக் காட்டும் அந்தக் காட்சியில் தியேட்டரே அதிர்கிறது. இந்த நடிப்பையெல்லாம் பார்க்கணுமா என்று நினைத்து கார்த்திக் காட்டும் ‘அட போடா’ என்ற எக்ஸ்பிரஷனும் சூப்பர்தான்..!
கார்த்திக் என்னும் புயல் இதில் மீண்டு வந்திருக்கிறது. ஆனாலும் அநியாயத்திற்கு ஆங்கில வார்த்தைகளை கலந்து பேசியிருப்பதும், பாதி டயலாக்குகளை மென்று முழுங்கி பேசுவதையும்தான் ரசிக்க முடியவில்லை. வியாசர்பாடி காலத்தில் அவர் வில்லனாக எப்போது மாறுவார் என்று எதிர்பார்க்க முடியவில்லை. அவர் பிக் பீரியடில் இருந்த காலத்தில்கூட இப்படியொரு பாட்டுக்கு இப்படியொரு கெட்ட ஆட்டம் ஆடியிருக்க மாட்டார்.. “என் வாழ்க்கைல நிறைய பொண்ணுக கிராஸ் பண்ணியிருக்காங்க. ஆனா காலைல பார்த்தா பேரே மறந்திரும்..” என்று கார்த்திக் சொல்வது அவரது கடந்த காலத்திற்கும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.
ஹீரோயின் மட்டுமே சறுக்கலாக இருக்கிறது. இந்த மாதிரியான படங்களுக்கு ஏற்கெனவே இங்கே கொலு வீற்றிருக்கும் ஹீரோயின்கள்தான் மிகவும் தேவை. அவர்களில் ஒருவரை பயன்படுத்தியிருந்தால் இன்னமும் ரசித்திருக்க முடியும். முதல் படம் என்பதோடு.. அவருடைய நடிப்பையும், துள்ளலையும் ரசிக்கும் அளவுக்கு நேரமில்லாமல் படம் அவ்வளவு வேகமாக ஓடுகிறது.. இதில் எதை ரசிப்பது..?
கொஞ்சமே வந்தாலும் ரசிக்க வைத்திருக்கிறார் ஆஷிஷ் வித்யார்த்தி. மனோதத்துவ நிபுணராக வரும் மலையாள நடிகை லேனா தமிழுக்கு நல்ல வரவு. தனுஷின் அம்மாவாக நடித்திருப்பவரின் இன்னசென்ட் முகம்.. அப்பாவாக நடித்திருக்கும் சங்கர் கிருஷ்ணமூர்த்தியின் இரண்டே இரண்டு வசனங்கள் எழுப்பும் அதிர்வெடி கைதட்டல்.. நண்டு ஜெகனின் ஆர்ப்பாட்டமில்லாத சிரிப்பே வராத காமெடி வசனங்கள்.. எல்லாமும் சேர்ந்து இயக்குநருக்கு உதவியிருந்தாலும் பெரும் உதவி செய்திருப்பவர் இசையமைப்பாளர்தான். ‘டங்காமாரி’ பாடலுக்கு தியேட்டரே ஆடுகிறது.. ஆனாலும் அருமையான தத்துவ தமிழ் வார்த்தைகள் அடங்கிய இந்த மாதிரியான பாடல்கள்தான் இப்போதைய இளைஞர்களுக்கு பிடிக்கிறது என்றால் நமது அடுத்தத் தலைமுறையை நினைத்து பயப்பட வேண்டியிருக்கிறது.. எங்கே போகிறது தமிழ்ச் சமூகம்..?
படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பது பர்மா சம்பந்தப்பட்ட காட்சிகளிலேயே தெரிகிறது.. கடின உழைப்பை கொட்டியிருக்கிறார்கள் என்பதும் புரிகிறது. ஆனாலும் காட்சிகள் அனைத்துமே உடனுக்குடன் தாவி, தாவி செல்வதால் எந்தக் கேரக்டருக்குமே அழுத்தமான முக பாவனைகளும், நடிப்பாற்றலும் வெளிப்படவில்லை என்பது மிகப் பெரிய குறை.
இப்போதுதான் ‘இசை’ என்றொரு படம் வெளிவந்தது. நடிகர்களை நடிக்க வைப்பது எப்படி என்பதற்கு கிளாஸ் எடுப்பது போல  இருந்த்து அதன் காட்சியமைப்புகள். இதில் மிக குறுகிய நேர காட்சிகளால் பல விஷயங்கள் அழுத்தமாக இல்லாதது போல ஆகிவிட்டது.
பர்மா காட்சிகளில் ஆங்சான் சூகியையும் இரண்டு இடங்களில் காட்டி தனது அறிவுத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். மேலும் கார்த்திக் நடத்தும் கம்ப்யூட்டர் கேம்ஸ் சாப்ட்வேர் தயாரிக்கும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மூளையை மென்மைப்படுத்தும் அந்த மாத்திரை தொடர்பான செய்திகள்.. இதன் மூலமாக சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் ஊழியர்கள் என்று கதையை கொஞ்சம், கொஞ்சமாக அவிழ்த்துக் கொண்டே வந்தது ஒருவிதத்தில் ஓகேதான் என்றாலும் ஒட்டு மொத்தமாக பார்க்கப் போனால் அது எதற்காக என்றே கேட்கத் தோன்றுகிறது.
 கார்த்திக் அமைராவை பார்த்துவிட்டார். தன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டார். அவளையே திருமணம் செய்ய நினைக்கிறார்.. இப்படியே கதையை கொண்டு சென்றிருக்கலாம். இதில்லாமல், முன் ஜென்மத்துக் கதையையெல்லாம் தோண்டி.. மூக்கைச் சுற்றி தலையைத் தொட்ட கதையாக திசை திருப்பியிருக்கிறார்கள்.
ஆஷிஷ் வித்யார்த்தி அந்த R என்று எழுதப்பட்ட மோதிரம் இருக்கும் விரலை மட்டும் எதற்காக மறைக்கிறார் என்பதை சொல்லவேயில்லையே..? ஒருவேளை அவர் கார்த்திக்கின் தோஸ்து என்பதை சொல்ல வந்து அது எடிட்டிங்கில் கட்டாகிவிட்டதோ..?
கார்த்திக் அலுவலகத்தில் சண்டை காட்சி.. கிளைமாக்ஸ் சண்டை காட்சி..  மிகச் சரியான நேரத்தில் வந்து நிற்கும் போலீஸ்கார். ஐ.டி. படித்ததை உறுதி செய்வதை போல தனுஷ், “இவரை கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போயிட்டால் என் காதல் என்னாவது?” என்று கேட்பது.. எல்லாவற்றுக்கும் மேல், மேலே தூக்கி வீசிய கத்தி கீழே வந்து கார்த்திக்கின் கதையை முடிப்பது என்கிற அந்த ரகசியம்தான் ரசவாதமாகி காமெடியாகவும் இருக்கிறது..!
முன் ஜென்மத்து சம்பவம்தான் என்றாலும், ஹிப்டினாஸத்தில் ஆழ் மன ரகசியத்தை வெளிக்கொணரலாம் என்றாலும்.. அமைரா இப்போது சராசரி பெண்ணா. அல்லது முக்காலமும் உணர்ந்த பொண்ணா..? மனநல காப்பகத்தில் இருக்கும் தலைவாசல் விஜய்யை தன்னுடைய முன்பிறவி அப்பா என்று எப்படி கண்டு பிடிக்கிறார்..? இந்த பர்மா கதையெல்லாம் அந்த மாத்திரையை சாப்பிட்ட பின்பு வெளிவந்ததா..? கார்த்திக் அவளை இங்கே அனுப்பி வைத்திருக்கும் காரணம்தான் என்ன..? 
எல்லாமே ஹீரோயினின் சிந்தினை திறனால் என்றால் கம்பெனியில் கொடுக்கப்பட்ட மாத்திரையினால் விளைந்த தீமைகள் என்ன..? கார்த்திக் ஏன் அதனை தொடர்கிறார்..? இந்த மருத்துவர் இதற்கு ஒத்துழைக்கும் ரகசியமென்ன..? இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டே போகலாம்.. இதெல்லாம் படிப்பதற்கு ஓகேதான்.. விஷுவலாக பார்க்க சிந்திக்கவே விடாத தன்மையுடன் படத்தைப் பார்த்து முடிக்க வைத்திருக்கும் சூழலைத்தான் சொல்ல முடியும்..!
காது கிழியும் அளவுக்கு பாடல் இசையையும், பின்னணி இசையையும் போட்டுக் கொளுத்தியிருக்கும் ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஒரு ஹியரிங் எய்டு பார்சல்.. ஆனால் பாடல் காட்சிகளை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷுக்கும், நடன இயக்குநர்களுக்கும் பாராட்டுக்கள். அதிவேக காட்சிகளுக்கு இணையாக நடனம் அமைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்கள். இதெல்லாம் அதீதமாக வித்தை காட்டத் தெரிந்தவர்களால்தான் முடியும்..!
முதலில் இந்தப் படத்திற்கு ‘ஏ’ சர்பிடிகேட்டுதான் கொடுத்திருக்க வேண்டும். ஏற்கெனவே 32 இடங்களில் கத்திரியை போட்டும் படம் இப்படியிருக்கிறது என்றால் அவைகளும் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..? நேரில் சாந்த சொரூபியாக காட்சியளிக்கும் இயக்குநர் கே.வி.ஆனந்த், நிஜத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஒண்ணுவிட்ட அண்ணானாக இருப்பார் போலிருக்கிறது. சென்சார் போர்டுக்கு நமது வன்மையான கண்டனங்கள்.
படம் முழுக்க ஆங்காங்கே விரவிக் கிடக்கும் டபுள் மீனிங் டயலாக்குகள்.. விரசத்தை தொடும் காட்சிகளென்று முகத்தை சுழிக்க வைப்பவை நிறையவே இருக்கின்றன. இதையெல்லாம் குழந்தைகளுடன் உட்கார்ந்து பார்க்க வேண்டுமென்றால் எப்படி..? கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா..? கமர்ஷியல் ஹிட்.. அபார வசூல். இது இரண்டை மட்டுமே லட்சியமாகக் கொண்டிருக்கும் தமிழ்த் திரையுலகம் இதனை எப்போது புரிந்து கொள்ளப் போகிறது..?
எப்படியிருந்தாலும் முதல் 2 நாட்களிலேயே 20 கோடியை வசூல் செய்திருப்பதால் இந்தப் படத்தின் கலெக்சன் இப்போதைக்கு நிற்காது என்றே தோன்றுகிறது.. சமீபத்தில் வெளிவந்த ‘ஐ’-யும் படம் பற்றிய பல கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் இன்னமும் வெற்றிகரமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படமும் நிச்சயமாக அதுபோலவே ஓடும் என்றே தோன்றுகிறது.
ஏனெனில் தமிழ் ரசிகர்கள் இந்த அளவுக்கு கமர்ஷியல் படங்களுக்காக காய்ந்து போயிருக்கிறார்கள். அனுபவிக்கட்டும்..!

பொங்கியெழு மனோகரா - சினிமா விமர்சனம்

06-02-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



ஈரோடு பக்கமுள்ள ஒரு கிராமம். அந்த ஊரில் ‘கலைவாணி நாடகக் குழு’வை நடத்துகிறார் சிங்கம்புலி. அந்த நாடகத்தில் அவ்வப்போது சின்ன வேடங்களில் நடிக்கிறார் ஹீரோ இர்பான்.  இவருடைய அப்பா சம்பத்ராம் ஒரு பால் வியாபாரி. அம்மாவை அப்பாவே விரட்டிவிட்டார். அம்மாவின் முகமே மறந்துவிட்டது ஹீரோவுக்கு..
இப்போதும் வாலிப வயதில் அடி, உதைக்கு அஞ்சாத அப்பாவிடம்… பாசமென்றால் என்னவென்று சொல்லிக் கொடுக்காத தந்தைக்கு பால் வியாபாரத்தில் கூட மாட ஒத்தாசை செய்து அப்படியே நாடகத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் ஹீரோ.
இந்த நேரத்தில்தான் சிங்கம்புலிக்கு பொண்ணு பார்க்கப் போன இடத்தில் ஹீரோயின் அர்ச்சனாவை பார்த்து பேச வேண்டிய கட்டாயம் ஹீரோவுக்கு. அர்ச்சனா பக்கத்து ஊரில் இருக்கும் பஞ்சு மில்லுக்கு வேலைக்குச் செல்லும்போது இருவரும் தினமும் சந்திக்கத் துவங்க.. ஹீரோயின் மேல் ஹீரோவுக்கு காதல் தானாக பிறக்கிறது.
இந்தக் காதலை வாழ வைக்க சிங்கம்புலி அண்ட் கோ மிகவும் கடுமையாக உழைக்கிறது. காதல் வந்துவிட்டது என்று ஹீரோ நினைத்த நேரத்தில் டிவிஸ்ட்டாக  ஹீரோயினுக்கு  திருமணம்.  ஹீரோயினே திருமணத்திற்கு தானாகவே ஒத்துக் கொண்டது தெரிந்து கடும்கோபமாகிறார் மனோகரன்.
“அவ என்ன என்னை வேண்டாம்ன்னு சொல்றது.. நான் இனிமேல் ஆனந்தியை காதலிக்கிறேன்…” என்று சொல்லி இன்னொரு ஹீரோயினை ஒருதலையாகக் காதலிக்கத் துவங்குகிறார். ஹீரோவின் இந்தக் காதலாவது ஜெயித்ததா..? அவரது அம்மாவின் நிலை என்ன..? அம்மாவை ஹீரோ கடைசியாக சந்தித்தாரா என்பதுதான் மீதி படம்..
இர்பான்.. பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர். இதுதான் அவரது முதல் ஹீரோயிஸ படம் என்று நினைக்கிறோம். டிவி சீரியில் நடிப்பு கை கொடுத்திருப்பதால் பல காட்சிகளில் இவரை ரசிக்க முடிகிறது.. கிளைமாக்ஸில் மிக பரிதாபமான உணர்வை வரவழைத்துவிட்டார். அந்தக் காட்சி எமோஷனலானதுதான் என்றாலும் மேலும் ஒரு அதிர்ச்சியையும், பரிதாபத்தையும் வரவழைத்தது இர்பானின் நடிப்பினால்.. இவர் மென்மேலும் உயர வாழ்த்துகிறோம்.
ஹீரோயின்கள் இருவரில் தேன்மொழியாக நடித்த அர்ச்சனாவைவிடவும் ஆனந்தியாக நடித்த அருந்ததி நாயருக்கு ஸ்கோப் அதிகம். அழகும்கூட.. காதலை ரிஜக்ட் செய்துவிட்டுப் போகும் காட்சியில் அருந்ததி நாயருக்கு ஒரு ‘ஜே’ போட வேண்டும். அழுத்தமான நடிப்பு. மலையாள வரவுகள் எப்போதும் சோடை போனதில்லை..
சிங்கம்புலியின் நான் ஸ்டாப் காமெடி வசனங்களில் பல இடங்களில் சிரிப்பே வரவில்லையென்றாலும், சில இடங்களில் வந்துவிட்டது.. அதிலும் அந்த முடி திருத்துனரை அடித்து உதைக்கும் காட்சி முழுக்கவே சிரிப்பலைதான்.. இயக்குநரின் இயக்கத் திறமைக்கு இந்த காட்சியும், கிளைமாக்ஸும் ஒரு சான்று..!
படத்தின் துவக்கத்தில் இருந்து இடைவேளைவரையிலும் ஒரு காதலை வளர்ப்பதிலேயே போய்விடுகிறது. இடைவேளைக்கு பின்பு அடுத்த காதலை வளர்ப்பதும் அதை அடையும் வழியுமாகவே திரைக்கதை செல்கிறது. திடீரென்று அம்மா சென்டிமெண்ட்டில் படம் திசை மாறி கிளைமாக்ஸ் படு சோகமாக முடிந்திருப்பதை சட்டென்று ஏற்க முடியவில்லை.
படம் காதலைச் சொல்கிறதா அல்லது அம்மா பாசத்தைச் சொல்கிறதா என்கிற முடிவுக்கு வர முடியாமல் தவிக்கிறார்கள் பார்வையாளர்கள். ஏதாவது ஒரு திசையில் பயணித்திருக்கலாம்..
சி.ஜெ.ராஜ்குமாரின் ஒளிப்பதிவில் குறைவில்லை. முதல் டூயட் பாடலே சான்று.. சின்ன பட்ஜெட் படங்களில் இப்போதெல்லாம் ஒளிப்பதிவு மட்டும் முதல் தரமானதாகவே இருக்கிறது. இந்த நல்ல விஷயங்களை இயக்குநர்கள் பயன்படுத்திக் கொள்வதுதான் குறைவாகவும் இருக்கிறது..! கிளைமாக்ஸில் அந்த சோகத்தை படப்பதிவு செய்திருப்பதில் ஒளிப்பதிவாளரின் பங்கும் அதிகம்தான்..! வாழ்த்துகள்..!
கண்ணனின் இசையில் அம்மா பற்றிய சோகப்பாடல் பிழிய வைக்கும் காட்சிகளுடன் உருக வைக்கும் குரலில் ஒலிக்கிறது. கேட்கலாம். முதல் டூயட்டும் ஓகேதான்..
ஹீரோவின் அப்பாவான சம்பத்ராமின் கேரக்டர் ஸ்கெட்ச்சில் “இப்படியெல்லாம் ஒரு அப்பன் இருந்தால் எந்த மகனும் கூட இருக்க மாட்டான்…” என்கிற ஒரு வசனத்தை அவரை நோக்கி வீசுவதாக வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். பையனை போட்டு அந்த மிதி மிதிக்கிறார். பாசத்தைக் கொட்டி வளர்ப்பதைவிட்டு அடித்து, உதைத்து வளர்க்கும் அப்பன்களின் கடைசி காலம் எப்படியிருக்கும் என்பதை கோடிட்டு காட்டியிருக்கலாம்..!
ஹீரோவின் அம்மா-அப்பா கதையை சம்பத்ராமின் நண்பர் கடைசியில் சொல்லி அதன் விளைவாகவே ஹீரோ அம்மாவைத் தேடி போவதாக திரைக்கதை செல்கிறது. இதற்கு முந்தைய காட்சியில் காதலும் இல்லை என்றாகிறது. இதனாலேயே அம்மாவைத் தேடிச் செல்வது போல போக.. முன்னதையும் ரசிக்க முடியவில்லை. பின்னதையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை..!
அவ்வளவு எளிதாக ஒரு காதலை தூக்கியெறிந்துவிட்டு அடுத்தக் காதலை கையில் எடுத்துக் கொள்ளும்விதத்தை எப்படித்தான் ஏற்பது..? டாஸ்மாக்கில் இடையிடையே இந்த திசைமாற்றலை நயத்துடன் சொல்லி திரைக்கதை நகர்த்தியிருப்பது ரசிக்கும்படி இருந்தாலும், நம்பும்படியாக இல்லை..!
சின்ன பட்ஜெட் படங்களை ஓவராக எழுதி கொலை செய்துவிடாதீர்கள் என்கிறார்கள். படத்தில் நல்லவிதமாக எடுத்துச் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தால் இந்தப் பேச்சு வராதே..?!
இயக்குநர் ரமேஷ் ரங்கசாமி அடுத்த படத்தில் இன்னும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!

என்னை அறிந்தால் - சினிமா விமர்சனம்

06-02-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அஜீத் போன்ற பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஹீரோக்களை வைத்து படம் இயக்கி வெற்றி காண்பது சாதாரண விஷயமல்ல.. ஹீரோவைவிடவும், அவரது ரசிகர்களை திருப்திபடுத்துவதுதான் மிக சிரமம். ‘வீரம்’ படத்தில் பார்த்த அஜீத்திற்கு அப்படியே நேர் மாறாக வேறொரு அஜீத்தை தனது ஸ்டைலில் காட்டியிருக்கிறார் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்.

வழக்கமான கேங்ஸ்டர் கதைதான். ஆனால் கெளதமின் திரைக்கதையிலும், இயக்கத்திலும் வித்தியாசப்படுகிறது. போதை கடத்தல் ஆசாமிகளை கூண்டோடு பிடிக்க அவர்களது கூட்டத்திலேயே உளவாளியாக நுழைந்து அவர்களை பிடிக்கிறார் அஜீத். நம்பிக்கை துரோகம் செய்த அஜீத்தை பழி வாங்க வில்லன் அருண்குமார் அஜீத்தின் வாழ்க்கையில் கத்தியினால் விளையாடுகிறார். இதனால் துயரத்தில் ஆழ்ந்துபோகும் அஜீத் தனது போலீஸ் வேலையையே ராஜினாமா செய்கிறார்.
தனது வளர்ப்பு மகளுடன் அமைதியாக இருந்தவரை ஒரு பெண் கடத்தல் வழக்கு மீண்டும் துப்பாக்கியை தூக்க வைக்கிறது. இதனை துப்புத் துலக்க களமிறங்கியவர் இந்தக் கடத்தலில் தனது முன்னாள் கேங்ஸ்டர் நண்பனான அருண்குமாரை பார்த்தவுடன் அதிர்ச்சியாகிறார்.
ஒரு மிகப் பெரிய பணக்காரரின் உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டதால் அவருக்கு மாற்று உறுப்புகள் கிடைக்க வேண்டி அதற்கு பொருத்தமாக இருக்கும் நபர்களை கடத்தி வந்து ஆபரேஷன் செய்ய திட்டமிடுகிறார்கள். பெரும் தொகையை வாங்கிக் கொண்டு இந்த வேலையைச் செய்கிறார் அருண்குமார்.
இதைத் தடுக்க களமிறங்கிய அஜீத்தை அருண்குமாரும் கண்டு கொள்ள.. இருவரும் அவரவர் வழியில் போராடுகிறார்கள். யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் இந்த ‘என்னை அறிந்தால்’ படம்..!
‘இப்படி அழகாயிட்டே போனீங்கன்னா நாங்கெள்லாம் என்ன செய்யறது..?’ என்று ஒரு காட்சியில் அஜீத்திடம் கேட்கிறார் திரிஷா. இது சினிமாவுக்கான வசனம் என்றாலும் நிஜத்திலும் இதுவே உண்மை. கால மாற்றத்திற்கேற்ப அஜீத் சில கெட்டப்புகளில் மாறி, மாறி வந்தாலும் இளம் பெண்களையும், முதிர் பெண்களையும் கவரத்தான் செய்வார். அப்படியொரு அழகோ, அழகு..
முந்தைய படங்களில் இருந்து சற்று மாறுபட்டு நடப்பது, திரும்புவது, சிரிப்பது எல்லாவற்றுக்கும் ஸ்லோமோஷன், பஞ்ச் டயலாக்குகளெல்லாம் இந்தப் படத்தில் இல்லை. ஆனால் அதையும் மிஞ்சிய குளோஸப் ஷாட்டுகள் இருக்கின்றன. மெச்சூர்டான வசனங்களும் அஜீத்தின் கெத்துக்கு ஏற்றாற்போல் மிகவும் ரசிக்க வைக்கின்றன.
அஜீத் எப்போதும் தனக்கு வயதாகிவிட்டதை மறைப்பதில்லை. அவருடைய படங்களில்கூட அதற்கேற்றாற்போல் திரைக்கதை அமைத்துக் கொள்வார். இதிலும் அப்படியே.. ஏற்கெனவே கல்யாணமாகி டைவர்ஸாகி குழந்தையுடன் இருக்கும் திரிஷாவை காதலிக்கும் முதல் ஹீரோ இவராகத்தான் இருக்கும். ரசிகர்களைத் திருப்திபடுத்துவதற்காகவே அனுஷ்காவின் மூலமாக அஜீத்தின் அழகு பறை சாற்றப்படுகிறது. ரசிகர்கள் இதற்கு என்ன குதி குதித்தார்களோ தெரியவில்லை.  
வீடு தேடி வந்து லஞ்சம் கொடுக்க முன் வரும் ஆஷிஷ் வித்யார்த்தியிடம் கோபப்படும் காட்சியிலும், கிளைமாக்ஸ் நெருக்கத்தில் அருண்குமாரிடம் போனில் பேசும்போதும் அஜீத்தின் நடிப்பை ரசிக்க முடிகிறது. விவேக்கின் அரதப்பழசான உயர காமெடியை கேட்டவுடன் சங்கடத்துடன் நெளியும் அஜீத்தையும் பிடிக்க வைக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன்.
நடிப்பில் இரண்டாமிடம் நிச்சயமாக அருண்குமாருக்குத்தான். நல்ல இயக்குநர்கள் கையில் நல்ல நடிகர்கள் கிடைத்தால் அது அவர்களை உயர்த்தும் என்பதற்கு இவரும், இந்தப் படமும் ஒரு உதாரணம். தடையறத் தாக்க படத்திலேயே இவருடைய முழு திறமையும் தெரிந்தாலும் ஏதோ அதிர்ஷடம் இல்லாமல் விநியோகஸ்தர்களின் லிஸ்ட்டில் இல்லாத நடிகராகவே இன்னமும் இருந்து வருகிறார். இனிமேலாவது ராஜபாட்டையில் நடக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தால் நல்லதுதான்..
அனுஷ்கா என்னும் தேவதையும், திரிஷா என்னும் தேவதையும் வயதுக்கேற்ற நடிப்பை நடித்திருக்கிறார்கள். பெண் பார்க்க வந்தவன் பாடல் சொல்லிக் கேட்க வெறுப்புடன் ஒரு பாடலை பாடுகிறாரே அனுஷ்கா.. ஜோர்.. விமானக் காட்சிகளில் வெட்கப்படுவதும், சங்கடப்பட்டு பேசுவதுமாக முதல் சில காட்சிகளிலேயே ஈர்க்கிறார். இன்னமும் பாடல் காட்சிகளில் ஓவரான அழகுடன் இவருடைய ரிட்டையர்ட்மெண்ட்டை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. இனி யார் இருக்கா..?
இன்னொரு பக்கம் திரிஷா.. கல்யாணமாகிப் போகவிருக்கும் பொண்ணு.. எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்தி வழியனுப்பலாம். 8 வயது மகளுக்கு அம்மாவாக நாட்டிய பேரொளி ஹேமானிகாவாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். வரும் அனைத்து காட்சிகளிலும் பளபள உடையில் ஆள் பாதி ஆடை பாதியாக சேலையிலேயே பாந்தமாக அழகு காட்டியிருக்கிறார்.  நடிப்பென்று பார்த்தால் அதிகம் வேலையில்லை. சாதாரணமாக பேசுகிறார். மெதுவாக பேசுகிறார். இதுவே சினிமாத்தனம் இல்லாமல் இருப்பதால் அழகாக இருக்கிறது..!
அந்தக் குட்டிப் பெண் இஷாவுக்கு ஒரு பாராட்டு.. இயக்குநரின் இயக்கத் திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு திரிஷா இறந்தவுடன் நிஷாவை அஜீத் சமாதானப்படுத்தும் காட்சியும், அதில் நிஷாவின் நடிப்பும்தான். அழுகையே இல்லாமல் ஒரு சோகத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.
விமானப் பயணத்தில் அனுஷ்காவிடம் அழகு பற்றி பேசும் வசனங்களும், காபி ஷாப்பில் ‘ஐ லவ் யூ’ சொல்லும் அனுஷ்காவிடம் பேசும் பேச்சுக்களும், திரிஷாவிடம் கல்யாணம் பற்றி பேசுவதும்.. காதலர்களுக்கு குறிப்பாக அக்மார்க் கெளதம் மேனனின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமாகத்தான் இருக்கும்..!
ஹாலிவுட் படங்களில் எப்பேர்ப்பட்ட ஆக்சன் படங்களாக இருந்தாலும் சின்ன குழந்தைகளை வைத்து கொஞ்சம் சென்டிமெண்ட் சீன்களை வைத்திருப்பார்கள். அது போலவே இதிலும் திரிஷாவின் குழந்தை இஷா சம்பந்தப்பட்ட காட்சிகளெல்லாம் இயக்குநர் எதிர்பார்த்த ‘அச்சச்சோ பாவம்’ என்கிற பீலிங்கை கொண்டு வந்துவிட்டது.
அஜீத்தின் முன் வாழ்க்கைக் கதையில் அவருடைய அப்பாவின் பாதிப்பும், அவர் எதனால் போலீஸ் வேலைக்கு வந்தார் என்கிற கதையும் இடம் பெறுகிறது. கெளதம் மேனனுக்கு இன்னமும் தனது தந்தையை மறக்க முடியவில்லை போலும். அவருடைய படங்களில் தொடர்ச்சியாக அப்பா புராணம் தவறாமல் இடம் பெறுகிறது.
சென்னை விமான நிலையத்தை கிண்டல் செய்வது போன்ற வசனத்துடன் என்ட்ரியாகும் விவேக், தனது காமெடி போர்ஷனை ஒரு அளவுக்கு மேல் தாண்டவில்லை. கட்டுக்குள் வைத்து நறுக்கென்று செய்திருக்கிறார் குணச்சித்திர நடிப்பை.   சுமன், பார்வதி நாயர், நாசர், ஆர்.என்.ஆர்.மனோகர் என்று சிலரும் படத்தில் காட்சியளித்திருக்கிறார்கள்.
டேன் மெக்காத்தரின் ஒளிப்பதிவு சிறப்பானதுதான். இதையே தமிழ் ஒளிப்பதிவாளர்களும் கொடுத்திருப்பார்கள். எதற்கு வெளிநாட்டு ஒளிப்பதிவாளர் என்று தெரியவில்லை. கிளைமாக்ஸ் காட்சி பறத்தல் காட்சிகளில் கழுகு பார்வை காட்சிகளை படமாக்கி டென்ஷனை கூட்டியிருக்கிறது கேமிரா. அஜீத், அனுஷ்கா, திரிஷா மூவரையுமே அழகுற காட்டியிருப்பதற்கு இவருக்கு ஒரு நன்றி.
வீட்டுக்குள் நடக்கும் சண்டை காட்சியும், துப்பாக்கி சண்டைகளும் வழக்கம்போல தெறிக்கிறது. தெறி மாஸ் என்று ரசிகர்கள் சொல்வது சண்டை காட்சிகளை பற்றித்தான். ஸ்டண்ட் சில்வாவே ஒரு கேங்ஸ்டர் தலைவராகவும் வந்து ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர் நடனமாடுகிறார். டான்ஸ் மாஸ்டர் சண்டையிடுகிறார்.. சினிமாவே தலைகீழாக மாறி வருகிறது.
தபஸ் நாயக்கின் அருமையான ஒலிப்பதிவு விருது கமிட்டிகளை ஈர்க்கும் என்றே நினைக்கிறோம். ஆனாலும் 3 காட்சிகளில் யாரோ ஒருவருக்கான செல்போன் அழைப்பு மெல்லிய ஒலியில் ஒரே மாதிரி ரிங்டோனில் தொடர்ச்சியாக வந்தது  ஏனென்று தெரியவில்லை. தெரியாமல் விட்டதா..? அல்லது தெரிந்தே விட்டதா என்று தெரியவில்லை. பட்.. தபஸ் நாயக்கிற்கு ஒரு சபாஷ்..
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கலாம். படத்தில் காட்சிகளோடு பார்ப்பதற்கு நன்றாகவே உள்ளது. அதாரு இதாரு பாடல் லோக்கல் ரசிகர்களுக்கேற்றவகையில் ஆடலும், பாடலும் அமைக்கப்பட்டிருக்கிறது. பின்னணி இசையில் நேர்மாறாக திகிலூட்டியிருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். தேவையில்லாத இடங்களில் இசையை நுழைந்து நாராசாரம் செய்யாமல் அமைதிக்கு வழி விட்டிருக்கிறார். நன்றி..!
எத்தனை பெரிய இயக்குநராக இருந்தாலும் லாஜிக் மீறல்கள் இல்லாமல் இந்தக் காலத்தில் படமாக்க முடியாது. அதிலும் கமர்ஷியல் படத்தில் இது இல்லாமல் இருக்க வாய்ப்பேயில்லை. மதுரை சென்று ஆஷிஷ் வித்யார்த்தியின் வீட்டில் சண்டையிட்டு வெளியே வருவது.. கேங்ஸ்டரின் முதல் ஆக்சன் காட்சியில் தப்பித்து வருவது.. ராஜினாமா செய்துவிட்டு போன முன்னாள் போலீஸ் ஆபீஸருடன் இந்நாள் அதிகாரிகள் ஒத்துழைப்பது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.. ஆனால் இதையெல்லாம் நினைக்கும் அளவுக்கு படம் பார்த்தபோது பீலிங்கே வரவில்லை.. இதுதான் இயக்குநரின் வெற்றி..!
கெளதம் மேனனின் முந்தைய படங்களின் சாயல் இப்படத்தில் இருந்தாலும் இதுவும் ரசிக்கத்தக்கதாகவே இருக்கிறது. படத்தில் தான் மட்டுமே கதை சொல்லியில்லை என்பதை உணர்த்தும்விதமாக முதலில் அஜீத், பின்பு அனுஷ்கா, பின்பு திரிஷா, கடைசியாக இயக்குநர் என்று நால்வருமே வந்து வந்து கதை சொல்லி போரடிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் திரைக்கதையில் ஒரு புதிய யுக்திதான்.
ஒரு பெரிய கமர்ஷியல் படம்.. மிகப் பெரிய ஹீரோவின் படம்.. மிகப் பெரிய தயாரிப்பாளர்.. இதில் யாருடைய நேரத்தையும் வீணாக்காமல், பணத்தையும் வீணாக்காமல்.. அதற்கேற்ற தகுதியுள்ள படத்தை இயக்கிக் கொடுத்திருக்கிறார் கெளதம் மேனன்.
நன்றிகள் கெளதம் மேனனுக்கு..! 

இசை - சினிமா விமர்சனம்

05-02-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை எப்படி அணுகுவது என்ற ரீதியில் விமர்சகர்களுக்கு மட்டுமே குழப்பமிருக்கும். ஆனால் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் தீவிர ரசிகர்களான விடலைத்தனமான விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு பிரச்சினையே இல்லை. அவர்களது விருப்பத்திற்கேற்றபடி படத்தின் முற்பாதியில் இரட்டை அர்த்த ஆபாச வசனங்களும், ரொமான்ஸ் என்கிற போர்வையில் பல நெளிய வைக்கிற காட்சிகளையும் வைத்து அவர்களை திருப்திப்படுத்தியுள்ளார்.
அவர்களாலேயே இந்தப் படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஓடி தயாரிப்புச் செலவில் முக்கால்வாசி பணத்தை மீட்டுக் கொடுத்திருக்கிறது. ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் இன்னும் கொஞ்சம் லேட்டாக ரிலீஸாகியிருந்தால் மிச்சத்தையும் வசூல் செய்திருக்கும். ஆனால் முடியவில்லை. ‘இசை’ ஓடிய தியேட்டர்களில் இப்போது ‘என்னை அறிந்தால்’ ஓடுகிறது. சூர்யா கொடுத்து வைத்தது அவ்வளவுதான்..!
சாதாரண பழி வாங்கல் கதைதான்.. மூளையைப் பயன்படுத்தி எதிரி யார் என்றே தெரியாத அளவுக்கு கதையெழுதி ஒரு பைத்தியம் அளவுக்கு எதிராளியை கொண்டு போய் கெடுக்கும் ஒரு சூழ்ச்சிக்கார இசையமைப்பாளரின் கதை இது.

தான் கோலோச்சிய இசையுலகில் புதிதாக உள்ளே நுழைந்த ‘இசைக்கடல்’ என்னும் சூர்யா 'இசை சக்கரவர்த்தி'யான சத்யராஜை வீட்டில் முடக்கிப் போட.. இதனால் கோபம் கொள்ளும் சத்யராஜ் என்னவெல்லாம் திட்டமிட்டு சூர்யாவை பழி வாங்குகிறார் என்பதையெல்லாம் இங்கே பட்டியலிட்டால் ‘என்னய்யா இது..? அம்புலிமாமா கதை மாதிரியிருக்கு?’ என்பீர்கள்.. அதைத்தான் செய்திருக்கிறார் இயக்குநர்.
'இப்படியெல்லாம் நடக்க முடியுமா..?' 'யாராவது யோசிக்க முடியுமா..?' 'அம்பானியாகவே இருந்தாலும் நடத்திக் காட்ட முடியுமா?' கதைக்காக ஒரு கிராமத்தையே தட்டியெழுப்ப முடியுமா..?  என்றெல்லாம் பார்வையாளர்களை யோசிக்கவே விடாத அளவுக்கு தனது சிறப்பான இயக்கத்தினால் இதைச் சாதித்திருக்கிறார் இயக்குநர் சூர்யா.
கூத்துப்பட்டறையில் இருந்து நடிக்க வந்தவர்களை இதில் நடிக்க வைத்ததாக வசனம் வருகிறது. கூத்துப்பட்டறைக்காரர்களுக்கு இதைவிட வேறு வேலையே இல்லையா..? இதற்கெல்லாமா நடிக்க வருவார்கள்..? கூத்துப்பட்டறையின் பெயரே கெட்டது போங்கள்..
சிறப்பானது என்னவெனில் இயக்கமும், நடிப்பும். ஹீரோ சூர்யாவின் நடிப்பு சற்று ஓவர் ஆக்டிங்தான். ஆனால் சில இடங்களில் கிளாஸ் என்று சொல்லும் அளவுக்கு தத்ரூபமாக நடித்திருக்கிறார்.
தனது ஸ்டூடியோ ரிசப்ஷனிஸ்ட்டிடம் நள்ளிரவு நேரத்தில் போன் செய்து ஸாரியை வாபஸ் வாங்கிவிட்டதாகச் சொல்லும் காட்சி ஏ ஒன். அவ்வப்போது வந்து பயமுறுத்தும் 'குழந்தை' சரவணனை விரட்டிச் சென்று நடுரோட்டில் தனியே புலம்பும் காட்சியும்.. இதுவரையில் தனக்கில்லாத குழப்பம் இப்போது ஏன் என்று நிஜமாகவே குழம்பிப் போய் நிற்கும் காட்சிகளும் செமத்தியான நடிப்பு..
புதுமுக ஹீரோயின் சாவித்திரி.. எப்படி இவரை இத்தனை கஷ்டப்பட்டு நடிக்க வைத்தார் என்று தெரியவில்லை.. சமீப காலமாக எந்த ஒரு படத்திலும் புதுமுக ஹீரோயின் இத்தனை அழகாக, உருக்கமாக, உண்மையாக நடித்ததே இல்லை.. வசன உச்சரிப்பைக்கூட மிக அழுத்தமாக உச்சரிக்க வைத்திருக்கிறார். அவருடைய கண்களும், உதடுகளும் தனியே நடித்திருக்கின்றன என்பதையும் சொல்ல வேண்டும்.
ஆனால் இவரையும் வழக்கம்போல உரித்த கோழியாக்கி, பிரியாணி பண்ணுவதை போல ஆபாசப்படுத்தி காட்டியதற்கு இயக்குநருக்கு ஒரு ஷொட்டு. இதில் இவருக்கு அப்படியென்ன சந்தோஷமென்று தெரியவில்லை..?
காதலை கண்டுபிடிக்கிறேன் என்கிற போர்வையில் சூர்யா செய்யும் சேட்டைகளும், பேசும் வசனங்களும் சகிக்க முடியவில்லை. குடும்பத்தோடு உட்காரவே முடியாது. ஆனாலும் ஹீரோயினின் நடிப்பு அசத்தல்..
மைத்துனனை பற்றி புகார் சொல்வதற்காக வீட்டிற்கு வேகமாக ஓடி வரும் சூர்யாவிடம் சைகையிலேயே அமைதி காக்கும்படி, மெதுவாக பேசும்படி சொல்வதும், செய்வதும் ஏ கிளாஸ் ஆக்சன்.. இந்த சிறப்பான இயக்கத்திற்காகவே சூர்யாவுக்கு மேலும் ஒரு ஷொட்டு..!
கிளைமாக்ஸில் தான் கருவுற்றிருப்பதாகச் சொல்லி சொல்லி அழுகின்ற காட்சியும், இதை ஏற்காத மனநிலையில் இருக்கும் சூர்யாவின் மனப்பிறழ்வு நோய்த்தன்மையும் போட்டித் தன்மையுடன் திரைக்கதையில் உழைத்திருக்கின்றன. போதாக்குறைக்கு கூடவே நின்று சத்யராஜ் ஏற்றிவிடும் சூடான வசனங்களும் ‘முடிச்சை சீக்கிரம் அவிழுங்கப்பா’ என்று பார்வையாளர்களையும் கதற விடுகிறது..!
இந்தக் காட்சியின் துவக்கத்திலேயே சத்யராஜை ஹீரோயின் ‘அப்பா’ என்று அழைத்திருந்தால் கதையே முடிந்திருக்கும். இத்தனை தூரம் அழுக வைத்திருக்க வேண்டியதில்லை. சினிமா என்றாலே கொஞ்சம் ஓவராகத்தான் பாசத்தையும், அழுகையையும் காட்ட வேண்டியிருக்கிறது..
பாதிரியார் தம்பி ராமையாவை பார்த்தவுடன் ‘உங்களாலதாண்டா எல்லாம்’ என்று சொல்லி அவரை அடிக்கப் பாயும் காட்சியில் கிளைமாக்ஸ் ரணகளம் துவங்குகிறது. ஆனால் எதன் அடிப்படையில் தம்பி ராமையாவை சூழ்ச்சிக்காரர்களில் ஒருவராக சூர்யா நினைக்கிறார் என்பதே புரியவில்லை. பட்டென்று துவங்கியதுபோல தெரிகிறது.
எதிரி இசையமைப்பாளரின் வீட்டில் இருக்கும் இத்தனை பேரையும் இப்படி விலைக்கு வாங்கிவிட முடியுமென்றால் இந்தியாவின் முன்னணி ஊழல் வழக்குகளையெல்லாம் மிக எளிதாக இது போலவே துப்பறிந்து கண்டு பிடித்துவிடலாம். எல்லாம் கதாசிரியர் சூர்யாவின் உபயம்.
சத்யராஜின் நடிப்பும் படத்திற்கு மிகப் பெரிய பலம்.. மனிதர் எப்போதும் போல கேலி, கிண்டல், நக்கல், கோபம், ஆக்ரோசம், சாந்தம் அனைத்தையும் ஒரு முகத்தில் காட்டுகிறார். கஞ்சா கருப்புவை அவர் போட்டு வாங்குகிற காட்சிகளெல்லாம் சிரிப்பலை.. “எங்க முன்ன மாதிரியே மெதுவா நடந்து வா பார்ப்போம்...” என்று சொல்லி திருப்பியனுப்பி கஞ்சா கருப்பு நடந்து வருவதை ரசித்து பார்க்கும் அந்த சத்யராஜின் நடிப்பும் பிரமாதம்.
வண்டுவின் ரீங்காரம் பற்றி சூர்யா விளக்கமாகச் சொல்லும்போது அமைதியாக கேட்டபடியே ஒரு சின்ன வியப்பை காட்டிவிட்டு வழியனுப்பி வைப்பதெல்லாம் கேரக்டர் ஸ்கெட்ச்சின் பலம்..!
சத்யராஜ் இரண்டு முறை பேசுகிற “தேவடியா” என்கிற வார்த்தையை எப்படி சென்சாரில் விட்டார்கள் என்று தெரியவில்லை. இந்த ஒரு வார்த்தைக்காகவே இந்தப் படத்துக்கு ‘ஏ’ சர்டிபிகேட்டுதான் கொடுத்திருக்க வேண்டும். மற்ற ‘ஏ’ காட்சிகளுக்கும் சேர்த்து ‘டபுள் ஏ’ வழங்கியிருக்கலாம். ஆனால் கொடுக்கவில்லை.. வழக்கம்போல சென்சார் போர்டின் தில்லமுல்லு இதிலும் தெரிகிறது..!
ஒளிப்பதிவும் படத்துக்கு இன்னொரு பக்கம் சபாஷ் போட சொல்கிறது. அந்த கிராமத்து செட்டில் இரவு நேரத்தில் நடக்கும் ஹீரோ-ஹீரோயின் சல்லாப காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் கேமிராமேனின் உழைப்பு படத்திற்கு மிகப் பெரிய பலமாகவே இருக்கிறது. பாராட்டுக்கள்..
இசை சம்பந்தப்பட்ட படம் என்பதால் பாடல்களெல்லாம் சூப்பராக இருக்கும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு சூர்யா பொறுப்பில்லை. அவரே இசையமைப்பாளராகவும் உருமாறியிருப்பதால் சுமாராக கேட்டவுடன் மறந்துபோகும் அளவுக்குத்தான் இசையமைத்திருக்கிறார். ஆனால் என்ன..? காட்சிகளையெல்லாம் ரசிக்கும்படி எடுத்திருக்கிறாரே.. போதாதா..?
இந்தப் படத்தின் உருவாக்கத்தின்போது இது இசைஞானி இளையராஜாவுக்கும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இடையிலான கதையை அடிப்படையாகக் கொண்டது என்றார்கள் திரையுலகத்தினர்.
ஆமாம் என்பவர்கள் சொல்வதற்கு ஆதாரமாக ‘நான் துப்பினால்கூட இசைதான்’ என்று சத்யராஜ் இயக்குநர் அழகம்பெருமாளிடம் பேசுகின்ற பேச்சு.. இது மும்பையில் நடந்த ‘தளபதி’ படத்தின் ரீரெக்கார்டிங்கின்போது மணிரத்னத்திடம் இளையராஜா கோபமாக பேசி நட்பை முறித்துக் கொண்ட சம்பவத்தை காட்டுகிறது என்கிறார்கள்.
அப்போது மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த அழகம்பெருமாளே இன்றைக்கு சத்யராஜிடம் திட்டுவாங்கும் இயக்குநராக நடித்திருக்கிறார். அப்போது சத்யராஜிடம் வயலின் வாசிக்கும் சூர்யாவை, அழகம்பெருமாள் தன்னிடத்தில் இழுத்து இசையமைப்பாளர் வாய்ப்பு கொடுத்து ஹிட்டாக்குவது.. இளையராஜாவிடம் பியானோ வாசிப்பாளராக இருந்த ஏ.ஆர்.ரஹ்மானை அழைத்து ‘ரோஜா’ படத்தின் வாய்ப்பை கொடுத்து ஓவர் நைட்டில் இந்தியா முழுவதுக்கும் தெரிந்த இயக்குநராக மணிரத்னம் மாற்றிக் காட்டியதை ஒப்பிடுகிறார்கள்.
இதற்கும் மேலாக கஞ்சா கருப்பு சத்யராஜின் பாடல்களை பாடாமல் சூர்யாவின் பாடலை பாடி வாங்கிக் கட்டுக் கொள்ளும் காட்சியில், “என் பாட்டை பாடுடா..” என்கிற சத்யராஜின் வார்த்தைக்காக, ‘பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க’ என்கிற ‘உயிரே உனக்காக’ பாடலை பாடுவதும் திட்டமிடாமல் நடந்ததுதானா..? என்கிறார்கள்.
கோவைத்தம்பி அதுவரையிலும் தனது படங்கள் வெள்ளி விழா அளவிற்கு ஓடுவதற்குக் காரணமாக இருந்த இளையராஜாவுடன் மனஸ்தாபப்பட்டு இந்தப் படத்தின் இசைக்காக மும்பையில் இருந்து இயக்குநர்கள் லட்சுமிகாந்த் பியாரிலாலை அழைத்து வந்து இசையமைக்க வைத்தார். இது இளையராஜாவுக்கு தொடர்பே இல்லாததா என்றும் கேட்கிறார்கள்.
இளையராஜா சம்பந்தப்பட்ட கதை என்பதால்தான் பிரகாஷ்ராஜ் நடிக்க மறுத்து இது சத்யராஜின் கைக்கு போனது என்றார்கள். ஆனால் சத்யராஜோ இந்தக் கதையை 10 வருடங்களுக்கு முன்பாகவே சூர்யா தன்னிடம் சொல்லி நடிக்கச் சொன்னதாகச் சொல்கிறார். ஆக.. அப்போதே சூர்யா இந்தக் கதையில் களமிறங்க முடிவு செய்துவிட்டார் என்பது உறுதி..!
இது உண்மையோ பொய்யோ.. ரஹ்மானின் உருவாக்கத்தில் இளையராஜாவுக்கும் பெரும் பங்கு உண்டு என்பதை உணராதவர்கள் வேண்டுமானால் இளையராஜாவை பொறாமைக்காரராக நினைக்கலாம்.. சொல்லலாம். ஆனால் இளையராஜாவுக்கு அடையாளமே அவர் தமிழ் இசைக்குக் கொடுத்திருக்கும் மகத்தான பாடல்கள்தான். அவருக்கு தன் பின்னால் வரும் மனிதர்களையும், தன்னைத் தாண்டிச் செல்லும் மனிதர்களையும் யோசிக்கவோ, நினைக்கவோ நேரமில்லை என்பதுதான் உண்மையான விஷயம்..!
“இந்த கிளைமாக்ஸ் நன்றாக இல்லை. இன்னும் கொஞ்சம் யோசிச்சு நல்ல கிளைமாக்ஸை வைக்கப் போறேன்..” என்று இறுதியில் சூர்யா சொல்லும் வசனத்தின் மூலம் இந்தக் கதையை சமன் செய்யலாம். ஆனால் சத்யராஜின் இசைக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் இசைக்கும் சமன் செய்ய முடியாது என்பதை முதலில் அவர் அறிந்து கொள்ளட்டும்..!
இசை - தவறான கதையை சிறப்பான நடிப்பில், அதைவிட மிகச் சிறப்பான இயக்கத்தில் சொல்லியிருக்கும் படம்.