தூக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்..!


26-08-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



தூக்குக் கொட்டடியில் சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நமது சகோதரர்கள் மூவரும் விடுவிக்கப்பட என்னென்ன காரணங்கள் உண்டு என்பதை பல தலைவர்களும் பேசிய காணொளிப் பேச்சுக்களை இங்கே பகிர்ந்துள்ளேன்.

இதனைக் கேட்டு இன்னும் ஆயிரக்கணக்கில் இது பற்றிய கருத்தொற்றுமையை நமது தமிழர்களிடையே நாம் பரப்புவோம்.. வாருங்கள்.. 
நமது ஒற்றுமையை காட்ட வேண்டிய தருணம் இது. கட்சி பேதமின்றி, மத பேதமின்றி, மனித நேயத்துடன் விருப்பு வெறுப்பில்லாமல் அணுக வேண்டிய விஷயம் இது..

முதலில் இந்தத் தாயின் கதறலை கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்களேன்..!





பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய குற்றமற்ற மூன்று தமிழர்க​ளை மரண தண்ட​னையிலிருந்து காக்க ​சென்னை தியாகராய நகரில் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மரணதண்டனைக்கு எதிரான பொதுக்கூட்டம் 16.08.2011 அன்று  நடைபெற்றது.


விடுத​லை ரா.ராசேந்திரன்  அவர்கள் பேசியதன் காணொளி :







 

தோழர் கொளத்தூர் மணி பேசியது







பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய குற்றமற்ற மூன்று தமிழர்க​ளை மரண தண்ட​னையிலிருந்து காக்க சென்​னை எம்.ஜி.ஆர் நகரில் ​கட்சி ​வேறுபாடுக​ளைக் கடந்து த​லைவர்கள் பங்​கேற்ற பொதுக்கூட்டம் 22.08.2011 அன்று ந​டை​பெற்றது.


 

'மண்​மொழி' இதழாசிரியர் ரா​சேந்திர​சோழன் அவர்களின் ​பேச்சு.





 

தோழர் தியாகு




 

தமிழருவி மணியன்





 

வைகோ






ஆத்தா ஜெயலலிதாவே.. உனக்கு ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு.. நீ செத்த பின்னாடியும் உன் பேரு தமிழர்கள் மத்தில நிலைச்சு நிக்கணும்னா இவங்க மூணு பேரையும் காப்பாத்திரு..!  இல்லைன்னா அவங்க தொங்குற அதே தூக்குல, அன்னிக்கே உன்னோட பெயரும் தூக்குல தொங்கிரும்..!


 

அன்புடன்
 
உண்மைத்தமிழன்

கருணாநிதி கைது - எனது நேரடி ரிப்போர்ட்..!

25-08-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


2001-ம் ஆண்டு நடந்த மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா 2001 மே 14-ம் தேதியன்று அவசரம், அவசரமாக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

ஜூன் 13-ம் தேதியன்று அவரது முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஒரு விடியற்காலை பொழுதில் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரது வீட்டில் நடந்த சோதனையில் ஹெராயின் கிடைத்ததாகச் சொல்லி போதை மருந்து தடுப்புப் பிரிவின் கீழும் கூடுதலாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். 

உண்மையான காரணம் என்னவெனில், 1996 தேர்தலில் ஜெயலலிதா தோற்றவுடன் போயஸ்கார்டனில் இருந்து பெட்டி, பெட்டியாக கரன்சிகளை அள்ளிக் கொண்டு தனது மனைவியை அழைத்துக் கொண்டு வெளியேறினாராம் சுதாகரன். அதனைத் திரும்ப வாங்கவே இந்தக் கைது நாடகம். சுதாகரன் தான் களவாடிச் சென்றதை முழுமையாகத் திருப்பிக் கொடுத்த பின்புதான்  அவருக்கு ஜாமீனே கிடைத்ததாம்.

ஆஹா.. ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறதே என்று பார்த்தால், அந்த மாதமே இந்தியாவையே அதிர வைத்த ஒரு கொடுமையைச் செய்து முடித்தார் ஜெயலலிதா.

தன்னை ஜெயிலில் வைத்து அழகு பார்த்த தாத்தாவை எப்படியும் உள்ளே தள்ளிவிட வேண்டும் என்று ஆரம்பத்திலேயே தீவிரமாகத்தான் இருந்திருக்கிறார் ஜெயலலிதா. எந்த வழக்கு வகையாகச் சிக்குகிறது தேடுங்கள் என்று அதிகாரிகளுக்கு ஆணையிட.. அப்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா அதிகம் உச்சரித்த சென்னையில்  பல மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் என்கிற விஷயமே பெரிதாகத் தெரிந்தது.

சதியாலோசனை துவங்கியது. அப்போது சென்னை மாநகர மேயர் ஸ்டாலின்தான்..! அவரையும் ஜெயிலில் தள்ள வேண்டும் என்று முடிவானது. ஜூன் மாதத்தின் மத்தியில் முந்தைய தி.மு.க. ஆட்சியில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த ஆச்சார்யலு என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டதுதான் இந்த கொடுமைக்கான பிள்ளையார் சுழி. 

ஜூன் மாத இறுதியில் விழுப்புரத்தில் உள்ள அரசு நெல்கொள்முதல் குடோனில் அரிசிகள் வீணாகிப் போய் உள்ளன. தானியங்கள் சரியான பராமரிப்பின்றி இருப்பதாக சன் தொலைக்காட்சி தனது செய்திகளில் தெரிவித்தது. அத்தோடு சன் தொலைக்காட்சியின் நிருபர், அரசு குடோனுக்குள் நுழைந்து வீடியோ எடுத்தும் வெளியிட்டிருந்தார். 

இதைக் கண்டு கோபமான தங்கத் தலைவி அந்த சன் டிவி நிருபரை கைது செய்யச் சொல்லி உத்தரவிட்டார். நிருபரும் கைதானார். பத்திரிகையுலகமே கொதித்தெழுந்தது. எந்த இடத்தில் சட்ட மீறல்கள் இருந்தாலும் அதனை வெளிப்படுத்த வேண்டியது பத்திரிகை நிருபர்களின் கடமை.. அதற்காக அவர்களைக் கைது செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று போராடத் துவங்கினார்கள்.

ஜூன் 29-ம் தேதி காலை சென்னை கோட்டைக்கு வந்து தனது அராஜக உத்தரவுப் பணிகளை மேற்பார்வையிட்டுவிட்டு அடுத்த அதிரடிக்கு அச்சாரம் போட்டுவிட்டுக் கிளம்பிய ஜெயலலிதாவை நடுரோட்டிலேயே மடக்கினார்கள் நிருபர்கள். நிருபர்கள் அனைவரும் ஜெயல்லிதாவின் காரை மறிக்கத் துவங்க.. போலீஸ் இந்த இடத்தில் வன்முறையுடன் நடந்து கொண்டது.. அவுட்லுக் நிருபர் ரேவதி உட்பட பலருக்கும் காயமேற்படும் அளவுக்கு காவல்துறையின் அராஜகம் இருந்த்து.

நிருபர்களும் விடாமல் நடுரோட்டில் உட்கார்ந்து கொண்டு கோஷம் எழுப்பத் துவங்க.. மொத்த பேரையும் கைது செய்வதாக அறிவித்தது போலீஸ். வேனில் ஏற்றி அவர்களைக் கொண்டு சென்ற இடம் வேப்பேரி போலீஸ் ஸ்டேஷன்.. அங்கே பத்திரிகையாளர்களை அடைத்து வைத்திருந்து  இரவுதான் விடுவித்தார்கள்..

இதற்கிடையில்தான் கருணாநிதி கைதுக்கான அத்தனை அச்சாரங்களும் போயஸ் கார்டனிலும், சென்னை மாநகராட்சி அலுவலகத்திலும், அரசினர் தோட்டத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்திலும் நடந்துள்ளது.

நிருபர்களைத் தூக்கி ஸ்டேஷனுக்கு கொண்டு போய் வைங்க என்று உத்தரவை போட்டுவிட்டு போயஸ் கார்டன் போன ஜெயலலிதா, அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. ரவீந்திரநாத், சென்னை போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன், சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. முகமது அலி ஆகியோருடன்  கூட்டு ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்தக் கூட்டத்தில்தான் கருணாநிதியை எப்படி கைது செய்வது என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

“இன்று இரவு கருணாநிதி கைது செய்யப்பட வேண்டும். உங்களால் முடியுமெனில் சொல்லுங்கள். இல்லையெனில் வேறு ஆளை வைத்து செய்து கொள்கிறேன்..” என்று ஜெயலலிதா கட் அண்ட் ரைட்டாகச் சொன்னதாக பின்னாளில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்பு முத்துக்கருப்பன் வெளிப்படையாகச் சொன்னார்..!

இந்தக் கூட்டம் முடிவடைந்த சில நிமிடங்களில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆச்சார்யலுவை சந்தித்த சி.பி.சி.ஐ.டி. பிரிவின் உயரதிகாரிகள் அவரிடமிருந்து மேம்பால ஊழல் பற்றிய முதல் புகாரைப் பெற்றுள்ளார்கள். ரிப்பன் மாளிகைக்கே நேரில் வந்து புகாரைப் பெற்றுச் சென்றுள்ளார்கள் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள்.

சென்னையின் அத்தனை முக்கிய நிருபர்களும் வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனில், போராட்ட உணர்வோடு சிக்கிக் கொள்ள, கருணாநிதி கைது விஷயத்தை ஸ்மெல் செய்ய முடியாமல்  கோட்டைவிட்டுவிட்டார்கள்..!

இரவு 8 மணியளவில் நிருபர்கள் விடுவிக்கப்பட்டாலும் நாளை தொடர் போராட்டத்தில் குதிப்போம் என்று நிருபர்கள் தங்களுக்குள் பேசி வைத்திருந்துதான் கலைந்து போனார்கள். விடியும்போது அதற்கான வாய்ப்பே இருக்காது என்பது தெரியாமலேயே போனது அவர்களுக்கு..!


ஜூன்-30. இரவு 2 மணிக்கு மயிலாப்பூர் மற்றும் ஆழ்வார்பேட்டையில் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டன. எல்டாம்ஸ் சாலையில் இருந்து ஆலிவர் சாலைக்குத் திரும்பும் இடத்தில் தடுப்புக் கட்டைகள் போடப்பட்டு அது சீல் வைக்கப்பட்டது. அதேபோல் அந்தச் சந்திப்பின் அருகிலேயே இருந்த அனுமார் கோவிலில் இருந்து ஆலிவர் சாலைக்கு திரும்பும் சிறிய பாதையும் போலீஸ் வேனை வைத்து மூடப்பட்டிருந்தது.

அமிர்தாஞ்சன் அலுவலகத்தின் நேர் எதிரேயுள்ள ஆலிவர் சாலையும் நாகேஸ்வர்ராவ் பூங்கா சாலையும் சந்திக்கும் இடமும் சீல் வைக்கப்பட்டது. விவேகானந்தர் கல்லூரியில் இருந்து ஆலிவர் சாலைக்கு வரும் வழியும் மூடப்பட்டது. வேண்டிய அளவுக்கான காவலர்கள் சென்னை போலீஸில் இருந்தும், ஆவடி பட்டாலியனில் இருந்தும் தருவிக்கப்பட்டிருந்தார்கள்.

எல்லாம் ரெடிதான்.. ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் கோட்டைவிட்டுவிட்டார்கள். மெளரியா, சாரங்கன், கிறிஸ்டோபர் நெல்சன், ஜார்ஜ், ஆபாஷ்குமார் என்று அப்போது அதிகம் பேசப்பட்ட போலீஸ் அதிகாரிகளை வைத்து நடவடிக்கையை தொடங்கியிருந்தாலும் அவர்களுக்கிடையில் தகவல் தொடர்பில் சின்ன சுணுக்கம் இருந்த்து. இதனை அவர்கள் ஆரம்பத்திலேயே கண்டு கொள்ளாமல் அதிகாரிகளுக்குள் வழக்கம்தானே என்பது போல் இருந்துவிட.. இந்த அதிகாரிகளின் ஈகோ யுத்தத்தினால்தான் கருணாநிதி கைது  உலகளாவிய செய்தியாக விடிந்தபோது பரவியிருந்த்து.

இசபெல் மருத்துவமனைக்கு மூன்று வீடுகள் முன்பாக வலது புறத்தில் ரோட்டில் இருந்து சற்று உள்ளே தள்ளியிருக்கும் ஆலிவர் ரோடு வீட்டிற்கு வந்த போலீஸ் படைகள் சாலையின் அருகே இருந்த இரும்புக் கதவு  பூட்டியிருந்ததால் ஏறிக் குதித்துதான் உள்ளே சென்றார்கள்..

கருணாநிதியின் ஆலிவர் சாலை வீட்டில் அப்போது அவரும், ராஜாத்தியம்மாளும், இவர்களுடன் ஒரு வேலைக்காரர், மற்றும் உறவுக்கார இளம் பெண் ஒருவரும்தான் இருந்திருக்கிறார்கள். மொத்தமே 4 பேர்தான்..!

காலிங்பெல்லை அடித்தவுடன் கதவைத் திறந்த வேலையாளிடம் “கருணாநிதியை பார்க்கணும்..” என்று மட்டுமே சொல்லியிருக்கிறார்கள் போலீஸார். வேலையாளுக்கு எதுவும் புரியாமல் “மேலே மாடியில் இருக்கிறார்..” என்று மட்டுமே சொல்ல.. கிடைத்த விநாடியில் மொத்த போலீஸ் டீமும் மாடியேறிவிட்டது.

அந்த வேலையாளை வைத்தே கருணாநிதியின் பெட்ரூமின் கதவைத் தட்ட, நைட்டியில் இருந்த ராஜாத்தியம்மாள்தான் கதவைத் திறந்து பார்த்து அதிர்ச்சியாகியிருக்கிறார். நேராக பெட்ரூமுக்கே வந்து நின்றால் யாருக்குத்தான் அதிர்ச்சியாகாது..? “கருணாநிதியை பார்க்கணும்..” என்றே அவரிடமும் சொல்லியிருக்கிறார்கள். தூக்கத்திலிருந்து விழித்த கருணாநிதியிடம்தான் டி.ஐ.ஜி. முகமது அலி, “உங்களை அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம் ஸார்..” என்று சொல்லியிருக்கிறார்.

“இந்த நேரத்திலயா..?” என்று புருஷனும், பொண்டாட்டியுமே ஆச்சரியப்பட்டு கேட்டிருக்கிறார்கள். ராஜாத்தியம்மாள் போலீஸை கண்டித்து ஏதேதோ சொல்ல.. கருணாநிதிதான் சமாதானப்படுத்தியிருக்கிறார். முரசொலி மாறனுக்கு போன் செய்யும்படி ராஜாத்தியிடம் சொல்ல அவரும் செல்போனில் நம்பரை போட்டுக் கொடுக்க மாறனிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் கருணாநிதி. அவரும் பதட்டத்துடன் “உடனேயே வருகிறேன்..” என்று சொல்ல.. “மாறன் வந்திரட்டும்.. போலாம்..” என்று கருணாநிதி முகமது அலியிடம் சொல்ல, முகமது அலி எதுவும் சொல்லாமல் அறையில் இருந்து விலகிப் போய் தன் செல்போனில் இருந்து யாருடனோ பேசியிருக்கிறார்.

இடையில் கலைஞர் எழுந்து பாத்ரூமுக்குள் போய் முகத்தைக் கழுவிக் கொண்டு தனது சட்டையை அணிந்து தயாராகியிருக்க.. முகமது அலிக்கு வந்த செல்போன் தகவல் என்ன சொன்னதோ தெரியவில்லை. முரசொலி மாறனுக்காக காத்திருந்தார் அலி.

இங்கேதான் விதி விளையாடிவிட்டது. ஆலிவர் சாலை வீட்டு வாசலில் காவல் காத்தவர் ஆபாஷ்குமார் ஐ.பி.எஸ். முரசொலி மாறன் தான் வரும்போதே சன் டிவிக்கு தகவலைச் சொல்லி அவர்களையும் அழைத்துக் கொண்டே வந்துவிட்டார். முரசொலி மாறன் கேபினட் மினிஸ்டர் என்பதாலும், அவரை உள்ளே விடுவதா? வேண்டாமா? சன் டிவி யூனிட்டை விடலாமா? வேண்டாமா? என்ற தகவலை முகமது அலி, வாசலில் இருந்த ஆபாஷுக்கு பாஸ் செய்யாமல்விட்டுவிட்டார். இதுதான் இந்தச் சதியின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட உதவியது..! 

முரசொலி மாறன் எல்டாம்ஸ் சாலையில் இருந்து திரும்புகிற இடத்திலேயே தனது காரை நிறுத்திவிட்டு அங்கிருந்தே நடந்து வந்துவிட்டார். அவரைப் பார்த்த்தும் என்ன செய்வது? என்ன சொல்வது என்று தெரியாமல் ஆபாஷ் குழப்பத்துடன் இருக்க.. முரசொலி மாறனும், சன் டிவி குரூப்பும் அதனைப் பயன்படுத்திக் கொண்டு அனைவரையும் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தது.

தனது வேட்டியின் இரு முனையையும் தூக்கிப் பிடித்தபடியே சாந்த சொரூபியாக படியேறி வந்த முரசொலி மாறனைப் பார்த்தும் பார்க்காத்துபோல அதே படிக்கட்டின் கடைசிப் படியில் நின்று கொண்டிருந்தார் டி.ஐ.ஜி. முகமது அலி. பொதுவாக கேபினட் மினிஸ்டர் என்றால் சல்யூட் மரியாதையாவது செய்ய வேண்டும். முகமது அலியின் அன்றைய அலட்சியத்தை பார்க்கணுமே..!!!

முரசொலி மாறன் படியேறி ஹாலுக்குள் நுழைய, அங்கே கருணாநிதி சோபாவில் தயாராக அமர்ந்திருந்தார். முகமது அலியும் அவரருகில் செல்ல.. முரசொலி மாறன் கருணாநிதியிடம் “என்ன தலைவரே..?” என்று கேட்க “ஏதோ அரெஸ்ட் பண்ண வந்திருக்காங்களாம்.. என்னன்னு கேளு..” என்று கருணாநிதி சொல்ல.. முரசொலி மாறனும், அலியிடம் இது குறித்துக் கேட்கிறார். அலி ஏதோ சொல்ல.. மாறன் ஏதோ சொல்ல.. பிரச்சினை துவங்கியது. 

“வாரண்ட் எங்கே..?” என்று மாறன் குரலை உயர்த்திக் கேட்டது வீடியோவில் தெளிவாகக் கேட்டது. “அதெல்லாம் அங்க போய் கொடுக்குறோம். இப்ப கிளம்புங்க..” என்றார் முகமது அலி. “இவரென்ன சாதாரண ஆளா..? வாரண்ட் எங்கய்யா..?” என்று ஏற்கெனவே கோபக்காரரான மாறன் இன்னும் கோபமாய் கேட்க.. கலைஞர் எதையோ பேசியபடியே எழுந்து நின்றார். 

இந்த நேரத்தில் இந்த அஸைன்மெண்ட்டுக்காகவே மயிலாப்பூர் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக கொண்டு வரப்பட்டிருந்த சசிகலாவின் உறவினரான மன்னார்குடியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் அருகில் போன முகமது அலி ஏதோ ஒன்றைச் சொல்கிறார். இதற்குப் பின்புதான் முருகேசன் கருணாநிதியின் பின்னால் போய் நின்று கொண்டு அவரது நெஞ்சின் இருபுறம் தன் கைகளை வைத்து கலைஞரை பிடித்துக் கொண்டார்.

உடனேயே கூச்சல், குழப்பம்.. மாறன் “டேய்..” என்று கத்தியபடியே முருகேசனின் கைகளை அடிக்கத் துவங்க.. மாறனைச் சூழ்ந்த போலீஸார் அவரை மொத்தமாக கார்னர் செய்து மூலைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். இதில் ராஜாத்தியம்மாளை பெண் போலீஸ் இரண்டு பேர் கைகளைப் பிடித்துக் கொள்ள.. உடன் இருந்த இன்னொரு இளம் பெண்ணையும் பெண் போலீஸை வைத்து பிடித்து வைத்துக் கொண்டார்கள்.

முகமது அலி முன்னாலேயே படியிறங்க, முருகேசன் கருணாநிதியைத் தூக்க போலீஸார் அவரது இரண்டு கால்களையும் பிடித்துத் தூக்கிக் கொள்ள கொஞ்சம் கஷ்டப்பட்டே படியிறங்கியுள்ளது போலீஸ் டீம். வெளிவாசலில் தயாராக இருந்த போலீஸின் அம்பாசிடர் காரில் ஏற்றும்வரையிலும் கருணாநிதியை தூக்கித்தான் வந்திருக்கிறார்கள். அங்கே தரையில் நிறுத்தியுடன் தன் தோளில் இருந்த துண்டை எடுத்து முருகேசனையும், தன்னைத் தொட்டுத் தூக்கிய போலீஸாரையும் கோபத்துடன் நாலு சாத்து சாத்தியிருக்கிறார் கருணாநிதி. 

விடவில்லை போலீஸ். மறுபடியும் கருணாநிதியை குண்டுகட்டாகத் தூக்கி அம்பாசிடர் காரில் திணித்தது. இரண்டு புறமும் மப்டி போலீஸார் உட்கார்ந்து கொள்ள.. கார் ஆழ்வார்பேட்டை சாலை வழியாக அண்ணா சாலை நோக்கி விரைந்தது. அதற்குள்ளாக விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்த சில நிருபர்களும் சாலையின் துவக்கத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தார்கள்.

என்.டி.டி.வி.யின் நிருபர் மட்டும் ஒரு காரில் வந்து காத்திருந்த நிலையில் கலைஞரின் மஞ்சள் துண்டு நிருபருக்கு அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டது. அவர் தரப்பு காரும் பின்னாலேயே சீறிப் பறக்க.. இரண்டு அம்பாசிடர் கார்களும் யாருமே இல்லாத அண்ணா சாலையில் அந்த இரவு நேரத்தில் போட்டி போட்டுக் கொண்டு பறந்து சென்றன. என்.டி.டி.வி. ரிப்போர்ட்டரை இந்த ஒரு காரணத்திற்காகவே எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம். மனிதர்கள் உயிரை பயணம் வைத்து கருணாநிதியை அந்தக் கோலத்திலும் படம் பிடித்துக் காட்டினார்கள்.

அண்ணா சாலையில் இருந்து அரசினர் தோட்டம் செல்லும் பாதையில் ஏற்கெனவே போலீஸ் குவிக்கப்பட்டிருந்த்தால் போலீஸ் கார்கள் அனைத்தும் வரிசையாக உள்ளே செல்ல.. பின்னாலேயே விரட்டிக் கொண்டு வந்த பத்திரிகையாளர்கள் உள்ளே போக முடியாமல் தவியாய் தவித்தார்கள்.

இந்தச் சமயத்தில் நான் ஆழ்வார்பேட்டையில் பீமண்ண முதலி தெருவில் குடியிருந்தேன். கருணாநிதி கைது பற்றி பத்திரிகை நண்பர் நாராயணன் எனக்கு அந்த நள்ளிரவில் தகவல் கொடுக்க.. எனக்கும் பகீரென்றது.. “என்னய்யா இது கொடுமை..? என்ன செய்றாங்க..?” என்று கேட்டதற்கு “எங்கயோ அள்ளிப் போட்டுட்டுப் போறாங்க..” என்று வந்த பதில் என்னை என்னவோ செய்துவிட்டது.

அவசரம், அவசரமாக கிளம்பி அங்கிருந்து கமல்ஹாசன் வீடுவரையிலும் ஓடி வந்து ஒரு ஆட்டோ பிடித்து அரசினர் தோட்ட வாசலுக்கு நான் வந்து இறங்கியபோது அங்கே ஒரு பெரும் ரகளையே நடந்து கொண்டிருந்த்து..!

மு.க.தமிழரசு தன்னந்தனி மனிதராக நடுரோட்டில் உட்கார்ந்து போராடிக் கொண்டிருந்தார். பரிதி இளம்வழுதி, தமிழரசுவின் பக்கம் ஓடி வருவதும், கேட்டை திறக்கச் சொல்லி கெஞ்சுவதுமாக பதற்றத்துடன் இருந்தார்.

வால்டாக்ஸ் சாலையில் வந்து கொண்டிருந்த ஒரு லாரியின் முன்பாக சென்று தமிழரசு படுத்துக் கொள்ள போலீஸ் வந்து அவரது கையைப் பிடித்திழுத்தது.. இப்போது பரிதி ஓடி வந்து போலீஸாரிடம் கெஞ்சத் துவங்கினார். “என் அப்பாவை பார்க்கணும்.. உள்ள விடு.. முடியுமா? முடியாதா...?” என்று தமிழரசு தொண்டை கிழிய கத்த.. “ஓரமா வாங்க.. பேசுவோம்..” என்றே சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தது போலீஸ்.

அதிகமான பத்திரிகையாளர்களும் அப்போது அங்கே இல்லை. அதிகமான தொண்டர்களும் இல்லை.. அந்தப் பக்கமாக இரவு வேலைக்காகச் சென்றவர்களும் இந்தக் கூத்தைப் பார்த்துவிட்டு ஓடி வந்தவர்கள் பரிதி இளம்வழுதியைப் பார்த்துதான் “என்னண்ணே.. என்னாச்சு..?” என்றெல்லாம் கேட்டார்கள். மனிதர் பாவம்.. ஒரு வார்த்தை சொல்வதற்குள் அழுதேவிட்டார்..

கொஞ்ச நேரத்தில் டாடா சபாரி காரில் அங்கே வந்தார் முரசொலி மாறன். கருணாநிதியை தூக்கிக் கொண்ட போலீஸார், ஆலிவர் சாலை வீட்டிலிருந்து கிளம்பினாலும், முரசொலி மாறனை உடனேயே விடவில்லை. கீழே ஓடி வந்த ராஜாத்தியையும், மாறனையும் உள்ளேயே வைத்து கதவை மூடிவிட்டது.

கருணாநிதியை பத்திரமாக சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்குள் போய் உட்கார வைத்த பின்புதான், ஆலிவர் சாலை வீட்டில் முரசொலி மாறனை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். போலீஸும் ஆலிவர் சாலையில் இருந்த தனது பாதுகாப்பை உடனேயே  விலக்கிக் கொள்ள தனது காரில் ராஜாத்தியம்மாளையும் அழைத்துக் கொண்டு, கருணாநிதியை கமிஷனர் அலுவலகத்திற்குத்தான் கொண்டு போயிருப்பார்கள் என்று நினைத்து எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு விரைந்துள்ளார் முரசொலி மாறன்.

அங்கே இவர்கள் போன நேரத்தில்தான், செய்தி கிடைத்து டி.ஆர்.பாலுவும், செல்வியும், தயாளு அம்மாளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஓடி வந்திருக்கிறார்கள். கமிஷனர் அலுவலகமே இருட்டாக இருந்தாலும் மெயின் பில்டிங்கில் போலீஸார் கூட்டமாக இருப்பதைப் பார்த்த்தும் அங்கேதான் கருணாநிதி இருக்கிறார் என்று நினைத்து உறவினர்கள் கூட்டமும் அங்கே ஓடியிருக்கிறது.

இவர்கள் வருவதை போர்டிகோவில் இருந்தபடியே பார்த்த முத்துக்கருப்பன் ஓடோடிச் சென்று தனது அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டுள்ளார். செல்வி அவருடைய அறைக் கதவை பல தடவைத் தட்டியவுடன்தான் திறந்துள்ளார் முத்துக்கருப்பன். “எங்க அப்பா எங்க..?” என்ற செல்வியின் கேள்விக்கு.. “ஐ டோண்ட் நோ.. அவர் இங்க இல்லை..” என்று சொல்லிவிட்டு மீண்டும் கதவைத் தாழ்ப்பாள் போட்டு பதுங்கிவிட்டார் முத்துக்கருப்பன். 

முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும் அந்த பில்டிங் முழுவதையும் சுற்றிப் பார்த்தபடியே ஓடியிருக்கிறார்கள். அந்த பில்டிங்கில் அவர் இல்லை என்பது தெரிந்த பின்புதான் மறுபடியும் போனில் யார், யாரையோ தொடர்பு கொண்டு விசாரித்து அரசினர் தோட்டத்திற்கு அனைவரும் ஒரே காரில் வந்திருக்கிறார்கள்.

காரில் அவருடன் செல்வி, ராஜாத்தி, தயாளு அம்மாள், டி.ஆர்.பாலு ஆகியோரும் இருந்தனர். காரில் இருந்து இறங்கிய டி.ஆர்.பாலு கதவைத் திறக்கும்படி சொல்ல போலீஸார் மறுத்தனர். தான் ஒரு மத்திய அமைச்சர் என்றெல்லாம்கூட சொல்லிப் பார்த்தார் பாலு. கத்திப் பார்த்தார். ம்ஹூம்.. பலனில்லை.  காரில் அமர்ந்திருந்த நிலையில் பொறுமையிழந்த முரசொலி மாறன், தனது டிரைவரிடம் காரின் மூலம் கதவை இடித்துத் தள்ளும்படி சொன்னார்.. 

கிடைத்த கேப்பில் நாமளும் உள்ளே நுழையலாம் என்று பத்திரிகையாளர்களும் துடியாய் துடித்து கேட் அருகே சென்று காத்திருக்க.. கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு அவர்களும் அந்தப் பக்கம் கேட்டை தள்ளிக் கொண்டு நின்றார்கள். ஆனால் காரின் சக்திக்கு முன்னால் போலீஸாரால் நிற்க முடியாமல் போக, கதவை விட்டுவிட்டார்கள். கார் உள்ளே பறக்கத் துவங்க.. சில பத்திரிகையாளர்கள் மட்டும் விழுந்தடித்துக் கொண்டு உள்ளே ஓடினார்கள். பரிதியும், தமிழரசுவும்கூட பின்னால் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு உள்ளே ஓடியது பார்க்க பரிதாபமாகத்தான் இருந்தது.. மறுபடியும் கதவு இறுக மூடப்பட்டது.

சிறிது நேரத்தில் கனிமொழியும், அரவிந்தனும் தனி காரில் வந்து இறங்கினார்கள். கனிமொழி அப்போது ஆழ்வார்பேட்டையில் நான் குடியிருந்த தெருவிற்கு அருகில் இருக்கும் தெருவில் ஒரு அபார்ட்மெண்ட்டில் குடியிருந்தார். செய்தி லேட்டாக கிடைத்திருக்கும்போல.. வாசலில் நின்றிருந்த பொறுப்பு அதிகாரி(ரத்தினசாமி என்று ஞாபகம்) கனிமொழியையும், அரவிந்தனையும் உள்ளேவிட மறுத்தார். “ஸார்.. கலைஞரோட டாட்டர் ஸார்..” என்று பத்திரிகையாளர்களே சிபாரிசு செய்தும், “உங்க வேலையைப் பாருங்க” என்று வெடித்தார்..

கனிமொழிக்கும், அவருக்கும் இடையில் காரசாரமான விவாதம் நடந்தது. என்ன சொன்னாலும் “முடியாதுன்னா முடியாது..” என்று முறைப்புக் காட்டினார் அவர்..! இந்த நேரத்தில் சன் டிவி நிருபர் உள்ளே சென்றுவிட்டதால் இந்தக் கூத்தை படம் பிடிக்க முடியாத நிலைமை. 

5 நிமிடங்கள் கழித்து உள்ளே போக முடியாத மற்ற பத்திரிகையாளர்கள் கோரஸாக போலீஸை எதிர்த்துக் குரல் எழுப்ப.. உள்ளே விடலாமா வேண்டாமா என்றெல்லாம் சரியான உத்தரவுகள் கிடைக்காததால் போலீஸும் தயக்கத்துடன் சில பத்திரிகையாளர்களை மட்டும் உள்ளே அனுமதித்தார்கள். இந்த நேரத்தில் எங்கிருந்தோ ஓடி வந்த ஆயிரம்விளக்கு உசேன், கனிமொழியைப் பார்த்த மாத்திரத்தில் கதறிவிட்டார். கனிமொழியை உள்ளேவிட மறுத்தது பற்றி சில பத்திரிகையாளர்கள் உசேனிடம் சொல்ல, உசேன் அந்த அதிகாரியிடம் சென்று ஏதேதோ கோபத்தில் கொட்டித் தீர்த்தார்.

எந்தப் பக்கமோ பார்த்துக் கொண்டே “திறந்து விடுய்யா..” என்று எரிச்சலுடன் சொல்லி போலீஸுக்கு சிக்னல் கொடுத்தார் அந்த அதிகாரி. அரவிந்தனின் கையைப் பிடித்தபடியே கனிமொழி உள்ளே ஓடத் துவங்க.. கிடைத்த இடைவெளியில்  நிருபர்களும் உடன் ஓடினார்கள்..

இன்னும் ஒரு 5 நிமிடங்கள் கழித்து சில நிருபர்கள் மெயின் கேட்டின் மேலேயே ஏறி உள்ளே இறங்கத் துவங்க.. வேறு வழியில்லாமல் கதவைத் திறந்துவிட்டார்கள் போலீஸார்.. திமுதிமுவென்று ஓடினோம்.. 

உள்ளே சி.பி.சி.ஐ.டி. ஆபீஸைச் சுற்றிலும் கம்பி வலையுடன் காம்பவுண்டு இருந்த்து. அங்கேயும் மெயின் கேட்டில் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தார்கள். நான் போய் நின்றபோது அந்த அலுவலகத்தின் மாடியில் இருந்த ஒவ்வொரு பகுதியாக செல்வியும், பரிதியும், தமிழரசுவும் சுற்றிக் கொண்டிருந்த்து தெரிந்த்து. தனது அவிழ்ந்து போயிருந்த கொண்டையை சரி செய்தபடியே “டேய்.. பாருங்க.. எல்லாத்துக்கும் நீங்க பதில் சொல்லணும். சொல்லியே தீரணும்..” என்று கத்திக் கொண்டே கருணாநிதியைத் தேடிக் கொண்டிருந்தார் செல்வி.

கனிமொழியும், அரவிந்தனும் இன்னொரு கேட்டின் அருகே நின்று உள்ளே செல்ல முயற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது கருணாநிதி மாடியில் இல்லாமல் அந்த அலுவலகத்தின் உள்ளே நேர் கடைசியில் இடது கோடியில் இருந்த கள்ள நோட்டு தடுப்புப் பிரிவு அலுவலகத்தின் டி.எஸ்.பி. அறையில் ஒரு மூலையில் அமர்த்தி வைக்கப்பட்டிருந்தார்.

அந்த அலுவலகத்திற்கு 2 கேட்டுகள் உண்டு. மெயின் கேட்டுடன், கார்கள் வந்து போகும் மற்றொரு கேட்டும் உண்டு. அந்தப் பக்கமும் போலீஸ் நின்று கொண்டு பத்திரிகையாளர்களை உள்ளேவிடாமல் தடுத்துக் கொண்டிருந்த்து. செல்வி, அவ்வப்போது மாடியில் இருந்து பத்திரிகையாளர்களை பார்த்து "அப்பாவை காணோம்.." என்று சொல்லிக் கொண்டிருந்தார். 

திடீரெனறு 2 அம்பாசிடர் கார்கள் புறப்படும் நிலையில் தயாராக வைக்கப்பட பத்திரிகையாளர்கள் பதைபதைத்தார்கள். இந்த முறை எப்படியாவது புகைப்படம் எடுத்துவிட வேண்டும் என்று துடியாய் துடித்தார்கள். இப்போது கலைஞரை மெதுவாக அழைத்து வருவது வெளியில் இருந்து பார்த்தபோது நன்கு தெரிந்தது. இந்த நேரத்தில்தான் மாடிப்படியில் இருந்து மாறனும், செல்வியும், பரிதியும் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

கருணாநிதியை காரில் ஏற்றும்போது செல்வி பார்த்துவிட்டு ஓடி வர.. அவரை போலீஸ் இழுத்துப் பிடித்துக் கொண்டது. பரிதி ஓடோடிப் போய் கருணாநிதியின் கையைப் பிடித்துக் கொண்டார். மாறன் கத்த ஆரம்பித்தார். “எங்க கொண்டு போறீங்க..? இவரை எங்க கொண்டு போறீங்க..?” என்று உச்சஸ்தாயியில் கத்தினார் மாறன்..  

இன்ஸ்பெக்டர் முருகேசன் ஏதோ சொல்லி கருணாநிதியை காரில் ஏற்றப் போக முதலில் பரிதி உள்ளே ஏறி அமர்ந்து கொண்டார். அடுத்து கருணாநிதி அமர.. சட்டென்று தானும் காரில் ஏறி அமர்ந்து கொண்டார் முரசொலி மாறன். வேறு வழியில்லாமல் தாமதமிக்க விரும்பாத போலீஸ் வண்டியை எடுக்கச் செல்ல... எடுத்த எடுப்பிலேயே டாப் கியருக்கு போனது அந்த அம்பாசிடர் கார்.

50-க்கும் மேற்பட்ட போலீஸார் திபுதிபுவென்று வந்து பத்திரிகையாளர்களைச் சூழ்ந்து கொண்டதால், அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் எங்க போனாலும் விரட்டுவோம் என்று சொல்லி காரை பின் தொடர்ந்து சிலர் ஓடினார்கள். நானும் வெளி கேட்வரையிலும் ஓடி வந்தாலும், அதற்கு மேல் முடியவில்லை.. பல நிருபர்கள் அவசரத்திற்கு டூவிலரில் வந்திருந்தாலும் அதை எடுக்கக் கூட நேரமில்லாமல் இருந்த ஆட்டோவில் ஏறி பறந்தார்கள்.. இப்படித்தான் பல ஆட்டோக்கள் அங்கேயிருந்து பறந்தன.

போயே தீருவது என்று முடிவெடுத்ததால், பின்தொடர்ந்த ஒருவரின் டூ வீலரில் லிப்ட் கேட்டு பின்னாலேயே சென்றேன்.. எனக்குப் பின்னால்கூட போலீஸ் வேன்களும், கார்களும் சாரை, சாரையாகச் சென்றதை பார்க்க முடிந்தது.

அப்போது விடுமுறை தினம் என்பதாலும் இந்த வழக்கு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டியது என்பதாலும் அந்த நீதிமன்றத்தின் நீதிபதி அசோக்குமாரிடம் அந்த நள்ளிரவிலேயே "ஒருவரை கைது செய்துள்ளோம். அவசரமாக ரிமாண்ட் செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்து அவரது தூக்கத்தையும் கெடுத்து வைத்திருக்கிறார்கள் போலீஸார்.

அவருடைய வீடு இருந்த கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் இருக்கும் டவர் பிளாக் குடியிருப்புக்குத்தான் கருணாநிதியை கொண்டு போகப் போகிறார்கள் என்பதை உணர்ந்து நிருபர்களும் அங்குதான் போனார்கள்.. எழும்பூர் வழியாக போலீஸார் சென்றிருந்தாலும் பின் தொடர்ந்து சென்ற நாங்கள், மோட்சம் தியேட்டர் வழியாக இடது புறம் திரும்பி அபிராமி தியேட்டர் ரோட்டில் சென்ற சில வினாடியிலேயே ரோட்டின் வலது புறம் கலைஞரை ஏற்றியிருந்த அதே அம்பாசிடர் திரும்பி வருவதைப் பார்த்து குழப்பமாகிவிட்டது.

“எதுக்கு இந்தப் பக்கம் கொண்டு வர்றானுக..?” என்று யோசிக்கக்கூட நேரமில்லாமல் வண்டியை திருப்பி ராங்சைடிலேயே ஓட்டிச் சென்றோம். எனக்குப் பின்னும் எத்தனையோ டூ வீலர்கள்.. ஆட்டோக்கள்.. சிலர் ஓடி வருவதைக்கூட பார்த்தோம்.. 

வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்ல வேண்டுமெனில் அதன் பின்பக்க ரோட்டில் சென்று சுற்றி வந்துதான் செல்ல வேண்டும். ஆனால் இந்த ரூல்ஸெல்லாம் போலீஸுக்கு இல்லையே.. போலீஸார் ஒன்வேயில் பாலத்தின் மேலேயே செல்ல.. இடையில் டூவிலரில் வந்த சில நிருபர்கள் டூவிலர்களை அப்படியே நடுரோட்டில் போட்டுவிட்டு வேப்பேரி ஸ்டேஷனின் காம்பவுண்டு சுவரைத் தாண்டிக் குதித்து உள்ளே இறங்கிவிட..

ரோட்டில் கிடந்த டூவிலர்களை அகற்ற சில நிமிடங்களானது போலீஸுக்கு. அந்த கேப்பில் பல நிருபர்கள் ஸ்டேஷனுக்குள் நுழைந்தாலும், போலீஸாரை வைத்து அவர்கள் அனைவரையும் சுவர் ஓரமாக நெருக்கி வைத்து அடைத்தது ஜெயலலிதாவின் ஜனநாயகமான காவல்துறை. கருணாநிதியின் அம்பாசிடர் வந்து நின்றவுடன் பின்னாலேயே வந்த காரில் இருந்து இறங்கி வந்த ஜார்ஜ், மாறனை இறங்கச் சொன்னார்.. 

ஆனால் மாறன் மறுத்தார். “ஜட்ஜ் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்னு இங்க எதுக்குக் கொண்டாந்தீங்க..?” என்று அவர் மறுத்துப் பேச கொஞ்சமும் யோசிக்காமல்  போலீஸாரை அழைத்து முரசொலி மாறனை அலேக்காகத் தூக்க வைத்தார் ஜார்ஜ். பரிதி, மாறனின் பின்னாலேயே ஓடிப் போக.. மாறன் தன்னைத் தூக்கிச் சென்ற காவலர்களை தனது கையாலேயே அடித்தார். உடன் ஓடிய பரிதி இதனைத் தடுக்கவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் தவித்துப் போனார். அடுத்து கருணாநிதியை காரில் இருந்து கீழேயிறக்கி கைத்தாங்கலாக அழைத்துச் சென்று வேறொரு அறையில் இருக்க வைத்தார்கள்.

கனிமொழியும், அரவிந்தனும் இப்போதும் மிகவும் சிரமப்பட்டுத்தான் ஸ்டேஷன் வளாகத்திற்குள் நுழைந்தார்கள். ஸ்டேஷனுக்குள் நுழைய கனிமொழி முனைந்தபோது ஜார்ஜ் “உங்களை யார் உள்ள விட்டது..? இவங்களை யார் உள்ள விட்டது..?” என்று சீறித் தள்ளினார்..! 

உடனேயே பெண் போலீஸ் பட்டாளம் கனிமொழியையும், அரவிந்தனையும் சூழ்ந்து கொண்டது.. அரவிந்தனின் சட்டையைப் பிடித்து சிலர் இழுக்க.. கனிமொழியின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினார்கள் சில போலீஸார். இது அத்தனையையும் தூரத்தில் இருந்து பார்த்து பத்திரிகையாளர்கள் பதறித்தான் போனார்கள். அவர்கள் நிலைமை இதைவிட பரிதாபம்..! அதிலும் சில பெண் நிருபர்கள் பட்டபாடு இருக்கே.. சொல்ல முடியலை..!

கனிமொழி ஏதாவது ஒரு வழியில் உள்ளே நுழைய முயன்றபோது அவருக்கும் இன்னொரு அதிகாரிக்கும் இடையில் வாய்ச் சண்டை மூண்டது. அவர் பட்டென்று கனிமொழியின் கையைப் பிடித்திழுத்து உள்ளே செல்ல.. அரவிந்தன் அவர்களை பாலோ செய்ய முயல.. அரவிந்தனை இழுத்துப் பிடித்து நிறுத்தினார்கள் சில போலீஸார்.

உள்ளே பெஞ்சில் படுக்க வைக்கப்பட்டிருந்த முரசொலி மாறனை வெளியில் இருந்தே பார்க்க முடிந்த்து. அவருக்கு அருகில் நின்றபடியே பரிதி இளம்வழுதி அவரிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். மாறன் தன் நெற்றியில் பல முறை அடித்தபடியே புலம்பிக் கொண்டிருந்தார். நேரம் விடியும்போல இருந்தபோது, மீண்டும் அதே அம்பாசிடர் கார் திரும்பி நிற்க.. திடீரென்று கருணாநிதியை திரும்பவும் அழைத்து வந்தார்கள்.

"கொண்டு போகப் போறாங்க.." என்ற சிக்னல் கிடைத்தவுடன் வாசலில் நின்றிருந்த நிருபர்கள் டூவீலரை எடுத்துப் பறக்கத் துவங்க.. நானும் வந்த அதே டூவீலரில் தொற்றிக் கொண்டு பறந்தேன். கிட்டத்தட்ட சேஸிங்தான்.. அவ்வளவு அசுர வேகத்தில் சென்றது அந்த அம்பாசிடர்..! ஏற்கெனவே அங்கேயும் பல பத்திரிகையாளர்கள் குவிந்திருந்ததால் ரோடே தெரியாத அளவுக்கு மனிதத் தலைக்ள் கூட்டம்தான் தென்பட்டது.

இப்போது கருணாநிதியின் கார் மட்டுமே டவர் பிளாக்கிற்குள் உள்ளே போக பின் தொடர்ந்து வந்த போலீஸ் கார்களின் வரிசையே 10-க்கும் மேலே இருந்ததால் பலரும் இறங்கி ஓட்டமும், நடையுமாக வந்தார்கள். முதலில் கனிமொழியும், அரவிந்தனும் கேட் அருகே போய் சண்டை போட அவர்களுக்கு ஆதரவாக பத்திரிகையாளர்கள் குரல் கொடுக்க.. அந்தக் களைப்பிலும் காவலுக்கு இருந்த ஒரு இன்ஸ்பெக்டர் “கொஞ்சம் பொறுங்கம்மா..  கேட்டுச் சொல்றோம்..” என்றார்..

அதற்குள்ளாக வெளியில் பத்திரிகையாளர்கள் மத்தியில் ஒரு கிசுகிசு.. “சென்ட்ரல் ஜெயிலுக்குத்தானே அவரை கொண்டு போவாங்க.. அங்க முன்னாடி போயிரலாமா? இல்லாட்டி வேற ஊருக்குக் கொண்டு போவாங்களா..?” என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள்.  உள்ளேயிருந்த யாரோ ஒருவரிடம், சில பத்திரிகையாளர்கள்  செல்போனில் பேசி ஏதோ தகவலைக் கேட்டுவிட்டு பதற்றத்துடன் தங்களது வாகனங்களை எடுத்துப் பறக்க.. ஒரு கூட்டமே அவர்களைப் பின் தொடர்ந்தது.. அவர்கள் மத்திய சிறை நோக்கிச் சென்றார்கள் என்பது பின்புதான் தெரிந்த்து..

கலைஞரின் குடும்பத்தினர் ஆளுக்கொரு காரில் வந்து இறங்கி கேட்டில் வந்து நிற்க, உள்ளே ஆள் அனுப்பி அவர் வந்து ஏதோ சொன்னவுடன்தான் உள்ளே அனுமதித்தார்கள் போலீஸார்.. முன்னாள் அமைச்சர் துரைமுருகனும், வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதியும் அந்த கம்பி கேட்டை பிடித்தபடி அனத்திக் கொண்டிருந்தார்கள். துரைமுருகன் பத்திரிகையாளர்களை கூப்பிட்டு கூப்பிட்டு, “என்னய்யா புகழ்ந்து எழுதுனீங்க..? உங்களுக்கே இது அடுக்குமா..? நியாயமாய்யா..? என்னிக்காச்சும் ஒரு நாள் தலைவரு உங்களை நிக்க வைச்சு பேசியிருப்பாரா..? சாப்பிட்டீங்கன்னா ஒரு நாளாச்சும் கேக்காம இருந்திருக்காரா..?” என்றெல்லாம் தானாகவே புலம்பித் தள்ளிக் கொண்டிருந்தார்.

எப்போதும் கருணாநிதியுடன் கைத்தடியாகவே திரிந்த முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி எங்கே என்று பலரும் தேடினார்கள். பின்னர்தான் விஷயம் தெரிந்தது. அதற்கு முந்தைய வாரம்தான் மும்பை நகர தி.மு.க. செயலாளரின் குடும்பத்தில் நடந்த ஒரு திருமணத்திற்காக மும்பை சென்றிருந்த வீராசாமி, அங்கே ஹோட்டல் பாத்ரூமில் வழுக்கி விழுந்து இடுப்பு முறிவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் படுத்துக் கிடக்கிறார் என்பதை கட்சிக்காரர்கள் பின்பு சொன்னார்கள்..!

கருணாநிதியின் குடும்பத்தினர் குடியிருப்புக்குள் சென்ற பின்பு கடைசியாக வந்த அம்பாசிடர் காரில் வந்து இறங்கினார் முரசொலி மாறன். அவரது வேட்டி கிழிந்து கிடந்தது. ஒரு பக்கம் மனைவியும், இன்னொரு பக்கம் மகள் அரசியும் அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொள்ள.. அவிழ்ந்து கிடந்த வேட்டியை கட்டக்கூட திராணியில்லாமல் படியேறினார் மாறன். அவரை அந்தக் கோலத்தில் பார்ப்பது அதுதான் முதல் முறை என்பதால் பத்திரிகையாளர்களின் முகத்தில் அப்படியொரு வருத்தம். வெளியில் நின்றிருந்த தி.மு.க. தொண்டர்கள் சிலர் இதைப் பார்த்து ஆவேசப்பட்டு ஜெயல்லிதாவை அச்சில் ஏற்ற முடியாத அளவுக்குத் திட்டித் தீர்த்தார்கள்.(கோபம் வரத்தானே செய்யும்?)

எப்படியும் சென்ட்ரல் ஜெயிலுக்குத்தானே கொண்டு செல்வார்கள். அனைவருக்கும் முன்பாக அங்கே போய்விடுவோம். அப்போதுதான் பார்க்க முடியும் என்று நினைத்து அப்போது அங்கே கிளம்பிய தோழர் ஒருவரின் டூவிலரில் தொற்றிக் கொண்டு பறந்தேன்..

அந்தக் காலை நேரத்தில் நடந்த கூத்துக்களை சன் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு மக்கள் டிவியிலேயே மூழ்கிவிட்டார்கள் போலும்.. கீழ்ப்பாக்கத்திலேயே டவர் பிளாக் அருகில் இருப்பவர்களே அதிகம் அறியாமல் இருந்துவிட்டார்கள்..!

சென்ட்ரல் ஜெயிலுக்குப் போகும் மேம்பாலத்திலும் தடுப்பு வைத்து முன்னெச்சரிக்கையாக தடுத்திருந்தது போலீஸ். ஆனாலும் பத்திரிகையாளர்கள் அதையெல்லாம் சட்டை செய்யாமல் மேம்பாலத்தில் ஏறி ஓட்டமும், நடையுமாக சென்று கேட்டின் அருகில் நின்றிருந்தார்கள்.

காலை சூரியனின் வெளிச்சம் அத்தனை பேருக்கும் இதமான சூட்டைக் கொடுத்த நேரத்தில்.. காலை 7 மணி இருக்கும்.. வழக்கம்போல பலத்த பாதுகாப்புடன் கலைஞரை அழைத்து வந்தார்கள். அவர்களின் கார்கள் மட்டும் உள்ளே செல்ல தொடர்ந்து வந்த கருணாநிதி குடும்பத்தினரின் கார்களைத் தடுத்துவிட்டார்கள்.

முரசொலி மாறனின் உடல் நலத்திற்காக அவரை அப்படியே அப்போலா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அட்மிட் செய்துவிட்டார்கள். நள்ளிரவில் அரசினர் தோட்டத்தில் நடந்த வன்முறையின்போது கலாட்டா செய்த்தாகச் சொல்லி டி.ஆர்.பாலுவை கைது செய்து சைதாப்பேட்டை கோர்ட் நீதிபதி முன் ஆஜர்படுத்தி வேலூர் சிறைக்குக் கொண்டு போய் சேர்த்துவிட்டார்கள்.

மத்திய சிறையின் மெயின் கேட்டின் முன்பு வந்து நின்ற காரில் இருந்து கனிமொழி, கருணாநிதி, டாக்டர் கோபால் மூவரும் இறங்கினார்கள். கருணாநிதி அப்படியே தரையில் அமர்ந்துவிட்டார். கனிமொழி வேகவேகமாக மேம்பாலத்தின் அருகில் வந்து சத்தமாக நிருபர்களிடம் ஏதோ சொல்லிவிட்டுப் போனார். அவர் சொன்ன பின்புதான், நீதிபதி அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துப் போகச் சொல்லியும் கொண்டு போகாமல் இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது பத்திரிகையாளர்களுக்குத் தெரிந்தது.

உள்ளேயிருந்து போலீஸ் வருவதும், கருணாநிதி மற்றும் டாக்டரிடம் பேசுவதுமாக நேரம் போய்க் கொண்டிருந்த்து. இந்தப் பக்கம் முரசொலி மாறனின் மகள் அன்புக்கரசி, நிருபர்களிடம் ஆங்கிலத்தில் பொளந்து கட்டிக் கொண்டிருந்தார். அப்போதுதான் ஸ்டாலின் மனைவி துர்கா இன்னும் சில பெண்களுடன் அங்கே ஓடி வந்தார். 

அவரது வீட்டில் நடந்த ரெய்டு பற்றி பல பத்திரிகையாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு துக்கம் விசாரிக்க.. தன் வாழ்நாளில் இதுவரையில் பார்த்திராத 'மரியாதை'யைக் கண்டுவிட்ட துர்கா அதை விவரிக்கும்போது அவரது கண்களும், உதடுகளும் பட்டபாடு.. பாவம்..! பெரும் பிரயத்தனப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டார் துர்கா. அப்போது துர்கா ஸ்டாலினின் அருகில் இருந்த ஒரு பெண், போலீஸை நோக்கி தன் செருப்பைத் தூக்கிக் காட்டினார். துர்கா ஸ்டாலினே அந்தப் பெண்ணை அடக்கினார்.

அப்போது டி.இராஜேந்தர் தி.மு.க.வில்தான் இருந்தார். அவருடன் காரில் சிலர் வந்திருந்தனர்.(யார் என்று நினைவில்லை) அவர்களைக் கை காட்டி “அமைச்சர்கள்யா..? சென்ட்ரல் மினிஸ்டர்யா..?” என்று சொல்லி தடுப்பை அகற்றும்படி கத்திப் பார்த்தார் டி.ஆர். போராடிப் பார்த்தார் டி.ஆர்.. ம்ஹூம் அசைந்து கொடுக்கவில்லை போலீஸ்.. தொண்டை கிழிய கத்திவிட்டு ஓய்ந்து போய் ஓரமாகப் போய் உட்கார்ந்து கொண்டார் டி.ஆர்.

இன்னொரு பக்கம் மேம்பாலத்தின் நடைமேடையிலேயே சோகத்துடன் வந்து உட்கார்ந்து கொண்டார் தயாளு அம்மாள். அங்கேயிருந்தபடியே பாலத்தின் கைப்பிடிகளின் இடைவெளியில் தூரத்தில் உட்கார்ந்திருந்த கலைஞரை பார்த்து அவர் முகம் சொன்ன கதைகள்.. ஏராளம்.. காரணம் எதுவாக இருந்தாலும், எந்த மனைவிக்கும் இந்தக் கொடூரம் நடக்கத்தான் கூடாது..! இது சிறுக சிறுக ஒருவரை மனரீதியாக துன்புறுத்தி சித்ரவதை செய்வதற்குச் சம்மானது..! 

நேரம் ஆக.. ஆக.. மேம்பாலத்தில்  உடன்பிறப்புகளின் கூட்டம் அதிகரித்து ஜெயல்லிதாவைக் கண்டித்து கூச்சலும், கோஷமும் எழுப்பிக் கொண்டிருக்க.. வீரபாண்டி ஆறுமுகமும், துரைமுருகனும் இந்தச் சோகத்தை பார்த்தபடியே அவரவர் வந்த கார்களில் சாய்ந்து நின்று கொண்டிருந்தனர்..

யாரோ ஒரு சிறை அதிகாரி வேகமாக கருணாநிதியிடம் வந்து ஏதோ கோபமாகச் சொல்ல.. கனிமொழி ஆவேசமாக அவரைப் பார்த்து கத்த.. இதைப் பார்த்து கீழேயிருந்து தொண்டர்கள் உச்சஸ்தாயியில் குரல் கொடுக்க.. சில தொண்டர்கள் கீழே குதிக்கவும் தயாரானார்கள்.. அருகில் இருந்தவர்கள்தான் ஓடோடிச் சென்று இழுத்துப் பிடித்தார்கள்.

கனிமொழியை கையமர்த்தி சமாதானப்படுத்திய கருணாநிதி தன்னைத் தூக்கிவிடும்படி சைகை செய்ய கனிமொழியும், போலீஸாரும் உதவி செய்ய மெல்ல எழுந்தார் கருணாநிதி. ஒரு முறை பின்புறம் திரும்பிப் பார்த்து பலகீனமாக நிலையில் தன் கைகளை அசைக்க.. கூட்டம் கதறி அழுதது.. செல்வி தன் அருகில் இருந்த ஒரு பெண்ணின் தோளில் முகம் புதைத்து அழுக..

கலைஞரை உள்ளே வாங்கிக் கொண்ட சிறைக் கதவுகள் பட்டென்று மூடிக் கொள்ள.. அதைக் கை காட்டியே அத்தனை உடன்பிறப்புகளும் கதறினார்கள்.. அந்த வழியாக பேருந்துகளும் தடை செய்யப்பட்டுவிட்டதால் மருத்துவமனைக்கு செல்வதற்காக வந்த பொதுமக்களும் இதைப் பார்த்து உச்சுக் கொட்டி, திகைத்துப் போய் நின்றிருந்தார்கள்.

இதுவரையில் மேம்பாலத்தின் இடது பக்கம் கீழ்ப்பாக்கம் செல்லும் ரோட்டில் நின்று கொண்டிருந்த ஆயுதப் படை பேருந்தில் இருந்து இறங்கிய போலீஸ் கூட்டத்தைப் பார்த்த்தும் நிலைமை புரிந்தது.. இதற்கு மேலும் இங்கே இருந்தால் ஆபத்துதான் என்று உணர்ந்து அண்ணா சாலை நோக்கிய பாதையில் கீழே இறங்கி நின்றிருந்தேன்.. கலைஞரின் குடும்பத்தினர் சாபம் விடுவதைப் போல கைகளை நெருக்கி திட்டி விட்டுத்தான் காரில் ஏறினார்கள்..!

வீரபாண்டி ஆறுமுகம் தன் முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதபடியே காரில் ஏறிச் சென்றார்.. துரைமுருகனை இதற்கு மேல் நான் பார்க்கவில்லை. டி.ராஜேந்தர் மட்டுமே மேம்பாலத் தடுப்பு அருகே நின்று போலீஸாரிடம் ஏதோ வாதாடிக் கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில் போலீஸாருக்கும், உடன்பிறப்புகளுக்கும் இடையே மோதல் வெடிக்க.. நான் நினைத்தது போலவே லத்தி சார்ஜ் உத்தரவானது.. ஓட.. ஓட விரட்டி விரட்டி அடித்தார்கள். உடன்பிறப்புகளும் கல்லை பொறுக்கி எறிய.. போலீஸும் கல்லைப் பொறுக்கி எறிய.. இதில் யார் கலகம் செய்கிறார்கள். யார் காப்பாளிகள் என்றே தெரியாமல் போனது..!

இதற்கிடையில் முந்தைய நாள் இரவில் பெங்களூரில் தனது மைத்துனர் வீட்டுக்குச் சென்றதால் கைதில் இருந்து தப்பிய ஸ்டாலின் செய்தி கிடைத்து உடனேயே சென்னை திரும்பினார். நேராக வேளச்சேரி வீட்டிற்குச் சென்று தனது குடும்பத்தாருக்குக் கிடைத்த 'மரியாதை'யைக் கண்டு மனம் கொதித்துப் போய் நேராக கோபாலபுரம் வந்தார். அங்கே இருந்த தனது தாயையும், சகோதரியையும், மனைவி, பிள்ளைகளையும் பார்த்துவிட்டு அங்கேயே பத்திரிகையாளர்களுக்கு பேட்டியும் அளித்தார்.

“இப்போ நேரா நானே போய் சரண்டராகப் போறேன்.. நிச்சயம் கால் வலி, கழுத்து வலின்னு சொல்லி ஆஸ்பத்திரில போய் படுத்துக்க மாட்டேன்..” என்று பேட்டியளித்துவிட்டு அதே நீதீபதி அசோக்குமாரிடம் சரண்டரானார். அவரை அழைத்துச் சென்ற போலீஸார் சென்னை மத்திய சிறையில் வைக்க இடமில்லை என்று சொல்லி மதுரைக்கு நாடு கடத்தினார்கள்..!

கருணாநிதி கைது நடந்த ஜூன்-30 காலையில் இருந்தே சன் டிவி ஒரு வீடியோவை திரும்பத் திரும்ப வெளியிட்டது. அதில் இன்ஸ்பெக்டர் முருகேசன் கலைஞரை இழுத்துச் செல்லும்போது “ஐயையோ.. கொல்றாங்களே.. கொல்றாங்களே..” என்று கருணாநிதி கதறுவதைப் போல பின்னணி வாய்ஸை கொடுத்து ஒளிபரப்பினார்கள். (இதனால்தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாமல் நழுவினார் கருணாநிதி.)

அதே நேரம் அறிவாலயத்தின் எதிரே நடுரோட்டில் தி.மு.க. தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டார்கள். அவர்களைக் கலைக்க தடியடியை நடத்திய போலீஸார் உச்சக்கட்டமாக அறிவாலயத்தின் உள்ளேயே நுழைந்து சன் டிவி அலுவலகத்திலும் கொடூரத் தாக்குதலை நடத்தியது. 

அதே நேரத்தில் அன்று மதியமே ஜெயா டிவியில் தோன்றிய இன்ஸ்பெக்டர் முருகேசன், டி.ஐ.ஜி. முகமது அலி இருவரும் கலைஞரின் வீட்டில் தாங்கள் தாக்கப்பட்டதாக ஒப்பாரி வைத்தார்கள். இதற்கு உதாரணமாக அவர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டார்கள். அதில் முரசொலி மாறன் முகமது அலியின் கண்ணில் குத்துவது போன்று கிராபிக்ஸ் வேலையைச் செய்து காண்பித்து தமிழகத்து மக்களை முட்டாளாக்கினார்கள்.

அந்த வீடியோவை உடனுக்குடன் அப்போதைய புகழ் பெற்ற தடயவியல் நிபுணர் சந்திரசேகரனுக்கு அனுப்பிவைத்து அதுவொரு போர்ஜரி.. கிராபிக்ஸ் செய்யப்பட்ட வீடியோ காட்சி என்று அவரிடமிருந்து சர்டிபிகேட்டை பெற்று மறுநாள் அதனை ஒளிபரப்பியது சன் டிவி.

பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமலும், வேறு வழியில்லாமலும் போலீஸாரே தங்களது ஆட்களை வைத்து எடுத்திருந்த வீடியோக்களை 2 நாட்கள் கழித்து பத்திரிகையாளர்களுக்கு போட்டுக் காண்பித்தது சென்னை போலீஸ். இதன் ஒரு காப்பியை பிரதமருக்கும் அனுப்பி வைத்தது தமிழக அரசு.

சன் டிவியில் காட்டியதுபோல ஆலிவர் ரோடு வீட்டின் வெளிக்கதவு உடைக்கப்படவில்லை என்பது உண்மை. அதேபோல் அவர்கள் வீட்டு போனும் உடைக்கப்படவில்லை. அது அவர்களே செய்த செட்டப் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. அதேபோல் அந்த “கொல்றாங்களே..” என்ற வசனமும் இணைக்கப்பட்டதுதான். 

இந்த தில்லுமுல்லுகளை இரண்டு டிவிக்களும் மாறி, மாறி ஓட்டிக் கொண்டேயிருக்க அந்த 2 நாட்களும் தமிழகத்து மக்களுக்கு நல்ல சுவையான விருந்தாக இருந்தது.

சன் டிவியின் நேரடி ஒளிபரப்பினால் நாடே இதைப் பார்த்து பரபரப்பில் இருந்த்து. அப்போதே துணை பிரதமரும், உள்துறை அமைச்சருமான அத்வானி அரபு நாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்ததால் சற்று தாமதமாக கண்டன அறிக்கையை வெளியிட்டார்.

பிரதமர் வாஜ்பாயும், தேசிய ஜனநாயக முன்னணியின் அமைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸும் இந்தக் கைது நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டிப்பதாக அறிக்கை கொடுத்தார்கள். தேசிய ஜனநாயக முன்னணியில் இருந்த சில கட்சிகள் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறின. தி.மு.க. எம்.பி.க்களும், அ.தி.மு.க. எம்.பி.க்களும் கூட்டம், கூட்டமாக பிரதமரைச் சந்தித்து நடந்தது என்ன என்பதைத் தெரிவித்தார்கள்.

ஜனாதிபதி ஆட்சி அமலாக்கப்படும் என்றுதான் நான்கூட நினைத்திருந்தேன். ஆனால் அப்படிச் செய்யவிடாமல் தடுத்தவர் ஒரே ஒருவர்தான். அவர் அத்வானி. அத்தோடு காங்கிரஸும் இதனை எதிர்த்த்து. அதே சமயம் கைதையும் கண்டித்தது. 

அன்று இரவே மத்திய அரசின் பார்வையாளர்களாக இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், அமைச்சர்களும் சென்னை வந்தார்கள்.  மறுநாள் காலை சென்னை மத்திய சிறைக்கு வந்து கலைஞரைச் சந்தித்தார்கள் அப்போதைய மத்திய அமைச்சர் வி.கே.மல்ஹோத்ராவும் ஜார்ஜ் பெர்னாண்டஸும். வேறொரு அமைச்சரும் வந்திருந்தார். பெயர் தெரியவில்லை. இவர்களுக்கு சிறைக்கு வெளியே போலீஸ் மரியாதை கொடுத்து கூல் செய்ய முயன்றார் ஆத்தா..! ம்ஹூம்.. இறுக்கமான முகத்துடன் வெளியேறினார்கள் அமைச்சர்கள்.

டி.ஆர்.பாலு கேபினட் மினிஸ்டர் என்பதால் அவரை சிறையில் இருந்து விடுவிக்கும்படி கேட்டு மத்திய உள்துறை செயலாளர் பேக்ஸ் அனுப்ப.. ஆத்தா வழக்கம்போல “தூக்கிக் குப்பைல போடு..” என்று சொல்லிவிட்டார். முரசொலி மாறன் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக படுத்த பின்பும், அங்கே சென்ற போலீஸ் அவரை கைது செய்வதாக அறிவித்து அவரைச் சுற்றிலும் போலீஸை நிறுத்தியிருந்தது.

ஜூலை 3-ம் தேதியன்று மத்திய அரசு கடுமையான உத்தரவை பிறப்பித்த பின்பு(அவர்களை ரிலீஸ் செய்யவில்லையெனில் ஜனாதிபதியிடம் சிறப்பு உத்தரவு பெற்று அனுப்பப்படும் என்று பேக்ஸ் வந்த்தாம்) பின்பு  மதியம் 3 மணி அளவில் டி.ஆர்.பாலுவையும், முரசொலி மாறனையும் விடுவிக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

வேலூர் சிறையில் இருந்து வெளியே வரும்போது காலை நொண்டி நொண்டி நடந்து வந்த டி.ஆர்.பாலு, சிறையில் இருந்து வெளியில் வந்தவுடனேயே படுவேகமாக காரை நோக்கி நடந்து சென்று காரில் ஏறியது கண் கொள்ளாக் காட்சி..!

இதற்கிடையில் முத்துக்கருப்பன், கிறிஸ்டோபர் நெல்சன், ஜார்ஜ் மூவரையும் மத்திய அரசுப் பணிக்கு மாற்றுவதாக தடாலென்று அறிவித்தது மத்திய அரசு. ஜெயல்லிதா இதை வன்மையாகக் கண்டித்தார். மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு தன்னிச்சையாக ஐ.பி.எஸ். அதிகாரிகளை அழைத்துக் கொள்ள முடியாது என்று கண்டன அறிக்கை வெளியிட்டார். இதில் ஜார்ஜுக்கு மத்திய அரசில் கிடைத்த பணி, மத்திய அமைச்சரவைக்கான செக்யூரிட்டி ஆபீஸர்.. எல்லாம் காரணமாத்தான்.. மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கும்போது வாசல்ல நின்னுக்கிட்டு, வர்ற போற மந்திரிகளுக்கு சல்யூட் அடிக்கிறதுதான் வேலையே..! டி.ஆர்.பாலுவுக்கும், முரசொலி மாறனுக்கும், ஜார்ஜை சல்யூட் அடிக்க வைப்பதுதான் மத்திய அரசின் திட்டம். 

மூன்று அதிகாரிகளும் நிர்வாக டிரிப்யூனலில் மனு செய்தார்கள். அவர்களது மனுவை ஏற்றுக் கொண்ட ஆணையம் அவர்களை மத்திய அரசுப் பணிக்கு மாற்றுவதை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. 

இது எல்லாவற்றையும்விட கிண்டி ராஜ்பவனில் கவர்னராக வீற்றிருந்த பாத்திமா பீவியின் கண்டு கொள்ளாமைதான் தி.மு.க.வினரை ரொம்பவே நோகடித்துவிட்டது..! கருணாநிதி கைதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்பு, கலவரங்களும் தொடர்ந்து நடந்தன. இந்தச் செயலைச் செய்யும்படி மறைமுகமாக தூண்டிவிடும் வேலையை சன் டிவியும், தி.மு.க. தலைமையும் கச்சிதமாகச் செய்து வந்தன. ஜூலை 2-ம் தேதியன்று கருணாநிதி கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்ன லட்சணத்தில் இருக்கிறது..? கருணாநிதி கைதின்போது நடந்த்து என்ன என்று விளக்கம் கேட்டு மத்திய அரசு பாத்திமா பீவிக்கு கடிதம் அனுப்ப.. "சட்டத்திற்கு விரோதமாக ஒண்ணுமே நடக்கலையே..?" என்று சர்டிபிகேட் கொடுத்தார் பாத்திமா. இன்னும் கொஞ்சம் டென்ஷனாகிப் போனார்கள் தி.மு.க.வினர்.

எப்பாடுபட்டாவது அவர்களைச் சமாதானப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு வந்த மத்திய அரசு, ஆகஸ்ட் 2-ம் தேதியன்று பாத்திமா பீவியிடம் இருந்து வலுக்கட்டாயமாக ராஜினாமா கடிதத்தைப் பெற்று அவரை கேரளாவுக்கே அனுப்பி வைத்துவிட்டு, அப்போது ஆந்திர மாநில கவர்னராக இருந்த சி.ரங்கராஜனை கூடுதல் பொறுப்பாக தமிழ்நாட்டையும் பார்த்துக் கொள்ளும்படி சொன்னது.

இவ்வளவு ரகளையும் நடந்து கொண்டிருந்தபோது ஆத்தா திடீரென்று குருவாயூர் கோவிலுக்கு தனி ஹெலிகாப்டரில் சென்று ஒரு யானையை அந்தக் கோவிலுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு வந்தது ஆச்சரியமானது.. செய்றதெல்லாம் சேட்டை.. செஞ்சுப்புட்டு எதுக்கு சாமி..?

ஜூலை-4-ம் தேதியன்று கருணாநிதியை வெளியே விட முடியுமா? முடியாதா? என்று மிரட்டல் பாணியில் டெல்லியில் இருந்து உத்தரவுகள் வர.. கொஞ்சம் இறங்கி வந்தார் ஜெயல்லிதா. அன்று மதியம் 3 மணியளவில் கருணாநிதியை விடுதலை செய்வதற்கான உத்தரவுகள் உள்துறைச் செயலாளர் மூலமாக கோர்ட்டிற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து உத்தரவு வாங்கப்பட்டு, சென்னை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டது.

வீல்சேரில் உட்கார வைக்கப்பட்ட நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்தார் கருணாநிதி. நேராக தனது வீட்டிற்குச் சென்ற கருணாநிதி குளித்துவிட்டு ஒரு மணி நேரத்திலேயே அறிவாலயம் வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. கொஞ்சம் சந்தோஷம், சோகம், பரிவு, இரக்கம், உருக்கம் என்று எல்லாமுமாக சேர்ந்து இருந்த்து அந்த நேரடி நிகழ்வு.

“அப்படியென்ன உங்களுக்கும், ஜெயல்லிதாவுக்கும் பகை?” என்று ஒரு நிருபர் கேட்டபோது.. “என்ன பகை..? நானென்ன அவருக்கு வளர்ப்பு மகனா..?” என்று அவருக்கே உரித்தான பாணியில் திருப்பியடித்தார் கருணாநிதி. அதேபோல் தன்னை இழுத்துச் சென்றதை சொன்னபோது மட்டும் ஒரு இடத்தில் தொண்டை இழுத்துக் கொண்டு அழுகையாக மாறும் சூழல் வந்தபோது, அருகில் இருந்த அன்பழகன் அவரது கையைப் பிடித்து ஆறுதல்படுத்த அரங்கத்தில் இருந்த பத்திரிகையாளர்களையே உணர்ச்சிவசப்பட வைத்தது அந்தக் காட்சி.

இந்த முறைகேடான, ஜனநாயகமற்ற, கேலிக்கூத்தான கைது நடவடிக்கையால் யாருக்கு நன்மையோ இல்லையோ, மறைமுகமாக கருணாநிதியின் குடும்பத்திற்கே ஒற்றுமையின் மகத்துவத்தை உணர்த்திவிட்டார் ஜெயல்லிதா.

ராஜாத்தியம்மாள் கருணாநிதியை திருமணம் செய்ததில் இருந்து அவருடன் இன்றுவரையிலும் ஒரு வார்த்தைகூட பேசாமல் வைராக்கியமாக இருந்து வருகிறார் தயாளு அம்மாள். 

எஸ்.எஸ்.ஆரின் நாடகக் குழுவில் நடித்துக் கொண்டே பல்வேறு வெளி நாடகங்களிலும் நடித்து வந்தார் இந்த தர்மாம்பாள் என்ற ராஜாத்தி. அப்போது 'வாலிபக் கவிஞன்' வாலி நடத்திய நாடகங்களில்கூட நடித்திருக்கிறார் ராஜாத்தி.

அப்போதுதான் கருணாநிதியுடன் 'மணிமகுடம்' நாடகத்தில் நடிக்கப் போய் அவரையே கவர்ந்துவிட்டார். இருவரும் திருமணம் செய்த பின்பு அதே நாடகக் குழுவில் நடித்து வந்த நடிகை மனோரமாவுக்கு இந்தத் திருமணத் தகவல் தெரிந்துவிட்டது. தனது வீட்டாருக்குத் தெரிந்துதான் கருணாநிதி இந்த வேலையைச் செய்திருப்பார் என்று மனோரமா வெள்ளந்தியாக நினைத்துவிட்டார்.

கருணாநிதி வெளியூரில் ஒரு வாகன விபத்தில் சிக்கி கண்ணில் அடிபட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது, தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு ஓடி வந்திருக்கிறார். அந்த நேரம் மனோரமாவும் அங்கே வந்து கருணாநிதியிடம் நலம் விசாரித்திருக்கிறார். அந்த நேரத்தில்தான் ராஜாத்தியம்மாளும் அறைக்குள் நுழைய.. “யார் இது..?” என்று கேட்டிருக்கிறார் தயாளு. கருணாநிதி பதில் சொல்லாமல் இருக்க.. (எப்படிச் சொல்லுவார்..? நம்ம இனம் ஒரே மாதிரிதான் இருக்கு..!) மனோரமாவே ஆச்சரியத்துடன், “தெரியாதா இவங்களை..?” என்று கேட்டுவிட்டு தயாளுவிடம் விஷயத்தை போட்டு உடைத்திருக்கிறார்.

அன்றிலிருந்து சினிமாவில் வரும் சக்களத்திகள் சண்டையைப் போல் ராஜாத்தியை இப்போதுவரையிலும் பாவித்து வரும் தயாளு அம்மாள், எங்காவது விழாக்களில்கூட ராஜாத்தியை பார்ப்பதையும், அருகில் நிற்பதையும் முற்றிலுமாகத் தவிர்த்துவிடுவார். அவுக அந்தப் பக்கம்.. இவுக இந்தப் பக்கம் என்று அமர்ந்திருந்ததை பலரும் பார்த்திருக்கலாம். இந்த அளவுக்கு கோபத்தில் இருந்த தயாளு அம்மாவை, ராஜாத்தியுடன் ஒரே காரில் வரவழைத்த பெருமை ஜெயலலிதாவையே சேரும். 

அதேபோல் மயிலாப்பூர் பக்கம் போனால்கூட ஆலிவர் ரோட்டுப் பக்கம் வராத தயாளு அம்மாள், கருணாநிதியின் கைதுக்கு அடுத்த நாள் ராஜாத்தியின் தாயார் இறந்ததற்கு வர வேண்டிய கட்டாயமாகிவிட்டது. அப்போதும் கனிமொழியிடம் மட்டுமே பேசிவிட்டு வெளியேறினார் தயாளு அம்மாள்.

இதே காலக்கட்டத்தில் ஸ்டாலினுக்கும், மதுரையின் பட்டத்து  இளவரசர் மு.க.அழகிரிக்கும் நடுவில் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது. அப்போது தி.மு.க.வில் இருந்து அழகிரி நீக்கப்பட்டிருந்தார். கருணாநிதியிடம்கூட பேசாமல் இருந்தார் அழகிரி. அப்போதைய சட்டசபை தேர்தலில் தென் மாவட்டங்களில் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து தானும் வேட்பாளர்களை களத்தில் இறக்கி பல தொகுதிகளில் தி.மு.க.வின் தோல்விக்கும் காரணமாக இருந்தார்.

இந்த நேரத்தில் நடந்த இந்தக் கொடூரத்தைப் பார்த்து.. தான் ஆடாவிட்டாலும், தன் சதையாடும் என்பார்களே.. அது போல ஜூலை 2-ம் தேதியன்று நடந்த மறியல் போராட்டத்தில் மதுரையில் மட்டும் அழகிரி தலைமையில் 3000 பேர் கைதானார்கள்.

அனைவரையும் விட்டுவிடச் சொல்வார்கள் என்று எதிர்பார்த்து போலீஸார் காத்திருக்க.. மேலிடமோ “தூக்கி உள்ள போடு..” என்று அலட்சியமாகச் சொன்னது.. விளைவு 3000 பேரையும் சோதனையிட்டு உள்ளே வைக்க 20 சிறைக் காவலர்களால் முடியுமா..?  என்ன உடையோடு வந்தார்களோ.. அப்படியே அனைவரையும் சிறைக்குள் அனுமதித்தார்கள்.

சிறைக்குள் போன முக்கால்வாசி உடன்பிறப்புக்களிடம் செல்போன் இருக்க.. உள்ளேயிருந்தபடியே, வெளியில் சன் டிவிக்கு லைவ் டெலிகாஸ்ட் செய்த காட்சி சுவாரஸ்யமானது. அப்படியொரு செல்போனில் ஸ்டாலினுக்கு போன் போட்டுக் கொடுத்து அவரை அழகிரியுடன் பேச வைத்தார்கள் கழக உடன்பிறப்புகள். ஸ்டாலினும், அண்ணனுடன் 3 வருடங்கள் கழித்து வாஞ்சையுடன் பேச.. இருவரும் சிறையிலேயே ஓரிடத்தில் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்.

ஆகஸ்ட் 3-ம் தேதியன்று அழகிரி விடுதலையானாலும், ஆகஸ்ட் 7-ம் தேதியன்று ஜாமீனில் விடுதலையான தனது தம்பி ஸ்டாலினை திறந்த ஜீப்பில் மாலை போட்டு மரியாதை செய்து மதுரையே குலுங்கும் அளவுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றார் அழகிரி. உறவுகளும், பெற்ற தாய், தந்தையால்கூட ஏற்படுத்த முடியாத நட்புணர்வை, ஆத்தாதான் இப்படி செய்து வைத்தார். வாழ்க ஜெயலலிதா..! சொந்த செலவில் சூனியம்..! 2006 தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கான முதல் படிக்கட்டு இதுதான்..!

பல்வேறு அரசியல் கட்சிகள், தலைவர்கள், மத்திய அரசின் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டி வழக்கம்போல ஒரு விசாரணை கமிஷன் வைப்பதாக அறிவித்தார் ஜெயலலிதா. நீதிபதி ராமன் அந்த கமிஷனுக்கு பொறுப்பு வகித்தார். ஆனால் இந்த விசாரணை கமிஷனை தான் நிராகரிப்பதாக கருணாநிதி ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார்.

தனது வீட்டில் நடந்த ரிமாண்ட் என்கொயரிலேயே கருணாநிதியுடன் கரிசனமாக நடந்து கொண்ட நீதிபதி அசோக்குமார், தனது சேம்பரில் ஜூலை 7-ம் தேதி நடந்த விசாரணையில் போலீஸை நார், நாராய் கிழித்துவிட்டார்  

"மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலு ஒரு வாரத்திற்கு முன்புதான் இந்தப் பதவிக்கு வந்துள்ளார். இந்த ஒரு வாரத்திலேயே 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அத்தனை விஷயங்களையும் படித்துத் தெரிந்து கொண்டாரா..? பல உயர் மட்டக் கமிட்டிக் கூட்டங்களுக்கு பின்புதான் இந்த்த் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கும். இதையெல்லாம் ஆச்சார்யலு எப்போது படித்து முடித்தார்..?"

"முறைப்படி இந்த புகாரை ஆச்சார்யலு போலீஸாரிடம் கொடுக்கவே முடியாது.. தலைமைச் செயலாளர் மூலமாகத்தான் புகார் செய்திருக்க வேண்டும். அதுதான் சட்டம்.. இது அவருக்குத் தெரியவில்லையென்றாலும், போலீஸார் ஏன் அதனை வாங்கினார்கள்..?

ஆச்சார்யலு இந்தப் புகாரை போலீஸாரிடம் கொடுக்கும் முன்பாக எந்தவொரு பொறியாளரிடமும், கவுன்சிலர்களிடமும் கலந்தாலோசிக்கவே இல்லையே.. ஏன்..?"

"அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் தவறான வழிகளை அரசுக்குக் காட்டிவிட்டார்" என்று குற்றம்சாட்டினார் நீதிபதி அசோக்குமார். பதிலுக்கு உடனேயே எழுந்த அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஏ.ரகுநாதன், "இப்போது நீதிபதிதான் எதிர்த் தரப்புக்கு ஆதரவாக பாயிண்ட்டுகளை எடுத்துக் கொடுப்பதாக" நேருக்கு நேராக குற்றம் சாட்டினார்.

"ஆச்சார்யலு சில பைல்களை மட்டுமே பார்த்து இதில் ஊழல் நடந்திருக்கிறது என்று கண்டறிந்திருக்கவே முடியாது" என்றார் அசோக்குமார்.

முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததிலும், கைது விவகாரத்திலும் சாட்டையடியாக பறந்தது அசோக்குமாரின் கேள்விகள்..

"விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் பத்மநாபன் முதல் தகவல் அறிக்கையில் கருணாநிதியும் மற்றவர்களும் இதனால் பண ஆதாயம் அடைந்ததற்கான எந்த ஆதாரத்தையும் முன் வைக்கவில்லை.." என்றார் நீதிபதி.

"இந்த வழக்கில் கைதுகளுக்கு முன்பாக விசாரணை செய்ய வேண்டிய விஷயங்களே நிறைய இருக்கும்போது, அதையெல்லாம் செய்யாமல் அனைவரையும் கைது செய்வதிலேயே அரசு ஏன் குறியாக இருந்தது..?" என்று கேள்வியெழுப்பினார் நீதிபதி.

"முதல் தகவல் அறிக்கையிலும் சாட்சிகள் முன்னிலையில் கைதுகள் நடக்காமலும், அவர்களது குடும்பத்தினரிடம் சட்டப்படி தெரிவிக்காமலும் ஏதோ கைது செய்தாக வேண்டும் என்று தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்து முனைந்து செய்திருப்பதாக" நீதிபதி அசோக்குமார் குற்றம்சாட்டினார்.

"பொதுவாக லஞ்ச ஊழல் வழக்குகளில் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டாலும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த பின்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு பெயில் தரலாமா? வேண்டாமா? என்பதை சம்பந்தப்பட்ட கோர்ட்டுகள்தான் முடிவெடுக்கும். ஆனால் இந்த ஒரு வழக்கில் மட்டும் எந்தவொரு விதிமுறைகளையும், சட்டத்தையும் பின்பற்றாமல் அரசு தன்னிச்சையாக கைது நடவடிக்கை எடுத்திருப்பது சட்டவிரோதமானது.." என்றார்..

கூடவே கருணாநிதியைப் பற்றித் தனிப்பட்ட முறையில் வருத்தம் தோய்ந்த குரலில் பேசினார் அசோக்குமார். “அந்த மனிதர் ஒரு பிச்சைக்காரரை போல சிறை வாசலில் தரையில் அமர்ந்திருந்ததை பார்த்தீர்களா..? நான் அவரை பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்துவிட்டுத்தான் சிறைக்குக் கொண்டு போக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தேன். ஆனால் நீங்கள் என் உத்தரவை மீறிவிட்டீர்கள். உங்கள் மீது ஏன் நான் நடவடிக்கை எடுக்க்க் கூடாது..?” என்று போலீஸாரை பார்த்து கேள்வி எழுப்பினார்.

இவ்வளவு கடுமையான விமர்சனத்தையும், கேள்வியையும் எதிர்பார்த்திராத போலீஸ் திணறிப் போனது. ஆனாலும் உடனேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் மூலமாக வழக்கு தொடுத்து, அசோக்குமார் காட்டமாக பயன்படுத்திய பல வார்த்தைகளை வழக்கு விசாரணைக் குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார்கள்..!

இவ்வளவு அவசரம், அவசரமாக இந்த வழக்கில் கைது செய்தவர்கள், முதல் குற்றப்பத்திரிகையை மட்டும் சாவகாசமாக 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் கோர்ட்டில் தாக்கல் செய்தார்கள். இந்த வழக்கு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் எதிர்பார்த்ததுபோலவே ரத்து செய்யப்பட்டது.

இந்தக் கொடூரக் கைது சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் நான்கு பேர். 

முதலாவது ஆள் அப்போதைய டி.ஜி.பி. ரவீந்திரநாத். இவர் கருணாநிதியைப் பற்றிச் சொல்லும்போது "கலைஞர் எனக்கு அங்கிள் மாதிரி.." என்று சல்ஜாப்பு காட்டினார். ஜெயல்லிதா கண்ணால் உத்தரவிடுவதை காலால் செய்து வந்த இவர், ஆத்தா ஆட்சியிலேயே சஸ்பெண்ட் ஆனது மகா கொடுமை.. இத்தனைக்கும் பதவியில் இருக்கும்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட முதல் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யும் இவர்தான்.

2 விஷயங்களினால் அன்னார் வீட்டுக்கு அனுப்பப்பட்டார் என்று சொல்லின அப்போதைய பத்திரிகைகள். 

ஒன்று.. அந்தச் சமயத்தில் தி.நகரில் இருக்கும் நடிகை விஜயசாந்தியின் வீட்டு மீது யாரோ இரவு நேரத்தில் கல்லெறிந்துவிட்டார்கள். அப்போது விஜயசாந்திக்கும், ஆத்தாவுக்கும் இடையில் நல்லதொரு பிரெண்ட்ஷிப் இருந்தது. "அரசியலில் எனது வழிகாட்டியே ஜெயலலிதாதான்.." என்று சொல்லியிருந்தார் விஜயசாந்தி.

இந்த வழக்கை விசாரிக்க ஒரு சப்-இன்ஸ்பெக்டரே போதும். ஆனால் டி.ஜி.பி. ரவீந்திரநாத்துக்கு கடமையுணர்வு கொப்பளித்துவிட்டது. அந்த இரவு நேரத்தில் தானே நேராக விஜயசாந்தியின் வீட்டிற்குச் சென்று அவரிடம் விசாரித்தார். மறுநாள் இரவிலும் அங்கே சென்று உட்கார்ந்து கொண்டு தி.நகர் போலீஸ் ஸ்டேஷனையே விஜயசாந்தியின் வீட்டிற்கு வரவழைத்து "கேஸ் என்னாச்சு..? எவனைப் பிடிச்சீங்க? யாரையெல்லாம் விசாரிச்சீங்க..? ஏன் இன்னும் அரெஸ்ட் பண்ணலை..?" என்றெல்லாம் விஜயசாந்தி முன்பாகவே ஷோ காட்டியிருக்கிறார். மூன்றாவது நாள் இரவிலும், “இந்தப் பக்கமா வந்தேன்..” என்று சொல்லி பல்லைக் காட்டியிருக்கிறார்.

விஜயசாந்திக்கா புரியாது..? தன் நீண்ட, நெடிய சினிமா, அரசியல் வாழ்க்கையில் இதுபோல் எத்தனை பேரை அவர் பார்த்திருப்பார்..? ஆத்தாவுக்கு இந்த விஷயத்தை பாஸ் செய்துவிட்டார். ஆத்தா, உடனேயே ரவீந்தரநாத்தை, கார்டனுக்கு வரவழைத்து வேப்பிலை அடித்து அனுப்பி வைத்தார்.

ரவீந்திரநாத் அடுத்து செய்தது இன்னொரு லொள்ளு வேலை. தான் டி.ஜி.பி.யாக பதவியேற்றவுடன் அனைத்து டி.ஐ.ஜி.க்களையும் அழைத்து அவரவர் மண்டலங்களில் இருக்கும் ஆயுதப் படை போலீஸார் மற்றும் தெரிந்த போலீஸாரை தனது மனைவி மற்றும் மைத்துனரிடம் எல்.ஐ.சி. பாலிஸி எடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்துள்ளார். அதிலும் மாதத்திற்கு இத்தனை கேஸ்களை பிடித்துக் கொடுத்தாக வேண்டும் என்று டார்கெட்டும் வைத்திருக்கிறார். இந்த விஷயமும் உளவுத் துறை மூலமாக ஆத்தாவின் காதுகளை எட்ட... "வீட்ல போய் எல்.ஐ.சி. பாலிஸிக்கு ஆள் புடிக்குற வேலையையே பாரு சாமி.." என்று சொல்லி சஸ்பென்ஷனில் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.

ரவீந்திரநாத் ஓய்வு பெறுவதற்கு முந்தின நாள் காலை 8 மணிக்கெல்லாம் கார்டனின் வாசலில் வந்து தவம் கிடந்தார் ரவீந்திரநாத்தின் டாக்டர் மனைவி. மதியம் 1 மணிக்கு ஆத்தா மனமிரங்கி உள்ளே அழைத்து விசாரித்த பின்பு, போனால் போகிறது என்று சொல்லி கடைசி நாளில் சஸ்பெண்ட் விலக்கிக் கொள்ளப்பட்டு முறைப்படி ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டார் ரவீந்திரநாத்.

அடுத்தது முத்துக்கருப்பன். கருணாநிதி கைது சர்ச்சைக்குப் பின்பு இந்தக் கைதைக் கண்டித்து சென்னை மெரீனா பீச்சில் தி.மு.க.வினர் நடத்திய கண்டன பேரணியில் நடந்த தடியடிதான் மிகப் பெரும் அளவுக்கு தமிழகத்தையே பதற வைத்தது..! 

“முத்துக்கருப்பன் பொண்டாட்டி என் வைப்பாட்டி..” என்று தி.மு.க. தொண்டர்கள் ஆத்திரத்துடன் கோஷத்தை எழுப்பி ஒரு மாலை வேளையில் மெரீனா கடற்கரையை ரத்தமயமாக்கிய சம்பவம் இது..!

அதிலும் அருகில் இருந்த மீனவர் குப்பத்தில் இருந்து சிலர் கூட்டத்துக்குள் புகுந்து அரிவாளால் சர்வசாதாரணமாக தி.மு.க. தொண்டர்களை வெட்டிச் சாய்க்கும் வீடியோக்கள் வெளியானபோது திகிலடைந்து போனது தமிழகம்.

இதிலேயே ஆத்தாவிடம் லேசாக வாங்கிக் கட்டிக் கொண்ட முத்துக்கருப்பன், அடுத்து சில நாட்களில் புரசைவாக்கம் சட்டக் கல்லூரி மாணவர் விடுதிக்குள் நுழைந்து போலீஸார் நடத்திய கோரத் தாக்குதலுக்குப் பின்பு "உன் சேவை போதுமடா சாமி.. போய்ச் சேரு" என்று சொல்லி வேறு பணியிடத்துக்கு மாற்றப்பட்டார். 

ஆனால் தொடர்ச்சியாக இவர் மீது வந்த புகார்களும், முத்துக்கருப்பன் நடத்தி வந்த பால்பண்ணையை வைத்து வந்த குற்றச்சாட்டுக்களுக்கும் சேர்த்து ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சஸ்பெண்ட் உத்தரவு பிற்காலத்தில் கருணாநிதியால்தான் விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும் கருணாநிதியாலேயே கூடுதல் டி.ஜி.பி. என்ற அந்தஸ்தும் வழங்கப்பட்டு, இப்போது ஒரு டம்மி போஸ்ட்டிங்கில் இருக்கிறார்.

டி.ஐ.ஜி. முகமது அலியோ இந்தியாவையே உலுக்கிய போலி பத்திர ஊழல் வழக்கை விசாரித்தபோது அந்த வழக்கில் மாட்டிக் கொண்டவர்களிடம் லஞ்சம் வாங்கி அவர்களைத் தப்ப வைத்தக் குற்றச்சாட்டில் சிபிஐயினரால் கைது செய்யப்பட்டு தற்போது சஸ்பெண்ட்டில் உள்ளார்.(ரிட்டையர்டு ஆயிட்டாரா? இல்லையா? தெரியலை) 

கருணாநிதியை தரதரவென இழுத்துச் சென்ற இன்ஸ்பெக்டர் முருகேசன், இதற்குப் பின்பு ஜெயலலிதா ஆட்சியில் டி.எஸ்.பி. மற்றும் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றிருந்தார். 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு ஏதோ ஒரு ஊரில் போலீஸ் பயிற்சிக் கல்லூரி முதல்வராக மாற்றப்பட்டார்.(வெளங்கிடும்..!)

இதுதான் ஜெயல்லிதா. தான் சொல்வதை மட்டுமே அடிமைகள்போல் செய்தால் போதும். கூடுதலாக தங்களுக்கும் பவர் உண்டு என்று காண்பித்தால் தூக்கிப் போட்டு மிதித்துவிடுவார். உதவி, நன்றி, பரஸ்பர சொரிதல் என்ற சென்டிமெண்ட்டெல்லாம் ஆத்தாவிடம் கிடையாது..! 

அடுத்து ஜூனியர்விகடன் மெரீனா பீச் கலவரத்தையும் பதிவாக்கினால் அப்போது இந்தப் பேரணிக்குச் சென்று அடிதடியில் காயம் பட்ட எனது அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்..! 

பின்குறிப்புகள் : 

1. பத்திரிகையாளர்கள் பலரும் தடியடியில் காயம்பட்டது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்திகளெல்லாம் நான் வீடு திரும்பிய பின்புதான் எனக்குக் கிடைத்தது.. அந்த இடத்தில் அப்போது இல்லாததால் என்னால் அறிய முடியவில்லை.

2.   இந்தச் சம்பவத்திற்குப் பின்புதான் சென்னையில் டூவீலர் வைத்திருக்க வேண்டிய அவசியத்தை பெரிதும் உணர்ந்தேன். அடுத்த மாதமே தவணை முறையில் டிவிஎஸ் எக்ஸ் எல் சூப்பர் வண்டியை எடுத்தேன். இன்றுவரையில் அதுதான் எனது வாகனம்.. இந்த உணர்வை உருவாக்கியளித்த ஆத்தா ஜெயல்லிதாவுக்கு எனது நன்றி. அதே நேரத்தில் கருணாநிதிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பத்திரிகையாளர்கள் மற்றும் உடன்பிறப்புகளுக்கு எனது வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!

இதுவரையிலும் பொறுமையாகப் படித்து முடித்த அத்தனை பேருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..!

அன்புடன்

உங்கள் உண்மைத்தமிழன்

2001-ல் கருணாநிதி நடு இரவில் கைது - நடந்த நிகழ்வுகள்..!

22-08-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

புரட்சித் தலைவி, பொன்மனச்செல்வி, தங்கத் தாரகை, இந்தியாவின் இரும்பு மனுஷி, மனிதநேயமிக்க முதல்வர், அன்னை ஜெயலலிதாவின் 2-வது ஆட்சிக் காலத்தின் துவக்கத்திலேயே, 2001-ம் வருடம் ஜூன் 30-ம் தேதியன்று அதிகாலையில் உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர், முத்தமிழ்வித்தகர், தமிழாய்ந்த தமிழன், ஓய்வறியாத உழைப்பாளி, ஒப்பற்ற கலைஞன், கலையுலகின் வித்தகர், இரண்டாம் ராஜராஜசோழன், மனுநீதிச் சோழனின் நேரடி வாரிசு, டாக்டர் கலைஞர் என்னும் திருக்குவளை மு.கருணாநிதி மேம்பால ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டபோது நடந்த நிகழ்வுகளை ஜூனியர்விகடனும், நக்கீரனும் ஸ்பெஷல் காவரேஜ் செய்து கட்டுரைகளை வெளியிட்டிருந்தன.

பழசு என்றும் புதுசு என்னும் தலைப்பில் ஜூனியர்விகடன் அப்போது எழுதியதை இப்போது மீண்டும் பிரசுரித்துள்ளது.

தொடர்ந்து 4 இதழ்களில் வந்திருந்த செய்திகளைத் தொகுத்து ஒரே செய்திக் கட்டுரையாக்கி இங்கே கொடுத்துள்ளேன்.

கூடவே முரசொலியின் இணையத்தளத்தில் வைத்திருந்த நக்கீரன் இதழின் கட்டுரையையும் இதில் இணைத்துள்ளேன்.

ஸ்டாலின் வீட்டில் நடு இரவில் போலீஸ் நடந்து கொண்டதை விவரிக்கும் ஜூனியர் விகடனின் கட்டுரையும் இதில் இருக்கிறது.

கலைஞரின் கைதுக்கு மறுநாள் அவருடைய மாமியார்(ராஜாத்தியின் தாயார்) திடீரென்று மாரடைப்பால் இறந்து போனார். அது தொடர்பான ஜூனியர்விகடன் கட்டுரையும் உள்ளது.

கடைசியாக அன்றைய சென்னை போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியும் இதில் உள்ளது.

அன்றைய தினம் முழுமையாக நடந்ததைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்கள், கடைசிவரையிலும் விடா முயற்சியுடனும், பொறுமையுடனும் படிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..!

இந்தக் கொடூரச் சம்பவத்தின் பாதியில் இருந்து நேரடியாக கவனித்ததினால் கிடைத்த எனது அனுபவத்தையும் அடுத்தப் பதிவில் தொகுத்து வழங்கவுள்ளேன் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்..! சிரமம் பார்க்காமல் அதையும் காத்திருந்து படிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..!

நன்றி..!

இனி ஜூனியர்விகடன்..

ஜூன் 30... பொழுது விடிந்து சூரியன் உதிக்கும் நேரத்தில், கீழ்ப்பாக்கம் டெய்​லர்ஸ் ரோடு!
   
நீதிபதிகள் குவார்ட்டர்ஸில் பிரின்சிபல் செஷன்ஸ் ஜட்ஜ் அசோக்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, போலீஸ் படை சூழ... தள்ளாடியபடி வெளியில் வந்த கலைஞ​ரிடம் சில நிமிடங்கள் பேசும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. அருகில் நின்று இருந்த மகள் கனிமொழி வாய்விட்டுக் கதற, அவரை சமாதானப்படுத்திவிட்டு நம்மிடம் பேசினார் கலைஞர்.

''இரவு 2 மணி தாண்டி இருக்கும்... ஆலிவர் ரோட்டில் உள்ள என் வீட்டின் வெளிப்புறம் பெரிய வெடிச் சத்தம் கேட்டதுபோல் இருந்தது. திடுக்கிட்டு எழுந்தேன். என்னைச் சுற்றி 13 போலீஸ் அதிகாரிகள். ஏன் வந்தார்கள்... எப்படி வந்தார்கள் என்று புரிந்துகொள்ளும் முன்பே, 'நீங்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறீர்கள்... உடனே கிளம்புங்கள்!’ என்றார் காவலர்களுக்கு தலைமை தாங்கி வந்த போலீஸ் அதிகாரி சாரங்கன்.

லுங்கியில் இருந்த எனக்கு சட்டை மாட்டிக்கொள்ளக்கூட மிகக் குறைந்த அவகாசமே கொடுத்தார்கள். வேட்டை​யாட வந்த மிருகங்கள்போல என்னைச் சூழ்ந்துகொண்டு குண்டுகட்டாகத் தூக்கிச் சென்றார்கள். என் மீதும் மத்திய அமைச்சர் மாறன் மீதும் நடந்த தாக்குதல்களைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை...'' - கலைஞர் சொல்லி முடிப்பதற்குள், அவரைச் சுற்றி நின்ற போலீஸ் படை அந்த குவார்ட்டர்ஸைவிட்டு வெளியே நகரச் சொல்லி பிரஷர் கொடுக்க, ''தமிழக மக்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். தேர்தல் முடிவு வந்ததுமே, இப்படி எல்லாம் நடக்கும் என்று நான் எதிர்பார்த்தேன். இந்த சோதனைகள் எனக்குத் தூசு!'' என்றபடி கை கூப்பினார் கலைஞர்.

மீண்டும் ஆரம்பக் காட்சியில் இருந்து வருவோம்!


ஆலிவர் ரோடு வீட்டின் வாசலில் சந்தடி இல்லாமல் வந்து நின்ற போலீஸ் வண்டிகளில் இருந்து,  தபதபவென பூட்ஸ் கால்கள் குதித்து வீட்டைச் சூழ்ந்து நின்றன. போலீஸ் உயர் அதிகாரி ஒருவரின் உத்தரவைத் தொடர்ந்து, ஒரு போலீஸ்காரர் துப்பாக்கியின் பின் கட்டையால் கலைஞர் வீட்டு கேட்டில் போட்டிருந்த பூட்டை ஓங்கி அடித்து உடைக்க, மடை திறந்த காக்கி வெள்ளமாக அத்தனை பேரும் உள்ளே பாய்ந்தார்கள்.

ராஜாத்தி அம்மாளும் கனிமொழியும் கேட்கக் கேட்கப் பதிலே சொல்லாமல், கலைஞர் உறங்கிக்கொண்டு இருந்த அறைக்குள் புகுந்தார்கள். அந்நேரம் விழித்து இருந்த கலைஞர், கைதுக்கான காரணங்களைக் கேட்டு வாக்குவாதம் தொடங்க, அதற்குள் மாறன் வீட்டுக்கும் ஸ்டாலின் வீட்டுக்கும் தகவல் பறந்தது.

வீட்டில் இருந்து மாறன் ஓடோடி வந்து சேர்ந்தபோது, கலைஞரை... கையையும் காலையும் பிடித்துத் தூக்கிக்கொண்டு இருந்தனர் போலீஸார். ''ஐயோ... ஐயோ...'' என்ற வார்த்தைகளையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கலைஞர் கதறிக்கொண்டு இருந்தார். போலீஸ் இழுபறியில் கலைஞரின் மூக்குக் கண்ணாடி ஒரு பக்கம் எகிறி விழுந்தது. தடுக்க வந்த மாறனை குண்டுகட்டாகச் சுமந்தபடி வெளியே கொண்டு​வந்து வீசினார்கள். வாசலில் தரையில் படுத்தபடி தர்ணா செய்ய முயன்ற பரிதி இளம்​வழுதிக்கு இடுப்பில் பூட்ஸ் காலால் பலமான ஓர் உதை. துடித்துப் புரண்டு எழுந்து சுதாரிப்பதற்குள், கலைஞரை காரில் ஏற்றிக்கொண்டு போலீஸ் அணிவகுப்பு அரசினர் தோட்டத்தை நோக்கிப் பறந்தது.

அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகம்....

கடந்த ஆட்சியில் பப்ளிக் பிராசிக்யூட்டராக இருந்த சண்முகசுந்தரம் பதறி அடித்துக்கொண்டு வர, அதற்குள் அரசினர் தோட்ட வளாகத்தின் எல்லா வாயில்களிலும் ராணுவ அணிவகுப்புபோல போலீஸ் வண்டிகள் திரண்டு நின்றன. அதையும் மீறி, சண்முகசுந்தரம் எப்படியோ உள்ளே நுழைந்துவிட, பத்திரிகையாளர்களை உள்ளேவிட மறுத்தது போலீஸ். 

மீறி உள்ளே ஓடிச் சென்ற சுமார் 30 பத்திரிகையாளர்கள் தடிகளால் காட்டுத்தனமாகத் தாக்கப்பட்டு, போலீஸ் வேனில் ஏற்றப்பட்டனர். கண நேரத்தில் தாங்கள் கைது செய்யப்பட்டதை நம்பவே முடியாமல், ஆட்சிக்கு எதிரான கோஷங்களை நிருபர்கள் உரக்க எழுப்ப, அவர்களை சுமந்தபடி வேப்பேரி போலீஸ் ஸ்டேஷன் நோக்கி வேன் பறந்தது.

அந்த நேரம் கணவர் அரவிந்தனுடன் வந்து சேர்ந்தார் கனிமொழி. ''எக்காரணம் கொண்டும் உங்களை உள்ளேவிட முடியாது!'' என்று அங்கே இருந்த டெபுடி கமிஷனர் சொல்ல, ''இது பொது வளாகம். இதற்குள் செல்லவிடாமல் என்னைத் தடுக்க, உங்களுக்கு ஏது உரிமை?'' என்று கனிமொழி வாதாடத் துவங்க, ''ஏய்... சொன்னா, மரியாதையாப் போயிடணும்...'' என்று அந்த அதிகாரி மட்டமான வார்த்தைகளில் இறங்க, வந்து சேர்ந்திருந்த நிருபர்களே திகைப்பில் உறைந்து போனார்கள்.

அடுத்த சில நிமிடங்களில் கனிமொழியின் தோளில் கை வைத்து அந்த அதிகாரி தள்ள, நிலைமை படுமோசம் என்று புரிந்துகொண்டவராக அவரது கணவர் அரவிந்தன், கனிமொழியை சமாதானப்படுத்தி ஓரமாக அழைத்துச் சென்றார். வெகு நேரக் கெஞ்சலுக்குப் பிறகு, ஆயிரம் விளக்கு உசேன் மற்றும் கனிமொழியை மட்டும் உள்ளே நுழைய அனுமதித்தது போலீஸ்.

சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கலைஞருடன் இருந்த சண்முகசுந்தரத்தை நாம் செல்போனில் தொடர்புகொள்ள, ''என்ன வழக்கு... எதற்காக கைது என்று சொல்ல மறுக்கிறார்கள். அடுத்து எங்கே கொண்டு செல்லப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை...'' என்றார் சண்முகசுந்தரம் குரல் கம்ம!

அதே சமயம், டி.ஆர்.பாலு எம்.பி-யுடன் ஒரு காரில் வந்த மாறனை அரசினர் தோட்டத்தின் பிரதான நுழைவாயிலில் தடுத்து நிறுத்தியது போலீஸ். வாயிலில் மறித்துப் போடப்பட்டிருந்த இரும்புத் தடுப்பை முட்டித் தூக்கி எறிந்தபடி மாறனின் கார் உள்ளே பறந்துவிட்டது. பிற்பாடு அவரை விரட்டிச் சென்ற போலீஸார், கலைஞரின் கண் எதிரேயே தாக்கித் தள்ளி இருக்கிறார்கள். சட்டை காலரைப் பிடித்து சுழற்றி அடித்தனர்.

கலைஞரை போலீஸ் படை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நீதிபதி அசோக்குமார் வீட்டுக்குக் கொண்டுபோகிறார்கள் என்று தகவல் கிடைத்து, நிருபர்கள் அங்கே பறந்தனர். அங்கும் சாலையே தெரியாத அளவுக்குக் குவிந்துகிடந்த போலீஸார், நீதிபதியின் குடியிருப்புக்கு 100 அடி தூரத்திலேயே நிருபர்களைத் தடுத்து நிறுத்தினர். ''செய்தி சேகரிப்பது எங்கள் உரிமை!'' என்றபடி நிருபர்கள் முன்னேற, ''உங்களைத் தடுப்பது எங்கள் கடமை!'' என்று வக்கிரமாகச் சொன்ன ஒரு போலீஸ் அதிகாரி, லத்தி சார்ஜுக்கு உத்தரவு போட்டார்.

அவ்வளவுதான் ரணகளம் தொடங்கியது. சரமாரியாக போலீஸ் லத்திகளால் பின்னியெடுக்க... ரத்தம் பெருக்கெடுக்க... அங்குமிங்கும் அலைபாய்ந்த நிருபர்கள், ''ஆட்சி அராஜகம் ஒழிக!'' என்று கோஷம் போட்டபடி, தொடர்ந்து நீதிபதியின் வீட்டை நோக்கி முன்னேறினார்கள்.

சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு, கலைஞரை ஏற்றிக்​கொண்டு கார் வர, அதைத் தொடர்ந்து மாறன், மு.க.தமிழரசு ஆகி​யோர் வரிசையாக வந்தனர். காரை சில நிமிடம் வாசலி​லேயே நிறுத்தி கலைஞரை ஒரு படமாவது எடுத்துவிடலாம் என்று நிருபர்களும் டி.வி. கேமராக்காரர்களும் நெருக்கியடிக்க... யாருமே எதிர்பாராதது நடந்தது.

லேசாகத் தயங்கி நின்ற வாகன அணிவகுப்பு திடீரெனச் சீறலுடன் வேகம் எடுத்து சாலையில் நேராகப் பாய்ந்தது. கலைஞரை வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோகிறார்கள் என்று எப்படியோ தெரிந்து கொண்ட நிருபர்கள் கார்களிலும் டூவீலர்களிலும் பறந்தனர். அங்கே போய்ச் சேர்ந்தபோது, வேப்பேரி காவல்நிலையத்தின் உயர்ந்த கதவுகள் உள்ளே மூடப்பட்டு இருந்தன. (அதற்கு முந்தைய நாள்தான் 150-க்கும் மேற்பட்ட நிருபர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட கொடுமை நடந்த அதே இடம்!)

போலீஸ் ஸ்டேஷனை நெருங்க முயன்ற நிருபர்களுக்கு, அங்கேயும் காட்டுத்தனமான தாக்குதல் பரிசாகக் கிடைத்தது. விழுந்த அடிகளில் இரண்டு மூன்று கேமராக்கள் நொறுங்க, உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, கிடைத்த இண்டு இடுக்கில் எல்லாம் புகுந்து ஓடினார்கள் நிருபர்கள். அதில் பெண் நிருபர்களைக்கூட விடாமல்... அவர்கள் தரையில் தடுக்கி விழுந்தபோதும் லத்தியால் தாக்கித் தள்ளியது போலீஸ்.

''சிறையில் அடைக்கப்படும்வரை கலைஞரை யாரும் ஒரு புகைப்படம்கூட எடுத்துவிடக் கூடாது. அவருடன் யாரும் ஒரு வார்த்தைகூட பேசிவிடக் கூடாது. அதைக் கவனத்தில் கொள்ளுங்கள்'' என்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பனிடம் இருந்து வந்த உத்தரவுதான் இத்தனைக்கும் காரணம் என்று பிற்பாடுதான் புரிந்தது.

ஒரு வழியாக ஸ்டேஷனின் பக்கவாட்டு காம்பவுண்டு சுவரைத் தாண்டிக் குதித்து, இருட்டில் பதுங்கியபடி அந்தக் கட்டடத்தை நெருங்கினர் சில நிருபர்கள். அங்கே கண்ட காட்சியில் அவர்கள் ரத்தம் உறைந்தது. தொடர்ந்து உரத்த குரலில் கேள்விகள் கேட்ட முரசொலி மாறனின் சட்டையைப் பிடித்து கீழே தள்ளினார் ஒரு போலீஸ்காரர்.

இன்னொருவர் ஸ்டேஷனுக்குள் இருந்த நாற்காலியை அவரை நோக்கி எட்டி உதைக்க, மாறனின் காலில் சுளீரெனத் தாக்கியது அந்த நாற்காலி. இதனைத் தொடர்ந்து மாறன் வாய்விட்டு அலறியது ஸ்டேஷனுக்கு வெளியிலும் கேட்டது.

அரை மணி நேரம் உள்ளே கலைஞரை வைத்து இருந்தவர்கள், அப்போதும் கைதுக்கான காரணத்தைச் சொல்லவில்லை. மறுபடி அவரை நீதிபதி விட்டுக்கே கூட்டிக்கொண்டு கிளம்பினார்கள். கலைஞர் காரைத் தொடர்ந்து தன் காரில் கிளம்பப் போனார் மாறன். மின்னலெனப் பாய்ந்து சென்று அவர் காரில் இருந்த சாவியை எடுத்துக்கொண்டு ஓடி மறைந்தார் ஒரு காவலர்.

ரத்தம் வடிந்த கால்களுடன் தள்ளாடியபடி வாசலுக்கு ஓடி வந்து அங்கு நின்று இருந்த ஒரு ஆட்டோவில் ஏறி அதை மாறன் கிளம்பச் சொல்ல, அதற்குள் சன் டி.வி-யின் கவரேஜ் கார் வந்து நிற்க... அதில் ஏறிக்கொண்டார்.

வேப்பேரி ஸ்டேஷனுக்குள் இருந்த கனிமொழியைத் திடீரென வெளியேவிட மறுத்தது போலீஸ். ஓர் அதிகாரியிடம் அவர் வாதாடத் துவங்க, அவரது கையைப் பிடித்து இழுத்தபடி உள்ளே சென்றார் அந்த அதிகாரி. அடுத்த சில நொடிகளில், கனிமொழி வீறிட்டு அலறும் சத்தம். அதைத் தொடர்ந்து விம்மி அழுதபடி அவரும் ஓடி வந்து காரில் ஏறிக் கொண்டார்...

நன்றி : ஜூனியர்விகடன்

பழசு இன்றும் புதுசு - நேற்றும் நமதே - 34: 4.7.01

வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியேறிய கலைஞரின் கார் மட்டும் நீதிபதியின் வீடு இருந்த குடியிருப்புக்குள் நுழைந்தது. அவரைப் பின் தொடர்ந்து நிருபர்கள் உள்ளே நுழைய முயல, அந்தக் குடியிருப்பின் கனத்த கேட்டை வேகமாக அடித்து மூடியது போலீஸ்.

அப்போது கேட்டின் இடுக்கில் கால்கள் சிக்கி ஒரு பெண் நிருபர் வாய்விட்டுக் கதற... அது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் கேட்டை முரட்டுக் கரங்களால் அழுந்த மூடியபடியே இருந்தனர் போலீஸார். ஒட்டுமொத்த நிருபர்களும் ஒரு போலீஸ்காரரை இழுத்துச் சென்று, சரமாரியாகத் திட்டித் தீர்த்தனர். அந்தப் போலீஸ்காரரை மீட்க மறுபடி நிருபர்கள் மீது லத்தி சார்ஜ். ரத்தக் காயம்... சிதறி ஓட்டம்!

அப்போது உள்ளே கலைஞருடன் இருந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டோம்.

''சென்னை நகரில் மேம்பாலங்கள் கட்டியதில் 12 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் உண்டாக்கிவிட்டதாக, கலைஞர் மீது மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலு புகார் கொடுத்திருக்கிறார். கலைஞர் தவிர, மேயர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி, பொன்முடி ஆகியோரும் இதில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்...'' என்று படபடப்பான குரலில் பேசிய சண்முகசுந்தரம், அடுத்தடுத்து நீதிபதி வீட்டுக்கு உள்ளே நடந்தவற்றை விவரித்துக்கொண்டே வந்தார்.

கலைஞருக்கு 'வர்டிகோ’ தொந்தரவு இருப்பதால் அவரால் தொடர்ந்து 10 நிமிடங்கள் நிற்பதுகூட இயலாத காரியம் என்று அவருடன் சென்ற அவரது குடும்ப டாக்டர் கோபால் எடுத்துச் சொல்லி இருக்கிறார். கழுத்து வலி, முதுகு வலி ஆகியவையும் கலைஞரை வாட்டுவதாக நீதிபதியிடம் சொன்னார்.

''அதற்காக பட்டு மெத்தையில் வைத்தா பராமரிக்க முடியும்?'' என்று பக்கத்திலேயே நின்றிருந்த போலீஸ் அதிகாரி கமென்ட் அடிக்க, துடித்துப்போய் அவரை ஒரு கணம் பார்த்தாராம் கலைஞர்.

தொடர்ந்து நடந்த வாக்குவாதங்களுக்குப் பிறகு ஜூலை 10-ம் தேதி வரை கலைஞரை ரிமாண்டில் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் நீதிபதி. குடும்ப டாக்டர் கோபால் தவிர, அரசு டாக்​டர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து, கலைஞரின் உடல்நிலையை உடனடியாக சோதிக்க வேண்டும் என்றும், இதற்காக அவரை சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும்  உத்தரவிட்டார்.

இது நடந்து கொண்டு இருந்தபோதே அடுத்தடுத்து கார்கள் வெளியே வந்து நின்றன. தயாளு அம்மாள், செல்வி, மு.க. தமிழரசு மூவரும் முதலில் உள்ளே போனார்கள். அடுத்து ராஜாத்தி அம்மாள், கனிமொழி, அரவிந்தன் ஆகியோர் சென்றனர். கடைசியாக வந்து நின்ற காரில் இருந்து மாறன் இறங்கியபோது, ஒட்டு மொத்தக் கூட்டமும் நடுங்கிப்போனது.

நார் நாராகக் கிழிந்துபோயிருந்த வேட்டியை உயர்த்திப் பிடித்தபடி, உள்ளே இருந்த அண்டர்வேர் தெரிவதுபற்றிக்கூட உணரா​தவராக, தள்ளாட்ட நடை போட்டு இறங்கினார் மாறன். ''நான் வயசானவன்... ஹார்ட் பேஷன்ட்... அடிச்சிட்டாங்க... முடியலை... என்னால எதுவுமே முடியலை...'' என்று அவர் சொல்ல, குடியிருப்பின் கேட்​அருகே நின்றிருந்த துரை​முருகன் வாய்விட்டுக் கதறத் தொடங்​கிவிட்டார்.

''தலைவர் செருப்பை போட்​டுக்​கக்கூட அந்தப் பாவிங்க அவகாசம் கொடுக்கலை. இதோ நான் கொண்டாந்திருக்கேன்...'' என்றபடி வெண்ணிறச் செருப்பை மாறன் முன் துரைமுருகன் நீட்ட, அவர் சொல்வதைப் புரிந்து கொள்ளக்கூடத் திராணி இல்​லாதவராத, விழிகள் மேலே செருக நீதிபதியின் வீட்டை நோக்கி நடந்தார் மாறன்.

ரிமாண்ட் உத்தரவு போடப்​பட்டு, நீதிபதி வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார் கலைஞர். அவரது குடும்பத்துப் பெண்கள் அத்தனை பேரும் கண்ணீரும் கம்பலை​யுமாக தலைவிரி கோலமாக அவரைத் தொடர்ந்து வர, ஆறுதல் சொன்னபடியே காரில் ஏறப்​ போனார் கலைஞர்.

அடுத்த காட்சி சென்னைப் பொது மருத்துவமனையில்தான் இருக்கும் என்று கணக்குப் போட்டு நூற்றுக்கணக்கான தி.மு.க. தொண்டர்களும் பிரமுகர்​களும் அங்கே ஓடினர். சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்தும் கலை​ஞரை போலீஸ் அங்கே கொண்டு வரவில்லை.

பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி மாஜிஸ்​திரேட் சொன்னதையும் மீறி, தங்களது கொடூரக் கண்ணாமூச்சி விளையாட்டின் அடுத்த கட்டமாக, கலைஞரை நேரடியாக சென்னை மத்தியச் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்று விட்டனர்.

ஜெயில் வளாகத்தை நெருங்க முடியாதபடி மேலே இருந்த பாலத்திலேயே அத்தனை பேரும் தடுத்து நிறுத்தப்பட, அங்கே இருந்தே கேமராக்கள் ஜூம் செய்யப்பட்டன.

காருக்குள் இருந்து லுங்கியும் கிழிந்த சட்டையுமாக இறங்கிய கலைஞர் மெள்ளத் தலையை நிமிர்த்தி பாலத்தின் மேல் குவிந்துகிடந்த பத்திரிகையாளர்கள் மற்றும் மக்களைப் பார்த்து கையசைக்க... ''தலைவா! நீ யாருக்கு என்ன பாவம் செஞ்சே? போலீஸ்காரங்களுக்கு சம்பளத்தை ஏத்திக் கொடுத் தியே... அந்தப் பாவத்துக்காகத்தான் உன்னை வீட்டில் அடிஅடினு அடிச்சாங்களா தலைவா?'' என்று உரக்கக் கதறியபடியே மயங்கி விழுந்தார் ஒரு தி.மு.க. தொண்டர்.


சிறையின் முன்பு இருந்த சிமென்ட் தளத்தில் அப்படியே சப்பணமிட்டு அமர்ந்த கலைஞர் ஓங்கி உயர்ந்த சிறைக் கட்டடத்தை ஒரு தரம் நிமிர்ந்து பார்த்தார். குடும்ப டாக்டர் கோபாலும், கனிமொழியும் அடக்க மாட்டாமல் விம்மி அழத் தொடங்கிவிட்டார்கள். உடனடியாக சுதாரித்துக் கொண்ட கனிமொழி, மேலே நிமிர்ந்து பாலத்தின் மேலே இருந்த பத்திரிகையாளர்களைப் பார்த்து, ''தலைவருக்கு சிறைச்சாலை பயம் இல்லை... ஆனால், நீதிபதி உத்தரவு போட்ட மருத்துவ வசதி எதுவும் சிறைச்சாலைக்குள் அவருக்குக் கிடைக்கப்போவது இல்லை. அவரைச் சிறையில் தள்ளினால் மறுபடி பார்க்க முடியுமா என்பதே சந்தேகம்தான்...'' என்று சொல்லிக் கதறினார்.

நீதி கேட்டு கலைஞர் அங்கேயே உண்ணாவிரதம் இருக்கப்போவதாகச் சொல்ல, ஒட்டு மொத்த போலீஸ் அதிகாரி​களும் அவரை பெருங்கூட்டமாகச் சூழ்ந்து கொண்டு மிரட்டும் குரலில் கைகளை ஆட்டி, ஏதோ சொன்னார்கள். கலைஞரும் பதிலுக்குக் கைகளை வீசி அவர்களுக்கு பதில் சொல்ல... இந்த வாக்குவாதம் சுமார் அரை மணி நேரம் நீண்டது. அதே சமயம் சிறையின் உள்ளே இருந்த ஒரு போலீஸ்காரர் ஃபைபர் சேர் ஒன்றை கலைஞர் அமர்​வதற்காக எடுத்து வர, பாய்ந்து சென்ற ஓர் அதிகாரி அந்தக் காவலரை அடிக்காத குறையாகப் பாய்ந்து, உள்ளே திருப்பி விரட்டினார்.

ஒருவழியாக காலை 7.50 மணிக்கு மத்திய சிறையின் கதவுகள் கலைஞரை உள்வாங்கிக் கொண்டபோது, பாலத்தின் உச்சியில் இருந்து ஒட்டுமொத்த ஜனமும் கதறித் தீர்த்தது.

வளாகம் எங்கும் கதறல் சத்தம்!

அதே சமயம் அங்கு வந்து சேர்ந்தார் ஸ்டாலின் மனைவி துர்கா. அவர் மகன் உதயநிதியும் மகள் செந்தாமரையும் இறங்​கினர். ''போட்டுட்டாங்களா... நிஜமாவே தலைவரை உள்ளே போட்டுட்டாங்களா?'' என்று நம்ப முடியாதவராக மறுபடி மறுபடி நிருபர்களிடம் கேட்டார் துர்கா.

''உங்கள் வீட்டுக்குள்ளும் போலீஸ் புகுந்ததாமே...?'' என்று நாம் கேட்க, ''ஆமாம். மேயரைத் தேடிக்கிட்டு வர்றதா சொன்னாங்க. அவர் வீட்டில் இல்லைனு சொன்னபோதும், எங்களைத் தள்ளிவிட்டுட்டு உள்ளே புகுந்து சூறையாடினாங்க. வாசல் கேட்டில் தொடங்கி, உள்ளே இருக்கிற அறைகள்வரை கைக்குக் கிடைத்ததை எல்லாம் உடைச்சுத் தள்ளினாங்க. பொம்பளைனுகூடப் பார்க்காம திரும்பத் திரும்பக் கையைப் பிடித்து இழுத்து. 'உன் புருஷன் எங்கேனு சொல்லு!?’னு என்னை சித்ரவதை பண்ணாங்க...'' என்று துர்கா சொல்ல, மகள் செந்தாமரை, ''இவ்வளவு பத்திரிகைகாரங்க நாட்டில் இருக்கீங்களே... இந்தக் கொடுமையை யாருமே தட்டிக் கேட்க மாட்டீங்களா?'' என்று தாயின் தோளில் சரிந்து விம்மினார்.

ஸ்டாலின் மகன் உதயநிதி நம்மிடம், ''எதுக்குக் கைது... வாரன்ட் இருக்கா? என்பது போன்ற எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை. 'உங்கப்பன் பயந்து ஓடிட்டானா?’னு எகத்தாளமா என்னைக் கேட்டாங்க. இப்ப எங்க அப்பா எங்கே இருக்கார்னே தெரியலை...'' என்று உதயநிதி குமுறி அழுதார்.

சென்னைக்கு உள்ளேயே ஸ்டாலின் மடக்கிக் கைது செய்யப்பட்டதாக செல்போனில் ஒரு தகவல் வந்து சேர்ந்தது. அனால், அது உண்மை இல்லை என்பது பின்னர் தெரிந்தது. காலை 8.30 மணிக்கு கோபாலபுரம் வீட்டுக்கு வந்த ஸ்டாலின் அங்கு வந்த இல.கணேசனுடன் சிறிது நேரம் பேசிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார். ''அப்பாவை அராஜகமாக அடித்து, இழுத்துக் கைது செய்து கொண்டு போயிருக்கிறார்கள். எங்கள் குடும்பத்துப் பெண்களிடம் போலீஸார் அத்துமீறி நடந்து கொண்டனர். எல்லா வெறியாட்டத்துக்கும் காரணமானவர்களைத் தண்டிக்காமல், எனது அரசியல் வாழ்க்கை ஓயாது. நானும் இன்னும் சிறிது நேரத்தில் நீதிபதி முன்பு  சரண்டர் ஆகப் போகிறேன்...'' எனப் படபடப்புடன்  நிருபர்களிடம் சொல்லி முடித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் கோசி.மணி, நேரு ஆகியோர் கைது... முன்னாள் அமைச்சர்கள் பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்துக் கைதாவார்கள் என்ற செய்தி சிறை வளாகத்துக்கு வெளியே இருந்த கலைஞர் மகள் செல்விக்கு வந்து சேர, ''அண்ணே... இந்த நாட்டுல என்னண்ணே நடக்குது? இப்படி தலைகால் தெரியாம ஆட்டம் போடுறாங்களே... அவங்க உருப்படுவாங்களா?'' என்று வீரபாண்டியாரை நோக்கிக் கதறலுடன் கேட்க, செல்விக்கு பதில் சொல்ல வந்த வீரபாண்டியாருக்கு வாய் கோணிக்கொண்டது. வெடித்துக் கிளம்பிய அழுகையை அடக்க முடியாமல் நடு ரோட்டில் அப்படியே உட்கார்ந்துவிட்டார் ஆறுமுகம்.

கலைஞர், மாறன், ஸ்டாலின் ஆகியோர் கைதைத் தொடர்ந்து, மாநிலம் எங்கும் பதற்றம் பரவிக் கொண்டு இருக்கிறது!

- நமது நிருபர்கள்

படங்கள் : கே.ராஜசேகரன்
 

நன்றி : ஜூனியர்விகடன்
 
கலைஞர் கைது - நக்கீரனின் கட்டுரை..!

நள்ளிவு கடந்து கொஞ்ச நேரம்தான் ஆகியிருந்தது. போலீஸ் வாகனங்கள் சரசரவென கோபாலபுரத்துக்குள் நுழைந்தன. ஒரு தீவிரவாதியை பிடிக்கப் போவதுபோல் கோபாலபுரம் பகுதியையே `சீல்’ பண்ணி விட்டு, கலைஞர் வீட்டுக்குள் தடதடவென நுழைந்தன பூட்ஸ் கால்கள். வீட்டிலிருந்தவர்கள் மிரண்டு போகிறார்கள். போலீசாரின் கண்கள், கலைஞர் எங்கே என ஊடுருவிப் பார்த்தன. அவர் அங்கு இல்லை என்பதை அறிந்த அடுத்த நிமிடமே, காவல்துறை வாகனங்கள், ஆலிவர் ரோடு இல்லம் நோக்கி சீறின.

இரவு 2.20 மணி.

ஏழு வாகனங்கள் வரிசையாக வந்து நிற்பதையும் அதிலிருந்து போலீஸ்காரர்கள் படபடவென இறங்குவதையும் பார்த்த கலைஞரின் கார் டிரைவர், ``என்ன?’’ என்று கேட்ட மாத்திரத்தில் அவரை அடித்து கீழே தள்ளிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தது போலீஸ். போனதும் அவர்கள் செய்த முதல் வேலை, கீழ்த்தளத்தில் இருந்த டெலிபோனை அடித்து நொறுக்கியதுதான்.

அடுத்து முதல் மாடிக்கு சென்ற போலீஸ் படை, பூட்டியிருந்த கதவை உடைத்துத் தள்ளி உள்ளே நுழைந்தது. மாடியிலிருந்த பெட்ரூம் கதவைத் திறந்து, 12 போலீசார் திமுதிமுவென நுழைந்தனர். தூக்கத்திலிருந்த கலைஞர், பதற்றத்துடன் விழித்தார். அவரைச் சுற்றிலும் காக்கிச் சட்டைகள். கலைஞர் சாதாரண கைலி அணிந்திருந்தார். அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள் இரவு நேர ஆடை உடுத்தியிருந்தார். படுக்கை அறைவரை ஊடுருவியிருக்கும் போலீசாரைக் கண்டதும், ``என்ன... என்ன...?’’ எனக் கொஞ்சம் பதற்றம் கலந்த குரலில் கலைஞர் கேட்டார்.

``உங்களைக் கைது செய்கிறோம்!’’

``வாரண்ட் இருக்கிறதா?’’

``அதெல்லாம் இல்லை... எழுந்திருங்க’’ என்று போலீஸ் அதிகாரி சொன்னதும் கலைஞர் முகத்தில் அதிர்ச்சி. உடனடியாகப் போனை எடுத்தார். அது `சாகடிக்கப்பட்டிருந்தது.’ உடனே செல்போனை எடுத்த கலைஞர், போலீசாரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு முரசொலி மாறனைத் தொடர்பு கொண்டார். தன்னைக் கைது செய்ய போலீஸ் வந்திருப்பது பற்றித் தெரிவித்தார். உடனடியாக புறப்படுமாறு போலீசார் பரபரத்தனர். கைலியை மாற்றிக் கொண்டு வேட்டி அணிந்து வருகிறேன் என்றார் கலைஞர். `கூடாது’ என்றார் போலீஸ் அதிகாரி. செருப்பு அணிந்து கொள்கிறேன் என்றார் கலைஞர். அதற்கும், `கூடாது’ என்ற பதில்தான் வந்தது. `பாத்ரூமிற்காவது போயிட்டு வரலாமா?’’ என்றார் கலைஞர். அதுவும் கூடாது என்று போலீசார் சொன்னதுதான் கெடுபிடியின் உச்சம். ``அங்கிருந்து நான் என்ன தப்பித்தா போய்விடுவேன்?’’ என்று கலைஞர் கேட்டார். ``கிளம்புங்க’’ என்று போலீசார் மீண்டும் அவரசப்படுத்தினர்.

அப்போது ஆலிவர் ரோடு இல்லத்திற்கு மாறன் வந்தார் ``கைது செய்வதாக சொல்கிறீர்களே? வாரண்ட் இருக்கிறதா?’’ என்று அவரும் கேட்டார். அப்போதும் போலீஸ் அதிகாரிகள், கலைஞரை கிளம்பச் சொல்லி வலுக்கட்டாயப்படுத்தினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ``ஏன்யா இப்படி தள்ளுறீங்க?’’ என கேட்டபடி, போலீஸ் அதிகாரிகளை முரசொலி மாறன் விலக்கியும் தள்ளியும் விட, ``அரெஸ்ட் ஹிம்’’ என்ற உத்தரவு ஓங்கி ஒலித்தது. 


அதை தொடர்ந்து, கலைஞரின் வயதைக்கூட பொருட்படுத்தாமல் அவரைப் பிடித்தும், இழுத்தும் அலேக்காகத் தூக்கி கைது நடவடிக்கையை மேற்கொண்டது காவல் துறை. கலைஞர் மீது போலீசின் கரம் பட்டதும் குடும்பத்தினர் பதறிப்போய் கதறி அழுதனர். அழுகுரல்களுக்கிடையே கலைஞரை கைது செய்து வாகனத்தில் ஏற்றியது போலீஸ்.

இரவு 3.15 மணி.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள சி.பி.சி.ஜ.டி. அலுவலகத்திற்கு கலைஞரைக் கொண்டு வந்தனர். அங்கே ஒரு தனி அறையில் அவரை உட்கார வைத்தனர். கலைஞரை படம் எடுக்கவும் அவரது கருத்தைக் கேட்கவும் அரசினர் தோட்ட வளாகத்தில் திரண்டிருந்த பத்திரிகையாளர்களை போலீசார் விரட்டியடித்தனர்.  அப்போது, கலைஞரைப் பார்ப்பதற்காக மத்திய அமைச்சர்கள் மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் காரில் வந்தனர். அவர்களது காரை தடுப்புக் கம்பிகள் போட்டு மறித்தனர்.

காரிலிருந்து இறங்கிய டி.ஆர். பாலு, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈ.டுபட்டார். ``நான் மத்திய அமைச்சர். உள்ளே செல்ல என்னை அனுமதித்தாக வேண்டும். இது என்ன எமெர்ஜென்சி காலம் என்றா நினைத்துக் கொண்டீர்கள்?’’ என சத்தம் போட்டார் பாலு. அவரையும் போலீசார் கீழே தள்ளினர். `இனி பொறுப்பதில்லை’ என்பது போல் மத்திய அமைச்சர் மாறனின் கார், தடுப்புக் கம்பிகளை உடைத்து நொறுக்கிவிட்டு முன்னேறியது.

சி.பி.சி.ஜ.டி அலுவலகத்தில் சுமார் 1 மணிநேரம் கலைஞர் வைக்கப்பட்டிருந்தார். 4.10 மணியளவில் கெடுபிடியைக் கொஞ்சம் தளர்த்திய போலீசார், பத்திரிகையாளர்கள் உள்ளே செல்ல அனுமதித்தனர். ஆனால், பத்திரிகையாளர்கள் உள்ளே நுழைந்தபோது, போலீஸ் வாகனங்கள் மூன்று சீறிப் பறந்தன. அதில்தான் கலைஞர் அழைத்துச் செல்லப்படுகிறார் என்பதை அறிந்து கொண்ட பத்திரிகையாளர்கள் பின் தொடர்ந்தனர். ஒரு காரில் கலைஞர் ஏற்றப்பட்டிருந்தார். அவருக்கு பக்கத்தில் மாறனும் பரிதி இளம்வழுதியும் உட்கார்ந்திருந்தனர்.

மத்திய சென்னை ஜாயிண்ட் கமிஷனர் ஜார்ஜ் தலைமையில், எஸ்.பி.க்கள் கிறிஸ்டோபர் நெல்சன், சாரங்கன் ஆகியோர் அடங்கிய வாகன அணி வரிசை தொடர்ந்து அந்த வாகனங்களைப் பின்தொடர்ந்து, ஒரு டாடா சஃபாரியில் கலைஞர் குடும்பத்தினர் சென்றனர். தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், மு.க. தமிழரசு, கனிமொழி, செல்வி, மாறனின் மனைவி, மகள் ஆகியோர் அந்த சியாராவில் இருந்தனர். இருளின் அமைதியை கிழித்துக்கொண்டு போலீஸ் வாகனங்கள் பறந்தன.

கீழ்பாக்கம் டவர் பிளாக் குடியிருப்பில் உள்ள நீதிபதி அசோக்குமார் வீட்டில்தான் கலைஞர் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார் எனத் தெரிந்ததால் பத்திரிகையாளர்கள் அந்தக் குடியிருப்பின் முன் திரண்டிருந்தனர். அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸ் படை பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தது. சாலையில் பத்திரிகையாளர்கள் காத்திருந்த நிலையில், கலைஞரை ஏற்றி வந்த காரும் அதைத் தொடர்ந்து வந்த வாகனங்களும் நீதிபதி வீட்டுக்கு செல்லாமல் கெல்லீஸ் நோக்கி சென்றது. போலீசாரின் திசைதிருப்பும் நடவடிக்கையை அறிந்த பத்திரிகையாளர்கள் உடனடியாக அதனைப் பின் தொடர்ந்தனர்.

வேப்பேரி காவல்நிலையத்திற்குத்தான் கலைஞரைக் கொண்டு செல்கிறார்கள் என்று கணித்த பத்திரிகையாளர்களின் வாகனங்களும் சீறின. வேப்பேரி காவல்நிலையத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அங்குள்ள பாலத்தின் கீழ்ப் பகுதி வழியாகத்தான் செல்லவேண்டும். ஆனால் போலீஸ் வாகனங்கள், பத்திரிகையாளர்களைத் தவிர்ப்பதற்காக பாலத்தின் மேலே ஏறி ராங் ரூட்டில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றது.
கலைஞரை அழைத்து வந்த காரின் கதவு திறக்கப்பட்டது. முதலில் பார்வைக்குத் தென்பட்டவர் மாறன்தான். அவரது மூக்குக் கண்ணாடி உடைந்திருந்தது. வேட்டி பாதிக்குமேல் கிழிந்து போயிருந்தது. பக்கத்தில் கலைஞர் உட்கார்ந்திருந்தார். அவரையடுத்து பரிதி உட்கார்ந்திருந்தார்.

அப்போது, கலைஞர் குடும்பத்தினரின் கார், ஸ்டேஷனுக்குள் வந்தது. ``மாஜிஸ்திரேட் வீட்டுக்கு அழைத்துப் போவதா சொல்லிட்டு ஏன் இங்கே அழைச்சிட்டு வந்தீங்க?’’ எனக் கலைஞர் குடும்பத்து பெண்கள் போலீசிடம் கேட்டனர். கனிமொழி இது பற்றி போலீசாரிடம் வாதிட, ``விமன் போலீஸ்....’’ எனக் குரல் கொடுத்த ஜாயிண்ட் கமிஷனர் ஜார்ஜ், ``அரெஸ்ட் தெம்...’’ என உத்தரவிட்டார். உடனே பெண் காவலர்கள் கனிமொழியை நெருங்க, அவரது கணவர் அரவிந்தன் குறுக்கிட்டு, `ஏன் கைது செய்கிறீர்கள்?’’ என்றார். போலீசார் தயங்கி நின்றனர்.

அப்போது எஸ்.பி. கிறிஸ்டோபர் நெல்சன், முரசொலி மாறனிடம் சென்று ``உங்களையும் கைது செய்கிறோம். அரெஸ்ட் ஆயிடுங்க’’ என்றதும் ``வாரண்ட் இருக்கா?’’ எனக் கேட்ட மாறன், ``மத்திய அமைச்சர் எனத் தெரிந்திருந்தும் எதற்கு என்னை தாக்கினீர்கள்?’’ என்றபடி, கிழிந்து தொங்கிய தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஒரு லிஸ்டை எடுத்தார். ஆபத்தான கட்டத்திற்கு ஆளானால் தனக்கு என்னென்ன ட்ரீட்மெண்ட் தரப்படவேண்டும் என்பதை விளக்கும் சீட்டு அது: அப்பல்லோ மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்தது முதல் அந்த லிஸ்டை பாக்கெட்டிலேயே வைத்திருக்க வேண்டும் என்பது டாக்டர்களின் அட்வைஸ்.

எஸ்.பி.யோ அந்த லிஸ்டை பார்க்கக்கூட ஆர்வம் காட்டாமல், மாறனைத் தூக்கிச் செல்ல உத்தரவிட்டார். காரிலிருந்து மாறனை பிடித்து இழுத்த போலீசார் அவரைக் குண்டுகட்டாக உயரே தூக்கி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பதறிப்போன பரிதி, போலீசாருடன் மல்லுக்கட்டியபடி மாறனுடன் சென்றார். மாறன் ஏறத்தாழ மயக்க நிலைக்குச் சென்றுவிட `அய்யோ.. அம்மா...’ என்று அவரது குடும்பத்தினரின் அழுகுரல்கள் காவல்நிலையம் முழுக்க எதிரொலித்தது. மாறனை ஒரு பெஞ்ச்சில் படுக்க வைத்து ஆசுவாசப்படுத்தினார் பரிதி.

மாறனையும் கலைஞர் குடும்பத்தினரையும் கலைஞருடன் வராதபடி பிரிக்க வேண்டும் என்பதுதான் போலீசின் திட்டம். அது நடந்துவிட்டதால் கலைஞரை மாஜிஸ்திரேட்டின் வீட்டிற்கு கொண்டு சென்றனர். போகும்போது, கலைஞர் குடும்பத்தினர் வந்த காரின் சாவியை பூட்டி எடுத்துச் சென்றுவிட்டது போலீஸ்.

அதிகாலை 5.10 மணி.

டவர் பிளாக்கில் உள்ள மாஜிஸ்திரேட் அசோக்குமாரின் வீட்டிற்கு கலைஞர் அழைத்துச் செல்லப்பட்டார். முதல் தளத்தில் மாஜிஸ்திரேட்டின் வீடு இருந்ததால் லிஃப்ட் பயன்படுத்தப்பட்டது. வீட்டில் தயாராக இருந்தார் அசோக்குமார். அவருடன் முன்னாள் அட்வகேட் ஜெனரல் வெங்கடபதி, முன்னாள் அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சி.பி.சி.ஜ.டி. அதிகாரி ஆகியோர் காத்திருந்தனர்.

அவர்களுடன் அங்கு இருந்த மற்றொரு பிரமுகர், கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டிருந்த முன்னாள் தலைமைச் செயலாளர் கே.ஏ. நம்பியார். மாஜிஸ்திரேட் வீட்டுக்குள் கலைஞர் வந்ததும் முன்னாள் அட்வகேட் ஜெனரல் எழுந்து இடம் தந்தார். இருக்கையில் உட்கார்ந்த கலைஞர், நம்பியாரைப் பார்த்து கொஞ்சம் அசந்து போனார். ``உங்களை எப்போது அரெஸ்ட் செய்தார்கள்?’’ என்று கலைஞர் கேட்க, ``2 மணிக்கு’’ என பதில் வந்தது நம்பியாரிடமிருந்து.

``சென்னை நகருக்கு பாலங்கள் கட்டியதில் 12 கோடி ஊழல் செய்தது தொடர்பாக இவர்களைக் கைது செய்தோம்’’ என மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்த சி.பி.சி.ஜ.டி. அதிகாரி, அதற்கான முதல் தகவல் அறிக்கையையும் ரிமாண்ட் ரிப்போர்டையும் கொடுத்தார். ``டாக்குமெண்ட் எவிடென்ஸ் இருக்கா?’’ என மாஜிஸ்திரேட் கேட்க, ``இருக்கு... அதை இங்கே எடுத்து வரக் கூடிய அளவில் இல்லை. பெரிய பெரிய கட்டுகளாக இருக்கின்றன’’ என்றார்.

``எஃப்.ஜ.ஆர். எப்ப போட்டீங்க?’’ என மறுபடி கேள்வி எழுப்பினார் மாஜிஸ்திரேட் அசோக்குமார் ``மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலு நேற்றுதான்(ஜூன்,29) புகார் கொடுத்தார். அதன் பின்தான் எஃப்.ஜ.ஆர். போட்டோம்..’’ இது அதிகாரி.

கேள்விகள் தொடர்ந்தன.

``12 கோடிக்கு ஊழலா? எந்த அளவுக்கு புலனாய்வு செய்துள்ளீர்கள்?’’

``ஒவ்வொரு பொருள் வாங்கும்போதும் ஒவ்வொரு கட்டத்திலும் விலையை ஏற்றி ஊழல் செய்யப்பட்டுள்ளது.’’

``வேறு யார், யார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது?’’

``ஏ-1 மு.க. ஸ்டாலின், அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி, கோ.சி. மணி, நம்பியார், பொன்முடி, ஏ.கே. ஜெகதீசன், ராஜாசங்கர், ஆர்.எஸ். ஸ்ரீதர்’’ - என்று பட்டியலை சொன்னார் அதிகாரி.

அதன்பின், நம்பியார் பக்கம் திரும்பிய மாஜிஸ்திரேட், ``உங்களை அரெஸ்ட் செய்யும்போது முறையாக நடந்து கொண்டார்களா? உங்கள் மீதான குற்றச்சாட்டு பற்றி என்ன சொல்கிறீர்கள்?’’ எனக் கேட்டார்.

``பாலம் கட்டுவது என்பது தலைமைச் செயலாளரின் கீழ் வராது. அது சம்பந்தமான ஃபைலை நான் பார்க்கவில்லை. இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. 5 பக்கங்களில் கடைசி 2 பாராவில் மட்டும்தான் என் பெயர் எழுதப்பட்டுள்ளது என் பெட்ரூமுக்கு வந்து அரெஸ்ட் செய்தார்கள். நான் மத்திய அரசுப் பணியில் பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றியவன். தப்பித்து ஒடக் கூடியவனல்ல. நான் சமீபத்தில் முதுகுப் பகுதியில் ஆபரேஷன் செய்து கொண்டேன். என்னை சிறைக்கு அனுப்பினால் சிகிச்சையளிக்க ஒரு நர்ஸ் தேவை’’ என்றார் நம்பியார்.

மாஜிஸ்திரேட்டின் கண்கள் கலைஞர் பக்கம் திரும்பின. தன்னை போலீசார் கைது செய்த விதம் குறித்து விளக்கத் தொடங்கினார் கலைஞர். ``நான் எழுத்து வேலைகளை முடித்துவிட்டு, புத்தகங்கள் படித்துவிட்டு இரவு 12 மணிக்கு உறங்கப் போனேன். ஆழ்ந்த உறக்கம். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. நானும் என் மனைவியும் அறையில் இருந்தோம். அந்த இடத்திற்கு வந்த போலீசார் என்னை குண்டு கட்டாகத் தூக்கி இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள். செருப்பு அணிந்து கொள்ளவோ வேட்டி மாற்றிக்கொள்ளவோ கூட போலீசார் என்னை அனுமதிக்கவில்லை.’’ என்று கலைஞர் சொன்னபோது, அவரது சட்டை கிழிக்கப்பட்டிருப்பதை மாஜிஸ்திரேட் பார்த்தார்.

கலைஞரின் வழக்கறிஞர்கள் ராஜாவும், சண்முகசுந்தரமும் நீதிபதியிடம் சில விளக்கங்களை அளித்தனர். ``புலனாய்வே தொடங்கப்படாத ஒரு வழக்கிற்காக நள்ளிரவில் கைது செய்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவரது வயதையும் உடல்நிலையையும் கருத உடனடியாக அவரை பெயிலில் விடவேண்டும்’’ என்றனர். இதற்கு முன்னுதாரணமாக உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றையும் காட்டினார் சண்முகசுந்தரம்.

மாஜிஸ்திரேட்டிடம் கலைஞர் விளக்கிக் கொண்டிருந்தபோது, வேப்பேரி காவல் நிலையத்திலிருந்து ஒரு வாடகை ஆட்டோவில் ஏறி, டவர் பிளாக்கிற்கு வந்தார் மாறன். அவரது உடல் ரொம்பவும் தளர்ந்திருந்தது. மாஜிஸ்திரேட் வீட்டிற்குள் மாறனும் கலைஞர் குடும்பத்தினரும் அனுமதிக்கப்பட்டனர்.

சுமார் இரண்டு மணி நேர இடைவெளிக்குப்பின் குடும்பத்தினரைப் பார்த்த கலைஞர் நெகிழ்ந்து போனார். ``என்னை 2 நாள் ஜெயிலில் வைக்கணும்ங்கிறதுக்காகத் தானே சனிக்கிழமையில் கைது பண்ணியிருக்காங்க. என்ன பெரிய ஜெயில்? அந்த சசிகலாவே சர்வசாதாரணமா இருந்துட்டு வருது’’ என்று அந்த சூழ்நிலையிலும் குடும்பத்தினருக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொன்னார்.

மாஜிஸ்திரேட்டிடம் மாறன், ``பெரியார், அண்ணா போன்ற பெரிய தலைவர்களெல்லாம் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் முன் நிறுத்தப்பட்டு, அங்கேயே பெயில் பெற்ற வரலாறு உண்டு’’ என்று தெரிவித்ததுடன், தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றியும் விளக்கினார். அத்துடன், இதை நீங்கள் அவசியம் குறித்துக் கொள்ள வேண்டும் என்று சொன்ன மாறன், “One police officer. Mr. George. அவர் பெயரை நீங்க ரிமாண்ட் ரிப்போர்ட்டில் நோட் பண்ணனும். you arrest that bloddy fellow என்று என்னைப் பார்த்துச் சொன்னார். நான் இதை நாடாளுமன்றத்தில் உரிமை பிரச்சினையாக கொண்டு வருவேன்” என்றார். மாஜிஸ்திரேட்டும் குறித்துக் கொண்டார்.

அதன்பின், ``இது ஹாலிடே கோர்ட். இங்கே பெயில் தரமுடியாது. ரெகுலர் கோர்ட்டில்தான் பெயில் தரமுடியும்’’ என்றார். அப்போது, கலைஞர் தன் உடல்நலம் குறித்து விளக்கினார். ``சமீபகாலமாக சட்டமன்றத்திலும் பொது இடங்களிலும் நான் உட்கார்ந்துதான் பேசுகிறேன். ஒரு நிமிடத்திற்கு மேல் என்னால் நிற்க முடியாது’’ என்றார். அவரை சிறைக்கு அனுப்புவதாக இருந்தால் உரிய மருத்துவர்கள் வேண்டும் என்று வலியுறுத்தினார் டாக்டராக உள்ள மாறனின் மகள். முரசொலி மாறன், “சசிகலாவே மாஜிஸ்திரேட் வீட்டிலிருந்து நேராக அப்பல்லோவுக்குப் போகுது. கலைஞருக்கும் அதுபோல் சிகிச்சைக்கு ஏற்பாடு பண்ணுங்க..” என்றார்.

``என்னை ரெகுலராக செக் செய்யும் டாக்டர் கோபாலையே அனுப்புங்க’’ என்றார் கலைஞர். “அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். டாக்டர் கோபாலே அங்கு வந்து சிகிச்சை தரட்டும்” என்றார் மாஜிஸ்திரேட் அசோக்குமார். கலைஞர் இதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், மாறனின் மகள், “பொது மருத்துவமனையில் தண்ணீர் வசதியே இல்லை. அங்கு எப்படி சிகிச்சை அளிக்க முடியும்?’’ எனக் கேட்டார். “அரசு மருத்துவமனைக்கு கலைஞரைக் கொண்டு போனால் அவரைக் கொன்னு போட்டுடுவாங்க’’ என் பதற்றத்துடன் தெரிவித்தனர் குடும்பத்தினர்.

அதன் பின் பேசிய மாஜிஸ்திரேட் அசோக்குமார், கலைஞரிடம், “நீங்கள் முன்னாள் முதல்வர், தற்போதைய எம்.எல்.ஏ., என்ற அடிப்படையில் உங்களுக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க உத்தரவிடுகிறேன்’’ என்றார். மருத்துவமனைக்கு அனுப்பப்படலாம் அல்லது பெயில் கிடைக்கும் என சிறிது நம்பிக்கை மட்டுமே கொண்டிருந்த கலைஞருக்கு, மாஜிஸ்திரேட்டின் இந்த முடிவு பெரிய அதிர்வை ஏற்படுத்தவில்லை.

“பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடல்நிலையை பரிசோதித்து, டாக்டர்கள் சம்மதித்த பின்னரே சிறைக்கு கொண்டு செல்லவேண்டும். இவரைக் கைது செய்யும்போது போலீசார் நடந்து கொண்ட முறை கடுமையாக இருந்திருக்கிறது. இனி எக்காரணம் கொண்டும் இவர் மீது கை வைக்கக் கூடாது’’ என ரிமாண்ட் மெமோவில் மாஜிஸ்திரேட் குறிப்பிட்டார். ஜூலை 10-ம் தேதி வரை ரிமாண்ட் செய்வதாக உத்தரவிட்டார். ``நான் இதுதான் செய்ய முடியும். இதற்கு மேல் ஏதாவது செய்தால் அதற்கு ஆயிரம் உள்நோக்கங்கள் கற்பிப்பார்கள்’’ என்று கலைஞரிடம் தனிப்பட்ட முறையில் மாஜிஸ்திரேட் தெரிவித்தார்.

அங்கிருந்து புறப்படும்போது நம்பியாரைப் பார்த்த கலைஞர், `நீங்க ரிடையரானதிலிருந்து என்னை பார்க்கவே இல்லை. இப்ப பார்க்க வச்சிட்டாங்க பார்த்தீங்களா?’ என்று சொல்ல, “சி.எம்.முக்கு நிறைய வேலை இருக்கும்னுதான் நான் வரலை. தப்பா நினைக்க வேணாம்.’’ என்று நம்பியார் தெரிவித்தார். “நான் காரணமாகத்தான் சொன்னேன்’’ என்றார் கலைஞர். நம்பியார் தலைமைச் செயலாளராக இருந்தபோதுதான் ஜெ. மீது வழக்குகள் போடப்பட்டன. இதனால்தான் பழிக்கு பழி வாங்கும் லிஸ்டில் நம்பியாரும் சேர்க்கப்பட்டார்.

சிறைக்குச் செல்வதற்கு கலைஞர் தயாரான நிலையில், நமது இணையாசிரியரிடம், “எங்க ஆட்சியின்போது போலீஸ் அதிகாரிகள் பற்றி நீங்க மோசமா எழுதும்போது, ஏன் இப்படி தப்பா எழுதுறீங்கன்னு கேட்டேன். இப்பதான் போலீஸ் அதிகாரிகள் எப்படிப்பட்டவங்கன்னு புரியுது!’’ என்று கண்கலங்கச் சொன்னார். ``நேர்மைக்கு இதுதான் பரிசு’’ என்று வருத்தம் தொணிக்கும் குரலில் சொன்னார் நம்பியார்.

காலை 6.20 மணி.

கலைஞரை ஒரு காரில் அழைத்துச் சென்றனர் போலீசார். அவருடன் டாக்டர் கோபாலும் மகள் கனிமொழியும் சென்றனர். பொது மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, மருத்துவரின் ஆலோசனைப்படியே கலைஞரை சிறைக்கு கொண்டு செல்லவேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்ததால், கலைஞரை எதிர்பார்த்து மருத்துவமனை வளாகத்தில் பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். ஆனால், போலீசார் நேராக சென்னை மத்திய சிறைச்சாலைக்கு கலைஞரின் காரை கொண்டு சென்றனர்.

நீதிபதியின் உத்தரவை மதிக்காத போலீசாரின் போக்கைக் கண்டித்து சிறைச்சாலை வாசலிலேயே தரையில் அமர்ந்து தனது எதிர்ப்பை தெரிவித்தார் கலைஞர். சிறைச்சாலையை ஒட்டியுள்ள பாலத்திலிருந்து இதனைப் பார்த்த கட்சிக்காரர்களும் பொதுமக்களும், `அடப்பாவிகளா?’ என குரல் எழுப்பியது நெஞ்சை குலுக்கியது. அமைதியாக அரைமணி நேரம் தன் எதிர்ப்பை வெளிப்படுத்திய கலைஞர், காலை 7 மணியளவில் சிறைச்சாலைக்குள் நுழைந்தார். அடக்குமுறைகளைத் தாங்கிய ஒரு கிழட்டுச் சிங்கம் கம்பீரமாக கூண்டுக்குள் நுழைவது போல் இருந்தது அந்த காட்சி.

நன்றி : நக்கீரன்

 
ஸ்டாலின் வீட்டில் போலீஸ்

30-ந் தேதி, இரவு 1.10 மணி! சென்னை மேயர் மு.க. ஸ்டாலினை தேடி, அவரது வேளச்சேரி வீட்டுக்கு விரைந்தார்கள் ஒரு பெண் போலீஸ் உட்பட 4 போலீஸ்காரர்கள்! ஏரியவே வெகு நிசப்தமாக இருந்தது! ஜீப்பை விட்டு இறங்கிய போலீஸ்காரர்கள், ‘கேட்’ அருகே இருந்த வாட்ச்மேனிடம், "ஸ்டாலின் இருக்காரா?" என்றனர். "அய்யா, வெளியூர் போயிருக்கிறார்?" என்று வாட்ச்மேன் படபடப்புடன் பேச, "அப்படின்னா... ‘கேட்’டை திறந்து விடுங்க; நாங்க செக் பண்ணிக்கிறோம்" என்ற போலீஸ்காரர்கள் வலுக்கட்டாயமாக வாட்ச்மேனின் தோளில் கை வைத்து இழுக்க... "லேடிஸ் மட்டும்தான் உள்ளே இருக்காங்க; என்னால் எதுவும் செய்ய முடியாதுங்க அய்யா!" என்று கெஞ்சினார் வாட்ச்மேன்!  சரி! காலையில நாங்க பார்த்துக்கிறோம்; இந்த லட்டரை வீட்டுல கொடுத்திடுங்க"" என்று மிரட்டலுடன் போலீஸ் பேச... பிடிவாதமாக வாங்க மறுத்துவிட்டார் வாட்ச்மேன்.

உடனே அங்கிருந்து விலகிய போலீஸ்காரர்கள் அடுத்த 15 நிமிடத்தில், ஒரு பெரும் போலீஸ் படையுடன் மீண்டும் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டனர்! இந்த முறை வாட்ச்மேனிடம் எதையும் பேசாத போலீஸ் படை, ‘கேட்’ ஏறி திடுதிடுவென உள்ளே குதித்தது. சிலர் ‘கேட்’டை திறக்க முற்பட்டு... பிறகு வாட்ச்மேனிடம் சாவியை பிடுங்கி கேட்டை திறந்தனர்.

உள்ளே நுழைந்து மெயின் கதவை உடைக்க முயற்சி செய்தும், படபடவென தட்டியும் ஆர்ப்பாட்டம் செய்ய... கதவை திறந்து வெளியே வந்தார் ஸ்டாலின் மனைவி துர்கா! கதவு திறந்ததும் ஸ்டாலின் இருக்காரா?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த போலீஸ்காரர்கள் அங்கும் இங்கும் அறைகளுக்குள் ஓடினார்கள். 

அவர் வெளியூர் போயிருக்கார்; அவர் இல்லாத நேரத்தில் இப்படி அர்த்த ராத்திரியில் ரகளை செய்யறது உங்களுக்கே நல்லாயிருக்க?" என்று ஸ்டாலின் மனைவி சத்தம் போட, போலீஸ்காரங்ககிட்டே கை நீட்டி பேசறீங்களா? உள்ளே வெச்சுக்கிட்டு நாடகம் ஆடாதீங்க! என்று சொல்லிய போலீஸ்காரர்கள், சிலர் அவரது கையைப் பிடித்து இழுத்து தள்ளினார்கள். இந்த களேபரத்தை பார்த்துக்கொண்டிருந்த ஸ்டாலின் மகள், போலீஸ்காரர்களை தடுக்க முயன்ற போது அவரையும் பிடித்து கீழே தள்ளினார்கள் பெண் போலீஸார்!

நேரம் கிடைக்கும்போது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெங்களூர் சென்று வருவது ஸ்டாலின் வழக்கமாம். இம்முறையும் பெங்களூர் விரைந்து கொண்டிருந்த ஸ்டாலினுக்கு கலைஞர் கைது செய்யப்பட்டிருப்பதும், நீங்கள் தேடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவலும் சொல்லப்பட... உடனடியாக சென்னை திரும்பினார். போலீஸ்காரர்கள் தனது வீட்டில் நடந்து கொண்ட அட்டூழியத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மனைவி துர்காவுக்கும், மகளுக்கும் ஆறுதல் கூறிவிட்டு கட்சிக்காரர்களுடன் கிளம்பிய, ஸ்டாலின் கோபாலபுரம் வீட்டு விரைந்தார்.

தனது இளைஞரணியினரை அமைதியாக இருக்க அடிக்கடி கட்சிகாரர்களை தொடர்பு கொண்டு பேசிய ஸ்டாலின், போலீஸிடம் சிக்கினால் தனது உயிருக்கு உத்திரவாதம் இல்லை என கருதியவர், கீழ்பாக்கம், டெய்லர்ஸ் சாலையில் இருந்த மாவட்ட செசன்ஸ் நீதிபதி அசோக்குமாரிடம் சரணடைய விரைவாக வந்தார். போலீஸ் படையும் ஏராளமாக குவிக்கப்பட்டிருந்தது.

நீதிபதியை சந்திப்பதற்கு முன்பு, நம்மிடம் பேசிய ஸ்டாலின், "அந்த அம்மா ஆட்சியில் நடந்த ஊழல்களை நாங்க ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறோம். அதுக்கு பழிவாங்கவே எங்க மீது வழக்கு, கைதுன்னு போடுறாங்க! இதை நாங்க சட்டப்படி, தைர்யமா சந்திப்போம்! மூட்டு, கால் வலி, இடுப்பு வலின்னு போய் படுத்துக்க மாட்டோம்!" என்றவரிடம்  "உங்களை சி.பி.சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனரா?" என்றபோது  "யாரும் கைது செய்யவில்லை. நானே சரணடைய வந்துள்ளேன். ஏற்கனவே, என் மீது வருமானத்துக்கு மீறிய சொத்து சேர்த்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டபோது, நானே முன் வந்து கோர்ட்டில் ஆஜராகி அதை சந்தித்தேன். என் மடியில் கனமில்லை; அதனால் கோர்ட்டில் ஆஜரானேன். இப்போது என்னை யாரும் கைது செய்யவில்லை. நானே சரணடைய வந்திருக்கிறேன்!" என்று கூறிவிட்டு நீதிபதியை சந்திக்க மாடிபடி ஏறினார் பதட்டத்துடன்.

நீதிபதி அசோக்குமார் முன்பு ஆஜரான ஸ்டாலின் போலீஸ்காரர்கள் தனது வீட்டில் நடந்துகொண்ட அநாகரிகமான நடவடிக்கையை கூறிவிட்டு, "என்னை கைது செய்ய போலீசார் தேடி வருகிறார்கள் அதனால் நானே சரணடைய வந்திருக்கிறேன்" என்றதை கேட்டுக் கொண்ட நீதிபதி, ஸ்டாலின் வக்கீல் ராஜஇளங்கோ, நீட்டிய சரண்டர் பெட்டிஷனை வாங்கிக் கொண்டார்.

"வாரண்ட் நோட்டீஸ் கொண்டு வந்திருக்கீங்களா?" என்று நீதிபதி கேட்க, "எங்களிடம் இல்லை; சி.பி.சி.ஐ.டி.யினரிடம்தான் இருக்கிறது. அரைமணி நேரத்தில் கொண்டு வந்து விடுகிறோம்!" என்றவர், சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு ஸ்டாலின் இங்கு இருப்பதாக தகவல் அனுப்பினார்.

அதன் பின்பு நீதிபதியிடம் பேசிய வக்கீல் ராஜ இளங்கோ, "சென்னை மத்திய சிறையில் அடைக்க நீங்கள் தயவு செய்து உத்திரவிட வேண்டும்!" என்று கேட்க, அதற்கு தனக்கு ‘பவர்’ இல்லை என்று கூறிய அசோக்குமார், "இது பற்றி ஜெயில் அத்தாரிட்டியிடம்தான் நீங்கள் கோரிக்கை வைக்க வேண்டும்" என்றார்.

"சென்னையிலே இருக்க வேண்டி நீங்கள் சிபாரிசு செய்யுங்கள்" என்று மீண்டும் ராஜ இளங்கோ மன்றாடியதும், "எவ்வித ரீசனும் இல்லாமல் எதுவும் என்னால் செய்ய இயலாது" என மறுத்தபோது... சென்னை சென்ட்ரல் ஜெயிலில் இருக்க வேண்டிய அவசியம் காரணத்தை தனி கோரிக்கையாக எழுதி கொடுத்தார் வழக்கறிஞர்.

இந்த மனுவில், சென்னை மேயராகவும், ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும், தி.மு.க.வின் இளைஞர் அணியின் தலைவராகவும் ஸ்டாலின் இருக்கிறார். சென்னையை தவிர வேறு சிறைகளில் தனக்கு பாதுகாப்பு கிடையாது என்றும், சென்னை எம்.எல்.ஏ.வாக இருப்பதாலும் எனது உறவினர்கள் பலரும் சென்னையிலேயே இருப்பதாலும் சென்னை மத்திய சிறையில் இருக்கவே ஸ்டாலின் நினைக்கிறார். அதனால், அவரின் உயிர் பாதுகாப்பு கருதி சென்னையில் இருக்க உத்திரவிட வேண்டுகிறோம் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் ஏற்றுக் கொண்டு குறிப்பு எழுதிய அசோக்குமார் ஸ்டாலினை 15 நாள் ரிமாண்டில் வைக்க உத்திரவிட்டார். சி.பி.சி.ஐ.டி. போலீஸாரிடமிருந்து ஒன்றரை மணி நேரமாக வாரண்ட் ஆர்டர் வராததால் நீதிபதி வீட்டிலேயே அமர்ந்திருந்தார் ஸ்டாலின்.

அப்போது வக்கீல் இளங்கோ, பெயில் பெட்டிஷனை போட முயற்சித்தபோது, "சனி, ஞாயிறு என்பதால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. திங்கள்கிழமை அப்ளை செய்யுங்கள். இந்த விடுமுறை நாளில் பொறுமையாக அவர் மீது கூறப்பட்டுள்ள வழக்கை படித்து தெரிந்து கொண்டு பெயில் மூவ் பண்ணுங்களேன்; இப்போ ஏன் அவசரம்?" என்றார் நீதிபதி அசோக்குமார்.

இதற்கிடையே கிடைத்த சின்ன இடைவெளியில் ஸ்டாலினிடம், "உங்க மீது என்ன வழக்கு என்பது தெரியுமா?" என்று நாம் கேட்டபோது, "தெரியாது! எந்த வழக்காக இருந்தாலும் சட்டப்படி சந்திப்பேன்" என்று கூறிவிட்டு மௌனமாகிவிட்டார் ஸ்டாலின்.

சென்னை நகரில் கட்டப்பட்ட 11 பாலங்களில் ஊழல் நடந்திருப்பதாக ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த ஒரு வழக்கிற்காக 120(இ) (கூட்டுசதி), 420 (மோசடி), 13(1); (2) (லஞ்ச ஒழிப்பு), 409 (அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது) 167 (பொது ஊழியராக இருந்து கொண்டு குற்றம் செய்வது) என்கிற ஆறு செக்ஷன்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது!

10.50-க்கு வந்த சி.பி.சி.ஐ.டி. போலீஸார் ஸ்டாலினை கைது செய்து கீழே கொண்டு வந்தனர். "உங்க காரில் வருகிறீர்களா? எங்க வேனில் ஏறிக் கொள்கிறீர்களா?"" என்று போலீஸார் கேட்க, "போலீஸ் வேனிலே வருகிறேன்" என்று ஸ்டாலின் ஏறிக் கொள்ள திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் ஜெ.யின் அராஜக ஆட்சிக்கு எதிராக கோஷங்கள் போட்டனர்.  வேன், மத்திய சிறைச்சாலை நோக்கி விரைந்தது!

ஸ்டாலினை மதுரை சிறைச்சாலையில் அடையுங்கள் என்று சிறை அதிகாரிக்கு வந்த உத்தரவின் பேரில் ஸ்டாலின் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

- நன்றி : ஜூனியர்விகடன்

 
ராஜாத்தி அம்மாளின் தாயார் திடீர் மரணம்..!

ஆலிவர் சாலையில் சற்று உள்வாங்கி இருக்கிறது அந்த வீடு. அடுத்தடுத்த இரண்டு அதிகாலைகளில் இறுக்கமான இரு சம்பவங்களை அந்த வீடு எதிர்கொண்டதற்கான அத்தனை அடை​யாளங்களும் அங்கே இருப்பவர்கள் முகங்களில் பிரதி பலிக்கின்றன.

சனிக்கிழமை அதிகாலை கலைஞர் கைது செய்யப்பட, அந்த அதிர்ச்சி தாள முடியாமல் கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் தாய் (மாமியார்) சிவபாக்கியத்தம்மாள் ஞாயிறன்று இறந்துபோனார். 

''நான் நம்பியிருந்தவங்க எல்லாம் இப்ப என் பக்கத்தில் இல்லையே...'' என்று தன் தாயார் உடலுக்கு அருகே உட்கார்ந்து ஈனமான குரலில் முனங்கிக்கொண்டு இருந்தார் ராஜாத்தி அம்மாள்.

அருகிலேயே கண்ணீர் சிந்தியபடி அவர் மகள் கனிமொழி. வீட்டுக்கு வெளியே உணர்ச்சிப் பிழம்புகளாக தி.மு.க. தொண்டர்கள். பார்வையாளர்களின் வருகை அந்த வீட்டின் இறுக்கத்தை சற்றே தளர்த்த, வந்தவர்களிடம் ஒருசில வார்த்தைகள் பேசுகிறார் கனிமொழி.

நமது அனுதாபத்தை வெளிப்படுத்தி​னோம். ஆற்ற மாட்டாமல் பேச ஆரம்​பித்தார் கனிமொழி...

''அன்னிக்கு இரவில் கெடுபிடியா அப்பாவை அரெஸ்ட் பண்ணிட்டுப் போனதை, பாட்டி பார்த்துட்டு இருந்தாங்க. பாட்டி ஏற்கெனவே இதய நோயாளி. தவிர முதுமையின் விளிம்பில் இருந்தவங்க.

அப்பாவைக் கைது செஞ்சப்புறம், பாட்டி ரொம்ப சோர்வா இருந்தாங்க. வீட்டில் எல்லா​ருமே போலீஸ், சிறைனு அலைய... பாட்டி வீட்டுக்குள்ளேயே இருந்துட்டு தன்னோட சோகத்தை உள்ளுக்குள்ளேயே வெச்சிருந்தாங்க. சனிக்கிழமை ராத்திரி தூங்கப் போனவங்கதான்... தூக்கத்திலேயே மாரடைப்பு வந்து உயிர் பிரிந்துபோனது.

அப்பா வீட்டுக்கு வந்துட்டார்னா, மரியாதை காரணமா பாட்டி எதிர்லயே வர மாட்டங்க. ஏதாவது ஒரு ரூம்ல இருந்துப்பாங்க. அப்பா வெளியே போனப்புறம்தான் வெளியே வருவாங்க. சில சமயங்களில், 'என்னம்மா உன் பாட்டியைக் காணோம்?’னு கேட்டு அப்பாவே போய் அவங்ககிட்ட நலம் விசாரிப்பாரு. தன் கண் முன்னே கம்பீரமாக நடமாடியவரை இவ்வளவு கீழ்த்தரமா நடத்திட்டாங்களேனு உள்ளுக்குள்ளேயே குமைஞ்சு​போய்த்தான் பாட்டி உயிரைவிட்டு இருக்கணும்...''

- சொல்லும்போதே கனிமொழியின் கண்களில் நீர் எட்டிப் பார்க்கிறது. அதைச் சமாளித்தவராகத் தொடர்கிறார்...

''அப்பா அரெஸ்ட் ஆன பிறகு, அவரை ஜெயிலில் அடைக்கிறதுக்கு முன் அவரோடு காரில் போய்ட்டு இருந்தேன். 'என்னம்மா ரொம்ப அழுதுட்டியா, கவலைப்படாதம்மா’னு எனக்குத் திரும்பத் திரும்ப ஆறுதல் சொன்னார். ஏதாவது மாற்றுத் துணி இருக்கா... இல்லை, நான் போய் கொண்டுவரவா?’னு அப்பாகிட்டே கேட்டேன். 'ரெண்டு சட்டை வெச்சிருக்கேம்மா. ரெண்டு வேஷ்டியும் எடுத்துட்டேன். நாலு துண்டு வெச்சிருக்கேன். இது போதும், வலது கைதான் கொஞ்சம் வீக்கமா இருக்கு. வீட்டுல இருந்த அயோடக்ஸையும் பாக்கெட்ல வெச்சிருக்கேன்’.. அப்படினு நிதானமாப் பேசின அப்பாவைப் பார்த்தபோது, எனக்கு பழைய நினைவுகள் நிழலாடத் துவங்கின.

நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது பல முறை அப்பா சிறைக்குப் போயிருக்கார். அவர் சிறை சென்றதற்கான காரணங்கள் அப்போது எனக்குப் புரிந்தது இல்லை. ஆனால், அந்தச் சந்தர்ப்பங்களில் அப்பாவின் சிரித்த முகம் இன்னும் எனக்கு நினைவிருக்கு.

பள்ளிக்கூடத்துக்குப் போய்ட்டுத் திரும்ப வந்தா, 'அப்பாவை சிறையில் போட்டு இருக்காங்கம்மா’னு என் அம்மா சொன்ன சந்தர்ப்பங்கள் உண்டு. அப்பல்லாம் சிறைன்னா ஒரு பிக்னிக் மாதிரி எனக்குத் தோணும். சிறைக்குப் போனா, அப்பாவைப் பார்க்கலாம். ஸ்கூலுக்கு கட் அடிக்கலாம் என்ற ஓர் இனம்புரியாத குதூகலம்தான் அந்தப் பள்ளி வயதில் என்னுள்ளே எழும்.

எனக்கு நினைவு தெரிந்து, உலக விஷயங்கள் தெரிந்து, அரசியல் புரிந்து பக்குவப்பட்டதற்குப் பின்தான் நான் சின்ன வயதில் அனுபவித்த குதூகலம் எவ்வளவு மடத்தனமானதுன்னு புரிஞ்சுது.

இந்த முறை அப்பாவை சிறையில் போட்டதையும் அதுக்கான காரணத்தையும் என்னால் ஜீரணிக்க முடியலை. அன்னிக்கு நடு ராத்திரி தொடங்கி, பொழுது விடியறதுக்குள் போலீஸ் நடந்துகொண்ட விதத்தை எல்லாம் பார்க்கும்போது, ஒரு கைதுன்னா... இவ்வளவு கோரமாக்கூட இருக்குமான்னு அதிர்ந்துபோனேன்.

இன்றுகூட பாட்டியின் உடலை அப்பா வராமல் எடுக்க சம்மதிக்க மாட்டேன் என்று அம்மா புலம்பியபோதும்கூட, நாங்கள் அவரை சமாதானப்படுத்தினோம். வக்கீல் மூலம் 'பரோல்’ வாங்க முயற்சி செய்தபோதும் ஏக அலைக்கழிப்பு. அதுக்குள் அப்பாவே 'எனக்கு வெளியில் வர சம்மதம் இல்லை. எனக்காக யாரிடமும் கெஞ்ச வேண்டாம்’னு சொல்லிட்டாராம்.

என்னோட கவலை எல்லாம் அப்பாவோட உடல்நிலையைப்​பற்றித்தான். அவருக்குத் தொடர்ச்​சியாக இருந்து வந்த கைவலியை நிரந்தரமாக் குணமாக்க ஃபிஸியோ​தெரபி செய்து கொண்டிருந்தார். அரசியல் பரபரப்பு, தேர்தல் சமயங்​களில்கூட தனது ஃபிஸியோதெரபி பயிற்சியை அவர் கைவிடலை. அந்த அளவுக்குக் கை வலி அவரை வாட்டியது. கைதுக்கு இரண்டு நாள் முன்புதான் பயிற்சியை முடிச்சார். 'இப்போ நிறைய எழுத முடியுதும்மா... கை வலி இல்லை’னு குழந்தை மாதிரி சிரிச்சுட்டு சொன்னார். அந்தக் கையைப் பிடிச்சு போலீஸ் தூக்கிய வேகத்தில் அப்பா எந்த அளவுக்குத் துடிச்சிருப்பார்னு புரியுது. இப்போ சிறையில் அப்பாவின் கைகள் வீங்கி இருக்குனு சொன்னாங்க. சின்ன ரூம்ல குறுகிய மர பெஞ்சில்தான் படுத்துத் தூங்கறாராம்...''

அதற்கு மேல் தொடர முடியாமல் தன் அம்மாவின் அருகில் போய் அமர்ந்து அவர் தோளில் சாய்ந்து​கொண்டார் கனிமொழி. தலை கவிழ்ந்தபடி இருந்த அவரை, அங்கு வந்த தயாளு அம்மாளும் அவர் மகள் செல்வியும் பற்றியெழுப்பினர்.

உடனே தயாளு அம்மாளின் தோளில் சாய்ந்தபடி அழத் துவங்கி​விட்டார் கனிமொழி. இன்னொரு புறம், தன் தாயார் மறைவு குறித்து விவரங்களை செல்வியிடம் விளக்க ஆரம்பித்தார் ராஜாத்தி அம்மாள்.

மதியம் ஆலிவர் சாலை இல்லத்துக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைப்பாளர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், மத்திய மந்திரிகள் சுக்தேவ்சிங் தின்ஸா, வி.கே.மல்ஹோத்ரா போன்ற தலைவர்கள் வந்தனர். சிவபாக்கியத்தம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, கலைஞர் கைது அமளி நடந்த அறையைப் பார்வையிட்டனர்.


மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்​ணனுடன் சேர்ந்து மாடியில் இருந்த அந்த அறைக்குச் சென்றனர். தி.மு.க. மாநாடு ஒன்றில் கலைஞருக்கு அவரது தாயார் படம் பொறித்த நினைவுக் கேடயத்தை வழங்கி இருந்தார்கள். கலைஞர் போற்றிப் பாதுகாத்த அந்தக் கேடயத்தை வீட்டுக்குள் வந்த போலீஸார் தூக்கி வீசியதாகச் சொல்லி அதைக் காட்ட... விழுந்து கிடந்த கேடயத்தை எடுத்துப் பார்த்தார் ஜார்ஜ்.

இது டிராயிங் ரூம், இதைத் தாண்டினால் கலைஞரின் பெட்ரூம்... 'அங்கே செல்வது நாகரிகம் அல்ல. இந்த அறையைப் பார்த்தாலே, போலீஸின் அத்துமீறல் தெரிகிறது’ என்று ஃபெர்னாண்டஸ் சொல்ல... திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வான உசேன். ''பரவாயில்லை சார்... தலைவரின் பெட்ரூமுக்குள்ளும் நீங்க போய் பார்த்தால்தான், டெல்லியில் தெளிவாக விளக்க முடியும்!'' என்றார்.

அதற்குள் கனிமொழியும் அங்கு வந்துவிட, அவரே அந்த அறைக்குள் அனைவரையும் கூட்டிச் சென்று அங்கே நிகழ்ந்த சில விஷயங்களைச் சொன்னார். இடையிடையே, முரசொலி மாறனின் மகளும் நடந்த சம்பவங்களைப் பற்றி ஃபெர்னாண்டஸிடம் சொன்னார்.

தன் அப்பாவின் உடல்நிலை, போலீஸ் நடந்துகொண்ட விதம்பற்றி எல்லாம் கனிமொழி எடுத்துரைக்க, சிறு தாளில் அவற்றைக் குறித்துக்கொண்ட ஃபெர்னாண்டஸ். தன்னுடன் வந்திருந்த இருவரிடமும் சிறிது நேரம் தனியே பேசினார். பிறகு அவர்களை ராஜாத்தி அம்​மாளிடம் அழைத்துச் சென்றார் பி.ஜே.பி-யின் இல.கணேசன்.

''பெண் என்றும் பாராமல் இவரது கையில் லத்தியால் அடித்துள்ளனர்'' என்று கணேசன் சொல்ல, ராஜாத்தி அம்மாளின் இடது கை காயப்பட்டு இருப்பதைப் பார்த்துக் குறித்துக்கொண்டார்கள். நெம்பித் திறக்கப்பட்டு இருந்த கதவின் தாழ்ப்பாளையும் பார்த்துக் குறித்துக்கொண்டனர்.

இந்தக் குழுவுடன் வந்த திருநாவுக்கரசும், டாக்டர் கிருஷ்ணசாமியும் கலைஞர் கைது செய்தியைத் தாங்கி, ஞாயிறு அன்று வந்திருந்த தமிழ்ப் பத்திரிகைகளைக் கொடுத்து, அதில் இருந்த விவரங்களை விளக்கினார்கள். அவற்றைத் தனது ஃபைலில் வைத்தபடி, ''இப்படிப்பட்ட அவமானச் செயல்கள் எல்லாம்கூட நடக்குமா? வேதனையாகவும் திகைப்பாகவும் இருக்கிறது!'' என்று அதிர்ச்சியுடன் கிளம்பினார் ஃபெர்னாண்டஸ்!

அரவிந்தனே ஆட்டோ பிடித்து...

ஆலிவர் சாலை வீட்டுக்குள் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையிலான தூதுக் குழு நுழைந்தபோது, ஜெயா டி.வி. கேமராமேனும், அவரது உதவியாளர் ஒருவரும் மற்ற பத்திரிகையாளர்களோடு சேர்ந்து நுழைந்தனர். யாரோ ஒருவர் பேச்சுவாக்கில் அவர்களை அடையாளம் காட்டி, ''ஜெயா டி.வி'' என்று சொல்லிவிட... அவ்வளவுதான்!

அங்கே இருந்த தி.மு.க. தொண்டர்கள் அந்த இருவரையும் வீட்டைவிட்டு வெளியே தள்ளிக் கொண்டுபோய், சாலையில் வைத்துத் துவைத்தெடுக்க ஆரம்பித்தனர். அவர்களிடம் இருந்த கேமராவை வாங்கி, அதில் இருந்த காஸெட்டையும் பிடுங்கிக்கொண்டனர். அந்த இருவரும் அடி தாங்காமல் துவண்டு போக, வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த சில தி.மு.க. வி.ஐ.பி-கள் தொண்டர்களிடம் இருந்து இருவரையும் மீட்டனர்.

கனிமொழியின் கணவர் அரவிந்தன், தொண்டர்களைப் பார்த்து, ''விட்டுடுங்கப்பா, அவங்களுக்கு என்ன தெரியும்? அவங்க கடமையை செய்ய வந்திருக்காங்க...'' என அட்வைஸ் கொடுக்க, தொண்டர்கள் கூட்டம் விலகியது. ஜெயா டி.வி. ஊழியர்கள் இருவரையும் அரவிந்தனே ஒரு ஆட்டோ பிடித்து அனுப்பி வைத்தார்.

இதேபோல் தமிழக உளவுத் துறையைச் சேர்ந்த ஒருவரையும் அடையாளம் கண்டு தி.மு.க-வினர் துரத்த... அவரையும் காப்பாற்றி அனுப்பி வைத்தனர் தி.மு.க. வி.ஐ.பி-கள்!
 
நன்றி : ஜூனியர்விகடன்

 
சென்னை போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பனின் பேட்டி

அடுத்து டெல்லி என்ன நடவடிக்கை எடுக்குமோ?’ என்று தமிழகமே பரபரப்பின் உச்சத்தில் இருந்த ஜூலை 2-ம் தேதி மத்தியானம்... சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் தனது அலுவலக அறையில் ரொம்ப கூலாக இருந்தார். அவரிடம் நாம் கேள்விகளை முன் வைத்தோம்!

 ''கலைஞரைக் கைது செய்யும் முன், எப்படித் திட்டமிட்டீர்கள்?''

''சி.பி.சி.ஐ.டி-யில் இரண்டரை வருஷங்கள் வேலை பார்த்த அனுபவம் எனக்குக் கை கொடுத்தது. ஜூன் 29-ம் தேதி இரவு, குறிப்பிட்ட போலீஸ் அதிகாரிகளை மட்டும் அழைத்து, 'இன்னிக்கு நள்ளிரவு ஸ்பெஷல் ஆபரேஷன் இருக்கு’ என்று சொல்லித் தயார்படுத்தினேன். போலீஸ் பட்டாளத்தையும் அசெம்பிள் செய்தேன்.

போலீஸ் வாகனங்கள் போதாது என்று 60 தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து, அவற்றிலும் போலீஸ் என்று எழுதி ஒட்டி, மாநகர் முழுக்க ரோந்துப் பணியில் ஓடவிட்டேன். நள்ளிரவு 1 மணிக்கு ஆபரேஷன் துவங்க சில நிமிடங்கள் முன்புதான், போலீஸ் அதிகாரிகளுக்கு, அவர்கள் யார் யாரைக் கைது செய்யப் போகிறார்கள் என்பதை விளக்கினேன். அவர்களும் கனகச்சிதமாக நடத்தி முடித்தார்கள்.''

''இப்படி ஒரு நள்ளிரவு நேர அதிரடி தேவையா? அது இப்போது மிகப் பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறதே..?''

''பொதுவாகவே வி.வி.ஐ.பி-களை நள்ளிரவில் கைது செய்வதுதான் சரி. சட்டம்-ஒழுங்குப் பிரச்னை கள் இருக்காது. பதற்றம் உண்டாக்கக்கூடிய சக்திகளும் அப்போது உஷாராகிவிடாது. மளமளவென்று கைது செய்து, சம்பந்தப்பட்டவரை சிறைக்குள் அடைத்துவிட முடியும். பாலம் ஊழல் கேஸ் என்பது சி.பி.சி.ஐ.டி. போலீஸின் விசாரணைக்குள் உள்ள வழக்கு. கைது செய்ய வேண்டியதும் அவர்கள்தான். அவர்களுக்கென்று பெரிய போலீஸ் படை கிடையாது என்பதால், மாநகர போலீஸில் இருந்து நாங்கள் அவர்களுக்கு உதவப் போனோம். சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகளைப் பாதுகாக்க வேண்டியதும் எங்கள் கடமை அல்லவா? அதான், திட்டமிட்டு அந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்தோம்!''


''அந்த இரவில் ஆலிவர் ரோடு வீட்டில் நடந்ததுபற்றி நீங்கள் சொல்வது என்ன..?''

''நள்ளிரவு 1.30 மணிக்கு ஆலிவர் ரோடு வீட்டுக்குள் போலீஸ் நுழைந்தது. வாசலில் சுமார் ஒன்றரை மணி நேரம் போலீஸாரைக் காக்கவைத்துத்தான் உள்ளே அனுமதித்தனர்.''

''நீங்கள் காட்டிய வீடியோவிலேயே கருணாநிதியை ஒரு கிரிமினல் குற்றவாளி போல் இழுத்துச் செல்லும் காட்சி வருகிறதே..?''

''முன்னாள் முதல்வரான அவரை நாங்கள் அப்படி நடத்த நினைப்போமா? சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் போய் பெட் ரூமில் இருந்த கருணாநிதியிடம், 'பாலம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறீர்கள்...’ என்று சொன்னபோது, 'அப்படியா? ஸ்டாலின்தானே பாலத்தைக் கட்டினார்?’ என்று தமாஷ் பண்ணி இருக்கிறார். கைது விஷயத்தைச் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டார். பாத்ரூமுக்குப் போய் இருக்கிறார். பாத்ரூம் செல்கிற வழியில் நின்றிருந்த ஆபாஷ் குமார் ஐ.பி.எஸ்-ஸிடம், 'என்னங்க... நீங்களும் உள்ளே வர்றீங்களா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டுப் போய் வந்திருக்கிறார்.

ஆக, ரொம்ப ஸ்மூத்தாகத்தான் கருணாநிதி ஒத்துழைப்பு தந்தார். பெட்ரூமில் இருந்த அந்த விநாடி முதல் அவர் சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியின் கஸ்டடிக்கு வந்துவிட்டதாகவே சட்டப்படி அர்த்தம். அவரைப் பத்திரமாக கோர்ட்டில் ஒப்படைப்பதுவரையில் சிறு கீறலோ, காயமோ, எதுவும் அவர் உடம்பில் ஏற்பட்டுவிடக் கூடாது. அந்தக் கவனத்தோடுதான் அதிகாரிகள் செயல்பட்டு இருக்கிறார்கள்.''

''கருணாநிதி வீட்டுக் கதவு தாழ்ப்பாளை, துப்பாக்கிக் கட்டையால் இடித்து உடைத்து இருக்கிறார்களே?''

''நோ... நோ... எங்களது வீடியோ காட்சியில் அந்த தாழ்ப்பாள் நன்றாகவே உள்ளது. அவருடைய வீட்டு போட்டோ, போன் மற்றும் அவரது அறையில் இருந்த பொருட்கள் நல்ல நிலைமையில் இருந்ததற்கான ஆதாரம் எங்கள் வசம் உள்ளன. பிறகு நடந்தது என்னவோ... நோ கமென்ட்ஸ்! நான் கமிஷனராகப் பதவி ஏற்றதும் ஒன்பது வீடியோ கேமராக்களை விலைக்கு வாங்கினேன். அதில் இரண்டை, சம்பவத்தன்று கைது செய்யும் படலத்தை முழுவதுமாக கவர் செய்வதற்குக் கொடுத்து அனுப்பினேன். அந்த ஆதாரங்கள் எங்களுக்குப் போதும்.''

''சரி... இப்படி நீங்கள் வீடியோ பதிவு செய்ததை, ஏன் வெளியே சொல்லவில்லை. அதுவும் தவிர, கைது நடந்து 40 மணி நேரம் கழித்து நிருபர்களுக்குப் போட்டுக் காட்டவேண்டிய அவசியம் என்ன?''

''இரண்டு வெவ்வேறு கோணங்களில் எடுத்து முடித்த வீடியோ காஸெட்களை உளவுப் பிரிவின் வீடியோ லைப்ரரியில் வழக்கம்போல் ஒப்படைத்துவிட்டார்கள் அதிகாரிகள். சட்டம்-ஒழுங்குப் பிரச்னை அடுத்தடுத்து வந்ததால், அதில் என்ன பதிவாகி இருக்கிறது என்பதையும் உடனே பார்க்க முடியவில்லை.

கைது சம்பவம் நடந்து சில மணி நேரம் கழித்து ஒரு காஸெட்டைப் போட்டுப் பார்த்தோம். அடுத்த காஸெட்டை லேட்டாகத்தான் பார்த்தோம். இதற்குள் 40 மணி நேரம் ஆகிவிட்டது. கருணாநிதி கைது சர்ச்சையைத் தணிக்கும் வகையில் உடனே பிரின்ட் போட்டு எல்லா பிரஸ்களுக்கும் கொடுத்து, உண்மை நிலவரத்தை மக்களுக்கு விளக்கச் சொன்னோம்.''

''40 மணி நேரம் என்பது, உங்களுக்கு சாதகமான காட்சிகளை வெட்டி ஒட்ட எடுத்துக்கொண்ட அவகாசம் என்று சொல்லப்படுகிறதே?''

''போலீஸ் கஷ்டம் போலீஸுக்குத்தான் தெரியும். கைது நடந்த அன்று விடிய விடிய டென்ஷன்... மறுநாள், சிட்டியில் ஆங்காங்கே கல்வீச்சு... தகராறுகள். திங்கட்கிழமை அன்று பந்த்... அதையட்டி கைதுகள்... பஸ்கள் மீது தாக்குதல்... நாட்டு வெடிகுண்டுகளுடன் தி.மு.க. பிரமுகர் கைது... இதற்கு நடுவே டெல்லியில் இருந்து வந்த மத்திய உயர் அதிகாரிகளுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய கட்டாயம்... இப்படி ஏகப்பட்ட பணிகள்!

நான் கமிஷனர் பணியைத்தான் பார்ப்பேனே தவிர, வீடியோ எடிட்டிங் என் வேலை அல்ல. எங்களது இரண்டு வீடியோ காஸெட்களில் ஒன்றின் பிரதியை மத்திய உள்துறையில் இருந்து வந்தவர்களிடம் ஒப்படைத்துவிட்டோம். மற்றொன்றை, பிறகு டெல்லிக்கு அனுப்பினோம். இதுதான் நடந்தது.''

- ஆர்.பி.

படங்கள்: பொன்.காசிராஜன்

நன்றி : ஜூனியர்விகடன்