கொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.!

26-03-2020

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்றைய நிலையில் உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரானா வைரஸ் நம் உடலில் எப்படி நுழைகிறது, பாதிப்பை உண்டு செய்கிறது என தெளிவாய் அறிவோம்.

கடந்த டிசம்பர் 2019ல் தனது நாட்டின் ஊஹான் நகரில் கொரோனா வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் தாக்கி வருவதாக சீனா வெளியுலகுக்கு முதன் முதலாக தெரிவித்தது.

இந்த வைரஸ் Severe acute respiratory syndrome (SARS-2) என்ற வகையை சேர்ந்தது. இந்த வைரஸ் உருவாக்கும் நோய்க்குப் பெயர்தான் கோவிட் -19.



வைரஸ் என்றால்?...

முழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரிதான் வைரஸ். ஒரு ஆர்.என்.ஏ. (நமது செல்களில் 'ஜீன்' எனப்படும் 'டி.என்.ஏ.' இருப்பது மாதிரி வைரஸ்களில் இருப்பது டி.என்.ஏ.வின் அரைகுறை வடிவமான RNA அதைச் சுற்றி ஒரு புரதம் (Protein) மற்றும் கொழுப்பு சேர்ந்த ஒரு உறை (ஆல்கஹால் கொண்ட சானிடைசர்கள், சோப்பு நுரை பட்டால் இந்த உறை கறைந்து வைரஸ் அவுட்). அந்த உறையின் மீது ஆங்காங்கே முட்கள். இதுதான் கொரோனா வைரஸ். 

இந்த முட்களின் வேலை எளிதாக எதிலும் ஒட்டிக் கொள்ளவதே. இந்த முட்களும் புரதத்தால் ஆனவையே. கொரோனா வைரசில் இந்த முட்கள் பார்ப்பதற்கு கிரீடத்தில்(Crown) இருக்கும் வேலைப்பாடு போல இருப்பதால் இந்த வைரசுக்கு 'கொரோனா வைரஸ்' எனப் பெயர்.

இதை ஏன் 'அரைகுறை உயிரி' என்கிறோம். இந்த வைரஸ்களால் தானாக வாழ முடியாது. இது ஒரு முழுமையான ஒட்டுண்ணி. ஏதோ ஒரு உயிரினத்தின் செல்லுக்குள் புகுந்து அந்த செல்லில் இருக்கும் திட, திரவப் பொருட்களையே உணவாக்கிக் கொண்டு பல்கிப் பெருகுவதுதான் இந்த மாதிரியான வைரஸ்களின் வேலை. 

செல்லுக்கு வெளியே சில மணி நேரமோ அல்லது சில நாட்களோதான் இதனால் தாக்குப் பிடிக்க முடியும்.

இந்த வைரஸ் மூக்கு, வாய் அல்லது கண் வழியாக உள்ளே நுழைந்தவுடன் முதலில் தொண்டப் பகுதியை தாக்குகிறது. தொண்டையில் உள்ள திசுக்களின் செல்களில் இது பல்கிப் பெருகியவுடன்தான் தொண்டை வலியும் இருமலும் தொடங்குகிறது. 

இந்த வைரஸ்களை எதிர்த்து நம் உடலின் எதிர்ப்பு சக்தி (Immune system) மோதலை தொடங்குகிறது. அந்த மோதலின் அறிகுறிதான் காய்ச்சல். பெரும்பாலான வைரஸ்கள் அதிக வெப்ப நிலையை தாங்க முடியாதவை என்பதால், உடலின் வெப்ப நிலையை உயர்த்தி வைரஸ்களை காலி செய்ய நமது உடலின் எதிர்ப்பு சக்தி முயற்சிக்கிறது.

இந்த மோதலின்போதே பெரும்பாலான வைரஸ்களை நமது உடல் கொன்று விடுகிறது, கொரோனா வைரஸ் உள்பட. 

நமது உடலின் இருக்கும் Immune system என்பது நமது உடலுக்குக் கிடைத்திருக்கும் ஒரு மாபெரும் பாதுகாப்பு அரண். வைரஸோ, பாக்டீரியாவோ அல்லது வேறு ஒரு நுண்ணுயிரோ உடலுக்குள் புகுந்தவுடன் அவற்றை நமது உடல் இரு வகையான காரணிகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கிறது.

முதலாவது அந்த நுண்ணியிர் வெளியிடும் வேதியியல் பொருட்கள், இரண்டாவது அந்த நுண்ணியிரின் உருவம்.

இது வெளியில் இருந்து வந்த பொருள் என்பதை கண்டுபிடித்த உடனே நமது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் அவற்றை கொல்லும் வேலையில் இறங்குகின்றன. 

வைரஸ், பாக்டீரியாவை அப்படியே விழுங்கி ஏப்பம் விடும் வேலைக்கு Macrophages, Neutrophils போன்ற அடியாட்களை வெள்ளை அணுக்கள் அனுப்புகின்றன.

ஆனால், இதையும் தாண்டி வைரஸோ பாக்டீரியாவோ உடலை பதம் பார்க்க ஆரம்பித்தால், பாதுகாப்பு அரண்கள் தனது அடுத்த கட்ட வேலையில் இறங்கும். 

அதில் ஒன்று Innate lymphoid cells. இதன் ஒரு பிரிவான T- Killer cellகளின் வேலை, வைரஸ்களால் பாதிக்கப்பட்ட உடல் செல்களை கொன்று, வெளியேற்றி உடல் திசுக்கள் மேலும் மோசமடையாமல் தடுப்பது. மேலும் வைரஸ்களுக்கு உணவாகிக் கொண்டிருக்கும் செல்களின் எண்ணிக்கையை குறைப்பது. இதுதான் இதன் வேலை.

அதே நேரத்தில் Macrophages, Neutrophils போன்றவற்றால் தடுக்க முடியாத வைரஸ்களை ஒழித்துக் கட்ட நமது உடல் அனுப்பும் பிரம்மாஸ்திரம் தான் B cells எனப்படும் வைரஸ்களை தாக்கும் செல்கள். 

இந்த செல்கள் வைரஸ்களின் உருவத்தை அடையாளம் கண்டு, அதன் மீது ஒட்டிக் கொண்டு, அப்படியே இழுத்துச் சென்று Lumph nodes எனப்படும் நிணநீர் சுரப்பிகளில் வைத்து, அங்கு சுரக்கும் ரசாயனங்கள் உதவியோடு வைரஸ்களை கொல்லும்.

இந்த உடல் எதிர்ப்பு சக்தி ஒரு பக்கம் இருக்க...

தொண்டைப் பகுதியை அடைந்த கொரோனா வைரஸ்கள் அடுத்ததாக நமது உடலை பாதிப்பது நுரையீரலை. 

நுரையீரலின் உள் சுவற்றில் இருப்பவை மிக லேசான பில்லியன் கணக்கான எபிதீலியல் செல்கள். இந்த செல்களில் கொரோனா வைரஸ் ஒட்டிக் கொண்டு, துளை போட்டு தனது ஆர்.என்.ஏ.வை உள்ளே நுழைக்கும். இந்த ஆர்.என்.ஏ. செல்லுக்குள் போய் லட்சக்கணக்கில் தனது பிரதிகளை ஜெராக்ஸ் மெசின் மாதிரி காப்பி எடுக்கும். பின்பு, இந்த ஒவ்வொரு ஆர்.என்.ஏ.வும் ஒரு வைரசாக மாறும்.

அந்த செல் முழுக்கவே வைரஸ்களால் நிறையும்போது, அந்த செல்லே வெடித்து மடியும். அந்த வெடிப்பில் இருந்து கிளம்பும் லட்சக்கணக்கான வைரஸ்கள் அடுத்தடுத்த செல்களை இதே போல தாக்கி அழித்து, பல்கிப் பெருகும். 10 நாட்களில் நுரையீரலின் பெரும்பாலான செல்களை இந்த வைரஸ் ஆக்கிரமிக்கும்.

இதுவரையிலும்கூட நமது உடலுக்குப் பிரச்சனைகள் அதிகமில்லை. ஆனால், இந்த வைரஸ்களை அழிக்க நமது உடலின் Immune cells எனப்படும் எதிர் தாக்குதல் செல்கள், நுரையீரலில் நுழைந்து வைரஸ்களைத் தாக்க ஆரம்பிக்கும்போதுதான் பிரச்சனையே துவங்குகிறது.

மற்ற வைரஸ்களில் இருந்து கொரோனா இங்கேதான் மாறுபடுகிறது. இந்த கொரோனா வைரஸ், நமது உடலின் எதிர் தாக்குதல் செல்களுக்குள்ளேயே நுழைந்து அதையும் சேதப்படுகின்றன. சேதப்படுத்துவதோடு மட்டுமல்ல, அந்த செல்களின் ஜீன்களில் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன.

அது என்ன வகையான குழப்பம்...?

நமது Immune system செல்கள் ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாறிக் கொள்வது சைட்டோகைன்ஸ் (Cytokines) எனப்படும் ஒரு வேதிப் பொருள் மூலம்தான். நமது ஜீன்களுக்கு பாதிக்கப்பட்ட எதிர் தாக்குதல் செல்கள் குழப்பமான சைட்டோகைன்ஸ் தகவல்களை அனுப்புகிறது. அப்போது நுரையீரலை பாதுகாக்க கிளம்பி வரும் Neutrophils செல்கள், கொரோனா வைரஸ்களுக்கு பதிலாக நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி செல்களை தாக்க ஆரம்பிக்கும்.

அதே போல பாதிக்கப்பட்ட நுரையீரல் செல்களை தற்கொலை செய்ய வைத்து நோய் மேலும் பரவாமல் தடுக்க வேண்டிய வேலைக்காக வரும் T- Killer cellகள் வந்த வேலையை விட்டு விட்டு, நன்றாக இருக்கும் நுரையீரல் செல்களை அழியச் சொல்லி தகவல் தரும். 

இதனால் நுரையீரல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, அடுத்ததாக பாக்டீரியா தாக்குதல், நிமோனியா உள்ளிட்ட தோற்று நோய்களுக்கு ஆளாக நேரிடும். இந்த இடத்தில்தான் பெரும்பாலான மரணங்கள் நிகழ்கின்றன.

இப்படி உடலில் இருக்கும் இயல்பான நோய் எதிர்ப்பு சக்தியையே நமது உடலுக்கு எதிராக திருப்பி விடுவதில்தான் கொரோனா வைரசின் முழு சக்தியும் அடங்கியுள்ளது. 

வைரசின் உருவத்தை வைத்து அடையாளம காணும் B- cellகள் கூட கொரோனாவிடம் இதுவரை எளிதில் வெற்றியை ஈட்டவில்லை. இந்த வைரஸ்கள் அனுப்பும் வேதியல் தகவல்கள் (Cytokines) எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இல்லை. அவை லட்சக்கணக்கான வகைகளில் மாறிக் கொண்டே இருப்பதால் T-killer cells, B cells ஆகியவற்றால் இவற்றை சரியாக அடையாளம் காண முடியவில்லை. இதுதான் இந்த வைரசுக்கு எதிராக மருந்தோ தடுப்பு ஊசியோ தயாரிப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

நாம் உண்ணும் அல்லது ஊசி மூலம் போட்டுக் கொள்ளும் மருந்துகள் உடலுக்குள் சென்றவுடன் வேதியியல் தகவல்களாக மாறித்தான் நோயை ஏற்படுத்தும் கிருமிகளோடு நேரடியாக மோதுகின்றன அல்லது உடலின் Immune system- உடன் பேசி, வேண்டிய எதிர்ப்பு மருந்தை உடலையே தயாரிக்க வைக்கின்றன.

ஆனால், கொரோனா நமது உடல் எதிர்ப்பு சக்தி சிஸ்டத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுவிடுவதால் இந்த வைரசுக்கு எதிராக எந்த மருந்தை வைத்து போராடுவது என்ற குழப்பத்தில் மருத்துவ உலகை ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸ்களின் கெமிக்கல் தாக்குதல்களால் குழம்பிப் போன T-killer cells, B cells-களும் ஏற்கனவே கொரோனா பாதித்த நுரையீரல்களை மேலும் பாதித்து உலகெங்கும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை, நோய் எதிர்ப்பு சக்தியில் பிரச்சனை உள்ளவர்களில்தான் இந்த உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.

நல்ல உடல் நிலையில் உள்ளவர்களுக்கு பிரச்சனை குறைவாகவே உள்ளது. உடலில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பெரும் குழப்பத்துக்கிடையிலும் பெரும்பாலான நேரங்களில் நமது உடல் எதிர்ப்பு சக்தி சிஸ்டம் கொரோனா வைரஸை தோற்கடித்துவிடுகிறது.

நீரிழிவு நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையால் உடலின் எதிர்ப்பு சக்தி முடக்குகிறது. அதே போல இதயக் கோளாறு, பி.பி. உள்ளவர்களின் உடலில் நுண்ணிய ரத்தக் குழாய்கள் போதிய ரத்தத்தை எடுத்துச் செல்வதில் சிக்கல் வருவதால், உடலின் எல்லா பகுதிக்கும் போதி சக்தி கிடைப்பதில்லை, நோய் எதிர்ப்பு சக்தி உள்பட. 

ஆனால், சர்க்கரை அளவும் பிபியும் மருந்துகள், உடற்பயிற்சி மூலம் கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை. இங்கேயும் உடலின் எதிர்ப்பு சக்தி கொரோனாவை தோற்கடித்துவிடுகிறது என்பதுதான் நல்ல செய்தி.

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டு பிடித்துவிடுவார்களா?  

தெரியவில்லை.

35 ஆண்டுகளுக்கு முன் வந்த எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த எச்.ஐ.வி. வைரசும், இதே கொரோனா வைரஸ் ரகத்தை சேர்ந்ததுதான். அதுவும், நமது உடலின் எதிர்ப்பு சக்தியை கதிகலங்க வைக்கும் வைரஸ்தான்.

ஆனால், கொரோனா மாதிரி எச்.ஐ.வி. இவ்வளவு சாதாராணமாக இருமல், தும்மல் மூலம் எல்லாம் பரவவில்லை. அந்த வகையில் கொரோனாதான் கொடூரம். அதற்குத்தான் வீட்டிலேயே முடங்க சொல்கிறார்கள்.

இன்னும் மருந்து இல்லாத நிலையில், இந்த நோயில் இருந்து தப்பிப்பதே உசிதம்.

இந்த நோய் தாக்குதலை தவிர்ப்பதே இதற்கான இப்போதையே ஒரே மருந்து..!

உலகளவில் ‘கொரோனா வைரஸ்’ தொற்று பரவிய வரலாறு..!

25-03-2020

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் இருக்கும் வுகான் நகரில் ஒரு நபரிடமிருந்து துவங்கிய கொரோனா நோய்த் தொற்று.. மூன்றே மாதங்களில் உலக அளவில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு பரவியது எப்படி..?



2019 டிசம்பர் 19

சீனாவின் வுகான் நகரில் உள்ள ஹூனான் கடல் உணவு மொத்த விற்பனையகத்தின் உரிமையாளரான வெய் கிக்சியானின் உடல் நலம் திடீரென்று பெயர் தெரியாத நோயால் பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்த 3 வாரங்களில் அதே வுகான் நகரின் வர்த்தகர்கள் பலரது உடல் நலனும் இதேபோல் பாதிக்கப்பட்டது.

இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு டிசம்பர் மாத இறுதியில் இது ஒரு தொற்று நோய் என்பது கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

2019 டிசம்பர் 29

வுகான் நகரத்தில் பலருக்கும் நிமோனியா தாக்கம் இருப்பதை அந்த நகரின் சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இரண்டு நாட்களுக்குப் பின்னர் டிசம்பர் 31-ம் தேதியன்று உலக சுகாதார அமைப்பிடம் சீனா இது பற்றி எச்சரிக்கை செய்தியை அனுப்பியது.

2020 ஜனவரி 1

வுகான் நகரில் இருக்கும் அனைத்து கடல் உணவு விற்பனை செய்யும் சந்தைகளும் மூடப்பட்டன.

2020 ஜனவரி 7

மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களைத் தாக்கிய வைரஸ் ‘சார்ஸ் வைரஸை உள்ளடக்கிய கோரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது’ என்று சீன விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதற்கு ‘2019 என்கோவிட்’ என்று பெயரிட்டனர்.

2020 ஜனவரி 9

கொரோனா வைரஸ் 44 பேருக்கு பரவியுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

2020 ஜனவரி 11

கொரோனா வைரஸால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டதாக சீனா அறிவித்தது. ஹூனான் மார்க்கெட்டில் இருந்து உணவுப் பொருட்களை வாங்கிய 61 வயது முதியவர் கொரோனா வைரஸிற்கு முதல் பலியானார்.

2020 ஜனவரி 13

தாய்லாந்தில் முதன்முதலாக கொரோனா வாரஸ் ஒருவரைத் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. சீனாவிற்கு வெளியில் கண்டறியப்பட்ட முதல் கொரோனா வைரஸ் தொற்று இதுவாகும்.

2020 ஜனவரி 16

ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

2020 ஜனவரி 20

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

2020 ஜனவரி 21

அமெரிக்காவில் நோய்த் தடுப்புக் கட்டுப்பாட்டு அமைப்பு கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்தது.

2020 ஜனவரி 23

வுகான் நகரில் விமானம், ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

2020 ஜனவரி 25

ஹூபெய் மாகாணத்தில் மேலும் 5 நகரங்களில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 3.6 கோடி மக்கள் தங்களது வீடுகளில் முடக்கப்பட்டனர்.

2020 ஜனவரி 25

சர்வதேச அளவில் 1000 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக கண்டறியப்பட்டது.

2020 ஜனவரி 30

இந்த நாளில்தான் இந்தியாவின் முதல் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டது. வுகான் நகரில் இருந்து இந்தியா திரும்பிய ஒரு கேரள மாணவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார்.

உலக அளவில் இன்றைய தேதியில் 8234 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தாக்குதலை சர்வதேச எமெர்ஜென்ஸியாக சர்வதேச சுகாதார அமைப்பு அறிவித்தது.

2020 ஜனவரி 31

ரஷ்யா, ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் வைரஸ் பரவியிருப்பது உறுதியானது.

2020 பிப்ரவரி 1

சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 259 ஆனது. 11791 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்கா, ஐக்கிய அரபுக் குடியரசு, வியட்நாம் ஆகிய நாடுகளில் வைரஸ் தொற்றுள்ளவர்கள் கண்டறியப்பட்டனர்.

2020 பிப்ரவரி 2, 3

வுகான் நகரில் இருந்து கேரளாவுக்கு வந்த மேலும் 2 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்.

2020 பிப்ரவரி 4

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முறையான மருத்துவ சிகிச்சை முறைகள் இல்லை என்று உலகச் சுகாதார அமைப்பு அறிவித்தது.

2020 பிப்ரவரி 5

ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்து டைமண்ட் பிரின்சஸ் கப்பல் யோகோமாவில் நகர துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. இந்தக் கப்பலில் இருந்தவர்களில் 15 இந்தியர்கள் உட்பட 175 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

கப்பலில் இருந்த 138 இந்தியர்கள் உட்பட 3177 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

2020 பிப்ரவரி 6

ஐரோப்பாவில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சீனாவில் கொரோனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 563 ஆக உயர்ந்தது. மேலும் 28 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரிந்தது.

2020 பிப்ரவரி 7

கொரோனா வைரஸின் அபாயம் குறித்து மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க முயன்று சீன அதிகாரிகளால் மிரட்டப்பட்ட மருத்துவர் லிவென்லியாங் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.

2020 பிப்ரவரி 8

இந்த நாளில் 2002-2003-ல் உலக அளவில் சார்ஸ் நோயால் இறந்தவர்களைவிடவும் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை கூடியது.

சீனாவில் 811 பேர் இறந்தனர். 37198 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். உலக அளவில் 40,150 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

2020 பிப்ரவரி 14

ஆப்பிரிக்க நாடுகளில் முதன்முறையாக எகிப்தில் கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக கண்டறியப்பட்டது.

இதே நாளில் முதல்முறையாக பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸுக்கு ஒருவர் பலியானார்.

2020 பிப்ரவரி 15

ஏராளமான ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் கொரோனா வைரஸின் பரவல் இந்தியாவில் இல்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவித்தது.

2020 பிப்ரவரி 18

சீனாவில் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கும் கீழே குறையத் துவங்கியது.

2020 பிப்ரவரி 19

ஈரானில் முதல்முறையாக கொரோனா வைரஸ் தொற்றால் 2 பேர் உயிரிழந்தனர்.

2020 பிப்ரவரி 21

இத்தாலியின் லோம்பர்டி நகரத்தில் வைரஸ் தொற்று அதிகமானது. அங்கு முதலில் 6 பேருக்கு வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டது.

2020 பிப்ரவரி 24

தென்கொரியாவில் வைரஸ் பாதிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். 833 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

குவைத், பக்ரைன், ஈராக், ஆப்கானிஸ்தான், ஓமனில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டார்கள்.

2020 பிப்ரவரி 25

ஈரான் சுகாதாரத் துறையின் துணை அமைச்சரான ஜராஜ் ஹரிர்சி தான் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பகிரங்கமாக தெரிவித்தார்.

2020 பிப்ரவரி 27

எஸ்டோனியா, டென்மார்க், வடக்கு அயர்லாந்து மற்றும் தெதர்லாந்து நாட்டில் முதல் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டனர்.

உலகளாவிய அளவில் 2500 பேர் உயிரிழந்த நிலையில் 82000 பேர் நோய் தொற்றிய நிலையில் பாதிக்கப்பட்டிருந்தனர்.

2020 மார்ச் 2

இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்தது.

இத்தாலியில் இருந்து டெல்லிக்கு வந்த 45 வயது நபருக்கும், துபாயில் இருந்து ஐதராபாத் வந்த 24 வயது வாலிபர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கியிருந்தது.

இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

2020 மார்ச் 3

இத்தாலியில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு வந்த சுற்றுலா பயணிக்கு வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிந்தது.

டெல்லியில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்த 21 இத்தாலியர்கள் மற்றும் 3 இந்தியர்கள் வைரஸ் தொற்று சோதனைக்காக முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இத்தாலியில் இன்றைய தினத்தில் கொரோனாவிற்கு 77 பேர் பலியானார்கள்.

2020 மார்ச் 4

இந்திய பரிசோதனை முகாமில் சோதிக்கப்பட்டவர்களில் 14 இத்தாலியர்கள் மற்றும் இந்தியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இத்தாலி சென்று வந்த குர்கானைச் சேரந்த ஒருவரும் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

2020 மார்ச் 7

உலகளாவிய அளவில் 1 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

ஈரானுக்கு சென்ற லடாக்கை சேர்ந்த 2 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்தது.
சீன சுகாதார ஆணையம் புதிதாக 99 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக அறிவித்தது.

2020 மார்ச் 9

கொரோனா வைரஸ் எதிரொலியால் பங்கு மார்க்கெட்டில் சென்செக்ஸ் 1941.67 புள்ளிகள் சரிந்தன. சர்வதேச சந்தையிலும் சரிவு ஏற்படத் துவங்கியது. இது வர்த்தகர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது.

2020 மார்ச் 11

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று அதிவேகத்தில் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது.

ஹாலிவுட் நடிகர் டாம் ஹாக்ஸ் மற்றும் அவரது மனைவிக்கும் நோய்த் தொற்று இருப்பது தெரிந்தது.

2020 மார்ச் 12

26 ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவதற்கு 30 நாட்கள் தடை விதிக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. 

சவூதி அரேபியாவுக்கு சென்று வந்த கர்நாடக மாநிலம் காலாபர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தார்.

2020 மார்ச் 13

டெல்லியில் கோவிட்-19 நோய் தொற்று ஒழுங்கு முறை விதிகளின் கீழ் கொண்டு வரப்பட்டது.

2020 மார்ச் 15

உலகளாவிய அளவில் 1 லட்சத்து 50 பேருக்கு கொரோனா நோய் தொற்றியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

2020 மார்ச் 16

அமெரிக்காவில் வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முதல் தடுப்பூசி சோதனைகள் தொடங்கின.

2020 மார்ச் 18

சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளிகள் யாரும் இல்லை.

இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2978 ஆக உயர்ந்தது.

இந்தியாவிற்குள் வெளிநாட்டினர் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது. சர்வதேசப் பயணிகள் இங்கிலாந்து, துருக்கி, ஐரோப்பா முழுவதும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மார்ச் 31-ம் தேதிவரையிலும் இந்தியாவுக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.

2020 மார்ச் 19

இதுவரையிலும் கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக இல்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவித்தது.

இந்தியாவில் இதுவரையிலும் 3 பேர் வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியிருந்தார்கள். 169 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

2020 மார்ச் 22-ம் தேதி துவங்கி ஒரு வாரத்திற்கு சர்வதேச பயணம் மேற்கொள்ள இந்தியர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அமெரிக்கா, கனடாவை போன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இங்கிலாந்து 30 லட்சம் கோடி ரூபாயை அறிவித்தது.

நியூஸிலாந்து 96960 கோடி ரூபாயை வைரஸ் தொற்று பிரச்சினைக்காக செலவிடப் போவதாக அறிவித்தது.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10000-ஐ தாண்டியது.

2020 மார்ச் 20

உலகளாவிய அளவில் 2,66,175 பேருக்கு வைரஸ் தொற்று பரவியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.