கசப்புடன் முடிந்த சினிமா நூற்றாண்டு விழா..! - 3

29-09-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

23-09-2013 - காலை 9 மணி - மலையாளத் திரையுலக விழா

வேப்பேரி மெயின் ரோட்டிலேயே சேட்டன்கள் மற்றும் சேச்சிகளின் வருகை தெரிந்தது..! நேரு ஸ்டேடியத்தின் வாசலில் செண்டை மேளமும், மோகனியாட்டமும்,  காத்திருந்தது..! பாஸ் இல்லாதவர்கள் யாராவது பாஸ் கொடுப்பார்களா என்ற தவிப்புடன் காலையிலேயே வந்து காத்திருந்தார்கள்..! மலையாள சங்கத்தில் இருந்து வந்தவர்களெல்லாம், தங்களது சங்க பிரமுகர்களை வாசலில் இருந்து போனில் அழைத்து பாஸ்.. பாஸ்.. என்று உயிரையெடுத்துக் கொண்டிருந்தார்கள்..!



அரங்கத்தின் உள்ளே நுழைந்தபோது கேலரியே காலியாக இருந்தது.. நான் இருந்த E ஸ்டேண்ட்டில் நான் ஒருவன்தான் முதல் ஆள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..! தரைத்தளத்தில்கூட முதல் மூன்று வரிசைகள் மட்டுமே நிரம்பியிருந்தது.. அதுவும் நடிகர், நடிகையர்களால்.. மோகன்லால் எனக்கு முன்பாகவே வந்திருந்தார்..! 




மது, மம்மூட்டி, ஜெயராம், பார்வதி,  மனோஜ்.கே.ஜெயன், ஊர்வசி, மேனகா, லிஸி, மாதவி, ஷீலா, சாரதா, பிந்து பணிக்கர், சூரஜ், பஹத் பாசில், கேபிஏபி லலிதா, ரீமா கல்லிங்கால், நஸ்ரியா, அனுமோள் என்று எனக்குத் தெரிந்த சிலரும் கூட்டத்தில் இருந்தார்கள்..! முன்பே வந்துவிட்டதால் வருபவர்களை லால் சேட்டன்தான் அன்பாக வரவேற்று பேசிக் கொண்டிருந்தார்..!


கேரள அமைச்சர் வயலார் ரவி முக்கிய பிரமுகராக வந்திருந்தார். இன்றைக்கும் காலையிலேயே கமல்ஹாசனும், கே.பி.யும் தரிசனம் தந்தனர்.. மேடையில் பலரையும் ஏற்றியவர்கள் மம்மூட்டியையும், மோகன்லாலையும் மட்டும் விட்டுவிட்டனர்..!  குத்துவிளக்கு ஏற்றிய பிறகு  நடிகர் மதுவுக்கு அன்றைக்கு 80-வது பிறந்த நாள் என்று சொல்லி அவரை வாழ்த்தினார்கள். இப்போதுதான் மோகன்லாலும், மம்மூட்டியும் மேடையேறி ஆளுயுர மாலையை அணிவித்து மதுவை வாழ்த்தினார்கள்..! வயலார் ரவியும், கேரள பிலிம் சேம்பர் தலைவரும் வாழ்த்திய பிறகு கே.பி.யும், கமல்ஹாசனும் வாழ்த்தினார்கள்.. கே.பி. தன் கைப்பட எழுதிக் கொண்டு வந்ததை அப்படியே படித்துக் காண்பித்துவிட்டு போனார்.. கமல்ஹாசன் துவக்கத்தில் சில மலையாள வார்த்தைகளைத் தெரிவித்துவிட்டு பின்பு இங்கிலீஸுக்கு தாவிவிட்டார்..!


கலை நிகழ்ச்சியில் முதல் நிகழ்ச்சியாக பிள்ளையாரை வைத்துக் கொண்டு ஒரு பக்தி பாடலும், டான்ஸூம்.. அடுத்து குடையைப் பிடித்தபடியே சேச்சிகள் ஆடிய டான்ஸ் அசத்தல்.. என்னதான் இருந்தாலும் சேச்சிகளை சேலையில் பார்க்கும்போது சேலை என்னும் வஸ்துவுக்கே தனி மரியாதை வருதுன்னு நினைக்கிறேன்.. இதுக்கடுத்து பேயாட்டம் ஒண்ணு ஆடுனாங்க.. இந்த டான்ஸுக்கு என்ன பேருன்னு தெரியலை.. ஆனா ஆட்டம் செம செம..!  இது முடிந்ததும் கமல் அண்ணன் எஸ்கேப்பாகிவிட்டார்..!


அடுத்து நடந்தது களறியாட்டம் என்று நினைக்கிறேன்..  இதைத் தொடர்ந்து கேரள மலபார் பகுதி முஸ்லீம்களின் குச்சி டான்ஸ்.. கையில் ஒரு சிறிய குச்சியை வைத்துக் கொண்டு தாளம் தப்பாமல் தொடர்ச்சியாக 5 நிமிடங்கள் ஆடித் தீர்த்தார்கள்.. ரம்மியம்.. பிறகு ஒரு யானை போன்ற தோற்றத்தையே மேடைக்குக் கொண்டு வந்து அசத்தினார்கள்..! பாரம்பரிய நடனங்களை இத்தோடு நிறுத்திக் கொண்டவர்கள் அடுத்து உண்மையான கலை நிகழ்ச்சியைத் துவக்கினார்கள்..!


முதல் டான்ஸே இப்போதைய செல்லம் நஸ்ரியாவின் கலக்கல் டான்ஸ்.. பல பாடல்களுக்கு ஒரே ஜோடியின் நடனம் என்ற பாலிசி இங்கேயும்  கடைப்பிடிக்கப்பட்டது.. இதில் எனக்குத் தெரிஞ்சது செம்மீன் படத்தின் பாடல் மட்டுமே..! 


மம்மூட்டி மேடையேறி ஒரு சிலருக்கு விருதுகளை வழங்கினார்..! கூட்டம் அப்போதுதான் கூடிக் கொண்டே வந்ததால் பாவம் உரியவர்களுக்கு கைதட்டல்கூட கிடைக்கவில்லை என்பது உண்மைதான். அன்றைக்கு திங்கட்கிழமை.. அலுவலக நாள்.. எத்தனை பேர் வர முடியும்..? அதுவும் காலை 9 மணி.. அப்படியும் ரசிகர்களின் வருகைக்காக காத்திருந்து 10 மணிக்குத்தான் துவக்கினார்கள்..! இருந்தும் கூட்டம் இல்லாதது அவர்களுக்கே வருத்தம் தந்திருக்கும் என்று நினைக்கிறேன்..!


தொடர்ந்து வழக்கம்போல ஜூகல்பந்தி. இப்போதும் மலையாள ரசிகர்களும், நடிகர் நடிகையரும் பாடலின் கூடவே பாடும் நல்ல பழக்கத்தை செய்து காட்டினார்கள்.. பாடகர், பாடகியரும் இந்த உற்சாகத்தை பார்த்து ஜூகல்பந்தியை இசைத்துக் கொண்டே போக.. கீழே தரைத்தளத்தில் முன் வரிசை பிரமுகர்கள் கலைந்து, கலைந்து தங்களுக்குள் பேசிக் கொண்டே போக.. மோகன்லால் எழுந்து வந்து அனைவரையும் பிரித்துப் பிரித்து அனுப்பிவிட்டார்..! 


அடுத்து ஒரு நாடகம்.. மலையாள நடிகை பிந்து பணிக்கரும், காமெடி நடிகர் சூரஜ்ஜும் இணைந்து நடித்தார்கள். நமக்கு ஒண்ணும் புரியலை.. எல்லாரும் சிரிச்சாங்க. நாமளும் சிரிச்சுத் தொலைச்சோம்.. சினிமா மாதிரியே அவ்ளோ ஸ்பீடான டைமிங் மாடுலேஷன்.. காமெடியில் மலையாளத்துக்காரர்கள் தனித்துவம் பெற்றவர்கள்..! 


அடுத்து ரீமா கல்லிங்காலின் டான்ஸ் என்று சொன்னவுடனேயே பெரும் கரவொலி.. அசத்தல் டான்ஸ் ஆடினார் ரீமா.. தொடர்ந்து நடிகர் முகேஷ் தலைமையேற்க இயக்குநர் ஜோஷி மேடையேறி விருதுகளை வழங்கினார்.  


மலையாள நிகழ்ச்சியின் தலைவர் இயக்குநர் சிபிமலயில்.. கையில் ஒரு பேப்பரை வைத்துக் கொண்டு அடுத்து விருது பெற போகிறவர்கள் யார், யார் என்பதை பார்த்துக் கொண்டு அவர்களைத் தேடிப் பிடித்து இழுத்து வந்து மேடைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்..! மலையாள நகைச்சுவை சக்கரவர்த்தி ஜெகதி ஸ்ரீகுமாருக்கு அவரது இல்லத்தில் பொன்னாடை போர்த்தி கவுரவம் செய்ததை வீடியோவில் காட்டினார்கள்..! வருத்தமாக இருந்தது..! எப்படியிருந்த மனுஷன்..! இன்னிக்கு என்ன சொல்றாங்கன்னு கூட தெரியாத அளவுக்கு இருப்பது காலத்தின் கொடுமை.. இது மிகக் கொடுமையான தண்டனை..! பாவம் அவருடைய குடும்பத்தினர்..! 

ஜோஷியே களைத்துப் போய் மேடையில் இருந்து இறங்கிய பின்பு மீண்டும் ஒரு ஜூகல் பந்தி.. இதைத் தொடர்ந்து மீண்டும் டான்ஸ்.. டான்ஸ்.. 


இதன் பின்பு லாலேட்டன் மேடையேறி ஒரு பாடலை பாட.. கூட்டம் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தது..! இதற்குப் பின்பு நேரம் படத்தின் டைட்டில் ஸாங்கிற்கு நஸ்ரியா கலக்கல் டான்ஸ் ஆட.. அரங்கம் அதிர்ந்தது கைதட்டலில்..!


தெலுங்கில் எஸ்.பி.பி.க்கு எப்படி ஒரு தனி  மரியாதையோ அதுபோல மலையாளத்தில் சித்ராவுக்கு அமோக வரவேற்பு.. மேடையேறியவர் அட்டகாசமான ஒரு பாடலையும் பாடிவிட்டுத்தான் போனார்.. ஆனாலும் பூவே பூச்சுடவா பாடலை பாடாமல் விட்டது வருத்தமாகத்தான் இருந்தது..!


சில நிமிடங்கள் கழித்து... மேடையின் பின்புறத்தில் இருந்து சரசரவென இறங்கிய மோகன்லால்.. மம்மூட்டிக்கு மட்டும் லேசான ஜாடைகாட்டிவிட்டு நடக்கத் துவங்க.. மம்மூட்டி பின் தொடர.. தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் அனைவருமே எஸ்கேப்பானார்கள்..! இதற்குப் பின்னும் மதியம் 3.30 ஐ தாண்டிய பின்பும் டான்ஸ்கள் தொடர்ந்து நடக்க.. பசியோடு இதற்கு மேல் உட்கார முடியாது என்பதால் வேறு வழியில்லாமல் எழுந்தேன்..!


வெளியே வந்தபோது இந்த நிகழ்ச்சிக்கு பின்பு அரங்கத்தை மறுநாள் ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்ச்சியின் பாதுகாப்பு வேண்டி முழுமையாகக் கைப்பற்றும் எண்ணத்துடன் வந்திருந்த போலீஸ் உயரதிகாரிகள் கூட்டத்தை பார்க்க முடிந்தது..! அனைவரின் கைகளிலும் கத்தை, கத்தையாக பேப்பர்கள்.. யார் என்ன போஸ்ட்டில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றாலும் பாதிக்கு பாதி பேர் மப்டியில் இருந்தததாலும் கான்ஸ்டபிள்களின் நிலைமைதான் பரிதாபம்.. பார்க்கின்ற அனைவருக்குமே சல்யூட் அடித்து அடித்து ஓய்ந்துதான் போனார்கள்..!

காரை இன்னொரு தீவில் விட்டுவிட்டு வந்த காரணத்தினால் பலருக்கும் பலவித பிரச்சினைகள்..! ஜெயராமும், பார்வதியும் காருக்காக காத்திருந்த நேரத்தில் ரசிகர்களின் அன்புத் தொல்லையில் சிக்கித் தவித்துப் போனார்கள்.. இடையில் அடுத்த நாள் விழாவில் நடனமாடிய நடிகை ஷோபனா ஒத்திகை பார்க்க வர.. அவரைச் சுற்றியும் ஒரு கூட்டம்..! 

கூடியிருந்த போலீஸ் கூட்டத்தை பார்த்தே நமக்கு பக்கென்றானது.. நாளைக்கு எப்படித்தான் உள்ளாற போறதுன்னு..!? மறுநாள் போலீஸார் செய்த டார்ச்சரில்  இனிமேல் இது போன்ற சினிமா விழாக்களுக்கு அரசியல் தலைவர்களை அழைப்பது பற்றி ரொம்பவே யோசிக்க வேண்டும் என்று கோடம்பாக்கத்துக்காரர்களை நினைக்க வைத்துவிட்டது..! 

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com 


கசப்புடன் முடிந்த சினிமா நூற்றாண்டு விழா..! - 2

29-09-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதல் பாகம்

22-09-2013 - தெலுங்கு திரைப்பட விழா

ஞாயிற்றுக்கிழமையாக இருந்தும் அன்றைக்குக் காலையில் நடந்த கன்னட திரைப்பட விழாவுக்கு போக முடியவில்லை.. செம டயர்டு.. கண் விழித்தபோதே 8 மணி ஆகியிருந்தது..!  பாஸ் வேறு கையில் இல்லை. இனிமேல் யாரையாவது தேடிப் போய் வாங்கினால்தான் போக முடியும் என்பதால் விட்டுவிட்டேன்.  மாலை தெலுங்கு நிகழ்ச்சிக்கான பாஸை படாதபாடுபட்டு வாங்கி பாய்ந்தோடினேன்..!

நான் அரங்கத்திற்குள் நுழைந்தபோது தரைத்தளம் ஹவுஸ்புல்.. காலரியில் பல இடங்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது.. முதல் நாள் துவக்க விழாவில் இருந்த கெடுபிடிகள் இன்றைக்கு இல்லை..! நடிகர் சாய்குமாரும், நடிகை ரோஜாவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.. 





இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன், கே.பாலசந்தர், ஆந்திர மந்திரி அருணா மற்றும் நடிகர்கள் பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், டாக்டர் ராஜசேகர், ஸ்ரீகாந்த், ராணா, டி,இராமாநாயுடு, கே.ராகவேந்திரராவ்... நடிகைகள் ஜெயசுதா, ஜீவிதா, வாணிஸ்ரீ, ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி, காஞ்சனா, அம்பிகா, ராதா, கார்த்திகா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


கொஞ்ச நேரத்தில் ஒய்யாரமாக ஒரு பெண்மணி அசத்தல் சேலையில் கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தார். ரசிகர்களுக்கு முதலில்  யாரென்று தெரியவில்லை. பாலகிருஷ்ணா ஆர்வத்துடன் முன் வந்து கை குலுக்கி இறுக்கிய பின்பு கேமிராவின் குளோஸப்பில் முகம் தெரிந்தார் கண்ணழகி மாதவி. காலையில் நடந்த கன்னட திரையுலக நிகழ்ச்சிக்கே வந்திருந்தார் என்றார்கள்..  முதல் வரிசையில் அமர்ந்த மாதவியிடம் அடுத்தடுத்து தெலுங்கு திரையுலகமே கை குலுக்கி ஹாய் சொன்னது.. இதேபோல் வந்திருந்த இன்னொரு பிரபலம் விருமாண்டி அபிராமி.. அப்படியே அச்சு அசலாக விஸ்வரூபம் பூஜாகுமாருக்கு தங்கச்சி போலவே இருந்தார்..! 


ஜெயசுதா, ஜெயபிரதா, வாணிஸ்ரீ, அமைச்சர் அருணா ஆகியோர் மேடையேறி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள். முதல் ஷோவே டிரம்ஸ் சிவமணியின் ஒன் மேன் ஷோ.. குச்சியை தரையில்கூட அடித்து ஒலியை உண்டாக்கினார்.. சாதாரண சூட்கேஸை வைத்தே ஒரு ரிதம் உண்டாக்கினார்.. ஒரு சிறிய மத்தளத்தை அடித்தபடியே கீழே இறங்கி வந்து முன் வரிசையில் இருந்த கமல்ஹாசனிடத்தில் வர.. இவர் ஒரு அடி அடிக்க.. கமல் ஒரு அடி அடிக்க.. இவர் இரண்டு அடி அடிக்க. கமலும் இரண்டடி அடிக்க.. இவர்களின் இசை ஜூகல்பந்தி பத்தடிவரையிலும் தொடர்ந்தது.. செமத்தியாக இருந்தது..! ஆனாலும் கொஞம்சம் நீளம் என்பதையும் சொல்லியாக வேண்டும்..! 


அடுத்து மேடையில் இருந்த ஸ்கிரீனில் தெலுங்கு திரையுலக வரலாறு துவங்கியது.. மெளனப் படம் காலத்தில் இருந்து இன்றைய காலம்வரையிலும் ஆங்காங்கே தொட்டுத் தொட்டு முடித்துவிட்டார்கள்..! தமிழிலும் புகழ் பெற்ற படங்களை காணாததுதான் ஒரு குறைதான்..! இது முடிந்ததும் அண்ணன் கமல்ஹாசன் அரங்கத்தில் இருந்து விடைபெற்றார்.. ஒவ்வொருவரின் பக்கத்திலும் போய் கைகளைக் குலுக்கி எதையோ சொல்லிவிட்டு எஸ்கேப்பானார்..!


அடுத்தது டான்ஸ்..! முந்தைய நாள் ஜெயலலிதா இருந்தபோது மேடையில் ஆடியவர்களின் டிரெஸ்சென்ஸ் ரொம்பவே சென்சார் செஞ்ச மாதிரி இருந்தது.. இன்னிக்கு அது மட்டும் நஹி.. புகழ் பெற்ற தெலுங்கு பாடல்களுக்கு குத்து குத்துன்னு குத்தாட்டம் போட்டுட்டு போனாங்க..! இதுக்கு நடுவுல நம்ம மச்சானை பார்த்தீங்களா..? செந்தூரப் பூவே பாடல்களுக்கும் டான்ஸ் ஆடுனாங்க..! நம்ம பாட்டை தெலுங்குல கேக்கவும் சந்தோஷமாத்தான் இருந்தது.. ஆக மொத்தம் பாடல் வரிகள் புரியவில்லையென்றாலும், ராகம்தான் நம்மை முதலில் ஈர்க்கிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மை..! வாழ்க இசைஞானி..!


ஆந்திராவின் அமைச்சரம்மா அருணா மேடையேற தெலுங்கு திரையுலக சாதனையாளர்களுக்கு பரிசு வழங்கினார்கள்.. இதில் கே.பாலசந்தரும் விருது பெற்றார். செம கைதட்டல்.. சென்னைங்கிறதால தட்டிட்டாங்களோ..! 


அடுத்து ஜூகல்பந்தி ஆரம்பிச்சது.. வரிசையாக 11 பாடகர், பாடகிகள் தெலுங்கு பாடல்களை பாட ஆரம்பிச்சாங்க. இந்த இடத்துல தெலுங்கு ரசிகர்களைப் பத்தியும் சொல்லணும்.. ஒவ்வொரு பாட்டுக்கும் கைதட்டல்.. கூடவே சேர்ந்து பாடுறாங்க.. அத்தனை கூட்டமும் தலையை ஆட்டுது..! என்னவொரு ரசிப்புத் தன்மை.. நம்மளும்தான் இருக்கோமே..?! தமிழ்த்தாய் வாழ்த்தைகூட ஒரு பய வாயைத் தொறந்து பாட மாட்டேன்றான்..!


இந்த நேரத்துலதான் அந்த அனர்த்தம் நடந்துச்சு.. திடீர்ன்னு ஒருத்தர் மேடையேறி ஏகத்துக்கு கத்த ஆரம்பிச்சாரு.. சேம்பர் தலைவர் சி.கல்யாண் மேடையேறி அவருடன் மல்லுக் கட்டினார்.. பாடகரின் கையில் இருந்து மைக்கை வாங்கிய அந்த நபர் ஏதோ பேசப் போக.. ரொம்பச் சரியா மைக்கை ஆஃப் பண்ணிட்டாங்க.. மேடையில் இருந்த எஸ்.பி.பி.யும் தன் பங்குக்கு அவரிடம் பேச.. ம்ஹூம் முடியலை.. 


பாலகிருஷ்ணாவும், ராணாவும் பரபரப்பாக மேடையேறி வாக்குவாதம் செய்ய.. ஒரு வழியாக தரையிறக்கப்பட்டார் அவர்..! இந்தக் களேபரம் நடந்து கொண்டிருந்தபோது பக்கத்தில் எதுவுமே நடக்காததுபோல அந்த ஜூகல்பந்தியும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த்து என்பதுதான் சுவையான விஷயம்..! ஆனாலும் இந்த ஜூகல்பந்தியின் நேரம் மிக அதிகம்.. கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.. கடைசியாக எஸ்.பி.பி,யின் கம்பீர குரலில் ஒரு பாடல்.. அரங்கமே ஆனந்தக் கூத்தாடியது.. 



இது முடிய மீண்டும் அந்த நபர் மேடையேறி எதையோ பேச ஆரம்பித்தார்.. திரும்பவும் சர்ச்சைகள்.. சண்டைகள்.. இப்போது கீழேயிருந்து பெரும் கூட்டமே மேடையேறி அந்த நபரை கையைப் பிடித்திழுத்து வெளியே கொண்டு போனார்கள்..! யாரோ தெலுங்கு டைரக்டராம்.. விழாவில் மரியாதை இல்லை என்று கத்தியதாகச் சொன்னார்கள்..!


அடுத்து மீண்டும் டான்ஸ்.. இப்போது என்.டி.ராமராவ் மற்றும் கிருஷ்ணா, நாகேஸ்வரராவின் படங்கள் காட்சிகளை திரையில் காட்டிவிட்டு அதைத் தொடர்ந்து அவர்களுடைய படங்களின் பாடல்களுக்கு ஆடல் தொடர்ந்தது..! இதுக்கு நடுவுல இந்த ஆந்திர அமைச்சர் அருணாவின் பொறுமையைப் பத்தி சொல்லியாகணும்.. இது மாதிரியான டான்ஸ்களுக்கு நடுவுல 4 முறை அருணா மேடையேறி விருதுகளை பொறுமையா கொடுத்தார்.. 


கே.பாலசந்தர், கோட்டா சீனிவாசராவ், பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ராஜசேகர், அனுமந்தராவ், பிரம்மானந்தம், பரிச்சூரி பிரதர்ஸ், மாதவி,  ஜெயபிரதா, ஜெயசுதா, வாணிஸ்ரீ, ராஜஸ்ரீ, தேவிஸ்ரீபிரசாத், ராகவேந்திரராவ், டி.ராமாநாயுடு.. கொல்லப்புடி சீனிவாசராவ்.. காஞ்சனா.. குட்டி பத்மினி.. என்று பட்டியல் நீளமானது..! மாதவி விருது வாங்கியவுடனேயே கிளம்பிவிட்டார்..! மற்றவர்களும் வயதாகிவிட்டதால் அப்படியே போய்க் கொண்டேயிருக்க.. தரைத்தளம் இதற்குப் பிறகு கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட் மாதிரி இருந்தது..!


இதுக்கப்புறமும் கொஞ்சம் பேசிட்டுத்தான் போகணும்னு மினிஸ்டர் அருணாகிட்ட தெரியாம சொல்லிவிட... அடுத்த கால்மணி நேரத்துக்கு மனுஷி பொங்கிட்டுத்தான் போனாங்க. ஆனா எவன் கேட்டான்..? முன் வரிசை  பிரமுகர்களுக்கு சிற்றுண்டி வந்து கொண்டேயிருக்க.. சிலர் உட்கார்ந்து சாப்பிட.. பலரும் நின்று கொண்டே சாப்பிட்டபடியே தங்களுக்குள் பேசிக் கொண்டேயிருக்க.. யார்.. என்ன பேசுறாங்கன்னே தெரியாத அளவுக்கு இருந்தது தரைத்தளம்..!

ஒரு வழியா அந்தம்மா தன் பேச்சை முடிச்சுட்டுப் போன பின்னாடி இறந்து போன தெலுங்கு கலைஞர்களை ஒட்டு மொத்தமாக வீடியோவில் காட்டினார்கள்.. டச்சிங்காக இருந்த்து.. மீண்டும் ஜூகல்பந்தி.. மீண்டும் டான்ஸ்.. என்று தெலுங்கு மேடை ஆடிக் கொண்டிருக்க.. கீழே தரைத்தளத்தில் அவரவர் அவரவர் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தார்கள்.. ஜூகல்பந்தி நடக்கும்போது மட்டும் கூடவே சேர்ந்து பாடிக் கொண்டிருந்தார்கள்..! 


வந்திருந்தவர்களில் பாலகிருஷ்ணாவுக்கு மட்டுமே மேடையில் பேசும் வாய்ப்பு கிடைத்தது.. எடுத்த எடுப்பிலேயே “இந்தத் தமிழ்த் தண்ணியைக் குடிச்சு வளர்ந்த உடம்பு இது..” என்று தமிழிலேயே பேச.. செம அப்ளாஸ்..! அதுக்கப்புறம் வழக்கம்போல தெலுங்கில் மாடலாடிவிட்டுத்தான் போனார்.. இந்த விழாவுக்கு வந்திருக்க வேண்டிய மத்திய அமைச்சர் சிரஞ்சீவி ஏனோ வரவேயில்லை..! வெங்கடேஷ், ராஜசேகர் இருவரும் தாங்கள் பேசும் வாய்ப்புக்காக காத்திருந்தாற்போல் தெரிந்தது. ஆனால் கடைசியில் கூப்பிட மாட்டார்கள் என்பது தெரிந்தவுடன் ராஜசேகர் மனைவி ஜூவிதாவுடன் கோபத்துடன் வாக் அவுட் செய்தார்..!

பிரபலங்களை உட்கார விடாமல் செய்த இன்னொரு விஷயம்.. ரசிகர்களின் அன்புத் தொல்லை.. இந்த விழாவில் பெருமளவிற்கு போலீஸ் தொல்லை இல்லை என்பதால் ரசிகர்கள் கேலரியில் இருந்து குறுக்கு வழியில் சறுக்கிக் கொண்டு உள்ளே வந்து தங்களது அபிமான நட்சத்திரங்களிடம் புகைப்படம் எடுக்கத் துவங்க.. அவர்களைச் சமாளித்து வெளியேற்றுவதற்குள் பெரும்பாடுபட்டுவிட்டார்கள் செக்யூரிட்டிகள்.. 

இதில் ஒரு ரசிகன் மிக உரிமையோடு ராணாவின் தோளில் கை போட்டுவிட.. மனுஷன் கடுப்பாகி.. அந்த ரசிகனின் கழுத்தில் கை வைத்து தரதரவென இழுத்துக் கொண்டு போய் வெளியில் விட்டுவிட்டு வந்தார். இதனை பார்த்த பின்பு ராணாவை விட்டு விலகியது ரசிகர்கள் கூட்டம்..!

பாலையா என்கிற பாலகிருஷ்ணாவின் கோபம் தெலுங்கு திரையுலகமே தெரிந்ததுதான்..! முன் வரிசையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அவரிடம், ஒரு தெலுங்குக்கார பெண்மணி தனது பையனை அழைத்துக் கொண்டு வந்து அருகில் நிற்க வைத்து தான் மட்டும் விலகிப் போய் செல்போனில் புகைப்படம் எடுக்க.. சட்டென்று கோபமான பாலையா.. அந்தப் பையனை அலாக்காக தூக்கி அந்தப் பெண்ணின் பக்கத்தில் போய் விட்டுவிட்டு எதையோ கோபத்துடன் சொல்லிவிட்டு திரும்பிகூட பார்க்காமல் வந்து அமர.. அந்தம்மாவின் முகத்தில் அப்படியொரு அதிர்ச்சி.. சப்தமே இல்லாமல் வெளியேறினார்..!

இந்த நொச்சு தாங்காமல்தான் ஸ்ரீதேவியும் மிக விரைவில் அரங்கத்தைவிட்டு வெளியேறினார்.. ஸ்ரீதேவி-ஜெயபிரதா மோதல் பாலிவுட்டில் 1980-களில் மிகப் பிரசித்தம்.. இப்போதுவரையிலும் சுமூக நிலைமைக்கு வரவில்லை. ஜெயசுதாவின் அருகில் அமர்ந்திருந்த ஜெயபிரதாவுடன் தவிர்க்க முடியாமல் ஸ்ரீதேவி கும்பிடு போட்டு கை குலுக்கவேண்டியதாகிவிட்டது..! இது போலவே பாலிவுட்டின் ஹாட் நியூஸாக தவிர்க்க முடியாத இன்னொரு கை குலுக்கல் கடைசி நாளில் நடந்து முடிந்தது.. அது கடைசிப் பதிவில்..!

மேலும், மேலும் டான்ஸ் நிகழ்ச்சிகளே வந்து கொண்டிருக்க இப்போதே நேரம் 10.30-ஐ தாண்டிவிட்டதால் கூட்டம் பெருமளவு கலையத் துவங்க.. நானும் கிளம்பிவிட்டேன்..!

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com



ராஜாராணி - சினிமா விமர்சனம்

27-09-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

என் தலைமுறையில் சூப்பர் டூப்பர் ஹிட்டான 'மெளன ராகம்' படத்தை கொஞ்சம் டிங்கரிங் வேலை செய்து புது திரைக்கதையுடன்.. புத்தம் புதுப் பொலிவுடன்.. தற்போதைய ஹாட்டான ஜோடிகளை நடிக்க வைத்து தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் மெகா இயக்குநர் ஷங்கரின் சீடரான அட்லி..!


ஆர்யா-நயன்தாரா இருவருமே காதலில் தோல்வியடைந்தவர்கள். பெற்றவர்களின் வற்புறுத்தலுக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள்.. விருப்பமில்லாமலேயே ஒதுங்கியே வாழ்கிறார்கள்.. வாழ்க்கை அவர்களை எப்படி தம்பதிகளாக இணைக்கிறது என்பதுதான் கதை..!

முதற்பாதியில் நயன்தாரா-ஜெய் காதல் காட்சிகள் நிச்சயம் இப்போதைய ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.. ஜெய்யின் இந்த கேரக்டர் ஸ்கெட்ச்சுக்காக இயக்குநருக்கு ஒரு ஷொட்டு..! செல்போன் கம்பெனியின் கஸ்டமர் கேர் ஸ்டாப்பாக இருக்கும் ஜெய்.. நயன்தாராவிடம் மாட்டிக் கொண்டு அழுகைவரையிலும் போகும் அந்த முதல் காட்சியே அருமை.. மிக இயல்பாக  உண்மையாகவே நடித்திருக்கிறார் ஜெய்..! 

தொடர்ந்து ஜெய்யை மடக்க நயன்தாராவும் அவரது தோழிகளும் செய்யும் போன் கால் தொல்லைகளும்.. அதைத் தொடர்ந்த காட்சிகளும் செம கலகலப்பு..! உச்சக்கட்டமாக கால்சென்டர் சிஓஓ மனோபாலாவுக்கு போனை டிரான்ஸ்பர் செய்ய அவருக்கு வரும் போன் காலும்.. அந்த கோரிக்கையும்.. அதற்கு மனோபாலாவின் ரியாக்சனும்.. செம செம.. 

இப்படியொரு அப்பா யாருக்குக் கிடைப்பார்..? சத்யராஜின் பாசமிகு நடிப்பு.. அப்பாவுக்கும், மகளுக்குமான நட்பு அவர்களையே நேசிக்க வைக்கிறது.. சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து மகளை அழைத்துவரும் சத்யராஜின் பேச்சும், அந்தக் காட்சிகளும் வெகு யதார்த்தமானவை.. இப்படியொரு ஓப்பன் மைண்ட் கோடீஸ்வர அப்பா மகளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைப்பதும், அதன் பின்னான காட்சிகளிலும் சத்யராஜ் தனியே தெரிகிறார்.. லொள்ளுவையெல்லாம் விட்டுவிட்டு இப்படியும் தொடர்ந்து நடிக்கலாமே..?

முதற்பாதியில் இந்தக் கதையெனில் பிற்பாதியில் நஸ்ரியாவின் கதை.. ஏற்கெனவே பல படங்களில் பார்த்ததுதான்  என்றாலும் நஸ்ரியாவின் துள்ளலான நடிப்பால் பார்க்கப் பார்க்கப் பிடிக்கிறது..! ஆர்யாவின் இளிப்பும், பிரதர் என்று அழைத்து மொக்கை போடும் நஸ்ரியாவின் சமாளிப்பும் கலகலப்பு..!

'பூவே பூச்சுடா'வில் நதியாவை பார்த்ததுபோல இருக்கிறது இந்த நஸ்ரியாவை பார்க்கும்போது..! பாடல் காட்சிகளிலும் சில குளோஸப் காட்சிகளிலும் மனதை அள்ளுகிறது அவரது அழகு.. இந்தப் பொண்ணை கோடம்பாக்கம் நிறையவே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்..! தனது காதலைச் சொல்லாமலேயே மறைத்துவிட்டு கடைசியில் ஒத்துக் கொள்ளும் பெண்ணை இதோடு எத்தனையாவது தடவையா பார்த்திருக்கோம்னு எண்ணிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனா இந்தப் படத்துல சொல்றது நஸ்ரியான்றதால முதல்முறை என்றே பொய் சொல்லிவிடலாம்.. 

சோகமான முடிவை வலிந்து திணிக்கவில்லையென்றாலும்.. இரண்டுவித சோகத்தை தாங்கியவர்கள்.. அப்படியே இருக்கணுமா என்ன என்று கேட்டு கல்யாணம் செய்து வைக்கிறார்கள்.. பின்பு..? ஏன் எதற்கு என்ற கேள்வியுடனேயே முதல் அரைமணி நேரம் கதை நகர்கிறது.. இந்த அளவுக்கு படித்து, நல்ல வேலையில் இருக்கும் இவர்களே ஹஸ்பெண்ட் அண்ட் வொய்ப் பதவியையே கார்ப்பரேஷன் கவுன்சிலர் போஸ்ட் மாதிரி யூஸ் பண்ணிக்கிட்டு கண்டும் காணாததும்போல இருப்பதெல்லாம் ரொம்பவே லாஜிக் மீறல்.. சினிமா சென்டிமெண்ட்டுக்காக நயனுக்கு உள்ள அந்த வியாதியும்.. அதனால் பரிதாபப்பட்டு ஆர்யா செய்யும் வேலைகளும் அக்மார்க் 1985 காலத்து தமிழ்ச் சினிமா டைப்..!

இவ்வளவு பெரிய கோடீஸ்வரரின் பொண்ணு ஏன் டூவீலரில் போகணும்.. எதுக்கு சாப்ட்வேர் கம்பெனில வேலை பார்க்கணும்..? ஒரு சாதாரண எஸ்.ஐ.யின் மகனை காதலிப்பதாகச் சொல்வதும், அதனை அவருடைய அப்பா கேள்வியே கேட்காமல் ஏற்றுக் கொண்டு வீடு தேடிச் சென்று இது பற்றி பேசுவதுமாக ரன் பாஸ்ட்டில் கதை நகர்கிளது.. அப்போ கேக்கணும்னு தோணலை.. ஆனா இப்போ தோணுது..!

இடையில் காமெடி உதவிக்கு சந்தானம்.. அதேபோன்ற நீள, நீளமான டயலாக்குகள்தான்.. அவருடைய போர்ஷனில் அவருடைய சித்தப்பாவை வைத்துக் கொண்டும், ஒரு சாதாரண செக்கை வைத்துக் கொண்டும் செய்திருக்கும் கலாட்டாக்களை மட்டுமே ரசிக்க முடிகிறது.. சந்தானத்தின் வாய்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வருவதை இந்தப் படத்திலும் பார்க்க முடிகிறது..!

நயன்ஸ் இழந்த அழகை மீண்டும் பெற்றுவிட்டார் என்றே நினைக்கிறேன். ஐயா படத்தில் தோன்றிய அதே நயன்ஸ் இப்போதுதான் இந்தப் படத்தில்தான் கிடைத்திருக்கிறார்.. அக்காவுக்கு அழுகவும் வரும்போலிருக்கு.. செமத்தியான அழுகை.. நடிக்கவும் வைத்திருக்கிறார்கள்..! அநேகமா நயன்தாரா நடித்ததிலேயே அவர் அதிகமான டயலாக்குகள் பேசியிருப்பது இந்தப் படத்தில்தான் என்று நினைக்கிறேன்..! 

ஆ.. ஊ.. என்றால் இன்றைய இளைஞர்கள் டாஸ்மாக் கடைக்குத்தான் போகிறார்கள் என்பதை இந்தப் படமும் காட்டுகிறது..! இந்தப் பழக்கம் எங்க போய் முடியப் போவுதுன்னு தெரியலை.. ஆனா ரொம்ப ஓவராவே போயிட்டிருக்கு.. வீட்டுல பொண்ணுகளே அப்பனுக்கும், புருஷனுக்கும் பீர் வாங்கிக் கொடுத்து குடிக்கச் சொல்வது போலவும்.. இதெல்லாம் இந்தக் காலத்துல சகஜமப்பா என்பதும் இயக்குநரின் முடிவாக இருக்கலாம். ஆனால் இது வரும்காலத்திய சினிமா ரசிகர்களின் மனதில் ஒரு தவறை சரி என்று சொல்லவும் வைக்கும்.. செய்யவும் வைக்கும்..!

இசை ஜி.வி.பிரகாஷ்குமாராம்.. நஸ்ரியா, ஆர்யா பாடும் பாடல் மட்டுமே ஓகே... மற்றவைகளை திரும்பவும் கேட்டாலும் எந்த படம்ன்னு யோசிக்கணும்.. அந்த அளவுக்குத்தான் இருக்கு..! ஆர்யாவின் சோக்க் கதையைக் கேட்டவுடன் எப்படியும் மனசு மாறி ஒண்ணு சேரத்தான் போறாங்க என்பது ரசிகர்களுக்கே தெரிந்த்துதான்.. பின்பு எதுக்கு மேலும் 15 நிமிடங்களுக்கு கதையை வளர்த்திருக்கணும்..?

கிளைமாக்ஸில் ஜெய் திரும்பி வருவதை கட் செய்திருந்தால்கூட நன்றாகத்தான் இருக்கும்.. அந்தக் கிளைமாக்ஸே இல்லாமல் இருவருமாகவே யோசித்து இணைவது போல திரைக்கதை அமைத்திருக்கலாம்.. இட்ஸ் ஓகே.. இருந்தவரையிலும்.. எடுத்தவரையிலும் ஒரு புதிய இயக்குநராக.. புதிய வெற்றி இயக்குநராக தனது பெயரை முதல் படத்திலேயே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் அட்லி.. அவருக்கு எனது வாழ்த்துகளும், நன்றிகளும்..!


ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்

27-09-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அண்ணன் இயக்குநர் மிஷ்கினின் கலைத்தாகம் படத்துக்குப் படம் கூடிக் கொண்டே செல்கிறது..! மற்றவர்களெல்லாம் சினிமாவை மக்களுடையதாக நினைக்க.. இவர் மட்டுமே இதனை ஒரு கலை சார்ந்த படைப்பாக நிறுவ பெரும் முயற்சி செய்து வருகிறார்..!

'சித்திரம் பேசுதடி'யில் ஒரு காதல் கதையை சொன்னவிதம் அனைவருக்கும் பிடித்துப் போக.. அதையே 'அஞ்சாதே'யில் போலீஸ்-ரவுடி-சமூகம் சார்ந்த கதையாகவும் மாற்றி திரில்லராகவும் செய்து காண்பித்தார்.. மூன்றாவதாக 'யுத்தம் செய்'யிலும் இதே திரில்லர் டைப்.. 'நந்தலாலா'வில் கலைப்படைப்பின் உச்சத்தைத் தொட்டார்.. 'முகமூடி'யில் ஹீரோவுக்கான கதையாகவும் மாற்றி எடுத்துப் பார்த்தார்.. 

ஆனாலும் அவரது மேக்கிங் ஸ்டைல் பாமர ரசிகனிடமிருந்து கொஞ்சம் தள்ளிப் போய்விட.. மூன்றிலும் வணிக ரீதியாக தோல்வியைத் தொட்டாலும் சினிமா விமர்சகர்கள் அவரை பாராட்டத்தான் செய்தார்கள்.. இந்த ஒரு பிரிவினரின் பாராட்டே போதுமென்று நினைத்துவிட்டார் போலும்.. இப்போதும் அதே கதைதான்..! 

இந்தப் படத்தைப் பற்றி பாராட்டி பேச வேண்டுமென்றால் ஒரு வாரம் லீவு போட்டுவிட்டு ரூம் போட்டு பேசிக் கொண்டேயிருக்கலாம்.. அந்த அளவுக்கு உலக சினிமா பிரியர்களுக்கு பிடித்தமான படமாக இது இருக்கும்..!  மிஷ்கினின் ஸ்பெஷலான நைட் எபெக்ட்.. எம்ட்டி பீல்டு.. வைட் ஷாட்.. சிங்கிள் கேரக்டர்.. இப்படித்தான் இதிலும் முதல் காட்சி அறிமுகமாகிறது..! அடுத்தடுத்து பரபரப்பாக துவங்கும் திரைக்கதையை, இறுதிவரையிலும் அந்த டெம்போவை கொஞ்சமும் இறங்கவிடாமல் கொண்டு போயிருக்கிறார்..!


மருத்துவக் கல்லூரி மாணவரான ஸ்ரீ, வீடு திரும்பும்போது ரோட்டில் துப்பாக்கிக் குண்டு காயத்துடன் கிடக்கும் மிஷ்கின் என்னும் எட்வர்டை பார்க்கிறார். அவரது உயிரைக் காப்பாற்ற அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்கிறார் ஸ்ரீ. துப்பாக்கிக் குண்டு என்பதால் கிரைம் என்று சொல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போகச் சொல்கிறார்கள். அவ்வளவு தூரம் போவதற்குள் உயிர் போய்விடும் என்பதால் தன் வீட்டிற்கு கொண்டு வந்து தனது கல்லூரி பேராசிரியரான டாக்டரிடம் கேட்டு ஆபரேஷன் செய்து மிஷ்கினின் உயிரைக் காப்பாற்றுகிறார். காலையில் மிஷ்கின் அந்த வீட்டில் இருந்து எஸ்கேப்பாகிவிட.. இதில் இருந்து இவருக்கு வில்லங்கம் துவங்குகிறது.. மிஷ்கின் போலீஸால் துரத்தப்பட்ட கிரிமினல் என்று கூறி ஸ்ரீ-யை ரவுண்டு கட்டுகிறது வீட்டுக்கு வரும் போலீஸ்.. மிஷ்கினின் கதை என்ன..? ஸ்ரீ என்ன ஆகிறார் என்பதுதான் மிச்ச மீதிக் கதை.. இதற்கு மேல் சொல்ல முடியாது.. தியேட்டருக்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்..!

மிஷ்கினின் இயக்கம் டச் படம் முழுவதும் நிரவியிருப்பதால் படத்தில் ஆங்காங்கே இருக்கும் சின்னச் சின்ன ஷாட்டுகளில்கூட குபீர் சிரிப்பு எழும்புகிறது..!  காரில் வந்த தம்பதிகளை கடத்திச் செல்லும்போது ஸ்ரீ தைரியமாக துப்பாக்கியை காட்ட.. மிஷ்கின் அலட்டிக் கொள்ளாமல் துப்பாக்கியை அந்தப் பெண்மணியின் தலையில் வைக்கும் காட்சி.. நடு இரவு சோதனையில் இருக்கும் ஒரு போலீஸிடம் துப்பாக்கி முனையில் சல்யூட் செய்தபடியே நிற்க வைத்திருக்கும் காட்சி.. வில்லனின் அடியாட்கள் போலீஸிடம் வாயாடுவது.. தாக்கிவிட்டுப் பறப்பது.. என்று பலவும் திரைக்கதையுடன்கூடிய நகைச்சுவயாக மனதைத் தொட்டுச் செல்கிறது..!

இயக்கத்திற்கு என்னதான் விளக்கம் சொன்னாலும் யாராலும் இதுதான் சரி என்று சொல்லிவிட முடியாது.. இந்தப் படத்தின் ஒரு காட்சியில்கூட இயக்கத்தில் பிழை இல்லை.. அந்தத் திரைக்கதைக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை நடிக்க வைத்திருக்கும் அழகை பார்த்தால் மிஷ்கினை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை..! 

எந்தவொரு நடிகராக இருந்தாலும் இயக்கம் தெரிந்த இயக்குநரின் கையில் சிக்கினால் அவரிடமிருந்து நடிப்பு கண்டிப்பாக வெளிக்கொண்டு வரப்படும்.. இதில் வழக்கு எண் படத்தில் நடித்த ஸ்ரீ-தான் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.. முதல் அறிமுகக் காட்சியில் இருந்து இறுதிவரையில் பல படங்களில் நடித்த அனுபவத்துடன் இவரை பார்க்க முடிகிறது..! ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.. இன்னமும் மென்மேலும் வளரட்டும்..! போலீஸ் பூத்தில் இருக்கும் போலீஸாருடன் வாக்குவாதம் செய்யும் காட்சியில் ஒரு நிமிடம் நம்மை உள்ளே இழுத்து விடுகிறார்..! வெல்டன் ஸ்ரீ..

நமது இசை விமர்சகர் ஷாஜி சிபிசிஐடி போலீஸ் ஆபீஸராக நடித்திருக்கிறார்.. அவரைவிடவும் முந்திக் கொண்டு நமக்குப் பிடிக்கிறது அவரது குரல்.. டாக்டரை வைத்துக் கொண்டு தனது உயரதிகாரியிடம் அவர் பேசும்முறையும், ஆக்சனும் ஒரு படபடப்பான அதிகாரியை காட்டுகிறது.. இவரையும் அவ்வப்போது கொஞ்சம் புலம்ப விட்டு அஞ்சாதே போல் பரபரப்புடன் தேட வைத்திருக்கிறார் மிஷ்கின்..!

மிஷ்கின் இந்தப் படத்தின் கதையை ஓரிடத்தில் சொல்கிறார்.. அந்த டைட் குளோஸப் ஷாட் ஒன்றே போதும் இவருக்கு..! அந்த இடத்தில் மட்டும் நாம் திரையைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் பின்பு கதை சுத்தமாக நமக்குப் புரியாது.. ஆகவே அந்த நேரத்தில் செல்போனை நோண்டாமல் அவர் பேசுவதை கவனித்துப் பார்க்கும்படி ரசிகப் பெருமக்களை கேட்டுக் கொள்கிறேன்...! மார்ஷியல் ஆர்ட்ஸ் மேல் மிஷ்கினுக்கு முதல் படத்தில் இருந்து பெரிய கிரேஸ் போல.. இதிலும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி அப்படித்தான் தத்ரூபமாக இருக்கிறது..! லாஜிக்கையெல்லாம் இங்கேயும் பார்க்கக் கூடாது..! 

இதில் ஒரு கேரக்டராகவும் நடித்திருக்கிறது இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை.. மயிலாப்பூர் ஸ்டேஷனுக்குள் ஸ்ரீ ஓடுகின்ற கட்டத்தில் துவங்கி.. இறுதியில் வடபழனி விஜயா மாலில் நடக்கும் கிளைமாக்ஸ்வரையிலும் ஓட்டம்.. ஓட்டம்.. ஓட்டம்.. அப்படியொரு ஓட்டம் ஓடுகிறது இசைஞானியின் இசை..! நந்தநாலாவுக்கு பின்பு பின்னணி இசைக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்றே சொல்லலாம்..!  

தனது குடும்பத்திற்கு ஆபத்து என்றவுடன் மிஷ்கினை கொல்ல நினைக்கும் ஸ்ரீ, பின்பு மனசு மாறினாலும் அதையும் அரைகுறையாகச் செய்வதும்.. மிஷ்கின் சொல்லும் ஓநாய்-கரடி-ஆட்டுக்குட்டி கதையைக் கேட்டு மனசு மாறுவதும் தமிழ்ச் சினிமாத்தனம்தான்.. அந்த அரவாணி மென்மையாக நம் மனசுக்குள் நுழைகிறார்.. அவரை பார்த்தவுடன் தலைமுடியை பிடித்திழுத்து வரும் போலீஸை தமிழ்நாட்டு போலீஸ்தான் என்று பட்டென்று ஒத்துக் கொள்ளலாம்..!  கண் பார்வை இல்லாத அந்தப் பெண்ணும், குழந்தையும் இப்போதும் கண்ணுக்குள் இருக்கிறார்கள்..

எதற்காக இத்தனை படுகொலைகள்.. எதுக்காக இந்த நீண்ட தேடுதல் வேட்டை என்பதற்கெல்லாம் மிஷ்கின் விடை சொன்னாலும், அதையும் சின்னப் புள்ளைக்கு கதை சொல்லும் பாணியில் சொல்லியிருப்பதால் மெட்ரோபாலிட்டன் சிட்டியைத் தவிர மற்ற இடங்களில் புரிந்து கொள்ளப்படுமா என்ற சந்தேகம் எனக்குள் இப்போதும் இருக்கிறது..! புரிந்தால் சந்தோஷம்தான்..!

இப்போதைய மருத்துவ உலகத்தில் எந்தவொரு விஷயமாக இருந்தாலும் நோயாளிக்கு முதலில் சிகிச்சையளித்துவிட்டு பின்புதான் காயம் ஏற்பட்டதன் தன்மை பற்றி பேசப்பட வேண்டும் என்று அரசு ஆணையே உள்ளது.. முதல் ஆஸ்பத்திரியில் சிகிச்சையளிக்க முடியாது என்று சொல்வதே பெரும் லாஜிக் மீறல்.. அடுத்து அப்பலோ ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து இன்ஜெக்சனை வாங்குபவர் அங்கேயாவது இவரை சேர்ப்பதற்கு முயற்சி செய்திருக்கலாம்.. ஆனாலும் அவசரத்தனமாக இப்போதைக்கு அவரை காப்பாற்ற ஊசி போடுகிறார்..! பேராசிரியர் போனில் சொல்லச் சொல்ல.. ஆபரேஷன் செய்து மிஷ்கினை காப்பாற்றுவதெல்லாம் ரொம்பவே ஓவர்.. வயிற்றுப் பகுதியில் பாய்ந்த குண்ட எடுக்க அப்படியொரு ஸ்கெட்ச் செய்துவிட்டு குடலையெல்லாம் வெளியே எடுப்பதை போல் காட்டிவிட்டு பின்பு அதனை தைத்து சிகிச்சையை முடிப்பதாகக் காட்டுவதெல்லாம் சினிமாத்தனம்.. ஆனால் மிஷ்கினின் இயக்கம் அப்படி இப்படி யோசிக்கவிடாமல் தடை செய்கிறது..!

அன்றைய ஒரு நாள் இரவில் நடக்கின்ற கதை என்பதால் இத்தனை கொலைகள்.. போலீஸாரே 6 பேர் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.. காவல்துறை அதனைப் பற்றி பேசாமல் ராத்திரியோட ராத்திரியா சுட்டுக் கொல்லுங்க என்று மட்டும் சொல்கிறது..! இந்தக் கூத்தில் வில்லனின் ஆட்கள் மட்டும் தனியாக பைக்கில் சிட்டியை வலம் வருகிறார்கள்.. போலீஸ் டீமில் இருக்கும் பலரையும் விட்டுவிட்டு பிச்சை என்ற கயவாளி இன்ஸ்பெக்டர் மீது மட்டும் ஷாஜிக்கு எப்படி திடீர் சந்தேகம் வருகிறது என்பதற்கான காரணம் இல்லை.. ஆனாலும் ஸ்பீடு திரைக்கதையில் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பதுபோல் கதை அந்த இடத்தில் பறக்கிறது..! 

வெறுமனே எட்வர்டு என்ற பெயரை மட்டும் வைத்துக் கொண்டு பக்கத்தில் சர்ச் எங்கயாவது இருக்கா என்று விசாரித்து ஊகிப்பதும் இதே பாலிஸிதான்..! இருந்தாலும் இந்த அளவுக்கு ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தியிருக்க வேண்டாம்.. இது போன்ற படங்கள் கொட்டாம்பட்டியின் சி கிரேடு தியேட்டரில்கூட ஓட வேண்டும்.. அதற்கு முதலில் பாமரனுக்கும் கதை புரிய வேண்டும்.. துவக்கத்தில் போலீஸ் பேசுகின்ற அனைத்துமே ஆங்கிலம் கலந்த வார்த்தைகளாக இருக்க புரியாதவர்களுக்கு கஷ்டம்தான்.. கல்லறையைக்கூட ஆங்கில வார்த்தையில் சொல்லித்தான் தெளிய வைக்க வேண்டுமா என்ன..? கல்லறை என்று சொல்லியிருந்தாலே போதுமே..?

படத்தின் ஷாட் பை ஷாட் தேவையில்லாமல் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை வைத்திருக்காமல் முழுக்க முழுக்க இரவு நேரத்திலேயே ஷூட் செய்து அசத்தியிருக்கிறார் மிஷ்கின்.. ஒளிப்பதிவாளர் பெரும் பாராட்டுக்குரியவர்.. மிஷ்கின் மாதிரியான சிறந்த படைப்பாளிகள் கையில் சிக்கினால் எப்படி நடக்க முடியுமோ அதையேதான் செய்திருக்கிறார்..!  கார் சேஸிங் காட்சியும், மிஷ்கின் காரில் இருந்து தப்பிக்கும் அந்தக் காட்சியும் பரபர.. அதேபோல் கல்லறையில் நடக்கும் துப்பாக்கிச் சண்டையும் கிளைமாக்ஸ் சண்டை காட்சியும் படத்தின் மிகப் பெரிய பிளஸ்..

ஹாலிவுட் பாணியில் வேகமான திரைக்கதையுடன் நேர்த்தியான இயக்கத்துடன் ஒரு கலைப் படைப்பாகவும், திரில்லராகவும் கொடுத்திருக்கிறார் மிஷ்கின்..! சட்டம் கண்மூடித்தனமாக குற்றம் சாட்டப்பட்டவர்களை அணுகுகிறது என்பதைத்தான் மிஷ்கின் இதில் சொல்ல வந்திருக்கிறார் என்பதாக நானாகவே நினைத்துக் கொள்கிறேன்.. இதுதான் உண்மை எனில் இன்னமும் பெட்டராக இதனை எடுத்திருக்கலாமோ என்றுதான் எனக்குத் தோன்றுகிறது..! 

படத்தில் இடம் பெற்றிருக்கும் குறியீடுகளை பற்றிக் குறிப்பிட வேண்டுமெனில் மீண்டும் ஒரு முறை படத்தைப் பார்த்துவிட்டுத்தான் பேச வேண்டும்.. எப்படியும் நமது வலையுலக மக்கள் அவைகளைப் பற்றி விலாவாரியாகப் பட்டியலிடுவார்கள் என்பதால் காத்திருந்து அதைப் படித்துக் கொள்கிறேன்.. 

அவசியம் பார்க்க வேண்டிய படம்தான்.. பாருங்கள்..!

நன்றி..

வணக்கம்..! 

கசப்புடன் முடிந்த சினிமா நூற்றாண்டு விழா-1..!

25-09-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்நாட்டில் சினிமாவும், அரசியலும் இரண்டறக் கலந்திருப்பது இந்தியாவுக்கே தெரிந்த விஷயம்.. வெறுமனே 10 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்திருக்க மாட்டார் ஆத்தா என்பது நமக்கும் தெரிந்ததுதான்.. காரணத்தோடுதான் கொடுத்திருக்கிறார்.. தான் நினைத்தது போலவே தாத்தாவை போலவே தனக்கும் திரையுலகப் பாராட்டு விழாவை தமிழகத்து மக்கள் செலவிலேயே மிக மகிழ்ச்சியாக நடத்தி முடித்து பெருமிதப்பட்டுவிட்டார்.. வருத்தப்பட்டு நிற்பது திரைக்கலைஞர்கள்தான்..! நிசமான கலை விழா என்று நினைத்து ஏமாந்திருப்பதோ நாம்தான்..!


முதல் நாள் 21-ம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு இசைக் கச்சேரி.. 4 மணிக்கு முதலமைச்சர் தலைமையில் விழா துவக்கம் என்று அழைப்பிதழில் போடப்பட்டிருந்தது..! ஏதோ சந்திர கிரகத்தில் இருக்கும் போயஸ் கார்டனில் இருக்கும் ஆத்தா, சனி கிரகத்தில் இருக்கும் நேரு ஸ்டேடியத்திற்கு வருவதை போல வழியெங்கும் போஸ்டர்கள்.. தட்டிகள்.. பாராட்டுரைகள்.. எக்கச்சக்க எழுத்துப் பிழைகளுடன் வாழ்த்துப் பாக்கள்.. இதில் ஒரு சிலர் ரோட்டின் ஓரமாகவே இசைக் கச்சேரியே நடத்திக் கொண்டிருந்தார்கள்.. 

எந்த நாளும் இல்லாத திருநாளாக இந்த முறை அழைப்பிதழ் இருந்தால்தான் டூவீலரை பார்க்கிங்கே செய்ய முடியும் என்று கூறிவிட்டார்கள்.. எப்படியாச்சும் உள்ள போயிரலாம்ன்னு நினைச்சு வண்டியோட வந்தவங்கதான் பாவம்.. நடுரோட்ல வண்டியை நிறுத்தவும் இடமில்லாமல்.. போகவும் மனசில்லாமல் தவியாய் தவித்துக் கொண்டிருந்தார்கள்..!

3 மணிக்கு விழா என்பதால் 2 மணிக்கே உள்ளே விடுவார்கள் என்று அவசரமாகப் போனால் 3 மணிக்குத்தான் உள்ளே அனுமதி என்றார்கள். அரங்கின் உள்ளே சென்றபோது எம்.எஸ்.விஸ்வநாதன் ஜம்மென்று மேடையில் சேரில் அமர்ந்திருந்தார். இன்னிசை கச்சேரி ஆரம்பிப்பதற்கான முஸ்தீபுகள் நடந்து கொண்டிருந்தன.. எல்லாரும் மைக்கை தட்டி சரி செய்து கொண்டிருந்தனர்.. என்ன நடந்ததோ தெரியலை.. சில நிமிடங்களில் எம்.எஸ்.வி.யின் காதில் எதையோ சொல்ல.. முகம் வாடிப் போனது அவருக்கு.. பிரிய மனமில்லாமல் மேடையைவிட்டு கீழேறிங்கி பி.ஆர்.ஓ.க்கள் கை காட்டிய 4-வது வரிசையில் அமர்ந்தார்.. மேடையில் இருந்த இசைக் கருவிகளும், மைக்குகளும், சேர்களும் நிமிடத்தில் காலியாக...... கச்சேரி இல்லை என்றானது..! 

மேடையின் கீழே இடது புறத்தின் முதல் வரிசையில் அமைச்சர்கள்.. இரண்டாம் வரிசையில் மாவட்டச் செயலாளர்கள்.. ஆளும் கட்சிப் பிரமுகர்கள், மூன்றாம் வரிசையில் அரசு அதிகாரிகள் என்று அமர்ந்திருக்க.. வலது பக்கம் சினிமாக்காரர்களுக்கென்று ஒதுக்கியிருந்தார்கள். அங்கேதான் ஏகப்பட்ட குளறுபடி..! 56 பேர்களுக்கு ஆத்தா விருது கொடுத்தார். விருது பெற்றவர்கள் மேடையில் இருந்து இறங்கி முதல் மூன்று வரிசைகளில் வந்து அமந்து கலை நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும் என்பதால் அதை காலியாகவே வைத்திருக்க பெரும் பிரயத்தனம் செய்தார்கள்.. ஆனாலும் அது முடியாமலேயே போனது..! 


இயக்குநர் சிகரம் கே.பி. வந்து முதல் வரிசையின் ஓரத்தில் போய் அமர.. அவருக்கு அருகே 3 இருக்கைகள் போடப்பட்டு அது காவலும் காக்கப்பட்டது.. ஜெயலலிதா வருவதற்கு சில நிமிடங்கள் முன்பாக சசிகலாவும் அவருடைய உறவினர் இருவரும் வந்து அதில் அமர்ந்தார்கள். சசிகலா உள்ளே வரும்போது ஒரு அமைச்சர்கூட எழுந்திருக்கவில்லை. யாரும் அவரை கண்டு கொள்ளவும் இல்லை.. ஆனாலும் அம்மாவைவிடவும் கம்பீர நடை.. யாரையும் சட்டைகூட செய்யவில்லை. ஒரே சீரான பார்வையுடன் சீட்டில் அமர்ந்தவர்.. பக்கத்தில் இருந்தவர் பக்கம்கூட கடைசிவரையிலும் திரும்பவில்லை..! யாருடனும் பேசவில்லை. பிற்பாடு ஜெயலலிதா கீழிறங்கி வந்து அமர்ந்தபோது அவருடைய பக்கத்தில்கூட போகவில்லை. ஜெயலலிதா வெளியேறிய பின்பும் இருந்தும் நிகழ்ச்சிகளை கண்டுகளித்துவிட்டு கமல், ரஜினி பேசிய பின்பே எழுந்து போனார்.. 

விஜய் வந்தபோது அரங்கத்தில் ஒரு சின்ன கைதட்டல்கூட இல்லை.. அதுவரையிலும் அரங்கத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவருமே அதிமுக கட்சித் தொண்டர்கள் என்பதாலோ என்னவோ தெரியவில்லை. ஆச்சரியமாகத்தான் இருந்தது..! பி.ஆர்.ஓ.க்கள் காட்டிய இடத்தில் அமைதியாக, அடக்கமாக 3-ம் வரிசையில் அமர்ந்தார் விஜய். அவருக்கு அருகில் குட்டி பத்மினி மட்டுமே போய் பேசிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் தல அஜீத் ஷாலினியுடன் உள்ளே வர அவரை மேடைக்கு இடது பக்கம் கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் தள்ளிவிட்டார் அரசு பி.ஆர்.ஓ. சினிமா பி.ஆர்.ஓ.க்கள் விஜய் பக்கம் அஜீத்தை அழைத்துச் செல்ல முயற்சித்தும், அரசு பி.ஆர்.ஓ. உறுதியுடன் இருக்க.. அஜீத் பிரச்சனை வேண்டாம் என்று அங்கேயே அமர்ந்து கொண்டார்..!

ஜெயலலிதா மேடைக்கு வருவதற்கு முன்பாகவே அவரிடத்தில் விருது பெற இருப்பவர்களை மேடைக்கு அழைத்துக் கொண்டிருந்தார்கள். பலரும் போய் அமர்ந்து கொள்ள.. இந்த நேரத்தில்தான் மகள் ஐஸ்வர்யாவோடு ரஜினி வேகமாய் உள்ளே வந்தார். 


வந்தவரை அப்படியே மேடைக்கு அழைத்தார்கள். மேடையேறினார்.. மேடையில் இருந்த ஏவி.எம்.சரவணனுக்கு வணக்கத்தைச் சொல்லிவிட்டு முன் வரிசையில் அவரருகில் அமர்ந்தார். மேடையில் முதல் வரிசையில் இருந்த இருக்கைகளில் உட்கார இருப்பவர்களின் பெயர்கள் எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது. ரஜினி அதனை கவனிக்கவில்லை.. சில நொடிகளில் ஒருவர் ரஜினியிடம் வந்து, அவருக்கான இடம் பின்னால் இருப்பதாக சொல்ல.. ஒரு நொடிகூட தாமதிக்காமல் பின்னால் சென்று கடைசி வரிசையில் கடைசி ஆளாக அமர்ந்து கொண்டார்..! நடிகர் சங்கத்தின் சார்பாக சரத்குமார், இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக விக்ரமன், தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக கேயார், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக ரோகிணி பன்னீர்செல்வம், அபிராமி ராமநாதன், பிலிம் சேம்பர் தலைவர், செயலாளர், பொருளாளர் இவர்களுடன் ஏவி.எம்.சரவணன், சிவக்குமார் ஆகியோரும் மேடையில் முதல்வருடன் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

ஜெயலலிதா மேடைக்கு வந்து அமர்ந்த பின்பும் விருந்தினர்கள் கீழே வந்து கொண்டேயிருந்தார்கள்..! சீப் செகரட்டரி பேசிக் கொண்டிருக்கும்போதுதான் கமல் உள்ளே வந்தார். மேடையேறியவரை மேடையில் இருந்த செக்யூரிட்டிகள் எங்கயாவது உட்காரலாம் என்று கை காட்ட.. முதல் வரிசையில் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் அருகில் சென்று அமர்ந்தார்.. இவருக்கு பின்பு இசைஞானி இளையராஜா வந்தார். அவரும் மேடையேறினார். பின்பு  ஸ்ரீதேவி.. மேடையின் கடைசி வரிசையில் அமர்ந்தார்..!

அரங்கத்தின் 4 இடங்களில் பெரிய ஸ்கிரீன் வைத்து நிகழ்ச்சிகளை திரையிட்டார்கள்.. ஆத்தாவை சீக்கிரமாக அனுப்பி வைக்க வேண்டும் என்ற அரசு கொள்கையின்படி தமிழ்ச் சினிமாவின் வரலாற்றை எண்ணி 4 நிமிடங்களில் முடித்து வைத்தார்கள். ரன் வேகத்தில் ஓடியது அத்தனையும்.. ஒரு ஆளுக்கு ஒரே ஒரு காட்சி மட்டுமே.. ஒரேயொரு பாடல் வரி மட்டுமே.. பராசக்தியின் “கோவிலில் குழப்பம் விளைவித்தேன்.. கோவில் கூடாது என்பதற்காக அல்ல.. அது கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாதே என்பதற்காக..!” என்ற வசனம் முழுமையாக ஒளிபரப்பானதுதான் ஆச்சரியமான ஒன்று.. 

வீடியோவில் பெருளவுக்கு எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மட்டுமே புகழ்ந்து தள்ளியிருந்தார்கள்.. வாகை சந்திரசேகர் நடிப்பில் 'ஊமை விழிகள்' பாடலின் ஒரு வரி.. 'முந்தானை முடிச்சு'வில் கே.பாக்யராஜின் ஒரு சின்ன ஷாட்.. 'புலன் விசாரணை' படத்தின் விஜயகாந்தின் சண்டை காட்சியின் சின்ன ஷாட்.. விஜய்யின் 'தலைவா' படத்தின் சண்டை காட்சியின் சிங்கிள் ஷாட்.. என்று எல்லாமே சின்ன சின்னதாகவோ கண் இமைக்கும் நேரத்தில் வந்து போனது.. கலைஞர் கருணாநிதியின் புகைப்படமும் இடையில் காண்பிக்கப்பட்டது.. ஆனால் அத்தனையும் வேஸ்ட்டு.. யாரால் இதையெல்லாம் ஞாபகம் வைத்திருக்க முடியும்..? 

தமிழ்த் திரையுலகம் சார்பாக சாதனையாளர் விருது பெற்றவர்கள் பட்டியல்தான் ரொம்ப நீளம்.. எஸ்.எஸ்.ராஜேந்திரன், கமலஹாசன், சிவக்குமார், ரஜினிகாந்த், பிரபு, விவேக், ஏவி.எம். சரவணன், பிரசாத் ஸ்டியோ அதிபர் ரமேஷ் பிரசாத், ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ், இயக்குநர்கள் மகேந்திரன், பி.வாசு, அபிராமி ராமநாதன்,  தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, திரைப்பட வெளியிட்டாளர் ஜோகர், கோவை எலைட் தியோட்டர் அதிபர், இயக்குனர் சி.வி.ராஜேந்திரன், இசைஞானி இளையராஜா, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, சரோஜாதேவி மற்றும் நடிகைகள் மனோரமா, எம்.என்.ராஜன், ராஜஸ்ரீ, சாரதா, காஞ்சனா, கிருஷ்ணகுமாரி, செளகார் ஜானகி, ஜெயசுதா, ஜெயபிரதா, மீனா, சிம்ரன், திரிஷா,  வயலினிஸ்ட் என்.ராமசுப்பிரமணியம், பின்னனி பாடகியர் - எல்.ஆர்.ஈஸ்வரி, ஜமுனா ராணி, எம்.எல்.ராஜேஷ்வரி, கவிஞர் புலமைப்பித்தன், வசனகர்த்தா ஆரூர்தாஸ், ஒளிப்பதிவாளர் என்.எஸ்.வர்மா, பட தொகுப்பாளர்கள் பாபு, விட்டல், நடன இயக்குனர்கள் சுந்தரம் (அவர் சார்பாக ராஜூசுந்தரம் விருதை பெற்றுக் கொண்டார்.) தாரா, ஒளிப்பதிவாளர் கண்ணன், ஓப்பனை கலைஞர் மாதவராவ், ஸ்டன்ட் மாதவன், ஆடை வடிவமைப்பாளர் கொண்டையா, தொழில் நுட்ப கலைஞர் சாமிகண்ணு, ஸ்டில் கேமிரா சங்கர்ராவ், டப்பிங் கலைஞர்கள் - காளை, கே.ஆர்.அனுராதா  ஆகியோரும் விருதுகளைப் பெற்றனர். 


விருது கொடுத்தபோது அதிகமாக யாருடனும் பேசாமல் சிரிப்பை மட்டுமே உதிர்த்துவிட்டு நின்றார் ஆத்தா.. எஸ்.எஸ்.ராஜேந்திரனிடமாவது நாலு வார்த்தை பேசி நல்லாயிருக்கீங்களான்னு கேப்பாங்கன்னு பார்த்தா.. ஒரு கும்பிடு.. அவ்வளவுதான்.. பாவம்.. எஸ்.எஸ்.ஆர்.. சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருப்பதைவிட இது அவரை மிகவும் கஷ்டப்படுத்தியிருக்கும்ன்னு நினைக்கிறேன்..! 



ஒரு சில எடிட்டர், ஒளிப்பதிவாளர்கள் மட்டுமே ஆத்தாவிடம் விடாப்பிடியாக பேசிவிட்டுத்தான் அகன்றார்கள். கமலுக்கும், ரஜினிக்கும் ஒரு பார்வை. அவ்வளவுதான்..! மனோரமாவும், சரோஜாதேவியும் பாசத்தோடு ஆத்தாவின் கைகளை முத்தமிட.. செளகார் ஜானகியின் கன்னத்தைத் தடவி பாசத்தோடு பேசினார் ஆத்தா..!


விருது கொடுத்த பின்பு அனைவரையும் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க அழைத்தபோது யாருக்கும் ஆர்வமில்லாமல் அப்படியே இருந்தார்கள். மறுபடியும் மைக்கில் உட்கார்ந்திருப்பவர்களெல்லாம் எழுந்து நின்று பின் வரிசைக்கு வருமாறு அழுத்தமாகச் சொல்ல இப்போதுதான் ரஜினி, கமல், இளையராஜா எல்லோருமே எழுந்து வந்து ஒட்டி நின்று வேண்டா வெறுப்பாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துத் தொலைத்தார்கள்..! 

ஏற்கெனவே தனக்கென்று ஸ்பெஷலாக வைக்கப்பட்டிருந்த மைக்கில் தனது பேருரையைத் துவக்கினார் ஆத்தா..!

"இந்த இனிய மாலைப்பொழுதில் இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தினை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, எனக்கு முகவரி தந்த திரைப்படத்துறையை சார்ந்த உங்களிடையே உரையாற்றுவதிலும், திரைப்படத்துறையில் சாதனை படைத்துள்ள 59 பேர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிப்பதிலும் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

சினிமாவிற்கு முதலில் வடிவம் கொடுத்தவர்கள் பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த லூமியர் சகோதரர்கள் என்றாலும், இந்தியாவில் முதன் முதலில் பேசாப் படத்தை தயாரித்து வெளியிட்டப் பெருமை இந்திய சினிமாவின் தந்தை என்றழைக்கப்படும் தாதா சாகிப் பால்கேயையே சாரும். இவர் தயாரித்த ‘‘ராஜா அரிஷ்சந்திரா’’ படம் 1913-ம் ஆண்டில் வெளிவந்ததன் அடிப்படையில், இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை நாம் இங்கே கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இதனைத் தொடர்ந்து, ‘‘கீசக வதம்’’ என்ற ஊமைத்திரைப்படம் நடராஜ முதலியாரால் தயாரிக்கப்பட்டு 1916-ம் ஆண்டு வெளிவந்தது. பின்னர், இந்தி மொழியில் ‘‘ஆலம் ஆரா’’ என்ற பேசும் படம் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்டது. தமிழ்மொழியில், முதல் பேசும் படமாக ‘‘காளிதாஸ்’’ திரைப்படம் 1931-ம் ஆண்டு திரையிடப்பட்டது. ஊமைப்படங்களாக ஆரம்பித்து, பேசும் படங்களாகவும், வண்ணப்படங்களாகவும் மாறி, இன்று பலர் போற்றும் அளவுக்கு, சினிமாத்துறை பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது.

முந்தைய காலங்களில், நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், ஒரு திரைப்படம் 100 நாட்கள் ஓடியது என்றாலே அது மிகப்பெரும் வெற்றி; மிகப்பெரும் சாதனை என்று கருதப்பட்டது. நூறு நாட்கள் முடிந்தபின் வெற்றி விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டு, நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் என அத்திரைப்படத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் நினைவுப்பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்படும். ஒரு சினிமா படம், நூறு நாட்கள் ஓடினாலே, மிகப்பெரும் சாதனை, என்று கருதப்படும்போது, இந்திய சினிமா இன்று நூறு ஆண்டுகள், நிறைவு செய்துள்ளது என்பது, பிரமிக்கத்தக்க, பிரம்மாண்டமான சாதனை. இது நம் அனைவரையுமே மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகிறது.
உதவிய பிரபலங்கள்

இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு உதவிய பிரபல திரைப்படத்தயாரிப்பாளர்களும், திரைப்படங்களை தயாரிக்கும் ஸ்டூடியோக்களையும் நிறுவியவர்களுமான, தாதாசாகிப் பால்கே, ஏ.வி.மெய்யப்ப செட்டியார், நாகி ரெட்டி, சக்கரபாணி, எஸ்.எஸ்.வாசன், ஸ்ரீராமுலு நாயுடு, எம்.எம்.ஏ. சின்னப்ப தேவர், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், எல்.வி.பிரசாத், பி.ஆர்.பந்தலு, வி.சாந்தாராம்; பிரபல திரைப்பட இயக்குனர்களான சத்யஜித் ரே, பிமல் ராய், வேதாந்தம் ராகவைய்யா, ஏ.பீம்சிங், கே.சங்கர், விட்டலாச்சாரியா, ப.நீலகண்டன், ஏ.சி.திருலோகச்சந்தர், கிருஷ்ணன்-பஞ்சு, யோகானந்த், பி.புல்லைய்யா, ஏ.பி.நாகராஜன்; தன்னுடைய கதைகளின் மூலம் தமிழ்நாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பேரறிஞர் அண்ணா; திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு நல்ல கருத்துகளைப் பரப்பி, மக்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கும் எம்.ஜி.ஆர்.; பிரபல திரைப்பட நடிகர்களான தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ராமா ராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், உதயகுமார், ராஜ்குமார், பிரேம்நசீர், சத்யன், கே.ஏ.தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், திலீப் குமார், ராஜ்கபூர், தேவ்ஆனந்த், பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பிரான், எஸ்.வி. சுப்பைய்யா, எஸ்.வி.ரங்கா ராவ், ரேலங்கி, கும்மிடி வெங்கடேஸ்வர ராவ்; பிரபல நாடக நடிகர்களான டி.கே.எஸ்.சகோதரர்கள், விஸ்வநாத தாஸ், எஸ்.வி.சஹஸ்ரநாமம்;

பிரபல திரைப்பட நடிகைகளான கண்ணாம்பா, பி.பானுமதி, டி.பி.மதுரம், டி.ஆர்.ராஜகுமாரி, பண்டரிபாய், நர்கிஸ், சுரைய்யா, மதுபாலா, பத்மினி, சாவித்ரி, தேவிகா, வைஜயந்தி மாலா, ஜமுனா, சரோஜாதேவி, அஞ்சலிதேவி, சவுகார்ஜானகி, கிருஷ்ணகுமாரி, சூரியகாந்தம், டி.பி.முத்துலட்சுமி; பிரபல ஒளிப்பதிவாளர்களான மாருதி ராவ், பிரசாத், மார்கஸ் பார்ட்லே, ஏ.ராமமூர்த்தி, வின்செண்ட், சுந்தரம், வர்மா; பிரபல நிழற்பட கலைஞர்களான நாகராஜ ராவ், வெங்கடா சாரி, ஸ்டில் சாரதி; பிரபல நடன இயக்குநர்களான கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை, சோஹன்லால், ஹிராலால், ஏ.கே.சோப்ரா, தங்கப்பன், சின்னி சம்பத், பி.கோபாலகிருஷ்ணன், பசுமர்த்தி கிருஷ்ணமூர்த்தி, வெம்பட்டி சத்யம்; பிரபல இசையமைப்பாளர்களான ஜி.ராமநாதன், நவுஷாத், சங்கர்-ஜெய்கிஷண், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா, ஹேமந்த்குமார், சி.ராமச்சந்திரா, மதன் மோகன், லக்ஷ்மிகாந்த் பியாரேலால், ஆதிநாராயண ராவ்; பிரபல பாடலாசிரியர்களான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன், மருதகாசி, வாலி; பிரபல பின்னணிப்பாடகர்களான டி.எம்.சவுந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், முகமது ரபி, கிஷோர் குமார், கண்டசாலா, ஏ.எம்.ராஜா; பிரபல திரைப்பட பின்னணி பாடகிகளான பி.லீலா, ஜிக்கி, லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே, கீதா தத், பி.சுசீலா, எஸ்.ஜானகி, ஜமுனா ராணி, எல்.ஆர்.ஈஸ்வரி போன்ற எண்ணற்றோரின் பங்கு மகத்தானது.

அரசியலிலும், பொது வாழ்விலும், மொழி மாறுதல்களிலும், வட்டார வேறுபாடுகளை மக்களிடையே எடுத்துச்சென்றதில், திரைப்படங்களுக்கு முக்கியப்பங்கு உண்டு என்றாலும், அரசியலில் திரைப்படத்தின் ஆதிக்கம் என்றவுடன், நம் நெஞ்சங்களில் முதலில் நிற்பவர் எம்.ஜி.ஆர்.தான். மனிதன் நாகரிகமடைந்து உருவாக்கிய படைப்புகளிலேயே உன்னதமான கலைப்படைப்பு சினிமா என்று சொன்னால் அது மிகையாகாது. சினிமா கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, இசை, இலக்கியம், ஓவியம், நாட்டியம், நாடகம் என, பல கலைகள் மக்களின் மனதை மகிழ்விக்கவும், வளப்படுத்தவும், பலப்படுத்தவும் பயன்பட்டன. இந்த கலைகளோடு, அவ்வப்போது கண்டுபிடிக்கப்படும் நவீன அறிவியல் யுக்திகள் மற்றும் கலைகளும் சினிமாவில் பயன்படுத்தப்படுகின்றன. அதனால்தான், வேறு எந்த கலை வடிவத்தையும் விட எளிதாக மக்களை ஈர்க்கும் வலிமை திரைப்படத்திற்கு இருக்கிறது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், திரைப்படம் இன்று மனித வாழ்க்கையில் இன்றியமையா இடத்தைப்பெற்றுள்ளது என்று கூறலாம். புராணக்கதைகளையும், இந்திய விடுதலைக்காக போராடியவர்களின் வரலாற்றினையும், பகுத்தறிவு சிந்தனையையும் மக்களிடையே எடுத்துச்சென்ற பெருமை சினிமா துறையையே சாரும்.  உலகின் நெடுந்தூரம் சென்று காணமுடியாத அற்புதங்களை, இருந்த இடத்திலிருந்து காண திரைப்படம் வழி வகுத்துள்ளது. பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க உறுதுணையாக திரைப்படத்துறை உள்ளது. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு, பல்வேறு துறைகளில் திரைப்படம் உதவி செய்கிறது. அரசின் நிகழ்ச்சிகளை, ஆக்கப்பணிகளை, மக்கள் நலத்திட்டங்களை, மக்களிடையே எடுத்துச்செல்ல திரைப்படங்கள் பெரிதும் உதவுகின்றன.

இப்படிப்பட்ட இன்றியமையாத்தன்மை வாய்ந்த திரைப்படத்துறையில் நானும் பணியாற்றியிருக்கிறேன் என்பதை நினைக்கும்போது, எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. திரைப்படங்கள் மக்களை நல்வழிப்படுத்துவதற்காகவே அமைய வேண்டும் என்ற எனது விருப்பத்தினை இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்கும் போதெல்லாம் திரைப்படத்துறையினருக்கு, பல்வேறு சலுகைகளை அளித்திருக்கிறேன். குறைந்த முதலீட்டில் திரைப்படம் எடுக்கும் சிறு தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அந்தத்திரைப்படத்திற்கான மானியத்தொகையையும், திரைப்படங்களின் எண்ணிக்கையையும் உயர்த்தியது; தயாரிப்பாளர்களின் அலைச்சலை குறைக்கும் வகையில், ஒற்றைச்சாளர முறையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது; சிவாஜி கணேசனின் பெயரில் ‘சிவாஜிகணேசன் விருது’ தோற்றுவிக்கப்பட்டது; திரைப்படத் தொழிலாளர்கள் பணிபுரியும்போது உயிரிழந்தாலோ, ஊனமுற்றாலோ, அவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது; பெண்களை உயர்வாக சித்தரிக்கும் கதையம்சம் கொண்ட திரைப்படத்திற்கு, அரசு விருது வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது;

‘சிறந்த திரைப்பட ஒப்பனைக்கலைஞர்’ ஒருவருக்கும், ‘சிறந்த திரைப்பட தையற் கலைஞர்’ ஒருவருக்கும் விருது வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது; பின்னணிக்குரல் கொடுப்பவர்களுக்கு விருது வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது; சிறந்த நகைச்சுவை நடிகை, சிறந்த குணசித்திர நடிகர், சிறந்த குணசித்திர நடிகை ஆகியோருக்கு புதிய விருதுகள் தோற்றுவிக்கப்பட்டது; சட்டத்திற்கு புறம்பாக திருட்டு வீடியோக்கள் எடுக்கப்படுவதை, தடுக்கும் வகையில், ‘காணொலி திருட்டு தடுப்புப்பிரிவு’ எனும் ஒரு தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது; திருட்டு வீடியோ தொழிலில் ஈடுபட்டு குற்றம் இழைப்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வழிவகை செய்தது என, அடுக்கிக்கொண்டே போகும் அளவுக்கு பல்வேறு திட்டங்கள் எனது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டன.

மேலும், சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு, கடந்த ஆண்டு, அரசு சார்பில் ரூ.50 லட்சம் மானியம் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில், 2013-2014-ம் கல்வியாண்டு முதல் ‘அனிமேஷன் அண்டு விஷுவல் எபக்ட்ஸ்’ எனும் புதிய பாடப்பிரிவு தொடங்கப்படவும்; அதற்கென 41 பணியிடங்களை தோற்றுவிக்கவும் ரூ.9 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நான் உத்தரவிட்டேன்.


அங்குள்ள ‘பிரிவியூ தியேட்டர்’ நவீன வசதிகளுடன் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகிறது. திரைப்படத்துறையினர் நலவாரியத்தில் அதிகளவில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது ஆட்சியில் திரைப்படத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது.." என்றார்.


நிகழ்ச்சி முடிந்து கீழே இறங்கி வந்தார் ஆத்தா. இந்த நேரத்தில் ரஜினியும்  என்ன ஸ்பீடு..? என்ன ஸ்பீடு..? மின்னல் வேகத்தில் பறந்து வந்து வலது பக்க முன் வரிசையில் கே.பி.யின் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்..! பின்பு கேமிராக்கள் அவரை மட்டுமே சுற்றிச் சுற்றி வர.. எப்படியோ உள்ளே வந்து விஜய்யின் பக்கத்தில் அமர்ந்திருந்த விக்ரம் அப்போதுதான் கேமிராவின் கண்களுக்கு பட்டு பெரிய ஸ்கிரினீல் தெரிந்தார்.. 


கூட்டத்தில் நசுங்கிப் போய் உட்கார்ந்திருந்த தல அஜீத் வரவேயில்லை என்றே பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர். கேமிராக்களும் அவர் பக்கம் போகாமலேயே இருந்தது..! ஆத்தாவும் கீழே வந்து அமர.. கலை நிகழ்ச்சிகள் தொடங்கின..!  முதலில் பள்ளி குழந்தைகளின் நடனத்தில் 'அம்மா, அம்மா' என்ற பாடலுடன் கூடிய டான்ஸ்.. வந்திருந்த ரத்தத்தின் ரத்தங்களின் கைதட்டல் பலமாகவே இவர்களுக்குக் கிடைத்தது..! அடுத்தது முரசு டான்ஸ்.. நாசர் இதில் ராஜா போல் ஆக்ட்டிங் கொடுக்க நடிகைகள் மாறி மாறி வந்து பல பாடல்களுக்கு ஆடிவிட்டுச் சென்றனர்.. 'மன்மத லீலையை வென்றார் உண்டோ..?' 'சின்னக்குட்டி' என்றொரு பாடல்.. 'ரோசாவே' என்றொரு பழைய பாடல்.. 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே' என்ற பாடல்.. என்று இவைகளுக்கு நாசருடன் விமலும், விஜய் சேதுபதியும் இணைந்து ஆடியிருந்தார்கள். நடிகைகள்தான் யாரென்று தெரியவில்லை..! பின்பு 'சந்திரலேகா'வின் முரசு டான்ஸுக்கு வரலட்சுமி அம்சமாக ஆடி முடித்தார்..


இது முடிந்ததும் ஆத்தா, ஆத்துக்கு கிளம்பினார்.. அரங்கத்தில் அனைவருமே அப்பாடா என்று ரிலாக்ஸானார்கள்.. முன் வரிசையில் இருந்த அடிமை மந்திரிகள் அனைவரும் அம்மாவை வழியனுப்ப வெளியே போக.. அவர்களும் சேர்ந்தே போய்விட்டார்கள் என்றெண்ணி பின் வரிசை கூட்டமெல்லாம் முந்திக் கொண்டு முன் வரிசையில் போய் உட்கார்ந்து கொண்டது.. உடனேயே விருந்தினர்களுக்கு சிற்றுண்டியும் கொடுக்கப்பட துவங்க.. இவ்வளவு நேரம் காணாமல் போயிருந்த கமல் மீண்டும் அரங்கத்தில் நுழைந்தார்.. கே.பி. எழுந்து செல்ல.. அந்த இடத்தில் கமல் அமர்ந்து கொள்ள.. பிளாஷ் வெளிச்சத்தில் தமிழ்த் திரையுலகின் இரண்டு முதல்வர்களும் நனைந்தார்கள்..!

தொகுத்து வழங்கிய ஜெயா டிவியின் அறிவிப்பாளர்களின் சொதப்பல் வர்ணனையை ரசிக்கவே முடியவில்லை..! சத்யராஜ் மேடைக்கு வந்து எம்.ஜி.ஆர். பாடல்களை பற்றி பேசிவிட்டுப் போனார்.. இந்த நேரத்தில் மந்திரிகள் அனைவரும் மீண்டும் உள்ளே நுழைய.. திடுக்கிட்ட செக்யூரிட்டிகள்.. முதல் வரிசையில் இருந்தவர்களிடம் கெஞ்சி கூத்தாடி அவர்களை பின்னாடி அனுப்பிவைத்தார்கள். புரோட்டாகால்படி அமைச்சரவையில் இரண்டாமிடம் தேனி பன்னீர்செல்வத்திற்கு. மூன்றாமிடம் நத்தம் விஸ்வநாதனுக்காம்.. இருவரும் அப்படித்தான் அடுத்தடுத்து அமர்ந்திருந்தார்கள்..!


மறுபடியும் டான்ஸ் ஆரம்பிச்சது.. 'நான் ஆணையிட்டால்'.. 'நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க'.. 'தங்கப் பதக்கத்தின் மேலே'.. 'ஆடலுடன் பாடலைக் கேட்டு'.. 'நாணமோ இன்னும் நாணமோ', 'நீங்க நல்லா இருக்கோணும்' போன்ற பாடல்களுக்கு ஓவியா, லஷ்மிராய், ரமேஷ்கண்ணா, விமல் உட்பட பலரும் ஆடினார்கள்..! அடுத்து தமிழ்ச் சினிமாவின் சாதனையாளர்கள் வரிசையில் பலரையும் வீடியோவில் காட்டும்போது ஜெயல்லிதாவையும் காட்டித் தொலைத்தார்கள்..! அதில் மிக்ஸி கிரைண்டரை இலவசமாக கொடுப்பதையும் காண்பித்தார்கள்.. என்னவொரு டெடிகேஷன் நம்ம இயக்குநர்களுக்கு..? 

சந்தானத்தின் வருகைக்கு அப்படியொரு கைதட்டல்..! இந்தப் பெயரையும், புகழையும் அடுத்தடுத்து அவர் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.. ஆர்யாவுடன் இணைந்து மேடைக்கு வந்த சந்தானம், ஒரு டிக்டாக் நடத்திவிட்டுச் சென்றார்..! 

அடுத்து ஸ்டண்ட் ஷோ.. பாடி லைட்டிங் ஸ்டைலில் செய்த இந்த ஒன்றுதான் தமிழ் கேட்டகிரியில் உருப்படியானது என்று நினைக்கிறேன்..! தொடர்ந்து நடிகர் விவேக் தியாகராஜ பாகவதராக வர, அவரை செல்முருகன் பேட்டியெடுத்தார்.. கலகல பேட்டி.. ஆனாலும் அநியாயத்திற்கு அம்மா புராணம்.. 'அம்மா உணவகம்'.. 'அம்மா தண்ணீர்' என்று இரண்டுக்கும் பெருமளவுக்கு விளம்பரம் செய்து கொடுத்திருக்கிறார் விவேக். அநேகமாக இவர் பேசியவைகள் ஜெயா டிவியில் தொடர் விளம்பரமாக வரவும் வாய்ப்புண்டு..!  அரசியல் தவிர்த்து இந்த நிகழ்ச்சியும் நன்றாகத்தான் இருந்தது..! 

தொடர்ந்து ஸ்டண்ட் சிவாவும், அவரது மனைவியும் இணைந்து ஒரு ஸ்டண்ட் ஷோவை மேடையில் செய்து காட்டினார்கள்.. எதுக்கு இத்தனை ஸ்டண்டுகள் என்று பின்புதான் தெரிந்த்து.. அடுத்து விஜய்யை மேடையேற்றினார்கள்.. அரங்கம் அதிர வரவேற்கப்பட்டார்.. ஸ்டண்ட் நடிகர்கள் பற்றி மிக உருக்கமாகவும், அம்மாவை வாழ்த்தியும், புகழ்ந்தும் பேசித் தள்ளினார்.. அடுத்து 'ஜில்லா' வருதுல்ல..!!!?

மீண்டும் டான்ஸ்.. டான்ஸ்.. டான்ஸ்.. கார்த்தியும் ஹன்ஸிகாவும் சேர்ந்து ஆடிய 'உத்தமபுத்திரன்' படத்தின் 'யாரடி நீ மோகினி' பாட்டுக்கு டான்ஸ் சூப்பர்.. அடுத்து காஜல் அகர்வாலும் வந்து ஏதோவொரு பாட்டுக்கு ஆடிவிட்டுப் போனார்.. தொடர்ந்து மேடையேறிய சூர்யாவை லிங்குசாமி பேட்டியெடுத்தார்.. சிங்கம்-2 படத்தின் அந்த பஞ்ச் டயலாக்கை பேசி காட்டினார் சூர்யா.. அதையே தெலுங்கிலும் பேசி காட்டினார்.. "கார்த்தி ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க தான் அதில் வில்லனாக நடிக்கணும். ஆனா கிளைமாக்ஸ்ல அடியெல்லாம் வாங்க மாட்டேன்.. இது என்னோட ஆசை.." என்றார் சூர்யா.. தமிழில் இதுவரையிலும் வந்த படங்களிலேயே அவருக்குப் பிடித்த 10 படங்களைப் பட்டியலிட்டார். ஸாரி.. எனக்கு மறந்து போச்சு..!

அம்பிகா, ராதா, லிஸி, சுஹாசினி, ரோகிணி, ஊர்வசி - இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து 'மண்வாசனை' படத்தின் 'பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு' பாட்டுக்கு இப்படியும், அப்படியுமாக கை, கால்களை ஆட்டி அபிநயம் பிடித்துவிட்டு டான்ஸ் ஆடிவிட்டதாக சொல்லி எஸ்கேப்பானார்கள்..!

தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் மேடையேறி கமல்ஹாசன் பற்றிய வீடியோவை அறிமுகம் செய்தார்.. கமலின் அத்தனை நவரசங்களையும் அழகாக தொகுத்திருந்தார்கள். சூப்பர்.. இது முடிந்தபோது கமல் கண் கலங்கியிருக்க.. ரஜினி கமலின் கையைப் பிடித்து பலமாகக் குலுக்கினார்..! மேடையேறிய கமல்ஹாசன், "சினிமாவில், நான் 50 வருடங்களாக இருந்தாலும் இன்னும் சின்ன குழந்தைதான். குழந்தையாக இருந்தபோது சிவாஜியின் மடியிலும், எம்.ஜி.ஆரின் தோளிலும் வளர்ந்தவன். நான் ஜெயிக்காமல் இருக்க முடியுமா? சினிமாவில் எனக்கு இரண்டு குருக்கள் இருக்கிறார்கள். ஒருவர், சிவாஜி. இன்னொருவர், கே.பாலசந்தர். இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாடும் இந்த வேளையில், என்னை வளர்த்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த தலைமுறையினர் எங்களைவிட பெரிய அளவில் வளர வேண்டும்" என்றார் கமல்ஹாசன்.

பி.வாசு மேடையேறி ரஜினி பற்றிய வீடியோவை அறிமுகம் செய்தார். கூடவே ரஜினி பற்றிய இரண்டு விஷயங்களை தெரிவித்தார். 'சந்திரமுகி' படத்தின் ஷூட்டிங் முடிந்து வேறொரு இடத்திற்கு ஷிப்டாகும்போது மைசூரில் இருந்து 7 மணி நேரம் பயணம் செய்து வேறொரு இடத்திற்கு ரஜனியை அனுப்பிவிட்டாராம். இவர் பின்னாடி வேறொரு காரில் வந்து அந்த ஊரின் ஹோட்டலில் ரூம் கேட்ட போது "அட்வான்ஸ் யாரும் கொடுக்கலை. அதுனால நாங்க ரூம் புக் செய்யலை"ன்னு ரிசப்ஷன்ல சொன்னாங்களாம்.. நமக்கு முன்னாடி வந்த ரஜினி எங்கன்னு தேடினப்போ வெளில வந்த கார்லேயே கண்ணாடியை இறக்கிவிட்டுட்டு கர்சீப்பை முகத்துல போர்த்திக்கிட்டு படுத்திருந்தாராம்.. இதைப் பார்த்து கோபப்பட்டு போய் ரிசப்ஷன்ல பி.வாசு கத்தினாராம்.. "நாங்கெள்லாம் யாருன்னு நினைச்ச.. நான் யாருன்னு தெரியுமா? பி.வாசு"ன்னு சொல்லும்போது பின்னாடி வந்து நின்ன ரஜினி, "வாசு ஸார்.. நாம யாருன்னு நாமளே சொல்லக் கூடாது. அவங்கதான் சொல்லணும்"ன்னு சொல்லி பேச்சை கட் செஞ்சாராம்.. "இப்படி நிறைய விஷயத்தை ரஜினிகிட்ட நான் கத்துக்கிட்டேன்"னாரு வாசு.. "இப்போ வேட்டையனை மேடைக்கு அழைக்கிறேன்"னு சொல்ல 'வேட்டையன்' ரன் ஸ்பீடில் அரங்கம் அதிரும் கைதட்டலோடு மேடையேறினார்..!

ரஜினி பேசும்போது, "இந்த விழாவை மிக சிறப்பாக நடத்தியதற்காக, முதல்-அமைச்சருக்கு என் நன்றி. என் திரையுலக அண்ணன் கமல்ஹாசனுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. அன்றும் சரி, இன்றும் சரி, நான் கமல் ரசிகன். இரண்டு பேரும் சேர்ந்து ஏழு, எட்டு படங்கள் நடித்தோம். கமல் இஷ்டப்பட்டு நடித்தார். நான் கஷ்டபட்டு நடிச்சேன். இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த வேளையில், சாதாரண ஆளாக இருந்த என்னை சினிமாவில் பெரிய ஆளாக்கிய கே.பாலசந்தருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வளர்த்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு நன்றி.

சமூகத்தில் இவ்வளவு பெரிய ஆளாக என்னை மதிக்கிற அனைவருக்கும் நன்றி. அது, சினிமா எனக்கு கொடுத்த பிச்சை. 38 வருஷமா சினிமால இருக்கேன். நடிப்பதை தவிர எனக்கு வேறு ஒண்ணும் தெரியாது. வேறு ரெண்டு, மூணு விஷயத்துல இறங்கி, என்னால் ஜெயிக்க முடியவில்லை. ஆனால், கமல் அப்படி அல்ல. நிறைய விஷயங்கள் தெரிந்தவர்.

சினிமாவில் வில்லனாக இருந்த என்னை காமெடியாக நடிக்க வைத்தவர், கே.பாலசந்தர். 'ஆறில் இருந்து அறுபதுவரை' படத்தில், என்னை சோகமாக நடிக்க வைத்தவர், எஸ்.பி.முத்துராமன். 'முள்ளும் மலரும்' படத்தில் இயல்பாக நடிக்க வைத்தவர், மகேந்திரன். 'பாட்ஷா' படத்தின் மூலம் என்னை எங்கேயோ கொண்டு போனவர், சுரேஷ் கிருஷ்ணா. 'முத்து', 'படையப்பா', 'கோச்சடையான்' ஆகிய படங்களில் கே.எஸ்.ரவிகுமார், ‘சந்திரமுகி’யில் பி.வாசு இவர்கள் எல்லாம் மறக்க முடியாதவர்கள். இவர்கள் எல்லோரும் என்னை உயரத்தில் தூக்கிக் கொண்டு போய் வைச்சுட்டு, போயிட்டாங்க. இப்போ நான் மட்டும் தனிமைல நிக்குறேன். 'டாப்'பில் இருப்பவர்களுக்கு இதுதான் பிரச்சினை. நான் கூட அப்பப்போ நினைச்சுக்குவேன்.. இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் சிவாஜிராவ்ன்னு..! 

சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்த தாதா சாகேப் பால்கே, சாந்தாராம், எஸ்.எஸ்.வாசன், ஏவி.மெய்யப்ப செட்டியார், நாகிரெட்டி, சக்ரபாணி இவர்கள் எல்லாம் போட்ட சாப்பாட்டை இப்போது நாம் வேறுவிதமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். சினிமா இப்போது எவ்வளவோ முன்னேறினாலும், 'சந்திரலேகா' மாதிரி ஒரு படத்தை எடுக்க முடியுமா? 'அவ்வையார்' படத்தை நான் பத்து வயதில் பார்த்தேன். அந்த பிரமிப்பு இன்னும் இருக்கிறது. எம்.ஜி.ஆர். நடித்த 'அடிமைப்பெண்', 'நாடோடி மன்னன்', சிவாஜி நடித்த 'திருவிளையாடல்', 'சரஸ்வதி சபதம்' ஆகிய படங்கள் எல்லாம் காவியங்கள். அந்த காவியங்களை படைத்து அமரர்களாகிப்போன மகான்களின் பாதங்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்துகிறேன். அதேபோன்ற இன்னொரு மகான், கமல்ஹாசன். 'அபூர்வ சகோதரர்கள்', 'தசாவதாரம்' ஆகிய படங்களை அவரை தவிர, வேறு எந்த நடிகராலும் நடிக்க முடியாது.

சினிமா, ஒரு வித்தியாசமான தொழில். இதில் தயாரிப்பாளர்கள்தான் எப்போதுமே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் தோற்று இருக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் சினிமாவில் தோற்று இருக்கிறார்கள். இது, ஒரு மாயாபஜார். அபூர்வமான உலகம்.  நான், 38 வருஷமா சினிமாவில் இருக்கேன். கமல், 55 வருஷமா சினிமாவில் இருக்காரு. நம் வாழ்நாளில் பார்க்க முடிகிற மிக திறமையான நடிகர் கமல். இப்போது வந்திருக்கிற இளம் நடிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது, பொருளாதார ரீதியாக உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள். அதுக்கப்புறம் நீங்க என்ன செய்யணும்னு நினைக்கிறீங்களோ அதைச் செய்யுங்க..." என்றார் ரஜினி..!

கமலும், ரஜினியும் பேசி முடித்துவிட்டு அப்படியே மேடையில் இருந்து கிளம்பிவிட முன் வரிசை அடிமை மந்திரிகளும் கிளம்பினார்கள்.. தல அஜீத்தும் கிளம்பிச் சென்றார்.. அவர் வெளியே போகும்போதுதான் பலரும் பார்த்து அட வந்திருக்காரா என்று ஆச்சரியப்பட்டார்கள். பின்னாலேயே ஓடிச் சென்ற சிலர் அவரை மேடைக்கு அழைக்க.. 'வேண்டாம்' என்று பட்டென்று சொல்லிவிட்டு ஷாலினியோடு நடையைக் கட்டினார்..!

இதற்குப் பின்பும் தொடர்ந்து டான்ஸ்.. டான்ஸ்.. டான்ஸ்.. எல்லாமே சினிமா பாடல்கள்.. ஒரு சில வரிகள் மட்டும்தான்.. ஒரே ஆள் 3 பாடல்களுக்கு தொடர்ச்சியாக ஆடி களைத்துப் போனார்கள்..! அடுத்து ஒரு நாடகம்.. அரதப் பழசான கதை.. செம போர்.. இதுவும் அம்மா புராணம்.. 'நேசம் புதுசு' இயக்குநர் வேல்முருகன் எழுதி இயக்கியது..! வரதட்சணை பற்றியது.. மனோபாலா, சீரியல் நடிகை கெளதமி, சிங்கம்புலி நடித்தது.. அப்போதே 11 மணியானதால் இதோடு கிளம்பிவிட்டேன்..!
புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : நக்கீரன்.காம் மற்றும் பல்வேறு இணையத்தளங்கள்

யா யா - சினிமா விமர்சனம்

21-09-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

யார் கண்ணு பட்டுச்சோ தெரியலை.. சிவாவுக்கு வந்த சோதனை இது..! வரிசையா காமெடி ஜெயிக்குதேன்னு நினைச்சு காமெடி இயக்குநரிடம் பாடம் பயின்றவருக்கு கால்ஷீட்டை கொடுத்து அது இத்தனை மொக்கையாகும்ன்னு நினைச்சுக்கூட பார்த்திருக்க மாட்டாரு..!

எந்த வகையான படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும், அது இயக்குநரின் திறமையைத்தான் வெளிப்படுத்தும்..! இந்தப் படத்தின் தோல்வி அதனை உறுதிப்படுத்துகிறது..! காமெடிசென்ஸ் அனைவருக்கும் வந்துவிடாது.. காமெடி இயக்கமும் அத்தனை சீக்கிரம் கிடைத்தும்விடாது.. கிடைத்தவர்கள் மட்டும்தான் ஜெயித்திருக்கிறார்கள்.. இந்த இயக்குநர் ஐ.ராஜசேகரன் இன்னமும் மெனக்கெட்டால்தான் அடுத்த வெற்றியைத் தொட முடியும் என்பதை இந்தப் படம் சொல்கிறது..!

சிவா, சந்தானம் இருவரும் இருக்கும்போது திரையில் அதகளம் செய்து தீபாவளியை கொண்டாடியிருக்க வேண்டாமா..? அமுங்கிப் போன புஸ்வானமாகிப் போய்விட்டது..! சிரிப்பு வருது.. சிரிப்பு வருதுன்னு மிக முயற்சி செய்தும் படத்தில் 3 இடங்களில் மட்டுமே நம் பல்லைக் காட்ட முடிந்தது.. அந்த அளவுக்கு ‘நகைச்சுவை’ படம் முழுவதும் இருக்கிறது..!


இயற்பெயர் ராமராஜனாம்.. அம்மா ரேகா, ராமராஜனின் தீவிர ரசிகை என்பதால் மகன் சிவாவுக்கு இப்படி பெயர் வைத்திருக்கிறார். கவர்ன்மெண்ட் வேலைக்குத்தான் போவேன் என்று ஒத்தைக் காலில் நிற்கிறார் சிவா. இப்போதைக்கு வெட்டி ஆபீஸர். இவரது அப்பா கட்சிக்காரர். ஆனால் ஆளும் கட்சியா... எதிர்க்கட்சியா என்று தெரியவில்லை..! ஒரு தங்கச்சி.. எப்படியாவது தினத்துக்கு பணத்தை வாங்கிவிட்டு வாழ்க்கையை ஓட்டும் அக்மார்க் தமிழ் ஹீரோ..! இவரது அத்தைப் பொண்ணு சந்தியா.. போலீஸ் கான்ஸ்டபிள்.. தன்னைத்தான் திருமணம் செய்து கொள்வார் சிவா என்று காத்திருக்கிறார் சந்தியா..

ராஜ்கிரண் என்ற இயற்பெயர் கொண்ட சேவாக் கேரக்டரில் சந்தானம்.. இன்னொரு பேட்டையின் வெட்டி ஆபீஸர்.. இவரது அப்பா ராஜ்கிரணின் தீவிர ரசிகர்.. அதுனால் இவருக்கு இந்தப் பேரு.. ரெண்டு பேரும் ஒரு மோதலில் துவங்கி நட்பாகி இணைப்பாகுகிறார்கள்..!

ஒரு பேருந்தில் தன்ஷிகாவை பார்க்கும் சிவா.. பார்த்தவுடன் காதல் கொள்ளும் தமிழ்ச் சினிமாவின் பார்முலாவை பின்பற்றுகிறார்..  தன்ஷிகாவின் ஹேண்ட்பேக்கில் தன் செல்போனை போட்டுவிட்டு பின்பு அது தனது போன் என்று சொல்லி கடலையை ஆரம்பிக்கிறார். அது வறுத்து காதலாகும் என்று அவரது நினைப்பு.. இடையில் புகும் ஒரு ஆளும் கட்சி கவுன்சிலர் இரு மடங்கு வயதாக இருந்தும் தன்ஷிகாவின் நினைப்பில் தன்னைக் கட்டிப் பிடித்ததால் ஷாக்குண்டு சிவா மீது காதல் கொள்கிறார். தேவதர்ஷிணி.. (வெளங்கிரும்..)

சந்தியாவும், தன்ஷிகாவும் நண்பிகள் என்பது சிவாவுக்குத் தெரியாமல் போக.. சந்தியாவின் ஏற்பாட்டில் செல்போன் ஓனரை தேடுவதாக சிவாவிடம் சொல்கிறார் தன்ஷிகா. தான் என்று சொன்னால் மாட்டிக் கொள்வோம் என்பதால் இன்னொரு வெட்டி ஆபீஸர் பவர் ஸ்டாரை அறிமுகப்படுத்தி வைக்கிறார் சிவா. பார்த்தமாத்திரத்தில் பவர் ஸ்டாரை காதலிப்பதாகச் சொல்லி சிவாவின் முகத்தில் கரியைப் பூசிவிட்டு போகிறார் தன்ஷிகா.. சிவா ஏமாற்றமாக.. பவர் ஸ்டார் துள்ளிக் குதிக்கிறார். ஆனால் அதற்கும் அடுத்த காட்சியிலேயே ஆப்பு விழுக.. கையில் பாய், தலைகாணியோடு அரங்கராஜன் பாலத்தின் அருகே படுக்க இடம் தேடி அலைகிறார் பவர் ஸ்டார்.. (உண்மையாவே ஒரு நாளைக்கு இந்தாளுக்கு இந்தக் கதிதான் நடக்கப் போவுது..!)

சந்தானத்தைக் கடத்திச் சென்று ஒரு புல் பாட்டில்.. சில ஆயிரங்களைக் கொடுத்து.. தனக்கும் சிவாவுக்குமான காதலை வாழ வைக்கச் சொல்கிறார் தேவதர்ஷிணி.. புல் கொடுத்த மயக்கத்தில் புல்லாகவே இதற்கு ஒத்துழைக்கிறார் சந்தானம். இவரது லீலையினால் அப்போதுதான் ஆரம்பித்த தன்ஷிகாவின் காதல் புட்டுக் கொள்ள.. இடைவேளை.. இதுக்கப்புறமும் பொறுமையா உக்காந்து பார்த்திருக்கேன்னா இந்தப் பதிவை படிக்கிறவங்க அவசியம் 5 கமெண்ட்டாவது போட்டு என்னைப் பாராட்டணும்..!
கடைசீல என்னாச்சுன்றதுதான் கதை..!

உஷ்.. அப்பாடா.. இப்ப வருது.. அப்ப வருதுன்னு காத்திருந்து காத்திருந்து.. தேவதர்ஷிணி-சந்தானம் பேசும்போது மட்டும்தான்யா சிரிப்பே வந்துச்சு.. அதுவும் ஒரு மணி நேரம் கழிச்சு.. முடியலை.. மொக்கையான திரைக்கதைகள்.. செயற்கையான நடிப்பு.. சந்தானத்தின் வழக்கமான 2 வரி கமெண்ட்டுகள் என்று போய்க் கொண்டேயிருப்பதால் கதைதான் என்ன என்று கடைசிவரையிலும் குழப்பம்தான் வருது..!

சந்தியா கல்யாணத்துக்கு இப்படியொரு பில்டப்பு தேவையா..? அங்கேயும் ஒரு சின்ன டிவிஸ்டு வைச்சு கிளைமாக்ஸுக்கு இழுத்திட்டுப் போயிருக்காங்க.. கிளைமாக்ஸ்லேயும் ஒரு மொக்கை டிவிஸ்ட்டு.. அதான் எல்லாருக்கும் தெரியப் போகுதே..? அப்புறமென்ன..? இதுகூட தெரியாமயே தமிழ்ச் சினிமா ரசிகர்கள் இருக்காங்க. இயக்குநருக்கு நம் மீது ரொம்பத்தான் பாசம்..!


இடைவேளைக்கு பின்பே 10 நிமிஷ இடைவெளியில் வரும் 2 பாடல்களும் சேர்ந்தே சோதனையைக் கொடுக்க தாங்க முடியாமல் இருக்கிறது..! ஒரு கண்ணாடியை பாடலும், யார்கிட்ட பாடலும்தான் ஓகே..! ஆனாலும் சிவா தன் நடிப்பையும் கொஞ்சம் இம்ப்ரூவ் செய்தால் நன்றாக இருக்கும்.. எதற்கெடுத்தாலும் தலையைக் குனிந்து கொள்வது.. தலையைச் சொரிவதும்.. அப்பாவியாய் பேசுவதுமாக எதுவுமே இந்தப் படத்துக்கு செட்டாகவில்லை..! 

சந்தியாவை குளோஸப்பில் பார்க்கவே முடியலை.. ஹீரோயின் வேற..? ம்ஹூம்.. தன்ஷிகா இட்ஸ் ஓகே.. பட் ஹீரோயினுக்கு இருக்க வேண்டிய அம்சங்கள்லாம் இல்லாம பர்பி பொம்மை மாதிரி காட்டித் தாளிச்சிருக்காங்க.. ஒரு கண்ணாடியை பாடல் காட்சியில் மட்டுமே ரசிக்க முடிகிறது.. காஸ்ட்யூமர் யாருன்னு விசாரிச்சு நாலு சாத்து சாத்தணும்.. பொண்ணுக்கேத்த டிரஸ்ஸை கொடுக்கக் கூடாதா..?

பவர் ஸ்டாரு.. பல படங்களில் டாப் சீன்ஸ்ல நடிச்சுக் காமிக்கிறாரு.. அடுத்தடுத்து படங்கள் கிடைக்குமான்னு தெரியலை.. இந்த அளவுக்கு பில்டப்பை கொடுத்து கொடுத்தேதான் இவரைக் கெடுத்தாங்க.. இத்தோட இவரை தலைமுழுகிட்டா தமிழ்ச் சினிமாவுக்கு நல்லதுதான்..!

தேவதர்ஷிணிக்கு பொருத்தமேயில்லாத வேடம்.. என்னமோ ரெண்டு எத்துப் பல்லை சொருகிகிட்டு கஷ்டப்பட்டு டயலாக் பேசி நடிச்சிருக்காங்க.. இவங்க கூட இருக்குற 3 அல்லக்கைகள்.. இவங்க ஆளும் கட்சி கவுன்சிலர்ன்னு சொல்ல ஒரு சின்ன வாய்ப்புகூட இல்லை.. அம்புட்டு காமெடி கேரக்டர் ஸ்கெட்ச்..! 

இயக்குநர் இன்னமும் கொஞ்சம் மெனக்கெட்டு காமெடி இயக்கத்தைக் கத்துக்கிட்டு அடுத்த படம் செஞ்சா அந்தத் தயாரிப்பாளராவது பொழைச்சுக்குவாரு.. இதுக்கு மேலேயும் படத்தைப் பார்க்கணும்னு நினைக்கிறவங்க போய்க்கலாம்..! 

நன்றி.. 

வணக்கம்..!