ஆட்டோ சங்கரின் கொலைகள் வெளியான வரலாறு-1

31-05-2011 

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கள்ளச்சாராயம், விபச்சாரம், கடத்தல், கொலை, தாதாயிஸம் போன்றவைகளையெல்லாம் கேள்விப்பட்டும், திரைப்படங்களில் பார்த்தும் இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்றெல்லாம் எங்களுக்கு நாங்களே கேட்டுக் கொண்டிருந்த காலத்தில், ஆட்டோ சங்கர் என்கிற இந்த இளைஞரின் வழக்கு தமிழகத்தில் வெளியானபோது நிசமாகவே பகீரென்றானது..!

புலனாய்வு பத்திரிகைகள் அரசியல் கூட்டணிகளுக்கும், பிரிவுகளுக்கும், கொஞ்சம் பரபரப்பு, கிசுகிசுகளுக்கும் தீனி போட்டுக் கொண்டிருந்த காலத்தில் அவைகளின் மூலமாகவே சில படுகொலைகள் வெளியானதை பார்த்து நிஜமாகவே எனக்கு ஆச்சரியம்தான்.. அந்த வகையில் இந்த ஆட்டோ சங்கர் செய்த படுகொலைகளை வெளிக்கொணர முதல் முயற்சியாக இருந்த ஜூனியர்விகடன் பத்திரிகையாளர்களுக்கு எனது பாராட்டுக்கள்..!

அந்த முதல் கட்டுரை வந்த பிறகு ஆட்டோ சங்கரின் வழக்கு முடிவடையும்வரையிலும் அப்போதைய பல்வேறு பத்திரிகைகளிலும் நாள் தவறாமல் இடம் பிடித்தவர் ஆட்டோ சங்கர்..! கட்சியினரின் ஆதரவு, லஞ்சத்திற்கு அலையும் காவலர்களின் கூட்டணியும் இல்லாமல் இருந்திருந்தால் ஆட்டோ சங்கரின் வாழ்க்கை இந்த அளவிற்கு மாறிப் போயிருந்திருக்காது. எப்போதும் புறச் சூழல்களை சுத்தமாக மறைத்துவிட்டு நபர்கள் செய்யும் தவறுகளை மட்டுமே குறிப்பெடுத்துக் கொள்வது நமது வழக்கமாச்சே..!

ஆட்டோ சங்கர் பிடிபட காரணமாக இருந்த சம்பவங்களை அன்றைக்கே ஜூனியர்விகடன் கட்டுரையாக வெளியிட்டிருந்தது. அதே கட்டுரை இப்போது மீண்டும் 'பழசு இன்றும் புதுசு' தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரையில் படிக்காதவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்..!

பழசு இன்றும் புதுசு - 12 : 13.7.88

ஜூன் 27-ம் தேதி காலை 10.30 மணி... ஜூ.வி. அலுவலகத்துக்குப் புகார் கொடுக்க வந்தவர் பெயர் விஜயா!

தன் கணவர் சம்பத், தன் சகோதரர் மோகன், தன் கணவரின் நண்பர் கோவிந்தராஜ் ஆகிய மூவரையும் கடந்த ஒரு மாதமாகக் காணவில்லை என்று விஜயா சொன்னார். ''எப்படியாவது என் வீட்டுக்காரரைக் கண்டு பிடிச்சுக் குடுங்கய்யா...'' என்று விஜயா கதறி அழுதது,  மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. பிறந்து இரண்டே  நாளான குழந்தையையும் தூக்கி வந்திருந்தார்!

''என்ன சொல்லிவிட்டுப் போனார்கள்?'' என்று கேட்டதற்கு, ''திருவான்மியூர்வரை போறோம்னு சொன்னாங்க. போனவங்க, மறுநாள் வரைக்கும் திரும்பி வரலை. என்ன ஆச்சோன்னு கவலையோட இருந்தப்ப, மூணு பேரையும் ஏத்திட்டுப்போன ஆட்டோ டிரைவர் சேகர் வந்தாப்ல. சேகர் எங்களுக்கு நல்லாப் பழக்கமானவர்தான். அவர்தான், 'திருவான்மியூர்ல ஒரு ஹோட்டலுக்குப் போனோம். அங்க மது சாப்பிட்டாங்க. அப்ப திடீர்னு நாலைஞ்சு பேர் வந்து சம்பத், மோகனை எல்லாம் அடிச்சாங்க. நான் பயந்துபோய் ஓடியாந்துட்டேன்’னு சொன்னார். எனக்குப் பயமாப் போச்சு... எங்க வீட்ல இருந்தவங்க, 'இன்னிக்கு ராத்திரிவரைக்கும் பாப்போம்... வரலைன்னா, நாளைக்குப் போய் போலீஸ்ல கம்ப்ளெயின்ட் குடுக்கலாம்’னு சொன்னாங்க. மறுநாளும் வரலை. உடனே மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெயின்ட் குடுத்தேன். எங்க வீட்டுக்காரர் மது சாப்பிடுவதைச் சொல்லக் கூச்சப்பட்டு, 'காணலை’ங்கிற விஷயத்தை மட்டும் சொன்னேன்...

தகராறுக்குப் பயந்து, வெளியூர்ல இருக்கும் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிருப்பாங்கன்னு நினைச்சு, எல்லாருக்கும் லெட்டர் போட்டு விசாரிச்சேன். திருவான்மியூர்லே போய் விசாரிச்சும் ஒண்ணும் தெரியலை. வேற வழி தோணாம, கவர்னர், ஜ.ஜி., கமிஷனர் எல்லாருக்கும் புகார் குடுத்தேன். யாரும் எதுவும் பண்ணலைங்க. அப்பதான் சில பேர், ஜூ.வி. ஆபீஸ் போய் சொல்லச் சொன்னாங்க...'' என்று அழுதார் விஜயா!

ஆட்டோ டிரைவர் சேகரிடம் சென்று விசாரித்தோம். விஜயா சொன்னதையே அவரும் சொன்னார். ''போலீஸ்ல இதை நீங்க சொல்லலையா?'' என்று கேட்டோம். ''மூணு நாள் கழிச்சுப் போய் சொன்னேன். எழுதித் தரச் சொன்னாங்க... எழுதிக் குடுத்தேன். அப்பாலே என்னைக் கூப்பிட்டு, 'என்ன நடந்திச்சு?’னு கேட்டுட்டுத் திரும்ப அனுப்பிட்டார் இன்ஸ்பெக்டர்!'' என்றார். இதற்கிடையில்தான் விஜயா, மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருந்தார்.

எனவே மயிலாப்பூர் ஸ்டேஷன் போய், ''ஏதாவது தகவல் கிடைத்ததா?'' என்று கேட்டோம். ''திருவான்மியூர் போய் குடிச்சிட்டுக் கலாட்டா பண்ணியிருக்​காங்க. அதனாலே திருவான்மியூர் ஸ்டேஷனுக்குத் தகவல் சொல்லிட்டோம்!'' என்று சிம்பிளாகச் சொன்னார்கள்!

திருவான்மியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்தோம். தொடர்ந்து எங்கேஜ்டாகவே இருந்தது. நேரில் சென்றோம். இன்ஸ்பெக்டர் தலைமலை இருந்தார். போனின் ரிசீவர் கீழே எடுத்து வைக்கப்பட்டு இருந்தது. நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, ''ஏன் சார் ரிஸீவரை எடுத்துக் கீழே வெச்சிருக்கீங்க?'' என்றதும், ''ஆமா, ஒரே தொந்தரவு... அதான் எடுத்து வெச்சேன். உங்களுக்கு என்ன வேணும்?'' என்றார். காணாமல் போன நபர்கள் குறித்துக் கேட்டதும், ''ஏன் சார், எங்க பொழப்புதான் மோசம்னா, உங்களுக்கும் என்ன தலையெழுத்தா சார்? போலீஸ் வேலைங்​றது நீங்க நினைக்கிற மாதிரி அவ்வளவு லேசு இல்லை.  காணாமப் போனவங்களைக் கண்டு ​பிடிக்கிற வேலைய மட்டும் பார்க்க முடியுமா? மூணு பசங்களும் தகராறு பண்ணாங்க... ஓடிப் போய்ட்டாங்க. எங்கே, எப்படி இருக்கானுகளோ? தகவல் இருந்தா, சொல்லி அனுப்பறேன்.'' என்றார்.

நாம், ''ஹோட்டலில் தகராறு நடந்ததே... அங்கே ஏதும் தகவல் கிடைக்கலையா?'' என்று கேட்டோம். ''நீங்க பத்திரிகைக்காரங்கதானே... நீங்களே ஹோட்டலுக்குப் போய் விசாரிக்க வேண்டியது​தானே...'' என்றார்.

அதுவும் சரிதான் என்று அந்த ஹோட்டலுக்குப் போய் டிபன் சாப்பிட்டபடியே சர்வர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். 'சங்கர்’ என்ற நபர்தான் அவர்களை அடித்தார் என்றும், அவரின் வீடு அருகில்தான் இருக்கிறது என்றனர். சங்கர் என்பவர் பெண் புரோக்கர், கள்ளச் சாராய வியாபாரி என்று குற்றம் சாட்டினார்கள். அன்றைய தினம் நடந்த சண்டையில் ஒருவரின் கை முறிந்து மயக்கமாகிவிட்டார் என்றும் மற்றொருவர் தலை உடைந்து வந்த ரத்தத்தைப் பார்த்தபோது, இறந்தே போயிருக்கலாம் என்றும் சொன்னார்கள்.

நேராக சங்கர் வீட்டுக்குச் சென்றோம். பெரிய வீடு. சங்கர் இருந்தார். விவரம் சொல்லிக் கேட்டோம். அவர் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல், ''அவங்க மூணு பேர் வந்தது உண்மைதான். அந்த ஹோட்டல் நம்ம நண்பருடையது. அங்க குடிச்சிட்டுக் கலாட்டா பண்ணி சேரை உடைச்சாங்க. உடனே நான் தட்டிக் கேட்டு கையிலே நூறு ரூபா குடுத்து அனுப்பிச்சுட்டேன்...'' என்றார் சாதாரணமாக. 

குழப்பமாக இருந்தது. விஜயா, சம்பத்தின் சகோதரர் கோவிந்தன், அவர் நண்பர் கணேசன் ஆகியோரை அழைத்துக்கொண்டு, டி.ஐ.ஜி. ஜாஃபர் அலியை சந்தித்தோம். திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் சொன்ன பதில், ஹோட்டலில் விசாரித்த செய்திகள், சங்கர் பேசியது ஆகியவற்றைக் கேட்டுக் குறித்துக்கொண்ட டி.ஐ.ஜி. வயர்லெஸ் மைக் மூலம் டி.எஸ்.பி. தங்கையாவை வரவழைத்தார். அவரிடம், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. மீண்டும் நம்மை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரச் சொன்​னார்.

மறுநாள் ஜாஃபர் அலியை சந்தித்தோம். ''சங்கர் ஒரு 'புரோக்கர்’ங்​கிறது உண்மைதான். மூணு பேரையும் அடிச்சதுக்கு சங்கரை அரெஸ்ட் பண்ணி விசாரிச்சாங்களாம். உங்ககிட்ட சொன்ன மாதிரியேதான் ஸ்டேஷன்லயும் சொன்னானாம். திரும்பவும் அவன்கிட்டே விசாரிக்க சொல்லியிருக்கேன்...'' என்றார்.

ஜூலை 5-ம் தேதி இரவு கணேசன் பதற்றத்துடன் நம் அலுவலகம் வந்து சொன்ன விஷயம் அதிர வைத்தது. ''சார்... சார்... அந்த மூணு பேரையும் கொலை பண்ணிப் புதைச்சிட்​டாங்களாம் சார். அந்த சங்கர் வீட்டாண்ட ஏதோ தகராறு நடந்தப்போ, இந்த விஷயம் லீக் ஆகியிருக்கு சார்!'' என்றார் கணேசன் அழுதுகொண்டே.

உடனே, கணேசனுடன் டி.ஐ.ஜி. ஜாஃபர் அலியை சந்திக்கச் சென்றோம். ஏதோ முக்கிய மீட்டிங். வெளியே வந்த டி.எஸ்.பி., தங்கையா, ''ஹலோ... கண்டு பிடிச்சாச்சுங்க. மூணு பேரையும் கொலைதான் பண்ணியிருக்கான்.  டி.ஐ.ஜி-கிட்டே கேட்டுக்கங்க...'' என்றார்.

டி.ஐ.ஜி. ஜாஃபர் அலி, ''சங்கர் மூணு பேரையும் கொலை பண்ணிட்டதாகவும், அவன் வீட்டுக்குப் பக்கத்துல  புதைச்சிருக்கிறதாகவும் சொல்றான். ஸ்பாட்டுக்குப் போய்ப் பார்க்கணும்...'' என்று சொல்லியபடி எழுந்தார்.

கூடவே நாமும் போனோம். ஏகப்பட்ட போலீஸ் பந்தோபஸ்து போடப்பட்டு இருந்தது. புதைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட இடத்தைச் சுற்றி நிறைய வீடுகள் இருந்தன. புதைக்கப்பட்ட இடம் தாசில்தார் ஆபீஸ் கிளார்க் ஒருவருக்கு சொந்தமானது.

இடத்தைத் தோண்டிப் பார்ப்பது என்று முடிவாகியது. நாள்பட்ட பிணத்தைத் தோண்ட வேண்டுமெனில் ஆர்.டி.ஓ., தாசில்தார் முன்னிலையில்தான் தோண்ட வேண்டும் என்பது சட்டம்.

மறுநாள் (ஜூலை 7) காலை 10.30 மணி... டி.ஐ.ஜி. முதல் ஃபாரன்சிக் ஆபீஸர், ஸ்பாட் போஸ்ட்மார்ட்டம் செய்ய டாக்டர் என ஏகப்பட்ட அதிகாரிகள் கூடினார்கள். சாலையின் இரண்டு பக்கமும் மக்கள் அருகே வராமல் இருக்க, போலீஸாரால் தடை செய்யப்பட்டது. சுற்றிலும் விஷயம் பரவி, செம கும்பல்...

சம்பத், மோகன், கோவிந்தராஜ் ஆகியோரின் உறவினர்கள் சிலர் மட்டும் தடைசெய்யப்பட்ட இடம் அருகே அனுமதிக்கப்பட்டார்கள். ஏழு... எட்டு இளைஞர்கள் - தோண்டுவதற்காக... அழைத்து வரப்பட்டார்கள். அவர்களுக்காக பிராந்தி, சென்ட், ஊதுபத்தி போன்றவை வாங்கி வரப்பட்டன.

கொலையாளிகளில் ஒருவனாகக் குற்றம் சாட்டப்​பட்ட பாபு என்பவன், இடத்தை அடையாளம் காட்ட, விலங்கோடு கொண்டு வரப்பட்டான். அவனை ஒரு வீட்டின் பின்புறம் அழைத்து விசாரித்துக் கொண்டிருந்தார் ஜாஃபர் அலி.

''எத்தனை பேர் சேர்ந்து கொலை பண்ணீங்க?''

''நாங்க ஏழெட்டுப் பேர் இருக்கும் சார்...''

''யாரெல்லாம்..?''

பெயர்கள் சிலவற்றைச் சொன்னான்.

''எப்படிடா கொன்னீங்க..?''

''ஹோட்டல்ல தகராறு நடந்ததும், உருட்டுக் கட்டையால அடிச்சோம் சார். அதுல ஒருத்தன் கை உடைஞ்சிருச்சு.  உடனே மத்த ரெண்டு பேரும் ரொம்ப கோபமாகி, எங்க மேலே சேரைத்  தூக்கி அடிக்க ஆரம்பிச்சாங்க. அப்புறம்தான் எங்க ஆட்கள் இன்னும் சில பேர் வந்து மூணு பேரையும் நல்லா அடிச்சு, சங்கர் வீட்டுக்குத் தூக்கிட்டுப் போய் போட்டுப் பூட்டி வெச்சிட்டோம். மறுநாள் காலைலே திறந்து பார்த்தோம். ரெண்டு பேர் செத்துக் கிடந்தாங்க... கோவிந்தராஜ் மட்டும் எழுந்திரிக்க முடியாம 'தண்ணி... தண்ணி’னு கேட்டான். உடனே சங்கர், 'ரெண்டு பேர் குளோஸ்... இவனை விட்டுவெச்சா நமக்குக் கஷ்டம்’னு சொல்லி, கோவிந்தராஜ் வாயைப் பொத்திக்கிட்டே கழுத்திலே காலை வெச்சி மிதிச்சுக் கொன்னுட்டான் சார்.''

''அடப் பாவி... இந்த மூணு பேரைத்தான் கொன்னிருக்கீங்களா... வேற யாராவது உண்டா..?''

'இன்னொருத்தன் ரவின்னு... அவனையும் குளோஸ் பண்ணியிருக்கோம் சார்...''

''அது யாரு..? எப்பக் கொன்னீங்க..?''

''ரவியும் ஒரு ஆட்டோ டிரைவர்தான்... பந்த் நடந்துச்சே... அப்பக் கொன்னோம், சார்.''

''மார்ச் 15-ம் தேதியா..?''

''ஆமா சார்...''

''ரவி பாடியை என்ன பண்ணீங்க?''

''அதையும், இங்கதான் புதைச்சு வெச்சிருக்கோம் சார்...''

''இங்கதான்னா... எந்த இடத்திலே?''

''சார் (நாம) நின்னுட்டிருக்கிற இடத்துலதான் சார்...''

''அடப்பாவி...'' என்றபடி வேறு பக்கம் சென்று அவனை மேலும் விசாரித்தார் ஜாஃபர் அலி.

அந்த நேரம் போலீஸார் சங்கரையும் ஸ்பாட்டுக்கு அழைத்து வந்துவிட, அவனிடம் விசாரணை நடந்தது. அப்போது சங்கரிடம் இருந்து கிடைத்த தகவல்கள்...

சுமார் ஆறு மாதங்களுக்கு முன் சங்கரிடம் வேலை பார்த்து வந்தான் சுடலை. திடீரென்று சுடலைக்கும் சங்கருக்கும் தகராறு (பெண் விஷயம்) வந்துவிட, எக்கச்சக்க போதையில் இருந்த சுடலையை ஒரு டவலால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டான் சங்கர்.

பிணத்தை அப்புறப்படுத்த சோம்பல்பட்டு(?) வீட்டின் ஜன்னல்களையும், கதவுகளையும் மூடிவிட்டு இரண்டு கேன்களில் பெட்ரோல் வாங்கி சுடலையின் பிணத்தை எரித்தான் சங்கர். இரவு சுமார் 10 மணிக்கு எரிக்க ஆரம்பித்த சங்கர், கொஞ்சம் கொஞ்சமாகப் பெட்ரோலை ஊற்றி காலை 6 மணி வரை எரித்து வெறும் சாம்பலாக்கிவிட்டான். அந்தச் சாம்பலை எடுத்து வந்து பாபு மற்றும் நண்பர்களிடம், ''இதுதான் சுடலைன்னு சொன்னா, ஆச்சர்யமால்ல..?'' என்று கேட்டபடியே, சாம்பலைக் கடலுக்குக் கொண்டுபோய் கரைத்துவிட்டான். சுடலைக்கு உறவினர் யாருமே கிடையாது. எனவே, சுடலை காணாமல் போனதுபற்றி யாருமே போலீஸில் தெரிவிக்கவில்லை.

சுடலைக்கும் சங்கருக்கும் நண்பர் - கொல்லப்பட்ட ரவி. இவர் மார்ச் 15-ம் தேதி சங்கருடன் பிராந்தி சாப்பிட்டுக்கொண்டே, ''ஆமா... அன்னிக்கு சுடலை உன்னைப் பார்க்க வந்தானே... அப்புறம் ஆளையே காணோமே..?'' என்று கேட்க... ஒரு விநாடி திகைத்துப்போன சங்கர்... பார்த்தான்... ஒரு லுங்கியால் ரவியின் கழுத்தை நெரித்துக் கொன்று, புதைத்தேவிட்டான்.

மேற்படி விஷயங்கள் தெரிந்ததும், ரவியின் தாய் மற்றும் மனைவியை அழைத்து வரச் சொன்னார் டி.ஐ.ஜி. அப்போது ரவியின் தாயாரோ, ''ஏதோ பொணம் தோண்டறாங்களாம்'' என்று வேடிக்கை பார்க்கும் கும்பலில் ஒருவராக நின்று இருந்தார். அவரை அழைத்துப் பக்குவமாக விஷயத்தைச் சொன்னதுதான் தாமதம்... பெற்ற தாய் தன் வயிற்றிலும், மார்பிலும் அடித்துக்கொண்டு அழ... கொடுமை!

இதற்குள் உடல்கள் புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டது. மிகவும் அழுகிய நிலையில் உடல் பாகங்கள் காணப்பட்டன. உடைகள் மட்டும் ஓரளவு அடையாளம் தெரிந்தன.

சம்பத், மோகன், கோவிந்தராஜ் மற்றும் ரவி ஆகியோர் தவிர, மேலும் சில கொலைகளை இந்த சங்கர் குரூப் பண்ணியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. எனவே, நம்மிடம் பல விஷயங்களைப் பிரசுரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் டி.ஐ.ஜி.

இன்ஸ்பெக்டர் தலைமலை பற்றிக் குறிப்பிட்​டோம். ''இன்ஸ்பெக்டர் உடனடியாகச் சில நடவடிக்கைகள் எடுத்திருந்தால், சுமார் 40 நாட்கள் கழித்துப் பிணத்தை எடுக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. எனவே, இன்ஸ்பெக்டர் எதனால் மெத்தனமாக இருந்தார் என்று விசாரித்துத் தக்க நடவடிக்கை எடுப்போம்...’ என்றார். தொடர்ந்து, ''என் பார்வைக்கு இந்த விஷயத்தைக் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி...'' என்று சொன்னார் டி.ஐ.ஜி. ஜாஃபர் அலி.

ஆனால்... காலம் கடந்துவிட்டதே!

நன்றி : ஜூனியர்விகடன்-29-05-2011

இதைத்தான் சொல்வார்கள்.. "ஆடுகிறவரைக்கும் நீ ஆடு ராசா.. உன் ஆட்டத்தை போதும்னு நீ நினைக்கும்போதுதான், ஆண்டவன் அவன் ஆட்டத்தைத் துவக்குவான்.." என்று..! 

கணவர் காணாமல் போய்விட்டார் என்று புகார் கொடுத்து ஒரு மாதமாகியும் திருவான்மியூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் எவ்வளவு பொறுப்பாக பணியாற்றியிருக்கிறார் என்பதை நினைத்துப் பாருங்கள்..! பத்திரிகையாளர்கள் நேரில் சென்று பார்த்தபோதே இந்த நிலைமையெனில் புகார் கொடுத்தவர்கள் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும்..?
மாமூல் வருகிறதே என்று சட்ட விரோதச் செயல்களை கண்டும், காணாததுபோல் இருந்துவிடும் சில காவல்துறை அதிகாரிகளாலும், சில சமயங்களில் கட்சியின் ரெளடித்தனத்திற்கு தேவைப்படுகிறார்களே என்பதால் இவர்களை ஊக்குவிக்கும் அரசியல்வியாதிகளாலும்தான் இந்தச் சமூகத்தில் இப்படியெல்லாம் சீரழிவுகள் ஏற்படுகின்றன..!

திருவான்மியூர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நினைத்திருந்தால் நிச்சயமாக சங்கரின் சாம்ராஜ்யத்தை ஆரம்பத்திலேயே சிதைத்திருக்கலாம். 10 வருட காலமாக ஓரிடத்தில் விபச்சாரத் தொழில் செய்து வந்திருக்கிறார் என்றால் அந்தப் பகுதிக்குட்பட்ட காவல்துறை அதிகாரிகள்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்..! 

சில வட்ட அளவிலான அரசியல்வாதிகள் மட்டுமே ஆட்டோ சங்கரை தெரிந்து வைத்திருக்கிறார்கள். முழுக்க, முழுக்க காவல்துறையின் கீழ் மட்ட அதிகாரிகள் பலரும் மறக்காமல் அவரிடம் மாமூல் வசூலித்திருப்பதும், இதன் காரணமாகவே அவரது விபச்சாரத் தொழில் இத்தனை நாட்களாக நடந்து வந்திருப்பதும் அவர் மாட்டிய பின்புதான் தெரிய வந்தது..!

ஆனாலும் பெரிய அளவில் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வெறுமனே டிரான்ஸ்பர் மட்டும் செய்து அனுப்பி வைத்ததாகச் சொல்கிறார்கள்..! இந்த வழக்கு மத்திய குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டதால்தான் இந்த அளவுக்காவாவது கண்டறிய முடிந்தது. ஸ்டேஷன் அளவோடு நிறுத்தியிருந்தால் அவ்வளவுதான் என்பது இந்தக் கட்டுரையைப் படிக்கின்றபோதே தெரிகிறது..!

சில அதிகாரிகளின் அலட்சியம் சமூகத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த வழக்கும் ஒரு உதாரணம்..!

ஹெல்மெட் அவசியமா..?

30-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த 28-ம் தேதி முதல் சென்னையில் வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பது மீண்டும் நடைமுறைக்கு வந்துவிட்டது..!

சென்ற 2007-ம் ஆண்டு இதே மாதத்தில்தான் இந்த ஹெல்மெட் சட்டம் தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டது. அப்போது பின் சீட்டில் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டியது அவசியம் என்று உணர்த்தப்பட்டது. ஹெல்மெட் விற்பனையும் சூடு பிடிக்கத் துவங்கியது..! கிட்டத்தட்ட சென்னையில் இருக்கும் வாகன ஓட்டிகளில் முக்கால்வாசி பேர் ஹெல்மெட்டை வாங்கிவிட்டார்கள்..! ஹெல்மெட் விற்பனையாளர்களிடம் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டுதான் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் அப்போது பேச்சு வந்தது. இப்போது அம்மா ஆட்சி என்பதால் யாரும் இப்படியொரு கோணத்தில் யோசிக்காமல் கள்ள மெளனம் சாதிக்கிறார்கள்..!

அப்போது முதல் ஒரு மாத காலத்திற்கு கட்டாயமாக்கியவர்கள் பின்பு வர வர மாமியார் கழுதையானாள் என்ற கதையாக கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்கள்..! பொதுமக்களின் சீற்றம், எரிச்சல்.. பிள்ளைகள், பைகள், இவற்றுடன் கூடுதலாக ஹெல்மெட்டையும் சுமக்க வேண்டியிருக்கிறதே என்று நடுத்தர வர்க்கம் நற, நறவென பற்களைக் கடித்தது கோபாலபுரத்தை எட்டியதால், கொஞ்சம் நீக்குப் போக்குடன் நடந்து கொள்ளும்படி காவல்துறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். இதனால் சென்னையில் மாமூல் கிடைக்காத போலீஸார் மட்டும்தான் வேறு வழியில்லாமல் இதில் கேஸ் போட்டு தற்போதுவரையிலும் காசை தேற்றிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் கோவையில் கமிஷனர் சைலேந்திரபாபு போட்ட போட்டில், கோவைவாசிகளில் 90 சதவிகிதம்பேர் ஹெல்மெட்டுடன்தான் அலைந்து கொண்டிருந்தார்கள் என்று கேள்விப்பட்டேன்..! அப்படியொரு கமிஷனர் சென்னைக்கு கிடைக்காததற்காக தாத்தாவுக்கு எனது நன்றிகள்..!

இப்போது ஆத்தா வந்து திரிபாதி சென்னை கமிஷனராகப் பதவியேற்றவுடன் யாரிடம் நல்ல பெயர் எடுக்க நினைத்தாரோ தெரியவில்லை.. அமுங்கிக் கிடந்த ஹெல்மெட் சட்டத்தைத் தூசி தட்டி கையில் எடுத்துவிட்டார்.


 
முதல் நாளான சனிக்கிழமையன்று ஹெல்மெட் அணியாதவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.  அக்கறையோடு ஹெல்மெட்டின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி அனுப்பி வைத்தார்கள். இன்று முதல் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். முதலில் 100 ரூபாய் அபராதம் என்றார்கள். இப்போது வெறும் 50 ரூபாய்தானாம்..! இரண்டாவது முறை பிடிபட்டால் லைசென்ஸ் ரத்து என்றார்கள் முன்பு.. இப்போது அந்தர்பல்டி.. “யார் அப்படிச் சொன்னது..? தப்பான நியூஸ்..” என்கிறார்கள்..! மக்களிடையே எரிச்சலை சம்பாதிக்கக் கூடாது என்பதில் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கிறார்கள் போலும்..!

இந்த ஹெல்மெட் அணியும் கட்டாயச் சட்டத்தைப் பற்றிய எனது கருத்தினை 2007-ம் வருடம் மே மாதம் 29-ம் தேதியே வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிவாக, "என் சாவைத் தடுக்க இவர்கள் யார்..?" என்கிற தலைப்பில் எனது தளத்தில் வெளியிட்டிருந்தேன். 

அதன் லின்க் இது  : http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_29.html 

அதன் மறுபதிப்பு மீண்டும் உங்களுக்காக இங்கே :

May-29, 2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே,

சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் அனைவரும் தவறாமல் கேட்கின்ற கேள்வி 1. கலைஞர் டிவி எப்ப வரும்? 2. ஹெல்மெட் வாங்கிட்டீங்களா? என்பதுதான்.

இதில் முதல் கேள்விக்கான பதிலாக சேனல் துவங்கப்படும் தேதியை சொல்லிவிட்டாலும், அது எந்த ரூபத்தில் வரும் என்பது தெரியாததால் இது தொடர்பான துணைக் கேள்விகள் எழத்தான் செய்யும். அதை இப்போதைக்கு விட்டுவிடுவோம். அடுத்த கேள்வியான ஹெல்மெட்டை பார்ப்போம்.

'இனிமேல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மட் அணிய வேண்டும்..' என்ற உத்தரவின் மூலம் தமிழக அரசும், காவல்துறையும் என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. "விபத்தில் இறப்பவர்கள் பலரும் பின்னந்தலையில் அடிபட்டுத்தான் இறக்கின்றனர். தலையில் ஹெல்மட் அணிந்திருந்தால் இந்தச் சாவிலிருந்து தப்பிக்கலாம்.." என்கிறார்கள் காவல்துறையினர்.

பைக்கில் செல்லும்போது விபத்தில் பாதிக்கப்படுபவர்கள் மிக அதிகமாக தலையில்தான் அடிபடுகிறார்கள் என்கிறார்கள். காரணம் என்ன? பின்னால் வரும் வண்டி மோதினாலோ அல்லது இடித்துக் கொண்டு சென்றாலோ விழும் போது, உடல் பின்நோக்கித்தான் செல்லும். அது உடல் இயல்பு. அறிவியல் உண்மை. இதற்கு எந்த மருத்துவரிடமும் ஆலோசனை கேட்க வேண்டாம்.

கீழே விழுகிறான். தலையில் அடிபடுகிறது. ரத்தம் தலைக்குள்ளேயே சிந்தி உறைந்து போகிறது. இதன் விளைவாய் கோமா ஸ்டேஜுக்கு சென்று சில நாட்கள் 'இழு, இழு..' என்று இழுத்துவிட்டு அவன் குடும்பம் கையில் வைத்திருக்கின்ற பணம் முழுவதையும் கரைத்த பிறகு, சப்தமில்லாமல் 'விதியின் வெற்றி'யுடன் இறந்து போகிறார்கள். சிலர் பிழைத்துக் கொள்கிறார்கள். சிலர் வருடக்கணக்காக படுக்கையில் படுக்கிறார்கள்.

இவையெல்லாம் எப்படி நிகழ்ந்தது என்று சொல்லி யாரும் உண்மையை வெளிக்கொணர முடியாது. அந்தச் சமயத்தில் நடக்க வேண்டும் என்று இருந்திருக்கும் போல.. நடந்துவிட்டது. அவ்வளவுதான்.. இது நம்மை நாமே தேற்றிக் கொண்டு, துக்கத்தை மறக்க நாம் பயன்படுத்தும் வாக்கியங்கள்.

தமிழ்நாட்டில் சென்ற ஐந்து வருட காலத்தில் நடந்த சாலை விபத்துக்களில் உயிரிழந்தோரில் தலையில் அடிபட்டு இறந்தவர்கள் 5 சதவிகிதத்தினருக்கும் குறைவுதான். இப்படித்தான் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட காவல்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிகமான விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் பெரும்பான்மையானவை.. கார் மற்றும் வேன்கள், பஸ், லாரி மோதல், ரயில்வே கிராஸிங்கை கடக்க முயலும்போது ரயில்களுடன் பிற நான்கு சக்கர வாகனங்கள் மோதுதல்.. இவற்றின் மூலம் மொத்தமாக ஜனங்களை 'மேலே' அனுப்புவது... இப்படித்தான் கொத்து, கொத்தாக மரணங்கள் நிகழ்கின்றன. நிகழ்ந்திருக்கின்றன.

இவற்றில் புதிய கண்டுபிடிப்பாக சென்ற ஆண்டு டாடாசுமோ வேன் மற்றும் மாருதி காரில் பயணம் செய்யும்போதுதான் நிறைய விபத்துக்களும், மரணங்களும் நேரிடுகின்றன என்று அந்தக் கார்களைத் தயாரிப்பு நிர்வாகத்தினருக்கு கண்டன அறிக்கையெல்லாம் வழங்கினார்கள் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடிய காவல்துறையினர்..

இந்த சாலை பாதுகாப்பு வாரத்தை சென்னையின் மூலை, முடுக்கெல்லாம் தெருத்தெருவாகக் கொண்டாடியபோது இதை பேச்சுக்கு பேச்சு சொன்னவர்கள், இப்போது திடீரென்று 'ஹெல்மெட்' என்ற பேச்சு வந்தவுடன் அந்த புள்ளிவிவரத்தையே மறந்துவிட்டார்கள். அல்லது மறைத்துவிட்டார்கள்.

ஹெல்மெட் அணியாமல் வண்டியோட்டுபவர் முதல் முறை பிடிபட்டால் 100 ரூபாய் அபராதம் என்றும், அடுத்தடுத்த முறைகள் என்றால் 300 ரூபாய் அபராதம் என்றும், தொடர்ந்தால் ஓட்டுநர் உரிமை ரத்தாகும் என்றும் காவல்துறை உத்தரவில் சொல்லப்பட்டுள்ளது.

அதோடு வண்டியின் பின்னால் அமர்ந்து செல்பவரும், கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டுமாம். 4 வயது குழந்தைக்கு மேற்பட்டவர்களுக்கும் கட்டாயம் ஹெல்மெட் அவசியம் என்று 'இந்த தேவாதி தேவர்கள்' சொல்லிவிட்டார்கள். "இனி எந்தக் காலனும் உங்களை அணுகமாட்டான். நாங்கள் உங்களைக் குடும்பத்தோடு காப்பாற்றுவோம்.." என்கிறார்கள் காவல்துறையினர்.

எல்லாம் சரி.. விபத்துக்கள் நடப்பதற்கு யார் காரணம்? மனிதத் தவறுகள்தானே. விபத்தில் பாதிக்கப்படும் இருவரில் ஒருவர்தான் அந்த மீறலைச் செய்திருப்பார். அவரிடம் கேட்டால் "போய்விடுவார் என்றுதான் நான் நினைத்தேன்.." என்பார். அடிபட்டவரிடம் கேட்டால் "அவன்தான் நான் கிராஸ் செய்வதற்குள் மோதி விட்டான்.." என்பார்.

இது முதல் வகை விபத்துக்கள்.. இரண்டாம் வகை விபத்துக்கள்.. ரோடு. சாலைகள் சரியில்லாமல் பல்லை இளித்துக் கொண்டிருப்பதற்கு யார் காரணம்?

ரோட்டோரமாக இருக்கின்ற கடைகளை 'விரிவுபடுத்துகிறோம்' என்று சொல்லி நாள்கணக்கில் மணலையும், செங்கல்லையும் ரோட்டோரமாக கொட்டி வைக்கிறார்கள். சாப்பிடக்கூட நேரமில்லாமல் அரக்கப் பரக்க ஓடிக் கொண்டிருப்பவனுக்கு கல்லும், மண்ணுமா ஒரு விஷயம்.. ஒடித்து, ஒடித்து திரும்பும்போது ஸ்லிப்பாகி கீழே விழுகிறான்.. அடிபடுகிறான். 'ஆயுசு கெட்டியாக' இருந்தால் பிழைப்பான். இல்லையெனில் 'டிக்கெட்டு'தான்..

ஆனால் இதற்கான வழியை ஏற்படுத்தி வைத்திருப்பது யார்? இந்த இடத்தில் விபத்து ஏற்பட்டது எதனால்? மணல் கொட்டியிருப்பதினால்தானே.. அதை தடுத்தால்தான் என்ன?

அரசியல்வாதிகளுக்கு கை அரித்தால் எப்படியெல்லாம் காசு பார்க்க வேண்டுமோ அப்படியெல்லாம் பணம் பண்ணத் தயங்க மாட்டார்கள். வானமும், பூமியும் சும்மாதான கிடக்குது.. ஆண்டவனோட இடம்தானே.. மக்களோடது இல்லையே..? மக்களுடைய இடத்தையே நம்ம 'மாமியார் வீட்டு இடம்'ன்னு சொல்றோம்.. கண்ணுக்குத் தெரியாத ஆண்டவனைப் பத்தி யாருக்கு என்ன கவலை..? 'ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே' என்பதைச் சொல்லாமல் சொல்லி அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளும், அள்ள ஆரம்பித்ததுதான் ஆற்று மணல் கொள்ளை.

ஒரு நாளைக்கு ஒரு மணல் லாரி கண்டிப்பாக இருபத்தைந்து டிரிப் அடிக்க வேண்டும். மணல் அள்ளும் இடத்திலிருந்து மணலை கொட்டப் போகும் இடம்வரைக்கும் உள்ள இடம் எத்தனை கிலோ மீட்டராக இருந்தாலும், டிரிப்ஷீட் புல்லாக வேண்டும். அப்போதுதான் கட்சிக்காரர்கள், ஆட்சியாளர்கள், காண்ட்ராக்ட் எடுத்தவர்கள்.. என அனைவருமே பணம் பார்க்க முடியும்.

இந்த மணல் அள்ளும் விஷயத்தில் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு தமிழகத்தையே சுரண்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள். இதில் இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்றில்லை.. எல்லாக் கட்சி அரசியல் நாய்களும், ஒன்றாகவே கூட்டணி வைத்து கொள்ளையடித்து வருகிறார்கள்.

கடந்த பத்தாண்டுகளில் சாலை விபத்துக்களில் இறந்து போனவர்கள் பட்டியலை எடுத்துப் பாருங்கள். அதில் 80 சதவிகிதம் பேர் இந்த மணல் லாரிகளால் தாக்கப்பட்டு இறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இதற்கு என்ன தீர்வு சொல்வார்கள் காவலர் திலகங்கள்.

"அவர்கள் பணக்காரர்கள், ஆட்சியாளர்கள். ஆளுவதற்காகவும், வாழ்வதற்காகவுமே அவதாரம் எடுத்தவர்கள். நீ சாதாரண மிடில் கிளாஸ்.. எங்களைச் சந்தோஷப்படுத்த மட்டுமே உனக்கு அனுமதி.. நீ சந்தோஷப்படுவதை பற்றி நினைத்துக்கூடப் பார்க்காதே..." என்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

இன்றுவரை ஆட்சி மாறி, வேறு ஆட்சி வந்தாலும்கூட மணல் கொள்ளையும் இதன் விளைவாய் மணல் லாரி மோதி விபத்துக்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதை எந்தக் கனவான் வந்து தடுப்பானாம்..?

இப்போது ஹெல்மெட்டை கொடுத்துவிட்டு போலீஸ் சொல்வது இதைத்தான்.. "அவர்கள் இடிப்பார்கள். அடிப்பார்கள். உன் தலையில் ஹெல்மெட் இருக்கு. உயிர் போகும் அபாயம் இல்லை. காயத்தோடு பிழைத்துக் கொள்வாய்.. பொழைச்சுப் போ.. போ.." இதுதான் காவல்துறை நமக்குச் சொல்லும் செய்தி..

அடுத்தது நம் ஊர் சாலைகள் இருக்கும் லட்சணம். ஒரு வருடத்திற்கு சாலைப் பராமரிப்பில் மட்டும்தான் நமது அரசியல்வாதிகள் கொள்ளை லாபம் பார்க்கிறார்கள். இல்லாத இடத்தில் ரோடு போட்டதாக பில் போடுவார்கள். பணம் சாங்ஷன் ஆகிவிடும்.. அந்த ரோடு எங்கே இருக்கிறது என்று நீங்கள் 'நாஸா'விடம் சொல்லித்தான் தேட வேண்டும்.

இருக்கின்ற நல்ல சாலைகளிலும் மேற்கொண்டு 'பராமரித்தோம்' என்று சொல்லி பில் போடுவார்கள். இதற்கான செங்கல்லும், மணலும் அவரவர் வீடுகளுக்குப் போய்விடும். பணத்தையும் பங்கு போட்டுக் கொள்வார்கள். நாமும் எதுவும் தெரியாதது போல் அதே சாலையில் நடப்போம்.

ஒரே சாலைக்கு ஒரே ஆண்டில் மூன்று முறை பராமரிப்பு செய்ததாக பில் போடுவார்கள். தொலைந்தது.. அடுத்த பத்து வருட சம்பாத்தியத்தை இந்த ஒரே பில்லில் சாப்பிட்டுவிடுவார்கள் நமது அரசியல் நாய்கள்.. நாம் அதே குண்டும், குழியுமான ரோட்டில் வயிறு கலங்கிப் போய் நடக்கத்தான் வேண்டும்.

இப்போதும் சென்னை, கிண்டி தொழிற்பேட்டை சாலையைச் சென்று பாருங்கள்.. எத்தனை முறை ரோடு போடுவார்களோ தெரியாது.. அத்தனையும் ஒரு அரை மணி நேர மழைக்குக்கூடத் தாங்காது.. அடுத்த நாளே பெரிய, பெரிய பள்ளமாக உங்கள் முகம் தெளிவாகத் தெரியும் அளவுக்கு தண்ணீர் தேங்கிப் போய் தெரியும். மறுபடியும் இன்னொரு முறை கான்ட்ராக்ட், பில்.. கமிஷன்.. அப்பப்பா.. பொழைக்கத் தெரியாத நம்மை மாதிரி மனிதர்கள் மட்டுமே அதில் வண்டியை ஓட்டி சிலர் காயம்படுகிறோம்.. பலர் 'மேலே' போய்ச் சேர்கிறார்கள். இவர்களை யார் கேட்பது?

தங்களது வீடு, உறவினர்கள் வீடுகள், அமைச்சர்கள் வீடுகள் இருக்கின்ற இடங்களில் மட்டும் சாலைகளை அலங்கரித்து வைத்துக் கொள்கிறார்கள். சென்னையின் மத்திய பகுதியை மட்டும் பளபளவென்று வைத்து என்ன புண்ணியம்? மேடவாக்கம் சென்று பார்த்திருக்கிறீர்களா? ஏன் விருகம்பாக்கத்திலிருந்து கோயம்பேடு செல்கின்ற ரோட்டில் போய் பாருங்கள்.. குடலே கலங்கிவிடும்.. அந்த அளவிற்கு 'அற்புதமாக' உள்ளது.

வெளிநாடுகளில் இருக்கும் சாலைகளைப் பற்றி கேட்கும்போதும், திரைப்படங்களில் அவற்றைப் பார்க்கும்போதும் நமக்கு கொடுத்து வைச்சது அவ்ளோதான் என்றுதான் தோன்றுகிறது. அங்கேயும் அரசியல் இருக்கிறதே.. ஆட்சிதானே நடக்கிறது.. அங்கு மட்டும் எப்படி? முகமே தெரியுமளவுக்கு பளாபளா என்று ரோடு..? பாவம் அவர்கள்.. கமிஷன் வாங்கத் தெரியாத 'பகுத்தறிவில்லாத' முட்டாள் அரசியல்வாதிகள்.. என்று பளிச்சென்று சொல்லிவிடலாம்.

ரோடு பராமரிப்பு, சாலை வசதி, உள் கட்டமைப்பு முறையாக இல்லாமை இப்படி அடுக்கடுக்கான வசதிக் குறைவுகளை ஏற்படுத்தி வைத்துக் கொண்டு "விபத்தினால் காயம் ஏற்படாமல் தவிர்த்து விடுங்கள்.." என்று வெட்கம்கெட்டத்தனமாக கூவுகிறார்களே கேடுகெட்ட அரசியல்வாதிகள்... இவர்களையெல்லாம் என்ன செய்வது?

முதலில் விபத்தே ஏற்படாமல் இருக்க என்ன வழி என்று யோசிக்கலாமே..? யாருக்குமே கமிஷன் கொடுக்காமல், கமிஷன் வாங்காமல் நல்லதொரு சாலை வசதிகளை மக்களுக்கு செய்து கொடுப்போம் என்ற அக்கறை இந்த மானங்கெட்ட அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் உண்டா?

"இதெல்லாம் எதற்கு? அந்த அக்கிரமக்காரர்கள் என்றைக்குத் திருந்தியிருக்கிறார்கள்? நீங்கள் என்ன எழுதினாலும் அவர்களுக்கு உரைக்காது.. நீங்க உங்க வாழ்க்கையைப் பாருங்க.. வாழ்க்கைல ஒரு முறைதானே.. வாங்கிருங்களேன்.." என்கிறார்கள் சிலர்.

சரி வாங்கிக் கொள்கிறேன். தலையில் மாட்டிக் கொள்கிறேன்.. சாவே வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்..?

ஒரு மனிதன் இறப்பே வராமல் வாழ்ந்தே தீர வேண்டும் என்று எண்ணினால் முதலில் சாவு தன்னை நெருங்கிவிடாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் எப்படி..? முதலில் சாவு அவனை எப்போது நெருங்கும் என்பது அவனுக்குத் தெரியுமா..? பிறகு எப்படி அவனது சாவை அவனே தள்ளிப் போடுவது..? தடுப்பது..?

சாவு எப்படியிருந்தாலும் எந்தவொரு ஜீவராசிக்கும் வந்தே தீரும். அதைத் தடுக்க யாருக்கும் சக்தி இல்லை என்னும் 'பகுத்தறிவு' உள்ள மனிதன், காலம் காட்டும் திசையில் அது போகும்போக்கிலேயே போய்க் கொண்டிருப்பான். சாவின் மீது பயமில்லாமல், தைரியமாக அதனைச் சந்திக்கும் துணிச்சலுள்ளவன், அது எப்போது வேண்டுமானாலும் வரட்டும் என்பான்.

பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே இருந்தாலும், காலன் அழைக்காமல்விடப் போவதில்லை. 80 வயதில் இமயமலையில் ஏறினாலும், அழைக்கின்ற காலம் இல்லையெனில், அப்போதும் அழைக்க மாட்டான் காலன். அது அவரவர் வினைப்பயன் என்பது இறை நம்பிக்கையுள்ள அனைவருக்கும் தெரியும்.

சாதாரணமாக சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது தவறி கீழே விழுந்து செத்தவனும் இருக்கிறான். 80-வது மாடியிலிருந்து தவறி விழுந்து, உயிர் பிழைத்தவனையும் காண்கிறோம். இரண்டுமே அதிசயம்தான்.. ஆச்சரியம்தான். ஆனால் நடந்திருக்கிறதே..

நிற்க.. விபத்துக்கள் ஏற்படுவதும் வாழ்க்கையில் சகஜம்தானே. விபத்து என்பதே தற்செயலாக நடப்பதுதான். இந்த விபத்தால் ஒருவன் வாழ்க்கை கதை முடிகிறது என்றால் அவன் காலன் வசம் போய்விட்டான் என்று பொருள்.

"இல்லை. இல்லை.. காலனை வெல்வோம்.. காப்பாற்ற ஆயுதம் உண்டு. அணிந்து கொள்ளுவோம்.." என்று மனிதர்களாகிய நாம் அவ்வப்போது கூக்குரலிடுகிறோம். காரணம், நமக்குள் இருக்கும் வாழ்க்கையின் மீதான ஆசை. அப்படி ஒரு ஆசைதான் இந்த ஹெல்மெட் மேட்டர்.

அதிலும், வாழ்ந்து கிழித்தது போதும். போய்ச் சேரத் தயாராக இருக்கிறேன் என்ற நினைப்பில் வெறும் பூதஉடலை மட்டுமே வைத்துக் கொண்டு நடமாடிக் கொண்டிருக்கும் இந்த 'உண்மைத்தமிழனைப்' போல பல கோடி பேர் இந்த நாட்டில் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் காப்பாற்றி வைத்து யாரிடம் நல்ல பெயர் எடுக்கப் போகிறார்கள்?

கடைசியாக,

இதைப் போட்டுக் கொண்டு வண்டியில் செல்கிறோம். விபத்து ஏற்பட்டால் சாவே வரக்கூடாது. வந்தால் அதற்கு முழுப் பொறுப்பையும் காவல்துறையினர் ஏற்றுக் கொள்வார்களா? அப்போது வந்து, "இது அவன் விதி.. கதை முடிஞ்சிருச்சு.. எமதர்மன் பின்னாடியே 'ஒளி வேகத்துல' வந்து தூக்கிட்டான்.." அப்படி.. இப்படின்னு கதை விடக்கூடாது..

என்ன செய்வார்கள்-சொல்வார்கள் காவல்துறையினர்..?

டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் கோபாலபுரம்..!

30-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கைது செய்யப்படும்வரையிலும் கைதாவாரா என்றெல்லாம் எழுதிக் கொண்டிருந்த ஜூனியர்விகடன், தற்போது டெல்லியில் நடக்கும் குடும்பச் சந்திப்புகளை உருக்கமாக விவரித்து வருகிறது. அது அவர்களுக்குத் தேவைதான் என்று நாம் நினைக்கலாம். சொல்லலாம். ஆனால் பரம்பரை பத்திரிகைகள் அப்படி வெளிப்படையாக எழுத மாட்டார்கள். அது பத்திரிகா தர்மத்திற்கு எதிரானதாம்..!

வழக்கம்போல ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் பதிவு செய்து வைப்பதற்காக மட்டுமே இந்த பாச, அழுகை காவியமும் இங்கே பதிவு செய்யப்படுகிறது..! தோழர்கள் பொறுத்தருள்வீராக..!

அழகிரிக்கும் மாறன் சகோதரர்களுக்கும் இடையே நிலவிய மனக் கசப்பு முடிவுக்கு வந்தபோது, 'கண்கள் பனித்தன... இதயம் இனித்தது!’ என மனம் உருகிச் சொன்னார் கருணாநிதி. மீண்டும் மொத்தக் குடும்ப உறவுகளும் ஒன்று கூடும் வைபோகம் பாட்டியாலா நீதிமன்றத்திலும். திகார் சிறைச்சாலையிலும் கடந்த சில நாட்களாக நடந்தது.

அதாவது கோபாலபுரமே டெல்லிக்கு இடம் பெயர்ந்தது மாதிரி இருந்தது. அழுகை, ஆதங்கம், கோபம், கூச்சல் என மீடியாக்களின் பார்வைக்கு அப்பால் நடந்த அத்தனை நிகழ்வுகளும் அப்படியே இங்கே...

 சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு 23-ம் தேதி வந்த கனிமொழியை மத்திய அமைச்சர் அழகிரி சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், 'மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவர் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை நீதிமன்றத்தில் சந்திக்கக் கூடாது’ என்பதால், தன் மனைவி காந்தி, மகள் கயல்விழி, மகன் துரை தயாநிதி ஆகியோரை அங்கே அனுப்பி வைத்தார் அழகிரி.

கனிமொழி மீது மிகுந்த அன்பு பாராட்டுபவர் கயல்விழி. அதனாலோ என்னவோ... கனிமொழியைக் கண்டதும் 'அத்தே...’ எனக் கதறத் தொடங்கிவிட்டார் கயல். கனிமொழியைத் தோளோடு சாய்த்து காந்தி ஆறுதல் சொல்ல, ராஜாத்தி அம்மாளுக்கும் கண் கலங்கிவிட்டது. மதுரையில் துரை தயாநிதியின் திருமணத்துக்குப் பிறகு, காந்தியும் ராஜாத்தியும் அன்றுதான் சந்தித்தனர். நடுவில் கனிமொழி, இடப்புறம் காந்தி, வலப்புறம் கயல்விழி என அமர்ந்து நிறைய நேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள்.


''இந்த விவகாரத்தில் என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியவே இல்லை அண்ணி. கலைஞர் டி.வி-யில் நான் பங்கு கேட்கலை. கையெழுத்துப் போடச் சொன்னாங்க, போட்டேன்...!'' என காந்தியிடம் கனிமொழி உருக்கமாகச் சொல்ல, ''எல்லாத்தையும் அண்ணன் பார்த்துப்பார். நீ தைரியமா இரு!'' என்றார் அவர் ஆறுதலாக!

கயல்விழியிடம் நெடுநேரம் பேசிய கனிமொழி, சகஜ நிலைக்கு வந்தார். சரத்குமாரின் உறவினர்களிடம், 'தைரியமாக இருங்கள்!’ என கனிமொழியே ஆறுதல் வார்த்தார். ''கோர்ட்டில் விசாரணை தொடங்க இன்னும் நேரம் ஆகுமா?'' என காந்தி அப்பாவியாகக் கேட்க, ''தாமதம் ஆகுறது நல்லதுதான் அண்ணி. உங்களோட இன்னும் கொஞ்ச நேரம் இங்கே பேசிக்கிட்டு இருக்கலாம். இல்லேன்னா, சீக்கிரமே ஜெயில்ல போய்த் தனி ஆளா உட்கார்ந்து இருக்கணும்!'' எனச் சொல்லி கனி சிரிக்க, எல்லோருக்குமே கண்ணில் நீர் கோத்துக்கொண்டது.
 
நீதிமன்ற நிகழ்வுகள் முடிந்து சிறைக்குச் செல்லும் நேரம் வந்ததும், ''ஆதியைப் பத்திரமா பார்த்துக்கோங்க!'' என்றபடியே கையசைத்துக் கிளம்பினார் கனி.

அன்று மாலை திகார் சிறைக்கு கருணாநிதி வர, அங்கே பெரிய பாசப் போராட்டமே நடந்தது. கனிமொழிக்கு ஆறுதல் சொல்லும் விதமாக, 'நான் டெல்லியிலேயே தங்கிடவாம்மா?’ எனக் கருணாநிதி தழுதழுக்க, 'எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன்பா... நீங்க தைரியமாப் போங்க!’ என நம்பிக்கை ஊட்டினார்.

சிறை சந்திப்பு முடிந்தும் கருணாநிதிக்கு சென்னை திரும்ப மனம் இல்லை. ஜெகத்ரட்சகன், ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோரிடம், 'சட்ட ரீதியா மேற்கொண்டு என்ன செய்ய முடியும்?’ என்பது குறித்து விசாரித்தார். இதற்கிடையில், அடுத்த நாள் ஸ்டாலின் டெல்லிக்கு வந்தார். சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்திருந்த கனிமொழியிடம் இந்தத் தகவல் சொல்லப்பட, அவருக்கு நம்ப முடியாத ஆச்சர்யம்.


ஸ்டாலினை சந்தித்தபோது மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார் கனி. ''என்னால் அப்பா ரொம்ப சங்கடப்படுறார். அதான் வருத்தமா இருக்கு!'' என்பது மட்டுமே கனி காட்டிய ஆதங்கம். கனி, ஸ்டாலின், ஆதித்யன் மூவரும் ஒரு பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க, அதனை ஒருவர் செல்போனில் படம் எடுத்தார். இதில் கடுப்பான ஸ்டாலின், 'அவனைப் பிடிங்கய்யா...’ என்றார் ஆவேசமாக. தி.மு.க. புள்ளிகள் அந்த நபரைத் துரத்திப் பிடித்து அந்தப் படத்தை அழித்தனர்.

அடுத்த கட்ட சட்டரீதியான முன்னேற்பாடுகள் குறித்து சொல்லி, ஸ்டாலின் கனிமொழியைத் தேற்ற, ''அவ்ளோ சீக்கிரம் பெயில் கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும். சிறையில் இருப்பதை ஒரு புது அனுபவமா நினைச்சு என்னை நானே தேத்திக்கிறேன்!'' என்றார் கனி. ராஜாத்தி அம்மாளும் ஸ்டாலினுடன் சில நிமிடங்கள் பேசினார்.

அன்று மாலை... டெல்லி மீடியாக்களுக்கே தெரியாதபடி முக்கியமான ஒரு சந்திப்பு திகார் சிறைச்சாலையில் நடந்தது. மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரியும் தயாநிதி மாறனும் சிறையில் கனியை சந்திக்க அனுமதி கேட்டனர். தயாநிதி மாறன் வந்திருப்பதை, கனியால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை!

ஸ்பெக்ட்ரம் பிரச்னைக்குப் பிறகு தயாநிதியை,  கனிமொழி சந்திப்பதே இப்போதுதான். அழகிரியிடம் மனம்விட்டுப் பேசிய கனிமொழி, தயாநிதியிடம் நலம் விசாரித்தார். அப்போது ஆறுதலாக தயாநிதி சில விஷயங்களைச் சொல்லி இருக்கிறார். இருவரையும் சமாதானப்படுத்தும்விதமாக அழகிரி, குடும்ப விவகாரங்களை உரக்கப் பேசி இருக்கிறார்.

இறுதியில் கனிமொழியைத் தட்டிக் கொடுத்து, ''நானும் சிறைவாசம் அனுபவிச்சவன்தான். ஆனா, அப்போகூட இந்த அளவுக்கு சங்கடப்பட்டது இல்லை. நீ தைரியமாப் பேசினாலும் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும்மா. சீக்கிரமே உன்னை வெளியே எடுத்திடுவோம். குடும்ப ரீதியான அத்தனை கசப்புகளும் நிச்சயம் முடிவுக்கு வந்திடும்!'' எனச் சொன்னாராம். தயாநிதி அதிகம் பேசவில்லை என்றாலும், குடும்ப சமாதானத்துக்கான முதல் முயற்சி அங்கே நிகழ்ந்ததாக அடித்துச் சொல்கிறார்கள் டெல்லிவாலாக்கள்.

அடுத்து நிகழ்ந்த சந்திப்புதான் நம்ப முடியாத ஆச்சர்யம். ஆ.ராசா உடனான சந்திப்புதான் அது. ஆ.ராசா சகஜமாகப் பேசவில்லை என்றாலும், அழகிரியின் ஆறுதல் அவரைத் தெம்பாக்கி இருக்கிறது. தயாநிதி மாறனும் ராசாவுடன் கை குலுக்கி நிறையப் பேசி இருக்கிறார். 'சரத்குமாரை வரச் சொல்லுங்கள். நாங்கள் பார்க்க வேண்டும்!’ என ஆ.ராசாவிடம் சொல்லி அனுப்பினர் இருவரும். 'தயாநிதி மாறனை சந்திக்கும் நிலையில் நான் இல்லை!’ எனச் சரத்குமார் சொல்லிவிட்டதாக டெல்லி நிருபர்கள் வட்டாரம் சொல்கிறது. 

சரத்குமாரின் சகோதரியின் வீடு டெல்லியில்தான் இருக்கிறது. அங்கே இருந்தும்  கனிமொழிக்கும், சரத்துக்கும் சாப்பாடு வருகிறது. துணிமணிகள் பரிமாற்றமும் சரத் மூலமே நடக்கிறது. மூன்று வேளையும் வீட்டு சாப்பாட்டுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தும், மதியம் தவிர்த்து இரு வேளைகளும் சிறை உணவைத்தான் கனிமொழியும் சரத்தும் சாப்பிடுகிறார்கள்.

25-ம் தேதி, சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு வந்த கனிமொழியை, மு.க.தமிழரசு, செல்வி, துர்கா ஸ்டாலின், மோகனா என பெரிய உறவு வட்டாரமே சந்தித்தது.

குடும்ப ரீதியான பிரச்னையில் பெரிய பனிப் போர் நிகழ்ந்தது, செல்விக்கும் கனிமொழிக்கும் இடையேதான். ஆனால், அதை எல்லாம் மறந்துவிட்டு அத்தனை பேர் மத்தியிலும், ''உனக்கு இப்படி ஆயிடுச்சேம்மா'' என செல்வி தழுதழுத்தார். கனிமொழிக்கு மிகுந்த ஆறுதலாக அமைந்தது செல்வியின் வார்த்தைகள்தான். செல்வியின் கைகளைப் பற்றியபடியே துர்காவிடம் சிறை வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்  கனிமொழி. அடுத்த சில நிமிடங்களில் முரசொலி மாறனின் மனைவி மல்லிகாவும் அங்கே ஆஜர். ''என்னைப் பார்க்க நீங்க எல்லாம் வருவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. கெட்டதிலும் ஒரு நல்லதுன்னு சொல்வாங்களே... அதை நினைச்சே மனசைத் தேத்திக்கிறேன்!'' என அவரைப் பார்த்து கலங்கிவிட்டார் கனி.

ஆனால், ராஜாத்தி என்ன நினைத்தாரோ... செல்வி, துர்கா உள்ளிட்ட உறவுகள் வந்த உடனேயே அவர் பட்டும்படாமல் ஒதுங்கிக்கொண்டார்.

உறவுகளின் சந்திப்புகள் குறித்துப் பேசும் தி.மு.க-வின் டெல்லிப் புள்ளிகள், ''கனிமொழிக்கு இந்த அளவுக்கு சிக்கல் வராது என்ற நம்பிக்கையில்தான் ஆரம்பத்தில் உறவினர்கள் பலரும் அவரைக் கண்டுகொள்ளாமல் விட்டார்கள். கனிமொழியின் பிறந்த நாளுக்குக்கூட வாழ்த்து சொல்லாத அழகிரி, இப்படித் தேடி வந்து சந்தித்ததில், கனி மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். குறிப்பாக தயாநிதி மாறனும், செல்வியும்  நேரில் வந்து சந்தித்ததை எங்களால்  இன்னமும் நம்ப முடியவில்லை.

ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் இருந்து வெளியே வர, முதலில் குடும்ப மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என தலைவர் நினைக்கிறார். அதற்குத் தக்கபடி குடும்ப உறவுகள் கைகோத்து இருப்பது நம்பிக்கை அளிக்கிறது. அதே நேரம், சிறைக்குள் தயாநிதி மாறனை சந்திக்க சரத்குமார் மறுத்ததும், செல்வி, துர்கா ஆகியோருடன் ராஜாத்தி அம்மாள் சரிவரப் பேசாமல் முறுக்கிக் கொண்டு நின்றதும்... குடும்ப மோதல்களை இன்னமும் பெரிதாக்கிவிடும் என்றே தோன்றுகிறது.

'எனக்கும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கும் என்ன சம்பந்தம்?’ என சிறைக்குள் புலம்பித் தவிக்கிறார் சரத். இவற்றை எல்லாம் தாண்டி, சட்ட ரீதியாகவும் இன்னும் சில திருப்பங்கள் இருக்கும்....'' என்கிறார்கள் டெல்லி சிறைத் துறை வட்டாரத்தில்!

நன்றி : ஜூனியர்விகடன்-01-06-2011

கோபாலண்ணே..! ஏண்ணே.. இப்படி..?

27-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



இந்தப் புகைப்படத்தில் இருக்கும் சினிமா கதாசிரியர்,  இணை இயக்குநர், அண்ணன் காந்தி கோபால் இந்த நேரத்தில் உயிரற்ற சடலமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் மார்ச்சுவரியில் படுக்க வைக்கப்பட்டிருக்கிறார்..!

எப்போதும் சிரித்த முகம்.. வாயைத் திறந்தால் கொட்டுகின்ற காமெடி ஷொட்டுகள்.. “இவருக்கெல்லாம் முருகன் கஷ்டத்தையே கொடுக்க மாட்டானா..? எப்படி நக்கல் விட்டுக்கிட்டே இருக்காரு..” என்று எனக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்திய குணமுடையவர்..

"சரவணா.. உம்முன்னு இருக்காத மூதேவி..! கொஞ்சம் சிரிச்சுத் தொலை.. கஷ்டம் வந்தாலும் தூசி தட்டினாப்புல லேசுல விடுடா.. மனசு விட்டுச் சிரி.. எல்லாம் சரியாப் போயிரும்.." என்று பார்க்கும்போதெல்லாம் அட்வைஸை அள்ளி வீசுவார்..!

எப்போதும் முரட்டு கதரில் வெள்ளை சட்டை. ஆனால் இதற்குக் கொஞ்சமும் பொருந்தா ஜீன்ஸ் பேண்ட். இதுதான் அண்ணனின் இத்தனை வருட கால யூனிபார்ம்..! தமிழ்ச் சினிமாவுலகில் 20 வருட அனுபவமுள்ளவர். பல 'பகீர்' கதைகளையும், சில 'சிலிர்ப்பான' உண்மைக் கதைகளையும் இவர் சொல்கின்றவிதமே நம்மைக் கொன்றெடுக்கும்.

தமிழ்ச் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்களின் தொடர்ச்சியான வால் போல் இருந்த காரணத்தினால், பல பிரிவுகளுக்கும், சேர்க்கைகளுக்கும் இவரே சாட்சியாக இருந்திருக்கிறார்.. அத்தனையையும் இவர் மூலமாகக் கேட்டதில் இருந்தே அண்ணனின் மேல் ஒரு மிகப் பெரும் மரியாதை..!

“ஏண்ணே.. இதையெல்லாம் புத்தகமா எழுதினா என்ன அண்ணே..? இல்லாட்டி ஏதாவது ஒரு பத்திரிகைல தொடர் கட்டுரையா எழுதலாமே?” என்று எத்தனையோ முறை கேட்டுவிட்டேன்.. “இல்ல சரவணா.. அது ரொம்பத் தப்பு.. எல்லா இடத்துலேயும் இது மாதிரி அத்தனையும் நடக்கத்தான் செய்யும். நம்மளை நம்பி கூப்பிட்டு சோறு போட்டு, தொழில் கத்துக் கொடுத்து, கூடவே வைச்சிருந்து பார்த்துக்குறாங்கன்னா அந்த நம்பிக்கையை மனிதர்களின் பலவீனத்துக்காக கெடுக்கக் கூடாது. அப்புறம் நம்மளை கெடுக்க ஒருத்தன் தானா வந்து சேருவான்.. வேணாம் விட்ரு..” என்று அலட்சியமாகச் சொல்லுவார்..!

கே.பாக்யராஜிடம் பல வருடங்கள் அசோஸியட் இயக்குநர்..! அவருடைய கடைசிப் படத்துக்குப் பின்பு கேப்டன் விஜயகாந்தின் கடைக்கண் பார்வையில் இருந்தவர். தொடர்ந்து 'மின்பிம்பங்களி்ன்' 'நையாண்டி தர்பாரு'க்கு காமெடி டிராக் எழுதினார். அப்படியே  'வீட்டுக்கு வீடு லூட்டி'க்கும் எழுத்தாளர் கூடவே இயக்குநரும் ஆனார். சின்னி ஜெயந்தை வைத்து ஒரு வருடத்திற்கு ராஜ் டிவியில் 'காமெடி தர்பார்' நடத்தினார்..! கடைசியாக தற்போதுவரையிலும் ஹலோ எஃப்.எம்.மின் அசைக்க முடியாத கதாநாயகனாக இருந்தவர். அங்கே 'அஞ்சலி அபார்ட்மெண்ட்டின்' நாடகத்திற்கு கதை, திரைக்கதை, இயக்கம் செய்து அதில் மேனேஜர் மாதவனாக நடித்தும் கொண்டிருந்தார்..!

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'மகாதீரா' என்ற திரைப்படத்தின் உண்மையான கதாசிரியர் இவர்தான்..! சினிமா பாணியில் இவரிடம் கதையை வாங்கிவிட்டு, வழக்கம்போல பட்டை நாமம் போட்டுவிட்டார்கள். திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும், பெப்ஸியிலும் புகார் கொடுத்து 3 வருடங்களாகக் காத்துக் கொண்டிருந்தார். ஒன்றும் நடக்கவில்லை..!

"விதி விட்டது போன்னு போக வேண்டியதுதான் சரவணா..! வாழ்க்கை முழுக்க பிச்சை போட வேண்டியவன்.. மொத்தமா ஒரே நாள்ல ஒருத்தனுக்குப் போட்டேன்னு நினைச்சுக்குறேன்.." என்று சென்ற மாதம் என் அலுவலகத்திற்கு வந்திருந்தபோது எனக்கே ஆறுதல் சொல்லிவிட்டுப் போனார்..! இதோ இன்றைக்கு அந்தத் திரைப்படம் 'மாவீரன்' என்ற பெயரில் தமிழில் வெளியாகும் அதே தினத்தில், தனது உயிரை முடித்துக் கொண்டிருக்கிறார்..!

தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் நமக்கே இத்தனை கோபம் வரும்போது, அவருடைய குருநாதர் பாக்யராஜே, அதே 'மகாதீரா' படத்தின் தமிழ் டப்பிங் படத்துக்கு வசனம் எழுதிக் கொடுத்திருக்கிறார் என்பதையும் மிக இயல்பாக தாங்கிக் கொண்டார். “மனுஷங்க அப்படித்தான் சரவணா.. விடு.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும்ல்ல. எனக்கு என் பிரச்சினை.. அவருக்கு அவர் பிரச்சினை.. எல்லாரும் வாழ்க்கைல எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க..” என்று கேஷூவலாக அதனைத் தாண்டிச் சென்றவர்..!

இப்போதும் ஹலோ எஃப்.எம். வானொலி ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார்கள். “அவரா ஸார்..? ஏன் ஸார்..? அவர் புரோகிராம்தான் ஸார் இங்க டாப்பு. அந்த நகைச்சுவையை விரும்பும் வானொலி நேயர்களின் எண்ணிக்கை மாதாமாதம் எகிறிக் கொண்டே போகிறது என்று சந்தோஷத்தில் இருக்கிறோம்.. அவர் ஏன் இப்படி..?” என்கிறார்கள்..!

எப்போதும் ஹாஸ்ய உணர்வுடன் வாழ்க்கையை உணர்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தவர், இன்றைக்கு என்ன நினைத்தாரோ.. தனது மனைவியுடன் நீண்ட காலமாக இருந்த மனஸ்தாபத்தில் இப்படிச் செய்துவிட்டார்..!

அந்த நிமிடத்திற்கு முன்பாக தனது ஈமச்சடங்கிற்கு வேண்டிய பணத்தினை தனது நண்பர் ஒருவரிடத்தில் கொடுத்து வைத்திருக்கிறார். தனது மகள்கள் பெயரில் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்திருக்கிறார்.. தனது மகள்களுக்கான அடுத்த வருடத்துக்கான ஸ்கூல் பீஸ் முழுவதையும் இப்போதே கொண்டு போய் கட்டியிருக்கிறார்..! இத்தனைக்கும் மூத்த மகளின் வயது 7. இரண்டாவது மகளின் வயது 3. இளம் தளிர்கள்..! எப்படி விட்டுவிட்டுப் போக மனது வந்ததோ தெரியவில்லை..!

மனைவியை வெளியே அனுப்பிவிட்டு அவர் திரும்பி வருவதற்குள் தன் உயிரைத் தானே தூக்கிட்டு போக்கியிருக்கிறார். இதை இன்னமும் நிறைய கோடம்பாக்க நண்பர்கள் நம்ப முடியாத அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.. “அவனாவது தொங்கறதாவது..?” என்கிறார்கள்..! ஆனால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருக்கும் அவரது உடல் அதுதான் உண்மை என்கிறது..!

கோபாலண்ணே.. ஏண்ணே இப்படி..?

டெல்லியிலேயே தங்கிடவா…? - மகளிடம் தழுதழுத்த அப்பா..!

27-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

15-க்கு 10 அடி நீள அகலம்தான் அந்த அறை. கல் படுக்கையும் ஒரு காற்றாடியும். தமிழகத்துக்கே இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி அளித்தவரின் மகளுக்கு, சிறையில் சிறப்புச் சலுகையாக ஒரு சின்னத் தொலைக்காட்சிப் பெட்டி. படிப்பதற்கான மனநிலை இருக்குமோ இருக்காதோ... கைவசம் ஆறு புத்தகங்கள்... ஆம், திஹார் சிறையில் கனிமொழி!

தி.மு.க-வின் ராஜ்யசபா எம்.பி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள்... என்ற சக்தி வாய்ந்த அடையாளங்கள் சட்டத்தின் முன் தோற்கடிக்கப்பட, திஹாரில் சிறை எண் 6-ல் அடைக்கப்பட்டார் கனிமொழி. அலைக்கற்றை விவகாரத்தில் கனிமொழியின் பெயர் அடிபடத் தொடங்கிய நாளில் இருந்தே, கருணாநிதியின் தூக்கம் தொலைந்துவிட்டது.

கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுவைக் கூட்டி, 'இது கனிமொழி மீதான பிரச்னை இல்லை. கட்சியின் மதிப்புக்கு பங்கம் உண்டாக்கும் பிரச்னை!’ எனச் சொல்லி தீர்வுக்கு வழி கேட்டார். ஆனால், 'காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவது நல்லது அல்ல!’ என கட்சிக்காரர்களே கருணாநிதியின் எண்ணத்துக்கு அணை போட்டார்கள்.

“கனிமொழி என் மகள் மட்டும் அல்ல... இந்தக் கட்சிக்காக பெரிதாகத் தொண்டாற்றியவர். அவரும் அவருடைய தாயாரும் படுகிறபாட்டை என்னால் சொல்ல முடியவில்லை!'' எனக் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கருணாநிதியால் தழுதழுக்க மட்டுமே முடிந்தது.

'பிரசித்தி பெற்ற வழக்கறிஞரான ராம்ஜெத்மலானியை வாதாட வைத்தால், நிச்சயம் கனிமொழிக்கு பெயில் கிடைக்கும்’ என நம்பினார் கருணாநிதி. ஆனால், ஜெத்மலானியின் வாதமும் கனிமொழியைக் காப்பாற்றாமல் கைவிட்டதுதான் கருணாநிதியின் பெரும் துயரம்.

20-ம் தேதி காலையில் கணவர் அரவிந்தனுடன் சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்தார் கனிமொழி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க. எம்.பி-க்களுடன் மகளிர் அணியினரும் குழுமி இருந்தார்கள். 'பெயில் மனு நிராகரிக்கப்பட்டால், அடுத்த கணமே கைதாக வேண்டி இருக்கும்!’ என்பதால், மகன் ஆதித்யனை கனிமொழி கோர்ட்டுக்கு அழைத்து வரவில்லை.

மீடியா வெளிச்சம்படாமல் பையனை வளர்ப்பதில் ஒரு காலத்தில் உறுதியாக இருந்தவர் கனிமொழி. ஆதித்யனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த ஒரு முன்னாள் அமைச்சரைக் கையெடுத்துக் கும்பிட்டு, 'அவனைப் பெரிய ஆளா ஆக்கிடாதீங்க!’ என வேண்டியவர். ஆனால், கோர்ட்டுக்கு அனுதினமும் வந்து கையெழுத்திட வேண்டும் என உத்தரவு வந்தபோது, மகனோடு வர வேண்டிய இக்கட்டு கனிமொழிக்கு.

20-ம் தேதி மதியம் தீர்ப்பை வாசித்த நீதிபதி சைனி, 'குற்றச் சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் வலுவாக இருக்கின்றன. சாட்சி களைக் கலைக்கும் வாய்ப்பும் அதிகம். அதனால், முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது!’ என அறிவிக்க, அரவிந்தனின் தோளில் சாய்ந்து கண் கலங்கினார் கனிமொழி.

மகளுக்கு எப்படியும் பெயில் கிடைத்துவிடும் என நம்பி இருந்த ராஜாத்தி அம்மாள் பதறி அடித்து டெல்லிக்குக் கிளம்பினார். ஆனால், அவர் வருவதற்கு முன்னரே, திஹார் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கனிமொழி.

சிறைக்குள் போகும் முன்னர் கனிமொழி, அரவிந்தனைக் கூப்பிட, அவர் பதறியடித்து ஓடி வந்தார். 'நான் ஆதித்யனிடம் பேசணுமே...’எனக் குரல் உடைந்து சொல்லியிருக்கிறார் கனிமொழி. அதற்கு போலீஸ் அனுமதி மறுக்க, 'என்னைப் பிரிஞ்சு ஒரு நாள்கூட இருக்க மாட்டான். ஆதிகிட்ட நான் ஸாரி கேட்டதா சொல்லிடுங்க!’ என்றபடியே சிறை வளாகத்துக்குள் போனார் கனிமொழி.

சிறை விதிகளின்படி, வாட்ச், அணிகலன்கள் உள்ளிட்டவற்றைக் கழற்றிவிட வேண்டும். 'கைப் பையை நீங்கள் வைத்துக் கொள்ளலாம். ஆனால், மூக்குத்தியைக் கழற்றிக் கொடுங்கள்!’ என சிறை அதிகாரி சொல்ல, கனிமொழி எதிர்பாரா அதிர்ச்சியில் நிலை குலைந்தது அங்கேதான்.

'அஞ்சாவது படிக்கிற காலத்தில் இருந்து மூக்குத்தி போடுறேன். அவசியம் கழற்றித்தான் ஆகணுமா?’ எனக் கலங்கினார் கனி. மூக்குத்தியை அவ்வளவு சுலபமாகக் கழற்ற முடியவில்லை. தி.மு.க-வின் எம்.பி-க்களான வசந்தி ஸ்டான்லியும், ஹெலன் டேவிட்சனும் போலீஸ் அனுமதி பெற்று உள்ளே போக, அங்கே கனி அமர்த்தப்பட்டு இருந்த கோலம் அவர்களைக் கதற வைத்துவிட்டதாம். சிறை சம்பிரதாயங்களை முடித்துவிட்டு, கண்ணீர் முட்ட உள்ளே போன கனிமொழி திரும்பத் திரும்பச் சொன்ன வார்த்தைகள்... 'ஆதித்யனைப் பத்திரமாப் பார்த்துக்கங்க!’


''திஹார் சிறையில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன் சி.ஐ.டி. நகருக்கு அழைத்து வரப்பட்டார். சிறை எப்படி இருக்கும், என்னென்ன சாப்பாடு, உள்ளே யாருக்கு அதிகாரம் அதிகம் போன்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
 
அதனால், 6-ம் எண் அறையைப் பார்த்து கனிக்கு பெரிதாக அதிர்ச்சி இல்லை. அரை மணி நேரத்துக்குப் பிறகு கூடுதலாக இரண்டு தலையணைகள் கேட்டு வாங்கிக் கொண்டார். இரவு அவர் சரியாகத் தூங்கவில்லை. பெண் அதிகாரி ஒருவர் மூலம் மகனுடைய செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பச் சொன்னார். இந்த வருடம் ஆதித்யன் ஆறாம் வகுப்பு சேர வேண்டும். அவனைப் பற்றிய கவலைதான் கனிமொழியை வாட்டுகிறது!'' என்கிறார்கள் டெல்லி தி.மு.க. புள்ளிகள்.

அடுத்த நாள் பாட்டியாலா சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்தார் கனிமொழி. அதற்கு முன்னதாகவே கோர்ட்டுக்கு வந்து வராண்டாவில் காத்திருந்த ராஜாத்தி அம்மாள் மகளைக் கட்டிப் பிடித்துக் கலங்கினார். ''என்னால்தானே இத்தனையும்...'' என ராஜாத்தி சொல்லி அழ, அவரை அமைதியாக்கி, ரகசியமாக ஏதோ சொன்னார் கனிமொழி. உடனே சரத் ரெட்டியையும் ஆ.ராசாவையும் சந்தித்து ஏதோ பேசினார் ராஜாத்தி அம்மாள். அப்போது, கண்ணீர் மறைந்து... கோபமும் ஆவேசமுமாக இருந்தது அவருடைய முகம்.

ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ஆதித்யனை அழைத்து வர, கனிமொழிக்கு மீண்டும் கண்ணீர் கோத்துக்கொண்டது. ''அம்மா, எப்போ வெளியே வரப் போறேன்னு தெரியலை. பத்திரமா இரு. அம்மாவைப் பார்க்கணும்னு அடம் பிடிக்காதே...'' எனத் தளும்பிய கண்களுடன் கனிமொழி சொல்ல, ''நான் பத்திரமா பார்த்துக்கிறேன். நீங்க தைரியமா இருங்க!'' என ஆறுதல் சொன்னார் பரமேஸ்வரி. டெல்லியில் உள்ள ஆ.ராசாவின் வீட்டில் அவருடைய மனைவி பரமேஸ்வரியின் பராமரிப்பில்தான் இருக்கிறார் ஆதித்யன்.

காந்தி அழகிரி, துரை தயாநிதி ஆகியோர் கோர்ட்டில் கனிமொழியைச் சந்தித்தனர். 'அண்ணி...’ என அடக்க மாட்டாமல் கனிமொழி விசும்ப, அவரைத் தோளில் சாய்த்துத் தேற்றினார் காந்தி அழகிரி. இதற்கிடையில், ஸ்டாலின் சொல்லி அனுப்பிய ஆறுதலும் கனிமொழிக்கு ஆறுதல் வார்த்து இருக்கிறது.

23-ம் தேதி காலையிலேயே டெல்லி கிளம்பிய கருணாநிதி, திஹாருக்குப் போய் கனிமொழியைச் சந்தித்தார். அங்கே கனிமொழி சில விஷயங்களை வேதனையோடு சொல்லிக் கலங்க, 'நான் இங்கேயே தங்கிடவாம்மா?’ என தழுதழுத்திருக்கிறார் கருணாநிதி. விழிகள் துடைத்து தன்னைத்தானே தேற்றிக் கொண்ட கனிமொழி, 'நீங்க கிளம்புங்கப்பா... நான் பார்த்துக்கிறேன். ஆதித்யனை கவனிச்சுக்கங்க!’ எனச் சொல்லி இருக்கிறார்.

எப்போதும் இல்லாத அளவுக்கு டெல்லியில் தற்போது 42 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக அனல் அடிக்கிறது. மகள் படும் துயரம் பொறுக்காமல் கருணாநிதி எத்தகைய முடிவையும் எடுப்பார் என்கிற நிலையில், டெல்லியின் அனல் இன்னும் அதிகமாகலாம்!

நன்றி : ஆனந்தவிகடன்

கனிமொழியைச் சிக்க வைத்த கலைஞர் டி.வி. அதிகாரி…!

26-05-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
'மகள் கனிமொழி பிறந்த அதிர்ஷ்டமே கருணாநிதியை முதல் அமைச்சராக உயர்த்தியது!’ என்று 'நாத்திகம் பேசும்’ தி.மு.க-வினரே சொல்வார்கள். இன்று அதே கனிமொழியின் துரதிர்ஷ்டம், கருணாநிதியின் 70 வருடப் பொது வாழ்க்கைக்கு ஒரு களங்கம்!

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் கலைஞர் டி.வி-யின் முதன்மை நிர்வாகி சரத்குமாரும் கனிமொழியும், முறையே 16-வது மற்றும் 17-வது குற்றவாளிகளாகச் சேர்க்கப் பட்டனர்.

'கலைஞர் டி.வி-க்கு யாரிடமும் சட்டபூர்வமாக கடன் வாங்க உரிமை உண்டு. அதன்படி நேர்வழியில் கடன் வாங்கி உள்ளனர். அதற்காக அவரை குற்றம் புரிந்தவராகக் கருதக் கூடாது!’ என்று வாதாடினர். சி.பி.ஐ. தரப்பிலும் ஏராளமான எதிர் வாதங்கள் வைக்கப்பட்டன. இப்படி இரு தரப்பிலும் வைக்கப்​பட்ட வாதங்களைக் கேட்ட பின், சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி, நீளமான ஒரு தீர்ப்பைக் கூறினார். 2ஜி வழக்கின் இரண்டாவது குற்றப் பத்திரிகையே 100 பக்கங்களுக்கு குறைவானதுதான். ஆனால், கனிமொழி ஜாமீன் மனு மீது, நீதிபதி அளித்த தீர்ப்பு 144 பக்கங்கள்.

''நான் இப்போது வழக்கின் தன்மையைக் குறித்தோ, அல்லது அதுகுறித்து மதிப்பிடவோ செய்யவில்லை. வழக்கு ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. நீதிமன்ற விசாரணையில்தான் உண்மைகள் வெளிவரும். ஆனால், குற்றப் பத்திரிகையில் சொல்லப்பட்டவை மற்றும் சாட்சியங்களின் படி, 2ஜி உரிமம் பெற்ற ஸ்வான் டெலிகாம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து 200 கோடி பெற்றது சரத்குமார்தான். அவர்தான் எல்லா ஆவணங்களிலும் கையெழுத்துப் போட்டுள்ளார். நிறுவனம் சார்பில் மட்டும் அல்ல, மற்ற இயக்குநர்கள் சார்பிலும் கையெழுத்துப் போட்டுள்ளார். கலைஞர் டி.வி. தொடர்பாக ஆ.ராசாவோடு அடிக்கடி தொடர்பு கொண்டு உள்ளார் என்பதற்கு சாட்சியங்கள் உள்ளன...'' என்றார் நீதிபதி சைனி.

அடுத்ததாக, கனிமொழியைப்பற்றி குறிப்பிட்டார் நீதிபதி.

''கனிமொழி குற்றமற்றவர், அப்பாவி, ஓர் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலே தவறுதலாக சம்பந்தப்படுத்தி உள்ளனர் என்று சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆ.ராசாவின் தனி உதவியாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி கொடுத்துள்ள வாக்குமூலத்தோடு, கலைஞர் டி.வி-யின் நிதி மேலாளர் ஜி.ராஜேந்திரன் கூறிய சாட்சியமும் கனிமொழிக்கு எதிராக இருக்கிறது!'' என்று கூறி ஜாமீனை மறுத்தார்.

'கலைஞர் டி.வி. 200 கோடியை லஞ்சமாக வாங்கவில்லை. கடனாகவும் பங்குகளாக மாற்றிக்கொள்ளவும்தான் வாங்கியது’ என்று உருவாக்கப்பட்ட ஒப்பந்தமே கனிமொழிக்கு எதிராக மாறி உள்ளது.

6.6.07 முதல் 20.6.07 வரை கனிமொழி, கலைஞர் டி.வி.யின் இயக்குநராக இருந்துள்ளார். சில காரணங்​களுக்காக இந்தப் பொறுப்பில் இருந்து விலகி இருந்​தாலும், 19.12.08-ல், 200 கோடியை சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய ஒப்பந்தத்தில் தயாளு அம்மாள், கனிமொழி, சரத்குமார் ஆகியோர் கையெழுத்து இட்டுள்ளனர். 13.2.2009 அன்று நடந்த இயக்குநர்கள் கூட்டத்தில் சரத்குமாரோடு கனிமொழியும் பங்கெடுத்துக்கொண்டு, சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பணம் பெற சரத்குமாருக்கு அனுமதி கொடுத்துள்ளார் என்கிற தகவல்களை கலைஞர் டி.வி. நிதிப் பிரிவு பொது மேலாளர் ராஜேந்திரன் சாட்சியமாகக் கூறி இருப்பதைத்தான் நீதிபதி குறிப்பிடுகிறார்.

ராம்ஜெத்மலானி வைத்த வாதங்களில் மிக முக்கியமானது, கனிமொழி ஒரு பெண் என்பதற்காக ஜாமீன் வழங்க வேண்டும் என்பதாகும். ''பெண் என்கிற முறையில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க முடியாது! ஏனென்றால் மிகப் பெரிய குற்றத்தின் தன்மை (Magnitude of crime)  மற்றும் அவருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டின் அடிப்படைத் தன்மை வலுவாக இருக்கிறது'' என்றார்.

இந்த ஜாமீன் மனு விவகாரத்தில் கனிமொழியின் வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், ராம் ஜெத்மலானி மற்றும் சரத்குமாரின் வழக்கறிஞர்கள் வி.ஜி.பிரகாசம் மற்றும் அல்டாஃப் ஆகியோர், ''புலனாய்வின்போது கைது செய்யப்படாத ஒருவர், சம்மன் (சி.ஆர்.பி.சி. 88-வது பிரிவின் படி) மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கும்போது, அவரை குற்றவியல் நடைமுறைப் பிரிவு 309-வது பிரிவின்படி நீதிமன்றக் காவலில் வைக்கக் கூடாது!'' என்று அழுத்தமாகச் சொன்னார்கள்.

ஆனால் நீதிபதியோ, ''ஒருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றத்தின் தன்மையின் அடிப்படையில், நீதிமன்றக் காவலில் வைக்கவோ அல்லது ஜாமீனில் அனுப்பவோ அதிகாரம் உண்டு'' என்று குறிப்பிட்டார். மேலும் தீர்ப்புக் குறிப்பில், ''கனிமொழியின் கண்ணியத்தையும் நன் மதிப்பையும் என்னால் பார்க்க முடிகிறது என்றாலும், என்னால் வழக்கின் தன்மையைக் கருதி எந்தச் சலுகையும் காட்ட முடியவில்லை!'' என்று  கருத்துச் சொல்லி இருக்கிறார்.

கடந்த 20-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஒரே வரியில் தீர்ப்பைப் படித்தார். ''வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி, கனிமொழி, சரத்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன்!'' என்று கூறினார் சைனி.

தீர்ப்பு கூறிய அடுத்த சில நிமிடங்களில் கனிமொழியையும், சரத்குமாரையும் குற்றவாளிக் கூண்டுக்கு அருகே அழைக்கவே இருவர் முகத்திலும் பதற்றம் பரவியது. அன்றைய தினம் நீதிமன்றத்துக்கு வந்திருந்த தி.மு.க. ஆதரவுப் பெண்கள் பலரும் கதறி அழுதனர். மயிலாப்பூர் கவுன்சிலர் துரை கதறி அழுதார். கனிமொழியின் கணவர் அரவிந்தனும் முன்னாள் அமைச்சர்கள் பூங்கோதையும் சற்குண ​பாண்டியனும் வேதனையில் துடித்தனர். 2-ஜி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஷாகித் பால்வா உட்பட மற்ற குற்றவாளிகளும், அவர்களின் உறவினர்களும் கனிமொழிக்கு ஆறுதல் கூறினர்.

அடுத்த சில நிமிடங்களில் பெண் போலீஸார் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் வர, நீதிமன்ற வளாகத்தில் உள்ள லாக்-அப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கனிமொழி.   லாக்-அப்புக்குச் சென்ற கனிமொழி, தன் மகனைப் பார்க்க வேண்டும் என்று சொல்லவே, ஆதித்யன் நீதிமன்ற வளாகத்துக்கு வரவழைத்துப் பேசவைக்கப் பட்டார். கனிமொழி கைப்பையோடு லாக்-அப் செல்ல முயன்றார். அனுமதி இல்லை என்றதும் அதில் இருந்து புத்தகங்களை மட்டும் எடுத்துக்கொண்டார். கனிமொழி, 'மை நேம் இஸ் ரெட்’ என்ற ஆங்கில நாவலோடு சிறைக்குச் சென்றார்.



ஆ.ராசாவுக்கு அடுத்து இப்போது, கனிமொழியும் சரத்குமாரும் திகார் ஜெயிலுக்குப் போய்விட்டார்கள். 'இத்துடன் முடியாது. இன்னும் சில தி.மு.க. அரசியல் புள்ளிகளும் உள்ளே செல்ல இருக்கிறார்கள்’ என்கிறார்கள் நீதிமன்ற வட்டாரத்தில்!


ராசா வீட்டுச் சாப்பாடு...

அமைச்சர் என்கிற முறையில் பல டெல்லிப் பிரமுகர்கள் நீதிமன்றத்துக்கு நேரடியாக வர முடியாத நிலையில், டி.ஆர்.பாலுதான் அனைத்து விவகாரங்​களையும் கவனித்துக் கொள்கிறார். நெப்போலியன் வர முடியாத சூழ்நிலையில், அவரது தனிப்பட்ட உதவியாளரும் ஐ.பி.எஸ். அதிகாரியுமான கண்ணன் ஜெகதீசனை அனுப்பி வருகிறார். டி.கே.எஸ்.இளங்​கோவன், கே.பி.ராமலிங்கம்போன்றவர்கள் தவறாமல் நீதிமன்றத்துக்கு வருகிறார்கள். திகார் சிறை எண் 6-ல் உள்ள 8-வது வார்டில் கனிமொழி அடைக்கப்பட்டு உள்ளார். இது புதிதாகக் கட்டப்பட்டது.

'ஏ’ கிளாஸ் கைதிகளுக்கு ஆறு செல்கள் உள்ளன. சிமென்ட் மேடைதான் கட்டில். படுக்கை விரிப்புகளைத் தலையணையாக்கிக் கொண்டாராம். ஒரு சிறிய இந்தியன் டைப் டாய்லெட். முதல் நாள் கடுமையான உஷ்ணத்தை சந்தித்தார், கனி. ஆனால், திடீரென வருண பகவான் கனிவு காட்டவே, கோடை மழை வந்து உஷ்ணத்தைத் தணித்தது. 

பொதுவாக, சிறைகளில் மின் விசிறிகளுக்கு அனுமதி இல்லை. கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் சீலிங் ஃபேன் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வழங்கப்​பட்ட இலவச டி.வி. மாதிரி சிறிய தொலைக்காட்சி பெட்டியில் 20-க்கும் மேற்பட்ட சேனல்கள் வரும். தினசரிகள் வழங்கப்படுகின்றன.

இரு தினங்களுக்குப் பின்னர், கனிமொழிக்கும், சரத்​குமாருக்கும் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ராசாவுக்கும் அனுமதி உண்டு என்பதால், ராசா வீட்டில் இருந்தே மூவருக்கும் உணவு வருகிறது.

நன்றி : ஜூனியர்விகடன்-29-05-2011

இவர்தான் பத்திரிகையாளர்..!

24-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சோதனை மேல் சோதனையாக வந்து கொண்டிருக்கிறது..! கனிமொழியின் கைதைத் தொடர்ந்து கலைஞருக்கு கிடைத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி அவருடைய உற்றத் தோழர் இரா.தியாகராஜன் என்ற சின்னக்குத்தூசியாரின் மரணம்தான்..!

பத்திரிகையுலகில் எத்தனை, எத்தனையோ பேர் இன்றைக்கு பெயர் சொல்லும் அளவுக்கு வளர்ந்திருந்தாலும், அத்தனை பேரும் தங்களது வாழ்க்கையில் ஒரு முறையாவது தவறாமல் கால் வைத்திருக்கும் இடம், சின்னக்குத்தூசியார் தங்கியிருந்த ஸ்டார் தியேட்டர் அருகில் இருந்த அவருடைய மேன்ஷன் அறைதான்..!

அவருடைய அபாரமான நினைவாற்றல் அவருடைய இறுதிக் காலம்வரையிலும் அவருக்கு உற்ற துணையாய் இருந்து அவரை எழுத வைத்திருக்கிறது எனில், இந்த நாத்திகனின் நாவில் சரஸ்வதி ஏன் குடியிருந்தாள் என்று நாமே யோசிக்கத்தான் வேண்டும்..!!!

அவருடைய வாழ்க்கை வரலாற்றை நக்கீரன் இணையத்தளத்தில் படித்தேன். அது  இங்கே உங்களுக்காக :

சின்னக்குத்தூசி என்றழைக்கப்படும் இரா.தியாகராஜன் அவர்கள் 15.06.1934ல் திருவாரூரில் பிறந்தார். தந்தை ராமநாதன். தாயார் கமலா அம்மையார். திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற சின்னக்குத்தூசி, பள்ளியில் படிக்கும்போதே திருவாரூர் நகர திராவிட இயக்க முன்னோடிகளான சிங்கராயர், முத்துக்கிருஷ்ணன், வி.எஸ்.பி. யாகூப், 'தண்டவாளம்' ரங்கராஜன் ஆகியோருடன் ஏற்பட்ட தொடர்பால் திராவிட இயக்க கொள்கைகளின்பால் கவரப்பட்டார்.

பள்ளிப் படிப்பு முடிந்த பின், பயிற்சி பெறாத ஆசிரியராக பணியாற்றிய சின்னகுத்தூசி(எ)இரா.தியாகராஜன், ஆகிரியர் பயிற்சி பெறுவதற்காக, திருவாரூர் நகர மன்றத் தலைவராக இருந்த சாம்பசிவம் அவர்களிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று தந்தை பெரியாரை சந்தித்தார். பெரியாரின் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சிறப்பு அனுமதியின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு, ஆசிரியர் பயிற்சி பெற்றார். அதன் பின், பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவற்றில் குறிப்பிடத்தக்கது, குன்றக்குடி அடிகளார் அவர்களின் நிர்வாகத்தில் செயல்பட்ட குன்றக்குடி உயர்நிலைப் பள்ளியாகும். இப்பள்ளியில் பணியாற்றும்போது, குன்றக்குடி அடிகளாரின் அன்பைப் பெற்று, அவரிடம் நெருக்கமாக செயலாற்றினார்.

குன்றக்குடியில் பணியாற்றிய காலத்தில், தமிழ்த் தேசியக் கட்சியின் நிறுவனர் ஈ.வி.கி.சம்பத் அவர்களின் அழைப்பை ஏற்று, ஆசிரியர் பணியைத் துறந்துவிட்டு சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு போரில் பங்கேற்று  சிறை சென்றார்.

திருவாரூரிலிருந்து வெளியான ‘மாதவி’ வார இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய சின்னக்குத்தூசி, பின்னர் தமிழ்த் தேசியக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான ‘தமிழ்ச் செய்தி’ வார இதழ், நாளிதழ் ஆகியவற்றின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார்.  தமிழ்த் தேசியக் கட்சி, காங்கிரசில் இணைந்த பிறகு, பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் நடத்திய 'நவசக்தி'யில் தலையங்க ஆசிரியராக சிறிது காலம் பொறுப்பேற்றிருந்தார்.

‘நாத்திகம்’, ‘அலைஓசை’, ‘எதிரொலி’, ‘முரசொலி’ உள்ளிட்ட நாளேடுகளிலும் ‘நக்கீரன்’, ‘ஜூனியர் விகடன்’ உள்ளிட்ட வாரமிருமுறை இதழ்களிலும் மற்றும் பல இதழ்கள், சிற்றிதழ்கள் ஆகியவற்றிலும் ஏராளமான அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதிக் குவித்துள்ளார்.
வலுவான வாதங்கள், அசைக்க முடியாத ஆதாரங்கள், மறுக்க இயலாத புள்ளிவிவரங்கள், வரலாற்று நிகழ்வுகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் இவரது கட்டுரைகள் தமிழக அரசியல் களத்தில் பலரது கவனிப்பையும் பெற்று வருகின்றன.

இவரது கட்டுரைகள் 'புதையல்', 'கருவூலம்', 'களஞ்சியம்', 'சுரங்கம்', 'பெட்டகம்', 'எத்தனை மனிதர்கள்', 'சங்கொலி', 'முத்தாரம்' 'வைரமாலை' உள்ளிட்ட பல தலைப்புகளில் நூல்களாக வெளிவந்துள்ளன. அமரர் ஜீவாவின் பொறுப்பில் வெளியான 'தாமரை' இதழிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. நாராண துரைக்கண்ணன் அவர்கள் நடத்திய ‘பிரசண்ட விகடன்’ இதழில் தொடர்கதை எழுதியுள்ளார். கலைஞர் அவர்களின் அன்பைப் பெற்ற சின்னக்குத்தூசி அவர்கள் ‘முரசொலி’யில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார்.

‘சின்னக்குத்தூசி’ என்ற புனைபெயரில் இவர் பரவலாக அறியப்பட்டாலும் ‘கொக்கிரகுளம் சுல்தான் முகமது’, ‘காமராஜ் நகர் ஜான் ஆசிர்வாதம்’, ‘தெரிந்தார்க்கினியன்’, ‘ஆர்.ஓ.மஜாட்டோ’, ‘திட்டக்குடி அனீஃப்’ ஆகிய புனைப் பெயரிகளிலும் பல அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நடமாடும் திராவிட இயக்க களஞ்சியம் எனும்படி தமிழகத்தின் 60 ஆண்டு கால அரசியல் விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் சின்னக்குத்தூசி அவர்கள் இந்திய அரசியல் குறித்தும் ஆழ்ந்த அறிவனுபவம்மிக்கவர். பொது வாழ்க்கை - எழுத்துப் பணி இவற்றிற்காக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த சின்னக்குத்தூசி அவர்கள் சென்னை திருவல்லிக்கேணி எண்.13 வல்லப அக்கிரஹாரம் தெருவில் தங்கியிருந்த சிறிய அறை, இன்றைய பத்திரிகையாளர்களின் வேடந்தாங்கலாக அமைந்திருந்தது. மனிதநேயம், பகத்தறிவு, சுயமரியாதை ஆகியவற்றை இலட்சியங்களாகக் கொண்டு திராவிட இயக்க நெறிகளின்படி வாழ்ந்து வந்தவர் திரு.சின்னக்குத்தூசி (எ) இரா.தியாகராஜன் அவர்கள்.

- 'முரசொலி'யில் அவர் பெயரில் எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக வாசித்து வந்திருக்கிறேன்.. புள்ளி விவரங்களை அவர் அடுக்கி வைக்கும் லாவகமே தனி..! தி.மு.க.வுக்கு ஆதரவாக அவர் எழுதினாலும் அந்த சாய்வுத் தன்மையை இந்த புள்ளி விவரங்களையும், அவருடைய வார்த்தை ஜாலங்களையும் வைத்தே பூசி மெழுகிவிடுவார்..!

நான் ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் பணியாற்றியபோதுதான் ‘முரசொலி’யை ஒரு நாள்கூட விடாமல் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘முரசொலி’யில் வரும் ஐயாவின் எழுத்துக்கு, மறுநாள் ‘நமது எம்.ஜி.ஆரி.ல்' பதில் வரும்.. அதற்கு அடுத்த பதில் ‘முரசொலி’யில் மறுநாளே வரும்.. இதையெல்லாம் தொடர்ந்து படித்து வந்தால் நமக்கு நிச்சயம் தலை சுற்றும். இரண்டு பக்கம் எழுதுபவர்களும் தங்களுக்குச் சாதகமான அரசியல் நிகழ்வுகளை தேதி, வருடம், மாதம், இடத்தையும் சொல்லி அசரடிப்பார்கள்..!

அதென்ன ‘சின்னக்குத்தூசி’ என்று இவரது பெயருக்கான விளக்கத்தைக் கேட்கப் போய், ‘பெரிய குத்தூசி’யாக இருந்த மறைந்த பெரியவர் ‘குத்தூசி குருசாமி’யின் வாழ்க்கை வரலாற்றையும் இவர் மூலமாகவே அறிந்து கொண்டேன்..!

என்னுடன் ‘தமிழன் எக்ஸ்பிரஸில்’ பணியாற்றி வந்த வேதராஜன் என்னும் தலைமை ஆர்ட்டிஸ்ட்டும், திருவாரூர் பாபு(‘கந்தா’ படத்தின் இயக்குநர்) என்னும் ரிப்போர்ட்டரும் திருவாரூரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வாரத்திற்கு ஒரு நாள் சின்னக்குத்தூசியாரை நேரில் சென்று பார்த்து வருவார்கள்.. இவர்கள் அவரைப் பற்றிச் சொன்னதைக் கேட்டு ஒரு நாளாவது அவரை நேரில் சந்தித்துவிடலாம் என்ற ஆசையோடு இருந்தேன்.

‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் அப்போது கேள்வி-பதில் வெளியாகிக் கொண்டிருந்தது. அதில் அந்த வாரத்திய ‘முரசொலி’ இதழில் சின்னக்குத்தூசியார் எழுதியிருந்த ஒரு கட்டுரையைப் பாராட்டி சில வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. எங்களது பத்திரிகையின் வழக்கப்படி இது போன்ற நேரங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அந்த வார இதழை நேரடியாகவோ, அஞ்சலிலோ அனுப்பி வைப்பது எங்களது வழக்கம்..! அதன்படி ஒரு சனிக்கிழமையன்று என்னை சின்னக்குத்தூசியாரிடம் நேரில் சென்று அந்த வார 'தமிழன் எக்ஸ்பிரஸ்' இதழைக் கொடுத்துவிட்டு வரும்படி கூறினார் எனது உதவி ஆசிரியர் ஆர்.சிவகுமார்.

நானும் மிகுந்த ஆர்வத்துடன் சின்னக்குத்தூசியாரை நேரில் சென்று சந்தித்தேன்.. பெயர், ஊர், படிப்பு, குடும்பம் என்று எல்லாவற்றையும் கேட்டார்.  என்னுடைய பல நாள் ஆச்சரியமான அவருடைய நினைவாற்றல் பற்றி அவரிடத்திலேயே அப்போது கேட்டேன். மெல்ல சிரித்துக் கொண்டார்.

“அது தானா அமைஞ்சதுதான்.. நீங்களும் படிக்கும்போது உன்னிப்பா, கருத்தோட, ஆர்வத்தோட படிக்கணும்.. நிச்சயமா அது மனசுல நிக்கும்.. அத்தோட இங்க பாருங்க... (அருகில் குவிந்திருந்த காக்கி அட்டை போட்ட கவர்களைக் காட்டினார்) இதுல பல அரசியல் விஷயங்களை பிரிச்சுப் பிரிச்சு வைச்சிருக்கேன். ஏதாவது சந்தேகம்ன்னா அதுல இருந்து எடுத்துப் பார்த்துக்குவேன்.. அதுனால நான் என்னவோ ஸ்பெஷல்லாம் இல்லை.. அப்படி நினைச்சுக்காதீங்க..!” என்றார் தன்மையாக..!

அப்போது ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை கொஞ்சம் தி.மு.க. எதிர்ப்பாக போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும் வாராவாரம் தி.மு.க. அமைச்சர்களின் பேட்டியையும் எடுத்துப் போட்டு ‘பேலன்ஸ்’ செய்து கொண்டிருந்தோம்.. இதையெல்லாம் குறிப்பி்ட்டுக் காட்டியவர், “என்னதான் நீங்க நடுநிலைமையா இருக்குற மாதிரி எழுதினாலும், அட்டைல போடுல நியூஸெல்லாம் எங்களுக்கு எதிராத்தான் இருக்கு..” என்று சொல்லிவிட்டு லேசாகச் சிரித்தார்.

“தி.மு.க.வின் வரலாறு பற்றி முழுமையாக நான் தெரிந்து கொள்ள வேண்டும். ஏதாவது புத்தகம் இருக்காங்களா ஐயா..?” என்றேன்..! அப்போது திருநாவுக்கரசு எழுதிய புத்தகம் வெளியாகவில்லை. கலைஞரின் 'நெஞ்சுக்கு நீதி' மட்டுமே இருந்தது என்று நினைக்கிறேன்..!

“அதை யாரும் முழுசா அப்டேட்டா இதுவரைக்கும் எழுதலை.. கலைஞரோட 'நெஞ்சுக்கு நீதி' இருக்கே. அதைப் படிங்களேன்..” என்றார்.. நான் அதற்கு காட்டிய முக பாவனையை வைத்தே எனது எண்ணவோட்டத்தைக் கண்டறிந்தவர், பட்டென்று சிரித்தார்.. “ஓ.. நம்ப மாட்டீங்களா..? அப்போ பி.சி.கணேசன் ஒண்ணு எழுதியிருந்தார்..! ஆனா அதுவும் ஒரு பக்கச் சார்பாத்தான் இருக்கு. அவர் கொஞ்சம் காமராஜர் ஆளு. அதுனால அதுவும் முழுசா இருக்காது..!” என்றார்..! “அப்புறம் இன்னும் சின்னச் சின்னப் புத்தகங்களா நிறைய இருக்கு. நான் சில, சில சம்பவங்களைத் தொகுத்துதான் எழுதியிருக்கேன்..” என்றார்..!

அப்போது நான் தேடிக் கொண்டிருந்த வேறொரு புத்தகம் பற்றி அவரிடம் கேட்டேன்.. “கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனி்ன் வாழ்க்கை வரலாறு பற்றி வேலூரைச் சேர்ந்த ஒருத்தர் எழுதுன புத்தகத்தை மதுரை லைப்ரரில படிச்சேங்க ஐயா.. நல்லா இருந்தது.. பெரிய சைஸ் புத்தகம். அதை காசு கொடுத்து வாங்கலாம்னு பார்க்குறேன். கிடைக்க மாட்டேங்குது...” என்றேன்..!

“ஓ.. இருக்கு.. இருக்கு..” என்றவர் சின்னக் குழந்தைபோல் சந்தோஷத்துடன் தனது புத்தகப் புதையலைத் தேடித் துழாவி அந்தப் புத்தகத்தை எடுத்துக் காட்டினார். அவருடைய முகத்தில் தெரிந்த அந்த சந்தோஷத்தை இப்போதும் நான் உணர்கிறேன்..! ஆனால் எந்த வார்த்தைகளில் அதைச் சொல்ல முடியும் என்று தெரியவில்லை. தேடிக் கொண்டிருந்த ஒரு புத்தகம் தன்னிடம் இருக்கிறது என்பதைச் சொல்லும்போது அந்த புத்தகப் பிரியனுக்குத்தான் எத்தனை சந்தோஷம்..!

நான் அதை ஆசையாக வாங்கிப் புரட்டிப் பார்த்துவிட்டு ஏக்கத்துடன் அவரைப் பார்த்தேன்.. என் கண்ணை வைத்தே கண்டுபிடித்தவர், “அது ஒரு காப்பிதாம்பா என்கிட்ட இருக்கு. நீயொரு ரெண்டு வாரம் கழிச்சு வா. நான் அது இப்ப எங்க கிடைக்குதுன்னு கேட்டு வைக்குறேன்..என்ன சரியா..?” என்றார்..!

நான் ஆசையோடு படிக்கத் துடித்துக் கொண்டிருந்த அந்தப் புத்தகத்தை பார்த்துவிட்ட திருப்தியோடு மட்டுமே அங்கிருந்து கிளம்பினேன்..! அதே சூட்டோடு 'தமிழன் எக்ஸ்பிரஸின்' அந்த வாரத்திய புத்தகத்தை தி.நகரில் துணை ஆசிரியர் சிவக்குமாரின் வீட்டிற்கு வந்து கொடுத்துவிட்டு அவரிடத்தில் நடந்ததைச் சொல்லி சந்தோஷப்பட்டது இப்போதும் நினைவுக்கு வந்து தொலைகிறது..!

இதோ இன்றைக்கு அந்த இருவருமே.. சின்னக்குத்தூசியாரும், அண்ணன் சிவக்குமாரும் ஒரே நாளில் மரணமடைந்திருக்கிறார்கள்.. இது என்னளவில் ஏதோவொரு ஒற்றுமை..! என்னவென்று சொல்வது..!?

இடையில் சின்னக்குத்தூசியார் கலைஞரோடு பிணக்குக் கொண்டு வெளியேறியபோது துக்கம் விசாரிப்பதுபோல் சாரை, சாரையாக அவரது அறைக்கு நண்பர்களும், பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்படியொரு சூழலில் இரண்டாவது முறையாகவும் ஒரு மாலை வேளையில்  அவரைச் சந்தித்தேன். ஆனால் அதிகமாக பேச முடியவில்லை..! அப்படியொரு கூட்டம். சுவரில் சாய்ந்தபடி நின்று கொண்டுதான் வேடிக்கை பார்த்தேன்..!

1996-ல் கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்பு, ஒரு பகல் பொழுதில் கலைஞர் ஆலிவர் ரோடு வீட்டில் இருந்து முரசொலி அலுவலகத்திற்கு போன் செய்து சின்னக்குத்தூசியாரிடம் பேசியிருக்கிறார். காங்கிரஸுக்கு ஆதரவாக சில கட்டுரைகளை முரசொலியில் எழுதும்படி கேட்டிருக்கிறார். குத்தூசியார் அதை மறுத்திருக்கிறார். கலைஞர் வற்புறுத்த.. குத்தூசியார் அதை மறுத்துப் பேச.. இப்படியே வாக்குவாதங்கள் தொடர்ந்திருக்கின்றன. ஒரு கட்டத்தில் “எனக்கும் எழுதத் தெரியும்.. தெரியும்ல..” என்று கலைஞர் சற்றுக் கோபமாகக் கேட்டுவிட.. குத்தூசியார் பதில் ஏதும் சொல்லாமல் போனை வைத்துவிட்டு “ரூமுக்கு போயிட்டு வர்றேன்..” என்று சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறிப் போயே போய்விட்டார்..! இதுதான் அப்போது நடந்த கதை என்று பத்திரிகையுலகில் சொல்கிறார்கள்..!

அவர் வெளியேறிவிட்டார் என்பதையறிந்து மறுநாள் முரசொலி அலுவலகம் வந்த கலைஞர் குத்தூசியாரின் ஜாதியைச் சொல்லி முதல் முறையாக ஒரு கமெண்ட் அடித்தாராம். அதுவும் குத்தூசியாரின் காதுக்கு வந்துவிட.. நோ சமரசம் என்று சொல்லி விடாப்பிடியாக நின்றுவிட்டார்..!

இடையில் ‘முரசொலி’ விருதுகள் வழங்கும் விழாவிலும், சில திருமண நிகழ்ச்சிகளிலும் சின்னக்குத்தூசியின் பெயரைச் சொல்லாமலேயே அவரைப் பற்றிப் பேசினார் கலைஞர்..! இந்தக் காலக்கட்டத்தில் சின்னக்குத்தூசியார் ‘நக்கீரனில்’ கட்டுரைகள் எழுதத் தொடங்கினார்.. இந்தக் கட்டுரையில்கூட தி.மு.க.வைத் தாக்கியோ, கலைஞரைத் தாக்கியோ அவர் எழுதவில்லை.. தி.மு.க.வுக்கு அட்வைஸும், கலைஞருக்கு ஆதரவாகவும்தான் தொடர்ந்து எழுதிவந்தார்.

2001-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்பு கலைஞரை நட்ட நடு இரவில் கைது செய்தபோது அதைத் தொலைக்காட்சியில் பார்த்து பதறிப் போனவர், உடனேயே 'முரசொலி' செல்வத்திற்கு போன் செய்து தான் மீண்டும் 'முரசொலி'யில் எழுத விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார். இப்படித்தான் திரும்பவும் 'முரசொலி' காம்பவுண்ட்டுக்குள் ஐயா திரும்பி வந்திருக்கிறார்..!

மூன்றாவது முறையாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் அதே மேன்ஷன் அறையில் அவரைச் சந்தித்தேன். அப்போது பதிப்பகம் ஒன்றுக்காக தமிழக முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதலாம் என்று ஒரு ஐடியா தோன்றியிருந்தது.

அது தொடர்பாகத்தான் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். வாசலில் சேர் போட்டு உட்கார்ந்திருந்தார். அவரைத்தான் பார்க்க வந்தேன் என்றவுடன், என் கையைப் பிடித்தபடியே எழுந்து அறைக்குள் வந்தார். விஷயத்தைச் சொல்லி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டவுடன்  “உங்க மெஷினை பார்த்தவுடனேயே எனக்கு ஞாபகம் வந்திருச்சு.. இப்ப எங்க இருக்கீங்க? என்ன பண்றீங்க..?” என்றெல்லாம் விசாரித்தார்..! விஷயத்தைச் சொன்னேன்..!

“பக்தவச்சலம் பற்றி அதிகமாக யாரும் எழுதவில்லை. அவருடைய மகள் மட்டுமே ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது அவர்களுடைய பார்வையில்தான் இருக்கும். நீங்கள் நடுநிலைமையோடு எழுதுவதாக இருந்தால் நிறைய உழைக்கணும். பெரியார் திடல் நூலகத்துக்கும், அண்ணா அறிவாலய நூலகத்துக்கும் டெய்லி போங்க.. அறிவாலயத்துல நான் அனுப்பினேன்னு சொல்லுங்க. உள்ள விடுவாங்க..! 30 வருட பேப்பர்களைப் புரட்டினால்தான் உங்களால ஒரு லெவலுக்கு வர முடியும். அதைவிட்டுட்டு தெரிஞ்சவங்ககிட்ட கேட்டு, கிடைச்ச புத்தகத்தை மட்டும் படிச்சு எழுதினீங்கன்னா அது சரியா வராது.. இது என்னோட கருத்து..” என்றார்..!

அவரிடத்தில் இருந்த புத்தகங்களை நூலகங்களுக்குக் கொடுத்துவிட்டதாகச் சொன்னார். கொஞ்சம் புத்தகங்களையும், தகவல்களையும் மட்டுமே தான் வைத்திருப்பதாகவும் சொன்னார். ஆனால் பக்தவச்சலம் பற்றி நிறையவே பேசினார். தி.மு.க.வின் எதிர்ப்புணர்வுக்கு தினமும் உரம் போட்டு ஊட்டி வளர்த்தது தி.மு.க. தலைமையினரின் பேச்சுத் திறமை மட்டும்தான் என்றில்லை. பக்தவச்சலமும் ஒரு காரணம். அவர்தான் தினம்தோறும் ஒரு பிரச்சினையைக் கிளப்பி, தி.மு.க. போராடுவதற்கு பிளாட்பார்ம் அமைத்துக் கொடுத்தார்..! அவர் மட்டும் காமராஜரை போல நடந்து கொண்டிருந்தால், தி.மு.க. இன்னும் கொஞ்சம் தாமதமாகத்தான் ஆட்சியைப் பிடித்திருக்கும்.. தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று பக்தவச்சலம் கடைசி காலத்தில்தான் உணர்ந்து கொண்டார்..” என்றார் குத்தூசியார்..!

பக்தவச்சலம் தனது இறுதிக் காலங்களில் கண் பார்வையை இழந்து மிகவும் கஷ்டப்பட்டதை ‘அச்சச்சோ’ உணர்வோடு சொன்னார் குத்தூசியார். “அப்படியிருந்தும் தன்னைப் பார்க்க வர்றவங்க.. உதவி கேட்டு வர்றவங்களுக்கு லெட்டர் கொடுத்துவிடுவார் தம்பி. பேப்பர்ல தடவித் தடவி எழுதுவாராம்.. கையெழுத்து போடும்போது மட்டும் ஒரு ஆள் கையைப் பிடிச்சுக்கிட்டு, ஒரு மாதிரி நீட்ட வாக்குல கையெழுத்துப் போட்டு அனுப்பி வைப்பாரு.. பாவம்...” என்றார்..!

இதைச் சின்னக்குத்தூசியார் சொல்லிவிட்டு சற்று நேரம் அமைதியாகிவிட்டார். அந்தச் சூழலை நானும் உடைக்க விரும்பாமல் அவரிடமிருந்து விடைபெற்றேன்..! இதுதான் அவருடனான எனது கடைசி சந்திப்பு..!

77 வயதான சின்னக்குத்தூசியார் இடையில் சில ஆண்டுகள் தவிர்த்து தனது இறுதி மூச்சுவரையிலும் கலைஞரின் புகழ் பாடியும், திராவிட இயக்கத்தின் கொள்கைப் பிடிப்பாகவும் வாழ்ந்து, மிக எளிமையான மனிதராக, இப்படியும் ஒரு மனிதர் பத்திரிகையாளராக இருந்திருக்கிறார் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் என்பதுதான் மிகப் பெரிய பெருமை..!

இத்தனைக்கும் அவரது பத்திரிகைத் தொழிலுக்கு ஆரம்பப் பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்திருப்பது கலைஞரின் பரம எதிரியான ஈ.வி.கே.சம்பத்துதான். காங்கிரஸின் ‘நவசக்தி’ நாளிதழில் ஆசிரியராக இருந்தவர், அதன் பின்பு சுமார் 25 வருடங்கள் அதற்கு எதிரணியான ‘முரசொலி’யில் எழுதியிருக்கிறார் என்றால் நம்பத்தான் முடியவில்லை..!

கடைசியாக கடந்த ஒரு வருட காலமாக 'நக்கீரன்' ஆசிரியர் கோபாலின் அரவணைப்பில் பில்ராத் மருத்துவமனையில் படுக்கையில் இருந்தபடியே எழுதிக் கொண்டிருந்திருக்கிறார்..! அவரைச் சந்திக்கப் போகிறவர்களிடத்தில் எல்லாம் தன்னால் சரியாக எழுத முடியவில்லை என்பதை மட்டுமே வருத்தத்துடன் சொல்லி வந்திருக்கிறார்..! இந்த இறுதியான பத்தாண்டுகளில் 'நக்கீரன்' கோபால்தான் சின்னக்குத்தூசியாருக்கு வேண்டிய உதவிகள் அனைத்தையும் செய்து வந்திருக்கிறார்..! இறுதிக் காரியத்திலும் ஒரு மகனைப் போல அர்ப்பணிப்புடன் செயல்பட்டு அந்த மூத்தப் பத்திரிகையாளருக்கு, கோபால் அண்ணன் செய்த மரியாதைக்காக அவருக்கு எனது நன்றிகள்..!

சின்னக்குத்தூசியாரின் எழுத்தில் இருக்கும் ஒரு கவர்ச்சி.. முதல் வரியில் இருந்து இறுதிவரையில் அப்படியே விடாமல் தொடர்ந்து படிக்க வைக்கும் ஒரு ஈர்ப்புத் தன்மையுடையது. ஒரு சார்பானது என்று நினைத்துப் படிக்கத் துவங்கினாலும் தனது எழுத்தாற்றலால் அவரது பக்கமே நியாயம் இருப்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்திவிடும் அவரது எழுத்து..! தன்னால் முடிந்தவரையிலும் எழுதுகோலை தனது உற்றத் துணைவனாக வைத்திருந்த அந்தப் பெரியவரின் மரணத்திற்குப் பின்பும், அவரது சட்டைப் பையில் அவரது பேனாவை சொருகி வைத்திருந்தது சாலப் பொருத்தம்..!

ஒரு சாதாரண கட்சி அபிமானியும், வட்டச் செயலாளருமே மிகக் குறுகியக் காலத்தில் கட்சியை வைத்து எப்படி, எப்படியோ வாழ்ந்துவிட்டபோதிலும் தான் வருந்தி, வருந்தி எழுதி, ஆதரவு சேர்த்த கட்சி ஆட்சிக்கு வந்தபோதும், கடைசிவரையில் தனக்காக எதையும் கேட்காமல், தன்னுடைய சொத்துக்களாக பல ஆயிரம் புத்தகங்களை ம்டடுமே விட்டுச் சென்றிருக்கும் சின்னக்குத்தூசியாரின் வாழ்க்கை பத்திரிகையாளர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு..!

அவருடைய ஆன்மா சாந்தியாகட்டும்..!