ஜீரோ - சினிமா விமர்சனம்

29-03-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஜீரோவில் இருந்துதான் அனைத்தும் துவங்குகிறது என்கிற அரிய தத்துவத்தை முன் வைத்து கதையின் துவக்கம் இருப்பதால் ‘ஜீரோ’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள் போலும்..!
இந்த உலகத்தைப் படைத்த கடவுள் முதலில் ஆதாமை படைத்தார். பின்பு அவனது விலா எலும்பில் இருந்து ஏவாளை படைத்தார் என்று விவிலியம் கூறுகிறது. அதே விவிலியத்தில் ஏவாளுக்கு முன்பாக கடவுள் சிருஷ்டித்த லிலித் என்கிற பெண்ணைப் பற்றி அதிகமாக எங்கேயும் செய்திகள் இல்லை.
இந்த லிலித்தையும், கடவுளையும், சாத்தானையும் முன் வைத்து கதை பிடித்து திரைக்கதையாக்கம் செய்து படைத்திருக்கிறார் இயக்குநர்.

சமூக சேவை செய்து வரும் ஹீரோ அஸ்வின், யாருமற்ற அனாதை பொண்ணான ஷிவதாவை காதலிக்கிறார். திருமணம் செய்ய நினைக்கிறார். ஆனால் அஸ்வினின் அப்பா இதற்கு எதிர்ப்பாக இருக்கிறார். காரணம், ஷிவதான் முன் கதைச் சுருக்கம்தான்.
அவளது அம்மா ஒரு மன நோயாளி. ஷிவதா கருவில் இருக்கும்போதே மனநோயாளியான அவளது அம்மா இவளைப் பிரசவித்ததும் இறந்து போகிறாள். அனாதை இல்லத்திலேயே வளர்ந்து வந்திருக்கும் ஷிவதாவை நினைத்து பயப்படும் அஸ்வினின் அப்பா, ஷிவதாவுக்கும் அவளது அம்மா மாதிரியே மனநோய் வந்துவிடுமோ என்று அநியாயத்திற்கு பயப்படுகிறார்.
அஸ்வின் அப்பாவைப் புறக்கணித்துவிட்டு ஷிவதாவை திருமணம் செய்து கொள்கிறார். தனி பிளாட்டில் பால் காய்ச்சி குடியும், குடித்தனத்தையும் ஆரம்பிக்கும்போது ஷிவதாவிற்குள் பல உருமாற்றங்கள்.
அவளது அம்மாவை போலவே இவளுக்கும் மனநோய் பீடிக்கிறது. அவளுக்குள் லிலித் புகுந்து அவளது அம்மாவை அவளிடத்தில் காட்டி “வேறொரு உலகம் நமக்காக காத்திருக்கிறது. வா போகலாம்..” என்று அவளை அழைத்துச் செல்கிறது. அவளது அம்மாவின் ஒவ்வொரு ஆசை காட்டலும், கணவன் அஸ்வினின் ஒரு தொடுதலிலேயே காணாமல் போகிறது.
இதனால் எரிச்சலாகும் கெட்ட ஆன்மாவான லிலித், ஷிவதாவின் உடலுக்குள் பிரவேசித்து அவளை முழுமையாக ஆட்கொள்கிறாள். இதனால் ஷிவதா சில விசித்திரமான நடவடிக்கைகளை காண்கிறாள்.. செய்கிறாள்.. அவளால் ஒருமித்த மனதோடு இருக்க முடிவதில்லை.
மனநல மருத்துவரோ “இவளை என்னால் குணப்படுத்த முடியாது” என்கிறார். இந்த நேரத்தில் அஸ்வினுக்கு ஒரு விபத்து ஏற்பட.. ஷிவதா மாயமாகிறாள். அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் திரைக்கதை.
முன் கதைச் சுருக்கமாக லிலித்தின் கதையை இடையிடையே சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
கடவுளால் படைக்கப்பட்ட லிலித், ஆதாம் மூலமாக  கர்ப்பம் அடைகிறாள். ஆனால் இதன் தொடர்ச்சியாக அவள் சாத்தானுக்கு அடிமையாகி கடவுளுக்கு எதிரியாகிறாள். ஆதாமோடு சண்டை போடுகிறாள். அவன் பேச்சைக் கேட்க மறுக்கிறாள்.  இதையறிந்த கடவுள் அவளைக் கண்டிக்கிறார். ஆனால் லிலித் கேட்க மறுக்கிறாள்.
சாத்தானின் தூண்டுதலால் ‘ஒரு குழந்தைக்கு தாயாகிவிட்டால்  கடவுளை எதிர்க்க தனக்கு கூடுதல் பலம் கிடைக்கும்’ என்று எண்ணுகிறாள் லிலித். இதையறிந்த கடவுள் அவளது கருவில் இருக்கும் குழந்தையை இறந்தே பிறக்க வைக்கிறார்.  இதனால் மனம் வெறுத்த லில்லித் எங்கேயோ  போய்விட, அதன் பிறகே  கடவுள் ஆதாமுக்காக ஏவாளைப் படைத்தாராம்.
இந்த ஏவாளும் சாத்தானின் பேச்சைக் கேட்டு, தொடக் கூடாத ஆப்பிள் பழத்தை ஆதாம் மூலமாக பெற வைத்து.. கடவுளின் கோபத்திற்கு ஆளாகி.. இதற்கு தண்டனையாக அனைத்துவித மனித குணங்களையும் உள்ளடக்கிய வாழ்க்கையில் சிக்கித் துன்பமாகுமாறு சபிக்கப்படுகிறாள். இது தெரிந்த கதைதான்.
காணாமல் போன லிலித் இதன் பின்பு தனக்கென்று ஒரு தனி உலகத்தை படைத்துக் கொள்கிறாள். கடவுளை பழி வாங்குவதாக நினைத்து  காதல் திருமணம் செய்துகொள்ளும் பெண்களை மன ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கி அவர்களது கர்ப்பத்தை கலைத்து, அவர்களை இறப்புக்கு ஆளாக்கி தனது உலகத்திற்கு அழைத்துக் கொள்ளும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறாள். அவர்களை தன் உலகத்தில் பேயுருவில் அலைய விடுகிறாள் லிலித்.
இப்போது லிலித்தின் மாய உலகத்தில் இருக்கும் ஷிவதாவின் அம்மாவின் மூலமாக ஷிவதாவை தன் வயப்படுத்துகிறாள் லிலித். அம்மாவின் அழைப்பின் பேரில் அவளது உலகத்தை அடிக்கடி சென்று பார்க்கும் ஷிவதா, அதனுள் முழுமையாக ஆட்பட முடியாமல் தவிக்கிறாள். இந்த்த் தடுமாற்றத்துக்குக் காரணம் அஸ்வினின் உண்மையான காதல்தான் என்பதை புரிந்து கொண்ட லிலித்.. முழுமையாக ஷிவதாவை ஆக்கிரமித்து அவளை கொலை செய்ய பார்க்கிறாள்.
இந்த நேரத்தில் இறந்து போன தனது மனைவியுடன் அடிக்கடி பேசி வரும் ஜே.டி.சக்கரவர்த்தியின் துணையுடன் அஸ்வின் தனது மனைவியை மீட்கும் முயற்சியில் இறங்குகிறார். வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பதும் திரைக்கதைதான்.
கொஞ்சம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் கதைதான்.. சயின்டிபிக் சைக்காலஜிக்கல் திரில்லர் ஸ்டோரின்னும் சொல்லலாம். இல்லையென்றால் சைக்காலஜிக்கல் ஸ்டோரின்னும் சொல்லலாம்..! ஆனால் படத்தின் மையப்பிடி இதுவரைக்கும் இந்த உலகத்தில் அதிகம் அறியப்படாத லிலித்தின் கதை பற்றியதுதான்..!
இது போன்ற படங்களில் கதையையும் மீறி நடிகர்கள் தங்களது ஆளுமையைக் காட்டிவிட்டால், படத்திற்கு ஏதோவொரு பெயர் கிடைக்கும் என்பார்கள். அது இந்தப் படத்திற்கு நிச்சயம் கிடைக்கும். உபயம் கதாநாயகி ஷிவதா.
இது ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால் ‘நெடுஞ்சாலை’ ஷிவதாவை தேடிப் பிடித்து களத்தில் இறக்கியிருக்கிறார்கள் போலும். ஒரு சின்ன ஷாட்டில்கூட நடிப்பென்றே தெரியாத அளவுக்கு நடித்திருக்கிறார். சிம்ப்ளி சூப்பர்ப்.. சட்.. சட்டென மாறும் அவரது முக பாவனைகள்.. ‘நவராத்திரி’ சிவாஜி மாதிரி வீட்டுக்குள்ளேயே பலவித கெட்டப்புகளில் அஸ்வின் வேடத்தில் தன்னை சூழ்ந்து நிற்கும் கெட்ட ஆவியின் செயலை பார்த்து திகைப்பது.. குழம்புவது.. என்று படம் பார்ப்பவர்களையும் கொஞ்சம் பதைபதைக்க வைத்திருக்கிறார்.
அழகும், அறிவும் ஒரு சேர சேர்ந்தால் விஜயலட்சுமி என்பார்களே.. அது போலத்தான் அழகும், நடிப்பும் ஒன்று சேர்ந்து மிளிர ஷிவதா படம் முழுவதையும் தாங்கியிருக்கிறார்.
அஸ்வினுக்கு இரண்டாம் பாதியில்தான் கொஞ்சம் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவரைவிடவும் இரண்டு இரண்டு காட்சிகள் என்றாலும் டாக்டர் ஷர்மிளாவின் பயமுறுத்தலே படத்திற்கு கொஞ்சம் பரபரப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.
எதிர்வீட்டு துளசியின் குணாதிசயம்.. அவரது மீனுக்கு நேரும் கதி.. சாத்தானின் ஆக்கிரமிப்பு.. சாத்தானின் எச்சரிக்கையையும் மீறி லிலித் தன் ஆதிக்கத்தை செயல்படுத்த நினைக்கும் காட்சிகள்.. ஷிவதாவின் சில நொடியில் மாறும் பேயாட்சி செய்யும் காட்சிகள்.. கிளைமாக்ஸில் தொடுதல் என்ற உணர்ச்சியில் அனைத்தும் மிஸ்ஸாகி லிலித்தின் ஆயுட்காலம் முடிவது.. இதெல்லாம் ஒட்டு மொத்தமாக கதை புரிந்தவர்களுக்கு நிச்சயம் ரசிப்பாகத்தான் இருக்கும்.
ஆனால் அதற்கு முன்பாக கதையை முன் பின்னாக மாற்றிப் போட்டு திரைக்கதை அமைத்திருந்தால் படத்தில் நிகழ்ந்திருக்கும் குழப்பத்தை பெரிதும் தவிர்த்திருக்கலாம்.
பாபுகுமாரின் ஒளிப்பதிவு படம் முழுவதிலுமே அழகு. பாராட்டுக்குரியது. இன்னொரு உலகத்தைக் காட்டுகின்ற காட்சிகளில் கேமிராவின் பங்களிப்பு அதிகம்.  காதுகளுக்கு பஞ்சு வைக்கும் அளவுக்கு போகாமல் கொஞ்சமாகவேனும் பயமுறுத்தியிருந்த நிவாஸ் பிரசன்னாவின் பின்னணி இசைக்கு பாராட்டுக்கள்..
“கடவுளைப் பழி வாங்க யாரையும் நம்பக் கூடாது. நாமளேதான் செயலில் இறங்கணும்..” என்று சாத்தான் சொல்வதோடு படம் முடிகிறது. இதேபோல, ரசிகனை ஈர்க்க நடிகர்களும், இயக்குநரும் மட்டுமே போதுமானதல்ல.. நல்ல கதையும், அதைவிட சிறந்த திரைக்கதையும் கிடைக்க வேண்டும் என்பதையும் இந்தப் படம் சுட்டிக் காட்டுகிறது..!
இன்னமும் கொஞ்சம் முயற்சித்து மிக எளிய முறையில் பாமரனுக்கும் புரிகின்ற வகையில் திரைக்கதையை எழுதியிருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்..!

வாலிப ராஜா - சினிமா விமர்சனம்

28-03-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் சந்தானத்துடன் ஒரு ஹீரோவாக நடித்த சேது சோலோ ஹீரோவாக களமிறங்கியிருக்கும் படம். மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு தட்டுத் தடுமாறி வெளியாகியிருக்கிறது.

நாயகன் சேது, நாயகி நஷ்ரத்தை ஒரு நாள் காலை வேளையில் வாக்கிங் செல்லும் எக்குத்தப்பான தருணத்தில் சந்திக்கிறார். பார்த்தவுடனேயே காதல் கொள்கிறார். நஷ்ரத் அவருடன் பழகினாலும் அது நட்பாகவே இருக்கிறது. ஆனால் சேதுவுக்குள் காதல் கெமிஸ்ட்ரி ஊற்றாய் பொங்கி வழிகிறது.
இடையில் திடீரென்று சேதுவின் தந்தை ஜெயப்பிரகாஷ் சேதுவை பெண் பார்க்க வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறார். அங்கே தான் பார்க்க வந்த பெண்ணான விசாகாசி ங்கிடம் தன்னுடைய ஒன் சைட் காதலைச் சொல்லிவிடுகிறார் சேது.
அவரது காதலுக்கு தானே தூது சென்று முடித்து வைப்பதாக உறுதியளிக்கிறார் விசாகா சிங், இதற்காக “ச்சும்மா கொஞ்ச நாள் நாங்கள் இரண்டு பேரும் பழகிக் கொள்கிறோம்..” என்று சொல்லி இரு வீட்டாரிடம் டைம் வாங்கிக் கொள்கிறார்கள் இருவரும்.
அதன் பிறகு நஷ்ரத்திற்கு விசாகா சிங்கை அறிமுகம் செய்து வைக்கிறார் சேது. மூன்று பேரும் ஊர் சுற்றி வரும் நிலையில் தனது காதலுக்கு எப்படியாவது ஓகே வாங்கிவிடலாம் என்கிற நினைப்பில் இருக்கும் சேதுவுக்குள் திடீரென்று கெமிஸ்ட்ரி இடம் மாறி விசாகா சிங் மீது காதல் வருகிறது.
ஆனால் அடுத்தத் திருப்பமாக நஷ்ரத் திடீரென்று சேதுவை காதலிப்பதாக்க் கூறி கதையை மாற்ற விசாகாவும், சேதுவும் அதிர்ச்சியாகிறார்கள். இப்போது சேதுவுக்குள் ஒரே குழப்பம். இருவரில் யாரை காதலிப்பது என்று..?
அதற்குள்ளாக சேது நஷ்ரத்தைத்தான் காதலிப்பதாக நினைத்து விசாகா சிங்கின் நிச்சயத்தை முறித்துக் கொள்கிறார்கள் சேதுவின் வீட்டார். நஷ்ரத்துடனான திருமணத்திற்கு பேசி முடிவு செய்ய.. சேதுவுக்கு திக்கென்றாகிறது..! இரட்டை மன நிலையில் அல்லாடுகிறார்.
இந்தக் குழப்பத்திற்கு விடை காண மனநல மருத்துவரான சந்தானத்தை அணுகுகிறார் சேது. தான் அந்தக் குழப்பத்தை சரி செய்து சேதுவின் கல்யாணத்தை நடத்தி வைப்பதாக சொல்கிறார் டாக்டர் சந்தானம். சொன்னதை செய்தாரா என்பதுதான் திரைக்கதை.
சேது இந்தப் படத்தில் தனி ஹீரோவாக நடித்திருக்கிறார். இருந்தாலும் அழுத்தமான இயக்கம் இல்லாத்தால் நடிப்பில் தனித்துவம் காட்ட முடியவில்லை. காதல் காட்சிகளில் மட்டும் ஓரளவு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதலின் குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் சந்தானத்துடன் குழப்படியாக பேசி நகைச்சுவையை வரவழைக்கும் காட்சிகளில் நிஜமாகவே சேதுவை பிடிக்கிறது.
கதாநாயகிகளில் விசாகா சிங் அழகு, அருமை.. பொறுமை.. பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறார். கூடவே சிறப்பாகவும் நடித்திருக்கிறார். இன்னொரு ஹீரோயின் பரவாயில்லை ரகம். ஆனாலும் நடிப்பில் குறை சொல்ல முடியாது.
மனோதத்துவ டாக்டரான சந்தானத்தின் காமெடி பல இடங்களில் சிரிப்பை வரவழைத்திருக்கிறது. விட்டுவிட்டு மழை பெய்வதை போல படம் முழுவதிலும் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை காமெடி வெடித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இன்னமும் உடல் குறைபாட்டை நக்கலடித்து காமெடி செய்யும் தன் பாணியை சந்தானம் கைவிடவில்லை போலும்..
மேலும், அப்பாவான ஜெயப்பிரகாஷ், அம்மாவான ஸ்ரீரஞ்சனி, அக்காவான தேவதர்ஷினி, மாமாவான பஞ்சு சுப்பு ஆகியோரின் நடிப்பில் மேலும் காமெடி கூடியிருக்கிறது. அதிலும் தேவதர்ஷினி கோபம் வந்தால் எதையாவது துடைத்துக் கொண்டேயிருப்பார் என்ற கேரக்டர் ஸ்கெட்ச் பல இடங்களில் கலாட்டாவாகியிருக்கிறது. வெல்டன் இயக்குநர் ஸார்..
விசாகா சிங்கின் வீட்டிற்கு குடிபோதையுடன் சென்று சண்டையிட்டு பின்பு ஜெயப்பிரகாஷ் வந்து சேதுவை காரில் அழைத்துச் செல்லும் காட்சியும், அதற்கடுத்து பீச்சோரத்தில் காரை நிறுத்திவிட்டு சேதுவிடம் இனிமேல் நான் எதையும் உன்கிட்ட கேக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டுப் போகும் காட்சியிலும் நடிகர் ஜெயப்பிரகாஷ், ஒரு சராசரி அப்பாக்களின் நடிப்பை கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார். இந்தக் காட்சியில் இயக்குநரின் இயக்கத் திறமைக்கு ஒரு ‘ஜே’ போடலாம்..!
லோகநாதன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு, ரதன் இசை இரண்டுமே சுமார் ரகம். பாடல் காட்சிகளில் மட்டுமே அதுவும் லொகேஷன் பாண்டிச்சேரி என்பதால் கண்ணைக் கவர்கிறது. மற்றபடி கதையும், திரைக்கதையுமே பிரதானம் என்பதால் மற்றவற்றில் அதிக அக்கறை காட்டவில்லைபோலும்..!
காதல் கதையை மையமாக வைத்து எடுத்திருந்தாலும் இதே சாயலில் பல கதைகள் இதற்கு முன்பேயே வந்து போயிருப்பதால் அடுத்தடுத்த திரைக்கதைகளை நாமளே மிக எளிதாக ஊகிக்க முடிவதுதான் இந்தப் படத்தின் ஒரே பலவீனம். ஆனாலும் கிளைமாக்ஸில் வரும் அந்த டிவிஸ்ட் யாருமே எதிர்பாராததுதான்..  அந்தக் காட்சியை சரிவர இயக்காமல் விட்டதினால் ஒரு அழுத்தமான முடிவு கிடைக்காமல் சொதப்பலாகிவிட்டது.
மொத்தத்தில் இந்த ‘வாலிப ராஜா’ வயதுக்கு வராத வாலிபனாகிவிட்டான்.

தோழா - சினிமா விமர்சனம்

27-03-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘தோழன்’ என்கிற ஒரு வார்த்தைக்கு இருக்கும் மதிப்பையும், மரியாதையும் மீட்டுத் தந்திருக்கும் படம் இது.

மிகப் பெரிய செல்வந்தராக இருந்தும் விதியின் விளையாட்டினால் முதுகுத் தண்டில் அடிபட்டு வீல்சேரில் நடமாடும் அளவுக்கு இருக்கிறார் கோடீஸ்வரரான நாகார்ஜூனா. தன்னை பரிவுடன் பார்த்துக் கொள்ள ஆள் தேடுகிறார்.
இன்னொரு பக்கம் அடிக்கடி சிறு, சிறு திருட்டுகளில் ஈடுபட்டு ஜெயிலுக்கு போய் வரும் கார்த்தியினால் அவருடைய குடும்பமே பாதிக்கப்படுகிறது. தன்னுடைய வக்கீல் நண்பரான விவேக்கின் முயற்சியால் 4 மாத பரோலில் ஜெயிலில் இருந்து வெளியில் வருகிறார் கார்த்தி.
வீட்டுக்கு வந்தால் தம்பி தறிகெட்டுப் போயிருக்கிறான். தங்கை மதிக்கவே மாட்டேன் என்கிறாள். அம்மாவும் அதையேதான் கார்த்தியிடம் சொல்கிறாள்.. இனிமேல் இங்க வராதே என்று.. மனம் வெதும்பிப் போய் நிற்கும் கார்த்தியை வேறு வேலைகளில் தள்ளிவிடப் பார்க்கிறார் விவேக். எதுவும் அமையாமல் போக கடைசியாக நாகார்ஜூனாவின் நேர்முகத் தேர்வுக்கு அனுப்பி வைக்கிறார்.
அங்கேயும் எப்போதும்போல தெனாவெட்டாக பேசும் கார்த்தியை ஏனோ நாகார்ஜூனாவுக்கு மிகவும் பிடித்துப் போகிறது. ஆனால் கார்த்திக்கு அந்த இடம் பிடித்துப் போனதற்கு இரண்டு காரணங்கள். 1. தமன்னா.. 2. அந்த வீட்டில் அவருக்குக் கொடுத்திருக்கும் வசதியான பெரிய அறை.
அதுவரையிலும் தன்னை ஒரு நோயாளி போலவே ட்ரீட் செய்து வரும் தனது நண்பர்கள், சுற்றத்தாரிடமிருந்து “உனக்கு ஒண்ணுமே இல்லண்ணே.. நல்லாத்தாண்ணே இருக்க..” என்று பாஸிட்டிவ்வாக பேசி அவரை உற்சாகப்படுத்தும் கார்த்தியை நாகார்ஜூனாவுக்கு ரொம்பவே பிடித்துப் போகிறது..!
நாகார்ஜூனாவை வெளியில் காரில் அழைத்துப் போகிறார். பரிவுடன் பார்த்துக் கொள்கிறார்.. இன்னொரு பக்கம் நாகார்ஜூனாவுக்குள் இருக்கும் காதல் உணர்வுக்குக் காரணமானவரை அழைத்து வந்து, அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த முனைகிறார் கார்த்தி. அது முடிந்ததா… இல்லையா என்பதுதான் படத்தின் உயிரோட்டமான திரைக்கதை.
பிரெஞ்சு மொழியில் வெளியான ‘InTouchables’ என்கிற படத்தின் ரீமேக் இது. இந்தப் படத்தை முதலில் பார்த்தபோது கமல்ஹாசனும், விஜய் சேதுபதியும் இதில் நடித்தால் எப்படியிருக்கும் என்று யோசித்த்துண்டு. இன்றைக்கு அது இடம் மாறி, தடம் மாறி வந்திருந்தாலும் மிகச் சிறப்பாகவே, தரமாகவே தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு படத்தின் கேஸ்டிங் டிபார்ட்மெண்ட்டே முக்கியக் காரணம். நாயகர்களான நாகார்ஜூனாவும், கார்த்தியும், தமன்னாவும் இவர்களோடு பிரகாஷ்ராஜ், வசனகர்த்தாக்களான ராஜூ முருகன், சி.முருகேஷ்பாபு மற்றும் திறமைசாலி இயக்குநரான வம்சியும் தங்களது பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு காட்சியையும் நன்கு திட்டமிட்டு மிக யதார்த்தமாக நகைச்சுவையும் மாறாமல், சென்டிமெண்ட்டையும்உள்ளடக்கி ஒரு குடும்பக் கதைக்கு உதாரணமாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
நாகார்ஜூனாவின் மென்மையான நடிப்புக்கும், கார்த்தியின் அடாபுடாவென்று எதையும் அனாயசமாக எதிர்கொள்ளும் கேரக்டருடைய நடிப்புக்கும் ஒத்துப் போகும் அளவுக்கு காட்சியமைப்புகளை அமைத்திருக்கும் இயக்குநரை வெகுவாக பாராட்ட வேண்டும்.
நாகார்ஜூனா ஆக்சன் காட்சிகளிலேயே அமைதியின் திருவுருவமாக வந்து அதகளப்படுத்துவார். இதில் சொல்லவா வேண்டும்..? ஷ்ரேயாவின் புகைப்படம் வந்த கடித்த்தை கிழிக்கப் போகும் கார்த்தியின் செயலைத் தடுக்க, “அதைக் கிழிக்காத சீனு.. சீனு கிழிக்காத..” என்று குரலை உயர்த்திப் பேசியிருப்பதுதான் இந்தப் படத்திலேயே அவர் அதிகம் நடித்திருக்கும் காட்சி. மற்றவைகளில் இயல்பாக எப்படி இருப்பாரோ அப்படியேதான் நடித்திருக்கிறார்.
இறுதியில் அனுஷ்கா எங்கே தன்னை பார்த்துவிடுவாரோ என்கிற பயத்துடன் சீனு.. சீனு என்று அழைப்பதும், அந்தப் பதட்டத்தையும், அனுஷ்கா சொல்வதை ஜீரணித்து ஏற்றுக் கொள்ளும் காட்சியிலும் நம்மையும் ஒன்ற வைத்துவிட்டார். தன்னை எல்லோருமே உடல் ஊனமுற்றவனாக.. பாவமான தோரணையில் பார்ப்பதையே தான் விரும்பவில்லை என்று சொல்லும் நாகார்ஜூனா.. கார்த்தியின் வருகைக்குப் பின்னர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்விதமும், தன்னுடைய உடல் ஊனத்தை ஒரு பொருட்டாகவே கருதாதவண்ணம் செய்யும் செயல்களும் படத்திற்கே ஒரு பாஸிட்டிவ் உணர்ச்சியை ஊட்டியிருக்கின்றன.
கார்த்தியின் நடிப்பில் இந்தப் படமும் ஒரு மைல் கல். அம்மாவின் அன்புக்காக ஏங்கியவர்.. தங்கையின் பாராமுகத்தில் அவமானப்படுபவர்.. தம்பியின் நல்ல வாழ்க்கைக்கைக புத்தி சொல்பவர்.. எல்லாம் சுற்றி அவருக்கு நாகார்ஜூனாவிடமிருந்து கிடைக்கும் அன்பு அவரை ஆசுவாசப்படுத்துவதை காட்சிகளில் அற்புதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வம்சி.
அந்த ஓவியத் திறமையைப் பற்றியும், ஓவியம் மூலம் பணம் சம்பாதிக்கும் முறையைப் பற்றியும் கார்த்தி பேசும்போதெல்லாம் தியேட்டரே அதிர்கிறது. எங்கேயிருந்து இத்தனை இயல்பான நகைச்சுவையை இயக்குநர் வெளிப்படுத்த வைத்தார் என்றே தெரியவில்லை. கார்த்தியின் இயல்பான நடிப்பில் உள்ளம் கொள்ளை கொண்டது முதல்முறையாக இந்தப் படத்தில்தான்..!
கார்த்தி தன்னுடைய வாழ்க்கைக் கதையின் முடிச்சை அவிழ்த்துவிட்டு, தனது அம்மா பாசத்தை ஏக்கத்துடன் தெரிவிக்கையில் நாகார்ஜூனா பேசும் வசனங்கள்தான் படத்தின் டர்னிங் பாயிண்ட். அந்தக் காட்சியை லயித்த ரசிகனால் அதிலிருந்து மீளவே முடியவில்லை.
அம்மா-மகன் பாச செண்டிமெண்ட்டுக்கு இக்காலத்திற்கும் ஏற்றாற்போல வசனம் எழுதியிருக்கும் ராஜுமுருகன், சி.முருகேஷ்பாபு இருவருக்கும் நமது பாராட்டுக்கள். படத்தில் வசனங்கள் மிகப் பெரிய பலம். அவைகளாலும் நகைச்சுவை வெடித்து, சென்டிமெண்ட்டும் ஒர்க்அவுட்டாயிருக்கிறது.
தமன்னாவின் காதல் சமாச்சாரம் காமெடியாக பேசப்பட்டு தொடர்ந்து வந்தும், கடைசியாக ஒரு பொக்கேவில் வெளிப்படுவதும்.. “இவரையே இப்படி பார்த்துக்கிட்டீன்னா நீ அதிகமா விரும்புற என்னை எப்படி பார்த்துக்குவ.. இதுக்காகவே உன்னைய காதலிக்கிறேன்…” என்கிற தமன்னாவின் பேச்சில் காதல் கரைபுரண்டோடுகிறது.  தமன்னாவின் காஸ்ட்யூம் டிஸைனருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு. கேமிராமேனுக்கு அப்புறம் தமன்னாவை அழகாகக் காட்டியிருப்பதில் பெரும் பங்கு அவருக்கே..!
பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் பளிச்சிடுகிறது. பாரீஸ் காட்சிகளையும், கார் ரேஸ் காட்சிகளையும் அந்த வேகத்துடனேயே படமாக்கியிருக்கிறார்கள். சென்னையில் இரவு நேர கார் துரத்தல் காட்சியின் எடிட்டருக்கும், கேமிராமேனுக்கும் இடையிலேயே ரேஸ் நடந்திருப்பது போல தெரிகிறது. ஒரு சிறந்த வலுவான கூட்டணி அமையும்போது அனைத்து விஷயங்களுமே 100 சதவிகிதம் முழுமையாகத் வெளிப்படும். அது இந்தப் படத்தில் சாத்தியமாகியிருக்கிறது.
கோபி சுந்தரின் பாடல் காட்சிகள் படத்திற்கிடையே சோர்வைத் தராமல் அதுவும் ஒரு திரைக்கதையின் யுக்தியாக கொண்டு போயிருப்பது பாராட்டுக்குரியது. அந்த கிளப் டான்ஸிற்கு நடனமைத்தவருக்கு ஒரு ஷொட்டு.. நடனமணிக்கும் ஒரு பாராட்டு.
ஒட்டு மொத்தமாக பார்க்கப் போனால் ஒரு உடல் ஊனமுற்றவரை பார்த்து உச்சுக் கொட்டி அவரை ஒரு ஓரமாக உட்கார வைக்காமல், அவரும் நம்மில் ஒருவர்.. அவருக்கு ஒரு குறையும் இல்லை என்கிற பாஸிட்டிவ் எனர்ஜியோடு பேசவும், பழகவும் செய்வதுதான் அவர்களுக்குக் கொடுக்கிற உண்மையான சிகிச்சை என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது இந்தப் படம்.
படம் பார்த்த நான்கு பேராவது உடல் ஊனமுற்றவர்களைப் பற்றிய தங்களது பார்வையை மாற்றிக் கொண்டால் அதுவே இந்தப் படத்தை தயாரித்திருக்கும் பிவிபி நிறுவனத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இருக்கும்..!
படக்குழுவினருக்கும், இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
தோழா – உணர்வுப்பூர்வமான படம். மிஸ் பண்ணிராதீங்க..!

பூங்காவில் பெண் பார்க்கும் படலம்..!

23-03-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இப்போதுதான் காமராஜர் பூங்காவில் நடைப் பயிற்சியை முடித்துவிட்டு வந்தேன். அங்கே இன்று நான் பார்த்த ஒரு நிகழ்வை சொல்லியே ஆக வேண்டும் என்று தோன்றுவதால் உடனேயே டைப்பிங்.!

உள்ளே நுழைந்தபோதே 4 மத்திய தர வயதுடைய பெண்களும் அவர்களுடன் மாடர்ன் டிரெஸ்ஸில் ஒரு ஓங்கி உயர்ந்த உடல் தோற்றத்துடன் மிக அழகான பெண்ணும் பேசிக் கொண்டிருந்தார்கள். முதல் ரவுண்டு சுற்றிவிட்டு அவர்கள் அருகில் வரும்போது அந்த இளம் பெண்ணின் கையைப் பிடித்தபடியே அவரது அம்மா போன்ற தோற்றத்தில் இருந்தவர் கெஞ்சிக் கொண்டிருந்தார்.



“சொன்னா கேளுடி... ச்சும்மா பத்தே பத்து நிமிஷம்.. பேசிட்டு வந்திரு.. மத்ததை நாங்க பேசிக்கிறோம்..” என்றார். ஏதோ ஒன்று என்று நினைத்து வாக்கிங்கை தொடர்ந்தேன். மறுபடியும் அடுத்த ரவுண்ட்டில் அவர்கள் அருகில் வரும்போது பூங்காவிற்குள் விளையாடிக் கொண்டிருந்த சில சின்னப் பையன்களை பூங்காவின் காவலர் வெளியில் விரட்டிக் கொண்டிருந்தார். இந்தக் களேபரத்தில் நடைபாதை முழுவதும் சிறுவர்களாக வந்து குவிய.. கொஞ்சம் நடை தடைபட்டது.

இந்த நேரத்தில் அந்த பெண்கள் கூட்டத்தில் இருந்து சப்தமாக சில வார்த்தைகள் என் காதில் விழுந்தன.. “எங்கயாவது இது மாதிரி நடக்குமா.. ஏம்மா உயிரை வாங்குற.. வீட்டுக்கு வரச் சொல்லு.. பார்க்குறேன்..” என்றார் அந்த இளம் பெண். அதற்கு இன்னொரு பெண்மணி, “ஐஸு.. அம்மா சொன்னா கேளும்மா.. அம்மா பாவம்ல்ல.. எத்தனை இடம்தான் பார்க்குறது..? இது நல்ல இடமா தெரியுது. உனக்குப் பிடிச்சா சட்டுன்னு பேசி முடிக்கலாம்..” என்றார்.

ஆஹா.. மேட்டர் இதுவோ என்று என் பத்திரிகை புத்தி தன் வேலையைக் காட்ட பின்பு அவர்கள் பக்கத்திலேயே உட்புற சாலையில் நடப்பது போல நடந்தேன். 

"யாராச்சும் இங்க வந்து பார்ப்பாங்களா..? இவன் இல்லைன்னா இன்னொருத்தன்.." என்றார் இளம் பெண். அவருடைய அம்மா கையை ஓங்கியபடியே, "அப்படியே பிய்ச்சிருவேன். உன்னை யாருடி இவ்ளோ ஹைட்டா வெயிட்டா வளரச் சொன்னது.. நான் எங்க போய் ஆளைத் தேடுறது..? ஏதோ அவங்களா பார்க்கலாம்னு தேடி வர்றாங்க. இதையும் வேணாம்கிறியா..?" என்று வெடித்தார்.

அவரைச் சமாதானப்படுத்திய இன்னொரு பெண்மணி, "ஐஸு.. இத பாரு.. அவர் நம்ம பேமிலி மாதிரியே ஸ்டேட்டஸ் மத்த்து எல்லாம் குறையே இல்லை. இது நல்ல சம்பந்தம். உன் ஹைட்டுக்கும், வெயிட்டுக்கும் பொருத்தமா இருக்கார். நாங்க பார்த்துட்டோம்..  அவாளோட அம்மா அப்பாகூட யு.எஸ்.ல அவங்க பொண்ணு வீட்ல ஆறு மாசம், இங்க ஆறு மாசம்னுதான் இருப்பாங்களாம்.. அப்புறம் என்னடி உனக்கு பிரச்சினை..? ஒரு நல்ல வாய்ப்பு வந்தா விடக் கூடாதுடி.. அம்மா சொன்னா கேளு.." என்று அன்பாக தொட்டுத் தடவியெல்லாம் ஐஸ் வைத்தே பேசினார்..

அனைவரையும் ஒரு முறை முறைத்து.. சினிமா நடிகை மாதிரியே மறுதலித்தார் அந்த இளம் பெண். “ஐயோ கொடுமை.. இதுக்குன்னு சொல்லியிருந்தா வந்திருக்கவே மாட்டேன்..” என்றார். "ஆமடி.. இப்படியே சொல்லிட்டு வீட்ல இரு.. நான் பைத்தியக்காரி மாதிரி ஊர் முழுக்க மாப்ளை தேடிக்கிட்டிருக்கேன்.." என்று சொல்லி முடிப்பதற்குள் அவருடைய வாயைப் பொத்திய இன்னொரு பெண்மணி.. "ச்சும்மா இரு. அதெல்லாம் அவ பேசிருவா.." என்று சேம் சைட் கோல் அடித்தார்.

ஐவரணி அமைதி காத்தது.. வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெள்ளை நிற ஆடி கார் வந்து ஆடி அசைந்து நின்றது. மிக ஜென்ட்டிலாக மாப்பிள்ளை இறங்கி உள்ளே வந்தார். கேட்டுக்கு மிக அருகிலேயே எதிர்த்தாற்போல் இவர்கள் இருந்தால் உடனேயே அடையாளம் கண்டு "ஹாய் ஆண்ட்டி.." என்று சொல்லியபடியே அருகில் வர.. அவரைப் பார்த்த்தும் இளம் பெண்ணின் முகம் சட்டென பிரகாசமாய் மாறியது.. பட்டென்று ஏதோ வெட்கத்துடன் திரும்பி நால்வரணியைப் பார்த்தார். மாப்ளை வாட்டசாட்டமா பொருத்தமாத்தான் இருந்தார். பணக்கார அடையாளம் உடையிலும், தோற்றத்திலும் தெளிவாக தெரிந்தது.

அதில் ஒரு வயதான பெண்மணி பொண்ணைக் காட்டி, "இதுதான் எங்க ஐஸு.." என்றார். "ஹாய்.." என்றார் மாப்ளை.. "ஹலோ.." என்று சொல்லி கை கொடுத்தார் பெண். "ஒரு வாக் போலாமா..?" என்று மாப்ளை கேட்க.. பெண் பதில் சொல்லாமல் நால்வரையும் பார்க்க.. "போம்மா.. ச்சும்மா பேசிட்டு வாங்க.." என்று வயதான பெண்மணி சொல்ல.. தயக்கத்துடன் ரவுண்ட்ஸை தொடங்கினார் பொண்ணு. நானும்தான்..!

ஆனாலும் இவ்ளோ மெதுவா நடக்கக் கூடாது.. என்னாலயே முடியல.. அதுனால நான் வேக, வேகமாக முன்னாடி நடந்து அவர்களையே இரண்டு முறை ரவுண்ட்டிங்கில் கடந்துவிட்டேன். அழைத்து வந்த பெண்மணிகள் அங்கேயே ஒரு ஓரமாக திண்டில்  அமர்ந்து இவர்களை பார்த்தபடியே குசுகுசுவென்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

பாவம் அந்தப் பெண்ணின் அம்மா.. இவர்கள் அருகில் வரும்போது தனது பெண்ணின் முகத்தையே ஒரு ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் கடந்து போகும்போதும் கையில் வைத்திருந்த சூப்பைக்கூட குடிக்காமல் அவர்களைப் பார்த்தபடியே இருந்தார்.

பொண்ணுதான் பாவம்.. வியர்க்க விறுவிறுக்க நடைப் பயிற்சியை செய்தபடியே இருக்க.. மாப்ளைக்கு நடைப் பயிற்சியில் நிறைய எக்ஸ்பிரீயன்ஸ் இருக்கு போலிருக்கு. ஹாயாக ஆங்கிலத்தில் கடலை போட்டுக் கொண்டே நடந்தார்.. பொண்ணு, வியர்த்து கொட்டிய வியர்வையை துடைத்தபடியே ஒன்றிரண்டு வார்த்தைகளில் ஆங்கிலத்தில் பதில் சொல்லியபடியே வந்தார்.

4 ரவுண்டு முடிந்தவுடன் மிக உரிமையோடு மாப்பிள்ளை அவர்கள் அருகில் போய் 3 பேர் உட்கார முடிந்த அந்த திண்டில் 4-வது ஆளாக அவர்களுடன் அமர்ந்து ஏதோ பேச.. பொண்ணு அந்த மாப்பிள்ளையையும், இவர்களையும் மாறி மாறி பார்த்து வெட்கத்துடன் கழுத்து செயினை அப்படியும், இப்படியுமாக கடித்தபடியே இருக்க.. 

பட்டென்று எழுந்த மாப்பிள்ளை பொண்ணை பார்த்து ஏதோ சொல்லிவிட்டு முன்னால் நடந்து  வாசலை நோக்கிப் போக.. பொண்ணும் மெதுவாக இவர்களைப் பார்த்தபடியே நடக்க.. பொண்ணின் அம்மா, “போடி.. போ.. போடி..” என்று பின்னாலிருந்து சைகை செய்து விரட்டினார்.

பூங்காவுக்கு நேரெதிராக இருந்த டீஸண்ட்டான காபி ஷாப்பில் அமர்ந்து இருவரும் காபி குடித்தார்கள். மாப்பிள்ளை அருகில் உட்காரச் சொல்லியும் பொண்ணு நின்று கொண்டே கொஞ்சம் அவரிடமும், நிறைய நேரம் இவர்களைப் பார்த்துமாக ஏதோ பேசி முடித்தார்.

இவர்கள் கடையில் இருந்து இறங்கி வந்தவுடன், நான்கு பெண்மணிகளும் மெதுவாக எழுந்து வாசலுக்கு வந்தார்கள். மாப்ளை மெதுவாக அந்தப் பெண்ணின் அம்மாவிடம் ஏதோ சொல்லிவிட்டு ஐவரிடமும் கை குலுக்கி "பை.." என்று சொல்லிவிட்டு தன் காரை நோக்கி நடந்தார். காரில் ஏறப் போகும்போது மறுபடியும் ஒரு முறை அவர்களைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்துவிட்டு அமர்ந்தார்.

பொண்ணு அவர் போவதையே பார்த்திருந்துவிட்டு, அவர் காரில் ஏறுவதையும் பார்த்துவிட்டு திரும்ப.. அவருடைய அம்மா, பொண்ணிடம் ஏதோ சொல்லி சீறித் தள்ளினார். மற்ற மூவரும் அவரைக் கட்டிப் பிடித்து கூல் செய்ய.. அப்போது தூரத்தில் இருந்து அவர்களருகே வந்து நின்ற இரண்டு பி.எம்.டபிள்யூ. கார்களில் ஏறி பறந்தார்கள் ஐவரும்..!

ஒரு பர்ஸ்ட் கிளாஸ் சினிமாவை பார்த்தது போலிருந்தது. ஒவ்வொரு அம்மாக்களும் மகளின் வாழ்க்கைக்காக எத்தனைதான் பிரயத்தனப்படுகிறார்கள்..? சாதாரண வீடாக இருந்தாலும் சரி.. பணக்கார வீடாக இருந்தாலும் சரி அவரவர் மனவோட்டம் நல்ல மாப்ளை சீக்கிரமாக அமைய வேண்டும் என்பதுதானோ..!?

எப்படியோ இந்த வரன் அந்த ஐஸுக்கு நல்லபடியாக அமைந்துவிட்டால் இந்தப் பூங்காவை கட்டிக் கொடுத்த நம்ம தாத்தாவுக்கு நிச்சயம் புண்ணியம் கிடைக்கும்..!  

அந்த ஐஸின் அம்மாவுக்காகவாவது இந்த வரன் நல்லபடியாக முடிய வேண்டும் என்று என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

சவாரி - சினிமா விமர்சனம்

20-03-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எந்த மாதிரியான கதையாக இருந்தால்தான் என்ன..? இயக்கம் சிறப்பாக இருந்தால் ஒரு முறையாவது அந்தப் படத்தை உட்கார்ந்து பார்க்கலாம்தான். அந்த வரிசையில் இந்தப் படமும் இடம் பிடித்திருக்கிறது.

ஈ.சி.ஆர். ரோட்டில் ஒரு சைக்கோ கொலையாளி தினமும் சில கொலைகளைச்  செய்கிறார். அவரைக் கண்டுபிடிக்க துணை கமிஷனர் சாலமனை கமிஷனர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கிறார். சாலமனுக்கு மறுநாள் தமிழக எல்லையில் உள்ள ஆந்திராவில் திருமண நிச்சயத்தார்த்தம். அந்த அவசரத்தில் இருக்கிறார்.
ஆந்திர எல்லையில் இருக்கும் ஒரு தொகுதியில் தமிழக சட்டமன்ற உறுப்பினர் அருண். கார் பிரியரான இவருடைய பழைய காண்டஸா கிளாஸிக் கார் சர்வீஸ் செய்யப்பட்டு டெலிவரிக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த வண்டியை புதிய டிரைவரான மதியிடம் கொடுத்து எம்.எல்.ஏ. வீட்டில் ஒப்படைக்கும்படி சொல்கிறார் ஒர்க்ஷாப் ஓனர் கவிதாலயா கிருஷ்ணன்.
சாலமன் சென்ற கார் நடுவழியில் ரிப்பேராகி நின்றுவிட.. அந்த வழியாக வந்த எம்.எல்.ஏ.வின் காரில் லிப்ட் கேட்டு செல்கிறார் சாலமன். டிரைவர் மதிக்கும், சாலமனுக்கும் இடையில் புரிதல் இல்லாமல் மோதலாகவே போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் போலீஸ் தேடி வந்த சைக்கோ கொலைகாரனும் அதே காரில் பயணிக்கும் சூழல் ஏற்படுகிறது..
எம்.எல்.ஏ.விடம் காரை ஒப்படைக்க இருந்த அவசரம்.. நாளைய தினம் காலையில் திருமண நிச்சயத்தார்த்தை வைத்துக் கொண்டு அவசரத்தில் இருக்கும் சாலமன் சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்க திட்டம் தீட்டி அதற்கான வேலைகளில் இறங்க.. சைக்கோ கொலைகாரனோ புத்திசாலித்தனமாக திட்டம் தீட்டி அவர்களைக் கொலை செய்ய பார்க்க.. கடைசியில் ஜெயித்தது யார் என்பதை வெள்ளித்திரையில் காண்க..!
மிகவும் சின்ன கதைதான். ஆனால் திரைக்கதையில் அனைத்து நடிகர்களுக்கும் சம அளவில் வாய்ப்பு கொடுத்து கதையை மெருகேற்றி காட்சிக்கு காட்சி பரபரப்பை ஊட்டி, படத்தின் டெம்போ குறையாமல் பார்த்துக் கொண்டு படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்கள். மறைந்த படத்தொகுப்பு கலைஞன் டி.ஈ.கிஷோரின் கை வண்ணத்தில் படத்தை வெகுவாக ரசிக்க முடிகிறது. ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது இந்தப் படம்.
சாலமோனாக நடித்த பெனிடோ பிராங்களினைவிடவும் கார் டிரைவராக நடித்திருக்கும் மதியும், சைக்கோவாக நடித்திருக்கும் கார்த்திக் யோகியும் கொஞ்சம் அதிகமான கைதட்டல்களைப் பெறுகிறார்கள்.
போலீஸ் என்று தெரிந்தும் பயப்படாமல் வரிக்கு வரி பதில் அளிக்கும் மதியின் அலட்டல் இல்லாத நடிப்பு படத்திற்குக் கிடைத்த ஒரு பிளஸ் பாயிண்ட் என்றே சொல்ல்லாம். இதனாலேயே இவர்களிடையே நடக்கும் வாய்ச்சண்டையிலேயே திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
“சாயந்தரம் 5 மணிக்குள்ள கார் போய்ச் சேரலைன்னா என்ன ஆகும் தெரியுமா..?” என்று ஒர்க்ஷாப் ஓனர் பயமுறுத்த.. அந்தப் பயத்துடன் வண்டியை ஓட்டும் மதி இடையிடையே கொஞ்சம் ரிலாக்ஸ் மூடில் தெறிக்கவிடும் வசனத்தினால் கொஞ்சம் புன்னகைக்கவும் முடிகிறது.
இடையிடையே சட்டமன்ற உறுப்பினர் அருணின் மக்கள் நலப் பணிகளையும் காட்டி பெப் ஏற்றியிருக்கிறார்கள். அருணின் தோற்றப் பொலிவும், ஆக்சனும்கூட ரசிக்க வைக்கிறது.
ரொம்பவே சின்ன கேரக்டர் என்பதால் ஹீரோயின் சனம் ஷெட்டிக்கு பெரிய ஸ்கோப் இல்லை. அவரும் இருக்கிறார் என்பதற்கு மட்டுமே உதவியிருக்கிறது.
கார்த்திக் யோகிக்கு அவரது முகத்தோற்றமே ஒரு பிளஸ் பாயிண்ட். அதற்கேற்றாற்போல இயக்கமும் சிறப்பாக இருக்கவே தன்னை ஒரு சைக்கோகவா மாற்றிக் கொள்ள கொஞ்சமும் கஷ்டப்படாமல் நடித்திருக்கிறார். இவருடைய சைக்கோத்தனத்திற்கான காரணங்களை இடையிடையே எஃப்.எம்.ரேடியோ வாயிலாக சொல்லியபடியே கதையை நகர்த்தியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.
சைக்கோவின் வீட்டை போலீஸ் சோதனையிடுவதும்.. அங்கே கிடைக்கின்ற பொருட்கள்.. இதில் கணேஷ் என்கிற இன்ஸ்பெக்டர் படும்பாடு.. அதே நேரம் காரில் கணேஷை சைக்கோ என்று தவறுதலாக நினைத்து சாலமோன் பதறிப் போய் தகவல்களை பரிமாறிக் கொள்வது.. போன் நம்பர்களை மாற்றுவது.. செல்போனில் சார்ஜ் குறைவது.. சிக்னல் கிடைக்காதது.. அடர்ந்த காட்டுக்குள் திசை மாற்றி பயணிப்பது.. திடீரென்று சைக்கோ பயணம் செய்யும் கார் கிராஸ் செய்வது.. என்று தொடர்ச்சியாக இந்த கார் பயணம் கொஞ்சமும் அலுப்பு தட்டாமல் பயணிக்கிறது..
விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் கொஞ்சம் திகிலூட்டியிருக்கிறது. செழியனின் ஒளிப்பதிவு காட்சிக்கு காட்சி பரபரப்பை உண்டு பண்ண உதவியிருக்கிறது. இயக்குதல் சிறப்பாக இருந்தாலே அனைத்தும் சிறப்பாக இருக்கும் என்பதற்கு இந்தப் படமும் ஒரு சிறந்த உதாரணம்..!
திரைக்கதைக்காக மெனக்கெட்டு கடுமையாக உழைத்திருக்கிறார் இயக்குநர் குகன் சென்னியப்பன். ஒரு சின்ன கதைதான்.. ஆனால் அதனை திரைக்கதையாக்கிவிதத்திலும், படைப்பாக்கத்திலும் ஒரு வித்தியாசத்தைக் காட்டி தான் ஒரு வித்தியாசமான இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார் குகன். இதற்காகவே அவரைப் பாராட்ட வேண்டும்..! வாழ்த்துகள்..!

புகழ் - சினிமா விமர்சனம்

20-03-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘மெட்ராஸ்’ பாணியில் மறுபடியும் ஒரு அரசியல் படம். மிகுந்த தைரியமாகவும், காத்திரமாகவும் தான் சொல்ல வந்த கருத்தை முன் வைத்திருக்கிறார் இயக்குநர். அது தப்பிதமாகவே இருந்தாலும் சரி.. ஒருவன் கையிலெடுக்கும் ஆயுதம் என்பதே எதிராளியின் பலத்தை பொருத்ததுதான் என்பதால், “இந்த மாதிரியான அரசியல்வியாதிகளுக்கு இது மாதிரீயான ஆயுதம்தான் சரி…” என்கிறார் இயக்குநர்.
வேலூர் அருகில் இருக்கும் வாலாஜாபேட்டைதான் இந்தப் படத்தின் இயக்குநரான மணிமாறனுக்கும் சொந்த ஊர். தன்னுடைய ஊரில் தான் வளர்ந்த அதே பொது மைதானத்தையே கதைக்களமாக வைத்து ஒரு அருமையான படத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் மணிமாறன்.
வெற்றிமாறனின் நெருங்கிய நண்பரும், அவரிடத்தில் இயக்கம் பயின்றவருமான இயக்குநர் மணிமாறன், ஏற்கெனவே ‘உதயம் என்.ஹெச்.4’ படத்தினை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாலாஜாபேட்டையில் அந்தக் குறிப்பிட்ட வார்டில் இருக்கிறது ஊருக்கே பொதுவான அந்த விளையாட்டு மைதானம். அந்த மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியெடுத்த பலருக்கும் அரசு வேலை கிடைத்திருப்பதால் அந்த மைதானம் ராசியானது என்றே கருதப்படுகிறது. பிரிட்டிஷார் காலத்தில் இருந்தே அந்த மைதானம் விளையாட்டு மைதானமாகத்தான்.. பொதுமக்களின் அனுபவத்தில் இருந்து வருகிறது.
அந்த ஊரிலேயே மார்க்கெட்டில் குடும்பத் தொழிலான பூ விற்கும் தொழிலில் தன்னுடைய அண்ணன் கருணாஸுக்கு உதவியாக இருக்கிறார் ஹீரோ ஜெய். இவரும் அந்த மைதானத்தில் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்து கிரிக்கெட் விளையாடும் பழக்கமுடையவர். இவருடைய நண்பர்கள் வட்டாரமும் தினமும் இங்கேதான் கூடி கும்மியடித்து வருகிறது.
மாநில கல்வித்துறை அமைச்சரின் மருமகன் இந்த மைதானத்தின் மீது கண் வைக்கிறார். இடத்தைக் கைப்பற்றி அங்கே பிளாட் போட்டு விற்க முடிவெடுக்கிறார். லோக்கல் ஆளும்கட்சி அரசியல் புள்ளியான தாஸ் என்னும் மாரிமுத்துவிடம் இந்தப் பணியை ஒப்படைக்கிறார் கல்வி அமைச்சர்.
மைதானத்தை கையகப்படுத்த நினைக்கும் முயற்சிகளை அந்த ஊர்ப் பெரியவரான பிறைசூடனின் உதவியோடு முறியடிக்கிறார்கள் ஜெய்யும், அவரது நண்பர்களும். மிரட்டல் பயன் அளிக்காததால் அரசியல் களம் சூழ்ச்சியை முன்னிறுத்துகிறது.
அந்த ஊர் நகர மன்றத் தேர்தலில் வார்டு வாரியாக யாரை நிறுத்துவது என்று யோசனை செய்கிறது ஆளும்கட்சி. அப்போது ஜெய்க்கு அந்தப் பகுதியில் இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கை மனதில் வைத்து ஜெய்யை நிற்கச் சொல்கிறார் தாஸ். ஜெய் மறுக்க அவரது உயிர் நண்பரான வெங்கட்டை நிறுத்தி வைத்து “அவனை ஜெயிக்க வை..” என்கிறார் தாஸ்.
நமக்கும் ஒரு ஆள் வேணுமே என்கிற ஆசையில் ஜெய் இதற்கு ஒத்துக் கொள்ள.. தேர்தலில் வெங்கட் நின்று ஜெயிக்கிறார். வெங்கட்டிற்கு கடும் கடன் சுமை. அந்தச் சுமையைத் தான் தீர்த்து வைப்பதாகச் சொல்லும் தாஸ் தன்னை நகர் மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்க வெங்கட்டிடம் ஆதரவு கேட்கிறார். 8 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு வெங்கட் ஒத்துக் கொள்ள.. ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தாஸ் நகர் மன்றத் தலைவராகிறார்.
இப்போது கல்வித்துறை அமைச்சர் மைதான விஷயத்தை உடனடியாக முடித்துக் கொடுக்கும்படி கேட்க அதற்கான சதியாலோசனை நடக்கிறது. இரவோடு இரவாக காம்பவுண்ட் சுவரை கட்டுகிறார்கள் கயவர்கள். இதனை எதிர்த்து ஜெய் களமிறங்க அவரைத் தீர்த்துக்கட்டவும் தயங்காமல் முயல்கிறது ஆளும் கட்சியும், அதிகாரமும்.. வெங்கட்டும் பக்கா அரசியல்வியாதியாக மாறி அவர்கள் பக்கம் சேர்ந்து கொள்ள.. அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் இந்த ‘புகழ்’ படத்தின் சுவையான திரைக்கதை.
இப்போதுதான் இதே போன்ற சம்பவம் சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. தற்போதைய தமிழகத்தின் மின் துறை அமைச்சரான நத்தம் விஸ்வநாதனின் மகன் பங்குதாரராக இருக்கும் ஒரு கட்டுமான நிறுவனத்தின் புதிய கட்டிடத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி பெரம்பூர் பகுதியில் இருக்கும் மாநகராட்சி பூங்காவின் ஒரு பகுதியை இரவோடு இரவாக இடித்துத் தள்ளினார்கள் மாநகராட்சி அதிகாரிகள். இதைத் தடுக்கச் சென்ற பொதுமக்கள் போலீஸாரால் அடித்து விரட்டப்பட்டனர்.
இந்த அட்டூழியத்திற்கு ஆளும் கட்சியும், அதிகார வர்க்கமும் துணை போன நிலையில் அந்த பூங்கா இப்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கிறது. நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்திருக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள். இதுதான் இப்போதைய தமிழக மக்களின் நிலைமை.
அரசியல்வியாதிகள் என்ன நினைத்தாலும் செய்யலாம்.. சட்டவிரோதமாக செய்யலாம்.. அதைத் தட்டிக் கேட்க ஆளே இல்லை என்கிற நிலைமைதான் கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தச் சமயத்தில் இப்படியொரு அரசியல் விழிப்புணர்வு படத்தைக் கொண்டு வந்திருக்கும் இயக்குநர் மணிமாறன் நிச்சயம் பாராட்டுக்குரியவர் என்பதில் சந்தேகமில்லை.
ஜெய் வழக்கமான படம் போலவே நடித்திருக்கிறார். தன்னிடம் இருப்பதிலேயே அதிகப்பட்சமான நடிப்பை இந்தப் படத்தில்தான் காட்டியிருக்கிறார் என்று நினைக்கிறோம். ஆனாலும் அவருடைய குரலே அவருக்கு மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட். இந்த மைனஸை மிஞ்சும் அளவுக்கான நடிப்பை அவர் என்றைக்கு கொடுப்பாரோ அன்றைக்கு அவரை பாராட்டி எழுதுவோம். பேசுவோம். இப்போது இந்தப் படத்தில் அவருடைய புகழுக்கு பங்கம் வரும் அளவுக்கு எதுவும் படத்தில் இல்லை என்பதால் இந்தப் படத்தின் மூலம் அவருடைய ‘புகழ்’ ஓங்கட்டும் என்று வாழ்த்துகிறோம்.
அசல் அரசியல்வியாதியை நினைவுபடுத்தியிருக்கிறார் தாஸ் என்கிற கேரக்டரில் நடித்திருக்கும் இயக்குநர் மாரிமுத்து. ‘இப்படியே பேசிக்கிட்டே இருப்பேன்னு நினைச்சுக்காத…’ என்று எச்சரிக்கும் நேரத்தில் அனைத்துவித அரசியல்வியாதிகளையும் ஞாபகப்படுத்தி தொலைக்கிறார்.
இன்றைய அரசியலில் நீடித்து நிலைப்பதற்கு பொறுமையும், சகிப்புத்தன்மையும், சாதூர்யமான புத்தியும், எதையும் தாங்கும் இதயமும் வேண்டும் என்பதை இந்தக் கதாபாத்திரத்தின் மூலமாக சுட்டிக் காட்டுகிறார் இயக்குநர்.
பகுதிச் செயலாளர் ஒருவர் கட்சிக் கூட்டத்தில் கோபப்பட்டு தன்னுடைய வேட்டியை அவிழ்த்து தூக்கியெறிய அது மாரிமுத்துவின் முகத்தில் விழும் காட்சி தத்ரூபம். ஆனாலும் அந்தக் கோபத்தைத் தாங்கிக் கொண்டு அதே ஆள் சொல்லும் ஜெய்யை வார்டு பிரதிநிதியாக நிற்க வைக்க நகரச் செயலாளர் என்கிற முறையில் மாரிமுத்து ஒத்துக் கொள்வதும்கூட சாட்சாத் அரசியல்தான்..! நல்ல திரைக்கதை..!
கொஞ்சம், கொஞ்சமாக டெம்பர் ஏற்ற வேண்டும் என்பதற்காகவும் லீகலாக இந்த விஷயத்தைக் கொண்டு போய் ஜெயிக்க வைக்க முடியாது. கொஞ்சம் பயமுறுத்தியும் மக்களின் கவனத்தை திசை திருப்பியும்தான் தப்பிக்க முடியும் என்பதை கல்வித் துறை அமைச்சர் பேசும் வசனங்களாலேயே சொல்லியிருக்கிறார் இயக்குநர். ‘நச்’ என்று இருக்கின்றன வசனங்கள். இன்றைய அரசியல் காலத்திற்கு இதுவொரு உதாரணம்.!
கோபமான ஹீரோயின் சுரபி. இவருடனான காதல் போர்ஷன் மட்டுமே வலிந்து திணிக்கப்பட்டதுபோலவே இருக்கிறது. இயல்பாகவே இல்லை. ஆனால் காட்சியமைப்புகள் சூப்பர். சுரபியின் கோபத்தில் நியாயம் இருக்கிறது. அதே நேரம் ஜெய் தனக்கு பொதுநலன்தான் முக்கியம் என்று முடிவெடுக்கும் நேரத்தில் அதற்கு ஒத்துக் கொள்ளும் பக்குவமும் அவருக்குண்டு என்பதை திரைக்கதையில் காட்டி ஹீரோயினின் கேரக்டரை உயர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
சுரபி அவ்வளவு பெரிய அழகி இல்லையென்றாலும், அவருடைய நடிப்பு ரசிக்க வைக்கிறது. எம்.ஜி.ஆரின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படப் பாடலை கேட்டுக் கொண்டிருக்கும் ஜெய்யிடமிருந்து ரிமோட்டை பிடுங்கி காதல் மன்னன் ஜெமினிகணேசன் பாடல் காட்சியை போட்டுவிட்டு “கொஞ்சம் இதையும் பாரு..” என்று வெடுக்கென்று சொல்லிவிட்டுப் போகும் காட்சியில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போகிறார் சுரபி.
ஆர்.ஜே.பாலாஜியின் சின்னச் சின்ன கமெண்ட்டுகள் தியேட்டரில் கைதட்டல்களை வரவழைத்திருக்கிறது. வெங்கட்டாக நடித்தவரின் ஊசலாட்ட நடிப்பும், அரசியலுக்கு வந்தால் சுளையாக அள்ளலாம் என்கிற ஆவலையும் உருவாக்கி சமூகம் எப்படி சீர்கெடுகிறது என்பதை இவர் மூலமாக காட்டியிருக்கிறார் இயக்குநர். நல்ல நடிப்புதான்..!
மாரிமுத்துவை போலவே கவிஞர் பிறைசூடனும் இந்தப் படத்தில் தன்னுடைய அனுபவ நடிப்பைக் காண்பித்திருக்கிறார். மருத்துவமனையில் கருணாஸுடன் பேச வார்த்தைகள் வராமல் மெளனமாக திரும்பிப் போகும் காட்சியில் ஒருவித மயான அமைதி நிலையை நிறுவியிருக்கிறார் பிறைசூடன். இயக்குநரின் இயக்கத் திறமைக்கு இதுவும் ஒரு உதாரணம்..!
ஒரு பொறுப்பான அண்ணனாக நடித்திருக்கிறார் கருணாஸ். ஒரு பக்கம் மாரிமுத்துவை சமாளிப்பது.. இன்னொரு பக்கம் பொது நலனில் அக்கறை கொண்டு களத்தில் குதிக்க நினைக்கும் தம்பியை நினைத்து கவலைப்படுவது.. அவனுடைய திருமண நிகழ்வை சுமூகமாக்க பெண் கேட்டுச் செல்வது.. தன்னுடைய பிஸினஸ் பாதிக்கப்படக் கூடாது என்பதையும், குடும்பத்தை பாதுகாக்கவும் அல்லல்படுவது என்று தன்னுடைய கேரக்டரை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் கருணாஸ்.
அதே நேரம் தன்னுடைய தன்மானத்தையும் விட்டுக் கொடுக்காமல் மாரிமுத்து “உன் தம்பியை வெட்டுவேன்..” என்று சொல்லும்போது, ஜெய்யை இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தி, “வெட்டுரா பார்ப்போம்..” என்று கோபத்தில் கர்ஜிக்கும்போது சபாஷ் போட வைத்திருக்கிறார் கருணாஸ்..!
தான் பணியாற்றும் திரைப்படங்களில் ஏதாவது ஒரு காட்சியிலாவது முகத்தைக் காட்டிவிடும் வழக்கமுள்ள ஒளிப்பதிவாளர் வேல்ராஜும் இந்தப் படத்தில் இரண்டு காட்சிகளில் வாலாஜாபேட்டையின் நகராட்சி கமிஷனராக வந்து தன் நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.  விவேக் மெர்வினின் பாடல்கள் அதிகம் ஈர்க்கவில்லை என்றாலும் டைம் பாஸிற்கு உதவியிருக்கிறது.
சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயனின் உதவியினால் கிளைமாக்ஸ் சண்டை காட்சியை உக்கிரமாக்கி படமாக்கியிருக்கிறார் இயக்குநர். அந்தக் காட்சியே படத்தின் முடிவு என்பதால் படம் பார்த்த ரசிகர்களின் மனதில் அதுவே ஒரு பெரும் பாரமாக அமர்ந்துவிடுகிறது. வெல்டன் திலீப் ஸார்..!
இந்த அளவுக்கு ஒரு பெரிய சர்ச்சை உருவாகியிருக்கும் நேரத்தில் அந்தப் பகுதி மீடியாக்கள் எங்கே போயின..? பத்திரிகைகளில் இதனை ஏன் செய்தியாக்கவில்லை..? அந்த ஊர் எதிர்க்கட்சிகள் என்ன ஆனார்கள்..? என்பதற்கெல்லாம் திரைக்கதையில் எந்த பதிலும் இல்லை என்பதுதான் இந்தப் படத்தின் ஒரேயொரு லாஜிக் எல்லை மீறல்..!
ஆனாலும்.. இத்தனை மீடியாக்கள் இருக்கும் சென்னை போன்ற தலைநகரத்திலேயே ஒரு பூங்காவின் சுவரைக்கூட காப்பாற்ற முடியவில்லையே என்னும் உண்மையை நினைக்கும்போது இதுவொன்றும் பெரிய தவறாக நமக்குத் தெரியவில்லை. இருந்தாலும் என்ன சாதித்துவிடப் போகிறார்கள்..?!
“அரசியல் பூந்தோட்டமல்ல.. அதுவொரு போர்க்களம்..” என்றார் பேரறிஞர் அண்ணா. ஆனால் அவர் சொன்ன போர்க்களம் இப்போதைய அரசியல் சூழலில் அரசியல்வியாதிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையில் நடக்கின்ற மோதல் என்கிற முரண்பாட்டை பார்க்கத்தான் அவர் இப்போது உயிருடன் இல்லை.. இந்த முரண்பாட்டை விளக்கியிருப்பதுதான் இந்த புகழ் திரைப்படம்.
இயக்குநர் மணிமாறனுக்கும், நடிகர் ஜெய்க்கும் புகழ் அளித்திருக்கிறது இந்த புகழ்..!
படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!