அவன் வருவானா..? - சிறுகதை போட்டியில் நானும்..!

30-06-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சிறந்த தோழர், நல்லதொரு நண்பர், பிடரியில் அடிக்கும் பின்னவீனத்துவ எழுத்தாளர், பல குருக்களே பொறாமைப்படும் அளவுக்கு பண்பான, அடக்கமான சீடர், அருமையிலும் அருமையான கதை, வசனகர்த்தா, வலையுலகின் தற்போதைய ரத்த பூமியின் தளபதிகளில் ஒருவரான பைத்தியக்காரன் ஆளுக்கு 1500 ரூபாய் என்று 20 பேருக்கு தருவதாக சொன்ன சிறுகதைப் போட்டி ஆரம்பத்தில் எனக்கும் மகிழ்ச்சியையும், உவப்பையும் தந்தது.

ஆனால் கூடவே நெருஞ்சி முள்ளாக அவர் வைத்த ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற கண்டிஷனைக் கேட்டு எனக்கு உவ்வே வந்துவிட்டது. ஆகவே கதை எழுத வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்து வந்த எனக்கு இன்றைக்குத்தான் தற்செயலாக ஞானமுனியின் பதிவைப் படித்தபோது அந்த ஆயிரம் வார்த்தைகள் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட விஷயம் தெரிந்தது.

நண்பர் பைத்தியக்காரனிடம் அது பற்றி தொலைபேசியில் பேசி உறுதிப்படுத்திக் கொண்ட பின்பு நானும் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.

இதோ அந்தச் சிறுகதை..!

அவன் வருவானா..?

கணேசன் வீட்டிலிருந்து தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். சில அடிகள் நடந்துவிட்டு திரும்பிப் பார்த்தார். வாசற்படியில் மகள் செல்வி சீனுவிடம் ஏதோ சொல்லியனுப்பினாள். சீனுவும், கணேசனின் அருகில் வர இருவரும் சேர்ந்து நடக்கத் தொடங்கினார்கள்.

வீட்டில் கிளம்பியபோதே செல்வி சொன்னதெல்லாம் கணேசனின் நினைவுக்கு வந்தது. "இன்னைக்கு எப்படியும் அண்ணன் வந்திரும்பா.. நீங்க வேணா பாருங்க.. கண்டிப்பா அண்ணன் உங்களுக்கு முன்னாடி கோயில்ல நின்னுக்கிட்டிருக்கும்.."

"வரட்டும் பார்ப்போம்.. வந்துதானே ஆகணும்.." மனதிற்குள் சொல்லிக் கொண்டே நடந்தார் கணேசன்.

ரமணி வருவானா.. என்ற கேள்வி நான்கைந்து நாட்களாக அவரைத் தூங்கவிடாமல் செய்தது. போன வாரமே மகள் செல்வியும், அவரும் தனித்தனியாக ரமணியின் வீட்டுக்குச் சென்று "திங்கள்கிழமை கண்டிப்பா கோவிலுக்குப் போகணும்.. கொஞ்ச நேரந்தான்.. உடனே வந்திரலாம்.. அப்படியே நம்ம வீட்ல சாமி கும்பிட்டுட்டு அங்கேயே சாப்பிடணும்.." என்று ஒரு முறைக்கு, மூன்று முறை சொல்லிவிட்டுத்தான் வந்திருந்தார்கள். எந்த பதிலையும் ரமணியிடமிருந்து வாங்க முடியவில்லை.

சீனுவின் கையைப் பிடித்துக் கொண்ட கணேசன் தன் தள்ளாமையை உணர்ந்து கொண்டு "இனிமேல் இவன்தான் நமக்கு எல்லாம்.." என்று எண்ணிக் கொண்டார். "ச்சே.. ரமணி குழந்தையாக இருந்தபோது கவனித்ததைப் போல இவனைக் கவனிக்கவில்லையே" என்று பச்சாபதமும் அவருக்கு ஏற்பட்டது. இத்தனைக்கும் காரணம் லஷ்மிதானே என்ற நினைவும் அவருக்கு வராமல் இல்லை.

---------------------------------

மூத்த மகன் ரமணியை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக முதலில் சென்ட்ரல் ஸ்கூலில் சேர்த்துவிட்டார். அவனும் ஆரம்பத்தில் நன்றாகப் படித்தவன் போகப் போக படிப்பில் ஆர்வம் குறைந்து போனான். அதற்கு அவன் மட்டும் காரணமில்லை. அவன் அம்மா லஷ்மியும்கூடத்தான்..

காலையில் சீக்கிரம் எழுந்து படிக்க வேண்டும் என்பதற்காக கணேசன் காலையில் 5.30 மணிக்கு ரமணியை எழுப்பி படிக்கச் சொல்வார். எழுந்திரிக்கும்போதே அலுத்துக் கொள்வான்.. லஷ்மியிடம் போய் ஒட்டிக் கொள்வான். "அஞ்சரைதான ஆகுது.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்.. விடுங்க.." என்பாள் லஷ்மி.

அப்படியும் விடாமல் எழுப்புவார் கணேசன். "போய் முகத்த கழுவிட்டு வா.. லஷ்மி தம்பிக்கு காபி போடு.." என்று சொல்லிவிட்டு அவனின் புத்தகப் பையைத் தூக்கிப் படிப்பதற்கு ஏதுவாக முன்கூடத்தில் கொண்டு போய் வைப்பார். அவரும் வேலைக்குப் போவதாக இருந்தால் முன்கூட்டியே ரெடியாகி முன்னால் போய் உட்கார்வார்.. ஆனாலும் ரமணி வேண்டாவெறுப்பாக வந்து புத்தகத்தைத் தொடுவான்.

அவர் காலை ஷிப்டுக்குப் போய்விட்டால் அவர் தலை தெருக்கோடியில் மறைந்தவுடன் புத்தகங்களை தூரப்போட்டுவிட்டு திரும்பி வந்து படுத்துவிடுவான். லஷ்மிக்கு தன் மகன் படிக்காவிட்டாலும் பரவாயில்லை.. நன்றாக சாப்பிட்டாலே போதும்.. என்ற உணர்வே அதிகம் இருந்தது.

ரமணியை ஆறாவது வகுப்புக்கு கிறிஸ்துவ பள்ளியில் சேர்த்துவிட்டார். பள்ளிக்கும், வீட்டுக்கும் சுமாராக மூன்று கிலோமீட்டர் தூரம் இருக்கும். அந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பல மாணவர்கள் அவரின் வீட்டுக்கருகில் இருந்தார்கள். "அவர்களுடன் சேர்ந்து ரமணியும் போய் வரட்டும்.." என்று நினைத்துத்தான் அங்கே சேர்த்துவிட்டார். வந்தது வினை.

அன்று கணேசனுக்கு காலை ஷிப்ட். "புத்தகப் பையைத் தூக்க முடியவில்லை.." என்று அழ ஆரம்பித்தான் ரமணி. இந்த மாதிரி நேரத்தில்தான் அவன் லஷ்மியிடம் அதிகம் கொஞ்சுவான். ரமணியின் நோக்கம் பலித்தது. அன்றிலிருந்து லஷ்மியே அவனுடன் ஸ்கூல் வரைக்கும் புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு போக ஆரம்பித்தாள்.

அவன் மாங்காயோ. நெல்லிக்காயோ கடித்துக் கொண்டு கையை வீசிக் கொண்டு லஷ்மியின் பின்னாலேயே செல்வான். விஷயம் தெரிந்த கணேசனுக்கு அவளின் அரைவேக்காட்டுத்தனமான பாசத்தை நினைத்து பரிதாபம்தான்பட முடிந்தது. அவரால் நிறுத்த முடியவில்லை. காலை, மதியம், மாலை என்று மூன்று முறையும் அவன் ஒருவனுக்காகவே ஒன்பது கிலோ மீட்டருக்கும் மேலாக நடக்க ஆரம்பித்தாள் லஷ்மி.

"இப்டி அவனை ஸ்கூல்வரைக்கும் கொண்டு போய் விட்டுட்டு வர்றியே.. நாளைக்கு அவன் முதுகு வளையறதுக்கே சோம்பேறித்தனப்படுவான்.. அவன் பொருள அவன தூக்க வைச்சுப் பழக்குறதுதாம்மா நாளைக்கு அவனுக்கு நல்லது.."

"அவன் சின்னப் பையன்ங்க.. அவன் ஒண்ணும் காலேஜ்ல படிக்கிறவன் இல்ல.."

"சின்னப் பையன்தான். இல்லேங்கல.. இப்பயிருந்தே பழக்கினாத்தான் அவனுக்கு பின்னாடி எதுவும் ஈஸியா இருக்கும்.. படிப்பும் வர மாட்டேங்குது.. காலைல நான் போன பின்னாடி படிக்கிறானா இல்லையான்னு எனக்குத் தெரிய மாட்டேங்குது.. டியூஷன் படிக்கிறான்.. அப்படியும் நாப்பதுலேர்ந்து ஐம்பதுக்குள்ள ரேங்க் எடுக்குறான்.. இப்படிப் படிச்சா இவன் பின்னாடி என்னாகப் போறான்.. எனக்குப் பயமா இருக்கும்மா.."

"நீங்க மட்டும் என்ன படிச்சிருக்கீங்க.. வெறும் எட்டாங்கிளாஸ்தானே..?"

சுரீரென்றது கணேசனுக்கு.

ஒரு ஓரமாக தள்ளி நின்றிருந்த ரமணி களூக்கென்று சிரித்தபடி அப்பாவின் முகத்தைப் பார்த்துவிட்டு, அம்மாவின் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டான்.

லஷ்மி ரமணியின் தலையைக் கலைத்து பேன் பார்ப்பது போல் பிரித்துப் பார்த்தபடியே "அவன் படிக்கலைன்னா பரவாயில்ல.. எங்க அண்ணங்க கடைல போயி தொழில கத்துக்கட்டும்.. பிஸினஸ் பண்ணியாவது அவன் பொழைச்சுக்குவான்.. நீங்க ரொம்ப கஷ்டப்படாதீங்க.. ஏற்கெனவே ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் இப்படி பத்து வருஷமா இந்த ஓட்டு வீட்டுல இருந்து ஒப்பேத்துறீங்க.." என்றாள்.

படிப்புதான் இப்படியென்றால், அவன் குணமும் அல்லவா யாருக்கும் அடங்காதவனாக மாறிவிட்டது..

---------------------------------

ழசை நினைத்தபடி மீனாட்சியம்மன் கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார் கணேசன். வெயில் சற்றும் சளைக்காமல் தன் சுயரூபத்தைக் காட்ட இன்னமும் இரண்டு மணி நேரமாவது ஆகும்.. சின்னப் பையனை ஏன் காக்க வைக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தவராக "ஏதாச்சும் ஜுஸ் சாப்பிடுறியாப்பா..? என்றார். "உம்.." என்றான் சந்தோஷமாக சீனு.

கோவில் அமைதியாக இருந்தது. மணியைப் பார்த்தார் பத்து என்று காட்டியது. அவர் கண்கள் ரமணியைத் தேடியது. "சீனு அண்ணன் எங்கயாவது இருக்கானா பார்..?" என்றார். சீனு சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு "இல்லப்பா.." என்றாலும் அண்ணன் வருவான் என்ற நம்பிக்கையில் "உள்ள இருந்தாலும் இருக்கும்.." என்றான்.

கோவிலின் நீண்ட பிரகாரத்திற்கு வந்தவுடன் சீனு ஆர்வமாகத் தேடுகிறான் ரமணியை.. அவன் இன்னமும் வரவில்லை என்பதை தன் உதட்டைப் பிதுக்கி கணேசனிடம் காட்டுகிறான் சீனு.

மீண்டும் நினைவுகளில் மூழ்கினார் கணேசன்.

---------------------------------

மணி 12வது வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்துதான் தேர்வு பெற்றான். ஆனாலும் கல்லூரியில் சேர்த்தார்கள்.

இருந்தும் என்ன செய்ய..?

உலகில் நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதா..?

"எதுக்கு நான் பி.ஏ. படிச்சேன். உங்க அண்ணன் கடைல உக்காந்து வெங்காயத்தை எடை போடறதுக்கா..? வேற வேலைய பாரும்மா.." என்ற ரமணியின் வார்த்தைகளில் லஷ்மி முதல்முறையாய் அதிர்ந்து போனாள்.

"என்னடா.. இப்படி பேசறே..? அப்பா இதுக்கு மேல உனக்கு என்ன செய்யமுடியும்? நீ சம்பாதிச்சு இனிமே வீட்டுக்கு கொடுக்கணும்.. அப்பா பாவம்ல..

"பாவம்ன்னா நான் என்ன செய்ய முடியும்..?"

"மாமா கடைல போயி தொழில் கத்துக்கிட்டாலும் மாமாவே உனக்கு கடை வைச்சு தருவார்.. உனக்கு ஒரு கஷ்டமும் இல்ல.. தம்பி, தங்கச்சியையும் நல்லா பாத்துக்கலாம்.. செல்விக்கு கல்யாணம் வேற பண்ணனும்.. நல்லா யோசனை பண்ணு கண்ணு.."

"நல்லா யோசனை பண்ணித்தான் சொல்றேன்.. அங்க போக எனக்குப் பிடிக்கல.. நீ எதுக்கு அங்க போகச் சொல்றேன்னு எனக்குத் தெரியும்.. எப்படியாவது மாமா வீட்ல என்னை வீட்டோட மாப்பிள்ளையாக்கிக்கிடலாம்ன்னு ஐடியா பண்ணயிருக்குற.. அது நடக்காது தாயே.. உங்க அண்ணன்கிட்ட போன வாரம் நானே முடியாதுன்னு நேர்ல சொல்லிட்டேன்.. சந்தேகம்ன்னா போயி கேட்டுக்கம்மா.."

ஏகத்துக்கும் அதிர்ச்சியடைந்தாள் லஷ்மி.

"ஏண்டா இப்படி பண்ணிட்டே..? அந்தப் பொண்ணு நல்ல பொண்ணுடா..

"நல்ல பொண்ணுதான்.. நானும் இல்லைன்னு சொல்லலையே.. ஆனா எட்டாங்கிளாஸ் வரைக்கும் படிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன செய்யச் சொல்றே..? என்னால முடியாது தாயே.. ஆள விடு.."

"இப்ப என்னதான் பண்ணச் சொல்றே..?" லஷ்மியின் குரலில் அவசரமும், ஏமாற்றமும் தொனித்தது.

"அப்பா மில்லுல யாராவது வேலையை விட்டுட்டு அந்த இடத்துக்கு அவங்களுக்குத் தெரிஞ்சவங்க யாரையாவது சேர்த்துவிடலாம்ன்னு ஒரு திட்டம் இருக்குல்ல.. அதுல உங்க வீட்டுக்காரரை வேலையை விட்டுட்டு என்னை அந்த வேலைக்குச் சேர்த்துவிடச் சொல்லு.. இப்பவே மில்லுல சம்பளம் நாலாயிரம் தர்றான் தெரியுமா..?

மொத்தமாக அதிர்ந்தார்கள் கணேசனும், லஷ்மியும்.

"என்னடா சொல்றே..? எதுக்கு அப்பாவ வேலைய விடச் சொல்றே..? உனக்கு வேற வேலை கிடைக்காதா என்ன..? வேற வேலைக்குப் போடா.. ஒரு சம்பளத்த வைச்சிக்கிட்டு எப்படிடா பொழைக்கிறது..?" லஷ்மியின் கேள்வியில் முதல் முறையாக மகனின் மேல் கோபக்கனல் வீசியது.

"அதெல்லாம் முடியாது.. நான் இப்ப வேற வேலை தேடினாலும் எனக்கு ரெண்டாயிரம் ரூபாய்க்கு மேல சம்பளம் கொடுக்க மாட்டாங்க.. நானும் என் வாழ்நாள் முழுவதும் இப்படியே இருந்திர வேண்டியதுதான். இப்ப என்ன..? நான் சம்பாதிச்சு என்ன செய்யப் போறேன்..? உங்களுக்குத்தானே செய்யப் போறேன்.. சம்பளம் முழுசையும் உன்கிட்டேயே கொடுத்தர்றேன்.. நீ எவ்வளவு கொடுக்குறியோ.. அதை வாங்கிக்கிறேன்.. செல்வி கல்யாணத்த நான் பாத்துக்கறேன்.. என்ன சொல்றே.? நல்லா யோசிச்சு சொல்லு.." ஒருமையில் அம்மாவிடம் அவனது கேள்வி பதிந்தது.

லஷ்மி அமைதியாக கணேசனைப் பார்த்தாள். "அது முடியாது. அவன வேற வேலை பார்க்கச் சொல்.." என்றார் கணேசன். தன்னுடைய கனவுகள் ஒவ்வொன்றாக சிதைவதைப் பார்த்த லஷ்மி குழம்பிப் போனாள். மகனா, கணவன..? அவளுக்குள் நடந்த பட்டிமன்றத்தில் பார்வையாளர்களாக காட்சியளித்தார்கள் சீனுவும், செல்வியும்.

அடுத்த வாரமே ரமணி யாரிடமும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியேறினான். கணேசன் பதட்டப்படாமல் இருப்பதாக காட்டிக் கொண்டாலும் லஷ்மி பதறினாள்.. அவளின் கண்ணீர் குடும்பத்தின் மொத்தத்தையும் பட்டினியும் போட்டு வதைக்க அரை மனதுடன் ரமணியைத் தேட ஆரம்பித்தார் கணேசன். ரமணியின் நண்பர்கள் வட்டாரத்தில் மெதுவாக விசாரித்து இரண்டு நாட்கள் கழித்து வண்டியூரில் அவனின் நண்பர்கள் வீட்டில் அவனைப் பிடித்தார்.

"நீங்க உங்க வேலையை விட்டுட்டு எனக்கு வாங்கிக் கொடுத்தாத்தான் நான் அந்த வீட்டுக்கு வருவேன். இல்லேன்னா நான் இங்கேயே இருக்கேன்.." தீர்மானமாகப் பதில் சொன்னான் ரமணி. கணேசன் சுவற்றில் அடித்த பந்தாக லஷ்மியிடம் வந்தார். "நான் என்ன செய்ய..? இப்பொழுது நீயே சொல். நான் ஒரு தப்பும் பண்ணல.. அவன நீதான் வளர்த்த.. இப்படி என்னை வெறுக்கிற அளவுக்கு நான் அவனுக்கு என்ன செய்தேன்..? சொல்லு.." கண் கலங்கியது அவருக்கு.

இப்பொழுதும் தாய் பாசமே வென்றது. "அவன் சொன்ன மாதிரியே செஞ்சிருங்க.. இனிமே நாம என்ன செய்யமுடியும்..?" என்றாள் லஷ்மி.

வேண்டா வெறுப்பாக சக தொழிலாளர்களின் வேண்டுகோளையும் மீறி வேலையை மகனுக்கு விட்டுக் கொடுத்தார் கணேசன். லஷ்மிக்கு எப்படியாவது செல்வியின் திருமணத்தை நடத்துவதற்கு ரமணி உதவுவான் என்ற நம்பிக்கை கொஞ்சம் இருந்தது. அப்படியொரு நம்பிக்கை கணேசனின் மனதில் துளிகூட இல்லை. எப்படியும் தான் மட்டுமே கஷ்டப்படப் போவதாக அவர் உள் மனது சொன்னது.. அதுவரையிலாவது கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்றுதான் நினைத்தார்.

ரமணியும் சில மாதங்கள் ஒழுங்காக மாதச் சம்பளத்தை லஷ்மியிடம் கொடுக்க ஆரம்பித்தவன் பிறகு தனக்கென்று எடுத்துக் கொண்டு படியளக்க ஆரம்பித்தான்.

இடையில் செல்வியை லஷ்மியின் தூரத்துச் சொந்தத்திலிருந்து பெண் கேட்டு வந்தார்கள். வந்தவர்கள் ரமணியின் வேலையையும், சம்பளத்தையும் பார்த்துவிட்டு "எங்கள் வீட்டிலும் ஒரு பெண் இருக்கு. நீங்க உங்க பொண்ணுக்கு உங்களால என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்க. ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா முடிச்சிருவோம்.." என்றனர்.

மாப்பிள்ளையும் அரசு உத்யோகம் என்பதால் கணேசன் சந்தோஷப்பட்டார். லஷ்மிக்கு பெண் எடுத்து பெண் கொடுத்தால் நம் பெண் அங்கே நிம்மதியாக இருப்பாளே.. என்ற சந்தோஷத்தில் ரமணியிடம் சொன்னாள்..

"நீங்க சொன்னா நான் கல்யாணம் பண்ணிறுவேனா..? அவங்க பெண் எடுக்கறாங்கன்னா எடுக்கட்டும். அதுக்காக நான் எதுக்கு அந்த வீட்ல கல்யாணம் பண்ணணும்..? எனக்கென்ன தலையெழுத்தா..? அந்தப் பட்டிக்காட்டுல போயி எவன் கல்யாணம் பண்ணுவான்..?" என்றான் அலட்சியமும், இளக்காரமும் கலந்த குரலில்.

ரமணி மறுநாள் காலை வேலைக்கு கிளம்பும்போது "டேய்.. செல்வி வாழ்க்கையே உன் கைலதாண்டா இருக்கு.." என்றாள் லஷ்மி.

அன்று சாயந்திரம் கணேசன் மார்க்கெட்டுக்குப் போய்விட்டு வீடு திரும்பினார். அவருடைய பக்கத்து வீட்டுக்காரர்கள் தன் வீட்டு வாசலில் நிற்பதையும், வீட்டை நோக்கிய அவர்கள் பார்வையையும் கண்டு பயந்து போய் வேகமாகய் நடை போட்டார்.

செருப்பை ஓரமாய் எறிந்துவிட்டு ஹாலில் நுழைந்தவர் கண்ணில்பட்டது ஒரு புதுப்பெண். விரிக்கப்பட்டிருந்த பாயில் கழுத்தில் மாலையுடன் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்து சுதாரிக்க முடியாமல் தடுமாறினார் கணேசன்.

அருகில் வந்த செல்வி அவருடைய தோளில் தன் கையை வைத்து அவரைத் திருப்பி பின்பக்கமாக இழுக்க அந்தப் புது பெண்ணை பார்த்துக் கொண்டே பின்னால் நகர்ந்தார் கணேசன்.

"அப்பா இவங்க அண்ணனோட மில்லுல கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரா இருக்காங்களாம்.. இன்னைக்கு காலைலதான் மீனாட்சியம்மன் கோவில்ல கல்யாணத்த முடிச்சிட்டு வந்திருக்கு அண்ணன்.." செல்வி சொன்ன வார்த்தைகளைக்கூட முழுமையாகக் கேட்க முடியாமல் அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்த கணேசனின் முகம், அடுத்த கணம் லஷ்மியைத் தேடியது.

கணேசன் ஹாலில் மெதுவாக நடந்து போக உள் அறையிலிருந்து தன் கழுத்திலிருந்த மாலையைக் கழற்றிவிட்டு சட்டையை இழுத்துவிட்டுக் கொண்டு சட்டையின் கழுத்துப் பகுதியைத் தன் கையிலிருந்த கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே வெளியே வந்தான் ரமணி.

கணேசனைப் பார்த்தவுடன் எதுவும் பேச விரும்பாதவனைப் போல் முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் புது மனைவியின் அருகில் சென்றவன் சிநேகமாக அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

சமையல்கட்டில் ஓசைப்படாமல் நுழைந்த கணேசன் தனக்கு முதுகைக் காட்டிக் கொண்டு ஒரு டம்ளரில் பாலை ஆற்றிக் கொண்டிருந்த லஷ்மியைப் பார்த்தார். மெதுவாக நடந்து அவள் அருகில் சென்று மிகச் சன்னமான குரலில் "லஷ்மி" என்றழைக்க திடுக்கிட்டுத் திரும்பிய லஷ்மியின் கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அவளைத் தொட்டு ஆறுதல்படுத்த முயல டம்ளரை சமையல் டேபிளின் மேல் வைத்துவிட்டு தன் கையால் வாயைப் பொத்திக் கொண்டு அழ முயன்ற லஷ்மியைப் பார்த்து பயந்து போன கணேசன். "வேணாம்.. வேணாம்.." என்று சைகையால் தடுத்துவிட்டு சமையல் அறையை விட்டு வெளியே வந்தவர் வெளியில் நின்றிருந்தவர்களையும் நிமிர்ந்து பார்க்காமல் வெளியே தெருவில் நடக்கத் தொடங்கினார்.

இரவு பதினொரு மணிக்கு மெதுவாக வந்து கதவைத் தட்ட கதவு திறந்தே கிடந்தது. உள்ளே ஹாலில் ஒரு மூலையில் வெறும் தரையில் தன் கையையே தலையணையாகக் கொண்டு படுத்திருந்த லஷ்மி அவரைப் பார்த்தவுடன் வேகமாக எழுந்தவள். கலைந்திருந்த தன் தலைமுடியை இறுக முடிந்து கொண்டை போட்டுவிட்டு சமையலறைக்குள் சென்றாள்.

கை, கால்களைக் கழுவிக் கொண்டு பக்கெட்டை நின்ற இடத்திலிருந்தே எறிந்துவிட்டு திரும்பும் அப்பாவைப் பார்த்த செல்வி, படக்கென்று மறுபுறம் முகத்¨த் திருப்பிக் கொண்டு தூங்குவதைப் போல ஆனாள்.

சுவரோரம் இருந்த பீரோவின் மீது சாய்ந்தபடி உட்கார்ந்தார் கணேசன். லஷ்மி உள்ளிருந்து சாப்பாட்டு அயிட்டங்களை ஒவ்வொன்றாக வெளியில் கொண்டு வந்து வைத்துவிட்டுச் செல்ல அவள் வரும்போதும், போகும்போது அவர் அவளைப் பார்ப்பதும், அவள் அவரைப் பார்க்காமல் தவிர்ப்பதும் அவருக்குத் தெரிய வர இது என்ன வகை தண்டனை என்பதைப் போல் வீட்டின் முற்றத்தையே பார்த்தார் கணேசன்.

தட்டில் சிறிது சாதத்தைக் கொட்டிவிட்டு சாம்பாரை ஊற்றிவிட்டு அருகில் அமர்ந்து தன் முழங்காலை குறுக்கி அதன் மேல் தன் கைகளை வைத்து முழங்காலில் தன் முகத்தைப் பதித்து வேறு பக்கம் பார்வையிருக்க சன்னமான குரலில் பேச ஆரம்பித்தாள் லஷ்மி.

"அவன் தெற்கு வாசல்ல வீடு பிடிச்சிருக்கானாம்.. வாடகை எண்ணூறு ரூபாயாம்.. சும்மா நம்மகிட்ட சொல்லிட்டுப் போக வந்தானாம்.. இனிமே நமக்கு ஆயிரம் ரூபாய்தான் தருவானாம்.. பத்தலைன்னா நீங்களே ஏதாவது பண்ணிக்குங்கன்னான்.. பாலைக் குடிச்சிட்டுப் போயிட்டான்.." - மெதுவாக அழுகை அவளுக்குள் பீரிட்டது.

கணேசன் மெதுவாக சாதத்தைப் பிசைந்து சாப்பிட்டபடியிருக்க அடுத்து என்ன பேசுவது என்பதைப் போல் அவள் சற்று நிறுத்த அத்தோடு போதும் என்பதாக கணேசன் கை கழுவிக் கொண்டு எழுகிறார்.

முன்கூடத்தில் சுவரோடு சுவராக பதுங்கி படுத்திருந்த சீனுவின் பாயில் மெல்ல அமர்ந்தவரின் கை அனிச்சையாக அவனது முதுகை தடவிக் கொடுத்தது. மெல்ல அவனது பாயிலேயே படுத்தவர் லஷ்மி வருவதைப் பார்த்தவுடன் மீண்டும் எழுந்து உட்கார்ந்தார்.

மெல்ல வந்து அவரருகில் அமர்ந்த லஷ்மியின் கை விரல்களின் நடுக்கம் அவரின் தோள்பட்டையில் எதிரொலித்தது. "நான் தப்பு பண்ணிட்டேங்க.." என்று எழுந்த பலமான அவளுடைய அழுகுரல் அவருடைய மனதைப் பிசைந்தது.

லஷ்மியின் வாயைப் தன கையால் பொத்தியவர் அவளை ஆசுவாசப்படுத்தி "விடு என்ன செய்ய..? ஏதோ இப்படி நடக்கணும்ன்னு இருந்திருக்கு.. நடந்திருச்சு.. போய் தூங்கு போ.. போ.. போ.." என்று அவளை கிளப்ப லஷ்மி கண்களை முந்தானையால் துடைத்தபடி மெதுவாக நடந்து சென்று செல்வியின் அருகில் அவளை ஒட்டியும், ஒட்டாமலுமாக படுத்தாள்..

எப்பொழுது தூங்கினாரோ தெரியவில்லை கணேசனுக்கு.. காலையில் செல்வியின் "அம்மா.." என்ற கூக்குரல் அவரை எழுப்பியது. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்த கணேசன் உள்ளே ஓடினார். லஷ்மியின் உயிரற்ற சடலத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மகள் செல்வி "அப்பா.. அம்மா.." என்ற வார்த்தைகளோடு எழுப்பிக் கொண்டிருந்தாள்..

தலையே சுற்றுவது போல் இருந்தது கணேசனுக்கு. இனி என்ன..? எல்லாமே முடிந்து போய் விட்டது. மில்லுக்குத் தகவல் போய் அங்கிருந்து உடன் வேலை செய்பவர்கள் மூலமாக ரமணியின் புது வீட்டிற்கு கணேசனின் பக்கத்து வீட்டுக்காரர்கள் சென்று அவனை அழைத்து வந்தார்கள்.

லஷ்மியின் உடல் அடக்கம் வரைக்கும் இருந்தவன், சுடுகாட்டிலேயே தன் வீட்டுக்குப் போவதாக தன் மாமாவிடம் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

மறுநாள் பால் தெளிப்புக்கும், கருமாதிக்கும் ஏதோ மூன்றாம் மனிதரைப் போல வந்து கலந்து கொண்டான். கணேசனும் அவனை கண்டு கொள்ளவில்லை. "அவளே போய்விட்டாள்.. இனிமேல் யாரைக் குற்றம் சொல்ல.. இனிமேல்தான் நான் எனது குழந்தைகளுக்காக வாழப் போகிறேன்.." என்று தன் உறவினர்களிடம் சொல்லி சொல்லி புலம்பத்தான் முடிந்தது கணேசனால்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு மில்லில் தன்னுடைய இருபது வருட சர்வீஸை எடுத்துச் சொல்லி தற்காலிகமாக வேலைக்குச் சேர்ந்தார்.

ரமணி அதற்குப் பிறகு தங்கை, தம்பியைக்கூட வந்து பார்க்கவில்லை. தாங்கள் போய் கேள்வி கேட்கிறோம் என்று கிளம்பிய உறவினர்களைக் கூட கணேசன் தடுத்துவிட்டார். "அவன் வரும்போது வரட்டும். அவன் வந்தால் ஏன் வந்தன்னு நான் கேக்க மாட்டேன்" என்று செல்வியிடம் சொல்வார்..

கணேசன் செல்வியின் கல்யாணக் கவலையில் ஆழ்ந்தார். இந்த வருடமாவது கல்யாணத்தை முடித்துவிட வேண்டும் என்ற நினைப்பில் மில்லில் கவுரவம் பார்க்காமல் நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்த்து வந்தார்.

---------------------------------

தோ ஓராண்டாயிற்று..

"வாங்கோ.. இப்படி சட்டையைக் கழட்டிட்டு உக்காருங்கோ.." என்ற குருக்களின் குரல் கணேசனை எழுப்பியது.

அப்போதும் திரும்பித் திரும்பிப் பார்த்தார் கணேசன் ரமணி தட்டுப்படுகிறானா என்று..

இல்லை. ஒரு தீர்க்கமான முடிவுரை கணேசனின் கண்களில் எழுகிறது.

குருக்களின் பார்வையில் தெரிந்த அவசரத்தையும், தனக்குப் பின்னால் இருந்த கூட்டத்தையும் பார்த்த கணேசன், "தம்பி சட்டையைக் கழட்டு.." என்று சீனுவிடம் சொல்லிவிட்டு தன்னுடைய சட்டையைக் கழற்றி பக்கவாட்டுத் தூணின் அருகே வைத்துவிட்டு மஞ்சள் பையை மட்டும் எடுத்துக் கொண்டு சீனுவின் கையைப் பிடித்து குருக்களின் எதிரில் அமர்ந்தார்.

"யாருக்கு..?" என்றார் குருக்கள்.

"என் மனைவிக்கு.."

அருகில் சுவரோரம் சாய்ந்து உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணைக் காட்டி "அவாள் கோவில் ஆள்.. அவாள்கிட்ட தர்ப்பணக் கட்டணம் இருபத்தைந்து ரூபாய் கொடுத்திருங்கோ.." என்று சொல்லிவிட்டு அவருடைய அனுமதிக்குகூட காத்திருக்காமல் அந்த மஞ்சள் பையை திறந்து உள்ளிருந்தவைகளை எடுத்தார் குருக்கள்.

கணேசன் தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்து இருபத்தைந்து ரூபாயை எடுத்து அந்த அம்மாவிடம் கொடுத்தவிட்டு மீண்டும் குருக்களின் முன் அமரும்போதும் சுற்று முற்றும் ஒரு பார்வை பார்த்தார். தன்னைத் தெரிந்தவர்கள்கூட யாரும் அங்கில்லை என்பது தெரிந்தது. சீனுவின் அருகில் அவனை லேசாக அணைத்ததுபோல் அமர்ந்தார்.

"இப்படிக் கையை நீட்டுங்கோ" என்ற குருக்களுக்கு தன் கையை நீட்ட கை விரல்களைப் பிடித்த குருக்கள் அதில் தர்ப்பணக் குச்சியை மாட்டியபடியே "அம்மா பேர்.." என்று கேட்டுவிட்டு அவரைப் பார்க்க "லஷ்மி" என்றார் மெல்லிய குரலில்.. அவருடைய தோற்றத்தைப் பார்த்து ஏதோ கேட்க வேண்டும் என்பதைப் போன்ற சந்தேகத்துடன், "பையன் பெரியவனா.. சின்னவனா?" என்றார் குருக்கள். கணேசன் சிறிதும் பிசிறில்லாத குரலில் "இல்ல.. ஒரே பையன்தான்" என்று சொல்ல, சீனு நம்ப மாட்டாத அதிர்ச்சியில் அப்பாவைப் பார்க்க.. குருக்கள் மந்திரத்தைத் தொடர..

ஒரே நாளில் இரண்டு திவசங்களை நடத்தும் திருப்தியுடன், மந்திரங்களைச் சொல்லத் துவங்குகிறார் கணேசன்.


*********************************

மலையாள திரைப்பட கதாசிரியர், இயக்குநர் லோகிததாஸ் மரணம்..!

28-06-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்று காலையில் தொலைக்காட்சியில் பிளாஷ் நியூஸாக ஓடிய இந்த செய்தி ஒரு கணம் என்னை ஆடத்தான் வைத்துவிட்டது..

மலையாளத் திரையுலகின் முன்னணி கதாசிரியரும், இயக்குநருமான லோகிததாஸ் மாரடைப்பால் காலமானார் என்கிற இந்த துயரச் செய்தி நிச்சயம் சினிமா ஆர்வலர்களுக்கு மிகப் பெரும் துக்கத்தைத் தரும்.



இன்று கொச்சியில் நடைபெற்ற மலையாளத் திரையுலகின் ‘அம்மா' என்கிற அமைப்பின் பொதுக்குழுக்கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார் லோகிததாஸ். அப்போது திடீரென்று அவருக்கு நெஞ்சு வலி வர மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். தீவிர சிகிச்சையளித்தும் முடியாமல் காலை 10.50 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோகிததாஸ் மற்றும் இயக்குநர் சிபிமலையில் இருவரும் இணைந்து படைத்த மலையாளத் திரைப்படங்கள் அனைத்தும் இன்றைக்கும், என்றைக்கும் மலையாளத் திரையுலகின் பெயரை வெளியுலகத்திற்கு அடையாளம் காட்டக் கூடியத் திரைப்படங்கள்.

இந்த ஜோடி முதலில் இணைந்த திரைப்படம் ‘தனியாவர்த்தனம்'. 1987-ல் வெளி வந்தது. மம்முட்டியும், சரிதாவும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை இப்போது பார்த்தாலும் கண்ணில் குளம் கட்டாமல் விடாது. சிபியின் இயக்கம் அப்படி என்றாலும் தனது முதல் கதை, திரைக்கதையை அழுத்தமாகக் கொடுத்திருந்தார் லோகிததாஸ்.

‘எழுதாபுரங்கள்', ‘கிரீடம்', ‘முத்ரா', ‘ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா', ‘பரதம்', ‘கமலாதலம்', ‘தனம்', ‘தசரதம்', ‘செங்கோல்' என்று இந்தக் கூட்டணி கொடுத்தத் திரைப்படங்கள் அனைத்தும் நல்ல கதையம்சமுள்ள திரைக்காவியங்கள்.

இதில் ‘கிரீடம்', ‘பரதம்', ‘தனம்', ‘ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா', ‘தசரதம்', ‘செங்கோல்' ஆகிய திரைப்படங்களை பார்த்து அழுதிருக்கிறேன்.

சிபியின் திரைப்படங்கள் முடிந்தவுடன் மனதில் ஒரு பாறாங்கல் அழுந்தியிருப்பது போலத்தான் தோன்றும். ஆனால் இன்றைக்கு யோசித்துப் பார்த்தால் அதற்கு அடித்தளமிட்டிருப்பது லோகிததாஸின் கதையும், திரைக்கதையும்தான் என்று யோசித்துப் பார்த்தால் வெற்றியின் பாதியை அவருக்கும் வழங்கத்தான் வேண்டும்.


லோகிததாஸ் இதுவரையிலும் தனித்து 12 திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார்.

இவர் இயக்கிய திரைப்படங்களில் ‘பூதக்கண்ணாடி', ‘கண்மதம்', ‘காருண்யம்', ‘கஸ்தூரி மான்', ‘
அரையன்னங்களுடவீடு' திரைப்படங்களை மட்டுமே பார்த்திருக்கிறேன்.

இதில் ‘பூதக்கண்ணாடி'யும், ‘கண்மதமும்', ‘காருண்யமும்' நெகிழ வைத்தத் திரைப்படங்கள். ‘பூதக்கண்ணாடி' யில் மம்முட்டியின் அப்பாவித்தனமான அந்த செய்கையின் பின்னால் இருக்கும் சஸ்பென்ஸ் இறுதியில் உடைக்கப்படும்போது, ‘ஐயோ' என்று அடிவயிற்றில் எழுந்த உணர்வை மறக்கவே முடியாது.

‘கண்மத'த்தில் மஞ்சுவாரியர் தனது நடிப்பு கேரியரில் மிகச் சிறந்த நடிப்பைக் கொட்டியிருந்தார். மோகன்லாலும் அப்படியே.. மிக மிக இயல்பான நடிப்பு. அப்படியெல்லாம் நடிப்பையும், இயக்கத்தையும் பார்த்த பின்புதான் தமிழ்த் திரைப்படங்களை பார்ப்பதற்கு சங்கடங்கள் ஏற்பட்டது.

தன்னுடைய முதல் படமான ‘தனியாவர்த்தனம்' திரைப்படத்திற்கே கேரள மாநில அரசின் சிறந்த கதாசிரியருக்கான விருதை வாங்கியிருக்கிறார் தாஸ். ‘பூதக்கண்ணாடி' திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதும், மாநில விருதும் கிடைத்துள்ளது. லோகிததாஸ் தமிழில் இயக்கிய ‘கஸ்தூரிமான்' திரைப்படத்திற்கு தமிழக அரசு சிறந்த திரைப்பட விருது வழங்கியுள்ளது.

இதுவரையில் 14 முறை சிறந்த கதாசிரியர் விருது, 4 முறை சிறந்த இயக்குநருக்கான விருது என்று கேரளாவின் சிறந்த திரைப்பட அமைப்பான Film Critics Award-ஐ பெற்றுள்ளார்.

இவர் கடைசியாக இயக்கிய ‘நைவேத்தியம்' திரைப்படம்கூட சிறந்த திரைப்படம், சிறந்த கதை ஆகிய பிரிவுகளில் விருதுகளைப் பெற்றது.

சிறந்த கதாசிரியராக வலம் வந்து கொண்டிருந்த லோகிததாஸை மீராஜாஸ்மின் விவகாரம்தான் விவகாரமானவராக மாற்றிவிட்டது. 2001-ல் தான் இயக்கிய ‘சூத்ரதாரன்' திரைப்படத்தின் மூலம் மீராவை மலையாளத் திரையுலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார் லோகி.

இதே லோகிததாஸ்தான் 1996-ல் ‘தூவல் கொட்டாரம்' படத்தின் மூலம் மஞ்சுவாரியரையும், 1999-ல் சம்யுகத்வர்மாவையும் மலையாளத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்.


ஆனால் இவர்களையெல்லாம் தாண்டி மீராவின் விஷயம்தான் அவரை மிகவும் நெருக்கிவிட்டது. லோகி இயக்கிய 4 திரைப்படங்களில் மீரா கதாநாயகியாக நடித்திருந்தார். இதனை வைத்து மலையாள பத்திரிகையுலகம் இருவருக்குமான நட்பை கன்னாபின்னாவென்று எழுதித் தீர்த்துவிட்டது.

அவருக்கும் தனக்குமான நட்பு அப்பா, மகள் உறவுதான் என்று மீரா ஜாஸ்மீன் பல முறை சொல்லியும் பத்திரிகைகள் அதனை பொருட்படுத்தவில்லை. ஜாஸ்மீனுக்காகவே லோகிததாஸ் எடுத்த அடுத்த திரைப்படமும் பத்திரிகைகளுக்கு நன்றாகவே அவல் போட்டது. ஆனால் அந்தத் திரைப்படம் படுதோல்வியடைந்து அதற்காக முதல் போட்ட கடனுக்காக மீரா தனது வீட்டை விற்று கடனை அடைத்தார்.

இதன் பின்பு மீராவுடனான இவரது நட்பில் விரிசல் ஏற்பட்டாலும், சமீப நாட்களில் மீராவுக்காகவே தான் ஒரு கதையை தயார் செய்து வைத்திருப்பதாகவும், அதில் அவர்தான் நடிப்பார் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். கூடவே கமலஹாசனை வைத்தும் தான் ஒரு படத்தினை இயக்கப் போவதாகவும் சொன்னார்.

இவருடைய ‘சல்லாபம்' திரைப்படம்தான் தற்போது ‘ரயிலு' என்கிற பெயரில் ரஞ்சித் நடிப்பில் தமிழ்த் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

எனக்குத் தெரிந்து மலையாளத் திரையுலக கதாசிரியர்கள் பட்டியலில் எம்.டி.வாசுதேவன் நாயர், பத்மராஜன், வரிசையில் லோகிததாஸும், சீனிவாசனும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள். இந்தப் பட்டியலில் ஒன்று இன்றைக்கு விடைபெற்றுச் சென்றுவிட்டது.

மலையாளத் திரையுலகம் என்றில்லை பொதுவாகவே திரைப்படங்கள் மீதான ஆர்வலர்கள் அத்தனை பேருக்குமே லோகிததாஸின் மரணம் ஒரு மிகப் பெரும் சோகமே.

அவருடைய ‘கிரீடமும்', ‘தசரதமும்', ‘தனமும்', ‘ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா'வும், ‘பரதமும்' மலையாள மொழி என்றில்லை.. அனைத்து மொழி ரசிகர்களாலும் வெகுவாக ரசிக்கப்பட்டத் திரைப்படங்கள்.

இனி இது போன்ற திரைப்படங்கள் தோன்றவியலாது என்ற எண்ணம் நமக்குள் உதித்தாலும், இதுவரையில் படைத்திருப்பதே அவரது பெயரை வருங்கால சினிமா ரசிகர்களிடத்தில் அவருடைய பெயரைச் சொல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்.

அவருடைய ஆத்மா சாந்தியடைய என் அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்..

அபிஅப்பாவுக்காக ஒரு பதிவு..!

17-06-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எனதருமை உடன் பிறவாச் சகோதரரும்,

அமீரக
வாழ் பதிவர்களின் காட்பாதரும்,

மொக்கை
மெயில் மன்னர்களின் குலகுருவும்,

நட்புக்கு
இலக்கணமாகத் திகழும் பாசமிக்க அண்ணனும்,

கோபாலபுரத்தின்
கொள்கை விளக்கக் குன்றாகவும் திகழும் அண்ணன் அபிஅப்பா..

நட்டுவும்
, அபியும் தன் பக்கத்தில் இல்லாத சோகத்தில் சரியாகச் சாப்பிட முடியாமல், பேச முடியாமல், தூங்க முடியாமல், அலுவலகத்தில் வேலை பார்க்க முடியாமல் தவியாய் தவித்து சவலை நோய்க்கு ஆளாகி இன்று வீட்டில் படுத்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது எனக்கே சவலை நோய் வந்துவிட்டது.


இன்று அவர்தம் புதல்வரும் நமது பதிவுலகின் செல்லக்குட்டி சிங்கமுமான நட்டுவுக்கு பிறந்த நாள்.

இந்த
பிறந்த நாளில் தானும் கலந்து கொண்டு குட்டிச் சிங்கத்தை வாழ்த்த நினைத்தவருக்கு அமீரகத்தின் சோம்பேறி அலுவலர்கள் ஆப்படித்துவிட்டார்கள்.


நமது அருமை அண்ணனின் பாஸ்போர்ட்டை இன்னமும் வீடு தேடி கொண்டு வந்த தரவில்லையாம்.

ஆகவே
அண்ணன் படு பயங்கர கோபத்துடன் இன்று ஒரு நாள் மட்டும் உட்கார்ந்து கொண்டோ அல்லது நடந்து கொண்டோ தான் கணினியைப் பயன்படுத்தப் போவதில்லை என்று வீர சபதமெடுத்து , படுத்துக் கொண்டுதான் பதிவைப் படிப்பேன்.. பின்னூட்டம் போடுவேன் என்று ஒரு போராட்டத்தை தனது இல்லத்தில் இருந்தபடியே நடத்தி வருவதாக அமீரகத்தில் இருந்து வரும் யு.என்.., பி.டி.. செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த அன்புச் சிங்கத்தை, அமீரப் புயலை சாந்தப்படுத்த வேண்டி எனது கைக்கெடுத்தும் தூரத்தில் இருந்த ஒரு இடத்தில் செல்போனில் சில நிமிடங்கள் செலவழித்து, அன்னாரின் இதயங் கவர்ந்தவரி்டம் பேசி அண்ணனை அமைதிப்படுத்தச் சொன்னேன்.

அவர் அனுப்பிய ஆறுதல் புகைப்படங்களும், செய்திகளும் கீழே..

அபிப்பா.. போதும்.. இப்படி நீங்க மல்லாக்கப்படுத்து டைப் பண்றதை பார்த்தா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.. எந்திரிங்க..



என்னது..? எந்திரிச்சா உக்கார முடியாதா..? வாந்தி வருதா.. உவ்வே.. அதை நான் பார்க்க மாட்டேன்.. போங்க..



சீக்கிரமா போய் முகத்தைக் கழுவிட்டு இன்னிக்காவது குளிச்சிட்டு வாங்க.. உங்க முகத்தைப் பார்க்க நான் எம்புட்டு தூரத்துல இருந்து வந்திருக்கேன்..



எங்க.. எங்க.. இப்ப என் கண்ணைப் பார்த்து பேசுங்க.. இன்னுமா உங்களுக்கு காய்ச்சல் அடிக்குது.. போயிருச்சுல்ல.. நல்ல புள்ளையாட்டம் அழுகாம எந்திரிச்சு உக்காந்து பதிவு போடுங்க..


உஷ்.. அப்பாடா..

அண்ணன்மார்களை கூல் பண்றதுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு..!

கொடுமைடா சாமி..!

இட்லி, தோசை, பொங்கல், வடை, சட்னி, சாம்பார்-16-06-2009

16-06-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


சீமான்-சேகுவேரா டூ..?


ஐ.நா.மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தற்காக கியூபா தேசத்தின் மீது அளவற்ற கோபத்தில் இருக்கிறார்கள் தமிழகத்து சேகுவேராவின் ஆதரவாளர்கள்.

பிரபாகரனைவிடவும் சேகுவேராவின் புகைப்படங்களும், ஸ்டிக்கர்களும் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக புழக்கத்தில் உள்ளன. இந்தப் புழக்கங்கள் எல்லாம் சென்ற மாதம் புழுக்கங்களாக மாறிவிட்டன. ஏன் கியூபா இப்படி செய்தது என்பதற்கான காரணம் தெரியாமல் மட்டையாகிவிட்டனர் கியூபாவின் தோழர்கள்.

பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து நடத்தப்பட்ட கண்டன பொதுக்கூட்டத்தில் சீமான் பேசும்போது இதனைக் குறிப்பிட்டு கியூபாவை ஒரு பிடி பிடித்தார். கடைசியாக “சேகுவேராவைவிடவும் பல மடங்கு உயர்ந்தவன், திறமைமிக்கவன் என் தலைவன் பிரபாகரன்..” என்று சொல்லி பலத்த கை தட்டலையும் அள்ளிக் கொண்டு போனார்.

இந்த நிகழ்வுக்குப் பின்பு சேவின் புகைப்படம் போட்ட பனியனுடன் வெளியில் வருவதை அவரும், அவருடைய அருமைத் தம்பிமார்களும் நிறுத்திக் கொண்டிருப்பதாக கோடம்பாக்கத்து பட்சிகள் தெரிவிக்கின்றன.


மூன்று தேவிகள்

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடந்த ஒரு விழாவில் பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.



தலைவர்களைவிடவும் அவர்களுடைய இல்லத்தரசிகளுக்கே அதிக எதிர்பார்ப்பாம்.. அப்படி என்னதான் பேசியிருப்பாங்க என்று ஒரு பிரெஞ்சு பத்திரிக்கை போட்டியே வைத்திருக்கிறதாம்.



அதிகபட்சம் டிரெஸ்ஸை பத்தி இருக்கலாம்னு நான் நினைக்கிறேன்.. போட்டோவை பார்த்து பதிவர்களுக்கு கமெண்ட்டுகள் ஏதேனும் பொங்கி வந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்..! சிறந்த பின்னூட்டத்தை இந்த அம்மணிகளுக்கு அனுப்பி வைத்து பரிசுகளை அவர்கள் வழங்கினால் உங்களிடம் சொல்கிறேன்..!

தமிழ்மணம் கருவிப் பட்டை..!

தமிழ்மணம் நிர்வாகம் தங்களது கருவிப்பட்டையில் வாக்களிக்கும் முறையில் கொண்டு வந்த மாற்றம் நல்ல பலனைத் தந்துள்ளது.

ஒரு சமயத்தில் நூறையெல்லாம் கடந்து போய்க்கொண்டிருந்த கட்டற்ற ஆதரவுக் கரம், இப்போதெல்லாம் 20-ஐ தாண்டுவதற்கே குட்டிக்கரணம் போட வேண்டியுள்ளது.

இன்றைக்கு அதிசயத்திலும், அதிசயமாக அதிகபட்ச வாக்குகளை யாருமே பெறவில்லை என்று அறிவிப்பு வேறு தமிழ்மணத்தில் ஓடியது. சந்தோஷம்..

ஹா.. ஹா.. ஹா.. இந்தியத் தேர்தல் கமிஷன் மாதிரி தமிழ்மணத்தின் இந்த அதிரடி உத்தரவு, சில நல்ல பயன்களையும் தருகிறது.. ஒரே ஐ.பி.யின் கீழ் பல லாகின் ஐடிக்களை வைத்து குத்து குத்தென்று குத்திய நல்ல உள்ளங்களுக்கு எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

வாழ்க தமிழ்மணம்..!

நெதர்லாந்து நாட்டு பயங்கரம்..!

நெதர்லாந்து நாட்டில் அரச குடும்பத்தினர் கலந்து கொண்ட ஒரு விழாவின்போது திடீரென்று ஒரு கார் அங்கு நின்றிருந்தவர்கள் மீது அசுர வேகத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியதாம்..

எனக்கு இப்போதுதான் மெயிலில் புகைப்படங்கள் வந்தன.






புகைப்படக்காரர்களின் வேகத்திற்கு இது போன்ற படுபாதகச் சம்பவங்கள் கிடைத்தால்தான் உதாரணமாக்கலாம் போலிருக்கிறது.

புகைப்படங்கள் நொடிக்கணக்கில் எடுக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

பலரது கண்களின் பாப்பாவில் இந்த விபத்து விழுகாமல் இருப்பது. ஐயையோ என்று அலறுவதற்கு முதல் நொடி புகைப்படம் என்றெல்லாம் இந்தப் புகைப்படங்களை வரிசைப்படுத்தலாம்.


சினிமா படங்களின் தலைப்புகள்

தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று அறிவித்த பின்பு நல்ல தமிழ்ப் பெயர்களைத் தேடி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அலையோ அலை என்று அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டாரின் சிவாஜி வேறு ஒரு வழியில் வழக்குத் தமிழ் என்ற சொல்லுடன் வரிவிலக்கைப் பெற்றதால் இதனையே முன்னுதாரணமாகக் காட்டி பல்வேறு வழக்குத் தமிழ்ச் சொற்களும் தலைப்பாக வந்து பயமுறுத்துகின்றன.

தற்போது எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திரைப்படங்களின் சில தலைப்புகளை பார்த்தாலே கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.

"18 வயசுப் பயலே..
ஆட்டம்
ஆச்சரியம்
ஆட்ட நாயகன்
அழகான பொண்ணுதான்
என் இனிய தமிழ் மக்களே..
எனக்கே எனக்கா
என்னை நீதான் பிரிந்தாலும்
என்னை ஏன் மறந்தாய்..?
பிளாஷ்பேக்
ஹாய்
ஈஸா
இடியட்
இடம் வலம்
இது காதல் உதிரும் காலம்
காதல் எக்ஸ்பிரஸ்
காதல் எஃப்.எம்.
மதுரை திமிரு
வரேண்டா மதுரைக்கு
வங்கி
வீரமும் ஏறணும்
தடக்.. தடக்..
திரு.. திரு.. துரு.. துரு..
தொட்டுப் பார்
பார்க்கலாம் பூக்காலம்
பிறகு
பூமாலையே தோள் சேரவா
புறா
ஓடிப் போலாமா?
ஓடு மச்சி ஓடு
நான் ஒரு மாதிரி
நான் ரெடி? நீ ரெடியா..?"

இது மாதிரியாக தமிழ் அகராதிகளைச் சலித்துப் பார்த்து வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து தலைப்புகளை வைக்க அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் நமது இயக்குநர்கள்.

தலைப்புக்குத்தான் இந்த அடிதடி.. கதையைப் பத்தி யாரும் மூச்சுவிடமாட்டாங்க..

அது எவனுக்கு வேணும்..?


எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் பற்றிய அலசல்..!

ஞாயிறு மாலை 4 மணிக்கு ஞாநியின் கே.கே.நகர் வீட்டில் கேணி என்கிற அமர்வின் கீழ் எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள் பற்றி பேசப் போவதாக குறுஞ்செய்தி வந்து கொண்டேயிருந்தது.

நானும் சென்றிருந்தேன். நிஜமாகவே வீட்டுக்குப் பின்புறமிருந்த ஒரு கேணியின் அருகில்தான் கூட்டம் நடந்தது. கிட்டத்தட்ட 50 பேராவது வந்திருப்பார்கள்.

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பேசுவது என்பதே அல்வா சாப்பிடுவது போல.. மனிதர் அவ்வளவு நேரம் பேசிக் கொண்டேயிருந்தார். சிறுகதைகள் எப்படி இருக்க வேண்டும்.. அதனை எப்படி வழங்க வேண்டும்..? என்ன மாதிரியான அமைப்பியலில் அது இருத்தல் வேண்டும் என்றெல்லாம் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

இடையிடையே அவர் சொன்ன பல சிறுகதைகள்தான் கூட்டத்தை கலகலக்க வைத்தது. ரஷ்ய இலக்கியங்கள்தான் தன்னை உருமாற்றியதாகவும், சிறுகதைகள் பற்றிய தனது எண்ணத்தினை பெரிதும் மாற்றி தன்னை எழுத்தாளனாக திசை திருப்பியதும் ரஷ்ய சிறுகதைகள்தான் என்றும் சொன்னார்.

நிகழ்வு முடிந்த பின்பும் பலர் கேட்ட கேள்விகளுக்கு மிகப் பொறுமையாக அவர் பதிலளித்தவிதம் ஒரு சிறந்த பேராசிரியரை தமிழகத்தில் உள்ள ஏதோ ஒரு பல்கலைக்கழகம் இழந்துவிட்டது என்றே நினைக்க வைக்கிறது.

ஞாநியை பார்த்தேன். மனிதர் உடல்நலக்குறைவால் மிகவும் மெலிந்து போயிருந்தார். “மூணு மாசம் படுத்த படுக்கையாதான் இருந்தேன்.. யார்கிட்டேயும் சொல்ல வேணாம்னு நான்தான் சொல்லியிருந்தேன்..” என்றார். அவரை இந்தக் கோலத்தில் பார்ப்பது எனக்கு முதல் முறை என்பதால் ரொம்பவே வருத்தமாக இருந்தது. அவருடைய உடல் நலத்திற்கு ஒரு குறையும் வராமல் இருக்க.. அப்பன் முருகன் அருள் புரியட்டும்..

அசர வைத்த மனிதாபிமானம்..!

சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் எஸ்.என்.வசந்த் சமீபத்தில் மரணமடைந்தார்.


அவருக்கு அஞ்சலிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமையன்று நடந்தது. சின்னத்திரை கலைஞர்கள் முக்கால்வாசி பேர் திரண்டு வந்திருந்தனர். சின்னத்திரை நடிகர்களுக்காகவே ஒரு சங்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லி அதற்காக பல தீவிர முயற்சிகளை செய்து அச்சங்கம் துவங்க முக்கிய காரணமாக இருந்தவர் வசந்த் என்பதால் வந்திருந்த பலருக்கும் அவருடைய இழப்பினால் ரொம்பவே வருத்தம்.

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே இவர் நடித்துக் கொண்டுதான் இருந்தார். நடிகை பானுப்பிரியா தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமான 'மெல்லப் பேசுங்கள்' திரைப்படத்தில்தான் இவரும் அறிமுகமானார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் 'பாலைவனரோஜாக்கள்' திரைப்படத்தில் நளினியின் தம்பியாக நடித்தவர். பல மலையாளப் படங்களில் கதாநாயகனாகவே நடித்தவர். ஆனால் கடைசிவரையிலும் டூவீலரில்தான் ஷூட்டிங்கிற்கு வந்து கொண்டிருந்தார்.

இருதய ஆபரேஷன் செய்து பேஸ்மேக்கர் கருவியைப் பொருத்தியிருந்தார். தன்னுடைய மகன் பிளஸ்டூ தேர்வில் வெற்றி பெற்றதற்காக நண்பர்களுக்கு அளித்த பார்ட்டியில் கலந்து கொண்டபோது திடீரென்று நெஞ்சு வலிக்கிறது என்று மயங்கி விழுந்தவர்தான்.. முருகனிடம் ஐக்கியமாகிவிட்டார். பாவம்.. 52 வயதெல்லாம் சாகின்ற வயதா..?

அமைச்சர் பரிதிஇளம்வழுதி வசந்தின் புகைப்படத்தைத் திறந்து வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தி உரையாற்றினார்.

சின்னத்திரை கலைஞர்கள் அனைவரும் சேர்ந்து அக்குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க முடிவு செய்து பண வசூல் செய்தார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் கலெக்ஷன் ஆனது.

ஆனால் இதையெல்லாம்விட விழாவிற்கே முத்தாய்ப்பாக வசந்தின் நண்பரான ஒருவர் 50 லட்சம் ரூபாயை வசந்தின் குடும்பத்திற்கு நிதியுதவியாக வழங்கியது வந்தவர்களை அசர வைத்துவிட்டது.

செத்துப் போனா கொடுத்த கடனையே மீட்க முடியாமல் இருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் இவ்ளோ பெரிய தொகையை தனது நண்பரின் குடும்பத்திற்கு வழங்க முன் வந்த அந்த நண்பரை வகைதொகையில்லாமல் அனைவரும் பாராட்டித் தள்ளினார்கள். நானும் வாழ்த்துகிறேன்.

இறந்த பின்பும் தனது பண்பினால் தன்னை நிரூபித்திருப்பதாக வசந்தின் நண்பர்கள் கண்ணீர் மல்க மேடையில் பேசினார்கள். நிச்சயம் இது அவருடைய தனிப்பட்ட குணத்தினால் கிடைத்த பாராட்டு போலத்தான்.. அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்..

கடைசியாக ஒரு புகைப்படம்..!

எப்படியெல்லாம் போட்டோ எடுக்க கஷ்டப்படுறாங்க பாருங்க..!


இப்போதைக்கு இது போதும்..

மீண்டும் அடுத்து நேரம் கிடைக்கும்போது சந்திக்கலாம்..!

பதிவர்களிடம் ஒரு அன்பு வேண்டுகோள்..!

12-06-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே...!

பிரச்சினைகள் எனக்குப் புதிதல்ல.. புதிய, புதிய பிரச்சினைகளை அன்றாடம் எதிர்கொள்வதென்பது எனது தினப்படியான வேலைதான் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

இப்போது சில நாட்களாக இன்னுமொரு பிரச்சினை.


திடீரென்று எனது வலைப்பதிவுத் தளம் திறப்பதற்கு ரொம்பவே சண்டித்தனம் செய்கிறது. அடங்க மறுக்கிறது. சொன்ன பேச்சு கேட்கமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது. நானும் எப்படியெல்லாம் கெஞ்ச வேண்டுமோ..? எப்படியெல்லாம் கொஞ்ச வேண்டுமோ அதையெல்லாம் செய்துவிட்டேன். ம்ஹும்.. எனக்கு கரிசனம் காட்ட மறுக்கிறது தளம்.

எனது பதிவுகளுக்கு வரும் பதிவர்களும் இதையே சொல்லிச் சொல்லிக் காட்டி, இப்போது எனக்கு வந்த இந்த வைரஸ் தலைவலி, எனது கிட்னிவரைக்கும் பாய்ந்துவிட்டது.

எனது வலைப்பூவின் உள்ளே ஏதோ ஒரு வைரஸ் புகுந்துதான் இப்படி ஆட்டி வைப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அந்த வைரஸின் பெயர் [[[cicak.socmedia.com.my.]]]

இந்தப் பெயர் கொண்ட தளத்தை அப்டேட் செய்வதாகக் கூறித்தான் எனது தளம் குறைந்தபட்சம் 3 நிமிடங்களாவது ஸ்தம்பித்துப் போய் நிற்பதாக அண்டார்டிகாவில் இருந்து அலாஸ்கா வரையிலான நமது பதிவர்கள் புகார் அனுப்பியுள்ளனர்.

என்னுடைய இயங்குதளத்தின் html file-ல் இரண்டு இடங்களில் இந்த வைரஸ் ஒளிந்துள்ளது.

அதனை நான் எப்படியெல்லாமோ நீக்கிப் பார்த்துவிட்டேன். முடியவில்லை. நீக்கிய பின்பு save ஆக மறுக்கிறது. அதற்கு மேல் என்னதான் செய்வது என்று எனக்கும் தெரியவில்லை.

இந்த ஜாவா ஸ்கிரிப்ட்டை நீக்கும் வழிமுறைகளைப் பற்றி கழகத்தின் கண்மணிகள் யாரேனும் சொல்லிக் கொடுத்தால், அது வொர்க்அவுட் ஆகி வெற்றி பெற்றால், அவர்களது பெயரில் வடபழனி முருகன் கோவிலில் அன்னதானமும், அங்கபிரதட்சணையும், பால் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், உடல் முழுவதும் அலகு குத்தி ஊர்வலம் வருவது, தங்கத் தேர் இழுப்பது என்று சகலத்தையும் எனது அருமை தம்பி மாநக்கல் சிபி செய்யக் காத்திருக்கிறான் என்பதையும் மறவாமல் ஞாபகப்படுத்துகிறேன்..

விரைந்து ஓடி வந்து தீர்வைச் சொல்லுங்கள் தோழர்களே..