|
Tweet |
கமல்-ஸ்ரீவித்யா காதல் கதையா.. 'திரைக்கதா' மலையாளத் திரைப்படம்..?
Posted by உண்மைத்தமிழன் at 43 comments
Labels: கமல்ஹாசன், சினிமா விமர்சனம், திரைக்கதா, பிரியாமணி, ஸ்ரீவித்யா
நெஞ்சம் மறப்பதில்லை - இயக்குநர் ஸ்ரீதர்
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என்னுடைய சிறிய வயதில் நான் பார்த்த பிரம்மாண்டமான திரைப்படங்களே திரையுலகம் பற்றிய ஒரு மாயையை எனக்குள் தோற்றுவித்திருந்தது.
அந்த வரிசையில் ஒரு மதியானப் பொழுதில் திண்டுக்கல் சென்ட்ரல் திரையரங்கில் நான் பார்த்த “சிவந்த மண்” என்கின்ற திரைப்படம் எனக்குள் ஏனோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றது.. எப்படி இத்தனை நாடுகளுக்குப் போய், இவ்வளவு செலவு செய்து, இத்தனை ஜோடனைகள் செய்து, அரங்குகள் அமைத்து செலவு செய்து படத்தை எடுத்தார்கள் என்ற சிந்தனை, திரைப்படம் பற்றிய அறிவு எனக்குள் விளைந்த நாளிலிருந்தே தோன்றியிருந்த ஒன்று.
அப்போது ஸ்ரீதர் என்கிற இயக்குநர் மிகப் பிரம்மாண்டமான இயக்குநர் என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். பின்னாளில் எனது அம்மாவுடன் ஒரு நாள் அதே சென்ட்ரல் திரையரங்கில் “போலீஸ்காரன் மகள்” திரைப்படத்தைக் காண நேர்ந்தபோது ஸ்ரீதரின் பெயர் மறுபடியும் வீட்டில் உச்சரிக்கப்பட்டபோது அந்த இயக்குநர்தான் இவர் என்பதும் எனக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
திரையுலகம் எனக்குள் வண்ணமயமான கனவுகளைக் கலைத்துப் போட்டுக் கொண்டிருந்தபோதுதான் ஸ்ரீதர் பற்றி மேலும் அறிந்தேன்.
டி.கே.சண்முகம் அண்ணாச்சியால் “ரத்தபாசம்” என்கிற திரைப்படத்தின் வசனகர்த்தாவாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ஸ்ரீதர் அடுத்தத் தலைமுறையின் தமிழ்த் திரைப்பட இயக்குநர்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழப் போகிறார் என்று சண்முகம் அண்ணாச்சிக்கே நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அவர் திரைப்படங்கள் இயக்கத் தொடங்கிய காலக்கட்டத்தில் ஒரு புதுமையைச் சேர்க்க விரும்பித்தான் செட் பிராப்பர்ட்டீஸ் என்றழைக்கப்படும் பொருட்களையே ஒரு குறியீடாக, கதாபாத்திரங்களாக பயன்படுத்தத் தொடங்கினார்.
“கல்யாணப் பரிசு” திரைப்படத்தில் அவர் காதலர்களுக்காக ஆரம்பித்து வைத்த ஒற்றை வரி வசனம் காலம் கடந்தும் இன்றைக்கும் காதலர்களால் மறக்க முடியாத வசனமாக உள்ளது. “அம்மா நான் காலேஜ்க்கு போயிட்டு வரேன்..” என்று சரோஜாதேவி தனது காதலருக்காக ஊருக்கே கேட்கும் அளவுக்குச் சொல்லிவிட்டுச் செல்லும் காட்சி இன்றைக்கும் “கல்யாணப் பரிசு” படத்தின் மையமான காட்சியாக உள்ளது.
வெறும் வாய் வார்த்தைகளால் சிரிக்க வைத்துவிட்டு திரையரங்கைவிட்டு வெளியில் வந்தவுடன் மறந்துவிடக் கூடியதல்ல இவருடைய திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகள். அனைத்தும் மீண்டும், மீண்டும் அசைபோட வைக்கும் ரகங்கள்.
அந்த “பைரவர்” கேரக்டரில் வாழ்ந்து காட்டிய தங்கவேலுவையும், அவர் தம் துணையையும் இன்றைக்கும் நம் ஊரில், நம் தெருவில், நம் வீட்டில் என்றைக்காவது ஒரு நாள் நாம் நிச்சயம் காண முடியும். காலம் கடந்து நிற்கிறதே “கல்யாணப் பரிசின்” காட்சிகள்..
அத்திரைப்படத்தின் இறுதிக் காட்சியைப் பலவாறாக யோசித்து வைத்து ஒரு துன்பவியல் நாடகம்போல் ஆக்கியிருந்தார் ஸ்ரீதர். அதனை பல இயக்குநர்கள் பார்த்தும், விநியோகஸ்தர்கள் பார்த்தும் முடிவை மாற்றும்படி சொல்லியும் “முடியாது.. பரீட்சித்துப் பார்ப்போம்” என்று சொல்லி அதனையே வைத்து வெற்றியும் கண்டார். அந்த முடிவு தமிழ்ச் சினிமாவின் வழக்கமான வெற்றி, அல்லது இணைதல் என்பதற்கு மாற்றாக முதல் எடுத்துக்காட்டாக அமைந்தது.
“வெளில எங்கேயும் போக வேண்டாம்.. ஒரேயொரு செட்டுதான் படமே..” என்று முடிவெடுத்து 17 நாட்களில் படத்தை எடுத்து முடித்தார் “நெஞ்சில் ஓர் ஆலயத்தை”..
“சொன்னது நீதானா..” பாடல் காட்சியில் கேமிரா டாப் ஆங்கிளில் இருந்து இறங்கி முத்துராமன் அமர்ந்திருக்கும் கட்டிலுக்கு அடியில் சென்று அந்தப் புறமாக எழுந்து மேலே செல்கின்ற வித்தையை இன்றைக்கும் ஒளிப்பதிவாளர்கள் வியந்து பார்க்கிறார்கள்.
“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை”, “எங்கிருந்தாலும் வாழ்க” என்கின்ற காவியப் பாடல்களை கவியரசர் கண்ணதாசன் படைப்பதற்கு முதல் காரணமாகத் திகழ்ந்துள்ளார் என்பதே இயக்குநர் ஸ்ரீதருக்கு பெருமை சேர்க்கக் கூடிய விஷயம்.
இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து எடுத்த “நெஞ்சம் மறப்பதில்லை” ஒரு தோல்விப் படமாக அமைந்துவிட்ட போதிலும் அதிலும் பாடல்கள் மிக, மிக பிரபலம். தேவிகாவின் நடிப்பில் ஒரு எல்லைக் கல் இந்தப் படமே என்று சொல்லலாம்.
வாழ்க்கையில் தோற்றுக் கொண்டே செல்பவர்களுக்காக ஒரு பொன்னான ஊக்க வரிகளை கவியரசரின் மூலமாக எழுத வைத்த ஸ்ரீதரை நாம் என்றென்றைக்கும் மறக்கவே கூடாது.. என்ன ஒரு பாடம் அந்தப் பாடல்.. “மயக்கமா கலக்கமா? மனதிலே கலக்கமா? வாழ்க்கையில் நடுக்கமா?” என்றென்றைக்கும் ஊக்க சக்தியை அளிக்கிறது இப்பாடல். “சுமைதாங்கி” படத்தில் ஜெமினி கணேசன் காட்டிய உருக்கத்தை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. எந்தவிடத்திலும் பின்னணி இசையை அநியாயத்திற்கு உயர்த்தி செலவிடாமல் அளவாகக் காட்டி சோகத்தின் முகமூடியைக் கழட்டிக் காண்பித்தத் திரைப்படம் இது.
முற்றிலும் புதுமுகங்களை வைத்து அவர் உருவாக்கிய “வெண்ணிற ஆடை”யில் நடித்த அனைவரும் இன்றைக்கும் ஏதோ ஒருவகையில் பேசப்பட்டவர்களாக உருமாறிவிட்டார்கள். ஸ்ரீகாந்த், நிர்மலா, ஜெயலலிதா, மூர்த்தி என்கிற இந்த இளைய பட்டாளத்தை வைத்து ஒரு சோதனை முயற்சியாக எடுத்த அத்திரைப்படம் பெரும் வெற்றியடைந்து நல்ல கதையும், இயக்குநரும் கிடைத்தாலே போதும்.. புதுமுகங்களை வைத்து திரைப்படம் துவக்கலாம் என்று தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய தைரியத்தையும் முன் உதாரணத்தையும் தந்தது.
தமிழ்ச் சினிமாவில் ஒவ்வொரு இயக்குநரும் ஒவ்வொரு விதமாகத் திரைப்படங்களை இயக்கியிருந்தாலும், ஒவ்வொருவரும் தத்தமது திரைப் பயணத்திலும் நீண்ட முடிவுறாத தனித்தன்மை வாய்ந்த ஒரு சாதனையை உருவாக்கிவிட்டுத்தான் சென்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் ஸ்ரீதர் கொடுத்த மறக்க முடியாத இன்னொரு சினிமா “காதலிக்க நேரமில்லை.”
“உண்மையாகவே இதுதான் சினிமா” என்று அப்போதே ‘கல்கண்டு’ பத்திரிகையில் விமர்சனம் எழுதப்பட்டிருந்தது. எது சினிமா? ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும்? அது பொழுது போக்குக்காகவா அல்லது பிரச்சாரத்திற்காவா என்றெல்லாம் கேள்விகள் எழக்கூட இடம் தராமல் முற்றிலும் புதியதொரு அனுபவத்தை தமிழ் ரசிகர்களுக்குக் கொடுத்தது அத்திரைப்படம்.
இயக்கம் என்பது சாதாரண விஷயமல்ல. ஒரு நடிகரை அழைத்து வந்து, “இந்த டயலாக்கை உங்க பாணில பேசிருங்க. அவ்ளோதான்..” என்று சொல்லிவிட்டு “ஸ்டார்ட், கேமிரா, ஆக்ஷன்” என்று சொல்வதல்ல இயக்கம். அந்த நடிகரிடம் இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பு வெளியாகுமா என்று முழுமையாகத் தெரிந்து வைத்திருந்து அதன் பின் அவர்களிடமிருந்து நடிப்பை வரவழைப்பதே இயக்கம்.
முற்றிலுமாக இதனை இத்திரைப்படத்தில் சாதித்திருந்தார் ஸ்ரீதர். முதலில் ரவிச்சந்திரன் வேடத்தில் ஜெய்சங்கரைத்தான் நினைத்திருந்தாராம். பின்புதான் திடீரென்று மனம் மாறி ரவிச்சந்திரனை புக் செய்திருக்கிறார். இதில் இவருடைய கனகச்சிதமான தேர்வுகள் பாலையாவும், நாகேஷ¤ம்.
இப்போதும் மறக்க முடியவில்லை. எப்போதும் முடியாத அளவுக்கு ஒரு 5 நிமிட காட்சியை அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார் ஸ்ரீதர்.
ஒரு விடுதலைப் போராட்டத்தைக் காட்ட வேண்டி அவர் எடுத்த “சிவந்தமண்” திரைப்படம் அவருடைய திரைப்பட வாழ்க்கையில் ஒரு மாஸ்டர் பீஸ் என்றே சொல்லலாம். இத்திரைப்பட உருவாகிய காலக்கட்டம்தான் அவருடைய திரையுலக வாழ்க்கையில் மிக கஷ்டமான காலமாகிவிட்டது.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அரசியலில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில் வெளிநாடுகளில் ஷ¥ட்டிங் என்று திட்டம் தீட்டிவிட்டு கால்ஷீட் கிடைக்காமல் தவியாய் தவித்துப் போனார். அப்போது அத்திரைப்படத்தில் நடித்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சினைகள் சூழ்ந்து ஒரு கட்டத்தில் படம் நகருமா, நகராதா என்கிற அளவுக்குப் பிரச்சினைகள் வந்தபோதும் மனம் தளராமல் நான் எடுத்தே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து எடுத்துக் காட்டிய திரைப்படம் இது.
இத்திரைப்படத்திற்காக சுவிட்சர்லாந்தில் பாடல் காட்சியை எடுத்துக் கொண்டிருந்தபோது அவருடைய தாயாரின் மரணச் செய்தி அவருக்குக் கிடைத்தது. இருந்தும் தனக்கு இந்தப் படத்தை முடிப்பதுதான் முதல் வேலை என்று கருதி தாயாரின் முகத்தைக் கூடப் பார்க்க வராமல் விட்டுவிட்டார். இந்த ஒரு நிகழ்வு அவருடைய வாழ்க்கையில் பிற்காலத்தில் அவரால் பல முறை பல பேரிடம் சொல்லிச் சொல்லி அழுக வைத்த நிகழ்வாகப் போய்விட்டது.
“சிவந்தமண்” சிவாஜிக்கும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் தோற்றத்தை ஏற்படுத்தியது என்றால் அது நிச்சயம் பொய்யில்லை.. ஸ்ரீதரின் திரைப்பட வரிசையில் இத்திரைப்படம் எந்த இடத்தைப் பிடித்திருந்தாலும் சரி.. தமிழ்த் திரைப்படங்களின் வரிசையில் மிக முக்கியமானத் திரைப்படத்தை இத்திரைப்படம் பிடித்திருக்கிறது. காரணம் படத்தின் கதையும், களமும்தான்..
மிகப் பெரிய பட்ஜெட் என்றில்லாமல் “ஊட்டி வரை உறவு” என்கின்ற நகைச்சுவையை மையமாக வைத்து ஒரு சிறிய படத்தையும் அவரால் எடுக்க முடிந்தது. “இத்திரைப்படத்தில் தன் அழகை வெளிப்படுத்தியதுபோல் வேறு எந்தத் திரைப்படத்திலும் வேறு யாரும் காட்டவில்லை” என்று திருமதி கே.ஆர்.விஜயாவே பிற்காலத்தில் பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
திரைப்பட உலகம் எப்போதுமே ஒரு மாய வலைதான்.. யாரை, எப்போது, எங்கே, எப்படி உச்சாணிக் கொம்பிற்குக் கொண்டு செல்லும் என்பதும், யாரை எங்கே எப்படி குப்புறக் கவிழ்க்கும் என்பதும் யாருக்கும் தெரியாது. ஆனாலும் இந்த இரண்டு வித வாழ்க்கைச் சக்கரத்தில் திரையுலகப் புள்ளிகள் பலரை உருட்டி விளையாடிவிட்டது திரையுலகம்.
30 ஆண்டு காலமாக திரையுலகில் நீடித்திருந்தும் தோல்விப் படங்களால் கடன் சுமையை ஸ்ரீதரின் மேல் ஏற்றி விட்டிருந்தது இத்திரையுலகம். அப்போதுதான் அவர் தனது திரையுலகப் பயணத்தைச் சற்று நிறுத்தியிருந்த நேரம்.
படம் வெளிவந்து எம்.ஜி.ஆருக்கு பெயர் கிடைத்ததோ இல்லையோ.. ஸ்ரீதரின் பெயர் கெட்டது என்னவோ மறுக்க முடியாத உண்மை. கிட்டத்தட்ட அப்போதைய தமிழ்த் திரைப்பட உலகை ஆட்டிப் படைத்த கிளாமர் மோகத்தில், நடிகை லதா காட்டிய அதீத கவர்ச்சியில் ஸ்ரீதரின் பெயரும் ஆட்டம் கண்டு போனது. ஆனாலும் எம்.ஜி.ஆருக்காக மீண்டும் “மீனவ நண்பன்” படத்தினை இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே அவருடைய புகழ் பெற்ற படங்களின் பட்டியலில் வராதது சோகம்தான்.
எம்.ஜி.ஆரை வைத்து எத்தனையோ இயக்குநர்கள் படங்களை இயக்கியிருந்தாலும் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு பாக்கியம் இவருக்குக் கிடைத்தது. 1977-ல் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதலமைச்சராகப் பதவியேற்கும் சூழல் உருவானபோது அப்போது உருவாக்கத்தில் இருந்த “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” படத்தின் சில காட்சிகள் படமாக்கப்படாமல் இருந்தது.
கிடைத்த 10 நாட்கள் இடைவெளியில் எம்.ஜி.ஆர். மீதமிருந்த தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் பதவியேற்றார். அப்போது அந்தப் படத்தினை இயக்கிக் கொண்டிருந்தது ஸ்ரீதர்தான். பதவியேற்பு விழாவுக்கு முதல் நாள்தான் அவருடைய ஷ¥ட்டிங் முடிந்தது. அந்தக் காட்சியை முடித்து வைத்தவர் ஸ்ரீதர் என்பது அவருக்குப் பெருமை சேர்க்கின்ற விஷயம்தான்.
திரைப்படத் துறை மேலும், மேலும் வளர்ச்சியடைந்து வந்து கொண்டிருந்த காலத்தில்கூட சிவாஜி என்னும் நடிகன் மேலிருந்த தாபத்திலும், ஆர்வத்திலும், அவருடைய புகழையே மங்கச் செய்யும் அளவுக்கு மிக மிக சாதாரணமான திரைப்படங்களை பலரும் இயக்கிக் கொண்டிருந்த காலக்கட்டத்திலும் ஸ்ரீதர் தன்னுடைய பழைய பாணி இயக்கத்திலிருந்து மாறவும் தைரியம் கொண்டிருந்தார்.
சிவாஜி-எம்.ஜி.ஆர். என்ற இரட்டைச் சக்கரவர்த்திகளைப் போல் தமிழ்த் திரையுலகம் கமல்-ரஜினி என்ற இரண்டு சூப்பர் ஸ்டார்களின் வசீகர வளையத்தில் சிக்கத் தொடங்கியபோது அதனையும் தனது பாணியில் பயன்படுத்தத் தவறவில்லை ஸ்ரீதர்.
“தென்றலே என்னைத் தொடு” படத்தின் வெளியிட்டீன்போது “யாரோ ஸ்ரீதராம்ல.. மோகனை வைச்சுப் பண்றாராம்..” என்று அப்போதுதான் பரவலாகப் பரவியிருந்த புத்தம்புது மஞ்சள் வியாபார விநியோகஸ்தர்களிடையே பேச்சு இருந்தது. இளையராஜாவின் இன்னிசையால் படம் வழக்கம்போல பிய்த்துக் கொண்டு போன போதுதான் ஸ்ரீதரின் பழைய ஜாதகமும் தோண்டி எடுக்கப்பட்டு பேசப்பட்டது.
‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’.. ‘ஒரு ஓடை நதியாகிறது’.. இந்த இரண்டு திரைப்படங்களின் பாடல்களை மட்டுமே நான் கேட்டுள்ளேன்.. அசத்தல் பாடல்கள். ஸ்ரீதர் ஆரம்பக் காலத்திலிருந்தே தனது திரைப்படங்களின் இன்னொரு கதாபாத்திரமாக உருவாக்கி வைத்திருந்தது திரையிசைதான்..
‘கல்யாணப் பரிசு’ தொடங்கி ‘தந்து விட்டேன் என்னை’ வரையிலுமான இவரது திரைப்பயணத்தில் அற்புதமானத் திரைப்படப் பாடல்களை ஸ்ரீதர் தொகுத்து வழங்கியிருப்பது, தமிழ்த் திரைப்படத் துறைக்கு இவர் செய்திருக்கும் மிகப் பெரிய உதவியும்கூடத்தான் என்பதனை யாராலும் மறுக்க முடியாது.
ஸ்ரீதரின் இயக்கத்தில் நான் பார்த்து பிரமித்த திரைப்படங்களைத்தான் இங்கே பட்டியலிட்டுள்ளேன். பார்த்தும் விரும்பாத படமும் ஒன்று உண்டு. அது ‘நானும் ஒரு தொழிலாளி’.
முதல் இரண்டு ரீல்களில் அம்பிகா எல்.கே.ஜி. மாணவிபோல் இருப்பார். அதே போலத்தான் கமலஹாசனும். அடுத்த நான்கு ரீலுக்கு யு.கே.ஜி. பின்பு ஒன்றாம் வகுப்பு என்று காலம் கடந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு ரீலாக எடுக்கப்பட்ட படம் என்பதனை மேக்கப்பே காட்டிக் கொடுத்தது என்றாலும், இத்திரைப்படத்தின் பாடல்களும் தேனிசை. மறக்க முடியாத பாடல்கள்.
கடைசியாக அவர் எடுத்த ‘தந்து விட்டேன் என்னை’ என்கிற திரைப்படத்தில்தான் விக்ரம் அறிமுகமானதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. “விக்ரமை வைத்து தான் மீண்டும் ஒரு திரைப்படம் செய்வேன்” என்று அவ்வப்போது பத்திரிகையாளர்களிடமும், பார்க்க வருபவர்களிடமும் சொல்லிக் கொண்டுதான் இருந்தார் ஸ்ரீதர். ஆனால் விக்ரம் இதுவரையில் ஸ்ரீதரைப் பற்றி எந்த வார்த்தையும் சொல்லாமல் இருப்பது(ஒரு வேளை எனக்குத் தெரியாமல் இருக்கலாம்) ஏன் என்பதுதான் புரியவில்லை.
இயக்குநர் ஸ்ரீதருக்கு திரையுலகிலும் பலமான வாரிசுகள் உண்டு. முதலிடம் இயக்குநர் இமயம் பாரதிராஜா. சில ஆண்டுகள் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். அடுத்து குறிப்பிடத்தக்கவர்கள் வாசுவும், சந்தானபாரதியும்.
திடீரென்று ஒரு நாள் பக்கவாதம் தாக்கி அவரை முடக்கிப் போட்டது. அந்த ஒரு நாளில் அவருடைய அனைத்துமே முடங்கிப் போனது. அன்றிலிருந்து நேற்றுவரையிலும் அவர் மரணத்தை எதிர்கொண்டபடியேதான் இருந்தார். மருத்துவமனையில் அவர் நினைவிழக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறார் என்பதை உணர்ந்து மருத்துவர்கள், எந்தவொரு முக்கியப் பிரமுகர்கள் அவரைப் பார்க்கச் சென்றாலும், அவரிடம் பழைய கதைகளை சிறிது நேரமாவது பேசும்படி பணிக்கப்பட்டார்கள்.
அப்படித்தான் கொஞ்சம், கொஞ்சமாக அவர் மறுபடியும் இயக்குநர் ஸ்ரீதராக உருவெடுக்கப்பட்டார். பெற்ற தாயாருக்கு இறுதி மரியாதை செலுத்தக்கூட வர முடியாத சூழலுக்குள் தள்ளப்பட்டதை, இந்தக் காலக்கட்டத்தில்தான் தன்னைச் சந்திக்க வந்த அத்தனை பேரிடமும் சொல்ல முற்பட்டதை கண் கலங்கச் சொல்கிறார்கள் அவருடைய நேசிப்பாளர்கள்.
குடும்பம், மனைவி, மக்கள் ஏன்? எதற்கு? என்று கேட்பவர்களுக்கு மிகப் பெரிய உதாரணத்தை உருவாக்கித் தந்திருக்கிறார் ஸ்ரீதர்.
எத்தனையோ பணக்காரர்கள் வீட்டில், வயதான பெரியவர்களை மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு நர்ஸ்களை சம்பளத்திற்கு வேலைக்கு வைத்துவிட்டு அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்கப் போகும் சூழல் உள்ள நிலையில்(விஜயா-வாஹினி ஸ்டூடியோ அதிபர் திரு.நாகிரெட்டி தனது கடைசிக் காலங்களில் தான் உருவாக்கிய விஜயா மருத்துவமனையிலேயே ஒரு அறையில் இப்படித்தான் முடங்கிப் போய் கிடந்தார்) தன் கண்ணின் மணி போல கணவரை கடைசி வரையில் தனது இல்லத்தில் பாதுகாத்து வந்தவர் தேவசேனா. இதனால்தான் சமீப காலமாக நடிகர் சிவக்குமாரும், இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் “பெண்மையின் அடையாளமாகத் திகழ்கிறார் தேவசேனா” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்தப் பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அவரை குழந்தை போல பாவித்து வந்தது முதல், மருந்து, மாத்திரை கொடுத்து கவனித்து வந்து, சொல்வதே புரியாத நிலையில் அவர் சொல்வதைப் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது என்றும், அவர் பார்க்க விரும்புகிறவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு “ஸார் பார்க்கணும்கிறார்.. கொஞ்சம் வர முடியுமா?” என்று கேட்டு அவர்களை வரவழைத்து, கணவரின் சிறிது நிமிட சந்தோஷத்தையும் அந்த நேரத்தில் பூர்த்தி செய்த அவருடைய மனைவி தேவசேனாவை தெய்வம் என்றே சொல்லலாம்.
“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
என்ற வரிகளை ஸ்ரீதர்தான் தனது “சுமைதாங்கி” திரைப்படத்திற்காக கவியரசர் கண்ணதாசனிடம் கேட்டு வாங்கியவர்.
அவருடைய ஆன்மா சாந்தியாகட்டும்..
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 21 comments
Labels: இயக்குநர் ஸ்ரீதர், கண்ணதாசன், சினிமா, திண்டுக்கல்
குசும்பனாருக்கு நன்றியும், பதில் பதிவும், இரண்டு கேள்விகளும்..!
14-10-2008
என் இனிய வலைத்தமிழ் மக்களே..
நமது செல்லக் குசும்பன் தனது குசும்புத்தனத்தின் அடுத்தக் கட்டமாக சினிமாவிலும் கை வைத்து அதகளப்படுத்தியிருக்கிறார். அமர்க்களமான காமெடி.. கூடவே என்னையும் துணைக்கு அழைத்திருக்கிறார். மறவாமல் இருப்பதற்கு, இருந்ததற்கு நன்றி குசும்பா..
அதிர்ஷ்டவசமாக முருகன் அருளால் நேரமும் கிடைக்கப் பெற்று இதோ எனது சினிமா தொடர்பான பதிவு.. எந்தப் புண்ணியவான் ஆரம்பித்தாரோ தெரியவில்லை.. அவரை பாதம் தொட்டு வணங்குகிறேன். தொடர்ந்து பதிவர்கள் பலரும் எழுதி வருபவைகள் அனைத்துமே புதிய, புதிய விஷயங்களை, மறந்து போயிருந்த பல ஆட்டோகிராப் கதைகளை ஞாபகப்படுத்தி வருகின்றன.
நன்றி.. நன்றி.. நன்றி..
இனி எனது பதில்கள்..
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
எந்த வயது என்று சரியாகத் தெரியவில்லை. 5 அல்லது 6 இருக்கும் என்று நினைக்கிறேன். திண்டுக்கல் சென்ட்ரல் தியேட்டரில் ஒரு மதியானக் காட்சியில் 'பாலும் பழமும்' படத்தினை பார்த்தது நினைவிருக்கிறது. காரணம், அதில் இடம் பெற்ற காலத்தால் அழிக்க முடியாத பாடலான "போனால் போகட்டும் போடா" என்ற பாடலில் இந்த வரிகளை மட்டும் அடுத்த சில நாட்களுக்கு உளறிக் கொண்டேயிருந்தேன் என்று எனது அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சென்னை தேவி திரையரங்கில் 'ராமன் தேடிய சீதை'.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சமீபமாக ஊருக்குச் செல்லும்போது பேருந்தில் 'கில்லி' போட்டார்கள். பாதி பார்த்து மீதியில் தூங்கினேன்.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச சினிமா!
‘பாசமலர்’. எத்தனை முறை பார்த்திருந்தாலும் சரி.. எத்தனையோ தடவைகள் கேட்டிருந்தாலும் சரி.. "கை வீசம்மா கை வீசு.. கடைக்குப் போகலாம் கை வீசு.." என்ற வசன வரிகளைக் கேட்டவுடன், குபுக்கென்று கண்களில் நீர் முட்டுகிறது. ஏன் என்றுதான் தெரியவில்லை.
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?
‘முதல்வன்’ படத்தினை ஓட விடாமல் செய்ய மதுரையில் உடன்பிறப்புகள் நடத்திய ரெளடித்தனம். நான் அப்போது மதுரையில்தான் குடியிருந்தேன். முதல் நாள் 5 ஷோக்களுக்குமே டிக்கெட் கிடைக்காமல் சோகத்தில் இருந்த எனக்கு மறுநாள் மதியம் 2 மணிக்கு என் வீட்டு கேபிள் டிவியில் ‘முதல்வன்’ டைட்டிலைப் பார்த்தவுடன் அடைந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை..
அதன் பின் நடந்த 'பாபா' படப் பெட்டி விவகாரம், இப்போது 'காதலில் விழுந்தேன்' விவகாரத்திற்கெல்லாம் மனம் ஏற்கெனவே கல்லாகிப் போய்விட்டிருந்ததால் வலி உணரவில்லை.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
'மைடியர் குட்டிச்சாத்தான்'.. 3D என்றொரு வார்த்தையை அன்றைக்குத்தான் கேள்விப்பட்டேன். சிறார்களுக்கே உரித்தான மனப்பாங்கில் கண்ணாடியை சந்தோஷமாக வாங்கிக் கொண்டு ஈட்டி குத்த வரும்போது ‘கிலீர்’.. ‘கிலீர்’.. என்று சிரித்த சந்தோஷம் பாருங்கள்.. அப்பச்சனை ஆயுள் உள்ளவரை மறவேன்..
6. தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
நிறைய.. ஒருவர் விடாமல் வாசித்து வருகிறேன். எனது புத்தக தேர்வுகளில் 75 சதவிகிதம் சினிமா பற்றிய பத்தகங்கள்தான். அதிலும் அறந்தை நாராயணன் எழுதிய ‘தமிழ்ச் சினிமாவின் வரலாற்றைப்’ படிக்கத் தவறிவிடாதீர்கள்.
7. தமிழ் சினிமா இசை?
எனது முதல் இசை ஆசான் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான். அவருக்குப் பின் ‘திருவிளையாடல்’ படத்திற்காக திரு.கேவி.மகாதேவன், ‘தெய்வம்’ படத்திற்காக திரு.குன்னக்குடி வைத்தியநாதன்.. மற்றபடி அடுத்த இடம் சந்தேகமே இல்லாமல் இசைஞானிதான்.. பிற்காலத்திய தமிழ் இசையின் பொற்காலம் இசைஞானி ஆட்சி புரிந்த காலம்தான்.. இப்போது எல்லாமே உடான்ஸ்தான்..
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
நிறைய.. இப்போதெல்லாம் தொழிலே இதுதான். அதிகம் பாதித்தப் படங்களின் எண்ணிக்கை அதிகம்.. சில படங்களின் பெயர்கள் ஞாபகமில்லை. அதிகம் ஸ்காண்டிநேவியன் நாடுகளின் திரைப்படங்கள்தான். சமீபகாலமாக ஈரானியத் திரைப்படங்கள்..
9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித் தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ் சினிமா மேம்பட அது உதவுமா?
நிறைய.. சொல்வதற்கு இது நேரமில்லை. பக்கமும் பத்தாது.. நான் சினிமாத் துறையில் உன்மத்தமாக உள் நுழைந்தால் சினிமா மேம்படுமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் நான் மேம்படுவேன்.
10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நிச்சயம் பெரியதொரு எதிர்காலம், புதுமை படைக்கவிருக்கும் இயக்குநர்களால் வழி நடத்தப்படும். ஒரு படத்திற்கு 40 லட்சம் வாங்கும் கமர்ஷியல் இயக்குநர்கள் ஒரு கட்டத்தில் சரக்கு தீர்ர்ந்தவுடன் நீக்கப்படுவார்கள். புதிய கமர்ஷியல்கள் வரும்.. ஆனால் அதே சமயம் அமீர், பாலா, சேரன், சசிகுமார் போன்றவர்களின் வாரிசுகள் தமிழ்ச் சினிமா மீதான காதலை நம்மிடமிருந்து நீங்காமல் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
மக்களுக்கு நிறைய பணம் மிச்சமாகும். அதே சமயம் வழிப்பறி, கொள்ளைகள், திருட்டுக்கள், கொலைகள் அதிகமாகும். சினிமா தியேட்டரில் கொண்டாட வேண்டியவர்களெல்லாம் தெருவுக்கு வருவார்கள். பீச்சில் கால் வைக்க முடியாது.. கட்சிக்காரர்களுக்கு எளிதாக தொண்டர்கள் கிடைப்பார்கள். தப்பித் தவறி அன்றைய வருடத்தில் தேர்தல் நடந்தால், அப்போதைக்கு யார் ஆள்பவர்களாக இருந்தாலும் அவர்கள் நிச்சயம் தோற்பார்கள்.
அதே சமயம் சினிமாவை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பிச்சையெடுப்பார்கள். அல்லது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வார்கள். ஏனெனில் அவர்களுக்குத் தெரிந்தது அந்த சினிமா தொழில் மட்டும்தான். வேறெதுவும் இல்லை..
- - - - - - - - - - - - - - - - - - - -
குசும்பா... எனது பணி முடிந்தது. ஆனால் அழைக்க வேண்டியவர்கள் பட்டியலை யோசித்து யோசித்துப் பார்த்தேன். பலரும் பலவித வழிகளில் நண்பர்களாகி அழைப்பை ஏற்ற வண்ணம் இருக்கிறார்கள்.. இதுவரையிலும் யார், யார் எழுதியிருக்கிறார்கள்.. யார் எழுதவில்லை என்பதையெல்லாம் பட்டியல் எடுத்த பின்புதான் நான் எனது நண்பர்கள் பட்டியலை தயார் செய்ய வேண்டும். அதற்கெல்லாம் குசும்பா... மன்னித்துக் கொள்.. எனக்கு சத்தியமாக நேரமில்லை..
எனக்குப் பதிலாக நீயே இன்னொரு பதிவு போட்டு அழைத்துவிடு.. அனைவரையும் எனது நண்பர்களாக்கிவிடு.. புண்ணியம் கிடைக்கும்..
கேள்வி-1 : நான் கேட்ட நூல் விமர்சனம் எங்கே..?
கேள்வி-2 : இந்த 'சினிமா தொடர் சுற்றைப்' போலவே 'ராமன் தேடிய சீதை' படம் போல் "பதிவர்கள், தாங்கள் பெண் பார்த்த.. அல்லது மாப்பிள்ளை பார்த்த சம்பவங்களை" விவரிக்கலாமே.. காமெடியாக இருக்குமல்லவா..? கூடவே என்னைப் போன்ற அனுபவம் இல்லாதவர்களுக்கு ஒரு அட்வைஸ் கிடைக்குமே.. என்ன சொல்ற..? முதல் போணியை நீயே ஆரம்பித்து வைத்துவிடு..
வாழ்க வளமுடன்
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 36 comments
Labels: அனுபவங்கள், குசும்பன், சினிமா, சினிமா அமைப்புகள், பதிவர் வட்டம்
புகைப்படம் புகட்டும் நீதி..!
10-10-2008
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நல்ல விஷயங்களை யாரிடமிருந்தாலும் கற்றுக் கொள்வதில் நாம் தவறக் கூடாது. நம் கலாச்சாரம்தான் உயர்ந்தது; மற்றைய கலாச்சாரங்களில் கற்றுக் கொள்ள ஏதுமில்லை. என்று சொல்லி எதையும் ஏறெடுத்துப் பார்க்காமல் புறக்கணித்தால் நமக்குத்தான் நஷ்டம்.
நியூஜெர்ஸியில் இருக்கும் எனதருமைத் தம்பி செந்தில்குமார் ஒரு புகைப்படத்தை ஈ-மெயிலில் அனுப்பி “அண்ணா.. போட்டோவைப் பார்.. செய்தியைப் படி.. உனக்கேற்றதுதான்..” என்று சொல்லியிருந்தான்.
அந்தப் புகைப்படம் இது.
படத்தில், படகில் மீன் பிடித்துக் கொண்டிருப்பது பிரபல ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிஸ். அவருக்குப் பின்புறமாக அமர்ந்திருப்பவர் ஹாலிவுட் நடிகர் ஆஸ்டின் ஹட்ச்சர். அவர் மடியில் அமர்ந்து ரொமான்ஸ் மூடில் அவரைக் கொஞ்சிக் கொண்டிருப்பது புரூஸ் வில்லிஸின் முன்னாள் மனைவியும், ஹட்ச்சரின் தற்போதைய மனைவியும், ஹாலிவுட் நடிகையுமான டெமிமூர்.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா..?
நம் ஊரில் டைவர்ஸ் வாங்கியவர்களில் 90 சதவிகிதத்தினர் “என் மூஞ்சில நீ முழிக்கக் கூடாது.. உன் மூஞ்சில நான் முழிக்க மாட்டேன்” என்று ‘மங்கம்மா சபதம்’ போட்டுத்தான் பிரிகிறார்கள். அதிலும் குழந்தைகளை வைத்துக் கொண்டு டைவர்ஸ் ஆனவர்களின் நிலைமைதான் இதில் மிக, மிக சிக்கலில் கொண்டு போய் விடுகிறது.
“குழந்தைகளை நான்தான் வைத்துக் கொள்வேன்” என்று சொல்லி அப்பா, அம்மா இருவரும் கோர்ட் படியேறி சண்டையிடுவது டைவர்ஸிற்கு அடுத்தக் கட்ட மோதலாக இருக்கிறது. “குழந்தைகள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் அப்பாவுடன் இருக்கலாம்..” என்பதுதான் பெரும்பாலான இது போன்ற வழக்குகளின் தீர்ப்பாக உள்ளது.
இதற்குப் பின் அவரவர் தத்தமது போக்கில் வேறு, வேறு திருமணங்களைச் செய்து கொண்டு போனாலும், குழந்தைகளின் நிலைமைதான் மிகவும் வருத்தத்திற்குரியது. வாரத்தில் சனி, ஞாயிறுகளில் மட்டும் அப்பாவைச் சந்திக்க வருவதும், மீதி நாட்களில் அம்மாவுடன் வாழ்வதுமாக ஒரு நாடோடி வாழ்க்கையை சந்திக்க வேண்டியிருக்கிறது.
ஏதாவது ஒரு பள்ளி நிகழ்ச்சி, உறவுக்காரர்கள் நிகழ்ச்சி என்றால்கூட பிள்ளையைப் பெற்றவர்கள் ஒன்றாக கலந்து கொள்ள முடியாத சூழல். “அவ வந்தா நான் வர மாட்டேன்..”; “உன் அப்பன் வந்தா நான் வர மாட்டேன்” என்று ஆளுக்கொரு பக்கமாக குழந்தைகளை இழுத்துக் கொண்டு இம்சிப்பது தொடர்கதையாகத்தான் இருந்து வருகிறது.
ஏன்.. எங்காவது நேருக்கு நேர் சந்திக்கின்ற சூழல் வந்தாலும்கூட கவனமாகத் தவிர்த்துவிட்டுத்தான் போகிறார்கள். சொல்கின்ற காரணம் “அப்படியொரு நபரை நான் சந்திக்கவே இல்லை என்று நினைத்துக் கொள்கிறேன்” என்கிற அளவுக்கு அவர் மீதான காழ்ப்புணர்வை அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். இது போகப் போக அவர்களுடைய குழந்தைகள் மீதும் செலுத்தப்பட்டு யாரும், யாரையும் நம்பாத சூழல்தான் சமூகத்தில் உருவாகி வருகிறது.
இங்கே கதையோ அப்படியே நேர்மாறாக நடந்திருக்கிறது.
புரூஸ் வில்லிஸோ “இதில் என்ன ஆச்சரியம்?” என்கிறார்.
“எனது மூன்று பெண் குழந்தைகளுக்கும் ஸ்டெப் பாதர் ஹட்ச்சர்தான். குழந்தைகள் பிக்னிக் போக வேண்டும் என்றார்கள். தனித்தனியே போவதென்றால் குழந்தைகளுக்கு வசதிப்படாது. எல்லாரும் ஒண்ணாவே போவோம் என்று சொல்லி கிளம்பிவிட்டோம். டெமி என்னைவிட்டுப் பிரிந்தாலும், என்றென்றும் எனது காதலுக்குரியவர்.. குழந்தைகளுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம்.. தப்பில்லை” என்கிறார் வில்லிஸ்.
நிச்சயம்.. பாராட்டக்கூடிய அதே சமயம் நாமும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்..
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 42 comments
Labels: அனுபவங்கள், ஆஸ்டின் ஹட்ச்சர், சமூகம், டெமிமூர், புரூஸ் வில்லிஸ்
புகையிலையை ஒழிப்போம்-அன்புமணிக்கு ஒரு ஆதரவு
|
Tweet |
Posted by உண்மைத்தமிழன் at 26 comments
Labels: அன்புமணி, பதிவர் சந்திப்பு, பதிவர் வட்டம், புகையிலை. சிகரெட்