தங்கை தமிழச்சிக்கு ஒரு வேண்டுகோள்

29-02-2008

அன்புத் தங்கை தமிழச்சிக்கு

இணையத்தளம் கட்டற்றத் தளம்தான் ஒத்துக் கொள்கிறேன்.

வலைத்தளம் என்பது நமது கருத்தை வெளிப்படுத்துவது. விரும்பினால் மற்றவர் கருத்தை எதிர்பார்ப்பது.. அல்லது மற்றவரின் கருத்துக்கு பதில் சொல்வது என்பது அவரவர் விருப்பம்தான்.

ஆனால் எல்லாவற்றிலும் ஒரு நாகரிகம் வேண்டும்..

சக வலைப்பதிவர்கள் என்பவர்கள் மனிதர்கள்தான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சுயமரியாதை உண்டு. அவன் கைதியாகவே இருந்தாலும் சரி.. அல்லது காவல்துறைத் தலைவராக இருந்தாலும் சரி..

உங்களது வீட்டுக்குள் இருந்து கொண்டு உங்களது வீட்டு உறுப்பினர்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் திட்டலாம்.. யாரும் கேள்வி கேட்பார் இல்லை..

ஆனால் ஒரு பொதுத்தளத்தில் வந்து சக மனிதர்களை இப்படி ஏக வசனத்தில், 'டா' போட்டு பேசுவதும், 'போங்கடா' என்றும் 'பொறம்போக்குகளா' என்று ஏசுவதும் எந்த விதத்திலும் நாகரீகமில்லை.

தாங்கள் சொல்ல வந்த கருத்தை தவறு என்று நான் சொல்லவே இல்லை.

அது உங்களது தளம்.. உங்களது இல்லம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுஙகள். கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை.

ஆனால் சக மனிதர்களை, அதிலும் உங்களது பதிவுகளை படிக்கப் போகும் சக வலைப்பதிவர்களை எழுதும்போதும் இப்படித்தான் எழுதுவதா..?

அப்படியானால் தங்கள் மனதைப் பாதித்தச் சம்பவங்களை எழுதிய பதிவர்கள் அனைவரும் முட்டாள்களா..?

இனி எந்தப் பதிவு எழுதினாலும் தங்களைக் கேட்டுக் கொண்டு எதை எழுதலாம், எதை எழுதக்கூடாது என்று அப்ரூவல் வாங்கிக் கொண்டு எழுத வேண்டுமா?

உங்களது பேச்சைக் கேட்காவிட்டால், உங்களது கொள்கைக்கு ஒத்துவராவிட்டால், உடனே 'போடா'.. 'வாடா'.. 'பொறம்போக்கு'.. என்றெல்லாம் பேசுவீர்களா..?

எந்த ஊர் நாகரிகம் இது..?

எங்களுக்கு குறைந்தபட்ச மரியாதையையாவது கொடுங்கள் தாயே..

'சுஜாதா செத்த அன்று ரஜினியும் செத்துப் போயிருந்தால்..' என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். 'நெருப்பு என்றால் வாய் வெந்துவிடுமா?' என்று வழக்குமொழி ஒன்றைச் சொல்வார்கள். அதற்கு உதாரணப்படுத்தியதைப் போல் சொல்லியிருக்கிறீர்கள்.

இது என்ன நாகரிகம் தங்கையே..?

இதுதான் நீங்கள் கற்றுக் கொண்ட பகுத்தறிவா?

அடுத்த மனிதரையும் எப்போது சாகப் போகிறாய் என்று கேட்பதுதான் நாகரிகமோ..?

உங்களுக்குப் பிடிக்கவில்லையெனில் தங்களது கருத்துக்களை வெளியிடலாம்.. ஆனால் வீடு தேடி வந்து சட்டையைப் பிடித்து அடித்து கேட்பது போல் அநாகரிகமாக உள்ளது உங்களது இந்தப் பதிவு.

தயவு செய்து நீக்கி விடுங்கள். அல்லது பதிவை திருத்தி எழுதுங்கள்.

தமிழச்சியின் பதிவுகளை நீக்குக - தமிழ்மணத்திற்கு கோரிக்கை


25-02-2008

அன்புள்ளம் கொண்ட தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு,

தொடர்ந்த சில வாரங்களாக தமிழச்சி என்னும் பதிவர், தான் எழுதி வரும் இடுகைகளில் முழுக்க, முழுக்க பலரும் பொதுத்தளத்தில் பேச முன் வராத வார்த்தைகளை முன் வைத்து எழுதி வருகிறார்.

அது அவரது தனித்தளம் என்றாலும் அதனை எங்களது கண்பார்வைக்குக் கொண்டு வருவது பொதுத்தளமான தமிழ்மணம் என்பதால் இது கவனத்துக்குரியது..

தமிழ் மொழியின் பால் ஈடுபாடு கொண்ட எண்ணற்றத் தமிழர்கள் தங்களது பொன்னான நேரத்தையும், கணிசமான அளவு பணத்தையும் இதற்காக செலவிட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இது போன்ற அடாத பதிவுகளையும் நாங்கள் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. இது எங்களுக்கு தேவையற்ற வேலை என்றே கருதுகிறோம்.

இப்போது அது அளவு கடந்து, பின்னூடமிடுபவர்களைக்கூட ஒரு மனிதராகக்கூட மதிக்கத் துணியாத அளவுக்குச் சென்று கொண்டிருக்கிறது.
இப்படி ஒரு பதிவர் தமிழ்மணத்திற்கு தேவையா என்று நீங்கள் யோசிக்க வேணடும்.

தேவையில்லை என்பதால்தான் இந்த மடல்..

தயவு செய்து தமிழச்சியின் பதிவுகளை திரட்டுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

இந்த செயலே அவருக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.

தொடர்ந்து, அவர் அப்படி எழுதுவதை நிறுத்திக் கொண்டு கோரிக்கை வைத்தால் பின்பு நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

நாம் முன் செல்ல வேண்டிய பாதையின் தூரம் நிறையவே இருக்கிறது. நமது சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டியவைகளும் நிறைய இருக்கின்றன. இந்த நிலையில் இது போன்ற முட்டாள்தனங்களுக்கு நமது சக்தியை செலவிடுவது வீணான செயல்.

ஆகவே, விரைந்து முடிவெடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

சென்னையில் உள்ள திரைப்பட அமைப்புகள் - ஒரு அறிமுகம்

23-02-08

என் இனிய வலைத்தமிழ் மக்களே..
திரைப்படங்கள் பற்றிய எனது பார்வை பல்நோக்கில் பரவிச் சென்றதற்குக் காரணம் நான் உற்று நோக்கிய பல வெளிநாட்டுத் திரைப்படங்கள்தான்..

எனக்கு மட்டுமல்ல, திரைப்பட ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், கலைஞர்கள் என்று பலருக்குமே வெளிநாட்டுத் திரைப்படங்கள்தான் திரைப்படம் பற்றிய ஒரு புரிதலை அவர்களுக்குள் ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஒப்பு நோக்கில் இன்னமும் தமிழ் சினிமா உயர்வடைய தேவையிருக்கிறது என்ற உண்மையும் இருக்கத்தான் செய்கிறது.

பல நாட்டுத் திரைப்படங்கள் மீதான ஆர்வம் சென்னை வாழ் திரைப்பட ரசிகர்களிடையே பெருமளவுக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பதிப்பகங்களின் எண்ணிக்கைகள் கூட, கூட, புத்தகங்கள் உருவாக்குதலும், புத்தக விற்பனையும், புத்தக வாசிப்பும் கணக்கற்ற எறும்புகள் கணக்கில் தமிழ் மண்ணில் ஊர்ந்து போக ஆரம்பிக்கும் இந்த வேளையில்..

திரைப்படத் துறையும் வெகுவேகமாக வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டுதான் இருக்கிறது.

சென்னையில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக தனி அமைப்புகள் மூலம் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது சென்னையில் Madras Film Society மற்றும் ICAF(Internatioanl Cine Appreciation Foundation) என்ற இரண்டு தனியார் அமைப்புகள் நன்கு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவைகள் மாதந்தோறும் குறைந்தபட்சம் 15-க்கும் குறையாத வெளிநாட்டுத் திரைப்படங்களை தனது உறுப்பினர்களுக்காகத் திரையிட்டு வருகின்றன.

தற்போதுகூட பிலிப்பைன்ஸ் நாட்டுத் திரைப்பட விழாவை Madras Film Society-யும், ICAF அமைப்பும் இணைந்து நடத்தி வருகின்றன.


பெரும்பாலும் இவற்றின் திரைப்படங்கள் அனைத்தும் சென்னை நகரின் மத்தியப் பகுதியான ஜெமினி மேம்பாலத்தின் அருகில் அமைந்திருக்கும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில்தான்(FILM CHAMBER THEATRE) திரையிடப்படுகின்றன. இது திரைப்படம் பார்க்க வரும் ஆர்வலர்களுக்கு ஏதுவாக உள்ளது.

மேலும் தினமும் மாலை 6.15 அல்லது 6.30 மணிக்கு திரைப்படங்கள் திரையிடப்படுவதால் பல்வேறு பிரிவினருக்கும் இது வசதியாகவும் உள்ளது.

இதில் மெட்ராஸ் பிலிம் சொஸைட்டி என்பது பழம் பெருமை வாய்ந்த ஒரு அமைப்பு. சென்னையில் முதன்முதலில் துவக்கப்பட்ட பிலிம் சொஸைட்டி இதுதான்..

இதன் அலுவலக முகவரி :

36, லஸ் சர்ச் ரோடு
மைலாப்பூர்
சென்னை-600 004.
போன் : 044-24958691

இந்த அமைப்பில் தனி நபருக்கான ஆண்டு நுழைவுக் கட்டணம் ரூ.700.

கணவன்-மனைவியாக வர நினைப்பவர்களுக்கு ஆண்டு நுழைவுக் கட்டணம் ரூ.850.

இதனுடன் அனுமதிக் கட்டணமாக ரூ.100-ஐ முதன்முறையாக சேரும்போது மட்டும் செலுத்தினால் போதும்.

இது அல்லாமல் 20 வருடங்களுக்கு மொத்தமாக ரூ.6000 செலுத்தி உறுப்பினராகிக் கொள்ளலாம் என்றும் இந்த அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த அமைப்பு மாதந்தோறும் 15 வெளிநாட்டுத் திரைப்படங்களை திரையிட்டு வருகிறது.

ICAF (INTERNATIONAL CINE APPRECIATION FOUNDATION)

இதன் அலுவலக முகவரி

E-Block, 4, 2nd Floor
Gemini Parsn Apartments
Cathedral Garden Road
Chennai-600 006.
Phone : 044-65163866
Telefax : 044-28212652
Mobile : 98401-51956.
Website : chennaifilmfest.org

இந்த அமைப்பில் தனி நபருக்கான ஆண்டு நுழைவுக் கட்டணம் ரூ.500.

தம்பதிகளாக வர நினைப்பவர்களுக்கு ஆண்டு நுழைவுக் கட்டணம் ரூ.750.

இதனுடன் நுழைவுக் கட்டணமாக ரூ.50, முதல் முறையாக இணைகின்ற போது உறுப்பினர்களிடமிருந்து பெறப்படும்.

இந்த அமைப்பும் மாதந்தோறும் குறைந்தபட்சம் 15 திரைப்படங்களை திரையிட்டு வருகிறது.

இந்த ICAF அமைப்பு சென்ற 5 வருடங்களாக சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு அமைப்புகளுமே உறுப்பினர் அட்டையின் ஒரு ஆண்டு என்பதை, ஏப்ரல் மாதம் முதல் மார்ச் வரையில் என்று நிர்ணயித்துள்ளார்கள்.

அந்த வகையில் தற்போது புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கின்றன.

இவை போக NFDC என்கிற தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் ஒரு பகுதி அமைப்பான NFC(National Film Circle) என்கின்ற அமைப்பும் தேசிய விருதுகள் பெற்ற பல்வேறு இந்திய மொழித் திரைப்படங்கள் மற்றும் புகழ் பெற்ற இந்தியத் திரைப்படங்களை மாதந்தோறும் திரையிட்டு வருகிறது.

ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகள் தோறும் இந்தத் திரைப்படங்களும் அதே Film Chamber Theatre-ல்தான் திரையிடப்பட்டு வருகின்றன.

இந்த அமைப்பில் சேர்வதற்கான ஆண்டு நுழைவுக் கட்டணம் ஒரு தனி நபருக்கு ரூ.400.

மேலும் இந்த அமைப்பில் தமிழ்த் திரைப்படத் துறையில் உதவி இயக்குநர்களாக பணியாற்றுபவர்களுக்கு மட்டும் நுழைவுக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டு ரூ.200 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

ஆர்வமுள்ள திரைப்பட ரசிகர் பெருமக்கள் இந்த அமைப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் பணிவண்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நமது வலையுலக மக்களுக்காக எனக்குப் பிடிக்காத முறையில்(வேறு வழி) சின்னதான இப்பதிவு.

படித்தமைக்கு நன்றிகள்..

புதிய இயக்குநர்கள் பாடம் கற்க வேண்டிய படம் - 'அஞ்சாதே!'

19-02-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு திரைப்படம் சில தத்துவங்களை உள்கொண்டிருக்கலாம்.
ஒரு திரைப்படம் சில சார்புகளை முன் வைத்திருக்கலாம்.
ஒரு திரைப்படம் சில பரிணாமங்களை பன்முகப்படுத்தியிருக்கலாம்.
ஒரு திரைப்படம் சில உதாரணங்களுக்குள் ஒன்றாக அமைந்திருக்கலாம்.
ஒரு திரைப்படம் சில திரைப்படங்களுள் ஒன்றாக இருந்திருக்கலாம்..
ஒரு திரைப்படம் திரைப்படமாகவே எடுக்கப்பட்டிருக்கலாம்..
இந்த ஒன்றுவரும் வரை மற்றவை பிரதானப்படுத்தப்பட்டிருக்கும்.

(இது தாஸ்தாயேவ்ஸ்கி சொன்னதாக உண்மைத்தமிழன் சொல்வது)

(திரைப்படங்கள் பேசப்படுவதற்கு முதலில் தேவை நல்ல கதை. அது அடித்தள மக்களை, விளிம்பு நிலையில் களிப்பாட்டம் தேடி அலையும் வர்க்கத்தினரை மேம்போக்காக அலைபாயாமல் தண்ணீருக்கடியில் இரை தேடி அலையும் மீனின் கண்களைப் பதம் பார்க்கும் ஈட்டியைப் போல் கூர்மையுள்ளதாக இருப்பின் அந்தக் கதை பேசப்படும் என்பது சாத்தியமே..
- லூயி புனுவலின் ‘அர்த்தமற்ற சினிமாக்கள்’, பாகம்-2, அத்தியாயம்-3)

இது இந்தப் படத்திலும் சாத்தியமாயிருக்கிறது. இரண்டு வரிக் கதைதான். நட்பு. மனிதன் பிறப்பிலிருந்து இறப்புவரையிலும் அவனுக்குத் தெரியாமலேயே அவன் நிழல் போலவே பின் தொடர்வது நட்புதான். ஒவ்வொரு வெயில் காலம் போய் மழைக்காலம் வருவதைப் போல்.. இலையுதிர்க்காலத்தில் இலைகள் உதிர்ந்து புதியன பூக்க தன்னைத் தயார் படுத்திக் கொள்வதைப் போல நட்புகளும் நம்மிடம் மாறி மாறி வேறு வேறு உருவங்களில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

கிருபாகரன் என்ற கிருபா, சத்தியநாதன் என்ற சத்யா என்ற இரண்டு நண்பர்களுக்கிடையில் வர்க்க பேதமில்லாமல் இளைஞர்கள், நண்பர்கள் அதுவும் மாணவப் பருவத்திலிருந்தே என்ற அடைமொழியோடு துவங்கும் நட்புக்கு ‘காலம்’ வேட்டு வைக்கத் துவங்கும் பொழுதுதான் படமும் துவங்குகிறது.


டிகிரியை பர்ஸ்ட் கிளாஸில் முடித்தும் வேலைக்குச் செல்ல விருப்பமில்லாமல் ஏட்டு அப்பாவிடம் ‘உதவாக்கரை’ பட்டத்தை இரவல் பெற்று ஓசி சோறு சாப்பிட்டு, போலீஸ் காலனி வாசலிலேயே நான்கு நண்பர்களோடு ஆட்டோவில் குடித்தனம் நடத்தும் சத்யா..


சத்யாவின் மனம் கவர்ந்த ஒரு தங்கையுடன், அருமையான ஏட்டு அப்பா, அம்மா என்று அம்சமான குடும்பத் தோற்றத்தில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் SI தேர்விற்காக விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருக்கும் கிருபா..


இப்படித் துவங்குகிறது கதை.


சைக்கோ என்கின்ற லெவலின் முதல் படியில் குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கும் மனநிலையில் இருக்கும் தயாவின் தொழில் இளம் பெண்களைக் கடத்தி பணம் பறிப்பது. முடியும்பட்சத்தில் பெண்ணின் கற்பை அழிப்பது. அதை ஒரு சுக இன்பமாக அனுபவிப்பது.. கிட்டத்தட்ட மனம் பிறழ்ந்த நிலையில் இருப்பவனான தயாவின், சகவாசம் காலத்தின் விளைவால் சத்யாவுக்குக் கிட்டுகிறது.


‘காலம்’ தன் ‘வேலை’யைக் காட்ட காலனியின் கோவில் விழாவுக்கு வரும் தயா, அங்கே கிருபாவின் தங்கை குளித்துக் கொண்டிருக்கையில் அவளை பலாத்காரம் செய்ய முயல.. சத்யா தன் ‘புஜ’ கோபத்தை வெளிப்படுத்துகிறான்.


போலீஸின் மகன் திருடன் என்பதை போலீஸ் காலனியிலேயே தனது மகன்தான் நிரூபித்து வருகிறான் என்ற ஏக கோபத்தில் ஏற்கெனவே கொதித்துப் போயிருக்கும் சத்யாவின் அப்பா, அவனை அங்கேயே அத்தனை பேர் முன்னிலையிலும் செருப்பால் அடிக்க அவமானப்பட்டது அவன் மனம்.. அந்த ஒரு நிமிடம் என்ன நினைக்கிறான்.. என்ன செய்யப் போகிறான் என்பது தெரியவில்லை.


பலர் வற்புறுத்தியும் அப்ளிகேஷனை கையில்கூட வாங்காத SI தேர்வுக்கு திடீரென்று தயாராகிறான் சத்யா. கிருபாவுடன் போட்டி போட்டுக் கொண்டு தேர்வெழுதி அவனுடைய மாமாவின் சிபாரிசில் வெற்றியும் பெறுகிறான். அனால் கிருபா தோல்வியடைகிறான்.


அந்தத் தோல்வி கிருபாவின் மனதில் எதிர்மறை விளைவை ஏற்படுத்த.. கதை சூடு பறக்கிறது.. சத்யா SI ஆகி அதே ஊருக்கு வந்து சேர.. கிருபா முன்பு சத்யா இருந்த தோற்றத்திலும், அதே டாஸ்மாக் பாரிலும் ஐக்கியமாகிவிட.. சத்யாவுக்கு சந்தோஷத்தைவிட துக்கத்தையே தருகிறது.


சத்யா சிபாரிசு செய்து போஸ்ட்டிங் வாங்கியதால்தான் தன்னை மாதிரி நன்கு படித்து பாஸ் செய்தவர்களுக்கு போஸ்ட்டிங் கிடைக்கவில்லை என்கிற ‘உண்மை தத்துவம்’ கிருபாவை வாட்டி வதைக்க.. தன் நெஞ்சு முழுக்க சத்யா மீது வன்மம் கொண்டலைகிறான்.


‘காலம்’ அவன் முன்னே தயாவை நிறுத்த.. தயாவின் ‘புள்ளை பிடிக்கும்’ விளையாட்டில் ஒரு பகடைக்காயாக்கப்படுகிறான் கிருபா. தன்னைப் பிடிக்க நினைக்கும் சத்யாவை சமாளிக்க வேண்டுமெனில் தனக்கு கிருபாவின் தயவு வேண்டும் என்ற சமயோசித கணக்கில் தயா செயல்பட்டு கிருபாவைத் தந்திரமாக தன் வலையில் விழ வைக்கிறான்.


தான் இணைந்துள்ள ஸ்பெஷல் போலீஸ் டீம் குறி வைத்திருக்கும் நபர்களில் கிருபாவும் ஒருவன் என்பதை அறிந்து துடித்துப் போகிறான் சத்யா. ஆனாலும் அவனால் எதையும் செய்ய முடியாத நிலைக்கு தயா கொண்டு செல்கிறான்.


முதல் இரண்டு கடத்தல்களை வெற்றிகரமாக நடத்திவிட்ட தயாவுக்கு தங்கள் டீம் மாட்டிக் கொண்டது தெளிவாகத் தெரிய வர.. இம்முறை பெரிய திமிங்கலத்தை இழுத்து தனது வலையின் சக்தியை உணர வைக்க வேண்டும் என்று நினைத்து கடைசியாக போலீஸ் டி.ஜி.பி.யின் மகள்களை கடத்துகிறான்.

துணைக்கு கிருபாவும் வர.. கிருபா ஒருவித சுயகட்டுப்பாட்டுடன் அவனுடன் கலந்திருக்க.. பார்க்கும் இடத்திலேயே இந்தத் தோழர்களை சமாதி கட்டும்படி காவல்துறை இயந்திரங்கள் அணி வகுத்திருக்க.
. இறுதியில் தனது தங்கையாலேயே கிருபா காட்டிக் கொடுக்கப்பட்டு தன் உயிர் நண்பனாலேயே சாவையும் சந்திக்கிறான்.

கடமை முக்கியம் அல்ல.. மனிதாபிமானம்தான் மிக முக்கியம் என்பதை உள் வாங்கி வேறு வழியில்லாத நிலையில் தனது உயிருக்குயிரான நண்பனை சுட்டுவிட்டு அவனை மடியில் போட்டுக் கதறும் சத்யாவின் அழுகையோடு படம் நிறைவடைகிறது.


(“கதைகள் என்பவை வெறும் வார்த்தைகள்தான். அவற்றை எண்ணங்களாக்கி, எண்ணங்களை எழுத்துக்களாக்கி.. எழுத்துக்களை வாசிப்பவனின் மனதுக்குள் ஊடுறுவ விடுவதில்தான் எழுத்தாளனும், படைப்பாளியும் ஜெயிக்க முடியும். இது திரைப்படத் துறையில் கதைக்கு அடுத்த இலக்கான திரைக்கதையை வடிவமைப்பதில் உள்ள மேதமைக்கு முதல் படி. இதில் ஜெயித்தவர்கள்தான் சிறந்த இயக்குநர்களைத் தேடிச் செல்ல முடியும்.. எது எப்படி ஆரம்பித்ததோ அப்படித்தான் இறுதி வரையிலும் செல்லும்..”
 

ரோமன் போலன்ஸ்கியின் ‘யதார்த்தமும் சினிமாவும்’ நூலில்)

முதல் காட்சியிலேயே நட்பின் வலிமையை, அந்த நண்பன் இல்லாமல் இருப்பதிலேயே ஆரம்பிக்கும் திரைக்கதையின் வடிவம் இறுதிவரையிலும் தனது பாதையை இழக்காமல் சீராக சென்றடைந்துள்ளது.


நான் இதுவரையிலும் பார்த்திருக்கும் திரைப்படங்களிலிருந்து மிக, மிக வித்தியாசப்பட்டிருக்கிறது இத்திரைப்படத்தின் திரைக்கதை. ஒரு நிமிடம்கூட கதையின் ஓட்டத்திலிருந்து விலகவில்லை.. ஓட்டம்.. ஓட்டம்.. ஓட்டம்தான்..
  இதற்கு முன் பார்த்த காட்சிகளாக இருப்பினும், அதில்கூட இப்படியெல்லாம் மாற்றிவைக்க முடியுமா என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறது.

“கிருபா அடிபடுகிறான். தகவல் பறக்கிறது. சத்யா அடித்தவர்களை அடிக்கிறான். “ஏன் ரவுடித்தனம் பண்ற..?” என்று வீட்டாரின் அர்ச்சனை கிடைக்கிறது. டாஸ்மாக் பாரில் குடிக்கும்போது வாய்ச்சண்டை. அப்போதைக்கு நண்பர்களை வீட்டில்விட்டுவிட்டு தான் மட்டும் தனியே போய் கைச்சண்டை போடுகிறான் சத்யா. விஷயம் போலீஸ¤க்கு போகிறது. அழைத்து வரப்படுகிறான் ஸ்டேஷனுக்கு. ஸ்டேஷனில் ஏட்டுவின் மகன் என்பது தெரிய வர கையெழுத்து வாங்கிக் கொண்டு அனுப்புகிறார்கள். நண்பனைத் தேடி கிருபா வர அவனது அப்பாவான ஏட்டு மகனைத் திட்டி அனுப்புகிறார்.”


இந்த ரீதியில் முதல் ஒரு மணி நேரம் படத்தின் கதை பறக்கின்ற வேகத்தில், நம்மையும் உடன் அழைத்துச் சென்றுவிட அனைவரும் கடிகாரத்தைப் பார்ப்பதையே மறந்து போய் விட்டார்கள்.


சத்யா SI ஆன பிறகு அவன் அந்தப் பதவியில் set ஆவதற்கு முன் கிடைக்கின்ற அனுபவங்கள் மிகச் சிறந்த திரைக்கதை பாடங்கள்..


ஒரு வழியாக SI என்ற மிடுக்கு வருவதற்குள் தானே வழிய வரும் ஒரு கடத்தல் வழக்கில் தனது பழைய புஜ பராக்கிரமத்தைக் காட்டிய பின்பு எழும் தொடர் கதையின் ஓட்டம் கடைசியில் படம் முடியும்போதுதான் நிற்கிறது.


எப்போது இவர்கள் இருவரின் ‘மகாபாரதம்’ முடியும் என்பதைவிட எப்படி முடியப் போகிறது யுத்தம் என்கின்ற அளவில் திரைக்கதையை வடிவமைத்திருக்கும் மிஷ்கினுக்கு முதல் படமான ‘சித்திரம் பேசுதடி’யைவிடவும் இதில் நிறைய களங்கள் கிடைத்திருக்கின்றன. அதைச் சரியாகவே பயன்படுத்தியும் இருக்கிறார்.


கிடைக்கின்ற தருணங்களில் எல்லாம் அவர் twist செய்யும் காட்சிகளில் ஒன்று வசனத்தாலோ அல்லது காட்சிகளாலோ நிறைத்து விடுகிறார். ஆனால் அதன் மய்யம் திரைக்கதையில்தான் இருக்கிறது.


SI ஆன பின்பு முதல் முறையாக டாஸ்மாக் பாருக்குள் வந்தமரும் சத்யா அங்கே கடைப் பையனை கன்னத்தில் அறைபவனை சட்டையைப் பிடித்துத் திருப்ப அங்கே முன்பிருந்த சத்யா கோலத்தில் இப்போது கிருபா இருப்பதைப் பார்த்து தற்போதைய சத்யா அதிர்வது திரைக்கதையில் ஒரு அச்சாணி..


தொடர்ந்து கிருபாவை சமாதானப்படுத்த முயல்வது. அவன் மறுப்பது. முடியாமல் தயாவுடன் சேர்வது. சேர்ந்த பின்பு அக்குற்றச் செயல்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல் தயங்குவது. இறுதிக் காட்சியில் சிறுமிகளிடம் நெருங்கும் தயாவை துப்பாக்கியால் மிரட்டுவது வரையிலும் தன்னுடைய Character Sketch-ஐ வழுவ விடாமல் பிடித்தபடியே செல்கிறான் கிருபா.


நான் இதுவரையில் பார்த்த தமிழ்த் திரைப்படங்களிலேயே இவ்வளவு விறுவிறுப்பான திரைக்கதையை.. பாடல் காட்சிகளைத் தவிர மற்றக் காட்சி நேரங்களில் பக்கத்து சீட்டில் இருப்பவரின் முகத்தைப் பார்க்கக்கூட தோணாத ஒருவித வெறியை உண்டாக்கியது ‘விக்ரம்’ திரைப்படத்தின் இடைவேளைக்கு முந்திய பகுதிக்குப் பிறகு இத்திரைப்படத்தில்தான்..

 
(திரைக்கதை என்பது வெறும் வடிவமைப்பு செயல்தான். அது ஒரு கட்டமைக்கப்பட்ட ஒரு உடலியல் மாதிரி. அதனுடைய செயல் வடிவங்களை யார் சிறப்பாக வடிவமைக்கிறார்களோ அவர்களே வெற்றி பெறத்தக்க சிற்பங்களை செதுக்கியவர்களாவார்கள். சிற்பங்கள் ஒரு போதும் தானாகவே சிறப்படைவதில்லை. அதனை பார்வைக்குட்படுத்தி பார்க்க வைப்பவரும் ஒரு சிற்பிதான்.. அவரிடம்தான் வெற்றிக்கான அளவு கோல் உண்டு. இது போலத்தான் திரைக்கதையை காட்சிப்படுத்ததுல். இதில் ஜெயித்தவர்கள்தான் மிகச் சிறந்த ஆசிரியர்கள்.

- ஆல்பிரட் ஹிட்ச்சாக்கின் ‘சினிமாவும், காட்சியும்’ நூலில்)

தன்னை டாஸ்மாக் கடையில் மிரட்டிய பாண்டியராஜனை இரவில் தனியே அவருடைய ஒர்க்ஷாப்பிற்கு சென்று அடிக்கும்போது செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் பாண்டியராஜனிடம் “பேசு.. அப்புறமா..” என்று சொல்லிவிட்டு அடிப்பது. தொடர்ந்து தயா பாண்டியராஜனை திடுக்கென்று கழுத்து எழும்பை உடைப்பது என்று ஏன்.. எதற்கு என்பது தெரியாமல் அடுத்தக் காட்சிக்குத் தவ்வுகிறது திரைக்கதை.. அடுத்தக் காட்சியில்தான் முதல் காட்சிக்கான விடை கிடைக்கிறது.


அதே போல தான் தந்தையிடமிருந்து செருப்படி பட்ட பின்பு, சினிமா தியேட்டரில் ‘தவமாய் தவமிருந்து’ படம் ஓடிக் கொண்டிருக்க.. “அடுத்தவன் மூத்திரத்தைக் குடிக்கச் சொன்னாருடா.. அவரெல்லாம் அப்பாவாடா..? இவர்தாண்டா அப்பா..” என்று ராஜ்கிரனை காட்டிச் சொல்கின்ற காட்சியில் கை தட்டலும், விசிலும் பறக்கின்றன.


எப்படியாவது SI-யாகி விட வேண்டுமென்ற ஆர்வத்தில் மாமா வீட்டுக்கு வரும் சத்யா அவருடனேயே சியர்ஸ் சொல்லிக் குடிப்பது.. மகளே சைடீஸ் கொண்டு வந்து வைப்பது என்று படத்தில் ஒருவித குணப் பேதமை நிரவியிருக்கிறது..


தான் SI ஆகிவிட்ட சந்தோஷத்தில் குடித்துவிட்டு வீடு வரும் சத்யா உயிர் நண்பன் கிருபாவின் வீடு நோக்கி நகர.. நகர.. அவன் தங்கை தடுத்தும் கேளாமல் கதவைத் தட்ட.. “கிருபா பெயிலாயிட்டாருண்ணே” என்று சொல்கின்ற தருணம் அமானுஷ்ய படத்தில் ஒரு அரூபத்தை அருகில் பார்த்த எபெக்ட்டை கொடுத்தது எனக்கு..


முதன்முதலில் SI ஆன பிறகு ஸ்டேஷனுக்கு வருபவனுக்கு மனைவியின் தலையை வெட்டியவன் தலையைத் தூக்கிக் காட்ட.. பொத்தென்று கீழே விழுகிறானே சத்யா.. அக்காட்சி சிரிக்கவும் வைத்து, சத்யாவின் நிஜத்தையும் காட்டிக் கொடுத்தது.


பாதி போலீஸ் டிரெஸ்ஸில் வண்டியில் வரும்போது ரோட்டில் ஒருவன் கத்திக்குத்து பட்டு விழுந்து கிடக்க.. அவனைக் காப்பாற்ற சத்யா அல்லலோகப் படுவது காட்சியமைப்பில் ஒரு மிகப் பெரிய கனத்தை ரசிகர்களின் மனதில் ஏற்றிய இடம் என்று சொல்லலாம்.


இக்காட்சியில் உடன் நடித்திருக்கும் ஒரு கிழவியுடன் அந்த ரோடும் சேர்ந்து நடித்திருப்பதைப் போல் தெரிகிறது. அப்படியொரு எபெக்ட் அந்தக் காட்சிக்கு..

 
“உசிர் இருக்குய்யா..” என்று பரிதவிப்புடன் சொல்லும் கிழவி குற்றுயிராய்க் கிடப்பவனைச் சாய்த்துக் கொண்டு ஹீரோ ஹோண்டாவில் சத்யாவுடன் செல்கின்ற காட்சி.. சென்று கொண்டிருக்கும்போதே “முடிஞ்சிருச்சுப்பா..” என்று கழுத்து சாய்ந்த வினாடியே கண்டுபிடித்துச் சொல்லும், கிழவியின் மிக மிக இயல்பான நடிப்பு..


கடத்தல்காரனில் ஒருவன் தயாவால் தாக்கப்பட்டு மருத்துவனையில் படுத்திருக்க.. அவனைக் கொல்ல வரும் கூட்டத்தை தனது புஜ பராக்கிரமத்தைக் காட்டி சத்யா சண்டையிடும் காட்சி சினிமாத்தனம்தான் என்றாலும், அதை நிராகரிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது அது எடுக்கப்பட்ட விதம்..


கடத்திச் செல்லப்பட்ட பெண் திரும்பி வந்த பின்பு வழக்கமாக அழும் பெண் அழுகாமல் தந்தை அழுக.. பெண்ணோ, “சீக்கிரமா கண்டுபிடிங்க ஸார்.. சீக்கிரமா கண்டுபிடிங்க ஸார்..” என்று சொல்ல பொன்வண்ணன் சிலிர்ப்பது ஒருவித உணர்வு.


லோகுவின் குரலைக் கேட்டு அவனைத் தேடி அலைந்து ஓய்ந்த பிறகு டி.ஜி.பி. அந்த டீமையே கேள்விக்குறியாக்கும்போது சத்யா டி.ஜி.பி.யைப் பார்த்து கேட்கும் கேள்வியும், பதிலும், அந்தக் காட்சியும்..


தனது மகளின் ஆடைகள் அனைத்தும் வீட்டு வாசலில் ஒரு பிளாஸ்டிக் பையில் கிடக்க அதை எடுத்துக் கொண்டு அப்பன் கதறலுடன் போனுக்கு ஓடி ஓலமிடுவதும்.. தொடர்ந்து சத்யா, பொன்வண்ணன், அப்பன் மூவருக்குமான உரையாடல்.. இறுதியில் அப்பன் கேட்கும் கேள்வி “நான் இப்ப என்ன தப்பா சொல்லிட்டேன்..?” தவறே சொல்ல முடியாத நிகழ்வுகள்..


டாஸ்மாக் பார் பையனை அடித்து அதன் விளைவாய் ஸ்டேஷனுக்கு போய் அடிபட்டு வரும் மகனைப் பார்த்து ஆற்றாமையுடன் கிருபாவின் தாய் பொங்கி எழும் காட்சி.
  டி.ஜி.பி. பொன்வண்ணன் குழுவினரை வேஸ்ட் என்று வர்ணித்துவிட்டுப் போக இயலாமையைத் தடுக்க வழியில்லாமல் அவர் தவிப்பது..

தயாவின் புத்திசாலித்தனமான செல்போனை பஸ்ஸிலேயே ஆனில் விட்டு வைத்துவிட்டு வரும் ஐடியா..


அந்த நீண்ட இறுதிக் காட்சியில் பசுமைத் தோரணங்களுடன் பூத்துக் குலுங்கும் தோட்டத்தின் நடுவே சிறுமிகளுடன் தயா நடத்தும் நாடகம்..


சிறுமிகள் கைகள் கட்டப்பட்டு முதுகில் புத்தக மூட்டைகள் அப்போதும் சுமக்கப்படும் நிலையிலும் அவர்கள் மொட்டைத் தலையனுக்கு போக்குக் காட்டிவிட்டுத் தப்பிக்கும் காட்சியில் தியேட்டரில் எழுந்த கரவொலி அடங்க நீண்ட நேரம் பிடித்தது.


‘விடு உத்ரா..’ ‘விடு உத்ரா..’ என்று கிருபா கத்திக் கொண்டே இருக்கும்போது என்ன செய்கிறாள் என்ற ஆர்வத்தைக் கூட்டி இறுதியில் அவள் தன் கையுடன் அவன் கையையும் விலங்கு போட்டு மாட்டிக் கொண்டது கிருபா குண்டடி பட்டு தரையில் சாய்ந்த பிறகு தெரிகிறபோது இன்னுமொரு மனதைப் பிசைந்த விஷயம்.


இறுதிவரையிலும் அந்த மொட்டைத் தலையுடன் வரும் அடியாளை முகம் காட்டாமலேயே சாகடிக்கும் ஒருவித Sketch..


கதை எழுதுவது என்பதும், திரைக்கதை அமைப்பது என்பதுவும், அதற்கேற்றாற்போல் காட்சிகளை வடிவமைப்பது என்பதும் ஒரு கலை என்பதை வருங்கால இயக்குநர்கள் இத்திரைப்படத்தைப் பார்த்தாவது கற்றுக் கொள்ளலாம் என்று தாராளமாக சிபாரிசு செய்யலாம்.


(திரைப்படங்கள் பார்வையாளனின் கண்ணுக்கு அப்பாற்பட்டு, அவனது கவனத்தை வேறு பக்கம் கொண்டு போகாத தொனியில் பண்ணப்பட்டிருந்தால் அதற்கு திரைக்கதை மட்டுமே காரணமாக அமைய வாய்ப்பில்லை. கூடவே ஒலியமைப்பும், ஒளிப்பதிவும் அக்காட்சியின் முழு வீரியத்தை அவனிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.. இதனை கட்டற்ற சினிமா என்னும் தளையில் ஒழுங்கு என்ற வடிவில்தான் அது சிதைக்கப்படுதல் என்பதாக அர்த்தம் கொள்ளுதல் வேண்டும்.

- ஆந்த்ரே தர்க்கோவ்ஸ்கியின் 'ரியோ சர்ரியலிஸ சினிமா' நூலில் இருந்து)

மாற்றங்களற்ற மனதை உடையவனையும் ஒரு நொடியில் கலங்க வைத்திடும் திறன் ஒலிக்கு உண்டு.


நான் முன்பே சொன்னதைப் போலவே முதல் காட்சியிலேயே ஒலி, ஒளிப்பதிவின் வித்தைகள் இப்படத்தில் நிறைய உண்டு என்பது தங்குத்தடையின்றி புரிந்துவிட்டது.


கிருபாவை அடித்தது யார் என்று ஆட்டோவில் உட்கார்ந்தபடியே கேட்டுவிட்டு ஆட்டோ ஒரு ரவுண்ட் அடித்து வந்து புல்லப்ஸ் எடுத்துக் கொண்டிருப்பவன் மீது மோதுகின்ற போது எழுகின்ற ‘சொத்’ என்ற சப்தம் படத்தின் கடைசி வரையிலும் மீள முடியாத வலியாக நம் மீது விழுந்து கொண்டேயிருக்கிறது.


தொடர்ந்து பாக்கெட்டில் இருந்து ஒன்றைப் பிரித்து வாயில் போட்டு விட்டு ஒருவனை அழைத்து ‘சொத்’..


கத்தியுடன் பாய்ந்து ஓடி வருபவர்களுக்கு ஒரு ‘சொத்’..


இதன் பின் ஒவ்வொரு சண்டைக் காட்சியிலும் ஒவ்வொரு ஒலி வகைகள்..


பார்வையாளனை படத்தோடு ஒன்ற வைப்பதற்கு அவனுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் சராசரி மனிதாபிமான உணர்வைத் தட்டி எழுப்பினாலே போதும்.. அந்த வேலையை இப்படத்தில் அதிகப்பட்சம் செய்திருப்பது ஒலிப்பதிவுத் துறைதான்..


“கிருபா பெயிலாயிட்டாருண்ணா..” என்று தங்கை சொன்னவுடன் ஐயோ என்று அடிவயிற்றில் இருந்து எழ வைக்கும் வயலின் இசை..


படம் முழுக்கவே இது போன்ற கலை நுட்பமான இசைகள் மனதை பிசைய வைக்கின்றன.


அதன் பின் ரோட்டில் வெட்டப்பட்டவனைப் பார்க்கின்ற போது.. ஆள், அரவமற்ற சாலையும், ஒரு பூக்காரக் கிழவியும், சத்யாவுமாக மொத்தமே மூன்று பேர் அந்த நிமிடத்திலிருந்து நம்மிடம் ஆக்கிரமித்துக் கொண்ட அபூர்வக் காட்சி தொடர்கிறது. இந்த ஆக்கிரமிப்புக்கு மிகவும் உறுதுணை பின்னணி இசைதான்..


காவல்துறையைப் புறக்கணித்துவிட்டு தானே சொந்தமாக மகளை மீட்டுவிடலாம் என்றெண்ணி பை நிறைய பணத்துடன் நிற்பவனிடம் பையை வாங்கிக் கொண்டு கிருபா போக..


பைக் கிராஸ் செய்யும் நேரத்தில் நின்று கொண்டிருக்கும் வேனில் இருந்து முந்தைய இரவில் கிருபாவின் வீட்டில் தயாவால், அவனிடம் இரவல் வாங்கப்பட்ட கைலியில் சுருட்டப்பட்ட நிலையில் அப்பெண் உருட்டிவிடப் படும் காட்சியும், அக்காட்சியின்போது தவறு செய்துவிட்டோமே என்றெண்ணி ஹெல்மெட் அணிந்திருந்த நிலையிலும் தன் தலையில் அடித்துக் கொண்டே வண்டியில் செல்லும் கிருபாவின் செய்கையும், அதைத் தொடர்ந்து அந்தத் தந்தை நடுரோட்டில் கதறியபடியே ஓடி வந்து நின்று அழுவதும்.. அப்பெண் “டாடி.. டாடி..” என்ற கதறலுடன் நிற்க முடியாமல் நடந்து வரும்போதும், எழுகின்ற பின்னணி இசை நம்மையும் அங்கேயே கூட்டத்தோடு கூட்டமாக நிற்க வைத்துவிட்டது. இசையும், நடிப்பும், ஒளிப்பதிவும் ஒரு சேர போட்டி போட்டுக் கொண்டு தாலாட்டுப் பாடியது இந்தக் காட்சியில்தான் என்பதை நான் உணர்கிறேன்.


காலை நொண்டியபடியே வரும் கடத்தல்காரன் ஒருவனின் வீட்டில் பொன்வண்ணனும், சத்யாவும் அவர்கள் வருகைக்காக காத்திருக்க.. அப்போது கூட்டாளியின் மகன் “அப்பா போயிருப்பா.. போலீஸ்ப்பா.. அப்பா போலீஸ்ப்பா..” என்ற கதறலின் பின் விளையாட்டாக..


‘அவன் மாட்டினால் நாம் தொலைந்தோம்’ என்ற எண்ணத்தில் தயா அப்போதுவரை கூட்டாளியாக இருந்தவனை, துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோட அப்போது எழுகின்ற ஒலியும், காட்சியமைப்பும், கேமிராவின் இடது, வலது ஊஞ்சல் விளையாட்டுக்களும் அபாரம்..


இறுதிக் காட்சியின் அந்த நீண்ட பயணத்திற்கு பார்வையாளர்களை அலுப்புத் தட்டாமல் பயணிக்க வைத்தது இசையும், என் கண்ணை என்னிடமிருந்து பறித்துச் சென்ற கேமிராவும்தான்..


இதுவரையில் காட்டாத லொகேஷனைத்தான் காட்ட வேண்டும் என்ற முனைப்போடு இருந்திருக்கும் இயக்குநர் அப்படியொரு லொகேஷனைத்தான் தேடி கண்டுபிடித்திருக்கிறார்.


சோளமோ, கரும்புக்காடோ.. எந்தப் பக்கம் யார் ஓடுகிறார்கள்.. யார் ஒளிந்து கொண்டுள்ளார்கள் என்பதே தெரியாமல் கேமிராவால் நம்மையும் உடன் அழைத்துக் கொண்டு ஓடும் திரைப்படத்தின் ஓட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் நாம் திணறுகின்ற திணறல்.. படம் எப்போது முடியும் என்றெல்லாம் இதுவரையிலும் போய் அனுபவப்பட்டு நின்ற என்னைப் போன்ற ரசிகனுக்கு ஒரு புத்தம் புது அனுபவம்.

 
(அனைத்து அம்சங்களும் இயக்குநருக்குள் இருந்தாலும் அனைத்தையும் சமச்சீராக கொண்டு செல்லும் ஒரு அறிவு அவனுக்குள் இருக்க வேண்டும். ஒட்டு மொத்த திறமையின் வெளிப்பாடே வெற்றியின் அறிகுறி. திரைப்படங்கள் ஜெயிப்பதற்கு முதலில் இயக்குநர் திறமைசாலியாகவே இருக்க வேண்டும். அல்லது திறமைசாலியானவராக இருக்கப்பட்டிருக்க வேண்டும்..

- லூச்சினோ விஸ்கான்டியின் 'இயக்குநரின் திரைப்படம்' நூலில் இருந்து)

உண்மை. மிஷ்கினுக்கு அது நிறையவே இருக்கிறது.. ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் திரையுலகத்திற்குள் கால் பதித்த மிஷ்கின், தனது அடுத்தப் படமான இந்தப் படத்தின் மூலம் தனக்குள்ள திரைப்படம் பற்றிய அறிவை யாராலும் கேள்விக்குறியாக்க முடியாத நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.


இந்த எல்லையை எட்டுவதற்கு அவர் பட்ட கஷ்டங்களும், நஷ்டங்களும் இன்றைக்கு புகழாரங்களாக அவருக்கு கிடைக்கும் என்றே நம்புகிறேன்..


திறமை வாய்ந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்ததிலிருந்து அவருடைய கலையறிவை அறிந்து கொள்ளலாம். தமிழ்ச் சினிமா என்றில்லை உலக சினிமாவிலேயே இந்த கேரக்டருக்கு இவர்தான் என்கின்ற மரபை உடைத்து புதிதாக ஒன்றைச் சிந்தித்தால் புதிய நேயர்களும், பார்வையாளர்களும் அவர்களுக்குக் கிடைப்பார்கள்.


அந்த வகையில் மிஷ்கினுக்கு சிக்கியிருப்பது நரேனும், பாண்டியராஜனும், பிரசன்னாவும்.


நரேன் குறையே வைக்கவில்லை.. நண்பனுக்காக சட்டென்று கோபப்படுவதாகட்டும், விழிகளை உருட்டியபடியே டிஜிபியிடம் பேசுகின்ற செயலாகட்டும்.. கிருபாவை அடித்து ஓரமாக உட்கார வைத்திருந்த இடத்தில் முட்டுச்சுவரில் முட்டி சாய்ந்து ஒரு மாதிரி நிற்கிறாரே.. அது ஹைகிளாஸ் ஆக்ஷன்..


கிருபாவின் தங்கைக்குமான காதலை மூடி மறைக்க முடியாமல் வெளிப்பட்டுத்தும் காட்சிகளும், அப்பாவிடம் கோபிக்கும் போதும், தான் SI ஆனவுடன் வீட்டு வாசலில் நின்று கொண்டு அலம்பல் செய்யும்போதும் ஹீரோ என்ற இமேஜைவிடவும் நம்முடைய பக்கத்து வீட்டுக்காரன் என்ற தோற்றத்தை திணிக்கிறார் நரேன்.


எப்பொழுதும் தன்னுடைய உருட்டு விழிகளால் கதாநாயகிகளைவிடவும் புகழ் பெற்றிருக்கும் பாண்டியராஜன் இப்படத்தில் முதன் முறையாக வில்லனாகவும் இடம் பெற்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.


தயா, சத்யாவிடம் அடிவாங்கி ஒர்க்ஷாப்பிற்குத் திரும்பிய பிறகு தயாவை அடிக்க முடியாமல் ஒர்க் ஷாப்பில் இதற்காகவே சம்பளத்திற்கு வேலை பார்க்கும் ஒருவனை அழைத்து அடித்து தயாவுக்கு உணர்த்துகின்ற காட்சியில் பாண்டியராஜனின் உடல் மொழி ஒன்றை மட்டுமே காட்ட வைத்திருக்கிறார் இயக்குநர்.


தான் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் இருக்கும் பாண்டியராஜனை திகிலூட்டும்படியான ஸ்டைல்களைப் பின்பற்றும் தயாவின் காரிய, காரியங்களை இயக்கத்தில் மட்டுமே காட்டியிருக்கிறார்.


பிரசன்னா அண்ட் கோஷ்டி பணத்துடன் கிருபாவின் வீட்டிற்கு வந்தவுடன் வெறும் கால்களைக் காட்டியே காட்சியை நகர்த்துவது..


‘வாளமீன்’ பாடல் போலவே ஒரு பாடலை வைத்து அந்தப் பாட்டின் முடிவிலேயே பாண்டியராஜனை கொலை செய்யும் அந்தக் காட்சி தயாவின் கதாபாத்திரத்தின் மேல் பயத்தை உறைய வைத்தது. அந்த இடத்தில் பிரசன்னாவின் டயலாக் மிக அழகு.


பிரசன்னாவைப் பொறுத்தமட்டில் இந்தக் கேரக்டரில் நடிக்க அவர் ஒத்துக் கொண்டது அவருடைய கேரியரில் அவர் செய்த மிக நல்லதொரு காரியம். நீண்ட முடியுடனும், அடிக்கடி கையில் கட்டியிருக்கும் கடிகாரத்தை பார்த்தபடியே தான் செய்யும் அத்தனை அக்கிரமங்களையும் அதட்டல் இல்லாமல் செய்து முடிக்கும் அந்த சைக்கோத்தனமான வில்லத்தனம் எந்தவொரு நடிகனையும் ஒரு இயக்குநரால் எப்படியும் நடிக்க வைக்க முடியும் என்பதற்கு ஒரு அத்தாட்சி.


இறுதிக் காட்சியில் தயாவிடமிருந்து சத்யாவால் தப்பித்து விலகி ஓடும் உத்ரா பின்பு பட்டென்று திரும்பி வந்து கால் செருப்பைக் கழட்டி தயாவை அடித்துவிட்டு சட்டென ஓடும் காட்சி.. இக்காட்சி டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்டு ஒரு நொடியில் கடந்து சென்றாலும், சட்டென்று பார்வையாளர்களுக்குள்ஏற்படும் சந்தோஷ உணர்வில் கை தட்டாதவர்கள் குறைவுதான்..


பிரசன்னாவை கொல்கின்ற இறுதிக் காட்சியின்போதுகூட கடைசி ச்சு விடுவதற்கு முன் கடிகாரத்தைப் பார்த்து கடைசி புன்னகையை உதிர்த்துவிட்டு உயிர் துறப்பதும்,


குண்டடிபட்ட நிலையில் அந்த ஒற்றைக் கை நண்பன் “கிருபாதாண்டா சுட்டான்.. ஏண்டா சுட்டான்.. நான் செத்திருவேனாடா..” என்று கேட்கின்ற இடத்திலும் இதற்காகவா இத்தனை நேரம் நாம் காத்திருந்தோம் என்ற பரிதாப உணர்வுதான் மேலிடுகிறது.


தான் வாங்கிக் கொடுத்த பிறந்த நாள் பரிசான அந்த பிளாட்டின மோதிரம் தன்னை சுட்ட சத்யாவின் நெஞ்சில் இப்போதும் தொங்கிக் கொண்டிருப்பதை அந்தக் கடைசி நிமிடத்திலும் பார்த்துவிட்டு உணர்கிறானே கிருபா.. கவித்துவமான காட்சி..


கிட்டத்தட்ட 25 வருடங்களாக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் எஸ்.எம்.பாஸ்கருக்கு இந்த வருட ஆரம்பமே வெற்றியாக கிடைத்திருக்கிறது.. இதுவரை அவரை காமெடிக்காரராகவே பார்த்துவிட்டவர்களுக்கு பரிதவிக்கும் தந்தையான கேரக்டர் நெகிழ்வைத் தந்திருக்கிறது. இது அவருக்கான படம் என்றே சொல்லலாம்.


உத்ராவாக வரும் விஜயலட்சுமி நடிக்க வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம். வாய்ப்புகள் குறைவு என்றாலும் இயக்குநரின் குறியீடுகளை உள் வாங்கிச் செய்திருக்கிறார்.


உதாரணமாக கோவில் திருவிழா அன்று தயாவான பிரசன்னா, அவளைத் தூரத்திலிருந்து பார்க்கும் பார்வையிலேயே தான் தீட்டுப் பட்டுவிட்டதைப் போல் நினைத்து “அம்மா குளிச்சிட்டு வரேன்..” என்று சொல்லிவிட்டுப் போவது..


தயா குளியலறையில் அவளது வாயைப் பொத்தி அடக்கி வைத்திருந்துவிட்டு வெளியேறுகிறான். பின்பு நல்ல பிள்ளையாக சத்யாவின் பின்னால் வந்து நிற்கும்போது வீட்டு வாசலுக்கு அதிர்ச்சியோடு வந்து நிற்கும் உத்ரா தனது கையை குவித்து அடையாளம் காட்டும் முகபாவனை உருக்கம்தான்..நடிப்பு என்பதை தேடியெடுக்காமல் இருப்பதை வெளிக்கொணர வைத்திருக்கிறார் இயக்குநர் என்ற வகையில் மிஷ்கினைப் பாராட்டலாம்.


(தோள் பை ஒன்றையே துணையாகக் கொண்டு போகும் வழியை போகின்ற வழியிலேயே கேட்டுக் கொண்டு செல்வது போலத்தான் செல்வது இயக்குநரின் வேலை. அவனது வேகம் அவன் சுமந்திருக்கும் பையைத் தூக்கிக் கொண்டு, போகும் தூரத்தை அடையும்வரையில் அவன் அதனால் அசர முடியாத அளவுக்குத்தான் இருக்க வேண்டும் என்பதைப் போலத்தான் இயக்குநரும். அவனது வேலையும் அமைந்திருக்க வேண்டும்.  

· பெலினியின் ‘சினிமா ஒரு பார்வை’ நூலில் இருந்து)

இத்திரைப்படம் இந்த வருடத்திய மிகச் சிறந்த திரைப்படமாக அடுத்த வருடம் பல விருதுகளை வாங்கிக் குவிக்கப் போகிறது என்பதில் எனக்கு ஐயமில்லை.


ஆனால் இதற்கான முழு பொறுப்பையும், பெருமையையும் மிஷ்கினே பெறுவார் என்பது எனது கருத்து.


ஏனெனில் அவருடைய நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு அந்த அளவிற்கு தரம் வாய்ந்ததாக உள்ளது.


முதலில், ‘7G ரெயின்போ காலனி’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படங்களின் கதாநாயகனும், படத் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகனுமான ரவிகிருஷ்ணாதான் இப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது.


ஆனால் ஒரு வருட காலமாக ரவிகிருஷ்ணாவை உடல் மெலிய வைத்து இன்னும் பிற பயிற்சிகள் கொடுத்துப் பார்த்தும், டெஸ்ட் எடுத்துப் பார்த்தும் மிஷ்கினுக்கு திருப்தியில்லை என்பதால் அவர் ரவிகிருஷ்ணாவை ஏற்கவில்லை. சொல்லிவிட்டே வந்துவிட்டார்.


பாவம் கேரக்டர் இழந்த அந்த கதாநாயகன், சில நாட்கள் தாங்க முடியாத கோபத்தில் நள்ளிரவில் மிஷ்கினின் வீட்டிற்கு வந்து தெருவில் இருந்து கல்லெடுத்து எறிந்து பெரும் பிரச்சினைக்குள்ளாக்கிய போதும், மிஷ்கின் தன் கருத்திலிருந்து பிறவாமல் உடனுக்குடன் இப்படத்தை தொடங்கினாராம்.. (கோடம்பாக்கத்திலிருந்து பட்சிகள் பற்ற வைத்த நியூஸ் இது.)


ஏற்கெனவே நான் சொன்னது போல புதிதாக திரையுலகில் நுழைபவர்களுக்கு மிக நல்லதொரு பாடம் இத்திரைப்படம்தான்.. இதில் எனக்கு சந்தேகமில்லை.


"அப்படியானால் இதில் பிழைகள் என்று ஏதுமில்லையா?" என்று நீங்கள் கேட்கலாம். இருக்கின்றன.. அது காட்சிகளுக்குள் பொதிந்து போயிருக்கின்றன. எனக்கும் தெரிந்தது.


ஆனால் அனைத்துமே பூதாகரமான எனது திரைப்படம் பற்றிய பார்வையின் கீழ் மறைய வேண்டிய ஒரு விஷயம் என்று தெரிகிறது.


ஒன்றே ஒன்று..


இத்திரைப்படத்தில்தான் டாஸ்மாக் பார் காட்சிகளும், பாட்டில்களும் நெகட்டிவ் கணக்கில் அதிகம் தென்பட்டன. இந்தப் படத்தைப் பார்க்கும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு டாஸ்மாக் கடைகள் இனி 'கண்கண்ட கோவில்கள்தான்' என்பதில் எனக்கு ஐயமில்லை.


அதே போல் எவரெஸ்ட் சிகரம் அளவிற்கு எனக்குள் எழுந்திருக்கும் ஒரு கேள்வி..


திரைப்படத் தணிக்கை அலுவலகத்தில் இந்தத் திரைப்படத்திற்கு எப்படி U சர்டிபிகேட் கொடுத்தார்கள் என்று..?


சிறுவர்களும், பக்குவம் அல்லாத வயதினரும் பார்க்கவே கூடாத காட்சிகளும், வசனங்களும் நிறையவே நிரம்பியிருக்கும் இப்படம் பெரியவர்களைக் கட்டிப் போட்டுவிட்டது.. அதையே சின்னக் குழந்தைகளோடு போய் பார்க்க வேண்டுமெனில்..
 

இதன் உச்சக்கட்டமாக உத்ரா டிரெஸ் மாற்றும்போது, ஒரு கரப்பான்பூச்சி செல்லும் அளவே கிடைக்கும் இடைவெளியில் சிறு கண்ணாடியை வைத்து உத்ராவின் உடலழகைப் பார்க்கும் தயாவின் துடிப்பும், அந்தக் காட்சி எடுக்கப்பட்ட விதமும் காமத்தை பறைசாற்றாமல் தயாவின் வக்கிர குணத்தை எடை போட மட்டுமே உதவுகிறது என்ற எண்ணத்தில் தணிக்கைத் துறை கத்திரிக்கோலைத் தொடாமல் விட்டுவிட்டதோ என்று நினைக்கிறேன்...

தணிக்கைத் துறையின் போக்கு புரிபடவில்லை. இத்திரைப்படத்திற்கு A சர்டிபிகேட்தான் தந்திருக்க வேண்டும்.

இது போன்ற Bugsகள் நிறைய இருந்தாலும்,

வயது வந்தவர்களுக்கான திரைப்படமாக இருந்தாலும், அதுவே அந்தப் பிரிவில் மிகச் சிறந்த திரைப்படமாக இருப்பதால் குறைகளைத் தவிர்த்து விடுங்கள்.. நிறைகளை உரக்கச் சொல்வோம்..

(இருப்பவைகளெல்லாம் மீதமுள்ளவைகளே.. இருப்பவைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளவில்லையெனில் மீதம் என்று சொல்வதற்கு நமக்குள் ஏதுமிருக்காது.

- ஸ்டான்லி குப்ரீக்கின் ‘இருப்பவைகளெல்லாம் சினிமாக்கள் அல்ல’ என்ற நூலில் இருந்து)

காதல்தான் எத்தனை வலிமையானது..?

14-02-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நீங்கள் காதல் கொண்டிருக்கிறீர்களா..?

பருவத்தால் எய்யப்பட்ட காதல் அல்ல..

வாழ்க்கை என்னும் பாதையில் உங்களால் விரும்பப்பட்ட காதல் உங்களுக்கு கிடைத்திருந்தால் அதை எவ்வளவு ஆனந்தமாக கொண்டாடியிருப்பீர்கள்..?


அக்காதலை இழக்க வேண்டிய தருணம் வந்தால் அப்போது என்ன செய்வீர்கள்?

அதுவும் இயற்கையின் கையில் உங்களை ஒப்படைக்கப் போகும் முதுமை, உங்களைச் சூழ்ந்திருக்கும் நேரத்தில், அந்தக் காதல் உங்களுக்குள் பொய்த்துப் போயிருக்குமா?

காதலை வெல்லும் சக்தி எது..?

மரணத்தைத் தவிர வேறு எதற்கும் அந்த சக்தியில்லை என்பதை ஒரு மனிதனின் முதுமைப் பருவத்தை வைத்து படமெடுத்துக் காட்டியிருக்கிறது இந்த “KONYEC” என்கின்ற ஹங்கேரி நாட்டுத் திரைப்படம்.

து உலகை உய்விக்க வந்ததாகச் சொல்லப்பட்ட கம்யூனிஸம், தனது ஆக்டோபஸ் கரங்களால் ஹங்கேரியை கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த காலம்.

ஒரு வீட்டில் சோதனையிட அரசின் ரகசியப் பிரிவு போலீஸார் வருகிறார்கள். அக்குழுவில் இருப்பவர்களிலேயே மிக இளையவனான எமில் வீட்டின் மேல் பகுதியைச் சோதனையிடத் தனியாகச் செல்கிறான்.

அவன் அங்கே துழாவிக் கொண்டிருக்கும்போது திடீரென்று மேல் தளத்தை உடைத்துக் கொண்டு ஒரு இளம்பெண் கீழே விழுந்து பதட்டத்துடனும், பயத்துடனும் எழுந்து நிற்கிறாள்.

அவள் பார்வையிலேயே ‘நான் குற்றமற்றவள்.. என்னை நம்பு.. என்னை விட்டு விடு..’ என்று கெஞ்சுவதைப் போல் இருக்க.. இளைஞன் எமில் தன்னை மறக்கிறான். இள வயது கெமிக்கல் ரியாக்ஷனில் அவன் தவிக்க..

சட்டென்று அப்பெண் தனது காதுகளில் இருக்கும் தோடுகளைக் கழட்டி அவன் கையில் திணித்து ‘டைமண்ட்ஸ்’ என்கிறாள். கம்யூனிஸத்தால் ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த உடனடி பலன் இதுதானே.. தோடை தன் பாக்கெட்டில் போட்டுவிட்டு கீழேயிருந்து “என்ன சப்தம்..?” என்று கேட்ட தன் கேப்டனிடம் “ஒன்றுமில்லை..” என்கிறான் எமில்.

அதற்குள் நான்கைந்து காவலர்கள் மேல்மாடியைச் சோதனையிட வர.. வேகவேகமாக அந்த இளம்பெண்ணை இழுத்து ஒரு ஜன்னல் வழியாக வெளியேற்றி வீட்டின் ஓடு உள்ள பகுதியில் மறைத்துவைத்து அவளைக் காப்பாற்றுகிறான்.

காவலர்கள் தேடிப் பார்த்து வெறும் கையுடன் வெளியேறியவுடன் அந்த வீட்டின் உச்சத்தில் நின்று கொண்டிருக்கும் அப்பெண்ணைத் தேடிச் செல்லும் எமில், அப்பெண்ணின் கைகளில் அத்தோடை வைத்து அவளது கைகளை இறுக்கமாகப் பிடிக்க.. அங்கே நிகழ்த்தப்பட்ட ஒரு கவிதைப் படைப்புடன், கதை நிகழ்காலத்திற்கு வருகிறது.

எமில் இப்போது 81 வயது முதியவர். அவருடைய அன்பு மனைவி ஹீடிக்கு வயது 70. அரசு தரும் பென்ஷன் தொகையை வைத்துக் கொண்டு புடாபெஸ்ட்டில் ஒரு அபார்ட்மெண்ட்டில் வசித்து வருகிறார். வாழ்க்கைச் சூழலுக்கேற்ப எப்போதோ வாங்கிய கடன்கள் இப்போது அவர்களது கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கின்றன.

கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து மிரட்ட வீட்டின் உள்ளே இருந்து கொண்டே ‘இல்லை’ என்று சொல்ல வைக்கும் பரிதாபமான வேலையையெல்லாம் இந்த வயதிலும் செய்கிறார் எமில். கடன் கொடுத்தவர்களைச் சமாளிப்பதற்காக மனைவி ஹீடியே, பக்கத்து வீட்டு பெண் போல நடிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.

இதனால் ஏற்படும் மன உளைச்சல் எமிலை அலைக்கழிக்கிறது. அந்தச் சூழலிலும் அவர்களுடைய காதலுக்கு உறுதுணையாக இப்போதும் மனைவி ஹீடியின் காதில் தொங்கிக் கொண்டிருக்கும் வைரத்தோடுகள் சர்ச்சையைக் கிளப்புகிறது.

“எந்தக் காலத்திலும் அதனை விற்கவிட மாட்டேன்..” என்கிறார் கணவன் எமில். “எப்போது பார்த்தாலும் அதே பேச்சுத்தானா..?” என்கிறாள் மனைவி.

சில நாட்கள் கழித்து கடன்காரர்கள் ஜப்தி செய்வோரோடு வீட்டுக்குள் வந்துவிட.. இப்போது தப்பிக்க முடியாத நிலைமை எமிலுக்கு.. தூக்கிச் செல்லக்கூடிய வகையில் இருப்பவை எந்தப் பொருட்கள் என்று அவர்கள் பார்க்க.. கடைசியில் எமிலுக்கு என்றும் துணையாய் இருக்கிற புத்தகங்கள்தான் அவர்களது கண்களுக்குத் தெரிகிறது.

வந்தவர்கள் புத்தகங்களைத் தொடப் போக, “வேண்டாம்.. இதை வைத்துக் கொண்டு போய்த் தொலையுங்கள்..” என்று சொல்லி தன் காதில் இருக்கும் இரண்டு வைர தோடுகளையும் கழட்டிக் கொடுக்கிறாள் மனைவி.

எமில் கிட்டத்தட்ட இந்த இடத்தில் இறந்து போகிறார். பின் அரை உயிராக உயிர்த்தெழுகிறார். 60 வருட திருமண வாழ்க்கையில் எந்தக் கஷ்டத்திலும் தான் செய்யாத ஒரு தவறை, தன் பொருட்டு மனைவி ஹீடி செய்து விட்டாரே என்கிற குற்றவுணர்வு அன்றைய இரவு முழுவதும் அவரைத் தூங்க விடாமல் செய்கிறது.

கதை இங்கிருந்துதான் துவங்குகிறது.

விடிந்தும், விடியாததுமாக பெட்ரோல் கேனுடன் கிளம்பும் எமில், பக்கத்து வீட்டுக்காரனின் காரில் இருந்து பெட்ரோலைத் திருடி தனது காரில் அதை ஊற்றிவிட்டு காரைக் கிளப்பிக் கொண்டு செல்கிறார். இதனை பக்கத்து வீட்டுக்காரர்கள் மட்டுமே பார்க்கிறார்கள்.

கிளம்பிச் செல்லும் கார் போஸ்ட் ஆபீஸில் வந்து நிற்கிறது. ஏதோ ஒரு தீர்மானத்துடன் செல்லும் எமில், தனது இடுப்பில் இருக்கும் துப்பாக்கியை கையில் எடுத்துப் பார்த்துக் கொள்கிறார்.

போஸ்ட் ஆபீஸில் “நெக்ஸ்ட்” என்ற குரலுக்கு தலைசாய்க்கும் எமில் கவுண்டருக்குள்ளே ஒரு பிளாஸ்டிக் பையை கொடுத்து “ப்ளீஸ் இதை fillup செய்யுங்கள்..” என்கிறார். கவுன்ட்டரில் இருந்த பெண் புரியாமல் விழிக்க..
கைக்குட்டையால் முழுவதும் மறைத்து குண்டு வெளிப்படும் வாய்ப்பகுதியை மட்டும் அந்தப் பெண்ணின் கண்ணில் காட்டும் எமில், “பிளாஸ்டிக் பை பணத்தால் நிரப்பப்படாவிட்டால், குண்டு உன் மீது நிச்சயம் பாயும்..” என்கிறார்.
புரிந்தும், புரியாமலும் அப்பெண் தவிக்க, “சீக்கிரம். நான் 30 வருஷம் கழித்து இப்போதுதான் முதன்முறையாக துப்பாக்கியைத் தூக்கியிருக்கிறேன்” என்கிறார் கலவரமாக.

அப்பெண் இவரெல்லாம் கொள்ளையடிக்க வருவாரா என்ற சந்தேகத்துடனேயே அந்தப் பிளாஸ்டிக் பை நிறைய பணத்தை நிரப்பிக் கொடுக்க.. சந்தேகமே வராத அளவிற்கு மின்னல் வேகத்தில் வெளியே வந்து காரைக் கிளப்புகிறார் எமில்.

போலீஸ் ஆபீஸர் ஆண்டர், தனது சக பெண் ஆபீஸரான அகியுடன் அன்னியோண்யமாக இருக்கும் காட்சி, இன்ட்டர்நெட்டில் ‘உலா வரும் ஒளிக்கதிராக’ வலம் வரும் காட்சியை ஆண்டரிடம் காட்டி அவனுக்கு பனிஷ்மெண்ட்டாக போக்குவரத்துத் துறைக்கு டிரான்ஸ்பர் செய்கிறார் அவனுடைய மேலதிகாரியான கேப்டன்.(எல்லா நாட்டிலும் போக்குவரத்துத் துறைதான் பனிஷ்மெண்ட் ஏரியா போலிருக்கு)

தான் எப்போது லெப்டினன்ட் ஆவோம் என்பதைக் கேட்பதற்காக வந்த ஆண்டர், இப்போது ரோட்டில் நிற்க வேண்டும் என்ற சோகத்துடன் செல்கிறான்.

இங்கே வீட்டில் ஹீடி கணவரைத் தேடுகிறாள். கணவர் வீட்டில் இல்லை என்றதும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க அங்கே கார் இல்லை. பெட்ரோலுக்கு என்ன செய்தார் என்ற குழப்பத்தில் இருக்க, டிவியில் போஸ்ட் ஆபீஸ் கொள்ளை பற்றிய செய்தி ஒளிபரப்பாகிறது.. தன் கணவர்தான் அச்சம்பவத்தின் ஹீரோ என்பது தெரியாமல் போகிறது அவளுக்கு.

கேஸ் நிரப்பும் பங்கின் ஊழியர்கள் இருவர், ஓனர் இல்லை என்பதால் மகா சந்தோஷத்துடன் ஒரு பலான படத்தின் டிவிடியை வாங்கி அவசர அவசரமாகப் பிரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் உள்ளே நுழையும் நமது ஹீரோ எமில், அங்கேயும் தனது துப்பாக்கியைக் காட்டி தனது காருக்கு கேஸை முழுவதும் நிரப்பிக் கொண்டு டாட்டா காட்டி விட்டுச் செல்கிறார்.

பலான படத்தை INCAMERA படம் பிடிக்கக்கூடாதே என்பதற்காக ஊழியர்கள் கேமிராவைக் கையால் திருப்பியபோது, மிகச் சரியாக எமில் உள்ளே வரவும் அவரது திருவுருவம் அக்கேமிராவில் பதிவாகிறது. போலீஸ் விசாரணையின்போது கடைப் பையன்கள் பலான மேட்டரை மட்டும் மறைத்துவிட்டு, மீதி அத்தனையையும் சொல்லிவிடுகிறார்கள்.

இங்கே ஆண்டர் கடும்சோகத்துடன் ROAD PATROL வண்டியில் அமர்ந்திருக்கிறான். உடன் அமர்ந்திருக்கும் நீண்ட வருடங்களாக இப்பிரிவில் இருக்கும் காவலன் சாலைகளில் செல்லும் கார்களின் மாடல்களை பார்த்த மாத்திரத்திலேயே சொல்லி அவனை அசத்திக் கொண்டிருக்கிறான்.

இந்த நேரத்தில் இரண்டாவது கொள்ளை பற்றிய செய்தி போலீஸ் வயர்லெஸ்ஸில் வர.. இப்பொழுது இந்த நபரைப் பிடிக்க ஆண்டரின் காதலி ஆகி, சிறப்பு காவலராக நியமிக்கப்பட்டிருப்பது ஆண்டருக்குத் தெரிய வர.. உடனிருக்கும் காவலனை நடுரோட்டில் நிற்க வைத்துவிட்டு வேகவேகமாக காரைக் கிளப்பிக் கொண்டு கேப்டனைத் தேடிச் செல்கிறான் ஆண்டர்.

அங்கே கேப்டனிடம் ஆகியுடன் இணைந்து இந்த வழக்கைத் தான் விசாரிப்பதாகச் சொல்கிறான். கேப்டன் வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொள்ள ஆகியுடன் விசாரணைக் களத்திற்குக் கிளம்புகிறான்.

தனது வீட்டில் பக்கத்து வீட்டுப் பெண்களுடன் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், எமில் Gas Bank-ல் துப்பாக்கியைக் காட்டும் வீரசாகசம் நியூஸாக வர.. மனைவி ஹீடி அதிர்ச்சியடைகிறாள். அவளால் நம்ப முடியவில்லை. கூடவே அதிர்ச்சியாகும் பக்கத்து வீட்டுப் பெண்கள் “இந்த ஆம்பளைங்களையே நம்ப முடியாது.. உன் புருஷன் என்னிக்காச்சும் ஒரு நாளாவது என்னைப் பார்த்து சிரிச்சிருப்பானா..” என்றெல்லாம் இதுதான் சாக்கு என்று போட்டுத் தாக்குகிறார்கள்.

ஹீடி இடிந்து போகிறாள். அவளுக்குள் ஒரு போராட்டம். தான் வைரத்தோடுகளைக் கழட்டிக் கொடுத்ததுதான் தனது காதல் கணவரின் இப்படியொரு முட்டாள்தனத்திற்குக் காரணம். தானும் இதற்கு ஒரு காரணமாகிவிட்டோமோ என்றெண்ணுகிறாள்.

இந்த நேரத்தில் Gas Bunk-காரன் எமில் ஓட்டி வந்தது ஒரு பழைய வகை கார் என்று சொல்ல.. ஆண்டருக்குப் பொறி தட்டுகிறது. உடனேயே நடுரோட்டில் விட்டுவிட்டு வந்த காவல் நண்பனுக்கு போன் போட்டு மறக்காமல் முதலிலேயே ‘ஸாரி’ கேட்டுவிட்டு அவன் சொன்ன கார்களின் வகைகளையும், நம்பரையும் கேட்க அவன் மனப்பாடமாகக் கொட்டுகிறான். AN 9725 என்கிற நம்பரை கண்டுபிடிக்கும் போலீஸ் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்குப் பாயத் துவங்க..

இங்கே எமில் ஊர் ஓரமாக காரை நிறுத்திவிட்டு ஹீடிக்கு போன் செய்கிறான். ஹீடி போனை எடுக்க வரும்போது போன் கட்டாகிவிட.. தூங்கியிருப்பாளோ என்ற நினைப்பில் போனை கட் செய்கிறார் எமில்.

ரொட்டியை வாங்கித் தின்றபடியே பின் சீட்டில் அமர்ந்திருப்பவரிடம் வருகிறாள் ஒரு பெண். “ஒன்றரை மணி நேரம்தான்.. 15 பிராங்க் கொடுத்தால் போதும்..” என்கிறாள். “எதற்கு..” என்று கேட்கிறார் எமில். “இப்படிக் கேட்ட முதல் ஆம்பளை நீங்கதான்..” என்று சொல்லிச் சிரிக்கிறாள் அவள்.
எமில் தனது துப்பாக்கியை எடுத்துக் காட்டி “எனக்கு காசு கொடுக்குறது பிடிக்காது. பரவாயில்லையா..?” என்று சொல்ல.. அடுத்த நொடி காரிலிருந்து இறங்கி ஓடுகிறாள். தப்பித்தோம் என்ற திருப்தியில் எமிலும் சிரிக்கிறார்.

இந்தப் பெண்ணும் மறுநாள் நல்ல பிள்ளையாக போலீஸ் ஸ்டேஷன் போய் “நான் டிவியில் காட்டிய ஆளை பார்த்தேன்..” என்கிறாள். அங்கே போலீஸ் செல்கிறது. எமில் இல்லை.

மறுநாள் எமிலியின் வீட்டைக் கண்டுபிடித்து அங்கே வருகிறார்கள் ஆண்டரும், ஆகியும். ஹீடியிடம் விசாரணை நடக்கிறது.. “தனது கணவர் என்றைக்கும் இப்படி நடந்து கொண்டதில்லை. அவர் சீரியஸ் திருடர் இல்லை.. கொள்ளைக்காரர் இல்லை.. ஒருவித மனவெறுப்பில் இதைச் செய்துவிட்டார்” என்கிறாள் ஹீடி.

கண்டிப்பாக எப்படியும் வீட்டைத் தொடர்பு கொள்வார் என்ற சந்தேகத்தில் இரண்டு போலீஸ் புலிகளும் வீட்டிலேயே இருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. போன் செய்கிறார் எமில். அது டேப் செய்யப்பட ஹீடி அவருடன் பேசுகிறாள்.

அவளை ஒரு இடத்திற்கு வரச் சொல்கிறார் எமில். சூழ்நிலைக் கைதி என்ற நிலையில் ஹீடி சரி என்று தலையாட்ட.. போலீஸ் வலை விரிக்கிறது..

ஒரு சுண்ணாம்பு காளவாசல் போன்ற அமைப்பில் இருக்கும் இடம். மணல் கற்கள் கொட்டி வைக்கப்பட்டு இரு பெரும் பள்ளத்தாக்குகளுக்கு இடையில் கார்கள் அணிவகுத்து வருகின்றன. அதன் ஒரு மூலையில் அமைதியாக தனது காரில் அமர்ந்திருக்கிறார் எமில்.

ஹீடி தான் வந்த காரிலிருந்து இறங்கி எமிலை நோக்கிச் செல்கிறாள். யாரும் செய்யத் துணியாத சாகசச் செயலை செய்த திருப்தியில் இருக்கிறார் எமில். அங்கே அவர்கள் இருக்கும் இடையில் எழும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தில் போலீஸ¤ம் உடன் வந்திருக்கிறார்கள் என்பது எமிலுக்குப் புரிகிறது.

சட்டென கிளம்புகிறார்கள். போலீஸ் துரத்த.. அதிர்ஷ்டவசமாக எமிலின் கார் அவ்வளவு பெரிய மேட்டிலும் ஏறிச் செல்ல.. போலீஸ் கார் ஏற முடியாமல் சறுக்கிப் போக.. அவரை கோட்டை விடுகிறார்கள்.

இப்போது அமைதியாகப் போய்க் கொண்டிருக்கும் காரில் தனது காதல் கணவரின் தோளில் சாய்ந்து அமைதியாக இருக்கிறாள் ஹீடி. எமிலுக்கு தாங்க முடியாத சந்தோஷம். தன் மனைவிக்கு ஒரு அமைதியைக் கொடுத்திருக்கிறோமே என்று..

இங்கே மீடியாக்கள் கேப்டனிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க.. விரைவில் பிடித்துவிடுவோம் என்று ஊர் மக்களுக்கு உறுதியளிக்கிறார் கேப்டன்.

“நான் வைரத் தோடுகளைக் கழட்டிக் கொடுத்ததுதான் இவ்வளவுக்கும் காரணமா..?” என்கிறாள் ஹீடி. எமில் மறைமுகமாக அதை ஒப்புக் கொள்கிறார். அதை மீட்பதுதான் அடுத்த வேலை என்கிறார்.

சொன்னது போலவே ஜப்தி செய்ய வந்த கடைக்கு மனைவியுடன் செல்கிறார். அந்தக் கடைக்காரனும் எமிலி வயதுக்காரன். முன்பே தெரிந்தவன்தான். எமிலியைப் பார்த்ததும் சந்தோஷமடைந்து, “இப்பத்தான் வர்றதுக்கு வழி தெரிஞ்சதா” என்று கேட்கத் துவங்க.. எமில் துப்பாக்கியைத் தூக்குகிறார். “மொதல்ல வைரத் தோடு..” என்கிறார்..

தோடுகள் இப்போது கை மாற.. காரில் ஏறியவுடன் தனது அன்பு மனைவியின் கைகளில் அத்தோடுகளை வைத்து கைகளை இறுக மூடி பற்றிக் கொள்ளும் எமிலியின் வயதான அந்தக் கண்களில்தான் எவ்வளவு நிம்மதி..

ஆனால் காவல்துறை நிம்மதியாக இல்லையே.. நம்ம ஊர் மாதிரியென்ன, ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மறுகண்ணில் சுண்ணாம்பு மாதிரியானவர்களா அங்கேயுள்ளவர்கள்..

அனைத்து டிவிக்களிலும் வயதான இந்தத் தம்பதியினர்தான் வலம் வருகிறார்கள். ஒரு வயதானவர்களையே கண்டுபிடிக்க முடியாத காவல்துறை நமக்கெதுக்கு என்ற ரீதியில் கருத்துக்கள் எல்லாம் நேரடி ஒளிபரப்பாக வர.. கேப்டன் தனது படையை முடுக்கிவிடுகிறார்.
ஆனாலும் எமில் அசரவில்லை..

அடுத்த இலக்காக ஒரு வங்கியைக் குறி வைக்கிறார். அது மதிய நேரம். கையில் துப்பாக்கியுடன் கதவைத் தள்ளிக் கொண்டு ஹாலுக்குள் வரும் எமில், “யாரும் அசையாதீர்கள்.. சுட்டுவிடுவேன்..” என்று கத்த.. அங்கே யாருமே இல்லை. கவுன்ட்டரில்கூட யாருமில்லை. சிறிது நேரம், “யார் அங்கே..?” என்று கத்திவிட்டு யாரும் வராததால் “இன்றைக்கு இவர்களுக்கு நல்ல நேரம். தப்பித்துக் கொண்டார்கள். வா.. போகலாம்” என்று சொல்லி மனைவியை அழைத்துக் கொண்டு பறக்கிறார் எமில்.

இதை பக்கத்து வீட்டு மாடியிலிருந்து பார்க்கும் ஒருவன் காவல்துறைக்கு போன் செய்ய பறந்தோடி வருகிறார்கள் ஆண்டரும், ஆகியும்.

நல்லவேளையாக இந்த வங்கியின் INCAMERA-வில் வயதான தம்பதிகள் தெரிய வர.. இருவரின் புகைப்படத்தை ஒட்டி நோட்டீஸ்கள் தயாராகின்றன. கார் ஓட்டிக் கொண்டிருக்கும் எமிலின் கண்களிலும் அந்த நோட்டீஸ்கள் படுகின்றன.

கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று நினைத்து அருகில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு மனைவியை அழைத்துச் செல்கிறார் எமில். தனது முந்தைய வாழ்க்கையில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத எக்ஸ்கியூட்டிவ் ஷ¥ட்டில் தங்குகிறார்கள்.

விருப்பப்படி ஹாயாக இருக்கிறார்கள். மனைவியின் எதிர்ப்பையும் மீறி ஒரு தாய்லாந்து பெண்ணிடம் மஸாஜ் செய்து கொள்கிறார். நீச்சல் குளத்தில் மனைவியுடன் ஆனந்தமாக நீந்துகிறார்.

அன்று இரவு ஹோட்டலில் டின்னர் சாப்பிடுகிறார்கள். மனைவி ஹீடிக்கு சர்க்கரை நோய் உள்ளதால் அவ்வப்போது சுகர் செக் செய்ய வேண்டும். ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்பதால் ஸ்வீட்ஸ் நிறைய கொண்டு வரச் சொல்கிறார். ஹீடி ‘வேண்டாம்’ என்று மறுக்கிறாள். “நோ.. இன்னிக்கு நீ நான் கொடுக்கிறதையெல்லாம் சாப்பிட்டே ஆகணும்..” என்று கையைச் சொடுக்க “70” என்ற எழுதப்பட்டு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருக்கும் கேக் அவர்களது டேபிளுக்கு வருகிறது.

ஹீடிக்கு இன்று தன்னுடைய பிறந்த நாள் என்பது அப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. கணவருடன் அரக்கப் பரக்க ஓடிக் கொண்டிருந்ததில் தான் மறந்துவிட்டது புரிய.. கண்களில் பாசத்தைக் காட்டி கணவரை விழுங்குவதைப் போல் பார்க்கிறாள். எமிலின் குறும்புப் பார்வையும், எப்படி அசத்திவிட்டேன் பார்த்தாயா என்ற பெருமிதமும் அத்தம்பதிகளுக்குள் இருந்த காதலை வெளிப்படுத்துகிறது.

கேக்கை வெட்டியவுடன் ஹீடிக்குப் பிடித்தமான இசையை ஒலிக்க வைக்கிறார் எமில். ஹீடி நெகிழ்ந்து போகிறாள். அவருடைய கையைப் பிடித்து “என்னோட சின்ன வயசுலகூட இப்படியொரு பிறந்த நாள் கொண்டாடியதில்லை..” என்கிறாள்.

டிவிக்களில் இருவரின் புகைப்படத்தை வெளியிட்டு கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரொக்கப் பரிசு என்று அறிவிக்கிறது காவல்துறை. இதைத் தற்செயலாகப் பார்க்கும் ஹோட்டல் வரவேற்பாளர் பொறுப்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கிறார்.

விஷயம் ஆண்டருக்குத் தெரிய வர தான் மட்டும் முன்னால் சென்று பிடித்துவிட நினைத்து வேகவேகமாக ஹோட்டலுக்கு வருகிறான். கையில் துப்பாக்கியுடன் அறைக்கதவைத் திறந்து உள்ளே வந்தவன் கண்களில் நிம்மதியாகப் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்திருக்கும் ஹீடி தெரிகிறாள்.

எமிலைத் தேடி பாத்ரூமுக்குள் நுழைய பக்கத்து அறையில் இருந்து வெளியே வரும் எமில் சட்டென பாத்ரூம் கதவை இழுத்து மூடிவிட்டு ஹீடியை எழுந்து வரச் சொல்கிறார்.

இருவரும் பின்பக்கப் படிக்கட்டுக்குள் வழியாக வெளியேறத் துவங்க.. பாத்ரூமின் ஜன்னல் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வருகிறான் ஆண்டர். அவனும் அவர்களைப் பின் தொடர.. அதற்குள் காரைக் கிளப்பிக் கொண்டு செல்கிறார் எமில்.

இந்த முறை எமிலைத் தப்ப விட்டதற்காக ஆண்டரை சஸ்பெண்ட் செய்கிறார் கேப்டன். ஆண்டர் சோர்வடைந்து போகிறான். அவனைவிட ஆகிதான் வெறுப்பாகிறாள். ஆகிக்கு இப்போது அவனது தேவை பெரிதாகிறது. காரணம் அவள் ஆண்டரின் உறவால் கர்ப்பமாக இருக்கிறாள். தாய்மையுணர்வு அவளுக்குள் எழும்பியிருக்க, வாழ்க்கையின் பாதுகாப்புக்கு அரண் தேடுகிறாள். தனது படம் வெளியான விவகாரத்தில் ஆண்டரின் மீது அப்ஸெட்டில் இருந்த ஆகிக்கு இப்போது அது ஒரு பொருட்டே அல்ல என்பதைப் போல் இருக்கிறாள்.

இம்முறை எமில் தனது காதல் மனைவிக்காக அலைச்சலை மேற்கொள்ளாமல் எங்காவது இடம் கிடைத்தால் பதுங்குவது என முடிவெடுக்கிறார். அதற்காக அவர் தனது போர்க்கால நண்பரை ஒருவரைத் தேடி செல்கிறார்.

அந்த நண்பரோ இரவோடு இரவாக தெருவையே அடைத்து காம்பவுண்ட் சுவர் எழுப்பும் அளவுக்கு வில்லாதி வில்லனாக இருக்கிறார். தனது பழைய நண்பனுக்கும், அவர் மனைவிக்கும் மனமுவந்து அடைக்கலம் தருகிறார் நண்பர். கூடவே “அவர்கள் செய்வதில் எந்தவொரு தவறுமில்லை. நம் கஷ்டத்தைத் துடைக்க, முன் வராத சட்டம் என்ன பெரிய சட்டம்..? நாம் துப்பாக்கி ஏந்தி போராடாமலா இந்த நாட்டிற்கு சுதந்திரம் வந்தது..?” என்று தத்துவமெல்லாம் பேசுகிறார்.

பாட்டில், பாட்டிலாக ‘சரக்கு’ ஏற்றியதில் போர்க்குணமும் கூடுகிறது நமது முதியவர்களுக்கு.. எதற்கு சிறிது சிறிதாக கொள்ளையடித்து மூட்டு வலிக்கு இடம் கொடுக்க வேண்டும்..? மொத்தமாக, லம்பமாக அடித்தால் என்ன என்று ஐடியா கொடுக்கிறார் நண்பர்.

அந்த ஊர் வங்கிக்கு தினமும் கலெக்ஷன் பணத்தைக் கொட்ட வரும் ஒரு பணக்காரரை பற்றியும், அவருடைய ஜாதகத்தையும் பிட்டு பிட்டு வைக்கிறார் நண்பர். எமில் சந்தோஷமாக ஒத்துக் கொள்ள.. மறுநாள் ‘போரு’க்குச் செல்லலாம் என்று முடிவு செய்கிறார்கள்.

தான் மிகவும் விரும்பிய லெப்டினென்ட் பதவி தனக்குக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.. தனது காதலி ஆகியுடன் இணைந்து பணியாற்ற முடியவில்லையே என்ற வெறுப்பில் இருந்த ஆண்டர் எமிலின் வீட்டை மறுபடியும் சோதனையிடுவோம். ஏதாவது கிடைக்கும் என்ற புலனாய்வு ஐடியாவில் செல்கிறான்.

அங்கே எதிர்பார்த்தாற்போல் அவனுக்கு எமிலின் சோக வாழ்க்கையின் ஒரு பகுதி கிடைக்கிறது. எமிலி-ஹீடி தம்பதிகளுக்கு ஒரு மகன் இருந்திருக்கிறான். அவன் பள்ளியில் படிக்கும்போதே சைக்கிள் போட்டி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றவன் விபத்துக்குள்ளாகி இறந்துவிட்டான். ஹீடிக்கு கர்ப்பப்பையில் சிக்கல் உண்டானதால் அதற்குப் பிறகு கருத்தரிக்க இயவில்லை. ஆகவே ஒரே மகனின் மீது பாசத்தைக் கொட்டி அவனைத் தவிர வேறு உலகமில்லை என்றே வாழ்ந்து வந்த அத்தம்பதிகளுக்கு மகனின் மரணம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

அவனது உடலை அவர்களது பண்ணை வீட்டில் அடக்கம் செய்து வருடந்தோறும் ஒரு முறை அங்கே சென்றுவருவதைப் பழக்கமாகவும் வைத்திருப்பதையும் அறிகிறான் ஆண்டர்.

எப்போதும் போல் வங்கிக்கு பணப் பெட்டியுடனும், துணைக்கு ஒரு ஆள் பாதுகாப்புடனும் அந்தப் பணக்காரர் வர.. சும்மா மிரட்டுவதைப் போல் துப்பாக்கியைக் காட்டும் எமில், சற்று உணர்ச்சிவசப்பட்டு சுட்டுவிட, குறி தவறாமல் குண்டு பணக்காரரின் காலில் பாய்கிறது. பெட்டி எமில் கைவசமாகிறது. வெற்றிகரமாக மிகப் பெரிய ஜாக்பாட் கொள்ளையுடன் சந்தோஷமாக தப்பி ஓடுகிறார்கள் எமிலும், நண்பனும்.

கேப்டனுக்கு வியர்த்துப் போய்விட்டது. அதைவிட ஊர் சனங்களுக்கு..!
அன்றைய ரொட்டிவிலை உயர்வைவிட எமிலின் சாகசம்தான் பெரிய விஷயமாகிவிட்டது.. ‘முதியவர்களை நாம்தான் வாட்டி வதைத்துவிட்டோம். அதுதான் ராபின்ஹ¥ட் ஸ்டைலில் இப்படி இறங்க வைத்துவிட்டது..’ என்று எமிலுக்கு ஆதரவாக நான்கு பேரும், “அது எப்படி? யார் எந்த வயதில் செய்தாலும் குற்றம் குற்றமே..” என்று எமிலுக்கு எதிர்த்தரப்பில் நான்கு பேரும் தொலைக்காட்சிகளில் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க..

கேப்டன் போலீஸை முடுக்கிவிட.. யார் புதிதாக அந்தப் பக்கம் காரில் செல்வது.. வந்தது.. சென்றது.. என்றெல்லாம் நெடிய விசாரணையின் இறுதியில் நண்பனின் வீட்டை போலீஸ் சூழ்கிறது.

அந்த இரவில் எமிலும், ஹீடியும் ஒரு காரில் ஏறிக் கொள்ள.. நண்பன் தானே வடிவமைத்துக் கட்டிய கவசவாகனம் போன்ற டிரக்கில் ஏற்றி தானே கட்டிய காம்பவுண்ட் சுவரை இடித்துத் தள்ளிக் கொண்டு தப்பிக்க..

அந்த நேரம் வெளியே சுவர் ஏறிக் குதிக்கக் காத்துக் கொண்டிருந்த ஆகியின் மீது டிரக் மோத அவள் படுகாயமடைகிறாள். நண்பரின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் எமிலும், அவர் மனைவியும் ஆகியைத் தூக்கித் தங்களது வண்டியில் வைத்துக் கொண்டு பறக்கிறார்கள்.

விடிந்துவிடுகிறது. இவர்களைப் பிடிக்க ஹெலிகாப்டரே வந்து விடுகிறது. நான்கு முனைச் சாலைகளிலும் காவல்துறை சுற்றி வளைத்திருக்க.. “எந்த இடத்தில் பார்த்தாலும் அவர்களைச் சுட்டுத் தள்ளு” என்கிறார் கேப்டன்.

ஆனாலும் அகாயசூரராக எமிலும், அவர் மனைவியும் ஆகியுடன் தப்பித்து விட, நண்பன் மட்டும் வேண்டுமென்றே வலுவில் வந்து மாட்டுகிறான்.

ஆகி தற்போது பிணைக் கைதியாக எமிலிடம் இருப்பது தொலைக்காட்சியில் தெரிய வர, ஆண்டர் அங்கே ஓடி வந்து எமில் தம்பதிகள் அந்தப் பண்ணை வீட்டுக்குத்தான் போயிருப்பார்கள் என்று கேப்டனிடம் சொல்லி அனைவரையும் கிளப்புகிறான்.

அங்கே பண்ணை வீட்டில் காயம்பட்டிருக்கும் ஆகியை அக்கறையாக, அனுசரணையாக ஹீடி கவனித்துக் கொள்கிறாள். அவளுடைய காயத்துக்கு மருந்து போட்டு அவளுக்கு உணவை ஊட்டிவிட்டவள், தாங்கள் செய்கின்ற செயலின் குற்றவுணர்வை ஒரு துளிகூட காட்டாமல் இருப்பது ஆகிக்கு பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் தருகிறது.

காவல்துறை பண்ணை வீட்டை முற்றுகையிட ஆகியை பணயக் கைதியாக வைத்து தப்பிக்கிறார் எமில். ஹீடி, ஆகியுடன் கூடவே மூன்றாவது விருந்தினராக ஒரு கேன் பெட்ரோலையும் காரில் தூக்கி வைத்துக் கொண்டு பறக்கிறார் எமில்.

ஹெலிகாப்டர் இப்பவும் அவரைப் பின் தொடர, அடர்ந்த காடுகளுக்குள் காரைச் செலுத்தி ரேடார் கண்களிலிருந்து மறையும் எமில் அக்காட்டுப் பகுதியில் ஆகியை இறக்கிவிட்டு “சென்றுவிடு” என்கிறார்.

ஹீடி ஆகியை, “பத்திரமா இருந்துக்கோ..” என்று அன்பாகச் சொல்லிவிட்டு தனது கணவருடன் செல்ல.. ஆகியின் பார்வையில் கார் செல்கிறது.

காரின் உள்ளே பரம திருப்தியோடு எமில் தனது கரங்களை தனது காதல் மனைவி ஹீடியின் கரத்தோடு சேர்த்துப் பிடித்துக் கொள்ள அது சமயம் கேமிரா பின் சீட்டில் இருந்து இக்காட்சியை எடுத்திருக்கும் விதமே படத்தின் முடிவைச் சொல்லி ஒரு இனம் புரியாத வலியை ரசிகர்களின் மனதில் ஏற்படுத்தியிருந்தது.

ஒரு நான்கு முனைச் சந்திப்பில் புல்டோஸரையே நிறுத்திவைத்து கேப்டன் காவல் படையோடு காத்திருக்க முதலில் கார் வருகிறது. ஆகியும் உள்ளேதான் இருப்பாள் என்று நினைத்து புல்டோஸரை விலக்கச் சொல்கிறார் கேப்டன். ஆனால் பின்னாலேயே காலை நொண்டியபடியே ஆகி நடந்து வர..

காவல்துறை பரபரப்பாக.. புல்டோஸரை மீண்டும் நடுரோட்டுக்கு கொண்டு வரச் சொல்கிறார் கேப்டன். ஆகி சந்தோஷமாக ஆண்டரை நோக்கி வர.. ஆண்டர் ஆகியை எதிர்நோக்கி காத்திருக்க.. கேப்டனோ இந்த முறை இவர்களைப் பிடித்தால்தான் தனது பணியில் எதிர்காலத்தை பார்க்க முடியும் என்ற ஆசையில் காத்திருக்க..

கார் வருகிறது.. திடீரென்று வேகமெடுக்க.. காத்திருந்த காவலர்களின் முகத்தில் ஒரு சந்தேகம் எழ.. அது ஆகி, ஆண்டர், கேப்டன் ஆகியோரின் முகத்திலும் பட்டவர்த்தனமாய் தெரிக்க.. என்னவொரு வேகம்.. அந்தக் காருக்கு..

அவர்கள் நினைத்ததைப் போலவே அனைவரும் கடைசி நிமிடத்தில் சிதறியோட, ஒருமித்தக் காதல் தம்பதிகள் சந்தோஷமாக சாவிலும் இணைவோம் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.

அசுர வேகத்தில் வரும் கார் புல்டோஸரின் மீது மோதி வெடித்துச் சிதற.. அங்கே வெடித்துக் கிளம்பும் தீப்பிழம்புகளில் அக்காதலர்களின் உடலின் ஒரு பகுதியும் கிடைக்காது என்றாலும் அத்தீம்பிழம்புகள் கிளப்பிய ஒலியிலும், வெளிச்சத்திலும் அதை உண்டாக்கியது காதல் என்கிற ஜீவனுள்ள வார்த்தை என்பதை அந்த மேகக்கூட்டங்கள் அறிந்திருக்காது என்றே நினைக்கிறேன்.
முதுமை என்பது வரமா? சாபமா? என்றெல்லாம் நாம் பேசிக் கொண்டிருக்க நடிப்பில் மிகையில்லாமல் அதீத நடிப்பையும் கொட்டாமல் அளவோடு நடித்திருக்கிறார் எமில்.

தனது மனைவி வைரத்தோடுகளைக் கழட்டிக் கொடுக்கின்ற போது அவருடைய முகம் காட்டுகின்ற இயலாமை.. கோபம்.. வெறுப்பு. அந்த ஒரு நொடிதான் அவர் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரப் போகும் கோலத்தின் முதல் புள்ளி என்பதை மிக ரம்மியமாகவே சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

வெளியில் நிற்கும் கடன்கார அம்மாவுக்கு முகம் காட்டத் தயங்கி குனிந்தவர், நிமிர முடியாமல் தவிக்கின்ற தவிப்பு.. ஜப்தி செய்தவரிடம் தோடை பிடுங்கி ஹீடியின் கையில் கொடுக்கின்ற போது காட்டுகின்ற பெருமிதம்.. ஹீடியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து ஹீடி ரசிப்பதையே இவர் ரசிக்கின்ற பாங்கு.. முதுமையினால் தெரிகின்ற சுருக்கங்கள்கூட அழகாகத்தான் இருக்கின்றன.

ஹீடியாக நடித்தவரும் தன் பங்களிப்பை திறம்படவே செய்திருக்கிறார். பின்னல் செய்து கொண்டிருக்கையில் டிவியில் கொள்ளையடித்தவர் எமில்தான் என்பது காட்டப்பட அவர் முகத்தில் அறை வாங்கிய அதிர்ச்சியைக் காட்டி.. தொடர்ந்து தன்னால் அவருக்கு அப்படியொரு நிலைமை என்பதை ஆண்டரிடமும், ஆகியிடமும் சொல்ல முடியாமல் தவிக்கின்ற தவிப்பு.. ஒரு காதல் என்னவெல்லாம் செய்ய வைக்கிறது..

தன் மகன் இறந்த சோகத்தையும், பின்பு தான் கருத்தரிக்க முடியாமல் போனதையும் மனதில் வைத்து ஆகியின் வயிற்றைத் தொட்டுப் பார்த்து, “எப்பவும் பெண்களுக்கு வயிறுதான் முக்கியம்.. அதை பத்திரமா வைச்சுக்கணும்.. இல்லேன்னா எல்லாருக்குமே கஷ்டம்தான்..” என்று ஏக்கத்துடன் சொல்லும்போது தெரிகின்ற பெண்மை சார்ந்த பேச்சில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

60 வருட குடும்ப வாழ்க்கையில் தன் மனைவியின் கடைசி பெருமையான வைரத் தோடுகளை இழக்க வைத்த வாழ்க்கைச் சூழலை எப்பாடுபட்டாவது எதிர்த்தாக வேண்டும் என்கின்ற எமிலின் எதிர்ப்புத் திறனை எச்சட்டத்தாலும் அடக்க முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மைதான்.

ஒரு சிறு பொறிதான்.. உலகத்தையே புரட்டிப் போட்ட பொதுவுடமை என்னும் தத்துவத்தையே ஏமாற்றி கைப்பற்றிய தனது காதலை எவனோ ஒருவன் அடிமைப்படுத்திவிட்டானே என்ற எமிலின் கோபத்தின் மீதான உண்மையை நாம் உணரும்போது அவர் ஹீடி மீது கொண்டிருக்கும் காதலின் மீது நமக்கு ஒரு அரூபமான நட்பு ஏற்படுகிறது.

காதல்தான் எத்தனை சக்தி வாய்ந்தது..?