தாயம் - சினிமா விமர்சனம்

28-03-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பியூச்சர் ஃபிலிம் பேக்டரி இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
‘கதை, திரைக்கதை, வசனம்’ படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறிமுக ஹீரோயின் ஐரா அகர்வால் இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – பாஜி,  இசை – சதீஷ் செல்வம், படத் தொகுப்பாளர் – சுதர்சன், கலை இயக்கம் – வினோத் ராஜ்குமார், பாடல்கள் – முத்தமிழ், அருண்ராஜா காமராஜ். பாடகர்கள் – எம்.சி.ஜாஸ், சக்திஸ்ரீ கோபாலன், நிக்கித்தா காந்தி, அல்போனேஸ் ஜோசப், ஒலிப்பதிவு – கார்த்திக். எழுத்து, இயக்கம் – கண்ணன் ரங்கசாமி.

ஒரு மிகப் பெரிய கார்ப்பரேட் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி வேலைக்கு நேர்முகத் தேர்வு நடக்கிறது. 4 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட மொத்தம் 7 பேர் இந்த வேலைக்காக வந்திருக்கிறார்கள்.
அவர்களை ஒரு அறைக்குள் அழைத்து வருகிறார் கம்பெனியின் பொறுப்பு அதிகாரி. அங்கேயுள்ள டேபிள்களில் அவர்களை அமர வைக்கிறார்.
பின்பு, “நான் இப்போது கதவை பூட்டிவிட்டு வெளியில் சென்றுவிடுவேன்.  ஒரு மணி நேரம் கழித்துதான் திரும்பி வருவேன். இதே நிறுவனத்தில் சி.இ.ஓ.வாக வேலை பார்த்தவர் இந்த அறையில்தான் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இந்த அறையில்தான் ஆவியாக சுற்றிக் கொண்டிருக்கிறார். அந்த ஆவி இப்போது இங்கே வரும். அந்த ஆவியிடமிருந்து தப்பித்து உயிருடன் இருக்கும் ஒருவருக்குத்தான் இந்தப் பதவி தரப்படும்..” என்று சொல்லிவிட்டுப் போகிறார்.
வந்தவர்கள் அனைவருக்கும் திக்கென்றாகிறது. அடுத்து தேர்வு எழுத துவங்கும்போது சில அசம்பாவிதங்கள் நடக்கத் துவங்க.. அவர்கள் அனைவருக்குமே தாங்கள் யார் என்கிற விஷயமே மறந்து போகிறது. எப்படி உள்ளே வந்தோம்..? எதற்காக வந்தோம்..? என்பது தெரியாமல் ஒருவருக்கொருவர் வாக்குவாத்த்தில் ஈடுபடுகிறார்கள்.
சண்டையிடுகிறார்கள்.. குத்திக் கொள்கிறார்கள். சுட்டுக் கொல்கிறார்கள்.. இது இப்படியே தொடர.. ஒருவர் பின் ஒருவராக மரிக்கிறார்கள். பின்னர் கடைசியாக யார் உயிருடன் இருந்து வேலையை கைப்பற்றினார் என்பதுதான் படத்தின் கதை.
2010-ம் வருடம் வெளிவந்த பிரிட்டிஷ் படமான EXAM என்பதன் கதைக் கருவை காப்பியடித்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் தேர்வு எழுத வைத்து.. அதில் உள்ள பிரச்சினைகளை உளவியல் ரீதியாக இணைத்து படமாக்கியிருக்கிறார்கள். இதில் நேரடியாக மோதவிட்டு கொலை செய்திருக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.
சென்ற ஆண்டு இதே உளவியல் ரீதியான படமாக ‘நம்பியார்’ வெளிவந்து படு தோல்வியானது. அதே நிலைமைதான் இந்தப் படத்திற்கும். எந்தவிதக் கருத்தைச் சொன்னாலும், எளிய மக்களுக்கு புரியும்வகையில் அவர்களது மொழியில் சொன்னால்தான் அந்தப் படம் பேசப்படும். ஓடும்.. லாபத்தையும் சம்பாதிக்கும்.
இப்படி இயக்குநருக்கு மட்டுமே தெரிந்த கழுத்தைச் சுற்றி வந்து மூக்கைத் தொடும்விதத்தில் கதையும், திரைக்கதையும் இருந்தால் இதை எப்படி வெகுஜன ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று தெரியவில்லை..?
Multiple Personality DisOrder என்ற மன நல வியாதியின் ஒரு பிரிவை மையக் கருத்தாகக் கொண்டுள்ளது என்று படத்தின் இறுதியில்தான் சொல்கிறார்கள். பார்ப்பதற்கும், கேட்பதற்கும் திரைக்கதையில் சுவாரஸ்யமே இல்லை என்பதால் ஒரு அளவுக்கு மேல் படத்தை ரசிக்கவே முடியவில்லை.
நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், ‘காதல்’ கண்ணன், ஐரா அகர்வால், அன்மோல், ஆஞ்சல் சிங், ஷியாம் கிருஷ்ணன், ஜெயக்குமார், ஜீவா ரவி  உள்ளிட்டோர் நிறைவாகவே நடித்திருக்கிறார்கள்.
ஆனால் எதற்காக இந்தக் கூத்து..? என்னதான் நடக்குது என்கிற கேள்விக்கெல்லாம் பதிலே இல்லாத்தால் சுவாரஸ்யமே இல்லாத டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை டிரா ஆகும்வரையிலும் விடாமல் பார்த்த உணர்வைத்தான் இந்தப் படம் கொடுத்திருக்கிறது.
தொழில் நுட்ப ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. பதினைந்துக்கு பதினைந்து அடி கொண்ட அந்த அறையில் கேமிராவை தோளில் சுமந்து கொண்டு எப்படித்தான் படமாக்கினாரோ தெரியவில்லை.. கேமிராமேன் பாஜி நிச்சயமாக பாராட்டுக்குரியவர்.
இதேபோல் நடிகர்களை முடிந்த அளவுக்கு நடிக்க வைத்திருக்கும் இயக்குநர் வினோத்குமாருக்கும் பாராட்டுக்கள்..
ஒரே ஒரு லொகேஷன்தான். ஒரு நீட்ட வாக்கில் நகரும் அறை.. கலர் கலரான சுவர்கள்.. திடீரென்று லைட்டை போட்டு அடையாளம் காட்டும்விதம், அவர்களது தலைவிதியை நிர்ணயிக்க ஓடிக் கொண்டிருக்கும் வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட அந்த சுவர்க் கடிகாரம்.. என்று அனைத்திலும் கலை இயக்குநர் வினோத் ராஜ்குமார் தன்னுடைய முழு திறமையையும் காட்டியிருக்கிறார்.
படத் தொகுப்பாளர் சுதர்சன் தனது பணியை கச்சிதமாகச் செய்திருக்கிறார். ஆனால் கொஞ்சம் புரிவதை போல கிளைமாக்ஸை முன்கூட்டியே வைத்துவிட்டு கதையைச் சொல்லியிருந்தால், நிச்சயமாக படம் புரிந்திருக்கும். இதேபோல் காதுக்கு வலிக்காதவரையில் பின்னணி இசையை அமைத்திருக்கும் இசையமைப்பாளருக்கு நமது நன்றிகள்.
பூட்டப்பட்ட ஒரு அறைக்குள் 7 நடிகர்களை நடிக்க வைத்து.. அனைத்து காட்சிகளையும் திட்டமிட்டு திரைக்கதை அமைத்திருப்பதெல்லாம் காப்பியடித்து செய்திருந்தாலும் தமிழுக்கு ஏற்றபடி கொஞ்சம் மாற்றியிருக்கலாம்..!
படத்தில் தெரிந்தோ, தெரியாமலோ ஒரேயொரு உண்மையை மட்டும் சொல்லிவிட்டார்கள். அது கார்ப்பரேட் கலாச்சாரம் பற்றி..! நம் அனைவரின் சுற்றியுள்ள அனைவரையும் அழித்துவிட்டு தான் மட்டும் முன்னேறுவதுதான் கார்ப்பரேட் கலாச்சாரம் என்று இயக்குநர் ஆர்ட்டிஸ்ட் மூலமாக சொல்வது அப்பட்டமான உண்மைதான்.
அறிமுக இயக்குநரான கண்ணன் ரங்கசாமி தான் நினைத்ததுபோல ஒரேயொரு அறைக்குள்ளேயே நடக்கும் ஒரு வித்தியாசமான படத்தை வழங்கிவிட்டார். அது வெற்றி, தோல்வி என்பதெல்லாம் தனக்கு தேவையில்லாத விஷயமாக அவர் நினைக்கிறார் என்பதை இந்தப் படத்தின் மேக்கிங்கை பார்த்தாலே தெரிகிறது. வருத்தம் தரும் விஷயம் இது..!
கடைசியில், தாயம் உருட்டாமலேயே 12 விழுந்துவிட்டதாகச் சொல்லி கள்ளாட்டம் ஆடியிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை..!

0 comments: