ஆறாது சினம் - சினிமா விமர்சனம்

28-02-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஏமாற்றத்தைவிடவும் துரோகத்தைத்தான் மனித மனங்கள் தாங்குவதில்லை. அதிலும் காதல் துரோகங்கள் என்றால் இன்னும் அதிகமான துயரத்தையும், விளைவுகளையும் தருகின்றன. அப்படியொரு துரோகத்தின் விளைவுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.
2013-ம் வருடம் மலையாளத்தில் கதாசிரியரும், இயக்குநரான ஜீத்து ஜோஸப் கதை எழுதி இயக்கிய ‘மெமோரீஸ்’ என்கிற மலையாளப் படத்தின் ரீமேக்குதான் இது. கிளைமாக்ஸுக்கு பின்னான காட்சியொன்றைத் தவிர மற்றவையெல்லாம் அப்படியேதான் நேர்பட படமாக்கப்பட்டிருக்கிறது.

மதுரையில் திறமையான போலீஸ் அதிகாரியாக துடிப்புடன் பணியில் இருக்கும் அஸிஸ்டெண்ட் கமிஷனர் அருள்நிதி மாட்டுத்தாவணி ரவி என்னும் ரவுடியை பிடிக்கச் செல்கிறார். அங்கே நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் ரவியின் மனைவி தற்செயலாக குண்டு பாய்ந்து இறந்து போகிறார். ரவியையும் என்கவுண்ட்டர் செய்வதற்கு முன்பு மேலிட உத்தரவின் பேரில் சுடாமல் உயிருடன் பிடிக்கப்படுகிறான் ரவி.
ரவி சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் அருள்நிதியின் வீட்டிற்கு வந்து அருள்நிதியின் கண் முன்பாகவே அவருடைய மனைவி மற்றும் மகளை சுட்டுக் கொலை செய்கிறான். அவனையும் அருள்நிதி கொல்கிறார். ஆனாலும் தான் காதலித்து மணந்த மனைவியையும், குழந்தையையும் பறி கொடுத்த நிகழ்வு அருள்நிதியை தூங்கவிடாமல் செய்கிறது. அவர் கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கு அடிமையாகிறார்.
அவரைத் தாங்கி நிற்கும் அம்மாவின் பேச்சைக் கேட்க நினைத்தும் மதுவின் மயக்கமும், அவர் கண்ணெதிரே நிகழ்ந்த படுகொலையும் அவரை துக்கத்தில் ஆழ்த்துகிறது. அவரால் குடியில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார். இந்த நேரத்தில் அவரது தம்பியும் சொத்தைப் பிரித்துக் கொடுக்கும்படி கேட்டு வாங்கிச் செல்கிறார்.
இப்படி குடும்பத்தில் குழப்பம்.. குடியினால் அவதி என்று இவர் பிரச்சனைகளில் இருக்க.. மதுரையில் தொடர்ச்சியாக 3 ஆண்கள் காணாமல் போகிறார்கள். ஒரு வெள்ளிக்கிழமையன்று காணாமல் போகும் அவர்கள், சரியாக ஞாயிற்றுக்கிழமையன்று தமிழகத்தின் பரமத்தி வேலூர், போடி நாயக்கனூர், சிவகங்கை, ஆகிய வேறு,. வேறு ஊர்களில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்படுகிறார்கள்.
மதுரையின் போலீஸ் கமிஷனரான ராதாரவி.. இந்த வழக்கை எடுத்து விசாரிக்கும்படி அருள்நிதியை கேட்கிறார். முதலில் முடியவே முடியாது என்று மறுப்பவர்.. சில உறுதிமொழிகளுக்கு பின்பு ஏற்றுக் கொள்கிறார். விசாரிக்கத் துவங்கியதுமே மூன்று கொலைகளுக்குமே ஒரேயொரு தொடர்பு இருக்கிறது என்பதை கண்டறிகிறார்.
அந்த்த் துப்பினை வைத்து குற்றவாளியை நெருங்குகிறார். அதே சமயம் 4-வது நபரும் கடத்திச் செல்லப்பட்டு தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்டுக் கிடக்க.. பதற்றம் மதுரையைத் தொற்றுகிறது. இந்த நேரத்தில் கொலையானவர்களின் மனைவிமார்களை அழைத்து விசாரிக்கிறார் அருள்நிதி. அதில் மிகப் பெரிய உண்மை தெரிய வர.. கொலையாளியும் யாரென்று தெரிகிறது. இன்னும் ஒருவரை அவன் கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதும் தெரிய வருகிறது.
கடைசி ஆளை கொலை செய்வதற்கு முன்பாக கொலையாளியைப் பிடிக்க அருள்நிதி முயல்கிறார்.. அது முடிந்ததா இல்லையா என்பதுதான் இந்த சுவாரஸ்யமான திரைக்கதையின் முடிவு.
‘ஆறாது சினம்’ என்கிற தலைப்பு மிக கச்சிதமான பொருத்தம். அந்த மனநிலை பாதிக்கப்பட்ட கொலையாளியின் மனதைத் தைத்த அந்த துரோகத்தின் விளைவிற்கு இதைவிட பொருத்தமான பெயர் வேறென்ன சொல்ல முடியும்..?
‘மெளன குரு’விற்கு பிறகு அருள்நிதியின் நடிப்பிற்கு உத்தரவாதம் அளித்துள்ள கேரக்டர் இது. தன்னிரகத்துடனும்.. கழிவிரக்கத்துடனும் தன்னைத் தானே நொந்து கொண்டு மதுவின் மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது ஒவ்வொரு பேச்சும், ஆக்சனும் அந்தக் கேரக்டர் மீது ஒருவித பரிதாப உணர்வை கூட்டிக் கொண்டேதான் செல்கிறது. இடையிடையே செல்லும் அம்மா-மகன் பாச உணர்வு காட்சிகள் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருப்பதும் இந்தச் சோகக் காவியத்திற்கு உரம் ஊட்டியிருக்கின்றன.
போலீஸ் யூனிபார்மில் குடிப்பதுபோல காட்சிகள் வைத்தால் பிரச்சினை வரும் என்றெண்ணியே அதனை முற்றிலும் தவிர்த்து அன்-யூனிபார்மிலேயே அருள்நிதி விசாரணையில் இறங்குவதாக்க் காட்டியிருக்கிறார்கள். யூனிபார்ம் ஊழியர்களுக்கான அரசு நடத்தைவிதிகளின்படி இதுதான் சரி.
கொஞ்சம், கொஞ்சமாக போலீஸின் துப்பறியும் பணி அருள்நிதி அந்த வேலைக்குள் இழுத்துப் போடுவதை மெதுவான திரைக்கதையில் மெது, மெதுவான காட்சிகளின் மூலமாகச் சொல்லியிருக்கிறார்கள். இதுவே இடைவேளைக்கு பின்னான ரன் வேக திரைக்கதைக்கு பெரிதும் உதவியுள்ளது.
5 பெண்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் அடுத்தடுத்து வந்தாலும் அனைத்துமே கச்சிதமாக நறுக்கப்பட்ட காட்சிகளாக இருப்பதால் அவையும் சுவாரஸ்யமாகவே இருக்கின்றன. கிளைமாக்ஸ்வரையிலும் வில்லனின் முகத்தைக் காட்டாமல் மறைத்து அந்தக் கையையும், நொண்டியபடியே செல்லும் காலையும் காட்டியே ஏகத்துக்கும் ஒரு பில்டப்பை கூட்டியிருக்கிறார் கதாசிரியர். அருமை.. 5-வது நபராக வரும் அந்த திடீர் டிவிஸ்ட்டு எதிர்பாராதது.
‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’ படங்களின் இயக்குநரான கெளரவ் இதில், வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார். கிளைமாக்ஸில் மட்டுமே முகத்தைக் காட்டினாலும் அந்த உடல் மொழி பயமுறுத்துகிறது என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் சின்னச் சின்ன மாண்டேஜ் காட்சிகளில் முகம் காட்டியிருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் வலம் வருகிறார். இத்தனை அழகான, காதல் மனைவியையும், சின்னக் குழந்தையையும் இழந்துவிட்டு அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு வலம் வர முடியுமா என்கிற கேள்வியை இயக்குநர் நம்மிடம் கேட்கிறார். என்ன சொல்வது..?
இன்னொரு ஐஸ்வர்யாவும் படத்தில் வருகிறார். மதுரையின் தினகரன் ரிப்போர்ட்டராக.. டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் டெக்கானில் வேலை பார்த்துவிட்டு கடைசியாக ‘தினகரனில்’ வந்து சேர்ந்திருப்பதாக ஒரு காட்சியில் சொல்கிறார். நம்ப முடிகிறதா..? யாராச்சும் இப்படி வருவாங்களா..? இயக்குநர் விஷயத்தை தலைகீழாக மாற்றியிருக்கிறார்.
ராதாரவியின் வார்த்தைகளில் விரியும் அருள்நிதியின் அந்த சோகக் கதையைக் கேட்டுவிட்டு, ஐஸ்வர்யா தத்தா அழுது கொண்டே செல்வது போல காட்சியை வைத்து இது தமிழ்ப் படம்தான் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
படத்தின் துவக்கக் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் மின்னுகிறது ஒளிப்பதிவு. அரவிந்த்சிங்கின் கைவரிசையில் பாடல் காட்சிகள் மட்டும் சடலங்களை காட்டும் காட்சிகளில் ஒரு பரபரப்பும், அட்மாஸ்பியர் ஆச்சரியங்களும் ஷாட்டுகளை பார்க்கும்போது ஏற்படுகின்றன.
தமனின் பின்னணி இசை திகிலையும், சஸ்பென்ஸையும் கலந்து கட்டி அடிக்கிறது. பாடல் காட்சிகளிள் மாண்டேஜ் காட்சிகளே மனதைக் கவர்வதால் பாடல்களை கவனிக்க நேரமில்லைதான்.
எந்தக் கதையாக இருந்தாலென்ன.. திரைக்கதை சுவாரஸ்யமாகவும், பிரமாதமாகவும் இருந்தாலே போதும். படத்தை ஓட வைத்துவிடலாம் என்பார்கள். அந்த வகையில் இந்தப் படம் தானாகவே ஓடும் என்று எதிர்பார்க்கலாம். இரண்டாம் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு முதல் பாதியிலும் இருந்திருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்..!
ரோபோ சங்கர் கேரக்டரின் ஸ்கெட்ச்.. சார்லியுடன் அவர் பேசும் பல கவுண்டர் டயலாக்குகள்.. சீரியஸான அந்த காட்சிகளை காமெடியாக்கி ‘என்னத்த’ என்பது மாதிரியான உணர்வை ஏற்படுத்துகின்றன என்ற ஒரேயொரு குறையைத் தவிர, திரைக்கதையில் வேறு எதையும் சொல்ல முடியாது.
படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் தவறில்லாமல் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் அறிவழகன் தனது சிறப்பான இயக்கத்தினால் அப்படி நடிக்க வைத்திருக்கிறார். இதனால்தான் இந்த அளவுக்காச்சும் படத்தினை ரசிக்க முடிந்திருக்கிறது. அவருக்கும் நமது பாராட்டுக்கள்.
நடிகர் அருள்நிதி அடுத்தடுத்து இதேபோல் தனக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தால் அவரும் ஒரு இரண்டாம் வரிசை நடிகர் பட்டியலில் நிரந்தரமாக இடம் பெற வாய்ப்புண்டு..!
ஆறாது சினம் – சஸ்பென்ஸ் திரில்லர் விரும்பிகளுக்கேற்ற படம்..!

1 comments:

Unknown said...

#services in tamilnadu
#home services for electrical and electronics
#home appliances repair in trichy
visit our page https://ourtechnicians.com/
watch our video:https://youtu.be/2lFLF4SUTnM