சேதுபதி – சினிமா விமர்சனம்

20-02-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!





2010-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதியன்று நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில், தாமிரபரணி ஆற்றுப் பாலத்தின் அருகே பட்டப் பகலில், ஆழ்வார்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனின் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், மர்ம நபர்கள் சிலரால் வெடிகுண்டு தாக்குதல், மற்றும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

போலீஸ் விசாரணையில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டாலும் கொலைக்கான காரணத்தை அறிந்தபோது படு டிவிஸ்ட்டாக இருந்தது. உண்மையில் கொலையாளிகள் கொலை செய்ய நினைத்தது அப்போதைய கடையம் நகர போலீஸ் ஸ்டேஷனின் சப்-இன்ஸ்பெக்டரான சிவசுப்ரமணியத்தை.. அவருக்கு வைத்த குறியில் தவறுதலாக வெற்றிவேல் மாட்டிக் கொள்ள, இவரை போட்டுத் தள்ளிவிட்டார்கள்.

கொலைக்கான காரணம்.. உயிர் தப்பிய சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியம், கொலைக் கும்பலின் தலைவனான கந்தசாமியின் தங்கையான சிவகாமியை மணந்தவர். திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்து தனது மனைவிக்கு படிப்பு இல்லை என்று கூறி சிவசுப்ரமணியம் சிவகாமியை அவருடைய தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கும் போட்டார்.

இதனை எதிர்த்து அவர் மனைவியும் வழக்கு தொடுத்தார். கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவன் சிவசுப்ரமணியன் மீது சிவகாமி போலீஸில் புகார் கொடுக்க சிவசுப்ரமணியன் அப்போது பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகு பல்வேறுவிதமான பேச்சுவார்த்தைகள், கட்டப் பஞ்சாயத்துகள் பலவும் செய்து சிவசுப்ரமணியம் இறங்கி வரவில்லை. சிவகாமியுடன் குடும்பம் நடத்தவும் மறுத்துவிட்டார். இதனால் சிவகாமியின் குடும்பத்தினர் அவர் மீது ஆத்திரம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்று மீண்டும் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்தார் சிவசுப்ரமணியன். அதே நேரம் தன் தங்கை வாழாவெட்டியாக வீட்டில் இருப்பதை பார்க்கச் சகிக்காத அந்த பாசமலர் அண்ணன் கந்தசாமி, மாப்பிள்ளை சிவசுப்ரமணியனை கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார். இதற்கு அப்போது ஆழ்வார்குறிச்சியில் வசிக்கும் இவர்களுடைய உறவினரான ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்திடம் ஆலோசனை கேட்டிருக்கிறார்கள்.

சிவசுப்பிரமணியன் அடிக்கடி அம்பாசமுத்திரம் கோர்ட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் கடையம் திரும்பி வருவார். இதனை ஒரு மாதமாக கண்காணித்து வந்த டீம், அப்படி அவர் திரும்பி வரும் வழியில் ஆழ்வார்குறிச்சியில் போட்டுத் தள்ள ஸ்கெட்ச் போட்டிருக்கிறது.

சம்பவம் நடந்த அன்று அம்பை தாலுகா அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி ஒரு சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார்குறிச்சியை நோக்கி வந்து கொண்டு இருப்பதாக இந்தக் கும்பலுக்கு தகவல் கொடுத்திருக்கிறார் இன்பார்மர். ஹெல்மெட் போட்டிருப்பதால் அவர்தான் சிவசுப்ரமணியம் என்று நினைத்து இன்பார்மர் இந்தத் தகவலைச் சொல்ல.. கொலையாளி டீமும் பொறுமையாக காத்திருந்து வெற்றிவேலை படுகொலை செய்தார்கள்.

வெடிகுண்டுகளை வீசியதால் வெற்றிவேலின் கால் துண்டாகிவிட்டது. அரிவாளால் அவருடைய கழுத்தில் வெட்டியும் அவர் உடனடியாக சாகவில்லை. ரத்தம் வடிய வடிய நடுரோட்டில்  உயிருடன் துடியாய் துடித்துக் கொண்டிருந்தார்.


அப்போது அந்த வழியே அப்போதைய தி.மு.க. அமைச்சர்கள் பன்னீர்செல்வம், டி.பி.எம்.மைதீன்கான், நெல்லை கலெக்டர் ஜெயராமன் ஆகியோர் காரில் வந்தார்கள். இந்த்த் தாக்குதலை பார்த்தவுடன் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேலின் அருகிலேயே வராமல் தள்ளிப் போய் நின்று கொண்டு ஆம்புலன்ஸுக்கு போன் செய்துவிட்டு காத்திருந்தார்கள் அமைச்சர் பெருமக்கள். அரை மணி நேரம் கழித்து ஆம்புலன்ஸ் வந்து வெற்றிவேலை தூக்கி மருத்துவமனைக்குக் கொண்டு போனாலும் அதிகப்படியான ரத்தப் போக்கினால் அவருடைய மரணத்தைத் தடுக்க முடியவில்லை.

விஷயம் அறிந்து ஓடி வந்த டிவி சேனல் கேமிராமேன்கள் இதனை பொறுப்பாக வீடியோ எடுத்து வெளியிட்டுவிட.. அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் இது மிகப் பெரிய அரசியல் சர்ச்சையாகிவிட்டது. அமைச்சர்களும், கலெக்டரும் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேலை கவனிக்காமல், அவரைத் தூக்கக்கூட நினைக்காமல், கையைக் கட்டிக் கொண்டு ஓரமாய் நின்றிருந்தது மனிதாபிமானற்ற செயல் என்று குற்றச்சாட்டு எழுந்தது.. சென்ற 2011 சட்டமன்றத் தேர்தலின்போது அப்போதைய ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கு எதிராக அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் கோபத்தைக் கிளப்பிய சம்பவம் இதுதான்..!

இதே கதைக் கருவோடு சென்ற ஆண்டு இயக்குநர் கே.எஸ்.தங்கசாமியின் இயக்கத்தில் எட்டுத்திக்கும் மதயானை என்ற திரைப்படம் வெளியானது நினைவிருக்கலாம்.

இந்த உண்மைச் சம்பவம்தான் இந்த சேதுபதி படத்தின் துவக்கக் காட்சியும், மையக் கருவும்கூட..

கதையின் களமான மதுரையின் பிரபலமான தாதா வாத்தியார் என்றழைக்கப்படும் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி. இவருடைய மகளை ஒரு சப்-இன்ஸ்பெக்டருக்கு திருமணம் செய்து வைக்கிறார். தற்போது ஒரு பிள்ளை இருக்கும் நிலையில் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே ஈகோ மோதல் எழுகிறது. பிரச்சினை பெரிதாகி தான் இனியும் கணவருடன் வாழ முடியாது என்று சொல்லி மகள் அழுது கொண்டே அப்பாவிடம் வந்துவிட.. தனது மகளை கை நீட்டி அடித்துவிட்டானே என்ற கோபத்தில் அப்பாவான வேல.ராமமூர்த்தி, தனது மகள் தாலி அறுந்தாலும் பரவாயில்லை.. மருமகனை போட்டுத் தள்ளும்படி தனது அடியாட்களுக்கு உத்தரவிடுகிறார்.

ஒரு நள்ளிரவில் ஒரு ஆற்றுப் பாலத்தில் வாத்தியாரின் மருமகனுக்காக காத்திருக்கிறார்கள் கொலையாளிகள். ஆனால் அங்கே வருவது வேறொரு சப்-இன்ஸ்பெக்டர். இவர்தான் வாத்தியாரின் மருமகன் என்று நினைத்து அவரைப் போட்டுத் தள்ளுகிறது கும்பல். இந்தக் கொலை நடக்கும் பகுதி ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் கடமை தவறாத வீரரான நமது ஹீரோ விஜய் சேதுபதி.

இந்தக் கொலை வழக்குக்காக இரவு, பகல் பாராமல் உழைத்து கொலையாளிகளை நெருங்கியபோது கொலையின் சூத்தரதாரி வாத்தியார்தான் என்று அவருக்குத் தெரிய வர.. மாநகர கமிஷனரின் உத்தரவுப்படியே வாத்தியாரை கைது செய்கிறார் விஜய் சேதுபதி.

அவரை ரிமாண்ட்டுக்கு கொண்டு போகும் முன்பாக இரண்டு நாட்கள் காரில் வைத்தே சுற்ற வைத்து பின்புதான் கோர்ட்டுக் கொண்டு வருகிறார்கள் போலீஸார். இதனை தனக்கு நேர்ந்த மிகப் பெரிய அவமானமாக கருதும் வாத்தியார், விஜய் சேதுபதியை வில்லனாக நினைக்கிறார். இதேபோல் விஜய் சேதுபதியும் அந்தக் கூட்டத்தை வேரறுக்க நினைக்கிறார்.

இந்த நேரத்தில் ஒரு சாதாரண செயின் திருட்டு வழக்கில் இரண்டு பள்ளிச் சிறுவர்களை விசாரிக்கிறார் விஜய் சேதுபதி. அவர்களை பயமுறுத்துவதற்காக துப்பாக்கியை கையில் வைத்து மிரட்டுகிறார் சேதுபதி. இந்தச் சமயத்தில் ஒரு பையன் தப்பித்து ஓட முயற்சிக்க அந்தக் கணம் நிகழ்ந்த குழப்பத்தில், சேதுபதியின் கையில் இருந்த துப்பாக்கி வெடிக்க அதிலிருந்து குண்டு பாய்ந்து இன்னொரு சிறுவனின் கழுத்தில் பாய்கிறது.

பையன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் உயர் போலீஸ் அதிகாரிகள் இது குறித்து விசாரிக்கிறார்கள். பையனின் உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும், அவன் இறந்து போனால் விஜய் சேதுபதி கைது செய்யப்படலாம் என்கிற நிலைமை வருகிறது. இதற்கிடையில் துப்பாக்கியில் குண்டு லோடு செய்யப்படாலும், அது சுடுவதற்கு தயாராகும் நிலையில் இல்லாமல்தான் லாக்கரில் வைத்திருப்பார்கள். இப்போது எப்படி தன் கையில் இருந்த துப்பாக்கி வெடித்தது என்று சேதுபதி யோசித்து விசாரணையில் ஈடுபடுகிறார்.

அப்போது தன் ஸ்டேஷனில் இருக்கும் சில காவலர்களே வாத்தியாரின் தூண்டுதலில் இந்தச் சதி செயலுக்கு துணை போயிருப்பதை அறிந்து கோபமாகிறார் சேதுபதி. இந்த நேரத்தில் தேசிய மனித உரிமை கமிஷனும் தீவிரமாக இந்தக் கேஸை விசாரிக்க.. பெரும் மனக் குழப்பத்தில் இருக்கிறார் சேதுபதி.

சேதுபதியை எப்படியும் மறுபடியும் பணியில் சேர விடாமல் தடுக்கும் முயற்சியில் வாத்தியார் வேல.ராம்மூர்த்தி ஈடுபட.. அதை முறியடிக்கும் வேலையில் சேதுபதியும் மும்முரமாகிறார். இறுதியில் யார் ஜெயித்த்து என்பதுதான் மிச்சம், சொச்சமான திரைக்கதை.

நடிப்பென்று பார்த்தால் விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு பிடித்தமான வகையில் அவரது அனைத்துவித நடிப்பையும் செதுக்கியிருக்கிறார் இயக்குநர்.

முறுக்கு மீசை, அவ்வப்போது அந்த மீசையை அவர் தடவிவிடும் ஸ்டைல்.. மனைவியை என்ன பொண்டாட்டி என்று அவ்வப்போது அழைப்பது, அவருடன் சரசமாடுவது.. ச்சும்மா சண்டையிடுவது.. பிள்ளைகளை தைரியமானவர்களாக வளர்ப்பது.. ஸ்டேஷன் காவலர்களிடத்தில் அதிகாரி போல ஆணையிடாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது.. அதே சமயம் தனது கெத்து குறையாமல் நடந்து கொள்வது.. மூர்த்தி என்ற அந்த புதிய சப்-இன்ஸ்பெக்டரின் பேக்குத்தனமான பதிலை ரசித்தாலும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் அவருக்கு பயிற்சி கொடுப்பது என்று அனைத்திலுமே புத்தம் புதிய விஜய் சேதுபதியை வெளிப்படுத்தியிருக்கிறார். வெல்டன்..

தான் சந்திக்க விரும்பாதவர்கள் பற்றியே கேட்க விரும்பாமல் தவிர்ப்பதும்.. சக காவல்துறை அதிகாரியிடம் மென்மையாக பேசத் துவங்கி பின்பு கோபத்தில் அடிப்பதும்.. கமிஷனரிடமே பொடி வைத்து பேசுவதும்.. மூர்த்தியிடம் தனது அடுத்தடுத்த பிளான்களை போட்டு வாங்கி தெரிந்து கொள்வதுமாய் திரைக்கதையிலும், வசனத்திலும் மிகுந்த பிரயத்தனப்பட்டு உழைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.. இயக்குநர் டீமுக்கு நமது பாராட்டுக்கள்..!

ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டராக சக காவலர்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதாக சிற்சில காட்சிகளில் விஜய் சேதுபதி காட்டினாலும், அடி உதவுவது போல அண்ணன், தம்பி உதவமாட்டான் என்பதை காவலர்கள் மீதே காட்டுவதெல்லாம் நம்மை பயமுறுத்துகிறது.

வீட்டிற்கு ரவுடிகள் வந்திருக்கும் சூழலில் போனிலேயே தன் மகனிடமும், மனைவியிடமும் அதைச் செய்.. இதைச் செய் என்று சொல்லி அந்த நிலைமையைச் சமாளிக்கும்விதம் சூப்பர். அருமையான திரைக்கதை. அழகான இயக்கம். அந்தப் பதட்டமான நேரத்தில் நமக்கும் சேர்த்தே படபடப்பை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

30 வயதாகிவிட்ட மூப்பு முகத்தில் தெரிந்தாலும் ரம்யா நம்பீசனும் ஒரு அழகுதான். கணவருடன் கொஞ்சல்.. உரசல்களுடன் குடும்பத் தலைவிக்கு எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது இவரது கேரக்டர் ஸ்கெட்ச்.

கணவனை தன் காலில் விழுந்து ஸாரி சொல்ல வைத்திருக்கும் இடத்தில் இப்போதைய இளைஞிகளுக்கு ஒரு ரோல் மாடலாய் ஆகிவிட்டார் ரம்யா.. ஆனாலும் இருவருக்குள்ளும் ஏன் அப்படியொரு முறைப்பு.. கோபதாபம்.. என்பதற்கான காரணத்தை இயக்குநர் சொல்லவே இல்லையே..? மாமியார் வீட்டுடன் சேதுபதிக்கு ஏதும் பிரச்சனையோ..? ஏதோ சில வசனங்கள்.. சில காட்சிகளை தயாரித்தும் நீக்கிவிட்டார்கள் போலிருக்கிறது. அதுதான் இந்தக் குழப்பம்.

பிள்ளைகள் இரண்டுமே அழகு.. வயதுக்கு மீறிய பேச்சும், நடத்தையும் இப்படியொரு பண்பட்ட குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமே என்கிற எண்ணத்தை ரசிகனுக்குள் புகுத்துவதற்காகவே அநியாயத்திற்கு பேமிலி செண்டிமெண்ட்டை கொட்டியிருக்கிறார் இயக்குநர். இதுவே முழு படத்தையும் ஒரு ஆக்சன் படமாக ரசிக்க முடியாமலும் செய்திருக்கிறது. குடும்பத்தின் காட்சிகளை வெகுவாகக் குறைத்திருக்கலாம்.

படு பயங்கர வில்லனாக வருவார் என்று பார்த்தால் அசால்ட்டு சேது போல அலட்சியமாக பேசியே வில்லத்தனம் செய்திருக்கிறார் வாத்தியாரான எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி. இனிமேல் உன்னுடைய எல்லாத்தையும் நான்தான் எழுதப் போறேன் என்கிற வாத்தியாரின் பேச்சில் விரோதம் மட்டுமே தெரிகிறது. கோபம் மிஸ்ஸிங்கே ஸார்..!

இவருடைய மாப்ளையாக நடித்திருக்கும் அவருடைய ஆக்சன் பெர்பெக்சன். விஜய் சேதுபதியே ஒரு காட்சியில் இவனை முறைக்கச் சொல்லாதய்யா. எனக்கு சிரிப்பு வருது என்கிறார். இந்த வசனத்திற்கு தியேட்டரே அதிரும்வண்ணம் கைதட்டல் கிடைத்துள்ளது. நல்ல நடிப்பு சாமி இவருக்கு..!

நிவாஸ் பிரசன்னாவின் இசையைவிடவும் பின்னணி இசைதான் தூக்கல். அதிலும் அந்த தீம் மியூஸிக் ரசிப்பு.. விஜய் சேதுபதியின் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ஆனாலும் சவுண்டை கொஞ்சம் குறைத்திருக்கலாம். பாடல்களில் மழை தூறல் ரசிக்க வைத்தாலும் மற்றவைகள் மாண்டேஜ் காட்சிகளாகவே வந்திருப்பதால் இன்னொரு முறை கேட்டால்தான் சாத்தியம். வேல.ராமமூர்த்திக்கு வைத்திருக்கும் தீம் பாடல் அவருடைய இமேஜை துளியும் உயர்த்தவில்லை..

ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணின் கைவண்ணம் அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது. பாடல் காட்சிகளில் சூப்பர். சண்டை காட்சிகளிலும் அனல் தெறிக்கிறது. போலீஸ் அடி எப்படியிருக்கும் என்பதை மையமாக வைத்தே சண்டை காட்சிகளை அமைத்திருப்பார்கள் போலிருக்கிறது. ஒவ்வொரு அடியும் அப்படி விழுகிறது. சவுண்ட் மிக்ஸிங் செய்த டி.உதயகுமாருக்கு இந்த நேரத்தில் ஒரு சபாஷை தெரிவித்துக் கொள்கிறோம்.

இயக்குநர் சு.அருண்குமாரின் முந்தைய படமானபண்ணையாரும் பத்மினியும்மிக அருமையான குடும்பப் படம்இப்போது இந்தப் படத்தில் அதற்கு நேர்மாறான கதையைத் தேர்வு செய்து இயக்கியிருக்கிறார்.

இப்போதுதான் விசாரணை என்றொரு திரைப்படம் வெளிவந்து போலீஸ் துறையில் இருக்கும் கருப்பு ஆடுகளையும், சாதாரண பொதுமக்கள் அவர்கள் கையில் கிடைத்தால் என்ன ஆகும் என்பதையும் வெட்டவெளிச்சமாக்கிவிட்டது அந்த விசாரணை திரைப்படம். இந்த நேரத்தில் நியாயமான போலீஸை வெளிப்படுத்திக் காட்டும் விதமாய் இந்தப் படத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.

இது விசாரணை படத்திற்கு முன்பே வந்திருந்தால்கூட கொஞ்சம் ரசித்திருக்கலாம். ஆனால் டூ லேட்டாக இப்போது வந்திருப்பதால் நல்ல போலீஸ் கதையை நம்மால் முழுமையாக ரசிக்க முடியவில்லை.

தமிழ் சினிமா ரசிகர்களின் மனப்பான்மையில் நல்ல போலீஸ் கதை இனிமேல் எந்தக் காலத்திலும் செட்டாகாது. அந்த அளவுக்கு காவல்துறையினர் அட்டூழியத்தை, அக்கிரமத்தை, அநியாயத்தை, அராஜகத்தை, மனித உரிமை மீறலை தியேட்டருக்கு வரும் ரசிகர்களும் அனுபவித்துதான் இருக்கிறார்கள்.

ஆக.. இந்த கதைக் கருவை மனதில் கொண்டு இந்தப் படத்தைப் பார்ப்பதென்பது மகா கொடுமையான விஷயம். முந்தின காலங்களை போல இப்போது போலீஸ் விசாரணையை நியாயம், அநியாயமாக பார்ப்பதெல்லாம் இல்லாத காரணத்தினால் முந்தைய போலீஸ் படங்களுடன் இதனை ஒப்பிட்டு பேசவும் முடியாத நிலைமை..!
மழை தூறலாம் என்கிற ஒரு பாடலில் போலீஸார் படும் கஷ்டத்தையும், அவர்களின் பிரச்சினைகளையும் அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர். அதுமட்டுக்கும் அவருக்கு நமது நன்றிகள்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மருத்துவமனை வாசலில் வந்து போராடும் மக்களை என்ன ஏன் என்றுகூட கேட்காமல் அடித்து, துவைத்து, விரட்டும் சேதுபதியின் கேரக்டரை பார்த்தவுடன் வந்துட்டாருய்யா வில்லன் என்கிற பீலிங்குதான் ஏற்படுகிறது..!

இதே நல்ல இன்ஸ்பெக்டர்தான் குற்றவாளியை பிடித்தவுடன் சட்டத்திற்கு விரோதமாக 2 நாட்கள் தங்களது கஸ்டடியில் வைத்து அவரை காரிலேயே ஊர், ஊராகக் கடத்திச்  சென்று அவரை அவமானப்படுத்துவதாகச் சொல்லி சட்டத்தை ஏமாற்றுகிறார். கிளைமாக்ஸ் காட்சி மிக, மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அப்பட்டமான ஒரு மனித உரிமை மீறலை செய்கிறார் இன்ஸ்பெக்டர் சேதுபதி.

இப்படியாப்பட்டவர்களை இப்படித்தான் செய்யணும் என்றால் அதுக்கெதுக்கு காக்கி சட்டை போட்டிருக்கும் போலீஸ்..? போலீஸுக்கும், ரவுடிகளுக்கும் வித்தியாசம் வேண்டாமா..? ஒரு ஹீரோயிஸ படமென்றாலும் அவர் சாதாரண பொதுஜனமாக இருந்து இதைச் செய்தால்கூட ஒத்துக் கொள்ளலாம். ஆனால் காக்கியுடை அணிந்த ஒரு பொறுப்பான போலீஸ் ஆபீஸராக இருப்பவர் இதனை செய்துதான் அந்த ஊரில் சட்டத்தை நிலை நாட்ட முடியும் என்றால் பின்பு சட்டமெல்லாம் எதற்கு..? நீதிமன்றங்கள் எதற்கு..?  யார், யார் சட்டவிரோதமாக நடப்பதாக போலீஸுக்கு தெரிகிறதோ.. அவர்கள் அனைவரையும் பெட்ரோல் ஊற்றி எரித்துவிடலாமே..? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!

இதில் சில என்கவுண்டர்களும் அநியாயமான முறையில் நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றன. குற்றத்தை ஒத்துக் கொண்டார்கள் என்பதற்காக அவர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டு வராமல் ஒரு இன்ஸ்பெக்டரே படுகொலை செய்யலாமா..? இப்படித்தான் இவர் செய்கிறார் என்றால் இவர் நல்ல இன்ஸ்பெக்டர் இல்லையே..?

இவர் செய்தால் தப்பில்லை. ஆனால் தவறு செய்தும் மாட்டிய ஸ்கூல் பையன் குண்டடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கும்போது மனித உரிமை கமிஷன் முன்பு குற்றவாளிபோல சோகத்துடன் ஆஜராகிறார் விஜய் சேதுபதி. இதனாலேயே அந்த நேரத்தில் இவர் மீதான பரிதாப உணர்வு வரவேயில்லை.

இந்த சிறுவன் சம்பந்தப்பட்ட விஷயத்தில்கூட இன்னொரு உண்மைச் சம்பவம் ஒளிந்திருக்கிறது.

2004-ம் வருடம் ஜனவரி 7-ம் தேதியன்று சென்னை நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட வெட்டுவாங்கணி பகுதியில் கோவில் உண்டியல் ஒன்று உடைக்கப்பட்டது.

காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டதும் அதே பகுதியைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்னும் 14 வயது சிறுவன் மீது சந்தேகம் வந்து அவன் போலீ்ஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டுள்ளான்.

சித்ரவதையின் உச்சக்கட்டமாக அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரான புஷ்பராஜ் தன்னுடைய துப்பாக்கியை காட்டி அன்சாரியை மிரட்டியிருக்கிறார். மேலும் அவன் கண் முன்பாகவே ஒரு குண்டினை துப்பாக்கியில் போட்டு லோடு செய்து அன்சாரியை சுடுவதுபோல மிரட்டியிருக்கிறார். இந்தச் சூழலில் திடீரென்று புஷ்பராஜ் நிஜமாகவே சுட்டுவிட, அந்தக் குண்டு அன்சாரின் கழுத்துப் பகுதியில் பாய்ந்து பின் கழுத்து வழியாக வெளியேறியது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அன்சாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கா்ப்பாற்றப்பட்டார். இந்தச் சம்பவத்திற்காக விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டது. தேசிய மனித உரிமை ஆணையமும் இந்த வழக்கை விசாரித்து தமிழக போலீஸை கடுமையாக விமர்சித்தது. இருந்தும் என்ன புண்ணியம்..?

இந்தக் கொடுமையை செய்த இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் காக்கி உடை பாசத்தின் காரணமாய் போலீஸ் உயரதிகாரிகளின் துணையோடு சட்டத்தின் முன்பிருந்தும் தப்பிவிட்டார். சாதாரண அபராதத் தொகையுடன் தப்பிக்கக் கூடிய வகையில் அவர் மீது இ.பி.கோ. செக்சன் 388-ன் படி சாதாரண காயம் ஏற்படுத்தும்படி நடந்து கொண்டதாக கூறி வழக்கு பதிவு செய்தார்கள்.

இந்தச் சம்பவத்தை உல்டா செய்யும்படியாக சிறுவர் சம்பந்தமான திரைக்கதையை இயக்குநர் ஏன் இஙகே வைத்தார் என்று தெரியவில்லை. ஒருவேளை அந்த இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் செய்ததை நியாயப்படுத்துகிறாரோ என்னவோ..?


திரைக்கதையின்படி பார்த்தாலும் சில லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. அதே ஊரில் இருக்கும் இன்னொரு ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் வாத்தியாருக்கு துணை போகிறார் என்பதை கமிஷனரிடம் சொல்லி அவரையும் பதம் பார்த்திருக்கலாமே..? நீதிபதிகளும் லஞ்சம் வாங்குகிறார்கள் என்கிற உண்மை ஒரு பக்கம் இருக்கட்டும். எந்த ஊர் நீதிபதிகள் சாட்சிகளின் வீட்டுக்கே சென்று விசாரிக்கிறார்கள்..? இந்த அளவுக்கு கமிஷனரின் சப்போர்ட், விஜய் சேதுபதிக்கு இருக்கும்போது அவர் எதற்கும் கவலைப்படத் தேவையே இல்லையே. அவர் நினைத்திருந்தால் தன் வீட்டுக்கும், தனக்கும் போலீஸ் பாதுகாப்பை கேட்டே பெற்றிருக்கலாம்..

மருமகனான சப்-இன்ஸ்பெக்டரை எரித்த வழக்கு என்ன ஆனது..? கமிஷனர் சட்டைப் பாக்கெட்டில் இருக்கிறார் என்றால் இந்த வழக்கிலேயே வாத்தியாரை காலி செய்திருக்கலாமே..? ஆனால் இன்ஸ்பெக்டர் பொறுப்பை எடுத்துக் கொண்டு வந்த பின்பு, அதை ஒரு படத்தின் ஹீரோவாக செய்திருப்பதெல்லாம் ரொம்பவே டூ மச்..!  ஹீரோயிஸம் தேவைதான்.. ஆனால் இந்த அளவுக்கு தேவையா இயக்குநர் ஸார்.?

விஜய் சேதுபதிக்கு இந்த ஹீரோயிஸ கேரக்டர் நிச்சயம் ஷூட் ஆகும்தான். ஆனால் வேறு கதை, திரைக்கதையில்..!


சேதுபதியின் மீசை முறுக்குதான். ஆனால் கம்பீரம் குறைவு..!

0 comments: