ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு-குன்ஹா தீர்ப்பு முழு விவரம்-2

10-09-2014


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அளித்த தீர்ப்பின் சில பகுதிகளை 'ஜூனியர் விகடன்' இதழ் தமிழாக்கம் செய்து பதிவு செய்து வருகிறது. அதன்  இரண்டாம் பாகம் இது :


'ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் இவை எல்லாம் நடந்ததா?''


ஜெயலலிதாவின் முழுமையான கவனத்துக்கு உட்பட்டு, அவரது விருப்பப்படியே, அவருக்காக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தவறான வழிகளில் பணம் மற்றும் சொத்துகளை வாங்கினர் என்பதைத் தன்னுடைய தீர்ப்பில் குன்ஹா நிறுவி உள்ளார். அதனைப் பார்ப்போம்:

"1996-ம் ஆண்டு இறுதியில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் இருந்த சொத்துகளின் கையிருப்பு மதிப்பு  55 கோடியே 2 லட்சத்து, 48 ஆயிரத்து 215 ரூபாய். அந்தக் காலகட்டத்தில் இவர்கள்  8 கோடியே 49 லட்சத்து 6 ஆயிரத்து 833 ரூபாய் செலவு செய்துள்ளார்கள். ஆக, மொத்தம் 63 கோடியே 51 லட்சத்து 55 ஆயிரத்து 48 ரூபாய். இவர்களால் வரவுக் கணக்கு காட்டப்பட்டவை  9 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 94 ரூபாய் மட்டுமே. இதன்படி பார்த்தால்  கணக்குக் காட்டமுடியாதவை 53 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 954 ரூபாய் என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருகிறது...!"

"நடராஜன் மூலமாக சொத்துகள் வரவில்லை!"

கணக்கில் காட்ட முடியாத இந்தத் தொகையை ஜெயலலிதாவும் மற்றவர்களும் தங்களின் பூர்வீகச் சொத்தாக காட்ட முடியாது. ஏனென்றால், ஜெயலலிதா 1991-ம் ஆண்டுக்கு முன்பு தன்னுடைய சொத்துகளாக அதிகாரப்பூர்வமாகக் காட்டியுள்ள தொகை இரண்டு கோடிகள்தான்.  இதை அரசுத் தரப்பு மிகத் தெளிவாக நிரூபித்துள்ளது. சசிகலாவும், இளவரசியும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களே அதற்குப் போதுமானவையாக உள்ளன. 

அரசுத் தரப்பு சாட்சி ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் வாக்குமூலம் மற்றும் ஆவணங்களின்படி, சசிகலாவின் வருவாய் ஆதாரம் அவருடைய கணவர் நடராஜன் மட்டும்தான். நடராஜன் அரசுப் பணியில் இருந்தவர். அவர் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தபோது மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கான முன் பணமாக 3 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். அதன் பிறகு 1987-ம் ஆண்டு அரசாங்கத்தில் வாங்கிய லோன் மூலமாக ஒரு வீட்டை வாங்கி உள்ளார். அதற்குத் தெளிவான ஆவணங்கள் உள்ளன. அவற்றின்படி நடராஜன் சசிகலா தம்பதியரின் சொத்து மதிப்பு அவ்வளவுதான். அதன்பிறகு 1988-ம் ஆண்டில் அவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டார். இதன்மூலம் கணவர் நடராஜனின் வகையில் சசிகலாவுக்கு மிகப் பெரிய சொத்துகள் எதுவும் வந்து சேரவில்லை என்பது ஊர்ஜிதமாகிறது.

170-வது அரசுத் தரப்பு சாட்சி கிராம நிர்வாக அதிகாரி ஜெயராமனின்  வாக்குமூலத்தின்படி சாமிநாதன் மன்னையார் மற்றும் அவருடைய இளைய சகோதரர் பழனிவேல் ஆகியோருக்குச் சொந்தமாக இருபத்து நான்கரை ஏக்கர் நிலம் மட்டும் இருந்தது நிரூபிக்கப்பட்டு உள்ளது. சாமிநாதன் மன்னையாரின் மகன்தான் சசிகலாவின் கணவர் நடராஜன். அதுபோக சாமிநாதன் மன்னையாரின் மனைவியும் நடராஜனின் தாயாருமான லீலாவதி பெயரில் மூன்றரை ஏக்கர் நிலம் இருந்ததும் அதற்கான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆக, மொத்தமாக நடராஜனுக்குக் கட்டிய வீடு, நிலம் என்ற வகையில் சிறிய பகுதி நிலங்கள்தான் இருந்தன. இதன் மூலம் சசிகலாவின் கணவரின் பூர்வீகத்தில் இருந்தும் பெரிதாக எந்தச் சொத்துகளும் வரவில்லை. இதை சசிகலா தரப்பு நீதிமன்றத்தில் மறுக்கவில்லை.

"போயஸ் கார்டனுக்கு வந்த பிறகே சசிகலா வருமானவரி செலுத்தினார்...!"

சசிகலாவுக்கு அவருடைய தந்தை வழியில் ஏதாவது சொத்துகள் வந்திருக்க வாய்ப்பிருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. விவேகானந்தன் பிள்ளை என்பவர்தான் சசிகலாவின் தந்தை. அவர் திருத்துறைப்பூண்டி மற்றும் வேதாரண்யத்தில் நாட்டு மருந்துக்கடை நடத்தி, குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார். அதற்கான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 

விவேகானந்தன் பிள்ளைக்கு அவருடைய தந்தை வழி சொத்தாக இருந்த 81 சென்ட் நிலத்துக்குப் 10-க்கும் மேற்பட்ட பங்காளிகள் உரிமை உடையவர்களாக இருக்கிறார்கள். அதனால், அந்த 81 சென்ட் நிலம் முழுமையாக விவேகானந்தன் பிள்ளைக்குச் சொந்தமானது.இல்லை என்பதும் நிரூபணமாகி உள்ளது. விவேகானந்தனுக்கு சசிகலா தவிர, வனிதா என்ற மகளும் ஆறு மகன்களும் வாரிசுகள். ஆக, சசிகலாவுக்கு அவருடைய பூர்வீகச் சொத்துகள் பெரிதாக எதுவும் இல்லை.

இந்த இடத்தில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஜெயலலிதாவுடன் சேர்ந்து போயஸ் கார்டனில் நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்த பிறகுதான் அவர் வருமானவரி கணக்கே தாக்கல் செய்ய ஆரம்பித்துள்ளார்.

"சுதாகரனுக்கு ஆண்டு வருமானம் ரூ.44 ஆயிரமே...!"

அரசுத் தரப்பு சாட்சி பாலகிருஷ்ணனின் வாக்குமூலத்தின்படி சுதாகரனின் ஆரம்ப காலகட்ட சொத்து மதிப்பு தெரிய வருகிறது. சுதாகரன் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்குவதற்காக விண்ணப்பித்தபோது, அவர் தன்னுடைய வருமானச் சான்றிதழை இணைத்துள்ளார். கிண்டி தாலுகா எல்லைக்குட்பட்டு மாம்பலம் தாசில்தார் அளித்த வருமானச் சான்றிதழ் அது. அதில் சுதாகரனின் வருமானம் ஒரு வருடத்துக்கு 44 ஆயிரம் ரூபாய் மட்டுமே. 1992-ம் ஆண்டு வரையிலும் சுதாகரனின் நிலை இதுதான். அரசுத் தரப்பு வைத்துள்ள இந்த வாதங்களை மறுத்து, தனக்கு வேறு வருமானங்கள் இருந்தன என்று சுதாகரனால் நீதிமன்றத்தின் முன் நிரூபிக்க முடியவில்லை. அதன் பிறகுதான் சுதாகரனின் சொத்துகளின் மதிப்பு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அது எப்படி, எந்த வழியில் வந்தது என்று அவரால் எந்தக் கணக்கையும் காட்ட முடியவில்லை.

"இளவரசிக்கு ஆரம்பத்தில் சொத்துகள் இல்லை...!"

இளவரசியைப் பொறுத்தவரையில் அவருக்கும் பூர்வீகச் சொத்துகள் இல்லை. அவருடைய கணவர் அரசாங்க வேலையில் இருந்து பிறகு இறந்துவிட்டார். அவர் இறந்த பிறகு, இளவரசிக்கு வந்த அரசாங்கப் பணப் பலன்கள் மட்டும்தான் இளவரசியின் சொத்து. அதோடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்குவதற்காக, இளவரசி சமர்ப்பித்த வருமானச் சான்றிதழில் அவருடைய ஆண்டு வருமானமாக 48 ஆயிரம் ரூபாய் மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது. மற்றபடி, 1996-க்குப் பிறகு இளவரசியின் பெயரில் இருந்த சொத்துகள் அனைத்தும், அவர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் குடியேறிய பிறகு சம்பாதித்த சொத்துகள்தான். இவற்றை இளவரசியால் மறுக்க முடியவில்லை. இந்த அடிப்படையில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்குப் பூர்வீகச் சொத்துகள் என்று மிகப் பெரிய சொத்துகள் எதுவும் இல்லை என்பது ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.



"புதிய புதிய நிறுவனங்களை ஆரம்பித்தார்கள்"

மயிலாப்பூரில் உள்ள கனரா வங்கி அதிகாரி அளித்த சாட்சியின்படி சேமிப்பு வங்கிக் கணக்கு எண்-24621 வி.என்.சுதாகரனால் 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 105 ரூபாய் செலுத்தி இந்த வங்கிக் கணக்கை சுதாகரன் தொடங்கியபோது, அவர் கொடுத்தது 36, போயஸ் கார்டன் என்ற முகவரிதான். அதன் பிறகான காலகட்டத்தில் இந்த வங்கிக் கணக்கில் பல லட்சக் கணக்கில் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் தேதிவாரியாக, எண்ணிக்கைவாரியாக வங்கியிடம் இருந்து அரசுத் தரப்பு சேகரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. 

சுதாகரனின் இந்த அக்கவுன்டுக்கு சசிகலா, வினோத் வீடியோ விஷன், மெட்டல் கிங், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் ஆகிய அக்கவுன்ட்களில் இருந்து பணம் வந்ததும், போனதும் நிரூபணமாகியுள்ளது. அப்படி பணம் வருவதற்கும் போவதற்குமான பரிவர்த்தனைகளில் சசிகலாவும் சுதாகரனும் கையெழுத்திட்டுள்ளனர். 

மாவட்டப் பதிவாளர் தங்கவேலு அளித்த சாட்சியம், ஆவணங்களின்படி ஜெ.எஸ். ஹவுசிங் டெவலப்மென்ட், ஜெ.ஜெ. லீசிங், கிரீன் ஃபார்ம் ஹவுஸ், ஜெ. ஃபார்ம் ஹவுஸ், ஜெ. ரியல் எஸ்டேட், ஜெயா கான்ட்ராக்டர்ஸ் அண்டு பில்டர்ஸ், மெட்டல் கிங், மார்பிள் மார்வெல்ஸ் போன்ற நிறுவனங்கள் ஜெயலலிதா பதவியில் இருந்த காலகட்டத்தில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்டு உள்ளன. 

ஒவ்வொரு நிறுவனத்திலும் இவர்கள் இரண்டு பேராகவோ அல்லது மூன்று பேராகவோ அல்லது அனைவருமாகவோ பங்குதாரர்களாக இருந்துள்ளனர். மேலும், இந்த நிறுவனங்களைப் பதிவு செய்ய தன்னுடைய மேலதிகாரி எஸ்.அய்யர் தனக்கு உத்தரவிட்டதாகவும் அவருக்கு முதலமைச்சர் தொலைபேசியின் வாயிலாக உத்தரவிட்டதாகவும் மாவட்டப் பதிவாளர் தங்கவேலு தன்னுடைய சாட்சியத்தில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பேசினார் என்பது நிரூபணமாகவில்லை என்றாலும் அவருடைய அலுவலகத் தொலைபேசியில் இருந்து அந்த உத்தரவு வந்துள்ளது நிரூபணமாகி உள்ளது.

சுதாகரன் நடத்திய 'சூப்பர் டூப்பர் டி.வி’ நிறுவனம் தொடங்க இளவரசியும் சுதாகரனும் கையெழுத்திட்ட விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளனர். அதை வணிகவரித் துறை அதிகாரி கண்ணனின் சாட்சியம் உறுதிப்படுத்தி உள்ளது. அதுபோல, வணிகவரித் துறை அதிகாரி, சுந்தர்ராஜ் அளித்த சாட்சியத்தின்படி, ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் நிறுவனத்துக்கான விண்ணப்பத்தில் சசிகலாவும் சுதாகரனும் கையெழுத்திட்டு விண்ணப்பித்து உள்ளனர். அதுபோல, மார்பிள்ஸ் மார்வெல்ஸ் நிறுவனத்துக்கான பதிவைப் பெற அளித்த விண்ணப்பத்தில் சசிகலாவும், சுதாகரனும் கையெழுத்துப் போட்டுள்ளனர். இதன் மூலம் இந்த நிறுவனங்களைத் தொடங்கி நடத்தியவர்கள் இவர்கள்தான் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாகியுள்ளது.

"எந்த நிறுவனமும் செயல்படவில்லை...!"

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஏற்று நடத்திய நிறுவனங்கள் அனைத்திலும் இவர்கள் யாரும் முதலீடாக எந்தத் தொகையையும் போடவில்லை. பங்குகளை விற்றும் முதலீடுகளைத் திரட்டவில்லை. நிறுவனத்தில் வந்த லாபம் இவர்கள் நால்வரைத் தவிர வேறு எந்தக் கணக்குக்கும் போகவில்லை.  

சசிகலாவுக்கும், இளவரசிக்கும் ஆடிட்டராக இருந்த பாலாஜி அளித்த வாக்குமூலம் மிக மிக முக்கியமானது. அவர் கூற்றுப்படி, இந்த நிறுவனங்கள் எந்தக் காலகட்டத்திலும் எதையும் உற்பத்திச் செய்யவில்லை. பொருள்களை வாங்கி விற்கவும் இல்லை. ஆனால், நிறுவனங்களின் கணக்குகளில் மட்டும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன என்று குறிப்பிட்டு உள்ளார். இதையடுத்து அந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் பற்றிய ஆதாரங்களை அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் அளித்துள்ளது. 

அப்படிச் சமர்ப்பிக்கப்பட்ட வங்கிப் பரிவர்த்தனை விவரங்களைப் பார்க்கும்போது மலைப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. மூலதனமே இல்லாத ரப்பர் ஸ்டாம்ப் நிறுவனங்களும், எந்த வியாபாரத்திலும் ஈடுபடாத நிறுவனங்களும் ஒவ்வொரு முறையும் பல ஆயிரங்களிலும் லட்சங்களிலும் பணப் பரிவர்த்தனை செய்துள்ளன. இப்படி பணத்தைச் சுற்றி வளைத்துப் போட்டு எடுப்பதற்காகவே, 1991-க்கு முன்புவரை 12 வங்கிக் கணக்குகளை மட்டுமே வைத்திருந்த ஜெயலலிதாவும் சசிகலாவும், அதன்பிறகு 52 வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர்.



"வாங்குபவர் விவரமே இல்லாத பத்திரங்கள்"

வடக்குக் கடற்கரை சப்-ரிஜிஸ்ட்ரார், தோட்டக்கலைத் துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் சாட்சியம் மிக முக்கியமானவை. அவர்கள் அளித்த சாட்சியத்தில், அவர்கள் மேலதிகாரிகளின் உத்தரவுப்படி ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைக்கப்பட்டு, விதிமுறைகளைப் பின்பற்றாமல், பத்திரங்களைப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் பதிவு செய்த நிலங்களின் பத்திரங்கள் அனைத்தும் அடிமாட்டு விலைக்கு, பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளனர். மிகவும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அதில் ஆறு பத்திரங்கள் யார் வாங்குகிறார் என்ற விவரம் இல்லாமல், பெயர்கூட குறிப்பிடாமல் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இப்போது அதை ஒவ்வொன்றாக யாருடைய அனுபவப் பாத்யதையில் இருக்கின்றன என்று பார்த்தால் அவை அனைத்தும் ஜெயலலிதாவுக்காக வாங்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.

"போலியான ஆதாரங்கள்...!"

'நமது எம்.ஜி.ஆர்’ வங்கிக் கணக்கில் பல்வேறு தேதிகளில் 423 முறை (ஒவ்வொரு முறையும் பல ஆயிரக்கணக்கில் மற்றும் லட்சங்களில்) வரவு வைக்கப்பட்ட பணத்துக்குக் கணக்கு இல்லை. அதுபோல ஜெயா பப்ளிகேஷன், வினோத் வீடியோ விஷன், மஹாசுப்புலெட்சுமி கல்யாண மண்டபம், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் போன்றவற்றில் வரவு வைக்கப்பட்ட பல கோடி ரூபாய்களுக்கு எந்த விளக்கமும் ஜெயலலிதா தரப்பால் சொல்ல முடியவில்லை. 

இது தொடர்பாக ஜெயலலிதா தரப்பு வைத்துள்ள பேலன்ஸ் ஷீட், லாப - நட்டக் கணக்கு விவரங்கள் அனைத்தும் போலியாகத் தயாரிக்கப்பட்டு இருப்பதும் ஆடிட்டர்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டு உள்ளன. ஆனால், பணத்தை வங்கிகளில் போட்டதும், அவற்றை வேறு கணக்குகளுக்கு மாற்றச் சொன்னதும் சசிகலா என்பது அரசுத் தரப்பு சாட்சி ஜெயராமன் மூலம் உறுதிபடத் தெரியவந்துள்ளது.

ஜெயராமன் போயஸ் கார்டனில் வேலை பார்த்த கார் டிரைவர். அவரிடம் ஒவ்வொரு முறையும் பை மற்றும் சூட்கேஸில் லட்சக்கணக்கான ரூபாய்களை வைத்து, நிரப்பப்பட்ட வங்கி சலான்களைக் கொடுத்து வரவு வைக்க சசிகலாதான் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதை ஜெயராமன் செய்துள்ளார். அதாவது அந்தப் பணத்தை, இவர்கள் நடத்தும் நிறுவனத்தின் கணக்குகளில் வரவு வைத்து, அவற்றை நிறுவனத்தின் பணமாக மாற்றி, அதன் பிறகு நிறுவனத்தில் இருந்து தங்கள் பெயரில் உள்ள வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொண்டுள்ளனர்.

"யாருக்காகச் செய்தார்கள்...?"

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஜெயலலிதாவுக்காகவே இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் இதை மறுத்து, 'சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் போயஸ் கார்டன் வீட்டில் வசிக்க மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே ஜெயலலிதா அனுமதி கொடுத்திருந்தார். அதில் வேறு எந்த நோக்கமும் இல்லை. அதுவும் மிகக் குறுகிய காலம்தான் அவர்கள் அந்த வீட்டில் இருந்தார்கள். அவர்கள் அங்கிருந்தபோது நடந்த வேலைகள் எதுவும் ஜெயலலிதாவின் கவனம் பெற்று நடந்தவை அல்ல’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், 'ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்தைப் பொறுத்தவரை சசிகலாவுக்கு ஜெயலலிதா பவர் கொடுத்துவிட்டார். அதனால், அந்த நிறுவனத்தில் நடந்த எதுவும் ஜெயலலிதாவுக்குத் தெரியாது’ என்று தற்காப்பு வாதத்தை முன்வைத்தார். இந்த வாதத்தை ஏற்க முடியாது. ஏனென்றால், ஜெயலலிதா, சசிகலாவுக்கு 'பவர் ஆஃப் அட்டர்னி’ கொடுத்திருந்தாலும் இல்லை என்றாலும், ஜெயா பப்ளிகேஷனில் ஜெயலலிதாவும் சசிகலாவும் சமமான அதிகாரம் படைத்த பங்குதாரர்கள் என்பது மாறப் போவது இல்லை. அப்படி பங்குதாரர்களாக இருக்கும்போது, பவர் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஒருவேளை கொடுத்திருந்தால், அதைச் சொல்லி ஜெயலலிதா தன்னை தற்காத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால், ஜெயலலிதா சசிகலாவுக்குக் கொடுத்த பவர் என்பது, சசிகலா சுதந்திரமாக ஜெயா பப்ளிகேஷனின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ளவும், அதன்மூலமாக தான் மறைமுகமான உரிமையாளராக இருப்பதற்காகவுமே. அதாவது தன்னுடைய ஏஜென்டாக சசிகலாவை அவர் நியமித்து உள்ளார். ஆனால், அந்த நிறுவனத்தின் மூலம் நடைபெற்ற பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட அனைத்துச் செயல்பாடுகளும் ஜெயலலிதாவின் ஒப்புதலுக்குப் பிறகே நடைபெற்றுள்ளன. அதற்காக ஆதாரங்களை அரசுத் தரப்பு கொடுத்துள்ளது. 

ஜெயா பப்ளிகேஷனின் நிர்வாகத்தில் முழுமையாக தலையிடும் அதிகாரம் படைத்தவர்களாக  ஜெயலலிதாவும், சசிகலாவுமே இருந்துள்ளனர். மேலும் அங்கு நடைபெற்ற பரிவர்த்தனைகள் அனைத்தும் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் சசிகலாவோ அல்லது சசிகலாவின் பங்கு இல்லாமல் ஜெயலலிதாவோ செய்யவில்லை. அந்த நிறுவனத்துக்கு வந்த பணம், நிறுவனத்தில் இருந்து வேறு வங்கிக் கணக்குகளுக்கும் போடப்பட்ட பணம் என அனைத்தும் இருவருக்கும் தெரிந்தே நடந்துள்ளது.

"ஜெயலலிதாவுக்கு இது தெரியாதா...?"

தன்னுடைய வீட்டில் வசித்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டது தனக்குத் தெரியாது என்று ஜெயலலிதா சொல்வதை ஏற்கவே முடியாது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், தன்னுடைய வீட்டில் இருக்கும் தன்னுடைய சகாக்களின் நடவடிக்கை பற்றி எதுவும் தெரியாது என்று சொன்னால் அதை எப்படி ஏற்க முடியும்...? அதுபோல அந்த மூன்று பேரும் தன்னுடைய வீட்டில் வசிக்கவே இல்லை என்று ஜெயலலிதாவால் மறுக்கவும் முடியாது. 

வாக்காளர் பட்டியலில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 36, போயஸ் கார்டன் முகவரிதான் இருக்கிறது. மேலும் ஜெயலலிதாவிடம் நடத்திய விசாரணையில், சசிகலாவும் இளவரசியும் என்ன காரணத்துக்காக அங்கு வசிக்கிறார்கள் என்று கேட்கப்பட்டபோது, அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று பதில் அளித்துள்ளாரே தவிர, அவர்கள் தன்னுடன் வசிக்கவே இல்லை என்று கூறவில்லை. மேலும், சசிகலாவும் இளவரசியும் ஜெயலலிதாவுக்கு ரத்த பந்தமோ அல்லது வேறு வகையில் சொந்தமோ இல்லாதபோது அவர்கள் ஏன் தன்னுடன் வசிக்கிறார்கள் என்பதை ஜெயலலிதாவால் தெளிவுபடுத்த முடியவில்லை.

இந்தக் கேள்விக்கு சசிகலாவும், இளவரசியும்கூட பதில் சொல்லவில்லை. இத்தனைக்கும் அவர்களுக்குத் தனியாகக் குடும்பம் இருக்கிறது. இருவரும் திருமணமானவர்கள். அவர்கள் ஏன் தங்களுடைய குடும்பத்தைப் பிரிந்து ஜெயலலிதாவுடன் இத்தனை ஆண்டுகளாக ஒரே வீட்டில் வாழ வேண்டும்? அதற்கு என்ன காரணம்? ஜெயலலிதாவுக்கு வரும் பரிசுப் பொருள்கள், ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தி தவறான வழிகளில் சம்பாதித்த பணம்... ஆகியவை அனைத்தும் சசிகலாவின் வழியாக வந்துள்ளன. அவற்றை ஜெயலலிதா வீட்டுக்குக் கொண்டு சேர்க்கும் வேலைக்காக இளவரசி பயன்படுத்தப்பட்டுள்ளார்.

சசிகலாவும் இளவரசியும் நடத்திய நிறுவனங்கள் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றும் ஜெயலலிதாவால் சொல்ல முடியாது. ஏனென்றால், சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு ஜெயலலிதா ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். மேலும், அவர்கள் நிறுவனம் வாங்கிய வங்கிக் கடன்களுக்கு எல்லாம் ஜெயலலிதா தன்னுடைய பெயரில் ஷ்யூரிட்டி செக் கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து, தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தே செய்துள்ளனர். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் பெயர்களில் உள்ள இந்தச் சொத்துகள் எப்படி வந்தன என்பதற்கு இவர்களால் கணக்குச் சொல்ல முடியவில்லை. அதை அரசுத் தரப்பு சரியாக நிரூபித்துள்ளது...'' என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பு தொடர்கிறது-!

- ஜோ.ஸ்டாலின்

நன்றி : ஜூனியர்விகடன் 12-10-2014

1 comments:

bandhu said...

//ஏனென்றால், ஜெயலலிதா, சசிகலாவுக்கு 'பவர் ஆஃப் அட்டர்னி’ கொடுத்திருந்தாலும் இல்லை என்றாலும், ஜெயா பப்ளிகேஷனில் ஜெயலலிதாவும் சசிகலாவும் சமமான அதிகாரம் படைத்த பங்குதாரர்கள் என்பது மாறப் போவது இல்லை.

Read more: http://www.truetamilan.com/2014/10/2.html#ixzz3FndU83fx//
கலைஞ்ர் டி வி யில் 80% பங்கு வைத்திருப்பவருக்கும் 20% பங்கு வைத்திருப்பவருக்கும் ஒன்றும் தெரியாது என்ற வாதமும் இதன் மூலம் அடிபடும் போல இருக்கிறதே!