ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு-குன்ஹா தீர்ப்பு முழு விவரம்-1

10-09-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அளித்த தீர்ப்பின் சில பகுதிகளை 'ஜூனியர் விகடன்' இதழ் தமிழாக்கம் செய்து பதிவு செய்து வருகிறது.

அதன் முதல் பாகம் இது :

குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - 1

கற்பனை செய்ய முடியாத கணக்கு அது!

இந்தியாவையே தனது தீர்ப்பை நோக்கி திருப்பியவர் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா. 1,136 பக்கங்களுக்கு எழுதப்பட்ட தீர்ப்பு அது. 

முதல் 894 பக்கங்களுக்கு வழக்கின் பின்னணி, குற்றச்சாட்டுகள், அதற்கான ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சிகள் ஆகியவை தனித்தனித் தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன.

குற்றம்சாட்டப்​பட்டவர்​களுக்கு எதிராக உள்ள சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவை உறுதியாக உள்ளன என்பதும் அவற்றை எதிர்த்துக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அளித்த சாட்சியங்களும் 100 பாயின்ட்களில் விவரிக்கப்படுகின்றன. அதன் பிறகு, 895-வது பக்கத்தில் ஆரம்பித்து 907-வது பக்கம்வரை நீதிபதியின் தீர்ப்பும், 908 முதல் 910-ம் பக்கம் வரை தண்டனையும் விவரிக்கப்பட்டுள்ளன.

அந்தப் பக்கங்களில் உள்ள விவரங்​கள்தான் இவை.



''ஜெயலலிதா, தமிழக முதலமைச்சராக இருந்த 1991-1996 காலகட்டத்தில் அவருடைய வருமானம் 9 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 94 ரூபாயாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அவர் செய்த செலவுகள் 8 கோடியே 49 லட்சத்து 6 ஆயிரத்து 833 ரூபாய். இது பற்றி மிக நியாயமான சந்தேகங்களை வழக்கின் புகார்தாரரான அரசுத் தரப்பினர் எழுப்பி உள்ளனர். ஆனால், இந்தக் காலகட்டத்தில் அசையாச் சொத்துகளின் மதிப்பு 53 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 954 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்த அசையாச் சொத்துகள் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூவரின் கணக்குகளில் வருகின்றன. ஆனால், அவை எந்த வழியில் வந்தன என்பதற்குக் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. அதுபற்றி அவர்களால் நியாயமான கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிக்க முடியவில்லை. 

தீர்ப்பு அளிக்கப்படும் இந்த நேரத்தில், தங்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு முன்பாக நீதிமன்றம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகக் குற்றவாளிகள் தரப்பினர் சில தகவல்களை நீதிமன்றத்துக்குத் தந்துள்ளனர்.

முதல் குற்றவாளியான ஜெயலலிதா, 'இந்த வழக்கு தன்னுடைய அரசியல் எதிரிகளால், அரசியல் காரணங்களுக்காகவும் தன்னை பழி வாங்குவதற்காகவும் போடப்பட்டது. வழக்கை எனக்கு எதிராகப் போடும்போது என்னுடைய வயது 48. அதன் பின் 18 வருடங்களுக்கு வழக்கு இழுத்தடிக்கப்பட்டு உள்ளது. இப்போது என்னுடைய வயது 66. இந்த இடைப்பட்ட நாட்களில் வழக்கின் காரணமாக நான் தீராத மன உளைச்சலுக்கு ஆளானேன். அதன் காரணமாக என்னுடைய உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் போன்ற நோய்களால் அவதிப்படுகிறேன். அதனால் நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லும்போது, தனக்கு இருக்கும் இந்தப் பிரச்னைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று சொல்லியுள்ளார்.

இரண்டாவது குற்றவாளி (சசிகலா), 'இந்த வழக்கு அரசியல் காரணத்துக்காகப் போடப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் எனக்குத் தீராத மன உளைச்சல், நீரிழிவு மற்றும் கண் பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது குற்றவாளி (சுதாகரன்), 'இந்த வழக்கு அரசியல் காரணத்துக்காகப் போடப்பட்டது. வழக்குப் போடப்பட்டபோது,  பிறந்த என் குழந்தைக்கு, இப்போது அவருக்கு 18 வயதாகிறது. இந்த வழக்குக்காக நான் இழுத்தடிக்கப்பட்ட காலத்தில் என்னுடைய தாயாரை இழந்துவிட்டேன்'' என்று கூறியுள்ளார்.

நான்காவது குற்றவாளி (இளவரசி), 'இந்த வழக்கின் காரணமாக நான் உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தப்பட்டேன். அதனால் எனக்குப் பல நோய்கள் ஏற்பட்டுள்ளன. நான் கணவரை இழந்தவர். என்னுடைய குழந்தைகளைப் பாதுகாக்கும் மொத்தப் பொறுப்பும் என் ஒருவருக்கே உள்ளது. தண்டனை வழங்கும்போது இவற்றை நீதிமன்றம் கருத்தில்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். இவர்களின் வழக்கறிஞர்களான பி.குமார், மணிசங்கர் ஆகியோரும் இதையே தங்கள் கருத்துகளாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த நீதிமன்றம், 'நிரஞ்சன் ஹேமச்சல் Vs மகாராஷ்டிரா அரசு’ என்ற வழக்கின் தீர்ப்பின் சாரத்தை நினைவுபடுத்துகிறது. அந்தத் தீர்ப்பில், 'ஊழலையும் அதன் தாக்கத்தையும் எடைபோடும்போது, குற்றம் செய்தவரின் தகுதியை வைத்து அதை எடை போடக் கூடாது. அப்படிச் செய்யவும் முடியாது. ஏனென்றால், ஊழல் என்பது ஒரு தேசத்தின் வளர்ச்சி. தொலைநோக்குத் திட்டம் என தேசத்தின் முன்னேற்றத்துக்கான அனைத்து அம்சங்களையும் சிதைத்து தேசத்தைப் பாழாக்கும். பொருளாதார வளர்ச்சியைச் சீர்குலைத்துக் குழி தோண்டிப் புதைத்துவிடும்’ என்று உச்ச நீதிமன்றம் நிரஞ்சன் ஹேமச்சல் வழக்கில் குறிப்பிட்டு உள்ளது. 

அதைக் கருத்தில் கொண்டே இந்த வழக்கின் தீர்ப்பை நோக்கி நாம் போக வேண்டும். ஏனென்றால், அதிகாரத்தில் உள்ளவர்களின் அதிகார மீறல், பொறுப்பில் உள்ளவர்கள் பேராசை காரணமாக தவறான வழிமுறைகளில் பொருளீட்டும் வேட்கை போன்றவற்றுக்கு இந்த வழக்கு மிகச் சிறந்த உதாரணம். அதிகாரத்தில் உள்ளவர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் ஜனநாயக நாட்டின் கட்டமைப்பைத் தகர்த்துவிடும்.



பொது ஊழியர் ஆவதற்கு முன்பாக குற்றவாளிகள் தரப்பில் காட்டிய வருமானம் 2 கோடி ரூபாய். ஜெ-சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், ஜெயா பப்ளிகேஷன் ஆகியவற்றின் வருமானங்களும் இந்த இரண்டு கோடி ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது. ஆனால், பொறுப்பில் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் வருமானம் உயர்ந்துள்ள வேகத்தை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. 

இவர்கள் தரப்புக்குச் சொந்தமான பண்ணை 900 ஏக்கர் பரப்பை உடையது. அதை வெறும் ஏழு கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாகக் கணக்கு சமர்ப்பித்துள்ளனர். அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலையில்கூட இப்படி வாங்க முடியாது. அதாவது வெறும் 10,000 ரூபாய்க்கு ஒரு ஏக்கர் நிலம் என்ற வகையில் வாங்கி உள்ளனர். இப்படிப் பார்த்தால் ஒரு முழு கிராமத்தையே வாங்கிவிடலாம். 

இவர்களின் நிறுவனங்கள் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களைத் தங்களுக்குச் சொந்தமாக வைத்துள்ளனர். ஆனால், அந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலம் எந்த வருமானத்தில் வாங்கப்பட்டது என்பதை அவர்களால் சொல்ல முடியவில்லை. அவற்றின் மதிப்பு எல்லாம் அரசு மதிப்பீட்டில் கணக்கிடப்பட்டு, இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. சந்தை மதிப்பீட்டின்படி கணக்கிட்டால், இவற்றின் மதிப்பை நாம் கற்பனையில்கூட கணக்குப் போட முடியாத அளவில் உயர்ந்து நிற்கும்.

ஜெயலலிதா இப்படிச் சொத்துகளை வாங்குவதற்கு மற்றவர்கள் உதவி உள்ளனர். புதிது புதிதாக நிறுவனங்களைத் தொடங்கியும் செயல்படாத நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தியும் ஜெயலலிதா சொத்துகளைச் சேர்க்க மற்றவர்கள் உதவியுள்ளனர். அந்த நிறுவனங்களில் யாரும் எந்த முதலீடும் செய்யவில்லை. அவற்றின் பங்குகளை வாங்கவில்லை. அதில் எந்த வர்த்தகமும் நடக்கவில்லை. ஆனால், நிறுவனம் இவர்களுக்குச் சொந்தமாக உள்ளது. 

அவற்றின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி, சம்பாதித்த சொத்துகளை அந்தக் கணக்கில் சேமித்து வைக்கவும் அவற்றைத் தங்களுக்கு உரியதாக்கிக் கொள்ளவும் மட்டுமே செய்துள்ளனர். வாதப் பிரதிவாதங்களில் இவை எல்லாம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது. அதாவது சொத்துகளை வாங்கிக் குவிப்பதற்கான பணப் பரிமாற்றம் மட்டுமே இந்த வங்கிக் கணக்குகளில் நடந்துள்ளது.  

தமிழ்நாடு அரசாங்கத்தின் மிகப் பெரிய பொறுப்பில் இருந்துகொண்டு, ஜெயலலிதா இந்தக் குற்றங்களில் ஈடுபட்டது குற்றத்தின் கனத்தை அதிகரிக்கிறது. ஏன் அதிகரிக்கிறது என்றால், 'மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என்று நீதிமொழி அறிவுறுத்துவதை இங்கு உணர வேண்டும். 

அந்த வகையில் பார்த்தால், ஜெயலலிதா தனக்குக் கீழ் இருந்த அரசு இயந்திரங்கள், கட்டமைப்புகள், அவற்றைச் சார்ந்த பொதுமக்கள் என ஒட்டுமொத்த சமூகத்துக்கும் தவறான வழியைக் காண்பித்துள்ளார். 

இப்போது இவர்களுக்குத் தண்டனை வழங்கும்போது, இங்கு 'பி.சுப்பையா Vs கர்நாடக அரசு’க்கும்  வழக்கில் இடையில் நடந்த கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் சாரத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்தத் தீர்ப்பில், 'உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் தவறு செய்யும்போது, அதில் காட்டப்படும் சலுகை, ஒரு சமூகத்துக்குச் செய்யும் கேடாக முடியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தன் மீது கருணைகாட்ட வேண்டும் என்பதற்காகக் குற்றவாளிகள் சொன்ன காரணங்கள் எதுவும் நியாயமான காரணங்கள் அல்ல. வழக்கு 18 ஆண்டுகள் நடந்தது என்பதில் சந்தேகம் இல்லை. அதற்குக் காரணம் யார் என்பதையும் இப்போது ஆராய வேண்டிய அவசியம் இல்லை. 

ஆனால், நீதிக்குச் சமாதிகட்ட முயற்சிகள் நடந்ததால்தான் இந்த வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இந்த வழக்குக்கு 5 ஆண்டுகளுக்கு தடை இருந்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அதன் பிறகு நிறைய நேரத்தை வீணடித்தது குற்றவாளிகளே. அதையும் யாரும் மறுக்க முடியாது. 

இந்த வழக்குக்கு எந்த வகையிலும் பயன் தராத விஷயங்களைக் கேட்டு தாமதம் செய்தனர். இந்த வழக்குக்கு எந்தத் தொடர்பும் இல்லாத சட்ட நடைமுறைகளைச் சொல்லி தாமதம் செய்தனர். தேவையற்ற காரணங்களைச் சொல்லி சலுகைகளைப் பெற்று வழக்கை தாமதம் செய்தனர். இப்படியே அவர்கள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்தனர். எனவே, இவர்கள் சொன்ன காரணங்கள் தண்டனையைக் குறைப்பதற்கு ஏற்ற காரணங்கள் அல்ல.

மேலும், குற்றத்தின் தீவிரம், சொத்துகளின் அளவு, அவற்றைச் சம்பாதிக்கக் குற்றவாளிகள் பயன்படுத்திய வழிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தண்டனையை தீர்மானிக்க முடியும். 

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்க சட்டத்தில் இடம் உள்ளது. சட்டம் சொல்லும் உச்சபட்ச தண்டனையில் பாதிக்கும் மேலாக இவர்களுக்கு வழங்கினால்தான் இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டதாகும். ஏனென்றால் இந்த வழக்கின் தீவிரம் அப்படி. அந்தவகையில் ஒவ்வொரு குற்றவாளிக்கும் 4 ஆண்டுகளை சிறைத் தண்டனையாக விதிக்கிறேன்.''

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட விதம் அடுத்த இதழில்..!

நன்றி : ஜூனியர் விகடன்

0 comments: