இது நம்ம ஆளு - சினிமா விமர்சனம்

28-05-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இதுவரையிலும் சிறு வயது குழந்தைகளுக்கான படங்களையே இயக்கி வந்திருக்கும் இயக்குநர் பாண்டிராஜ், இந்த முறை சற்றே பெரிய வயதுடைய குழந்தைகளுக்காக ஒரு படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்தப் படம் தங்களது காதல் சம்பந்தப்பட்ட கதை என்று தெரிந்தும் நடிக்க ஒத்துக் கொண்ட சிம்பு மற்றும் நயன்தாராவிற்கு முதல் நன்றி. இப்படியொரு கதையை, அதே கதாபாத்திரங்களையே நடிக்க வைத்து பெரும் போராட்டத்திற்குப் பிறகு திரைக்கு கொண்டு வந்திருக்கும் இயக்குநர் பாண்டிராஜை பாராட்ட வார்த்தைகளில்லை. யாருக்கு வரும் இந்தத் தைரியம்..?

சாப்ட்வேர் நிறுவனத்தில் டீம் லீடராக இருக்கிறார் சிம்பு. இவருக்குக் கால்கட்டு போட்டுவிடத் துடிக்கும் இவரது தந்தை இவருக்காக ஒரு பெண் பார்க்கிறார். சிம்புவும் பெண் பார்க்க வருகிறார். வந்த இடத்தில் நயன்தாரா என்னும் தேவதையைப் பார்த்தவுடன் அதுவரையிலும திருமண வாழ்க்கை குறித்து சுவாரஸ்யமே இல்லாதவர், சட்டென மனம் மாறுகிறார்.
இருவரும் தனிமையில் பேசிக் கொள்கிறார்கள். அவரவர்க்கு ஒரு வாழ்க்கைப் பாதை உண்டு என்பதை உணர்கிறார்கள். சிம்புவின் முதல் காதல் பற்றி கேட்கிறார் நயன்தாரா. இதை சற்றும் எதிர்பார்க்காத சிம்பு அதிர்ச்சியானாலும் நடந்ததைச் சொல்லிவிடுகிறார்.
ஆனாலும் முடிவை சஸ்பென்ஸில் விட்டு வைத்திருக்கிறார் நயன்தாரா. அதுவரையிலும் பொறுமை தாங்காத சிம்பு, நயன்தாராவை போனில் தொடர்பு கொண்டு ஜொள்ளுவிட ஆரம்பிக்கிறார். நயனும் பேசத் துவங்குகிறார்.
ஆனாலும் லிமிட் தாண்டாமல் பழக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் நயன்ஸ். சில, பல மோதல்களுக்குப் பிறகு திருமண நிச்சயத்தார்த்தம் நடக்கிறது. இந்த நேரத்தில் நயன்தாராவின் முன்னாள் காதலர்கள் பற்றி சிம்புவின் நண்பரான சூரி, தனது டிடெக்டிவ் நண்பனான சந்தானத்தின் மூலம் விசாரிக்கத் துவங்க.. இது டேவிட் என்கிற புதிய கேரக்டரை அடையாளம் காட்டுகிறது.
டேவிட் பற்றி நயன்தாராவிடம் சிம்பு கேட்க அவர்களுக்குள் பிரச்சினை ஆரம்பமாகிறது. அதே நேரம் திருவையாறில் வருங்கால சம்பந்தி வீட்டிலேயே தங்கியிருக்கும் சிம்புவின் அப்பாவுக்கும், நயன்தாராவின் அப்பாவுக்குமான ஒரு சின்ன பிரச்சினை பெரிதாகி அது மோதலாக உருவெடுத்து கல்யாணம் நின்று போகிறது. நின்று போன சிம்பு-நயன்தாரா கல்யாணம் எப்படி நிறைவேறுகிறது என்பதுதான் மீதமான திரைக்கதை.
படத்தின் மிகப் பெரிய பிளஸ்ஸே வசனங்கள்தான். அதிலும் நயன்தாரா, சிம்பு இருவரின் தனிப்பட்ட குணங்களை மையப்படுத்தியே வசனங்கள் பெரிதும் எழுதப்பட்டிருக்கின்றன. இருவருமே அதை விரும்பி அசை போட்டிருக்கிறார்கள் போலும். தியேட்டரில் அத்தனை ரெஸ்பான்ஸ்..
“எத்தனை காதல்தான்டா பண்ணுவ..?
காதலிக்கிறதைத் தவிர உனக்கு வேற வேலையே இல்லையா..?
என்னைய வைச்சு காமெடி பண்ணி சிரிச்சுக்குறீங்க..? சிரிங்க. நான் பாட்டுக்கு என் வேலைய பார்த்துட்டு போயிக்கிட்டே இருப்பேன்..
நீயும்தான் மாத்தி, மாத்தி காதல் பண்ணிக்கிட்டிருக்குற..!?
நீ பண்ணின காதலுக்கெல்லாம் உனக்கெல்லாம் கல்யாணமே ஆகாது..
உனக்கு மட்டும் ஏண்டா இப்படியெல்லாம் நடக்குது..?
பையனா பொறந்தா ஆர்யா, தனுஷ், விஷால்ன்னு பேரு வைப்பேன்..
நான் நேர்மையாத்தான் இருக்கேன். ஆனா வர்றவங்கதான் என்னைப் புரிஞ்சுக்காம பாதியிலேயே போயிடறாங்க.. உன்னை மாதிரி..”
இது மாதிரி சிம்பு, நயன்ஸ் இருவரின் வாழ்க்கையை கொத்து புரோட்டா போடுவது மாதிரியே வசனங்களை வைத்து திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
அதிலும் சில சென்சிட்டிவ் வசனங்களை சிம்பு, நயன்ஸ் இருவருமே தனித்தனி ஷாட்டுகளில் பேசியிருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இதனால் சர்ச்சைக்குரிய வசனங்களின்போது அவரவர் ரியாக்ஷன்கள் ரசிகர்களுக்குத் தெரியாதது ஒரு குறைதான்..!
படம் முற்பாதியில் கலகலப்பாக போனாலும் பிற்பாதியில் பாதி நேரம் போனிலேயே கடலை போட்டுக் கொண்டிருப்பதால் கொஞ்சம் போரடிக்கத்தான் செய்கிறது. ஜெய் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கியிருந்தால் நேரம் மிச்சமாகியிருக்கும்தான்..
சிம்பு-ஆண்ட்ரியா காதலின் துவக்கக் காட்சியை படமாக்கியிருக்கும்விதம் ரசிப்பு.. அதிலும் ஒரு ஷாட்டில் ஆண்ட்ரியா வெட்கத்துடன் தலையைக் குனிவதும், சிம்பு அதைப் பார்த்து ரசிப்பதும் படு ஜோர்..
இதேபோல் ஆண்ட்ரியா திரும்பிப் பார்ப்பார் என்று சூரியிடம் சிம்பு சொல்ல அதேபோல் அவரும் திரும்ப.. ரொமான்ஸ் காட்சிகளுக்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டு இந்தக் காதல் போர்ஷன்தான்..
இருவரின் பிரிவுக்கான காரணத்தை இழுக்காமல் மிக நாசூக்காக வசனத்தாலேயே சொல்லி முடித்திருப்பது இயக்குநரின் டச். ஆண்ட்ரியா இப்போதும் சிம்பு மீது காதலுடனேயே இருப்பது படத்தின் திரைக்கதைக்காக இழுக்கப்பட்டதோ என்று தோன்றுகிறது.
நயன்தாராவின் அப்பா, அம்மா.. சிம்புவின் அப்பா சம்பந்தப்பட்ட  காட்சிகளுக்கு பின்புதான் படமே சூடு பிடிக்கிறது. அதாவது படத்தின் இறுதி 20 நிமிட காட்சிகள்தான் படமே.. அதுவரையிலும் ஆளாளுக்கு செல்போனில் கடலை போட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.
இடையில் சூரி, நயன்தாராவிடம் வந்து சிம்பு தன்னை வேலையைவிட்டு நீக்கிவிட்டதாகவும் அதனால் தன்னை மீண்டும் சேர்க்குமாறு சிம்புவிடம் சொல்லும்படி வந்து கேட்கும் காட்சியும் ஒரு அழகு சீன்.
சிம்பு தமிழ் சினிமாவில் உண்மையிலேயே ரொமான்ஸுக்கு ஏற்ற ஹீரோ. ஆனால் படம் கிடைத்தாலும் ஆள் கிடைக்காமல் ஓடிக் கொண்டிருப்பதால் தனக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் தெரியாமல் திண்டாடுகிறார்.
இந்தப் படத்தில் எந்த விளையாட்டையும் காட்டாமல் பாண்டிராஜின் இயக்கத்திற்குள் நடித்திருக்கிறார் போலும். அதனால்தான் ஹரோயிஸ வசனங்களே இல்லாமல் கதாபாத்திரத்திற்கேற்ற வசனங்களே இடம் பெற்றுள்ளன. அதற்கேற்ற நடிப்பையும் காட்டியிருக்கிறார் சிம்பு. வெல்டன்.
ஆண்ட்ரியாவின் முக பாவனைகளிலேயே நடிப்பைக் கொணர்ந்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். தாபாவில் முதல்முறையாக சிம்புவை பார்த்தவுடன் தனது தோழிகளிடம் இதைச் சொல்லும்விதம்.. சூப்பர் மார்க்கெட்டிற்குள் இரவு நேரத்தில் சிம்புவுடன் மாட்டிக் கொள்ளும் காட்சியில் அப்பாவிடம் போனில் பேசி சமாளிப்பது.. அந்த விளம்பரத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார் ஆண்ட்ரியா.
தொடர்ந்து தனது அப்பாவின் விருப்பத்தை மீறி எதையும் செய்ய முடியாத நிலையில் இருப்பதை சிம்பு தெரிவித்தவுடன் ‘பிரேக் அப்பை நாகரிகமா சொல்ற’ என்று திருப்பிச் சொல்லிவிட்டு எழுந்து செல்லும்போது அந்த பீலிங்கை கொணர்ந்திருக்கிறார் ஆண்ட்ரியா..! அத்தனை பெரிய அழகியல்ல.. ஆனால் சினிமா கேமிராவில் பதிவாகும்போது அழகியாகத் தெரிகிறார் ஆண்ட்ரியா.
நயன்ஸ்.. தேவதையை போலவே படம் முழுவதிலும் வலம் வந்திருக்கிறார். அறிமுகமாகும் முதல் காட்சியில் இருந்து கடைசியாக சிம்புவிடம் போனில் கெஞ்சுவதுவரையிலும் ஒன் வுமன் ஷோவே நடத்தியிருக்கிறார். கண்டிப்பான குரலில் அவர் பேசும் விதமும், காதல் வந்த பிறகு சிம்புவுடன் உருகி, உருகி பேசும்விதமும்.. இவரை எதற்காக.. ஏன்.. எப்படி சிம்பு மிஸ் செய்தார் என்று அவர் மீது கோபம்தான் வருகிறது..! நயன்ஸுக்காகவே பார்க்க வேண்டிய படம் என்கிற பட்டியலில் இந்தப் படமும் இடம் பிடித்திருக்கிறது.
சூரிதான் இந்தப் படத்தை பல நேரங்களில் தாங்கிப் பிடித்திருக்கிறார். எப்போதும் உடன் வரும் விடிவி கணேஷ் இல்லாததாலும், சந்தானம் ஒரு சில காட்சிகளில் மட்டும் வருவதாலும் சூரியின் சப்போர்ட்டிங் ஆக்டிங்தான் சிம்புவுக்கு இந்தப் படத்தில் கிடைத்திருக்கும் பக்க பலம். பல காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார். சில காட்சிகளில் அட்டே போடவும் வைத்திருக்கிறார். எல்லாப் புகழும் வசனமெழுதிய இயக்குநர் பாண்டிராஜையே சேரும்..!
பாலசுப்ரமணியெம்மின் ஒளிப்பதிவு வழக்கம்போல அபாரம்.. இரண்டு அழகிகளையும் பிரேமில் காட்டும்போது அப்படியே தொடரக் கூடாதா என்று கேட்கும் அளவுக்கு படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளிலும், மாண்டேஜ் காட்சிகளிலும் ஒளிப்பதிவு சொட்டுகிறது..!
படத்தின் பாடல்களை பற்றி இயக்குநர் பாண்டிராஜே விமர்சனம் செய்திருந்தார். ஆனால் படத்தில் பார்க்கும்போது அப்படியொன்றும் மோசமில்லை. ஆனால் இசையமைத்தது உண்மையிலேயே குறளரசனா என்கிற சந்தேகமும் இருக்கிறது. அவரது அப்பாவின் சாயல் பாடல்களில் தொனிக்கிறது.
எப்போது பார்த்தாலும் காதல்.. காதல்.. காதல்தானா என்கிற கோபம் சாமான்ய சினிமா ரசிகனுக்குள் எப்போதுமே உண்டு. ஆனால் இந்தப் படம் ஒரு கல்யாணமாகப் போகும் காதலர்களுக்குள் நடக்கும் ஈகோ, மோதல்களைப் பற்றிப் பேசுவதால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.
காதலர்களுக்கும், காதலித்து தோற்றவர்களுக்கும், காதலினால் வாழ்க்கையை இழந்தவர்களுக்கும் நிச்சயம் இந்தப் படம் பிடிக்கும்..!

0 comments: