பிரம்மன் - சினிமா விமர்சனம்

24-02-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு நண்பன் ஜெயித்தால், சக நண்பனும் ஜெயித்த மாதிரி என்பதுதான் நட்பு பட வரிசையில் அடுத்த படமான இந்த பிரம்மனின் ஒன்லைன்..


சிறு வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் கொண்டவர் சசிகுமார். ஊரில் அனைவராலும் கைவிடப்பட்ட ஒரு ஓட்டை தியேட்டரை லீஸுக்கு எடுத்து பழைய படங்களாக திரையிட்டு நஷ்டத்தைச் சம்பாதித்து வந்தாலும் சினிமா ஆசையால் அதனைக் கைவிடாமல் இருக்கிறார். ஒரு நாள் வணிகவரி கட்டவில்லையென்று தியேட்டர் சீல் வைக்கப்பட.. 5 லட்சம் ரூபாயை சம்பாதிக்க வேண்டி சென்னைக்கு படையெடுக்கிறார் சசிகுமார். சென்னையில் மிகப் பெரிய இயக்குநராக இருக்கும் தனது பால்ய கால நண்பன் மதன்குமாரிடம் உதவி கேட்டு அதன் மூலம் தியேட்டரை மீண்டும் நடத்திக் காட்டுவேன் என்று சவால் விடுகிறார். இந்த சவாலில் ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் கதை..!

சசிகுமார் எப்படி இந்தக் கதையில் சிக்கினார் என்றே தெரியவில்லை. அவர் நடித்திருக்க வேண்டிய படமே இல்லை.. இயக்குநரோ ச்சிகுமாரை தவிர வேறு யாரையும் நினைத்து கூட பார்க்கவில்லை என்றார். நட்பு என்கிற அடையாளத்துடன் படம் வருவதால், இப்போதைக்கு அதற்கு காப்பிரைட்ஸ் வாங்கி வைத்திருக்கும் ச்சிகுமார்தான் பொருத்தம் என்று அழைத்துவிட்டார் போலும். கதையைக் கேட்டவுடன் தான் இதில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறியிருந்தார் சசிகுமார். ஒருவேளை இடைவேளைக்கு பிறகு வரும் கதையையும், கிளைமாக்ஸையும் மட்டும் சொல்லியிருப்பார் போலிருக்கிறது.

கொஞ்சம் ஹேர்ஸ்டைலை மட்டும் மாற்றியிருக்கும் சசி, நடிப்பு ஸ்டைலை மட்டும் மாற்றவில்லை. இன்னும் எத்தனை படங்களில் இதையே பார்ப்பது..? அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் மூலமாக திருட்டு விசிடி, சினிமா மூலமாக மக்களுக்கு நல்ல பொழுது போக்கு.. டிவி சீரியல்களினால் குடும்பம் கெடுகிறது.. சினிமா தொழில் சிறந்த தொழில்.. அதில் இருக்கும் தொழிலாளர்களை பார்க்க வேண்டும்.. துணை இயக்குநர்களாக இருப்பவர்களின் எதிர்காலக் கனவு.. தயாரிப்பாளர்களின் கதை கேட்கும் முறை.. பைனான்சியர்களின் அறிமுகம்.. தயாரிப்பாளர்களின் பயம்.. சக இயக்குநர்களின் பொறாமை.. நல்ல கதை கேட்டு அலைவது.. கதையைத் தன் பெயரில் போட்டு படமெடுக்கும் இயக்குநர்கள்.. என்று சினிமாவின் சகலத்தையும் சசிகுமாரின் கேரக்டர் மூலமாகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இதுதான் படத்தின் நெகட்டிவ் ரிசல்ட்டுக்கு முதல் காரணம்..!

திரைக்கதை ஏதோ கொஞ்சம் சுவாரஸ்யத்தைத் தருமென்று பார்த்தால், 1002-வது படமாக சசிகுமாரின் காதல் உருவாகும் கதையைச் சொல்கிறார்கள். ரோட்டில் நடந்து போகையில் பார்த்தவுடன் காதல்.. பின்பு அவள் படிக்கும் கல்லூரி வாசலில் போய் நின்று முட்டாள்தனமாக லெக்சரரிடம் காதல் பற்றி பேசுவது.. அவரும் லவ் லெட்டரை பாஸ் செய்வது.. திரும்பவும் வந்து கதையைச் சொல்வது என்று அழுத்தமே இல்லாத நம்பவே முடியாத காமெடியான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர்.

காதல் காட்சிகளில் காட்டும் ரொமான்ஸை ச்சிகுமாரால் இந்தப் படத்தில் காட்டவே முடியவில்லை. ஒருவேளை இது இயக்குநரின் தவறாக இருக்குமோ..? ஹீரோயினின் வீட்டுக்கு அவளை பார்க்கப் போய் திரும்பச் செல்லும்போது போயிட்டு வரேன் என்று சப்பையாக மழுப்பிவிட்டு கிளம்புவதை பார்த்தால் எரிச்சலாக வருகிறது.. என்ன மொக்கைத்தனமான இயக்கம்..?

இடைவேளைக்கு பின்பு சசி சென்னைக்கு வந்து அடுத்தடுத்து நடக்கும் டிவிஸ்ட்டுகள் மட்டுமே படத்துக்கு பலம் சேர்க்கின்றன. மதன்குமாரின் அஸிஸ்டெண்ட் என்று சொல்லி கதை கேட்க வைத்து அட்வான்ஸ் வாங்குவது.. மதன்குமாரே தேடி வந்து யார் நீ என்று கேட்பது.. அப்போதே நான்தான்டா பழைய பங்காளி என்று சொல்லியிருந்தால் படம் அப்போதே முடிந்திருக்கும். இழுக்க வேண்டும் என்பதால் கடைசிவரையில் சொல்லாமலேயே கொண்டு போயிருக்கிறார்கள்..

சூரியின் வாயால் ச்சியின் ஜாதகத்தை தெரிந்து கொண்டு தயாரிப்பாளர் கதையை மட்டும் கேட்டவுடன் கொடுப்பதாகச் சொல்லிவிட்டு ஊருக்கே திரும்பி வருகிறார் ச்சி. அந்தக் கதையைப் படித்தவுடன் அது தன்னுடைய கதைதான் என்ற சின்ன ஜெர்க்கூட வரவில்லையா இயக்குநர் மதன்குமாருக்கு.? நீங்க எந்த ஊர்..? என்ன பேக்கிரவுண்ட் என்று சசிகுமாரிடம் அவர் கேட்டிருந்தால்..?

தங்கச்சிக்கு ஒரு பையன் லவ் லெட்டர் கொடுத்திருக்கான்னு சொன்னா.. அதை வாங்கப் போறாருன்னு பார்த்தா.. திருட்டு டிவிடியை பார்த்துட்டு ஒரு கதையடிச்சிட்டு கிளம்புறார் சசி. கல்யாணத்தன்று தங்கையின் பழைய காதலன் தேடி வர.. பொறுப்பாக அவனை தங்கையிடம் கொண்டு வந்து நிறுத்திவிட்டு கொன்னிரு என்று சொல்லி கத்தியை எடுத்துக் கையில் கொடுத்துவிட்டுப் போகிறார்.. என்ன மாதிரியான கேரக்டர் ஸ்கெட்ச் என்றே புரியவில்லை. ஆனால் இது சைக்காலஜிக்கலா ரெண்டு பேருக்கும் சமாதானம் செஞ்சு வைக்கிறாராம். நிஜத்தில் நம்ப முடிகிறதா இதை..?

சென்னைக்கு வந்த பின்பு காதலியை இவர் மறந்துவிடுகிறார். ஆனால் சந்தர்ப்பவசமாக சென்னை வரும் ஹீரோயின் இவரைத் தேடி வருகிறார். பார்க்க முடியவில்லை. இவர் தேடியலைகிறார். இதனை கண்டறிந்த பின்பும் ஊர் திரும்பும் ஹீரோயின் வேறு திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார். திரைக்கதையின் இந்த போங்காட்டத்தில் கதையின் மீது ஈர்ப்பே இல்லாமல் போய்விட்டது..

கிளைமாக்ஸ் எதிர்பார்த்தது போலவேதான்.. சில விஷயங்களை இது நடந்துவிட்டது என்று குறிப்பால் உணர்த்திவிட்டு தனது நண்பனை தேடி வந்து பார்க்கும் மதன்குமார், தான் இயக்குநராக ஜெயித்தவுடனேயே தன் நண்பனை தேடி வந்திருக்கலாமே..? இப்போ யார் அவரைத் தடுக்கப் போகிறார்..? ம்ஹூம்.. திரைக்கதையில் இருந்த ஓட்டைகள் படத்தை சுவாரஸ்யமாக்கத் தவறிவிட்டன..!

சசிகுமாரின் நட்பு குறித்த டயலாக்குகள், காதல் குறித்த டயலாக்குள்.. அப்பா-மகன் மோதல் இப்படி சில விஷயங்களை மட்டுமே ரசிக்க முடிந்த்து.. எப்போதும் உவமையுடன் காமெடி டயலாக் பேசுவதை சந்தானம் எப்போது நிறுத்தப் போகிறார் என்று தெரியவில்லை..? அவ்வப்போது சிரிக்க வைத்திருக்கிறார். இடைவேளைக்கு பின்பு சூரி குத்தகைக்கு எடுத்து கதையை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறார்.

தேவிஸ்ரீபிரசாத்தின் இசை. பாடல்கள் முரசு கொட்டி ஒலித்தன. மெலடிகளை திரும்பக் கேட்கும் ஆசையில்லை. ஆனால் ஒரேயொரு ஆறுதல் பத்மபிரியாவின் குத்தாட்டம்.. எத்தனை நாளாச்சு அம்மணிய பார்த்து..? நல்ல நடிகை. ஆனால் தமிழ் ஹீரோக்களுக்குத்தான் தங்களைவிட நல்லா நடிச்சா பிடிக்காதே.. பாவம்.. மலையாளம் தத்தெடுத்துக் கொண்டுவிட்டது.. வாழ்க வளமுடன்..!

மிகப் பெரிய பொருட்செலவில் தயாரித்திருக்கிறார் கன்னட தயாரிப்பாளரான கே.மஞ்சு. தமிழகம் முழுவதும் மிகுந்த ரிஸ்க் எடுத்து சொந்தமாகவே ரிலீஸ் செய்திருக்கிறாராம். மதுரை, ராமநாதபுரம் ஏரியாவை சசிகுமாரே வாங்கி வெளியிட்டிருக்கிறார்கள். எந்தச் சேதாரமும் இல்லாமல் போட்ட காசாவது கிடைக்க வேண்டும் என்று என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

அநேகமாக இயக்குநர் சாக்ரடீஸின் சொந்தக் கதையாக இது இருக்கலாம் என்று நான் யூகிக்கிறேன். அதனால்தான் விடாப்பிடியாக இந்த ஒரு கதையை வைத்துக் கொண்டு 3 வருடங்களாக தயாரிப்பாளரை விரட்டியிருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் இதனைவிட நல்லவிதமாக படங்கள் செய்ய சாக்ரடீஸுக்கு வாழ்த்துகள்..!

4 comments:

Unknown said...

படம் அவ்வளவு மொக்கையாகவா உள்ளது???

puduvaisiva said...

அண்ணே, சரியான மொக்கை படம்

Ranga said...

Hi,

It is an average sort of movie.
I like Aha Kalyanam than this movie. When will you write review on "Aha Kalyanam".

Regards
Ranga

Pandiarajan said...

It's high time that sasi realises that he is ramarajan version 2.