சாக்கோபார் - சினிமா விமர்சனம்

27-08-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தியாவின் பரபரப்பு இயக்குநர்களில் ஒருவரான ராம்கோபால்வர்மாவின் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி ‘ஐஸ்கிரீம்’ என்கிற பெயரில் வெளியான படத்தின் தமிழ் டப்பிங் படம்தான் இந்த ‘சாக்கோபார்’.
ஒரே லொக்கேஷன். மிகப் பெரிய வீடு. இரண்டு முக்கிய நடிகர்கள். 4 துணை நடிகர்களுடன் வெறும் இரண்டே கால் லட்சம் ரூபாய் செலவில் 4 நாட்களில் மொத்தப் படமும் எடுத்து முடிக்கப்பட்டது. படத்தின் வசூலோ 5 கோடிக்கும் மேல்.
இப்படியெல்லாம் குறைந்த செலவில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க முடியுமா என்கிற ஒரு கேள்வியை இந்தியா முழுக்க கேட்க வைத்துவிட்டார் ராம்கோபால்வர்மா. அது வர்மா போன்ற சிறந்த இயக்குநர்களால் மட்டுமே முடியும் என்பதுதான் உண்மை.

இதே ‘ஐஸ்கிரீமின்’ தொடர்ச்சியாக முதல் பாகம் வெளியான சில மாதங்களிலேயே 2014 நவம்பர் 21-ம் தேதி ‘ஐஸ்கிரீம்’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் இதேபோல் குறைந்த செலவில் தயாரித்து வெளியிட்டார் ராம்கோபால் வர்மா. அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்தப் படமெல்லாம் தமிழுக்கு செட்டாகாது என்று வர்மா மறுத்தும் கேளாமல் ஏடிஎம் புரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பாளரான டி.மதுராஜ், வர்மாவிடம் அனுமதி வாங்கி ‘ஐஸ்கிரீம்’ முதல் பாகத்தை ‘சாக்கோபார்’ என்கிற பெயரில் தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறார்.
கல்லூரி மாணவியான தேஜஸ்வினியின் பெற்றோர் ஒரு கல்யாணத்திற்காக வெளியூர் செல்கிறார்கள். அவளுடைய மிகப் பெரிய வீட்டில் அவள் மட்டும் தனியே இருப்பதை அறிந்த அவளது காதலனான ஹீரோ நவ்தீப் அவளைப் பார்க்க அந்த வீட்டிற்கு வருகிறான்.
அந்த வீட்டில் இருக்கும் தவளை மாதிரியான ஒரு பொம்மை இருக்கிறது. அந்தப் பொம்மையை இந்த வீட்டை கட்டியவர்கள் ஏதோ ஒரு சென்ட்டிமெண்ட்டிற்காக வைத்திருக்கிறார்கள் என்கிறாள் ஹீரோயின். ஆனால் ஹீரோ வெகு அலட்சியமாக அந்தத் தவளை பொம்மையை தன் காலால் எட்டி உதைத்துவிடுகிறான்.
இதன் பின்பு அந்த வீட்டில் நடக்கக் கூடாத சம்பவங்களெல்லாம் வரிசையாக நடக்கிறது. யாரோ பியானோ வாசிக்கிறார்கள். 10 நிமிடத்திற்கொரு முறை வீட்டுக் கதவைத் தட்டுகிறார்கள். பாத்ரூமில் பேய்கள் குடியிருக்கின்றன. சூனியக்காரி கிழவி வேடத்தில் ஒருத்தி ஹீரோயினின் கண்ணுக்குப் படுகிறாள். பாத்ரூமில் தண்ணீர் விடாமல் சொட்டுகிறது. தனிமையில் இருக்கும் ஹீரோயினை அப்போதைய சூழல் பெரிதும் பயமுறுத்த துணைக்கு ஹீரோவை வரவழைக்கிறாள்.
சொட்டுச் சொட்டாக வடியும் பாத்ரூம் குழாயை சரி செய்ய பிளம்பரை வரவழைக்கிறான் காதலன். ஆனால் வந்தவனோ மந்திரவாதியை போலவே இருக்க.. இன்னும் பயப்படுகிறாள் ஹீரோயின். மேலும் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியும், அவளது தம்பியாக வருபவர்களும் சேர்ந்து கொண்டு காட்சிக்கு காட்சி பயமுறுத்த.. ஹீரோயினுக்கு நிஜமாகவே அந்த வீட்டில் ஏதோ ஒன்று நடக்கிறது என்பது போல தெரிகிறது.
கடைசியில் என்ன ஆகிறது என்பதும்..? ஹீரோயினின் பயம் தெளிந்ததா என்பதும்தான் இந்தப் படத்தின் பயமுறுத்த வைக்கும் கதை..!
இயக்கம் என்றால் என்ன என்பதற்கு ராம்கோபால்வர்மா மிகப் பெரிய உதாரணம். இந்தப் படத்தில் இன்னும் கொஞ்சம் மேலே போய் பயமுறுத்தல் என்றால் என்ன என்பதற்கான உதாரணத்தையும் காட்டியிருக்கிறார் வர்மா.
காட்சிக்குக் காட்சி மிரட்டல்தான். இப்படியெல்லாம் ஷாட்டுகள் வைக்க முடியுமா என்பது போலவே வைத்து அசத்தியிருக்கிறார். மிரட்டியிருக்கிறார் வர்மா. ப்ளோகேம் என்னும் புதுவிதமான கேமிரா பதிவு மூலம் மொத்தப் படத்தையும் பதிவாக்கியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஆஞ்சிதான் இந்தப் படத்திற்கு முதுகெலும்பாய் இருந்திருக்கிறார். பாவம்.. அந்த 4 நாட்களும் அவர் எப்படித்தான் இப்படி அலைந்து, திரிந்து படமாக்கினாரோ..? பாராட்டுக்கள்.. வாழ்த்துகள் ஒளிப்பதிவாளருக்கு..
ஹீரோயின் தேஜஸ்வனிகூட அதிக நேரம் நடந்தும், ஓடியுமே அதிகம் களைப்பாகியிருப்பார். அந்த அளவுக்கு அவரை ஓட வைத்திருக்கிறார் வர்மா. வெறுமனே மிரட்டல் மட்டும் அல்ல. படத்தில் நடித்த 6 பேரையுமே மிகச் சிறப்பாக நடிக்கவும் வைத்திருக்கிறார் வர்மா.
தேஜஸ்வனியின் ஒவ்வொரு பயப்படுதலும், பயமுறுத்தப்படுதலும் பார்வையாளனுக்கும் சேர்ந்தே கடத்தப்பட்டிருக்கிறது. வேலைக்காரியாக நடித்திருக்கும் அந்தப் பெண்ணின் மிரட்டல் பார்வையும், பேய்க் கிழவியின் மேக்கப்பும் ஓஹோ.. மிக பொருத்தமான தேர்வு. இதேபோல் பிளம்பராக வருபவரின் ஆக்சன்களும் கூடுதலாக மிரட்டிவிட்டுப் போக.. படத்தின் அத்தனை கேரக்டர் ஸ்கெட்ச்சுகளும் மட்டுமல்லாமல் செட் பிராப்பர்ட்டீஸ்கூட மிரட்டியிருக்கின்றன எனலாம்.
வர்மா படம் என்றால் கவர்ச்சி இல்லாமல் எப்படி..? இதில் ஹீரோயினை கவுச்சி ஆடை அணிவித்து கடைசிவரையிலும் அதே ஆடையிலேயே வலம் வர வைத்து.. எப்படியும் ‘ஏ’ சர்டிபிகேட்டுதான் கிடைக்கப் போகுது.. பார்த்து ரசிக்கட்டுமே என்று ஜொள்ளுவிட வைத்திருக்கிறார் வர்மா. இன்றைய இந்திய இளைஞர்களைப் பற்றி உண்மையாகவே தெரிந்து வைத்திருக்கும் ஒரே இயக்குநர் வர்மாதான் போலிருக்கிறது..!
நவ்தீப் ஓகே.. காதலியை சமாளிப்பதற்கும், சரசமாடுவதற்கும் அவசியம் தேவையாய் இருந்திருக்கிறார். கடைசியில் இவருடைய முடிவு எதிர்பாராதது..! “ஹைதராபாத்தில் நடந்த உண்மைச் சம்பவம்தான் இது…” என்கிறார் வர்மா. நம்பத்தான் முடியவில்லை.
பிரத்யோதனின் இசையும், பிரதாப் குமார் சங்காவின் படத் தொகுப்பும் மிகச் சிறப்பானது. மிரட்டல் காட்சிகளில் வரும் இசையும், இதனூடேயே தொடர்ந்து நடிப்பையும் காட்ட வைத்திருக்கும் படத் தொகுப்பும் இந்த பேய்ப் படத்தை திகில் விரும்பிகள் அனைவரும் பார்க்கலாம் என்று சொல்ல வைத்திருக்கிறது.
சாக்கோபார் – பேய் மிரட்டல்

0 comments: