Showing posts with label தமன்னா. Show all posts
Showing posts with label தமன்னா. Show all posts

தேவி - சினிமா விமர்சனம்

08-10-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பேய்ப் படங்களை என்னதான் கொத்து புரோட்டா போட்டாலும் புதிய வகையான திரைக்கதையில் காட்டப்படும் பேய்களெல்லாம் சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த தேவி எனப்படும் ரூபி பேயின் கதை.

மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார் பிரபு தேவா. கோவை மாவட்டத்தில் குக்கிராமத்தில் பிறந்த இவருக்கு இப்போது ஒரேயொரு குறிக்கோள்தான். ஒரு அல்ட்ரா மாடர்ன் கேர்ளை கல்யாணம் செய்ய வேண்டும் என்பதுதான்.
அதற்காக அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு சேரும் இளம் பெண்களுக்கு முதல் நாளே தனது பயோடேட்டாவை காட்டி லவ் அப்ளிகேஷன் போடுவது இவரது வாடிக்கை. அப்படியும் எதுவும் செட்டாகவில்லை என்பது அவருடைய சோகம்.
திடீரென்று அவருடைய பாட்டி சீரியஸ் என்று தகவல் வர.. பதறியடித்துக் கொண்டு ஊருக்கு வருகிறார் பிரபுதேவா. அங்கே பாட்டி ‘இப்பவோ.. அப்பவோ..’ என்று இழுத்தடித்துக் கொண்டிருக்க.. அவர் கண் மூடுவதற்குள்ளாக அவர் கண் முன்பாகவே பிரபுதேவாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது அப்பா முடிவெடுக்கிறார். அப்பாவை எதிர்த்து பேச தைரியமில்லாத பிரபுதேவா மனமில்லாமல், தைரியமில்லாமல் இதனை எதிர்க்க வழி தெரியாமல் தவிக்கிறார்.
ஊரிலேயே மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த தமன்னாவை பாட்டி கை காட்ட.. வேறு வழியே இல்லாமல் பிரபுதேவா திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் பாட்டி பிழைத்துக் கொள்கிறார். தனக்கேற்பட்ட சோகத்தைத் தாங்கிக் கொண்டு புதிய மனைவியுடன் மும்பை வருகிறார் பிரபுதேவா.
ஒரு பாழடைந்த குடியிருப்பின் முதல் மாடியில் அவருக்கு வீடு கிடைக்கிறது. ஆனால் அந்த வீட்டில் ஏற்கெனவே குடியிருந்த ரூபி என்னும் திரைப்பட நடிகை தான் நடித்த முதல் படம் ரிலீஸாகாத சோகத்தில் தற்கொலை செய்து இறந்து போயிருந்ததை வீட்டு புரோக்கர், பிரபுதேவாவிடம் சொல்லாமலேயே மறைத்துவிடுகிறார்.
தனது ஆசை நிறைவேறாத காரணத்தினால்.. ஆன்மா சாந்தியாகாமல்.. அந்த வீட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்த ரூபி, தேவியைப் பிடித்துக் கொள்கிறாள். முதல்முறையாக வீட்டை விட்டு வெளியே வரும் தேவியை ஆட்கொள்ளும் ரூபி, அவளை ஸ்டார் ஹோட்டலில் நடனமாடவும் வைக்கிறாள்.
அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் சூப்பர் ஸ்டார் ராஜ் கண்ணா தேவியின் அழகிலும், ஆட்டத்திலும் மயங்கி அவளை தனது அடுத்தப் படத்தில் ஹீரோயினாக புக் செய்ய ஆள் அனுப்புகிறார். ஊரில் எருமை மாடு மேய்த்துக் கொண்டிருந்த தேவி, திடீரென்று வீட்டில் ரூபி வடிவத்தில் உருவெடுத்து தான் சினிமாவில் நடிப்பதாகச் சொல்ல.. வெலவெலத்துப் போகிறார் பிரபுதேவா.
தேவியை தடுக்க முடியாமல் படப்பிடிப்பிற்கு அழைத்துச் செல்கிறார். ஒரு கட்டத்தில் ரூபி என்னும் பேயின் வேலைதான் இது என்பதை தெரிந்து கொள்கிறார். ரூபியிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்துகிறார் பிரபுதேவா.
ரூபி தனது கண்ணீர்க் கதையைச் சொல்லி “இந்த ஒரேயொரு படத்தில் இப்போதைய சூப்பர் ஸ்டாரான ராஜ் கண்ணாவுடன் சேர்ந்து நடித்துவிடுகிறேன். அதன் பின்பு உன் தேவியை விட்டுவிடுகிறேன்…” என்கிறாள். பிரபுதேவாவும் இதற்கு சம்மதிக்க இது தொடர்பாக பேயுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்.
ஒப்பந்தப்படி பேயான ரூபி நடந்து கொண்டாளா..? தேவியின் கதி என்ன ஆனது..? பிரபுதேவா தனது திருமதியை மீட்டெடுத்தாரா..? என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.
முதல் பாராட்டு கதையையும், திரைக்கதையையும் எழுதிய பால் ஆரோன் மற்றும் இயக்குநர் விஜய்க்கு. அடிப்படையான கதை என்னும் அடித்தளம் நன்றாக இருந்தால்தான் சிறந்த நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களை கொண்டு மேலே எழுப்பப்படும் கட்டிடமும் சிறப்பானதாகவே இருக்கும். இதிலும் அந்த மேஜிக்தான் நிகழ்ந்திருக்கிறது.
பேய்க் கதை என்பதாலோ மற்ற பேய் படங்களை போல தலையை விரித்துப் போட்டு நடப்பது.. வெள்ளை சேலையில் வந்து பயமுறுத்துவது.. பின்னணியில் ஸ்மோக்கை போட்டு சாவடிப்பது என்கிற கண்றாவியெல்லாம் இல்லாமல் மிகவும் சிம்பிளாக பேய் தேவியின் உடலுக்கும் நுழையும்.. பின் வெளியேறும் என்பதைக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
இந்த இரண்டுக்குமான வித்தியாசத்தை தேவி மற்றும் ரூபியாக வரும் தமன்னா தனது அபாரமான நடிப்புத் திறமையில் காட்டியிருக்கிறார். சாந்த சொரூபியான தேவியாகவும், அடங்காத ரூபியாகவும் மாறி, மாறி வரும் அவருடைய நடிப்பும், உடல் மொழியும் இந்தப் படத்திற்குக் கிடைத்த பெரும் லாபம். தமன்னாவை தேர்வு செய்த காஸ்டிங் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.
பிரபுதேவா படம் என்றாலே பாடல்களும், நடனமும் தனித்து பேசப்படும். இதிலும் அப்படியே.. தமன்னாவின் கை, கால்களெல்லாம் சுளுக்கெடுக்கும்வகையில் நடன அசைவுகளை வைத்து அசத்தியிருக்கிறார். நடனத் தாரகையாக இந்தப் படத்தில்தான் ஜொலித்திருக்கிறார் தமன்னா. வாழ்த்துகள் பாராட்டுக்கள்.
பிரபுதேவா மாடர்ன் கேர்ளின் ஹஸ்பெண்ட்டாக தன்னை நினைத்துக் கொண்டிருந்தவர் ஒரு அருக்காணியின் கணவனாக மாற வேண்டியதை நினைத்து புலம்புவதில் துவங்கி.. படம் முழுக்க கடைசிவரையிலும் புலம்பிக் கொண்டேதான் இருக்கிறார்.
அதிலும் தேவி, ரூபியாக மாறி சினிமா ஹீரோயினாக நடிக்கத் துவங்கியவுடன் செட்டுக்களிலும், ராஜ் கண்ணாவின் மேனேஜரிடமும் மாட்டிக் கொண்டு முழிப்பதிலும் ஒரு எளிய நகைச்சுவையை படம் முழுக்க காண்பித்திருக்கிறார் பிரபுதேவா. அதிலும் இருவரின் குடும்பத்தினரும் வந்து காத்திருக்கும்வேளையில் பிரபுதேவா அவர்களைச் சமாளிக்கும் காட்சி அமர்க்களம்..!
கிளைமாக்ஸில் பெண் மருத்துவருடன் பிரபுதேவா கை குலுக்கும் காட்சிக்கு, தியேட்டரே அதிர்கிறது. அத்தனை கால பொறுமைக்குக் கிடைத்த பாராட்டு என்று அதனை எடுத்துக் கொள்ளலாம்.
பிரபுதேவாவின் ஸ்பெஷலாட்டியே நடனம்தானே.. இதிலும் அதற்குக் குறைவில்லாமல் செய்திருக்கிறார். பாட்டும், நடனமும் இந்தப் படத்தின் தனி ஸ்பெஷல் என்றே சொல்ல வேண்டும். இத்தனை ஸ்டெப்புகளை வைத்து.. ரப்பர் போல உடம்பை வளைத்து ஆடும் நடிகர் இந்தியாவிலேயே பிரபுதேவா மட்டும்தான் என்பதால் இந்திய சினிமாவில் இவருக்கான இடம் அப்படியேதான் உள்ளது என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
ஹிந்தி நடிகர் சோனுசூட் சூப்பர் ஸ்டார் ராஜ் கண்ணாவாக நடித்திருக்கிறார். இவரைவிடவும் இவரது மேனேஜராக நடித்திருக்கும் முர்லி சர்மா, தான் வரும் காட்சிகளிலெல்லாம் சிரிக்க வைத்திருக்கிறார். இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் அப்படி..!
ஒரு நடிகரின் மேனேஜராக இருப்பவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும்..? என்னவெல்லாம் செய்ய வேண்டும்..? என்பதற்கு இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சையை உதாரணமாக சொல்லலாம்..!
நடிகர்களின் உள்ளமறிந்து செயல்பட்டு, அவசரத்தனத்தில் மாற்றி பேசிவிட்டாலும், பின்பு அதைச் சமாளித்து முதலாளியை குஷிப்படுத்தும் மேனேஜர்கள்தான் இன்றைக்கு அநேக நட்சத்திரங்களிடம் பணியாற்றுகிறார்கள். அதில் ஒருவர்தான் இந்த முர்லி சர்மா. கிளைமாக்ஸில் தமன்னா கர்ப்பம் என்று தெரிந்தவுடன் ஆர்வமாக ராஜ்கண்ணாவின் கையைப் பிடித்திழுத்து “கங்கிராட்ஸ்” சொல்லி கன்னத்தில் அறை வாங்கிக் கொண்டு ‘தேமே’ என்று நிற்கும் முர்லிதான் கிளைமாக்ஸிலும் சிரிக்க வைத்துவிட்டார். வெல்டன் ஸார்.
ஆர்.ஜே.பாலாஜி பிரபுதேவாவின் நண்பராக வந்து சில இடங்களை சமாளித்திருக்கிறார். ரூபியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவரிடம் அடுத்த நிமிடமே, “ராத்திரி சாப்பிட சப்பாத்தி செய்யட்டுமா அண்ணா..” என்று தேவி பவ்யமாக கேட்கும்போது, அவர் காட்டும் ரியாக்ஷனே போதும்..!
ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவும் படத்தின் பெரிய பலம். பாடல் காட்சிகளில் உடை வடிவமைப்பாளர் மற்றும் பிரபு தேவாவின் உதவியோடு பட்டையைக் கிளப்பியிருக்கிறது கேமிரா. அதிலும் முதல் பாடல் காட்சியில் பிரபுதேவா மட்டும் தரையில் அமர்ந்து தனித்து ஆடும் ஷாட்டுகளின் அழகு, பிரபுவையும் தாண்டி ரசிக்க வைத்திருக்கிறது.
கிராமம், மும்பை, அந்த வீடு, பட லொகேஷன் என்று பல இடங்களில் பயணித்தாலும் படத்தின் கலர் டோன் மாறாமல் டல்லடிக்காமல் கடைசிவரையிலும் அதன் ரிச்னெஸை அப்படியே தொடர்ந்திருக்கிறார் மனுஷ் நந்தன். சிறந்த கலைஞர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே இது சாத்தியம்..!
சாஜித்-வாஜித், விஷால் மிஷ்ராவின் இசையில் நான்கு பாடல்களுமே கேட்கும் ரகம். ‘பச்சையப்பா காலேஜ்’ பாடலும், ‘ரங்.. ரங்.. ரங்கோலி’ பாடலும் இளசுகளை ஆட வைத்திருக்கும் பாடல். ‘கொக்கா மக்கா கொக்கா’ படல் கதையை நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறது. திரில்லர் டைப் படம் என்பதால் பயமுறுத்தலான பின்னணி இசையெல்லாம் போட்டு படுத்தாமல் இசையை உறுத்தாத அளவுக்கு அமைத்திருக்கிறார் ஒலி வடிவமைப்பாளர்.
நடனம், ஆடை வடிவமைப்பு, செட்டிங்குகள் என்று அனைத்துத் துறையிலுமே வல்லுநர்களாக சேர்ந்து உழைத்திருப்பதால் குறைந்த பட்ஜெட்டில் நிறைவான ஒரு படமாக இந்தப் படம் வந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
இயக்குநர் விஜய்யின் அழுத்தமான இயக்கமும், நடித்த நடிகர்களின் பண்பட்ட நடிப்பும், உயிர்ப்புடன் இருந்த கதையும், சுவாரஸ்யமான திரைக்கதையும்.. போரடிக்காமல் இருக்க படம் முழுவதும் தெளிக்கப்பட்டிருக்கும் நகைச்சுவையும் படம் இப்போது ஹிட்டடிக்க பெரிதும் உதவியிருக்கின்றன.
என்ன இன்னொரு பேய்ப் படமா என்று அலட்சியமாக கடந்து போக முடியாதவகையில், இப்படியும் ஒரு பேய்ப் படமா என்று கேட்க வைத்து படம் பார்க்க அழைத்திருக்கிறது இந்தக் குழு.
படக் குழுவினருக்கு நமது வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!

தோழா - சினிமா விமர்சனம்

27-03-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘தோழன்’ என்கிற ஒரு வார்த்தைக்கு இருக்கும் மதிப்பையும், மரியாதையும் மீட்டுத் தந்திருக்கும் படம் இது.

மிகப் பெரிய செல்வந்தராக இருந்தும் விதியின் விளையாட்டினால் முதுகுத் தண்டில் அடிபட்டு வீல்சேரில் நடமாடும் அளவுக்கு இருக்கிறார் கோடீஸ்வரரான நாகார்ஜூனா. தன்னை பரிவுடன் பார்த்துக் கொள்ள ஆள் தேடுகிறார்.
இன்னொரு பக்கம் அடிக்கடி சிறு, சிறு திருட்டுகளில் ஈடுபட்டு ஜெயிலுக்கு போய் வரும் கார்த்தியினால் அவருடைய குடும்பமே பாதிக்கப்படுகிறது. தன்னுடைய வக்கீல் நண்பரான விவேக்கின் முயற்சியால் 4 மாத பரோலில் ஜெயிலில் இருந்து வெளியில் வருகிறார் கார்த்தி.
வீட்டுக்கு வந்தால் தம்பி தறிகெட்டுப் போயிருக்கிறான். தங்கை மதிக்கவே மாட்டேன் என்கிறாள். அம்மாவும் அதையேதான் கார்த்தியிடம் சொல்கிறாள்.. இனிமேல் இங்க வராதே என்று.. மனம் வெதும்பிப் போய் நிற்கும் கார்த்தியை வேறு வேலைகளில் தள்ளிவிடப் பார்க்கிறார் விவேக். எதுவும் அமையாமல் போக கடைசியாக நாகார்ஜூனாவின் நேர்முகத் தேர்வுக்கு அனுப்பி வைக்கிறார்.
அங்கேயும் எப்போதும்போல தெனாவெட்டாக பேசும் கார்த்தியை ஏனோ நாகார்ஜூனாவுக்கு மிகவும் பிடித்துப் போகிறது. ஆனால் கார்த்திக்கு அந்த இடம் பிடித்துப் போனதற்கு இரண்டு காரணங்கள். 1. தமன்னா.. 2. அந்த வீட்டில் அவருக்குக் கொடுத்திருக்கும் வசதியான பெரிய அறை.
அதுவரையிலும் தன்னை ஒரு நோயாளி போலவே ட்ரீட் செய்து வரும் தனது நண்பர்கள், சுற்றத்தாரிடமிருந்து “உனக்கு ஒண்ணுமே இல்லண்ணே.. நல்லாத்தாண்ணே இருக்க..” என்று பாஸிட்டிவ்வாக பேசி அவரை உற்சாகப்படுத்தும் கார்த்தியை நாகார்ஜூனாவுக்கு ரொம்பவே பிடித்துப் போகிறது..!
நாகார்ஜூனாவை வெளியில் காரில் அழைத்துப் போகிறார். பரிவுடன் பார்த்துக் கொள்கிறார்.. இன்னொரு பக்கம் நாகார்ஜூனாவுக்குள் இருக்கும் காதல் உணர்வுக்குக் காரணமானவரை அழைத்து வந்து, அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த முனைகிறார் கார்த்தி. அது முடிந்ததா… இல்லையா என்பதுதான் படத்தின் உயிரோட்டமான திரைக்கதை.
பிரெஞ்சு மொழியில் வெளியான ‘InTouchables’ என்கிற படத்தின் ரீமேக் இது. இந்தப் படத்தை முதலில் பார்த்தபோது கமல்ஹாசனும், விஜய் சேதுபதியும் இதில் நடித்தால் எப்படியிருக்கும் என்று யோசித்த்துண்டு. இன்றைக்கு அது இடம் மாறி, தடம் மாறி வந்திருந்தாலும் மிகச் சிறப்பாகவே, தரமாகவே தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு படத்தின் கேஸ்டிங் டிபார்ட்மெண்ட்டே முக்கியக் காரணம். நாயகர்களான நாகார்ஜூனாவும், கார்த்தியும், தமன்னாவும் இவர்களோடு பிரகாஷ்ராஜ், வசனகர்த்தாக்களான ராஜூ முருகன், சி.முருகேஷ்பாபு மற்றும் திறமைசாலி இயக்குநரான வம்சியும் தங்களது பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு காட்சியையும் நன்கு திட்டமிட்டு மிக யதார்த்தமாக நகைச்சுவையும் மாறாமல், சென்டிமெண்ட்டையும்உள்ளடக்கி ஒரு குடும்பக் கதைக்கு உதாரணமாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
நாகார்ஜூனாவின் மென்மையான நடிப்புக்கும், கார்த்தியின் அடாபுடாவென்று எதையும் அனாயசமாக எதிர்கொள்ளும் கேரக்டருடைய நடிப்புக்கும் ஒத்துப் போகும் அளவுக்கு காட்சியமைப்புகளை அமைத்திருக்கும் இயக்குநரை வெகுவாக பாராட்ட வேண்டும்.
நாகார்ஜூனா ஆக்சன் காட்சிகளிலேயே அமைதியின் திருவுருவமாக வந்து அதகளப்படுத்துவார். இதில் சொல்லவா வேண்டும்..? ஷ்ரேயாவின் புகைப்படம் வந்த கடித்த்தை கிழிக்கப் போகும் கார்த்தியின் செயலைத் தடுக்க, “அதைக் கிழிக்காத சீனு.. சீனு கிழிக்காத..” என்று குரலை உயர்த்திப் பேசியிருப்பதுதான் இந்தப் படத்திலேயே அவர் அதிகம் நடித்திருக்கும் காட்சி. மற்றவைகளில் இயல்பாக எப்படி இருப்பாரோ அப்படியேதான் நடித்திருக்கிறார்.
இறுதியில் அனுஷ்கா எங்கே தன்னை பார்த்துவிடுவாரோ என்கிற பயத்துடன் சீனு.. சீனு என்று அழைப்பதும், அந்தப் பதட்டத்தையும், அனுஷ்கா சொல்வதை ஜீரணித்து ஏற்றுக் கொள்ளும் காட்சியிலும் நம்மையும் ஒன்ற வைத்துவிட்டார். தன்னை எல்லோருமே உடல் ஊனமுற்றவனாக.. பாவமான தோரணையில் பார்ப்பதையே தான் விரும்பவில்லை என்று சொல்லும் நாகார்ஜூனா.. கார்த்தியின் வருகைக்குப் பின்னர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்விதமும், தன்னுடைய உடல் ஊனத்தை ஒரு பொருட்டாகவே கருதாதவண்ணம் செய்யும் செயல்களும் படத்திற்கே ஒரு பாஸிட்டிவ் உணர்ச்சியை ஊட்டியிருக்கின்றன.
கார்த்தியின் நடிப்பில் இந்தப் படமும் ஒரு மைல் கல். அம்மாவின் அன்புக்காக ஏங்கியவர்.. தங்கையின் பாராமுகத்தில் அவமானப்படுபவர்.. தம்பியின் நல்ல வாழ்க்கைக்கைக புத்தி சொல்பவர்.. எல்லாம் சுற்றி அவருக்கு நாகார்ஜூனாவிடமிருந்து கிடைக்கும் அன்பு அவரை ஆசுவாசப்படுத்துவதை காட்சிகளில் அற்புதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வம்சி.
அந்த ஓவியத் திறமையைப் பற்றியும், ஓவியம் மூலம் பணம் சம்பாதிக்கும் முறையைப் பற்றியும் கார்த்தி பேசும்போதெல்லாம் தியேட்டரே அதிர்கிறது. எங்கேயிருந்து இத்தனை இயல்பான நகைச்சுவையை இயக்குநர் வெளிப்படுத்த வைத்தார் என்றே தெரியவில்லை. கார்த்தியின் இயல்பான நடிப்பில் உள்ளம் கொள்ளை கொண்டது முதல்முறையாக இந்தப் படத்தில்தான்..!
கார்த்தி தன்னுடைய வாழ்க்கைக் கதையின் முடிச்சை அவிழ்த்துவிட்டு, தனது அம்மா பாசத்தை ஏக்கத்துடன் தெரிவிக்கையில் நாகார்ஜூனா பேசும் வசனங்கள்தான் படத்தின் டர்னிங் பாயிண்ட். அந்தக் காட்சியை லயித்த ரசிகனால் அதிலிருந்து மீளவே முடியவில்லை.
அம்மா-மகன் பாச செண்டிமெண்ட்டுக்கு இக்காலத்திற்கும் ஏற்றாற்போல வசனம் எழுதியிருக்கும் ராஜுமுருகன், சி.முருகேஷ்பாபு இருவருக்கும் நமது பாராட்டுக்கள். படத்தில் வசனங்கள் மிகப் பெரிய பலம். அவைகளாலும் நகைச்சுவை வெடித்து, சென்டிமெண்ட்டும் ஒர்க்அவுட்டாயிருக்கிறது.
தமன்னாவின் காதல் சமாச்சாரம் காமெடியாக பேசப்பட்டு தொடர்ந்து வந்தும், கடைசியாக ஒரு பொக்கேவில் வெளிப்படுவதும்.. “இவரையே இப்படி பார்த்துக்கிட்டீன்னா நீ அதிகமா விரும்புற என்னை எப்படி பார்த்துக்குவ.. இதுக்காகவே உன்னைய காதலிக்கிறேன்…” என்கிற தமன்னாவின் பேச்சில் காதல் கரைபுரண்டோடுகிறது.  தமன்னாவின் காஸ்ட்யூம் டிஸைனருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு. கேமிராமேனுக்கு அப்புறம் தமன்னாவை அழகாகக் காட்டியிருப்பதில் பெரும் பங்கு அவருக்கே..!
பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் பளிச்சிடுகிறது. பாரீஸ் காட்சிகளையும், கார் ரேஸ் காட்சிகளையும் அந்த வேகத்துடனேயே படமாக்கியிருக்கிறார்கள். சென்னையில் இரவு நேர கார் துரத்தல் காட்சியின் எடிட்டருக்கும், கேமிராமேனுக்கும் இடையிலேயே ரேஸ் நடந்திருப்பது போல தெரிகிறது. ஒரு சிறந்த வலுவான கூட்டணி அமையும்போது அனைத்து விஷயங்களுமே 100 சதவிகிதம் முழுமையாகத் வெளிப்படும். அது இந்தப் படத்தில் சாத்தியமாகியிருக்கிறது.
கோபி சுந்தரின் பாடல் காட்சிகள் படத்திற்கிடையே சோர்வைத் தராமல் அதுவும் ஒரு திரைக்கதையின் யுக்தியாக கொண்டு போயிருப்பது பாராட்டுக்குரியது. அந்த கிளப் டான்ஸிற்கு நடனமைத்தவருக்கு ஒரு ஷொட்டு.. நடனமணிக்கும் ஒரு பாராட்டு.
ஒட்டு மொத்தமாக பார்க்கப் போனால் ஒரு உடல் ஊனமுற்றவரை பார்த்து உச்சுக் கொட்டி அவரை ஒரு ஓரமாக உட்கார வைக்காமல், அவரும் நம்மில் ஒருவர்.. அவருக்கு ஒரு குறையும் இல்லை என்கிற பாஸிட்டிவ் எனர்ஜியோடு பேசவும், பழகவும் செய்வதுதான் அவர்களுக்குக் கொடுக்கிற உண்மையான சிகிச்சை என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது இந்தப் படம்.
படம் பார்த்த நான்கு பேராவது உடல் ஊனமுற்றவர்களைப் பற்றிய தங்களது பார்வையை மாற்றிக் கொண்டால் அதுவே இந்தப் படத்தை தயாரித்திருக்கும் பிவிபி நிறுவனத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இருக்கும்..!
படக்குழுவினருக்கும், இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
தோழா – உணர்வுப்பூர்வமான படம். மிஸ் பண்ணிராதீங்க..!