வலியவன் - சினிமா விமர்சனம்

29-03-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

படம் வெளிவருவதற்கு முன்பேயே படத்தின் அநியாயமான தயாரிப்பு செலவு, தயாரிப்பாளரின் இன்றைய பரிதாப நிலைமை.. இவையெல்லாமும் திரையுலகில் பரவியதால் ஒருவித பரிதாப உணர்வோடுதான் படத்தை எதிர்கொண்டுள்ளார்கள் கோடம்பாக்கத்தில்..!
இந்த பரிதாபத்தை படமும் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது என்பது கொடூரமான உண்மை..!
‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படத்தில் இருந்த செய்நேர்த்தி.. திரைக்கதையில் புதிய யுக்தி, மனதைத் தொடும் கதைக் கரு – இதெல்லாம் இயக்குநர் சரவணனின் அடுத்த படமான ‘இவன் வேற மாதிரி’யில் வேற மாதிரியாகவே இருந்துவிட்டது. அதனால் அந்தப் படம் போணியாகவில்லை. கடைசியாக இதுவும் அப்படித்தான் ஆகியிருக்கிறது.

ஹீரோ ஜெய் வடபழனி போரம் மாலில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்து வருகிறார். இவர் ஒரு முறை அண்ணா சாலையில் அண்ணா சிலை அருகேயிருக்கும் சப்வேயில் செல்லும்போது எதிரில் வரும் ஆண்ட்ரியா இவரைப் பார்த்து ‘ஐ லவ் யூ’ சொல்கிறார்.
ஆண்ட்ரியா யாரென்றே தெரியாத நிலையில் அவர் சொன்ன ‘ஐ லவ் யூ’ மட்டும் ஜெய்யின் மனசுக்குள் இம்சை செய்ய பல கட்ட தேடுதல் வேட்டைகளுக்கு பிறகு ஆண்ட்ரியாவை தேடிப் பிடிக்கிறார். தானும் ‘ஐ லவ் யூ’ சொல்கிறார். ஆண்ட்ரியாவோ, “நான் ச்சும்மா ஒரு ஜாலிக்குத்தான சொன்னேன்..” என்கிறார்.
மனம் உடைந்து போன ஜெய் கால் போன போக்கில் போய்க் கொண்டிருக்கும்போது திரும்பவும் அவரது வாழ்க்கையில் குறுக்கே வரும் ஆண்ட்ரியா, தேசிய குத்துச் சண்டை சாம்பியனான அருணை அடிக்கச் சொல்கிறார். அப்படி ஜெய், அருணை அடித்துவிட்டால் அவனை உண்மையில் காதலித்துவிடுவதாகச் சொல்ல ஜெய் ஒரு புல் ஓல்டு மான்க்கை ராவாக அடித்தது போன்ற சந்தோஷத்தின் உச்சத்திற்கே செல்கிறார்.
ஜெய் அருணை அடித்தாரா..? அருணை எதற்காக ஆண்ட்ரியா அடிக்கச் சொன்னார்..? இவர்களது காதல் ஜெயித்ததா என்பதெல்லாம் தியேட்டரில் பொறுமையுடன் அமர்ந்து படம் பார்த்தால் தெரியும்..!
முதல் பாதி முழுவதிலும் திக்குத் தெரியாத காட்டில் கண்ணைக் கட்டிக் கொண்டு அலைவது போலவே காட்சிகளை அமைத்து கொடுமைப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இது போன்ற பிளாஷ்பேக்கில் கதையிருக்கும் திரைக்கதைகளின் வேறுவடிவமாகத்தான் இருக்க வேண்டும். தமிழ்த் திரையுலகில் பல இயக்குநர்கள் அதனை செய்து காட்டியிருக்கிறார்கள். இயக்குநர் சரவணன் அதையெல்லாம் பார்க்கவில்லைபோலும்..
போதாக்குறைக்கு ஹீரோவான நடிகர் ஜெய்.. எல்லா காட்சிகளுக்குமே ஒரே மாதிரியான பீலிங்கை கொட்டியும், காட்டியும் படுத்தியெடுத்திருக்கிறார். ‘ராஜாராணி’யில்கூட அவருடைய அப்பாவித்தனமான நடிப்பு ரசிக்க வைத்தது. இதில் எதுவும் இல்லாமல் போனது அவரது துரதிருஷ்டம்.
ஆண்ட்ரியாவுடன் காரில் செல்லும்போது ஜெய் நடந்து கொள்ளும்விதம் ரொம்பவே ஓவர், இதிலும் ரசிக்க வைத்த ஒரேயொரு காட்சி ஆண்ட்ரியாவை போலீஸ்காரர்கள் நடக்க வைத்து பார்ப்பது.
ஆண்ட்ரியாவின் அழகும், அவரது சின்னச் சின்ன முக பாவனைகளுடன் கூடிய நடிப்பு, அழகம்பெருமாள் மற்றும் அனுபமாகுமாரின் மென்மையான நடிப்பு.. பாலாவின் சிற்சில வசன நடிப்பு.. படத்தை முடிவுக்கு கொண்டு வரும் இடைவேளைக்குப் பின்னான திரைக்கதை இவைகளைத்தான் படத்தில் குறிப்பாகச் சொல்ல முடியும்.
அவ்வளவு பெரிய தேசிய குத்துச் சண்டை சாம்பியன்.. ஒரு சாதாரண பிரச்சினைக்காக ஏன், எதற்கு என்றெல்லாம் தெரியாமல் ஒருவனை அத்தனை பேர் முன்னாலும் அடிப்பானா..? இதைப் பார்த்து அடி வாங்குபவனின் அப்பா எதற்கு அவனிடம் கெஞ்ச வேண்டும்..? ஒரு வணிக அங்காடியில் இந்தக் கூத்தை ஜனக்கூட்டம் அமைதியாக நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதெல்லாம் டூமச்..
இத்தனை அடி அடித்திருக்கிறான்.. அந்த வில்லனின் முகம் கூடவா ஹீரோவுக்கு மறந்து போயிருக்கும். இந்த அளவுக்கா அவர் முட்டாளாக இருப்பார்..? ம்ஹூம்.. இயக்குநர் நம்மை அப்படித்தான் நினைத்துவிட்டார் போலிருக்கிறது..!
வழக்கம்போல ஒளிப்பதிவு ரகளைதான்.. பாடல் காட்சிகளிலும் கண்களை ஈர்த்திருக்கிறார் தினேஷ் கிருஷ்ணன். இசை இமான் என்றார்கள்.. டைட்டிலும் அப்படித்தான் சொல்கிறது. பாடல்கள்தான் மனதில் நிற்கவில்லை. கூடவே பின்னணி இசையையும் போட்டுத் தாளித்திருக்கிறார் இமான்.
வலுவான, அழுத்தமான கதையை படத்தின் பிற்பாதியில் வைத்துக் கொண்டு முற்பாதி முழுக்க ஜல்லியடித்திருப்பதால் இடைவேளைவரையிலும் படத்தின் கதை என்ன என்றே கண்டறிய முடியவில்லை. படத்தின் பிற்பாதியிலும் அரைமணி நேரம் கழித்தே உண்மைக் கதை தெரிய வருகிறது.
ஷாப்பிங் மால்களில் இருக்கும் தியேட்டர்களில் காசு செலவழிப்பதற்காக வரும் மக்கள் பொறுமையாக இருந்து பார்ப்பார்கள். மற்ற ஊர்களில் படத்தின் இடைவேளையிலேயே எழுந்து ஓடிவிட மாட்டார்களா..?
இயக்குநர் அதிகம் யோசித்திருக்க வேண்டும்..!

0 comments: