01-10-2013
முதலில், நான் இப்படித்தான் எழுதுவேன் என்று தெரிந்தும் எனக்கு விழா அழைப்பிதழ்களை வாங்கிக் கொடுத்த தமிழ்த் திரையுலகப் புள்ளிகளுக்கு எனது மனமார்ந்த நன்றி..!
கசப்புடன் முடிந்த இந்திய சினிமா நூற்றாண்டு விழா என்கிற தலைப்பு பொருத்தமில்லாததுதான்.. கசப்புடன் துவங்கிய என்றுதான் இருந்திருக்க வேண்டும்..! இதுதான் உண்மை..!
இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாட தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு முழு தகுதியும் உண்டு.. முதல் உரிமையும் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எப்படி நடத்தினார்கள் என்பதில்தான் இப்போது அனைவருக்குமே வருத்தம்..
தற்போதைய சேம்பரின் தலைவரான சி.கல்யாண் தெலுங்கு தேசத்துக்காரர். பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன். கோடம்பாக்கத்துக்காரர்.. செயலாளர்களில் ஒருவரான ரவி கொட்டாக்காரா மலையாளத்துக்காரர்.. இன்னொரு செயலாளர் ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ் கோடம்பாக்கத்துக்காரர்..! சேம்பரின் தலைவர் பதவி நான்கு தென்னிந்திய மாநிலங்களுக்கும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி கிடைக்கும்.. அந்த வரிசையில் தற்போது ஆந்திராவுக்குக் கிடைத்து சி.கல்யாண் தலைவராகியிருக்கிறார்..!
இப்படியொரு விழாவை ஏற்பாடு செய்கிறார்கள் என்கிறபோது சந்தோஷப்பட்ட தமிழ்ச் சினிமாவுலகம் பின்பு துவக்கத்திலேயே இது தங்களது கைகளை மீறிச் செல்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்கள். அதற்கு முன் இன்னொரு விஷயத்தையும் வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும்..!
இத்தனை கலைஞர்களையும் அழைத்து பெரிய அளவுக்கு ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டுமெனில் அது சென்னை என்றால் நேரு ஸ்டேடியத்தில் மட்டுமே செய்ய முடியும். வேறு எந்த உள்ளரங்கமும் சென்னையில் இந்த அளவுக்கு பெரியதாகவும், வசதியாகவும் இல்லை.. இந்த ஸ்டேடியம் தற்போது தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால் பராமரிப்பு தமிழக அரசின் பொதுப்பணித்துறையிடம்.. சுருக்கமாக தமிழக அரசின் கைகளில்..!
தமிழக அரசைப் பகைத்துக் கொண்டால் இந்த நேரு ஸ்டேடியம் உங்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.. அதிலும் இப்போதைய காலக்கட்டத்தில் கலைஞர் தொலைக்காட்சியோ, சன் தொலைக்காட்சியோ நேரு ஸ்டேடியத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டுமெனில் அது முடியவே முடியாத காரியம்.. அவர்களுக்கும் அது தெரியும்.. அதனால்தான் 'மானாட மயிலாட' நிகழ்ச்சி சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும், துபாய்க்கும் பறந்தது..! ஆனால் தாத்தாவின் ஆட்சியில் இதே நேரு ஸ்டேடியத்தில்தான் நடந்தது என்பதையும் நினைவில் கொள்ளவும்..!
இப்போதைக்கு ஜெயா தொலைக்காட்சியைத் தவிர மற்ற சேனல்கள் இங்கே நிகழ்ச்சி நடத்த கேட்டால், மேலிடத்தில் அனுமதி கேட்பார்கள். தராதீர்கள் என்று சொல்லிவிட்டால், பராமரிப்புப் பணிகளுக்காக இந்த மாதம் முழுக்க அங்கே நிகழ்ச்சி கிடையாது என்று கை விரிப்பார்கள்.. திரும்பி வந்துவிட வேண்டியதுதான்..! இல்லையென்றால் கடைசிவரையிலும் தருவோம். தர மாட்டோம் என்பதையே சொல்ல மாட்டார்கள்.. இது தாத்தாவின் ஆட்சியிலும் தொடர்ந்ததுதான்..! அப்போது ஜெயா டிவி நேரு ஸ்டேடியத்திற்குள் நுழைய முடியவில்லை. இதுவொரு கேவலமான அரசியல்..
இந்தப் பிரச்சினையை முதலிலேயே கண்டு கொண்ட சேம்பர்.. அரசை எந்தவிதத்திலும் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதை ஆரம்பத்திலேயே முடிவு செய்துவிட்டது.. அதற்கேற்ப முதல் அறிமுகக் கூட்டத்திலேயே ஆத்தாவுக்கு ஐஸ் வைத்துதான் அத்தனை வார்த்தைகளும் வீசப்பட்டன..! முதல்வருக்கு நெருக்கமானவரை வைத்து முதலில் முதல்வரை சந்தித்து பேசிவிடுவோம் என்று நினைத்து நடிகர் சிவக்குமாரை வளைத்துப் பிடித்தார்கள். அவர் மூலமாகவே மூலஸ்தானத்தை அடைந்து தங்களது விருப்பத்தை தெரிவித்து அனுமதி வாங்கிவிட்டார்கள்..!
தேதியும் குறித்துவிட்டு 4 நாட்கள் ஷூட்டிங் நடக்காது.. நடத்தக் கூடாது என்று பெப்சிக்கு கடிதமும் எழுதிய பின்புதான் கலை நிகழ்ச்சி வேலையைத் துவக்கியிருக்கிறார்கள். இடையில் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வேறு வந்து தொலைந்ததால், தயாரிப்பாளர்களாலும் இதில் அதிகம் ஈடுபாடு காட்ட முடியவில்லை..!
முதலில் நடிகர் சங்கம் தங்களை அழைக்காமல்.. கலந்தாலோசிக்காமல் விழா ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று குற்றம்சாட்டியது. பின்பு அவர்களை அழைத்து பேசிய பின்புதான் அந்த சர்ச்சை அடங்கியது.. நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்கு முன்பு ஆத்தா இவர்களை அழைத்து 10 கோடி ரூபாய் கொடுத்ததுதான் இதில் உச்சக்கட்டமான திருப்பம்..! இதனை எதிர்பார்க்காத சேம்பரும் அத்தோடு இனிமேல் நிகழ்ச்சியை தங்களுடன் இணைந்து நடத்தவது தமிழக அரசும் சேர்த்துதான் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் அனைத்து வேலைகளையும் செய்தார்கள்..!
கலையுலகத்தினரின் முதல் குற்றச்சாட்டே தாங்கள் முறைப்படி அழைக்கப்படவில்லை என்பதுதான்..! நியாயம்தான்.. சென்ற ஆட்சிக் காலத்தில் ஒரு முறை ஜெயலலிதா நேரு ஸ்டேடியத்தில் கலந்து கொண்ட திரையுலகக் கூட்டத்தில் அவர் பேசிய பேச்சுக்கு கைதட்டலே கிடைக்காமல் போனதை அப்படியே நினைவில் வைத்திருந்தாற்போலும்.. அதனால் இந்த முறை, "ஆத்தா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் முழுவதிலும், கேலரி டிக்கெட்டுகளில் முக்கால்வாசி நாங்கள் சொல்கின்ற ஆட்களுக்குத்தான் தரப்பட வேண்டும்" என்று கோட்டையில் இருந்து வந்த உத்தரவையே சேம்பர் நிறைவேற்றியிருக்கிறது..!
தரைத்தளத்தில் அமரவும் டிக்கெட்டுகளை கோட்டை பிரதிநிதிகள் மொத்தமாக வாங்கிச் சென்றுவிட்டதால் அதுவும் கிடைக்காமல் போய்விட்டது.. அதிகாரிகளும், கட்சிக்காரர்களும் சுரண்டியெடுத்துவிட்டு மிச்சம், மீதத்தை மட்டுமே சேம்பருக்கு விட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.. இதனாலேயே திரைத்துறையைச் சார்ந்தவர்களுக்கே முதல் நாள் மற்றும் இறுதி நாள் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் கிடைக்கவில்லை.
எப்போதும் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகள் நடந்தால் பெப்சியுடன் இணைந்த சங்கங்களுக்கு அதிகப்பட்சம் 50 அழைப்பிதழ்களாவது அனுப்பி வைப்பார்கள். ஆனால் இந்த விழாவுக்கு பெப்சியுடன் இணைந்த சினிமா சங்கங்களின் நிர்வாகிகளுக்கே அழைப்பிதழ் கிடைக்கவில்லை.. அந்த அளவுக்கு ஆட்சியாளர்களின் அராஜகம் மேலோங்கிவிட்டது..! ஆனால் இரண்டாவது நாள் நடந்த கன்னடம், தெலுங்கு, மூன்றாம் நாள் நடந்த மலையாளம் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ்கள் தாராளமாக சேம்பரில் கிடைத்தன.. ஆனால் வாங்கிச் செல்லத்தான் ஆட்கள் இல்லை...
ஆனால் இந்த லட்சணத்தில் தாத்தாவின் அறிக்கைக்கு இப்போது பதிலளித்திருக்கும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.. நிகழ்ச்சியை நடத்தியது சேம்பர்தான் என்றும், அரசுக்கு இதில் சம்பந்தமில்லை என்று முழுப் பூசணிக்காயை சேற்றில் மறைத்திருக்கிறார்.. முன் வரிசையில் யார் யார் உட்கார்ந்திருந்தார்கள்.. தரைத்தளத்திலும், கேலரியிலும் யார் யார் வந்திருந்தார்கள் என்று லிஸ்ட் எடுத்தாலே போதும்.. இந்த விழாவை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் யார் என்பது புரியும்.. தாத்தா ஆட்சி மட்டும் என்னவாம்..? அப்போது அவரது குடும்பம் முன்னிலை வகிக்கும்.. இப்போது ஆத்தாவின் அடிப்பொடிகள் உள்ளே நுழைந்திருக்கிறார்கள் அவ்வளவுதான் வித்தியாசம்..!
ஒரு சிலர் ரஜினி, கமலை மட்டுமே மையப்படுத்தி இதனை பெரிதுபடுத்துகிறார்கள். அவர்கள் அவமரியாதை செய்யப்பட்டார்கள்.. தாத்தா ஆட்சியென்றால் அவர்கள்தான் தாத்தாவின் இரு புறமும் அமர்ந்திருப்பார்கள் என்கிறார்கள்..! அப்போதும் தாத்தாவை பெருமைப்படுத்தவே அவர்கள் வந்திருப்பதாகவும், வருவதாகவுமே இவர்கள் பேசுகின்ற தொனி சொல்கிறது.. இதிலிருந்தே தெரியவில்லையா..? கலைஞர்களை இந்த அரசியல்வியாதிகள் எந்த அளவுக்கு மரியாதையுடன் அணுகுகிறார்கள் என்று..?!
10 கோடி ரூபாயை வாங்கிவிட்ட காரணத்தினால் அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் சேம்பர் வளைந்து கொடுக்க ஆரம்பிக்க.. இப்போது அவர்களே அனைத்துத் தரப்பில் இருந்தும் பேச்சுக்களை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கின்றனர்..! முதல் நாள் நடந்த ஒரு கூத்தை பாருங்கள்..!
ஸ்டேடியத்தின் இரண்டாவது கேட்டில் இருந்து தனியாக ஒரு பாதை அமைத்து வெயில் படாத அளவுக்கு.. அதில் ரெட் கார்பெட் விரித்து நடிகர், நடிகைகளை வரவேற்பதாக ஒரு ஐடியா. ஒளிபரப்பு பெர்மிஷன் வாங்கியிருந்த ஜெயா டிவியின் கேமிராவும் அந்தப் பகுதியை கவர் செய்து கொண்டிருந்தது..! ஹன்ஸிகா, காஜல் அகர்வால் போன்ற ஹீரோயின்கள் இந்தப் பகுதி வழியாக உள்ளே வந்த பின்பு திடீரென்று இரண்டாவது கேட் வாசலுக்கு வந்த ஒரு அஸிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர்.. "இங்க எந்த காரையும் நிறுத்தி யாரையும் இறக்காதீங்க.. மெயின் கேட்டுக்கே போயிருங்க.." என்று துரத்திவிட்டார்.. சினிமா பி.ஆர்.ஓ.க்கள் என்ன சொல்லியும் கேட்கவில்லை. ரெட் கார்பெட், ஜெயா டிவி என்று சொல்லியும் பலனலில்லை.
1-ம் நம்பர் கேட்டில் "எந்த காரையும் உள்ளே விட மாட்டேன்..." என்று அதே ஏ.சி. அடம் பிடிக்க பல நடிகர், நடிகைகள் அங்கேயே இறங்கி கொளுத்தும் வெயிலில் உள்ளே நடந்தே போனார்கள்..! கை நிறைய நடிகர், நடிகைகளின் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு அவர்களிடம் கொடுக்க காத்திருந்த சினிமா பி.ஆர்.ஓ.க்களுக்கு அந்த வெயிலில் காத்திருந்து மண்டையடியாகிவிட்டது.. பாவம் திரிஷா பொண்ணு.. அந்த வேகாத வெயில்ல இறங்கி நடந்து போனதை பார்த்து எனக்கு மனசே செத்துப் போச்சு..!!! லட்சுமி மேனன், இசையமைப்பாளர் இமான், ஜெயம்ரவி உட்பட பலரும் அப்படியே..! கலைஞர்கள் முதல் கேட்டிலேயே இறங்கிச் செல்கிறார்கள் என்பதையே அறியாத இரண்டாவது கேட்டை கவர் செய்த ஜெயா டிவி கேமிராமேன்கள், கடைசிவரையிலும் யாருமே இல்லாத டீக்கடைல யாருக்குடா டீ ஆத்துறீங்க என்பதை போல காத்திருந்து காத்திருந்து ஏமாந்து போனதுதான் மிச்சம்..!
இதையெல்லாம் சமர்த்தாக செய்த போலீஸார், போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் கார்களை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.. கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும், ஆடவும் வந்த கலைஞர்களுக்கு உள்ளே கார்களில் செல்ல தடையாம்.. பார்க்க வந்த போலீஸ் அதிகாரிகளின் மனைவிகளுக்கு சல்யூட் வசதியுடன் வாசலில் சென்று இறங்க அனுமதியாம்..! என்ன கொடுமை இது..? இதற்குப் பின் அடுத்த 3 நாட்களும் அந்த பி.ஆர்.ஓ.க்கள் அந்த ஸ்டேடியம் பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை..!
பல நடிகர், நடிகைகளும் பாஸ் கேட்டு போன் மேல் போன் செய்ய.. அவர்களுக்காகக் கடைசிவரையிலும் பி.ஆர்.ஓ.க்கள் சேம்பரில் முட்டி மோதியும் கிடைக்கவில்லை. அந்த வெறுப்பில் அவர்களும் தாங்கள் சார்ந்த நடிகர், நடிகையருக்காக மட்டுமே ஸ்டேடியத்திற்குள் கால் வைத்தவர்கள்.. அந்த ஸ்டார்கள் வெளியேறியவுடன்.. அவர்களும் வெளியேறிவிட்டார்கள்..!
கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த கதி என்றால்.. பத்திரிகையாளர்களுக்கு..? சில குறிப்பிட்ட தினசரிகள் மற்றும் வார இதழ்களுக்கு மட்டுமே அனுமதி தந்தார்கள்.. மற்றவர்களுக்கு இல்லை என்று முகத்துக்கு நேராகவே சொல்லிவிட்டார்கள்..! பி.ஆர்.ஓ.க்களிடம் தந்துவிட்டதாக சேம்பரில் தோசையைத் திருப்பிப் போட உண்மையறியாமல் பி.ஆர்.ஓ.க்களை பிய்த்தெடுத்த பத்திரிகையாளர்களும் உண்டு.. பாவம்.. கடைசியில் பத்திரிகைகளின் போட்டியினால் நிகழ்ச்சி பற்றிய செய்தி நமது இதழில் வெளியாக வேண்டுமே என்பதற்காக பல பத்திரிகையாளர்கள் தங்களது கவுரவத்தை எண்ணிப் பார்க்காமல் வந்திருந்து நிகழ்ச்சியை கவர் செய்து எழுதினார்கள்..!
புரோட்டோகால்படி மாநில அமைச்சர்கள், முதல்வர், கவர்னர், பிரதமர், துணை ஜனாதிபதி, ஜனாதிபதி, மத்தியஅமைச்சர்கள் ஆகியோரின் பேச்சுக்களை எந்தத் தொலைக்காட்சியும், பத்திரிகையும் கட்டுப்பாடில்லாமல் வெளியிடலாம் என்பது ஒரு அரசு விதி.. ஜெயா டிவி ஒளிபரப்பு உரிமையை வாங்கி வைத்திருப்பதால் முதல்வரின் பேச்சை ஒளிபரப்ப மற்ற சேனல்களுக்கு அனுமதியில்லை என்று முதலில் சொன்னார்கள். பின்பு கோட்டையில் இருந்து இந்த விதிமுறை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்தப்பட.. சில சேனல்கள் மட்டும் முதல் நாள் வைபவத்தை கடைசி நிமிடத்தில் வந்து ஷூட் செய்தன. அதேபோல கடைசி நாளில் ஜனாதிபதி நிகழ்ச்சியையும் பல சேனல்கள் கவர் செய்து, ஜனாதிபதி அரங்கத்திலிருந்து விடைபெறும்வரையிலும் இருந்து ஷூட் செய்திருந்தன.. ஆனாலும் மற்ற சேனல்கள் ஜெயா டிவியுடன் செய்து கொண்ட எழுதப்படாத ஒரு பரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தலைவர்களின் மேடை பேச்சுக்களை மட்டுமே ஒளிபரப்பினார்கள்..!
முதல் நாள் பாஸ் இல்லை என்று சொன்னாலும் ஆத்தா பேசி முடித்தவுடன் பாதி கேலரி காலியாகத்தான் கிடந்தது..! பாஸுடன் வந்திருந்த கட்சிக்காரர்களில் முக்கால்வாசி பேர் அப்போதே எஸ்கேப்பாகிவிட்டார்கள்.. வெளியில் அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்கள் தங்களை உள்ளே விடும்படி வாசலில் நின்று கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்..! அவர்களையெல்லாம் உள்ளே அனுப்பி வைத்து கேலரியை நிரப்பியது போலீஸ்..! இது முதல் நாளில் நடந்தது..! கடைசி நாளிலும் நடந்தது..!
ஆத்தா வரும்.. ஜனாதிபதி வருகிறார் என்பதாலும் செக்யூரிட்டி பிராப்ளம் இருக்கும் என்றெண்ணியே சில கலைஞர்கள் வராமல் தவிர்த்துவிட்டார்கள். அதிலும் நேரு ஸ்டேடியத்தின் கார் பார்க்கிங் பிரச்சினை முதல் நாளே தீயாய் பற்றிவிட்டதால் பரபரப்புடன் கலைஞர்கள் தங்களுக்குள் இதனை பரப்பிவிட.. மறுநாள் தங்களது கார் உள்ளே வர அனுமதிக்க வேண்டும் என்று முன்பேயே சொல்லி தங்களது கார் நம்பரை எழுதிக் கொடுத்து பலர் தப்பித்தார்கள்.. சிலர் விழா ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட கார்களில் வந்து சேர்ந்தார்கள்..!
டிரைவர் வைத்திருந்தவர்கள்கூட நிகழ்ச்சி முடிந்துபோகும்போது கார்களை வரச் சொல்லிவிட்டு கால் மணி நேரம் காத்திருந்து போக வேண்டியிருந்தது.. ஆனால் ஷெல்ப் டிரைவிங் செய்து வந்தவர்களின் நிலைமை அந்தோ கதி..! கார் ஷெட்டில் இருந்து அனுமதிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார்களில் அவர்களை அரங்கத்திற்கு அழைத்து வந்தார்கள்.. இப்படி ரொம்பவே கஷ்டப்படுத்திவிட்டார்கள் போலீஸார்..! இந்த லட்சணத்தில் போனால் என்ன..? போகாட்டி என்ன என்ற மனநிலையில்தான் கலைஞர்கள் பலரும் வராமல் ஒதுங்கிக் கொண்டார்கள்..!
நிகழ்ச்சி நிரலில்கூட சேனல் ரைட்ஸை வாங்கியிருந்த ஜெயா டிவியின் மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்ட் என்ன கேட்டதோ அதையே செய்து கொடுத்திருக்கிறார்கள் போலும்.. தமிழ்ச் சினிமாவின் நூறாண்டு கொண்டாட்டம் எனில் அத்தனையிலும் ஆத்தாவை மட்டுமே முன்னிலைப்படுத்திவிட்டு மற்றவர்களை டம்மியாக்கிவிட்டதும் வேதனையானது..! நிகழ்ச்சிகளிலும் வித்தியாசங்கள் இல்லை.. சொல்லப்பட வேண்டியவைகள் நிறைய இருந்தும் சேனல் ரைட்ஸுக்காக அத்தனையையும்விட்டுவிட்டது சேம்பர்..!
உண்மையாகச் சொல்லப் போனால் இந்தியாவுக்கே கலைத்துறையின் முதல் முன்னோடி தமிழ்நாட்டுக்காரர்தான். கோவைக்காரர்.. வின்சென்ட் சாமிக்கண்ணு.. இவர் ஊர், ஊராகச் சென்று காட்டிய நடமாடும் தியேட்டர் ஒன்றில் ஏசுவைப் பற்றிய படத்தைப் பார்த்துவிட்டு அதன் ஆர்வத்தில்தான் தாதா சாஹேப் பால்கே, 'ராஜா ஹரிச்சந்திரா'வை எடுத்தது சரித்திர நிகழ்வு. அப்படியிருக்க இந்தியாவில் கொண்டாடப்பட வேண்டிய முதல் கலைஞன் நமது தமிழன் வின்சென்ட் சாமிக்கண்ணுதான். ஆனால் சாமிக்கண்ணு பற்றிய தகவல்களை அறிய தமிழர்களாகிய நாமே ஆர்வப்படாததால் வடக்கத்திய லாபி பால்கேவை முன்னிறுத்தி அவரையே இந்திய சினிமாவின் தந்தையாக அறிவித்துவிட்டது.. இவர் பற்றிய கட்டுரையை இந்தத் தளத்தில் படித்துப் பார்க்கலாம்..! இப்போதாவது அறிந்து கொண்டோமே..? அவரைப் பற்றிய செய்திகளைத் தெரிவித்து ஒரு நிகழ்ச்சி செய்திருக்கலாமே என்றால்.. மேடை தொகுப்பாளர்கள் சில வரிகளில் உண்மையான இந்திய சினிமாவின் தந்தையான வின்சென்ட் சாமிக்கண்ணுவின் வாழ்க்கைக் கதையைச் சொல்லிவிட்டு அடுத்தக் கதைக்குத் தாவிவிட்டார்கள்..!
தமிழில் இதுவரையிலும் தேசிய விருது, மாநில அரசு விருது வாங்கியவர்களை அழைத்து கவுரவப்படுத்தியிருக்க வேண்டும்.. இன்னொரு பக்கம் தேசிய விருது, மாநில விருது வாங்கிய படங்களின் கிளிப்பிங்ஸ்களை காட்டியிருக்கலாம். அதில் நடித்த முக்கிய நடிகர், நடிகையரை பேட்டியெடுத்து காட்டியிருக்கலாம்..! சிறந்த படங்களை தொகுத்து வழங்கியிருக்கலாம்.. இங்கே நடந்ததோ 5 நிமிட ஸ்பீடு டிரெயிலர் ஷோ.. 5 நிமிடத்தில் 100 வருட தமிழ்ச் சினிமாவையும் அனாயசமாக தாண்டிச் சென்றுவிட்டார்கள்..! சிறந்த இயக்குநர்களை பட்டியலிட்டு காட்டியிருக்கலாம்..! பாடல்களை மட்டும் தேர்வு செய்து அதற்கு மட்டும் நடிகைகளை ஆடவிட்டு பார்த்ததில் யாருக்கு என்ன லாபம்..?
கடைசி நாளில் விருது பெற்றவர்களை ஆத்தா வெளியேறிய பின்பாவது மேடையேற்றி பேச வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அமிதாப்பச்சன், அபர்ணா சென், ரந்தீர்கபூர், ஜாவேத் அக்தர், பர்வதம்மா ராஜ்குமார், ஸ்ரீதேவி, ரேகா இவர்களெல்லாம் மேடையில் பேசியிருந்தால் எப்படியிருந்திருக்கும்..? யோசித்துப் பாருங்கள்.. ஜெயா டிவியின் நிகழ்ச்சிக்கும் ரேட்டிங் கிடைக்க உதவியிருக்குமே.. எல்லாத்தையும் ஏன் விட்டுத் தொலைத்தார்கள் என்று தெரியவில்லை..!!!
யார் யாருக்கு விருது கொடுத்து கவுரவிக்க போகிறார்கள் என்கிற லிஸ்ட்டை பார்த்தே பலருக்கும் கோபம்..! முக்தா சீனிவாசன் விருது பெற தேர்வு செய்யப்பட்டும் கடைசி நிமிடத்தில் அவருடைய பெயர் இல்லாதது கண்டு கோபமடைந்து வாக் அவுட் செய்துவிட்டதாக கூறுகிறார்கள்.. தமிழ்த் திரைப்பட சாதனையாளர்கள் பட்டியலை யார் தயாரித்தது என்றே தெரியவில்லை.. தற்போது உயிருடன் உள்ள பல பெரிய கலைஞர்களுக்கும் எண்ணிக்கை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை என்று கொடுத்திருக்கலாம்.. ஆத்தாவை அதிக நேரம் நிற்க வைக்கக் கூடாது என்பதற்காக எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள்..! என்ன கொடுமை இது..?
எடிட்டர் லெனின், 6 முறை தமிழுக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்த கவிப்பேரரசு வைரமுத்து, வி.எஸ்.ராகவன், கே.ஆர்.விஜயா, லட்சுமி, ஸ்ரீபிரியா, ராதிகா, விஜயகுமார், ஏவி.எம்.ராஜன், பாரதிராஜா, கே.பாக்யராஜ், விஜயகாந்த், முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த விசு.. அகத்தியன்.. நாசர், பிரகாஷ்ராஜ், மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், இந்தியாவை தமிழகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த மணிரத்னம். பாலுமகேந்திரா.. ஊமைவிழிகள் படம் மூலமாக ஒரு டிரெண்ட் செட்டராக விளங்கிய ஆபாவாணன், எண்ணற்ற புதிய இளம் இயக்குநர்கள்.. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், பிலிம் நியூஸ் ஆனந்தன், பின்னணிப் பாடகிகள் பி.சுசீலா, ஜானகி, ஜேசுதாஸ், நகைச்சுவை அரசன் கவுண்டமணி, இளவரசர் செந்தில், நகைச்சுவைப் புயல் வடிவேலு.. சகலகலாவல்லவர் டி.ராஜேந்தர் மற்றும் பல கலைஞர்கள்.. மூத்த டான்ஸ் மாஸ்டர்கள், மூத்த சண்டை கலைஞர்கள் என்று இன்னமும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.. இவர்களையெல்லாம் கட்சி பேதமில்லாமல் மேடையேற்றி விருது கொடுத்திருந்தால் அதுதான் உண்மையான கலைஞர்களின் விழாவாக இருந்திருக்கும். ஆனால் இது அ.தி.மு.க. கட்சியின் பொதுக்குழு கூட்டம் போல.. அவர்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு.. அவர்களுக்கு காக்கா பிடித்த கூட்டத்திற்கு மட்டுமே விருது கொடுத்த உணர்வைத் தந்ததுதான் வேதனையான விஷயம்..!
இதைப் பற்றியெல்லாம் யாராவது.. எந்த ஹீரோவாவது, எந்தப் படைப்பாளியாவது இனிமேலாவது குரல் எழுப்புவார்களா என்றெல்லாம் நினைத்தால் நாம்தான் முட்டாள்கள்.. அந்த அளவுக்கு தைரியசாலியான ஹீரோக்களும், பிரபலங்களும் இங்கே யார் இருக்கா..?
இப்போது ஒரு உதாரணத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.. 2010-ம் ஆண்டு கேரள அரசு நமது கலைஞானி கமல்ஹாசனை ஒணம் பண்டிகை விழாவை துவக்கி வைக்க வரும்படியும், அதே விழாவில் கமல்ஹாசனின் 50 வருட சினிமா சேவையை பாராட்டி விருது தருவதாகவும் அறிவித்தது..! கேரளாவின் அப்போதைய முதல்வர் அச்சுதானந்தன்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கேரள நடிகர், நடிகையரின் சங்கமான 'அம்மா'வின் தலைவர் நடிகர் இன்னசென்ட்.. "கேரள அரசின் இந்த முடிவு முட்டாள்தனமானது.. கமல்ஹாசனைவிடவும் நடிப்புத் திறமை வாய்ந்த நடிகர்கள் கேரளாவிலேயே இருக்கிறார்கள்.. அவர்களைத்தானே அழைத்திருக்க வேண்டும்.. விருது கொடுத்திருக்க வேண்டும்.. அதைவிட்டுட்டு கமல்ஹாசனுக்கு கொடுத்திருப்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.. ஆகவே அந்த விழாவில் கேரள நடிகர், நடிகைகள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள்..." என்று அறிக்கையேவிட்டார்..
திருவனந்தபுரம், சந்திரசேகரன் நாயர் ஸ்டேடியத்தில் 2010 ஆகஸ்ட் 22 ஞாயிற்றுக்கிழமையன்று அந்த விழா இனிதே நடைபெற்றது.. கமல்ஹாசன் விருதினைப் பெற்றுக் கொண்டார். ஆனால் கேரள நடிகர்களில் ஒருவர்கூட அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை..! அதுவும் ஒரு மாநிலம்.. அங்கேயும் சக நடிகர்கள்தான்.. திரையில் நடிப்பவர்கள்தான்.. அரசையே எதிர்த்து அறிக்கையே விட்டார்கள்.. புறக்கணித்தார்கள்..! ஆனால் இங்கே..!?
ஆளும் அதிகாரத்தை எதிர்த்து ஒரு வார்த்தை பேசிவிட்டால் தமிழ்ச் சினிமாவில் அவர்களின் நிலைமை கவிழ்ந்துவிடும் அபாயமும் இருக்கிறது.. லேட்டஸ்ட் 'தலைவா' பட விவகாரம் இதனை அனைவருக்குமே உணர்த்திவிட்டது..! இனி யார் தைரியமாக வாயைத் திறப்பார்கள்..? சினிமாவில் இருந்து அரசியலுக்குச் சென்ற எம்.ஜி.ஆர்.. யாரையும் அழித்ததில்லை.. இன்னும் சொல்லப் போனால் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தோற்றத்திற்கு ஒருவகையில் அவரே காரணமாகவும் இருந்திருக்கிறார்..!
பின்னால் வந்த கருணாநிதியும், ஜெயலிதாவும் சினிமா புகழை வைத்து.. சினிமாக்காரர்களை வைத்து தங்களது புகழை உயர்த்துவதற்கு எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தயங்கவில்லை... அதே நேரம்.. சமயம் கிடைக்கும்போதெல்லாம் தங்களது ஆட்சி அதிகாரத்தை அவர்களிடத்தில் நிலை நிறுத்திக் காட்டவும் தயங்கியதில்லை.. தாத்தா ஆட்சியில் 'முதல்வன்' பட சிடி தெருத் தெருவாக விற்கப்பட்டதும்.. "பீச்ல சமாதி கட்டுறதை நிறுத்துங்கப்பா..." என்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பின்பு சேரன் மீதும், அமீர் மீதும் எழுந்த பாலியல் புகார்களை பெரிதுபடுத்தி அவர்களை அலைக்கழித்ததும் இதே கேவலமான அரசியல்தான்.. தாத்தாவை பின் தொடர்ந்து ஆத்தாவும் கமல்ஹாசனின் 'சண்டியரின்' பெயர் மாற்றப் போராட்டம் உச்சக்கட்டத்தைத் தொடும்வரையிலும் வேடிக்கை பார்த்துவிட்டு கடைசியாக கமல்ஹாசனை கோட்டைக்கு வரவழைத்து தாசில்தாரிடம் மனு வாங்கவதைப் போல வாங்கி பேசியனுப்பி பெருமைப்பட்டுக் கொண்டது.. 'பாபா' படப்பெட்டியை தூக்கிக் கொண்டு போகுமளவுக்கு பிரச்சனைகள் வந்தபோது "அது சென்சிட்டிவ் ஏரியா.. அதுனாலதான் அதிகமா கை வைக்க முடியலை.. ஸாரி..." என்று சப்பைக்கட்டு கட்டி காவல்துறை பதுங்கியதும் இதே கணக்குதான்..!
கேரளாவிலும், தெலுங்கிலும், கன்னடத்திலும் அன்றாட அரசியல் நிகழ்ச்சிகளையே டிவிக்களில் கிண்டல் செய்யும் நிகழ்ச்சிகள் இருக்கின்றன.. சினிமாக்களிலும் உரித்தெடுக்கிறார்கள்.. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் சினிமாக்களிலும், டிவி சீரியல்களிலும் கேரக்டர்களின் பெயர்களில்கூட அரசியல்வியாதிகள் பெயர்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டு ஒருவித பய உணர்வுடனேயே கலைச்சேவையை செய்து வருகிறார்கள் கலைஞர்கள்..! இந்தியா முழுவதும் இந்திய அரசியல் சட்டம் ஒன்று போலத்தான் என்கிறார்கள்.. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் அது இல்லாமல் இருக்கிறது..! இதற்கெல்லாம் வேறு யாராவது 'முதல்வன்' பிறந்து வந்து நியாயம் கேட்டால்தான் உண்டு..!
இங்கே இன்னொரு பிரச்சினையையும் சொல்லியாக வேண்டும்.. "தெலுங்கானா பிரச்சினை உச்சக்கட்டத்தில் இருக்கும்போது இப்படியொரு விழாவுக்கு தெலுங்கு சினிமாக்காரர்கள் போவது சரியில்லை.. தெலுங்கு திரையுலகம் இந்த நூற்றாண்டு விழாவை புறக்கணிக்க வேண்டும்..." என்று தெலுங்கு இயக்குநர் ஒருவர் அறிக்கைவிட்டிருந்தார். ஆனால் இதனை சேம்பர் தலைவர் சி.கல்யாண் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஒன்றுமில்லாமல் செய்து எப்படியோ தெலுங்குக்காரர்களை அழைத்து வந்துவிட்டார். இந்த விஷயத்தை சத்யம் தியேட்டரில் நடந்த 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டு பேசிய பாரதிராஜா, "இதேபோல ஈழத் தமிழர் பிரச்சினைக்காக தமிழர்களாகிய நாமும் இந்த விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்ல இங்கே ஒருத்தர்கூட இல்லையே.." என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார். படைப்பாளிகள் சங்கம் உருவான காலத்தில் இருந்தே பாரதிராஜாவும் தமிழ் ஆர்வம் கொண்ட சினிமா பிரபலங்களும் சொல்லி வருவது, "தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை அமைக்கப்பட வேண்டும்..." என்றுதான்..
ஏனெனில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் இருந்து காலப்போக்கில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவைகள் பிரிந்து தங்களது மாநிலத்துக்கென தனித்தனியாக வர்த்தக சபைகளை அமைத்துக் கொண்டார்கள். தமிழில் மட்டுமே இதுவரையிலும் பிரியும் சூழல் ஏற்படவில்லை. இதனையே இயக்குநர் ஆர்.கே.செல்வமணியும் மேடைதோறும் பேசி வருகிறார்.! சமீபத்தில் 'ஞானக்கிறுக்கன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில்கூட பாரதிராஜாவும், ஆர்.கே.செல்வமணியும் இதையேதான் பேசியிருக்கிறார்கள். கூடவே "ஹீரோக்களுக்கு தட்டிக் கேட்க தைரியம் இல்லை.. கோழைகளாக இருக்கிறார்கள்..." என்று தாக்கியேவிட்டார் பாரதிராஜா. ஆனால் இவரும் இப்போதுவரையிலும் சேம்பரை எதிர்த்தோ, ஜெயலலிதாவை எதிர்த்தோ அறிக்கை எதையும்விடவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
தற்போது சென்னை அண்ணா சாலையில் ஜெமினி மேம்பாலம் அருகில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடமும், தற்போது மேலும் நூறு கோடிக்கும் மேலான தொகையில் புதிதாகக் 3 பிரிவியூ தியேட்டர்களுடன் கட்டப்பட்டு வரும் இன்னொரு கட்டிடமும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு சொந்தமானது..! இதில் வாடகையாகவே மாதந்தோறும் 50 லட்சம் ரூபாய் வருகிறதாம்..! இந்த வர்த்தகத்தை இழந்து தனியாக பிரித்தெடுக்க நான்கு மாநில நிர்வாகிகளுக்கும் மனசில்லை.. இதோடு இது அகில இந்திய திரைப்பட வர்த்தக சபையோடு இணைந்தது என்பதால் அவர்களாலும் சுலபத்தில் கைவிட முடியாத நிலை.. யாரேனும் அரசியல் செல்வாக்கானவர்கள் முனைந்து நின்று சொத்துக்களைப் பிரித்தெடுத்து சுமூகமாகப் பேசித் தீர்த்தால் ஒழிய.. தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை உருவாகும் வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு செல்வாக்கானவர் இப்போதைக்கு இங்கே யார் இருக்காங்க..?
அரசு கொடுத்த 10 கோடி.. ஜெயா டிவி கொடுத்த 5 கோடி.. பி.வி.பி. கம்பெனி தெலுங்கு, கன்னடம், மலையாளத்திற்காக கொடுத்த 12 கோடி.. ஆக மொத்தம் 27 கோடியை முதலிலேயே வசூல் செய்திருக்கும் சேம்பர்.. தற்போது தென்னக சினிமாவில் மிகப் பெரிய சொத்துக்கார சினிமா அமைப்பாக உருவெடுத்திருக்கிறது..! இது ஒன்றுதான் இந்த விழாவினால் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்குக் கிடைத்திருக்கும் பலன்..!
(முற்றும்)