Showing posts with label பிலிம் சேம்பர். Show all posts
Showing posts with label பிலிம் சேம்பர். Show all posts

கசப்புடன் முடிந்த இந்திய சினிமா நூற்றாண்டு விழா - இறுதி பாகம்..!

01-10-2013


முதலில், நான் இப்படித்தான் எழுதுவேன் என்று தெரிந்தும் எனக்கு விழா அழைப்பிதழ்களை வாங்கிக் கொடுத்த தமிழ்த் திரையுலகப் புள்ளிகளுக்கு எனது மனமார்ந்த நன்றி..!

கசப்புடன் முடிந்த இந்திய சினிமா நூற்றாண்டு விழா என்கிற தலைப்பு பொருத்தமில்லாததுதான்.. கசப்புடன் துவங்கிய என்றுதான் இருந்திருக்க வேண்டும்..! இதுதான் உண்மை..!

இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாட தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு முழு தகுதியும் உண்டு.. முதல் உரிமையும் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எப்படி நடத்தினார்கள் என்பதில்தான் இப்போது அனைவருக்குமே வருத்தம்..


தற்போதைய சேம்பரின் தலைவரான சி.கல்யாண் தெலுங்கு தேசத்துக்காரர். பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன். கோடம்பாக்கத்துக்காரர்.. செயலாளர்களில் ஒருவரான ரவி கொட்டாக்காரா மலையாளத்துக்காரர்.. இன்னொரு செயலாளர் ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ் கோடம்பாக்கத்துக்காரர்..! சேம்பரின் தலைவர் பதவி நான்கு தென்னிந்திய மாநிலங்களுக்கும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி கிடைக்கும்.. அந்த வரிசையில் தற்போது ஆந்திராவுக்குக் கிடைத்து சி.கல்யாண் தலைவராகியிருக்கிறார்..!

இப்படியொரு விழாவை ஏற்பாடு செய்கிறார்கள் என்கிறபோது சந்தோஷப்பட்ட தமிழ்ச் சினிமாவுலகம் பின்பு துவக்கத்திலேயே இது தங்களது கைகளை மீறிச் செல்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்கள். அதற்கு முன் இன்னொரு விஷயத்தையும் வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும்..!

இத்தனை கலைஞர்களையும் அழைத்து  பெரிய அளவுக்கு ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டுமெனில் அது சென்னை என்றால் நேரு ஸ்டேடியத்தில் மட்டுமே செய்ய முடியும். வேறு எந்த உள்ளரங்கமும் சென்னையில் இந்த அளவுக்கு பெரியதாகவும், வசதியாகவும் இல்லை.. இந்த ஸ்டேடியம் தற்போது தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால் பராமரிப்பு தமிழக அரசின் பொதுப்பணித்துறையிடம்.. சுருக்கமாக தமிழக அரசின் கைகளில்..!

தமிழக அரசைப் பகைத்துக் கொண்டால் இந்த நேரு ஸ்டேடியம் உங்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.. அதிலும் இப்போதைய காலக்கட்டத்தில் கலைஞர் தொலைக்காட்சியோ, சன் தொலைக்காட்சியோ நேரு ஸ்டேடியத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டுமெனில் அது முடியவே முடியாத காரியம்.. அவர்களுக்கும் அது தெரியும்.. அதனால்தான் 'மானாட மயிலாட' நிகழ்ச்சி சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும், துபாய்க்கும் பறந்தது..! ஆனால் தாத்தாவின் ஆட்சியில் இதே நேரு ஸ்டேடியத்தில்தான் நடந்தது என்பதையும் நினைவில் கொள்ளவும்..!

இப்போதைக்கு ஜெயா தொலைக்காட்சியைத் தவிர மற்ற சேனல்கள் இங்கே நிகழ்ச்சி நடத்த கேட்டால், மேலிடத்தில் அனுமதி கேட்பார்கள். தராதீர்கள் என்று சொல்லிவிட்டால், பராமரிப்புப் பணிகளுக்காக இந்த மாதம் முழுக்க அங்கே நிகழ்ச்சி கிடையாது என்று கை விரிப்பார்கள்.. திரும்பி வந்துவிட வேண்டியதுதான்..! இல்லையென்றால் கடைசிவரையிலும் தருவோம். தர மாட்டோம் என்பதையே சொல்ல மாட்டார்கள்.. இது தாத்தாவின் ஆட்சியிலும் தொடர்ந்ததுதான்..! அப்போது ஜெயா டிவி நேரு ஸ்டேடியத்திற்குள் நுழைய முடியவில்லை. இதுவொரு கேவலமான அரசியல்.. 

இந்தப் பிரச்சினையை முதலிலேயே கண்டு கொண்ட சேம்பர்.. அரசை எந்தவிதத்திலும் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதை ஆரம்பத்திலேயே முடிவு செய்துவிட்டது.. அதற்கேற்ப முதல் அறிமுகக் கூட்டத்திலேயே ஆத்தாவுக்கு ஐஸ் வைத்துதான் அத்தனை வார்த்தைகளும் வீசப்பட்டன..! முதல்வருக்கு நெருக்கமானவரை வைத்து முதலில் முதல்வரை சந்தித்து பேசிவிடுவோம் என்று நினைத்து நடிகர் சிவக்குமாரை வளைத்துப் பிடித்தார்கள். அவர் மூலமாகவே மூலஸ்தானத்தை அடைந்து தங்களது விருப்பத்தை தெரிவித்து அனுமதி வாங்கிவிட்டார்கள்..!

தேதியும் குறித்துவிட்டு 4 நாட்கள் ஷூட்டிங் நடக்காது.. நடத்தக் கூடாது என்று பெப்சிக்கு கடிதமும் எழுதிய பின்புதான் கலை நிகழ்ச்சி வேலையைத் துவக்கியிருக்கிறார்கள். இடையில் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வேறு வந்து தொலைந்ததால், தயாரிப்பாளர்களாலும் இதில் அதிகம் ஈடுபாடு காட்ட முடியவில்லை..! 

முதலில் நடிகர் சங்கம் தங்களை அழைக்காமல்.. கலந்தாலோசிக்காமல் விழா ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று குற்றம்சாட்டியது. பின்பு அவர்களை அழைத்து பேசிய பின்புதான் அந்த சர்ச்சை அடங்கியது.. நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்கு முன்பு ஆத்தா இவர்களை அழைத்து 10 கோடி ரூபாய் கொடுத்ததுதான்  இதில் உச்சக்கட்டமான திருப்பம்..! இதனை எதிர்பார்க்காத சேம்பரும் அத்தோடு இனிமேல் நிகழ்ச்சியை தங்களுடன் இணைந்து நடத்தவது தமிழக அரசும் சேர்த்துதான் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் அனைத்து வேலைகளையும் செய்தார்கள்..!

கலையுலகத்தினரின் முதல் குற்றச்சாட்டே தாங்கள் முறைப்படி அழைக்கப்படவில்லை என்பதுதான்..! நியாயம்தான்.. சென்ற ஆட்சிக் காலத்தில் ஒரு முறை ஜெயலலிதா நேரு ஸ்டேடியத்தில் கலந்து கொண்ட திரையுலகக் கூட்டத்தில் அவர் பேசிய பேச்சுக்கு கைதட்டலே கிடைக்காமல் போனதை அப்படியே நினைவில் வைத்திருந்தாற்போலும்.. அதனால் இந்த முறை, "ஆத்தா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் முழுவதிலும், கேலரி டிக்கெட்டுகளில் முக்கால்வாசி நாங்கள் சொல்கின்ற ஆட்களுக்குத்தான் தரப்பட வேண்டும்" என்று கோட்டையில் இருந்து வந்த உத்தரவையே சேம்பர் நிறைவேற்றியிருக்கிறது..!

தரைத்தளத்தில் அமரவும் டிக்கெட்டுகளை கோட்டை பிரதிநிதிகள் மொத்தமாக வாங்கிச் சென்றுவிட்டதால் அதுவும் கிடைக்காமல் போய்விட்டது.. அதிகாரிகளும், கட்சிக்காரர்களும் சுரண்டியெடுத்துவிட்டு மிச்சம், மீதத்தை மட்டுமே சேம்பருக்கு விட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.. இதனாலேயே திரைத்துறையைச் சார்ந்தவர்களுக்கே முதல் நாள் மற்றும் இறுதி நாள் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் கிடைக்கவில்லை. 

எப்போதும் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகள் நடந்தால் பெப்சியுடன் இணைந்த சங்கங்களுக்கு அதிகப்பட்சம் 50 அழைப்பிதழ்களாவது அனுப்பி வைப்பார்கள். ஆனால் இந்த விழாவுக்கு பெப்சியுடன் இணைந்த சினிமா சங்கங்களின் நிர்வாகிகளுக்கே அழைப்பிதழ் கிடைக்கவில்லை.. அந்த அளவுக்கு ஆட்சியாளர்களின் அராஜகம் மேலோங்கிவிட்டது..! ஆனால் இரண்டாவது நாள் நடந்த கன்னடம், தெலுங்கு, மூன்றாம் நாள் நடந்த மலையாளம் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ்கள் தாராளமாக சேம்பரில் கிடைத்தன.. ஆனால் வாங்கிச் செல்லத்தான் ஆட்கள் இல்லை... 

ஆனால் இந்த லட்சணத்தில் தாத்தாவின் அறிக்கைக்கு இப்போது பதிலளித்திருக்கும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.. நிகழ்ச்சியை நடத்தியது சேம்பர்தான் என்றும், அரசுக்கு இதில் சம்பந்தமில்லை என்று முழுப் பூசணிக்காயை சேற்றில் மறைத்திருக்கிறார்.. முன் வரிசையில் யார் யார் உட்கார்ந்திருந்தார்கள்.. தரைத்தளத்திலும், கேலரியிலும் யார் யார் வந்திருந்தார்கள் என்று லிஸ்ட் எடுத்தாலே போதும்.. இந்த விழாவை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் யார் என்பது புரியும்..  தாத்தா ஆட்சி மட்டும் என்னவாம்..? அப்போது அவரது குடும்பம் முன்னிலை வகிக்கும்.. இப்போது ஆத்தாவின் அடிப்பொடிகள் உள்ளே நுழைந்திருக்கிறார்கள் அவ்வளவுதான் வித்தியாசம்..! 

ஒரு சிலர் ரஜினி, கமலை மட்டுமே மையப்படுத்தி இதனை பெரிதுபடுத்துகிறார்கள். அவர்கள் அவமரியாதை செய்யப்பட்டார்கள்.. தாத்தா ஆட்சியென்றால் அவர்கள்தான் தாத்தாவின் இரு புறமும் அமர்ந்திருப்பார்கள் என்கிறார்கள்..! அப்போதும் தாத்தாவை பெருமைப்படுத்தவே அவர்கள் வந்திருப்பதாகவும், வருவதாகவுமே இவர்கள் பேசுகின்ற தொனி சொல்கிறது.. இதிலிருந்தே தெரியவில்லையா..? கலைஞர்களை இந்த அரசியல்வியாதிகள் எந்த அளவுக்கு மரியாதையுடன் அணுகுகிறார்கள் என்று..?!

10 கோடி ரூபாயை வாங்கிவிட்ட காரணத்தினால் அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் சேம்பர் வளைந்து கொடுக்க ஆரம்பிக்க.. இப்போது அவர்களே அனைத்துத் தரப்பில் இருந்தும் பேச்சுக்களை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கின்றனர்..! முதல் நாள் நடந்த ஒரு கூத்தை பாருங்கள்..!

ஸ்டேடியத்தின் இரண்டாவது கேட்டில் இருந்து தனியாக ஒரு பாதை அமைத்து வெயில் படாத அளவுக்கு.. அதில் ரெட் கார்பெட் விரித்து நடிகர், நடிகைகளை வரவேற்பதாக ஒரு ஐடியா. ஒளிபரப்பு பெர்மிஷன் வாங்கியிருந்த ஜெயா டிவியின் கேமிராவும் அந்தப் பகுதியை கவர் செய்து கொண்டிருந்தது..! ஹன்ஸிகா, காஜல் அகர்வால் போன்ற ஹீரோயின்கள் இந்தப் பகுதி வழியாக உள்ளே வந்த பின்பு திடீரென்று இரண்டாவது கேட் வாசலுக்கு வந்த ஒரு அஸிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர்.. "இங்க எந்த காரையும் நிறுத்தி யாரையும் இறக்காதீங்க.. மெயின் கேட்டுக்கே போயிருங்க.." என்று துரத்திவிட்டார்.. சினிமா பி.ஆர்.ஓ.க்கள் என்ன சொல்லியும் கேட்கவில்லை. ரெட் கார்பெட், ஜெயா டிவி என்று சொல்லியும் பலனலில்லை. 

1-ம் நம்பர் கேட்டில் "எந்த காரையும் உள்ளே விட மாட்டேன்..." என்று அதே ஏ.சி. அடம் பிடிக்க பல நடிகர், நடிகைகள் அங்கேயே இறங்கி கொளுத்தும் வெயிலில் உள்ளே நடந்தே போனார்கள்..! கை நிறைய நடிகர், நடிகைகளின் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு அவர்களிடம் கொடுக்க காத்திருந்த சினிமா பி.ஆர்.ஓ.க்களுக்கு அந்த வெயிலில் காத்திருந்து மண்டையடியாகிவிட்டது.. பாவம் திரிஷா பொண்ணு.. அந்த வேகாத வெயில்ல இறங்கி நடந்து போனதை பார்த்து எனக்கு மனசே செத்துப் போச்சு..!!! லட்சுமி மேனன், இசையமைப்பாளர் இமான், ஜெயம்ரவி உட்பட பலரும் அப்படியே..! கலைஞர்கள் முதல் கேட்டிலேயே இறங்கிச் செல்கிறார்கள் என்பதையே அறியாத இரண்டாவது கேட்டை கவர் செய்த ஜெயா டிவி கேமிராமேன்கள், கடைசிவரையிலும் யாருமே இல்லாத டீக்கடைல யாருக்குடா டீ ஆத்துறீங்க என்பதை போல காத்திருந்து காத்திருந்து ஏமாந்து போனதுதான் மிச்சம்..!

இதையெல்லாம் சமர்த்தாக செய்த போலீஸார், போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் கார்களை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.. கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும், ஆடவும் வந்த கலைஞர்களுக்கு உள்ளே கார்களில் செல்ல தடையாம்.. பார்க்க வந்த போலீஸ் அதிகாரிகளின் மனைவிகளுக்கு சல்யூட் வசதியுடன் வாசலில் சென்று இறங்க அனுமதியாம்..! என்ன கொடுமை இது..? இதற்குப் பின் அடுத்த 3 நாட்களும் அந்த பி.ஆர்.ஓ.க்கள் அந்த ஸ்டேடியம் பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை..!

பல நடிகர், நடிகைகளும் பாஸ் கேட்டு போன் மேல் போன் செய்ய.. அவர்களுக்காகக் கடைசிவரையிலும் பி.ஆர்.ஓ.க்கள் சேம்பரில் முட்டி மோதியும் கிடைக்கவில்லை. அந்த வெறுப்பில் அவர்களும் தாங்கள் சார்ந்த நடிகர், நடிகையருக்காக மட்டுமே ஸ்டேடியத்திற்குள் கால் வைத்தவர்கள்.. அந்த ஸ்டார்கள் வெளியேறியவுடன்.. அவர்களும் வெளியேறிவிட்டார்கள்..!

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த கதி என்றால்.. பத்திரிகையாளர்களுக்கு..? சில குறிப்பிட்ட தினசரிகள் மற்றும் வார இதழ்களுக்கு மட்டுமே அனுமதி தந்தார்கள்.. மற்றவர்களுக்கு இல்லை என்று முகத்துக்கு நேராகவே சொல்லிவிட்டார்கள்..! பி.ஆர்.ஓ.க்களிடம் தந்துவிட்டதாக சேம்பரில் தோசையைத் திருப்பிப் போட உண்மையறியாமல் பி.ஆர்.ஓ.க்களை பிய்த்தெடுத்த பத்திரிகையாளர்களும் உண்டு.. பாவம்.. கடைசியில் பத்திரிகைகளின் போட்டியினால் நிகழ்ச்சி பற்றிய செய்தி நமது இதழில் வெளியாக வேண்டுமே என்பதற்காக பல பத்திரிகையாளர்கள் தங்களது கவுரவத்தை எண்ணிப் பார்க்காமல் வந்திருந்து நிகழ்ச்சியை கவர் செய்து எழுதினார்கள்..!

புரோட்டோகால்படி மாநில அமைச்சர்கள், முதல்வர், கவர்னர், பிரதமர், துணை ஜனாதிபதி, ஜனாதிபதி, மத்தியஅமைச்சர்கள் ஆகியோரின் பேச்சுக்களை எந்தத் தொலைக்காட்சியும், பத்திரிகையும் கட்டுப்பாடில்லாமல் வெளியிடலாம் என்பது ஒரு அரசு விதி.. ஜெயா டிவி ஒளிபரப்பு உரிமையை வாங்கி வைத்திருப்பதால் முதல்வரின் பேச்சை ஒளிபரப்ப மற்ற சேனல்களுக்கு அனுமதியில்லை என்று முதலில் சொன்னார்கள். பின்பு கோட்டையில் இருந்து இந்த விதிமுறை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்தப்பட.. சில சேனல்கள் மட்டும் முதல் நாள் வைபவத்தை கடைசி நிமிடத்தில் வந்து ஷூட் செய்தன. அதேபோல கடைசி நாளில் ஜனாதிபதி நிகழ்ச்சியையும் பல சேனல்கள் கவர் செய்து, ஜனாதிபதி அரங்கத்திலிருந்து விடைபெறும்வரையிலும் இருந்து ஷூட் செய்திருந்தன.. ஆனாலும் மற்ற சேனல்கள் ஜெயா டிவியுடன் செய்து கொண்ட எழுதப்படாத ஒரு பரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தலைவர்களின் மேடை பேச்சுக்களை மட்டுமே ஒளிபரப்பினார்கள்..! 

முதல் நாள் பாஸ் இல்லை என்று சொன்னாலும் ஆத்தா பேசி முடித்தவுடன் பாதி கேலரி காலியாகத்தான் கிடந்தது..! பாஸுடன் வந்திருந்த கட்சிக்காரர்களில் முக்கால்வாசி பேர் அப்போதே எஸ்கேப்பாகிவிட்டார்கள்.. வெளியில் அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்கள் தங்களை உள்ளே விடும்படி வாசலில் நின்று கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்..! அவர்களையெல்லாம் உள்ளே அனுப்பி வைத்து கேலரியை நிரப்பியது போலீஸ்..! இது முதல் நாளில் நடந்தது..! கடைசி நாளிலும் நடந்தது..!

ஆத்தா வரும்.. ஜனாதிபதி வருகிறார் என்பதாலும் செக்யூரிட்டி பிராப்ளம் இருக்கும் என்றெண்ணியே சில கலைஞர்கள் வராமல் தவிர்த்துவிட்டார்கள். அதிலும் நேரு ஸ்டேடியத்தின் கார் பார்க்கிங் பிரச்சினை முதல் நாளே தீயாய் பற்றிவிட்டதால் பரபரப்புடன் கலைஞர்கள் தங்களுக்குள் இதனை பரப்பிவிட.. மறுநாள் தங்களது கார் உள்ளே வர அனுமதிக்க வேண்டும் என்று முன்பேயே சொல்லி தங்களது கார் நம்பரை எழுதிக் கொடுத்து பலர் தப்பித்தார்கள்.. சிலர் விழா ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட கார்களில் வந்து சேர்ந்தார்கள்..!

டிரைவர் வைத்திருந்தவர்கள்கூட நிகழ்ச்சி முடிந்துபோகும்போது கார்களை வரச் சொல்லிவிட்டு கால் மணி நேரம் காத்திருந்து போக வேண்டியிருந்தது.. ஆனால் ஷெல்ப் டிரைவிங் செய்து வந்தவர்களின் நிலைமை அந்தோ கதி..! கார் ஷெட்டில் இருந்து அனுமதிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார்களில் அவர்களை அரங்கத்திற்கு அழைத்து வந்தார்கள்.. இப்படி ரொம்பவே கஷ்டப்படுத்திவிட்டார்கள் போலீஸார்..! இந்த லட்சணத்தில் போனால் என்ன..? போகாட்டி என்ன என்ற மனநிலையில்தான் கலைஞர்கள் பலரும் வராமல் ஒதுங்கிக் கொண்டார்கள்..!

நிகழ்ச்சி நிரலில்கூட சேனல் ரைட்ஸை வாங்கியிருந்த  ஜெயா டிவியின் மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்ட் என்ன கேட்டதோ அதையே செய்து கொடுத்திருக்கிறார்கள் போலும்.. தமிழ்ச் சினிமாவின் நூறாண்டு கொண்டாட்டம் எனில் அத்தனையிலும் ஆத்தாவை மட்டுமே முன்னிலைப்படுத்திவிட்டு மற்றவர்களை டம்மியாக்கிவிட்டதும் வேதனையானது..! நிகழ்ச்சிகளிலும் வித்தியாசங்கள் இல்லை.. சொல்லப்பட வேண்டியவைகள் நிறைய இருந்தும் சேனல் ரைட்ஸுக்காக அத்தனையையும்விட்டுவிட்டது சேம்பர்..!

உண்மையாகச் சொல்லப் போனால் இந்தியாவுக்கே கலைத்துறையின் முதல் முன்னோடி தமிழ்நாட்டுக்காரர்தான். கோவைக்காரர்.. வின்சென்ட் சாமிக்கண்ணு.. இவர் ஊர், ஊராகச் சென்று காட்டிய நடமாடும் தியேட்டர் ஒன்றில் ஏசுவைப் பற்றிய படத்தைப் பார்த்துவிட்டு அதன் ஆர்வத்தில்தான் தாதா சாஹேப் பால்கே, 'ராஜா ஹரிச்சந்திரா'வை எடுத்தது சரித்திர நிகழ்வு. அப்படியிருக்க இந்தியாவில் கொண்டாடப்பட வேண்டிய முதல் கலைஞன் நமது தமிழன் வின்சென்ட் சாமிக்கண்ணுதான். ஆனால் சாமிக்கண்ணு பற்றிய தகவல்களை அறிய தமிழர்களாகிய நாமே ஆர்வப்படாததால் வடக்கத்திய லாபி பால்கேவை முன்னிறுத்தி அவரையே இந்திய சினிமாவின் தந்தையாக அறிவித்துவிட்டது.. இவர் பற்றிய கட்டுரையை இந்தத் தளத்தில் படித்துப் பார்க்கலாம்..! இப்போதாவது அறிந்து கொண்டோமே..? அவரைப் பற்றிய செய்திகளைத் தெரிவித்து ஒரு நிகழ்ச்சி செய்திருக்கலாமே என்றால்.. மேடை தொகுப்பாளர்கள் சில வரிகளில் உண்மையான இந்திய சினிமாவின் தந்தையான வின்சென்ட் சாமிக்கண்ணுவின் வாழ்க்கைக் கதையைச் சொல்லிவிட்டு அடுத்தக் கதைக்குத் தாவிவிட்டார்கள்..!

தமிழில் இதுவரையிலும் தேசிய விருது, மாநில அரசு விருது வாங்கியவர்களை அழைத்து கவுரவப்படுத்தியிருக்க வேண்டும்.. இன்னொரு பக்கம் தேசிய விருது, மாநில விருது வாங்கிய படங்களின் கிளிப்பிங்ஸ்களை காட்டியிருக்கலாம். அதில் நடித்த முக்கிய நடிகர், நடிகையரை பேட்டியெடுத்து காட்டியிருக்கலாம்..! சிறந்த படங்களை தொகுத்து வழங்கியிருக்கலாம்.. இங்கே நடந்ததோ  5 நிமிட ஸ்பீடு டிரெயிலர் ஷோ.. 5 நிமிடத்தில் 100 வருட தமிழ்ச் சினிமாவையும் அனாயசமாக தாண்டிச் சென்றுவிட்டார்கள்..!  சிறந்த இயக்குநர்களை பட்டியலிட்டு காட்டியிருக்கலாம்..! பாடல்களை மட்டும் தேர்வு செய்து அதற்கு மட்டும் நடிகைகளை ஆடவிட்டு பார்த்ததில் யாருக்கு என்ன லாபம்..? 

கடைசி நாளில் விருது பெற்றவர்களை ஆத்தா வெளியேறிய பின்பாவது மேடையேற்றி பேச வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அமிதாப்பச்சன், அபர்ணா சென், ரந்தீர்கபூர், ஜாவேத் அக்தர், பர்வதம்மா ராஜ்குமார், ஸ்ரீதேவி, ரேகா இவர்களெல்லாம் மேடையில் பேசியிருந்தால் எப்படியிருந்திருக்கும்..? யோசித்துப் பாருங்கள்.. ஜெயா டிவியின் நிகழ்ச்சிக்கும் ரேட்டிங் கிடைக்க உதவியிருக்குமே.. எல்லாத்தையும் ஏன் விட்டுத் தொலைத்தார்கள் என்று தெரியவில்லை..!!!

யார் யாருக்கு விருது கொடுத்து கவுரவிக்க போகிறார்கள் என்கிற லிஸ்ட்டை பார்த்தே பலருக்கும் கோபம்..! முக்தா சீனிவாசன் விருது பெற தேர்வு செய்யப்பட்டும் கடைசி நிமிடத்தில் அவருடைய பெயர் இல்லாதது கண்டு கோபமடைந்து வாக் அவுட் செய்துவிட்டதாக கூறுகிறார்கள்.. தமிழ்த் திரைப்பட சாதனையாளர்கள் பட்டியலை யார் தயாரித்தது என்றே தெரியவில்லை.. தற்போது உயிருடன் உள்ள பல பெரிய கலைஞர்களுக்கும் எண்ணிக்கை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை என்று கொடுத்திருக்கலாம்.. ஆத்தாவை அதிக நேரம் நிற்க வைக்கக் கூடாது என்பதற்காக எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள்..! என்ன கொடுமை இது..?

எடிட்டர் லெனின், 6 முறை தமிழுக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்த கவிப்பேரரசு வைரமுத்து,  வி.எஸ்.ராகவன், கே.ஆர்.விஜயா, லட்சுமி, ஸ்ரீபிரியா, ராதிகா, விஜயகுமார், ஏவி.எம்.ராஜன், பாரதிராஜா, கே.பாக்யராஜ், விஜயகாந்த், முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த விசு.. அகத்தியன்.. நாசர், பிரகாஷ்ராஜ், மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், இந்தியாவை தமிழகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த மணிரத்னம். பாலுமகேந்திரா.. ஊமைவிழிகள் படம் மூலமாக ஒரு டிரெண்ட் செட்டராக விளங்கிய ஆபாவாணன், எண்ணற்ற புதிய இளம் இயக்குநர்கள்.. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், பிலிம் நியூஸ் ஆனந்தன், பின்னணிப் பாடகிகள் பி.சுசீலா, ஜானகி, ஜேசுதாஸ், நகைச்சுவை அரசன் கவுண்டமணி, இளவரசர் செந்தில், நகைச்சுவைப் புயல் வடிவேலு.. சகலகலாவல்லவர் டி.ராஜேந்தர் மற்றும் பல கலைஞர்கள்.. மூத்த டான்ஸ் மாஸ்டர்கள், மூத்த சண்டை கலைஞர்கள் என்று இன்னமும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.. இவர்களையெல்லாம் கட்சி பேதமில்லாமல் மேடையேற்றி விருது கொடுத்திருந்தால் அதுதான் உண்மையான கலைஞர்களின் விழாவாக இருந்திருக்கும். ஆனால் இது அ.தி.மு.க. கட்சியின் பொதுக்குழு கூட்டம் போல.. அவர்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு.. அவர்களுக்கு காக்கா பிடித்த கூட்டத்திற்கு மட்டுமே விருது கொடுத்த உணர்வைத் தந்ததுதான் வேதனையான விஷயம்..!

இதைப் பற்றியெல்லாம் யாராவது.. எந்த ஹீரோவாவது, எந்தப் படைப்பாளியாவது இனிமேலாவது குரல் எழுப்புவார்களா என்றெல்லாம் நினைத்தால் நாம்தான் முட்டாள்கள்.. அந்த அளவுக்கு தைரியசாலியான ஹீரோக்களும், பிரபலங்களும் இங்கே யார் இருக்கா..?

இப்போது ஒரு உதாரணத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.. 2010-ம் ஆண்டு கேரள அரசு நமது கலைஞானி கமல்ஹாசனை ஒணம் பண்டிகை விழாவை துவக்கி வைக்க வரும்படியும், அதே விழாவில் கமல்ஹாசனின் 50 வருட சினிமா சேவையை பாராட்டி விருது தருவதாகவும் அறிவித்தது..!  கேரளாவின் அப்போதைய முதல்வர் அச்சுதானந்தன். 

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கேரள நடிகர், நடிகையரின் சங்கமான 'அம்மா'வின் தலைவர் நடிகர் இன்னசென்ட்.. "கேரள அரசின் இந்த முடிவு முட்டாள்தனமானது.. கமல்ஹாசனைவிடவும் நடிப்புத் திறமை வாய்ந்த நடிகர்கள் கேரளாவிலேயே இருக்கிறார்கள்.. அவர்களைத்தானே அழைத்திருக்க வேண்டும்.. விருது கொடுத்திருக்க வேண்டும்.. அதைவிட்டுட்டு கமல்ஹாசனுக்கு கொடுத்திருப்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.. ஆகவே அந்த விழாவில் கேரள நடிகர், நடிகைகள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள்..." என்று அறிக்கையேவிட்டார்.. 

திருவனந்தபுரம், சந்திரசேகரன் நாயர் ஸ்டேடியத்தில் 2010 ஆகஸ்ட் 22 ஞாயிற்றுக்கிழமையன்று அந்த விழா இனிதே நடைபெற்றது.. கமல்ஹாசன் விருதினைப் பெற்றுக் கொண்டார். ஆனால் கேரள நடிகர்களில் ஒருவர்கூட அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை..! அதுவும் ஒரு மாநிலம்.. அங்கேயும் சக நடிகர்கள்தான்.. திரையில் நடிப்பவர்கள்தான்.. அரசையே எதிர்த்து அறிக்கையே விட்டார்கள்.. புறக்கணித்தார்கள்..! ஆனால் இங்கே..!?

ஆளும் அதிகாரத்தை எதிர்த்து ஒரு வார்த்தை பேசிவிட்டால் தமிழ்ச் சினிமாவில் அவர்களின் நிலைமை கவிழ்ந்துவிடும் அபாயமும் இருக்கிறது.. லேட்டஸ்ட் 'தலைவா' பட விவகாரம் இதனை அனைவருக்குமே உணர்த்திவிட்டது..! இனி யார் தைரியமாக வாயைத் திறப்பார்கள்..? சினிமாவில் இருந்து அரசியலுக்குச் சென்ற எம்.ஜி.ஆர்.. யாரையும் அழித்ததில்லை.. இன்னும் சொல்லப் போனால் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தோற்றத்திற்கு ஒருவகையில் அவரே காரணமாகவும் இருந்திருக்கிறார்..! 

பின்னால் வந்த கருணாநிதியும், ஜெயலிதாவும் சினிமா புகழை வைத்து.. சினிமாக்காரர்களை வைத்து தங்களது புகழை உயர்த்துவதற்கு எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தயங்கவில்லை... அதே நேரம்.. சமயம் கிடைக்கும்போதெல்லாம் தங்களது ஆட்சி அதிகாரத்தை அவர்களிடத்தில் நிலை நிறுத்திக் காட்டவும் தயங்கியதில்லை.. தாத்தா ஆட்சியில் 'முதல்வன்' பட சிடி தெருத் தெருவாக விற்கப்பட்டதும்.. "பீச்ல சமாதி கட்டுறதை நிறுத்துங்கப்பா..." என்று ஒரு  பொதுக்கூட்டத்தில் பேசிய பின்பு சேரன் மீதும், அமீர் மீதும் எழுந்த பாலியல் புகார்களை பெரிதுபடுத்தி அவர்களை அலைக்கழித்ததும் இதே கேவலமான அரசியல்தான்.. தாத்தாவை பின் தொடர்ந்து ஆத்தாவும் கமல்ஹாசனின் 'சண்டியரின்' பெயர் மாற்றப் போராட்டம் உச்சக்கட்டத்தைத் தொடும்வரையிலும் வேடிக்கை பார்த்துவிட்டு கடைசியாக கமல்ஹாசனை கோட்டைக்கு வரவழைத்து தாசில்தாரிடம் மனு வாங்கவதைப் போல வாங்கி பேசியனுப்பி பெருமைப்பட்டுக் கொண்டது.. 'பாபா' படப்பெட்டியை தூக்கிக் கொண்டு போகுமளவுக்கு பிரச்சனைகள் வந்தபோது "அது சென்சிட்டிவ் ஏரியா.. அதுனாலதான் அதிகமா கை வைக்க முடியலை.. ஸாரி..." என்று சப்பைக்கட்டு கட்டி காவல்துறை பதுங்கியதும் இதே கணக்குதான்..! 

கேரளாவிலும், தெலுங்கிலும், கன்னடத்திலும் அன்றாட அரசியல் நிகழ்ச்சிகளையே டிவிக்களில் கிண்டல் செய்யும் நிகழ்ச்சிகள் இருக்கின்றன.. சினிமாக்களிலும் உரித்தெடுக்கிறார்கள்.. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் சினிமாக்களிலும், டிவி சீரியல்களிலும் கேரக்டர்களின் பெயர்களில்கூட அரசியல்வியாதிகள் பெயர்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டு ஒருவித பய உணர்வுடனேயே கலைச்சேவையை செய்து வருகிறார்கள் கலைஞர்கள்..! இந்தியா முழுவதும் இந்திய அரசியல் சட்டம் ஒன்று போலத்தான் என்கிறார்கள்.. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் அது இல்லாமல் இருக்கிறது..! இதற்கெல்லாம் வேறு யாராவது 'முதல்வன்' பிறந்து வந்து நியாயம் கேட்டால்தான் உண்டு..!

இங்கே இன்னொரு பிரச்சினையையும் சொல்லியாக வேண்டும்.. "தெலுங்கானா பிரச்சினை உச்சக்கட்டத்தில் இருக்கும்போது இப்படியொரு விழாவுக்கு தெலுங்கு சினிமாக்காரர்கள் போவது சரியில்லை.. தெலுங்கு திரையுலகம் இந்த நூற்றாண்டு விழாவை புறக்கணிக்க வேண்டும்..." என்று தெலுங்கு இயக்குநர் ஒருவர் அறிக்கைவிட்டிருந்தார். ஆனால் இதனை சேம்பர் தலைவர் சி.கல்யாண் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஒன்றுமில்லாமல் செய்து எப்படியோ தெலுங்குக்காரர்களை அழைத்து வந்துவிட்டார்.  இந்த விஷயத்தை சத்யம் தியேட்டரில் நடந்த 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டு பேசிய பாரதிராஜா, "இதேபோல ஈழத் தமிழர் பிரச்சினைக்காக தமிழர்களாகிய நாமும் இந்த விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்ல இங்கே ஒருத்தர்கூட இல்லையே.." என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார். படைப்பாளிகள் சங்கம் உருவான காலத்தில் இருந்தே பாரதிராஜாவும் தமிழ் ஆர்வம் கொண்ட சினிமா பிரபலங்களும் சொல்லி வருவது, "தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை அமைக்கப்பட வேண்டும்..." என்றுதான்.. 

ஏனெனில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் இருந்து காலப்போக்கில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவைகள் பிரிந்து தங்களது மாநிலத்துக்கென தனித்தனியாக வர்த்தக சபைகளை அமைத்துக் கொண்டார்கள். தமிழில் மட்டுமே இதுவரையிலும் பிரியும் சூழல் ஏற்படவில்லை. இதனையே இயக்குநர் ஆர்.கே.செல்வமணியும் மேடைதோறும் பேசி வருகிறார்.!  சமீபத்தில் 'ஞானக்கிறுக்கன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில்கூட பாரதிராஜாவும், ஆர்.கே.செல்வமணியும் இதையேதான் பேசியிருக்கிறார்கள். கூடவே "ஹீரோக்களுக்கு தட்டிக் கேட்க தைரியம் இல்லை.. கோழைகளாக இருக்கிறார்கள்..." என்று தாக்கியேவிட்டார் பாரதிராஜா. ஆனால் இவரும் இப்போதுவரையிலும் சேம்பரை எதிர்த்தோ, ஜெயலலிதாவை எதிர்த்தோ அறிக்கை எதையும்விடவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும். 

தற்போது சென்னை அண்ணா சாலையில் ஜெமினி மேம்பாலம் அருகில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடமும், தற்போது மேலும் நூறு கோடிக்கும் மேலான தொகையில் புதிதாகக் 3 பிரிவியூ தியேட்டர்களுடன் கட்டப்பட்டு வரும் இன்னொரு கட்டிடமும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு சொந்தமானது..! இதில் வாடகையாகவே மாதந்தோறும் 50 லட்சம் ரூபாய் வருகிறதாம்..! இந்த வர்த்தகத்தை இழந்து தனியாக பிரித்தெடுக்க நான்கு மாநில நிர்வாகிகளுக்கும் மனசில்லை.. இதோடு இது அகில இந்திய திரைப்பட வர்த்தக சபையோடு இணைந்தது என்பதால் அவர்களாலும் சுலபத்தில் கைவிட முடியாத நிலை.. யாரேனும் அரசியல் செல்வாக்கானவர்கள் முனைந்து நின்று சொத்துக்களைப் பிரித்தெடுத்து சுமூகமாகப் பேசித் தீர்த்தால் ஒழிய.. தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை உருவாகும் வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு செல்வாக்கானவர் இப்போதைக்கு இங்கே யார் இருக்காங்க..? 

அரசு கொடுத்த 10 கோடி.. ஜெயா டிவி கொடுத்த 5 கோடி.. பி.வி.பி. கம்பெனி தெலுங்கு, கன்னடம், மலையாளத்திற்காக கொடுத்த 12 கோடி.. ஆக மொத்தம் 27 கோடியை முதலிலேயே வசூல் செய்திருக்கும் சேம்பர்.. தற்போது தென்னக சினிமாவில் மிகப் பெரிய சொத்துக்கார சினிமா அமைப்பாக உருவெடுத்திருக்கிறது..!  இது ஒன்றுதான் இந்த விழாவினால் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்குக் கிடைத்திருக்கும் பலன்..!

(முற்றும்)

கசப்புடன் முடிந்த சினிமா நூற்றாண்டு விழா..! - 4

30-09-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



ஆத்தா வந்ததுக்கே அத்தனை அலப்பறையை காட்டின போலீஸ்.. இப்போ ஜனாதிபதியும் வரும்போது சும்மாவா இருப்பாங்க..! ஆனாலும் ஆத்தாவின் தொண்டர்கள் அடங்கலை..! 

சென்னையைச் சுற்றியிருக்கும் இடங்கள்ல இருந்து வண்டி கட்டிக்கிட்டு வந்து குவிஞ்சுட்டாங்க.. அண்ணா சாலைல அன்னிக்கு மதியம் சாரை சாரையா மினி வேன்களும், பஸ்களும் போய்க்கிட்டேயிருந்துச்சு.. ஒவ்வொரு கழக அமைப்பிலும் 10 பேராவது நிர்வாகிகள் இருப்பாங்க.. அவங்க ஒவ்வொருத்தரும் ஒரு மினி வேனை புக் பண்ணி பிரியாணி போட்டு தொண்டர்களை பிக்கப் பண்ணி கொண்டாந்துட்டாங்க.. கார்களையும், வேன்களையும் நிறுத்துறதுக்கே இடமில்லை.. மூர் மார்க்கெட் பக்கத்துல இடத்தை ஒதுக்கியிருந்தாங்க.. அந்த இடமும் ஹவுஸ்புல்லாகிவிட.. வேறொரு இடத்தைக் காட்டி வேன்களை திசை திருப்பிக்கிட்டிருந்துச்சு போலீஸ்..!

ரிப்பன் பில்டிங்ல இருந்து நேரு ஸ்டேடியம்வரைக்கும் இரண்டு பக்கமும் ஆத்தாவை வாழ்த்தி விதவிதமான விளம்பரத் தட்டிகள்.. போஸ்டர்கள்.. வாழும் இந்தியாவேன்னு ஒருத்தர் அடிச்சிருந்தாரு.. வருங்கால பிரதமரேன்னு இன்னொருத்தர் அடிச்சிருந்தாரு.. எல்லாம் ஒரு நம்பிக்கைதான.. விடுங்க..!

மூணு நாளா பாஸ் இருந்தாத்தான் டூவீலர் வண்டிகளை பார்க் செய்ய விடுவோம்ன்னு சொன்ன ஆளுங்க, இன்னிக்கு மட்டும் எதுவுமே கேட்காமல் திறந்துவிட்டுட்டாங்க..! ஆனா வழியெங்கும் போலீஸ்.. போலீஸ்.. ரோட்டுல ஒன்சைடு மட்டும் மரக்கட்டைகளை போட்டு தொண்டர்கள் நிக்குறதுக்காக இடம் கொடுத்திருந்தாங்க.. 2 மணி நேரத்துக்கு முன்னாடியே அந்த இடம் ஹவுஸ்புல்.. அவ்வளவு கூட்டம்.. அந்தப் பகுதில வசிக்கிறவங்கதான் பாவம்.. வீட்டைவிட்டு வெளியே வர முடியலை.. அந்த ரோட்டையே ஒன்வே ஆக்கிட்டதால எல்லாரும் சுத்திதான் வர வேண்டியிருந்தது..!

அம்மா வர்றதுக்கு முன்னாடியே என்ன செய்யணும்..? என்ன செய்யக் கூடாதுன்னு சில தொண்டர்களுக்கு போலீஸார் கிளாஸ் எடுத்துக்கிட்டிருந்தாங்க.. எதையும் தூக்கியெறியக் கூடாது.. மனு ஏதாச்சும் இருந்தா எங்ககிட்ட கொடுத்திருங்க. நாங்க பத்திரமா கொண்டு போய் கொடுத்திருவோம்.. கையை மட்டும்தான் ஆட்டணும்.. விசில் அடிக்கலாம்.. அத்தோட நிறுத்திக்கணும்.. என்று ஒரு பரஸ்பர ஒப்பந்தத்தை தொண்டர்களிடத்தில் பேசி கொண்டிருந்தது போலீஸ்..!

ஸ்டேடியத்துக்கு நேரெதிரில் இருந்த தெருவில் சில கடைகள் இருந்தன. ஒரு டீக்கடையும் இருந்தது. அதையும் இழுத்துப் பூட்டிவிட்டார்கள்..! முக்கியமான சில பேரைத் தவிர மற்றவர்களின் கார்கள் உள்ளே செல்ல முடியாது என்று முன்பே சொல்லிவிட்டதால் விருந்தினர்களை இறக்கிவிட்டுவிட்டு கார்கள், ஷெட்டுக்கு பறந்து கொண்டிருந்தன..!


முதல் நாள் போலவே.. இன்றைக்கும் சில கரைவேட்டிகள் பாஸ் இல்லாமல் வாசலில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்..  ஒரு பெரிய கோஷ்டியாக வந்து, அண்ணன் மாவட்டம் ஸார்.. என்று ஒருவரைக் காட்டி அவரது தொண்டர் பூட்டியிருந்த கேட் வாசலில் நின்று கத்திக் கொண்டிருந்தார்.. ம்ஹூம்.. பலனில்லை.. பாஸ் இருந்தா பேசுங்க ஸார்.. இல்லாட்டி அந்த கேட்டுக்கு போங்க.. கொஞ்ச நேரம் கழிச்சு உள்ள விடுவாங்க.. இப்போ விட முடியாது.. என்றார் ஒரு போலீஸ் உயரதிகாரி.. “எங்களையே விட மாட்டீங்கன்னா அப்புறம் யாரைங்க விடுவீங்க..? என்று எகிறினார்கள் கட்சியினர்.. பக்கத்தில் மப்டியில் இருந்த ஒருவரை காட்டிய அந்த 3 ஸ்டார் அதிகாரி, ஸார் ஐ.எஸ்.. நீங்க வேண்ணா இவர்கிட்ட பேசிக்குங்க.. என்று சொல்லிவிட்டு அலட்சியமாக உள்ளே போய்விட.. அந்த ஐ.எஸ். அதிகாரி சங்கடத்துடன், உள்ள இடமில்லை ஸார்.. இல்லாட்டி அவங்க சொல்வாங்களா.. அந்த கேட்ல கேலரிக்கு டிரை பண்ணுங்க.. என்று பக்குவமாக சொல்லியனுப்பினார்.. இண்டலிஜென்ஸ் சர்வீஸ் போலீஸுக்கு இருக்குற மரியாதை, லோக்கல் போலீஸுக்கு இல்லை போலும்..!

பாஸ்.. பாஸ்.. பாஸ்.. என்று கோடம்பாக்கமே தவியாய் தவித்துக் கொண்டிருக்க இங்கே சினிமாவுக்கே சம்பந்தமில்லாதவர்களெல்லாம் கைகளில் பாஸ்களோடு உலா வந்தது மகா கொடுமை.. 2 மணியில் இருந்தே அனுமதித்துவிட்டதால் நான் உள்ளே சென்றபோது அரங்கம் முக்கால்வாசி ஹவுஸ்புல்.. ஒரு இடத்தில்கூட சினிமாக்காரர்களை பார்க்கவே முடியவில்லை. முக்கால்வாசி அதிமுக கட்சித் தொண்டர்கள்.. கொஞ்சம் பேர் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள்... அழைத்து வரப்பட்டவர்களில் பெரும்பாலோர் இளவயதுக்காரர்களாகவே இருந்ததால் தலைக்கும், தளபதிக்கும், சூப்பர்ஸ்டாருக்கும், உலக நாயகனுக்கும் ஏக வரவேற்பு..!

தரைத்தளத்தில் முன் வரிசை காலியாக இருக்க.. முதல் சீட்டில் கர்நாடக நடிகரும், அமைச்சருமான அம்பரீஷ் தனியே அமர்ந்திருந்தார். உள்ளே வந்த அனைத்து பிரபலங்களும் அவரைத் தாண்டித்தான் போக வேண்டியிருந்த்தால் சுமாராக 50 முறையாவது அவர் எழுந்து உட்கார்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்.. 

அன்றைக்குக் காலையிலேயே தமிழ்ச் சினிமாவில் இதுவரையிலும் நடந்திராத அளவுக்கு ஒரு கேவலம் நடந்தது. அமிதாப்பச்சனின் அருகிலேயே கமல், ரஜினி அமர வேண்டும்.. ஆகவே அது போல சீட் ஒதுக்கீடு செய்யவும் என்று அவர்கள் இருவரின் சார்பில் நடிகர் சிவக்குமார் விழா நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டாராம்.. அது எங்க கைல இல்லையே என்று சேம்பரும்.. இப்ப கடைசி நிமிஷத்துல சொன்னா எப்படி..? ஜனாதிபதி வர்றதால நாங்க எல்லாத்தையும் ஏற்கெனவே பிக்ஸ் பண்ணிட்டோமே என்று அரசுத் தரப்பிலும் பதில் வந்ததாம்.. 

பரிசு பெறுபவர்கள் நீண்ட தூரம் நடந்து வரக் கூடாது.. ஏற்கெனவே எல்லாருமே வயசானவங்களா இருக்காங்க. அதோட அந்த பரிசளிப்பு வைபவத்தை சீக்கிரமா முடிக்கணும்.. நேரமாகக் கூடாது என்பதால் கமல், ரஜினிக்கு முன் வரிசை ஏற்பாடு நிராகரிக்கப்பட்டதாக நிகழ்ச்சி முடிந்த பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாம்..! இதுவும்கூட ஒருவகையில் உண்மைதான்.. அஞ்சலிதேவி.. பர்வதம்மா ராஜ்குமார், எம்.எஸ்.விஸ்வநாதன், ஏவி.எம்.சரவணன், கே.பாலசந்தர், கே.விஸ்வநாத் என்று விருது பெற்ற பலரையும் கையைப் பிடித்து படிகளில் பத்திரமாக ஏற்றி, இறக்கிக் கொண்டு வந்தார்கள்.. நீண்ட தூரம் நடக்க வைத்தாலும் சிக்கல்தான்.. ஓகே.. 


அஜீத்துக்கும், விஜய்க்கும் நடுவில் சரத்குமார் அமர்ந்திருந்தார். கமல் வந்தபோது வழக்கம்போல வரவேற்பு.. கமலும் வரிசையாக அனைவரிடமும் கைகுலுக்கிவிட்டு வந்தவர் தேவியிடம் வந்து நிற்க.. போனி கபூருடன் சேர்த்து மூவரையும் போட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொன்னார்கள் போட்டோகிராபர்கள்.. 


இம்முறையும் பிரபலங்களை வரவேற்றது மட்டுமே சினிமா பி.ஆர்.ஓ.க்கள். அமரும் இடத்தைக் காட்டியது அரசு பி.ஆர்.ஓ.க்கள்தான்..! மேடைக்கு வலது புறமாக இரண்டாம் வரிசையில் தமிழ்ச் சினிமாவின் பிரம்மாக்களுக்கு இடத்தை ஒதுக்கியிருந்தார்கள்..! நயன்தாரா, தனுஷ், ஆர்யா மூவரும் கூட்டத்துக்கு நடுவில் அமர்ந்தே தேமே என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்..! இவர்கள் பாதியிலேயே கிளம்பியபோதுதான் வந்ததே பலருக்கும் தெரிந்தது..!


கமலுக்கு பின்பு அமிதாப்பச்சன் வந்தார். அமர்ந்தார். கொஞ்ச நேரத்தில் சூப்பர் ஸ்டாரும் உள்ளே நுழைந்தார்.. அம்பரீஷையும் தாண்டி பலரையும் மின்னல் வேகத்தில் அனைவருடனும் கைகுலுக்கிவிட்டு நேராக அமிதாப்பச்சனின் அருகில் வந்து அவரைக் கட்டித் தழுவி கொஞ்சிவிட்டு பின் வரிசைக்கு வந்து கமல் அருகில் அமர்ந்தார். அவர் உள்ளே வந்ததில் இருந்து அமர்கின்றவரையிலும் எழுந்த கைதட்டலில் காது பஞ்சராகிவிட்டது..! 



கே.பாலசந்தர் பாத்ரூம் செல்வதற்காக எழுந்து நடந்துவரும்போது மின்னலாய் உள்ளே நுழைந்த  ஹிந்தி கனவுக்கன்னி ரேகா படாரென்று அவரது காலில் விழுந்து வணக்கம் சொல்ல அவருக்கே இனிய அதிர்ச்சி.. முதல் வரிசையில் ஏவி.எம்.சரவணன் அருகிலேயே அமர்ந்து கொண்டார் ரேகா.. உட்கார்ந்த உடனேயே பின்பக்கம் திரும்பி நம்ம பிரம்மாக்கள் அனைவரிடமும் நமஸ்தேஜி சொன்னவிதம்கூட தூரத்தில் கேலரியில் இருந்து பார்த்தவர்களுக்கே பரவசமாக இருந்தது..!

சற்று நேரத்தில் ஒடம்பொறவா சகோதரி சசிகலா தனது உறவினர்களுடன் உள்ளே வந்தார்.  முதல் வரிசையில் அவருக்காகவே ரிசர்வ் செய்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்தவரிடத்தில் சரத்குமார் எழுந்து சென்று பேசினார்..!

மேடையில் இரு புறமும் மைக்குகள் ஸ்டேண்டுகள் வைத்திருந்தார்கள். செக்யூரிட்டி ஆபீஸர்கள் மாறி மாறி ஹலோ மைக் டெஸ்ட்டிங் சொல்லிச் சொல்லியே அந்த மைக்குகளை களைப்படையச் செய்துவிட்டார்கள். அரை மணி நேரமா டெஸ்ட் பண்றாங்கப்பா.. இதுல கடைசி நேரத்துல வந்து ஒருத்தர் மைக்கை கழட்டி செக் பண்ணி திரும்பவும் மாட்டிட்டு போனாரு..! சோதனையாம்..!

இடது புற முன் வரிசையில் அடிமை மந்திரிகள் வரிசையாக வந்து அமர.. அவர்களுக்கு பின்னே மூணு சீட்டு தள்ளித்தான் மற்ற மாநிலங்களிலிருந்து வந்திருந்த சினிமா கலைஞர்கள் அமர வைக்கப்பட்டார்கள்.. இவர்களுக்கிடையே கட்சியின் மாவட்டச் செயலாளர்களும், முக்கியப் புள்ளிகளும் வேறு அமர்ந்து கொள்ள.. சில கலைஞர்கள் உட்கார இடமில்லாமல் அங்கே, இங்கேயென்று அலைந்து கொண்டிருந்தது பரிதாபம்தான்..!

ஆத்தா கிளம்பிய தகவல் கிடைத்ததும் மேடை சுத்தமானது..! 5.15 மணிக்கு ஆத்தா  அரங்கத்திற்கு வந்து சேர்ந்தார்.. கீழே இருக்கும் ரூமில் ஜனாதிபதிக்காக காத்திருந்தார் ஆத்தா.  ஐந்தரை மணிக்கு ஜனாதிபதியும் வந்து சேர்ந்தார். இவர்கூடவே கவர்னரும், கர்நாடக அமைச்சரும், கேரள முதலமைச்சரும் ஒன்றாகவே வந்துவிட்டார்கள். செக்யூரிட்டிக்காக அனைவரையும் கவர்னர் மாளிகையில் இருந்து ஒன்றாகவே அழைத்து வந்துவிட்டார்களாம்..!

இவர்கள் மேடைக்கு வருவதற்கு முன்பேயே மேடையில் பிரசங்கத்தைத் துவக்கிவிட்டார்கள் தொகுப்பாளர்கள். தூர்தர்ஷனில் விளையாட்டு க்விஸ் போட்டி நடத்துபவர்(பெயர் தெரியவில்லை) மற்றும் ஒரு அம்மணி.. இவரையும் எங்கயோ பார்த்திருக்கேன்.. பெயர் தெரியலை.. இந்திய சினிமாவின் வரலாறு பற்றி ஒரு பெரிய கிளாஸே எடுத்தார்கள். அந்த அம்மையார் தமிழில் சொன்னதையெல்லாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் அந்த ஆண் தொகுப்பாளர்..!


அரசியல்வியாதிகளுக்கும் பொதுமக்களுக்குமான தொடர்பு எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். ஒண்ணுமே சொல்லலைன்னா ஒரு பயலும் எந்திரிக்க மாட்டான்னு அவங்களுக்கே தெரியும். அதுனால ஒரு தடவை இல்ல.. மூணு தடவை ஒப்பாரியே வைச்சாங்க.. "மேதகு ஜனாதிபதி வரும்போது அவருடைய மருவாதைக்காக தேசிய கீதம் இசைக்கப்படும். ஆகவே எல்லாரும் எந்திரிச்சு நிக்கணும்.."னு.. செவனேன்னு எந்திரிச்சு நின்னா, போலீஸ் பேண்டு கோஷ்டி தேசிய கீதைத்தை இசைச்சாங்க.. உட்கார்ந்த உடனேயே மறுபடியும் எந்திரிங்கன்னுட்டாங்க.. சின்மயி மேடம் நாட்டுப்பண் பாடினாங்க..! அப்பாடான்னு உக்காந்தோம்..!


சேம்பர் தலைவர் சி.கல்யாண் வரவேற்புரையாற்றிய பின்பு குத்துவிளக்கேற்றும் வைபவம். நடிகை திரிஷா கையில் ஒரு மெழுகுவர்த்தியோடு வர.. அதனை வாங்கி ஆளாளுக்கு ஒரு பக்கமா பத்த வைச்சுட்டு உக்காந்தாங்க.. இதுக்கு திரிஷா தேவையா..? இவங்களே யோசிக்க மாட்டாங்களா..? தொடர்ந்து அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள் சேம்பர் நிர்வாகிகள்... 

முதல் நிகழ்ச்சியே இந்திய சினிமாவை பற்றிய ஒரு சின்ன டிரெயிலர்.. நடிகர் மாதவன் தொகுத்து வழங்கியிருந்தார்..  எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், ராஜ்கபூர், தேவ் ஆனந்த், அமிதாப்பச்சன், ராஜ்குமார், சத்யன், பிரேம்நசீர், மது, வைஜயந்திமாலா, பத்மினி, கமல்ஹாசன், ரஜினி ஆகியோர் நடித்த பழைய பட காட்சிகளை வைத்தே தொகுத்திருந்தார்கள்.ஜெயலலிதா பாடிய அம்மா என்றால் அன்பு பாடல்.. அதோ அந்தப் பறவை போல பாடல்.. திருவளர்ச்செல்வியோ நான் தேடிய தலைவிதியோ.. கர்ணனின் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல்.. பாட்ஷாவின் ரஜினியின் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி டயலாக்.. நாயகன் படத்தில் கமல்ஹாசனிடம் பேரன் கேட்கும் நீங்க நல்லவரா கெட்டவரா என்ற டயலாக்.. இப்படி சிலவற்றை மட்டுமே கைதட்டலுக்காக தொகுத்திருந்தார்கள்..!

வாழ்த்துரையில் முதலில் கர்நாடக அமைச்சர் பேசினார்.. அவருக்குப் பின் கேரள முதல்வர் உம்மன் சாண்டி பேசினார்.. அவருக்கு பின் ஆத்தா பேச வந்தார்.. தனக்குப் பக்கத்தில் தனக்கென தனியாக இருந்த மைக்கை பிடித்த ஆத்தா.. ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்ததை மிக அழகாக படித்துக் காண்பித்தார். 


ஆத்தாவின் பேருரை :

"இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டிருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் பெருமை உண்டு. இந்தியாவில் சினிமா வரலாறுகளைப் படைத்து சாதனைகளை எட்டியுள்ளது. சமுதாயத்தில் சினிமாக்களின் தாக்கம் குறித்து உலகில் உள்ள அனைவருமே அறிந்து, அதை ஏற்றுக்கொண்டுள்ளனர். மனித கலாசாரத்தில் சினிமா கலந்திருப்பதோடு, கல்வி, பொழுதுபோக்கு, பிரசாரங்களை மக்களிடையே சுமந்து செல்லும் கருவியாய் விளங்குகிறது.

உலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து, மக்களிடையே ஆதிக்கம் செலுத்தும் மீடியாவாக சினிமா திகழ்ந்து வருகிறது. சினிமாட்டோகிராபியை அறிமுகம் செய்த லுமையர் சகோதரர்கள், இது ஒரு எதிர்காலமற்ற கண்டுபிடிப்பு என்றனர். ஆனால் அது தவறு என்பதை நமது இந்த விழா கொண்டாட்டம் நிரூபிக்கிறது. சினிமாவுக்கு மேலும் நல்ல எதிர்காலத்தை நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.இந்திய சினிமாக்களுக்கு தனிப்பட்ட அடையாளம் உண்டு. நாட்டில் நிலவும் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார மாற்றங்களை இந்திய சினிமா பிரதிபலிக்கிறது. மும்பை, கொல்கத்தா, சென்னையைச் சேர்ந்த பலர், மவுனப்படங்களை தயாரித்து சகாப்தம் படைத்துள்ளனர். 1920-ம் ஆண்டில் சினிமா தயாரிப்பு என்பது ஒரு தொழில் நிறுவனமாக வளர்ச்சி பெற்றது. 1931-ம் ஆண்டில் சினிமா தயாரிப்பு எண்ணிக்கை 207 ஆக உயர்ந்தது.

அதன் பிறகு வர்த்தக ரீதியான சினிமாக்கள் தயாரிப்பின் ஆதிக்கம் தொடங்கியது. 'ராஜா ஹரிச்சந்திரா' படத்தின் வெற்றிக்கு பிறகு பலர் மவுனப் படங்கள் தயாரிக்கத்தொடங்கினர். 1920-ம் ஆண்டின் மத்தியில், சினிமா குறித்த விஷயங்களின் மையமாக சென்னை திகழத்தொடங்கியது. சினிமாக்களின் தலைமையிடங்களாக அப்போது மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய பட்டணங்கள்தான் இருந்தன.1940-50-ம் ஆண்டுகளில் பாட்டு, நாட்டியம், பின்னணி இசை, ஆகியவை சினிமாக்களின் முக்கிய அங்கமாக இடம் பிடித்தன. 1970-ம் ஆண்டுகளுக்கு பிறகு வர்த்தக ரீதியான சினிமா தயாரிப்பு, இதுவரை இல்லாத அளவுக்கு பெருவளர்ச்சி கண்டது. ரசிகர்களுக்கு இந்திய சினிமாக்கள் விருந்து படைக்கின்றன. இந்திய மக்களை மட்டுமல்ல உலக சினிமாத்துறையிலும் இந்திய சினிமாக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இந்தியாவில் வாழும் வாழ்க்கையில், சினிமா, பாட்டு, நாட்டியம், அறிவுரைகள் ஆகியவற்றின் தாக்கங்கள் இல்லாமல் இருக்காது. சுதந்திர போராட்டங்கள் முதல் தற்போதைய பிரச்சினைவரை சினிமாக்களில் காண முடியும். சினிமாத்துறையில் எண்ணிலடங்காத நபர்கள் இடம் பெற்றிருந்தாலும், சிலர் மட்டுமே அடையாளம் பெறுகின்றனர். என்றாலும், சினிமா திரையிலும், திரையின் பின்னணியில் பணியாற்றிய ஒவ்வொருவருமே சினிமா வரலாற்றில் சில செதுக்கல்களை செய்துள்ளனர்.இந்திய சினிமாவுக்கு முதல் பெண் டைரக்டரை வழங்கிய பெருமை தமிழகத்துக்குத்தான் உண்டு. அவர் 'சினிமா ராணி' என்று அழைக்கப்பட்ட டி.பி.ராஜலட்சுமி. 

எனது உத்தரவின் அடிப்படையில் அவரது பிறந்த நாள் நூற்றாண்டு விழா சமீபத்தில் அரசு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. 1950-60-ம் ஆண்டுகள்தான் இந்திய சினிமாவின் பொற்காலம் என்று அழைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில்தான் மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ள மறக்கவே முடியாத நடிகர் எம்.ஜி.ஆர்., வெள்ளித்திரையில் தோன்றினார். அவர் தமிழ் சினிமாவில் அழியாத இடத்தை பெற்றிருக்கிறார்.

தமிழ் சினிமா உலகிற்கு தேவையான ஊக்கத்தையும், உதவிகளையும் வழங்கி, அதன் பின்னணியில் தமிழக அரசு திடமான ஆதாரமாக நிற்கிறது. நான் எப்போதெல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வருகிறேனோ, அப்போதெல்லாம் தமிழ் சினிமாத்துறைக்கு தேவையான ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கி வருகிறேன்.ரசிகன் இல்லாமல் சினிமா இல்லை. 100 ஆண்டுகளை இந்திய சினிமா கடந்து செல்கிறது என்றால், அது ரசிகர்களின் அமோக ஆதரவு மற்றும் நல்லெண்ணத்திலான ஊக்கத்தினால்தான். எனவே அடையாளம் காணப்படாத, ஆனால் தவிர்க்க முடியாத தனிப்பட்ட ரசிகனே, நீதிபதியாக இருக்கிறான் என்பதை சினிமா உலகம் எப்போதும் தனது மனதில் கொண்டிருக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் இதயத்திலும், மனச்சாட்சியிலும் பதிவாகும் வகையில் சினிமாக்களை கொண்டு வருவதை கனவாகக் கொள்ளுங்கள்…" 

- புரிந்ததோ புரியலையோ.. ஆத்தா பேசி முடிக்கும்வரைக்கும் காத்திருந்து ஒரு பெரிய கைதட்டலை வழங்கி தங்களது நன்றிக் கடனை செலுத்தினார்கள் தொண்டர்கள்..! அடுத்து கவர்னர் ரோசையா பேசினார். அவரும் ஆங்கிலம்..! 

கவர்னர் பேசிக் கொண்டிருக்கும்போது ஆத்தா திடீரென்று தனது இடது கையின் இரண்டு விரல்களை காட்டி யாருக்கோ, ஏதோ சமிக்ஞை கொடுக்க.. அதனை பார்த்த பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு அடிமை அரசு ஊழியர் கையது, வாயது பொத்தி ஆத்தாவின் அருகில் போய் நின்றார்.. ஆத்தா முகத்தைத் திருப்பாமலேயே ஏதோ சொல்ல.. பின்னால் இருந்த டீபாயில் இருந்து சுற்றிலும் கவர் செய்யப்பட்ட ஒரு குடுவையை எடுத்துக் கொடுத்தார் அந்த அடிமை.. பச்சைத் தண்ணி போலிருக்கு.. வாங்கி குடித்துவிட்டு திரும்பாமலேயே குடுவையை பின்பக்கமாக நீட்ட.. அதை வாங்கி பவ்யமாக அதே இடத்தில் வைத்துவிட்டு பின்பு தனது இடத்திற்கே வந்து அதே அட்டென்ஷனில் நின்றார் அடிமை அரசு ஊழியர்.. சினிமாலதான்யா இது மாதிரியெல்லாம் பக்காவான சீன் வைக்க முடியும்..! நீங்கள்லாம் நல்லா வருவீங்கப்பா..!

ஜனாதிபதி பேசுவதற்கு முன்பு கலைஞர்களுக்கு விருது வழங்கத் துவங்கினார்.. முதல் விருது ஆத்தாவுக்குத்தான்..! இவருக்கு மட்டும் ஸ்பெஷலா வடிவமைக்கப்பட்ட ஒரு விருது.. மத்தவங்களுக்கெல்லாம் கழுத்துல தொங்குற பதக்கம் மட்டும்தான்..! என்னவொரு ஜால்ரா பாருங்க..?!



மற்றவர்களை அழைக்கும் முன்பு சேம்பரின் துணைத் தலைவர் தரைத்தளத்தின் முன் வரிசையின் அருகே வந்து யார், யார் முதலில் விருது வாங்கப் போவது என்று பெயர்களைச் சொல்லி அவர்களை மேடைக்கு அருகே அழைத்துச் சென்றார்.. நான் முன்பே சொன்னது போல பல பெரிசுகள் நடக்க முடியாமல் இருந்ததால் விருது கொடுக்கும் வைபவம் கொஞ்சம்  மெதுவாகவே நடந்தது..! அத்தோடு இரு பக்கமும் படிக்கட்டுகள் இருந்தன என்றாலும் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் வழியைக் காட்ட மேலே யாரும் இல்லாததால், ஏறிய படியிலேயே சிலர் இறங்கி வர.. கொஞ்ச நேரம் குழப்பம் நீடிக்கத்தான் செய்தது..! 



எம்.எஸ்.விஸ்வநாதன் மேடையேறியவர் மேடையில் இருந்த அனைவரிடமும் ஆர்வத்துடன் போய் கை குலக்கியவர், கவர்னர் ரோசையாவின் அருகில் போய் நின்று கை விரிக்க.. கூட்டமே சிரித்துவிட்டது. ஜனாதிபதியே அவரை அருகில் அழைக்க.. பின்பு அவரிடம் சென்று விருதை பெற்றுக் கொண்டார்..! ஆத்தா மாதிரியேதான் இந்தாளும் இருக்காரு.. பரிசு வாங்குறவங்க கலைஞர்கள்தான..? ஒரு வார்த்தை பேசினா என்ன முத்தா உதிர்ந்து போயிரும்..? ஒரேயொரு சிரிப்பு.. அவ்ளோதான்.. இப்படிப் போய் இந்த விருதை வாங்குறதுக்கு ச்சும்மா வீட்ல குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புறப்படுத்து தூங்கியிருக்கலாம்..! கடுப்பா இருக்கு..! இதுக்குத்தான் அரசியல்வியாதிகளை இது மாதிரியான கலை விழாக்களுக்கு கூப்பிடக் கூடாதுன்றது..! அட.. தமிழ் தெரியாது.. தமிழ் கலைஞர்களை தெரியாது.. விட்ரலாம்.. அமிதாப்பச்சன்.. ஜாவேத் அக்தர்.. ரந்தீர்கபூர், ரமேஷ் சிப்பி.. இவர்களைகூடவா அவருக்குத் தெரியாது. அட.. அவரோட சொந்த மாநிலத்துக்காரர்..! 50 வருஷமா சினிமால இருக்குற பொம்பளை.. அபர்ணா சென்.. அவங்ககிட்டயாச்சும் ஒரு வார்த்தை.. ம்ஹூம்.. போங்கடா.. துப்புக்கெட்டப் பசங்களா..! உங்களுக்கெல்லாம் ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைச்சிருக்காங்க பாருங்க.. அவங்களை சொல்லணும்..!


இது ஜனாதிபதிகிட்ட விருது வாங்கினவங்க லிஸ்ட்டு.. 

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகை ஸ்ரீதேவி, இந்தி நடிகை ரேகா,  ஏவி.எம்.சரவணன், நடிகை வைஜயந்திமாலா, டைரக்டர் கே.பாலசந்தர், நடிகை அஞ்சலிதேவி, தெலுங்கு டைரக்டர் கே.விஸ்வநாத், டைரக்டர் மற்றும் கார்ட்டூனிஸ்ட் பாபு, டைரக்டர் கே.ராகவேந்திரராவ், பர்வதம்மா(கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி மற்றும் பட தயாரிப்பாளர்), நடிகை பாரதி விஷ்ணுவர்தன், கன்னட நடிகர் அம்பரீஷ், டைரக்டர் ராஜேந்திரசிங் பாபு, துவாரகீஷ்(நடிகர்-தயாரிப்பாளர்-டைரக்டர்), நடிகர் வி.ரவிச்சந்திரன், நடிகர் வீரண்ணா, நடிகர் மது, டைரக்டர் அடூர் கோபாலகிருஷ்ணன், ஸ்டூடியோ அதிபர் சந்திரன் (மேரிலேண்ட் சுப்பிரமணியத்தின் பேரன்), பட அதிபர் குஞ்சாகோ போபன், நடிகர் மம்முட்டி, நடிகர் மோகன்லால், இந்தி நடிகர் அமிதாப்பச்சன், இந்தி பட அதிபர் கிரண் வி.சாந்தாராம், இந்தி நடிகர் ரந்திர்கபூர், இந்தி பட அதிபர் ரமேஷ் சிப்பி, இந்தி பட வினியோகஸ்தர் கமல் பர்ஜாத்யா, தியேட்டர் அதிபர் வினய்குமார் சும்ப்ளே, இந்தி பட பாடல் ஆசிரியர் ஜாவேத் அக்தர், மராட்டிய நடிகர் ரமேஷ் தியோ, நடிகை சீமா தியோ, வங்காள நடிகை அபர்ணாசிங், டைரக்டர் கவுதம் கோஷ், பிரசன்ஜி சாட்டர்ஜி, நரேஷ் கலோடியா, பஞ்சாப் நடிகை பிரீத்தி சப்ரு, ஒரியா நடிகை உத்தம் மகந்தி, போஜ்புரி நடிகர் மனோஜ்தியா, அசாம் நடிகை ஜரிபாவாகின். இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழான்றதால பல்வேறு மொழிகளில் நடிச்சவங்களையும் மொழிக்கு ரெண்டு, ரெண்டு பேரை கூப்பிட்டு விருது கொடுத்து ஒப்பேத்தியிருக்காங்க..!


இந்த விருது வைபவத்தில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.. ஹிந்தி ரேகா விருது பெற்று தனது இருக்கைக்கு திரும்பும்போது வழியில் அமர்ந்திருந்த போனி கபூர், தேவி, ஜாவேத் அக்தரிடம் வரிசையாக கை குலுக்கியவர் அப்படியே பக்கத்தில் அமர்ந்திருந்த அமிதாப்பிடமும் பட்டென்று கையை நீட்டி குலுக்கிவிட்டு படு ஸ்பீடாக தனது இருக்கையில் வந்து அமர்ந்தார்.. இதை  அன்னிக்கு யாராச்சும் போட்டோ புடிச்சாங்களான்னு தெரியலை.. நானும் தேடிப் பார்த்தேன்.. போட்டோவே கிடைக்கலை.. இத்தனைக்கும் இவங்களுக்குப் பக்கத்துலதான் போட்டோகிராபர்ஸ் நின்னுக்கிட்டிருந்தாங்க.. என்ன கொடுமை சரவணா இது..? இது மட்டும் வீடியோ பதிவாவும் கிடைச்சிருந்தா அன்னிக்கே அனைத்து வட இந்திய சேனல்களும் இதையே திருப்பித் திருப்பிக் காண்பித்து பொழுதைக் கழிச்சிருப்பாங்க.. ஒரு நல்ல விஷுவல் நியூஸ் மிஸ்ஸாயிருச்சு மீடியாவுக்கு..!

விருது கொடுத்து முடிச்சவுடனேயே இரண்டு மைக் முன்னாடியும் சிவப்பு கம்பளம் விரிச்ச ஒரு சின்ன பலகை வைக்கப்பட்டது..! ஜனாதிபதியின் முகம் கேமிராக்களுக்குத் தெரியணுமாம். அதுக்காக..! ஜனாதிபதி எழுந்தவர்.. ரெண்டு பக்கமும் பார்த்திட்டு.. வலது பக்கமே போயிட்டார்.. உடனேயே இடது பக்க பலகை எடுக்கப்பட்டு சட்டென்று பையில் போடப்பட்டு மூடப்பட்டது..! ஜனாதிபதியும் எழுதி வைத்ததைத்தான் படித்தார். ஆனாலும் சிற்சில இடங்களில்  மட்டும் கூட்டத்தினரை பார்த்து தானாகவே பேசினார்.. 

என்ன பேசினாருன்னா..?

"இந்த மாபெரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பளித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் தென்னிந்திய வர்த்தக சபைக்கு நன்றி தெரிவிக்கிறேன். மவுனப் படமாக ஹரீஷ்சந்திரா என்ற படத்தை தாதாசாகேப் பால்கே தயாரித்தார். இதற்காக தனது மனைவியின் நகைகள் அனைத்தையும் அவர் விற்றார். அதுதான் இந்த நூற்றாண்டுக்கான தொடக்கமாக அமைந்தது.  இந்திய சினிமா, ஒவ்வொரு 10 ஆண்டிலும் எப்படி வளர்ச்சி கண்டது என்பதை முதல்-அமைச்சர் ஜெயலலிதா விளக்கமாக கூறினார். 

இன்று உலகத்தில் மிகப் பெரிய தொழிற்சாலையாக இந்திய சினிமா வளர்ச்சி பெற்றுள்ளது, உலக வர்த்தகமாக திகழ்கிறது. சர்வதேச சினிமா விழாக்களில் இந்தியர்களும் அங்கீகாரம் பெற்று வருகின்றனர். இந்திய சினிமா இசை, இங்கு மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இசைக்கப்பட்டு வருகிறது. 

இந்திய சினிமாவில், தென்னிந்திய சினிமாக்கள் மிகப் பெரிய பங்களிப்பை அளித்துள்ளன. மிகப் பெரிய ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ், பிரேம்நசீர், ராஜ்குமார், எஸ்.எஸ்.வாசன், நாகிரெட்டி, எல்.வி.பிரசாத் போன்றவர்களை மறக்க முடியாது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் தென்னிந்திய சினிமாவுக்கு சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். அவரை இந்திய சினிமா விருதுக்கு தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகள்.

இந்திய சினிமாவுக்கு மத்திய அரசு நல்லாதரவு அளித்து வருகிறது. சமூகத்தில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் துறையாக சினிமாத்துறை இருக்க வேண்டும். ஏனென்றால், நம் நாட்டில் சினிமா பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். சினிமாதான் மக்களிடையே ஊடுருவி இருக்கும் மீடியா. பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், சமூகத்துக்கு தேவையான நல்லொழுக்கத்தையும் அதன் மூலம் வளர்க்க வேண்டும். பழமை வாய்ந்த புனே, கொல்கத்தாவில் உள்ள சினிமா கல்லூரிகளுக்கு தேசிய முக்கியத்துவம் கொடுப்பது குறித்து அறிவிக்க வேண்டும்.

சமீபத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி கேள்விப்பட்டு வருகிறோம். நாட்டில் சில இடங்களில் கலவரங்களும் நடக்கின்றன. அவையெல்லாம் நமது மனச்சாட்சியை உலுக்கிவிட்டன. இதற்கு சினிமா துறையினர் சரியான அறிவுரைகளை சரியான வழியில் சொல்ல வேண்டும். மறைந்துவரும் நல்லொழுக்கங்களை விழித்தெழச் செய்வது அவசியம். சகிப்புத் தன்மையும், மனிதநேயமும் வளர்க்கப்பட வேண்டும். சமூக மேம்பாட்டுக்காக நேர்மறையுடன் பொறுப்போடு செயல்பட வேண்டும்…"

- அடுத்தவங்களுக்கு மட்டும்தான் அறிவரை சொல்வாங்க இந்த அரசியல்வியாதிங்க.. சினிமாக்காரங்க பொறுப்பா இருக்கணுமாம்.. இவங்கெல்லாம் அட்வைஸ் செய்ற அளவுக்கு சினிமாக்காரங்க நிலைமை ஆகிப் போச்சு..! பாவம்தான்..!


சேம்பரின் செயலாளர்களில் ஒருவரான ரவி கொட்டாக்காரா நன்றியுரை சொல்ல.. மேடை கூட்டம் இனிதே முடிவடைந்தது..! ஆத்தாவைப் பார்த்து பெரும் கும்பிடு போட்டுவிட்டு ஜனாதிபதியும் மற்றவர்களும் வெளியேற.. இதுதான் சமயம் என்று கீழேயிருந்த ஒட்டு மொத்தக் கூட்டமும் ரிலாக்ஸானது..! 


தமிழ் கலைஞர்கள் அனைவரிடமும் விடைபெற்று அமிதாப்பச்சன் வெளியேற.. பின்பு ரஜினி.. பின்பு கமல்.. என்று பெரிய தலைகள் எஸ்கேப்பு.. அமைச்சர்களும் அடித்துப் பிடித்து  வெளியேற.. பல கலைஞர்கள்  மேடைக்குக் கீழே பல இடங்களில் நின்று கொண்டு பேசத் துவங்கினார்கள். இந்த களேபரத்தை பார்த்து பயந்து போன தொகுப்பாளர்கள் "சி.எம். திரும்பவும் உள்ள வரப் போறாங்க.. உங்களோட உக்காந்துதான் கலை நிகழ்ச்சிகளை பார்க்கப் போறாங்க.. தயவு செஞ்சு எல்லாரும் அமைதியா உக்காருங்க"ன்னு திரும்பத் திரும்பச் சொன்னாங்க.. ஆத்தா திரும்பவும் வரும்வரையிலும் அவர் வரும் வழியில் பலரும் போய் வந்து கொண்டிருக்க டென்ஷனாகிவிட்டார்கள் செக்யூரிட்டிகள்.... 

விருந்தினர்களை வழியனுப்பிவைத்துவிட்டு ஆத்தா திரும்பவும் உள்ளே வந்த பின்பு நிலைமை சீராகி அனைவரும் கிடைத்த இடத்தில் அமர்ந்தார்கள்.. கமல், ரஜினி, அமிதாப்பச்சன் போனவர்கள் போனவர்கள்தான்..! முன் வரிசையில் சில அமைச்சர்கள் திடீரென்று காணாமல் போக அந்த இடத்தில் அதுவரையிலும் இடம் கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருந்த தெலுங்கு நடிகர்கள் ராஜேந்திரபிரசாத்தும், ராஜசேகரும் அமர்ந்தார்கள். முன் வரிசையில் அமர்ந்த தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவிடம் ஒரு அரசு பி.ஆர்.ஓ. பின் வரிசைக்கு போகும்படி சொல்ல.. மனுஷன் கொலை செய்துவிடுவதை போல முறைத்துப் பார்த்தார். அதற்குள் சேம்பர் நிர்வாகி ஒருவர் வந்து அவர் அருகில் அமர்ந்து கூல் செய்து அரசு பி.ஆர்.ஓ.வை அனுப்பி வைத்துவிட்டார்.. தப்பிச்சான் மனுஷன்..!

இப்போது தொகுப்பாளர்களும் மாறி சின்மயி மேடமும், சிவகார்த்திகேயனும் தொகுப்பாளர்களா வந்தாங்க.. முதலில் ஆத்தாவின் திரையுலக வாழ்க்கையை ஒரு குறும்படமா தொகுத்திருந்தாங்க.. இயக்குநர் பி.வாசுதான் இதனை செய்திருந்தார். திரையுலகம் கண்ட திரைச்செல்வின்ற பெயரில் ஒளிபரப்பான இந்த குறும்படம் ஆத்தாவின் திரையுலக வாழ்க்கையை கொஞ்சம், கொஞ்சம் சொன்னது..! அதிலும் எம்.ஜி.ஆருடன் நடித்த படங்களின் ஸ்பெஷலையெல்லாம் சொல்லாமல் ஒரேயடியாக சூரியகாந்தி படத்தில் இருந்து மட்டுமே ஸ்பெஷல் நியூஸாக சொன்னார்கள். இதில் நடிக்க ஆத்தா வெறுமனே 1 ரூபாய்தான் சம்பளமா வாங்கினாராம்.. மேலும் இதில் ஒரு பாடலையும் இவரே பாடியிருக்கிறாராம்.. அதிலும் வேறொரு பாடலின் இடையில் வந்த ஆங்கில வரிகளை தானே எழுதி பாடினாராம் ஆத்தா..! திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு வெள்ளி செங்கோல் கொடுத்து கட்சியிலும், ஆட்சியிலும் இடம் பிடித்ததையும் காட்டினார்கள்..! தற்போது ஆட்சியைப் பிடித்த கதையையும் சொன்னவர் இடையில் அவர் ஊழல் வழக்கிற்காக ஜெயிலுக்கு போனதை மட்டும் சொல்லவே இல்லை..! 

அடுத்து மொதல்ல மலையாளத்துக்காரங்க ஆரம்பிச்சாங்க கச்சேரியை.. செண்டை மேளம்.. நடிகர் ஜெயராமும் இதுல சேர்ந்துக்கிட்டு அடிச்ச அடி இருக்கே.. பிச்சுட்டாங்க.. தொடர்ந்து 5 நிமிஷத்துக்கு ஒரே மேள சத்தம்தான்.. இதுவே சினிமாக்கார ரசிகர்கள் கேலரில இருந்திருந்தா டான்ஸும் சேர்ந்தே வந்திருக்கும்..! சூப்பர்ப்.. 

தொடர்ந்தது நடிகை ஷோபனாவின் டான்ஸ்.. 'ஜெயஜெயவர்த்தினி' என்ற பாடலில் சிங்கத்தின் மீது அமரும் காளியம்மாள் வேடத்தை தனது படை பரிவாரங்களுடன் ஆடிக் காட்டினார்.. நன்று..

அடுத்து தேச ஒற்றுமைக்காக 'பாரத விலாஸ்' படத்தின் பாடல் காட்சிக்கு நமது கலைஞர்கள் பலரும் ஆடிக் காட்டினார்கள்.. தேவயானி மட்டும் ஞாபகம் இருக்கு.. மத்தவங்களை தெரியலை.. மறந்து போச்சு..!

அடுத்து வெங்கட்பிரபு  மேடையில் தோன்றினார்.. "சினிமா தோன்றிய காலத்தில் இருந்து இப்போதுவரையிலும் ஹீரோயினை ஹீரோக்கள் எப்படியெல்லாம் காப்பாத்துறாங்க அப்படீன்ற கான்செப்ட்ல சினிமா மாதிரி இதை எடுத்திருக்கேன் பாருங்க..." என்றார்.. ச்சும்மா காமெடிக்குத்தான்னு முன்னாடியே சொல்லிட்டதால தப்பிச்சாரு..!

முதல் கதை மாயாஜாலம் செய்து ஹீரோயின் கயிற்றை அவிழ்த்து காப்பாற்றுவது.. அடுத்தது  பாட்டு பாடியே கயிற்றை அவிழ்த்து காப்பாற்றுவது.. அடுத்து கத்திச் சண்டையிட்டு காப்பாற்றியது.. அதற்கடுத்து  கெளபாய் ஸ்டைலில் போய் காப்பாற்றியது.. தொடர்ந்து ஹோட்டலில் டான்ஸ் ஆடிவிட்டு வில்லனை போலீஸிடம் மாட்டிவிட்டு இவர்கள் தப்பிப்பது..! கடைசியாக இப்போது ஹீரோயினை காப்பாற்றிய பின்பு "மவனே இதுக்குத்தாண்டா இத்தனை நாளா காத்திருந்தேன்"னு சொல்லி அந்த ஹீரோயின், ஹீரோவை கத்தியால குத்தி சாகடிக்குது..! நல்லத்தான் எடுத்திருந்தாரு வெங்கட்பிரபு..! ஆத்தாவின் ரசிப்பு அவரது சிரிப்பிலேயே தெரிந்தது..!

அடுத்து மேடைக்கு வந்தார் சின்னி ஜெயந்த்.. "1 நிமிஷத்துல 100 திரைக் கலைஞர்களின் பெயரை மனப்பாடமா சொல்லி வாழ்த்தப் போறேன்"னு சொல்லிட்டு ஒவ்வொரு கலைஞருக்கும் ஒரு அடைமொழி கொடுத்து அழகா வாழ்த்தினாரு.. கடைசியா நான் எதிர்பார்த்தது போலவே "அன்புக்கு அம்மா" என்று சொல்லியே முடித்தார்..!

இதற்கடுத்து வந்தது ரிக்கார்டு டான்ஸ்.. 'ஓஸ்தி' படத்தின் 'கலசலா' டான்ஸுக்கு லஷ்மிராய் ஆடுனாங்க.. இந்த ஒரு பாட்டு முடிஞ்சவுடனேயே ஆத்தா பட்டுன்னு கிளம்பிட்டாங்க.. உடனேயே மிச்ச சொச்ச கூட்டமும் எந்திரிச்சு போக ஆரம்பிக்க.. சிவகார்த்திகேயன் இப்போ கெஞ்ச ஆரம்பிச்சிட்டாரு.. "இன்னும் நிறைய நிகழ்ச்சிகள் இருக்கு போயிராதீங்கப்பா.." என்று..!

ஆனாலும் முக்கிய புள்ளிகள்.. நடிகர், நடிகைகள் எல்லாரும் இந்த நேரத்துலேயே கலையத் துவங்க.. முன் வரிசை களையிழந்து போனது.. அடுத்து கும்கி படத்தோட பாட்டுக்கு டான்ஸ்.. அப்புறம் கன்னட ரவிச்சந்திரன் நடிச்ச படங்களைத் திரையிட்டு அவருடைய படங்களின் பாடல்களுக்கு ஒரு கோஷ்டி டான்ஸ் ஆடுச்சு.. தொடர்ந்து தெலுங்கு வெங்கடேஷ் பாடல்களுக்கு டான்ஸ்.. அப்புறம் திரும்பவும் கன்னடம்.. ராஜ்குமார் பாடல்களுக்கு ஆடுனாங்க.. கன்னடத்துக்காரங்கதான்யா எங்க போனாலும் ஒரே மாதிரியிருக்காங்க.. கன்னட தேசத்தை வாழ்த்தி அவங்க மாநில கொடியை கையில பிடிச்சுக்கிட்டு ஒரு ஆட்டம் ஆடி அசத்திட்டாங்க.. நாமளும் இருக்கோமே..!?

அடுத்து ஹாங்காங்கில் இருந்து 5 அழகிகள் வந்து ஆட்டமோ ஆட்டம் ஆடினாங்க.. இவங்களுக்கும் இந்திய சினிமா நூற்றாண்டுக்கும் என்ன சம்பந்தம்ன்னு யாருக்குத் தெரியும்.. இதுக்கப்புறம் ஒரு 5 பசங்க மைக்கேல் ஜாக்ஸன் டான்ஸ் ஆடினாங்க.. இதுக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்ன்னு எனக்குத் தெரியலை.. இத்தோட கூட்டம் பெரிதும் கலையத் துவங்க.. எனக்கும் பொறுமையில்லாமல் கிளம்பிவிட்டேன்..! 

இதுக்கப்புறம்தான் தமிழ்ச் சினிமா நடிகர், நடிகைகள் திரும்பவும் டான்ஸ் ஆடப் போறாங்கன்னு சிவகார்த்திகேயன் திரும்பத் திரும்பச் சொன்னாரு. அதை நீங்களே பார்த்துக்குங்கன்னு விஐபி கூட்டம் மொத்தமும் வெளியேறிவிட்டது.. மேடையில் ஆடியவர்களைத் தவிர வேறெந்த சினிமா கலைஞர்களும் அப்போது அரங்கத்தில் இல்லை..!

மெதுவாக ரோட்டுக்கு வந்தபோது சீனியர் பி.ஆர்.ஓ. ஒருத்தர் வீட்டுக்குப் போக காருக்காக காத்திருந்தார்.. "என்னண்ணே நீயே இப்படி கிளம்பிட்ட?" என்றேன்.. "இதுக்கு மேல இருந்து என்ன பிரயோசனம்..? யார் இருக்கா உள்ள..?" என்றார்.. இதுதான் கடைசி நிலைமை..!

இப்போ அடுத்து நம்ம 'கசப்பு' மேட்டருக்கு வருவோம்..!
புகைப்படங்களுக்கு நன்றி : பல்வேறு இணையத்தளங்கள்


கசப்புடன் முடிந்த சினிமா நூற்றாண்டு விழா..! - 2

29-09-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதல் பாகம்

22-09-2013 - தெலுங்கு திரைப்பட விழா

ஞாயிற்றுக்கிழமையாக இருந்தும் அன்றைக்குக் காலையில் நடந்த கன்னட திரைப்பட விழாவுக்கு போக முடியவில்லை.. செம டயர்டு.. கண் விழித்தபோதே 8 மணி ஆகியிருந்தது..!  பாஸ் வேறு கையில் இல்லை. இனிமேல் யாரையாவது தேடிப் போய் வாங்கினால்தான் போக முடியும் என்பதால் விட்டுவிட்டேன்.  மாலை தெலுங்கு நிகழ்ச்சிக்கான பாஸை படாதபாடுபட்டு வாங்கி பாய்ந்தோடினேன்..!

நான் அரங்கத்திற்குள் நுழைந்தபோது தரைத்தளம் ஹவுஸ்புல்.. காலரியில் பல இடங்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது.. முதல் நாள் துவக்க விழாவில் இருந்த கெடுபிடிகள் இன்றைக்கு இல்லை..! நடிகர் சாய்குமாரும், நடிகை ரோஜாவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.. 





இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன், கே.பாலசந்தர், ஆந்திர மந்திரி அருணா மற்றும் நடிகர்கள் பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், டாக்டர் ராஜசேகர், ஸ்ரீகாந்த், ராணா, டி,இராமாநாயுடு, கே.ராகவேந்திரராவ்... நடிகைகள் ஜெயசுதா, ஜீவிதா, வாணிஸ்ரீ, ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி, காஞ்சனா, அம்பிகா, ராதா, கார்த்திகா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


கொஞ்ச நேரத்தில் ஒய்யாரமாக ஒரு பெண்மணி அசத்தல் சேலையில் கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தார். ரசிகர்களுக்கு முதலில்  யாரென்று தெரியவில்லை. பாலகிருஷ்ணா ஆர்வத்துடன் முன் வந்து கை குலுக்கி இறுக்கிய பின்பு கேமிராவின் குளோஸப்பில் முகம் தெரிந்தார் கண்ணழகி மாதவி. காலையில் நடந்த கன்னட திரையுலக நிகழ்ச்சிக்கே வந்திருந்தார் என்றார்கள்..  முதல் வரிசையில் அமர்ந்த மாதவியிடம் அடுத்தடுத்து தெலுங்கு திரையுலகமே கை குலுக்கி ஹாய் சொன்னது.. இதேபோல் வந்திருந்த இன்னொரு பிரபலம் விருமாண்டி அபிராமி.. அப்படியே அச்சு அசலாக விஸ்வரூபம் பூஜாகுமாருக்கு தங்கச்சி போலவே இருந்தார்..! 


ஜெயசுதா, ஜெயபிரதா, வாணிஸ்ரீ, அமைச்சர் அருணா ஆகியோர் மேடையேறி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள். முதல் ஷோவே டிரம்ஸ் சிவமணியின் ஒன் மேன் ஷோ.. குச்சியை தரையில்கூட அடித்து ஒலியை உண்டாக்கினார்.. சாதாரண சூட்கேஸை வைத்தே ஒரு ரிதம் உண்டாக்கினார்.. ஒரு சிறிய மத்தளத்தை அடித்தபடியே கீழே இறங்கி வந்து முன் வரிசையில் இருந்த கமல்ஹாசனிடத்தில் வர.. இவர் ஒரு அடி அடிக்க.. கமல் ஒரு அடி அடிக்க.. இவர் இரண்டு அடி அடிக்க. கமலும் இரண்டடி அடிக்க.. இவர்களின் இசை ஜூகல்பந்தி பத்தடிவரையிலும் தொடர்ந்தது.. செமத்தியாக இருந்தது..! ஆனாலும் கொஞம்சம் நீளம் என்பதையும் சொல்லியாக வேண்டும்..! 


அடுத்து மேடையில் இருந்த ஸ்கிரீனில் தெலுங்கு திரையுலக வரலாறு துவங்கியது.. மெளனப் படம் காலத்தில் இருந்து இன்றைய காலம்வரையிலும் ஆங்காங்கே தொட்டுத் தொட்டு முடித்துவிட்டார்கள்..! தமிழிலும் புகழ் பெற்ற படங்களை காணாததுதான் ஒரு குறைதான்..! இது முடிந்ததும் அண்ணன் கமல்ஹாசன் அரங்கத்தில் இருந்து விடைபெற்றார்.. ஒவ்வொருவரின் பக்கத்திலும் போய் கைகளைக் குலுக்கி எதையோ சொல்லிவிட்டு எஸ்கேப்பானார்..!


அடுத்தது டான்ஸ்..! முந்தைய நாள் ஜெயலலிதா இருந்தபோது மேடையில் ஆடியவர்களின் டிரெஸ்சென்ஸ் ரொம்பவே சென்சார் செஞ்ச மாதிரி இருந்தது.. இன்னிக்கு அது மட்டும் நஹி.. புகழ் பெற்ற தெலுங்கு பாடல்களுக்கு குத்து குத்துன்னு குத்தாட்டம் போட்டுட்டு போனாங்க..! இதுக்கு நடுவுல நம்ம மச்சானை பார்த்தீங்களா..? செந்தூரப் பூவே பாடல்களுக்கும் டான்ஸ் ஆடுனாங்க..! நம்ம பாட்டை தெலுங்குல கேக்கவும் சந்தோஷமாத்தான் இருந்தது.. ஆக மொத்தம் பாடல் வரிகள் புரியவில்லையென்றாலும், ராகம்தான் நம்மை முதலில் ஈர்க்கிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மை..! வாழ்க இசைஞானி..!


ஆந்திராவின் அமைச்சரம்மா அருணா மேடையேற தெலுங்கு திரையுலக சாதனையாளர்களுக்கு பரிசு வழங்கினார்கள்.. இதில் கே.பாலசந்தரும் விருது பெற்றார். செம கைதட்டல்.. சென்னைங்கிறதால தட்டிட்டாங்களோ..! 


அடுத்து ஜூகல்பந்தி ஆரம்பிச்சது.. வரிசையாக 11 பாடகர், பாடகிகள் தெலுங்கு பாடல்களை பாட ஆரம்பிச்சாங்க. இந்த இடத்துல தெலுங்கு ரசிகர்களைப் பத்தியும் சொல்லணும்.. ஒவ்வொரு பாட்டுக்கும் கைதட்டல்.. கூடவே சேர்ந்து பாடுறாங்க.. அத்தனை கூட்டமும் தலையை ஆட்டுது..! என்னவொரு ரசிப்புத் தன்மை.. நம்மளும்தான் இருக்கோமே..?! தமிழ்த்தாய் வாழ்த்தைகூட ஒரு பய வாயைத் தொறந்து பாட மாட்டேன்றான்..!


இந்த நேரத்துலதான் அந்த அனர்த்தம் நடந்துச்சு.. திடீர்ன்னு ஒருத்தர் மேடையேறி ஏகத்துக்கு கத்த ஆரம்பிச்சாரு.. சேம்பர் தலைவர் சி.கல்யாண் மேடையேறி அவருடன் மல்லுக் கட்டினார்.. பாடகரின் கையில் இருந்து மைக்கை வாங்கிய அந்த நபர் ஏதோ பேசப் போக.. ரொம்பச் சரியா மைக்கை ஆஃப் பண்ணிட்டாங்க.. மேடையில் இருந்த எஸ்.பி.பி.யும் தன் பங்குக்கு அவரிடம் பேச.. ம்ஹூம் முடியலை.. 


பாலகிருஷ்ணாவும், ராணாவும் பரபரப்பாக மேடையேறி வாக்குவாதம் செய்ய.. ஒரு வழியாக தரையிறக்கப்பட்டார் அவர்..! இந்தக் களேபரம் நடந்து கொண்டிருந்தபோது பக்கத்தில் எதுவுமே நடக்காததுபோல அந்த ஜூகல்பந்தியும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த்து என்பதுதான் சுவையான விஷயம்..! ஆனாலும் இந்த ஜூகல்பந்தியின் நேரம் மிக அதிகம்.. கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.. கடைசியாக எஸ்.பி.பி,யின் கம்பீர குரலில் ஒரு பாடல்.. அரங்கமே ஆனந்தக் கூத்தாடியது.. 



இது முடிய மீண்டும் அந்த நபர் மேடையேறி எதையோ பேச ஆரம்பித்தார்.. திரும்பவும் சர்ச்சைகள்.. சண்டைகள்.. இப்போது கீழேயிருந்து பெரும் கூட்டமே மேடையேறி அந்த நபரை கையைப் பிடித்திழுத்து வெளியே கொண்டு போனார்கள்..! யாரோ தெலுங்கு டைரக்டராம்.. விழாவில் மரியாதை இல்லை என்று கத்தியதாகச் சொன்னார்கள்..!


அடுத்து மீண்டும் டான்ஸ்.. இப்போது என்.டி.ராமராவ் மற்றும் கிருஷ்ணா, நாகேஸ்வரராவின் படங்கள் காட்சிகளை திரையில் காட்டிவிட்டு அதைத் தொடர்ந்து அவர்களுடைய படங்களின் பாடல்களுக்கு ஆடல் தொடர்ந்தது..! இதுக்கு நடுவுல இந்த ஆந்திர அமைச்சர் அருணாவின் பொறுமையைப் பத்தி சொல்லியாகணும்.. இது மாதிரியான டான்ஸ்களுக்கு நடுவுல 4 முறை அருணா மேடையேறி விருதுகளை பொறுமையா கொடுத்தார்.. 


கே.பாலசந்தர், கோட்டா சீனிவாசராவ், பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ராஜசேகர், அனுமந்தராவ், பிரம்மானந்தம், பரிச்சூரி பிரதர்ஸ், மாதவி,  ஜெயபிரதா, ஜெயசுதா, வாணிஸ்ரீ, ராஜஸ்ரீ, தேவிஸ்ரீபிரசாத், ராகவேந்திரராவ், டி.ராமாநாயுடு.. கொல்லப்புடி சீனிவாசராவ்.. காஞ்சனா.. குட்டி பத்மினி.. என்று பட்டியல் நீளமானது..! மாதவி விருது வாங்கியவுடனேயே கிளம்பிவிட்டார்..! மற்றவர்களும் வயதாகிவிட்டதால் அப்படியே போய்க் கொண்டேயிருக்க.. தரைத்தளம் இதற்குப் பிறகு கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட் மாதிரி இருந்தது..!


இதுக்கப்புறமும் கொஞ்சம் பேசிட்டுத்தான் போகணும்னு மினிஸ்டர் அருணாகிட்ட தெரியாம சொல்லிவிட... அடுத்த கால்மணி நேரத்துக்கு மனுஷி பொங்கிட்டுத்தான் போனாங்க. ஆனா எவன் கேட்டான்..? முன் வரிசை  பிரமுகர்களுக்கு சிற்றுண்டி வந்து கொண்டேயிருக்க.. சிலர் உட்கார்ந்து சாப்பிட.. பலரும் நின்று கொண்டே சாப்பிட்டபடியே தங்களுக்குள் பேசிக் கொண்டேயிருக்க.. யார்.. என்ன பேசுறாங்கன்னே தெரியாத அளவுக்கு இருந்தது தரைத்தளம்..!

ஒரு வழியா அந்தம்மா தன் பேச்சை முடிச்சுட்டுப் போன பின்னாடி இறந்து போன தெலுங்கு கலைஞர்களை ஒட்டு மொத்தமாக வீடியோவில் காட்டினார்கள்.. டச்சிங்காக இருந்த்து.. மீண்டும் ஜூகல்பந்தி.. மீண்டும் டான்ஸ்.. என்று தெலுங்கு மேடை ஆடிக் கொண்டிருக்க.. கீழே தரைத்தளத்தில் அவரவர் அவரவர் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தார்கள்.. ஜூகல்பந்தி நடக்கும்போது மட்டும் கூடவே சேர்ந்து பாடிக் கொண்டிருந்தார்கள்..! 


வந்திருந்தவர்களில் பாலகிருஷ்ணாவுக்கு மட்டுமே மேடையில் பேசும் வாய்ப்பு கிடைத்தது.. எடுத்த எடுப்பிலேயே “இந்தத் தமிழ்த் தண்ணியைக் குடிச்சு வளர்ந்த உடம்பு இது..” என்று தமிழிலேயே பேச.. செம அப்ளாஸ்..! அதுக்கப்புறம் வழக்கம்போல தெலுங்கில் மாடலாடிவிட்டுத்தான் போனார்.. இந்த விழாவுக்கு வந்திருக்க வேண்டிய மத்திய அமைச்சர் சிரஞ்சீவி ஏனோ வரவேயில்லை..! வெங்கடேஷ், ராஜசேகர் இருவரும் தாங்கள் பேசும் வாய்ப்புக்காக காத்திருந்தாற்போல் தெரிந்தது. ஆனால் கடைசியில் கூப்பிட மாட்டார்கள் என்பது தெரிந்தவுடன் ராஜசேகர் மனைவி ஜூவிதாவுடன் கோபத்துடன் வாக் அவுட் செய்தார்..!

பிரபலங்களை உட்கார விடாமல் செய்த இன்னொரு விஷயம்.. ரசிகர்களின் அன்புத் தொல்லை.. இந்த விழாவில் பெருமளவிற்கு போலீஸ் தொல்லை இல்லை என்பதால் ரசிகர்கள் கேலரியில் இருந்து குறுக்கு வழியில் சறுக்கிக் கொண்டு உள்ளே வந்து தங்களது அபிமான நட்சத்திரங்களிடம் புகைப்படம் எடுக்கத் துவங்க.. அவர்களைச் சமாளித்து வெளியேற்றுவதற்குள் பெரும்பாடுபட்டுவிட்டார்கள் செக்யூரிட்டிகள்.. 

இதில் ஒரு ரசிகன் மிக உரிமையோடு ராணாவின் தோளில் கை போட்டுவிட.. மனுஷன் கடுப்பாகி.. அந்த ரசிகனின் கழுத்தில் கை வைத்து தரதரவென இழுத்துக் கொண்டு போய் வெளியில் விட்டுவிட்டு வந்தார். இதனை பார்த்த பின்பு ராணாவை விட்டு விலகியது ரசிகர்கள் கூட்டம்..!

பாலையா என்கிற பாலகிருஷ்ணாவின் கோபம் தெலுங்கு திரையுலகமே தெரிந்ததுதான்..! முன் வரிசையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அவரிடம், ஒரு தெலுங்குக்கார பெண்மணி தனது பையனை அழைத்துக் கொண்டு வந்து அருகில் நிற்க வைத்து தான் மட்டும் விலகிப் போய் செல்போனில் புகைப்படம் எடுக்க.. சட்டென்று கோபமான பாலையா.. அந்தப் பையனை அலாக்காக தூக்கி அந்தப் பெண்ணின் பக்கத்தில் போய் விட்டுவிட்டு எதையோ கோபத்துடன் சொல்லிவிட்டு திரும்பிகூட பார்க்காமல் வந்து அமர.. அந்தம்மாவின் முகத்தில் அப்படியொரு அதிர்ச்சி.. சப்தமே இல்லாமல் வெளியேறினார்..!

இந்த நொச்சு தாங்காமல்தான் ஸ்ரீதேவியும் மிக விரைவில் அரங்கத்தைவிட்டு வெளியேறினார்.. ஸ்ரீதேவி-ஜெயபிரதா மோதல் பாலிவுட்டில் 1980-களில் மிகப் பிரசித்தம்.. இப்போதுவரையிலும் சுமூக நிலைமைக்கு வரவில்லை. ஜெயசுதாவின் அருகில் அமர்ந்திருந்த ஜெயபிரதாவுடன் தவிர்க்க முடியாமல் ஸ்ரீதேவி கும்பிடு போட்டு கை குலுக்கவேண்டியதாகிவிட்டது..! இது போலவே பாலிவுட்டின் ஹாட் நியூஸாக தவிர்க்க முடியாத இன்னொரு கை குலுக்கல் கடைசி நாளில் நடந்து முடிந்தது.. அது கடைசிப் பதிவில்..!

மேலும், மேலும் டான்ஸ் நிகழ்ச்சிகளே வந்து கொண்டிருக்க இப்போதே நேரம் 10.30-ஐ தாண்டிவிட்டதால் கூட்டம் பெருமளவு கலையத் துவங்க.. நானும் கிளம்பிவிட்டேன்..!

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com



கசப்புடன் முடிந்த சினிமா நூற்றாண்டு விழா-1..!

25-09-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்நாட்டில் சினிமாவும், அரசியலும் இரண்டறக் கலந்திருப்பது இந்தியாவுக்கே தெரிந்த விஷயம்.. வெறுமனே 10 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்திருக்க மாட்டார் ஆத்தா என்பது நமக்கும் தெரிந்ததுதான்.. காரணத்தோடுதான் கொடுத்திருக்கிறார்.. தான் நினைத்தது போலவே தாத்தாவை போலவே தனக்கும் திரையுலகப் பாராட்டு விழாவை தமிழகத்து மக்கள் செலவிலேயே மிக மகிழ்ச்சியாக நடத்தி முடித்து பெருமிதப்பட்டுவிட்டார்.. வருத்தப்பட்டு நிற்பது திரைக்கலைஞர்கள்தான்..! நிசமான கலை விழா என்று நினைத்து ஏமாந்திருப்பதோ நாம்தான்..!


முதல் நாள் 21-ம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு இசைக் கச்சேரி.. 4 மணிக்கு முதலமைச்சர் தலைமையில் விழா துவக்கம் என்று அழைப்பிதழில் போடப்பட்டிருந்தது..! ஏதோ சந்திர கிரகத்தில் இருக்கும் போயஸ் கார்டனில் இருக்கும் ஆத்தா, சனி கிரகத்தில் இருக்கும் நேரு ஸ்டேடியத்திற்கு வருவதை போல வழியெங்கும் போஸ்டர்கள்.. தட்டிகள்.. பாராட்டுரைகள்.. எக்கச்சக்க எழுத்துப் பிழைகளுடன் வாழ்த்துப் பாக்கள்.. இதில் ஒரு சிலர் ரோட்டின் ஓரமாகவே இசைக் கச்சேரியே நடத்திக் கொண்டிருந்தார்கள்.. 

எந்த நாளும் இல்லாத திருநாளாக இந்த முறை அழைப்பிதழ் இருந்தால்தான் டூவீலரை பார்க்கிங்கே செய்ய முடியும் என்று கூறிவிட்டார்கள்.. எப்படியாச்சும் உள்ள போயிரலாம்ன்னு நினைச்சு வண்டியோட வந்தவங்கதான் பாவம்.. நடுரோட்ல வண்டியை நிறுத்தவும் இடமில்லாமல்.. போகவும் மனசில்லாமல் தவியாய் தவித்துக் கொண்டிருந்தார்கள்..!

3 மணிக்கு விழா என்பதால் 2 மணிக்கே உள்ளே விடுவார்கள் என்று அவசரமாகப் போனால் 3 மணிக்குத்தான் உள்ளே அனுமதி என்றார்கள். அரங்கின் உள்ளே சென்றபோது எம்.எஸ்.விஸ்வநாதன் ஜம்மென்று மேடையில் சேரில் அமர்ந்திருந்தார். இன்னிசை கச்சேரி ஆரம்பிப்பதற்கான முஸ்தீபுகள் நடந்து கொண்டிருந்தன.. எல்லாரும் மைக்கை தட்டி சரி செய்து கொண்டிருந்தனர்.. என்ன நடந்ததோ தெரியலை.. சில நிமிடங்களில் எம்.எஸ்.வி.யின் காதில் எதையோ சொல்ல.. முகம் வாடிப் போனது அவருக்கு.. பிரிய மனமில்லாமல் மேடையைவிட்டு கீழேறிங்கி பி.ஆர்.ஓ.க்கள் கை காட்டிய 4-வது வரிசையில் அமர்ந்தார்.. மேடையில் இருந்த இசைக் கருவிகளும், மைக்குகளும், சேர்களும் நிமிடத்தில் காலியாக...... கச்சேரி இல்லை என்றானது..! 

மேடையின் கீழே இடது புறத்தின் முதல் வரிசையில் அமைச்சர்கள்.. இரண்டாம் வரிசையில் மாவட்டச் செயலாளர்கள்.. ஆளும் கட்சிப் பிரமுகர்கள், மூன்றாம் வரிசையில் அரசு அதிகாரிகள் என்று அமர்ந்திருக்க.. வலது பக்கம் சினிமாக்காரர்களுக்கென்று ஒதுக்கியிருந்தார்கள். அங்கேதான் ஏகப்பட்ட குளறுபடி..! 56 பேர்களுக்கு ஆத்தா விருது கொடுத்தார். விருது பெற்றவர்கள் மேடையில் இருந்து இறங்கி முதல் மூன்று வரிசைகளில் வந்து அமந்து கலை நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும் என்பதால் அதை காலியாகவே வைத்திருக்க பெரும் பிரயத்தனம் செய்தார்கள்.. ஆனாலும் அது முடியாமலேயே போனது..! 


இயக்குநர் சிகரம் கே.பி. வந்து முதல் வரிசையின் ஓரத்தில் போய் அமர.. அவருக்கு அருகே 3 இருக்கைகள் போடப்பட்டு அது காவலும் காக்கப்பட்டது.. ஜெயலலிதா வருவதற்கு சில நிமிடங்கள் முன்பாக சசிகலாவும் அவருடைய உறவினர் இருவரும் வந்து அதில் அமர்ந்தார்கள். சசிகலா உள்ளே வரும்போது ஒரு அமைச்சர்கூட எழுந்திருக்கவில்லை. யாரும் அவரை கண்டு கொள்ளவும் இல்லை.. ஆனாலும் அம்மாவைவிடவும் கம்பீர நடை.. யாரையும் சட்டைகூட செய்யவில்லை. ஒரே சீரான பார்வையுடன் சீட்டில் அமர்ந்தவர்.. பக்கத்தில் இருந்தவர் பக்கம்கூட கடைசிவரையிலும் திரும்பவில்லை..! யாருடனும் பேசவில்லை. பிற்பாடு ஜெயலலிதா கீழிறங்கி வந்து அமர்ந்தபோது அவருடைய பக்கத்தில்கூட போகவில்லை. ஜெயலலிதா வெளியேறிய பின்பும் இருந்தும் நிகழ்ச்சிகளை கண்டுகளித்துவிட்டு கமல், ரஜினி பேசிய பின்பே எழுந்து போனார்.. 

விஜய் வந்தபோது அரங்கத்தில் ஒரு சின்ன கைதட்டல்கூட இல்லை.. அதுவரையிலும் அரங்கத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவருமே அதிமுக கட்சித் தொண்டர்கள் என்பதாலோ என்னவோ தெரியவில்லை. ஆச்சரியமாகத்தான் இருந்தது..! பி.ஆர்.ஓ.க்கள் காட்டிய இடத்தில் அமைதியாக, அடக்கமாக 3-ம் வரிசையில் அமர்ந்தார் விஜய். அவருக்கு அருகில் குட்டி பத்மினி மட்டுமே போய் பேசிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் தல அஜீத் ஷாலினியுடன் உள்ளே வர அவரை மேடைக்கு இடது பக்கம் கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் தள்ளிவிட்டார் அரசு பி.ஆர்.ஓ. சினிமா பி.ஆர்.ஓ.க்கள் விஜய் பக்கம் அஜீத்தை அழைத்துச் செல்ல முயற்சித்தும், அரசு பி.ஆர்.ஓ. உறுதியுடன் இருக்க.. அஜீத் பிரச்சனை வேண்டாம் என்று அங்கேயே அமர்ந்து கொண்டார்..!

ஜெயலலிதா மேடைக்கு வருவதற்கு முன்பாகவே அவரிடத்தில் விருது பெற இருப்பவர்களை மேடைக்கு அழைத்துக் கொண்டிருந்தார்கள். பலரும் போய் அமர்ந்து கொள்ள.. இந்த நேரத்தில்தான் மகள் ஐஸ்வர்யாவோடு ரஜினி வேகமாய் உள்ளே வந்தார். 


வந்தவரை அப்படியே மேடைக்கு அழைத்தார்கள். மேடையேறினார்.. மேடையில் இருந்த ஏவி.எம்.சரவணனுக்கு வணக்கத்தைச் சொல்லிவிட்டு முன் வரிசையில் அவரருகில் அமர்ந்தார். மேடையில் முதல் வரிசையில் இருந்த இருக்கைகளில் உட்கார இருப்பவர்களின் பெயர்கள் எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது. ரஜினி அதனை கவனிக்கவில்லை.. சில நொடிகளில் ஒருவர் ரஜினியிடம் வந்து, அவருக்கான இடம் பின்னால் இருப்பதாக சொல்ல.. ஒரு நொடிகூட தாமதிக்காமல் பின்னால் சென்று கடைசி வரிசையில் கடைசி ஆளாக அமர்ந்து கொண்டார்..! நடிகர் சங்கத்தின் சார்பாக சரத்குமார், இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக விக்ரமன், தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக கேயார், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக ரோகிணி பன்னீர்செல்வம், அபிராமி ராமநாதன், பிலிம் சேம்பர் தலைவர், செயலாளர், பொருளாளர் இவர்களுடன் ஏவி.எம்.சரவணன், சிவக்குமார் ஆகியோரும் மேடையில் முதல்வருடன் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

ஜெயலலிதா மேடைக்கு வந்து அமர்ந்த பின்பும் விருந்தினர்கள் கீழே வந்து கொண்டேயிருந்தார்கள்..! சீப் செகரட்டரி பேசிக் கொண்டிருக்கும்போதுதான் கமல் உள்ளே வந்தார். மேடையேறியவரை மேடையில் இருந்த செக்யூரிட்டிகள் எங்கயாவது உட்காரலாம் என்று கை காட்ட.. முதல் வரிசையில் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் அருகில் சென்று அமர்ந்தார்.. இவருக்கு பின்பு இசைஞானி இளையராஜா வந்தார். அவரும் மேடையேறினார். பின்பு  ஸ்ரீதேவி.. மேடையின் கடைசி வரிசையில் அமர்ந்தார்..!

அரங்கத்தின் 4 இடங்களில் பெரிய ஸ்கிரீன் வைத்து நிகழ்ச்சிகளை திரையிட்டார்கள்.. ஆத்தாவை சீக்கிரமாக அனுப்பி வைக்க வேண்டும் என்ற அரசு கொள்கையின்படி தமிழ்ச் சினிமாவின் வரலாற்றை எண்ணி 4 நிமிடங்களில் முடித்து வைத்தார்கள். ரன் வேகத்தில் ஓடியது அத்தனையும்.. ஒரு ஆளுக்கு ஒரே ஒரு காட்சி மட்டுமே.. ஒரேயொரு பாடல் வரி மட்டுமே.. பராசக்தியின் “கோவிலில் குழப்பம் விளைவித்தேன்.. கோவில் கூடாது என்பதற்காக அல்ல.. அது கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாதே என்பதற்காக..!” என்ற வசனம் முழுமையாக ஒளிபரப்பானதுதான் ஆச்சரியமான ஒன்று.. 

வீடியோவில் பெருளவுக்கு எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மட்டுமே புகழ்ந்து தள்ளியிருந்தார்கள்.. வாகை சந்திரசேகர் நடிப்பில் 'ஊமை விழிகள்' பாடலின் ஒரு வரி.. 'முந்தானை முடிச்சு'வில் கே.பாக்யராஜின் ஒரு சின்ன ஷாட்.. 'புலன் விசாரணை' படத்தின் விஜயகாந்தின் சண்டை காட்சியின் சின்ன ஷாட்.. விஜய்யின் 'தலைவா' படத்தின் சண்டை காட்சியின் சிங்கிள் ஷாட்.. என்று எல்லாமே சின்ன சின்னதாகவோ கண் இமைக்கும் நேரத்தில் வந்து போனது.. கலைஞர் கருணாநிதியின் புகைப்படமும் இடையில் காண்பிக்கப்பட்டது.. ஆனால் அத்தனையும் வேஸ்ட்டு.. யாரால் இதையெல்லாம் ஞாபகம் வைத்திருக்க முடியும்..? 

தமிழ்த் திரையுலகம் சார்பாக சாதனையாளர் விருது பெற்றவர்கள் பட்டியல்தான் ரொம்ப நீளம்.. எஸ்.எஸ்.ராஜேந்திரன், கமலஹாசன், சிவக்குமார், ரஜினிகாந்த், பிரபு, விவேக், ஏவி.எம். சரவணன், பிரசாத் ஸ்டியோ அதிபர் ரமேஷ் பிரசாத், ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ், இயக்குநர்கள் மகேந்திரன், பி.வாசு, அபிராமி ராமநாதன்,  தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, திரைப்பட வெளியிட்டாளர் ஜோகர், கோவை எலைட் தியோட்டர் அதிபர், இயக்குனர் சி.வி.ராஜேந்திரன், இசைஞானி இளையராஜா, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, சரோஜாதேவி மற்றும் நடிகைகள் மனோரமா, எம்.என்.ராஜன், ராஜஸ்ரீ, சாரதா, காஞ்சனா, கிருஷ்ணகுமாரி, செளகார் ஜானகி, ஜெயசுதா, ஜெயபிரதா, மீனா, சிம்ரன், திரிஷா,  வயலினிஸ்ட் என்.ராமசுப்பிரமணியம், பின்னனி பாடகியர் - எல்.ஆர்.ஈஸ்வரி, ஜமுனா ராணி, எம்.எல்.ராஜேஷ்வரி, கவிஞர் புலமைப்பித்தன், வசனகர்த்தா ஆரூர்தாஸ், ஒளிப்பதிவாளர் என்.எஸ்.வர்மா, பட தொகுப்பாளர்கள் பாபு, விட்டல், நடன இயக்குனர்கள் சுந்தரம் (அவர் சார்பாக ராஜூசுந்தரம் விருதை பெற்றுக் கொண்டார்.) தாரா, ஒளிப்பதிவாளர் கண்ணன், ஓப்பனை கலைஞர் மாதவராவ், ஸ்டன்ட் மாதவன், ஆடை வடிவமைப்பாளர் கொண்டையா, தொழில் நுட்ப கலைஞர் சாமிகண்ணு, ஸ்டில் கேமிரா சங்கர்ராவ், டப்பிங் கலைஞர்கள் - காளை, கே.ஆர்.அனுராதா  ஆகியோரும் விருதுகளைப் பெற்றனர். 


விருது கொடுத்தபோது அதிகமாக யாருடனும் பேசாமல் சிரிப்பை மட்டுமே உதிர்த்துவிட்டு நின்றார் ஆத்தா.. எஸ்.எஸ்.ராஜேந்திரனிடமாவது நாலு வார்த்தை பேசி நல்லாயிருக்கீங்களான்னு கேப்பாங்கன்னு பார்த்தா.. ஒரு கும்பிடு.. அவ்வளவுதான்.. பாவம்.. எஸ்.எஸ்.ஆர்.. சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருப்பதைவிட இது அவரை மிகவும் கஷ்டப்படுத்தியிருக்கும்ன்னு நினைக்கிறேன்..! 



ஒரு சில எடிட்டர், ஒளிப்பதிவாளர்கள் மட்டுமே ஆத்தாவிடம் விடாப்பிடியாக பேசிவிட்டுத்தான் அகன்றார்கள். கமலுக்கும், ரஜினிக்கும் ஒரு பார்வை. அவ்வளவுதான்..! மனோரமாவும், சரோஜாதேவியும் பாசத்தோடு ஆத்தாவின் கைகளை முத்தமிட.. செளகார் ஜானகியின் கன்னத்தைத் தடவி பாசத்தோடு பேசினார் ஆத்தா..!


விருது கொடுத்த பின்பு அனைவரையும் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க அழைத்தபோது யாருக்கும் ஆர்வமில்லாமல் அப்படியே இருந்தார்கள். மறுபடியும் மைக்கில் உட்கார்ந்திருப்பவர்களெல்லாம் எழுந்து நின்று பின் வரிசைக்கு வருமாறு அழுத்தமாகச் சொல்ல இப்போதுதான் ரஜினி, கமல், இளையராஜா எல்லோருமே எழுந்து வந்து ஒட்டி நின்று வேண்டா வெறுப்பாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துத் தொலைத்தார்கள்..! 

ஏற்கெனவே தனக்கென்று ஸ்பெஷலாக வைக்கப்பட்டிருந்த மைக்கில் தனது பேருரையைத் துவக்கினார் ஆத்தா..!

"இந்த இனிய மாலைப்பொழுதில் இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தினை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, எனக்கு முகவரி தந்த திரைப்படத்துறையை சார்ந்த உங்களிடையே உரையாற்றுவதிலும், திரைப்படத்துறையில் சாதனை படைத்துள்ள 59 பேர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிப்பதிலும் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

சினிமாவிற்கு முதலில் வடிவம் கொடுத்தவர்கள் பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த லூமியர் சகோதரர்கள் என்றாலும், இந்தியாவில் முதன் முதலில் பேசாப் படத்தை தயாரித்து வெளியிட்டப் பெருமை இந்திய சினிமாவின் தந்தை என்றழைக்கப்படும் தாதா சாகிப் பால்கேயையே சாரும். இவர் தயாரித்த ‘‘ராஜா அரிஷ்சந்திரா’’ படம் 1913-ம் ஆண்டில் வெளிவந்ததன் அடிப்படையில், இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை நாம் இங்கே கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இதனைத் தொடர்ந்து, ‘‘கீசக வதம்’’ என்ற ஊமைத்திரைப்படம் நடராஜ முதலியாரால் தயாரிக்கப்பட்டு 1916-ம் ஆண்டு வெளிவந்தது. பின்னர், இந்தி மொழியில் ‘‘ஆலம் ஆரா’’ என்ற பேசும் படம் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்டது. தமிழ்மொழியில், முதல் பேசும் படமாக ‘‘காளிதாஸ்’’ திரைப்படம் 1931-ம் ஆண்டு திரையிடப்பட்டது. ஊமைப்படங்களாக ஆரம்பித்து, பேசும் படங்களாகவும், வண்ணப்படங்களாகவும் மாறி, இன்று பலர் போற்றும் அளவுக்கு, சினிமாத்துறை பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது.

முந்தைய காலங்களில், நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், ஒரு திரைப்படம் 100 நாட்கள் ஓடியது என்றாலே அது மிகப்பெரும் வெற்றி; மிகப்பெரும் சாதனை என்று கருதப்பட்டது. நூறு நாட்கள் முடிந்தபின் வெற்றி விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டு, நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் என அத்திரைப்படத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் நினைவுப்பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்படும். ஒரு சினிமா படம், நூறு நாட்கள் ஓடினாலே, மிகப்பெரும் சாதனை, என்று கருதப்படும்போது, இந்திய சினிமா இன்று நூறு ஆண்டுகள், நிறைவு செய்துள்ளது என்பது, பிரமிக்கத்தக்க, பிரம்மாண்டமான சாதனை. இது நம் அனைவரையுமே மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகிறது.
உதவிய பிரபலங்கள்

இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு உதவிய பிரபல திரைப்படத்தயாரிப்பாளர்களும், திரைப்படங்களை தயாரிக்கும் ஸ்டூடியோக்களையும் நிறுவியவர்களுமான, தாதாசாகிப் பால்கே, ஏ.வி.மெய்யப்ப செட்டியார், நாகி ரெட்டி, சக்கரபாணி, எஸ்.எஸ்.வாசன், ஸ்ரீராமுலு நாயுடு, எம்.எம்.ஏ. சின்னப்ப தேவர், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், எல்.வி.பிரசாத், பி.ஆர்.பந்தலு, வி.சாந்தாராம்; பிரபல திரைப்பட இயக்குனர்களான சத்யஜித் ரே, பிமல் ராய், வேதாந்தம் ராகவைய்யா, ஏ.பீம்சிங், கே.சங்கர், விட்டலாச்சாரியா, ப.நீலகண்டன், ஏ.சி.திருலோகச்சந்தர், கிருஷ்ணன்-பஞ்சு, யோகானந்த், பி.புல்லைய்யா, ஏ.பி.நாகராஜன்; தன்னுடைய கதைகளின் மூலம் தமிழ்நாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பேரறிஞர் அண்ணா; திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு நல்ல கருத்துகளைப் பரப்பி, மக்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கும் எம்.ஜி.ஆர்.; பிரபல திரைப்பட நடிகர்களான தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ராமா ராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், உதயகுமார், ராஜ்குமார், பிரேம்நசீர், சத்யன், கே.ஏ.தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், திலீப் குமார், ராஜ்கபூர், தேவ்ஆனந்த், பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பிரான், எஸ்.வி. சுப்பைய்யா, எஸ்.வி.ரங்கா ராவ், ரேலங்கி, கும்மிடி வெங்கடேஸ்வர ராவ்; பிரபல நாடக நடிகர்களான டி.கே.எஸ்.சகோதரர்கள், விஸ்வநாத தாஸ், எஸ்.வி.சஹஸ்ரநாமம்;

பிரபல திரைப்பட நடிகைகளான கண்ணாம்பா, பி.பானுமதி, டி.பி.மதுரம், டி.ஆர்.ராஜகுமாரி, பண்டரிபாய், நர்கிஸ், சுரைய்யா, மதுபாலா, பத்மினி, சாவித்ரி, தேவிகா, வைஜயந்தி மாலா, ஜமுனா, சரோஜாதேவி, அஞ்சலிதேவி, சவுகார்ஜானகி, கிருஷ்ணகுமாரி, சூரியகாந்தம், டி.பி.முத்துலட்சுமி; பிரபல ஒளிப்பதிவாளர்களான மாருதி ராவ், பிரசாத், மார்கஸ் பார்ட்லே, ஏ.ராமமூர்த்தி, வின்செண்ட், சுந்தரம், வர்மா; பிரபல நிழற்பட கலைஞர்களான நாகராஜ ராவ், வெங்கடா சாரி, ஸ்டில் சாரதி; பிரபல நடன இயக்குநர்களான கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை, சோஹன்லால், ஹிராலால், ஏ.கே.சோப்ரா, தங்கப்பன், சின்னி சம்பத், பி.கோபாலகிருஷ்ணன், பசுமர்த்தி கிருஷ்ணமூர்த்தி, வெம்பட்டி சத்யம்; பிரபல இசையமைப்பாளர்களான ஜி.ராமநாதன், நவுஷாத், சங்கர்-ஜெய்கிஷண், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா, ஹேமந்த்குமார், சி.ராமச்சந்திரா, மதன் மோகன், லக்ஷ்மிகாந்த் பியாரேலால், ஆதிநாராயண ராவ்; பிரபல பாடலாசிரியர்களான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன், மருதகாசி, வாலி; பிரபல பின்னணிப்பாடகர்களான டி.எம்.சவுந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், முகமது ரபி, கிஷோர் குமார், கண்டசாலா, ஏ.எம்.ராஜா; பிரபல திரைப்பட பின்னணி பாடகிகளான பி.லீலா, ஜிக்கி, லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே, கீதா தத், பி.சுசீலா, எஸ்.ஜானகி, ஜமுனா ராணி, எல்.ஆர்.ஈஸ்வரி போன்ற எண்ணற்றோரின் பங்கு மகத்தானது.

அரசியலிலும், பொது வாழ்விலும், மொழி மாறுதல்களிலும், வட்டார வேறுபாடுகளை மக்களிடையே எடுத்துச்சென்றதில், திரைப்படங்களுக்கு முக்கியப்பங்கு உண்டு என்றாலும், அரசியலில் திரைப்படத்தின் ஆதிக்கம் என்றவுடன், நம் நெஞ்சங்களில் முதலில் நிற்பவர் எம்.ஜி.ஆர்.தான். மனிதன் நாகரிகமடைந்து உருவாக்கிய படைப்புகளிலேயே உன்னதமான கலைப்படைப்பு சினிமா என்று சொன்னால் அது மிகையாகாது. சினிமா கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, இசை, இலக்கியம், ஓவியம், நாட்டியம், நாடகம் என, பல கலைகள் மக்களின் மனதை மகிழ்விக்கவும், வளப்படுத்தவும், பலப்படுத்தவும் பயன்பட்டன. இந்த கலைகளோடு, அவ்வப்போது கண்டுபிடிக்கப்படும் நவீன அறிவியல் யுக்திகள் மற்றும் கலைகளும் சினிமாவில் பயன்படுத்தப்படுகின்றன. அதனால்தான், வேறு எந்த கலை வடிவத்தையும் விட எளிதாக மக்களை ஈர்க்கும் வலிமை திரைப்படத்திற்கு இருக்கிறது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், திரைப்படம் இன்று மனித வாழ்க்கையில் இன்றியமையா இடத்தைப்பெற்றுள்ளது என்று கூறலாம். புராணக்கதைகளையும், இந்திய விடுதலைக்காக போராடியவர்களின் வரலாற்றினையும், பகுத்தறிவு சிந்தனையையும் மக்களிடையே எடுத்துச்சென்ற பெருமை சினிமா துறையையே சாரும்.  உலகின் நெடுந்தூரம் சென்று காணமுடியாத அற்புதங்களை, இருந்த இடத்திலிருந்து காண திரைப்படம் வழி வகுத்துள்ளது. பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க உறுதுணையாக திரைப்படத்துறை உள்ளது. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு, பல்வேறு துறைகளில் திரைப்படம் உதவி செய்கிறது. அரசின் நிகழ்ச்சிகளை, ஆக்கப்பணிகளை, மக்கள் நலத்திட்டங்களை, மக்களிடையே எடுத்துச்செல்ல திரைப்படங்கள் பெரிதும் உதவுகின்றன.

இப்படிப்பட்ட இன்றியமையாத்தன்மை வாய்ந்த திரைப்படத்துறையில் நானும் பணியாற்றியிருக்கிறேன் என்பதை நினைக்கும்போது, எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. திரைப்படங்கள் மக்களை நல்வழிப்படுத்துவதற்காகவே அமைய வேண்டும் என்ற எனது விருப்பத்தினை இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்கும் போதெல்லாம் திரைப்படத்துறையினருக்கு, பல்வேறு சலுகைகளை அளித்திருக்கிறேன். குறைந்த முதலீட்டில் திரைப்படம் எடுக்கும் சிறு தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அந்தத்திரைப்படத்திற்கான மானியத்தொகையையும், திரைப்படங்களின் எண்ணிக்கையையும் உயர்த்தியது; தயாரிப்பாளர்களின் அலைச்சலை குறைக்கும் வகையில், ஒற்றைச்சாளர முறையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது; சிவாஜி கணேசனின் பெயரில் ‘சிவாஜிகணேசன் விருது’ தோற்றுவிக்கப்பட்டது; திரைப்படத் தொழிலாளர்கள் பணிபுரியும்போது உயிரிழந்தாலோ, ஊனமுற்றாலோ, அவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது; பெண்களை உயர்வாக சித்தரிக்கும் கதையம்சம் கொண்ட திரைப்படத்திற்கு, அரசு விருது வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது;

‘சிறந்த திரைப்பட ஒப்பனைக்கலைஞர்’ ஒருவருக்கும், ‘சிறந்த திரைப்பட தையற் கலைஞர்’ ஒருவருக்கும் விருது வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது; பின்னணிக்குரல் கொடுப்பவர்களுக்கு விருது வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது; சிறந்த நகைச்சுவை நடிகை, சிறந்த குணசித்திர நடிகர், சிறந்த குணசித்திர நடிகை ஆகியோருக்கு புதிய விருதுகள் தோற்றுவிக்கப்பட்டது; சட்டத்திற்கு புறம்பாக திருட்டு வீடியோக்கள் எடுக்கப்படுவதை, தடுக்கும் வகையில், ‘காணொலி திருட்டு தடுப்புப்பிரிவு’ எனும் ஒரு தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது; திருட்டு வீடியோ தொழிலில் ஈடுபட்டு குற்றம் இழைப்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வழிவகை செய்தது என, அடுக்கிக்கொண்டே போகும் அளவுக்கு பல்வேறு திட்டங்கள் எனது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டன.

மேலும், சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு, கடந்த ஆண்டு, அரசு சார்பில் ரூ.50 லட்சம் மானியம் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில், 2013-2014-ம் கல்வியாண்டு முதல் ‘அனிமேஷன் அண்டு விஷுவல் எபக்ட்ஸ்’ எனும் புதிய பாடப்பிரிவு தொடங்கப்படவும்; அதற்கென 41 பணியிடங்களை தோற்றுவிக்கவும் ரூ.9 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நான் உத்தரவிட்டேன்.


அங்குள்ள ‘பிரிவியூ தியேட்டர்’ நவீன வசதிகளுடன் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகிறது. திரைப்படத்துறையினர் நலவாரியத்தில் அதிகளவில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது ஆட்சியில் திரைப்படத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது.." என்றார்.


நிகழ்ச்சி முடிந்து கீழே இறங்கி வந்தார் ஆத்தா. இந்த நேரத்தில் ரஜினியும்  என்ன ஸ்பீடு..? என்ன ஸ்பீடு..? மின்னல் வேகத்தில் பறந்து வந்து வலது பக்க முன் வரிசையில் கே.பி.யின் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்..! பின்பு கேமிராக்கள் அவரை மட்டுமே சுற்றிச் சுற்றி வர.. எப்படியோ உள்ளே வந்து விஜய்யின் பக்கத்தில் அமர்ந்திருந்த விக்ரம் அப்போதுதான் கேமிராவின் கண்களுக்கு பட்டு பெரிய ஸ்கிரினீல் தெரிந்தார்.. 


கூட்டத்தில் நசுங்கிப் போய் உட்கார்ந்திருந்த தல அஜீத் வரவேயில்லை என்றே பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர். கேமிராக்களும் அவர் பக்கம் போகாமலேயே இருந்தது..! ஆத்தாவும் கீழே வந்து அமர.. கலை நிகழ்ச்சிகள் தொடங்கின..!  முதலில் பள்ளி குழந்தைகளின் நடனத்தில் 'அம்மா, அம்மா' என்ற பாடலுடன் கூடிய டான்ஸ்.. வந்திருந்த ரத்தத்தின் ரத்தங்களின் கைதட்டல் பலமாகவே இவர்களுக்குக் கிடைத்தது..! அடுத்தது முரசு டான்ஸ்.. நாசர் இதில் ராஜா போல் ஆக்ட்டிங் கொடுக்க நடிகைகள் மாறி மாறி வந்து பல பாடல்களுக்கு ஆடிவிட்டுச் சென்றனர்.. 'மன்மத லீலையை வென்றார் உண்டோ..?' 'சின்னக்குட்டி' என்றொரு பாடல்.. 'ரோசாவே' என்றொரு பழைய பாடல்.. 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே' என்ற பாடல்.. என்று இவைகளுக்கு நாசருடன் விமலும், விஜய் சேதுபதியும் இணைந்து ஆடியிருந்தார்கள். நடிகைகள்தான் யாரென்று தெரியவில்லை..! பின்பு 'சந்திரலேகா'வின் முரசு டான்ஸுக்கு வரலட்சுமி அம்சமாக ஆடி முடித்தார்..


இது முடிந்ததும் ஆத்தா, ஆத்துக்கு கிளம்பினார்.. அரங்கத்தில் அனைவருமே அப்பாடா என்று ரிலாக்ஸானார்கள்.. முன் வரிசையில் இருந்த அடிமை மந்திரிகள் அனைவரும் அம்மாவை வழியனுப்ப வெளியே போக.. அவர்களும் சேர்ந்தே போய்விட்டார்கள் என்றெண்ணி பின் வரிசை கூட்டமெல்லாம் முந்திக் கொண்டு முன் வரிசையில் போய் உட்கார்ந்து கொண்டது.. உடனேயே விருந்தினர்களுக்கு சிற்றுண்டியும் கொடுக்கப்பட துவங்க.. இவ்வளவு நேரம் காணாமல் போயிருந்த கமல் மீண்டும் அரங்கத்தில் நுழைந்தார்.. கே.பி. எழுந்து செல்ல.. அந்த இடத்தில் கமல் அமர்ந்து கொள்ள.. பிளாஷ் வெளிச்சத்தில் தமிழ்த் திரையுலகின் இரண்டு முதல்வர்களும் நனைந்தார்கள்..!

தொகுத்து வழங்கிய ஜெயா டிவியின் அறிவிப்பாளர்களின் சொதப்பல் வர்ணனையை ரசிக்கவே முடியவில்லை..! சத்யராஜ் மேடைக்கு வந்து எம்.ஜி.ஆர். பாடல்களை பற்றி பேசிவிட்டுப் போனார்.. இந்த நேரத்தில் மந்திரிகள் அனைவரும் மீண்டும் உள்ளே நுழைய.. திடுக்கிட்ட செக்யூரிட்டிகள்.. முதல் வரிசையில் இருந்தவர்களிடம் கெஞ்சி கூத்தாடி அவர்களை பின்னாடி அனுப்பிவைத்தார்கள். புரோட்டாகால்படி அமைச்சரவையில் இரண்டாமிடம் தேனி பன்னீர்செல்வத்திற்கு. மூன்றாமிடம் நத்தம் விஸ்வநாதனுக்காம்.. இருவரும் அப்படித்தான் அடுத்தடுத்து அமர்ந்திருந்தார்கள்..!


மறுபடியும் டான்ஸ் ஆரம்பிச்சது.. 'நான் ஆணையிட்டால்'.. 'நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க'.. 'தங்கப் பதக்கத்தின் மேலே'.. 'ஆடலுடன் பாடலைக் கேட்டு'.. 'நாணமோ இன்னும் நாணமோ', 'நீங்க நல்லா இருக்கோணும்' போன்ற பாடல்களுக்கு ஓவியா, லஷ்மிராய், ரமேஷ்கண்ணா, விமல் உட்பட பலரும் ஆடினார்கள்..! அடுத்து தமிழ்ச் சினிமாவின் சாதனையாளர்கள் வரிசையில் பலரையும் வீடியோவில் காட்டும்போது ஜெயல்லிதாவையும் காட்டித் தொலைத்தார்கள்..! அதில் மிக்ஸி கிரைண்டரை இலவசமாக கொடுப்பதையும் காண்பித்தார்கள்.. என்னவொரு டெடிகேஷன் நம்ம இயக்குநர்களுக்கு..? 

சந்தானத்தின் வருகைக்கு அப்படியொரு கைதட்டல்..! இந்தப் பெயரையும், புகழையும் அடுத்தடுத்து அவர் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.. ஆர்யாவுடன் இணைந்து மேடைக்கு வந்த சந்தானம், ஒரு டிக்டாக் நடத்திவிட்டுச் சென்றார்..! 

அடுத்து ஸ்டண்ட் ஷோ.. பாடி லைட்டிங் ஸ்டைலில் செய்த இந்த ஒன்றுதான் தமிழ் கேட்டகிரியில் உருப்படியானது என்று நினைக்கிறேன்..! தொடர்ந்து நடிகர் விவேக் தியாகராஜ பாகவதராக வர, அவரை செல்முருகன் பேட்டியெடுத்தார்.. கலகல பேட்டி.. ஆனாலும் அநியாயத்திற்கு அம்மா புராணம்.. 'அம்மா உணவகம்'.. 'அம்மா தண்ணீர்' என்று இரண்டுக்கும் பெருமளவுக்கு விளம்பரம் செய்து கொடுத்திருக்கிறார் விவேக். அநேகமாக இவர் பேசியவைகள் ஜெயா டிவியில் தொடர் விளம்பரமாக வரவும் வாய்ப்புண்டு..!  அரசியல் தவிர்த்து இந்த நிகழ்ச்சியும் நன்றாகத்தான் இருந்தது..! 

தொடர்ந்து ஸ்டண்ட் சிவாவும், அவரது மனைவியும் இணைந்து ஒரு ஸ்டண்ட் ஷோவை மேடையில் செய்து காட்டினார்கள்.. எதுக்கு இத்தனை ஸ்டண்டுகள் என்று பின்புதான் தெரிந்த்து.. அடுத்து விஜய்யை மேடையேற்றினார்கள்.. அரங்கம் அதிர வரவேற்கப்பட்டார்.. ஸ்டண்ட் நடிகர்கள் பற்றி மிக உருக்கமாகவும், அம்மாவை வாழ்த்தியும், புகழ்ந்தும் பேசித் தள்ளினார்.. அடுத்து 'ஜில்லா' வருதுல்ல..!!!?

மீண்டும் டான்ஸ்.. டான்ஸ்.. டான்ஸ்.. கார்த்தியும் ஹன்ஸிகாவும் சேர்ந்து ஆடிய 'உத்தமபுத்திரன்' படத்தின் 'யாரடி நீ மோகினி' பாட்டுக்கு டான்ஸ் சூப்பர்.. அடுத்து காஜல் அகர்வாலும் வந்து ஏதோவொரு பாட்டுக்கு ஆடிவிட்டுப் போனார்.. தொடர்ந்து மேடையேறிய சூர்யாவை லிங்குசாமி பேட்டியெடுத்தார்.. சிங்கம்-2 படத்தின் அந்த பஞ்ச் டயலாக்கை பேசி காட்டினார் சூர்யா.. அதையே தெலுங்கிலும் பேசி காட்டினார்.. "கார்த்தி ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க தான் அதில் வில்லனாக நடிக்கணும். ஆனா கிளைமாக்ஸ்ல அடியெல்லாம் வாங்க மாட்டேன்.. இது என்னோட ஆசை.." என்றார் சூர்யா.. தமிழில் இதுவரையிலும் வந்த படங்களிலேயே அவருக்குப் பிடித்த 10 படங்களைப் பட்டியலிட்டார். ஸாரி.. எனக்கு மறந்து போச்சு..!

அம்பிகா, ராதா, லிஸி, சுஹாசினி, ரோகிணி, ஊர்வசி - இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து 'மண்வாசனை' படத்தின் 'பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு' பாட்டுக்கு இப்படியும், அப்படியுமாக கை, கால்களை ஆட்டி அபிநயம் பிடித்துவிட்டு டான்ஸ் ஆடிவிட்டதாக சொல்லி எஸ்கேப்பானார்கள்..!

தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் மேடையேறி கமல்ஹாசன் பற்றிய வீடியோவை அறிமுகம் செய்தார்.. கமலின் அத்தனை நவரசங்களையும் அழகாக தொகுத்திருந்தார்கள். சூப்பர்.. இது முடிந்தபோது கமல் கண் கலங்கியிருக்க.. ரஜினி கமலின் கையைப் பிடித்து பலமாகக் குலுக்கினார்..! மேடையேறிய கமல்ஹாசன், "சினிமாவில், நான் 50 வருடங்களாக இருந்தாலும் இன்னும் சின்ன குழந்தைதான். குழந்தையாக இருந்தபோது சிவாஜியின் மடியிலும், எம்.ஜி.ஆரின் தோளிலும் வளர்ந்தவன். நான் ஜெயிக்காமல் இருக்க முடியுமா? சினிமாவில் எனக்கு இரண்டு குருக்கள் இருக்கிறார்கள். ஒருவர், சிவாஜி. இன்னொருவர், கே.பாலசந்தர். இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாடும் இந்த வேளையில், என்னை வளர்த்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த தலைமுறையினர் எங்களைவிட பெரிய அளவில் வளர வேண்டும்" என்றார் கமல்ஹாசன்.

பி.வாசு மேடையேறி ரஜினி பற்றிய வீடியோவை அறிமுகம் செய்தார். கூடவே ரஜினி பற்றிய இரண்டு விஷயங்களை தெரிவித்தார். 'சந்திரமுகி' படத்தின் ஷூட்டிங் முடிந்து வேறொரு இடத்திற்கு ஷிப்டாகும்போது மைசூரில் இருந்து 7 மணி நேரம் பயணம் செய்து வேறொரு இடத்திற்கு ரஜனியை அனுப்பிவிட்டாராம். இவர் பின்னாடி வேறொரு காரில் வந்து அந்த ஊரின் ஹோட்டலில் ரூம் கேட்ட போது "அட்வான்ஸ் யாரும் கொடுக்கலை. அதுனால நாங்க ரூம் புக் செய்யலை"ன்னு ரிசப்ஷன்ல சொன்னாங்களாம்.. நமக்கு முன்னாடி வந்த ரஜினி எங்கன்னு தேடினப்போ வெளில வந்த கார்லேயே கண்ணாடியை இறக்கிவிட்டுட்டு கர்சீப்பை முகத்துல போர்த்திக்கிட்டு படுத்திருந்தாராம்.. இதைப் பார்த்து கோபப்பட்டு போய் ரிசப்ஷன்ல பி.வாசு கத்தினாராம்.. "நாங்கெள்லாம் யாருன்னு நினைச்ச.. நான் யாருன்னு தெரியுமா? பி.வாசு"ன்னு சொல்லும்போது பின்னாடி வந்து நின்ன ரஜினி, "வாசு ஸார்.. நாம யாருன்னு நாமளே சொல்லக் கூடாது. அவங்கதான் சொல்லணும்"ன்னு சொல்லி பேச்சை கட் செஞ்சாராம்.. "இப்படி நிறைய விஷயத்தை ரஜினிகிட்ட நான் கத்துக்கிட்டேன்"னாரு வாசு.. "இப்போ வேட்டையனை மேடைக்கு அழைக்கிறேன்"னு சொல்ல 'வேட்டையன்' ரன் ஸ்பீடில் அரங்கம் அதிரும் கைதட்டலோடு மேடையேறினார்..!

ரஜினி பேசும்போது, "இந்த விழாவை மிக சிறப்பாக நடத்தியதற்காக, முதல்-அமைச்சருக்கு என் நன்றி. என் திரையுலக அண்ணன் கமல்ஹாசனுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. அன்றும் சரி, இன்றும் சரி, நான் கமல் ரசிகன். இரண்டு பேரும் சேர்ந்து ஏழு, எட்டு படங்கள் நடித்தோம். கமல் இஷ்டப்பட்டு நடித்தார். நான் கஷ்டபட்டு நடிச்சேன். இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த வேளையில், சாதாரண ஆளாக இருந்த என்னை சினிமாவில் பெரிய ஆளாக்கிய கே.பாலசந்தருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வளர்த்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு நன்றி.

சமூகத்தில் இவ்வளவு பெரிய ஆளாக என்னை மதிக்கிற அனைவருக்கும் நன்றி. அது, சினிமா எனக்கு கொடுத்த பிச்சை. 38 வருஷமா சினிமால இருக்கேன். நடிப்பதை தவிர எனக்கு வேறு ஒண்ணும் தெரியாது. வேறு ரெண்டு, மூணு விஷயத்துல இறங்கி, என்னால் ஜெயிக்க முடியவில்லை. ஆனால், கமல் அப்படி அல்ல. நிறைய விஷயங்கள் தெரிந்தவர்.

சினிமாவில் வில்லனாக இருந்த என்னை காமெடியாக நடிக்க வைத்தவர், கே.பாலசந்தர். 'ஆறில் இருந்து அறுபதுவரை' படத்தில், என்னை சோகமாக நடிக்க வைத்தவர், எஸ்.பி.முத்துராமன். 'முள்ளும் மலரும்' படத்தில் இயல்பாக நடிக்க வைத்தவர், மகேந்திரன். 'பாட்ஷா' படத்தின் மூலம் என்னை எங்கேயோ கொண்டு போனவர், சுரேஷ் கிருஷ்ணா. 'முத்து', 'படையப்பா', 'கோச்சடையான்' ஆகிய படங்களில் கே.எஸ்.ரவிகுமார், ‘சந்திரமுகி’யில் பி.வாசு இவர்கள் எல்லாம் மறக்க முடியாதவர்கள். இவர்கள் எல்லோரும் என்னை உயரத்தில் தூக்கிக் கொண்டு போய் வைச்சுட்டு, போயிட்டாங்க. இப்போ நான் மட்டும் தனிமைல நிக்குறேன். 'டாப்'பில் இருப்பவர்களுக்கு இதுதான் பிரச்சினை. நான் கூட அப்பப்போ நினைச்சுக்குவேன்.. இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் சிவாஜிராவ்ன்னு..! 

சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்த தாதா சாகேப் பால்கே, சாந்தாராம், எஸ்.எஸ்.வாசன், ஏவி.மெய்யப்ப செட்டியார், நாகிரெட்டி, சக்ரபாணி இவர்கள் எல்லாம் போட்ட சாப்பாட்டை இப்போது நாம் வேறுவிதமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். சினிமா இப்போது எவ்வளவோ முன்னேறினாலும், 'சந்திரலேகா' மாதிரி ஒரு படத்தை எடுக்க முடியுமா? 'அவ்வையார்' படத்தை நான் பத்து வயதில் பார்த்தேன். அந்த பிரமிப்பு இன்னும் இருக்கிறது. எம்.ஜி.ஆர். நடித்த 'அடிமைப்பெண்', 'நாடோடி மன்னன்', சிவாஜி நடித்த 'திருவிளையாடல்', 'சரஸ்வதி சபதம்' ஆகிய படங்கள் எல்லாம் காவியங்கள். அந்த காவியங்களை படைத்து அமரர்களாகிப்போன மகான்களின் பாதங்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்துகிறேன். அதேபோன்ற இன்னொரு மகான், கமல்ஹாசன். 'அபூர்வ சகோதரர்கள்', 'தசாவதாரம்' ஆகிய படங்களை அவரை தவிர, வேறு எந்த நடிகராலும் நடிக்க முடியாது.

சினிமா, ஒரு வித்தியாசமான தொழில். இதில் தயாரிப்பாளர்கள்தான் எப்போதுமே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் தோற்று இருக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் சினிமாவில் தோற்று இருக்கிறார்கள். இது, ஒரு மாயாபஜார். அபூர்வமான உலகம்.  நான், 38 வருஷமா சினிமாவில் இருக்கேன். கமல், 55 வருஷமா சினிமாவில் இருக்காரு. நம் வாழ்நாளில் பார்க்க முடிகிற மிக திறமையான நடிகர் கமல். இப்போது வந்திருக்கிற இளம் நடிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது, பொருளாதார ரீதியாக உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள். அதுக்கப்புறம் நீங்க என்ன செய்யணும்னு நினைக்கிறீங்களோ அதைச் செய்யுங்க..." என்றார் ரஜினி..!

கமலும், ரஜினியும் பேசி முடித்துவிட்டு அப்படியே மேடையில் இருந்து கிளம்பிவிட முன் வரிசை அடிமை மந்திரிகளும் கிளம்பினார்கள்.. தல அஜீத்தும் கிளம்பிச் சென்றார்.. அவர் வெளியே போகும்போதுதான் பலரும் பார்த்து அட வந்திருக்காரா என்று ஆச்சரியப்பட்டார்கள். பின்னாலேயே ஓடிச் சென்ற சிலர் அவரை மேடைக்கு அழைக்க.. 'வேண்டாம்' என்று பட்டென்று சொல்லிவிட்டு ஷாலினியோடு நடையைக் கட்டினார்..!

இதற்குப் பின்பும் தொடர்ந்து டான்ஸ்.. டான்ஸ்.. டான்ஸ்.. எல்லாமே சினிமா பாடல்கள்.. ஒரு சில வரிகள் மட்டும்தான்.. ஒரே ஆள் 3 பாடல்களுக்கு தொடர்ச்சியாக ஆடி களைத்துப் போனார்கள்..! அடுத்து ஒரு நாடகம்.. அரதப் பழசான கதை.. செம போர்.. இதுவும் அம்மா புராணம்.. 'நேசம் புதுசு' இயக்குநர் வேல்முருகன் எழுதி இயக்கியது..! வரதட்சணை பற்றியது.. மனோபாலா, சீரியல் நடிகை கெளதமி, சிங்கம்புலி நடித்தது.. அப்போதே 11 மணியானதால் இதோடு கிளம்பிவிட்டேன்..!
புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : நக்கீரன்.காம் மற்றும் பல்வேறு இணையத்தளங்கள்