மத்தாப்பூ - சினிமா விமர்சனம்

 16-09-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இவரெல்லாம் மீண்டு வர முடியுமா என்று கோடம்பாக்கத்தில் வம்பு பேசுவதற்கென்றே அலையும் வீணர்களின் வாயில் தினந்தோறும் புரண்டு விழுந்து கொண்டிருந்த இயக்குநர் நாகராஜ் மிக நீண்ட வருட இடைவெளிக்குப் பின்பு தன்னை நிலை நிறுத்திக் கொள்ள தந்திருக்கும் படம் மத்தாப்பூ..!

ஒரு முறை நட்பில் ஏற்பட்ட வெறுப்பினால் பெற்ற அம்மாவை புறக்கணித்தும், வாழ்க்கையே சூனியமாகிவிட்ட சூழலில் வாழும் ஒரு பெண்ணுக்குள் வரும் காதலை அவள் எப்படி ஏற்கிறாள்..? அல்லது மறுக்கிறாள் என்பதுதான் கதை..! சுற்றிவளைத்து இப்படித்தான் சொல்ல முடிகிறது.. 

பல ஆண்டுகளாக பல திரைப்படங்களில் கதை, திரைக்கதைகளுக்கு டிங்கரிங் மற்றும் பங்சர் வேலைகளை செய்து காட்டியிருக்கும் நாகராஜ் அண்ணன் தனது சொந்தப் படத்தை மட்டும் அப்படியே விட்டுவிடுவாரா என்ன..? 


அண்ணன் தீட்டியிருக்கும் திரைக்கதையில் இடைவேளைக்கு பின்பு கொஞ்சம் அப்படி, இப்படி கொட்டாவிவிடும் சூழலை மட்டும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் படம் தேறிவிடும்போலத்தான் தோன்றுகிறது..!


முணுக்கென்றால் கோபப்படும் ஹீரோ..! அம்மா மீது பாசம்.. சித்தி மீது அன்பு கலந்த பயம்.. இதையெல்லாம் வைத்துக் கொண்டு பி.இ. சிவில் முடித்து சைட் இன்ஜீனியராக வேலை செய்கிறார்.. ஹீரோயிஸத்துக்காக நடு ராத்திரியில், நடுத்தெருவில் கெட்ட ரவுடிகளோடு சண்டையெல்லாம் போடுகிறார்..! போலீஸ் ஸ்டேஷன்வரைக்கும் பஞ்சாயத்து போவதால் பயந்து போன அம்மா பையனை திருச்சியில் இருந்து சென்னையில் இருக்கும் தங்கை வீட்டுக்கு பார்சல் கட்டி அனுப்புகிறார்.. 

வந்த இடத்தில் பர்ஸைத் தொலைத்து.. அது அழகான அவருக்கு மட்டும் தேவதையாகத் தெரியும் ஹீரோயினின் கையில் கிடைத்து.. பார்த்த நிமிடத்தில் லவ்வுகிறார். ஆனால் ஹீரோயின் ரியாக்சன் காட்டாத ஐஆர்டிசி வெப்சைட் போலவே தெரிய.. அவருக்குள் இருக்கும் சோகத்தைத் தெரிந்து கொண்டு மீண்டும் மீண்டும் காதலுக்கு முயல்கிறார் ஹீரோ.. காதல் என்னும் ரயிலில் சீட் கிடைத்ததா இல்லையா என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!

ஜெயன் என்னும் புதுமுகம் அசத்தியிருக்கிறார். அறிமுகம் என்றே தெரியவில்லை. அவருடைய தோற்றத்திற்கேற்ற கேரக்டர்.. சட்டென்ற கோபம்.. வெளிக்காட்டிக் கொள்ளாத கிண்டல்.. நக்கல் செய்யும் தொனி.. அம்மாவையும், சித்தியையும் மீற முடியாத பாசக்காரன்.. என்று பலதையும் இயக்குநர் சொல்லிக் கொடுத்தாரோ இல்லையோ.. நன்றாகவே செய்திருக்கிறார்..! சண்டை காட்சிகள் நிசமாகவே உண்மைபோல் எடுக்கப்பட்டிருக்கிறது.. நிறைய பயிற்சியெடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்..!

நாயகி காயத்ரி.. சோனியா அகர்வாலுக்கு தங்கச்சி போலவே இருக்கிறார். எப்போதும் அழுது வடியும் முகம். சோகத்தை அப்பிக் கொண்டு நிற்பவரை பார்த்து காதல் வந்து அல்லல்படுகிறார் ஹீரோ..! ஒவ்வொரு வசனத்தையும் இவர் பேசப் பேச.. அதுவே பெரும் சோகமாக இருக்கிறது.. இவருடைய பிளாஷ்பேக் கதையும் ஒரு சில நிமிடங்களே வருவதால் இவருடைய அலப்பறையை சட்டென்று ஜாலி டைப் என்று ஏற்க முடியவில்லை..! ஆனால் ஹீரோயினுக்கான எந்தவிதமான அடையாளமும் இல்லாததால்  நீடிப்பது இங்கே கொஞ்சம் கஷ்டம்தான்..!

ஹீரோயினின் அம்மாவாக கீதா.. ஹீரோவின் அம்மாவாக ரேணுகா.. சித்தியாக சித்தாரா.. இயக்குநர் ரொம்ப ரசனையுடையவர்தான்.. ஒத்துக்கணும்.. இந்த மூணு பேருமே இருக்குற மாதிரி ஒரு சீன் இருக்கு.. அப்படியே புதுப்புது அர்த்தங்கள்.. கல்கி பார்த்தது போல பீலிங் வந்துச்சு..! ரேணுகா ஓகே.. இந்த கீதாக்காதான் ஓவர் ஆக்ட்டிங்கை கொடுத்து கண்ணு கலங்க வைக்குறாங்க..! அதுலேயும் ஒரு சீன்ல மகள் காயத்ரி ஆம்பளை சுகம் தேடி அலையறான்னு சொல்லும்போது அச்சச்சோன்னு தோணுச்சு..! சித்தாரா.. இன்னமும் மடிப்பு குலையாத அழகில் கொஞ்சம் ஆண்ட்டியாகியிருக்கிறார். இவருடைய டேஸ்ட்டுக்கு தகுந்த ஆண் கிடைக்காததால் இதுவரையில் கல்யாணமே செய்யலையாம்.. யாருக்காச்சும் தைரியம் இருந்தா அப்ளிகேஷன் போடுங்கப்பா..!

இயக்குநர் நன்றாகத்தான் திரைக்கதையை அமைத்திருக்கிறார் என்றாலும், சிற்சில இடங்களில் டிவி சீரியலுக்கேற்றாற்போன்று வசனங்களில் வார்த்தை விளையாட்டை வைத்து ஜவ்வாக இழுத்திருக்கிறார்.. ஹீரோயினுக்கு லவ் இருக்கா இல்லையான்றதையே ஹீரோ பத்து நிமிஷமா வேற, வேற வார்த்தைகள்ல கேட்டுக்கிட்டேயிருக்காரு. படார்ன்னு ஒரு வார்த்தைல கேட்டு பஞ்சாயத்தை முடிக்கிறதைவிட்டுப்போட்டு இப்படி நீட்டிக்கிட்டே போனா எப்படி..? 

காயத்ரியின் பிளாஷ்பேக் காட்சியும், இதனாலேயே ஹீரோயின் இப்போது உம்மணாமூஞ்சியாக இருக்கிறார் என்பது சரிதான்.. ஆனால் இத்தனை மெத்தப் படித்த குடும்பத்தில் இருந்து வந்தவர் இது ஒன்றுக்காகவே இப்படியே இருப்பார் என்பதை நம்பவா முடிகிறது. அதுவும் இந்தக் காலத்தில்..! போடா ஜோட்டான்னு தூக்கிப் போட்டுட்டு போறதை விட்டுட்டு என்ற கமெண்ட் பின் வரிசையில் இருந்து வந்தது..!  

‘நேரம்’ படத்தை என் அருகில் அமர்ந்து பார்த்த இயக்குநர் நாகராஜ், இதெல்லாம் ஒரு படமான்னுட்டு இடைவேளையோடு எழுந்தோடிவிட்டார். அப்போதே எனக்கு அண்ணன் மீது ஆச்சரியம்.. இப்போது படம் பார்த்ததும் சந்தேகம் தீர்ந்துவிட்டது..! ஒரு விசு போல.. ஒரு வீ.சேகர் போல.. குடும்பத்துக்கு தேவையான கதையை கொடுக்க மட்டுமே அண்ணன் நினைக்கிறார் போலும்..!

வேலாயுதம் என்னும் புதிய இசையமைப்பாளர் இசையமைத்திருக்கிறார்.  பாடல்கள் இப்போது மறந்துபோய்விட்டது.. பின்னணி இசையை சபேஷ்-முரளி இசைத்திருக்கிறார்கள்.. போட்டுத் தாளித்துவிட்டார்கள். ஹீரோவின் அறிமுகக் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் டிரம்ஸை போட்டு அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்..! எதற்கு இந்த அலாரம் டைப் இசை என்று தெரியவில்லை..!

ஒளிப்பதிவும், இயக்கமும், படத் தொகுப்பும்தான் படத்தை காப்பாற்றி கடைசிவரையிலும் பார்க்க வைத்திருக்கிறது. சிற்சில இடங்களில் இயக்கம் பிரமாதம் என்றுகூட சொல்லலாம்.. போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள்.. சண்டை காட்சி முடியும்போது போலீஸ் சைரனை வைத்தே முடித்திருப்பது.. ஹீரோயின் பற்றி சித்தாராவுடன் ஹீரோ பேசுவதும், சமாளிப்பதுமான காட்சிகள்.. காயத்ரி தன் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்கும் காட்சிகள்.. இறுதியில் ஆண்ட்டி கிளைமாக்ஸாக இந்த அழுது வடியும் காயத்ரி எனக்கு வேணாம் என்று ஹீரோ சொல்லும் காட்சிகள்.. என்று பல இடங்களில் ரசிக்கவே முடிகிறது..

கெட்ட பையன்களை அடித்து நொறுக்கும் ஒரே காரணத்துக்காக ஹீரோவை காதலிப்பது.. காதலை மறைத்துக் கொண்டு தவிப்பது.. சொல்லாமல் விடுவது.. இறுதியில் பெண்ணாதிக்க பாணியில் சரண்டராவது என்று பழைய கதையைத்தான் புதிய திரைக்கதையில் கொடுத்திருக்கிறார் நாகராஜ் அண்ணன்..!

இவர் இந்த அளவுக்கு மீண்டு வந்திருப்பதே பெரிய விஷயம்.. அடுத்தடுத்த படங்களில் அண்ணனை வாழ்த்த நான் காத்திருக்கிறேன்..!


11 comments:

aavee said...

காயத்ரியின் கடைசி வாய்ப்பும் போச்சா? எனக்கும் "தினந்தோறும்" நாகராஜ் அவர்களின் வசனம்/திரைக்கதை பிடிக்கும்.. அவர் மேலும் படங்கள் செய்ய என் வாழ்த்துகள்.

Nondavan said...

தினந்தோறும்’ படம் அவ்வளவு இயல்பா இருக்கும்.. குறிப்பா வசனம்..

இப்ப நம்ம அண்ணாச்சி சொல்ற விதத்திலேயே படம் பற்றீ முன்னோட்டம் நமக்கு கிடைக்கிறது...
நாங்க தப்பிச்சோம்... எப்படியும் துப்பயில் வர வாய்ப்பே இல்ல :) :) :)

நீங்க சொல்வது போல,இந்த அளவுக்கு மீண்டு வந்திருப்பதே பெரிய விஷயம்.. அடுத்தடுத்த படங்களில் அண்ணனை டிரேட் மார்க் நச் வசனத்துடன் பார்க்க ஆர்வலாக உள்ளோம்...

வவ்வால் said...

அண்ணாச்சி,

//ஆனால் ஹீரோயினுக்கான எந்தவிதமான அடையாளமும் இல்லாததால் நீடிப்பது இங்கே கொஞ்சம் கஷ்டம்தான்..!//

உங்க கண்ணுக்கு கூட ஒரு அடையாளமும் தென்ப்படலையா அவ்வ்!

நாபிக்கமலம் கூடவா கண்ணுல தென்ப்படலை ?

# //சித்தாரா.. இன்னமும் மடிப்பு குலையாத அழகில் கொஞ்சம் ஆண்ட்டியாகியிருக்கிறார். //

உங்க கண்ணாடிப்பவர் ரொம்ப அதிகமோ? வாட் அ அப்செர்வேஷன் :-))

//இவருடைய டேஸ்ட்டுக்கு தகுந்த ஆண் கிடைக்காததால்//

கடிச்சு டேஸ்ட் பார்ப்பாங்களோ அவ்வ்!

//யாருக்காச்சும் தைரியம் இருந்தா அப்ளிகேஷன் போடுங்கப்பா..!//

அந்த "அஞ்சா நெஞ்சனே" நீங்க தானே ,உங்களை விட்டால் வேற யாரால முடியும் :-))

நீங்க இல்லைனா வேற யாரு?
இப்ப இல்லைனா ,வேற எப்போ?

சிங்கம் ஒன்று புறப்பட்டதேனு புறப்படுங்கள், வெற்றி நிச்சயம்!

# உங்க விமர்சனம் என்னமோ சொல்ல வந்து சொல்ல முடியாம முழுங்கிட்டு சொல்லுறாப்போல இருக்கே, மத்தாப்பு ,மொத்த "ஆப்பு" ஆகிடுச்சோ?

# "தினந்தோறும்" நாகராஜ் தானே காதல் கோட்டை தன்னோட கதைனு அப்போ சொல்லி பஞ்சாயத்து ஆனது?

உண்மைத்தமிழன் said...

[[[கோவை ஆவி said...

காயத்ரியின் கடைசி வாய்ப்பும் போச்சா? எனக்கும் "தினந்தோறும்" நாகராஜ் அவர்களின் வசனம் / திரைக்கதை பிடிக்கும்.. அவர் மேலும் படங்கள் செய்ய என் வாழ்த்துகள்.]]]

அந்தப் பெண்ணின் முகவெட்டு அப்படி.. அதற்கு யார் என்ன செய்ய முடியும்..?

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

தினந்தோறும்’ படம் அவ்வளவு இயல்பா இருக்கும்.. குறிப்பா வசனம்.. இப்ப நம்ம அண்ணாச்சி சொல்ற விதத்திலேயே படம் பற்றீ முன்னோட்டம் நமக்கு கிடைக்கிறது...
நாங்க தப்பிச்சோம்... எப்படியும் துப்பயில் வர வாய்ப்பே இல்ல :) :):)

நீங்க சொல்வது போல, இந்த அளவுக்கு மீண்டு வந்திருப்பதே பெரிய விஷயம்.. அடுத்தடுத்த படங்களில் அண்ணனை டிரேட் மார்க் நச் வசனத்துடன் பார்க்க ஆர்வலாக உள்ளோம்.]]]

ஒரு முறை பார்க்கலாம்.. இயக்கம் நன்றாகத்தான் உள்ளது..! ஆனால் திரைக்கதையில் இன்னமும் கொஞ்சம் ஈர்க்கும்படியாக வைத்திருக்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

//ஆனால் ஹீரோயினுக்கான எந்தவிதமான அடையாளமும் இல்லாததால் நீடிப்பது இங்கே கொஞ்சம் கஷ்டம்தான்..!//

உங்க கண்ணுக்குகூட ஒரு அடையாளமும் தென்ப்படலையா அவ்வ்! நாபிக் கமலம் கூடவா கண்ணுல தென்ப்படலை?]]]

அப்படியொரு சீனே இல்லை தலைவா..!

[[[//சித்தாரா.. இன்னமும் மடிப்பு குலையாத அழகில் கொஞ்சம் ஆண்ட்டியாகியிருக்கிறார். //

உங்க கண்ணாடி பவர் ரொம்ப அதிகமோ? வாட் அ அப்செர்வேஷன் :-))]]]

மைனஸ்லதான் இருக்கு.. பிளஸ்ல இல்லை..!

[[[//இவருடைய டேஸ்ட்டுக்கு தகுந்த ஆண் கிடைக்காததால்//

கடிச்சு டேஸ்ட் பார்ப்பாங்களோ அவ்வ்!

//யாருக்காச்சும் தைரியம் இருந்தா அப்ளிகேஷன் போடுங்கப்பா..!//

அந்த "அஞ்சா நெஞ்சனே" நீங்கதானே , உங்களை விட்டால் வேற யாரால முடியும் :-)) நீங்க இல்லைனா வேற யாரு? இப்ப இல்லைனா, வேற எப்போ? சிங்கம் ஒன்று புறப்பட்டதேனு புறப்படுங்கள், வெற்றி நிச்சயம்!]]]

தர்ம அடி நிச்சயம்.. கூட துணைக்கு வர்றீரா..?

[[[உங்க விமர்சனம் என்னமோ சொல்ல வந்து சொல்ல முடியாம முழுங்கிட்டு சொல்லுறா போல இருக்கே, மத்தாப்பு, மொத்த "ஆப்பு" ஆகிடுச்சோ?]]]

வெற்றிக் கோட்டை எட்டும் நிலையில் கொஞ்சம் கோட்டைவிட்டுவிட்டது..!

[[["தினந்தோறும்" நாகராஜ்தானே காதல் கோட்டை தன்னோட கதைனு அப்போ சொல்லி பஞ்சாயத்து ஆனது?]]]

அப்படியா..? எனக்குத் தெரியாது..!

Nondavan said...

நேத்து இரவு தான் ’தேசிங்குராஜா’ படம் பார்த்தேன். சிரிச்சு சிரிச்சு ஊரையே எழுப்பிட்டேன்.... :) :) :) ஊட்டம்மாகிட்ட ஏகதிட்டு... பையன் தூங்கனுமா வேண்டாமான்னு..?? இரண்டாம் பகுதி செம காமேடி. மிக்க நன்றி அண்ணே உங்க பரிந்துரைக்கு

மாதேவி said...

விமர்சனத்துக்கு நன்றி.
தப்பிவிடுவோம். :)

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

நேத்து இரவுதான் ’தேசிங்குராஜா’ படம் பார்த்தேன். சிரிச்சு சிரிச்சு ஊரையே எழுப்பிட்டேன்.... :) :) :) ஊட்டம்மாகிட்ட ஏகதிட்டு... பையன் தூங்கனுமா வேண்டாமான்னு..?? இரண்டாம் பகுதி செம காமேடி. மிக்க நன்றி அண்ணே உங்க பரிந்துரைக்கு..]]]

ஆஹா.. பிரதர்ன்னா உங்களை மாதிரீல்ல இருக்கணும்.. மிக்க நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Jegadeesh said...

[[["தினந்தோறும்" நாகராஜ்தானே காதல் கோட்டை தன்னோட கதைனு அப்போ சொல்லி பஞ்சாயத்து ஆனது?]]]

அது நாகராஜன் அண்ணன் இல்லை. அவர் காலமெல்லாம் காதல் வாழ்க பாலு.]]]

ஆஹா.. கதை இப்படிப் போவுதா..? விசாரிப்போம்..!

உண்மைத்தமிழன் said...

[[[மாதேவி said...

விமர்சனத்துக்கு நன்றி.
தப்பிவிடுவோம். :)]]]

ஓகே.. ஓகே.. வருகைக்கு நன்றி..!