புது மாப்பிள்ளையான அண்ணன் சீமான்..!

09-09-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு தலைவருக்கு கட்சியினரே.. தம்பிமார்களே.. தொண்டர்களே.. நடத்தி வைத்த திருமணம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். 

சீமான்.. இந்தப் பெயரில் அப்படியென்ன ஈர்ப்போ தெரியவில்லை.. என்றைக்கு ஈழப் பிரச்சினையை இந்த சீமான் பேசத் துவங்கினாரோ அன்றிலிருந்தே அவர் இயக்குநர் என்கிற களத்தில் இருந்து அரசியல் களத்திற்கு கட்டாயமாகவே இடம் மாற்றம் செய்யப்பட்டுவிட்டார்..!

தமிழ்த் திரையுலகம் இராமேஸ்வரத்தில் நடத்திய எதிர்ப்புப் பேரணியில் சீமான் பேசிய பேச்சை நேரலையாக தொலைக்காட்சிகளில் பார்த்த தமிழகத்து மக்களின் மனதில் இன்னொரு அரசியல் பிரமுகராக அன்றைக்கே இடம் பிடித்துவிட்டார் சீமான்..! இன்றைய இளைஞர்களை கவருகின்றவகையிலான அவருடைய பேச்சும், சுபாவமும் அநேகம் பேரை அன்பர்களாக ஆக்கி.. எண்ணிக்கையை ஆயிரத்தில் இருந்து லட்சங்களாக்கியிருக்கின்றன..!

திருமாவளவனும், சீமானும்தான் இன்றைக்கு தமிழகத்து அரசியலில் இளைஞர்களால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உள்ளது உள்ளபடியே கொண்டாடப்படுபவர்கள்..!  இவர்களது அரசியல் களம் ஒன்று போலவே இருந்தாலும், ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது என்பதால் தனித்தனி இராச்சியங்களாக இவர்கள் இருப்பதுகூட ஒருவகையில் நல்லதுதான்..!

அரசியலுக்கு வராதபோது சீமானுடன் அவருடைய வீட்டில் இருந்தவர்களெல்லாம் அவருடைய உதவி இயக்குநர்கள்தான்.. அந்த உதவி இயக்குநர்களை பார்க்க வருபவர்கள்கூட அந்த வீட்டில் தங்கிவிட்டுச் செல்வார்கள். அந்த அளவுக்கு அவரது வீடு ஒரு சத்திரம் போலத்தான் இருந்தது..! கட்சி ஆரம்பித்த பின்புதான்.. கட்சிக்கார தம்பிகளும், பிரமுகர்களும் அவரைச் சுற்றிச் சூழ வந்து கொண்டிருக்கிறார்கள்..!

அண்ணனை பல இடங்களில் பேட்டிக்காக சந்தித்திருந்தாலும் முதல்முறையாக அவரைச் சந்தித்தது சில ஆண்டுகளுக்கு முன்பாக இயக்குநர்கள் சங்கத்தில்..!  தாத்தாவுக்கு தமிழ்த் திரையுலகம் பாராட்டு விழா நடத்தியபோது அதற்கான அழைப்பிதழ் வாங்குவதற்காக சங்கத்திற்கு வந்திருந்தார்.. இவருக்கான அழைப்பிதழை அன்று காலைதான் இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி வாங்கிச் சென்றிருந்தார். இப்போது சீமான் நேரடியாக வந்துவிடவே.. ஸ்டான்லிக்கு போனை போட்டு அழைப்பிதழ் கேட்டு.. வரவழைத்து வாங்கிச் சென்றார். இந்தப் பேச்சுக்காகவே சீமானை எனக்கு பிடித்துப் போனது..! ரொம்பவே சின்னப் புள்ளை மாதிரி யார் கண்ணனிடம் கோபித்துக் கொண்டார். 10 அழைப்பிதழ்கள் கேட்டார்.. அவரது கன்னத்தைப் பிடித்து தாஜா செய்து, கொஞ்சி.. சமாளித்து 5 அழைப்பிதழ்கள் மட்டுமே கொடுத்தனுப்பினார் யார் கண்ணன்..! இந்த பாச மழைல இயக்குநர்களை மிஞ்ச முடியாதுய்யா..! 

இப்போதைய சீமான் தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரமுகராகவும், தளகர்த்தகராகவும் மாறிய பின்பும் அவருடைய வாழ்க்கை முறை மட்டுமே மாறியிருக்கிறது. ஆனால் பழகும்விதம் அப்படியேதான் இருக்கிறது..! அவருடைய உதவி இயக்குநர்கள்.. அன்பர்கள்.. கட்சிக்காரர்கள்.. உறவினர்கள்.. இத்தனை பேர் கேட்டும் திருமணத்திற்கு தலையாட்டாமல் இருந்தவர்.. மத்திய உளவுத்துறையின் உள்ளடி வேலைகளுக்கு பின்புதான் முழித்துக் கொண்டார். தன்னுடைய திருமதியாரை எங்கே, எப்போது பார்த்தார்..? அவர்கள் இருவருக்குமிடையில் காதல் எப்போது பூத்தது என்பது பற்றியெல்லாம் சீக்கிரமாக பத்திரிகைகளில் அவரே சொல்வார். இல்லாவிடில் திருமதி சீமான் சொல்வார். அப்போது தெரிந்து கொள்வோம்..  இப்போது ஓவர் டூ நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. 


தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் பகுதியில் இருந்தே பேனர்கள்.. சென்னையின் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் போர்டுகள்..! திருநெல்வேலிக்கார நாம் தமிழர் கட்சிக்காரர் ஒருத்தர் சென்னையில் பல இடங்களில் தன் பெயரில் போர்டு வைத்திருக்கிறார்..!  நேற்றைய முன் தினமே பல்வேறு ஊர்களிலிருந்து நாம் தமிழர் தம்பிமார்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பணியை ஒதுக்கிவிட்டார்கள்..


உறவினர்கள் வரவேற்புக்கு தனி டீம்.. விருந்தினரை வரவேற்க தனி டீம்.. மீடியாக்களை அழைத்துச் செல்ல ஒரு டீம்.. சொந்தக் கட்சியினரை சமாளிக்க ஒரு டீம்.. பிற கட்சித் தலைவர்களை உபசரிக்க ஒரு டீம்.. விருந்துக்கு ஒரு டீம்.. பணப்பட்டுவாடாவுக்கு ஒரு டீம்.. அனைத்து ஏற்பாடுகளுக்கும் ஒரு தனி டீம் என்று அனைத்தையும் கச்சிதமாக பார்த்து பார்த்து நடத்தியிருக்கிறார்கள் நாம் தமிழர் அமைப்பினர்..!


ஏற்பாடு செய்திருந்த அரங்கத்தின் மேடையில் ஒரு பக்கம் வள்ளுவரும் மறுபக்கம் அவருடைய பரம எதிரி பெரியாரும் இடம் பெற்றிருந்தார்கள். இன்னும் பல தலைவர்களும் அரங்கத்தின் பல பகுதிகளில் இருந்து மக்களை பார்த்தபடியேதான் இருந்தார்கள்..! ஆனால் முக்கியமாக ஒருத்தரை காணவே காணோம். அது பேரறிஞர் அண்ணா.. அது ஏன் அண்ணா மீது சீமானுக்கும், திருமாவளவனுக்கும் இப்படியொரு கோபம்..? (சமீபத்தில் திருமாகூட அவரது 50-வது பிறந்த நாள் விழாவில் அண்ணாவுக்கு மட்டும் கட் அவுட் வைக்கவில்லையே என்று அவரது அன்புத் தம்பி கருணாநிதி கோபித்துக் கொண்டாராம்..!)  அண்ணா மட்டுமா..? முத்துக்குமார், செங்கொடிகளின் புகைப்படங்கள்கூட இல்லாதது பெரும் குறைதான்..! ஆனால் மேடையில் இயக்குநர் மணிவண்ணன் மற்றும் அவரது மனைவியாரின் புகைப்படங்களை வைத்திருந்தார்கள்..!


கூட்டம் திருமண அரங்கத்தில் நெருக்கியடிக்கும் என்று எதிர்பார்த்தே வெளியில் இரண்டு பக்கமும் ஷாமியானா போட்டு டிவி வைத்து அதில் ஒளிபரப்பு செய்தார்கள். அந்த இடத்துக்கும் கூட்டம் போக மறுத்தது..! அன்பாக சொல்லிப் பார்த்தார்கள். ஒரு சிலரிடம் உரிமையோடு கண்டிப்போடு சொல்லி வெளியில் அனுப்பி வைத்தனர். ஆனாலும் நேரடி அனுபவமே பெரிது என்பதால் கூட்டம் மறுபடியும் மறுபடியும் உள்ளே வந்து நின்று கொள்ள ஒரு கட்டத்தில் கட்சித் தம்பிமார்கள் போய்த் தொலைங்க என்று விட்டுவிட்டார்கள்..!

முதலில் மேடைக்குக் கீழே இருந்த பெரியவர்களையெல்லாம் மேடைக்கு அழைத்து அமர வைத்தார்கள்.. பிரபலங்கள் பலரும் மேடையேறத் துவங்க வருபவர்களை கட்டுப்படுத்த முடியாமல் சங்கடமாகிப் போனார்கள் விழா அமைப்பாளர்கள். மணப்பெண் மேடையேறியபோது பெரும் கைதட்டல்.. மணமகனும், மணமகளும் முகமன் காட்டியபோதும் மீண்டும் ஒரு கைதட்டல். மணமகளின் குடும்பத்தினர் அனைவருமே வந்திருந்தனர். காளிமுத்துவின் இன்னொரு குடும்பத்தினரும் வந்திருந்ததாக கட்சிக்காரர் ஒருவர் கூறினார்.. 

மணவிழாவின் முதல் நிகழ்ச்சியாக இறந்து போன தமிழ்ச் சொந்தங்களுக்காக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். பின்பு நாம்தமிழர் கட்சியினர் தமிழ் வளர.. தமிழர் வாழ என்று கூறி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்..! பெரியவர் பழ.நெடுமாறன் ஒரு தங்கச் செயினை எடுத்துக் கொடுக்க அதனை மணமகள் கழுத்தில் அணிவிக்க ஒரு நிமிடத்தில் திருமணம் நடந்தேறியது..! இதன் பின்பு மாலையையும் மாற்றிக் கொண்டார்கள்..!





உடனேயே மணமக்களை வாழ்த்த ஒரு கூட்டம் மேடையேறத் துவங்க.. அதே நேரம் தலைவர்களும் வாழ்த்துரை வழங்கத் துவங்கினார்கள்..! இரண்டும் ஒன்றாகவே நடக்க சீமானே கொஞ்சம் தவித்துப் போனார். ஆனாலும் முடியவில்லை.. அப்படியே விட்டுவிட்டார்கள்..! சினிமாக்காரர்கள் கொஞ்சம்.. கட்சியினர் அதிகம் என்ற ரீதியில்தான் கூட்டம்..! கட்சியினரே நடத்துவதால் கண்டிப்பாக கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதை ஊகித்தே பல சினிமாக்காரர்கள் வாழ்த்துகளை எஸ்எம்எஸ்ஸிலேயே அனுப்பிவிட்டார்களாம்..! அண்ணன் சீமான் கொஞ்சம் ரிலாக்ஸாக மணமகனாகவே இருந்துவிட்டார்.. இடையில் சிற்சில இடங்களில் மாப்பிள்ளை மிதப்பில் இருந்ததையும், கெத்தாக மணமகளிடம் பேசுவதையும் பார்க்க முடிந்தது..! 



நடிகர்கள் சிவகுமார், சத்யராஜ், பிரபு, வாகை சந்திரசேகர், விவேக், சுந்தர்.சி, ராஜேஷ், ஜெயம் ரவி, மயில்சாமி, விக்னேஷ், மனோஜ், உதயா, ராமகிருஷ்ணன், வையாபுரி, ‘செல்’ முருகன், ‘பிளாக்’ பாண்டி, நடிகை சரண்யா, பட அதிபர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஆர்.பி.சவுத்ரி, கவிஞர் காசி ஆனந்தன், திரைப்பட இயக்குனர்கள் பாலு மகேந்திரா, பாக்யராஜ், பாலா, பி. வாசு, கே.எஸ்.ரவிக்குமார், அமீர், சேரன், ஆர்.கே.செல்வமணி, பாலாஜி சக்திவேல், எழில், பொன்வண்ணன், ராஜா, சுசி கணேஷ், ஸ்டான்லி, கவுதமன், புகழேந்தி, திரைப்பட பாடலாசிரியர்கள் கவிஞர் நா.முத்துகுமார், கவிஞர் சினேகன், கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன், திரைப்பட ‘ஸ்ட்ன்ட்’ டைரக்டர்கள் ஜாக்குவார் தங்கம், கனல் கண்ணன், பாடகி சின்னப்பொண்ணு என்று சினிமா கூட்டமும் கூடியிருந்தது..!

பாலாவின் காலில் அடிபட்டிருக்கிறது. இந்த நிலையிலும் மனிதர் நொண்டி நொண்டி நடந்து வந்திருந்தார். அதே நேரம், பேசும்போதெல்லாம் “எங்கள் அப்பா... எங்கள் அப்பா...” என்று சீமான் பாசத்துடனும், நேசத்துடனும் சொல்லிவரும் இயக்குநர் இமயம் பாரதிராஜா வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தனக்குப் பதிலாக தன் மகன் மனோஜை அனுப்பியிருந்தார் பாரதிராஜா. ஆனால் நேற்று முன்தினம் நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க இதே ஒய்.எம்.சி.ஏ.க்கு பாரதிராஜா வந்திருந்தார் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்..!

“சாப்பாடு ரெடியா இருக்கு.. சாப்பிட்டு வாங்க.. நம்ம அண்ணன் சாயந்தரம்வரைக்கும் இங்கதான் இருக்கப் போறாரு..” என்று மைக்கில் பல முறை சொல்லியும் கூட்டம் குறைந்தபாடில்லை. “பொக்கேவை வைத்துக் கொண்டு சாப்பிட போக முடியாது..” என்று ஒருவர் வந்து சத்தம் போட்டுச் சொன்ன பின்னாடி மைக்கில் அட்வைஸ் செய்வதையும் விட்டுவிட்டனர் தோழர்கள்..! 

வாழ்த்த வந்திருந்த என்னுடைய முதலாளியுடன் நானும் மேடைக்குச் சென்று அன்புப் பரிசாக கொண்டு வந்திருந்த ரெட்சன் புத்தகத்தை அண்ணன் சீமானின் கையில் கொடுத்தேன். அடையாளம் கண்டு மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். “ரைட்டு வர்றண்ணே..” என்று சொல்லிவிட்டு அண்ணியாருக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு இறங்கினேன்..!

மேடையின் ஓரத்தில் சீமானின் பெற்றோர்கள் மனதில் ஒரு பாரம் இறங்கியதை போன்ற திருப்தியுடன் அமர்ந்திருந்தனர்.. பெற்றவர்களுக்கு இதுதானே பெரிய விஷயம்.. மேடையேறிய அனைத்துத் தலைவர்களிடத்திலும் தனது தாய், தந்தையரை அறிமுகப்படுத்தி வைத்தார் சீமான்.. அந்த கணம் அந்தப் பெற்றோரின் முகத்தில் தெரிந்த பூரிப்பும், மகிழ்ச்சியும் எத்தனை கைதட்டல்கள் கொடுத்தாலும் சீமானுக்குக் கிடைக்காத பெருமிதம்..!

வைகோ, தொல்.திருமாவளவன், பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், ‘மாலை முரசு’ இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், நடிகரும், தி.மு.க. எம்.பி.யுமான ரித்திஷ், தமிழக பா.ஜனதா தேசியச் செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்திரராசன், மாநிலச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி துணைச் செயலாளர் மகேந்திரன், பா.ம.க. துணைத் தலைவர் ஏ.கே.மூர்த்தி, சமத்துவ மக்கள் கட்சி பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், துணை தலைவர் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னியரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மற்றும் சில சிறிய கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களும் வந்திருந்து வாழ்த்தினார்கள்..! தி.மு.க.வின் சார்பில் ஸ்டாலின் வருவார் என்று எதிர்பார்த்தார்கள். வந்தாரா என்று தெரியவில்லை. தமிழச்சி தங்கபாண்டியன் வந்திருந்தார். கே.கே.நகர் பகுதி தி.மு.க. செயலாளர் தனசேகரனை மேடையில் பார்த்தேன்..! 


அடுத்தது சாப்பாடுதான் என்ற எண்ணத்தோடு வெளியில் வந்தபோது நமது வலையுலகத் தோழர் கவிஞர் மதுமதியை சந்தித்தேன்..! உணவுக்கு செல்லும் வழி எழுதி அதனை செல்லும்வழி தோறும் பேனர் போல் கட்டியிருந்தார்கள். டென்னிஸ் கோர்ட்டை தாண்டி சிறிது தூரம் சென்றவுடன் பெரிய ஷாமியானா அமைத்து சாப்பாட்டு பந்தி அமோகமாக நடந்து கொண்டிருந்தது..! 


சாப்பாட்டிற்காக 300 ஆடுகளை வைகுண்டத்திற்கு நேற்றைக்கே அனுப்பிவைத்துவிட்டதாக ஒரு இணை இயக்குநர் என்னிடம் சொல்லியிருந்த்தால் நானும் இதைத்தான் எதிர்பார்த்திருந்தேன். 200 நபர்களை வேலைக்கு வைத்து பல வேலைகளை செய்து கொண்டிருந்தாலும் நாம் தமிழர் கட்சித் தம்பிமார்கள்தான் சோற்றுத் தட்டைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்..! முந்தைய தினமே சாப்பாட்டு வேலைகள் ஆரம்பித்து.. 3 ஷிப்ட்டாக நடந்து கொண்டிருந்தது.. நாங்கள் சாப்பிட்டு வெளியில் வரும்போதும் அடுத்த ஷிப்ட்டுக்காக சோறு வெந்து கொண்டிருந்தது..!


நானும் மதுமதியும், அவருடைய நண்பர்கள் இருவருமாக பந்திக்கு முந்தினோம். ஆனால் அங்கே எங்களுக்கு முன்பாக ஒரு ஊரே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது..! காத்திருந்தாள் நடக்காது என்பதால் மூடிய இலைகளுக்கு முன்பாக சீட் போட்டு பிடித்துதான் சாப்பிட்டோம்.. இதுல என்னத்த வெக்கப்படுறது..? எல்லா இடத்துலேயும் இதுதானே நடக்குது..?

சோறையே கொட்டினார்கள்.. கறிக் குழம்பு.. வேறு கூட்டு எதுவும் இல்லை. ரசம், மோர் இல்லை. ஆனால் தயிர் மட்டும் வெளியில் கொடுத்தார்கள்.. சோறு வேண்டுமளவுக்கு கிடைக்கும்.. ஆனால் கறிக் குழும்பு ஒன்றுதான் இருக்கிறது என்றவுடன் பாதி பேர் முதல் ரவுண்டிலேயே கிளம்பிவிட்டார்கள்.. எனக்கு இரண்டு சீட்டு தள்ளி உட்கார்ந்திருந்த கவிஞர் மதுமதிக்கு வித்தியாசமான அனுபவம் கிடைத்த்து..!

அவருடைய அருகில் ஒரு தமிழர் வந்து அமர்ந்திருந்தார்.. புல் பூஸ்ட்டில் இருந்தார். கறிக்குழம்பை ஊற்றியவுடன் அதில் கொஞ்சம் கறியை எடுத்து தான் கொண்டு வந்திருந்த பையில் போட்டுக் கொண்டார். மீண்டும் குழம்பு ஊற்றியவரை அழைத்து திரும்பவும் குழம்பை ஊற்றச் சொன்னார். அவரும் ஊற்ற.. அதில் இருந்த கறியை மட்டும் எடுத்து அதை பையில் போட்டுக் கொண்டார்.. மீண்டும் குழம்பு.. மீண்டும் அமுக்கல்.. அடேங்கப்பா.. இந்த விஷயத்துல தமிழனை அடிச்சுக்க ஆள் கிடையாது உலகத்துல..!!!


கை கழுவும் இடத்தில் ஒரு புதுமையைச் செய்திருந்தார்கள். இரண்டு தொட்டி நிறைய தண்ணீரை நிரப்பில் அதில் இருந்து 20 குழாய்களுக்கு கனெக்சன் கொடுத்திருந்தார்கள். வித்தியாசமான செட்டப்பில் இருந்தது.. சூப்பர்.. நிச்சயம் பாராட்ட வேண்டும்..!  கறிக்குழம்பு மட்டுமே என்பதால் தனியாக தயிரை கொடுத்து வயிற்றை கூல் செய்யச் சொன்னார்கள். அதையும் செய்தோம்..! 


சாப்பாடு தயாராகும் இடம் ஒன்றாக இருந்தும் அதனை பந்தி பிரிக்கும் இடம் மூன்றாக இருந்தது.. மூன்றுக்கும் வேறு வேறு பொறுப்பாளர்கள்.. வேலையாட்கள் என்று கச்சிதமாக பிரித்துக் கொடுத்திருந்தார்கள். இந்தக் கூத்தில் அங்கே திடீரென்று வந்து இரண்டு பெண் காவலர்கள் தங்களுக்கு தண்ணீர் பாட்டில் வேண்டும் என்றார்கள். ரெண்டுதான் கேப்பாங்கன்னு நினைச்சா.. எல்லாருக்கும் வேணும்.. ஒரு டஜன் வாங்கிட்டு வரச் சொன்னாங்க என்றார்கள். ஒரு பேச்சும் பேசாமல் 20 கேன் கொண்ட பேக்கையே தூக்கி அவர்கள் கையில் கொடுத்தார்கள் தம்பிமார்கள். அக்காமார்கள் வீர நடை போட்டு அதனை எடுத்துச் சென்றதை கீழே பாருங்கள்..!


வெளியே வரும்போது அகில உலக நக்கல் நாயகம் அண்ணன் பாமரனை சந்தித்தோம். வழக்கம்போல தனது பையனுக்கு உலக அறிவைக் காட்டுவதற்கு துணைக்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தார். சிறிது நேரம் அளவளாவினோம்.. உடன் வந்திருந்த நண்பர்களுக்கு என்னையும் மதுமதியையும் அறிமுகப்படுத்தி வைத்தார். “நல்ல பிளாக்குகளை எனக்குச் சொல்லுங்க தோழர்..” என்றார் பாமரன். “என் பிளாக்கை தவிர மத்தது எல்லாமே நல்லாயிருக்கும் தோழர்..” என்றேன்.. சிரித்துக் கொண்டார்.. உடனேயே சாப்பிட்டே தீர வேண்டும் என்று அவருடைய வயிறு சொன்னதால், எங்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்..!

மீண்டும் அரங்கம் இருந்த இடத்திற்கே வந்தோம். வழியில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சி பிரசுரங்கள்.. சீமானின் பேச்சுக்கள் அடங்கிய சிடிக்கள்.. ஈழம் சம்பந்தமான புத்தகங்கள்.. கீ செயின்கள்.. போர்டுகள்.. போஸ்டர்கள்.. பிரபாகரனின் புகைப்படங்கள் என்று திராவிடப் பாரம்பரியம் தாங்கிய அனைத்துவகை விற்பனைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.. என் கையும் வழக்கம்போல அரிக்கவே.. 3 புத்தகங்களை வாங்கிவிட்டு மேற்கொண்டும் அங்கே நின்றால் பர்ஸ் காலியாகிவிடும் என்ற எச்சரிக்கை உணர்வோடு கிளம்பினேன்..! 

அப்போதும் ஒரு ஆர்வத்தோடு நம்ம ஏ.சி. குணசீலன் என்ன செய்றாருன்னு தேடிப் பார்த்தேன். நேற்றைக்கு இருந்த ஏ.சி. வேற.. இப்ப இருக்குற ஏ.சி. வேற..! நேற்றைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் நேரடி உத்தரவில் நடக்கும் விழா. இன்றைக்கு கட்சிக்காரர்களின் விழா எதுக்கு வம்பு என்றெண்ணி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த டாடா சுமோவின் முன் சீட்டில் அமர்ந்தபடியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். 

அரங்கத்தின் உள்ளேயும் போலீஸ் இல்லை.. சாப்பாட்டு கூடத்திலும் போலீஸ் இல்லை.. டிவி இருந்த பந்தலுக்குள்ளும் போலீஸ் இல்லை. ஆனாலும் ரொம்ப சவுகரியமா அவங்களுக்கு எங்க உக்காரப் பிடிக்குதோ அங்க உக்காந்து வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தாங்க..!  சொந்த வூட்டுக் கல்யாணம் மாதிரியே வந்தவர்களும், ஏற்பாடு செஞ்சவங்களும் நாயா உழைச்சுக்கிட்டிருக்கும்போது இதுல இவுகளுக்கு என்ன வேலை..? சந்தோஷம்தான்..!

இப்போதும் அரங்கத்தில் கூட்டம் நிரம்பியிருந்தது.. பரிசு கொடுக்கக் காத்திருந்த கூட்டம் கியூவில் நின்று கொண்டிருந்தது..! ஒவ்வொருவருடனும் தனித்தனி புகைப்படம் எடுத்து அவர்களை சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்தனர் மணமக்கள்..! இந்த அண்ணனின் சந்தோஷம் இன்றுபோல் என்றும் இருக்கட்டுமே என்று மனதிற்குள் வாழ்த்திவிட்டு மதுமதியுடன் கிளம்பினேன்..!

“இப்ப எங்க போறீங்க..?” என்றேன்.. "புலவர் இராமனுசம் ஐயாவை பார்க்கப் போறேன்.." என்றார் மதுமதி. “அவர் வீடு எங்கேயிருக்கு..?” என்று கேட்ட பின்பு, “நானும் அவரை பார்க்க வர்றனே..?” என்று கூறி அவருடனேயே கிளம்பினேன்..!

அடுத்தப் பதிவு ஐயா புலவர் இராமனுசம் அவர்களுடனான சந்திப்பு பற்றியது..!

புகைப்பட உதவி : பல்வேறு இணையத்தளங்கள். அனைவருக்கும் நன்றி..!

22 comments:

ஜோதிஜி said...

மணமக்கள் வாழ்க பல்லாண்டு.

Gujaal said...

//சோறையே கொட்டினார்கள்.. கறிக் குழம்பு.. வேறு கூட்டு எதுவும் இல்லை. ரசம், மோர் இல்லை. ஆனால் தயிர் மட்டும் வெளியில் கொடுத்தார்கள்.. சோறு வேண்டுமளவுக்கு கிடைக்கும்.. ஆனால் கறிக் குழும்பு ஒன்றுதான் இருக்கிறது என்றவுடன் பாதி பேர் முதல் ரவுண்டிலேயே கிளம்பிவிட்டார்கள்.. எனக்கு இரண்டு சீட்டு தள்ளி உட்கார்ந்திருந்த கவிஞர் மதுமதிக்கு வித்தியாசமான அனுபவம் கிடைத்த்து..!
//

திருமண விருந்து: வந்திருந்த அனைவருக்கும் சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது. விருந்தில் முன்னூற்றம்பதுக்கும் மேற்பட்ட கிடா, மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் அடிக்கப்பட்டு இரத்தப்பொறியல், ஈரல், குடல், ஆட்டுக்கறிக்குழம்பு, கோழிக்கறி இவற்றுடன் சோறு, ரசம் என்று தடபுடலாக பறிமாறப்பட்டது


//அவருடைய அருகில் ஒரு தமிழர் வந்து அமர்ந்திருந்தார்.. புல் பூஸ்ட்டில் இருந்தார். கறிக்குழம்பை ஊற்றியவுடன் அதில் கொஞ்சம் கறியை எடுத்து தான் கொண்டு வந்திருந்த பையில் போட்டுக் கொண்டார். மீண்டும் குழம்பு ஊற்றியவரை அழைத்து திரும்பவும் குழம்பை ஊற்றச் சொன்னார். அவரும் ஊற்ற.. அதில் இருந்த கறியை மட்டும் எடுத்து அதை பையில் போட்டுக் கொண்டார்.. மீண்டும் குழம்பு.. மீண்டும் அமுக்கல்.. அடேங்கப்பா.. இந்த விஷயத்துல தமிழனை அடிச்சுக்க ஆள் கிடையாது உலகத்துல..!!!
//

ஓஹோ... இதான் காரணமோ?

Nondavan said...

அண்ணாச்சி, யூ ஆர் கிரேட்..

எப்படி இந்த கூட்டத்திலேயும் எல்லாருடைய பெயரையும் மறக்காமல் பார்த்து சொல்ல, எழுத முடியுது...???

சீமானுக்கு வாழ்த்துகள்

Indian said...

மணமக்களுக்கு வாழத்துகள்.

//அரசியலுக்கு வராதபோது சீமானுடன் அவருடைய வீட்டில் இருந்தவர்களெல்லாம் அவருடைய உதவி இயக்குநர்கள்தான்.. அந்த உதவி இயக்குநர்களை பார்க்க வருபவர்கள்கூட அந்த வீட்டில் தங்கிவிட்டுச் செல்வார்கள். அந்த அளவுக்கு அவரது வீடு ஒரு சத்திரம் போலத்தான் இருந்தது..!
//

இதைப் பற்றி இயக்குநர் சுகா எழுதியிருப்பதைப் பாருங்கள்.

k.rahman said...

உங்கள் திரைப்பட விமரசனங்களை விட இந்த கட்டுரை நன்றாக இருக்கிறது. புதுமண தம்பதியர்க்கு வாழ்த்துக்கள்.

dharma said...

Thirumavum, seemanum youth kalin natal an na ..... Good joke...

dharma said...

Thirumavum, seemanum youth kalin natal an na ..... Good joke...

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி திருப்பூர் said...

மணமக்கள் வாழ்க பல்லாண்டு.]]]

வாழ்த்துக்கு அண்ணன் சீமானின் சார்பில் நன்றி..!

உண்மைத்தமிழன் said...

Gujaal said...

//சோறையே கொட்டினார்கள்.. கறிக் குழம்பு.. வேறு கூட்டு எதுவும் இல்லை. ரசம், மோர் இல்லை. ஆனால் தயிர் மட்டும் வெளியில் கொடுத்தார்கள்.. சோறு வேண்டுமளவுக்கு கிடைக்கும்.. ஆனால் கறிக் குழும்பு ஒன்றுதான் இருக்கிறது என்றவுடன் பாதி பேர் முதல் ரவுண்டிலேயே கிளம்பிவிட்டார்கள்.. எனக்கு இரண்டு சீட்டு தள்ளி உட்கார்ந்திருந்த கவிஞர் மதுமதிக்கு வித்தியாசமான அனுபவம் கிடைத்த்து..!//

திருமண விருந்து: வந்திருந்த அனைவருக்கும் சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது. விருந்தில் முன்னூற்றம்பதுக்கும் மேற்பட்ட கிடா, மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் அடிக்கப்பட்டு இரத்தப் பொறியல், ஈரல், குடல், ஆட்டுக்கறிக் குழம்பு, கோழிக் கறி இவற்றுடன் சோறு, ரசம் என்று தடபுடலாக பறிமாறப்பட்டது.]]]

ஓ.. இவ்வளவா..? நமக்குத்தான் கிடைக்கல போலிருக்கு..!

உண்மைத்தமிழன் said...

Gujaal said...

//சோறையே கொட்டினார்கள்.. கறிக் குழம்பு.. வேறு கூட்டு எதுவும் இல்லை. ரசம், மோர் இல்லை. ஆனால் தயிர் மட்டும் வெளியில் கொடுத்தார்கள்.. சோறு வேண்டுமளவுக்கு கிடைக்கும்.. ஆனால் கறிக் குழும்பு ஒன்றுதான் இருக்கிறது என்றவுடன் பாதி பேர் முதல் ரவுண்டிலேயே கிளம்பிவிட்டார்கள்.. எனக்கு இரண்டு சீட்டு தள்ளி உட்கார்ந்திருந்த கவிஞர் மதுமதிக்கு வித்தியாசமான அனுபவம் கிடைத்த்து..!//

திருமண விருந்து: வந்திருந்த அனைவருக்கும் சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது. விருந்தில் முன்னூற்றம்பதுக்கும் மேற்பட்ட கிடா, மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் அடிக்கப்பட்டு இரத்தப் பொறியல், ஈரல், குடல், ஆட்டுக்கறிக் குழம்பு, கோழிக் கறி இவற்றுடன் சோறு, ரசம் என்று தடபுடலாக பறிமாறப்பட்டது.]]]

ஓ.. இவ்வளவா..? நமக்குத்தான் கிடைக்கல போலிருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

அண்ணாச்சி, யூ ஆர் கிரேட்..

எப்படி இந்த கூட்டத்திலேயும் எல்லாருடைய பெயரையும் மறக்காமல் பார்த்து சொல்ல, எழுத முடியுது...???

சீமானுக்கு வாழ்த்துகள்.]]]

உதவிய தினத்தந்திக்கு நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian said...

மணமக்களுக்கு வாழத்துகள்.

//அரசியலுக்கு வராதபோது சீமானுடன் அவருடைய வீட்டில் இருந்தவர்களெல்லாம் அவருடைய உதவி இயக்குநர்கள்தான்.. அந்த உதவி இயக்குநர்களை பார்க்க வருபவர்கள்கூட அந்த வீட்டில் தங்கிவிட்டுச் செல்வார்கள். அந்த அளவுக்கு அவரது வீடு ஒரு சத்திரம் போலத்தான் இருந்தது..!//

இதைப் பற்றி இயக்குநர் சுகா எழுதியிருப்பதைப் பாருங்கள்.]]]

உண்மைதான்.. பாவம் அந்த உதவி இயக்குநர்கள்.. இனிமேல்தான் கஷ்டமே..?!

உண்மைத்தமிழன் said...

[[[Indian said...

மணமக்களுக்கு வாழத்துகள்.

//அரசியலுக்கு வராதபோது சீமானுடன் அவருடைய வீட்டில் இருந்தவர்களெல்லாம் அவருடைய உதவி இயக்குநர்கள்தான்.. அந்த உதவி இயக்குநர்களை பார்க்க வருபவர்கள்கூட அந்த வீட்டில் தங்கிவிட்டுச் செல்வார்கள். அந்த அளவுக்கு அவரது வீடு ஒரு சத்திரம் போலத்தான் இருந்தது..!//

இதைப் பற்றி இயக்குநர் சுகா எழுதியிருப்பதைப் பாருங்கள்.]]]

உண்மைதான்.. பாவம் அந்த உதவி இயக்குநர்கள்.. இனிமேல்தான் கஷ்டமே..?!

உண்மைத்தமிழன் said...

[[[k.rahman said...

உங்கள் திரைப்பட விமரசனங்களைவிட இந்த கட்டுரை நன்றாக இருக்கிறது. புதுமண தம்பதியர்க்கு வாழ்த்துக்கள்.]]]

நன்றி ரஹ்மான்..!

உண்மைத்தமிழன் said...

[[[dharma said...

Thirumavum, seemanum youth kalin natal an na ..... Good joke...]]]

விடுங்க.. கல்யாணமாகலைன்னா எல்லாருமே யூத்துதான்..!

வவ்வால் said...

அண்ணாச்சி,

ஓ நீர் சீமான் தொண்டரா, அது தெரியாமல் முன்னர் சொல்லிட்டேன்,மாப்பு ஷாமியொஒவ்.

செபாஸ்டியன் சீமான் அவர்களுக்கு மண நாள் வாழ்த்துக்கள்.

viyasan said...

ஒருவன் தமிழ், தமிழர் என்று பேசினால் அவனை அவனது கல்யாண நாளிலும் திட்டுகிறவர்கள் தான் தமிழ்நாட்டில் உள்ளார்கள் என்று நினைத்தேன். இப்படி வாழ்த்துகிற நல்ல மனம் கொண்டவர்களும் இருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, ஓ நீர் சீமான் தொண்டரா, அது தெரியாமல் முன்னர் சொல்லிட்டேன், மாப்பு ஷாமியொஒவ்.
செபாஸ்டியன் சீமான் அவர்களுக்கு மண நாள் வாழ்த்துக்கள்.]]]

தொண்டரில்லை.. நண்பன்..! ஏன் இருக்கக் கூடாதா..?

உண்மைத்தமிழன் said...

[[[viyasan said...

ஒருவன் தமிழ், தமிழர் என்று பேசினால் அவனை அவனது கல்யாண நாளிலும் திட்டுகிறவர்கள்தான் தமிழ்நாட்டில் உள்ளார்கள் என்று நினைத்தேன். இப்படி வாழ்த்துகிற நல்ல மனம் கொண்டவர்களும் இருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.]]]

நமக்கு யார் மீதும் பொறாமை இல்லை தோழர்..! எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது..

வருண் said...

***சோறையே கொட்டினார்கள்.. கறிக் குழம்பு.. வேறு கூட்டு எதுவும் இல்லை. ரசம், மோர் இல்லை. ஆனால் தயிர் மட்டும் வெளியில் கொடுத்தார்கள்..***

கறிகாய் எதுவும் கெடையாது?!!!

அதையாவது மன்னிசுடலாம்..ரசம், மோர் இல்லாமல் என்ன கல்யாணச் சாப்பாடு?! என்னவோ போங்கப்பா நீங்களும் உங்க அண்ணனும்!

வருண் said...

***ஒருவன் தமிழ், தமிழர் என்று பேசினால் அவனை அவனது கல்யாண நாளிலும் திட்டுகிறவர்கள் தான் தமிழ்நாட்டில் உள்ளார்கள் என்று நினைத்தேன். இப்படி வாழ்த்துகிற நல்ல மனம் கொண்டவர்களும் இருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.***

குருடன் வியாசன், தடவித் தடவி "யானை" ஆராச்சி செய்றது, கல்யாணம் நடக்கிற வீடு, கருமாதி நடக்கிற வீடு எல்லா வீட்டிலேயும் ஒரே மாதிரித்தான் இருக்கு!

வருண் said...

ஆமா, இது காதல் கல்யாணமா? இல்லைனா பெரியவங்க பார்த்து (சாதி, சாதகம் எல்லாம் பார்த்து) செஞ்சு வச்ச கல்யாணமா?!