3-வது குற்றப் பத்திரிகையில் ஜெகத் கஸ்பரும் சிக்குகிறாரா...?

12-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய கனிமொழியைத் தொடர்ந்து, அவருடைய நண்பர் ஜெகத் கஸ்பரும் அடுத்துத் தாக்கலாக இருக்கும் குற்றப் பத்திரிகையில் சிக்குவார் எனத் தெரிகிறது. அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து, கோடிக்கணக்கில் நன்கொடை வாங்கிய கஸ்பரின் 'தமிழ் மைய' கணக்குகள் அம்பலத்துக்கு வரத் துவங்கி உள்ளன!

அலைக்கற்றை ஊழலில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், கடந்த டிசம்பர் 15-ம் தேதி, ஜெகத் கஸ்பர் நடத்தும் 'தமிழ் மையம்’ அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. மீடியாக்களில் முகம் வந்துவிடுமோ என, ரெய்டுக்குப் பிறகும் இருட்டு அறையிலேயே உட்கார்ந்திருந்த கஸ்பர், நீண்ட நேரத்துக்குப் பின் வெளியே வந்து, பத்திரிகையாளர்களைத் தவிர்க்க முடியாமல் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு ஓடினார்.

மறுநாள் செய்தியாளர்களைச் சந்தித்த கஸ்பர், ''அலைக்கற்றை ஊழலில் தமிழ் மையம் மற்றும் என் மீது சந்தேகங்களை எழுப்புவது அபாண்டமானது. அரசியல் ஆளுமைகளோடு இணைந்து செயல்படும் ஒரே காரணத்துக்காக சந்தேகப்படுவது அநீதியானது!'' என்று சீற்றம் காட்டினார். மேலும், ''நிரந்தரக் குழப்பவாதிகளான சோ.ராமசாமி, சுப்பிரமணியன் சுவாமி ஆகிய இருவரும், இந்த சி.பி.ஐ. சோதனையைப் பயன்படுத்தி, தமிழ் மையம் மூலமாக அலைக்கற்றை ஊழல் பணம் விடுதலைப் புலிகளுக்குச் சென்று இருக்கலாம் என்பது போலப் பேசி வருவது விஷமத்தனமானது. அவர்களின் பேச்சு அவதூறு பரப்பும் நோக்கம் கொண்டது. அவர்களை சட்டரீதியாக எதிர்கொள்வோம்...'' என்று அறிவிக்கவும் செய்தார் ஜெகத் கஸ்பர்.

தமிழ் மையத்துக்கு நிதி அளித்தவர்களின் பட்டியல் குறித்துக் கேட்டபோது, ''கணக்குகள் எல்லாம் முறையானவை. விவரமாகப் பார்க்க வேண்டு​மானால், இன்னொரு நாள் எங்கள் அலுவலகத்துக்கு வந்து பார்க்கலாம்...'' எனக் கூறியவர், நன்கொடை கொடுத்தவர்களைப் பற்றி மட்டும் கடைசிவரை வாய் திறக்கவில்லை.

'அவதூறு’களை சட்டப்படி எதிர்கொண்டா​ரோ இல்லையோ... சட்டம் அவரை எதிர்கொள்வதற்கான முகாந்திரங்கள் தெரி​கின்றன. தமிழ் மையத்துக்கு அள்ளிக் கொடுத்த நிறுவனங்களின் விவரம் இப்போது நீதிமன்றப் படியேறி உள்ளது.

'முறைகேடாக அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், தமிழ் மையத்துக்கு நன்கொடை கொடுத்துள்ளன. அது பற்றி சி.பி.ஐ. விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்’ என, பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்து, அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளார், 'ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றம் இன்று சாட்டை சுழற்றுவதற்கு முக்கியக் காரணமான இந்த பிரசாந்த் பூஷண், 

'அலைக்கற்றை ஊழலில் ஆ.ராசாவுடன் சேர்ந்து கூட்டுச் சதி செய்ததாக, கனிமொழி மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்த நன்கொடை விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அலைக்கற்றை ஊழலுடன் தொடர்பு உடையதாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்’ என்கிறார் பூஷன்.

2007-ம் ஆண்டு முதல், கோடிகளில் செலவிடப்படும் சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு, தமிழக அரசின் சுற்றுலாத் துறைதான் பெரும்பாலான உதவிகளைச் செய்கிறது. இந்த நிலையில், 2008-ம் ஆண்டு ஜனவரியில் 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், முறைகேடாக ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களும், தமிழக அரசின் ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்களும், தமிழ் மையத்துக்கு லட்சக்கணக்கில் நன்கொடை கொடுத்து இருக்கின்றன.


2-ஜி ஒதுக்கீடு செய்யப்பட்ட அதே ஜனவரி மாதத்தில், 5 மற்றும் 7-ம் தேதிகளில் யுனிடெக் நிறுவனம் 50 லட்சம், டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் 25 லட்சம், ஷ்யாம் டெலிகாம் 10 லட்சம், ரிலையன்ஸ் கேபிட்டல் 25 லட்சம் எனத் தமிழ் மையத்துக்கு வாரி வழங்கி உள்ளன.
 
'அலைக்கற்றை ஊழலில் கூட்டுச் சதியாளராக நிற்கும் கனிமொழி, தன் அதிகாரத்தையும் செல்வாக்கையும் தவறாகப் பயன்படுத்தி இந்த நன்கொடையைப் பெற்றுள்ளார். ஊழல் பணத்தை நன்கொடையாகப் பெற்ற காரணத்தால், தமிழ் மையமானது 2-ஜி வழக்கில் சேர்க்கப்படுவது தவிர்க்க முடியாதது!’ என்கிறார்கள் ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்கள். தமிழ் மையத்தின் நிர்வாக அறங்காவலர் என்ற முறையில், பாதிரியார் ஜெகத் கஸ்பர் உட்பட சிலர் மீது, விரைவில் (மூன்றாவது) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்கிறது சி.பி.ஐ. வட்டாரம்!

அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த இந்தியா புல்ஸ் நிறுவனம், 31.7.2007 அன்று தமிழ் மையத்துக்கு 50 லட்சம் பணம் கொடுத்து உள்ளது. ஆனால், அந்த நிறுவனத்துக்கு ஒதுக்கீடு கிடைக்கவில்லை.

இது தவிர, அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா 2 லட்சம், நல்லி குப்புசாமி 4.94 லட்சம், பண்ணாரி அம்மன் சுகர்ஸ் 5 லட்சம்(தமிழக அரசின் மது சப்ளையர்ஸ்), சாதிக் பாட்சாவின் கிரீன் ஹவுஸ் லிமிடெட் 5 லட்சம், மெட்ராஸ் சிமென்ட்ஸ் 2.5 லட்சம், ராம்கோ சிமென்ட்ஸ் 7.5 லட்சம் கொடுத்து உள்ளார்கள்.

இந்த நிறுவனங்களைத் தவிர, தமிழக அரசில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம், அரசு ஊழியர்கள் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்தி வரும் ஈ.டி.ஏ. ஸ்டார் நிறுவனம் 7.1.2008 அன்று, தமிழ் மையத்துக்கு 1 கோடி கொடுத்து உள்ளது. 

ஈ.டி.ஏ. ஸ்டார் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு சுமார் 750 கோடியை தமிழக அரசு பிரீமியத் தொகையாக செலுத்துகிறது. இந்த நிலையில்தான், சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு ஒரு கோடி நன்கொடை வழங்கப்பட்டு உள்ளது என்பதால், இதுவும் ஊழல்தான் என்றும் தனிப் பிரச்னை கிளம்பி இருக்கிறது!

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஜனவரி 2008-ல், நடந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு,  தொலைத் தொடர்புத் துறையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இவ்வளவு பெரிய தொகைகளை வழங்கியிருப்பதுபெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிறுவனங்கள் மட்டுமன்றி, தமிழக அரசுக்கு இலவச சைக்கிள் கொள்முதலில் பங்கெடுத்துள்ள சைக்கிள் தயாரிக்கும் ஒரு நிறுவனம், தமிழக அரசுக்கு சத்து மாவு  வழங்கும் நிறுவனங்களும் சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு நன்கொடை வழங்கியுள்ளன.

கலைஞர் கருணாநிதி ட்ரஸ்ட் என்ற பெயரிலும் 25 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.க்காக வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க உதவி செய்ததாகக்  கூறப்படும் ஒரு சிமெண்ட் நிறுவனமும் ஒரு பெரும் தொகையை வழங்கியுள்ளது.

டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்துக்கும், தி.மு.க.வுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பை இந்த ஆவணம் அம்பலப்படுத்துகிறது’’ என்று பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணங்கள் அத்தனையும், டிசம்பர் மாதத்தில் தமிழ் மையம் உள்ளிட்ட இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியபோதே கிடைத்திருந்தாலும், இது தொடர்பாக,  இன்றுவரை சி.பி.ஐ. விசாரணை நடத்தாமல் இருப்பதாகவும், அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மையம் ட்ரஸ்டில், கனிமொழியும் ஒரு இயக்குநராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது. கனிமொழி முன்னின்று, சென்னை சங்கமம்  நிகழ்ச்சியை நடத்தி வருவதால் அந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் பெற்றது.

இந்த ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சி தமிழ் மையத்தில் சி.பி.ஐ. சோதனைகள் நடத்திய பிறகு நடைபெற்றதால், தமிழக அரசு, சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு  எவ்வித நன்கொடையும் வழங்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கு விசாரணையின் போது, ‘தமிழக அரசு சார்பாக எந்த நிதியும், தமிழ் மையத்திற்கு கொடுக்கப்படாது’ என்று உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து, மனுவை  தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நடந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சியை முதல்வர் கருணாநிதியே தொடங்கி வைத்து,  கனிமொழிக்கு ஆதரவை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், அதற்கு முந்தைய சங்கமங்களில் இத்தனை பெரிய நன்கொடைத் தொகையைக் கொடுக்காமல், தமிழக நாட்டுப்புறக் கலைகளை வளர்ப்பதில், வட இந்தியாவைச் சேர்ந்த தொலைத் தொடர்பு  நிறுவனங்கள் இத்தனை ஆர்வத்தைக் காட்டியிருப்பது இயல்பான விஷயம் அல்ல.

லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்படி, கனிமொழி முன்னின்று நடத்தும் சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு சட்ட விரோதமாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், கொடுத்திருக்கும் பெரிய நன்கொடையை லஞ்சமாகவே சி.பி.ஐ. கருதினால், கனிமொழி மீது மேலும் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

கலைஞர் டி.வி. மற்றும் தமிழ் மையம் ஆகிய இரண்டிலும், கனிமொழி முக்கியப் பங்கு வகித்திருப்பதையும், இரண்டு நிறுவனங்களுமே, தொலைத் தொடர்பு நிறுவனங்களாக இருப்பதும், பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டிருப்பதையும், விளக்குவது கனிமொழிக்கு அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வருமான வரித் துறையின் விசாரணை அறிக்கையைப் பார்வையிட்ட உச்ச நீதிமன்றம், அந்த விசாரணை மந்த கதியில் நடைபெற்றுள்ளதாகக்  கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், வியாழனன்று தாக்கல் செய்துள்ள இந்த மனுவுடன் சேர்ந்து இரண்டு முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்கிறார் பிரசாந்த் பூஷண். இதில், ஒரு ஆவணம், சஹாரா நிறுவனம் தொடர்பானது.

ஷரத் சவுத்ரி என்ற அமலாக்கப் பிரிவு உதவி இயக்குநர், அவரது உயர் அதிகாரிக்கு அக்டோபர் 2010-ல் ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில், ‘‘உபேந்திர ராய்  என்பவர் தன்னை சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார். அவரிடம் முக்கிய தகவல்கள் இருக்கும் என்று நம்பி அவரை சந்தித்தேன்.  என்னை அவர் எனது அலுவலகத்தில் சந்தித்தபோது, சஹாரா டி.வி.யின் செய்தி இயக்குநர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்  கொண்டார்.

‘டாடா’ குழுமத்திற்கு தரகராக இருக்கும் நீரா ராடியாவோடு தனக்கு 12 வருடங்கள் பழக்கம் என்றும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அவருக்கு உதவி செய்யுமாறும், அதற்கு  பிரதிபலனாக 2 கோடிவரை லஞ்சமாகக் கொடுக்கப்படும்’’ என்று தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.  இந்தத் தகவலை ஷரத் சவுத்ரி தனது உயர் அதிகாரிகளுக்குத்  தெரியப்படுத்தியதும், அத்தகவலை சி.பி.ஐ.க்கு அனுப்பி வைத்தது அமலாக்கப் பிரிவு.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புதிய மனுவில் இதைக் குறிப்பிட்ட பிரசாந்த் பூஷண்,  இத்தகவல் மீது கடந்த 6 மாதங்களாக எவ்விதமான விசாரணையும்  நடைபெறவில்லை என்று தனது கவலையைத் தெரிவித்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், சஹாரா குழுமத்தின் இயக்குநர், உபேந்திரா ராய்க்கு, ஸ்பெக்ட்ரம் விசாரணையில் தலையிட முயன்றதாக  நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.  இந்த சஹாரா நிறுவனம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு, 150 கோடி  வழங்கியுள்ளதால், இந்த விவகாரம் முக்கியத்துவம் பெறுகிறது.

முக்கிய நபர்கள் பாதுகாக்கப்படுவதாக பிரசாந்த் பூஷண் கவலை தெரிவித்ததற்கு, “கவலைப்படாதீர்கள்.  யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய அதிகாரம், பதவி படைத் தவர்களானாலும், அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்’’ என்று உத்தரவாதம் அளித்தது உச்ச நீதிமன்றம்.

விசாரணையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானி, டாடா நிறுவனத்தின் ரத்தன் டாடா, எஸ்ஸார் குழுமத்தின் சசிகாந்த் ரூயா ஆகியோர் பாதுகாக்கப்படுவதாக பிரசாந்த் பூஷண் தெரிவித்த கருத்துக்கு, ‘‘இந்நிறுவனங்கள் தொடர்பான புலனாய்வு இன்னும் முடியவில்லை’’ என்று தெரிவித்துள்ளார் சி.பி.ஐ. தரப்பில்  ஆஜரான பிரபல வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால். இவர், சி.பி.ஐ. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் வேணுகோபால், டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலையாகக் காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் பணம் தமிழ் மையம் மூலம் ‘வெள்ளை’யாக்கப்பட்டதாகக்  கூறப்படுகிறது. இதன் பிறகு, தமிழ் மையம் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் கையில் எடுப்பதற்கு முன், முந்திக் கொள்ள முடிவு செய்திருக்கிறதாம் சி.பி.ஐ.

உதவிக்கு நன்றி : ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், பல்வேறு பத்திரிகைகள், இணையத்தளங்கள்

16 comments:

PARAYAN said...

AVVVVVVVV. Will know Tomorrow, If we care!

ஜோதிஜி said...

நாளை ஆட்சி மாறினால் நான் உங்களைத் தான் நினைத்துக் கொள்வேன். கடுமையான களப்பணி(?). முடிவு தெரிய இன்னும் 10 மணி நேரம் தான் இருக்கு.

Unknown said...

அண்ணே இன்னும் 7 மணி நேரம் தான் இருக்கு கனிமொழிக்கு கனியா இல்லே களியானு உறுதி படுத்திக்
கொள்ள!

கொஞ்சம் பொறுங்க

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...

நாளை ஆட்சி மாறினால் நான் உங்களைத்தான் நினைத்துக் கொள்வேன். கடுமையான களப்பணி(?). முடிவு தெரிய இன்னும் 10 மணி நேரம்தான் இருக்கு.]]]

நன்றி ஜோதிஜி..!

உண்மைத்தமிழன் said...

[[[PARAYAN said...

AVVVVVVVV. Will know Tomorrow, If we care!]]]

பார்க்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Karikal@ன் - கரிகாலன் said...

அண்ணே இன்னும் 7 மணி நேரம்தான் இருக்கு கனிமொழிக்கு கனியா இல்லே களியானு உறுதிபடுத்திக் கொள்ள!

கொஞ்சம் பொறுங்க]]]

சரி.. பொறுத்திருக்கிறேன்..!

Arvinth said...

கொலை பண்றாங்க....கோவணத்த உருவுறாங்க...உடன் பிறப்பே....மூத்த திம்மி கோவணம் காத்துல பறக்குதே.......2009 parilament தேர்தலக்கு ராஜாதி ராஜான்னு பதிவு போட்டியே....இப்போ எனோட கோவணம் போச்சே....இப்போ கூஜாதி கூஜா ஆகி போய்ட்டனே....கொலை பண்றாங்க....கோவணத்த உருவுறாங்க......

உண்மைத்தமிழன் said...

[[[Arvinth said...

கொலை பண்றாங்க. கோவணத்த உருவுறாங்க. உடன் பிறப்பே. மூத்த திம்மி கோவணம் காத்துல பறக்குதே. 2009 parilament தேர்தலக்கு ராஜாதி ராஜான்னு பதிவு போட்டியே. இப்போ என்னோட கோவணம் போச்சே. இப்போ கூஜாதி கூஜா ஆகி போய்ட்டனே. கொலை பண்றாங்க. கோவணத்த உருவுறாங்க.]]]

பயப்படாதீங்க. இந்தத் தடவை அந்தக் கொடுமை நடக்காதுன்னு நினைக்கிறேன்..!

கிருஷ்ண மூர்த்தி S said...

//பயப்படாதீங்க. இந்தத் தடவை அந்தக் கொடுமை நடக்காதுன்னு நினைக்கிறேன்..!//

அதாகப்பட்டது, இந்தத் தடவை அம்மாவுக்குச் சான்சே கொடுக்காமல்,மனைவி, துணைவி,மருமகன் வாரிசுகளே அந்த வேலையை செய்து விடுவார்கள் என்று சொல்ல வருகிறீர்களா!?

:-)))))))

ராஜரத்தினம் said...

ஜெயலலிதா தன் அரசியல் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருக்கிறார் என்று நீங்கள் சொன்ன(உளறிய) பிறகுதான் இங்கு வருவதை குறைத்தேன், தவிர்த்தேன். பரவாயில்லை இதே போன்றே அவரை நெகடிவ் ஆகவே சொல்லுங்கள். அப்படியே உல்டாகவே நடக்கட்டும்.

ராஜ நடராஜன் said...

அண்ணே!அடுத்த ஆட்டத்தை எப்ப நாம துவங்கலாம்:)

ராஜ நடராஜன் said...

//'அலைக்கற்றை ஊழலில் ஆ.ராசாவுடன் சேர்ந்து கூட்டுச் சதி செய்ததாக, கனிமொழி மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்த நன்கொடை விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அலைக்கற்றை ஊழலுடன் தொடர்பு உடையதாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்’ என்கிறார் பூஷன்.//

இப்ப உங்களுக்கு எதிரா எப்படி சேம் சைடு கோல் போடறேன்னு மட்டும் பாருங்க.

பூசன் சொல்வது அனுமானத்தின் படியே!அனுமானத்தின் படியோ,தொடர்பு படுத்தியோ நீதிமன்றத்தில் நிரூபணமாக்கி விட முடியாது.நேரடி சாட்சி(சில சமயம் அது கூட காஞ்சி கேஸ் மாதிரி பிறல் சாட்சியாகப் போய் விடும்)நேரடி அசைக்க முடியாத ஆவணங்கள் மட்டுமே செல்லுபடியாகும்.

2Gக்கான வலுவான ஆதாரம் இருப்பதால் மட்டுமே அது முன்னிலை பெறுகிறது.தமிழ் மையமும் அது போன்ற சாட்சியங்கள் இருக்கும் பட்சத்திலே மட்டும் கஸ்பரைக் களி திங்க வைக்க முடியும்.

இந்தாளு ஈழ இறுதிப்போரின் கட்டத்தில் என்னமாதிரியான உண்மையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பது வெளிச்சத்துக்கு வரவேண்டியது அவசியம்.

உண்மைத்தமிழன் said...

[[[எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

//பயப்படாதீங்க. இந்தத் தடவை அந்தக் கொடுமை நடக்காதுன்னு நினைக்கிறேன்..!//

அதாகப்பட்டது, இந்தத் தடவை அம்மாவுக்குச் சான்சே கொடுக்காமல், மனைவி, துணைவி, மருமகன் வாரிசுகளே அந்த வேலையை செய்து விடுவார்கள் என்று சொல்ல வருகிறீர்களா!?

:-)))))))]]]

ஆமாம்.. அவர்களுக்கு எதிரிகள் அவர்கள்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜரத்தினம் said...

ஜெயலலிதா தன் அரசியல் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருக்கிறார் என்று நீங்கள் சொன்ன(உளறிய) பிறகுதான் இங்கு வருவதை குறைத்தேன், தவிர்த்தேன். பரவாயில்லை இதே போன்றே அவரை நெகடிவ் ஆகவே சொல்லுங்கள். அப்படியே உல்டாகவே நடக்கட்டும்.]]]

ஐயா ராஜரத்தினம்..

அம்மா மீதான பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வழக்கு எப்படியும் இந்தாண்டுக்குள் முடிந்துவிடும். அம்மாவும் ஜெயிலுக்குப் போவது உறுதி. அதன் பின்பு உச்சநீதிமன்றம் வரையிலும் சென்று அந்த வழக்கில் இருந்து தப்பிப்பதே அவரது வேலையாக இருக்கும்..! காத்திருங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

அண்ணே! அடுத்தக் ஆட்டத்தை எப்ப நாம துவங்கலாம்:)]]]

சீக்கிரமே துவக்கிருவோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

இப்ப உங்களுக்கு எதிரா எப்படி சேம் சைடு கோல் போடறேன்னு மட்டும் பாருங்க.

பூசன் சொல்வது அனுமானத்தின்படியே! அனுமானத்தின்படியோ, தொடர்புபடுத்தியோ நீதிமன்றத்தில் நிரூபணமாக்கிவிட முடியாது. நேரடி சாட்சி(சில சமயம் அதுகூட காஞ்சி கேஸ் மாதிரி பிறழ் சாட்சியாகப் போய் விடும்) நேரடி அசைக்க முடியாத ஆவணங்கள் மட்டுமே செல்லுபடியாகும். 2-G-க்கான வலுவான ஆதாரம் இருப்பதால் மட்டுமே அது முன்னிலை பெறுகிறது. தமிழ் மையமும் அது போன்ற சாட்சியங்கள் இருக்கும்பட்சத்திலே மட்டும் கஸ்பரைக் களி திங்க வைக்க முடியும்.]]]

சிபிஐ அதைத் திரட்டும் முயற்சியில்தான் இப்போது ஈடுபட்டு வருகிறது..! நிச்சயம் ஜெயிக்கும் என்றே நான் நினைக்கிறேன்..!

[[[இந்தாளு ஈழ இறுதிப் போரின் கட்டத்தில் என்ன மாதிரியான உண்மையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பது வெளிச்சத்துக்கு வர வேண்டியது அவசியம்.]]]

அதான் ஊருக்கு, உலகத்துக்கே நல்லா தெரியுமே..?