பட்டதாரி இல்லாத குடும்பங்களுக்குச் சலுகை - தமிழக அரசின் திருட்டு வேலை!

13-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கோவில்பட்டி நேஷனல் என்ஜீனியரிங் கல்லூரியில் பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களிடத்தில் இருந்து பல்வேறு கட்டணம் வசூலிக்கும் கொடுமையைக் குறிப்பிட்டு எழுதியிருந்த இந்தப் பதிவிற்கு வந்த பின்னூட்டங்கள் வாயிலாக பதிவரும், எனது இனிய நண்பருமான ரிஷி உண்மையான சில தகவல்களைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார்.


அரசு அறிவித்த கல்விக் கட்டணச் சலுகை என்பது கல்விக்கான கட்டணம் மட்டுமே என்றும் மேற்கொண்டு அந்தந்த கல்லூரிகள் தெரிவிக்கும் பல்வேறு வகையான சுருட்டல்களை அந்த மாணவர்கள்தான் கட்ட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இது பற்றி அவர் குறிப்பிட்டிருந்த அரசு இணையத்தளச் செய்தியும் அதைத்தான் தெரிவித்திருந்தது.

அரசு மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மட்டுமே ஏற்றுள்ளது என்பதை முதலிலேயே அழுத்தம், திருத்தமாக வெளிப்படையாகச் சொல்லியிருந்தால் மாணவர்களும், பெற்றோர்களும் இன்றைக்கு அந்தக் கடிதம் எழுதிய அன்பரைப் போல பரிதவித்திருக்க மாட்டார்கள். அவர்களின் இன்றைய பதற்றத்திற்கும், குடும்பப் பிரச்சினைகளுக்கும் நிச்சயம் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

ஏன் இதனைச் சொல்கிறேன் என்றால்.. இந்த அறிவிப்பு வெளியான தினத்தன்று அரசு வெளியிட்ட அறிக்கையை முதலில் படித்துப் பாருங்கள்..

உயர் கல்வித் துறை செயலர் கணேசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது :

வரும் 2010-11-ம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணச் செலவை அரசே ஏற்கும்.

கல்விக் கட்டணம், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும், தனியார் கல்லூரிகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையும், பல்கலைக் கழக பாடப் பிரிவுகளுக்கு பல்கலைக்கழகம் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் குறிக்கும்.

கவுன்சிலிங் முறையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த, பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கே இத்திட்டம் பொருந்தும். முந்தைய ஆண்டுகளில் சேர்ந்து படித்து வரும் மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. குடும்ப நபர்கள் என்பது, தாய், தந்தை, அவர்களது பெற்றோர், மாணவர்களின் உடன்பிறப்புகளை குறிக்கும்.

தங்கள் குடும்பத்தில் பட்டதாரிகளே இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில், மாணவர்கள் வசிக்கும் பகுதியின் வருவாய்த் துறை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்கு குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். மாணவர்கள் தொழிற் கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது, விண்ணப்பத்துடன் குடும்பத்தில் முதல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் என்ற சான்றிதழையும், உறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும்.

சான்றிதழ்களை சரி பார்த்து, தவறான சான்றிதழ்கள் அளிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது, மாணவர் எந்த வகையான தொழிற்கல்வி பயில அனுமதிக்கப்பட்டாரோ அதை அனுமதித்த அலுவலர்/அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவரின் கல்விக் கட்டணத்தை கல்வி நிறுவனம் அரசிடமிருந்து பெற, அக்கல்வி நிறுவனம் எந்தத் துறையின் கீழ் வருகிறதோ அந்த துறையின் இயக்குனரகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

'குடும்பத்தில் பட்டதாரி எவரும் இல்லை' என்ற சான்றிதழுடன், மாணவரும், பெற்றோரும் கூட்டாக உறுதிமொழி அளிக்க வேண்டும். இந்த உறுதிமொழிச் சான்றிதழ் தவறு என தெரிய வந்தால், தவறான தகவல் அளித்ததற்காக மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள், மூன்று மடங்காக மாணவர் அல்லது பெற்றோரிடமிருந்து வசூலிக்கப்படும். உறுதிமொழி வரைவுப் படிவம், வருவாய்த் துறையிடம் பெற வேண்டிய சான்றிதழ் படிவம் ஆகியவை தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்துடன் அளிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பொறியியல் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் பெறப்பட்ட விண்ணப்பங்களில், மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரியா என்ற விவரமும் கேட்கப்பட்டது. அதன்படி, 40 சதவீத மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் என தெரிய வந்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவலிலும் 40 சதவீத மாணவர்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் என தெரிய வந்துள்ளது. இதர தொழிற்கல்வி படிப்புகளிலும் இதே நிலையே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டம் ஆகிய தொழிற்கல்வி படிப்புகளில் சேருபவர்களில் 40 சதவீதம் பேர் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருப்பர் என்றும், தமிழக அரசின் இச்சலுகை மூலம் ஆண்டுதோறும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற விவரம் ஆவணங்களுடன் கேட்கப்படுவதால், இந்த எண்ணிக்கை சற்று குறையவும் வாய்ப்புள்ளது.

நன்றி : தினமலர் http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7302 

இவ்வாறு பத்திரிகைகளுக்குத் தெரிவிக்கப்பட்ட செய்திகளில்கூட கல்விக் கட்டணம் மட்டுமே அரசால் ஏற்கப்பட்டுள்ளது. கல்லூரி கேட்கும் மற்றக் கட்டணங்களை அம்மாணவர்தான் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.

அதே சமயம் இது குறித்து, அப்போது வெளியிடப்பட்ட அரசாணையில் என்ன இருக்கிறது என்பதையும் படித்துப் பாருங்கள்.
 
“மாணவ / மாணவிகளின் கல்விக் கட்டணம்(Tuition Fee)க்கான செலவை மட்டுமே அரசு ஏற்கும்..” என்று அரசாணையிலும், பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்ட அரசுக் குறிப்பில் “வரும் 2010-11-ம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த தொழிற் கல்வி பயிலும் மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணச் செலவை அரசே ஏற்கும்..”  என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? “மட்டுமே” என்கின்ற நான்கெழுத்து கொண்ட ஒரு வார்த்தை மட்டுமே.. இந்த வார்த்தை உண்மையாக வெளிப்படாத காரணத்தினால்தான் எனக்குக் கடிதம் எழுதிய நண்பர் இன்றைக்கு அல்லல்பட்டுள்ளார்.

கல்விக் கட்டணம் என்றவுடன் “அதான்.. கவர்ன்மெண்ட்டு படிக்குற செலவையெல்லாம் ஏத்துக்குதாம்ல.. படிக்க வைப்போம்..” என்று நினைத்துதான் தனது மகனையோ அல்லது மகளையோ கல்லூரியில் சேர்த்துவிட்டுள்ளார். நானும்கூட அவரை மாதிரி அப்பாவிதான். நானும் முழுச் செலவையும் அரசுதான் ஏற்கிறது என்று அப்பாவித்தனமாய் இதுவரையில் நம்பியிருந்தேன். இப்போதுதான் தமிழக அரசு செய்திருக்கும் இந்த தில்லாலங்கடி வேலை தெரிகிறது..

உண்மையாகவே இந்த அரசு மக்கள் மீது அக்கறையுடன் செயல்படுவதாக இருந்திருந்தால் இது போன்ற உள்ளடி வேலை எதையும் செய்யாமல், “கல்விக் கட்டணத்தை மட்டுமே நாங்கள் செலுத்துவோம். கல்லூரிகள் கேட்கின்ற மற்ற கட்டணங்களை அனைத்து மாணவர்களும் அவர்களே கட்ட வேண்டும்..” என்று ஒரு வரியையையும் சேர்த்து அறிவித்திருந்தால் இந்தக் குழப்பமே வந்திருக்காது.. ஆனால் ஏன் அரசு செய்யவில்லை..?

அதிலும் அரசாணையில் “மட்டுமே” என்று குறிப்பிட்டுவிட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகின்ற செய்தியறிக்கையில் அதனை நீக்கிவிட்டுச் செய்திருக்கும் சதி வேலை மக்களை முட்டாளாக்கும் வேலை இல்லையா..?

குடும்பத்தில் இதுவரையில் ஒரு பட்டதாரிகூட இல்லை. அப்பேர்ப்பட்ட குடும்பத்தினருக்கு கல்விக் கட்டணம் என்பது தனியானது.. இது தவிர, பல்கலைக் கழகக் கட்டணம் தனி, நூலகக் கட்டணம் தனி, இன்சூரன்ஸ் கட்டணம், லேப் கட்டணம், இதரக் கட்டணங்கள், லொட்டு, லொசுக்கு.. என்று இருப்பதெல்லாம் தெரியுமா..? அல்லது அவர்கள் தெரிந்து வைத்திருப்பார்களா..? எனக்கே தெரியவில்லையே..? என்னை மாதிரி எத்தனை பேர் இருந்திருப்பார்கள்..? யோசித்துப் பாருங்கள்..

கல்லூரியில் சேர்ந்த பின்பு அந்தக் கட்டணம்.. இந்தக் கட்டணம் என்று கேட்கின்றபோதுதான் இந்தத் தகவல் அவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. கல்லூரியில் சேர்த்த பின்பு என்ன செய்ய முடியும்..? வேண்டாம் என்று அழைத்துச் சென்றால் மகள், மகனின் மனநிலை மாறுமோ..? அவர்கள் வருத்தப்படுவார்களே..? குடும்பம் என்னாகும்..? வேறு எங்கே போய் படிக்க வைப்பது..? அனைத்துக் கல்லூரிகளிலும் இடம் நிரம்பியிருக்குமே..? இப்படியெல்லாம் அந்த அப்பாவி பெற்றோர்கள் நினைத்துத்தான் வேறு வழியில்லாமல் மனதுக்குள் ஆட்சியாளர்களை நோக்கி சாபம் விட்டுத்தான் அந்தப் பணத்தைக் கட்டியிருப்பார்கள். கட்டியிருக்கிறார்கள். நானாக இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பேன்.

கேவலம்.. தங்களுடைய புகழுக்காக, புகழுரைக்காக.. தங்களை தினம்தோறும் நான்கு பேர் முறை வைத்து வீடு தேடி வந்து வாழ்த்த வேண்டும் என்பதற்காக அரசு பணத்தை எடுத்து மக்களுக்கே தெரியாமல் பிய்த்துக் கொடுக்கும் இந்தத் திருட்டுத்தனத்தைக்கூட கொஞ்சம் உருப்படியாகச் செய்ய முடியாதா இவர்களால்..?

இப்போது இந்த ஏழை மக்கள் காசுக்கு என்ன செய்வார்கள்..? வெளியில் கடன் வாங்குவார்கள். அதுதான் வங்கியில் கடன் கிடைக்கிறதே என்று கதை விடாதீர்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு விவரமும், வாங்குமளவுக்கு அறிவுத் திறனும் இருந்தால் இப்படிப் புலம்ப மாட்டார்கள்.. குடும்பச் செலவுக்காக வைத்திருப்பதை தொலைப்பார்கள். அல்லது குடும்பத்திற்கென்றே இருக்கும் நிலபுலன்களை, மனைகளை விற்பார்கள்..

இந்தப் படிப்பை படித்து முடிக்கும் மாணவ, மாணவியர்கள் தாங்கள் நினைத்துக்கூடப் பார்க்காத படிப்பை இப்போது படிக்கின்ற சந்தோஷத்தைக்கூட முழுமையாக அனுபவிக்க முடியாத துன்பத்திற்கு ஆளாகப் போகிறார்கள் என்பது தெள்ளத் தெளிவு..

அதான் லட்சத்து கோடில சுருட்டியாச்சே.. போதாதா..? இன்னும் நிறைய பொய்களைச் சொல்லி மீண்டும் ஓட்டு வாங்கி உக்காந்து யாருக்காக.. எதுக்காக.. இப்படி காசு சம்பாதிக்கணும்..? டியூஷன் கட்டணத்தைத்தான் கட்டியாச்சே.. கூட கல்லூரிக் கட்டணத்தையும் சேர்த்தே கட்டிரலாமே..? என்ன குறைஞ்சு போச்சு..? முதல் தலைமுறை இப்படி முன்னேறினால் வெகு சீக்கிரத்தில் தமிழ்நாட்டில் பட்டதாரிகள் இல்லாத குடும்பமே இருக்க முடியாது என்ற நிலைமை வந்துவிடும்.

ஆனால் முதல் வருடத்திலேயே வெளிவந்திருக்கும் இந்தத் தில்லுமுல்லு இன்னும் எத்தனை குடும்பத்தை அடுத்த வருடம் பின்னுக்குத் தள்ளப் போகிறது என்பது தெரியவில்லை. ஆனால் அடுத்த வருடம் இந்தச் சலுகையின் கீழ் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை நிச்சயம் குறையும் என்றுதான் நினைக்கிறேன்.
 

இப்படி விதிமுறைகளை மீறினாலோ, தவறான தகவல்களைக் கொடுத்தாலோ குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனை கொடுப்போம் என்றும், மூன்று மடங்கு பணத்தை வசூலிப்போம் என்றும், தெள்ளத் தெளிவாக சொல்லத் தெரிந்த இந்த அரசுக்கு உண்மையை உள்ளது உள்ளபடி ஏன் சொல்லத் தெரியவில்லை. ஏன் இந்த ஏமாற்று வேலை..? ஏன் இந்தத் திருட்டுத்தனம்..?

முதலில் அரசுத் தரப்புச் செய்திருக்கும் இந்தத் திருட்டு வேலைக்கு இவர்களுக்கு நாம் என்ன தண்டனையைக் கொடுப்பது..?

6 comments:

தீப்பெட்டி said...

// முதலில் அரசுத் தரப்புச் செய்திருக்கும் இந்தத் திருட்டு வேலைக்கு இவர்களுக்கு நாம் என்ன தண்டனையைக் கொடுப்பது..? //

இலவச தொலைக்காட்சில பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளப் பாக்கலாம்..

என்னமோ போங்க பாஸ்.. இன்னும் 10 லட்சம் டீவிப் பொட்டி வாங்கப்போறாங்களாம்.. உங்களுக்கெல்லாம் கொடுக்க..

ஸ்ரீராம். said...

இதில் மட்டுமல்ல அரசின் எல்லா ஆணைகளிலுமே இது மாதிரி "க்" குகள் நிறையவே இருக்கும்..ஆனால் செய்தித் தாள்களில் விளம்பரம் மிகப் பிரமாதமாய் இருக்கும்.

உண்மைத்தமிழன் said...

[[[தீப்பெட்டி said...

//முதலில் அரசுத் தரப்புச் செய்திருக்கும் இந்தத் திருட்டு வேலைக்கு இவர்களுக்கு நாம் என்ன தண்டனையைக் கொடுப்பது..? //

இலவச தொலைக்காட்சில பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளப் பாக்கலாம்..
என்னமோ போங்க பாஸ்.. இன்னும் 10 லட்சம் டீவிப் பொட்டி வாங்கப் போறாங்களாம்.. உங்களுக்கெல்லாம் கொடுக்க..]]]

ஏன் நீங்க வாங்க மாட்டீங்களாக்கும்..?

தெரிந்து வைத்துக் கொள்ளத்தான் இந்தப் பதிவு..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...
இதில் மட்டுமல்ல அரசின் எல்லா ஆணைகளிலுமே இது மாதிரி "க்"குகள் நிறையவே இருக்கும். ஆனால் செய்தித்தாள்களில் விளம்பரம் மிகப் பிரமாதமாய் இருக்கும்.]]]

இதுதான் திருட்டுத்தனம் என்பது..!

உண்மைத்தமிழன் said...

[[[ம.தி.சுதா said...

இனிய தமிழ் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..]]]

பொங்கல் நல்வாழ்த்துக்கள் சுதா..!

உண்மைத்தமிழன் said...

கார்த்திக்..

தொப்பித்தொப்பி ஸாரோட பதிவுல போய் போட வேண்டியதை இங்க போட்டிருக்கீங்க.. பரவாயில்லை. நீக்கினாலும் போயிட்டு போறாருன்னு விட்ருங்க..!

அவங்கவங்களுக்கு அவங்களோட ஸ்டேண்ட்டுதான் பெரிசா தெரியும்..!