யார் செய்தது குற்றம்..?

29-06-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..


என்றும்போல் அன்றும் அலுவலகத்தில் ஆணி பிடுங்கிக் கொண்டிருந்தேன். நண்பர் ஒருவன் போன் செய்தான். தன் தந்தையை GH-ல் அட்மிட் செய்திருப்பதாகவும், தனக்கு அர்ஜெண்ட்டாக பணம் கடனாக வேண்டும் என்றும் கேட்டான். என் நிலைமையே பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருக்கிறது என்பதை சற்று நயனமாகவே சொல்லி வைத்தேன். ஆனாலும் மாலையில் GH வந்து அவனைச் சந்திப்பதாகச் சொன்னேன். சொன்னபடியே செல்லவும் செய்தேன்.

அரசு பொது மருத்துவமனையின் எலும்பு முட நீக்கியல் வார்டு. உள்ளே கட்டிலுக்கு கட்டில் காலோ, கையோ தொங்கவிடப்பட்டிருக்க நோயாளிகள் சோகத்துடன் படுத்திருந்தார்கள். என் நண்பனின் தந்தை வீட்டில் குடத்தைத் தூக்கும்போது ஸ்லிப்பாகி கையை ஊன்றியிருக்கிறார். கை முறிந்து போய் விட்டதாம். இப்போது கட்டிலில் படுத்திருந்தார்.

அரசு மருத்துவமனைகளுக்கே உரித்தான வாடை குப்பென்று தூக்க.. வார்டு முழுக்க அனைவரின் முகத்திலும் ஒரு ஏமாற்றம்.. எப்போதடா வீட்டுக்குச் செல்வோம் என்ற பரிதவிப்பு நோயாளிகளைவிட, அவர்களின் அருகில் கையைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தவர்களின் கண்களில் தெரிந்தது. நண்பரின் தந்தையிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். கையோடு கொண்டு சென்றிருந்த ஹார்லிக்ஸ் சிறிய பாட்டிலை கொடுத்துவிட்டு என்ன நடந்தது என்று விசாரித்தேன். அவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.

நிகழ்ந்ததை சாதாரண ஒரு நிகழ்வு என்ற ரீதியில் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டு பேசினார். அந்தமட்டிலும் எனக்கு மகிழ்ச்சிதான். பொதுவாக நோயாளிகள் மருத்துவமனை வாசல்வரைக்கும் தெம்பாக பேசுவார்கள். உள்ளே நுழைந்தவுடன் ஆஸ்பத்திரிக்கே உரித்தான முகத்துடன் ஏதோ இனம் புரியாத பயத்திற்கு ஆட்பட்டுவிடுவார்கள்.

இவர் அருமையாக, தெளிவாகப் பேசினாலும் அடிக்கடி எதிரில் இருந்த ஒரு பெட்டையே பார்த்துக் கொண்டிருந்தார். என்ன அங்கே என்பதைப் போல் நானும் திரும்பிப் பார்த்தேன். அங்கே ஒரு இளைஞர் கை, கால்களில் கட்டுப் போட்டு படுத்திருந்தார். வலது கால் தூக்கிக் கட்டப்பட்டிருந்தது. அவரது அருகில் இளம் பெண் ஒருவர் சோகத்துடன் கைகளைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தார். அவருக்கு அருகில் தரையில் கிராமத்து ஆட்களான ஒரு வயதான தம்பதியினர் அமர்ந்திருந்தார்கள்.

அந்த இளைஞன் பெண்ணிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அந்தப் பெண்ணோ அதைக் காதில் வாங்காதது போலவே வெறித்தப் பார்வையுடன் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இங்கே எனது நண்பனின் தந்தை தன் மனைவியிடம், "போய் என்னன்னு கேளுடி.." என்று கோபப்பட.. நண்பனின் அம்மா அந்த பெட்டை நோக்கி விரைந்தார்.

நண்பரின் தந்தை என்னிடம், "அந்தப் பொண்ணுக்கு கல்யாணமாகி அஞ்சு நாள்தான் ஆச்சு.. பெட்ல படுத்திருக்கிறவன் அந்தப் பொண்ணோட புருஷன்தான்.. நேத்து ராத்திரி பிரெண்ட்ஸ்களுக்கு பார்ட்டி தர்றேன்னு ஹோட்டல்ல நல்லா ஊத்திருக்கானுக.. பைக்ல வீட்டுக்குப் போகும்போது லாரில மோதி அடிபட்டுட்டான்.." என்று சுரத்தமேயில்லாமல் சொன்னார். அதன்பின் அந்தப் பெண்ணை சற்று உற்றுப் பார்த்தபொழுதுதான், கழுத்தில் இருந்த தாலி கயிற்றின் பளபளப்பு தெரிந்தது.

நண்பனின் அம்மா அந்த இளைஞனிடம் பேசுவதும், பின்பு அந்தப் பெண்ணிடம் பேசுவதுமாக இருந்தவர் ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் எங்களிடம் வந்தார். "என்னவாம்..?" என்று நண்பனின் தந்தை கேட்க.. "அவன் அவளை வீட்டுக்குப் போகச் சொல்றான்.. அவ போக மாட்டேங்குறா.. இருந்து தொலையறேன்கிறா.." என்று அலுப்பாகச் சொன்னார். இப்போது அந்தப் பெண் கணவனிடம் முகத்துக்கு நேராக கையை நீட்டி கோபமாகப் பேசுவது தெரிய.. ஒட்டு மொத்த ஹாலும் திரும்பிப் பார்க்கிறது. கணவன் முகத்தைத் திருப்பிக் கொள்ள..

தரையில் அமர்ந்திருந்த வயதானவர் எழுந்து அந்தப் பெண்ணின் தோளைத் தட்டி ஏதோ சொல்ல.. அவரது கையைத் தட்டிவிட்டு அந்தப் பெண் சுவரோமாகச் சென்று சாய்ந்து கொண்டு சொட்டு சொட்டாக வடிந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டாள்.

அந்த வயதானவர் எங்களிடம் வந்து "கூஜா இருக்குமா? மாப்ளைக்கு பால் வேணுமாம்.. வாங்கிட்டு வந்திர்றனே..?" என்று கேட்டார். நண்பனின் மனைவி எடுத்துக் கொடுக்க.. அப்படியே என் நண்பனும் "வாடா.. ஒரு காபி குடிச்சிட்டு வருவோம்.." என்று என்னை வெளியே இழுக்க அந்த முதியவருடன் வெளியில் வந்தோம்.

முதியவரிடம் "என்னங்கய்யா பொண்ணு ஏன் இப்படி கோபப்படுது..?" என்று நண்பன் கேட்க சன்னமான குரலில் பேசத் துவங்கினார் அவர். "என்னத்தைச் சொல்றது தம்பி.. இவன் நல்ல பையன்தான்.. நம்ம ஊர் ஒன்றியச் செயலாளரோட தம்பி.. நாலு ஏக்கர் நிலம் இருக்கு. ரெண்டு, மூணு வீட்டை வாடகைக்கு விட்ருக்காங்க.. நல்ல குடும்பம்தான்.. ஏதோ சேக்காளிகளோட போய் குடிக்கப் போய் இப்படி ஆயிருச்சு. இது அந்தப் புள்ளைக்குப் புரியலை.. 'குடிகாரனை என் தலைல கட்டி வைச்சிட்டியே'ன்னு நேத்துல இருந்து லட்சம் தடவை எங்களைக் கரிச்சுக் கொட்டிட்டா.." என்றவர் தன் ஒட்டிப் போன வயிற்றைத் தடவிக் கொண்டே "ஏன் தம்பி.. இங்கன ஹோட்டல் இருக்குமா? ஏதாவது சாப்பிடணுமே? அவளும் சாப்பிடாம கிடக்கா.." என்றார் பரிதாபமாக.

நண்பன் என்னைப் பார்க்க.. நான் அவனைப் பார்க்க.. நண்பன் என்னிடம், "டேய் இவரை டீக்கடைக்குக் கூட்டிட்டுப் போ.. நான் இவருக்கு ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரேன்.." என்று சொல்லிவிட்டுப் போனான். கடையில் இரண்டு பால் வாங்கிக் கொண்டு நானும், முதியவரும் காபி குடித்தோம். தன் சொந்தக் கதையை சொன்னார் மனிதர்.

கல்யாணமாகி இருபது வருடம் கழித்து பிறந்த மகளாம் இவர். ஆசையாக அத்தனை ஆண்டுகள் கழித்து பிறந்தவள் என்பதால் எப்போதும்போல செல்லமாகவே வளர்த்திருக்கிறார்கள். தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் படித்துள்ளார். அந்த ஊரிலேயே இந்தப் பெண்தான் அழகு என்பதால் நிறைய பேர் பொண்ணு கேட்டு வந்து தொந்தரவு கொடுக்க.. இவர்தான் உள்ளூர்லேயே கட்டிக் கொடுத்தால் நம்ம கண்ணு முன்னாடியே பொண்ணு நல்லா வாழறதை பார்க்கலாமே என்ற முடிவில் இந்தப் பையனுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். மாப்பிள்ளை நிஜமாகவே பையன்தான்.. வயது 22. பெண்ணுக்கு வர்ற ஆவணி வந்தா 22-ஆம்.

கல்யாணத்திற்கு இரண்டு அமைச்சர்கள், நான்கு எம்.எல்.ஏ.க்கள் வந்ததால், "பெரிசா குலதெய்வம் சாமி கும்பிட்ட மாதிரி நடந்துச்சு தம்பி.. எல்லாம் எங்க செலவுதான்.. கையை மீறி 2-கிட்ட போயிருச்சு.. அடுத்த வருஷம் முந்திரி தோப்பை மாப்ளை மூலமா ஏலத்துல எடுத்து, கடனை அடைச்சிரலாம்னு நினைச்சேன். என் நேரம்... ஆரம்பத்துலேயே இப்படி ஆயிருச்சு.." என்று புலம்பியபடியே வந்தார்.

பெண்ணிடம் வந்து பாலை நீட்ட அவள் கையில் வாங்கிக் கொள்ளவே இல்லை.. பின்பு தரையில் அமர்ந்திருந்த பெண்ணின் அம்மாவே அதை வாங்கி டம்ளரில் ஊற்றிக் கொடுக்க இதையும் வாங்க புதுப்பெண் மறத்துவிட்டாள். இளைஞன் தன்னைக் கஷ்டப்பட்டு முதுகு வளைத்து எழுந்து கையில் வாங்கி குடித்தான். பார்க்கவே பாவமாக இருந்தது. அந்தப் பெண்ணோ தலையை சுவற்றில் சாய்ந்து கொண்டு உலகமே மூழ்கிவிட்டதைப் போல் நின்றிருந்தாள்.

நண்பன் இப்போது ஹோட்டலிலிருந்து திரும்பி வந்து அவர்களிடம் பார்சலை நீட்ட முதியவர் அதை வாங்கி தன் மனைவியிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னார். அந்தம்மாவோ அதை எடுத்து பிரித்து தன் மகளிடம் கொடுத்து சாப்பிடச் சொல்ல.. அந்தப் பெண் அசையவில்லை.

பக்கத்து பெட்டில் சுற்றியிருந்த பெண்கள் இருவரும் சாப்பிடச் சொல்லி வற்புறுத்த முடியாது என்று மறுத்து முகத்தைத் திருப்பிக் கொள்ள, அந்த அம்மா அழுகவே ஆரம்பித்துவிட்டார். இப்போது அந்தப் பெண் சுவற்றில் தலையைப் புதைத்துக் கொண்டு அழுக.. மாப்பிள்ளைதான் பாவம்.. பரிதாபத்தில் இருந்தான். தேவையா அவனுக்கு..?

நண்பனின் தந்தை சொன்னார்.. "எதுக்கு இப்படி குடிக்கணும்? குடிச்சிட்டு பைக் ஓட்டணும்? இப்ப யார் அழுகுறது? இவனுகளையெல்லாம்.." என்று பொருமினார். உண்மைதானே..? ஏன் மது அருந்த வேண்டும்? எதற்காக..? நண்பர்கள் தேவைதான். இல்லை என்று மறுக்கவில்லை. அது உடலைக் குழியில் இறக்கும்வரையில் வரும் நட்பாக இருக்க வேண்டும். கொண்டாட்டங்கள் தேவைதான்.. அது வாழ்வின் ஆதாரமான நம் உடலையே பாதிப்பதாக இருக்கக்கூடாது.. திருமணம் என்றாலே பார்ட்டி வைப்பது என்பது பொருளாதாரத்தில் அளவுகோல் இல்லாத குடும்பத்தினர் கையில் வைத்திருந்த வாக்கிங்ஸ்டிக். அது இப்போது கிராமம்வரைக்கும் பரவி.. சாணி தட்டுவோரின் கையில்கூட வந்து உட்கார்ந்துவிட்டது.

'குடி குடியைக் கெடுக்கும்' என்று டாஸ்மாக் கடை வாசலில் எழுதி வைத்திருந்தாலும் குடிப்பவன் குடித்துக் கொண்டுதான் இருக்கிறான். 'எக்கேடு கெட்டாவது செத்துத் தொலைந்து போங்கடா. எங்களுக்கு பணம்தான் முக்கியம்' என்று அரசுகளும் ஒரு முடிவு கட்டிவிட்டன. இதில் சாதாரண பொதுஜனத்தைப் பற்றி யாருக்கு கவலை?

இப்போது இந்த இளைஞனின் அருகில் இருந்து இவனைப் பார்த்துக் கொள்வது யார்? பாட்டிலை எடுத்துக் கொடுத்த டாஸ்மாக் கடைக்காரனா? அல்லது உடன் இருந்து சியர்ஸ் சொன்ன நண்பர்களா? இல்லையே.. சம்பந்தமே இல்லாமல் அவன் மனைவியும், மனைவியின் பெற்றோர்களும்.. இதென்ன கொடுமை..?

இன்றைய இளைய சமுதாயத்தினரை கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்த்து வருகிறது நமது குடும்ப சமூகம். மருத்துவமனையில் யாரையாவது பார்க்கச் சென்றால்கூட 'ஆபீஸில் இருந்து வரும்போது அப்படியே பார்த்திட்டு வந்திரலாம்..' என்றுதான் ஐடியா செய்கிறார்களே ஒழிய.. 'பிள்ளைகளை அழைத்துச் செல்வோம். அவர்களுக்கும் ஆஸ்பத்திரி பற்றிய ஒரு அறிவும், தெளிவும் பிறக்கட்டும்' என்று யாரும் சொல்வதில்லை. செய்வதுமில்லை.

பாருங்கள்.. அந்தப் மாப்பிள்ளை பையனுக்கு இப்போதைய கவலை.. 16,000 ரூபாய் கொடுத்து வாங்கிய செல்போன் காணவில்லையாம். "எந்த இடத்தில் விழுந்திருந்தேன். செல்போனை யாராவது எடுத்தார்களா? யாராவது கேட்டீர்களா?" என்று நினைவு தெரிந்த நேரம் முதல் கேட்டுக் கொண்டேயிருந்தானாம்.. என்ன செய்வது இந்த இளைஞனை..?

உயிர் பிழைத்தது முக்கியம் என்ற நினைப்போ, இப்படி சம்பந்தமில்லாதவர்களை கஷ்டப்படுத்துகிறோமே என்ற குற்றவுணர்வும் அந்த இளைஞனிடம் துளியும் இல்லாமல் இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்கிறானே.. அதிலும் அந்தப் பெரியவரை அந்த இடத்திற்கே சென்று தேடச் சொன்னானாம். நண்பனின் தந்தைதான் சத்தம்போட்டு அமைதிப்படுத்தினாராம்.

விளிம்பு நிலை மக்களைக் கை தூக்கிவிடுகிறோம் என்று சொல்லி வரும் அரசுகள் அதே விளம்பு நிலை மக்களை தங்களுடைய முட்டாள்தனத்தால் அதலபாதாளத்திற்குக் கொண்டு சென்று உயிரோடு புதைத்து வருகின்றன. படித்தவர்கள், பணக்காரர்கள் எப்படியாவது தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் இந்த மக்கள்.. இவர்களுக்கு அப்போதைய சந்தோஷம்தான் ஒரு கண வாழ்க்கை. அதுவே போதும் என்கின்ற அற்ப திருப்தியுடையவர்கள். அதனால்தான் ஜெயிக்கின்ற அரசுகள் அனைத்தும் அவர்களுடைய பணத்தையே சூறையாடி, அவர்களுக்கே கொடுத்து ஆட்சியைக் கைப்பற்றுகின்றன.

டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடினால்தான் என்ன? அரசுக்கு வருவாய் போய்விடும்.. டாஸ்மாக்கில் மட்டும் 4000 கோடி ரூபாய் சுளையாக வருமானமாக வருகிறது என்கிறது அரசு. இது யாருடைய பணம்? மக்கள் பணம்? மக்களுக்கு யார் பணம் கொடுத்தது? அரசு.. அரசுக்கு யார் பணம் கொடுத்தது.. அரசுகளேதான்.. அவர்களே அச்சடித்து அவர்களே கொடுத்து.. பின்பு அவர்களே வாங்கிக் கொள்கிறார்கள்.

தங்க நகைகளை உருக்கும்போது சேதாரமாக சில துளிகள் போய்விடுமே.. அதைப்போல் இங்கே மனித உயிர்கள் போய்க் கொண்டிருக்க அரசுகள் மட்டும் நீடித்து வருகின்றன. அரசுகளுக்குத்தான் முழு பொறுப்பா? ஏன் குடிக்காமலேயே குடிமகன்களால் இருக்க முடியாதா?

முடியும். அதற்கு முதலில் அவனுக்கு ஒரு தெளிவு வேண்டும். குடிப்பதனால் வரக்கூடிய தீமைகள் என்னென்ன என்பது அவன் மூளைக்கு எட்டியிருக்க வேண்டும். குடிப்பழக்கத்தினால் இன்னென்ன நோய்கள் ஏற்படும். மரணம் நிச்சயம்.. குடும்பமே சீரழிந்துவிடும். ஒருவரின் வாழ்க்கை பாதையும் மாறிவிடும்.. அது ஆபத்தானது என்று எந்தப் பள்ளிப் பாடப் புத்தகத்தில் இருக்கவில்லை. 'இதுவெல்லாம் அவுங்கவுங்க வீட்லயே கத்துக்குவாங்க. நாங்க எதுக்கு அதைக் கத்துக் கொடுக்குறோம்.. எல்கேஜிலேயே உங்க பிள்ளை மவுஸ். மானிட்டர்ன்னு கலக்குறான் பாருங்க..' என்று சொல்லி நம் பெற்றோர்களின் மூளையும் மழுங்கடிக்கப்பட்டு வருகிறது.

குடிப்பழக்கத்தின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வேண்டும்.. அதை வழங்குவது கல்விதான்.. அந்தக் கல்வி பாடத் திட்டத்திலேயே இது இல்லையென்பதால்தான் சில மாதங்களுக்கு முன் ஈரோடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலர் டாஸ்மாக் கடையில் ஸ்கூல் யூனிபார்மோடு பீர் குடித்துக் கொண்டிருக்கும் அற்புதக் காட்சி பத்திரிகைகளில் வலம் வந்தது.

இவர்களில் ஒருத்தராவது இப்போது துன்பப்படுகின்ற இந்த இளைஞரைப் போல் வேதனையடைய மாட்டார் என்பது என்ன நிச்சயம்? என்றைக்கோ ஒரு நாள் அப்படியரு சூழல் வரும்போதுதானே யோசிப்பார்கள், இந்த வித்து எங்கிருந்து ஆரம்பித்தது என்று..?

இப்போது அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இளைஞன் ஏதோ கெஞ்ச ஆரம்பித்தான்.. ஒட்டு மொத்த அறையும் அவர்களைத்தான் வேடிக்கை பார்த்தது. ஒரு நர்ஸ் அவர்கள் அருகில் சென்று, "இந்தா.. ரொம்ப ஓவரா பந்தா காட்டாத.. நீ செய்யாம வேற யார் செய்வா..? நாங்கெல்லாம் செய்ய முடியாது.." என்று சொல்ல அந்தப் பெண் எரித்து விடுவதைப் போல் பார்த்தார். அந்தப் பார்வையின் கொடூரம். அப்பா.. அப்படியரு பார்வை..

காரணம், இப்போது மாப்ளைக்கு 'டாய்லெட்' அவசரம்.. யார் அந்த Tub-ஐ வைப்பது..? யார் பாத்ரூமுக்கு கொண்டு போய் அதைக் கொட்டுவது. மாமியாரோ தள்ளாடுகின்ற வயதில் இருக்கிறார். மாமனாரின் கண்ணாடியோ பூதக்கண்ணாடி.. பாத்ரூம் செல்வதற்குள் எங்காவது நிச்சயமாக மோதிக் கொள்வார். வேறு வழி.. கட்டிய மனைவிதான்.. பின்பு ஊத்திக் கொடுத்த நண்பனா வருவான்..?

ஏதோ ஒரு அருவெறுப்புடன் அந்த டப்பாவை எடுத்து கணவனின் கையில் கொடுக்க அதை அவன் அடியில் வைத்துக் கொண்டு அனைவரையும் பரிதாபமாகப் பார்க்க.. எல்லோருமே முகத்தைத் திருப்பிக் கொண்டோம்.

அந்தப் பையனின் அண்ணன் தனி ரூமுக்காக ஹெல்த் மினிஸ்டரிடம் சிபாரிசு கடிதம் வாங்க காலையில் கோட்டைக்குச் சென்றவன்தான் இன்னும் வரவில்லை. அந்தப் பையனுக்கு அப்பாதான் இருக்கிறார். அம்மா இல்லை. உடன் பிறந்தவர்கள் யாருமில்லை.

கூடி இருக்கும் சுற்றமும், நட்பும் ஆஸ்பத்திரி என்றாலே ஒற்றை இலக்க எண்ணில்தான் வரும். இந்தப் பையனுக்கு அதுகூட இல்லை. 'நாளைக்கு ஊர்ச்சனமே ஓடி வரும்..' என்று விளையாட்டாக தன் புது மனைவியிடம் சொல்லப் போய், "வாயை மூடுரா எருமை.." என்று புது மனைவியின் பாராட்டையும் மதியம்தான் பெற்றானாம் மாப்ளை.. பையன் ப்ளஸ்டூ பெயில்.. இதுவே முரண்பாடுகளின் முதல் புள்ளியாக உள்ளது..

அந்தப் பெண்ணின் கோபம் இதனால்தான் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. "அந்தப் பையனை அவளுக்குச் சுத்தமா பிடிக்கலயாம் சரவணா.. ரெண்டு பேரும் ஒரே கட்சிக்காரங்கன்றதால முடிச்சிருக்காங்க.. அவ நல்லா படிச்ச பையனைத்தான் கட்டணும்னு ஆசையா இருந்திருக்கா.. கெடுத்திட்டீங்களேன்னு காலைல இருந்து அவ அப்பன், ஆத்தாகிட்ட மல்லு கட்டுறா.. வர்ற, போற நர்ஸ்க எல்லாரும் கூப்பிட்டு, கூப்பிட்டு அட்வைஸ் பண்ணியாச்சு.. ம்ஹ¤ம்.. விட்டா கொலையே பண்ணிருவா போலிருக்கு. அவ்ளோ கோபத்துல இருக்கா.." என்றார் நண்பனின் அம்மா.

பெற்றோர்கள் பார்த்துச் சொல்லும் மணமகனை ஏன் என்று கேள்வி கேட்காமல் மணக்கும் பெண்கள்தான் நம் தமிழ்நாட்டில் அதிகம். அதற்கு இந்தப் பெண்ணும் விதிவிலக்கல்ல. நன்கு படித்த பெரிய குடும்பங்களிலேயே இந்த நிலைமைதான் என்றால், இந்தக் கிராமத்துக் குடும்பத்தில் எப்படியிருக்கும்?

திருமணத்திற்கு பெண்ணின் மனமொப்பிய ஒப்புதல் தேவை என்கிற கருத்து சமுதாயத்தில் எப்போது வலுப்பெறும் என்று தெரியவில்லை. வரும் காலங்களில் இதுதான் ஒரு திருமணத்திற்கான முதல்படியாக இருக்க வேண்டும். பிடிக்காத திருமணங்கள் எவ்வளவுதான் பாசம், பணம், அன்பு, நேசம் இவற்றால் பிளாக்மெயில் செய்து பெவிகால் போட்டு ஒட்டினாலும் பேன் காற்றில்கூட அவை இடிந்துவிடும்.

அந்தப் பெண் அந்த டேபை கையில் எடுத்துக் கொண்டு மறுகையால் தன் முந்தானையை எடுத்த தன் மூக்கையும் பொத்திக் கொண்டு பாத்ரூம் நோக்கிச் செல்ல.. அனைவரும் அவசர அவசரமாக ஒதுங்கி நின்று வழி விட்டார்கள். அந்த ஸ்டைலில் இருந்தது அந்தப் பெண்ணின் நடை. இப்போது பையன் ஒரு சைடாக கஷ்டப்பட்டு படுத்திருக்கிறான். பாத்ரூம் சென்ற மனைவி திரும்பி வந்து துடைத்துவிட்டால்தான், அவனால் நேராகப் படுக்க முடியும். என்ன கொடுமை இது..?

ஏதோ கஷ்டம்.. கஷ்டம்.. என்கிறார்களே.. அவர்களை தயவு செய்து இந்த வார்டுக்குள் வந்து ஒரு பத்து நிமிடம் நிற்கச் சொல்லுங்கள்.. புரிந்து கொள்வார்கள் அவர்கள் அனுபவிப்பதெல்லாம் சர்வ சாதாரணம் என்று.. அப்பாவுக்கு மகனும், கணவனுக்கு மனைவியும், புள்ளைக்கு அம்மாவும் என்று விதவிதமான மனித உறவுகள் இந்த இடத்தில் தலைக்கு மேல் ஒரே ஆறுதலாக ஓடிக் கொண்டிருக்கும் பேன் காற்றில் பறந்து கொண்டிருக்கின்றன.

இன்பத்தையும், துன்பத்தையும் ஒரு சேரத்தான் தருகிறான் ஆண்டவன். இன்பம் வரும்போது குடும்பத்தோடு அதை அனுபவிக்கிறோம். துன்பம் வரும்போது பெரியவர்கள் மட்டுமே எதிர்கொள்கிறோம். துன்பம் என்ற ஒன்றும் நம் பிள்ளைகளுக்கு மிகச் சிறந்த ஆசிரியர்தான் என்பதை நாம் உணர்வதில்லை.

இவர்களில் இந்தச் சம்பவத்திற்கு யாரைக் குற்றவாளியாக்குவது?

குடிப்பது குடிமக்களுக்கு மரணத்தைத் தரும் என்பது தெரிந்திருந்தும் மதுக்கடை பிஸினஸ் செய்யும் அரசாங்கத்தைச் சொல்வதா?

குடிப்பழக்கம் நம் குடும்பத்தையே நடுத்தெருவுக்குக் கொண்டு வந்துவிடும் என்பது பாலபாடமாக இருந்தும் விடாமல் கடையை நோக்கி ஓடுகிறானே இந்த இளைஞனைப் போன்றவர்கள்.. இவர்கள்தான் குற்றவாளியா..?

நல்ல படிப்பு இருந்தும், தங்கள் கண் முன்னாலேயே இருக்க வேண்டும் என்ற முட்டாள்தனமான, மூடத்தனத்தில் பெண்ணின் விருப்பம் இல்லாமலேயே அவளுக்குத் திருமணத்தைச் செய்து வைத்திருக்கும் இந்தப் பெற்றோர்கள் குற்றவாளியா..?

நேரமாகிவிட்டதே என்று கிளம்பி வரும்போது அந்தப் பெரியவர் தன் மனைவியிடம் கல்யாணத்திற்காக அவர்கள் விற்ற கறவை மாட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். "வீட்டுக்கே லஷ்மி மாதிரி இருந்துச்சு.. அதைப் போய் வித்தோம்ல.. அதான் இப்படி..." என்று அவர் சொல்ல அவர் மனைவி 'ஆமாம்' என்பதைப் போல் தலையாட்ட..

இந்த முதியவர்களுக்கு, தங்களது சோகத்தை ஆற்றிக் கொள்ள தங்களது மனதை அமைதிப்படுத்த இதைவிட வேறு வகை ஆறுதல் வார்த்தைகள் இருக்காது என்றே நம்புகிறேன்..

29 comments:

துளசி கோபால் said...

'குடி குடியைக் கெடுக்கும்'னு சொல்லி இருக்கறது எவ்வளவு உண்மை பாருங்க.

அந்தப் பொண்ணுக்காகத்தான் பரிதாபப்படணும். பாவம்(-:

dondu(#11168674346665545885) said...

இம்மாதிரி கண்ணறாவி காட்சிகளைத் தவிர்க்கத்தான் 1937-ல் சென்னை மாகாணத்தின் பிரதம மந்திரியாக வந்த மாமனிதர் ராஜாஜி அவர்கள் மதுவிலக்குத் திட்டத்தை சேலம் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தினார். படிப்படியாக மாகாணம் முழுவதுக்கும் அது அமுலுக்கு வந்தது. அப்போது வருமான இழப்பை ஈடுகட்ட விற்பனை வரி என்ற காமதேனுவை அவர் அறிமுகப்படுத்தினார். 1972 வரை கிட்டத்தட்ட 3 தலைமுறைகள், 35 ஆண்டுகள் மது தெரியாமல் வளர்ந்த நிலையில் பொறுப்புணர்ச்சி ஏதுமின்றி கருணாநிதி மதுவிலக்கை விலக்கினார். அதுவரை திருட்டுத்தனமாகக் குடித்தவர்கள் ஒருவித வெட்கத்துடன் குடித்தனர். அதை மரியாதைக்குரியதாக ஆக்கினார் இந்த மகானுபாவன்.

இப்போது இன்னொரு 35 ஆண்டுகள் கடந்த நிலையில் இப்படி அவலங்கள். யாரை நொந்து கொள்வது?

அதுவும் இப்பதிவில் பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக படிக்காதவனுக்கு எண்ணை சீர்செனத்தியெல்லாம் கொடுத்து மணமுடித்த பெற்றோர்களை சாட வார்த்தைகளே இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பங்காளி... said...

நண்பனின் போன்- அவன் அப்பாவுக்கு விபத்து- அரசு ஆஸ்பத்திரில் அனுமதி-பயமில்லை- எதிர் பெட்டில் புதுமாப்பிள்ளை- குடிச்சான், விழுந்தான்-அவன் புது பொண்டாட்டி முரண்டு-பெண்ணின் பெற்றோரின் கவலை- இளைஞர்களே இதெல்லாம் தேவையா?- டாஸ்மார்க்க மூடு

இம்புட்டுதான் மேட்டர், அநியாயத்துக்கு இழுத்துட்டுடீங்களே...நாங்க என்ன பாவம்யா செஞ்சோம்...

ஹி..ஹி..கொஞ்சம் கருனை காட்டுங்க தமிழன்

Anonymous said...

//இம்மாதிரி கண்ணறாவி காட்சிகளைத் தவிர்க்கத்தான் 1937-ல் சென்னை மாகாணத்தின் பிரதம மந்திரியாக வந்த மாமனிதர் ராஜாஜி அவர்கள் மதுவிலக்குத் திட்டத்தை சேலம் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.//

பிரமத மன்திரி இல்லடா டுபுக்கு. சீப் மினிஸ்டர்!!!

Anonymous said...

குடியால பாதிக்கப்படுறது ஹை க்ளாஸ் மக்கள் இல்லை, சாதாரண மக்கள் தான் என்று சொல்லியிருக்கீங்க...

பொய் சொல்லி கல்யாணத்தை செய்வது, பிறகு விவரம் தெரிஞ்சவுடன் எகிறுவது, இது எல்லா இடத்துலயும் நடக்குது...

ஹும்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

குற்றவாளி 1: சமுதாயம்

குற்றவாளி 2: பெண்.

பிடிக்காவிட்டால் திருமணம் செய்திருக்கக்கூடாது (சமுதாயம் தரும் கல்வி சிந்திக்கும் குழந்தைகளை உருவாக்குவது இல்லை)

குற்றவாளி 3: பெற்றோர் .

ஆடம்பரமாக அல்லக்கைகளை அழைத்து திருமணம் நடத்த தெரிந்த இவர்கள், பெண்ணுக்கு பிடித்திருக்கிறதா என்று கேட்டி இருக்கலாம்.(பகட்டு , படோபடம் , தனக்காக வாழாமல் அடுத்தவன் என்ன நினைப்பான் என்று வாழும் சமுதயாக் கொடுமை)

குற்றவாளி அல்ல குற்றமே இந்த மணமகன் தான்:

சக துணைக்கு மணமான 5 நாளில் இப்படி கேடு விளைவித்து விட்டோமே என்ற சொரணை இல்லாமல் செல்போன் பற்றிப் பேசுவது.


****

சட்ட மீறல் என்பது படித்தவன் முதல் படிக்காதவன் வரை செய்யும் முட்டாள்தனம்.இதற்கு அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது.

15 வயது பையன் ஆப்ரேசன் செய்தால் அது சட்ட மீறலாக டீக்கடையில் விவாதித்துக் கொண்டே "என் பையன் 15 வயசிலேயே நல்லா பைக் ஓட்டுவான்" என்று சிலாகிக்கும் முண்டங்கள் இருக்கின்றன.

14 வயது பையனுக்கு தனது ஸ்கூட்டரைக் கொடுத்து ஓட்டச் சொல்லும் ட்ராபிக் SI யை பார்த்து உள்ளேன்.

குடித்துவிட்டு ஒட்டுவது தவறு என்று யாருக்கும் தெரிந்திருக்க வேண்டும் எதிர்பார்க்க முடியாது. சமுதாயம் அப்படி. எதுவும் தவறே அல்ல இந்தியாவில். :-(((


***

எதற்கு குடிக்கிறோம் , எவ்வளவு குடிக்கிறோம் , ஏன் குடிக்கிறோம் என்பது தெரிந்திருக்கும் வரையில் குடிப்பது தவறு அல்ல.சாமிகளே சாராயம் குடிப்பதைப் பார்த்துள்ளேன்.
இந்த விசயத்தில் அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது என்பதே எனது எண்ணம். நல்ல வாழ்க்கைமுறைக் கல்வியைக் கொடுக்கலாம் அவ்வளவே செய்ய இயலும்.


***

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது என்பது எல்லா நாடுகளிலும் உண்டு. ஆனால் அங்கே பெரும்பாலனவர்களுக்கு அது சட்ட மீறல் என்று தெரியும். பெரும்பாலான நம்மவர்களுக்கு அது தவறு என்றே தெரியாது.பின்னே எப்படித் திருந்துவார்களாம்.

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
'குடி குடியைக் கெடுக்கும்'னு சொல்லி இருக்கறது எவ்வளவு உண்மை பாருங்க. அந்தப் பொண்ணுக்காகத்தான் பரிதாபப்படணும். பாவம்(-://

உண்மைதான் டீச்சர்.. அந்தப் பெண்ணுக்கு இது வாழ்க்கையில் நடக்கக் கூடியதுதான் என்ற பக்குவம் இல்லை. 21 வயதில் என்ன பக்குவம் இருக்கும்? ஏட்டில் படிக்கின்ற கல்வி அறிவு 24 மணி நேர வாழ்க்கைக்கும் உதவாது. எனக்கும் பாவமாகத்தான் இருந்தது. அந்தப் பெண் கோபப்படுவதிலும் ஒரு பக்கம் அர்த்தம் உண்டு. மூல காரணம் குடிதானே.. படிக்கின்ற குடிமகன்கள் புரிந்து கொண்டால் நல்லது.

வடுவூர் குமார் said...

இதை தட்டச்சத்தியது தமிழ்99 யிலா அல்லது தமிங்கலத்திலா?
இங்கெல்லாம் ஒரு பத்தி அடிக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்துவிடுகிறது.:-)))
குடித்தவனுக்கு குடுக்க வேண்டிய மருவாதையை சரியாகத்தான் அந்த பெண் கொடுக்கிறாள்.

உண்மைத்தமிழன் said...

டோண்டு ஸார்..

நீங்கள் சொன்னதும் உண்மைதான். மு.க. மட்டுமல்ல அதற்குப் பின் வந்த அரசுகளும் அதில் மிக எளிதாகக் கிடைத்த வரி வருவாயில் மயங்கி கடையை அவிழ்த்துவிட்டார்கள். கள் குடித்த குரங்கைப் போல் மதி மயக்கத்தில் இருக்கிறார்கள் 'குடி'மக்கள். அரசுகளே முன் வந்தால் மட்டும்தான் இந்தக் கொடுமையை தமிழ்நாட்டை விட்டு விரட்ட முடியும்..

உண்மைத்தமிழன் said...

பங்காளி ஸார்.. உங்களுக்கே இது நியாயமா?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
பிரமத மன்திரி இல்லடா டுபுக்கு. சீப் மினிஸ்டர்!!!//

அனானி.. அந்தக் காலக்கட்டத்தில் சென்னை மாகாணத்தின் சீப் மினிஸ்டரின் பெயர் பிரதம மந்திரிதான்.. சென்னை தனி மாநிலமாக உருவான பின்புதான் அதற்கு முதல் அமைச்சர் என்ற பெயர் வந்தது.. ஓகேவா.. டோண்டு ஸார் சொன்னது சரிதான்..

அது சரி.. நீங்களே வந்தது அனானிதானே.. ஒரு பதிவருக்கு குறைந்தபட்ச மரியாதையாவது கொடுக்கத் தெரியாதா? உங்களுடைய பின்னூட்டத்தில் தவறு இருக்கிறது என்பதால்தான் இதை அனுமதித்தேன்..

உண்மைத்தமிழன் said...

//செந்தழல் ரவி said...
குடியால பாதிக்கப்படுறது ஹை க்ளாஸ் மக்கள் இல்லை, சாதாரண மக்கள் தான் என்று சொல்லியிருக்கீங்க...
பொய் சொல்லி கல்யாணத்தை செய்வது, பிறகு விவரம் தெரிஞ்சவுடன் எகிறுவது, இது எல்லா இடத்துலயும் நடக்குது... ஹும்..//

ரவி பிரதர்.. குடியினால் ஏழைகளுக்கு மட்டும்தான் நோய், விபத்து ஏற்படும் என்றில்லை. பணக்காரர்களுக்கும் வரும். அவர்கள் பணத்தால் அந்த துயரத்தை கொஞ்சம் எளிமையாக்கிக் கொள்வார்கள். இங்கே பாருங்கள்.. அந்தப் பெண்ணுக்குப் பதிலாக இரவில் பார்த்துக் கொள்வதற்கு வேறு ஆள் இல்லை. இதுவே பணக்காரர்கள் என்றால் பத்து பேர் இருப்பார்களே.. பணத்தை வைத்து உயிரை மீட்க முடியாதே தவிர.. எப்படின்னாலும் போராடலாம். ஆனால் ஏழைகளால் போராட்டமே நடத்த முடியாது பிரதர்..

Anonymous said...

//இன்பத்தையும், துன்பத்தையும் ஒரு சேரத்தான் தருகிறான் ஆண்டவன். இன்பம் வரும்போது குடும்பத்தோடு அதை அனுபவிக்கிறோம். துன்பம் வரும்போது பெரியவர்கள் மட்டுமே எதிர்கொள்கிறோம். துன்பம் என்ற ஒன்றும் நம் பிள்ளைகளுக்கு மிகச் சிறந்த ஆசிரியர்தான் என்பதை நாம் உணர்வதில்லை. //

நல்ல வார்த்தைகள் உ.தமிழரே....

Anonymous said...

//அது சரி.. நீங்களே வந்தது அனானிதானே.. ஒரு பதிவருக்கு குறைந்தபட்ச மரியாதையாவது கொடுக்கத் தெரியாதா? உங்களுடைய பின்னூட்டத்தில் தவறு இருக்கிறது என்பதால்தான் இதை அனுமதித்தேன்..//

அப்போ எம்ஜிஆர் மதுவை விலக்கினாரா என்று கேளேன் உங்க டோண்டு விடம்?

கருணாநிதியை ஏன் பிடிக்கலே அவனுக்கு?

கொட்டை தாங்குவதற்கும் ஒரு அளவு உண்டு. போலி சும்மாவா உன்னை தேர்ந்து எடுத்தத இருக்கான்? சரியான தேர்வுதான்.

உதை வாங்கி சாவுடா பேமானி.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
உண்மைத்தமிழன் said...

//கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
குற்றவாளி 1: சமுதாயம்
குற்றவாளி 2: பெண்.
பிடிக்காவிட்டால் திருமணம் செய்திருக்கக்கூடாது (சமுதாயம் தரும் கல்வி சிந்திக்கும் குழந்தைகளை உருவாக்குவது இல்லை)//

இது பணக்கார வீடுகளிலேயே பெரும்பாலும் முடியாத விஷயம் பலூன் ஸார்.. அந்தக் கிராமத்து பெற்றோர்களுக்கு இது எங்கே புரியப் போகிறது..? ஒரு பெண் தனக்கு இந்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று சொல்லும் சொல்லுக்கு மரியாதை தருவது எத்தனை குடும்பத்தில் இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை.

//குற்றவாளி 3: பெற்றோர் .
ஆடம்பரமாக அல்லக்கைகளை அழைத்து திருமணம் நடத்த தெரிந்த இவர்கள், பெண்ணுக்கு பிடித்திருக்கிறதா என்று கேட்டி இருக்கலாம்.(பகட்டு , படோபடம் , தனக்காக வாழாமல் அடுத்தவன் என்ன நினைப்பான் என்று வாழும் சமுதயாக் கொடுமை)//

கல்வியறிவு இல்லாததுதான் குற்றம் தலைவா.. அவர்களே சொல்கிறார்களே.. 2 லட்சம் ரூபா செலவு செஞ்சாலும் ஒரு முறை முந்திரி தோப்பை ஏலத்துல எடுத்து அள்ளிரலாம் என்று.. பகட்டு, படோபடமும் இவர்களிடம் இல்லை ஸார்.. இவர்களுடைய குறிக்கோள்.. பெண்ணை பக்கத்திலேயே வைத்திருக்க வேண்டும். அவளும் நன்றாக வாழ வேண்டும். நாமும் கவுரவமாக இருக்க வேண்டும் என்பது.. காலம் செய்த கோலத்திற்குப் பின்புதான் தெரிந்திருக்கிறது. இதனைக்கூட அவர்கள் எப்படி எடுத்துக்கொண்டுள்ளார்கள் என்பதனை கடைசி வரிகளில் தெரியப்படுத்தியுள்ளேன்.

//சட்ட மீறல் என்பது படித்தவன் முதல் படிக்காதவன் வரை செய்யும் முட்டாள்தனம்.இதற்கு அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது. 15 வயது பையன் ஆப்ரேசன் செய்தால் அது சட்ட மீறலாக டீக்கடையில் விவாதித்துக் கொண்டே "என் பையன் 15 வயசிலேயே நல்லா பைக் ஓட்டுவான்" என்று சிலாகிக்கும் முண்டங்கள் இருக்கின்றன.
14 வயது பையனுக்கு தனது ஸ்கூட்டரைக் கொடுத்து ஓட்டச் சொல்லும் ட்ராபிக் SI யை பார்த்து உள்ளேன்.
குடித்துவிட்டு ஒட்டுவது தவறு என்று யாருக்கும் தெரிந்திருக்க வேண்டும் எதிர்பார்க்க முடியாது. சமுதாயம் அப்படி. எதுவும் தவறே அல்ல இந்தியாவில். :-(((//

மக்களுக்கு பொது சிந்தனை வேண்டும். காரில் செல்பவர்களே தங்களது மடியில் ஒரு வயது பையனை அமர்த்திக் கொண்டு அவன் கையில் ஸ்டீயரிங்கை கொடுத்துவிட்டு அதை ஒரு பெருமிதமாகப் பார்த்தபடியே செல்கிறார்கள். நன்கு படித்தவர்களே இந்த நிலையில் இருக்கும்போது மாட்டுத் தொழுவத்தில் உழலுபவர்களிடம் தேச நலனையும், பொது நலனையும் நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

//எதற்கு குடிக்கிறோம் , எவ்வளவு குடிக்கிறோம் , ஏன் குடிக்கிறோம் என்பது தெரிந்திருக்கும் வரையில் குடிப்பது தவறு அல்ல.சாமிகளே சாராயம் குடிப்பதைப் பார்த்துள்ளேன்.
இந்த விசயத்தில் அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது என்பதே எனது எண்ணம். நல்ல வாழ்க்கைமுறைக் கல்வியைக் கொடுக்கலாம் அவ்வளவே செய்ய இயலும்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது என்பது எல்லா நாடுகளிலும் உண்டு. ஆனால் அங்கே பெரும்பாலனவர்களுக்கு அது சட்ட மீறல் என்று தெரியும். பெரும்பாலான நம்மவர்களுக்கு அது தவறு என்றே தெரியாது.பின்னே எப்படித் திருந்துவார்களாம்.//

இது என்ன வாதம் பலூன் ஸார்.. குடிப்பதே தவறு என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் பாட்டுக்கு சாமியே சாராயம் குடிப்பதைப் பார்த்துள்ளேன் என்கிறீர்கள். எந்த சாமி ஸார்..? கருப்பசாமியா.. முதலில் மாதத்துக்கு ஒரு நாள்.. பிறகு வாரத்துக்கு ஒரு நாள் பிறகு இரண்டு நாட்களுக்கு ஒரு நாள்.. கடைசியில் தினமும்.. இப்படித்தான் மெகா குடிகாரர்கள் குடியின் வலையில் வீழ்கிறார்கள். இதிலிருந்து மீள நினைத்தாலும் அவர்களால் முடியவில்லை. தினசரி பேப்பர்களைப் பாருங்கள். தினமும் நான்கு பேராவது குடிப்பழக்கத்தின் காரணமாக தற்கொலை அல்லது கணவரின் குடிப்பழக்கத்தினால் மனைவி தற்கொலை என்று செய்தி வருகிறது.

முதலில் எதற்கு குடிக்க வேண்டும்? பணமும் செலவாகி உடலும் நலிந்து உயிருக்கே உலை வைக்கிறதே? குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது தவறு என்பதைவிட ஆபத்து என்பதையும், அது விபத்தில் கொண்டு போய் விடும் என்பதையும் உணர்ந்துதான் அனைவரும் குடித்துவிட்டு வண்டி ஓட்டி வருகிறார்கள். அவரவருக்கு வாழ்க்கை பற்றிய பயம் வேண்டும் ஸார்.. அனுபவம் கிடைத்து உணர்ந்துதான் தெரிந்து கொள்வேன் என்றால் நம்மால் எதுவும் செய்ய முடியாது. உச்சு கொட்டத்தான் முடியும்..

உண்மைத்தமிழன் said...

//வடுவூர் குமார் said...
இதை தட்டச்சத்தியது தமிழ்99 யிலா அல்லது தமிங்கலத்திலா? இங்கெல்லாம் ஒரு பத்தி அடிக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்துவிடுகிறது.:-))) குடித்தவனுக்கு குடுக்க வேண்டிய மருவாதையை சரியாகத்தான் அந்த பெண் கொடுக்கிறாள்.//

வடுவூர் ஸார்.. குடித்தவன் வாய்ப்புக் கிடைத்ததால் குடித்துள்ளான். குடித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் அல்ல. போலித்தனமான கெளரவப்படுத்துதல் என்ற போதையில் சிக்கி இந்தப் போதையில் மாட்டிக் கொண்டுள்ளான். அந்தப் பெண்ணுக்கோ தான் படித்த படிப்புக்கும், இருக்கின்ற அழகிற்கும் இவனெல்லாம் ஒரு கணவனா என்ற எண்ணம்.. குடிப்பவர்கள் அனைவருமே கெட்டவர்கள் இல்லையே குமார் ஸார்.. இது ஒரு நிகழ்வு அவ்வளவுதான். அந்தப் பெண்ணுக்கு தேவை இப்போது ஒரு நல்ல ஆலோசகர். கிராமத்தில் யார் வந்து இதைச் சொல்வது? 'கணவனே கண் கண்ட தெய்வம்' இதைத்தான் ஓதுவார்கள்.. இனிமேல் வருகின்ற இளைய சமுதாயத்தினரிடம் வாழ்க்கையோடு ஒன்றி வாழ் என்று சொல்லி புரிய வைப்பது கஷ்டம்தான்..

Unknown said...

//எந்த சாமி ஸார்..? கருப்பசாமியா//

:-))

உண்மைத் தமிழன் இந்த ஸார் வேண்டாமே... pleeeeeease :-)

கல்வெட்டு அல்லது பலூன்மாமா என்றே சொல்லலாம்.பெயர்கள் அழைப்பதற்கே அது புனை பெயராக இருந்தாலும் . :-))

***

முனியாண்டி சாமிக்கு வாயில் சாராயம் ஊற்றுவதை (சிலைக்குத்தான்) பல முறை பார்த்துள்ளேன். :-)))


******

குடிப்பது தவறு என்பது பொத்தாம் பொதுவாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.சிகரெட்டைவிட இது அதிகத் துன்பத்தை உடலுக்கு தரப்போவது இல்லை. :-))


***

குடிப்பதை ஒழுக்கம் சார்ந்த விசயமாகவும் நான் பார்க்கவில்லை.
***

கிராமங்களில் குழந்தை பேறு காலங்களில் தாய்க்கு பிரசவத்திற்குப்பின் "மருந்து" கொடுப்பதை கண்டுள்ளேன்.

ரிக்ஷா ஓட்டி கிடைத்த அத்தனை பணத்தையும் குடித்துவிட்டு குடிமகன்கள் தெருவில் கிடப்பதை பார்த்து இருக்கிறேன்.


மிகச் சிறப்பாக அலங்காரம் செய்து கொண்டு ஆடம்பரமாக குடித்து, கூத்தடித்து அதுவே page3 போட்டோவில் வந்தால் பெருமையாகக் கருதி உலகம் மிகவும் சந்தோசமானது என்று நினைத்துக் கொண்டு ,காரை வெளியில் நிறுத்தி காத்திருக்கும் ட்ரைவரை ஒருமையில் அழைத்து கலாட்டா செய்யும் நவ நாகரீக பெண்களையும் பார்த்து இருக்கிறேன்.


பலர் பல விசயங்களுக்காக குடிக்கிறார்கள்.
****

கடவுள் நம்பிக்கை உள்ளவர்தானே நீங்கள்?

எல்லா பக்தர்களையும் விடுங்கள்...அய்யப்ப பக்தர்கள் குடிப்பதை அந்த அய்யப்பனாலேயே தடுக்க முடியவில்லை யாரால் முடியும் :-))

******

குடி குடிமக்களின் விருப்பம். அவர்கள் மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல் இருக்க சட்டம் போடலாம். மற்றபடி அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய இயலாது.

உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால்
இதுதான் நிதர்சணமான உண்மை.

***


சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பாலியல் தொழிலையே ஒன்றும் செய்ய முடியவில்லை. இதை என்ன செய்ய?


***

சோம பானம் ,சுரா பானம் முதல் கள்,சாராயம் சீமைச் சரக்கு வரை மக்கள் ஊற்றியே வாழ்ந்து வந்துள்ளார்கள்.


***

நல்ல குடிமக்களை வளர்ப்பதன் மூலம் சிலவற்றைச் சாதிக்கலாம்.

1.சட்டங்களை மதித்தல் (இதனால் அடுத்தவருக்கு தொந்தரவு குறையும்)

2.உண்மையைச் சொல்லுதல்(இதனால் இது போன்ற சர்ப்பரைஸ்கள் மணப்பென்ணுக்கு ஏற்படாது)

etc...

குழலி / Kuzhali said...

உங்களின் இந்த பதிவில் பொதுவாக எனக்கு மாற்று கருத்து ஏதுமில்லை.... ஒரு சில இடங்கள் தவிர....

இந்த கேள்வி உங்களுக்கு

இந்த பதிவில் குடி குடி என்கிற இடத்திலெல்லாம் ஹெல்மெட் என்று போட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்? அல்லது
ஹெல்மெட் சட்டத்திற்கு "என் சாவைத் தடுக்க இவர்கள் யார்..?" என எழுதப்பட்ட பதிவில் http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_29.html ஹெல்மெட் ஹெல்மெட் என்ற இடத்தில் குடி குடி என்று போட்டிருந்தால் எப்படியிருந்திருக்கும்....

உண்மைதமிழா கட்டாய ஹெல்மெட்டுக்கு சட்டம் தேவையில்லை என்ற உங்களுக்கு மதுக்கடைகள் மூட மட்டும் சட்டத்தையும் அரசாங்கத்தையும் தேடுகிறீர்கள் (மதுக்கடை மூடுதலை நான் ஆதரிக்கிறேன் என்பது வேறு விசயம்...) என்றால் வெளிப்படையாகவே கேட்கிறேன் மதுகடை திறந்து வைத்திருப்பதால் அதை எதிர்ப்போம் உயிர் போகிறது என்று அதே கட்டாய ஹெல்மெட் கொண்டுவந்தால் தனிமனித சுதந்திரம் என்பதில் ஆரம்பித்து என் சாவை தடுக்க நீ யாருடா என அதையும் எதிர்ப்போம்.... என்றால் இரண்டு கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பிரச்சினைக்கு இரண்டு வேறு விதமான நிலைகளை உங்களை போன்ற விமர்சகர்கள் எடுத்தால் உங்களுக்கு பிரச்சினைகள் மீது பிரச்சினையா? அல்லது திமுக செய்வதால் பிரச்சினையா?

நாமக்கல் சிபி said...

குழலி,

இவர் குடிக்க மாட்டார். ஆனால் ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்ட விரும்புவார்.

:)

உண்மைத்தமிழன் said...

கல்வெட்டு என்ற பலூன்மாமா அவர்களே..

சரி.. பலூன்மாமா என்றே அழைக்கிறேன்.

//முனியாண்டி சாமிக்கு வாயில் சாராயம் ஊற்றுவதை (சிலைக்குத்தான்) பல முறை பார்த்துள்ளேன். :-)))//
சாமி சிலையோட வாய்ல சாராயத்தை ஊத்தினா அது உங்களுக்கு சாமி சாராயம் குடிக்குதுன்னு நினைப்பா..? அது ஒரு மூடத்தனம்.. முட்டாள்தனம்.. இதுல போய் அதைக் கோர்க்கலாமா சாமி..

//குடிப்பது தவறு என்பது பொத்தாம் பொதுவாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.சிகரெட்டைவிட இது அதிகத் துன்பத்தை உடலுக்கு தரப்போவது இல்லை. :-))//
பலூன் மாமா பேசுறது நீங்கதானா? குடிக்கின்ற பழக்கம் உள்ளவர்கள் அனைவருமே கெட்டவர்களோ அல்லது நல்லவர்களோ அல்ல.. ஆனால் குடி உள்ளே சென்ற பிறகு குடிகாரர்களின் சேட்டைகளைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அது எப்படி? சாதாரணமாக அதை எடுத்துக் கொள்ள முடியுமா?

இப்படி ஒரு நாளைக்கு ஒரு லார்ஜ்தான் என்று ஆரம்பித்து ஒரு நிமிஷத்துக்கு ஒரு லார்ஜ் என்ற கணக்கில் குடிப்பழக்கம் கொண்டு போய்விட்டுவிடும். இதுவும் போதைப் பழக்கம் போன்றதுதான். இதனை விட முடியாமல்தான் குடிமகன்கள் பலரும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை சிகரெட்டைவிட குடி மிகவும் ஆபத்தானது. சிகரெட்டை விடுவது சுலபம்.. ஆனால் குடியை விடுவது உயிரை விடுவதற்குச் சமம் என்று குடிகாரர்கள் சங்கத்தினர் தெரிவிக்கிறார்கள் பலூன் மாமா.

//குடிப்பதை ஒழுக்கம் சார்ந்த விசயமாகவும் நான் பார்க்கவில்லை.//
பேப்பரெல்லாம் படிக்கிற பழக்கமெல்லாம் இருக்குள்ள பலூன் மாமா.. குடிவெறியில் மகளைக் கற்பழித்த கயவன் கைது. குடிவெறியில் மனைவிக்கு தீ வைத்த கணவன் கைது.. குடிவெறியில் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டவர் மரணம், குடித்துவிட்டு கலாட்டா.. 4 இளைஞர்கள் கைது.. - இதையெல்லாம் படிச்சதில்லீங்களா சாமி..

கண்ணதாசன் ஒரு புத்தகத்துல சொல்லுவான்.. மனுஷனுக்கு வயித்துப் பசி முடிஞ்சிருச்சுன்னா அடுத்தப் பசியா உடல் பசிக்குத்தான் ஆள் தேடுவான்னு.. அது மாதிரி குடித்துவிட்டு தகராறு செய்தவர்களையெல்லாம் மறுநாள் காலை பாருங்கள்.. இவர்களா இப்படி கலாட்டா செய்தார்கள் என்று நம்மை ஆச்சரியப்படுத்தும்வகையில் அப்பாவியாகக் காட்சி தருவார்கள். குடிக்கும்வரையிலும் அவனுக்கு அவனே எஜமான்.. ஆனால் குடி உள்ளே சென்ற பிறகு போதைக்கு அவன் அடிமை. அந்தப் போதையில் செய்வதுதான் கொலை, கொள்ளை, கற்பழிப்பு. ஒரு குவார்ட்டர்தான் ஒரு சில அப்பாவிகளின் உயிரையும், வாழ்க்கையையும் மாற்றிப் போடுகிறது.. புரிந்து கொள்ளுங்கள் சாமி..

//கடவுள் நம்பிக்கை உள்ளவர்தானே நீங்கள்? எல்லா பக்தர்களையும் விடுங்கள்...அய்யப்ப பக்தர்கள் குடிப்பதை அந்த அய்யப்பனாலேயே தடுக்க முடியவில்லை யாரால் முடியும் :-))//

குடிப்பது மனிதன். ஆண்டவன் குடிக்கச் சொல்லவில்லை. ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் சென்று ஒவ்வொரு குடிமகனின் அருகிலும் சென்று அவனது கையைப் பிடித்து "ஏம்ப்பா குடிக்காத ராசா.. நான்தான் காக்கும் கடவுள் சிவபெருமான் வந்திருக்கேன். இது தப்புப்பா.. அப்புறம் எமதர்மன் என்னையும் மீறி வந்து தூக்கிருவான்.."னு சொல்வார் என்று எதிர்பார்க்கிறீர்களா? பின்ன..?

அனுபவம்.. ஸார்.. அனுபவம்.. பட்டுத்தானே தெரிந்து கொள்வார்கள். நானே எழுதியிருக்கேனே அனுபவமே கடவுள்ன்னு.. நான் குடிக்காமல் இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் எனது தந்தை குடிப்பழக்கத்தால் எவ்வளவு கொடுமையை அனுபவித்தார் என்பதைக் கண்கூடாக பார்த்ததுதான்..

//குடி குடிமக்களின் விருப்பம். அவர்கள் மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல் இருக்க சட்டம் போடலாம். மற்றபடி அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய இயலாது. உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் இதுதான் நிதர்சணமான உண்மை.//

இது எப்படி ஸார்? குடிச்ச பின்னாடிதான அத்தனை பேரும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறான்.. அப்ப அவனைப் புடிச்சுக் கேட்டீங்கன்னா ஒரே போடா போடுவான்.. நான் ஆடலை.. என் வயித்துக்குள்ள போயிருக்குற ஆல்ஹகால் ஆடுது. அதைப் போய் கொஸ்டீன் கேளுன்னுவான்.. எப்படி ஸார்? அரசாங்கத்தான் ஏன் ஒன்றும் செய்ய முடியாது. மதுக்கடைகளை இழுத்து மூடச் செய்யுங்கள். பின்பு எங்கிருந்து குடிப்பார்கள் என்று பார்ப்போம். கள்ளச்சாராயம் பெருகும் என்று சொன்னாலும் 5 சதவிகிதம்கூட கள்ளச்சாராயம் ஓடாது என்பது உறுதி.

//சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பாலியல் தொழிலையே ஒன்றும் செய்ய முடியவில்லை. இதை என்ன செய்ய?//
இப்போதும் பாலியல் தொழில் எங்கோ ஒரு சில இடங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாகத்தானே இருக்கிறது.. தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு இல்லையே.. அதையும் கட்டுப்படுத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள். முழுக்க முழுக்க முடியாது என்பது எனக்கும் தெரியும். உலகில் ஆண்கள் என்ற ஒரு இனம் இருக்கின்றவரையில் இந்தத் தொழில் இருக்கத்தான் செய்யும். அதற்காக அதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்தா வழங்க முடியும்? என்ன பேசுறீங்க சாமி..

//சோம பானம் ,சுரா பானம் முதல் கள்,சாராயம் சீமைச் சரக்கு வரை மக்கள் ஊற்றியே வாழ்ந்து வந்துள்ளார்கள்.//
பலூன் மாமா என்னை வைச்சு காமெடி, கீமடி ஏதும் பண்ணலியே..

உண்மைத்தமிழன் said...

குழலி ஸார்..

உங்களது கேள்விகள் நியாயமானதுதான். ஹெல்மெட் மேட்டரில் நான் முதலில் என்னைப் பொருத்தித்தான் எழுத ஆரம்பித்தேன். எழுத்தின் போக்கில் அது பொதுவாக இருக்க விரும்பாமல் 'மேலே' போக விருப்பம் உள்ளவர்களின் மனக்குமுறலாக மாறிவிட்டது. பதிவு வெளிப்பட்ட பின்புதான் எனக்கே 'கலர்' மாறியிருந்தது தெரிந்தது. அதன் பின்னூட்டங்களில் நான் அதை எழுதியிருந்தேன். ஹெல்மெட் நான் போடுகிறேன். உடன் அதையும் மீறி விபத்துக்களுக்கு உறுதுணையாக இருக்கும் விஷயங்களை அரசு களையுமா என்று எழுதியிருந்த ஒரு பாரா காணாமல் போய் மொத்தப் பதிவும் எனக்கு எதிராகத் திரும்பி விட்டது.

போதாக்குறைக்கு தலைப்பும் என் விருப்பத்தை வெளிப்படுத்துவதாக அமைந்து போக.. அந்த ஒரு பதிவில்தான் நான் யாரிடமும் Good வாங்க முடியவில்லை.

அப்போது நீங்கள் வரவில்லை. ஆனால் இப்போது தெளிவாக மாட்டுனான்டா மச்சான்னுட்டு வந்துட்டீங்க. இப்போது அதற்கும் சேர்த்து என்னைக் கும்மி விடுங்கள்..

ஹெல்மெட் வேண்டும். குடி வேண்டாம்.. ஹெல்மெட் கட்டாயமில்லை. ஆனால் குடி கட்டாயம் இருக்கவே கூடாது. ஹெல்மெட் தலையையும் காக்கும், சில சமயம் உயிரையும் காக்கும். குடி இது இரண்டையுமே ஒரே லார்ஜில் காலி செய்துவிடும். ஹெல்மெட்டை கட்டாயமாக்குதலில்தான் பிரச்சினை.

தலையில் அடிபட்டு கோமா ஸ்டேஜிற்கு போய் ரம்பா, ஊர்வசி, மேனகா டான்ஸ் பார்த்துவிட்டு போரடித்து உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை நாட்டில் மிக மிக குறைவாக இருப்பதால்தான் ஹெல்மெட்டின் மகத்துவம் பலருக்கும் புரியவில்லை. (இது இன்னும் இந்த உலகில் வாழ்ந்தே தீர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு. எனக்கில்லை) விபத்தினால் தலையில் அடிபட்டு உயிரை விடும் அப்பாவிகளின் கதைகள் வாகன ஓட்டிகளின் மனதைத் தொட்டிருந்தால் நிச்சயம் அனைவருமே அதை விரும்புவார்கள். ஆனால் நிலைமை அப்படியல்ல. காவல்துறை சொன்ன புள்ளிவிபரங்கள் அப்போதைய நிலையில் ஹெல்மெட்டின் விற்பனையை கூட்டுவதற்காக சொல்லப்பட்டவை என்றே நான் நம்புகிறேன்.

Anonymous said...

//இந்த பதிவில் குடி குடி என்கிற இடத்திலெல்லாம் ஹெல்மெட் என்று போட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்? அல்லது
ஹெல்மெட் சட்டத்திற்கு "என் சாவைத் தடுக்க இவர்கள் யார்..?" என எழுதப்பட்ட பதிவில்//

இதில் வரும் மாப்பிள்ளை கதாபாத்திரம், ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டியிருந்தாலும் இப்போது இல்லாவிட்டாலும் இன்னும் சிலவருடங்களில் இதை விட மோசமாக இதே மருந்துவமனையில் குடியால் உண்டான வியாதிக்காக வந்திருந்திருபார்!

உண்மைத்தமிழன் said...

//நாமக்கல் சிபி said...
குழலி, இவர் குடிக்க மாட்டார். ஆனால் ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்ட விரும்புவார்.//

சிபி தம்பி.. போன்ல கூப்பிட்டா சிக்க மாட்டேங்குற.. ஆனா நான் மாட்டுற பதிவுன்னா ஓடி வந்தர்றே.. நல்லாயிரு தம்பி.. நல்லாயிரு..

இந்த ஹெல்மெட் இருக்கே.. பெரிய தொல்லையா இருக்கு சாமி.. ஏற்கெனவே தூக்க முடியாத சைஸ்ல ஒரு பேகையும் வைச்சிருக்கேன். இப்போ இதையும் தூக்குடான்னா மனுஷன் எம்புட்டுத்தான் கஷ்டப்படுறது சொல்லு.. அப்புறம் அடிபடுமேன்னு நீ சொன்னா.. அதுதான் விதின்னா இருந்திட்டுப் போகுது.. (இது எனக்கு மட்டும்தான்)

Nakkiran said...

two line matter... you wrote in 20 pages...

please konjam karunai kaatungal.. padikka mudiyala...

உண்மைத்தமிழன் said...

நக்கீரன் ஸார்.. நான் சிறுகதையோ, அல்லது குறுங்கதையோ அல்லது நெடுங்கதையோ எழுதவில்லை. சமூகம் சார்ந்த கட்டுரையைத்தான் எழுதியிருக்கிறேன். நடந்த விஷயங்களை அதனூடேயே சொல்லும்போது முழுவதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். அந்தச் சம்பவத்தைத்தான் நான் கட்டுரையை வடிவமைத்தேன். பின்பு முழுமையாகச் சொல்லாமல் எப்படி? ஆனாலும் தங்களுடைய வருகைக்கும், ஆலோசனைக்கும் நன்றி..

ஆமா ஸார்.. அந்த மில்லியன் டாலர் பரிசு கூப்பன் ஒண்ணு வாங்கி எனக்கு பிரஸண்ட் பண்ணா அடுத்து உங்களுக்காகவே ரெண்டு வரில என்ன.. ஒரு வரில கட்டுரை எழுதி முடிச்சிர்றேன்.. ஓகேவா ஸார்.

M.Rishan Shareef said...

'லக்ஷ்மி'யை விற்றதுக்காகக் கவலைப்படும் அப்பா,அம்மா தாங்கள் தவமிருந்து பெற்ற பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்த விஷயத்தில் மட்டும் அவசரப்பட்டு விட்டார்களோ என எண்ணத்தோன்றுகிறது உண்மைத்தமிழன்.

அந்தப் பெண்ணின் கல்வியறிவு,அழகு இதற்கெல்லாம் பொருத்தமான,வயதிலும் சற்றுக்கூடுதலான ஒரு பையனைப் பார்த்திருக்கலாம்.பையனுக்கு 22 வயது என்பது பொறுப்புக்களை உணரா வயதுதான்.இல்லாவிடில் இத்தனை களேபரத்துக்கும் மத்தியில் தன் செல்போனைத் தேடிக்கொண்டிருப்பாரா?

மதுபோதைதான் எல்லா இடத்திலும் பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கிறது.நாட்டு மக்களின் கலாச்சாரச் சீரழிவுக்கு அரசே உடந்தையாகிறது.
முதலில் மதுபான சாலைகளை ஒழித்துவிட வேண்டும் நண்பரே.

அந்தப்பெண்ணின் கோபம் நியாயமானது தான்.ஆற்ற முடியாத ஆத்திரமும்,மனத்தாங்கலும்,துயரமும்,எதுவுமே செய்யமுடியாத இயலாமையும் கோபமாக வெளிப்படுகிறது என நினைக்கிறேன்.

abeer ahmed said...

See who owns joomlart.com or any other website:
http://whois.domaintasks.com/joomlart.com