காலக்கூத்து - சினிமா விமர்சனம்

28-05-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மதுரை ஸ்ரீகள்ளழகர் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
படத்தில் பிரசன்னா, கலையரசன், சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, ஆர்.என்.ஆர்.மனோகர், மகேந்திரன், பாண்டி ரவி, ராஜலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – எம்.நாகராஜன், ஒளிப்பதிவு – பி.வி.சங்கர், இசை – ஜஸ்டின் பிரபாகரன், படத் தொகுப்பு – ஆர்.கே.செல்வா, கலை இயக்கம் – என்.கே.ராகுல், சண்டை இயக்கம் – அன்பறிவ், நடன இயக்கம் – சந்தோஷ், மக்கள் தொடர்பு – நிகில், இணை தயாரிப்பு – சக்கரவர்த்தி.
தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக குற்றச் செயல்களில் இடம் பிடித்திருக்கும் காதலுக்கு எதிரான கொலை என்னும் கான்செப்ட்டில் இடம் பிடித்திருக்கும் அடுத்தப் படம் இது. முழுக்க, முழுக்க மதுரையை மையமாக வைத்தே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஹரி என்னும் கலையரசனும், ஈஸ்வர் என்னும் பிரசன்னாவும் பள்ளிப் பருவக் காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள். கலையரசனின் அம்மா இறந்துவிட்டார். அப்பாவும் ஒரேயொரு தங்கையும் மட்டும்தான். பிரசன்னாவுக்கு அம்மா, அப்பா இருவருமே இல்லை. அனாதையாக இருந்து கலையரசனுடன் இணைந்த பின்பு அந்த எண்ணமே வராத அளவுக்கு இருக்கிறார்.
கலையரசன் வேலை வெட்டியில்லாதவர்.  பிரசன்னா ஒரு டூவீலர் ஷோ ரூமில் மெக்கானிக்காக இருக்கிறார். கலையரசன் காயத்ரி என்னும் சாய் தன்ஷிகாவை காதலித்து வருகிறார். சாய் தன்ஷிகா கல்லூரியில் படித்து வரும் மாணவி.
பிரசன்னாவை அதே பகுதியில் வசித்து வரும் ரேவதி என்ற சிருஷ்டி டாங்கே காதலிக்கிறார். இந்தக் காதலுக்கு முதலில் கண்டு கொள்ளாமல் இருக்கும் பிரசன்னா பின்பு சம்மதிக்கிறார்.
அந்தப் பகுதி கவுன்சிலரின் மகன் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை வம்புக்கு இழுப்பதையே தொழிலாக வைத்திருக்கிறான். அவன் ஒரு முறை கலையரசனின் தங்கையை இதுபோல் செய்ய… பிரசன்னா அவனை தாக்கிவிடுகிறார். இதனால் கை ஒடிந்து கட்டுப் போட்டு வீட்டில் இருக்கிறான் கவுன்சிலரின் மகன். அப்போது தேர்தல் நேரம் என்பதால் கவுன்சிலர் ‘இப்போது எதையும் செய்ய வேண்டாம்’ என்று சொல்லி அமைதியாக இருக்கிறார்.
பிரசன்னா – ரேவதியின் காதல் கதை ரேவதியின் அப்பாவுக்குத் தெரிய வருகிறது. உடனேயே அவர் தனது சொந்தத்திலேயே மாப்பிள்ளை பார்க்க ஏற்பாடு செய்கிறார். அதற்குள்ளாக ரேவதியை பெண் கேட்கலாம் என்று சொல்லி பிரசன்னா கலையரசனின் அப்பாவை அழைத்துக் கொண்டு ரேவதியின் வீட்டுக்கு வர.. அங்கே ரேவதிக்கும் வேறொரு ஆளுக்கும் திருமண நிச்சயத்தார்த்தம் நடைபெறுகிறது.
பிரசன்னா அதிர்ச்சியாக, கலையரசன் ரேவதியின் வீட்டில் வந்து கத்திக் குவித்துவிட்டு வருகிறார். இதேபோல் சாய் தன்ஷிகாவின் வீட்டிலும் திடீரென்று ஒரு பிரச்சினை.
சாய் தன்ஷிகாவின் தாத்தா தான் கண்ணை மூடுவதற்குள் பேத்தியின் திருமணத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதனால் சாய் தன்ஷிகாவின் தாய் மாமனுக்கே அவரை திருமணம் செய்து வைக்க சாய் தன்ஷிகாவின் குடும்பத்தார் திட்டமிடுகிறார்கள்.
விஷயம் தெரிந்த கலையரசன், சாய் தன்ஷிகாவை அழைத்துக் கொண்டு கோவிலில் வைத்து திருமணம் செய்துவிடுகிறார். நிச்சயத்தார்த்தம் நடைபெறும் தினத்தன்று நடந்த இந்த அலங்கோலத்தால் சாய் தன்ஷிகாவின் வீடே சோகமயமாகிறது.
இன்னொரு பக்கம் தனது ஒரே மகனின் விருப்பதற்காக பிரசன்னாவை போட்டுத் தள்ள அனுமதி தருகிறார் அப்போதைய கவுன்சிலரும், இப்போதைய மதுரை மாநகராட்சியின் மேயருமான அம்மா.
மேயரின் தம்பி தனது அடியாட்களுடன் பிரசன்னாவை தேடத் துவங்குகிறான். இதே நேரம் சாய் தன்ஷிகாவின் வீட்டில் நடந்த ஒரு அசம்பாவிதத்தால் கோபமடைந்த சாய் தன்ஷிகாவின் தாய் மாமன்கள் இருவரும் கொலை வெறியோடு கலையரசனை தேடுகிறார்கள்.
இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் இத்திரைப்படத்தின் திரைக்கதை.
வழக்கமான அதே சினிமா பார்முலாவில்தான் திரைக்கதையையும் அமைத்திருக்கிறார்கள். கலையரசனுக்கு என்ன வேலை என்று தெரியவில்லை. ஆனால் சாய் தான்ஷிகாவை காதலிப்பது மட்டும்தான் வேலை என்று தெரிகிறது. இதிலேயே இந்தக் காதல் மீது ஈர்ப்பே இல்லாமல் போய்விட்டது.
ஆனால் பிரசன்னாவின் காதலை வழங்கியவிதம் அருமை. காதலியே முன்னால் வந்து “நான் உங்களைக் காதலிக்கிறேன். கல்யாணம் செஞ்சுக்கலாமா…?” என்கிறார். பிரசன்னா தனது அனாதை என்கிற அடையாளத்தைத் துறந்துவிட நினைக்கும், அந்தத் தருணம் அழகானது. ஆனால் இந்தக் காதலையும் பட்டென்று உடைத்தது ஏன் என்று தெரியவில்லை. திரைக்கதையில் அழுத்தமே இல்லாமல் சிருஷ்டியின் கேரக்டரை சிதைத்துவிட்டார்கள்.
கலையரசனின்  நடிப்பு எப்போதும்போலத்தான் இருக்கிறது. எந்தவித மாற்றமும் இல்லை. இப்படியே தொடர்ந்தால் இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. ஏதாவது மாறுபட்ட கேரக்டர் ஸ்கெட்ச்சில் அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தாற்போன்று நடித்தால் நன்றாக இருக்கும்.
பிரசன்னா அமைதியின் திருவுருவமாக கிடைத்த கேரக்டரில் அழுத்தம் கொடுத்திருக்கிறார். அவருடைய அமைதியான நடிப்பு அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் திரையைக் கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது. கிளைமாக்ஸில் அவரது முடிவு எதிர்பார்த்ததுதான் என்றாலும் அதைப் படமாக்கியவிதம் சிம்ப்ளி சூப்பர்ப்.
சாய் தன்ஷிகா குளோஸப்பில் முதிர் கன்னி போல தெரிகிறார். இவரை இன்னும் கல்லூரி மாணவியாகவே பார்க்க முடியாது. ஆனால் நடிப்பில் சோடை போகவில்லை. கலையரசனுக்கு கவுண்ட்டர் கொடுக்கும் பல காட்சிகளில் அந்தக் காட்சிகளை ரசிக்கும்படி செய்திருப்பது சாய் தன்ஷிகாதான். கிளைமாக்ஸில் சாய் தன்ஷிகாவின் அந்த ஒன் வுமன் ஷோ பரிதாபத்திலும் பரிதாபம்..! சிறந்த நடிப்பைக் கொட்டியிருக்கிறார் தன்ஷிகா. வெல்டன் மேடம்..
ஒரு காதலியின் மிரட்டல், உருட்டல், அன்பு, பாசம், உருக்கம் இது எல்லாவற்றையு் கலந்தடிக்கும்விதமாக இருக்கிறது சாய் தன்ஷிகா-கலையரசன் காதல் போர்ஷன். இயற்கை நீதிப்படி கலையரசன் செய்வது தவறென்றாலும், சினிமா நீதிப்படி சிறந்த காதல் கதை..!
இதேபோல் சிருஷ்டி டாங்கேவும்.. ஏன் எதற்கு என்பதெல்லாம் சொல்லப்படாமலேயே “உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு…” என்று பிரசன்னாவிடம் சொல்லி “கல்யாணத்திற்கு சம்மதமா..?” என்று கேட்பதும், இதைத் தொடர்ந்த காட்சிகளில் அவரது அருகாமையினால் பெருமைப்படும் காட்சிகளை எடுத்தவிதமும் இந்தக் காதலையும் அழகாகத்தான் தெரிகிறது.
ஆனால், கடைசியில் ஏன் இப்படியொரு முடிவைக் கொடுத்து காதலைப் பிரித்தார்கள் என்று தெரியவில்லை. இதனால் படம் பார்க்கும் ரசிகர்களுக்குள் எந்தவித இம்பாக்ட்டையும் இந்தக் கதை கொடுக்கவில்லை என்று சோகமான விஷயம்.
சாய் தன்ஷிகாவின் அப்பா ஆர்.என்.ஆர்.மனோகர் மற்றும் அம்மா ‘சங்கராபரணம்’ ராஜலட்சுமி இருவரின் நடிப்பும் குறைவில்லை. அதேபோல் சில காட்சிகள் என்றாலும் மேயரம்மாவின் சமாளிப்பும், அவரது மகனின் பாராமுகமும் மிக இயற்கையாக படமாக்கப்பட்டிருக்கின்றன..!
மதுரையின் பல இடங்களை இதுவரையிலும் பார்த்திராத பகுதிகளை படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர். கிளைமாக்ஸில் அந்த இரவு நேர சண்டை காட்சியில்தான் அவரது கேமிராவின் பணி பம்பரமாக சுற்றியிருக்கிறது. பாடல் காட்சிகள் ஹீரோயின்களை அழகாக காட்டியிருக்கிறார். சண்டை காட்சிகளில் அன்பறிவ் தெறிக்க விட்டிருக்கிறார்.
கலையரசன், பிரசன்னாவின் முன் கதைச் சுருக்கத்தை இன்னும் சுருக்கமாகவே கொடுத்திருக்கலாம். கத்திரி போட்டிருக்க வேண்டியது அங்கேதான். அதற்கடுத்து சிருஷ்டி டாங்கே-பிரசன்னா கதையில் கூடுதல் காட்சிகளை அமைத்து காதலை நியாயப்படுத்தியிருக்கலாம். படத் தொகுப்பாளரின் பணியை இன்னும் செவ்வனே பயன்படுத்தியிருக்கலாம்..!
ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்கள் அனைத்தும் இதமானவை. ‘கண்ணைக் கட்டி’ பாடலும், ‘கண்ணுக்குள்ள வைச்சிருக்கேன்’ பாடலும், ‘நெற்றி குங்குமம்’ பாடலும் அதிரடி இசையெல்லாம் இல்லாமல் கேட்கும் ரகமாக இருந்தது. ஜஸ்டினுக்கு நன்றி. பாடல் காட்சிகளைக்கூட மிக அழகான மாண்டேஜ் காட்சிகளாக ஒளிப்பதிவாளர் துணையுடன் எடுத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
‘காலக்கூத்து’ என்னும் தலைப்புடன் சம்பந்தப்பட்ட கதைதான் இருக்கிறது. இன்னும்கூட காதலை ஏற்றுக் கொள்ளாத குடும்பங்கள் இருக்கின்றன என்று சொன்னாலும், அந்தக் குடும்பங்களின் பக்கச் சார்பான நியாயத்தையும் படத்தில் சொல்லியிருக்க வேண்டும். அதைவிடுத்து ஒரு சார்பாக காதலுக்கு ‘ஜே’ போட்டே படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
ஒட்டு மொத்தமாய் பார்க்கப் போனால், படத்தை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது..!

0 comments: