ஒச்சாயி - சினிமா விமர்சனம்

25-03-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தியேட்டருக்கு போயி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. வேலை நிறுத்தப் போராட்டத்தினால் வேலையும் இல்லை. வீட்லேயும் போரடிக்குதே என்றிருந்த நேரத்தில் ‘ஒச்சாயி’ என்றொரு படம் ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டரில் வெளியாகிறது என்று கேள்விப்பட்டோம்.
நாம் பார்க்காத படம் போல தெரிகிறதே என்றெண்ணி இந்தப் படம் பற்றி கூகிளாண்டவர் துணையுடன் விசாரித்தபோது இத்திரைப்படம் கடந்த 2010-ம் ஆண்டில் வெளியானது என்றும், அப்போது தியேட்டர்கள் சரியாகக் கிடைக்காதது மற்றும் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சில பிரச்சினைகளினால் அதிகமாக வெளியில் தெரியாமலேயே போய்விட்டது என்பதை அறிந்தோம்.
அதோடு கூடவே நமது ‘உண்மைத்தமிழன்’ வலைத்தளத்தில்கூட இந்தப் படத்தைப் பார்க்கப் போய் முடியாமல், வேறு படத்தைப் பார்த்த கதையும் பதிவாகியிருந்தது.
அதனால் இதுவரையிலும் பார்க்காத இந்தப் படத்தை இந்த முறை பார்த்தே தீர வேண்டும் என்று நினைத்துதான், நேற்றைக்கு நண்பகல் 12 மணி காட்சிக்கு ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டரில் ஆஜரானோம்.
தியேட்டரில் 50 பேர் அளவுக்குக் கூட்டம் இருந்தது.. பரவாயில்லையே என்று சந்தோஷப்பட்ட வைத்தது.
இனி ‘ஒச்சாயி’ படத்தின் விமர்சனம்.

‘ஆச்சி கிழவி திரைக்கூடம்’ சார்பில் தயாரிப்பாளர் திரவிய பாண்டியன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். ‘அம்மா-அப்பா பிலிம்ஸ்’ சார்பில் விநியோகஸ்தர் எம்.சி.சேகர் இந்தப் படத்தை இப்போது வெளியிட்டிருக்கிறார்.
இத்திரைப்படத்தில் தயா, தாமரை என்ற புதுமுகங்கள் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். மேலும், ராஜேஷ், ஒ.முருகன், கஞ்சா கருப்பு, சந்தானபாரதி, திரவிய பாண்டியன், ஷகிலா ஆகியோரும் நடித்துளனர்.
ஜீ‌வரா‌ஜா‌ இசை‌யமை‌க்‌க, சி‌னே‌கன்‌ பா‌டல்‌களை‌ எழுதி‌ உள்‌ளா‌ர்‌. சி‌வசங்‌கர்‌. வா‌மன்‌ மா‌லி‌னி‌, ரவி‌தே‌வ்‌ ஆகி‌யோ‌ர்‌ நடன கா‌ட்‌சி‌களை‌ அமை‌த்‌துள்‌ளனர்‌. சண்‌டை‌க்‌ கா‌ட்‌சி‌களை‌ ஆக்‌ஷன்‌ பி‌ரகா‌ஷ்‌ அமை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. தி‌ரை‌ப்‌பட கல்‌லூ‌ரி‌ மா‌ணவர்‌ பிரே‌ம்‌ சங்‌கர்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌. ஜி‌.சசி‌க்‌குமா‌ர்‌ படத் தொகுப்பு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர். நி‌ர்‌வா‌கத்‌ தயா‌ரி‌ப்‌பு‌ –ஒமுரு, மக்‌கள்‌ தொ‌டர்‌பு‌- ஜி‌.பா‌லன்‌, எழுதி, இயக்கியவர் ஒ.ஆசைத்தம்பி. 
படத்தின் தலைப்பான ‘ஒச்சாயி’ என்பது ஒச்சாண்டம்மன் என்கிற தெய்வத்தின் பெயர். ஒச்சாயி என்பது மதுரை மாவட்டம் ‘பாப்பாபட்டி’, ‘கருமாத்தூர்’, ‘தும்மக்குண்டு’ போன்ற ஊர்களை பூர்வீகமாகக் கொண்ட பிறமலைக் கள்ளர் சமூகத்தின் குல தெய்வத்தின் பெயர். முக்குலத்தோரின் மூத்த கடவுள்.
இந்த ‘ஒச்சாயி’ தற்போதைய துணை முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம், இயக்குநர் இமயம் பாரதிராஜா, கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் வாகை சந்திரசேகர் ஆகியோருக்கும் குல தெய்வம் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மீனாட்சி அம்மன் மனித பிறப்பெடுத்து குழந்தை இல்லாத தடியன் தம்பதிக்கு வளர்ப்பு பிள்ளையாக வளர்ந்து, பருவ வயதில் தன்னை தெய்வமாக, அனைவருக்கும் தெரிய வைத்து, மறைந்த நொச்சியம்மாதான் காலப்போக்கில் ஒச்சாயி என்று மாறி, பிறகு ஒச்சாண்டம்மானாக கருமருத்தூரிலும், பாப்பாபட்டியிலும் மற்றும் பல கிராமங்களிலும் சாதிமத பேதமின்றி வழி‌படும்‌ தெய்வமாக மாறியிருக்கிறது என்கிறது கர்ண பரம்பரைக் கதை.
அந்தச் சமுதாயத்தில் குடும்பத்தின் தலை பிள்ளையாக ஆண் குழந்தை பிறந்தால் ‘ஒச்சாத் தேவன்’, ‘ஒச்சப்பன்’ என்றும், பெண் குழந்தை பிறந்தால் ‘ஒச்சம்மா’, ‘ஒச்சாயி’ என்றும் பெயர் சூட்டும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அப்‌படி‌ பெ‌யருடன் வாழும் ஒரு பெண்ணின் கதைதான் இந்த‌ ‘ஒச்‌சா‌யி’ திரைப்படம்‌.
‘மொக்கச்சாமி’ என்னும் தயா தனது குடும்பச் சூழ்நிலையால் பள்ளிக்கூட படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திருடனாகிறான். அடிதடி, வெட்டுக் குத்து, கொலை என்று அடியாள் வேலைக்கு ஆளாகி முற்றிலும் சமூக விரோதியாகிக் கிடக்கிறான். இப்போது அதே ஊரில் இருக்கும் வசதியான ஆனால் பாசமான திரவிய பாண்டியனிடம் வேலை செய்து வருகிறான்.
இவனது தந்தை ராஜேஷ். ராஜேஷின் முதல் மனைவிக்கு பிறந்தவன் தயா. தயா சிறிய வயதில் இருக்கும்போதே மனைவியை இழந்துவிடுகிறார் ராஜேஷ். தனது பையனை பார்த்துக் கொள்ளவே இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார் ராஜேஷ்.
ஆனால் அந்தப் பெண்ணோ தனக்கென ஒரு  காதலனை  வைத்துக் கொள்கிறார். ஊர் முழுக்க செய்தி பரவி இது ஒரு நாள் ராஜேஷுக்கும் தெரிய வருகிறது. கோபத்தில் வீட்டுக்கு வந்தவர் சல்லாபத்தில் இருந்த மனைவியையும், அவளது கள்ளக் காதலனையும் அரிவாளால் வெட்டி கொலை செய்கிறார்.
ராஜேஷ் இந்த வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறையில் இருக்க.. அப்போது 13 வயது சிறுவனாக இருக்கும் தயா, பள்ளிக் கூடத்துக்குப் போக முடியாமலும், கவனிக்கவே ஆளில்லாமல் கெட்டுப் போகிறான். அவனது மனதில் பெண்கள் மீதான பார்வை மிக மோசமானதாக இருக்கிறது. பெண்கள் அனைவருமே கெட்டவர்கள். கணவனுக்குத் துரோகம் செய்பவர்கள். கள்ளக் காதலனை தேடுபவர்கள்.  இவர்களால் குடும்பமே சிதறிவிடும் என்பதுதான் தயாவின் எண்ணவோட்டம்.
தயாவின் சொந்த அத்தை மகளான ஒச்சாயி சின்ன வயதில் இருந்தே தயாவின் மிக நெருங்கிய நண்பி. தோழி. குடும்பம் சிதறு தேங்காயாக மாறுவதற்கு முன்புவரையிலும் இருவரும் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்து வந்தவர்கள். இப்போது தயாவின் வாழ்க்கை மாறிப் போய்விட.. இன்னொரு பக்கம் ஒச்சாயி இன்னமும் தயாவை எண்ணியே இருக்கிறாள்.
ஊரில் மிகப் பெரிய கையான சந்தான பாரதியின் தம்பியையும், அவரது சின்ன வீடாக இருந்த பெண்ணையும் ஒரு பகல் பொழுதில் வெட்டிச் சாய்க்கிறான் தயா. இது சந்தான பாரதியை கோபமாக்க.. திரவிய பாண்டியனிடம் மாமூல் வாங்கிப் பழகியிருந்தாலும் வேறு வழியில்லாமல் தயாவை தேடிப் பிடித்து கைது செய்து உள்ளே வைக்கிறார் இன்ஸ்பெக்டர்.
இது தயாவின் காட் பாதரான திரவிய பாண்டியனுக்கும், சந்தான பாரதிக்கும் இடையே மோதலை உருவாக்கிறது. இந்த நேரத்தில்தான் ராஜேஷ் தனது தண்டனை காலம் முடிந்து வெளியில் வருகிறார். மீண்டும் தனது ஊருக்கே திரும்பி வீட்டுக்கு வந்தவரை தயா, மனம் போன போக்கில் பேசுகிறான்.
தன் மகன் தன்னை அப்பா என்கிற மரியாதைகூட கொடுக்காமல் பேசுவதை ராஜேஷால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் எதையும் புரிந்து கொள்ளும் நிலையில் தயா இல்லை என்பதால் அவரால் எதுவும் சொல்ல முடியாத நிலை.
இந்த நேரத்தில் ஒச்சாயியின் அம்மா இறந்துபோக, ராஜேஷ் தனது தங்கைக்குச் செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் செய்துவிட்டு அனாதையாக இருக்கும் ஒச்சாயியை தன் வீிட்டிற்கே அழைத்து வருகிறார். தன் வீட்டில் எந்தப் பெண்ணையும் தங்க அனுமதிக்க மாட்டேன் என்று கத்துகிறான் தயா. அன்பாகவும், பாசமாகவும் பேசி தயாவை சமாதானப்படுத்தி ஒச்சாயியை அந்த வீட்டில் தங்க வைக்கிறார் ராஜேஷ்.
எப்படியாவது தயாவுக்கு ஒச்சாயியை திருமணம் செய்துவைத்துவிட்டு அவனை நல்வழிப்படுத்த நினைக்கிறார் ராஜேஷ். இதற்கு தயா ஒத்துக் கொள்ளாமல் இருக்க.. ஒச்சாயி தயாவின் நினைப்பிலேயே இருக்கிறாள்.
இடையில் தனது தம்பியின் கொலைக்குப் பழிக்குப் பழி வாங்க சந்தானபாரதி துடியாய் துடிக்கிறார். தனியாய் மாட்டும் தயாவை அரிவாளால் வெட்டித் தள்ளுகிறார்கள் அடியாட்கள். ஆனாலும் தப்பித்துக் கொள்கிறார் தயா. அவனை அனுசரனையாய் பார்த்துக் கவனித்து வீட்டுக்கு அழைத்து வருகிறார் ராஜேஷ்.
இப்போதும் தனது பெண்கள் பற்றிய பார்வையை மாற்றிக் கொள்ளாமல் இருக்கும் தயாவை பொங்கியெழுந்த ஒரு தருணத்தில், ஒச்சாயி வார்த்தைகளாலேயே பாடம் கற்றுக் கொடுக்க தயாவின் மனம் மாறுகிறது. ஒச்சாயியை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறான் தயா.
இந்த நேரத்தில்தான் திடீரென்று சந்தான பாரதியின் மரணம் நிகழ்கிறது. அவரை கொலை செய்தது யார் என்று போலீஸ் விசாரிக்கிறது. ஒரு சதியின் காரணத்தால் திரவிய பாண்டியனும், தயாவும்தான் இதைச் செய்திருப்பார்கள் என்று போலீஸ் சந்தேகப்படுகிறது.
நாளைய தினம் திருமணம் என்றிருக்கும் நிலையில் இன்றைக்கு கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாய் போலீஸிடமிருந்து தப்பியோடுகிறான் தயா.
முடிவு என்னாகிறது என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை.
‘கத்தியை எடுத்தவன் கத்தியால்தான் சாவான்’ என்பதை 1001-வது முறையாகச் சொல்லியிருக்கும் சினிமா கதைதான் இது.  
இருந்தாலும், பெ‌ற்றவர்கள் என்‌ன பா‌வம்‌ செ‌ய்‌தா‌லும்‌ அது பி‌ள்‌ளை‌களின் வா‌ழ்‌க்‌கை‌யை‌ எப்‌படியெல்லாம்‌ பா‌தி‌க்‌கும்‌ என்‌பதை இந்தப் படம்‌ உணர்‌த்‌துகிறது. இன்‌றை‌ய இளை‌ஞர்‌கள்கூட நா‌ளை‌ய பெ‌ற்‌றோ‌ர்‌கள்தான்‌. அதனா‌ல்‌ அவர்‌களுக்‌கு   நே‌ர்‌மை‌யா‌ன வா‌ழ்‌க்‌கை‌யை‌ எப்‌படி‌ வா‌ழ்‌வது என பு‌ரி‌ய வை‌க்‌கும்‌ வகையில் உணர்‌வு ரீ‌தியாகவும் படம் உருவாகியிருக்கிறது. ஒரு மனிதன் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவின் விளைவு எப்படி அவனது குடும்பத்தைப் பாதிக்கிறது என்பதையும் இந்தப் படம் சுட்டிக் காட்டியிருக்கிறது.
உண்மையில் இத்திரைப்படம் பரபரப்‌பா‌ன சம்‌பவங்‌கள்‌‌, வி‌றுவி‌றுப்‌பா‌ன தி‌ரை‌க்‌கதை‌, யதா‌ர்‌த்‌தமா‌ன வசனங்‌கள், கதாபாத்திரங்களின் இயல்‌பா‌ன நடி‌ப்‌போ‌டு பாராட்டும்படியாகத்தான் உருவா‌கியிருக்கி‌றது. ஆனால் முக்குலத்தோர் பெருமையைச் சொல்லும்விதமாக வந்திருப்பதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய குறை.
பல திரைப்படங்களில் அடியாளாகவே நடித்திருக்கும் தயாதான், இதில் முக்கிய கதாபாத்திரமான மொக்கச்சாமி கேரக்டரில் நடித்திருக்கிறார். அந்த குலத்திற்கேற்ற முகம், ஒரு ரெளடிக்கேற்ற உடல் வாகுடன் மிகச் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
எப்போதும் மது போதையுடன், தெனாவெட்டுடனான ஸ்டைலில் அந்தப் பகுதி லோக்கல் வசனங்களை உச்சரிக்கும்விதத்திலும் அந்தக் கேரக்டராகவே வாழ்ந்துவிட்டார் தயா.
படம் ‘ஒச்சாயி’ என்று நாயகியின் பெயரைக் கொண்டிருந்தாலும் இது நாயகனின் படம்தான். ‘ஒச்சாயி’ என்ற கேரக்டரில் நடித்திருக்கும் தாமரை என்ற பெண் மிக இயல்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். சினிமாத்தனமே முகத்தில் தெரியவில்லை.
ஆர்ப்பாட்டமில்லாத, அமைதியான நடிப்பாகவும், சூட்டிகையில்லாமல் செயற்கைத்தனமும் இல்லாமல் இந்தப் பொண்ணுக்கு என்னய்யா குறைச்சல் என்று படம் பார்ப்பவர்களே தயாவிடம் சிபாரிசுக்கு போகும் அளவுக்கு அமைதியாக நடித்திருக்கிறார்.
ஒரேயொரு காட்சியில் மூச்சுவிடாமல் பெண்களின் பெருமையைப் பற்றிச் சொல்லி பேசும் வீர வசனக் காட்சியில்தான் இவரது நடிப்புத் திறமை பளிச்சிடுகிறது. இந்த ஒரு படத்தோடு இவர் எங்கே போனார் என்றும் தெரியவில்லை. கிராமத்து கேரக்டர்களுக்கு இவர் நிச்சயம் பொருத்தமானவர். காணவில்லையே..?
இவர் மட்டுமல்ல.. திரவிய பாண்டியனின் மனைவியாக நடித்தவரும், சந்தான பாரதியின் மனைவியாக நடித்த சிந்துவும்கூட நடிப்பில் சிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும். தயா அண்ட் கோஷ்டி, திரவியபாண்டியனின் மனைவியை ‘மதினி’, ‘மதினி’ என்றழைத்து உரிமையோடு பேசுவதும், சண்டையிடுவதும், மிக இயல்பான காட்சிகள் என்று இயக்குநருக்கு பெருமை சேர்க்கும் காட்சிகள்.
இதேபோல் சந்தான பாரதியின்  மனதளவில் ஊனமுற்ற மகனாக நடித்தவரையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவருடைய கதை நகர்த்தலில் இருக்கும் குடும்பச் சிக்கலையும், இவரால் இதுதான் நடக்கப் போகிறது என்பதையும் ஊகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். இந்த நடிகருக்கு நமது வாழ்த்துகள்.
பண்பட்ட நடிகரான ராஜேஷின் நடிப்பைப் பற்றி தனியே சொல்ல தேவையில்லை. பொறுப்பான தந்தையாகவும், மகனது நிலைமையைக் கண்டு எதுவும் செய்ய முடியாத தனது கையாலகத்தனத்தை எண்ணி வருந்தும் ராஜேஷின் நிலைமை பரிதாபம். அந்த உணர்வை பார்வையாளர்களிடத்தில் இருந்து மிக எளிதாக தனக்குக் கடத்திக் கொண்டுவிட்டார் ராஜேஷ். பாராட்டுக்கள் ஸார்..!
முக்குலத்தோர் பெருமையை பல இடங்களில் பேசினாலும் அதே குலத்தில் இருந்து கொண்டு தனி மனித விரோதச் செயல்களையும் அவர்களே செய்கிறார்கள் என்பதை தைரியமாக வெளிப்படுத்தியிருக்கும் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.
கள்ளச் சாராயம் காய்ச்சுவது.. போலீஸுக்கு மாமூல் கொடுப்பது.. அடுத்தவர் மனைவியை கவர்வது.. பெண்கள் கள்ளக் காதலனை தேடுவது.. நட்புக்காக மெளனம் காக்காமல் உண்மையை உரக்கச் சொல்லும் நட்புகள்.. திடீரென்று உறவுகள் அத்துவிடுவது.. உறவுகள் அல்லாதவர்கள் திடீரென்று அரவணைப்பது.. கணவனின் உடன் பிறவா தம்பிகள் என்றாலும் அவர்களையும் வளர்த்தெடுக்கும் பெண்கள்.. என்று பலவித உணர்ச்சிக் கலவைகளையும் இந்தப் படத்தில் காணலாம்.
அதோடு சாவு செய்தி சொல்ல வரும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் செய்தியைச் சொல்லிவிட்டு கிளம்பும்போது அவரை சைக்கிளில் ஏறவிடமால் தடுத்து “தெரு முக்கு வரையிலும் உருட்டிட்டுத்தான் போகணும்…” என்று மிரட்டி அனுப்புவதையும் பகிரங்கமாக ஒளிவுமறைவில்லாமல் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
படத்தில் தேவையில்லாத காட்சிகள் என்றால் அது கஞ்சா கருப்பு, ஷகிலா சம்பந்தப்பட்ட காட்சிகள்தான். நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டது என்றாலும் சில இடங்களில் கொடுமையான காட்சியமைப்பினால் ரசிக்க முடியவில்லை. ஆனாலும் படத்தில் குபீர் சிரிப்பை, இரண்டு இடங்களில் வரழைத்திருப்பது கஞ்சா கருப்புதான் என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
இசையமைப்பாளர் ஜீவராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்துமே இன்னிசை ரகம். ‘பத்தூரு பட்டி’ பாடல் காட்சியில் ஒச்சாண்டம்மன் கோவில் திருவிழாவை அப்படியே படமாக்கியிருக்கிறார்கள். காட்சிப்படுத்தலும், பாடலும் தேவரினத்தின் பெருமையை பறை சாற்றுகின்றன. ‘கம்பங் காட்டுக்குள்ளே’, ‘மரிக்கொழுந்து’ பாடல்கள் இனிமையான இசையையும், எளிமையான பாடல் வரிகளில் சொல்லும் காதலையும் பேசுகின்றன.
இந்தப் படத்தின் ரிலீஸின்போது ‘ஒச்சாயி’ என்கிற பெயர் தமிழ்ப் பெயராகத் தெரியவில்லையே. எப்படி வரிவிலக்கு தர முடியும் என்று வரி விலக்கு தரும் கமிட்டி மறுத்துவிட்டது.
அதே ஆண்டில் வெளியான ‘எந்திரன்’ எந்த அளவுகோலில் தமிழ் வார்த்தையானது என்று சொல்லி இந்தப் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் கடுமையாக சண்டையிட்டு பத்திரிகைகளில் பேட்டி கொடுத்த பின்பு, விஷயம் கேள்விப்பட்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலையிட்டு வரி விலக்கு தரச் சொல்லியிருக்கிறார்.
இப்போது இந்தப் படம் யுடியூபில் முழுமையாகத் தெரிந்தாலும் இன்னும் தங்களுடைய படைப்பு பரவலாக தெரிய வேண்டும் என்கிற முனைப்புடன் இப்போது மீண்டும் பணம் செலவழித்து படத்தை தியேட்டருக்கு கொண்டு வந்திருக்கும் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!
உண்மையில் 2010-ம் ஆண்டிற்கான மாநில அரசின் சிறந்த திரைப்பட விருதுகள் பட்டியலில் ஏதேனும் ஒரு பிரிவிலாவது இத்திரைப்படத்தின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். அதற்கான முழு தகுதியுள்ளது இத்திரைப்படம்..!
எதையும் பெறவில்லை என்பது சோகமான விஷயம்..!!!

0 comments: