ஆறாம் வேற்றுமை - சினிமா விமர்சனம்

13-09-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

செவன்த் சென்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் சக்திவேல் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் அஜய், கோபிகா, யோகிபாபு, உமாஸ்ரீ, அழகு, சூரியகாந்த், சேரன்ராஜ், பரதேசி பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – அறிவழகன், இசை – கணேஷ் ராகவேந்திரா, நடனம் – பாபி ஆண்டனி, பாடல்கள் – யுகபாரதி, மோகன்ராஜ், தயாரிப்பு – சக்திவேல், எழுத்து, இயக்கம் – ஹரிகிருஷ்ணா.

தென் தமிழகத்தின் மலைப் பிரதேசமான வேலனூர் அருகில் இருப்பவை கூனிக்காடு  மற்றும் கோட்டைக்காடு கிராமங்கள். தரையில் இருந்து மிக உயரத்தில் இருக்கும் இந்தக் கிராமங்கள் நவீன நாகரிகத்தின் சிறு அடையாளம்கூட இல்லாமல் இப்போதும் பழமைக்கு உதாரணமாக இருப்பவை.
கோட்டைக்காடு கிராமத்திற்கு சரியான பாதை வசதிகூட இல்லை. ஒற்றையடிப் பாதையில் கழுதைகளை வைத்து,ம் நடந்தும் அடிவாரத்திற்கு வந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்வார்கள் அக்கிராமத்து மக்கள்.
பக்கத்தில் இருக்கும் கூனிக்காடு கிராமத்திற்கும், கோட்டைக்காடு கிராமத்திற்கும் ஆதி காலத்தில் மிக நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. ஒரு சிறிய பிரச்சினை காரணமாக இரண்டு கிராமங்களுக்கும் இடையில் தொடர்புகள் விடுபட்டுப் போக.. கூடவே பூகோள ரீதியாக இடையில் ஏற்பட்ட மிகப் பெரிய பள்ளத்தாக்கு அக்கிராமங்களை முற்றிலுமாக துண்டித்துவிட்டது.
கூனிக்காடு கிராமத்தில் இன்னமும் நர மாமிசம் சாப்பிடும் ஆதிவாசி மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் பகல் முழுவதிலும் குடிலில் இருந்து கொண்டு, இரவானால் வேட்டைக்குச் சென்று விலங்குகளை வேட்டையாடி சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள்.
கோட்டைக்காடு கிராமத்தில் திடீரென்று மர்மமான முறையில் மூன்று பேர் அடுத்தடுத்து மரணிக்கின்றனர். இந்த மரணம் வேலனூரில் இருக்கும் மாவட்ட வனத்துறை அதிகாரியான சேரன்ராஜின் காதுகளுக்கு வந்து சேர்கிறது.
அதேபோல் வனத்துறை மேலிடத்திற்கும் தகவல் செல்ல.. இது குறித்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீஸாரை அனுப்பி வைக்கிறார்கள். வரும் போலீஸார் இது குறித்து விசாரிக்கத் துவங்க.. இடையில் சேரன்ராஜூம் அவரது துணை அதிகாரியும்கூட கொல்லப்படுகின்றனர்.
இதற்கெல்லாம் என்ன காரணம் என்று சி.பி.சி.ஐ.டி. அதிகாரியொருவர் மும்முரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறார். கடைசியில் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் கதை.
‘அபோகலிப்டா’ என்கிற புகழ் பெற்ற ஹாலிவுட் படத்தின் பாதிப்பில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பினர் செய்தி வெளியிட்டிருந்தனர். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகத்தான் படம் இருக்கிறது.
அரதப் பழசான கதை.. திக்குத் தெரியாத திரைக்கதை.. மோசமான இயக்கம்.. சேரன்ராஜை தவிர மற்ற நடிகர்களிடத்தில் இருந்து வந்திருக்கும் நடிப்பே இல்லாத நடிப்பு.. அவ்வப்போது வந்து, வந்து காணாமல் போகும் ஒளிப்பதிவு.. தொடர்பே இல்லாத பல காட்சிகள்.. லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டிருக்கும் சில போலீஸ், வனத்துறை சம்பந்தமான காட்சிகள்.. இப்படி எல்லாமுமாக சேர்ந்து படத்தைக் கொத்து புரோட்டோ போட்டிருக்கின்றன.
கோட்டைக்காடு மக்களின் வாழ்க்கை முறை ஒரு பக்கம். கூனிக்காட்டில் வாழும் நாகரீகமே தெரியாத ஆதிவாசி மக்களின் வாழ்க்கை முறை இன்னொரு பக்கம்… என்று இரண்டையும் அடுத்தடுத்து காட்டியிருப்பது மட்டுமே படத்தின் திரைக்கதை.
கோட்டைக்காடு நாயகி பூரணியின் வாழ்க்கையில் கூனிக்காடு கிராமத்தின் ஆதிவாசி மனிதனான அஜய் பார்த்தவுடன் உள்ளே நுழைவதும், காதலில் பூரணி திளைப்பது சட்டென்று ஜீரணிக்க முடியாத விஷயம். ஆனாலும் காதலிக்க வைத்துவிட்டார்கள்.
இந்தக் காதல் கொடூரமாக முடியப் போய்.. இதற்கான பதிலடியாகத்தான் மர்ம மரணங்கள் நிகழ்கின்றன என்பதை கடைசி ரீலில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆனால் போலீஸ் அதிகாரியாக நடித்தவரின் நடிப்பேயில்லாத நடிப்பால் எதுவும் மனதில் நிற்காமல் போய்விட்டது.
நாயகன் அஜய்க்கு படத்தில் வசனங்களே இல்லை. பல்லைக் கடித்து சலாமிய பாஷை பேசுகிறார். ஹீரோயினை பார்த்தவுடன் ஏதோ ஒரு உணர்வாகி பார்க்கத் துடித்து அடிக்கடி ஓடி வருவதோடு சரி.. கடைசியில் காதலிக்காக பொங்கியெழுந்து சம்ஹாரம் செய்யும் காட்சிகளில் இவரது நடிப்பையெல்லாம் ஆக்சனிலேயே காட்டியிருக்கிறார்கள்.
நாயகி பூரணியாக கோபிகா. இவரது தோழியாக உமாஸ்ரீ. ஓரளவு நடித்திருக்கிறார்கள். மற்றும் ஊர்ப் பெரியவர்களாக அழகு,  சூரியகாந்த்.. ஆதிவாசி நண்பனாக யோகிபாபு, சேரன்ராஜ் போன்றோர் கொஞ்சம் நடித்து இயக்குநருக்கு கொஞ்சம் உதவிகளை செய்திருக்கிறார்கள்.
கணேஷ் ராகவேந்திரா இசையில் ‘எட்டணா பொட்டழகி’ பாடல் தாளம் போடவ வைக்கிறது. ‘தரையில’, ‘வானமாய்’ பாடல்கள் கேட்கும் ரகம். அறிவழகனின் ஒளிப்பதிவில் சொல்லிக் கொள்ளும்படியில்லை. காட்சிக்கு காட்சி டல்லடித்தும் பட்டென்று வெயில் ஏறியும், இறங்குவதுமாக இருக்க.. படம் முழுக்கவே ஒளிப்பதிவு தள்ளாடுகிறது.
இது போன்ற பல படங்கள் மலையாள படவுலகத்தில் 1985-களில் வந்து கொண்டேயிருந்தன. ஆனால், அவைகள் அனைத்திலும் செக்ஸ்தான் பிரதானமாக இருக்கும். நல்லவேளையாக இதில் அந்த விஷயமே இல்லாமல் ஒரு வித்தியாசமான கதை, திரைக்கதையில் இப்படியொரு படம் செய்ய வேண்டும் என்று நினைத்து உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த எண்ணத்திற்கு மட்டும் நமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..!

0 comments: