இனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்

14-06-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஹீரோக்களுக்கு துணை நின்றே பழகிப் போன காமெடியன்கள் தங்களுக்கென்றே சில கதாபாத்திரங்களும், கதைகளும் இருக்கின்ற என்பதை மறந்துவிடுகிறார்கள். அவர்களுக்கென்று உள்ளதை ஹீரோக்கள் செய்ய முடியாது என்பதையும் அவர்கள் நினைப்பதில்லை.
இப்படியொரு எண்ணத்தில் எத்தனை நாட்கள்தான் ஹீரோக்களை முதுகில் தூக்கிச் சுமப்பது.. நாமே ஹீரோவாகிவிடலாமே என்கிற துணிச்சலில் சந்தானம் எடுத்திருக்கும் இந்த புதிய முயற்சி அவரை கைத்தூக்கிவிட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
வழக்கமான காதல் கதைதான். ஆனால் சந்தானத்தின் பாணியில் சொன்னதோடு, கிளைமாக்ஸில் அவர் கொடுத்திருக்கும் செய்திதான் படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது எனலாம்.

வீட்டில் வெட்டி ஆபீஸராக இருக்கும் சீனு என்கிற சீனிவாசனுக்கு இன்னும் 3 மாதங்களுக்குள் திருமணம் செய்துவைக்காவிடில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு அவர் கழுத்தில் மாலையேற வாய்ப்பே இல்லை என்று கொஞ்சம் காஸ்ட்லியான ஜோஸியர் ஒருவர் சொல்லிவிட.. ஜோதிடத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடைய அவருடைய தாயார் அடுத்த 3 மாதங்களுக்குள் சீனு என்கிற சந்தானத்திற்கு திருமணம் செய்து வைத்துவிட தீர்மானிக்கிறார்.
தனது வயதையொத்த நட்புகளின் மூளைச் சலவையினால் காதலித்துத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்கிற குறிக்கோளில் இருக்கும் சீனு இதனால் அவஸ்தைப்படுகிறார். பெண் பார்க்கப் போகும் இடத்திலெல்லாம் குறுக்குக் கேள்விகள் கேட்டு அடி வாங்காமல் தப்பி வந்துவிடுகிறார்.
ஒரு பெண்ணை பார்த்தவுடன் காதல் வர வேண்டும். அவள்தான் பெண்டாட்டி என்று உடனே மனது சொல்ல வேண்டும். அதுதான் காதல் என்கிறார் சந்தானம். ஷாவேரியை ஒரு கணத்தில் பார்த்தவுடன் அந்தக் காதல் சந்தானத்திற்குள்ளும் வருகிறது. ஆனால் ஷாவேரிக்கு வர வேண்டுமே..? காதலிக்க வைக்க படாதபாடு படுகிறார். பலனில்லை.
இந்த நேரத்தில் கிராமத்தில் இருந்து வரும் தாய்மாமா தம்பி ராமையா சந்தானத்தின் கல்யாணம் முடிந்தால்தான் தனது பூர்வீகச் சொத்து தனது கைக்கு வரும் என்பதால் எப்படியாவது சந்தானத்தின் கல்யாணத்தை முடித்து வைக்க அரும்பாடுபடுகிறார்.
ஒரு முறை பெண் பார்க்க கோவிலுக்கு சந்தானத்தை ஏமாற்றி அழைத்துச் செல்கிறார் தம்பி ராமையா. பெண்ணை பிடித்துவிட்டதாக சொல்லி ஒரு டிராமா போட்டுவிட்டு பின்பு மீண்டும் நிச்சயத்தார்த்த்த்தையும் பிக்ஸ் செய்ய வைக்கிறார் தம்பி ராமையா.
இந்த நேரத்தில்தான் அதுவரையில் வராத காவிரி தண்ணி மாதிரியிருந்த காதல் வந்துவிட்ட தெலுங்கு கங்கை தண்ணீர் மாதிரி ஓகேயாக.. இங்கே நிச்சயத்தார்த்தமும் முடிந்துவிடுகிறது.
ஒரே நேரத்தில் இரண்டு டிரெயினை ஓட்ட முடியாதே என்று சந்தானம் தவிக்க.. கல்யாணம்வரைக்கும் சமாளி. அதுக்குள்ள ஏதாவது செஞ்சு வீட்டாரை சமாளிச்சுக்குவோம் என்று தம்பி ராமையா கோக்குமாக்காக ஐடியா கொடுக்க அதனால் காதல் விஷயத்தை வெளியில் சொல்லாமல் காலம் கடத்துகிறார் சந்தானம். இறுதியில் என்ன ஆனது..? யார் கரம் பற்றினார் சந்தானம் என்பதுதான் மீதமிருக்கும் கதை..!
தன்னுடைய பாணியிலேயே திரைக்கதையை எழுதி, கடைசிவரையிலும் தொய்வு இல்லாமல் கொண்டு போய் கலகலப்பாக்கியிருக்கிறார் சந்தானம். இதற்கு அவருக்கு பெரிதும் கை கொடுத்திருப்பது அவருடைய லொள்ளு சபா டீம்தான். வசனம் எழுதி உதவியிருக்கும் மாறன் அண்ட் கோவிற்கு நமது வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.
முதல் பாதியைவிடவும் பிற்பாதிதான் ஜிவ்வென்று பறக்கிறது. காமெடியும் அதிகம். எப்படித்தான் முடிக்கப் போகிறார்களோ என்கிற ஒரு எதிர்பார்ப்பை ஏற்றிவிட்டு அதனை கொஞ்சம் இறங்கிவிடாமல் பார்த்துக் கொண்டு கிளைமாக்ஸில் ஒரு சிக்ஸர் அடித்திருக்கிறார்கள். அதுதான் படத்தினை வெகுவாக தூக்கிவிட்டிருக்கிறது.
ஆசைப்பட்டது கிடைக்காமல் போனாலும், தானாக வந்த்தை கைவிட்டிராதே என்பதை இந்த பாழாய்ப் போன காதல் விவகாரத்திலும் எடுத்துச் சொல்லியிருக்கிறார் சந்தானம். எந்த விமர்சனத்திலும் கிளைமாக்ஸை உடைக்க முடியாதபடிக்கு வைத்திருப்பதுதான் இந்தப் படத்தின் கதையாசிரியருக்கு கிடைத்திருக்கும் வெற்றி..!
படத்தில் அதிக கைதட்டல்கள் கிடைத்த இடங்கள் பெப்சி விஜயன் சந்தானத்தின் கையைக் குலுக்கும்போதும், தம்பி ராமையாவின் வேஷ்டியை ரஞ்சனி இழுக்க முயலும்போதுதான்.. மற்றபடி அவருடைய டிரேட் மார்க் பன்ச் டயலாக்குகளை கேட்பதற்குள்ளாகவே தியேட்டரில் ஆடியன்ஸின் கைதட்டல் பறக்கிறது. என்ன மாதிரியான பார்வைன்னே தெரியலையே..?
சந்தானம் ஹீரோத்தன பார்வையுடன், நடனமும் ஆடி அசத்தியிருக்கிறார். தனது பேவரிட் வசன உச்சரிப்பில்கூட இந்தப் படத்தில் கொஞ்சம் சிரத்தையெடுத்து குறைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. தனி மனித்த் தாக்குதலான வசனங்களை தேடித்தான் பிடிக்க வேண்டியிருந்த்து.. இதுபோலவே கடைசிவரையிலும் தொடர்ந்தால் நல்லதுதான்..!
காமெடியனுக்கு வேறென்ன வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்கிறார் சந்தானம். கோப்ப்படுகிறார். ஆத்திரப்படுகிறார். அழவில்லை. ஆனால் பேச முடியாத தோரணையில் பேசி யோசிக்க வைக்கிறார். கிளைமாக்ஸில் அவருடைய மென்மையான அந்தப் பேச்சும், ஆக்சனும்தான் இருக்கிறதை வைச்சு நல்லா வாழுடா என்று ஆடியன்ஸை சொல்ல வைத்திருக்கிறது..! தன் தவறை உணர்ந்த நிலையில் அவருடைய அமைதியான நடிப்பு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
இனிமே இப்படித்தான் என்று சொல்வது மூலமாக தனியொரு ஹீரோவாக தானும் களத்தில் குதித்திருப்பதை உறுதி செய்திருக்கிறார் சந்தானம். இந்தப் படத்தின் வெற்றி இதனை தொடர வைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
ஹீரோயின்களில் ஷாவேரியின் முகவெட்டு ஒரு சில காட்சிகளில் அழகாகவும், பல காட்சிகளில் சின்னப்புள்ளத்தனமாகவும் காட்சியளிக்க இவர் அப்படியொன்றும் அழகில்லையே.. பின்பு எப்படி சந்தானம் மயங்குகிறார் என்று கேட்க வைக்கிறது. நடிப்பென்று பார்த்தால் தன் கையைத் தானே வெட்டிக் கொண்டு காலைல ரிஜிஸ்தர் ஆபீஸுக்கு வா என்று சொல்லி அனுப்பி வைக்கும் காட்சியில் மட்டுமே நடிக்கும் ஸ்கோப் அவருக்குக் கிடைத்திருக்கிறது.
இதேபோல அகிலா கிஷோருக்கும் தன்னைத் தேடி வரும் சந்தானத்தைத் திட்டி திருப்பியனுப்பும் காட்சியில் மட்டும்தான் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் ஷாவேரியைவிடவும் அகிலா அழகில் ஓகேதான்..!
சில காட்சிகளே வந்தாலும் மனதில் நின்றுவிடுகிறார் பெப்சி விஜயன். நடு ஹாலில் அவர் ஆடும் ஆட்டமே சிரிக்க வைத்திருக்கிறது.. இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சும் திரைக்கதைக்கு வெகுவாக உதவியிருக்கிறது.
தம்பி ராமையாவின் நடிப்பு மற்ற படங்களிலிருந்து வேறுபடவில்லை. அதேபோலத்தான். கடைசியாக அப்போ பொண்ணு யாரு என்ற சந்தானத்தின் கேள்விக்கு நம்ம பொண்ணுதான் என்று தலையாட்டும் அந்த தம்பி ராமையாவும் ஈர்க்கத்தான் வைத்திருக்கிறார்.
அப்பாவான ஆடுகளம் நரேன், அம்மாவான பிரகதி, அகிலாவின் அம்மாவான ஸ்ரீரஞ்சனி, விடிவி கணேஷ், ஹீரோயினின் மூன்று நண்பிகள் என்று பலரும் அவரவர் கேரக்டர்களில் சொன்னதைச் செய்திருக்கிறார்கள். அதிலும் விடிவி கணேஷ் அளிக்கும் ஐடியாக்களும், அவருடைய மனைவியுடன் அவரைச் சம்பந்தப்படுத்தி பேசும் வசனங்களும் படு சுவாரஸ்யம்.
சந்தோஷ் தயாநிதியின் பாடல்கள் பரவாயில்லை ரகம். கோபி ஜெகதீஷ்வரனின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளை படமாக்கியிருக்கும்விதம் சந்தானத்திற்கு கஷ்டத்தைக் கொடுக்காமல் எடுத்திருப்பதை உணர்த்துகிறது.
காதல் தேவைதான். ஆனால் இப்படி விரட்டி, விரட்டி காதல் செய்வது தேவைதானா.. என்பதையும், நாம் ஆசைப்பட்டது கிடைக்கலைன்னாகூட பரவாயில்லை.. நம்ம மேல ஆசைப்படறதை விட்டுறக் கூடாது என்பதையும் காதலர்களுக்கு உணர்த்தும்வகையில் பாஸிட்டிவ்வாக முடித்திருப்பதுதான் ரசிகர்களை திருப்தியோடு திரையரங்கைவிட்டு வெளியேற வைத்திருக்கிறது.
தனது முதல் படத்திலேயே ஸ்கோர் செய்திருக்கும் சந்தானத்திற்கு ராஜபாட்டை காத்திருக்கிறது. ஓடும் ரேஸ் குதிரைகளில் அவரும் ஒருவராக தன்னை இப்படத்தின் மூலம் நிரூபித்துவிட்டார். தக்க வைத்துக் கொள்வதும் அவருடைய கைகளில்தான் இருக்கிறது..!
முழு பொழுது போக்கிற்கு உத்தரவாதம்..!

0 comments: